Blog

  • சூரியனை உட்கொள்ளும் பொழுது

    -கவிஞர் பூராம்

    அமுதஒளி தீண்டலில் பனியாய் நனைந்து
    உயிாின் உள்ளறையில் குளிா்ந்து
    ஆன்மகானம் கேட்டுக்கொண்டே இருக்கிறது

    வெம்மையின் தழும்பளில் சருகாய் எரிந்து
    பாறைப்பெண்ணின் பனிக்குட உடைப்பில்
    ஊற்றாய் பெருகும் நூற்றாண்டுத்தவம்

    உடலூற்றில் பொங்கி எழும்
    அன்பெனும் ஆன்ம வெள்ளத்தில்
    கடைகோடி விளிம்பில் அவளின் புன்னகை

    வியர்வையின் வற்றாத நதியில் உழைப்பின்
    உன்னதங்கள் நீர்க்குமிழியாய் சிலகணங்கள்
    கடந்துசெல்ல எத்தனையோ இருந்தாலும்
    இருந்து நினைக்க அவளின் முதல்பாா்வை!
    உதிர்ந்து விழும் ஒவ்வொரு இலையும்
    தெரியவில்லை வருந்துவதாக!
    வெறித்தப் பாா்வையோடு வெட்டவெளியில்
    சருகாக மறுக்கும் தருணங்கள்

    இலையவளின் ஆரவார மகிழ்ச்சியில்
    பறவைகளின் இளைப்பாறலில்
    இந்தக் கோடையும் கடந்துசெல்லும் வெறுமையில்.

    Share
  • புள்ளி

    புலவர் இரா.முரளி கிருட்டினன்

    புள்ளி என்று சொன்னவுடன்
    உங்கள் நினைவில் வருவது
    காற்புள்ளி,அரைப்புள்ளி,
    முக்காற்புள்ளி,முற்றுப்புள்ளி,
    – தமிழ் மாணவன்.

    புள்ளி வைத்துக் கோலம் போடுவேன்
    – குடும்பத்தலைவி.

    புள்ளிகளை இணைத்து ஓவியம் வரையலாம்
    – ஓவிய ஆசிரியர்.

    வானத்து நட்சத்திரங்கள்
    புள்ளிகளாகத் தெரிகின்றன.
    – குழந்தை.

    புள்ளி என்று சொன்னவுடன்
    எத்தனை விளக்கம்.
    புள்ளி என்பது என்ன?
    புள்ளி என்பது வாழ்க்கை.

    எந்தவொரு எழுத்தும்,
    எந்த ஒரு எண்ணின் உருவமும்
    முதல் புள்ளியின் தொடக்கத்திலேயே!

    எண் கணிதத்தில்
    பூஜ்ஜியம் என்பது கூட
    புள்ளியிலிருந்து வரையப்பட்ட
    வளைகோடுகள் தான்.

    முடிந்து விட்டது என்று வைக்கும்
    முற்றுப்புள்ளி கூட
    அடுத்த வாக்கியத்தின் தொடக்கம் தான்.
    எழுதுவதிலிருந்து,
    சிலை செதுக்குவது வரை
    எல்லாவற்றின் தொடக்கமும்
    சிறு புள்ளியே.

    எரிவாயு அடுப்பைப்
    பற்றவைப்பது கூட
    சிறுபுள்ளி நெருப்பு.

    கண்பார்வை குறைந்தால்
    எழுத்துக்கள் சிறுபுள்ளியாய்த் தான் தெரியும்.
    உடலில் புள்ளிகள்
    கோடைகால வியர்க்குருகள்.

    என் மகள் எழுதிய முதல் எழுத்தே
    சுவரில் வைத்த புள்ளியே.
    புள்ளிதான் மனித வாழ்வின் அடிப்படை.

    மனிதன்
    பிறப்பிலிருந்து இறப்புவரை
    எல்லாமே புள்ளிதான்.

    புள்ளி வாழ்க்கைத் தத்துவம்.
    பெண் நெற்றியில் – பொட்டு
    தமிழில் புள்ளி – மெய்யெழுத்து
    வாசலில் புள்ளி – மாவுக்கோலம்.
    பால்காரன் கணக்கிலிருந்து
    பரோட்டோ கணக்கு வரை
    எல்லாமே புள்ளியிலிருந்து
    வரையப்பட்ட கோடுதான்.

    6 – 6 புள்ளிகளை இணையுங்கள்
    அழகியகோலம் பிறக்கும்.
    மாறுபட்ட மனங்களை இணையுங்கள்
    வாழ்க்கை வசந்த காலமாக மாறும்.

    புள்ளி,
    புள்ளி தான் மனித வாழ்வின் தத்துவம்.
    முற்றுப்புள்ளியோடு…

    புலவர் இரா.முரளி கிருட்டினன்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
    திருச்சிராப்பள்ளி-2
    smrmurali@gmail.com

    Share
  • கல்லிடைக் குறிச்சி தனிக்கல் காட்டும் சமூக வரலாறு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    நெல்லை அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக் குறிச்சியில் கோட்டைத் தெருவில் உள்ள தனிக்கல் கொல்லம் ஆண்டு 628 இல் (கி.பி.1453) 44 வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது. இதில் வெள்ளார் எவரும் இனி வெள்ளை நாடார்களை தம் பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டாம் என்று தடை செய்து அதை இக்கல்வெட்டில் குறித்துள்ளனர். இது அக்கால சமூக நிலையை அறிய மிகவும் உதவுகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. கொல்லம் 600 20 8 (628) ஆண்டு சித்திரை மாதம்
    2. (5) நாள் முன்னாள் நாட்டின கல்லு
    3. (இ)ரண்டுக்கும் படி எடுப்பு. கொ
    4. ல்லம் 500 50 5 (555) ஆண்டு  கும்ப னாயறு
    5. (14) நாள் சென்றது நம்முடைய நாட்
    6. டில் வெள்ளாழற்க்கு பிழைப்
    7. போர் சில காரியம் வெள்ளை நாடாரி
    8. ல் சோதினை உள்ளிருப்பு பாசித்த
    9. லை விக்கிரம ஆதித்தன் செய்
    10. கையாலேயம் நாட்டினகல்லி
    11. ல் வாசகமும் 500 60 1 (561) ம் ஆண்டு மீன்னா
    12. யறு 26 சென்றது. னாட்டில் வெள்
    13. ளாழற்கு பிழைப்பார் சிலகாரி
    14. யம் வெள்ளை னாடாரில் கணக்கு
    15. கோளரி அய்யப்பனும், அய்யப்ப
    16. ன் குமரனும், அண்டூர் செழியங்க
    17. னும் செய்கையாலேயும் செனமு
    18. ம் காரணப் பட்டவர்களும் காரியஞ்
    19. செய்கிறவர்களும் கணக்கெழு
    20. முதுகிறவர்களும் மற்றும் நாட்
    21. டில் வெள்ளாழராயுள்ளவர்களை
    22. ல்லாருங் கூடி இருந்து கற்பித்த
    23. காரியம் பிழைத்தவர்கள் மூவரை
    24. யும் கொன்று பரிகாரம் சொய்யுமா
    25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்
    26. நம்மோடுங் கூடக் கூலிச் சேவகம்
    27. சேவிக்க இளைப்பதென்றும் கா
    28. ரணப் படுகையும் காரியஞ்
    29. செய்கையும் கணக்கெழுதுகை
    30. யும் தேசங் கைய்யாளுகையும்
    31. இளைப்பதென்றும் கற்பித்து நா
    32. ட்டின கல்லி(ன்) வாசகம். இம்மரிசா
    33. _ _ _ _ _ _ _ _ (பக்கம் 2)
    34. 600 20 8 (628) ம் ஆண்டு சித்திரை மாதம் 10 நாட்
    35. டின கல்லில் முன்பில் வாசக
    36. த்தோடு கூடி இப்போதை க
    37. ல் வெட்டிக் கூட்டின வா
    38. சகம் வெள்ளை நாடார் _ _ _
    39. ப்பாகத்து பெண் கட்ட அரி
    40. தென்றும் கையாள அரிதென்
    41. றும் பிழைத்தவர்களுக்கு
    42. _ _ _ _ _ _ _ _ _ _
    43. அய்யப்பன் மார்த்தாண்டன் இரா
    44. மன் சந்திரக் கணக்கு.

    சொற்பொருள்:

    செய்கை – ஒழுக்கக்கேடு, பெண்ணிடம் முறைதவறி நடத்தல்; சென்றது – கடந்த காலத்தில்; வெள்ளாழற்கு பிழைப்பு – கணக்கு எழுதுதல், ஆவணம் எழுதுதல் போன்றன; செனமும் – பொது மக்களும்; காரணப்பட்டவர்கள் – victim,  பாதிப்புற்றவர்கள்; காரியம்செய்கிறவர் – வேலைக்கு அமர்த்திக் கொள்பவர், job engager; முதுகிழவர்கள் – மூத்த வெள்ளாளர்; கற்பித்த – நடக்க வேண்டிய நெறி, guidelines; சேவிக்க – ஊழியம் ஆற்ற, service; இளைப்பது – இணைய இயலாது; தேசங் கையாள்கை – நிர்வாக, பொதுப்பணி வேலைகள்.

    கல்வெட்டு விளக்கம்:

    கொல்லம் ஆண்டு 555 (கி.பி.1380) ல் பொறித்த கல்வெட்டு. கும்ப லக்னம் கூடிய ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் நாள் (மாதம் குறிக்கப்படவில்லை). கடந்த காலத்தில் நம் நாட்டில் வெள்ளாளர் தொழில் செய்து பிழைப்போர் சில வேலைகளுக்கு ஈடுபடுத்திய போது வெள்ளை நாடாரில் சோதனை உள்ளிருப்பு பாசித்தலில் விக்கிரம ஆதித்தன் கெட்ட நடத்தையால் நாட்டின கல்லில் இருந்த செய்தியும், கொல்லம் 561 (கி.பி.1386) ல் பொறித்த கல்வெட்டு. மீன லக்னம் ஏற்பட்ட ஞாயிற்றுக் கிழமை 26 ஆம் நாள் (மாதம் குறிக்கப்படவில்லை). கடந்த காலத்தில் நம் நாட்டில் வெள்ளாளர் தொழில் செய்து பிழைப்போர் சில வேலைகளுக்கு வெள்ளை நாடாரில் கணக்கு எழுத கோளரி அய்யப்பன், இவன் மகன், அண்டூர் செழியங்கன் ஆகியோரது கெட்ட நடத்தையால் பொது மக்களும், பாதிப்புற்றவர்களும், தம் வேலைக்கு அமர்த்துவோரும், கணக்கு எழுதும் மூத்தோரும் மற்றும் நாட்டில் வெள்ளாளர்களாய் உள்ள எல்லோரும் கூடி இருந்து மேற்கொண்ட வழிமுறையாவது வேலைஆற்றிய குற்றவாளிகள் மூவரையும் கொன்று கழுவாய் தேடுமாறு முடிவு கொண்டனர். இனி வெள்ளை நாடார்கள் எவரும் நம்மோடு சேர்ந்து இணைந்து கூலிக்கு ஊழியம் செய்ய இயலாது (தடை செய்யப்பட்டது). பிறரது வேலையில் அமர்வதும், வேலை செய்வதும், கணக்கு எழுதுவதும், நாட்டு நிர்வாகப் பணியில் ஈடுபடுவதும் ஆகிய எல்லாமும் தடை செய்யப்பட்டது என்றும் தீர்மானித்து வழிகாட்டி நாட்டிய கல். மேற்கண்ட இரு கல்லின் வாசகத்தையும் படி எடுத்து அதோடு கொல்லம் 628 (கி.பி. 1453) ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10 ஆம் நாள் நாட்டிய கல்லில் முன்பிருந்த வாசகத்தையும் சேர்த்து இப்போதைய கல்லில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வாசகம் யாதெனில் இனி வெள்ளை நாடார்களை கூலிக்கு சேர்த்துக் கொள்ளும் வெள்ளாளர்கள் தம் சாதியில் பெண்கட்டுவது அரிது, வேலையில் அமர்வதும் அரிது என்று வெள்ளாளற்கு பிழைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அய்யப்பன் மார்த்தாண்டன் இராமன் சந்திரன் என்ற கணக்கன் உத்தரவு பிறப்பித்த செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

    பிற இடங்களில் வேலைக்கு செல்வோர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அதையும் மீறி வேலைக்கு செல்லும் இடங்களில் உள்ள பெண்களிடம் அத்துமீறி நடந்தால் சமூகத்தின் எதிர்வினை இப்படியாகத் தான் இருக்கும் என்பது தெளிவு. குறைந்த கூலிக்கு வெள்ளை நாடார்களை வேலைக்கு அமர்த்தி அதில் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் முதல் இரண்டு முறை அறிவுறுத்தியும் அதை மதிக்காமல் வெள்ளாளர் புறக்கணித்ததால் மூன்றாம் முறையாக வெள்ளார்க்கு தடைஏற்படுத்தி இந்த கல்வெட்டில் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கூடுதல் செய்தி ஆகும். இக் கல்வெட்டு முழுக்க முழுக்க வெள்ளாளர் தரப்பின் நலன் கருதி எடுக்கப்பட்ட எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைக் கல் என்பது புரிகின்றது. Vellalars, for Vellalars, by Vellalars என்பதே இதன் பொருளடக்கம்.

