Blog

  • பெண்மை போற்றிடு….!

    கிரேசி மோகன்

    வேலை இருக்குது நிரம்ப -என்னை
    வேகப் படுத்திடு தாயே    –
    பாலைச் சுரந்திடு தளும்ப – உந்தன்
    பாதம் பணிந்திடும் சேய்நான்
    ஆலை கரும்பெனெப் பிழிந்து – எந்தன்
    ஆவி பிரிந்திடும் முன்னே
    சோலை நகைச்சுவைக் காற்றை – இவன்
    நாளும் நுகர்ந்திட அருள்வாய்…!

    கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
    அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
    இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
    பிறந்தநாள் இன்றவளைப் போற்று….!

    உன்னையே நம்பி உனதா யுதமாக
    அன்னையே வாழ அருள்புரி -முன்னை
    இருந்த நிலையில் பொருந்தி இருக்க
    திரும்ப மனதைத் திருத்து….!

    பொய்தந்த போதுமதை, மெய்த்தவமாய் மாற்றியிரு,
    கைதந்து காத்துக் கரைசேர்க்கும், -சைதன்ய
    சக்தியே, அன்னையே, சச்சிதா னந்தத்தின்,
    சித்திநாளில், நீக்கென் சழுக்கு (குற்றம்)………!

    Share
  • எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியாவில் மேட்டுக்குடி மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பல வகையான உணவை உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம். இந்த வகுப்பைச் சேர்ந்த நாங்களும் அமெரிக்கா வந்த பிறகு எங்களுக்கு இன்னும் அதிகமாகப் பல வகையான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமும் காலையில் அமெரிக்காவில்கூட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று இதில் எதையாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். மதியம் சோறு, சாம்பார், ரசம், இரண்டு
    பொரியல்கள், தயிர் இத்யாதி. இரவு மறுபடி சோறு அல்லது சப்பாத்தி, தொட்டுக்கொள்ளப் பல வகையான துணைக்கறிகள். இடையில் சாயந்திரம் ஏதாவது தின்பண்டங்கள் மற்றும் காப்பி. ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் இனிப்புகள் வேறு. இடையிடையே பார்ட்டிகள் வேறு. (வேலைக்குப் போகும் பெண்கள் இவ்வளவு சமைப்பதில்லை என்பதால் இவ்வளவு வகைச் சாப்பாடு
    சாப்பிடுவதில்லை என்றாலும் வெளியில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்.)

    நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டில் எங்கள் கழிவுகளைச் சுத்தம் செய்த நாகா என்ற பெண்ணின் ஞாபகம் எனக்கு அடிக்கடி வந்தாலும் திடீரென்று இன்று அவளைப் பற்றிய ஞாபகம் அதிகமாக வந்தது. அப்போதே அவள் மீது எனக்கு ஒரு பரிவு உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதால் பழைய சாதம் எப்போதும் எங்கள் வீட்டில் இருக்கும். தினமும் நாகா பத்துமணி வாக்கில் எல்லோர் வீட்டிலும் வேலைகளை முடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நாங்கள் கொடுக்கும் பழைய சோற்றை உண்டு பசியாறுவாள். அப்போது அவளோடு பேசிக்கொண்டிருப்பது என்னுடைய
    பொழுதுபோக்குகளில் ஒன்று.

    எப்போதும் பழைய சோறு, பழைய குழம்புதான். எப்போதாவது ஆட்டிறைச்சிக் குழம்பு இருந்தால் நான் கொடுப்பேன். அதை மிகவும் ரசித்துச் சாப்பிடுவாள். பழைய சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள வறுத்த மோர் மிளகாய் கொடுத்தால் மிகவும் ஆசையாகச் சாப்பிடுவாள். ஆறு மிளகாய் கொடுத்தால் நான்கை சோற்றோடு முடித்துவிட்டு இரண்டை பேப்பரில் சுற்றி முந்தானையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் நாங்கள் கவலையே படுவதில்லை. தினமும் நாகா வருவதால் அவளுக்குத் தேவைப்படும் என்று வைத்திருப்போம்.

    எப்போதாவது நான் பழைய சோறு சாப்பிட்டால் எனக்கு ஒரு பானைத் தயிர் வேண்டும். நாகாவுக்கு அப்படியல்ல. நீராகாரத்தோடு பழைய சோற்றைக் கொடுத்தால் நீராகாரத்தை முழுவதுமாகக் குடித்துவிட்டுப் பின் சோற்றை உருண்டை, உருண்டையாகப் பிடித்து ஒரு சொட்டுக் குழம்புடன் வாயில் போட்டுக்கொள்ளுவாள். எனக்குப் பழைய சோறு சாப்பிட ஒரு பானைத் தயிர் மட்டுமல்ல, ஒரு பானைக் குழம்பும் வேண்டும். நாகாவின் தினசரிச் சாப்பாடு இது.

    காலையில் டீக்கடையில் அரை கப் காப்பி குடிப்பாள். பின் எங்கள் வீட்டில் நான் மேலே கூறிய பழைய சாதம், பழைய குழம்பு. மதியச் சாப்பாடாக வீட்டில் முந்தைய தினம் இரவு சமைத்த சாதத்தில் மற்றவர்கள் சாப்பிட்டது போக மிஞ்சியிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்வாள். இரவு மட்டும் சுடு சோறு, சுடச்சுட குழம்பு. அதுவும் பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, குருமா, வெஜிடபிள் கட்லெட் என்று வகை வகையாகவா சாப்பிட்டாள்? எங்கள் ஊரில் கிடைக்கும் கருவாடும் கத்தரிக்காயும் போட்ட குழம்பு. கருவாடும் சாதாரணக் கருவாடுதான். விலையுயர்ந்த கருவாடெல்லாம் அவளால் வாங்க முடியாது. எப்போதாவது விலை குறைந்த மீன் வாங்கிக் குழம்பு செய்வாள். எப்போதாவது சாம்பாரும் சமைப்பாள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காலனிவாசிகள் எங்கிருந்தாவது அடிமாடு ஒன்றை வாங்கிவந்து அங்கேயே அடித்து மாமிசத்தைப் பங்கு போட்டுக்கொள்வார்கள். மறு நாள் அந்த மாமிசத்தைப் பெரிய பெரிய துண்டாகப் போட்டு, சமைத்துச் சாப்பிட்டதைப் பற்றிக் கூறுவாள். எப்போதாவது விருந்தாளிகள் வந்துவிட்டால் தான் வழக்கமாகச் சமைக்கும் சோறு அநேகமாகக் காலியாகிவிடும் என்றும் மறு நாள் காலையில் எதையாவது சமைத்துவைத்துவிட்டு வந்ததாகவும் கூறுவாள்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது கூட வீட்டில் வடை சுடுவதோ, பொங்கல் ஆக்குவதோ கிடையாது. ஏன் இட்லி, தோசை கூட அவளுடைய சக்திக்கு அப்பாற்பட்டதுதான். ஒவ்வொரு தீபாவளியன்றும் வீடு வீடாகச் சென்று பலகாரங்கள் வாங்கி வருவாள். சிலர் இட்லி கூடக் கொடுத்திருப்பார்கள், அது ஏதோ பெரிய பலகாரம் என்பதுபோல். யாரும் அதிரசமோ, முறுக்கோ கொடுப்பதில்லை. கிட்டத்தட்ட எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு கண்டிப்பாகச் செய்வார்கள். மைசூர்ப்பாக், குலோப் ஜாமூன் போன்ற
    இனிப்புகளின் பெயர்கள்கூட அவளுக்குத் தெரியாது.

    அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு புரதச் சத்து, எவ்வளவு மாச்சத்து, எவ்வளவு கொழுப்புச் சத்து கலந்த உணவு உண்ண வேண்டும் என்று பலர் குறித்துவைத்துக்கொள்ளுவார்கள். இதற்கு மேல் என்ன சாப்பிட வேண்டும் என்று யோசனை கூற சத்துணவு ஆலோசகர்கள் (nutritionists) வேறு. எங்கள் நாகா என்ன சாப்பிட்டாள், எவ்வளவு சாப்பிட்டாள் என்று இந்த ஆலோசகர்களிடம்
    கூறி, அவள் எப்படி பெரிய வியாதிகள் எதுவும் இல்லாமல் எழுபது வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தாள் என்று கேட்க வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை.

    இப்படித்தான் எல்லோரும் சாப்பிட வேண்டும்; இப்படிச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நான் சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அமெரிக்காவில் எல்லோருக்கும் பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. எங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் இந்திய உணவைச் சமைத்துக்கொள்ளுவதற்குத் தேவையான எல்லாச் சாமான்களும் கிடைக்கின்றன. அதற்குமேல் அமெரிக்கர்களின் உணவையும் வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் சீனர்களின் உணவு, தாய்லாந்து நாட்டின் உணவு, ஜப்பானியர்களின் உணவு, பிரெஞ்சு உணவு என்ற பல தரப்பட்ட நாடுகளின் உணவுகளையும்
    உண்டு மகிழ ஓட்டல்கள் இருக்கின்றன. இதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எங்கள் நாகாவுக்குக் கிடைக்கவில்லையே என்பதை நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

    பதினைந்து குடும்பங்கள் வசித்த ஒரு குடிசைக் காலனியில் வாழ்ந்துகொண்டு, உலகிலேயே அசுத்தமான தொழிலைச் செய்துகொண்டு, ஆகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, நாகா சந்தோஷமாகவே வாழ்ந்துவந்தாள் என்று நினைத்து ஆறுதலடைய வேண்டியது தானோ? அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தாலும் நாம் ஏன் இப்படிப்பட்ட இழிவான தொழிலைச் செய்தவர்களைக் கீழ்த்தனமாக நடத்தினோம் என்பதை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது.

    மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலத்தை இனியாவது முழுவதுமாக ஒழிக்க வேண்டும். சட்டம் மட்டும் போதாது. ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிப்பதில் அரசு கவனம் செலுத்துவதைவிட, நம் கழிவுகளைச் சுத்தம் செய்தவர்களின் வாழ்வைப் புதிதாக நிர்மாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    படத்திற்கு நன்றி – Sharmilee (https://www.sharmispassions.com)

    Share
  • உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

    -விவேக்பாரதி

    பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
    பெருமை அளந்திடும் சீதனம்
    பெண்மை என்பதோர் பூவனம் – அது
    பேண வேண்டிய தோர்வளம்!
    பெண்மை காப்பதே நம்கடன் – அப்
    பேறு வாய்ப்பதே தெய்வதம்
    பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
    பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!

    ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
    ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
    காண வேண்டிய கீர்த்திகள் – நம்
    காரி கைவசம் பூர்த்திகள்
    பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
    போரும் அமைதியும் பெண்ணிடம்
    தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
    தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!

    வானின் மாமழை தாய்க்குணம் – அலை
    வண்ணக் கடலும் காதல்மனம்
    சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
    செழுமை பெண்கொளும் பூரணம்!
    ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
    நாமம் தேன்வரும் கீர்த்தனை
    தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
    தண்மை பெண்களைப் போற்றுவோம்!!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 19 –புறங்கூறாமை

     குறள் 181:

    அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறா னென்றல் இனிது

    ஒருத்தன் நல்லது செய்யலேன்னாலும் அடுத்தாளப் பத்தி பொறளி பேசமாட்டாம் னா அதுதான் அவனுக்கு நல்லது.

    குறள் 182:

    அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை

    ஒருத்தன நேர்ல பாக்கும்போது பொய்சிரிப்பு சிரிச்சி பேசிபோட்டு, அவன் போன பின்னால பொறளி பேசுதது அறமில்லாத கெட்ட காரியத்த செய்தத விட கொடும.

    குறள் 183:

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
    அறங்கூறும் ஆக்கந் தரும்

    ஒருத்தன காணும்போது பொய்யா நடிச்சு பொறத்தே பொறளி பேசி வாழுதத காட்டிலும் சாவுததே மேல்.

    குறள் 184:

    கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
    முன்னின்று பின்னோக்காச் சொல்

    ஒருத்தன் நேரா நிக்குதப்போ தயவுதாட்சண்யம் பாரம கடுமையா பேசிக்கிடலாம். அவன் இல்லாத சமயம் பின் விளைவ யோசிக்காம அவனப் பத்தி பேச வேண்டாம்.  

    குறள் 185:

    அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்

    ஒருத்தன் மத்தவங்களப் பத்தி பொறளி பேசுதத வச்சே அவன் அற வழில நிக்காதவன் னு தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 186:

    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
    திறன்தெரிந்து கூறப் படும்

    அடுத்தவனப் பத்தி பொறளி பேசுதவனோட கொடுமையான குத்தங் குறைகள கண்டுபிடிச்சு மத்தவங்க அவனப் பத்தி பொறளி பேசுவாங்க.

    குறள் 187:

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்

    சந்தோசமா கூடிப் பழகி நட்ப வளக்கத்தெரியாதவங்க பொறளி பேசி  நல்ல சேக்காளியையும் பிரிஞ்சி போக உட்ருவாங்க.

    குறள் 188:

    துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு

    நெருங்கி பழகினவங்களோட தப்ப அவங்க இல்லாத நேரம் பேசுதவங்க முன்ன பின்ன தெரியாதவங்கள பத்தி என்னதான் பேச மாட்டாங்க.

    குறள் 189:

    அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
    புன்சொ லுரைப்பான் பொறை

    நேர்ல இல்லாத ஒருத்தனப்பத்தி பொறளி பேசுதவனோட  ஒடம்ப, இவனயும் சுமக்குதது என்னோட தருமம் னு நெனைச்சி பூமி  சுமக்குதோ.

    குறள் 190:

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னு முயிர்க்கு

    பொறத்தியாரோட தப்ப பாக்குதது போலவே தன்னோட தப்பையும் பாத்தோம்னா நிலச்சு நிக்குத இந்த ஒலக வாழ்க்கைல துன்பம் வருமா.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • மனநலம் காக்க மனவளக்கலை

    மனநலம் காக்க மனவளக்கலை

    த. சுதா
    முனைவர் பட்ட ஆய்வாளர், யோகமும் மனித மாண்பும் துறை
    பாரதியார் பல்கலைகழகம், கோவை

    முன்னுரை

    மனதை இதமாக வைத்திருப்பன் மனிதன். “மனமில்லாத மனிதனும் இல்லை, மனதை அறிந்த மனிதனும் இல்லை, மனதை அறிந்தவன் ஞானி”. சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டும் அல்ல. ஆரோக்கியமான மனதையும் பெற்றிருப்பதாகும்.

      “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
        மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
        மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
        மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

    என்ற பாடலில் அகத்தியர் மனம் செம்மையானால் மந்திரம் சொல்ல வேண்டியது இல்லை. மூச்சுக்காற்றை மூலாதாரத்திலிருந்து உயர்த்த வேண்டியது இல்லை. வாசி என்ற குண்டலி சக்தியை சக்கரத்தில் நிறுத்த வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார். அப்படிபட்ட மனநலத்தைக் காக்க மனவளக்கலையின் பங்கு என்ன என்பதைக் காணலாம்.

    மனநலம்

    ஆரோக்கியமான மனதைப் பெற்றிருப்பவர்கள், தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்வு கண்டு முடிவு எடுப்பராகவும் இருக்க வேண்டும். நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினருடன் நல்லுறவு கொண்டவராகவும், சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவராகவும் விளங்கவேண்டும். மனம் சார்ந்த இந்த தன்மையே மனநலம் எனலாம்.

    உடல் உறுதி மட்டும் ஆரோக்கியம் அல்ல
    உள்ளத்தின் தெளிவும் இணைந்ததே ஆரோக்கியம். – ஆதிசங்கரர்.

    மனம் அடக்க நினைத்தால் அலையும்
    அறிய நினைத்தால் அடங்கும் – வேதாத்திரி மகரிசி

    அலையும் மனதை அடக்க முடியாது
    அடக்க நினைப்பது புயலைத்தடுத்தச் செய்வதற்கு சமம் – பகவத் கீதை.

    மனதை அடக்க முடியாது, மனதை விலக்கவும் முடியாது. சும்மா இருந்தாலே மனம் விலகிவிடும். உடலும், மனமும் நாணத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதாகும். ஒன்றின் தன்மை மற்றொன்றில் பிரதிபலிக்கும் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவது போல் மனதிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மனநோய் எனலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை மனநோய்க்கு ஆளாகின்றனர். மனநலப் பாதிப்பிற்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்ச்சிகள் மனச்சோர்வும், பதற்றம் ஆகியன.

    அதிக வேலை, தேவைகள் நிறைவேறாமை, பேராசை, எதிர்பார்ப்பு, நிர்பந்தம் இதனால் மனநலம் பாதிக்கிறது என்கிறார் – அகத்தியர்.

    அறுகுணமாகிய பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், இவற்றால் மனநலம் பாதிக்கிறன்றது என்கிறார் – வேதாந்த மகரிஷி.

    ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.

    மனநலத்தை பாதிக்கும் காரணிகள்

    உடல் பாதிப்பு

    அதிக அமிலச் சுரப்பு, நோய் எதிhப்பு சக்தி குறைவது, தானியங்கி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறைவது. சிறுநீரக செயலிழப்பு, குழந்தையின்மை, புற்று நோய், கல்லீரல் பாதிப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும்  நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் முதலியன.

    உறவுகளில் பாதிப்பு 

    நெருங்கிய உறவினர்களின் திடீர் மரணம், விபத்துக்கள், பொருள் காணாமல் போதல், குழந்தைகள் தங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமை. கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனைகள், விவாகரத்து தோன்றுவது, நெருங்கிய உறவினர்களுக்கு இடையே சண்டை, மனஸ்தாபம் தோன்றுவது, காட்டமான வாழ்க்கை பின்னனி, உறவினர் கொடுமை. தனிமை அன்புக்கு ஏங்கித் தவித்தல். மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, அன்பு கிடைக்காமை, சிறுவயத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகுவது, ஓரினச் சேர்க்ககை முதலியன.

    மூளையில் தோன்றும் பாதிப்பு 

    மூளைக் காய்ச்சல், தலையில் அடிபட்டு கவனிக்காமல் விடுவதால், நரம்புகள் உணர்ச்சிகளை கடத்தாமை, நரம்புகளில் அழுத்தம் தோன்றுதல். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம் குறைதல் ஆகியன.

    மரபு மற்றும் சூழ்நிலை 

    பாரம்பரியம் வழியாகவும், நம் முன்னோர்கள் இரத்த சம்பந்தப்பட்டவர்கள் மனநலம் பாதித்து இருந்தால் தொடர்ந்து வருவது, சூழ்நிலை காரணமாகவும், மன நலம் பாதிக்கப்படுகின்றன.

    சுற்றுப்புற சூழல் 

    சுற்றுப்புறச் சுழலில் காற்று மாசுபடுதல், இரச்சல் தேவையற்ற சத்தம் நம் காது கேட்கும் திறனை விட அதிக சத்தத்திற்கும் ஆளாகும் போதும் மனநலம் பாதிக்கப்படுகின்றன.

    மனநலபாதிப்பின் அறிகுறிகள் 

    1. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்த செயலையும் செய்ய முடியாமை. இயலாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை.

    2. நேர்மறையான எண்ணங்கள் தோன்றாமை, திட்டமிடாத சிந்தனை, நம்மால் நிச்சயம் முடியாது என்று எண்ணுவது.

    3. சோர்வு, பயம், கவலை, தேவையில்லாத அழுகை, பசியின்மை, தூக்கமின்மை பெருமூச்சு விடுதல், இரத்த ஓட்டம் அதிகரித்தல்.

    4. தசை இறுக்கம், அதிக வேர்வை, பொறுமையின்மை, சக்தியின்மை, விரக்தி போன்றவை மனநலம் பாதித்தவர்களுக்கு தோன்றும்.

    5. மனக்குழப்பங்களுக்கு முக்கியக் காரணம் ஊர் என்ன சொல்லும், உறவினர்கள் என்ன சொல்வார்கள், அக்கம்பக்கம் என்ன சொல்வார்கள் என்ற பயம்தான். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பயந்தான். பலர் தன் துன்பங்களை மனதில் மறைத்து அனுசரித்து வாழ்கிறார்கள்.

    மனநலத்தைக் காக்க பயிற்சிகள் 

    வேதாந்திரி மகரிசி அருளிய மனவளக்கலையின் உடற்பயிற்சிகள் 

    தசை நார் மூச்சுப் பயிற்சி.

