Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • ஹெல்மெட்

    ஹெல்மெட்

    -சேஷாத்ரி பாஸ்கர் 

    இந்தா மா , வண்டியை நிறுத்து

    ஏன் சார் இப்படி நடு ரோட்டில நின்னா எப்படி சார்

    நீங்க சொன்ன மரியாதைக்கு நிறுத்தினா நாங்க ஏம்மா அப்படி பண்ணறோம்.

    சார் . ஏதோ அவசரம் ஹெல்மெட் போட்டுக்கல.

    பெரிய அவசரம் . நான் வந்து ஸ்டஷேன்ல எல்லா தகவல்களையும் காட்டறேன் .

    சாரி . வண்டிய ஓரத்துல நிறுத்துங்க

    ஏன் சார் . திஸ் இஸ் அட்ராசியஸ்

    சாரி மேடம் ப்ளீஸ் கோஆபரேட்.

    நத்திங் டூயிங்

    ஐ வில் ரைட் டு யுவர் கமிஷனர்.

    என்ன வேணா செய்ங்க

    இப்ப இறங்கி அபராதம் கட்டுங்க

    சார் ஐ ஆம் அ ஜர்ணலசிம் ஸ்டூடன்ட் .

    மேடம் – சாரி . உங்களுக்கு எல்லாம் அடிபட்டா
    வலிக்காதா , உயிர் போகாதா

    இப்ப எங்க கிட்ட பணம் இல்லை .

    பரவாயில்லை . உங்க அப்பா , அம்மா யாரயணா கூப்பிடுங்க.

    சார் .தே ஆர் பிட் ஓல்ட்
    .
    சரி தமிழ்ல சொல்றேன்

    மேடம் .. சார் . ஸ்டஷேன் ரைட்டராய் இருந்தவரு

    ஒரு பெண் காவலர் இடையே புகுந்தார் .அவருக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு நினைச்சிங்களா.

    மேடம் . நீங்களே சொல்லுங்க ..

    உங்க தப்புக்கு நான் உடந்தையா? .

    இப்ப நான் என்ன கொலையா பண்ணிட்டேன் .

    டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க .போய் பணத்தை ரெடி பண்ணுங்க.

    சார் . நீங்களும் பாமிலி ஆள் தானே சார் .எங்கப்பா மாதிரி நீங்களும் ஒரு பெரியவர் . இப்படி பண்ணலாமா ?

    அதனால தான் .

    வண்டியை நிறுத்தி விட்டு சாவியை அவரடிம் கொடுத்து விட்டு ஹெல வித் யு என்றாள்.

    அவர் அமைதியாக அவளை பார்த்து பிரிங் யுவர் பாதர் என்றார்

    மேடம் . நீங்க படிச்ச பொண்ணுதானே.இப்படியா ஒரு பெரியவரை பார்த்து , அதுவும் ஒரு அதிகாரியை பார்த்து சொல்வது .ஒரு செக்க்ஷன்ல கேஸ் போட்டா இரண்டு நாள் உங்களை ரிமாண்ட் பண்ணலாம்

    ஸ்டாப் இட் . யு ஆர் இன்சல்டிங் அ சிடிசன் .

    மேடம் – இங்க வாங்க .போன மாசம் வரை இவர் கண்டிச்சு பல பேரை புரிய வச்சுருக்கார் . ஏன் ஒரு பையனுக்கு ஒரு ஹெல்மெட்டே வாங்கி கொடுத்தாரு . இன்னிக்கு இப்படி பண்றாருன்னா

    கொஞ்சம் நிறுத்தி . “போன மாசம் இவர் பொண்ணு ஒரு அக்ரி ஸ்டுடென்ட் . குக்க்ஸ் ரோட்ல அடிபட்டு . ஸ்பாட்ல”. அதுக்கும் உன் வயசு தான் .

    சீ சீ என்ன பெரிசா குதிக்கிறீங்க .

    சார் சாவியை கொடுங்க அதுகிட்ட .. நீ போய் சாவு.இந்தா உன் டாகுமென்ட்ஸ் .

    வேணாம் மேடம் . நான் ஆட்டோல போய் பணம் எடுத்துட்டு வரேன்.

    ஏன் உங்கப்பாவை கூட்டிட்டு வாயேன் . உன் பவுஷை சொல்றேன் .

    வேணாம் மேடம் . இவரே எங்க அப்பா மாதிரி தான்

    Share
  • சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி, நிலவில் சாய்ந்து கிடக்கிறது

    சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி, நிலவில் சாய்ந்து கிடக்கிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++++

    1. https://www.space.com/topics/india-space-program
    2. https://www.space.com/india-moon-lander-time-running-out.html
    3. https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html
    4. https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html

    +++++++++++++++++

    https://youtu.be/ydh0Tsodg1s

    Image result for isro chandrayaan -2 vikram lander

    விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது

    சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.

    2019 செப்டம்பர் 17 இல்  நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை.  அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது.  இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.

    ஆயினும் நிலவைச் சுற்றிவரும்  சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்.  அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.

    An artist's depiction of India's Chandrayaan-2 lander and rover on the surface of the moon, near its south pole.

    விக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப்பட்டது.

    +++++++++++++++++++

    1. https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms
    2. https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY
    3. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs
    4. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends
    5. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13
    6. https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    ++++++++++++++++++++++++++++++

    ISRO OFFICIALY CONFIRMS THAT ORBITER HAS LOCATED VIKRAM LANDER

    சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.

    இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது.  சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது.  இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது.  இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும்.  மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும்.  இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன.  இந்திய விஞ்ஞானிகளுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர்.  காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன.  இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

    https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    WHAT NOW?

    It’s been nearly a week since the Indian Space Research Organisation lost contact with the Chandrayaan-2 lander. Since then, Isro, which continues to remain tight-lipped over the matter, has been making constant efforts to re-establish communication with the spacecraft.

    A day after losing contact with Vikram, Isro said it had been able to locate the Chandrayaan-2 lander on the Moon. However, communication with the lander remains elusive.

    Next week, a lunar orbiter operated by the United States’ National Aeronautics and Space Administration (Nasa) is set to fly over the area where Vikram is located. The orbiter is expected to take pictures and offer clues to Vikram’s fate.

    Meanwhile, the Chandrayaan-2 orbiter remains safe in its orbit around the Moon. In fact, it was the Chandrayaan-2 orbiter that, on Sunday, managed to locate Vikram on the lunar surface.

    The orbiter’s mission life has been extended from one year to seven years, due fuel savings made during the trip to the Moon. Over the course of its mission life, the Chandrayaan-2 orbiter will perform several experiments, including one to estimate the quantity of iced water on the Moon.

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில் 

    தகவல் அனுப்பத் தவறியது. 

    [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]

    ++++++++++++++++

    1. https://youtu.be/q7Omv4EX8RM
    2. https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270
    3. https://youtu.be/phN5S9cHeWM
    4. https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm
    5. http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html
    6. https://youtu.be/sd6grEvZn1A
    7. https://youtu.be/ANyg9VGSqbY

    +++++++++++++++++++++

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது

    இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி

    சந்திரயான் -2  மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார்.  ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும்.  தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.

    நிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில் 

    தளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.

    +++++++++++++++

    தகவல் தொடர்பு அறுந்தாலும்,  தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது.  மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நகர்ந்து வரப் போகிறது.  14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.

    ++++++++++++++++++++

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்

    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் தென் துருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும்  !
    சந்திரனில் சின்னத்தை வைத்தது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திரயான்
    2019  செப்டம்பரில் விண்சிமிழ்
    முதன்முதல்  இறக்கும்  தளவுளவி , தளவூர்தி.
    பாரத விண்வெளித் தீரர் மூவர் இயக்கும்
    சீரான விண்கப்பல் 2022 இல்
    தாரணி சுற்றி வரும் !
    செவ்வாய்க் கோள் செல்ல
    சந்திரனில் சாவடி அமைக்கும்
    திட்ட முள்ளது !
    அடுத்து இரண்டாம் சந்தரயான்
    நிலவைச் சுற்றி வந்து
    தளவுளவி நிலவில் அமர
    தளவூர்தி
    தவழ்ந்து சென்று நிலாத் தளம் 
    ஆராயப் போகுது
    ஈரேழ் நாட்கள். 

    +++++++++++

    Share
  • குறளின் கதிர்களாய்…(267)

    குறளின் கதிர்களாய்…(267)

    -செண்பக ஜெகதீசன்

    பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்ல
    ராகுதன் மாணார்க் கரிது.
    -திருக்குறள் -823 (கூடா நட்பு)

    புதுக் கவிதையில்…

    நல்ல பல
    நூற்களைக் கற்றுத் தேர்ந்தும்,
    அதனால் மனம் திருந்தி
    நல்லவராகி நட்பாகும்
    நல்ல குணம்
    பகைவரிடம் இருப்பதில்லை…!

    குறும்பாவில்...

    பகைவர் பலநூல் கற்பினும்,
    அதனால் மனந்திருந்தி நட்பாகும் நற்குணம்
    அவரிடம் வருவதில்லை…!

