இலந்தை சு. இராமசாமி 

ஐயப்பன் காவியம் 

இந்திரலோகப் படலம்

பதினொரு சீர் விருத்தம்

மா மா மா மா மா மா காய் மா மா காய் மா

யார டாநீ  இந்தி ராவா என்னை மீறி ஆளுவதா
ஆகா திங்கே  நீவெளியே வாடா
பார டாயென் கொம்பி ரண்டைப் பாய்ந்து வந்து  குத்திடுவேன்
பம்மு கின்றாய் ஆட்சியொரு கேடா
வேரெ டுப்பேன்  வீழ வைப்பேன் வெற்றி யோடு நானி ருப்பேன்
வேக மாய்நீ ஓடிடா மூடா
பேரு  ரைத்துக் கால் விழுந்து நீபிழைத்துப்  போய்விட டா
பிச்சை போட்டேன் வந்துடனே  போடா

என்று ரைத்தாள் பின்குதித்தாள் தேவ ரெல்லாம் ஓடிடவே
இந்தி ரன்சிம் மாசனத்த மர்ந்தாள்
வென்று விட்ட கர்வம் கொண்டு மேலும் கீழும் தான்குதித்தாள்
விண்ண டுங்கி ஆடிட மிதித்தாள்
சென்று விட்ட தேவர்  தம்மைக் கொன்று விட்டா லென்னவெனெத்
தேடித் தேடி ஓடியங்க லைந்தாள்
நின்றிருந்த ஊர்வ சியை இரம்பை யைத்தி லோத்த மையை
நீங்க ளென்முன் ஆடுகெனச்  சொன்னாள்

வாலெ டுத்துத் தாஞ்சு ழன்றே இந்த வண்ணம் ஆடுகென்றாள்
வாலுக் கெங்கே போவரவர் பாவம்
காலெ டுத்துத்     தான்குதித்துக் கற்றி ருந்த வித்தையெலாம்
காட்டி னார்கள்  என்னசெய்யக் கூடும்?
மேல டுத்த மூக்கி ன் வழி மூச்சுவிட்டுத் தான்கு தித்து
முட்டு கிறாற் போலமகிடி வந்தாள்
ஓலமிட்ட ரம்பையர்கள் நாலு பக்கம் ஓடி னார்கள்
ஓடவிட்டு வேடிக்கை பார்த்தாள்.

கற்ப கத்தைப் பேர்த்தெ டுத்தாள் கா ம தேனு வையழைத்தாள்
காய்ச்சியபால்  கொண்டுவரச் சொன்னாள்
சொற்படிகேள் என்று சொல்லி வெள்ளை வண்ண யானையின் மேல்
சொர்க்க மெல்லாம் சென்று சுற்றி வந்தாள்
அற்பு தங்கொள் புட்ப கத்தில்  ஆள்க ளோடு தானமர்ந்தே
அண்ட மெல்லாம் சுற்றி வந்து கண்டாள்
கற்ப னைகள் தாங்க டந்த தொல்லை யெல்லாம் தான் கொடுத்தாள்
கையெ டுத்து யாவையும்பொ டித்தாள்.

ஓரிரண்டு இடங்களில் நிரையசை விட்டிசைத்து மாச்சீர் போல ஒலிக்கும்: எ.காய்ச்சி யபால்     சொற்ப டிகேள்)

எழுசீர் விருத்தம்

காய் காய்  காய் காய் காய் காய் மா!

தூங்குமட்டும் பாடுதற்குக் கின்னரரை  வரச்சொன்னாள்
சொப்பனத்தும் கக்கவெனச் சிரித்தாள்
பாங்கியர்கள் வேண்டுமென்றாள் பக்கமவர் வந்துநின்றால்
பல்லிளித்துக் கதிகலங்கச் செய்தாள்
ஆங்குவைத் திருந்தமதுக் குடமனைத்தும் கையெடுத்தே
அப்படியே வாயூற்றிக் குடித்தாள்
ஈங்குவரச் சொல்லுங்கடி இந்திரனின் துணைவிகளை
என்றுசொல்லிக் கெக்கலித்துச் சிரித்தாள்

பட்ட த்து மகாராணி  போனயிடம் தெரியவில்லை
பாவமவள் மிகப்பயந்து போனாள்
விட்டுப்போய்   இந்திரனும் வேறெங்கோ இருக்கின்றான்
வேறெதுவும் யாமறியோம் தேவி
எட்டித்தான் நிற்கின்றோம் என்வேண்டும் சொல்லுங்கள்
ஏலும்வரை செய்கின்றோம் என்றே
முட்டித்தான் தள்ளுவளோ எனப்பயந்தே ஏவலர்கள்
முறையிட்டுத் தாமொதுங்கி நின்றார்

“இங்கேவா விசுவகர்மா இந்தச்சிம் மாசனத்தை
என்வடிவுக் கேற்பச்செய் என்றாள்
அங்கேசென் றவன் சொன்னான்” இந்தச்சிம் மாசனமோ
ஆள்வடிவுக் கேற்றபடி மாறும்
சங்கேதம் ஒன்றுண்டு சாற்றுகிறேன் அதைச் சொன்னால்
தக்கபடி தான்மாறிக் கொள்ளும்”
சிங்கா தனத்தருமை வியந்தபடி அவள்சென்றாள்
தேவரெலாம் வாய்பொத்தி நின்றார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.