    உடல் தளர்துதல் பயிற்ச்சி.

    இப்பயிற்சியை செய்வதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கும். மனம் வலுப்பெறுவதற்கு தவம் பயிற்சிகளும் தற்சோதனையும் அவசியம் தேவை.

    மனம் தூய்மை அடைவதற்கு அகத்தூய்மை பயிற்சிகள். இதில் எண்ணம் ஆராய்தல்.
    ஆசை சீரமைத்தல்.
    சினம் தவிர்த்தல்.
    கவலை ஒழித்தல்.

    வாழ்வின் நோக்கம்

    இப்பயிற்சிகள் செய்து தன்னைப் பற்றியும், தன்தேவைகள் பற்றியும், தன் செயலின் விளைவைப் பற்றியும், தன் தகுதியை பற்றியும், தன் மதிப்பைப் பற்றியும் ஆராய்ந்து மனநலத்தை மேம்பாடு அடையச் செய்யலாம்.

    முடிவுரை

    நம் மனம் மிகவும் சஞ்சலமுடையது. இதைச் சீர் செய்ய மனவளக்கலை தியானம் உதவும். மனம் எப்போதும் கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் மட்டுமே சிந்திக்கும். இப்போது நடக்கும் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்க மறுக்கும். ஆனால் நிகழ்காலம் மட்டும் தான் நிச்சயம். நிகழ்காலம் தான் கடந்த காலமாக மாறுகிறது. நிகழ்காலம் தான் வருங்காலத்தை நிர்ணயிக்கிறது. மனநலம் வேண்டுமானால் நிகழ்காலத்தைப் பற்றி,  சிந்தித்து செயல்பட வேண்டும்.

    Share
  • என்றோ

    -பாஸ்கர் சேஷாத்ரி

    என்றோ கேட்ட நாதம் இன்னும் செவிப்பறையில்
    என்றோ பெய்த மழை நினைவின் ஓட்டையில்
    என்றோ ஓடிய பள்ளி கிழிந்த சட்டை தொங்கி நிற்கும் .
    என்றோ உடைந்த பல் துருத்தி துருத்தி தலை நீட்டும்
    என்றோ உணர்ந்த ஸ்பரிசம் முதுமையை கோபிக்கும்
    என்றோ கிழிந்த தாடை வலி வருஷம் தவி நிற்கும்
    என்றோவில் வாழ்ந்து என்றோவில் நனைந்து
    என்றோவில் செல்லும் காலம் .

    மூச்சுப்பைக்கு ஒன்றும் தெரியாது – கடைசி வரை .

    Share
  • (Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்

    முனைவர் ஆ.ராஜா,
    அருங்காட்சியகத் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர் – 10

    இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை கடல்சார் வணிகமும் உள்நாட்டு வணிகமும் சிறந்து விளங்கின. இவ்வணிகம் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியின் காரணமாகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.  இக்காலக் கட்டத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் அயல்நாட்டு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, நிலவியல் அடிப்படையில் அதிகமான ஆற்று முகத்துவாரங்களைக் கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கடல்சார் வணிகச் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை புரிந்தன. அந்த வகையில் இராமநாதபுரம் வட்டாரத்தில் இடைக்காலத்தில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயும் இக்கட்டுரை, கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    வணிக நகரம்

    இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ள தேவிப்பட்டினம் மற்றும் தீத்தாண்டதானபுரம் ஊர்களிலுள்ள கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும், கீழக்கரையிலுள்ள கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் செயல்பட்ட வணிகக் குழுக்கள், வணிகர்கள், பட்டினங்கள், வணிக நகரங்கள், அங்காடிகள், பெருந்தெருக்கள், வணிகப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.

    வணிகக் குழுக்கள்

    இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்திலுள்ள தீத்தாண்டதானபுரம் இடைக்கால பாண்டியர்கள் காலத்தில் பல்வேறு வணிகக் குழுக்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்த சிறந்த வணிக நகரமாக விளங்கியுள்ளது. இவ்வூரை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு, ‘முத்தூற்றுக் கூற்றத்திலிருந்த தீத்தானம்’ என்று குறிப்பிடுகிறது1. இவ்வூரில், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1253-1283) காலத்தில் பதினெண்விசயத்தார், அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், பிரான்மலை வணிகர்கள், சாமந்த பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள் போன்ற வணிகக் குழுக்களும் வணிகர்களும் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்2. இவர்கள் தீத்தாண்டதானபுரத்திலுள்ள சர்வதீர்த்த உடைய நாயனார் கோயிலின் இடிந்த மண்டபத்தை மீண்டும் கட்டுவதற்கான செலவுகளுக்காக இவ்வூரில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீது ஒரு பகுதியை வரியாகச் சேகரித்து தானமாக வழங்கியுள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட ஊரிலுள்ள பாண்டிய மன்னர்களான மாறவர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள்  வணிகர்களான கைக்கோளர்களும் செட்டிகளும் இவ்வூரிலுள்ள கோயிலுக்குச் சில தானங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன3.

                இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தேவிப்பட்டினம், பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கடல்சார் வணிகத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்துள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கல்வெட்டானது இவ்வூரை செவ்விருக்கை நாட்டிலிருந்த சீறிளங்கோமங்கலமான உலகமாதேவிபட்டினம் என்றும், கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றது4. இவ்வூரில் கி.பி.13ஆம் நூற்றாண்டின்போது நகரத்தார்கள், நானாதேசிகள் ஆகிய வணிகக் குழுக்கள் தங்கியிருந்து வணிகம் செய்து வந்தனர்5. இவர்களில் நானாதேசிகள், பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் பல இடங்களிலிருந்து வந்த சரக்குகளைக் கடல் வழியாகத் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

                பிற்காலப் பாண்டிய மன்னனான இரண்டாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.14ஆம் நூற்றாண்டு) தேவிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கு வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே போன்று பல பகுதிகளிலிருந்து வந்த வணிகப் பொருட்கள் இத்துறைமுகத்தில் இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன6. வணிகத்திற்காகத் தேவிப்பட்டினத்தில் தங்கியிருந்த நானாதேசிகள், அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கள் வணிகக் குழுவின் பெயரில் கட்டவிருந்த வாசலுக்கான  செலவிற்காகத் தேவிப்பட்டினம் மற்றும் செவ்விருக்கை நாட்டிலிருந்த பிற துறைமுகங்களுக்கும் வந்து செல்லும் வணிகப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளனர்7.

                இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கீழக்கரை, கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கிய வணிகத் துறைமுகப் பட்டினமாகும். கி.பி.16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூர் ‘செம்பிநாட்டிலுள்ள அனுத்தொகைமங்கலம்’ என்றும் ‘கீழக்கரையான நினைத்தது முடித்தான் பட்டினம்’ என்றும் குறிப்பிடுகின்றது8. இக்காலக் கட்டத்தில் இவ்வூரிலும், இவ்வூருக்கு அருகிலிருந்த மூன்று துறைமுகப் பட்டினங்களிலிருந்தும் பதினெண் விசையத்தார், முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். செம்பி நாட்டு அனுத்தொகைமங்கலத்திலிருந்த நினைத்தது முடித்தான் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் இவர்கள் விற்கும் நூறு முத்துகளுக்கு அரைப்பணம் வீதம் தானம் கொடுத்துள்ளனர்9.

                மேற்குறிப்பிட்ட வட்டத்திலுள்ள இராதானூரில் நெசவுத் தொழிலிலும், துணி வணிகத்திலும் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த கைக்கோளர்கள், அப்பகுதியில் தங்கியிருந்து வணிகம் மேற்கொண்டிருந்தனர்10.

    வணிகம் செய்தவர்கள்

                இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியிலுள்ள இடைக்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள், இப்பகுதியிலிருந்த தனி வணிகர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. திருவாடானை வட்டம், இராதானூரிலுள்ள கல்வெட்டு செம்பொன்மாரியைச் சேர்ந்த அவ்வைப் பெருந்தெரு வணிகன் சம்பந்தன் பள்ளியாழ்வான் என்ற மிதிக்குணநாயகன், அவ்வூரிலிருந்த சிவன் கோயிலுக்குத் தூண் ஒன்றைத் தானமாக வழங்கிய செய்தியைக் காட்டுகிறது11.

    பட்டினம்

    இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரானது, இடைக்காலப் பாண்டியர் காலத்தில் எறிவீரர்களால் பாதுகாக்கப்பட்ட வணிக நகராக இருந்துள்ளது. கல்வெட்டில் திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரை இடைவழியாகிய எறிவீரப்பட்டினம் என குறிப்பிடுவதை அறிய முடிகிறது12. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகியவை முக்கிய துறைமுகப் பட்டினங்களாக இருந்து வந்துள்ளன13. இப்பகுதியில் தங்கியிருந்த பல வணிகக் குழுக்கள் இத்துறைமுகங்களை மையமாகக் கொண்டு வணிகம் செய்து வந்துள்ளன. இவற்றைத் தவிர உட்பகுதிகளில் உள்ள திருமாலுங்கண்டார்கோட்டை, இராதானூர் மற்றும் தீத்தாண்டதானபுரத்தில் முகமழகியான் பெருந்தெரு என்ற வணிகர்களின் குடியிருப்பும் இருந்துள்ளதை இவ்வூர்களிலுள்ள கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன14.

    பொருட்கள்

    இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள இடைக்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர்க் காலக் கல்வெட்டுகள் இப்பகுதியில் வணிகம் செய்யப்பட்ட பொருட்களைப் பற்றிய குறிப்புகளைக் காட்டுகின்றது. தேவிப்பட்டினத்தில் மிளகு, பாக்கு, கருஞ்சரக்கு, புடவை போன்றவை, கி.பி.13ஆம் நூற்றாண்டு வாக்கில் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன15. இத்துறைமுகப் பட்டினத்திற்குப் பல பகுதிகளிலிருந்து சரக்குகள் வந்து பின்னர் அவை பல இடங்களுக்குச் சென்றுள்ளன. மேலும், இங்கு ஏறுவன, இறக்குவன, எடுப்பன, நிறுப்பன, விரிப்பன, பிடிப்பன, அளப்பன, முகப்பன ஆகிய தன்மைகளையுடைய பலதரப்பட்ட வணிகப் பொருட்கள் வணிகம் செய்யப்பட்டதை கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது16. முக்கிய வணிகப் பொருளாகக் கீழக்கரையில் கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து இருந்திருக்கிறது17.

