Blog

  • ஆத்தாடி ஆத்தா – நவராத்திரி பாடல்கள்

    ஆத்தாடி ஆத்தா – நவராத்திரி பாடல்கள்

    விவேக்பாரதி

    நவராத்திரி முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நிகழும் பேற்றினைப் பராசக்தி கொடுக்கிறாள். அவள்தான் பாட்டுக்கு இறைவி ஆயிற்றே! இதோ 2019 ஆம் ஆண்டின் முதல் பாடல்…

    ஆத்தாடி நம்மவூரு ஆத்தா! என்ன
    ஆளில்லா நேரத்துல பார்த்தா! ஒரு
    அன்பால பாடச்சொல்லி கேட்டா! அதுல
    அடிக்கு அடி மடியில் தாளம் போட்டா!

    ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!

    காத்தாடி வுட்டுக்கிட்டா காலமெல்லாம் சிரிச்சிக்கிட்டா
    கண்ணசரும் நேரத்துல நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா
    பார்த்துத் தேணருறெண்டா பக்கம் பக்கமா பதறுறெண்டா!
    பாட்டுக்குள்ள ஒளிஞ்சு சிரிக்கும் பராசத்திய தேடுறெண்டா!

    முழுசா அவனெனப்பு முதுகுதண்டுல குறுகுறுப்பு
    மொத்தமா ராத்திரியில பத்துதரம் கண்விழிப்பு
    அழகா நின்னவடா! அசடுபோல சிரிச்சவடா!
    அடிக்கடி சிரிப்புச் சத்தம்! மொகத்த மட்டும் காணலடா!

    ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!

    தோளுல ஊஞ்சகட்டி தூளியாட்டி சிரிச்சவடா
    தொட்டுத்தொட்டு அகல்வெளக்க பத்திரமா பார்த்தவடா!
    காளி மாரியின்னு பாட்டுப்பாட குதிச்சவடா
    கண்ணுல சிக்காதத்தான் தேடவுட்டு ஒளிஞ்சவடா!

    உள்பக்கம் திரும்பிக்கிட ஒருபயலும் நெனப்பதில்ல
    ஒடனே நெனச்சாலும் திரும்பிப் பார்க்க தெரியவில்ல
    துள்ளுற காட்டெலிய தூக்கியொரு வளையில்வெச்சா
    தூணுக்குப் பின்னால அவ உடுக்குசத்தம் ஒலிக்குமடா!

    ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!!

    28.09.2019

    Share
  • குறளின் கதிர்களாய்…(268)

    குறளின் கதிர்களாய்…(268)

    -செண்பக ஜெகதீசன்…

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாருங் கள்வரும் நேர்.
    -திருக்குறள் -813(தீ நட்பு)

    புதுக் கவிதையில்…

    நட்பினால் பெறும்
    பயனை அளவிட்டுப் பார்த்து
    நட்பு கொள்பவரும்,
    பிறர் கொடுக்கும்
    பொருளையே மதித்துப் பெறும்
    பொதுமகளிரும்,
    பிறர் பொருளைக் களவாடும்
    கள்வரும்
    தம்முள் ஒப்பாவரே…!

    குறும்பாவில்…

    பயன்கருதிப் பார்த்து நட்பாவோர்,
    பணத்தை மதித்துப்பெறும் கணிகையர், கள்வர்,
    குணத்திலிவர் தம்முள் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்…

    பயனதை யளந்து பார்த்தேதான்
    பழகி நட்பைக் கொள்வோர்க்கு,
    அயலார் தம்முடன் உறவாடி
    அவர்தம் பொருளதைப் பெற்றிடவே
    தயவாய் நடித்தே ஏமாற்றும்
    தன்மை கொண்ட பொதுமகளிரும்,
    அயர்ந்தால் அடுத்தவர் பொருள்திருடும்
    அறமிலாக் கள்வரும் ஒப்பாமே…!

    லிமரைக்கூ..

    நட்பின் பயனதென்ன வென்றே
    ஆய்ந்துவரும் நண்பர், கணிகை, கள்வர்
    ஆகியோர் தம்முள் ஒன்றே…!

    கிராமிய பாணியில்…

    நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
    நல்லகொணம் இல்லாத
    பொல்லாதவங்கூட நட்புவேண்டாம்..

    பயனா என்ன கெடைக்குமுண்ணு
    பாத்து ஆராஞ்சி
    நட்புகொள்ள வரும் பொல்லாதவனும்,
    ஆசகாட்டி அயலாருகிட்ட
    பணம்புடுங்கிற பொதுப்பொம்புளயும்,
    அடுத்தவன் பொருளத் திருடுற
    திருட்டுப் பயலும்,
    இவுங்க எல்லாரும்
    கொணத்தில ஒண்ணுதான்..

    அதால
    நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
    நல்லகொணம் இல்லாத
    பொல்லாதவங்கூட நட்புவேண்டாம்…!

     

    Share
  • நீலக்கடல் காரோண  நாயகி நாகையரசி  நீலாயதாக்ஷி

    நீலக்கடல் காரோண நாயகி நாகையரசி நீலாயதாக்ஷி

    -நாகை வை. ராமஸ்வாமி

    ஆனைமுகன், ஐயன், அன்னையுனை வலம் வர
    மயிலமர் மால் மருகன் அகிலம் சுற்றி வர
    நந்திதேவன் நல்வரவாய் மத்தளம் முழங்கிட
    நான்மறை கோஷம் நாற்திசையும் ஒலித்திட
    பறவையமர் பரந்தாமன் அரவமுடன் அண்ணனாய் ஆசி கூற
    பிரமனுடன் அன்னமமர் கலைமகள் பாசமிகு பார்வையிட
    ஆவின் அம்சமாம் அருள்மிகு திருமகள் பொன்மலர் கொட்டிட
    நீலக்கடல் காரோண நாயகி நாகையரசி நீலாயதாக்ஷி
    காளையமர் காசிநாதன் காந்தமாய் கவர்ந்திட்ட கார்மேகக் குழலழகி
    மாசிலா வடிவழகி மகேசன் மடியமர் மாதுளம்பூ நிறத்தவளே
    மாணிக்கத் தாடங்கம் மார்பணி பொன்மணி கைவளை காலணி
    சதங்கையும் கொவ்வை செவ்வாயுன் புன்னகைக் கொப்பாமோ
    கொச்சை மொழி பச்சைக் கிளி தவழும் பூந்தளிர் கரமுடை
    சிங்கமமர் சிங்காரி சீர்மிகும் தாள் பற்றி
    இச்சையிலா வாழ்வு பெற இச்சையுடன் தாள் பணிந்தோம்
    இன்பப் பேறு பெற இறைஞ்சுகிறோம் அடி போற்றி!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    64.அமைச்சு

    குறள் 631:

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு

    ஒரு செயலச் செய்யத்தேவைப்படுத பொருள், ஏத்த காலம், செய்யுத வகை, எல்லாத்தையும் சோதிச்சுப்பாத்து செயல்படுத்துதவன் தான் ஒசந்த அமைச்சர்.  

    குறள் 632:

    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
    டைந்துடன் மாண்ட தமைச்சு

    செயலுக்கு ஏத்த நெஞ்சுறுதி, மக்களக் காக்குதது, தகுந்த நீதி நூல்களக் கத்துக்கிடுதது ,படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிடுதது, அசராத முயற்சி இந்த அஞ்சும் இருக்கவங்க தான் அமைச்சர்.

    குறள் 633:

    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு

    பகையாளிக்கு தோணையா இருக்கவன பிரிக்கதும் , தன் நாட்டுக்கு தொணையா இருக்கவங்களக் காக்குததும், பொறவு பிரிஞ்சவன் திருந்திட்டாம்னா அவனச் சேத்துக்கிடததுலயும் தெறமசாலியா இருக்கவன் தான் அமைச்சர். 

    குறள் 634:

    தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்ல தமைச்சு

    செய்ய வேண்டியதத் தெரிஞ்சுக்கிட்டு அதச் செய்யுததுக்கு ஏத்த வழிமொறையக் கண்டுபிடிக்கதும் தான் நெனைக்குதத துணிச்சலா சொல்லதுதலயும் தெறமசாலிய இருக்கவன் தான் அமைச்சன்.

    குறள் 635:

    அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை

    அறத்தை அறிஞ்சுக்கிட்டு நெறையா படிச்சுபோட்டு அடக்கமா இருந்து செய்யுத முறை தெரிஞ்சு இருக்கவர்கிட்ட தான் கலந்துபேசி முடிவு எடுக்க முடியும்.

    குறள் 636:

    மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை

    படிச்ச படிப்புக்கு மேல சொந்த புத்திசாலித்தனமும் இருக்கவங்கள எந்த சூது எதித்து நிக்க முடியும்?  முடியாது. 

    குறள் 637:

    செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
    தியற்கை அறிந்து செயல்

    படிச்ச படிப்பால எல்லாந்தெரிஞ்சாலும் ஒலக நடப்ப உணந்துகிட்டு ஏத்தாமாரி செயலச் செய்யணும். 

    குறள் 638:

    அறிகொன் றறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்

    சொன்னதையும் கேக்காம சொந்த புத்தியும் இல்லாம இருக்க ராசாக்கு அமைச்சன் துணிச்சலா நல்ல யோசனைகளச் சொல்லணும்.  

    குறள் 639:

    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்

    தப்பான வழிமொறையச் சொல்லி வம்புல மாட்டி உடுத அமைச்சன் பக்கத்துல இருக்குதத விட எழுபது கோடி பகையாளிங்க பக்கத்துல இருக்கது எம்புட்டோ நன்மையக் கொடுக்கும். 

    குறள் 640:

    முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
    திறப்பா டிலாஅ தவர்

    எம்புட்டுத் திட்டம்போட்டு செயலத் தொடங்கினாலும் கூறுகெட்டவன் அத அரைகொறையாத் தான் செய்யுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • 2019 நவராத்திரி 1

    2019 நவராத்திரி 1

    மரபின் மைந்தன் முத்தையா
     
    கரும்பட்டு வானில் போர்த்து
    கண்தூங்கச் சொன்னாள் தேவி
    வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே
    விதையாக நிற்கும் நீலி
    ஒரு வார்த்தை சொல்வாள் என்றே
    உலகமே ஏங்கும் நேரம்
    கருவாகும் வேதத்துள்ளே
    கலையாகி நின்ற காளி!
     
    ஆற்றோர நாணல் தூங்க
    ஆராரோ பாடும் அன்னை
    நேற்றோடு நாளை இன்றி
    நிகழ்கணம் சமைத்தாள் முன்னை
    காற்றாகிப் புயலாய் மாறி
    கடுங்கோபம் தீர்ந்த பின்னை
    ஊற்றாகி ஒளியும் ஆவாள்
    உயிர்ப்பித்துத் தந்தாள் என்னை!
     
    எழுதுகோல் முனையில் நிற்பாள்
    எழுத்தையும் அவளே கற்பாள்
    பழுதுகள் அகற்றி வைப்பாள்
    பவவினை சுமைகள் தீர்ப்பாள்
    விழுதிலே வருபவள்தான்
    வேரெனப் படர்ந்திருப்பாள்
    அழுதவன் கண்ணீருக்குள்
    அனுபவ உப்ப ளிப்பாள்!
     
    கன்னியே என்றழைத்தால்
    கிழவியாய் முன்னே நிற்பாள்
    அன்னையே என்றால் ஐயோ
    அழகிய குழந்தை ஆவாள்
    மின்னலாய்த் தெரிவாள் விண்ணில்
    மேகமாய்த் திரிவாள் கையில்
    கன்னலை ஏந்தி நிற்கும்
    கனலையே சக்தி என்போம்!
     