    கல்வெட்டுச் செய்தியை எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி அதில் ஆளப்பட்டுள்ள சொற்கள் வெள்ளாள மக்களிடம் புழங்கும் சொற்களைக் கொண்டு எழுத்தப்பட்டு உள்ளது. எனது சொற்பொருள்பட்டி இதில் இடர் நீக்கி தெளிவிக்கின்றது.  

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.302/303. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8

    Share
  • கடற்கரை காந்தி

    – காந்திமதி கண்ணண்

    இல்லாத பணமும்
    இயலாத பரிந்துரையும்
    அவமானங்களை பரிசளிக்க
    தேடல் எனும் முடிவிலியில்
    சோர்ந்தேனோ..? தோற்றேனோ..?
    இனி தேடலாகாது எனும் முடிவில்,
    தேடத் துணிந்தேன் என் முடிவை….

    எப்பொழுதுதான் வருவாய்..?
    என வந்து வந்து என்னை அழைத்துப்போகும்
    கடலலையை கொஞ்சம் காத்திருக்கச் சொன்னேன்.

    பிறந்ததை தவிர
    என் தவறொன்றுமில்லை
    என்ற பல தத்துவங்களோடு

    என் சடலத்தில் சாய்ந்துருகும் தாய்…
    என் மரணச் செய்தியில் இடிந்துரையும் தந்தை…
    இவற்றை பெருங்கடல் வானத்தில்
    திரையிட்டு காண்கிறேன்….

    காட்சியின் நடுவே,
    கனங்குறைந்த சுண்டல் பெட்டியுடன்
    களைத்தோய்ந்த சிறுவனின் பிம்பம்…

    என் குடலை
    பிணையும் மரணபீதியை
    பசி என பாவித்து
    சுண்டல் சுவைக்க எண்ணினேன்…

    அவனிடமிருந்து சுண்டல் பெற்று
    சட்டைப்பையில் ஒட்டியிருந்த
    கடைசி 10 ரூ நோட்டை நீட்ட
    கல்நெஞ்சக் காற்றதைக் களவாடிச் சென்றது.

    சுளித்த முகத்தோடு
    சுண்டல் திருப்ப முயன்றேன்…

    சிரித்த சிறுவனோ
    ‘ நீங்கள் கொடுத்ததைச்
    சரியாக வாங்காதது என் தவறு ‘
    என்று சொல்லி நகர்ந்தான்.

    அவிந்த சுண்டல்
    என் கண்ணீரில் மீண்டும் ஊறியது.

    நான் கடந்த என் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும்
    எனையே பொறுப்பேற்கச் செய்தான்.

    ‘வா’ என்ற ‌கடலலையோ
    என்னை வாழ வழியனுப்பி வைக்கிறது.

    எழுந்து நின்று எட்டிப் பார்த்தேன்
    சற்றுத் தொலைவில் அவன் –
    விற்கும் சுண்டலுக்கு காற்றை எதிர்த்தே
    காசு பெற்றான் கனகச்சிதமாக…

    இவ்வாறு
    ஒவ்வொரு விற்பனைக்கும்
    காற்றுடன் அகிம்சை கொண்டாடும் அவன்
    ஒரு கடற்கரை காந்திதான்

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 302: மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்

    இந்த வார வல்லமையாளர் என மருத்துவர் சௌமியா சுவாமிநாதனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. 1959-ல் சென்னையில் பிறந்த டாக்டர் சௌமியா, விவசாயத் துறையில் விஞ்ஞானி, பெரிய பொறுப்பில் இருந்த எம். எஸ். சுவாமிநாதனின் மகள் ஆவார். டாக்டர் சௌமியாவின் தாய் மீனாவின் தாய் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) என்னும் பெண் எழுத்தாளர். அகில உலக பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில், சென்னையைச் சார்ந்த தமிழ்ப் பெண் மரு. சௌமியா உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) தலைமை விஞ்ஞானையாகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி. அவரை வாழ்த்தி வரவேற்கிறோம். டாக்டர் சௌமியாவின் ட்விட்டர் பக்கம்: https://twitter.com/doctorsoumya

    பெண்கள் இந்தியாவின் அறிவியற் கழகங்களில் தலைவர்கள் ஆகவேண்டும் என்ற கொள்கை கொண்ட மரு. சௌமியா காசநோய் (TB), எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் பல்கலைக்கழக மருத்துவமனையில் பட்டங்கள் பெற்றவர். இப்பொழுது மரபணு போன்றவற்றின் மூலம், மலேரியா, டிபி, எய்ட்ஸ், புற்றுநோய், இதயநோய், … போன்றவற்றின் ஆராய்ச்சிகள் மிகுந்துவருகின்றன. ஸ்டெம்செல்  ஆய்வு, டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இவற்றுக்கு WHO நிறுவனம் நிதிநல்கையை அதிகப்படுத்தினால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் உடல்நலம் பேணுதற்கு உறுதுணையாக விரைவில் உதவிகள் வரும்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • (Peer Reviewed) பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்

    நடராஜன் ஸ்ரீதர், பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம்,
    முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை,
    ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி,
    தேவகோட்டை, தமிழ்நாடு
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.comrathinam.chandramohan@gmail.com

    ============================================================================

    பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்

    முன்னுரை

    நம் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தலையில் பொடுகு உருவாகுதல்.  இரண்டில் ஒருவருக்கு இப்பிரச்சினை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொடுகைப் பற்றிய அறிவியல் விளக்கத்தைஇக்கட்டுரையில் காணலாம்.

    பொடுகு – வரலாறு

    வெயில் காலமோ, மழைக் காலமோபெரும்பாலோருக்கு ஏற்படும் கஷ்டமான விஷயம் தலையில் பொடுகு என்பது உருவாவது. இதற்கான உண்மையான காரணம் என்ன? சற்று விரிவாகக் காண்போம். பொடுகு உருவாவது என்பது பலகோடி ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தே உயிரினங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  டைனோசர்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் மைக்கேல்பென்டன் மற்றும் அவரது குழு [1] கண்டறிந்ததகவலின் படி, பறவை வகை டைனோசர்கள் அவற்றின் தோலில் உதிரும் தன்மையான செல்களைக்கொண்டிருந்ததாகக்குறிப்பிடுகிறார். அதாவது அவற்றின் தோலில் உள்ள செல்கள் மனிதரின்செல்கள் உதிர்வது போல, காகிதத்தை உரிப்பது போல உதிர்வதாகக் குறிப்பிடுகிறார். எனவே உயிரினங்களின் வரலாற்றில் டைனோசர்களே பொடுகு உதிர்தல் பிரச்சனையைமுதன்முதலில் சந்தித்த விலங்கினமாகும்.

    பொடுகு – காரணம்

    அங்கு ஆரம்பித்த செல் உதிர்தல் என்பது இன்றுவரை தொடர்கிறது. மனிதனின் உடலில் செல்கள் தொடர்ச்சியாக உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் முதிர்ந்த செல்கள் உதிர்ந்துகொண்டே இருக்கின்றன. சராசரியாக ஒவ்வொரு நொடிக்கும் 500 புதிய தோல் செல்கள் மனிதனின் உடலில் உருவாகின்றன. புதிய செல்கள் உருவாக, உருவாக பழைய செல்கள் தோலின் மேல்புறம் நோக்கி நகர்கின்றன. அவ்வாறு  மேற்புறம் நகரும் செல்கள் கடினத்தன்மை பெறுகின்றன. அவ்வாறு கடினத்தன்மை பெறும் செல்கள் பிறகு ஒவ்வொன்றாக உதிர்கின்றன. ஒரு மனிதன் ஆயுட்காலத்தில் சராசரியாக 45 கிலோ எடை அளவு தோல் செல்கள், உடலிலிருந்து உதிர்கின்றனவாம். இவ்வாறு உதிரும் தோல் செல்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை; காரணம் அவை மிக மிக நுண்ணிய அளவில், கிட்டத்தட்ட மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும். சராசரியாக மனிதனின் தோல் செல்கள் 25 இலிருந்து 40 சதுர மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும்[2].

    இவ்வாறு தோலில் செல்கள் உதிர்வது அல்லது தோல் உதிர்வது சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், சிலருக்கு இவ்வாறு வெளிவரும் தோலானது அதிகப் பரப்பளவு கொண்டதாக  உதிர்கிறது. குறிப்பாகத் தலைப்பகுதியில் இந்நிகழ்வு அதிகமாகவே காணப்படுகிறது. இதுவே பொடுகு என அழைக்கப்படுகிறது.

    பொடுகின் நுண்ணுயிரி

    பொடுகைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நிகழ்ந்து வருகின்றன.  மலாசெய்ஸாகுளோபோஸா (malasseziaglobosa)[3] என்னும் பூஞ்சையானது தலையில் உள்ள தோல் செல்களில் வாழ்கிறது.

    படம்  1. மலாசெய்ஸாகுளோபோஸா , படம் உதவி: Wikimedia commons

    இப்பூஞ்சையின் வடிவமைப்பைப் படம் 1இல் காணலாம். இப்பூஞ்சையானது பொதுவாக அனைத்து விலங்கினங்களின் தோலின் மேற்பகுதியில் வளரும் ஒரு நுண்ணுயிரி ஆகும். இது பொதுவாக ஒவ்வாமையையும் இன்ன பிற தொற்றுக்களையும் ஏற்படுத்தக்கூடியது. இந்தப் பூஞ்சையில் ஆய்வு செய்வது ஆய்வாளர்களுக்குச் சற்று கடினமாகவே உள்ளது. காரணம் இப்பூஞ்சையானது ஆய்வகச் சூழலில் மெதுவாகவும், வெளியில் பிற உயிரினங்களில் தோல் பகுதியில் வேகமாகவும் வளர்ச்சி அடைகிறது.

    ஆரம்பத்தில் இவை தனித்தனியே உருவானாலும் இவை வளர வளர நெருக்கமாக அமைந்து ஒரு பெரும் புல்வெளியில் புற்கள் எவ்வாறு நெருக்கமாக வளர்கிறதோ, அவ்வாறு வளர்கின்றன.  இவ்வாறான பூஞ்சைகளை நாம் தனியே எடுத்து நுகர்ந்தால், அவை கிட்டத்தட்ட அது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பிரட் மற்றும் கேக்குகளில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் போன்ற மணத்தில் இருக்குமாம். நம் தலையில் முடியானது இருக்கும் வரை இப்பூஞ்சைகள் இருக்கும். தலையில் முடி இருக்கும் அனைவருக்கும் இவ்வகையான பூஞ்சைகள் தலையில் உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

    பூஞ்சைகளின் செயல்பாடு

    இப்பூஞ்சைகள்  அனைவரின் தலையிலும் உயிர் வாழ்ந்தாலும் ஏன் சிலருக்கு மட்டும் பொடுகு உருவாகிறது? நமது தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள், எண்ணெயை உற்பத்தி செய்து வெளியிடுகின்றன. இவ்வகையான பூஞ்சைகள், நமது தோலில் மற்றும் முடியில் உள்ள எண்ணெயை உணவாகக் கொள்கின்றன.  இப்பூஞ்சைகள் வெளிவிடும் என்சைம்கள், கொழுப்பு மூலக்கூறுகளை உடைக்கின்றன. இவ்வாறான செயல்முறைகளில் கொழுப்பு அமிலங்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் அமிலங்கள் தலையின் மேற்பகுதியை அடைகின்றன. அவ்வாறான செயல்முறையில் ஒலியிக் அமிலம் வெளியிடப்படுகிறது.

    இந்த அமிலம் தோலில் படும்போது, அரிப்பை ஏற்படுத்துகிறது. உடலில் இயற்கையாக அமைந்துள்ள எதிர்ப்பு ஆற்றலானது இச்செயல்முறைகளை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறது. இதன் காரணமாகப் புதிதாகச் செல்கள், வெகு வேகமாக உற்பத்தியாக ஆரம்பிக்கின்றன. பொதுவாக முதிர்ந்த செல்கள் உதிர, ஒரு மாதம் ஆகும் என்றால், எதிர்ப்பு ஆற்றல் போராடும் நிலையில் ஒரு வாரத்திலேயே செல்கள் உதிர ஆரம்பிக்கின்றன. இவ்வாறு அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு செல்கள் வேகமாக வரும் போது, அவற்றுக்கு இடையே உள்ள ஒட்டும் தன்மையை அவை இழப்பதில்லை. எனவே செல்கள் குழுக்களாக சேர்ந்து வெளியேறுகின்றன.