    போக்குவரத்துச் சாதனங்கள்

                இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் கடல்சார் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட சில போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. தேவிப்பட்டினம் துறைமுகத்தில் சிற்றுரு, தோணி போன்ற கலங்கள், கடல்சார் வணிகத்தில் சரக்குப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன18. மேலும், பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல, ஆட்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

    அயல்நாட்டு வணிகம்

                இராமநாதபுரம் வட்டாரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டினங்களுக்கும் இலங்கை, அரேபிய நாடுகளுக்கிடையேயும் மிக நெருக்கமான கடல்சார் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. இவ்வணிகத் தொடர்பில் தென்னிலங்கையைச் சார்ந்த வளஞ்சியரும் இசுலாம் சமயத்தைச் சார்ந்த அரேபிய வணிகர்களான அஞ்சு வண்ணத்தாரும் ஈடுபட்டிருந்தனர்.

    உள் வணிகம்

                கி.பி.13-14ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் வட்டாரப் பகுதியில் அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், நகரத்தார், நானாதேசிகள், பதினெண்விசயத்தார், கைக்கோளர்கள்  ஆகிய வணிகக் குழுக்கள், தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகிய கடற்கரை துறைமுகப் பட்டினங்களையும் தீத்தாண்டதானபுரம், இராதானூர், திருமாலுங்கண்டார்கோட்டை முதலிய கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளையும் மையமாகக் கொண்டு கடல்சார் வணிக நடவடிக்கைகளைச் செய்து வந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் இராமநாதபுரம் வட்டாரத்திற்கு அருகே இருக்கும் சிவகங்கை வட்டாரத்தில் பெரும்பாலும் நகரத்தார்கள் நாட்டின் உட்பகுதியில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் விற்ற பொருட்களைப் பற்றி, பிரான்மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது19. அதாவது உப்பு, நெல், அரசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், கடுகு, சுக்கு, சீரகம், நெல்லி, வெங்காயம், இரும்பு, பருத்தி, நூல், புடவை, எள் தைலம், குதிரை, யானை முதலியவற்றைப் பதினெண்விசையத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், நகரத்தார் ஆகிய வணிகக் குழுக்கள் வணிகம் செய்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

                இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை, முதுகுளத்தூர் பகுதிகள் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களையும், சிவகங்கை வட்டார உட்பகுதி வணிக நகரங்களையும் இணைக்கும் பகுதிகளாக இருந்துள்ளன. கடற்கரைப் பகுதிகள் மற்றும் உட்பகுதிகளிலிருந்த பல்வேறு வணிகக் குழுக்கள் குழு அமைப்பில் இயங்கியதால் இவர்கள் வணிகம் செய்த பகுதிகளிலிருந்த திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும் பராமரிப்பிற்கும் கொடைகள் வழங்கும்போது வணிகம் தொடர்பான தீர்மானங்களை இணைந்து எடுத்துள்ளனர்.

    சான்றெண் விளக்கம்

    1. Annual report of indian epigraphy for 1926 – 27, Archaeological survey of India, New Delhi, No.599.
    2. Noboru Karashima (ed), Ancient and Medieval Commercial Activities in the Indian Ocean: Testimony of Inscription and Ceramic Sherds, Taisho University, Tokyo, 2002.P.269.
    3. Annual report of Indian epigraphy for 1926 – 27, Archaeological survey of india, New Delhi, 599, 601.
    4. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
    5. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
    6. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.403, 1937, pp.213 – 214.
    7. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.405, 1937, p.215.
    8. V.Srinivasa Rao, South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, Nos.396, 398, 1979, pp.296 – 298
    9. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.396, 1937, p.209.
    10. V.Mahalingam, A Topographical list of Inscription in the Tamil Nadu and Kerala states, Vol.VI, Indian Council of Historical Research, New Delhi, 1978, P.410.
    11. மேலது, ப.411.
    12. மேலது, ப.224.
    13. பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், 2001, பக்.83 – 107.
    14. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
    15. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
    16. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
    17. South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, No.396, 1979, pp.296 – 297.
    18. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
    19. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.442, 1937.

    =================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆசிரியர் கூற்றுப்படியே இராமநாதபுரம் அதிகமான ஆற்று வடிநிலம் கொண்ட பகுதிதான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இராமநாதபுரம் 13 -16 நூற்றாண்டுகளில், சிறப்பாக, பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் வணிக மையமாய்ச் செழித்திருந்ததைத் தகுந்த சான்றுகளை வைத்துக் காட்டியுள்ளார். ஆசிரியர் தமது கடின உழைப்பை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுகாறும் அறியப்படாத அரிய வணிகச் செய்திகளை நூல் ஆதாரங்கள் மூலம் எடுத்துத் தந்துள்ளார். இதில் தரப்பட்டுள்ள தரவுகள், எதிர்கால இளம் ஆய்வாளர்களுக்குத் தக்க முறையில் திசை காட்டுவதாக அமைந்துள்ளன.

    =================================================

    Share
  • நீல ஜ்வாலைகள்


    மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்

    மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    ஒருவன் மழையில் ஓடிவந்து ரெஸ்ட்டோரண்டின் கிழக்குப் புறமுள்ள படிக்கட்டு வழியாக பாருக்குள் நுழைந்தான். முழுவதுமாக நினைந்திருந்தபோதும் அவன் அதை பெரிதுபடுத்தவில்லை.

    பகல் அப்போதுதான் முடியப்போகிறது. பாரில் பெரிய கூட்டமொன்றுமில்லை. அவனுக்கேற்ற சௌகர்யமான ஒரு இருப்பிடம் கிடைத்தது. தனது தோளில் தூக்கியிருந்த தோள்பையை அவன் பக்கத்து இருப்பிடத்தில் வைத்தான். ஒரு வெயிட்டர் அவனுடைய மேசைக்கருகில் வந்தான். அவன் ரெண்டு பெக் பிராண்டி சொன்னான்.

    “சேர்த்து சாப்பிடறதுக்கு ஏதாவது? பீ நட் மசாலா, எக் அன்டு பீஸ் க்ராம் ஃப்ரை, சில்லிச்சிக்கன், போர்க்………..”

    ‘ஒன்னும் வேண்டாம் ஊறுகாய் இருந்தா கொஞ்சம் கொண்டு வந்தா போதும்’.

    அவன் தனக்கு முன்னால் இருப்பவர்களையும் புதிதாய் வந்தவர்களையும் மேலோட்டமாகப் பார்த்தான். அவர்கள் யாரையும் அவனுக்குப் பழக்கமில்லை. பார் அறைக்குள் சிகரெட் புகை நிறைந்திருந்தது. ஒரு மூடுபனிபோல, புகையுடன் சேர்ந்து பலவகையான மதுக்களினுடையவும், உணவுப் பதார்த்தங்களினுடையவும் வாசனை சுற்றுப்புறத்தில் கலந்திருந்தது. இரண்டாவது பெக்கும் தீர்ந்தபோது அவனுக்குப் புது அனுபவம் தோன்றிற்று. அவனுக்கு சிகரெட் பழக்கமில்லை. கடைசி பெக்கிற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கிடையில் ஓர் இளைஞன் அதீத கோபத்துடன் கெளவுன்டருக்கு அருகில் செல்வதை அவன் கவனித்தான். ஒரு கையில் முடியப்போகும் நிலையில் சிகரெட். மறுகையில் வளைந்த பிடியுள்ள குடை.

    வேறொன்றும் செய்வதற்கில்லாததால் அவன் இளைஞனைப் பார்த்துக் கொண்டிருந்தான். கௌன்டரின் அருகில் சென்றபிறகும் அவனது கோபம் தணியவில்லை. கண் இமைக்கின்ற வேகத்தில் முதல் டம்ளர் காலியானது. மீண்டும் ஒரு டம்ளர்க்கு சைகைக் காண்பித்து ஒரு சிகரெட்டைப் பத்தவைத்தான்.

    “சார் …”

    வெயிட்டர் மூன்றாவது பெக் பிராண்டியுடன் வந்தான்.

    அவன் இளைஞனிலிருந்து கெண்ணெடுத்தான்

    “பில்லு கொண்டு வந்திருங்க …”

    வெயிட்டர் பில்லு கொண்டு வரும் போதும் அவன் கடைசி பெக்கைத் தொடவில்லை. பில்லின் தொகைக்கு மேல் ஐந்து ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வெயிட்டரை அனுப்பிவைத்தான். பிறகு அவன் பையிலிருந்து ஒரு சின்ன பாட்டில் விஷத்தை வெளியிலெடுத்தான். அது நீலநிறமாக இருந்தது. வெளியில் கனமழை பெய்து கொண்டிருந்து அவன் பிராண்டியில் விஷத்தைக் கலக்கின பிறகு காலி பாட்டிலை பையிலேயே வைத்தான். டம்ளரின் முக்கால் பாகத்திற்கு சோடா கலந்து அவன் தன்னுடைய கடைசி ட்ரிங்கை தயார் செய்து வைத்தான். அதோ சில நினைவுகளின் மின்னலோட்டம். கடந்தகாலத்தின் சில நிழலாட்டங்கள். பல குரல்கள். அவன் நிம்மதி பெருமூச்சுடன் கண்களை மூடினான். போதும் இனிமேல் முடியாது. கடைசி காலங்களை நினைக்கும் போது வாழ்க்கை ஒரு பெரிய விஷயமொன்றுமில்லை. முன்பு யாரோ கூறியதுபோல இந்த உலகம் பலதையும் பலவிதமாக பேசுகின்ற ஒரு முட்டாள். இதை யாரும் கொன்று புதைக்க வாய்ப்பில்லை. நம்மைக் காப்பாற்ற நம்மால் முடிந்ததை நாம்தான் செய்யவேண்டும். முன்னால் வைக்கப்பட்டுள்ள டம்ளரில் நீல ஜ்வாலைகள் படர்ந்தது. இனி இழப்பதற்கோ அடைவதற்கோ ஒன்றுமில்லை. காலம் முன்னோக்கிப் போகட்டும். எனக்கு ஓரடி கூட இனி போவதற்கில்லை. யாராவது என்றைக்காவது என்மேல் அன்பு காட்டியிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்.