    மரபுக் கவிதையில்…

    நல்ல நூற்கள் பலகற்றும்
    நன்றாய் அவற்றின் பொருளுணர்ந்தும்,
    பொல்லாப் பகைவர் மனந்திருந்திப்
    போது மெனவே பகைமறந்து
    நல்லோ ராகி நட்புகொளும்
    நல்ல குணமது வாராதே,
    கல்லா ராகவே யிருந்தாங்கே
    காட்டும் பகையினைத் தொடர்வாரே…!

    லிமரைக்கூ..

    நந்நூற்கள் பல வகையே,
    கற்றும் பகைவர் மனம் திருந்தாதே
    தொடர்வர் என்றும் பகையே…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    நட்பு வேண்டாம்,
    திருந்தாத தீயவரோட
    நட்பு வேண்டாம்..

    பொல்லாப் பகயாளி
    கொணம் இதுதான்,
    பெரிய படிப்பா நல்ல
    பொத்தகம்
    பலவும் படிச்சாலும்,
    அதுபடியே மனந்திருந்தி
    நல்லவனா பகமறந்து
    நட்போட எப்பவுமே
    வரமாட்டான்..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    நட்பு வேண்டாம்,
    திருந்தாத தீயவரோட
    நட்பு வேண்டாம்…!

     

    Share
  • Annakannan Ideas – 36

    Annakannan Ideas – 36

    Dr.Annakannan

    After a heavy rain yesterday, I had a ride on my two-wheeler from Guindy to Tambaram on the GST road, Chennai. I was passing through the metro bridge, received few drops of water from the upper side for few minutes; it makes me feel good. Suddenly I got the idea about Rain Road.

    We can create any road into Rain Road with a roof & drizzle; these drops can be very little & micro. We can operate this according to traffic; if there is no traffic or less traffic, we can control this supply. Along with drops, we can create some air waves; we can raise standing garden in both sides & top. We can also play some mild / melody / romantic tunes.

    This will make an enjoyable ride, will cool riders & make them calm down. They may think positive & contribute well to the society. This will also bring down all dust from the air. Riders choosing this road can wear a rain coat; pedestrians, who don’t want to get wet, can keep an umbrella. We should make the special road to obsorb water instantly; so, we can avoid accidents. Can keep all Do’s & Don’ts, Disclaimers, Precautions in this road. This can be an adventurous ride upto some extent. We can charge a special toll to maintain, manage these roads.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 225

    படக்கவிதைப் போட்டி – 225

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்குமார் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (27.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படம் புகைப்படக்கலை நிபுணர் ஷாமினியுடையது. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். ஷாமினி, சாந்தி இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    முகத்தில் பலவண்ணக் கலவையோடும், கலையாத புன்னகையோடும் சிலையென நின்றிருக்கும் இப்பெண்ணின் அகத்துணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டப் பாக்களோடு காத்திருக்கின்றார்கள் பாவலர்கள். அவர்களை வரவேற்கின்றேன்!

    *****

    ”அன்பை அள்ளி அள்ளி அனைவர்க்கும் அளித்திட வானவில்லே இவள்மீது தன் வண்ணங்களைத் தூவி வாழ்த்தியதோ?” என்று இவ் வண்ணப் பாவையைக் கண்டு வியக்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    வானவில்!

    வானில் தோன்றிய வெண்ணிலவு
    மஞ்சள்பூசி வந்ததோ மஞ்சள் நிலவாய்?
    வியந்து விழித்த விழிகளில்
    காப்பியுடன் நின்றிருந்தாள்
    மஞ்சள்பூசிக் குளித்து முடித்த அன்னை இவள்
    வெட்டிக் கதை பேசி
    வீண் அரட்டை அடிக்கும் பாட்டியிடம்
    காரணம் கேட்டு அறிந்திடச் சென்றேன்
    மஞ்சள் பூசி மலர்ந்த முகத்துடன்
    உற்சாகமாய்ச் சொல்ல ஆரம்பித்தாள்
    தீமை அண்டாமல் இருக்க தேகம் ஜொலிக்க
    மனம் விரும்பிய மணவாளன் கரம்பிடிக்க
    நினைவில் அவனை நிறுத்திப்
    பலரும் மறந்து போன பழக்கமதை
    தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதைச்
    சொல்லி முடித்தாள்!
    மஞ்சள் வண்ணம் ஒன்றிற்கே
    இத்தனை மகிமை இருக்கையில்
    இத்தனை வண்ணங்களை
    பூசி வந்து நிற்கும் இவள் யாரோ
    அன்பின் விழாவாக ஹோலி பண்டிகையை
    ஒருவர்மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி
    அன்பைப் பரிமாறி நிற்க
    சுயநலமாய்ச் சிந்தித்துப் பூசுகின்ற மஞ்சளுக்கே
    இத்தனை பலன்கள் இருக்கையில்
    இத்தனை வண்ணங்களை
    பூசி நிற்கும் இவள் மகிமை என்னவோ?
    அடுத்தவர் மீது காட்டும் அன்பும் குறைந்து போகும்
    இரக்கம் கூட மெல்ல இறந்து போகும்
    களிக்கலாம் என்று கேலி பேசும் ஊரில்
    அன்பை அனைவருக்கும் இவள்
    அள்ளி அள்ளிக் கொடுத்திட
    அந்த வானவில்லே வியந்து
    தன் வண்ணங்களை
    இவள் மீது தூவி வாழ்த்தி நின்றதோ?

    *****

    ”பொன்னகை அணியாத சின்னத் தாரகையே! உன் புன்னகையால் மண்ணில் அன்பு தழைக்கட்டும்! இன்புற்று இருக்க அனைவர்மீதும் அன்புற்று இருப்போம்!” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டுகின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

    இன்புற்று இருப்போம்!

    வாசனைப் பூ மகளே வசந்த வயலின்
    வாடாத புத்தம்புது மலர் மல்லிகையே
    வண்ணப் பொடிகள் வாரியிறைத்ததால்
    வானவில்லானதோ உன் கன்னங்கள்?

    கொண்டாட்டமே களிப்பு
    கொண்டாடுவோமே கவலை மறந்து
    கொடுத்தால் வளருமே அன்பு அதைக்
    கொடுத்தே பெறுவோம் அன்போடு!

    எல்லையில்லாப் பால்வெளியின்
    எழுச்சிமிகு மின் மினியே!
    எங்கும் ஒளிதரும் கதிர் போல
    எழிலே நீ எதிர் வந்தால் பொங்கும் மகிழ்ச்சி!

    பொன்நகை அணியாச்
    சின்னத் தாரகையே – உன்
    மின்நகைப் புன்னகையால்
    மண்ணில் அன்பு மீண்டும் தழைக்கட்டும்!

    கார்குழலை வாரிமுடி!
    கருணையல்ல உரிமை!
    கட்டுத்தளைகளை வெட்டி எறி!
    கட்டவிழட்டும் அடிமை முடிச்சு!

    இனி இல்லை எங்கும் எல்லை
    இனிதாகுமே வாழ்வின் பயணம்
    இனிக்க இனிக்க வாழ்ந்திடுவோம்
    இன்புற்று இருக்க அன்புற்று இருப்போம்!

    *****

    ”பெண்ணே! கானக்குயிலின் கீதம், காக்கை கரைவதால் மாறுவதில்லை; அதுபோல் வண்ணச் சாயங்களால் உன் வனப்பை மறைத்திட இயலவில்லை” என்று உண்மை உரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கண்களே…

    வான வில்லின் வனப்பு வேறு
    வண்ணம் பூசிக் குறைவ தில்லை,
    கானக் குயிலின் கீதம் என்றும்
    காக்கை கரைந்து மாறுவ தில்லை,
    ஆன மட்டும் சாயம் பூசி
    அழகினை மறைத்தும் அவளைக் காட்டிடும்
    மோன விழிகளின் பார்வை தானே,
    மோதும் விழிகளே மங்கைக் கழகே…!

    *****

    வண்ணத்துப் பூச்சியாய்ப் பலவண்ணங்கள் சுமந்துநிற்கும் வனிதை குறித்த தம் எண்ணவோட்டங்களை எழிலுறப் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    ஏக்கம்…!

    ஏழ்வண்ணம் கொண்டதோர்.. எழிற்கொஞ்சும் வானவில்லாய்..
    வாழ்வதற்கு நினைத்திருந்தேன்.. வாய்ப்பேதும் கிட்டவில்லை..!!
    அலைகடலின் ஆழத்தில்.. அலைகின்ற மீன்களைப்போல்..
    அவனிதனில் மகிழ்ந்திருக்க.. நினைத்ததுவும் நடக்கவில்லை..!!

    புள்ளினங்கள் இன்புற்று.. உலவிடும்பெரு வான்வெளியில்..
    நல்லதொருப் பறவையாக.. நான்மாற வழியுமில்லை..!!
    வண்ணத்துப் பூச்சியாக.. வண்ணமிகு மலர்களிலே..
    வந்தமர்ந்து சிறகடிக்க.. எண்ணியதும் பலிக்கவில்லை..!!

    புல்மீது தூங்குகின்ற.. பனித்துளியுள் ஒளிவீசும்..
    பகலவனின் பிம்பமாக.. மாறிடத்தான் நினைத்திருந்தேன்..
    வானத்து விண்மீனாய்.. மின்னுமொரு நிலையடைய..
    விழைந்ததுவும் விதிவிலக்காய்.. காரிருளாய் மாறியதேன்..??!!