    இயற்கையாக இவ்வாறான உதிர்தல் என்பது தனித்தனியான செல்களாக இருக்கும். இச்செயலில் குழுவாக உதிர்வதால் அவை தோல் போன்ற அமைப்பிலேயே வெளிவரும். இவ்வாறு செல்கள் வேகமாக மற்றும் குழுக்களாக உதிர்வதையே பொடுகு என அழைக்கிறோம். பொடுகு பாதிக்கப்பட்ட தலைப்பகுதியில் சைட்டோகைனின் அதிகமாக இருப்பதையும், ஹிஸ்டமைன் எனும் அரிப்புக்குக்  காரணமான முக்கியப் பொருள் அதிகமாக இருப்பதையும், மேலும் தோலின் மேல்பகுதியில் ரத்தத்தில் புரதங்கள் அதிகமாக காணப்படுவதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொடுகு உற்பத்தியாவது மரபணுக்கள் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொடுகினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் செல்களையும், பாதிக்கப்படாத ஒருவரின் செல்களையும் எடுத்து ஆராயும் போது, கிட்டத்தட்ட நான்காயிரம் மரபணுக்கள் மாறி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பொடுகைத் தடுக்கும் வேதிப் பொருட்கள்

    இவற்றைச் சரிசெய்ய ஜிங்க் பைரிதியோன், செலினியம் சல்பைடு போன்ற மூலக்கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இம்மூலக்கூறுகள், பூஞ்சைகளின் உயிரியல் செயல்பாட்டைத் தடுக்கின்றன. சிலர்  பொடுகின் செயல்பாட்டைக் குறைக்க, எண்ணெய் அதிகமாக தலையில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை பொடுகின் விளைவை மேலும் அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.

    முடிவுரை

    miconazole மற்றும் ketokonazole போன்ற பொருட்கள் உடலின் செயல்பாட்டிற்கு காரணமான பூஞ்சைகளைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பொருட்கள் அடங்கியுள்ள ஷாம்புகள் மற்றும் கிரீம்கள் பொடுகைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஷாம்புகள் வாங்கும்போது, இதுபோன்ற பொருட்கள் அவற்றில் அடங்கியுள்ளனவா என்பதைப் பார்த்து, அவற்றைப் பயன்படுத்தினால் பொடுகின் செயல்பாடு குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேற்கோள்கள்

    1. McNamara, M. E., Zhang, F., Kearns, S. L., Orr, P. J., Toulouse, A., Foley, T., … & Xu, X. (2018). Fossilized skin reveals coevolution with feathers and metabolism in feathered dinosaurs and early birds. Nature communications, 9(1), 2072.
    2. Fleischmajer, R., Timpl, R., Tuderman, L., Raisher, L., Wiestner, M., Perlish, J. S., & Graves, P. N. (1981). Ultrastructural identification of extension aminopropeptides of type I and III collagens in human skin. Proceedings of the National Academy of Sciences, 78(12), 7360-7364.
    3. Crespo Erchiga, V., Ojeda Martos, A., Vera Casano, A., Crespo Erchiga, A., & Sanchez Fajardo, F. (2000). Malasseziaglobosa as the causative agent of pityriasisversicolor. British journal of dermatology, 143(4), 799-803

    ============================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை நன்று. ஒரே ஒரு திருத்தம். மைக்கேல் பென்டன் மற்றும் அவரது குழு [1] என்பதை மரியா மெக்னமாரா மற்றும் அவரது குழு என்று குறிப்பிடுவதே சரியான முறை. இது பொடுகு எவ்வாறு ஏற்படுகிறது என்ற அறிவியல் தகவல்களின் தொகுப்புக் கட்டுரையே தவிர, ஆய்வுக் கட்டுரை இல்லை. கட்டுரை ஆசிரியரின் ஆய்வு முடிவு என்று குறிப்பிட ஏதுமில்லை. ஆயினும், அறிவியல் தகவலைத் தமிழில் தருவதால், வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.

    ============================================================================

    Share
  • கல்வெட்டுகள் சொல்லும் கதைகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

     

    1) சதுர்வேதி மங்கலம் உருவான வகை பற்றிய கல்வெட்டு

    தமிழகத்தில் பண்டு நிலவிய நான்கு ஆட்சிஅதிகார அடுக்கில் முறையே முதல் அடுக்கில் வேந்தனும், இவனுக்கு அடங்கி இரண்டாம் அடுக்கில் மன்னனும், மன்னனுக்கு அடங்கி மூன்றாம் அடுக்கில் அரையன் என்ற அரசனும், அரசனுக்கு அடங்கி நான்காம் அதிகார அடுக்கில் நாட்டுக் கிழான் என்ற கிழார் கோனும் இருந்துள்ளனர். இப்படி உள்ள நான்கு அதிகார அடுக்கினர் தத்தம்முள் பெண் கொண்டும் கொடுத்தும் உறவு பேணி வந்தனர். ஆனால் இந்த வரலாற்று உண்மையை அறியாத மூடர் அரசர்களை அந்தப்புரத்திற்கும், போர்க்களத்திற்கும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சராக, அரசகுருவாக இருந்து பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று பொருத்தமற்ற கதையை கட்டி விடுகின்றனர்.

    இந்த மூன்றாம் அதிகார அடுக்கில் இருந்த அரசன் வாணகோவரையனால் 22 வீடுகளும், 1-1/2 புன்செய்யும், 128 நிலமும் கோவில் பணியாளருக்கு கொடுக்க முடிந்திருந்தது என்றால் ஒரு வேந்தனால் எந்த அளவு கொடுக்க முடிந்திருக்கும் என்ற கேள்விக்கு அதை விட 10-15 மடங்கு வசதிசெய்து தரமுடியும் என்று தெரிகின்றது. இதற்குச் சான்றாகப் பாண்டியன் சடையன் குலசேகரன் ஏற்படுத்திய உலகுடை முக்கோக்கிழானடி சதுர்வேதி மங்கலக் கல்வெட்டு திகழ்கின்றது. இக்கல்வெட்டு 250 பிராமணர்களுக்கு இந்த சதுர்வேதி மங்கலத்தை, குடியேற்ற ஊரைப் பாண்டிய வேந்தன் ஏற்படுத்தியதாகச் சொல்கின்றது. இக்கல்வெட்டு திருநெல்வேலி வட்டம் பாலாமடையில் உள்ள வேங்கடேசப் பொருமாள் கோயில் கருவறை தென் அதிட்டானத்தில் இடம் பெற்றுள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோனேரின்மை கொண்டான் உலகுடைய முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலத்து சபையார்க்கு, தங்களூர், அக்காழ்வி திருநாமத்தால் உலகுடைய முக்கோக்கிழானடி சதுர்வேதி மங்கலமென்று வேதமும் சாஸ்திரமும் போய் பூர் _ _ _ _
    2. தியாதர் களாயிருக்கும் சதுர்வேதி பட்டர்கள் இருநூற்றைம்பதின் மற்கு கீழ்க்களக் கூற்றத்து கற்குடியான சுத்தமல்லி நல்லூரும், படையெடுப்பான் குளமும், ஆலங்குளமு, பிரா
    3. யோடு குளமும், நீலன்கோன் குளமும் கீழ்வேம்பை நாட்டு ஆத்தி சிந்தாமணி நல்லூர்பால் சர்வதேவி விளாகமும் இடையாற்றூர் கள நிலம் முக்காலு ஒரு மாவரை வாகைக்குளம் புரவரி நல்லூரும் பாரி
    4. மங்கலமும் கொறக்கோட்டையான அபிமான சிவமங்கலமும் கீழேறங்குடியில் பள்ளிச்சந்த நீங்கியுள்ள குளமும் மேலேறங்குடியில் மானாபரணப் பாடியில் ஸ்ரீ குலைசேகர விண்ணகர் எம்பெருமான்
    5. தேவதானமும் பள்ளிச்சந்தமும் நீங்கியுள்ள நிலமும் திருக்களக் குறிச்சியும் கண்டநாட்டு மலையும் பதரூர்பால் திருவாலவாயுடையார் தேவ
    6. தானமான சுங்கந் தவிர்த்த விளாகமும் சிறுசெழிய னூரும் இவ்வூர்கள் முன்னுடையாரையும் பழம்பெயரையும் தவிந்து ஒரு நாட்டினுக் கீழ்களக் கூற்றமும் ஓரூரும் ஒரு புரவாக்கி அணிந்தானப்பனான வீரவினோத பல்லவரைய
    7. ன் பிரமதேயஞ் செய்யப் பெறவேணுமென்று ஐயந் முனையதரையர் நமக்குச் சொன்னமையில் அக்காழ்வி திருநாமத்தால் உலகுடை முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலமென்னும் பேரால் வேதமும் சாஸ்திரமும் போய் பூர்
    8. தியாதர் களாயிருக்கும் சதுர்வேதி பட்டர்கள் இருநூற்றைய்ம்பதின் மர்க்கு பிரமதேயமாக கீழ்க்களக் கூற்றத்து கற்குடியான சுத்தமல்லி நல்லூரும், படையெடுப்பான் குளமும், ஆலங்குளம், பிராயோடு குளமும், நீலங்கோன் குளமும்,
    9. கீழ்வேம்பை நாட்டு ஆத்தி சிந்தாமணி நல்லூற்பால் சர்வதேவி விளாகமும் இடையாற்றூர்களநில முக்காலே யொரு மாவரை வாகைக்குளம் புரவரி நல்லூரும் பாரிமங்கலமும் கொறகோட்டையான அபிமான சிவமங்கலமும் கீழேறங்குடியில் பள்ளிச் சந்தம் நீங்கியுள்ள நி
    10. லமும் மேலேறங்குடியில் மானாபரணப் பாடியில் ஸ்ரீ குலசேகர விண்ணகர் ஆழ்வார் தேவதானமும் பள்ளிச் சந்தமும் நீங்கியுள்ள நிலமும் திருக்களக் குறிச்சியும் கண்டநாட்டு மலையும் பதரூர் பால் தென் திருவாலவாயுடையார் தேவதானமான நிலம் ஏ
    11. ழுமாவரையும் திருமேற்றளிசயுடையார் தேவதானமான சுங்கந் தவித்த விளாகமும் சிறுசெழியனூரும் இவ்வூர்கள் மூன்றாவது பிசானமுதல் முன் உடையாரையும் பழம் பெயரையும் தவிர்த்து ஒரு நாடு கீழ்க்களக் கூற்றமும் ஓரூரும் ஒருபுரவு மாக்கி இவ்வூர்களில் கற்குடி
    12. யான சுத்தமல்லி நல்லூர் _ _ _ திருதேவதான _ _ _ நிலங்களால் _ _ _ லாம் _ _ _ எற்றைக்கு கடமை _ _ _

                 (கல்வெட்டு முற்றப் பெறவில்லை)

    சொற்பொருள்:

    சதுர்வேதி மங்கலம் – பிராமணர் குடியேற்ற ஊர்; பூர்தியாதர்கள் – வேதக் கல்வி நிறைவுசெய்தோர்; விளாகம் – சூழ்ந்த இடம்; பள்ளிச்சந்தம் – சமணபள்ளிக்கு வழங்கிய நிலதானம்

    கல்வெட்டு விளக்கம்: இன்னொரு கல்வெட்டு இதே செய்தியைத் தாங்கி  வருகின்றது அதில் சடையன் குலசேகரனைக் குறிப்பிடுவதை வைத்து கோனேரின்மை கொண்டான் > இரண்டாம் ராஜாதிராஜனுக்கு அடங்கி (1166 – 1178) ஆண்ட சடையன் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் (1162 – 1177)  ஆட்சி ஆண்டு குறிப்பிடாத இக்கல்வெட்டு தன் அக்காள் மேல் கொண்ட பாசத்தால், மதிப்பால் ஏற்கெனவே அரையோலையில் தந்தபடி ஓலையாக மட்டுமே இருப்பதை நடைமுறையில் செயற்படுத்த பிராமணரும், திருநெல்வேலி வட்டத்து உதயனேரி என்னும் பாலாமடை வேங்கடேசப் பெருமாள் கோயில் அறங்காவலர் (ஸ்ரீகாரியம்) அணிந்தானப்பனான வீரவினோத பல்லவரையன் சொன்னதால், ஐயன் முனையதரையர் பிரமதேயஞ் செய்யப் பெற வேண்டுமென்று சொன்னதால் வேத சாஸ்திரம் கற்று முழுத் தேர்ச்சி பெற்ற 250 பிராமணர்களுக்கு வரி நீக்கி சதுர்வேதி மங்கலத்து நிலத்தை தந்துள்ளான். இவர்கள் வாழும் அந்நிலத்தை சதுர்வேதி மங்கலம் ஆக்கி அதற்கு தன் அக்காள் பெயரைத் தேர்ந்து உலகுடைய முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலம் என்று பாண்டியன் பெயர் சூட்டியுள்ளான். இந்த சதுர்வேதி மங்கலத்து நிலப்பரப்பு ஏழு குளங்களை உள்ளடக்கியும், ஏற்கெனவே இருந்த ஆறு ஊர்களையும் அத்தோடு இரண்டு கோவில் விளாகங்களையும் ஒரு மலையையும் சமணர் கோவில் பெருமாள் கோவில் ஆகியவற்றின் இறையிலி நீங்கிய பள்ளிச் சந்தம் தேவதான நிலம் ஆகியவற்றையும் உட்கொண்டதாக ஆக்கி இவ்வூர்களின் பழைய பெயரையும் அதில் ஏற்கெனவே வாழ்வோரையும் தவிர்த்து, இதாவது, நீங்கலாக உருவாக்கப்பட்டது.