    அவன் கண்களைத் திறந்து விஷம் கலக்கி வைத்த டம்ளர்க்கு நேராக கைநீட்டத் தொடங்கும் போதுதான் பார்த்தான் கவுன்டர்க்கருகில் நின்ற இளைஞன் தனது மேசைக்கு எதிரில் நிற்கிறான்.

    “அண்ணா எங்கிட்ட ரெண்டு லார்ஜீக்கு மட்டுந்தா காசு இருந்துச்சு. எனக்கு பத்தல. தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் ஒண்ணு கூடுதலா எனக்கு வேணும். கண்டிப்பா நா இத எடுத்துக்கறேன்……… கட்டாயமா நான் இதை எடுக்கறேன்.

    அவன் தடுப்பதற்கு முன்பே இளைஞன், அவன் தயாரித்து வைத்திருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

    “சாரி … சாரி யா”

    டம்ளரைக் கீழே வைத்து இளைஞன் கதவைப் பார்த்து நடந்தான். சூன்யமான டம்ளரை உற்றுப்பார்த்துக் கொண்டு அவன் அங்கேயே உட்கார்ந்தான்……..

    Share
  • படக்கவிதைப் போட்டி 202-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இராமலக்ஷ்மி எடுத்திருக்கும் இப்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 202க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்கள் இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    திருநீற்றுப் பூச்சுடன் பக்திப்பழமாய் அமர்ந்தபடி, பொத்தகத்தில் சித்தத்தைச் செலுத்தியிருக்கும் இப்பெரியவரின் முகத்தில் தெரிவது கைப்பான அனுபவங்கள் தந்த வருத்தமா? வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை விளங்கிக்கொண்டதால் வந்த விரக்தியா? புரியவில்லை!

    நம் ஐயத்தைத் தம் தீர்க்கமான கருத்துக்களால் தெளிவிக்கக் காத்திருக்கின்றனர் கவிஞர்கள் இருவர்; அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

    ”கடவுள் இல்லையென்று மறுத்த கல்லா இளமை கழிந்து, முதுமை உடலில் புகுந்து, பிள்ளைகளும்  விட்டகன்றே பின்னே,  தனித்த முதுமை தெய்வத்தின் துணையை நாடுகின்றது” என்று வாழ்வியல் உண்மையை எளிமையாய் விளம்பியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வளர்ச்சி…

    இளமையின் வேகம் கடவுள்களே
    இல்லை யென்று சொல்லவைத்தது,
    வளர்ந்து பிள்ளைகள் வேலைக்கென
    வேறிடம் பார்த்துச் சென்றபின்னே
    தளர்வுடன் உடல்வலு குறைந்தபோது
    தனிமை முதுமையில் வந்ததுவே,
    வளர்ந்தது பற்று தெய்வத்திடம்
    வந்து விட்டார் கோவிலுக்கே…!

    *****

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    நெறியில் பழுத்த பழம்
    நெற்றியில் இழுத்த திருநீற்றுச் சிவம்
    நேற்றைய பட்டறிவின் முதிர் நரை
    நேரற்ற சுருக்கங்கள் முதுமையின் முக்தி நிலை

    அச்சிட்ட தாளில் அப்படி என்ன தெரிகிறது?
    அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? இல்லை
    அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா?
    அழகானதோ அழுக்கானதோ அதுவும் ஒரு சுகம் தானே?

    எத்தனை சாதனைகள் எத்தனை சோதனைகள்
    எண்ணிக்கையில்லாத வாழ்க்கையின் பின்னல் முடிச்சுகள்
    எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய்
    எல்லாமும் எப்படியோ அவிழ்க்கப்பட்டு விட்டது!

    சிரிப்பாகத்தான் இருக்கிறது நுனி மரத்துச்
    சிறு குருத்து மட்டைகளுக்கு
    சிவந்து பழுத்த அடி மட்டைகளைப் பார்க்கும்போது
    சீக்கிரமே தாங்களும் பழுத்துவிடுவோம் என அறியாமல்!

    கடமைகள் முடித்தாகிவிட்டது
    கடன்களும் அடைத்தாகிவிட்டது
    கடந்த காலத்தில் தேட மறந்த
    கடவுள் மட்டுமே துணை கடைசிக் காலத்தில்

    இனி எல்லாம் அவன்தான் அவனே அன்பின் கூடு
    இயன்றதைச் செய்தே இன்புற்று வாழ,
    இனியவை தேடி இறைவனை நாடு
    இனி இல்லை என்றும் ஒரு கேடு!

    பட்டறிவின் முதிர்நரையோடு வீற்றிருக்கும் இந்த முதியவருக்கு அச்சிட்ட காகிதத்தில் தெரிவது என்ன? அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா? எதுவாக இருந்தால் என்ன? வாழ்வின் இறுதிக்கட்டத்துக்கு வந்தாகிவிட்டது! ஆதலால் கேடுநீங்க இறையை நாடி வந்துவிட்டது முதுமை!” என்று இம்முதியவரின் வாழ்க்கையை ஒரு சிறுகதையாய்த் தன் கவிதையில் தீட்டியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    மேல் சாதிப் பெண் மீது கீழ்சாதி ஆடவன் (புலையன், வண்ணான்) இரவில் கல்லோ குச்சியோ எறிந்தால் அவளை சாதி விலக்கி அந்த ஆடவனுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும் ஒரு சமூக வழக்கும் தான் இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி என்ற வழக்கம். மண்ணாப்பேடி என்றால் வண்ணாரிடம் அச்சம், புலைப்பேடி என்றால் புலையரிடம் அச்சம். இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய 106 வரி கல்வெட்டு குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஆணையை வேணாட்டு வேந்தர் வீரகேரளவர்மன் சிறைவாய் மூத்தவர் பிறப்பித்தார்.

    கல்வெட்டுப் பாடம்:

    கன்னி வியாழம் / நின்ற கொல்ல / ம் 800 70 1 (871) / தை மாதம் 20 7 (27) / சனியாட்செ / யும் சதயவும் / பூர்வ பக்கிஷத்து / பிறதி பதவும் சிங் / ஙங் கரணவும் பரி / கம நாமயோக / வும் இந்நாளா / ல் வீரகேரள வ / ற்ம சிறவாய் மூத்த / தம்பிரானார் கல்க் / குளத்து எழுந்த / ருளி  இருந்தருளி / கல்ப்பித்த படி / க்கு ரண்டு வக / மகாசனவும் கூ / டி கல்ப்பித்த மொ / ளியாவது தோ / வாளைக்கு மேக் / கு கண்ணாற்று / க்கு கிழக்கு கட / லினும் மலைக்கு / ம் அகத்து அகப் / பட்ட நாட்டில் பில / பேடியும் மண்ணா / ப் பேடியும் இல்லா / எந்த நம் தம்புரா / ன் திருவுள்ளம் / பற்றிக் கல் / ப்பிச்ச ப / டிக்கு ரண் / டு வக மாச / னங் கூடி / கல்ப்பிச்சு / கல்லு வெ / ட்டி நாட்டி / ய கல்ப்பினை / மறுத்து பி / லப்ப பேடியு / மண்ணாப் / பேடியும் உ / ண்டாம் கா / லத்து / மண்ணாப் / பேடியும் வகி / ற்றுப் பிள்ள / ஆதியா தோ / ண்டி வெ / ட்டுமாறு / ம் இந்த க / ல்ப்பினை மறு / த்து பிலப் / பேடியும் ம / ண்ணாப் / பேடி எந் / த வகை பொண்ணு/ ம் பிள்ளை / க்கு உண்டா / யால் / ப் பெண்ணு / ம் பிள்ள / குளிச்சு / கர ஏறிக் / கொண் / டால் தோ / ழமல்ல / எந்நும் க / ல்ப்பிச்ச / து. இ வண் / ணம் புல் / லும் பூமி / யும் கல்லு / ம் காவே / ரியும் ஒள் / ள காலத் / து நடக்கு / மாறும் க / ல்ப்பிச் / சது. திருவயத்து ம / ற்ற கண்டு வ / த்திக் கரிக்கு / ம்  திருவுள்ளம் ப / ற்றிக் கல்ப்பிச்சது./ திருவிதாங் / கோட்டு தெண்ட / ப்படை வீட்டில் / வடக்கு வாசலில் / கல்லு வெட்டி நாட் / டினது. இந்தக் / கல்லுக்கு யாதாமொ / ருத்தர் ஒரு கால / ம் யாதாம் ஒரு / வர் விக்கிநஞ் / செய்தார் அ / வர்கள் கெங்க / கரையில் காரா / ம் பசுவை கொ / ண்ட தோசத் / தில் போவா / ராகவும்.  

    சொற் பொருள்: கொல்லம் – கி.பி. 824-825 ல் தொடங்கிய ஒரு சேர ஆண்டுக் கணக்கு; வியாழம் – குருபார்வை ; சனியாழ்ச்சை – சனிக்கிழமை; பூர்வ பக்ஷம் – வளர்பிறை; எழுந்தருளி – வந்திருந்து; இருந்தருளி – தங்கியிருந்து; மகாசனம் – பொதுமக்கள்; கல்பித்த – வழிகாட்டிய, பிடிபாடு தந்த; மொழியாவது – உரையாவது, பேச்சு; கண்ணாறு – வாய்க்காலை ஒட்டி அமைந்த பாதை; எந்த – என்ற; தம்புரான் – வேந்தன், உயர்குடிமகன், noble man; கல்பினை – பிடிபாடு, வழிகாட்டுநெறி, guidelines; மறுத்து – மறுதலித்து, புறந்தள்ளி, reject; வகிற்று – வயிற்று; உண்டாம் – கருவுண்டாகும் சமயத்து; ஆதியா –   ; எந்நும் – என்றும்; ஒள்ள – உள்ள; திருவயம் – வயம் என்றால் நீர், குதிரை என்ப்பொருள். திரு என்ற சிறப்படையை ஒட்டி திருக்குளம் என்ற கொள்ளலாம்.; வத்திக் கரி – ; தெண்டப்படை வீடு – படைக்கொட்டில்; யாதாம் ஒருவம் – எவரேணும் ஒருவர்; கொண்ட – கொன்ற;