    சிலையெனக் கடக்க வேண்டாம்
    சிரிப்பொலி காதில் கேட்கும்
    மலையென மலைக்க வேண்டாம்
    மழலையாய் மார்பில் மேவும்
    கலையினில் அளக்க வேண்டாம்
    காணவே முடியா வானம்
    நிலையென நிற்கும் தேவி
    நீள்விரல் நிழலே போதும்!
    Share
  • தமிழ்காக்க உழைத்த தன்மானத் தமிழர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    தமிழ்காக்க உழைத்த தன்மானத் தமிழர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    மேகலா இராமமூர்த்தி

    ஆரிய வல்லாண்மைத் திறத்தைத் தம் கூரிய தமிழ்ச் சொற்களால் அம்பலப்படுத்தியவரும், தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், பாவலரேறு என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் நேயத்தோடு அழைக்கப்பட்டவருமான பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் சிற்றூரில் துரைசாமி, குஞ்சம்மாள் இணையருக்கு 10.03.1933-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் இராச மாணிக்கம’ என்பதாகும். பின்னர், இராச என்பதைத் துறந்து, தம் தந்தையின் பெயரினை இணைத்துத் ‘துரைமாணிக்கம்’ என்றானார்.

    மெய்ம்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, பாஉண் தும்பி, பெருஞ்சித்திரன் எனும் பல்வேறு புனைபெயர்களில் இவர் பின்னாளில் எழுதிவந்தார். இவற்றில், செம்மாந்த சங்கத் தமிழ்ப் புலவனின் பெயரான பெருஞ்சித்திரன் என்பதே இவருக்கு நிலையான வழங்குபெயராகிவிட்டது.

    தனித்தமிழ் இயக்கம், தமிழ் இதழியல், தமிழ்க் கவிதை எனப் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்கவராக இயங்கியவர் பெருஞ்சித்திரனார். தமிழினம், தமிழ்மொழி, தமிழ்நாடு என மூன்றினையும் தம் உயிர்மூச்சாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இந்திஎதிர்ப்பு, ஈழம் சார்ந்த கருத்தாக்கம், சாதி, மத எதிர்ப்பு, தமிழக அரசியல் செயற்பாடுகள் எனப் பல பணிகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார். எந்த நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் உடன்பாடு செய்து கொள்ளாதவராக, இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் தடம் பதித்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

    எழுத்துச் சீர்த்திருத்தம் மும்முரமாக நடைபெற்ற காலக்கட்டத்தில் வாழ்ந்த பெருஞ்சித்திரனார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர் முன்வைத்துள்ள காரணங்களாவன:

    “புதிய எழுத்துருக்கள் தோன்றி வருவதால் முன்னைய தொன்மையான இலக்கண, இலக்கியங்கள் படிக்க முடியாமற் போகும். சில இலக்கண விதிகள் பயனற்றுப் போகும். தமிழின் தொன்மையை, அதன் காலத்தை நிலைநாட்டிடச் சான்றுகள் ஏதுமின்றிப் போகும்” என்பவையே அவை.

    தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் பல்வேறு தலைப்புக்களின்கீழ் அற்புதக் கவிதைகளாய்ப் புனைந்துள்ளார் பாவலர் ஏறு.  “தமிழ்த்தாய் அறுபது, முத்தமிழ் முப்பது, தமிழில் கற்க முன்வருக, தமிழ் உழவு செய்க, தமிழ் படித்தால் அறம் பெருகும், தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்கள், பைந்தமிழில் படிப்பதுதானே முறை என்பன அவற்றில் சிலவாகும்.

    ”தமிழ் உழவு செய்க!” என்ற தம் கவிதையில்,

    எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞீர் உங்கள்
    இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
    தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
    துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
    உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
    உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
    செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர்
    செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!
    என்று தமிழ் இளைஞர்களிடம் அறைகூவல் விடுக்கின்றார்.

    மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற கவிதையின் இருவேறு வடிவங்களையும் ஒப்பிடும் பெருஞ்சித்திரனார்,

    “மரபு தழுவிய அன்றைய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும், மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று, அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை” என்றுரைப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பத்து என்று செப்பிடும் பாவலரேறு, அவை நுண்ணோக்கு, இயற்கை ஈடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுநிலைமை, துணிவு என்பவனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்துவிளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும் என்கிறார்.

    தனித்தமிழ் இயக்க அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் போராளிகள் எனப் பலரைக் குறித்தும் தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலரேறு அவற்றுள், தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோரைப் பற்றி எழுதியவையே மிகுதி. இவ்விரு அறிஞர்களின் கொள்கைகளும் கற்றோரிடமும், மற்றோரிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர் பெருஞ்சித்திரனார் எனில் மிகையில்லை.

    உலகம் போற்றும் உத்தமத் தலைவர்களையும் களப்போராளிகளையும் தம் கவிதைகளின் வழியாய்ப் போற்றியுள்ள பாவலரேறு, காரல் மார்க்சு, நெல்சன் மண்டேலா போன்றோருக்கு இரங்கற்பாக்கள் பாடியுள்ளார். அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்றோரின் சமூகப் பணிகளையும், பொதுவாழ்வில் அவர்களின் செயற்பாடுகளையும் எடுத்துரைக்கும் வகையில் கவிதைகள் இயற்றியுள்ளார்.

    குழந்தைக் கவிஞராகவும் முத்திரை பதித்திருக்கும் பெருஞ்சித்திரனார், ”பள்ளிக்குப் போ” என்ற தலைப்பிலான குழந்தைப் பாடலில்,

    ஒழுக்கம் அன்பு கற்று வா!
     உடற் பயிற்சி பெற்று வா
    அழுக்கு நெஞ்சைத் தூய்மை செய்!
     அடக்கம் அமைதி வாய்மை வை!

    பாட்டும் கதையும் படித்து வா
     பண்பைக் கடைப் பிடித்து வா
    நாட்டுப் பற்றை வளர்த்து வா
     நமது மொழியைக் கற்று வா!

    என்று இனிய நல்லுரைகளை மழலையர்க்கு எளிய தமிழில் நவிலுகின்றார்.

    மொழி என்பது மனித இனத்தின் விழி; அதுவே நம் அடையாளம். ஒரு மொழி அழிகிறது என்றால் அம்மொழி பேசும் மக்களும் அவர்களின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்களும் அழிகின்றன என்றே பொருளாகும் என்கிறார் பெருஞ்சித்திரனார்.

    மொழிக்கலப்பு பற்றித் தெரிவிக்கும் அவர்,

    ”ஆங்கிலம் என்ற மொழி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருப்பதே பிறமொழிக் கலப்பினால்தான். காரணம், தன் பெயரைக் காக்கின்ற அளவில்கூட அதனிடம் மொழிவளம் இல்லை. ஆனால் இது தமிழுக்குப் பொருந்தாது. தமிழில் நேர்ந்த மொழிக்கலப்பு அதன் தூய்மையைக் கெடுத்ததோடல்லாமல் அதனை இழிவடையவும் வைத்துவிட்டது. இன்னும் சொன்னால், அதன் மொழிவளர்ச்சியைத் தடுத்து, அதன் இனத்தையும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம் முதலிய மொழியினங்களாகப் பிரிவுறச் செய்துவிட்டது. மொழிக்கலப்புமட்டும் தமிழில் நேர்ந்திருக்கவில்லையானால் இந்தியாவின் பேரினமாகத் தமிழினமே இன்றுவரை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்.

    தமிழ்மொழியில் கழகக்கால(சங்க) இலக்கியங்களைப்போல் மிகவும் சிறந்தனவும், கட்டுக்கோப்பு உடையனவுமான இலக்கியங்கள் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தோன்றாமைக்குக் காரணமும் படிப்படியாகத் தமிழில் ஏற்பட்ட மொழிக்குலைவே என்பது பெருஞ்சித்திரனாரின் எண்ணம்.

    ”மண்ணினால் கட்டப்பெறும் வீடுகள் கட்டுவதற்கு எளியவைதாம்; முயற்சியும் குறைவுதான்; பரவலாகவும் கட்ட இயலுகின்றவை, அவை. ஆனால் அவற்றை நம்மில் எவரும் விரும்பாதது ஏன்? அவற்றின் முயற்சி எளிமையையும், செய்பொருள் எளிமையையும் போலவே அவற்றின் நிலைப்பும் எளியதாகிவிடுவதே! வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் அம் மண்வீடுகள் விரைவில் சிதைந்துபோவதில்லையா? அப்படிப்பட்டவைதாம் ’எளிய’ சொற்களால் கட்டமைக்கப்பெற்ற ’எளிய’ இலக்கியங்களும்!

    மொழிபற்றிக் கவலைப்படாமல், சொல்லோட்டங்களைத் தம் கருத்தோட்டங்களுக்கு ஏற்றவாறு பஞ்சுபோலப் பறக்கவிடுகின்ற இன்றைய எழுத்தாளர்களின் கோபுர இலக்கியங்கள், அடுத்துவரும் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் குப்பைமேடுகளுக்குப் போகாமல் தம்மைக் காத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை என்பதைக் காலந்தான் தீர்மானிக்கமுடியும்” என்கிறார் தீர்க்கமாக.

    தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு பெருந்தடைக்கல்லாக இருப்பது நம்மிடம் இருக்கும் சாதிப்பாகுபாடே என உரத்துச் சொல்லும் பாவலரேறு,

    “சாதிநிலை நம்மை ஒருவர்க்கொருவர் முன்னேறவிடாமல் செய்யும் அடிப்படையான தாழ்வுணர்வாக – வீழ்வுணர்வாக இருக்கின்றது. இந்த இழிநிலையினின்று  – நம்மை மீண்டும் மீண்டும் குழிக்குள்ளேயே, சேற்றுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளுகின்ற மனநிலையினின்று – நாம் எவ்வாறு விடுபடுவது? நம்மையே நாம் உணர்ந்துகொண்டாலன்றோ, விடுவித்துக்கொண்டாலன்றோ, சாதியுணர்வும் நம்மிடமிருந்து கழலும்?! சாதியிலிருந்து நாமே விலகாத வரையில் சாதி நம்மைவிட்டு விலகாது. சாதி வேறெங்கும் வெளியில் இல்லை; அது நம் உள்ளத்துக்குள்ளேதான், அறிவுக்குள்ளேதான், உணர்ச்சிக்குள்ளேதான் இருக்கின்றது. அங்குதான் அஃது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, நாமே அதை வெளியேற்றாத வரையில், அதுவாகவே நம்மைவிட்டுப் போய்விடாது. உண்மையாகச் சொல்வதானால், நாம்தாம் அதை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கின்றோம்; நாம்தாம் அதற்கு நீரூற்றுகிறோம்; எருப்போடுகிறோம்; காவல் செய்கிறோம்; அது மடிந்துபோவதில் நமக்கு விருப்பமில்லை. அஃது இல்லாமற்போனால் நமக்குப் பெருமையில்லை; வாழ்வில்லை என்று கருதிக்கொண்டு, அதை நாம் காப்பாற்றி, மாய்ந்துவிடாமல் வாழ்வித்துக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் அது எப்படி இல்லாமற் போய்விடும்?

    உண்மையிலேயே சாதி நம்மைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை; நாம்தான் அதைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறியிருப்பது தமிழர்கள் ஆழமாய்ச் சிந்திக்கவேண்டிய கருத்தாகும்.