    சதுர்வேதி மங்கலம் என்றால் பிராமணக் குடியேற்ற ஊர். அந்த வகையில் இந்நிலப்பரப்பில் ஏற்கெனவே வீட்டோடு குடியிருந்த பிராமணர் நீங்கலாக புதிதாக 250 பிராமணருக்கு வீடும், கொல்லைப்புறமும் அதோடு விளை நிலங்களும் தந்திருக்க வேண்டும் என்று புரிகின்றது. ஆனால் கல்வெட்டின் அந்தப் பகுதி வெட்டப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வண்ணமாகத் தான் பிற சதுர்வேதி மங்கலங்கள் இதற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது. இவ்வாறு ஆட்சியாளர்கள் பண்டு பிராமணருக்கு பிரமதேயம் வழங்கிய காரணம் என்வென்றால் ஆட்சியாளர்கள் கோவில்களை தமக்கு சொந்தமாக எண்ணியதால் தம் கோவிற் பணியாளருக்கு இந்த சலுகைகளை செய்தனர் எனக் கொள்வதே சரியாகப் படுகின்றது. இப்படி பிராமணருக்கு தான் என்றில்லை வைத்தியருக்கும், பறைகொட்டும் உவச்சருக்கும், கோயில் கணக்கு எழுதுவோருக்கும் ஆட்சியாளர் வீடு, நிலம் ஆகியவற்றை தானம் கொடுத்து உள்ளனர்.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 7-8. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

     

    2) 26 உவச்சருக்கு நிலங்கொடுத்ததை காட்டும் பாளையங்கோட்டை கல்வெட்டு

    பாளையங்கோட்டையில் அமைந்த கோபாலசுவாமி கோயிலான வீரநாராயண பெருமாள் கோவிலில் திருப்பலி கொட்டவும், திருமஞ்சனம் கொட்டவும், திருப்பள்ளி எழுச்சியின் போது சாமம் கொட்டவும், காளம் ஊதவும் 26 உவச்சருக்கு முதலாம் இராசராசனின் 22 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி.1007) மகாசபையோரால் நிலதானம் வழங்கப்பட்டுள்ள செய்தி கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. திருப்புகழ்சேர் ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்(றிதல்) வென்றித் தண்டாற் கொண் _ _ _ ழில் எலா யா
    2. ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசு கொள் ஸ்ரீ கோராஜராஜ கேஸ _ _ _
    3. ண்டு 22 ஆவது  ஸ்ரீ ராஜராஜ தேவர் சி(று) த(ன)த்து பணிமகன் ஆதனூர் (பவை பெகறை வழி) _ _ _ _ _ _
    4. _ _ _ _ ப்ரஹ்மதேயம் (ஸ்ரீ) வல்லப மங்கலத்து (மஹாஸ)பை(யோம்). இவ்வூர் (ண) வீரநாராயண _ _ _ _ ளை மாடக்கு
    5. (பைக்) கூடி இருந்து ஸ்ரீ வீரநாராயண விண்ணகர் ஆள்வார்க்கு ஸ்ரீபலா கொட்டவும், திருமஞ்சனம் கொட்டவும், திருப்பள்ளி எ _ _ _(சாமங்) கொட்டவும் (உவற்ச) ஆள்
    6. த்(த)னுக்கு (ஆளுக்கு) நிலன் ஒரு (மாவு)மாக நிலம்பத்து மாவும் உவற்சர் (தலை) பறை கொட்டுவானொருவனுக்கு நில_ _ _
    7. நிலம் பன்னி ரெண்டும் (அட)ங்கும். காளம் ஊதுவார் நால்வர்க்கு ஆளாள் ஒரு மாவாக நிலன் நாலு(மாவும்) நிலன்_ _ _

    சொற்பொருள்:

    திண்திறல் – திரண்டுபெருகிய; வென்றி – வெற்றி; தண்டு- படை; சிறீதனம் (ஸ்ரீதனம்) – கருவூலம், treasury; மகாசபையோர் – கருவறைப் பட்டர்கள்; உவச்சர் – இசைக் கருவி முழக்குவோர்; ஆளாள் – ஒவ்வொரு ஆளுக்கும், per individual.

    கல்வெட்டு விளக்கம்:

    முதலாம் இராசரானின் மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகின்றது. அவனுடைய 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1007) அவனது கருவூலத்துப் பணிமகன் ஆதனூரன் கொண்டு வந்து கொடுத்த ஆணைப்படி இற்றைய பாளையங் கோட்டையான அற்றைய வல்லபமங்கலத்து பெருமாள் கோவில் கருவறைப் பிராமணர்கள் ஒன்றுகூடி வீரநாராயண விண்ணகர் பெருமாளுக்கு திருப்பலியின் போது பறைகொட்டவும், திருமஞ்சனத்தின் போது பறை கொட்டவும், திருப்பள்ளி எழுச்சியின் போது சாமம் கொட்டவும் ஏற்பாடான உவச்சர் ஆள் ஒருவருக்கு இதாவது, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு மா என பத்து மாவும், தலைப் பறை கொட்டுவார் ஒவ்வொருவருக்குமாக நிலம் பன்னிரண்டும், காளம் ஊதும் நால்வருக்கு ஆளாளுக்கு ஒரு மா என நாலு மாவும் நிலம் கொடுக்கப்படுகின்றது. ஆக 26 உவச்சர் நிலம் பெற்றனர் என்று தெரிகின்றது. கல்வெட்டு இதன்பின் சிதைந்துள்ளது. எனவே இதற்குமேல் என்ன செய்தி உள்ளது என்று அறிய முடியவில்லை. அதில் நிலஅளவும் நிலம் அமைந்த இடமும் குறிக்கப் பெற்றிருக்கலாம். உவச்சர்களே 26 பேர் என்றால் கோயில் பிராமணர், கணக்கு எழுதுவோர், கோயில் மருத்துவர், தேவரடியார், கோயில் இடையர் என பலரையும் உள்ளடக்கினால் தொகை 100க்கு மேல் செல்லும். இதிலிருந்து ஒரு கோயிலை நம்பி பல குடும்பங்கள் பிழைத்தன எனத் தெரிகின்றது.  காட்டை அழித்து ஒரு கோயில் ஊரை அமைத்தால் இறையிலி நிலம் போக எஞ்சிய நிலங்கள் ஆட்சியாளருக்கு அதிக வரி வருவாயைத் தேடித் தந்தன என்பதை உணரலாம். கோயில் ஊர்கள் உருவாகி இராவிட்டால் இந்த அளவிற்கு வரிவருவாய் வந்திருக்காது.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.22. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

     

    3) கணக்கன் நிலதானம் பெற்றதைக் காட்டும் பாளையங் கோட்டைக் கல்வெட்டு

    பாளையங்கோட்டையில் அமைந்த கோபாலசுவாமி பெருமாள் கோவில் தென்புறச் சுவர் கல்வெட்டு கி.பி. 1526 இல் வேணாட்டு வேந்தரின் ஆட்சிக்கு இப்பகுதி உள்ளடங்கி இருந்தபோது கோயில் நிர்வாகக் கணக்காக கணக்கு எழுதும் குமரன் ஈசுவரனுக்கு நிலதானம் கொடுத்த செய்தியைத் தருகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸுபமஸ்து அருளில் செயல் கொல்லம் 700 1 (701) ஆண்டு பங்குனி மாதம் 20 8 (28) நாள் ஸ்ரீவல்லவ
    2. ன் மங்கலத்து நாயனார் அழகிய மன்னார் கோவிலுக்கு ஸ்ரீ விருந்தாவன ஆழ்வா
    3. ர் கோயிலுக்கும் நயினார் வேத நாயகர் பெருமாள் கோயிலுக்கும் இக்கோயிலிற்
    4. கைக்கோளரில் மூன்றாங்குடி குமரன் ஈச்சுவரனுக்கும் காணியாட்சை பண்டா
    5. ரக் கணக்காகக் குடுப்பித்த தானக் கணக்கும் எழுதிக் கொண்டு பழைய படியே  உடை
    6. மையும் பிரசாதமும் பற்றிக்கொண்டு சந்திராதித்தவல் சந்ததிப் பிரவேசமே க
    7. ல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கணக்கு எழுதி பழையபடி உடமையும்
    8. ப்ரசாதமும் பற்றிக் கொண்டு இன்னாள் முதல் 700 1 (701) ஆண்டு பங்குனி மாஸம் 20 8 (28) க
    9. ற்பித்த அளவுக்குத் தானம் இன்னாள் முதல் இத்தரகு பிடிபாடாக இவ்வ
    10. கைப் படியே கணக்கு எழுதி உடமையும் பற்றிக் கொள்ளும் படியு
    11. ம் பாற்க இப்படிக்கு இராமன் இராமன் எழுத்து.

    சொற்பொருள்:

    கொல்லம் – கி.பி. 875 இல் தொடங்கிய சேரநாட்டு ஆண்டுக் கணக்கு; அழகிய மன்னார் – இராசகோபாலன் என்பதன் தமிழ் வடிவம்; விருந்தாவன ஆழ்வார் –கிருஷ்ணன்;  கைக்கோளர் – செங்குந்தர்; மூன்றாங்குடி – மூன்றாம் தலைமுறை; காணியாட்சை – விளைநில உரிமை; உடமை – வீடு, வீட்டை ஒட்டிய நிலம், கிணறு, தோட்டம், தோப்பு உள்ளிட்டவை; சந்ததிப் பிரவேசம் – பிறங்கடை வழிவழியாகத் தொடர்வதாக; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.

    கல்வெட்டு விளக்கம்:

    ஆய்குலத்து வேணாட்டு வேந்தர் வீரரவி கேரளவர்ம குலசேகர பெருமாள் (1504-1528) ஆண்ட காலத்தே திருநெல்வேலி வேணாட்டு ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கொல்லம் ஆண்டு 701 (கி.பி.1526) பங்குனி மாதம் 28 நாளில் எழுதப்பட்ட இந்த ஓலை ஆணை வல்லப மங்கலத்து நாயனாரான இராசகோபாலர் கோவில், கிருஷ்ணன் கோவில், மூலவர் வேதநாயகப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் இவற்றில் கணக்கனாகப் பணிபுரியும் கைக்கோளன் குமரன் ஈசுவரனுக்கும் காணிஉரிமையாக நிலம் தானமாகத் தரப்பட்டது. இந்த தானத்தைப் பெற்றுக் கொண்ட குமரன் ஈசுவரன் பழையபடியே கோயிலில் உடைமையும் மூன்றுகால பூசையில் வரும் பிரசாதமும் பெற்றக் கொண்டு நிலவும்ஞாயிறும் உள்ள வரை தலைமுறை தலைமுறையாக வேலையைச் செய்துவரலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. இதைக் கல்லிலும் செப்பிலும் வெட்டி வைத்து கொல்லம் 701 (கி.பி. 1526) 28ஆம் நாள் முதல் சொல்லிய அளவிற்கு தானம் பற்றிய கணக்கு எழுதி பழையபடியே கோயிற் கணக்கு எழுதிக்கொண்டு உடமையும் பிரசாதமும் பெற்று வருக என்று இராமன் இராமன் ஓலை ஆவணம் எழுதினார். கைக்கோளர் பல்லவப் பேரரசு காலத்திலேயே பாண்டிய நாட்டில் படையாள்களாக குடியேறிவிட்டனர். பல்லவர் பாண்டியரோடு சதையும் குருதியுமாக சேர்ந்துவிட்டனர். இக்கல்வெட்டு மூலம் பிராமணர் மட்டும் அல்லாது பிற கோவில் பணியாளரும் நிலதானம் பெற்ற செய்தியை அறிய முடிகின்றது.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.27. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2017/05/mannar-rajagopalaswamy-temple-Palayamkottai.html

    https://www.alltravels.com/india/tamil-nadu/palamadai/photos/current-photo-83074720

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

    குறள் 191:

    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்

    கேக்கவங்க வெறுக்குத மாதிரி ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லுதவன் எல்லாராலையும் எளக்காரமா நெனைக்கப்படுவான்.

    குறள் 192:

    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கட் செய்தலிற் றீது

    பலபேருக்கு முன்ன ஒதவாக்கர பேச்சு பேசுதது சேக்காளிக்கு கெட்டது செய்யுததக் காட்டிலும் கொடும.

    குறள் 193:

    நயனில னென்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை

    உப்புபெறாத விசயத்த விரிச்சு பேசினாம்னா அவன ஒதவாக்கரை னு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 194:

    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து

    ஒண்ணுத்துக்கும் ஒதவாத கொணங்கெட்ட சொல்ல பல பேர்கிட்ட சொல்லுதவனுக்கு அந்த சொல்லே நியாயங்கெட்ட வழியகாட்டி நல்ல கொணத்த கெடுத்து உட்ரும்.

    குறள் 195:

    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்

    நல்ல கொணம் உள்ளவங்க ஒதவாத சொல்ல சொன்னாங்கன்னா அவங்களோட பெருமயும் புகழும் இல்லாம போயிடும்.