    விளக்கம்: கன்னி இராசியும் குருநோக்கும் நின்ற கொல்லம் ஆண்டு 871 (கி.பி.1695-1696) தை 27 ஆம் நாள் சனிக்கிழமை சதய நட்சித்திரம் கூடிய வளர்பிறையான இந்நாளில் வேணாட்டு வேந்தன் வீரகேரளன்வர்மன் சிறைவாய் மூத்தவர் கல்குளத்தில் வந்திருந்து தங்கியிருந்த காலப் பொழுதில் ஆணையிட்டபடி புலையர் வண்ணார் ஆகிய இரு சாதி பொதுமக்கள் கூடி இருக்க வழிகாட்டிநெறியால் சொன்னதாவது, தோவாளைக்கு மேற்கு வாய்க்காலுக்கு இப்பாலும் கிழக்கு கடலின் மலைக்கும் இடைப்பட்ட நாட்டில் புலைப்பேடி மண்ணாப்பேடி வழக்கம் இல்லாது ஒழிக என்று வேந்தன் முடிவு கொண்டு அதற்கு வழிகாட்டுநெறி வழங்கியபடி இரு வகை சாதிமாரும் கூடி பிடிபாட்டு வழிகாட்டுநெறியை ஏற்று அதைக் கல்லில் வெட்டி நாட்டிய உடன்பாடு. இந்த உடன்பாட்டு ஆணையைப் புறந்தள்ளிப் புலைப்பேடியும் மண்ணாப்பேடியும் ஏற்படும் காலத்தே மண்ணாப்பேடி வயிற்றுப் பிள்ளையை குழிதோண்டி வெட்டிக் கொல்ல வேண்டும். இந்த பிடிபாட்டை வழிகாட்டுநெறியைப் புறந்தள்ளிப் புலைப்பேடி, மண்ணாப்பேடி ஆகிய எந்த வகையால் பெண் கருவுற்றாலும் பெண்ணும் பிள்ளையும் தீட்டுகழியக் குளித்து கரை ஏறினால் எந்த தோஷமும் இல்லை குற்றமும் இல்லை என்றும் வழிகாட்டுநெறி தரப்படுகின்றது. இவ்வண்ணம் புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் நிலைக்கும் காலம் வரை இந்த பிடிபாடு செல்வதாகச் சொல்லப்பட்டது. இது திருவிதாங்கோட்டில் உள்ள படைக் கொட்டிலின் (armoury) வடக்கு வாசலில் கல்வெட்டி நாட்டப்பட்டது. இந்தக்  கல்லுக்கு எவரேனும் ஒருவர் கேடு செய்தால் அவர் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற குற்றத்தை பாவத்தை அடைவராக என்று முடிக்கப்பட்டுள்ளது.  மேல் சாதி கீழ் சாதி கலப்பை சமூகத்தில் அறவே ஒழிக்கும் முயற்சி இது என்பது புலனாகின்றது. இது சரியான நடவடிக்கை என்றால் இதை ஏன் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தடைசெய்ய வேண்டும்? ஏன் முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தடை செய்யவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. அப்படியானால் புலையர், வண்ணார் போன்ற சாதிகள் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளிற் போல் இழிவாக, தாழ்வாக அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் எண்ணப் படவில்லை, நடத்தப்படவில்லை என்பதே காரணமாகலாம். காலத்தைச் சுற்றி வளைத்து சுருக்கியதில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டில் உருவாகி 17 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றது என்ற கருத்து தான் மேலெழுகின்றது. ஆனால் வெள்ளையர்கள் ஏதோ ஒரு மூலையில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த மனுதர்மத்தை அச்சில் எடுத்துப்போட்டு அது தான் இழிவுபடுத்தியது, தாழ்வுபடுத்தியது, ஒடுக்கியது என்று சொல்வதைக் கல்வெட்டுச் சான்றுகள் பொய்ப்பிக்கின்றன. ஒரு இடத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமையை எல்லா இடங்களிலும் நிகழ்ந்ததாகக் காட்டுவது எத்தகு குற்றமோ அத்தகு குற்றம்தானே பிற்பட்ட நூற்றாண்டு சமூகக் கொடுமையை இன்னும் முற்றபட்ட நூற்றாண்டில் நடந்தேறியதாகக் காட்டித் திணிப்பதுவும், இதாவது 400 ஆண்டு கால நிகழ்ச்சியை 2,000 ஆண்டுகளாக இழித்து தாழ்த்தி ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதும்.

    கல்வெட்டில் சேரநாட்டு பேச்சு வழக்குத் தமிழ் ஆங்காங்கே தலைப்படுகின்றது.

    புலைப்பேடி மண்ணாப்பேடி பற்றி அறிய https://www.jeyamohan.in/20559#.XHtDP8Azbcc

    பார்வை நூல் கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள், 2008 வெளியீடு, பக். 141-144. தமிழ்தாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை – 8.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 203

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரவீண் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 18

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 18 –வெஃகாமை

    குறள் 171:

    நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்

    மத்தவங்களோட பொருள ஒருத்தன் அநியாயமா அபகரிச்சாம்னா அவனோட குடும்பம் அழிஞ்சி போவும், பழியும் வந்து அண்டும்.

    குறள் 172:

    படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்

    நியாயத்துக்கு பயந்தவன் மத்தவங்க பொருள அனுபவிக்கணுங்குத நெனப்புல பழி பாவம் செய்ய மாட்டான்.

    குறள் 173:

    சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்

    அறத்தால வருத நெலையான பயன விரும்புதவங்க ஒடனடியா பயன் கெடைக்கும் ங்குத நெனைப்புல மத்தவங்க பொருள எடுக்க நியாயம் இல்லாத செயல செய்யமாட்டாங்க.

    குறள் 174:

    இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்

    ஒண்ணுமில்லாம போய் ஏழ்ம நெல வந்தாலும் அஞ்சு பொறிய அடக்கின படிச்ச பெரியவங்க மத்தவங்க பொருளுக்கு ஆசப் பட மாட்டாங்க.

    குறள் 175:

    அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெஃகி வெறிய செயின்

    பொறத்தியார் பொருள் மேல ஆச வச்சி நியாயமில்லாத வழில அத எடுக்க நெனைச்சவனுக்கு எல்லாத்தையும் படிச்சு அறிஞ்சிகிட்ட நல்ல புத்தி இருந்தாலும் அதால என்ன பிரயோசனம்.

    குறள் 176:

    அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்

    அருளைப் பெறுததுக்கு ஆசப்பட்டு குடும்ப வாழ்க்கைல நல்லதனமா இருக்குத ஒருத்தன் தெரியாத்தனமா மத்தவம் பொருளுக்கு ஆசப்பட்டு கெட்டது செய்தாம்னா அழிஞ்சு போவான்.

    குறள் 177:

    வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்

    மத்தவம் பொருள புடுங்கிக்கிட்டு வாழ்க்கைல வளமா இருக்கணும்னு நெனச்சாம்னா அந்த வளத்த அனுபவிக்க நேரத்துல அது நல்லதில்ல னு உணத்திடும்.

    குறள் 178:

    அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்

    சொத்து கொறையாம இருக்கதுக்கு ஒரே வழி மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான்.

    குறள் 179:

    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
    திறனறிந் தாங்கே திரு

    மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான் அறம் னு நெனைக்க பெருமக்கள் கிட்ட (திருமகள்) லச்சுமி தானே போய் குடியிருப்பா.

    குறள் 180:

    இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
    வேண்டாமை யென்னுஞ் செருக்கு

    பின் விளைவ எண்ணாம மத்தவம் பொருள் மேல வைக்குத ஆச நமக்கு அழிவ கொடுக்கும். ஆசப்படாம இருக்குதது வாழ்க்கைல வெற்றிய கொடுக்கும்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 28

    திருச்சி  புலவர் இராஇராமமூர்த்தி

     சுந்தரரைத்  தடுத்தாட்  கொள்ள இறைவன் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி, பொது மன்றில்  ஆவணம் எதையும் சரியான வகையில் பணிந்திடுதல்  வேண்டும் என்ற வழக்கு மன்ற நடைமுறையை  உறுதி படுத்துகிறது. வழக்கில் ஈடுபட்ட வாதியாக சிவபெருமான், வழக்கின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரதிவாதியாக  சுந்தரர், வழக்கை நடத்தும் ஊர்ச்சபையோராக வெண்ணைநல்லூர் அந்தணர்  என்ற மூவகையினருக்குள் இந்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், சேக்கிழார் வழங்கும்  இப்பெரிய புராணத்தைப் படிப்போர் அனைவரும்  மறைமுகமாகப் பங்கேற்றுள்ளனர்!

    இந்த வழக்கைக் கொண்டுவந்த சிவபெருமான் தம்மை மறைத்துக் கொண்டு  ஒரு முதிய அந்தணனாக உள்ளே  நுழைகிறார்! அவர் செய்வது வியப்புக்கு உரிய மாயச்  செயல் என்பதை,  வாசகராகிய நாம் மௌனசாட்சியாக அமைந்து  உணர்ந்து கொள்ளத்  தலைப்படுகிறோம். சுந்தரரைத்  தடுத்து ஆட்கொள்ளவே  இறைவன் இதனைச் செய்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் நாம், இந்த வழக்கு  நிகழ்ச்சியைத்  தொடர்ந்து ஆழமாக கவனிக்கிறோம்!