    ஏழ்பிறவித் தொடரினிலே.. தொடர்ந்துவரும் ஊழ்வினையோ..?
    வாழுமிந்தப் பிறவியிலே.. எனைமறந்து செய்திட்ட..
    பிழையேதும் காரணமோ.. பித்துப்பிடித் தலைகின்றேன்..!!
    மலையளவு துன்பத்தால்.. அலைக்கழிந்து வாடுகின்றேன்..!!

    வானவில்லாய் வாழ நினைத்ததுவும் நடக்கவில்லை; விண்மீனாய் விளங்கிட எண்ணியதும் பலிக்கவில்லை என்று கானலாய்ப்போன தன் ஏக்கங்களையெல்லாம் உருக்கமாய் இப்பாட்டில் பட்டியலிட்டிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இந்தியக் குடியரசின் அவலம்!

    இந்தியக் குடியரசின் அவலம்!

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கர்நாடகாவிலுள்ள தும்கூர் ஜில்லாவில் நடந்த ஒரு சம்பவம் பற்றி, செப்டம்பர் 18 அன்று ‘த ஹிந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  அதைப் படித்தபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்.  தலித் வகுப்பைச் சேர்ந்த, சித்ரதுர்கா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. நாராயணஸ்வாமி, பெம்மனஹள்ளி என்ற மாவட்டத்திலுள்ள, யாதவ சமூகத்தினர் வாழும் ஒரு குடியிருப்பான கொல்லரஹட்டி என்ற இடத்திற்குச் சென்றபோது, அங்கு வாழும் யாதவ இனத்தினர் அந்தக் குடியிருப்புக்குள் அவர் தலித் என்பதால் அவரை விடவில்லையாம்.  இருப்பினும் அவர் இது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லையாம்.  ‘இவரை உள்ளே விட மறுத்தவர்கள் மேல் புகார் கொடுப்பது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வல்ல’ என்று கூறியிருக்கிறார். மாவட்ட கலெக்டர் ராகேஷ் குமார், மறுபடி இரண்டு நாட்களில் அவர் அங்கே போகப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

    தலித்துகளுக்கு உள்ளேயே கொஞ்சம் உயர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் இந்தக் குடியிருப்பில் அனுமதிக்கப்படுகிறார்களாம்.  ஆனால் நாராயணஸ்வாமி, மடிகா வகுப்பைச் சேர்ந்தவராதலால் அவர் உள்ளே போவதற்கு அனுமதி இல்லையாம்.  தன்னுடைய இருபது வருட அரசியல் வாழ்க்கையில் தன்னை இழிவுபடுத்திய செயல் இது என்று அவர் கூறியிருக்கிறார்.  அந்தக் குடியிருப்பிலுள்ள பூசாரிகள்தான் இவர் அங்கு செல்வதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதை அறிந்திருந்தும் நாராயணஸ்வாமி, ‘மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் மனமாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.  என்னுடைய செயல்களினால் அவர்களுடைய உள்ளங்களில் இடம் பிடிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

    யாதவப் பேரவைத் தலைவர் சமாதான முயற்சியாக அந்தக் குடியிருப்பு மக்கள் திரு. நாராயணஸ்வாமியை வரவேற்று உபசரிப்பார்கள் என்று கூறியதோடு, ‘இந்த ஜனங்கள் எல்லோரும் படிப்பறிவில்லாதவர்கள்; எங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  எங்கள் தலைவர்களும் ஸ்வாமி யாதவானந்தாவும் கொல்லரஹட்டிக்குப் போய்வந்திருக்கிறார்கள்.  அங்கு ஜனங்களை நாராயணஸ்வாமியை வரவேற்று உபசரிப்பது பற்றிச் சொல்லிச் சம்மதிக்க வைத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.  ஹிரியூர் சட்டமன்ற உறுப்பினர் ரூபா சீனிவாசன், நாராயணஸ்வாமியைக் குடியிருப்புக்குள் கூட்டி வருவதாக வாக்களித்திருக்கிறாராம்.

    இந்தக் குடியிருப்பு மக்களுக்கு (பலர் இன்னும் குடிசையில் வாழ்கிறார்களாம்) வீட்டு வசதிகள் செய்து தரவும் வைத்திய வசதி செய்து தரவும் ஒரு மருத்துவரையும் சில அதிகாரிகளையும் தான்னோடு கூட்டிச் சென்ற நாராயணஸ்வாமியைத்தான் அந்தக் குடியிருப்புவாசிகள் உள்ளேவிட மறுத்திருக்கிறார்கள்.  தங்களுக்கு நன்மை செய்ய வருபவரைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் அவர் தலித் என்பதால்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘இந்தச் சம்பவம் நடந்தே இருக்கக் கூடாது. இதை பி.ஜே.பி. முதல்வர் கண்டிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.  முதல்வர் எடியூரப்பா இந்தச் சம்பவம் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  பி.ஜே.பி. மேலிடமும் அப்படியே.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.  தலித்துகள், அவர்கள் மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும்கூட அந்த மக்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலை இன்னும் இருக்கிறது.  எப்படிப்பட்ட கேவலம் இது.  இன்னும் தலித்துகள் பற்றிய எண்ணம் மதகுருமார்களிடம் இப்படி இருக்கிறது என்று அறியும்போது இந்தியா சுதந்திரம் பெற்று ஒரு குடியரசாக விளங்குவதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

    19-ஆம் தேதியிட்ட  இந்து நாளிதழில் வந்த செய்தி, இந்தப் பிரச்சினையின் உண்மைக் காரணம் என்ன என்றும் இம்மாதிரிப் பல இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குள்ளேயே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்குக்கூட இவர்கள் தலித் என்பதால் அங்குப் போவதில்லை என்றும் அங்குள்ள கோவில்களுக்குள்ளும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறது.

    இந்தப் பிரச்சினையின் உண்மைக் காரணம், மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதல்ல.  அங்குள்ள மதகுருமார்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் தொகுதிக்குள்ளும் அங்குள்ள கோவில்களுக்குள்ளும் போவதை விரும்பவில்லை.  இந்த மதகுருமார்களைப் பொறுத்தவரை அவர்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களேயானாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கிறார்கள்.  அதனால் அவர்களை தொகுதிக்குள் எங்கும் அனுமதிப்பதில்லை.  தலித்துக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடுவதற்குத் தலித் வேட்பாளர்களை நிறுத்தும்போது அவர்களுடைய கட்சியும் அந்த வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதியின் தலித் அல்லாத வாக்காளர்களும் ஓட்டளிப்பார்களா என்பதைப் பொறுத்துத்தான் தேர்ந்தெடுக்கிறார்களாம்.  இக்காரணத்தால் வேட்பாளர்களும் தலித் அல்லாத வாக்காளர்களையும், அவர்கள் தங்களை இழிவுபடுத்தினாலும், திருப்திப்படுத்தவே விரும்புகிறார்களாம்.  இந்த வாக்காளர்களில் பலரும் மதகுருமார்கள் நினைப்பதுபோல் தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்களை கோவில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.  தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக இந்த வேட்பாளர்களும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்வதில்லை என்பதோடு புகாரும் கொடுப்பதில்லை.

    பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்கப் பரிவாரங்கள் இது பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏனென்றால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் இவர்களே.

    யாதவ குலத் தலைவர் சொன்னதுபோல் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பது உண்மையில்லை; பல நூற்றாண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட தலித்துகளுக்கும் இப்போது மற்றவர்களோடு சம உரிமைகள் உண்டு, அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்ற உணர்வுதான் இல்லை.  இந்த உணர்வைத்தான் அவர்களுக்குக் கொண்டுவர வேண்டும்.  இந்தப் புது நியதியை ஒப்புக்கொள்ளாதவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும்.

    தலித்துகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் மற்ற குடிமக்களுக்கு உரிய எல்லா உரிமைகளும் உண்டு என்ற அடிப்படை  ஜனநாயக உணர்வுகூட இல்லாத மக்களுக்கு குடியரசு ஒரு கேடா?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    62. ஆள்வினை உடைமை

    குறள் 611:

    அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    நம்மால முடியுமா னு மன உளச்சல் படுதது கூடாது. மனசு வச்சி முனஞ்சோம்னா அதுக்கு உண்டான தெம்பு தானா வந்துக்கிடும். 

    குறள் 612:

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

    எதச் செஞ்சாலும் முழுக்க செஞ்சு முடிக்கணும். முடிக்கது செரமம் னு பாதில உட்டவங்கள ஒலகமும் விட்டுப்போடும். 

    குறள் 613:

    தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு

    விடாம முனஞ்சி செய்யுத ஒசந்த கொணத்துல தான் மத்தவங்களுக்கு ஒதவுத பெருமயான செயல் அடங்கியிருக்கு. 

    குறள் 614:

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்

    முயற்சி இல்லாதவன் மத்தவங்களுக்கு ஒதவுதேன்னு சொல்லுதது பேடி தன் கையில வாளத் தூக்கி வீசுததுக்குச் சமானம். 

    குறள் 615:

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    சுயநலமா இல்லாம தான் ஏத்துக்கிட்ட செயல முடிக்க; விரும்புதவன் தன்னையச் சுத்தி இருக்க எல்லாரோட தொயரத்தையும் போக்கித் தாங்குத தூண் ஆவான்.