    குறள் 196:

    பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
    மக்கட் பதடி யெனல்

    ஒதவாத சொல்ல பலகாலம் சொல்லுதவன மனுசன்னு சொல்லுததவிட பதர் னு சொல்லணும்.

    குறள் 197:

    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று

    படிச்ச பெருமக்க அறமில்லாத சொல்லக்கூட சொல்லலாம். ஆனா ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லாம இருக்குதது நல்லது.

    குறள் 198:

    அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பய னில்லாத சொல்

    அரும்பயன்களை ஆஞ்சு அறியும் திறம உள்ளவங்க ஒதவாத சொல்ல சொல்லமாட்டாங்க. .

    குறள் 199:

    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.

    களங்கமில்லாத புத்திசாலிங்க நெனப்பு மறந்து கூட ஒதவாத சொல்ல சொல்ல மாட்டாங்க.

    குறள் 200:

    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்

    சொற்கள்ல வாழ்க்கைக்கு ஒதவுதத மட்டும் சொல்லணும். ஒதவாதத சொல்லக்கூடாது.

    Share
  • தேடல்

    புலவர் இரா.முரளி கிருட்டினன்

    காட்டருவி நான்
    கட்டுப்பாடில்லாமல் செல்ல
    அனுமதியில்லை…

    வேலையில்லாதவன்
    பகலைப் போல
    நோயாளியின்
    இரவைப்போல
    நீண்டு கொண்டே இருக்கிறது
    என் தேடல்…

    எங்கே அறிவு
    எங்கே ஆனந்தம்
    எங்கே பேரானந்தம்
    எங்கே மகிழ்ச்சி
    எங்கே துன்பம்
    அலைகடலில்ஆர்ப்பரிக்கும்
    அலையைப் போல்
    அயராமல் தேடுகிறேன்…

    எங்கெங்கு காணினும் சக்திடா
    சுப்புரத்தினம்
    எங்கிருக்கிறது என் சக்தி…

    கரைகளைத் தொடும் நுரைகளில்
    கானம் பாடும் மூங்கிலில்
    பசித்து அழும் குழந்தையில்
    பகுத்தறிவு தராத கல்வியில்
    எங்கிருக்கிறது என் சக்தி…

    அம்மாவின் அன்பில்
    காதலின் அரவணைப்பில்
    தோழனின் தோள்களில்
    எங்கிருக்கிறது என் சக்தி

    ஆணவத்தின் அடி நாதத்தில்
    அன்பின் இறுதியில்
    நீரின் தாகத்தில்
    நிழலின் அருமையில்
    வாடைக்கு அஞ்சிய
    நள்ளிரவில்
    எங்கிருக்கிறது…

    இரவின் தனிமையில்
    பகலின் பேரிரைச்சலில்
    எங்கிருக்கிறது
    புலிக்கு பயந்த புள்ளிமானாய்
    நிழலுக்குப் பயந்த-அந்த
    நீள் இரவில்
    எங்கிருக்கிறது…
    என் சக்தி…..
    பகலவன் அல்ல நான்
    பால் நிலா தந்த
    பனித்துளியை
    விழுங்கிச் செல்ல…..

    தேடிக்கொண்டே இருக்கிறேன்
    தேடலின் எல்லைவரை
    எங்கிருக்கிறது
    என் சக்தி………..?

    புலவர் இரா.முரளி கிருட்டினன்
    உதவிப்பேராசிரியர்
    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
    திருச்சிராப்பள்ளி-2

    Share
  • இப்படியும் ஆசிரியர்கள்!

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் (149)

    அள்ள அள்ளக் குறையாதது

    கல்வியும் அனுபவங்களும் நம் அறிவைப் பெருக்குகின்றன. அறிவு சக்தியை அளிக்கிறது.

    `செல்வம்’ என்று கல்வி குறிப்பிடப்பட்டாலும், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு வேற்றுமை: அள்ள அள்ளக் குறையாதது கல்வி.

    ஆசிரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!

    சிறு வயதில், `இந்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு புத்திசாலிகள்! எத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!’ என்று ஒருவரிடம் ஒருவர் கூறி, பிரமித்து இருப்போம்.

    (இத்தொழிலுக்கு வந்தபின்தான் தெரிந்தது, ஒவ்வொரு நாளும் கற்பிக்கும் பாடத்தை முதல்நாள் கண்விழித்து, நாமே கற்க வேண்டியிருக்கும் என்பது! பல வருடங்கள் தொடர்ந்து ஒரே பாடத்தை கற்பித்தால் மட்டும்தான் அது நினைவில் நிற்கும். ஒரு விஷயத்தை நன்றாகக் கற்றுக்கொண்டால்தானே அப்படிப் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்க முடியும்?)

    என்னதான் தம் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறர் உற்றுக் கவனிப்பது ஆசிரியர்களின் பெருமையைக் கூட்டுகிறது என்றாலும், அவர்கள் மேலானவர்கள் என்றாகாது. தாம் பெற்ற அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு மாணவனுக்கும் தெரிந்திருந்தால், அவன் ஏன் கற்க வருகிறான்?

    ஆசிரியர்கள் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பது எவர் நினைவிலும் வெகு காலம் தங்குவதில்லை. ஆனால், அவர்களது பண்பும் அணுகுமுறையும் மறக்கவே மறக்காது.

    கதை

    என் சக ஆசிரியர் ஒருவர் பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சிக்கு மாணவர்களை அதிசயிக்க வைக்கவேண்டுமென்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டார்.

    அவரது முயற்சியைப் பார்த்துவிட்டு, என்னிடம் ஓடி வந்தார்கள் சில மாணவர்கள். “டீச்சர்! ஸார் ஒரு ராக்கெட் பண்ணியிருக்கார். அது அவ்வளவு ஜோரா மேலே போச்சு, தெரியுமா?”

    அவர்களுடைய ஆர்வத்தை ரசித்து, “அவரிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளலாமே!” என்றேன்.

    அவர்கள் முகம் உடனே வாடியது. “நாங்கள் கேட்டோம். சொல்லிக்கொடுக்க மறுத்துவிட்டார்!”

    தான் மாணவர்களைவிட உயர்வு என்று காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்!

    அவருக்கு நேர் எதிரிடை என் இசை குரு, எஸ்.கல்யாணராமன்.

    ஒரு நாள் பாட்டு சொல்லிக்கொடுக்கையில், ஏதோ ஒரு ராகத்தில் மிக வேகமாக, அவருக்கே உரிய பிருகாக்களுடன் ஆலாபனை செய்து காட்டியபோது, அயர்ந்துபோனேன். உடல் பின்னோக்கிப் போயிற்று. `நம்மால் முடியுமா?’ என்ற பயம்தான் எழுந்தது.

    அவர் முகம் பெருமையுடன் விகசிக்கவில்லை. “உன்னை பிரமிக்க வைக்க நான் இப்படிப் பாடிக் காட்டவில்லை. நீயும் இப்படிப் பாடவேண்டும் என்பதற்காகத்தான்! கற்றுக்கொள்!” என்று சீறினார்.

    நல்ல ஆசிரியரானவர் மாணவர்கள் தம்மை மெச்ச வேண்டும் என்று எதையும் செய்யமாட்டார். மாணவர்களின் அறிவைப் பெருக்குவதுதான் அவரது லட்சியமாக அமையும்.

    இந்த நோக்குடன் அவரவருக்குத் தெரிந்த முறையைப் பயன்படுத்துவார்கள். (முன்பெல்லாம் பெண்களைத் திட்டியோ, ஆண்பிள்ளைகளானால் அடித்தாலோதான் விரைவாகக் கற்பார்கள் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே பயந்த சுபாவம் உடைய ஒரு பையனுக்கு வன்முறையால் படித்ததும் மறந்துவிடும் என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை).

    பிறருக்குக் கற்பிப்பது என்றால் நம் நண்பர்களிடையே பகிர்வதாகவும் இருக்கலாம். இப்படி நினைத்துத்தான் நான் பலருக்கும் என்னாலான உதவி செய்வேன். இது பலருக்கும் புரிவதில்லை.

    கதை

    பூகோள ஆசிரியையான ரோஸ் சான் என்னிடம் அடிக்கடி இந்தியாவைப்பற்றிய சந்தேகம் கேட்பாள். எனக்குத் தெரிந்ததை விளக்குவேன். நான் சொல்லச் சொல்லத் துருவுவாள்.

    ஒரு முறை, ஏதோ புத்தகத்தில் எழுதியிருந்ததைப்பற்றி அவள் யாரிடமோ கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

    தெரியாத்தனமாக, “அந்த புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டுகிறாயா?” என்று நான் கேட்டுவிட்டேன்.

    சற்றும் யோசியாது, “அது மூன்றே வெள்ளிதான்!” என்றாள் ஏளனமாக. `நீயே வாங்கிக்கொள்ள என்ன கேடு!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது.

    நொந்துபோனேன்.

    சுமார் ஓராண்டு காலமாக நான் கூறிவந்ததை பல புத்தகங்களைத் தேடிப் படித்து அவள் தெரிந்து கொண்டிருக்கலாம். சுலபமான வழி என்று என்னை அணுகியிருக்கிறாள்!

    `இது என்னுடையது. உன்னுடையதையும் எனக்குக் கொடு!’ என்பதுபோல் சுயநலத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் வேகமாக உயரக்கூடும். இருப்பினும், எப்போதும் பிறரை மிஞ்சவேண்டும், அதனால் நம் அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். மகிழ்ச்சியும் கிட்டாது.

    சில நாட்களுக்குப்பின், என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தாள் ரோஸ் சான்.

    “எனக்குத் தெரியாது!” என்றேன், விறைப்பாக.

    வெவ்வேறு விதமாகக் கேட்டுப்பார்த்தாள். நான் பிடிகொடுக்கவில்லை.

    எல்லாருக்கும் உதவி செய்து நம் சக்தியைச் செலவழிப்பதைவிட தமக்குத்தாமே உதவி செய்துகொள்ள இயலாதவர்களுக்கு மட்டும் உதவி செய்தால் — அவர்கள் நன்றியுடன் இருக்கிறார்களோ, இல்லையோ — பலனடைவார்களே என்று தோன்றிப்போயிற்று.

    எழுத்தாளருக்கும் ஆசிரியருக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன:

    1 எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருந்தால், அவர் சுமாரானவர்தான். இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில், “Telling” என்பார்கள். மாணவரோ, வாசகரோ, சிலவற்றை அவர் தாமே புரிந்துகொள்ள வழிவகுக்க வேண்டும்.

    2 `இப்படிச் செய்யுங்கள்!’ என்று அதிகாரம் செய்பவர் மிகச் சுமார். (ஒரு கதையில், `நீங்களாவது இதிலிருந்து நீதி கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதுவது சிறுபிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகத்தில் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். பொழுதுபோக்காக நாம் படிப்பவைகளில் இம்முறை அலுப்பைத்தான் தரும்).

    3 `இதைப்பற்றி மேலும் அறியவேண்டும்!’ என்ற உந்துதலை அளிப்பவர் சிறந்தவர். ஆசிரியர் அருகில் இல்லாவிட்டாலும். அவர் மாணவனுடனேயே போட்டியா!

    கற்றுக்கொடுத்ததை சிறப்பாகச் செய்யும் தன்னம்பிக்கையை அளிப்பவர் அவர்.

    தட்டிக்கொடுக்கலாமே!

    அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு கற்றுக்கொடுப்பது எளிது. வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடப்பது அவனுக்கு இளம்வயதிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. அவனிடம் பெற்றோர் காட்டிய அனுசரணையான போக்கால் அவனும் அப்படியே நடக்கிறான்.

    அவனுக்கு நேர் எதிரிடையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைத் திட்டினாலோ, அடித்தாலோ அவர்களை நல்வழிப்படுத்த முடியாது. ஏனெனில், அது அவர்களுக்குப் பழகிப்போன சமாசாரம். நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

    அன்பும் கண்டிப்பும் காட்டினால், `இந்த ஆசிரியருக்குத்தான் நம்மேல்தான் எவ்வளவு அக்கறை!’ என்று நெகிழ்ந்து போவார்கள்.

    மட்டம் தட்டுவதைவிட தட்டிக்கொடுப்பது இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டவல்லது.

    போட்டி மனப்பான்மை

    விழாக்காலங்களில், ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று நாட்டியப்பள்ளிகள் கலந்துகொள்ள நேரும்போது, `என் மாணவிகள்தாம் முதலில் ஆடவேண்டும்!’ என்று ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தி, சண்டையும் பிடிக்கும் ஆசிரியைகளை அடிக்கடி பார்க்கிறேன்.

    பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் இளவயதினர் தம் பண்பைக் கற்கிறார்கள். `நம்மை முன்னிருத்திக்கொள்ள வேண்டும்!’ என்பது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அளிக்கும் தவறான பாடம். மாணவிகளும் கர்வத்துடன் நடக்கத் தலைப்படுகிறார்கள்.