    தமிழின் வளர்ச்சிகுறித்தே அதிகம் அக்கறைகொண்டிருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், ”தமிழ் வாழ வேண்டுமா” எனும் தலைப்பில் எழுதியிருக்கும் பாடல் இன்றைய தமிழகச் சூழலுக்கும் பெரிதும் பொருந்துவதாக இருக்கின்றது.

    தமழ் வாழ வேண்டுமா?

    தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது!
    தமிழ்ப்பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
    குமிழ்சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
    கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ்வா ழாதே!
    அமிழ்கின்ற நெஞ்செல்லாம் குருதி யெல்லாம்
    ஆர்த்தெழும்உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
    இமிழ்கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
    ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

    பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது!
    பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது!
    எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
    எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கினாலும்
    தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
    தம்மிலெல்லாம் தமிழ்தமிழென் றெழுதி வைத்தே
    முட்டிநின்று தலையுடைத்து முழங்கினாலும்
    மூடர்களே தமிழ்வாழப் போவ தில்லை!

    செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்!
    செப்பமொடு தூயதமிழ் வழங்கல் வேண்டும்!
    முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்!
    முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்!
    வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
    வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
    நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
    நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

    எனத் தமிழ்காக்க, அதற்குற்ற இன்னல்போக்கப் பாவலரேறு புகலும் இவ் அருங்கருத்துக்களை நெஞ்சில் நிறுத்துவோம்! நந்தமிழாம் செந்தமிழை அழியாது காப்போம்!

    *****

    கட்டுரைக்கு உசாத்துணை:

    1. https://ta.wikipedia.org/wiki/ பாவலரேறு_பெருஞ்சித்திரனார்
    2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் – தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை – 5.
    3. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய பணிகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை -5.
    4. சாதி ஒழிப்பு – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை – 5.

     

    Share
  • (Peer Reviewed) சங்க இலக்கியங்களில் கணினித் தொழில்நுட்ப வழி பனுவல் சார் பயன்பாடுகள் – முன்னோட்டம்

    (Peer Reviewed) சங்க இலக்கியங்களில் கணினித் தொழில்நுட்ப வழி பனுவல் சார் பயன்பாடுகள் – முன்னோட்டம்

    இரா.சண்முகம்
    Team Manager, CTS Bengaluru | shanfaace@gmail.com

    முன்னுரை

    ஒலைச்சுவடிகள் மூலம் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு, இன்று வானுயுரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. எண்ணற்ற அரிய நூல்கள் அழிந்து போனாலும் இன்றும் நம் வரலாற்றை உரைக்கப் பல நூல்கள் துணை நிற்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கால மாற்றத்திற்கேற்ப நாமும் நம் தேவைகளை மாற்றிக்கொண்டே வருகிறோம். ஒரு காலத்தில் “ஆலும் வேலும் பல்லுக்குக்குறுதி” என்று வாழ்ந்தவர்கள், இன்று பற்குச்சிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். நம் வசதிக்காக நம்மை மாற்றிக்கொள்ளும் போதுதான் வளர்ச்சி ஆரம்பிக்கிறது. இத்தகைய வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் ஏற்றுக்கொள்ள நாம் பழகிவிட்டோம். தமிழ் வளர்ச்சியில் இதை நாம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆட்கள் தேவையைக் குறைத்ததோடு, பன்மடங்கு நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளது. இத்தகு கணினிப் பயன்பாடு இன்று எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொழி என்று வளர்ந்ததற்குக் கணினியும் பெரும் பங்கு வகித்ததை நாம் மறுப்பதற்கில்லை. எனவே மொழியின் வளர்ச்சியில் கணினித் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அவசியமானது அத்தகைய தொழில்நுட்பங்கள் மூலம் சங்க இலக்கியப் படைப்புகளுக்கு எப்படிப்பட்ட கருவிகளை உருவாக்கலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

    கணினித் தொழில்நுட்பம் (Computer Technologies)

    கணினியில் தமிழைத் தட்டச்சு செய்வதும் அதற்கான எழுத்துருக்களை உருவாக்குவதுமே கணினித் தமிழ் வளர்ச்சிக்குப் போதுமானது என்று இருந்துவிட்டால், நாம் தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்த விரும்பவில்லை என்றே பொருள்படும். ஆங்கில மொழியின் அசுர வளர்ச்சிக்கு அதற்கென சொல்திருத்தி, இலக்கணத் திருத்தி, சொற்பொருள் களஞ்சியம் எனக் கருவிகள் அதிகரித்ததைக் காரணமாகக் கூறலாம். அதுபோன்ற கருவிகளை நம் தாய்மொழியில் உருவாக்கினால் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழின் வளர்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    சங்க இலக்கியத்திற்கென நம்மிடம் உள்ள கருவிகள் எத்தனை? சங்க இலக்கியச் சொற்களுக்கென நம்மிடம் பிரத்தியேக இணைய அகராதி (online dictionary) உள்ளதா, ஆசிரியர் குறிப்பு (author information), நூற்குறிப்பு (poem information), சொல்லடைவு (index), தொடரடைவு (concordance), சொற்பிறப்பு (etymology), பிற மொழி சொற்கலப்பு (non native language words), உரையாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வழி பொருள் விளக்கம், மொழிபெயர்ப்பு என இவையனைத்தையும் அறிந்துகொள்ள நம்மிடம் வசதியுள்ளதா என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது மிக அவசியமானது.

    கணினி மொழியியல் (Computational Linguistics)

    மொழியில் உள்ள இலக்கணக் கூறுகளைக் கணினியில் வழி மாற்றுவதற்கான அறிவியலைக் கணினி மொழியியல் எனலாம். இது இயற்கை மொழியாய்வுக்கு (மனிதன் மொழியைப் புரிந்துகொள்வது போல கணினியும் புரிந்துகொள்ள வழிவகை செய்வது) அடிப்படை ஆகும். கணினி மொழியியல் வழி இத்தகைய பணிகளை மேற்கொள்வது ஆய்வுக்கு நன்மை பயப்பதோடு தமிழ்க் கணினி மொழியியலிலும் ஒரு வளர்ச்சியை உண்டாக்கும். பெரும்பாலும் கணினி மொழியியலில் நவீன தமிழுக்கே பலர் கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இதைச் சங்க இலக்கிய படைப்புகளுக்குப் பயன்படுத்தும் போது கணினி மொழியியலின் நெகிழ்வுத்தன்மை வெளிப்படும். ஏனெனில், சங்க இலக்கியப் படைப்புகளும் தமக்கே உரிய இலக்கணங்களைப் பெற்றுள்ளன.

    பொதுவாக, மொழி என்பது கணிதப் பண்புகளை உடையது. அதன் ஒவ்வோர் இலக்கண மாற்றத்தையும் விதிகள் மூலம் நம்மால் வரையறுக்க முடியும்.  சான்றாக “உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்” (உப்பு +ஐ = உப்ப் +ஐ) என்ற புணர்ச்சி விதியைக் கூறலாம். இது போலவே யாப்பையும் நம்மால் வரையறுக்க முடியும்.

    சங்க இலக்கியப் பாடல் ஒன்றை உள்ளீடாகக் கொடுப்பதன் மூலம், அப்பாடல் எந்த வகை யாப்பைச் சார்ந்தது என்பதைக் கணினியால் யூகிக்க முடியும். யாப்புக்குரிய இலக்கணங்களை விதிகளாக மாற்றியமைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். இவ்வகைக் கருவிகள், ஆய்வாளர்களுக்கு எல்லா விதத்திலும் பயனளிக்க முடியும்.

    குறிப்புத் தொடர்கள் (Regular Expressions)

    குறிப்புத் தொடர்களை ஒரு சொல்லைக் கோப்பில் இருந்து தேடிப் பெறத் துணைபுரியும் கருவி எனலாம். ஸ்டிபன் கோலே கிளினி என்ற அறிஞர் 1950ஆம் ஆண்டு இதை அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட ஒரு சொல்லை முழுவதுமாகவோ அல்லது அதன் பகுதியையோ அது இடம்பெற்றிருக்கும் வாக்கியத்தோடு பெறும் வசதியை நமக்கு அளிக்கும் தொழில்நுட்பமே குறிப்புத் தொடர்களாகும். காட்டாகப் புத்தகம் என்ற ஒரு சொல்லை நாம் நம் கோப்பில் தேட வேண்டுமெனில் அதற்கான குறியமைப்பு, பின்கண்டவாறு அமைய வேண்டும்.

    /புத்தகம்/ = “கண்ணன் கடையில் புத்தகம் வாங்கினான்”. தற்போது கணினி ஆவணங்களில் நாம் பயன்படுத்தும் தேடு (find), பதிலிடு (Replace) என அனைத்துமே இதனைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லின் வடிவத்தை வைத்து அது இடம்பெற்றிருக்கும் வாக்கியத்தைத் தேட, இது நமக்கு உதவுகிறது. சங்க இலக்கியங்களில் இடஞ்சுட்டி பொருள் விளக்குதல் , தலைவி கூற்று, தலைவன் கூற்று, நற்றாய் கூற்று, செவிலி கூற்று என எந்த வாக்கியத்தையும் மிகத் தெளிவாகக் கண்டறிய இந்தக் குறிப்புத் தொடர்கள் பெரிதும் பயன்படும். ஏனெனில் எந்த ஒரு சங்க இலக்கியப் பாடலுக்கும் அதன் தன்மைகேற்ப தனியொரு அடையாளம் இருக்கவே செய்கிறது. இப்பாடல்களின் இயல்புகளின் ஆய்வை (feature analysis) அதாவது அப்பாடலின் நூல், ஆசிரியர் பெயர், பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த சொற்கள், காலம், விளக்கவுரை, எதுகைப் பட்டியல், மோனைப் பட்டியல், ஓசை, எந்த வகை இலக்கணம், மொழிபெயர்ப்பு, உவமை என அனைத்துமே ஒரு பாடலின் சிறப்பியல்புகளில் அடக்கம். இதை மேற்கொள்வது மூலம் நாம் நம் கணினிசார் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். சங்க இலக்கியத்திற்கு இது போன்ற ஒரு கருவி
    இருந்தால் அது மாணவருக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பலர், சங்க இலக்கியங்களின் பல்வேறு தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் இது போன்ற கருவிகள் உருவாக்கம் அவர்களை ஊக்கவிப்பதோடு மேலும் பல ஆய்வுகள் தொடர நிச்சயம் வழி வகுக்கும்.

    சங்க இலக்கியத் தரவுகளைக் கணினித் தொழில்நுட்பத்திற்கேற்ப தகவமைப்பது எப்படி?

    சங்க இலக்கியங்களுக்குப் பல்வேறு கருவிகள் உருவாக்கப்பட சாத்தியம் வெகுவாக உள்ள நிலையில் அதைக் கணினிப் பயன்பாட்டிற்கென தகவமைப்பது அவசியமாகிறது. இந்தத் தகவமைப்பு எந்த விதத்திலும் அதன் தரத்தைப் பாதிக்காது. எந்தவொரு கணினிசார் பயன்பாட்டுக்கும் தரவுத்தளம் என்பது மிக அவசியமானது எதை மையமாக நாம் கருதுகிறோமோ அதைத் தரவுத் தளமாக, நம் அவசியத்திற்கேற்ப வடிவமைக்க வேண்டும்.

