நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 20
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
கேக்கவங்க வெறுக்குத மாதிரி ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லுதவன் எல்லாராலையும் எளக்காரமா நெனைக்கப்படுவான்.
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
பலபேருக்கு முன்ன ஒதவாக்கர பேச்சு பேசுதது சேக்காளிக்கு கெட்டது செய்யுததக் காட்டிலும் கொடும.
குறள் 193:
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
உப்புபெறாத விசயத்த விரிச்சு பேசினாம்னா அவன ஒதவாக்கரை னு தெரிஞ்சிக்கிடலாம்.
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
ஒண்ணுத்துக்கும் ஒதவாத கொணங்கெட்ட சொல்ல பல பேர்கிட்ட சொல்லுதவனுக்கு அந்த சொல்லே நியாயங்கெட்ட வழியகாட்டி நல்ல கொணத்த கெடுத்து உட்ரும்.
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
நல்ல கொணம் உள்ளவங்க ஒதவாத சொல்ல சொன்னாங்கன்னா அவங்களோட பெருமயும் புகழும் இல்லாம போயிடும்.
குறள் 196:
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
ஒதவாத சொல்ல பலகாலம் சொல்லுதவன மனுசன்னு சொல்லுததவிட பதர் னு சொல்லணும்.
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
படிச்ச பெருமக்க அறமில்லாத சொல்லக்கூட சொல்லலாம். ஆனா ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லாம இருக்குதது நல்லது.
குறள் 198:
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
அரும்பயன்களை ஆஞ்சு அறியும் திறம உள்ளவங்க ஒதவாத சொல்ல சொல்லமாட்டாங்க. .
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
களங்கமில்லாத புத்திசாலிங்க நெனப்பு மறந்து கூட ஒதவாத சொல்ல சொல்ல மாட்டாங்க.
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொற்கள்ல வாழ்க்கைக்கு ஒதவுதத மட்டும் சொல்லணும். ஒதவாதத சொல்லக்கூடாது.