    சுந்தரர் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த நல்லூர் அரங்கில் நுழைந்த முதியஅந்தணர் ‘’முதலில்  இந்த மொழியைக்  கேளுங்கள்’’ என்று கூறுகிறார்! அவர் அந்தணனாகவும்  முதியவராகவும்   இருந்தமையால்,  அனைவரும்வணங்கி வரவேற்கின்றனர்.   அப்போது  சுந்தரரைநோக்கி , ‘’நுமக்கும்  நமக்கும்  இடையில் உள்ள   இசைவினால் அமைந்த வழக்குஓன்றுஉண்டு! அதனை முடித்தபின் திருமண வேள்வியைத்    தொடங்குக! ‘’ என்றார். சுந்தரரும் அந்தவழக்கை  முடிக்காமல் வதுவை  செய்யேன்’’ என்று உறுதியளிக்கிறார்! உடனே , ‘’இந்நந்நாவலூரன் எனக்குஅடிமை!’’ என்கிறார். ‘’உலகியலில் அந்தணர் மற்றவர்க்கு அடிமையாதல் இல்லை !   ஆதலால்  உங்கள்   செயல்  நகைப்புக்கு உரியது! ‘’ என்றார். அந்த நேரத்தில், ‘’அக்காலத்தில் உன்  தந்தையின்  தந்தைக்கும் எனக்கும் இடையில் அமைந்த அடிமை ஓலை ,  என்கையில்  இருக்கிறது! எதற்குச்   சிரிக்கிறாய்? ‘’ என்கிறார் அந்தணர் !  ‘’அந்தணர்  மற்றோர் அந்தணருக்கு அடிமை !  என்று பேசும்நீ பித்தனோ? ‘’ என்றனர்.  அதனைக் கேட்ட அந்தணர், ‘’பித்தன் என்றாலும்  பேயன் என்றாலும்,  யான்  கலங்கேன் ! அறிவாற்றலுடன்   பேசாமல்  அடிமைத் தொழில்      புரிக!’’ என்றார்.   சுந்தரர் ஓலையைக் காட்டுக    என்று கூறி,  அந்த அந்தணரிடம்  பிடிவாதமாக  நெருக்கி அவர்கையில்இருந்த ஓலையைப் பிடுங்கிக்   கிழித்து எறிகிறார்!  இவ்வாறு சாதி  ஆணவத்தால்  சாட்சியத்தைக்  கலைத்த குற்றத்தைப் புரிந்த சுந்தரரின்  செயலை  மன்றத்தினரிடம் கூறி,  அந்தணர்  முறையிடுகிறார்!  அதுகேட்ட  அவையினர், ‘’வியப்புக்குரிய  இந்த  வழக்கினை இங்கு   வைத்த  நீங்கள் எந்த  ஊரினர்? ‘’என்றுகேட்கின்றனர் அப்போதுஅந்தணர், ‘’எம்மூர்  திருவெண்ணெய் நல்லூர்!’’ என்று  கூறி, ‘’இங்கே முறைமாறி நடந்து   கொண்டு  , ஓலையைக் கிழித்த  இந்தச் சுந்தரர் என்அடிமையே! ‘’ என்கிறார். அவையினர் ‘’ அப்படியானால்  வழக்கினைக்  கேட்பதற்கு உரிய  நிலப்பகுதி ( JURISDICTION)  அதுவே  எனக்கூறி  அனைவரும் அவ்வூருக்குச்  செல்கின்றனர்!

    ‘’அந்த  ஊரிலும்  நீயே என்அடிமை  என்பதை  நிறுவுவேன்’’ என்றஅந்தணர் ,  அனைவரையும் அழைத்துச்  சென்று முறையிட்டார்!  அவையினர்  ‘ உலகில் இல்லாத புதுவழக்கினைக் கொண்டுவந்த நீரே இதனை ஆட்சி  ஆவணம்,  அயலார் காட்சி  என்ற வகைகளில் நிறுவவேண்டும்!’’ என்றனர்.   அந்தணர், , ‘’ அவர்கிழித்தது படிஓலை! என்னிடம்   ‘மூலஓலை’  உள்ளது!’’ என்றார்.  இக்காலத்தின்  duplicate , original ஆகியவற்றை அதுகுறிக்கும்.  எதற்கும் ஒர்  ஒளிப்படம் (xerox)  எடுத்து வைத்துக்  கொள்வது நல்லது என்பதை இறைவனே அன்று  காட்டிய   நிகழ்ச்சி  அது !  ‘’அப்போதும்  இந்த சுந்தரர்,  வல்லடி வழக்காக  அந்த மூலஓலையையும்  சிதைக்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும்!  ‘’ என்கிறார்.  தம் மிடற்றில் வைத்த இருள்நிற நஞ்சை மறைத்துக் கொண்டு , வேடமிட்டு வந்த சிவபிரான் திருக்கரத்தில் இருந்த  ஓலையை அறமன்றத்தின்  ‘கரணத்தான்’ பணிவுடன்  வாங்கிப் படித்தான்!  ஓலையில் அக்கால ஆவணம் எழுதும்   முறைப்படி  வாசகம் அமைந்திருந்தது!

    ‘’விச்ச  தின்றியே  விளைவுசெய்குவாய் ,
            விண்ணும்  மண்ணகம்  முழுதும்  யாவையும்
    வச்சு  வாங்குவாய் !’’

     என்பார்  மணிவாசகர்.   இதனையே  கம்பர்,

    . ‘’உலகம் யாவையும்  தாம்  உளவாக்கலும்
          நிலை பெறுத்தலும்  நீக்கலும்   நீங்கலா
    அலகிலா   விளையாட்டு  உடையார் ‘’

    என்கிறார்! தம்  சங்கற்பத்தால் புதிதாக  எதையுமே  தோற்றுவிக்கும்  ஆற்றல் பெற்றவர் இறைவன்! ஆகவே சிவபெருமான்  சுந்தரரைத்  தடுத்தாட் கொள்ளும் போது , அடிமைச் சாசனம்  ஒன்றை அவராக உருவாக்குகிறார்! அந்தச் சாசனம்  முறையாக எழுதப்பட்ட சாசனம் போல் தோன்ற , மிகப் பழையதாய் காட்சி யளிக்கச் செய்கிறார்! அதனை ஆராய்ந்த அவையின் கரணத்தான் (கணக்குப்பிள்ளை) அதன்பழமையுடன், பழங்கால எழுத்தின் ஒப்புமையையும் ஆராய்ந்து அந்தஓலை  மூலஓலையே  என்பதை  உறுதி செய்கிறான்!  அந்த ஓலையின் மேலெழுத்துஇட்ட பெரியோர்களின் எழுத்துடன் ,   அரண்தரு காப்பிலிருந்து எடுத்த பழைய ஓலை எழுத்தினை ஒப்பு  நோக்கி , ‘’இரண்டும்ஒத்திருந்தது, என்னே இனிச்செயல்! ‘’ என்று  கூறினான்.

    இனி அந்த  மூலஓலை வாசகத்தைப் படிப்போம் . ‘’அரிய  மறைகளைக் கற்ற, நாவலந்தீவின்  ஆதிசைவக்குலத்தைச்  சார்ந்த ஆரூரனாகிய  யான் எழுதிக் கொடுத்த  அடிமையோ ஓலை இது! பெருமுனிவனாகிய   பித்தனுக்கு,  யானும்  என்பால்  தொடர்ந்து வரும் முறையான  மரபினோரும்  வழித்தொண்டு  செய்வோம். என்று உறுதியளித்து,  இந்த ஓலையை  இருமையாலும் (மனத்தாலும்  வாசகத்தாலும்)  இதற்கு  இசைந்து சுய நினைவோடும்எழுதிக் கொடுத்தேன்.   இவை என் எழுத்து! ‘’  என்பதாகும்.  இந்த ஓலையில் ‘இருமையால்  எழுதி நேர்ந்தேன்  இதற்கு  இவை என் எழுத்து ‘ என்பவை,  இன்றும் பத்திரம் எழுதுவோர்  கடைப்பிடிக்கும்  மரபாகும்.

    சோழ நாட்டின்  முதலமைச்சராக  விளங்கிய சேக்கிழார் பெருமான்  அக்கால நடைமுறைகளை  நீதி மன்றத்துக்கே  உரிய   வாசகங்களுடன்  அமைத்து இந்தப் பகுதியை எழுதியருளி  உள்ளார்.    இனி  இப்பாடலைப் படிப்போம்.

    அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
    பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
    வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
    இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.

    இப்பாடலில், ஆன்மவியலின்படி பித்தனாகிய இறைவனுக்கு சுந்தரரும் அவர்வழி வந்த  நாமும்  அன்றும்  இன்றும்  என்றும் வழி வழியாகத் தொண்டு  செய்வோம்  என்று எழுதிச் சான்றளிக்க வேண்டுமா  என்ன?  என்றும்  உள்ள உண்மையையே கற்பனைச்   சிறப்புடன்   ஆவணப் படுத்திய   சேக்கிழார் பெருந்தகையின்  புலமைத் திறம் போற்றுதற்கு உரியதல்லவா?

    Share
  • பாட்டி பெயர்

    -நிர்மலா ராகவன்

    முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.
    எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள்.

    பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப் போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான்.

    “குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார்.

    ”பாட்டி பேருதான்!”

    அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!”

    “போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”.

    “அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!”
    மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு.

    மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகளின் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம்.

    “ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?”

    சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “எனக்கு அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!”
    `எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப் போச்சு!

    இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ.
    ஸாம்’.

    படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை.

    “ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.”

    “அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”.

    அவனுக்குப் புரியவில்லை.

    “பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார்.

    “சம்பூர்ணம். தெரியாத மாதிரி கேக்கறீங்களே!”

    “ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!”

    சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா?

    முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ?

    `நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான்.

    `நான் சொல்ல வந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன் மேலேயே பழியைத் திருப்புவார்!

    “ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு.

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 6

    -மேகலா இராமமூர்த்தி

    பன்னிரண்டாம் நூற்றாண்டுப் பெண் படைப்பாளர்களில் தமிழக எல்லையைக் கடந்த பெண்ணொருவரையும் நாம் அடையாளம் காணமுடிகின்றது. அவர்தாம் வடகன்னடப் பகுதியில் இப்போதைய ஷிமோகாவுக்கு அருகிலுள்ள ‘உடுதாடி’ என்ற கிராமத்தில், வீரசைவ மரபில் தோன்றிய அக்கமாதேவி எனும் பெண் கவிஞர். தம்முடைய கிராமத்தில் சென்னமல்லிகார்ச்சுனர் என்ற பெயரில் கோயில் கொண்டிருந்த சிவனிடத்தில் குழந்தைப் பருவம் முதலே மனத்தைச் செலுத்தியிருந்த அவர், உலகியல் பற்றற்றவராய்த் திகழ்ந்தார்.