    மேலே நாம் விவாதித்த பல்வேறு விதமான கருவிகளைச் செய்ய நம்முடைய சங்க இலக்கியத்தையே நாம் தரவுத் தளமாகப் பயன்படுத்த வேண்டும். இது நிரல் மொழிக்கு ஏற்ற வகையில் இருப்பது மேலும் சிறப்பானது. காட்டாகப் பத்துப் பாட்டுக்கு ஒரு தொடரடைவி செய்ய வேண்டுமெனில் அதை ஒரு நோட்பேடில் .txt வடிவத்தில் சேகரித்து வைத்துக்கொண்டால் அது ஒரு சிறந்த தரவுத்தளமாகப் பயன்படும். பயனர் எந்தவொரு சொல்லை விரும்புகிறாரோ அந்த சொல்லின் பயிலிடத்தை நம்மால் எளிமையாகக் இதன் மூலம் கண்டறிய முடியும். ஒப்பீட்டு ஆய்வுக்கும் இது துணைபுரியும் (comparative analysis).

    Html, xml அல்லது mdb வடிவத்தில் இருந்தால் அது இணையக் கருவிகள் (Internet Applications) செய்வதற்குப் பயன்படும். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இக்கருவியைப் பயன்படுத்துவது சாத்தியமாகிறது. மின் புத்தகங்கள் போல சங்க இலக்கியமும் இணையத்தில் முழுவதும் கிடைத்தால் அது இன்றைய இளைஞர்களையும் சென்றடையும். குறிப்பாகச் செவ்வியல் இலக்கியங்களுக்கு இது போன்ற ஒரு கருவியின் தேவை அவசியமாகிறது.

    முடிவுரை

    சங்க இலக்கியங்களுக்கெனத் தனியொரு இணையத்தளத்தைத் நாம் ஏற்படுத்திட வேண்டும். அவ்விணையத்தளத்தை நாம் மேற்சொன்ன வசதிகளோடு உருவாக்க வேண்டும். ஏற்கனவே அரிய பல தமிழ் சொற்களை ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் நாம் இழந்து வருகிறோம். படிக்காத பலரும் கூட ஆங்கிலம் எனத் தெரியாமலே தமிழோடு ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அவலங்கள் இன்று அரங்கேறி வருவதை நம்மில் பலர் கண்டிருக்கிறோம்.

    தமிழறிஞர்கள் பலரும் தங்கள் இலக்கியத் திறனாய்வுக்கெனப் பல மணி நேரங்களைச் செலவழிக்கின்றனர் அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய ஒரு மென்பொருள் இருந்தால் தமிழுக்கு மேலும் சிறந்த பல படைப்புகள் கிடைக்க அது வழிவகுக்கும். பொருண்மை ஆய்வைத் தவிர மற்ற எல்லா விதமான ஆய்வுகளையும் தற்போது மேற்கொள்ள முடியும். பொருண்மையை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளும் தற்போது பரிசீலனையில் உள்ளன. இது போல் கணினி மொழியியல் அடிப்படை ஆய்வுகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மென்மேலும் வலுசேர்ப்பதோடு மொழிக் கருவிகளின் தரத்தை மேம்படுத்தவும் பெரிதும் துணைபுரியும்.

    நூற்பட்டியல்

    A grammar of contemporary literary Tamil by Pon.kothandaran
    Speech and Language Processing by Danial jurafsky

    கட்டுரை

    கணினித் தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைத் திட்டப் பணிகள் – பேரா.ந.தெய்வசுந்தரம் 2010,  உலகத் தமிழ் இணைய மாநாடு.

    =========================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழ் இலக்கியங்களை – குறிப்பாகச் சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடித் தொழில்நுட்பம் எவ்வாறு தமிழ் வரலாற்றில் சேமித்து, பாதுகாத்து வந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிற கட்டுரை ஆசிரியர் , இன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் அந்த முக்கியப் பொறுப்பைக் கணினித் தொழில்நுட்பம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது, ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். கணினித் தமிழ் என்பதானது கணினியில் தட்டச்சு செய்வதோடு நின்றுவிடுவதில்லை ; மாறாக, தமிழ் மொழியைக் கணினி புரிந்துகொண்டு, பலவேறுபட்ட கணினிவழி மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்ள வைப்பதே ஆகும் என்று தெளிவாக எடுத்துரைக்கிறார். மேலும் தமிழாய்வை எவ்வாறு கணினிவழி மேற்கொள்ள முடியும் என்பதைச் சில எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார். அவ்வாறு கணினி மேற்கொள்வதற்கு ஆய்வாளர்கள் எவ்வாறு கணினிக்குத் தமிழ் அமைப்பைக் கணித அடிப்படையில் விளக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

    கணினித் தொழில்நுட்பத்தின் அடிப்படையே கணிதம் என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ள கட்டுரை ஆசிரியர், தமிழின் அமைப்பைக் கணித அடிப்படையில் வழங்க இயலும் என்று கூறுவது, தமிழ் இலக்கணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கிறது. செய்யுள்களின் யாப்பிலக்கணம்கூட கணித அடிப்படையில்தான் அமைந்துள்ளது என்பதைக் கூறுகிற ஆசிரியர், தமிழ் இலக்கியங்களைப் பல்வேறு நோக்கில் ஆய்வு செய்வதற்குக் கணினித் தொழில்நுட்பம் ஏற்றதே என்பதை மிக உறுதிபடச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, சங்க இலக்கிய ஆய்வுக்கு எவ்வாறு தரவக மொழியியல் அடிப்படைகளைப் பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறார். சங்க இலக்கியங்கள் அனைத்தும் மின்னூல் வடிவத்தைப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியத் தரவகம் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்தத் தரவகத்தை எவ்வாறெல்லாம் தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தலாம் என்பதையும் நன்றாகவே விளக்குகிறார்.

    மேற்கூறிய அடிப்படையில் இக்கட்டுரையானது வல்லமை ஆய்விதழில் வெளியிடுவதற்குரிய தகுதியைப் பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    =========================================================================

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 48

    சேக்கிழார்  பா நயம் – 48

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    இளம் பருவத்திலேயே  முதிர்ந்த அறிவின் அடையாளங்கள் வெளிப்பட, சுந்தரர்

    கண்முன் தோன்றிய  பரவை நாச்சியாரின் பேரழகு  பற்றியது இப்பாடல். அம்மங்கை நல்லாளைக் கண்டவுடன் இறையருளால் சுந்தரருக்குக் காதலுணர்வு உண்டாயிற்று.

    இந்த உணர்வைக் களவியல் உணர்வு என்று  தொல்காப்பியம் கூறும். இளம்பருவத்தினர் இணைவிழைச்சுக் கொள்வது இயல்பு. பாவேந்தர் பாரதி தாசனர், ‘’காதல் அடைதல் உலகியற்கை!’’  என்றுபாடுவார். இக்காதல் உணர்வு, பிறர் அறிந்துகொள்ள இயலாத நிலையில், இருவருக்கும் இடையே ஏற்படும். இதனைக் ‘களவு’ என்ற இயலாக  இலக்கணம்கூறும். இக்களவியலின் தொடக்க நிகழ்ச்சிகளாகக் காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் ஆகிய நான்கும் நிகழும் ! இதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். இதனைத் திருக்குறள் காமத்துப் பாலின்  முதற்குறள் விளக்குகிறது. 

    தலைவன் தலைவியை நெடுந்தொலைவில்  வரும்போதே கண்டுவிடுகிறான். அவன் தான்காண்பது ஓரு தெய்வத்திருவுருவோ? என்றுஎண்ணுகிறான், இதனை ‘அணங்கு கொல்!’  என்றெண்ணி ஐயுறுகின்றான்! பின்னர் தலைவி மேலும் நெருங்கி வரும்போது , சிறந்த உருவுடைதாய்த் தோன்றும் தேர்ந்தெடுத்த மயிலோ? என்பதை, ‘ஆய்மயில் கொல்லோ?’  என்று கருதுகிறான். அதன்பின் மேலும் நெருங்கி வரும்போது, அவள்காதில் அணிந்த குழையாகிய அணிகலனைக் காண்கிறான். அப்படியானால் காதில் நகையை அணிந்து கொண்டு நெருங்கி வருபவள் ‘பெண் தானோ?‘ என்ற  தெளிவற்ற மனநிலை கொள்கிறான்! இதனை, 

    ‘’அணங்குகொல் ,  ஆய்மயில் கொல்லோ  கனங்குழை
    மாதர்கொல்  மாலும்என் நெஞ்சு!’’

    என்ற  திருக்குறள்  படம் பிடித்துக்  காட்டுகிறது! காட்சி, ஐயம்,  தெளிவு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இத்திருக்குறள்  அமைந்து நம்மை வியப்படைய வைக்கிறது!  

    இதனைப் பரிமேலழகர், ‘.எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி ‘அணங்குகொல்’ என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்’ என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி ‘மாதர்கொல்’ என்றும் கூறினார்.  என்று மேலும்விளக்குவார்! இத்தகைய  காதல் நிகழ்வு சேக்கிழார் சுவாமிகளின்  பாடலில் விளங்குகிறது. 

    இதற்கு முதற்பாடலில் ‘’விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்!’’ என்றபகுதி இருவர்தம்  கண்ணும் ‘’ கண்ணொடு கண்ணிணை நோக்கு’’ ஒத்ததை நினைவூட்டுகிறது. அப்பாடலில் ‘’நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழையவர்’’ என்றபகுதி,  பரவையாரது இயற்கை செயற்கை என்ற இருவகைத் தெய்வீக அழகுகளையும் காட்சிபெற வைத்தவாறு. நம்பிகள் காட்சிக்குக் கவர்ச்சியுற முதலிற் புலப்பட்டது நகை. அதன் பின்னரே அதற்கிடமாகிய செவ்வாய் தோன்றிற்று. இவை யிரண்டினால் அக்காட்சியை அவர் உள்ளத்தே ஊன்ற வைத்தன மேலே கண்ட வில்லும் வேலும் ஆம். -ஆதலின் இம்முறை வைத்தார். ஊறுசெய்து உறுத்தியன ஆதலின் படையாகக் கூறியவாறு. வில் கைவிட்டகலாது தொழில் செய்வதுபோல் நுதலும் தானிருந்தபடியே செயல் விளைத்தது ஆதலின் வில் என்றார். வேல் உடையாரால் எறியப்பட்டு ஏவப்பட்டாரிடம் போய்ச் செயல் விளைக்கும்; ஆதலின் கண்ணை வேல் என்றார். இங்குக் கண் என்றது கண்ணின் தொழிலாகிய பார்வையை. அந்தக் கண்ணால் பரவையாருங் கண்டாராதலின் (288) “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனு மில“ என்ற திருக்குறளிற் கண்டவாறு நிகழ்ச்சி உண்டாயிற்று என்க. இக்காரணம் பற்றியே வரும்பாட்டில் விற்குவளை என ஒரு சேர வைத்து எண்ணியபடியாம்’’ என்ற   சிவக்கவிமணியார் உரையின் ஆழமும் அகலமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இது காட்சி !

    அடுத்து  ஐயம் என்ற  தொடர் நிகழ்ச்சி. பரவையாரின்  அழகிய தோற்றம் சுந்தரர் உள்ளத்தில்  பல்வேறு ஐயங்களை உண்டாக்குகின்றன! முதலில் அவர் தோற்றம்  தேவருலகக் கற்பக மரத்தின் பூங்கிளை போன்று காட்சி தந்தது.அதனைக்  ‘’கற்பகத்தின் பூங்கொம்போ?’’ என்று கருதுகிறார்!  