    குறள் 616:

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்

    காரியத்த முனஞ்சி செய்யுதது செல்வத்தக் கொடுக்கும் அப்டி செய்யாதது வறுமையக் கொடுத்துப் போடும்

    குறள் 617:

    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்

    ஒருத்தன் மாச்சப்பட்டாம்னா அதுல மூதேவி வந்து வாழுவா.  காரியத்த முனைஞ்சி செய்யுதப்போ மகாலச்சுமி வந்து தங்கிக்கிடுவா.

    குறள் 618:

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி

    நன்மைய விளைவிக்குத விதி இல்லாம இருக்கது யாருக்கும் குறையா ஆவாது. தெறிஞ்சுக்கிட வேண்டியத தெரிஞ்சுக்கிட்டு முனஞ்சி செய்யாம இருக்கது தான் குறை. .

    குறள் 619:

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்

    விதி நமக்கு ஒதவ முடியாமப் போனாலும் ஒடம்ப வருத்திக்கிட்டு உழச்சோம்னா அதுக்கேத்த கூலி கெடைக்கும்.

    குறள் 620:

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்

    மனசு தளராம தொடர்ச்சியா முனையுதவங்க விதியையும் தோக்கடிச்சிடுவாங்க. 

    -அடுத்தாப்லையும் வரும்-

    Share
  • ஐயப்பன் காவியம் – 7

    ஐயப்பன் காவியம் – 7

    -இலந்தை  சு. இராமசாமி 

    தேவகாண்டம்

    அனுசூயைப் படலம்

    கலிவிருத்தம்

    நிலைபெறும் கற்பினள் உலகினில் யாரோ
    நலமுறத் தேடுவோம் வாமெனச் சேர்ந்தே
    அலைமகள் கலைமகள் மலைமகள் ஆய்ந்தார்
    பலருமே அனுசுயை என்றுப கர்ந்தார் 72

    முத்தொழில் தேவியர் எப்படி எனவே
    அத்திரி மகரிஷி அற்புத மனைவி
    உத்தமி கற்பினில் ஒப்பிலி அவளே
    பத்தினிச் சிகரமென் றொப்பினர் பலரே 73

    அரனையும் அரியையும் மறையவன் தனையும்
    விரைவுடன் நெருங்கியே வினவினர் அவர்கள்
    சரிசரி அதுசரி என்றனர் உடனே
    இருகரம் சிரசினில் வைத்தனர் தொழுதார் 74

    *

    எண்சீர் விருத்தம் – காய் காய் காய் மா

    ஒப்பரிய கற்புடையள் என்றுரைத்தீர் நீங்கள்
    உடனதனைச் சோதிக்க விரும்புகிறோம் நாங்கள்
    இப்பொழுதே மூவருமே அவளிடத்துச் சென்றே
    “எங்களுக்குச் சோறிடுக அம்மணமாய் நின்றே
    ஒப்பவிலை எனில்சாபம் தந்திடுவோம் என்றே
    உரைத்திடுக என்றவர்கள் சொன்னார்கள் நன்றே!
    அப்பொழுதே அவ்விடத்தை நீங்கியவர் சென்றார்
    அனுசூயை யிடம்சென்றே அப்படியே சொன்னார் 75

    “எங்களது வீட்டிற்கே எழுந்தருளி உள்ளீர்
    எவ்வளவு பேறெமக்கு! மும்மூர்த்தி சேர்ந்தே
    இங்குவரக் கொடுத்துவைத்தோம் , எதைக்கேட்ட போதும்
    இங்கதனைக் கொடுப்பதுவே எங்களது தர்மம்
    சங்கடமே படவேண்டாம். கேட்டபடி செய்வேன்
    சாமிகளே, குழந்தைகளாய் மாறிடுக “ என்றாள்
    அங்கவர்கள் உடனடியாய்க் குழந்தைகளாய் மாற
    அநுசூயை அம்மணமாய் சோறூட்டி நின்றாள். 76

    குழந்தைகளும் அம்மணமே, கொடுத்தவளும் அஃதே
    குறைவின்றி மூவருமே அநுசூயை ஊட்டம்
    விழைந்திருந்தார், சென்றவர்கள் ஏன்மீள வில்லை
    வேறெதுவும் ஆனதுவோ எனவுள்ளத் துள்ளே
    உழன்றபடி தேவியர்கள் உடனங்கே வந்தார்
    உள்ளநிலை தாம்கண்டார் உண்மையையு ணர்ந்தார்
    குழந்தைகளை மறுபடியும் முன்பூல மாற்றக்
    கும்பிட்டு வேண்டுகிறோம் எனவிறைஞ்சி நின்றார் 77

    தேவியரும் இவ்விடத்தே வந்ததெங்கள் பேறு
    தெய்வதமே இங்கிருக்க எதுவேண்டும் வேறு
    மூவரிவர் அம்சமென எனக்குமகன் வேண்டும்
    முன்வந்தே ஒப்புவிரேல் மாற்றுகிறேன் மீண்டும்
    ஆவதினி உம்கையில் முடிவுசொல்க” என்றாள்
    அங்ஙனமே ஆகிடுக எம்தாயே” என்றே
    மூவருமே மொழிந்தார்கள், முன்போலே மாறி
    முறைமுறையே தத்தமதி ருப்பிடம டைந்தார். 78

    சொன்னபடி அநுசூயை பெற்றனளோர் பிள்ளை
    சுடர்மூன் றங்கொன்றான அவன் ஞானக் கொள்ளை
    அன்னவனைத் தத்தாத்தி ரேயனெனும் பேரில்
    அழைத்தார்கள் அவன்பெரிய ஞானியிந்தப் பாரில்
    உன்னதமாய் எங்களரும் அம்சமென இங்கே
    ஒருபெண்ணைத் தருகின்றோம், அவள் எங்கள் பங்கே
    என்றனர் முத்தேவியர்கள், காலவ முனிக்கோர்
    எழில்மகவாய் வந்துதித்தாள் அவளதுபேர் லீலை! 79

    தத்தனுக்கு வேதங்கள் கலைகளெலாம் தந்தை
    தானாசா னாயிருந்து கற்றுக்கொ டுத்தார்
    வித்தைகளை, உபநிடத நூல்களையும் கற்றான்
    வினயமுள ஞானியெனப் போற்றிட வளர்ந்தான்
    புத்திரியைச் காலவரும் பத்திரமாய் வளர்த்தார்
    பொங்குமெழில் கொண்டயிளம் பெண்ணாய்த் திகழ்ந்தாள்
    தத்தனுக்குப் பெண்லீலா வதியைமணம் புரியச்
    சம்மதித்த பெற்றோர்கள் மணம் செய்து வைத்தார் 80

    இல்லறத்தில் விருப்பமிலை என்றிருந்த போதும்
    இதுகடமை எனவுணர்ந்தே அவளைமகிழ் வித்தான்
    நல்லறமாய் பெற்றோர்கள் மகிழ்கின்ற வண்ணம்
    நான்காண்டு குறையின்றி வாழ்ந்தார்கள் நன்றே!
    எல்லையிலாப் பரம்பொருளை என்றும்மனத் திருத்தி
    இல்லறத்தை விட்டுவிட முடிவெடுத்தான் தத்தன்
    மெல்லமெல்ல மனைவியிடம் விருப்பத்தைச் சொன்னான்
    விடைகொடுக்க வேண்டுமென மிகக்கெஞ்சிக் கேட்டான். 81

    ‘என்ன குறை வைத்துவிட்டேன்? ஏனிந்த முடிவு?
    இன்னும்மக வேதுமிலை, கசந்ததுவோ வாழ்க்கை?
    அன்றுதிரு மணப்போதில் அம்மிமிதிக் கையிலே
    அக்கினிமுன் சொன்னதெலாம் மறந்ததுவும் ஏனோ?
    என்னைமிக மகிழ்வாக வைத்திருப்ப தாக
    எடுத்துரைத்த வார்த்தைகளை ஏன்மறந்து போனீர்?
    அன்னைதந்தை இதைக்கேட்டால் மிகவருந்து வார்கள்
    ஆகாது நும்செய்கை எனமேலும் சொல்வாள் 82

    தவம் புரிய வேண்டாம் – நாதா
    சடை வளர்க்க வேண்டாம்
    நவநவமாக இன்பங்கள்
    நாளும் சுவைத்திடலாம் 83

    கட்டுத் தளரவில்லை- இன்னும்
    கால்கைகள் சோரவில்லை
    சுட்டித் தனம் செய்யக் குழந்தைச்
    சொந்தங்கள் ஏதுமில்லை 84

    வயதும் ஆகவில்லை – நமது
    வாலிபம் மாறவில்லை
    தயவு செய்திடுவீர் – எனது
    தாபம் குறைத்திடுவீர் 85

    என்றுலீ லாவதியாள்- மிக
    இரந்து கேட்குங்கால்
    இன்னும் திடமாகத் தத்தன்
    எண்ணம் இயம்பிநின்றான் 86

    இறைவன் பாதத்திலே – சேரும்
    எண்ணம் கருதிவிட்டேன்
    உறுதி செய்துவிட்டேன் – பெண்ணே
    உதவி செய்கவென்றான் 87

    விட்டுக் கொடுத்திடவே – சற்றும்
    விருப்பம் இல்லாமல்
    கொட்டினாள் கண்ணீரை அவனைக்
    கும்பிட்டுச் சொல்லுகிறாள் 88

    மாலையிட்டு மணம் முடித்த மஹிஷி நான் இருக்கும்போது
    வனவாசம் போவதுவும் முறையோ – இந்த
    மங்கையிடம் ஏதேனும் குறையோ?