    மணப்பருவத்தில் பேரழகுப் பெண்ணாய்த் திகழ்ந்த அவரைக் கண்ட  அப்பகுதியை ஆண்ட சமண சமயத்தைச் சேர்ந்த கௌசிகன் என்ற மன்னன் அவரை மணக்கவிரும்பி அவர் பெற்றோரிடம் காவலரை அனுப்ப, தம் மகளின் பற்றற்ற மனத்தை அறிந்திருந்த அக்கமாதேவியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். ஆனால் அக்கமாதேவி திகைக்கவோ கலங்கவோ இல்லை. மணம்பேசவந்த காவலரிடம், “நான் என்னைச் சென்னமல்லிகார்ச்சுனருக்கே அர்ப்பணித்துவிட்டேன்; அரசமாளிகையின்மீது எனக்கு எவ்விதப் பிடிப்பும் பற்றும் கிடையாது” என்று மறுக்கின்றார். காவலர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே, சற்றுசிந்தித்த அக்கமாதேவி. “சிவபூசை, சிவனடியார் உபசாரம், சிவத்தொண்டு போன்றவற்றில் நான் ஈடுபடுவதற்கு எத்தகைய தடையையும் உங்கள் மன்னன் விதிக்கக்கூடாது; அப்படியாயின் அவனை நான் மணப்பேன்!” என்று நிபந்தனை விதித்தார்.

    அவற்றை அறிந்த மன்னன் அக்கமாதேவியின் நிபந்தனைகளுக்கு உடன்படவே, அவனை மணந்தார். எனினும் சிறிது காலத்துக்குள்ளாகவே இகவாழ்வில் துளியும் நாட்டமில்லாத மாதேவிக்கும் மன்னனுக்கும் மனவேறுபாடு ஏற்பட்டுவிட்டது.

    “இகத்துக்கொரு கணவன் பரத்துக்கொரு நாயகனோ?
    உலகியலுக்கொப்ப ஒரு கணவன், ஆன்மிக நாயகன் வேறொருவனோ?
    என்கணவன் சென்னமல்லிகார்ச்சுன தேவனே!”
    என்று தீர்மானித்து தம்முடைய ஆடை அணிமணிகளைத் துறந்து அரண்மனையைவிட்டு வெளியேறுகின்றார் அக்கமாதேவி. திகம்பர (ஆண்) சந்நியாசிகளைப் போல் ஒரு பெண் ஆடைகளைத் துறப்பது என்பது அன்றைய சமூகத்துக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. (ஏன் இன்றும்கூட அஃது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றுதானே?) எனினும் அதையெல்லாம் அந்தப் பெண்துறவி பொருட்படுத்தவில்லை. தம்முடைய நீண்ட கூந்தலால் உடலை மறைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் பயணித்தார்.

    அக்காலத்தில் கன்னட நாட்டில் சிறந்த சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளராகவும், வீரசைவ சமய ஞானியாகவும் விளங்கிய பசவண்ணர் என்பவர் வாழ்ந்த கல்யாண் நகர் என்ற பகுதியைச் சென்றடைந்த அக்கமாதேவியார், அங்கே வீரசைவ அடியார்கள் சிலரோடு உரையாடி மகிழ்ந்தார்.

    ”அழகு என்பது…
    கண்ணுக்கழகு குருவையும் பெரியோரையும் காணுதல்
    காதுக்கழகு பெரியோரின் புகழ்ப்பாடல்களைக் கேட்டல்
    சொல்லுக்கழகு உண்மை பேசுதல்
    உரையாடலுக்கழகு நல்ல பக்தர்களின் சொற்களைக் கூறல்
    வாழும் வாழ்க்கைக்கு அழகு நல்லோர் தொடர்பு
    இவையற்ற வாழ்க்கை வாழ்தல்
    எதற்குப் பயனய்யா, சென்னமல்லிகார்ச்சுனா?”
    என்பது அக்கமாதேவியாரின் கவிகளில் ஒன்று.

    இவருடைய கவிதைகள் வசன கவிதை (free verse) என்னும் வகையைச் சேர்ந்தவை. இதுவரை நமக்கு இவருடைய கவிவசனங்களாக முந்நூற்று நாற்பத்து இரண்டு (342) கிடைத்துள்ளன. இவையனைத்தும் பக்தி இலக்கியம், பற்றற்ற ஞானமார்க்கம் எனும் இரண்டு துறைகளிலும் ஒருசேரப் பயணித்த சிறந்த ஆளுமைகளில் ஒருவராக அக்கமாதேவியை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

    இவரையடுத்து, வட நாட்டைச் சேர்ந்தவரும் இறைநேயச் செல்வியுமான மற்றொரு பெண் படைப்பாளரையும் 16ஆம் நூற்றாண்டில் நாம் இனங்காணமுடிகின்றது. வெறும் இறைநேயர் என்று அவரை நாம் சுருக்கிவிடமுடியாது. அதற்கும் மேலே ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்கின்ற அவர் வேறுயாருமில்லை… இராஜஸ்தான் மன்னனான ராணா ரத்தன்சிங்கின் மகளாகப் பிறந்து கிருஷ்ணபக்தையாகக் கொண்டாடப்படும் மீராபாய் என்ற பக்தமீராவே அவர்.

    மீரா சிறுகுழந்தையாக இருந்தபோது ஓர் இரவலர் அவரிடம் கிருஷ்ணனின் சிறிய சிலை ஒன்றைத் தந்தாராம்; அதுமுதலே அச் சிறுசிலைமீது பேரன்புகொண்டவரானார் மீரா என்று சொல்லப்படுகின்றது. ஒருநாள் வீதி வழியே திருமண ஊர்வலம் ஒன்று செல்வதைக்கண்ட சிறுமி மீரா, தம்மருகில் நின்று கொண்டிருந்த அன்னையிடம் வருங்காலத்தில் தம்முடைய மணவாளன் யார் என்று கேட்க, அன்னையோ மகளின் கையிலிருந்த கண்ணன் சிலையை விளையாட்டாய்ச் சுட்டிக்காட்ட, அதுமுதல் அச்சிலையையே தம் மணவாளனாக வரித்துவிட்டார் அவர் என்கிறது மீராவின் வரலாறு.

    ஆனாலும் பருவம் வந்தபின் குடும்பத்தாரின் வற்புறுத்தலின்பேரில் ராணா கும்பா அல்லது போஜராஜன் என்றழைக்கப்பட்ட மேவாரின் மன்னனை மீரா மணந்தார். சிறிதுகாலத்திற்குப் பின் போஜராஜன் ஒரு போரில் இறந்துவிட, கணவனை இழந்த இராஜபுத்திரப் பெண்கள் பின்பற்றிய ’சதி’ என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மீரா பின்பற்ற மறுத்திருக்கின்றார். அக்காலத்தில் இச்செயலை பெரிய புரட்சி என்றே சொல்லவேண்டும்.  

    தொடர்ந்து கண்ணனின் திருக்கோயில்களுக்குச் சென்றுவந்துகொண்டிருந்த மீரா, தம் உள்ளத்திலிருந்து பொங்கிப் பிரவகித்த இசைவெள்ளத்துக்கு ஏற்பக் கால்களில் சலங்கை கட்டி, பொதுமக்கள் முன்பு ஆடவும் செய்திருக்கின்றார்.

    பொதுமக்களோடு இரண்டறக் கலந்து பழகும், அரச குடும்பத்துப் பெண்களுக்குச் சிறிதும் பரிச்சயமில்லாத, புதுவழக்கத்தை மீரா ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போஜராஜனின் தம்பியும் மேவாரின் மன்னனுமான விக்ரமாதித்யா மீராவைக் கொல்லக்கருதி பிரசாதத்தில் விடத்தைக் கலந்துகொடுக்க, அதனை இறைப்பிரசாதமாகவே மீரா உண்டிருக்கின்றார்; ஆனால் அவ் விடம் அவரைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. அந்நிகழ்வை விளக்கும்வகையில் மீரா பாடியதே “Vish Kaa Pyaalaa Raanaajee Bhejyaa; Peevat Meeraa Haansee Re” (The king sent a goblet of poison as a gift. Mira drank it all in one gulp, and laughed) என்ற பாடல் என்று அவர் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

    எனினும், மன்னனின் தொல்லைகளும் கொலைமுயற்சிகளும் தொடரவே, மீரா மேவாரிலிருந்து புறப்பட்டு பிருந்தாவனத்தையும் பிறகு துவாரகையையும் அடைந்திருக்கின்றார்; துவாரகையில் அவர் கண்ணனோடு இரண்டறக் கலந்தார் என்று நம்பப்படுகின்றது. மானிடப்பெண்ணான மீரா, தாம் விரும்பியபடியே கண்ணபெருமானோடு இப்புவியிலேயே இரண்டறக் கலந்தார் என்பது உண்மையானால் அஃது சாமானியர்கள் செய்யமுடியாத மகத்தான சாதனையே!

    இதுமட்டுமல்லாது பல புதிய சாதனைகளையும் தம் வாழ்வில் புரிந்தவராகவே மீராவை நாம் கருதவேண்டும். முதலாவது, இராஜபுத்திர அரச வழக்கப்படி கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் என்ற எழுதாத சட்டத்தை (Unwritten Law) அவர் தவிடுபொடியாக்கியது; இரண்டாவது, அரச குடும்பத்துப் பெண்கள் என்றால் பொதுமக்களிடமிருந்து விலகியே இருந்து தம் மேட்டிமைத்தனத்தைப் பறைசாற்ற வேண்டும் என்ற வழக்கத்தை அவர் தகர்த்தெறிந்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான அவரின் சாதனை, அரச குடும்பத்துப் பெண்ணான அவர், தாழ்த்தப்பட்ட (தலித்) வகுப்பைச் சேர்ந்த ஒருவரை (Guru Miliyaa Raidasjee) தம் குருவாக ஏற்றுக்கொண்டது.

    அத்தோடு, தம் இறைப் பாடல்களையும் (பஜன்கள்) மக்கள் மொழியான விரஜமொழியிலேயே (Vrajbhasha) அவர் எழுதியிருக்கின்றார் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

    ஆண்கள் செய்த சீர்திருத்தங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டுப் பாராட்டும் மாந்த சமூகம், அவற்றையே ஒரு பெண் செய்தால் அவற்றை அங்கீகரிப்பதுமில்லை; அவளைப் பாராட்டுவதுமில்லை என்ற புரிதலையே இத்துணைச் சீர்திருத்தங்கள் செய்த ’புரட்சி மீரா’வை வெறும் ’பக்த மீரா’வாகவே கொண்டாடும் சமூக மனநிலை நமக்குப் புலப்படுத்துகின்றது.

    [தொடரும்]

    *****

    துணைநின்றவை:

    https://en.wikipedia.org/wiki/Akka_Mahadevi
    https://www.thehindu.com/books/books-authors/meera-bai-the-queen-who-danced-on-the-streets/article5699143.ece
    https://en.wikipedia.org/wiki/Meera       

     

     

    Share