    கற்பக மரம்  வானுலகைச் சார்ந்தது. மண்ணுலகில் அதன் கிளைமட்டும் வந்ததோ? பரவையார்  வரும்போதே எங்கும் பரவிய நறுமணம் கற்பகப்பூவின் நறுமணமோ? மரக்கிளை என்ற  கருத்து முற்றப் பொருந்தவில்லை எனக்கருத்தினால், அத்தொடரை கற்பு+அகத்து+ இன்+ பூ+கொம்பு என்று பிரிக்கப்பெற்று, கற்பினை  அகத்தே கொண்ட இனிய மலர்க்கொத்து போன்ற மங்கை என்ற தொனிப் பொருள் தோன்றுகிறது ஆகவே இது கொம்போ? பெண்ணோ? என்றஐயம்தோன்றியது!

    அடுத்து பரவையாரை மன்மதன்,  தான் காதல் மலரம்புகளை எய்து சுந்தரரை வசப்படுத்தி   உயர்வாழ்வு அடைதற்கு உரிய வாழ்விடமாகக் கருதி வந்தானோ? 

    என்றகருத்தில் ‘’காமன் தன் பெருவாழ்வோ’’  என்று கருதினார்! மணிவாசகரின் திருக்கோவையாரின், 

     திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
    மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அனநடை வாய்ந்து
    உருவளர் காமன்தன் வென்றிக்கொடி  போன்று? ஒளிர்கின்றதே!

    என்ற பாடலில்  உருவளர் காமனின்  வெற்றிக்கொடி போன்று  என்ற உவமை பரவை நாச்சியாருக்கும்  பொருந்துகிறது.இதில் பூங்கொம்பு என்ற தொடரின் பொருளும் இணைகிறது!

    அடுத்து அழகிய புண்ணியங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த பெரும்புண்ணியமோ? என்று பரவையாரின் தோற்றம் சுந்தரரைக் கருதவைக்கிறது !  அல்லது அழகு என்றபொருளின் பயன்கள் பலவற்றுள் சிறந்த புண்ணியப்பயனோ? என்றுசுந்தரர்கருதுகிறார். புண்ணியம் காட்சிப் பொருள் அல்லவே! அதுவோ,  பெண்வடிவமோ? என்ற ஐயம்தோன்றும் காட்சி இது! இதனை,’’ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?’’ என்ற பாடல்வரி புலப்படுத்துகிறது. 

    இது நிலத்தில் கால்பதித்து  முளைத்த கொடியோ? இக்கொடியில் வில், குவளை, பவளம், மலர், மதி ஆகியவை பூத்துக் காணப்  படுகின்றனவே? ஒரு கொடி மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு வில் , பவளம், மதி ஆகிய வேறுபட்ட பொருள்களுடன், குவளை மலர்களையும்   ஏந்திக்கொண்டு மிகுந்த வாசனை வீசித் தோன்றுவது போல் இருக்கின்றதே! உலகில் இல்லாத கொடியோ? உள்ள பெண்ணோ? என்பது ஐயப் பொருள் தருகிறது! இதனை,

    ‘’புயல் சுமந்து  வில் குவளை பவள மலர் மதி பூத்த  விரைக்கொடியோ?’’  

    என்று   சேக்கிழார்  பாடுகிறார்! ஒருபெண்ணின் மேகம்போன்ற கூந்தல், வில் போன்ற புருவம், குவளை  போன்ற விழிகள், பவளம் போன்ற இதழ்கள், கோங்க மலர் போன்ற கொங்கை, மதி போன்ற நுதல் ஆகியவற்றை உருவகம்  செய்யும் சொல்லாட்சித் திறம் பெற்றது இப்பகுதி! பெண்ணின் அங்கங்கள் இன்று படிப்போருக்கும் காட்சிப்பொருளாக அமைந்தது. அன்று  நேரில் கண்ட போது, சுந்தரர் மட்டுமே உணர்ந்த மலரின் நறுமணம் ‘’ விரைக்கொடி’’ என்ற தொடரில் அமைந்தமை இன்புறத் தக்கது.  

    அடுத்து சுந்தரருக்குப் பெருமிதமும் தரும்ஓர்உள்ள நிகழ்ச்சி கூறப்பெறுகிறது. இதுவரை கண்டறியாத புதுமையை  பரவையார் தோற்றத்தில், சுந்தரர் உணர்ந்தார் . ஆதலால், ‘’அற்புதமோ?’’ என்று கருதினார். அவர் மட்டுமே உணர்ந்த அனுபவம், அது!  இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்று இறைவன் திருவுள்ளப் பாங்கின் வண்ணமே வாழும் சுந்தரருக்கு இக்காட்சியும் இறைவன் திருவருளாகவே  தோன்றியது. ஆதலால் இதனை ‘’ சிவனருளோ?’’ என்றார்.

    இந்நிகழ்ச்சி, ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின் இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக் குறிக்கின்றமை உணர்க.   கொம்போ – வாழ்வோ – புண்ணியமோ – 

    கொடியோ – அற்புதமோ – இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும் கலந்ததோ, பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின் அறியாமையும், கூடி அறியேன் எனப் பெற்றது. 

    அதிசயித்தார் – இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும் இன்பமும் கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று அறிந்து அனுபவிக்கப் பெறும். “அதிசயம் கண்டாமே“ என்ற (திருவாசம்) அதிசயப்பத்து முடிபுகளைக் காண்க. 

    மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள நிகழ்ச்சிகளாம். மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின் அதிசயித்தார் என்பதாம்.

    முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ அழகும் கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது. அதனைக் கொம்போ என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி நோக்கிக் காமன் வாழ்வோ என்றார். அந்த அழகு வெறுங் கீழ் நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய விளைவாய்ப் புலனானமையின். “புண்ணியமோ“ என்றார். இவ்வளவும் நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். 

    இனி அவ்வாறு மணமும் அழகும் ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன வென்று கூறுபடுத்தி அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ’ என்ற சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று. இவ்விரண்டினோடு அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர் அவனருளே யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின் குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று.

    இவையனைத்தும்  சிவக்கவிமணியாரின் விளக்கம்! இனி முழுப்பாடலையும்  பயின்று பயன் பெறுவோம்!

    கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? 

    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து 

    விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ? 

    அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்

    இப்பாடலின்  நயங்கள் அனைத்தும்  எண்ணியெண்ணி மகிழ்தற்கு  உரியன. 

    Share
  • ஐயப்பன் காவியம் – 8

    ஐயப்பன் காவியம் – 8

    இலந்தை சு. இராமசாமி 

    ஐயப்பன் காவியம் 

    இந்திரலோகப் படலம்

    பதினொரு சீர் விருத்தம்

    மா மா மா மா மா மா காய் மா மா காய் மா

    யார டாநீ  இந்தி ராவா என்னை மீறி ஆளுவதா
    ஆகா திங்கே  நீவெளியே வாடா
    பார டாயென் கொம்பி ரண்டைப் பாய்ந்து வந்து  குத்திடுவேன்
    பம்மு கின்றாய் ஆட்சியொரு கேடா
    வேரெ டுப்பேன்  வீழ வைப்பேன் வெற்றி யோடு நானி ருப்பேன்
    வேக மாய்நீ ஓடிடா மூடா
    பேரு  ரைத்துக் கால் விழுந்து நீபிழைத்துப்  போய்விட டா
    பிச்சை போட்டேன் வந்துடனே  போடா

    என்று ரைத்தாள் பின்குதித்தாள் தேவ ரெல்லாம் ஓடிடவே
    இந்தி ரன்சிம் மாசனத்த மர்ந்தாள்
    வென்று விட்ட கர்வம் கொண்டு மேலும் கீழும் தான்குதித்தாள்
    விண்ண டுங்கி ஆடிட மிதித்தாள்
    சென்று விட்ட தேவர்  தம்மைக் கொன்று விட்டா லென்னவெனெத்
    தேடித் தேடி ஓடியங்க லைந்தாள்
    நின்றிருந்த ஊர்வ சியை இரம்பை யைத்தி லோத்த மையை
    நீங்க ளென்முன் ஆடுகெனச்  சொன்னாள்

    வாலெ டுத்துத் தாஞ்சு ழன்றே இந்த வண்ணம் ஆடுகென்றாள்
    வாலுக் கெங்கே போவரவர் பாவம்
    காலெ டுத்துத்     தான்குதித்துக் கற்றி ருந்த வித்தையெலாம்
    காட்டி னார்கள்  என்னசெய்யக் கூடும்?
    மேல டுத்த மூக்கி ன் வழி மூச்சுவிட்டுத் தான்கு தித்து
    முட்டு கிறாற் போலமகிடி வந்தாள்
    ஓலமிட்ட ரம்பையர்கள் நாலு பக்கம் ஓடி னார்கள்
    ஓடவிட்டு வேடிக்கை பார்த்தாள்.

    கற்ப கத்தைப் பேர்த்தெ டுத்தாள் கா ம தேனு வையழைத்தாள்
    காய்ச்சியபால்  கொண்டுவரச் சொன்னாள்
    சொற்படிகேள் என்று சொல்லி வெள்ளை வண்ண யானையின் மேல்
    சொர்க்க மெல்லாம் சென்று சுற்றி வந்தாள்
    அற்பு தங்கொள் புட்ப கத்தில்  ஆள்க ளோடு தானமர்ந்தே
    அண்ட மெல்லாம் சுற்றி வந்து கண்டாள்
    கற்ப னைகள் தாங்க டந்த தொல்லை யெல்லாம் தான் கொடுத்தாள்
    கையெ டுத்து யாவையும்பொ டித்தாள்.

    ஓரிரண்டு இடங்களில் நிரையசை விட்டிசைத்து மாச்சீர் போல ஒலிக்கும்: எ.காய்ச்சி யபால்     சொற்ப டிகேள்)

    எழுசீர் விருத்தம்

    காய் காய்  காய் காய் காய் காய் மா!

    தூங்குமட்டும் பாடுதற்குக் கின்னரரை  வரச்சொன்னாள்
    சொப்பனத்தும் கக்கவெனச் சிரித்தாள்
    பாங்கியர்கள் வேண்டுமென்றாள் பக்கமவர் வந்துநின்றால்
    பல்லிளித்துக் கதிகலங்கச் செய்தாள்
    ஆங்குவைத் திருந்தமதுக் குடமனைத்தும் கையெடுத்தே
    அப்படியே வாயூற்றிக் குடித்தாள்
    ஈங்குவரச் சொல்லுங்கடி இந்திரனின் துணைவிகளை
    என்றுசொல்லிக் கெக்கலித்துச் சிரித்தாள்

    பட்ட த்து மகாராணி  போனயிடம் தெரியவில்லை
    பாவமவள் மிகப்பயந்து போனாள்
    விட்டுப்போய்   இந்திரனும் வேறெங்கோ இருக்கின்றான்
    வேறெதுவும் யாமறியோம் தேவி
    எட்டித்தான் நிற்கின்றோம் என்வேண்டும் சொல்லுங்கள்
    ஏலும்வரை செய்கின்றோம் என்றே
    முட்டித்தான் தள்ளுவளோ எனப்பயந்தே ஏவலர்கள்
    முறையிட்டுத் தாமொதுங்கி நின்றார்

    “இங்கேவா விசுவகர்மா இந்தச்சிம் மாசனத்தை
    என்வடிவுக் கேற்பச்செய் என்றாள்
    அங்கேசென் றவன் சொன்னான்” இந்தச்சிம் மாசனமோ
    ஆள்வடிவுக் கேற்றபடி மாறும்
    சங்கேதம் ஒன்றுண்டு சாற்றுகிறேன் அதைச் சொன்னால்
    தக்கபடி தான்மாறிக் கொள்ளும்”
    சிங்கா தனத்தருமை வியந்தபடி அவள்சென்றாள்
    தேவரெலாம் வாய்பொத்தி நின்றார்.