    மஹிஷி என்ற உரிமையிலே மணவாளா சொல்லுகிறேன்
    வனவாசம் போவதுவோ கடமை- அதை
    மறுப்பதுவும் மஹிஷி என்னும் உரிமை 89

    இருவரும் மாறி மாறி
    எடுத்தெதைச் சொன்ன போதும்
    ஒருவரும் நிலைவி டுத்தே
    ஒப்புதல் கொடுக்கவில்லை
    பெருகிடும் சினத்தால் தத்தன்
    பேதையும் வருந்தும் வண்ணம்
    ஒருபெரும் சாபம் தந்தான்
    உத்தமி பதறிப் போனாள் 90

    மிகமிக வேண்டிக் கேட்டும்
    மீளவும் மகிஷி என்னும்
    தகுதியால், உரிமை தன்னால்
    தடையினை விதித்த தாலே
    மகிஷியாய்ப் பிறக்கச் சாபம்
    வழங்கினேன் என்றான் தத்தான்
    தகர்த்திடும் சினத்தினாலே
    தழலெனக் கொதித்தாள் லீலா! 91

    வாழ்க்கையிலே சுகம் கேட்டால் கோபமா – அதற்கு
    மகிஷியாகப் போகச் சொல்லிச் சாபமா?
    ஆழ்ந்த என்றன் அன்புசற்றும் சரியுமா- எங்கே
    அடுத்தாலும் உமையழைப்பேன் தெரியுமா? 92

    மஹிஷமாகப் பூமியில் நீர் பிறக்க வேண்டும்- இந்த
    மஹிஷியோடு கூடி அன்பிற் சிறக்க வேண்டும்
    அகிலமெல்லாம் என் காலில் வீழ வேண்டும் – மிக்க
    அன்புடனே நாமிருவர் வாழ வேண்டும்\ 93

    எழுசீர் விருத்தம்

    கரம்பன் என்னும் அரக்கன் மகளாய்க்
    காட்டு மகிஷ முகத்தோடே
    திரும்பப் பிறப்பை எடுத்தாள் லீலா
    தீமை மிகுந்த மனத்தோடே
    உருவில் பெருத்தாள், உளத்தில் சிறுத்தாள்
    ஒவ்வோர் செயலும் உக்கிரந்தான்
    கரத்தில் எடுத்துப் பிடித்தால் போதும்
    கனத்த மலையும் பொடிப்பொடிதான் 94

    மரத்தைப் பொடித்தாள் மலையைப் பொடித்தாள்
    வனத்தைப் பொட்டல் ஆக்கிவிட்டாள்
    சிரத்தை யாகத் தவங்கள் செய்து
    சீக்கிரத்தில் அயனிடத்தே
    வரத்தைப் பெறுவாய் மகளே என்று
    வழியைச் சொன்னான் அவள்தந்தை
    கருத்தை நெஞ்சில் ஆழப் போட்டே
    கடிய தவத்தை அவள் செய்தாள் 95

    உண்ண வில்லை உறங்க வில்லை
    உட்கா ராமல் ஒருகாலால்
    மண்ணை மிதித்து மறுகால் மடித்து
    மாறா நிலையில் அவள்நின்றாள்
    எண்ணத் துள்ளே அயனைநிறுத்தி
    எழுநூ றாண்டு தவம்செய்தாள்
    விண்ணை வெப்பம் தாக்கத் தேவர்
    விதிர்விதிர்த்துப் போனார்கள் 96

    இன்னும் காலம் தாம தித்தால்
    எரிந்து போவோம் எனவெண்ணி
    முன்னே சென்று பிரம னிடத்தே
    முறையிட் டார்கள் தேவரெலாம்
    என்ன செய்ய? வரத்தைக் கொடுத்தே
    இடரைப் போக்கி வருகின்றேன்
    என்று சொல்லிப் பிரமன் சென்றார்
    எதிரே நின்றார் அவள் பார்த்தாள் 97

    “பெண்ணே உன்றன் தவத்தைக் கண்டு
    பெரிதும் மகிழ்ந்தேன். வரங்கேட்பாய்
    விண்ணோ மண்ணோ பிறந்தார்க் கெல்லாம்
    மேவும் மரணம் அதனாலே
    எண்ணிப் பார்த்தே எந்த வகையில்
    எய்த வேண்டும் எனக்கேட்பாய்
    பெண்ணே அதனைத் தருவேன் என்றே
    பிரமன் சொல்ல அவள் கேட்டாள் 98

    “அரனும் மாலும் இணைந்து பிறந்த
    அரிய குழந்தை மண்ணகத்தில்
    அரசன் ஒருவ னிடத்தே ஈரா
    றாண்டு தங்கி வளர்ந்தவனால்
    மரணம் நிகழ வரத்தைத் தருக
    வணங்கு கின்றேன், எனச்சொன்னாள்
    பிரமன் சொன்னார்” தருகின்றேன் நான்
    பிழைசெ யாதே வாழெ”ன்றார். 99

    வரத்தைப் பெற்ற மகிழ்ச்சி தன்னில்
    மண்டைக் கனமும் ஏறியதால்
    உரத்தை எங்கும் காட்ட எண்ணி
    ஓல மிட்டாள், பெரிதாகச்
    சிரித்தாள், நடக்க இயலாவொன்றைச்
    சிந்தித்தோ மென்றுள மகிழ்ந்தாள்
    கரத்தைக் குவித்தாள் ரம்ப னிடத்தே
    கதையைச் சொன்னாள் , அவன்மகிழ்ந்தான் 100

    ஆணும் ஆணும் பிள்ளை பெறுதல்
    ஆகா தம்மா ஆகாது
    வீணில் கால விரயம் இன்றி
    விண்ணை நோக்கிச் சென்றிடுவாய்
    காணும் தேவர் எல்லாம் உன்னைக்
    கண்டு பதறி ஓடட்டும்
    வேணும் படைகள் கூட்டிச் செல்வாய்
    வெற்றி உனதே “ எனச் சொன்னான்.. 101

    -தொடரும்

    Share
  • பலவடிவில் கூட்டம் !

    பலவடிவில் கூட்டம் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியுதொரு கூட்டம்
    பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்

    வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்
    வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்

    தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்
    தள்ளாடும் முதுமைதனைத் தவிர்க்குமொரு கூட்டம்

    நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்
    நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கு கூட்டம் !

    கடவுளில்லை என்றுரைத்துக் கட்சிகூட்டும் கூட்டம்
    கடமை செய்வார் கழுத்தறுக்கக் காத்திருக்கும் கூட்டம்

    தனியுடமை என்றுரைத்துத் தான்பிடுங்கும் கூட்டம்
    சகலமுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்

    தத்துவத்தைச் சமயத்தைச் சாடிநிற்கும் கூட்டம்
    சன்மார்க்க நெறிமுறையைத் தகர்த்துநிற்கும் கூட்டம்

    உத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்
    உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் !

    Share
  • அமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா

    அமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அக்கரைச் சீமையிலே -அதாவது அமெரிக்காவிலே- வாழும் தமிழ் ஆர்வலர்கள், சிகாகோ நகரின் புறநகரான ஷாம்பர்க்கில் தமிழுக்கு ஒரு பெரிய விழா எடுத்தார்கள்.  மூன்று நிறுவனங்கள் சேர்ந்து எடுத்த விழாவாதலால் சுமார் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்கள் ஊர்களில் நடத்தும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் கொண்ட பேரவையை ஃபெட்னா (Federation of Tamil Associations of North America) என்று  ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இதன் 32-ஆவது ஆண்டு விழாவையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது ஆண்டுவிழாவையும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-ஆவது ஆண்டுவிழாவையும் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழுக்கான இந்த மாநாடு, அமெரிக்க சுதந்திர தினமான 2019 ஜூலை நான்கில் துவங்கி ஏழாம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்தது.  

    முதல் இரண்டு நாட்களும் ஃபெட்னா சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.  கிராமியக் கலைகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை, உயர்கலைகளான பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற நிகழ்ச்சிகளோடு இன்று பிரபலமாக விளங்கும்  பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழ்நாட்டிலிருந்து கலைஞர்கள் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு அமெரிக்காவிலேயே வாழும் தமிழர்களும் இந்த நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.  மிகவும் சிரமப்பட்டு இவர்கள் இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்தனர்.