    “என் மாணவன் என்னைவிட நன்றாக வாசித்துவிட்டான். அவனை இன்னொருமுறை எல்லாவற்றையும் வாசிக்கவைத்தேன்!” ஓர் இசைப்பதிவுக்குப்பின் ஆசிரியர் ஒருவர் என்னிடம் அதிர்ச்சியுடன் கூறினார்.

    மாணவனுடனேயே போட்டியா!

    சீடன் குருவை மிஞ்சினால் பெருமை அடைந்து பாராட்ட வேண்டாமா?

    இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் இறைவனைத் துதிக்கும் வழிகள் என்பதை இப்போது பலரும் உணராமல் போனது காலத்தின் கோலமா?

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றம் சிறப்புரை & தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா

    -மு.இளங்கோவன்

    புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் சிறப்புரையும், தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழாவும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் (09.03.2019) நடைபெற்றது. ஆய்வறிஞர் கு. சிவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் எஸ். ஆரோக்கியநாதன் கலந்துகொண்டு மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தெ.முருகசாமி சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்த அறிவியல் அறிஞர் நா.க.நிதி அவர்களுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருதினை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

    தூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப.பத்மநாபன் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரையாற்றினார். புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    படத்தில்: புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், அமெரிக்கா நாட்டில் வாழும் அறிவியல் அறிஞர் நா.க.நிதிக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது வழங்கிப் பாராட்டுதல்.அருகில் பேராசிரியர்கள் மு.இளங்கோவன், எஸ்.ஆரோக்கியநாதன், கு.சிவமணி.

    Share
  • ஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா

    ஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது

    +++++++++++++++++

    1. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

    2. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

    3. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

    4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html

    5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

    6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv

    6(a)  https://spacenews.com/nasa-gives-go-ahead-for-spacex-commercial-crew-test-flight/

    7. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

    8. http://spaceref.com/missions-and-programs/nasa/spacex-launches-first-nasa-commercial-crew-demonstration-mission.html

    9. http://spaceref.com/international-space-station/space-station-crew-opens-hatch-to-crew-dragon-after-docking.html

    10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html

    11. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

    12. https://www.bbc.com/news/science-environment-47453951

    13. https://www.bbc.com/news/science-environment-47477617

    14. https://www.spacex.com/news/2013/03/31/reusability-key-making-human-life-multi-planetary

     

    ஸ்பேஸ் X டிராகன் விண்சிமிழ் முதன்முதல் விண் சந்திப்பு நிகழ்த்தி புவிக்கு மீண்டது.

    2019 மார்ச் 8 இல் அமெரிக்காவின் முதல் தனித்துறை விண்சிமிழ் முதன்முதல் அகில தேச நிலையச் சந்திப்பை [ இணைப்பு + நீக்கம் ] [Space Station Docking] நிகழ்த்தி, புவிச் சூழ்வெளி வெப்பத்தைக் கடந்து, மீள் நுழைவு விபத்தின்றிப் பாது காப்பாய் அடலாண்டிக் கடலில் நான்கு பாராச்சூட் குடைகள் தாங்க வந்து இறங்கியது.  இம்முயற்சி அமெரிக்கத் தனியார் துறை நுட்பச் செல்வந்தர் இலான் மஸ்க் [Elon Musk]  புரிந்த பெரும் விண்வெளி  வெற்றிச் சாதனையாகக் கருதப் படுகிறது.  மனிதரற்ற விண்சிமிழில் நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள், உணவுப் பண்டங்கள் மட்டுமே இருந்தன.  புவி நோக்கி மீளும் போது, ஒலி மிஞ்சிய வேகத்தில் இறங்கிய விண்சிமிழுக்குப் போதிய வெப்பக் கவசம் பூசப்பட்டதால் “மீள் நுழைவு”  [Re-Entry] இயக்கத்தில் விபத்து எதுவும் நேரவில்லை.  டிராகன் விண்சிமிழ் பிளாரிடாவிலிருந்து 270 மைல் [450 கி.மீ] தூரத்தில் கடல் மீது மெதுவாக இறங்கியது.

    டிராகன் விண்சிமிழ் விளக்கம்

    2011 ஆண்டுவரை  அகிலதேச விண்வெளி நிலையச் சந்திப்பு செய்து, விமானிகளையும் உணவுப் பண்டங்களையும் ஏற்றி இறக்கி வந்தவை  விண்வெளி மீள்கப்பல்கள்  [Space Shuttles].  குறைபாடுள்ள மீள்கப்பல்கள் இரண்டு பழுதடைந்து இருமுறை விபத்துகள் நேர்ந்து பல விமானிகள் உயிரிழந்தார்.  அதனால் விண்வெளி மீள்கப்பல்கள் ஓய்வு பெற்று நிறுத்தம் அடைந்தன.  எட்டு ஆண்டுகள் கழிந்து, இப்போது தனியார் நிறுவனம் இலான் மஸ்க் தலைமையில் ஸ்பேஸ்-X அசுர ராக்கெட் பயிற்சி மூலம்  அமெரிக்கா முதன்முதல்  அகில்தேச விண்வெளி நிலையச் சந்திப்பு, ரஷ்யன் சோயஸ் ராக்கெட்  பயன்பாட்டை நிறுத்தி உள்ளது.  ரஷ்யாக்கு ஒருமுறை, ஒருவர் பயணச் சந்திப்புக்கு 80 மில்லியன் டாலர் அமெரிக்கா  தரவேண்டும்.  2019 ஜூலையில் டிராகன் -2 விண்சிமிழ் இரண்டு அமெரிக்க விமானிகளை  [ Robert Behnken & Douglas Hurley ] அகிலதேச விண்வெளி நிலையத்துக்கு  ஏந்திச் செல்லும்.

     American Astronauts Robert Behnken & Douglas Hurley

    Linking Space Station

    Space Shuttle Docking with International Space Station

    [ Space Shuttles Shut down in July 2011 ]

    Hubble Telescope Launching

    Space Shuttle Launches Hubble Telescope

    ++++++++

    அண்டவெளி வேட்கையில் அமெரிக்கத் திட்டங்களின் இரண்டாம் கட்டம்!

    முதற் கட்டத்தில் விண்வெளி விமானி ஒருவர் ஓட்டும் மெர்குறித் [Project Mercury] திட்டம், அடுத்து இருவர் இயக்கும் ஜெமினித் [Project Gemini] திட்டம், மூன்றாவது மூவர் செல்லும் அபோலோ [Project Apollo] போன்ற திட்டங்கள் பல வெற்றிகரமாய் நிறைவேறிச் சந்திரன், செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை ஆராய்ந்த பிறகு, நாசா [NASA] விண்வெளிப் படையெடுப்பின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தது. இரண்டாம் கட்டத்தில் ஏழு நபர் பயணம் செய்யும் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle, Columbia] 1970 இல் உதயமாகி, 1977 இல் உருவாகி, 1981 ஏப்ரல் 12 ஆம் தேதி அதைப் பயிற்சிப் பயணத்திற்கு அனுப்பி, புதிய விண்வெளி யுகத்தை நாசா திறந்து வைத்தது! கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்!

    மீள்கப்பல் ராக்கெட் முதுகில் ஏற்றப் பட்டு, பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வந்து, பணி முடிந்தபின் பூமிக்குச் சாதாரண ஊர்தி போல் மீளும் ஓர் சுமைதாங்கிக் கப்பல் [Cargo Ship]. மீண்டும் மீண்டும் பயன்படும் விண்வெளிப் பணிகளுக்காகவே, மீள்கப்பல் உருவாகி விருத்தி செய்யப் பட்டது. முதலில் தோன்றிய மெர்குரி, ஜெமினி, அபோலோ ஆகிய விண்சிமிழ்கள் யாவும் ஒருமுறை பயன்படுத்திய பின்பு உபயோகம் இல்லாமல், பின்னர் பொருட் காட்சியகத்தில் சரித்திர நினைவுச் சின்னங்களாய் ஓய்வு பெற்றன!

    விண்வெளி மீள்கப்பல் திட்டத்தின் குறிக்கோள்கள்

    விண்வெளி மீள்கப்பலின் சுமைதாங்கி அறை மிகவும் அகண்டது! அதில் ஐந்து ஆஃப்ரிக்க யானைகளை ஏற்றிக் கொண்டு விடலாம்! விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் செல்வது, அண்டவெளி நிலையத்திற்குப் [Space Station] பண்டங்கள் கொண்டு செல்வது, ஆய்வு செய்யும் பயணிகளை ஏற்றிச் செல்வது, பூமிச் சுழல்வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் தொலை நோக்கியைச் [Hubble Space Telescope] செப்பனிடுவது அல்லது புதுப்பிப்பது, செயலற்ற துணைக் கோள்களைக் [Satellites] கைப்பற்றிப் பூமிக்குக் கொண்டு வருவது, சுற்றி வரும் துணைக் கோள்களைப் பராமரிப்பது, அண்டவெளி ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் நடத்துவது, அரசாங்கப் படைத்துறையின் உளவுப் பணிகளுக்கு [Military Missions] உதவுவது ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

    Space Shuttle -6திட்டப்படிக் கொலம்பியா [Columbia], சாலஞ்சர் [Challenger], டிஸ்கவரி [Discovery], அட்லாண்டிஸ் [Atlantis], என்னும் நான்கு மீள்கப்பல்கள் உருவாக்கப் பட்டு அண்டவெளியில் யாத்திரை செய்து வருகின்றன. 1980-1990 ஆண்டுகளுக் குள் இவை குறைந்தது ஆண்டுக்கு 50 பயணங்கள் வீதம் பணி புரியத் திட்டங்கள்! இவற்றில் சாலஞ்சர் 1986 இல் ஏவுதளத்தில் புறப்பட்டு ஏறும் போது வெடித்து விபத்துக்குள்ளாகி [Challenger Disaster] உள்ளிருந்த ஏழு விண்வெளி நிபுணர்களும் உயிரோடு வெந்து சாம்பலாயினர்! பிறகு சால்ஞ்சர் இடத்தைப் பூர்த்தி செய்ய எண்டவர் [Endeavour] மீள்கப்பல் அமைக்கப் பட்டது.

    விண்வெளி மீள்கப்பல் அமைப்பாடு சமயத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறியியற் துறை நுணுக்கங்களைப் பரிமாறிக் கொண்டன என்பது மெச்சத் தகுந்த நிகழ்ச்சி! ரஷ்யாவில் 1978 இல் உதயமாகி, 1987 இல் மனிதரற்றுச் சுயக் கட்டுப்பாட்டில் ஏவப்பட்டு, 155 மைல் உச்சி வீதியில் சுற்றி 3:25 மணி நேரம் பயிற்சிப் பயணம் செய்து, வெற்றிகரமாய்ப் பூமிக்கு மீண்ட புரான் விண்வெளி மீள்கப்பல் [Buran Space Shuttle] ஏதோ ஒரு காரணத்தால் 1993 இல் தடைபட்டுப் பிறகு பயன்படுத்தப் படாமல் போனது! ஆனால் அமெரிக்கா தான் முதன் முதல் ஆக்கிய கொலம்பியா மீள்கப்பலை, ரஷ்யாவின் புரான் மீள்கப்பலின் பிரதியாக உருவாக்கிச் சில வேறுபாடுகளுடன் மாற்றி அமைத்தது!  ஐந்து அண்டவெளி மீள் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் இரண்டு விபத்துக்குள்ளாகி, அனைத்து விமானிகளும் இறந்தனர்.  அவைகள் 1981 முதல் 2011 வரை 135 விண்வெளிக் குறிப்பணிகள் புரிந்து, மூன்று நிரந்தரமாய் ஓய்வெடுத்தன.  முக்கியப் பணிகள் : ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது; பல துணைக்கோள்கள் ஏவியது;   அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்கள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கவை.

    Space Shuttle -5

    விண்வெளி மீள்கப்பல் கட்டமைப்பின் முக்கிய உறுப்புக்கள்

    கொலம்பியா மீள்கப்பல் 9 பில்லியன் டாலர் செலவில் ராக்வெல் கார்பொரேசன், பாம்டேல், காலிஃபோர்னியா [Rockwell Corporation, Palmdale, California] தொழிற் கூடத்தில் 1978 ஆண்டு உருவான விண்வெளி யந்திரம்! ஆரம்பத் தளச் சோதனைகள் முடிந்தபின், டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் [Dryden Flight Research Centre, Edwards California] அதன் பறப்பு முறைகள் யாவும் பயிற்சி செய்யப் பட்டன. ஏவு தளத்தில் நின்ற 187 அடி உயரமும், 2000 டன் எடையும் கொண்ட கூட்டமைப்பில் [Space Shuttle Assembly] இறக்கை யுள்ள சுற்று ஊர்தி [Winged Orbiter], எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank], எரித்திடவ இரட்டை ராக்கெட்டுகள் [Solid Fuel Twin Rockets] யாவும் ஒருங்கே இணைக்கப் பட்டிருந்தன. 154 அடி நீளமும் 29 அடி விட்டமும் கொண்டது, எரித்திரவ வெளிக்கலன். அதன் இருபுறமும் 150 அடி நீளம், 14 அடி விட்டமுள்ள ராட்சத ராக்கெட்கள்! விண்ணோக்கிய மூக்குடன் DC-9 ஜெட் விமானத் தோற்ற முடைய கொலம்பியா மீள்கப்பல், நீண்ட வெளிக்கலன் முதுகில் ஏறிக்  கொண்டிருந்தது.