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    62. இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • மனம் திருந்த அருளிவிடு

    மனம் திருந்த அருளிவிடு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா…… மெல்பேண் … ஆஸ்திரேலியா

    நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா
    நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல
    இயற்கையினைப் பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்
    நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ?

    ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை
    வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை
    பரந்துநிற்கும் கடல்கூடப் பாரபட்சம் பார்ப்பதில்லை
    பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன்?

    பூமிதனைக் குடைந்து புதையல்பல எடுக்கின்றார்
    காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்
    நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்
    கேடெல்லாம் செய்துவிட்டுக் கீதைபற்றிப் பேசுகிறார்!

    ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்
    நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்
    நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை
    பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரைப் பறிக்கலாமா?

    படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்
    குடிக்கின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்
    நடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு
    நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும்!

    கோபம்வந்தால் கொளுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்
    வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல
    பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை
    ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம்!

    பலமொழிகள் பேசிடினும் பசியெவர்க்கும் ஒன்றேயாம்
    பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்
    இவையாவும் சமமாயின் ஏன்நீரைத் தடுக்கின்றார்
    இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு!

    Share
  • வலி (சிறுகதை)

    வலி (சிறுகதை)

    சு.திரிவேணி, கோயம்புத்தூர்

    “இங்க பாரும்மா.. ஒரு மனுஷனுக்கு திறமைதான் முக்கியம். ஆனால் இந்த உலகத்தில் வாழறதுக்கு திறமை மட்டும் பத்தாது. கொஞ்சம் சாமர்த்தியமும் வேணும். சொல்றத புரிஞ்சுக்கோம்மா… அப்பா உன் நல்லதுக்குதான்டா சொல்லுவேன்!”

    அப்பாவை மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். என் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர் அவர் நெஞ்சைத் தொட்டிருக்க வேண்டும்.

    “உனக்கு வரையறதுல ஆசை இருக்கு. திறமையும் இருக்கு! ஆனா வாழ்க்கைனு வர்றப்போ அதெல்லாம் ஒத்து வராது. இப்ப இருக்கிற நிலைமைக்கு பிஸினஸும் கம்ப்யூட்டரும் தான் நல்லா போயிட்டு இருக்கு. நீ அதைப் படிக்கறது தான் நல்லது”

    அவரைச் சொல்லியும் குற்றமில்லை. என்னுடைய ஓவிய ஆசைக்கு ஆரம்ப காலங்களில் எல்லாம் எந்தத் தடையும் சொல்லாமல் ஊக்குவித்தவர்தான். நாளாக நாளாக, நான் ஓவியத்தின் மீது தீராக் காதல் கொண்டு பிரஷும் கையுமாக அலைய, அவருக்கோ அது வெறுப்பாகத் தொடங்கியது.

    “இதெல்லாம் பொழுதுபோக்கா வேணா செய்யலாம். சோத்துக்கு உதவாது. போய்ப் படிக்கிற வழியைப் பாரு!” என்று அவர் அறிவுரை சொல்லத் தொடங்கியதும் நான் கொஞ்சமாய் அதிர்ந்தேன்.

    அவர் நிலைமையிலிருந்து யோசித்தால் அவர் சொல்வதில் தவறில்லைதான். அண்ணன் ஐ.டி முடித்துவிட்டு ஆரம்பத்திலேயே 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, என்னை மட்டும் வருமானம் இல்லாத துறையில் தள்ள அவருக்கு மனமில்லை.

    அண்ணனுக்கு இணையாக என்னையும் படிக்க வைக்க நினைக்கும் அவரை நினைத்தால் எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அதே சமயம் என்னுடைய லட்சியம் என்று கூடச் சொல்ல முடியாது; வெறி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓவியக் கலையை விட்டு ஒரேயடியாய் விலகிட எனக்கும் மனமில்லை. இதன் மூலமாகவும் சம்பாதிக்க முடியும் என்று காட்டினால் அவர் மனம்
    மாறுவார் என்று நம்பினேன்.

    தங்க நகை டிசைன் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு 5000 ரூபாய் முதல் பரிசு பெற்றபோது “ஸ்கூல்ல படிக்கும்போதே எவ்வளவு திறமை!” என அனைவரும் பாராட்ட, கொஞ்சம் பெருமையுடனும் நிறைய கலக்கத்துடனும் தலையசைத்துச் சென்றார் அப்பா.

    லயன்ஸ் கிளப் இன் கிளே மாடல் வடிவமைப்புப் போட்டியில் முதலாவதாக வந்து 2000 ரூபாய் பரிசை வென்றேன். இரண்டு போட்டிகளிலும் பரிசு வழங்க வந்தவர் மிகப்பெரும் ஓவியரான மதன். ஓவியத்தில் ஆர்வம் உடைய எல்லோருக்குமே அவர்தான் இன்ஸ்பிரேஷன். எங்களுக்கு எல்லாம் கடவுள் போல!

    அப்படிப்பட்டவர் எனக்குப் பரிசு கொடுக்கும் போது, அங்கிருந்த எனது ஓவியத்தைப் பார்த்து புருவங்களை உயர்த்தியதையே நான் பெரும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அவரோ என் தோளில் தட்டிக் கொடுத்து அந்த ஞாயிறு அவர் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துச் சென்றார்.

    கோவிலுக்குச் சென்று தெய்வத்தை நேரில் பார்க்கப் போகும் பக்தனைப் போல நானும் போனேன்.
    “வாம்மா! வா! வா! இத்தனை சந்தோஷத்துடன் இந்த உயர்ந்த மனிதர் என்னை ஏன் வரவேற்க வேண்டும்? என் ஓவியத்தைப் பற்றிக் கொஞ்ச நேரம் பாராட்டியவர் தன்னுடைய ட்ராயிங் ரூமுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

    ரூமா அது? அது ஒரு கோயில்! உண்மையிலேயே அந்த இடம்தான் சொர்க்கம்! சந்தோஷத்தில் அங்கேயே உட்கார்ந்து அழ வேண்டும் போலிருந்தது எனக்கு. அவரும் நானும் பேச ஆரம்பித்தோம்.
    இத்தாலியின் வால்காவிலிருந்து நம் ரவிவர்மாவிலிருந்து, எல்லாம்… எல்லாம்… பேசினோம். என்னுடைய நிறைய வினாக்குறிகள் அவரால் ஆச்சரியக்குறிகளாக மாறின.

    “சார்! ஒரு ஓவியத்துக்கு எது முக்கியம்? இருக்கிறதை அப்படியே காட்டுவதா? அல்லது அதை அழகாக்கிக் காட்டுவதா?”

    “இரண்டுமே ஓவியத்துக்கு உயிர் தாம்மா! ஒரு சில இடங்களில் அழகு முக்கியம். ஒரு சில இடங்கள்ல உண்மை முக்கியம். இப்ப உதாரணத்துக்கு, ஒரு மல்லிகைத் தோட்டத்தை நீ வரையும் போது அழகு முக்கியமா இருக்கும். ஆனால் நல்லா சுட்டெரிக்கும் வெயில்ல, கட்டை வண்டியை ஒரு வயசானவர் இழுத்துட்டு வர்ற காட்சியை வரையும் போது, அவர் முகத்தில சின்னச் சின்னதா இருக்கிற வியர்வைத் துளியைக் கூட விடாம அப்படியே தான் வரையணும். அந்தக் காட்சியை அழகுபடுத்த
    முயற்சி செஞ்சா அது அபத்தமாயிடும். எந்த ஓவியம்னாலும் அதோட ஒரிஜினாலிட்டி மாறக் கூடாது. அதுதான் முக்கியம்”.

    “சார்! நான் நிறைய ஓவியங்களைப் பார்த்திருக்கேன். ரொம்ப அழகா இருக்கும்; ஆனாலும் நம்ம மனசுக்கு நெருக்கமாக இல்லாமல் ஏதோ ஒரு ‘கேப்’ ஓவியத்திற்கும் நமக்கும் நடுவுல இருக்குற மாதிரி தோணும். ஏன் அப்படி?”

    என்னுடைய எந்தக் கேள்விக்கும் ஒரு சின்னப் புன்சிரிப்புடன் பதிலைத் தொடங்கும் அவர், இப்போது மட்டும் ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார்.

    “நீ வரையறதை ரொம்ப அதிகமாகவே நேசிக்கத் தொடங்கி இருக்கேன்னு புரியுது. இல்லாட்டி இந்த உணர்வோ, கேள்வியோ தோணாது. நல்லா கவனிம்மா! இப்ப நான் சொல்லப் போவதுதான் ஓவியத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம், சரியா? இப்ப உன்னை மாதிரி ஒரு சின்ன பொண்ணு ஒரு பூனைக்குட்டி கூட விளையாடுது: அப்ப அது முகம் பூராவும் சந்தோஷம் பரவியிருக்கும்! அதே பொண்ணு சர்க்கஸ்ல சிங்கத்தின் வாய்க்குள்ள தலையை விட்டு வெளியே எடுக்கிறவரை பார்க்குது; அப்ப அந்த பொண்ணோட கண்ணில் மட்டும் ஒரு பெரிய ஆச்சரியம் தெரியும்! ஸ்கூல்ல, ஏதோ ஒரு போட்டியில ஜெயிச்ச கோப்பையை வாங்கிட்டு வந்து காட்டும் போது அந்தக் குட்டிப் பொண்ணு முகத்துல, ரொம்ப முக்கியமா.. அதோட கண்ணுல ஒரு பெருமிதம் தெரியும்! ‘சாதித்தேன் பாரு’ன்னு அந்தக் கண்ணு சொல்லாமல் சொல்லணும்! அது தான்.. அந்த உணர்வுதான் ஓவியத்தில் ரொம்ப முக்கியம்! அதை நுட்பமாகக் காட்டிட்டா அவர்தான் சிறந்த ஓவியர்!” என்று சொல்லிக்கொண்டே போனவர், இடையில் டெலிபோன் கூப்பிட எழுந்து போனார்.

    அவர் மனைவியும் பிஸியாக இருக்க, டீபாய் மேல் கிடந்த பேப்பரும் பென்சிலும் என் கண்ணில் பட்டது. மதன் சாரை உலகம் தெரிந்த ஒரு பாசமான அம்மாவைப் போலவும் அவரை நோக்கி ஓடும் ஒரு குழந்தையாக என்னையும் கற்பனை செய்து வரைந்து பார்த்தேன். என் கண்களில் அவர் சொன்ன அந்த ‘உணர்வு’ தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து “ஃபென்டாஸ்டிக்!” என்று மதன் சாரின் குரல் கேட்டது.

    “நீ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா வரைஞ்சுகிட்டு இருந்த.. உன்னை டிஸ்டர்ப் பண்ண மனசு இல்லாம நீ வரையறதை பின்னால நின்னு பார்த்துட்டு இருந்தேன். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு உன்னப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும்மா! உன்னோட இந்த அபாரமான திறமை கடவுள் உனக்குக் கொடுத்த வரம்! தயவுசெய்து இதை வீணாக்கிடாதம்மா! உன்னால நிறைய சாதிக்க முடியும்! நீ அதுக்காக தான் பொறந்திருக்க! நல்லா கத்துக்கோ! ஆயில் பெயிண்டிங், கலர் மிக்சிங், டார்க் கலர், லைட் கலர், இருட்டு ஓவியம், நாட்டுக்கு நாடு, கலைஞனுக்கு கலைஞன் வித்தியாசம் இருக்கு! நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ! ஒரு புது அவதாரம் எடு! வந்தோம் இருந்தோம்னு இருந்துட்டு திடீர்னு
    ஒரு நாள் காணாமல் போறதில்லை வாழ்க்கை! நமக்கப்புறமும் நம்மைப் பத்தி ஒரு சரித்திரம் இந்த உலகத்துல இருக்கணும். அதுதான் வாழ்க்கை. உன்னால அப்படி வாழ முடியும்மா!”

