ஆகாயப் பந்தலிலே

பாஸ்கர் சேஷாத்ரி
ஊஞ்சல் எழுப்பும் கிறீச்சிடும் சப்தங்களுக்கு
என் சுவாசம் இசையே கை கொடுக்கும்
மேலே சென்று கால் தேய்த்து முன்னே சென்றாலும்
தானாய் தன்னிச்சையாகப் பின்செல்லும் சுகத்தின் உச்சம்
பழைய நினைவு அசை போட பின் பக்கமே கண்
ஒரே சீரான பயணம் -தூக்கத்தின் ஒரே கனவு போல
கட்டிலும் மேஜையும் சுற்றி ஆட்டம் போடும்
குதூகலம் கண்களை மூட, அறையே நடுங்கியோடும்
ஆட்டங்களே இங்கு கோலோச்சும் ராஜ்ஜியம்
எதிரில் வரப் பூனையும் நடுங்கும், எலியும் பம்மும்
ஊஞ்சல், கவலைகளுக்குக் கல்லறை
இலவச இன்பச் சுற்றுலா
ஆடி ஆடி ஓய்ந்த பின்னர் சப்தம் என்றும் ஓயாது
செவிகள் தீர்மானிக்கும் வாழ்வு இது.