    இரட்டை ராக்கெட்டுகள் அதி தீவிரமாய்ப் பற்றி எரியும் அலுமினியப் பொடியைத் [Aluminium Powder] திடக்கன எரிபொருளாய்ப் [Solid Fuel] பயன்படுத்தின. வெளிக்கலனில் திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen 380,000 gallon], திரவ ஆக்ஸிஜன் [Liquid Oxygen 140,000 gallon] தனித்தனி கலன்களில் நிறைக்கப் பட்டிருந்தன. ராக்கெட் ஏவுதளத்தில் சுடப் படும் போது, இரண்டு திரவ வாயுக்களும் அதிக அழுத்தத்தில் கலந்து கனல் பற்றி, மீள்கப்பலின் பிரதம எஞ்சின் மூன்றும் இயங்கின. ஒவ்வொரு வினாடியும் 1000 பவுண்டு எரிதிரவம் எஞ்சின்களுக்குத் தேவைப்படுகிறது. மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியை நெருங்கும் முன்பே, வெளிக்கலன் காலியாகி அற்று விடப்பட்டு, வாயு மண்டல வெப்பத்தில் எரிந்து தூள் தூளாகிறது!

     

    விண்வெளி மீள்கப்பலின் சாதனங்கள், இயக்க முறைகள்

    மீள்கப்பலில் முன்புறம் கருவிகளை இயக்கும் விமானிகள், பல ஆய்வுச் சாதனங்கள், கட்டுப்பாடு செய்யும் மின்கணனிகள், மின்னியல் வன்கலன்கள் [Electronic Hardwares], நடுவே சுமை தாங்கும் கூடாரம், வால்புறத்தில் மூன்று பிரதம உந்து எஞ்சின்கள் யாவும் பொருத்தப் பட்டிருந்தன. 67 அடி நீளம், 15 அடி விட்டமுள்ள நடுக் கூடாரம் 29.5 டன் சுமையை விண்வெளிக்குத் தூக்கிச் செல்ல முடியும்! ஆனால் மீண்டும் பூமிக்கு இறங்கும் போது 14.5 டன் சுமையைத்தான் ஏற்றிக் கொள்ள முடியும்! சுமைதாங்கி அறையில் தொலைத் தொடர்பு [Communication], படைத்துறை [Military], வானியல் [Astronomical] ஆகியவற்றின் பணிகளைப் புரியும் துணைக்கோள்கள் [Satellites] சுழல்வீதி யிலிருந்து ஏவப்பட எடுத்துச் செல்லப்படலாம். மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் சுற்றி வரும் போது நுண்ணீர்ப்பு [Micro-gravity] என்று சொல்லப்படும் எடையின்மையை [Weightlessness] ஆராயலாம். நாசா பிற நாட்டினர் ஆய்வகங்களை ஏற்றிச் சென்று, விண்வீதியில் ஏவி விடலாம்.

    Space Shuttle -8ஏவுதளத்தில் 2000 டன் எடையுள்ள கொலம்பியா விண்வெளிக் கூட்டமைப்பு, பல்வேறு உந்து விசைச் சாதனங்களால் [Multiple Propulsion Systems] 3000 டன் உதைப்பில் [Thrust] நேர் செங்குத்தாக மேலே எழுகிறது! மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் பணிகளை முடித்து விட்டு, தனது ராக்கெட் எஞ்சின்களை இயக்கி, விண்வெளி யிலிருந்து திரும்பி, பூமியை நோக்கிக் கீழே பாய்ந்து, பூகோள வாயு மண்டலத்தின் கடும் வெப்ப உராய்வில் [Intense Friction Heat] வெந்து சிதைந்து விடாமல், பாதுகாப்பாய் இறங்கி, ஓர் சாதாரண விமானம் போல் தளமட்டத்தில் [Horizontal] தரையைத் தொடுகிறது! மீள்கப்பலில் விமானக் குழுவகத்தின் பின்னால் அமைந்த, தூரக் கையாட்சி ஏற்பாட்டில் [Remote Manipulator System] சுயமாய் இயங்கி, 50 அடி நீளும் கனடாக் கரம் [Canada Arm] சுமையைத் தூக்கவும், சுமையை இறக்கவும் பயன்படுகிறது.

    பூமி நோக்கிப் பாயும் மீட்சிப் [Re-entry] பயணத்தில், வாயு மண்டலத்தின் உராய்வு வெப்பத்தில் மீள்கப்பல் எரிந்து போகாதவாறு, சிலிகேட் நார் சூட்டுத் தடுப்புத் தகடுகள் [Silicate Fibre Thermal Insulation Tiles] உறைபோல் ஒட்டப்பட்டு பாதுகாப்பு செய்கின்றன. மீள்கப்பலின் சிலிகேட் நார்கள் குறைந்தது 100 விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு நீக்கப் பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். நலிந்த எடை கொண்ட அந்த காப்பு நார்கள் 1260 டிகிரி C உஷ்ணத்தைக் கூடத் தாங்கும் வலிமை யுள்ளவை!

    Space Shuttle -16

    டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் ஆரம்பச் சோதனைகள் யாவும் வெற்றிகரமாக முடிந்து கொலம்பியா மீள்கப்பல் போயிங் 747 [Boeing 747] முதுகில் ஏற்றப் பட்டு, பிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவு தளத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டது!

    முதல் மீள்கப்பல் கொலம்பியாவின் முன்னோடிப் பயிற்சிப் பயணம்

    அமெரிக்காவின் கனாவெரல் ராக்கெட் ஏவுதள முனையில் 1981 மார்ச் 14 ஆம் தேதியே 187 அடி உயரக் கொலம்பியா கோபுரக் கூட்டமைப்பு தயாராக நின்று கொண்டிருந்தது. அதன் முதல் பயிற்சிப் பயணச் சோதனை நீடிப்பது, இரண்டு அல்லது மூன்று நாட்களே! அது பூமியைச் சுற்றி வரப் போகும் சுழல்வீதி [Earth Orbit] உயரம் 150 மைல், பயிற்சிக்காகத் தணிவாக்கப் பட்டுள்ளது! அதை இயக்கி முதலில் செல்பவர் இருவர்! அண்டவெளி விமானிகள் ஜான் யங், அடுத்தவர் ராபர்ட் கிரிப்பென் [Astronauts John Young, Robert Grippen]. கொலம்பியா வின் ஆணையாளர், 50 வயதுள்ள ஜான் யங் அபோலோ விண்வெளி நிலவுத் திட்டத்தில் [Apollo Moon Program] நான்கு முறை அண்ட வெளியில் சுற்றிச் சிறப்புற்றவர்! ராபர்ட் கிரிப்பென் முதலில் பயணம் செய்யும் ஓர் விமானி.

    Space Shuttle -21அவர்கள் இருவரும் கொலம்பியா மீள்கப்பல் இறக்கைகளின் நிலைபாட்டை [Stability of Wings] அண்டவெளியில் சோதிக்க 36 தடவைப் பூமியைச் சுற்றி வரப் போகிறார்கள்! முடிவில் செங்குத்தாகப் பாய்ந்து, மொஜாவே பாலைவனத்தில் [Mojave Desert, California] இறக்கம்! அந்த முதல் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து 36 மீள்கப்பல் பயண ஏற்பாடுகள் தொடரத் திட்டமிடப் பட்டன! மீள்கப்பலில் எதிர்பாராத விபத்து எதுவும் ஏற்பட்டால், இருவரும் உயிர் தப்பிக் கொள்ள, வெளியேற்றும் ஆசனங்கள் [Ejection Seats] அமைக்கப் பட்டிருந்தன!

    திரட்சி எரிபொருள் [Solid Fuel] இயக்கும் முதற் கட்ட இரட்டை ஊக்கி ராக்கெட்டுகள் [First Stage Twin Booster Rockets], மற்றும் மூன்று மீள்கப்பல் ராக்கெட்டுகள் முதல் இரண்டு நிமிடங்கள் சுடப் பட்டு, மீள்கப்பல் மணிக்கு சுமார் 3000 மைல் வேகத்தில் நேர் மேலே எழுச்சி பெற்று 31 மைல் உயரத்தில் சென்றதும், இரட்டை ராக்கெட்டுகள் அற்றுக் குடை பிடித்துக் [Parachute] கொண்டு கடலில் விழுகின்றன. பிளாரிடாவுக்கு அருகே கடலில் காத்திருக்கும் கப்பல் ஒன்று, அவற்றைக் கடலில் கண்டு பிடித்து மறுபடியும் பயன்படுத்தக் கரை சேர்க்கிறது. இரண்டு ஊக்கி ராக்கெட்டுகள் ஓய்ந்த பின்னும், மீள்கப்பலின் மூன்று பிரதம ராக்கெட்டுகள் தொடர்ந்து இன்னும் ஆறு நிமிடங்கள் இயங்கி, மீள்கப்பலை 1200 டன் உதைப்புடன் [Thrust] 59 மைல் உயரத்தில் தள்ளி, 99% சுற்று வேகம் [Orbital Velocity] அடைந்து, பூமியின் சுழல்வீதியை நெருங்குகிறது. அப்போது, வெளிக்கலன் அற்று விடப்பட்டுத் தூளாகிச் சிதறி இந்து மகாக்கடலில் விழுகிறது. முடிவில் கப்பலின் இரண்டு சிறு எஞ்சின்கள் இறுதி உந்து விசை தந்து, மணிக்கு 17,500 மைல் வேகத்தில் மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வர 150 மைல் உயரத்தில் தள்ளி விடப் படுகிறது.

    Control Room

    அண்டவெளி மீள்கப்பல் ஆட்சி அறை. 

    அண்டவெளிப் பணிகளை முடித்த பிறகு, மீள்கப்பலின் சிறு எஞ்சின்கள் இயங்கி மணிக்கு 17,600 மைல் வேகத்தில், கப்பல் சுழல்வீதி யிலிருந்து விடுபட்டுக் கொண்டு [De-Orbiting], அதன் மூக்கு பூமியை எதிர் நோக்கித் திரும்புகிறது. 50 மைல் உயரத்தில் வாயு மண்டலத்தின் கடும் உராய்வுக் கனலைத் தாங்கிக் கொள்ளக், கப்பல் சாய்ந்து 40 டிகிரிக் கோணத்தில் வயிற்றைக் காட்டிக் கொண்டு, புவியை நோக்கிப் பாய்கிறது. அப்போது அதன் அசுர வேகத்தைத் தணிக்க, கப்பலின் எதிர்ப்புற ராக்கெட்டுகள் [Retro-rockets] சுடப்படுகின்றன. மீள்கப்பல் அதன்பின் ஒரு விமானம் போல் தனது இறக்கைகளை இயக்கிக் கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு தரையில் கம்பீரமாக வந்து இறங்குகிறது. அப்போது மணிக்கு 220 மைல் வேகத்தில் தரையில் ஓடும் விமானத்தின் வேகத்தைத் தணிக்க, வால்புறத்தில் ஒரு பாராசூட் குடை விரிகிறது. மீள்கப்பலின் தரைதொடும் [Touchdown] இயக்கப்பாடுகள் எல்லாம் சுமார் அரை மணி நேரத்துக்குள் நிகழ்ந்து விடுகின்றன.

    Space Shuttle -22

     

    விண்வெளி மீள்கப்பல்கள் ஆற்றிய அண்டவெளிப் பணிகள்

    கொலம்பியா தனது முதற் சோதனைப் பயிற்சிப் பயணத்தை 1981 ஏப்ரலில் வெற்றிகரமாய் முடித்த பிறகு, ஐந்தாண்டுகள் சிறப்பான பணிகள் பல செய்யப் பட்டுள்ளன. 1983 ஏப்ரலில் சாலஞ்சர் தன் முதல் பயணத்தை முடித்து, நவம்பரில் அடுத்து அமெரிக்க, ஈரோப்பிய நாடுகளின் 71 விஞ்ஞானத் தேர்வுகள் [Scientific Experiments] புரிய, முதல் விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் சென்றது. 1984 ஏப்ரலில் பரிதியின் உச்சத் துணைகோள் [The Solar Maximum Satellite] சுழல்வீதியிலே செப்பனிடப் பட்டது.

    Space Shuttles -7

    Space Shuttle Path

    அதே வருடம் நவம்பரில் முடமாய்ப் போன பலாப, வெஸ்டார் [Palapa, Westar] துணைக்கோள்கள் சுழல்வீதியிலிருந்து பற்றி இழுக்கப் பட்டு, பூமிக்கு எடுத்து வரப்பட்டன. 1985 ஆகஸ்டில் முதன் முதல் விண்வெளியில் ஒரு துணைக்கோள் [Syncon IV-3] ஏவப்பட, சாலஞ்சர் உதவி செய்தது. அடுத்து 1986 ஜனவரியில் சாலஞ்சர் புறப்படும் போது வெடித்து [Challenger Disaster] ஏழு நபர்கள் மாண்டபின், ஏறக் குறைய மூன்று ஆண்டுகள் மீள்கப்பலின் பயணங்கள் ஒத்திப் போடப் பட்டன! அச்சமயம் அதுபோல் விபத்து எதுவும் நேராதவாறு மீள்கப்பல்களில் பல புதிய பாதுகாப்புச் சாதனங்கள் சேர்த்திடப் பட்டன.