    என் மனத்தில் தெய்வமாய் இருந்தவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

    அதுவரை வெறும் ஆசையாக இருந்த ஓவியக் கனவு அதன் பிறகு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆனால் இப்போது அப்பாவோ.. என்னை ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதில்லை எனப் பிடிவாதமாக இருக்கிறார். வேறு வழியும் தெரியவில்லை. என்னுடைய ஓவிய ஆசைக்கு சமாதி கட்டி விட்டு, கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது!

    எல்லோரும் முதல் நாளில் ஏக எதிர்பார்ப்புகளுடன் போக, நானோ மனம் முழுக்க என் கனவைப் புதைத்துவிட்ட வேதனையைச் சுமந்து கொண்டு போனேன். ஓவிய ஆசையைத் தள்ளி வைக்கவேண்டும் என்ற எண்ணமே என் இதயத்தை அறுப்பது போல் இருந்தது. வருமான வரி எனக்கு வரவே வராமல் போனது. அக்கவுண்ட்ஸ் அறிவோ, பாதியிலேயே நின்று போனது. கல்லூரிப் படிப்பை முடிக்காமலே மூன்று ஆண்டுகள் முடிந்தன.

    “காமர்ஸ் எடுத்துட்டு அக்கவுண்ட்ஸ் வரலைன்னா நீ எல்லாம் உருப்படுவியா? ஒரு டிகிரி முடிக்கத் துப்பு இல்ல! வேற என்ன செஞ்சு கிழிக்கப் போற? உன்னைப் பெத்த கடமைக்கு எங்கேயாவது கல்யாணம் பண்ணித் தள்ளித் தொலைக்காமல் போனேன் பாரு… என் தப்பு.. தத்தி!… தத்தி!”

    அப்பாவின் வார்த்தைகளால் எனக்கு எதுவுமே வராது என்ற எண்ணம் என்னுள் ஆழமானது. இனி உருப்பட மாட்டேன் என எல்லோராலும் முத்திரை குத்தப்பட்ட நான் திருமணம் செய்து அனுப்பப்பட்டேன். ஒரு அழகான பெண் குழந்தை இப்போது எனக்கு! குடும்பம் மட்டுமே உலகமாகிப் போனது. என் அடையாளமே மாறிப் போய், முகவரி இல்லாதவளாகிப் போனேன் நான்.

    “எதுக்குமே நான் லாயக்கில்லை. இதையாவது ஒழுங்கா செஞ்சா போதும்”

    என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இப்போது என் பிள்ளை அனைத்துப் பாடங்களிலும் முதலாவதாக வருகிறாள். கணக்கில் புலி! அவளும் அவள் அப்பாவும் போரடித்தால் கணக்கில் புதிர் போட்டு விளையாடுகிறார்கள். இவள் என் அப்பாவுக்குப் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

    ஸ்கூல் முடிந்து அவள் வரும் நேரம் தான். இன்னைக்கு அவ ஸ்கூல் பங்க்ஷன்! எப்போதும் போல கோப்பையுடன்தான் வருவாள். நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

    “அம்மா இங்க பார்!”

    கோப்பையைக் கையில் தூக்கிக் காட்டியபடி ஓடி வந்தாள். ஷாக் அடித்தது போல் என் உடம்பு பூராவும் ஏதோ அதிர்வு தோன்றியது.

    ‘தன்னோட ஸ்கூல்ல எதுலயாவது ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டு வந்து காட்டும்போது அந்த குழந்தை முகத்தில… முக்கியமா கண்ணுல… ஒரு பெருமிதம் தெரியும்!’

    மின்னல் அடித்த மாதிரி மதன் சாரின் வார்த்தைகள் என் மனத்துக்குள்.

    ‘உன்னால நிறைய சாதிக்க முடியும்! நீ அதுக்காக தான் பிறந்து இருக்க!’

    என்ன ஆகிவிட்டது எனக்கு? ஏன் இப்படி ஆனேன்? எவ்வளவு பெரிய கலையை எப்படி அழிய விட்டேன்?

    ஒரு புதுப் பரவசத்துடன் என் மகளைப் பார்த்தேன். அவள் கண்களில் அவர் சொன்ன அந்த ‘உணர்வு’! சீக்கிரமே என் வேலைகளை முடித்துக்கொண்டு, பரபரப்புடன் ஒரு சார்ட் பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா?

    என் மகளின் முகம் அப்படியே சார்ட்டில் பதிவானது. கண் மட்டும்தான் பாக்கி! முயற்சி செய்தேன்.
    இல்லை… அழித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

    மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..

    என் கைகளை விட அதிகப் பரபரப்பில் மனம் இயங்கியது.

    கடைசியில்…

    கையில் வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி கண்களில் பெருமிதத்துடன் என் மகளின் முகம்!

    என்னை பிரமிப்பாய்ப் பார்த்தபடி பின்னால் என் குடும்பத்தினர்!

    என் கலையை இழக்க நேர்ந்த நாள், கல்லூரியில் தோற்றுத் திரும்பிய நாள், இயலாமைக்குள் நான் புதைந்து கிடந்த நாட்கள், வேதனையுடன் என் கலை ஆர்வத்தை விட்டு விலகிய நொடிகள் என எல்லா வலிகளையும் என் மகளின் உருவத்தில், ஜெயித்து விட்ட கர்வமாய் மாறி இருந்தது!

    நான் கைவிட்ட போதும் என் திறமை என்னைக் கைவிடவில்லை.

    என் ஆறாத ரணத்தை, வலியை வென்று காட்டியது அது!

    படத்துக்கு நன்றி – https://ta.wikipedia.org/wiki/

    Share
  • எழுத்து – 10

    எழுத்து – 10

    வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்

    பழுதற்ற பவுத்திர வரிகள் தான்!
    உழுது உலகையெழுப்பும் வரிகள் தான்!
    எழுது! எழுது! எழுத்து வாசிக்கப்படுகிறதா!
    எழுதுவது யாரெனப் பார்ப்பதே தோல்வி
    உழுத்த சிபாரிசு பேதம் பார்த்தல்
    எழுத்தைக் காட்டினுள் வேகமாய்த் தள்ளுது.
    எழுத்திற்கு வயதில்லை பிறகு ஏன்
    எழுதுபவன் இளமையா, முதுமையாவென ஒப்பீடு!

    தொழுதிடும் வரிகள் நேர்த்தியைப் பார்!
    வழுவற்ற வரிகளா! கம்பன் பாரதியின்
    விழுதுகளா  என்று தமிழைப்  பார்!
    கழுவி ஊற்றாதே கருத்துடை எழுத்துகளை!
    எழுத்து நான்கு வயதிலொரு கூறு
    எழுமையாம் நாற்பது வயதிலொரு கூறு.
    எல்லாமே இனிமை இல்லையது சேறு.
    வல்லமையோடு  வாரியெடு இது ஆறு!

    வாரியிறைக்க குளம் குட்டையல்ல
    வல்ல தமிழை நெருங்கி அண்டு!
    கொல்லாது குடையும் இன்ப வண்டு!
    இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
    நல்ல எழுத்து தலைநிமிர்ந்து நிற்கும்
    அல்லல் செய்யும் கரகாட்டத் தினவெடுப்பு
    நில்லாது எழுத்தாணி எழுதி வடித்திடும்
    நெல்லாக விளைந்து நூலாகி உருவெடுக்கும்.

    Share
  • குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ நாவல் – ஒரு பார்வை

    குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ நாவல் – ஒரு பார்வை

    கே.எஸ்.சுதாகர்

    (ஆனந்த விகடனில் பல சிறுகதைகளை எழுதியவரும், ஆனந்த விகடன் பவள விழாச் சிறப்பிதழில் பரிசுபெற்ற ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற குறுநாவலைத் தந்தவருமான குரு அரவிந்தனின் சமீபத்திய நாவல் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’. இவரின் ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ நாவலுக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர், ஓவியங்கள் வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.)

    குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல் வாசித்தேன். மணிமேகலைப் பிரசுரமாக இந்த ஆண்டு (2019) வெளிவந்த இந்த நாவலை வாசிக்கும்தோறும் பாரதியின்

    `நல்லதோர் வீணை செய்தே – அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’

    என்ற கவிதை வரிகள் தான் நினைவிற்கு வந்து போயின.

    மெல்ல மெல்ல வாசகரை உள் இழுக்கும் உத்தி, ஆரம்ப அத்தியாயங்களிலேயே தெரிகின்றது.

    தேவகி ஒரு நடன ஆசிரியர். அவரிடம் நடனம் பயிலும் மகள் கமலினியும், மாலதியும் இனிய தோழிகள். இனிய தோழிகள் என்றாலும் இருவேறு துருவங்கள். அவர்கள் இருவரினது  கொள்கைகள் வேறு வேறானவை. கமலினி ஆங்கில மோகமும் அமெரிக்கா ஆசையும் கொண்டவள். ஆனால் மாலதி
    அப்படியல்ல. தமிழும் பரத நாட்டியமும் மூச்சாக வாழ்பவள். கமலினியின் குறும்புக்காரத் தம்பி கண்ணன். அவனது பார்வை சற்றே மாலதியின் மேல் விழுகின்றது. எங்கே மாலதிக்கும் கண்ணனுக்கும் இடையே காதல் உருவாகிவிடுமோ என மனம் பதைபதைக்கும் வண்ணம் நாவல் நகர்கின்றது.

    மாலதிக்கு அம்மா இல்லை. அப்பா சுந்தரம் மாஸ்டர். மச்சான் ராஜன். இவர்களுடன் விறுவிறுப்பாகச் செல்லும் நாவல் சொல்லும் செய்தி என்ன? ஒரு ஆண்மகன் தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் புரிதல், ஆங்கில வெளிநாட்டு மோகம், ஒருவர் தான் பயின்ற கலைகளை அழியாது காத்தல், விதவைத் திருமணம். நடன இசைப்பிரியர்களுக்கு இந்த நாவல் ஒரு வரப்பிரசாதம்.

    இசையால் வசமாகும் இதயங்களுக்கு, இந்த நாவலில் கொட்டிக் கிடக்கும் பரத நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் `போனஸ்’ தகவல்கள். கமலினி மணம் முடித்து அமெரிக்கா போய்விடுகின்றாள்.
    அதன் பின்னர் மாலதி தன் அத்தை பையன் ராஜனை வேண்டா வெறுப்புடன் மணம் செய்து கொள்கின்றாள். ராஜன் குடிகாரன், கேடு கெட்டவன். இவர்களிடையேயான உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், கண்ணன் மாலதியைத் திருமணம் செய்து கொள்கின்றானா என்பதே நாவல்.

    கமலினி அமெரிக்கா சென்ற பின்னர், அமெரிக்கா பற்றிச் சொல்லிச் செல்லும் ஆசிரியர், கதையின் ஆரம்பத்தில் கதை நடைபெறும் களம் பற்றி விபரிக்கவில்லை. கதை எங்கு நடைபெறுகின்றது என்பது ஆரம்பத்தில் தெளிவில்லாமல் இருந்தது. இசை நடனம் ஆடல் பாடல் என ஆரம்பித்த
    நாவல், திசை மாறி பயணம் சென்று, மீண்டும் தொடக்க நிலைக்கு வருகின்றது. மற்றும் தேவகியின் கணவர் கனகேஸ்வரன் என்ற பாத்திரமும் நாவலுக்குக் கனதியில்லாமல் சும்மா வந்து போகின்றது.