    மூன்றாவது, நான்காவது நாட்களில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  இதற்கு வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.  மற்ற நிகழ்ச்சிகளைப் போல அங்கேயே வசிக்கும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். பதிவுக் கட்டணம் 200 டாலர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடி அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்திருந்தாலும் புதிய மண்ணில் தங்கள் ‘அடையாளத்தை’ (identity) நிலைநாட்டிக்கொள்ளும் முயற்சியின் விளைவு என்றாலும் பிறந்த மண்ணிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்துவிட்டிருக்கும் இவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழ் மீது வைத்திருக்கும் அன்பு மனத்தை நெகிழச் செய்தது.  ஒரு சிலர் தமிழ் இலக்கியங்களை எல்லாம் கற்று வருகிறார்கள் என்ற செய்தி மனத்துக்கு இதமாக இருந்தது. தங்களைப் பற்றிப் பறைசாற்றிக்கொள்ள மட்டுமே இந்த விழாவை இவர்கள் நடத்தவில்லை, தமிழ்பால் கொண்டுள்ள தூய அன்பாலும் இந்த விழாவை எடுத்துச் செய்தார்கள் என்று அறியும்போது இவர்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படுகிறது. விழா நிர்வாகிகள் விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த நான்கு நாட்களும் மூன்று வேளையும் உணவு படைத்தார்கள் என்பது சிறப்புக்குரிய செயல்.  இது பெரிய சாதனைதான்.

    தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்த சிலர், தமிழின் தொன்மையைப் பற்றி அறிவியல் ஒப்புக்கொள்ளும் ஆதாரம் இல்லாமல் ‘அளந்துவிட்டார்கள்’.  தமிழின்பால் அன்பு செலுத்துவதற்கும் அதன் பெருமையைப் பேசுவதற்கும் தமிழுக்குக் கற்பனையான சிறப்பைக் கூறித்தான் ஆக வேண்டுமா? ஒரு வெளிநாட்டுத் தமிழ் அன்பர் – தமிழ்பால் தீராத காதல் கொண்டவர், தமிழ்ப் பெண்ணை மணந்துகொண்டு இனிதாக இல்லறம் நடத்தி வருபவர், தமிழுலகம் போற்றும் தமிழ் ஆர்வலர் – ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று ஒரு கட்டுரையாளர் படித்துக்கொண்டிருந்தபோது என்னால் அதற்கு மேல் அரங்கத்திற்குள் இருக்க முடியவில்லை’ என்று கூறியதைக் கேட்டபோது தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தமிழ்க் காதல் இத்தனை தூரம் போக வேண்டுமா என்று மனத்தில் ஓர் அயர்ச்சி தோன்றியது.  தமிழை எவ்வளவு வேண்டுமானாலும் நேசியுங்கள், ஆனால் தமிழுக்கு இல்லாத ஒன்றைத் தயவுசெய்து கற்பனை செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.

    அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமிழ்மேல் ஆர்வம் கொண்டிருப்பதோடு தமிழை வளர்க்க அவர்கள் செய்யும் செயல்கள், மனத்தில் இவர்கள் மேல் ஒரு மரியாதையை வளர்க்கிறது.  தமிழ் இலக்கியங்களைப் படிப்பதோடு அதைப் படித்தவர்களுக்கு அதில் எவ்வளவு பாண்டித்யம் இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் வினா-விடை மூலம் காட்டினார்கள்.  இவையெல்லாம் தமிழை அமெரிக்காவில் தக்க வைப்பதற்கான வழிகள்.

    விழாவையொட்டி ஒரு மலர் வெளியிட்டார்கள்.  அதற்குக் கட்டுரை எழுத விரும்புபவர்களை எழுதச் சொன்னார்கள்.  நானும் ஒன்று எழுதினேன். என் கட்டுரை அவர்களுக்குக் கிடைத்த விபரத்திற்கும் பின் அது  மலரில் வெளியாகும் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்கும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.  அந்த இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பியவர் அழகு தமிழில் எனக்கு எழுதியிருந்தார். அமெரிக்கா வாழ் தமிழர்கள் முப்பது, நாற்பது ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பிறகும் தமிழில் இத்தனை புலமை பெற்றவர்களா என்று மிகவும் வியந்து போனேன்.  அந்த மகிழ்ச்சியோடு, தமிழ் பேசப்படும் சூழலிலேயே இல்லாதவர்கள் இத்தனை அழகாகத் தமிழில் எழுதும்போது தமிழ்நாட்டிலேயே வாழும் எத்தனைப் பேர் இப்படி அழகாகத் தமிழை –தொலைக்காட்சியிலேயும் செய்தித்தாள்களிலும் கூட- கையாளுகிறார்கள் என்ற எண்ணம் வராமல் இல்லை.  

    தமிழை வளர்க்க ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திற்குப் பணம் கொடுப்பவர்கள் இந்தியாவில் தமிழை வளர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்க்கலாம். இந்த விழாவில் நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் குதூகலித்தபோதும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மனத்தை உறுத்தியது.  விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், தம்ளர்கள், கரண்டிகள், முள்கரண்டிகள் ஆகியவை மலைமலையாகக் குவிந்தன.  இவற்றைப் பார்த்தபோது என் கண்ணில் நீர் வராத குறைதான். இவையெல்லாம் எந்தப் புதைகுழியில் போய்ச் சேருமோ, எத்தனை நூற்றாண்டுகள் அங்கேயே இருந்துகொண்டு பூமியின் சுற்றுச்சுழலைப் பாதித்துக்கொண்டிருக்குமோ?  தமிழ் எத்தனை காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கும் மேலேயே இவை வாழலாம். யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

    படத்திற்கு நன்றி – https://www.indiaabroad.com

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 47

    சேக்கிழார்   பா நயம் – 47

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ஒருநாள்  திருவாரூர்  வீதி வழியே தம் சேடியர்களோடு திருக்கோயில் நோக்கிப் பரவையார்  சென்றார். அவர் முன்பு கைலாயத்தில் மலர்களைக்  கொய்து தம் நாயகியாகிய உமையம்மை பூசைக்கு உதவியவர். அதன் தொடர்ச்சியாகத் திருவாரூரிலும் புற்றிடங் கொண்டாருக்கும், அன்னை கமலாம்பிகைக்கும் வழிபாடு செய்யப் பூக்களைப் பறித்து அளித்தார். அவற்றை இறைவியின் நிர்மாலியமாய்த் தலையில் சூடிக்கொண்டார். அதனால் அப்பூக்களின்  தெய்வமணம் ஊரெங்கும் கமழ்ந்தது! 

    இறைவழிபாட்டை  மட்டுமே அவர் தம் அன்றாடக்  கடமையாகக் கொண்டிருந்தார். திருவாரூர்த் தியாகராசப் பெருமானின் திருவுருவைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதற்காகத் தம் சேடியருடன் மெல்ல நடந்து சென்றபோது சுந்தரர்,  இறைவன் திருவருளினால் பரவை நாச்சியாரைக் காண நேர்ந்தது. அப்போது அவர் திருவடிகளில் சிலம்பும், இடையில் மேகலையும், கூந்தலில் சூடிய மலர்களைச் சூழ்ந்த வண்டுகளும் ஆரவாரம் செய்தன!   

    அவருடைய  பேரழகு மிகப்பேரழகியான கமலாம்பிகைக்குத் திருப்பணி செய்தமையால் தமிழகமே போற்றிப் புகழும் அளவுக்கு ஒளிவீசி விளங்கியது!

    அதனால்  அவள் அழகிய பாதங்களில் அணிந்திருந்த சிலம்புகள், ’’ இவள் பாதங்கள் இந்தப் பாருலகினையே வென்று தம் அடிமைப்  படுத்தி விட்டமையால். இந்த நிலமே இவற்றைப் பணிந்து தாங்குகின்றன!’’ என்று ஆரவாரம்  செய்கின்றன! ஆகவே அவள் பாதங்கள் நிலவுலகையே அடிமைப்படுத்தின! அடுத்து அவளுடய இடை, அழகிய நாகம்போன்ற அல்குலின் மேலே   மணிகள் கட்டிய மேகலைகளை அணிந்து விளங்குகின்றது. ஆகவே அவர் இடையில் அணிந்த மணிமேகலை, ‘’இவள்அழகு கீழே அரவம் திகழும் நாகலோகத்தினை அடிமைப்படுத்தி விட்டது,! என்பதைப் புலப்படுத்தி ஆரவாரிக்கின்றன!  அடுத்து பரவையாரின் கரிய மேகத்தை வென்ற கூந்தலில் சூட்டிக்கொண்ட பூக்களின் மணத்தையும் தேனையும் நுகரும் ஆவலில் வண்டுகள் சூழ்ந்து பறந்து, ரீங்காரிக்கின்றன! வண்டுகள், ‘’ எம் தலைவியின்  கூந்தலின் கருமைக்கு வானத்தின் மேகங்கள் தோற்றுவிட்டன, அதாவது வானுலகே தோற்றுவிட்டது!’’ என்று அறிவிக்கின்றன! 

    மூன்று அங்கங்கள் முறையே மூன்று உலகங்களை வென்றதற்கு அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும் – நடுவும் – கீழும் உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையேசுவர்க்க மத்திய பாதலமாம். 

    மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லையாதல். தமிழ் நூற்களின்படி இதுவே தலைவியினது இலக்கணமாதலின் இவ்வாறு கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு ஒவ்வோர் பகுதி காரணமும் உதாரணமு மாயிற்று!.

    இனிப்பாடலை   முழுவதும் படித்துப் பயில்வோம்.

    “அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப  
    மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
    துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
    பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.”

    இதனை   உரையாசிரியர்  மேலும் விளக்குகிறார். பரவையாரது அடிகள் மண்ணை அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில் உள்ளனபோன்ற மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல் மேகத்தின் மிக்க நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள சிலம்பும் – காஞ்சியும் – வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க. மண் அடிப்பட்டது; விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய் வெல்லப்பட்டது; ஆதலின் இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு காஞ்சி ஆர்க்க’ என்றமை  காண்க.      