    1986 ஆம் ஆண்டிலிருந்து 50 மேற்பட்ட மீள்கப்பல் குறிப்பணிகள் [Space Shuttle Missions] எவ்வித விபத்தும் நேராமல் முடிந்துள்ளன. முக்கியமாக மே மாதம் 1989 இல் வெள்ளி விண்கோளை நோக்கி ஏவிய மாஜெல்லன் [Magellan], அக்டோபர் 1989 இல் வியாழன் விண்கோளை நோக்கி ஏவிய காலிலியோ [Galileo], ஏப்ரல் 1990 இல் ஏவிய ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope], அக்டோபர் 1990 இல் பரிதியை ஆராய ஏவிய யுலிஸிஸ் [Ulysses] யாவும் சிறப்பாக, மீள்கப்பல் சுமைதாங்கி அறை யிலிருந்து ஏவிவிடப் பட்டவை.

    Launching Space Hubble Telescope

    1993 டிசம்பரில் முதன் முதல் ஹப்பிள் தொலைநோக்கிப் பராமரிப்புக் குழு காட்சிச் சாதனத்தைச் [Optics] செப்பனிட்டு, மின்னியல் ஏற்பாடுகளைச் [Electronic Systems] சீர்திருத்தியது. 1995-1998 ஆண்டுகளில் அமெரிக்காவின் மீள்கப்பல்கள் ஒன்பது தடவைப் பயணம் செய்து, ரஷ்யாவின் அண்டவெளி நிலையம், ‘சமாதானம் ‘ [MIR Space Station] என்பதோடு இணைப்பு [Docking or Linkup] செய்து, சரித்திரப் புகழ் பெற்றன. அப்பயிற்சி முறை அனுபவங்கள், அடுத்து 1998 ஆண்டில் தயாராகப் போகும் அகில நாட்டு அண்ட வெளி நிலைய [International Space Station] இணைப்புக்குப் பயன்படும்.

    Space Shuttle -20

    ஹப்பிள் தொலைநோக்கி ஏவுதல்

    விண்வெளி மீள்கப்பல் சாலஞ்சர் ஏவிய பிறகு போது மரண விபத்து!

    வெண்ணிலவை நோக்கி முயன்ற விண்வெளிப் படையெடுப் பில், அமெரிக்காவின் முதல் உயிர்ப்பலி 1967 ஜனவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது! அபோலோ விண்சிமிழில் தினமும் பங்கு கொள்ளும் பயிற்சியின் போது, உள்ளே தீப்பற்றி மூன்று சிறந்த விமானிகள் எட்வர்டு ஒயிட் [Ed White], ராஜர் காஃபி [Roger Chaffee], விர்ஜில் கிரிஸ்சம் [Virgil Grissom] உயிரோடு எரிந்து சாம்பலாயினர்! பத்தொன்பது ஆண்டுகள் கழித்து, அதை விடக் கோர மரணம் 1986 ஜனவரி 28 ஆம் தேதி அன்று நிகழ்ந்தது! 1981 முதல் பயிற்சிக்குப் பின்பு 26 மீள்கப்பல் பயணங்கள் வெற்றிகர மாக நடந்தேறின. 1986 ஜனவரி 28 இல் ஏவுதளத்தில் எழும்பிடத் தயாராக இருந்த சாலஞ்சர் மீள்கப்பலில் ஏழு நபர்கள் தமது ஆசனத்தில் அமர்ந்திருந் தனர். ராக்கெட் எஞ்சின்கள் திட்ட நேரத்தில் தீக்கனலைக் கக்கி, சாலஞ்சர் மீள்கப்பல் பெருமிதமோடு மேலே கிளம்பியது. ஒரு நிமிடம் கழித்து 50,000 அடி உயரத்தில் பாய்ந்து ஊடுருவிச் செல்லும் போது, அடுத்த நிமிடப் பணி முடிந்து, ஊக்கி ராக்கெட்கள் [Booster Rockets] அற்று வீழ்ந்தன. அப்போது எதிர்பாரதவாறு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது! அது மரணத் தவறு! மாபெரும் சிறு தவறு! மறக்க முடியாத தவறு! மன்னிக்க முடியாத தவறு!

    உயிரிழந்த சாலஞ்சர் மீள் கப்பல் விமானிகள் 

    பயணம் துவங்கி ஒன்றரை நிமிடத்தில், சாலஞ்சர் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த மாபெரும் எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank] திடாரென வெடித்தது! உடனே மீள்கப்பல் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது! அண்டவெளிப் பயணம் தொடங்கும் முன்பே, எல்லாம் முடிந்து விட்டது! உள்ளே அடைபட்டிருந்த ஏழு நபர்களுக்கும் வெளியே என்ன நிகழ்ந்து விட்டது என்பது தெரியாமலே போய் விட்டது! அகால மரணம் எய்த திறமைசாலிகளின் பெயர்கள் [இடமிருந்து வலம் முன்புறம்]: மைகேல் ஸ்மித், ஃபிரான்சிஸ் ஸ்கோபி, ரோனால்டு மெக்நாயர், [பின்புறம்] எல்லிஸன் ஓனிசுகா, கிரிஸ்டா மெக்காலிஃப், கிரிகரி யார்விஸ், ஜூடி ரெஸ்னிக்.

    விபத்தின் விளைவுகளைச் சீராக உளவு செய்ததில், ஊக்கி ராக்கெட்டின் மேலுறை இணைப்பில் [Booster Rocket Casing Seams] உள்ள ரப்பர் O வளையத்தில் [Rubber O-Ring] பழுது ஏற்பட்டு அது பிளந்து, தீப்பற்றிய திடப் பொருள் கசிந்து, வெளியே உள்ள எரித்திரவ வெளிக்கலனைச் [Liquid Fuel External Tank] சூடாக்கவே, 154 அடி நீளமுள்ள வெளிக்கலன் வெடித்தது! ஒரு சிறு ரப்பர் வளையப் பழுது ஏழு விண்வெளி வீரர்கள் கோர மரணத்துக்கும், 9 பில்லியன் டாலர் பண விரையத்துக்கும் காரணம் ஆனது! அடுத்து மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட பயணங்கள் யாவும் தடைப் பட்டு, அது போன்ற அபாய விபத்து எப்போதும் நேரா வண்ணம் பல பாதுகாப்புச் சாதனங்கள் மீள்கப்பலில் சேர்க்கப் பட்டன!

    Space Shuttle -12அண்டவெளி மீள் கப்பல் கீழ் இறங்குகிறது.

    நாசாவின் எதிர்கால விண்வெளி மீள்கப்பலின் குறிப்பணிகள்

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில், அகில நாட்டு அண்டவெளி நிலைய அமைப்புப் [International Space Station] பணிகளுக்கு மீள்கப்பல்களின் பெரும்பான்மை யான பயணங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. அப்பணிகள் 2004 இல் முடிவு பெறும். அகில நிலையம் தயாரானதும் அங்கு விமானிகள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பொறி நுணுக்கர், பராமரிப்பாளர் அடிக்கடி போய்வர விண்வெளி மீள்கப்பல் பயன்படும். 1998 இல் அட்லாண்டிஸ் [Atlantis] மீள்கப்பல் புது நிலையப் பணிகளுக்காகப் புதுப்பிக்கப் பட்டது. புதிய காட்சி முகப்புகள் [New Displays], முற்போக் கான கப்பல் நகர்ச்சிச் சாதனங்கள் [Navigational Equipment], அகில நிலையத்தோடு இணைக்க காற்றடைப்பு அறை [Airlock Chamber] ஆகிய புது ஏற்பாடுகள் சேர்க்கப் பட்டன. அதன் உந்து சக்தியும், குளிர்ப்புச் சாதனமும் [Power & Cooling System] பெருக்கப் பட்டன. அத்துடன் மீள்கப்பல்கள், ஹப்பிள் விண்தொலை நோக்கிப் பராமரிப்பு, துணைக் கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள் மீட்டுதல் போன்ற ஒழுங்காய் நிகழ்ந்து வரும் பணிகளுக்கும் பயன்படும்.

    Shuttle Parts

    நாசா மீள் கப்பல் கட்டமைப்பு உறுப்புகள்

    திட்டப்படி விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் 2012 ஆண்டில் ஓய்வு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! நாசா தற்போதைய மீள்கப்பலைப் போன்ற, சிறப்பு X-38 விண்கப்பலை அகில நிலையத்தின் அபாயக் காப்பு யந்திரமாக [Emergency Lifeboat] உருவாக்க திட்டமிட்டுள்ளது. 1998 இல் பயிற்சிச் சோதனைகள் யாவும் முடிந்து, X-38 பாதுகாப்புக் கப்பல் 2003 ஆண்டில் பறப்பதற்குத் தயாராகும்!

    ‘ஒரு கட்ட சுழல்வீதி எழுச்சி ராக்கெட் ‘ [Single Stage to Orbit Rocket] உடைய புதிய ராட்சதக் விண்கப்பல் [X-33] ஒன்று சோதனைக் களத்தில் இயங்கிச் சீரான முறையில் வளர்ச்சியாகி வருகிறது! 21 நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் உருமிக் கொண்டு உயரப் போகும் அந்த அசுர ராக்கெட், ஒரே மூச்சில் ஊதப்பட்டு, ஒரே பாய்ச்சலில் தாவி விண்கப்பலைப் பூகோளச் சுழல்வீதியில் எறிந்துவிடும்!

     

    ****************************

    தகவல் :

    1. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

    2. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

    3. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

    4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html

    5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

    6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv

    https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

    8. http://spaceref.com/missions-and-programs/nasa/spacex-launches-first-nasa-commercial-crew-demonstration-mission.html

    9. http://spaceref.com/international-space-station/space-station-crew-opens-hatch-to-crew-dragon-after-docking.html

    10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html

    11. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

    12. https://www.bbc.com/news/science-environment-47453951

    13. https://www.bbc.com/news/science-environment-47477617

    14. https://www.spacex.com/news/2013/03/31/reusability-key-making-human-life-multi-planetary</a

    Share
  • குறளின் கதிர்களாய்…(248)

    -செண்பக ஜெகதீசன்

    கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி.

    -திருக்குறள் -701(குறிப்பறிதல்)

    புதுக் கவிதையில்…

    மன்னன் மனத்திலுள்ளதை
    அவன் கூறாமலே
    முகம் அல்லது
    கண்ணை நோக்கியே
    கருத்தறிந்துகொள்ளும்
    அமைச்சன்,
    என்றும் வற்றா நீர்நிறை
    கடல்சூழ் உலகினுக்கோர்
    அணிகலன் ஆவான்…!

    குறும்பாவில்…

    கூறாமலே பிறர் உளக்குறிப்பறியும்
    ஆற்றல்மிகு அமைச்சன் ஆவான்,
    ஆழிசூழ் உலகிற்கு அணியாய்…!

    மரபுக் கவிதையில்…

    மன்னன் மனதில் உள்ளதையே
    மனமது திறந்து சொல்லாமலே,
    அன்னான் முகத்தைக் கண்பார்த்தே
    அறிந்து கொள்ளும் ஆற்றலதைத்
    தன்னால் கொண்டே செயலாற்றும்
    தன்மை மிக்க அமைச்சனவன்,
    என்றும் வற்றா கடல்சூழ்ந்த
    எழிலாம் உலகினுக் கணியாமே…!

    லிமரைக்கூ..

    கருத்தறிவான் அரசனவன் கண்ணில்,
    சொல்லாமலறிந்து செயல்படும் அமைச்சன்
    அணிகலனாவான் கடல்சூழ் மண்ணில்…!

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    கொறயில்லாம செயல்படு,
    குறிப்பறிஞ்சி செயல்படு..

    வாயத்தொறந்து ராசா சொல்லாமலே
    அவரோட மொகத்தப் பாத்து
    கண்ணப்பாத்து
    குறிப்பறிஞ்சி வேலசெய்யிற
    மந்திரி கெடச்சா
    அவுரு
    கடலுசூழ்ந்த ஒலகத்துக்கே
    ஒரு ஒசந்த ஆபரணந்தான்..

    அதால
    செயல்படு செயல்படு
    கொறயில்லாம செயல்படு,
    குறிப்பறிஞ்சி செயல்படு…!

     

     

    Share
  • துணை அவள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)

    பெண்புத்தி தனைக்கேட்டால்
    பின்விளைவு நன்றாகும்!
    நன்புத்தி நவில்பவளே
    நம்முடைய தாயன்றோ!
    துன்மதிகள் தானகல
    துணிச்சலுடன் நின்றிடுவாள்!
    துயர்துடைக்கும் கரமாக,
    துணையாக அவளிருப்பாள்!

    Share