    நாவலின் அட்டைப் படம் பற்றிய ஒரு சுவையான தகவல். கனடாவில் பிறந்து வளர்ந்த, புதிய தலைமுறையைச் சேர்ந் ஐஸ்வர்யா சந்துரு நாவலின் அட்டைப் படமாக உயிர்பெறுகின்றார். இவர் நாட்டியத்திலும் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

    எமது நாட்டில் எத்தனையோ மாணவர்கள் பரதம், சங்கீதம், வீணை, மிருதங்கம் போன்றவற்றைக் கற்று வருகின்றார்கள். இவர்களில் எத்தனை வீதமானவர்கள் தொடர்ந்தும் அந்தக் கலைகளைத் தக்கவைத்துக் கொண்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்? வெறுமனே இவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் போதுமானதா? புலம்பெயர்ந்த நாட்டில் பெற்றோர்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போலும். இருபது வருடங்களுக்கு முன்னர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இந்த நாவல், காலத்தின் தேவையறிந்து நூல் உருவாக வருவது வரவேற்கத்தக்கது.

    எளிமையான நடை. மனத்தில் வந்துபோகும் பாத்திரங்கள். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு குடும்பப் படம் பார்த்தது போன்ற மன நிறைவு நாவலைப் படித்தபோது ஏற்பட்டது.

    Share
  • உங்கள் சுய அடையாளத்தை இழக்க வேண்டாம்!

    உங்கள் சுய அடையாளத்தை இழக்க வேண்டாம்!

    நிர்மலா ராகவன் 

    நலம்… நலமறிய ஆவல்… 167

    `நீங்கள் அப்படியே இருக்கிறீர்களே!’ பல வருடங்களுக்குப்பின் ஒருவரைப் பார்க்கும்போது புகழ்ச்சியாகக் கூறுகிறோம்.

    அதனால், `நாங்கள் மாறவே மாட்டோம்!’ `எப்படி மாறவேண்டும் என்கிறீர்கள்?’ என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது.

    மாற்றமில்லாத வாழ்க்கையால் நாம் பாதுகாப்பாக உணரலாம். நாளடைவில், அது சலிப்பைத்தான் உண்டுபண்ணுகிறது. புதிய அனுபவங்கள் சிந்தனையை வளர்த்து, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    அதனால்தான் விடுமுறைக்காக எங்காவது போய்விட்டு வந்தால், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், அப்போது எத்தனையோ  கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனம் என்னவோ உற்சாகமாக ஆகிவிடுகிறது.

    `மாற்றம்’ என்றால் அஞ்சத் தேவையில்லை. சரியான வழியில் முன்னேறுவது ஆக்ககரமான மாற்றம்.

    அந்தப் புதிய பாதை சில சமயம் சறுக்கலாம். எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய்ந்தால், அடுத்தமுறை அதைத் தவிர்க்கலாம். செய்த தவற்றிலிருந்து கற்பவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

    `ஒவ்வொரு முறை விழுந்து எழும்போதும், முன்பு இருந்ததைவிட அதிக உயரத்தை எட்ட முடிகிறது!’ என்று வெற்றியாளர்கள் வியந்து கூறுகிறார்கள்.

    செய்வதற்குமுன் எந்தக் காரியமுமே கடினமாகத்தான் தோன்றும். அதைச் செவ்வனே முடித்துவிட்டால் கிடைக்கும் திருப்திக்கு ஈடே இல்லை.

    கீழே விழுந்திருந்தபோது நம்மைக் கேலி செய்தவர்கள் முயற்சி செய்யவே அஞ்சுகிறவர்கள். இது புரிந்தால், அவர்கள் நம்மைப் பந்தாட விடமாட்டோம்.

    `நானாவது முயன்றேன். உனக்கு அதைச் செய்யக்கூட தைரியம் இல்லையே!’

    இப்படி உரக்கச் சொன்னால், சண்டை வரும். மனத்துக்குள் திட்டலாம்.

    மகிழ்ச்சியாக இருக்க அவசியமானது இலக்கு.

    சக மனிதர்களாலோ, பொருட்களாலோ பெறும் நிறைவு எத்தனைக் காலம் நீடிக்கும்?

    வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி, நேராக அமைந்துவிட்டால் நிம்மதி கிடைக்கலாம். ஆனால், சுவை இருக்காது.

    கதை

    என் சக ஆசிரியை பார்பரா (Barbara), அரசாங்கம் அளித்த உபகாரச் சம்பளத்தில் உயர்கல்வி பயின்றாள். தான் ஆசிரியையாக வேலை பார்க்கப் போகிறோம் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது. அவளுடைய அண்ணன்மார்களின் நண்பனான விக்டர்தான் அவளுடைய கணவன் என்று இரு குடும்பத்தினரும் அவளுடைய சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டனர்.

    ஆக, பார்பராவுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நடப்பதே பெரும் சுமை என்பதுபோல் நடப்பாள். `நான் ஒரு பயந்தாங்கொள்ளி!’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்வாள்.

    உத்தியோகமும், கணவனும் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க இயலாவிட்டால் என்ன? வேறு திறமைகள் இருக்காதா! அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கலாமே!

    பார்பரா படித்தவள். உத்தியோகமும் இருந்தது. ஆனால், துணிச்சல் இருக்கவில்லை. அதையே தன் குறையென்று எண்ணியதால், தைரியமாகச் செயல்படுகிறவர்களின்மேல் அவளுக்கு ஆத்திரமும் பொறாமையும் எழுந்தன.

    தன்னைப்போல் இல்லாத பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டால், திருப்தி எழுந்துவிடுமா!

    நம்மைப் பார்த்துப் ஒருவர் பொறாமைப்பட்டால் முதலில் வருத்தப்படுகிறோம். எரிச்சலும் எழுகிறது.

    மாறாக, பெருமைப்பட வேண்டிய சமாசாரம் இது. நாம் அவரைவிடச் சிறந்தவர் என்று கருதுவதால்தானே அந்த உணர்ச்சிக்கு ஆளாகிறார்! இயற்கையிலேயே எழும் இந்த உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, அதனால் ஆட்டுவிக்கப்படுவது ஒருவரைக் கீழேதான் இழுக்கும். தம் பொறாமைக்கு இலக்கானவர்கள்போல் தம்மையும் மாற்றிக்கொள்ளலாமே!

    என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசை எவருக்கும் இருக்கும். ஆனால், `நம்மால் முடியுமோ, என்னவோ!’ என்ற தயக்கம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கவே தடங்கலாகிவிடுகிறது. பயத்தை வெற்றிகண்டால் சாதிக்கலாம்.

    நாம் பிறரைவிட எல்லாவற்றிலும் சிறந்தோங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நடக்காத காரியம். அப்போது எழும் பொறாமையைத் தவிர்க்க இயலாது. நம்மால் இயன்றவரை முயல்கிறோம் என்ற திருப்தி போதுமே!

    பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்று பழிப்பது இதுபோல்தான். `ஏதோ, இந்தவரை எழுதுகிறானே!’ என்று மகிழ்ந்து பாராட்டுவது நன்மை தரும்.

    அவன் அப்படியேவா இருக்கப் போகிறான்? வயது கூடினால், மாறமாட்டானா?

    கையெழுத்து மோசமாக இருந்தால்தான் என்ன? இப்போதுதான் கணினி வந்துவிட்டதே!

    கல்வி வேறு, வாழ்க்கை வேறு.

    “பள்ளியில் படிக்கும்போது நான் மிகச் சிறந்த மதிப்பெண்கள் வாங்கினேன். ஏனோ வாழ்க்கையில் பிரகாசிக்க முடியவில்லை!” என்று புலம்புகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    கதை

    படிப்பிலும், பேச்சுப் போட்டிகளிலும் பரிசு பெற்றதில் ஆசிரியர்களுக்குச் செல்லப்பிள்ளை ஆனவன் குமார்.

    `பள்ளிக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தருகிறான்!’ என்று அந்த வயதில் எல்லாருமே கொண்டாடினார்கள்.

    தனக்கு நிகர் யாருமில்லை என்ற மதர்ப்புடன் வளர்ந்தான் குமார். வெளியுலகத்திலும் எல்லாரும் அப்படியே தன்னை ஓர் அபூர்வப் பிறவியாகக் கருதமாட்டார்கள் என்று அந்த வயதில் புரியவில்லை. உண்மை புலப்பட்டபோது அச்சம்தான் விளைந்தது. `யாருக்குமே தான் ஒரு பொருட்டாக இல்லையே!’ என்ற ஏக்கம் பிறந்தது.

    தம் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாது, தகுதியில்லாத பிறருக்காக அதைச் செலவிடுவதில் திருப்தி காண முயன்றான்.

    நண்பர்களின் குடும்பத்திற்காகத் தம் நேரத்தைச் செலவிட்டுவிட்டு, `வெளியில் எனக்கு எவ்வளவு நல்ல பெயர் தெரியுமா? வீட்டில்தான் என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை!’ என்று குறைப்படும் ரகம், இம்மாதிரியானவர்கள்.

    இவர்களது உபயோகம் குறைந்ததும், அந்த நண்பர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சொந்தக் குடும்பம் இவர்களைக் கைவிடாது. அப்போது, `உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று முதலிலேயே புரிந்துகொள்ளாது போனேனே!’ என்று மனம் நோகும்.

    எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. தொலைந்தபின்தான் புரிகிறது — நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல்.

    பிறர் பாராட்டவேண்டும்

    சிலர் வெகு பிரயாசைப்பட்டு, எல்லாருக்கும் நல்லவராக நடிப்பார்கள். அப்போது கிடைக்கும் புகழ்ச்சி இவர்களுக்கு வேண்டியிருக்கிறது. அதற்காக அதிக சக்தியை விரயம் செய்ய வேண்டிவரலாம். சந்திக்கும் எல்லாருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும் என்று நடப்பது (நடிப்பது?) கடினம்.

    இப்படி நடித்துக்கொண்டே இருந்தால், தனக்கான அடையாளமே புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே!

    நடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு, இன்னும் திண்டாட்டம்தான்.

    கதை

    Manmarziyaan என்ற இந்திப் படத்தில் எதற்கும் அடங்காத முரட்டுப் பெண்ணாக வருகிறார் கதாநாயகி டாப்ஸி பன்னு (Taapsee Pannu).

    படம் முடிந்த பிறகும் அதன் பாதிப்பு விலகவில்லையாம். அவரைக் கேட்காது ஒருவர் படம் பிடித்தபோது, கடுமையாக நடந்துகொண்டதாகத் தகவல்.

    `நான் சாதாரணமாக அப்படி நடந்துகொள்ள மாட்டேன். அந்தப் பாத்திரத்தை என் மனத்திலிருந்து அடியோடு அகற்ற இன்னும் முடியவில்லை,’ என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

    வேறு ஒரு நடிகர் தம் பாத்திரத்திற்கான குணாதிசயத்தை உள்வாங்கிக்கொள்ள முயன்றார். எப்படி தெரியுமா? ஒரு மாதம் தனியாக ஓர் அறையில் தங்கியிருந்தார், எவருடைய தொடர்புமின்றி!

    படம் முடிந்தது. ஆனால், இவரோ அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார். தன் பழைய நிலைக்கு மீண்டுவர, உளவியல் சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்தது. (தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது).

    `ரொம்ப முக்கியம்!’ என்று முகத்தைச் சுளிக்காதீர்கள். வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கிறது. புரிந்துகொள்ள முயல்வோமே!

    Share