    விண் – புண்ணியத்தால் வரும் இன்பானுபவமும், மண் – புண்ணிய பாவங்களால் வரும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின் இவற்றைக் கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம் பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது முற்றும் வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற துணிவுகொண்டு“ என்றதாம். துணிவுகொண்டு – அடியும் குழலும்போல வெளித் தோற்றாது, அல்குலினது செயல் காஞ்சி யணியின் தன்மையால் அனுமானித்துத் துணியப்படு பொருளாதலும் குறிப்பாம். 

    அடி – அல்குல் – குழல் – பாதாதிகேச வருணனை. மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற பொருளில்வந்த இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார் என்ற பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம் தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால் பரவையார் மறுகுசூழ ஒப்பற்ற இறைவனை  வணங்கப்போந்த நடைச் சிறப்பும், பயனும் கூறியபடி.’’ என்று உரையாசிரியர் விளக்குகிறார்!

    பரவை நாச்சியார்  இறைவனது கருணையால்  நிலவுலகிற்கு அனுப்பப் பெற்றமையால்,  அவருடைய தனிச் சிறப்பு வாய்ந்த தகுதி  இப்பெரிய புராணத்தில் விளங்கும். அதனாலேயே  இறைவன் தம் திருப்பாதங்கள் ஆரூர் வீதியில் படிய, இருமுறை தூது நடந்தார். இப்பாடல்  பரவை நாச்சியார் மற்றைய பெண்களிலும் மேம்பட்டவர் என்பதை சேக்கிழார் பாநயம் புலப்பட

    விளக்குகிறார். பெண்ணின்  பெருமையைப் போற்றும் பகுதி இது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    61)  மடி இன்மை

    குறள் 601:

    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்

    ஒருத்தன் பொறந்த குடி ங்குத மங்காத விளக்கு அவனோட மாச்சலால(சோம்பல்) ஒளி மங்கி கெட்டுப் போவும். 

    குறள் 602:

    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்

    குடும்பத்த ஒசத்த விரும்புதவங்க மாச்சப்பட்டு இருக்காம உற்சாகமா முனஞ்சு செயல்படணும். 

    குறள் 603:

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியுந் தன்னினு முந்து

    ஒழிச்சுக்கட்டவேண்டிய மாச்சல தங்கிட்ட வச்சிருக்கவனோட குடும்பம் அவனுக்கு முன்ன அழிஞ்சு போவும். 

    குறள் 604:

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு

    மாச்சப்பட்டு பாடுபாக்காம இருக்கவன் வாழ்க்கையில தப்புதண்டா செய்யுதது அதிகமாயி அவன் குடும்பப் பெரும அழிஞ்சு போவும். 

    குறள் 605:

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    கெடப்புல போட்டு காரியத்த செய்யுதது, அயத்துப் போகுத கொணம், மாச்சல், அளவுக்கு மீறி ஒறங்குதது இந்த நாலு கொணமும் கெட்டுப்போவணும் னு நெனைக்கவன் ஆசப்பட்டு ஏறுத தோணி ஆவும்.

    குறள் 606:

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது

    நாட்ட ஆளுத தலைவனோட ஒறவு தானே வந்து சேந்துக்கிட்டாலும் மாச்சப்பட்டு சும்மா இருக்கவனுக்கு அதனால ஒரு உபயோகமில்ல. 

    குறள் 607:

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்

    முனஞ்சி பாடுபாக்காம மாச்சப்பட்டு சும்மா இருக்கவன் வாழ்க்கைல மத்தவங்க இடிச்சுப்பேசி எளக்காரம் செய்யுத நெலமைக்கு வந்துருவான். 

    குறள் 608:

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
    கடிமை புகுத்தி விடும்

    மாச்சப்படுதவன் நல்ல குடில பொறந்திருந்தாலும் அந்த கொணம் அவன பகையாளிக்கு அடிம போல ஆக்கி உட்ரும். 

    குறள் 609:

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்

    ஒருத்தன் மாச்சல விட்டுப்போட்டாம்னா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வந்த குத்தங்கொற வெலகிப் போயிடும்.

    குறள் 610:

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு

    கடவுள் அடியால அளந்த ஒலகத்தையெல்லாம் மாச்சப்படாம இருக்க ராசா சேந்தாப்ல அடைஞ்சுக்கிடுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள்.

    சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று நான் உங்களுடன் மனந்திறந்து கொண்டிருக்கும் இம்மடல் எனது 301 வது மடலாகும். என் வாழ்வின் பெரும்பான்மையான காலப்பகுதியை இங்கிலாந்து எனும் இந்நாட்டினிலே கழித்து விட்டேன் என்பதுவே உண்மை. மாணவனாக இங்கு வாழ்வைத் தொடங்கிய நான் இன்று ஒரு பேரக்குழந்தையைக் கண்டு விட்ட நிலையிலே முதுமை எனும் வாயிலினுள் கால்கள் பதித்து நிற்கிறேன். இங்கிலாந்திலிருந்து எனது மடல் எனும் இந்தத் தொடர் பத்தியின் நோக்கம் ஒரு நாட்டினிலே பிறந்து, மற்றொரு நாட்டின் தத்துப்பிள்ளையாக வாழும் ஒரு புலம்பெயர் மனிதனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களைப் பற்றியது. அவனது பார்வை எனும் கண்ணாடியினூடாகப் பார்ப்பது எப்படி இருக்கும் எனும் ஒரு காலப்பதிவேயாகும். எனது இந்த 44 வருட இங்கிலாந்து வாழ்க்கையில் நான் எதிர் கொண்ட பிரச்சனைகள் பல, நான் அடைந்த அனுபவங்கள் பல, என் கண்முன்னே நிகழ்ந்த உலக நிகழ்வுகள் பல. குறிப்பாக எனது தாய்மண்ணில் ஆரம்பித்த போர் இன்று முற்று முழுதாக முடக்கப்பட்டு போர்க்காலச் சூழலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வுக் காலத்தில் என் உடன்பிறப்புகள் வாழ்வினை எதிர்நோக்கும் ஒரு நிலையை காண்கிறேன். இப்போர்க்காலச் சூழல்கள் எனக்குக் கொடுத்த அனுபவச் செழிப்புகள், அதனால் நான் இழந்த பல தொப்புள்கொடி உறவுகள் எனப்பலவகையான நிகழ்வுச் சுழல்களுக்குள் அகப்பட்டு அதனால் கிடைத்த அனுபவச்சுழல்களுக்குள் உழன்று கொண்டிருக்கிறேன்.

    சுமார் 30 வருடகாலப் போர்க்காலச் சூழலில் எனது தாயக மண்ணின் உறவுகள் அவர்கள் எந்த இனத்தை, மொழியை, மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அனுபவித்த சோகங்களும் இழப்புகளும் எண்ணிலடங்காதவை. அதன் நிழலைக் கூடத் தொட்டுப்பார்க்காத நிலையில் அவர்களின் அக்காலச்சூழலின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி எந்தவிதமான கருத்துக்கூறும் உரிமையும் எனக்கில்லை என்பதுவே உண்மை. அதேசமயம் இங்கிலாந்து எனும் நாடு என்னைத் தனது பிள்ளையாகத் தத்தெடுத்து மாணவனாக நுழைந்த என்னை ஒரு தகவல், தொழில்நுட்ப பொறியியலாளனாக உயர்த்தி வைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள் அன்று மாணவனாக இருந்தபோதும் இன்று ஒரு ஓய்வுபெற்ற பொறியியலாளனாக இருக்கும் போதும் நிச்சயமாக எனது வாழ்வின் பல நிலைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தாக்கங்கள் வெளிப்படையாக தெரியக்கூடிய வகையில் நிகழாது போனாலும் கூட மறைமுகமாக நிச்சயமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்வின் அன்றாடத் தேவைகளைத் தேடியோடும் நிலையில் இருக்கும் போது இவ்வரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராயும் அளவுக்கு போதிய அவகாசம் இருக்கவில்லை. மேலோட்டமாக அவ்வப்போது செய்திகளின் மூலம் அறிந்து கொள்வதை விட மேலதிகமாக அதற்கப்பாற்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை.

    இன்று நிலைவேறு !

    மனதில் படுவதை எழுத்தில் வடிப்பதை முழுமூச்சாக செயற்படுத்தி வரும் ஒரு வேளையிது. இப்போது இங்கிலாந்தின் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் கூர்மையாக அவதானிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது, அதற்கான அவகாசமும் கிடைத்திருக்கிறது. இதுவரை உங்களுடன் நான் பல நிலைகளில் இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் இம்மடல்கள் மூலமாகப் பகிர்ந்து வந்திருக்கிறேன். இன்று அதாவது 2019ம் ஆண்டு , செப்டெம்பர், 4ம்நாௐள் நிச்சயமாக நான் இங்கிலாந்து அரசியல் வரலாற்றின் ஒரு சரித்திர திருப்புமுனையில் இருப்பதாகவே உணர்கிறேன். இத்திருப்பம் ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் எனக்கு நேர்மறையான தாக்கத்தையா? அன்றி எதிர்மறையான தாக்கத்தையா? தரப்போகிறது என்பது காலத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் இன்று ஐக்கிய இராச்சியம் பெரும்பான்மையான வாக்குகளினால் எடுத்திருக்கும் முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் முதன்முறையாக நிகழ்க்கிறது. இதன் பின்விளைவு எப்படி இருக்கும் என்று சுட்டிக்காட்ட எந்த உதாரணமும் கிடையாது.

    சுமார் ஒரு மாதத்தின் முன் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் சில அதிரடியான முடிவுகளை எடுத்திருக்கிறார். இம்முடிவுகள் அனைத்துப் பாராளுமன்ற அரசியலுக்குமே தாய் எனக்கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வினை பிரதமர் பொரிஸ் ஜான்சன் கையாளும் முறையை ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விலகல் உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் எதுவித உடன்படிக்கையுமில்லாமல் விலகுவது உறுதி என்கிறார் எமது பிரதமர். ஒருக்காலும் இல்லை. விலகல் உடன்படிக்கை எட்டாவிடில் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் எண்ண முடியாத அளவில் பாதிக்கப்படும். அதனால் உடன்படிக்கை இல்லாமல் விலக முடியாது எனும் கட்டளையைச் சட்டமூலமாக்குவதன் மூலம் பொரிஸ் ஜான்சன் அவர்களைப் கட்டிப்போட முனைகிறார்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்றப் பெரும்பான்மையில் ஒரேயொரு அதிகப்படியான உறுப்பினர்களையே பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது கட்சி கொண்டிருந்தது. வட அயர்லாந்தின் அரசியல் கட்சியான டி.யூ.பி எனும் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அரசுக் கட்டிலில் பொரிஸ் ஜான்சன் அமர்ந்திருக்கிறார். அக்டோபர் 31ம் தேதி  எங்கே தம்மைத் தமது வாக்கின்படி ஐக்கிய இராச்சியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக முடியாமல் பாராளுமன்றப் பெரும்பான்மை கட்டிப் போட்டுவிடுமோ எனப் பிரதமர் அஞ்சினார்.

    என்ன காரணம் என்கிறீர்களா?

    அவரது கருத்துக்கு அவரது கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களிலேயே பலர் எதிரான நிலையைக் கொண்டிருப்பதே ! பளிச்சிட்டது அவருக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு வருடமும் பாரளுமன்றம் கோடை விடுமுறைக்காகக் கலைக்கப்படுவதுண்டு. மீண்டும் கூட்டப்படும் போது புதிய பாரளுமன்றத் தொடரில் அரசாங்கம் அத்தொடரில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை இங்கிலாந்து மகாராணி பாராளுமன்றக் கூடத்தொடரைத் திறந்து வைத்து அறிபதுவே சம்பிரதாயம். கடந்த இரண்டரை வரிடங்களுக்கு மேலாக ரெக்ஸிட் எனும் சிக்கலைத் தீர்பது ஒன்றே அரசின் முன்னால் பிரதான செயற்பாடக் இருந்தது. இதன் காரணத்தினால் இம்மகாராணியாரின் திறப்பு வைபவம் நடைபெறாமல் இருந்தது. பிடித்துக் கொண்டாரே பொரிஸ் ஜான்சன்! விடுவாரா என்ன? கோடை விடுமுறையத் தொடர்ந்து செப்டெம்பர் 3ம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படுவதாக இருந்தது. அதற்கு முன்னதாகவே தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்துப் பாராளுமன்றம் செப்டெம்பர் 9ம் தேதி தொடக்கம் அக்டோபர் 14ம் தேதிவரை இயங்காமல் முடக்கப்படும் என்று அறிவித்தார். இதற்குக் காரணமாக ஜனநாயகச் சம்பிரதாயப்படி புதிய பாரளுமன்றத்தொடரை மகாராணியார் திறந்து வைத்து , புதிய பிரதமரான தமது அமைச்சரவை இப்பாரளுமன்றக் கூட்டத் தொடரில் நாட்டின் நலன்கருதி எடுக்கப்போகும் செயற்பாடுகளை அறிப்பிப்பார் என்று கூறினார்.

    கொதித்தெழுந்தனர் எதிர்கட்சியினர். ஏன் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் பல பாராளுமன்ர அங்கத்தினர்களுமே அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்தனர். பிரதமரின் இச்செய்கை ஜனநாயகப் பாராளுமன்ற பொறிமுறைக்கு எதிரானது என்றும், பிரதமர் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். “உடன்படிக்கையற்ற விலகலுக்கு” பாராளுமன்றம் ஒரு போதும் அனுமதிக்காது. பாராளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதிவரை மூடி வைத்தால் , 31ம் தேதி விலகும் காலக் கெடுவினைத் தடைசெய்யும் அளவிற்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனும் சாணக்கிய தந்திரத்தைப் பிரதமர் கையாளுகிறார் என்பதுவே அவர்களது குற்றச்சாட்டு. நாடு முழுவதும் பலபகுதிகளில் இதற்குக் கணிசமான எதிப்புக் கிளம்பியது. அசையவில்லை பிரதமர். நான் சொன்னது சொன்னதுதான் என்று விஜய் பாணியில் சொன்னார். உடன்படிக்கையுடனோ அன்றி உடன்படிக்கயற்றோ அக்டோபர் 31ம் தேதி விலகுவது உறுதி என்று சூளுரைத்தார்.

    சிறுபான்மை அரசாங்கம், அவர்களுக்கு இருக்கும் பெரும்பான்மையோ ஒன்றே ஒன்று. விடுவார்களா? எதிர்க்கட்சியினர். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றம் மறுபடியும் கூடும் நாளான 3ம் தேதிக்கு முன்னதாக ஒன்றுகூடித் திட்டம் தீட்டினார்கள். பொறிமுறை ஒன்ற வகுத்தார்கள். இங்கிலாந்து ஜனநாயகத்தின் ஒரு விழுதைப் பற்றிக் கொண்டார்கள். எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களோடு அரசாங்கத்தைச் சேர்ந்த சுமார் 17 உறுப்பினர்கள் கைகோப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டெம்பர் 3ம் தேதி பாராளுமன்றம் கூடியது. 4ம் தேதி பாராளுமன்றச் செயற்பாடுகளை அரச நிர்வாகத்தினர் கையிலிருந்து பிடுங்கி பாராளுமன்ற அங்கத்தினர்கள் நடத்துவார்கள் எனும் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.அரசுக்கு எதிராக 328 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக 307 வாக்குகளும் விழுந்தன. விளைவு இன்றைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கைகளில் இருந்து எதிர்க்கட்ச்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட உறுப்பினர்களின் கைகளுக்கு மாறியது. எதிர்க்கட்சியினர் “ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய உடன்படிக்கை எட்டாத பட்சத்தில் பிரதமர் அவ்வகையான உடன்படிக்கையான எட்டுவதற்கான கால அவகாசத்தினை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற வேண்டும்” எனும் பணிப்புரையை சட்டமாக்குவதற்கான பிரேரணையை முன்வைக்கிறார்கள்.

    இதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 4ஆம் தேதி மாலை இடம்பெறும். இதிலும் அரசு தரப்பு தோல்வியடயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாக்கெடுப்பில் அரசு தோல்வியடையும் பட்சத்தில் தான் பொதுத்தேர்தலை முன்னெடுக்கப்போவதாக 3ஆம் தேதி பிரதமர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரின் பிரேரணை வெற்றி பெற்றால் அது சட்டமூலமாக்கப்படுவதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தேவைப்படும். பிரதமர் பொதுத்தேர்தலைத் தான் நினைத்த மாத்திரத்தில் கோர முடியாது காரணம். 2010ம் ஆண்டு படவிக்கு வந்த டேவிட் கமரன் அரசினால் எந்த வொரு அரசாங்கமும் ஐந்து வருட காலத்துக்கு முன்னால் கலைக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமுலாக்கியது.

    பிரதமர் பொரிஸ் ஜான்சன் பொதுத் தேர்தல் வேண்டி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் பிரேரணை வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவு தேவை. ஆனால் இன்றைய பிரேரணை சட்டமூலமாக்கப்படும் வரை பொதுத்தேர்தலுக்கான ஆதரவை தாம் வழங்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் அறிவித்துள்ளார்.

    போச்சுடா !

    இதுவரை காலமும் வாய்திறக்கும் போதெல்லாம் இந்த அரசாங்கம் ஒரு வெத்து அரசாங்கம் பொதுத்தேர்தல் ஒன்றே மாற்றுவழி எனக்கோஷமிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இப்போ அதற்கு ஆதரவளிக்க முடியாது என்று சொல்லி விட்டாரே ! என்ன செய்யப் போகிறார் பொரிஸ் ஜான்சன்? சதுரங்கப் பலகையில் சுற்றி நிற்கும் காய்களிடமிருந்து தப்ப அவரது அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்?

    அன்பிய உறவுகளே இதற்கான பதிலை உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனை இதன் சாட்சியாக நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதும் ஒரு அற்புதமான நிகழ்வே ! உலக ஜனநாயகத்துக்கே முன்னோடி தாம் என மார்த்தட்டிக் கொள்ளும் ஐக்கிய இராச்சியம் எப்படி இந்தச் சிக்கலில் இருந்து வெளிவரப் போகிறது?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    04.09.2019

    Share