Blog

  • பெருங்கதையில் சோதிடக்கலை

                                                                                                                                  

      மு. பூங்கொடி

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    தமிழ் உயராய்வு மையம்

    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

    திருநெல்வேலி – 627008

    ——————————————————————-

         ”சோதிடம்” என்பதற்குச் “சோதிட சாத்திரம்”, “நன்னிமித்தம்”, “சாத்திரங்களில் ஒன்று”, என்று தமிழ் அகராதிப் பொருள் தருகின்றது1. கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்து ஒருவரது வாழ்க்கையில் தக்க பலாபலன்களைக் கணிக்கும் சாத்திரம் சோதிட சாத்திரமாகும். இதைக் கணித்துக் கூறும் நிபுணர் “சோதிடர்” எனப்படுகிறார். இவைகளேயன்றி எண் சோதிடம், கைரேகை சாத்திரம் என்பவையும் இதில் அடங்கும். மற்றும் பெயர் ராசி பார்த்தல், பூ வைத்துப் பார்த்தல் முதலியவற்றையும் சோதிடத்தின் கூறுகளாகக் கருதலாம். ”கோசாரம்” என்பதும் இதில் அடங்கும். இது வேத சாத்திரங்களின் ஒரு பகுதியே ஆகும். ஒருவரின் பிறப்பு நிலை, முற்பிறவி, வருங்காலம், மறு பிறவி பற்றியும் சோதிடத்தில் தெரிவிக்கப்படும். இத்தகைய சோதிடக்கலை குறித்தப் பல செய்திகளைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைப்பதைக் காணலாம். இதனால் பழந்தமிழர் சோதிடக் கலையில் சிறந்து விளங்கினர் என்பதையும் அறியலாம். இக்கட்டுரை பண்டைத் தமிழ்க் காப்பியமான பெருங்கதையில் சோதிடக்கலை குறித்து ஆராய்கிறது.

     

    பெருங்கணிகன்:

         சோதிடர்கள் பெருங்கணிகன் என்று இலக்கியங்களில் அழைக்கப்பட்டனர். சோதிடர்களுக்கு அக்காலத்தில் சமுதாய மதிப்பு மிக்கிருந்ததை இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம். சிலம்பில்,

    “ஆசான் பெருங்கணி அறந்திறல் அமைச்சர்

    தானைத் தலைவர் தம்மொடு குழீஇ

    மன்னர் மன்னன் வாழ்க என்றேத்தி

    முன்னிய திசையின் முறைமொழி கேட்ப”2

    என்ற பாடலடியின் மூலம் அரசவையில் மன்னர்களைச் சுற்றி ஆசிரியன், சோதிடன், அமைச்சன், படைத்தலைவன், போன்றோர் இருந்தனர் என்றும் இவர்களின் ஆலோசனைப்படியே அரசன் இயங்குவான் என்றும் அத்தகையோருள் “பெருங்கணி” என்று குறிக்கப்பட்டச் சோதிடரும் ஒருவராவர் என்றும் அறிய முடிகிறது.

         மக்களைக் கணிக்கும் சோதிடர்களுக்குக் கணி அல்லது கணிப்போன் என்றும்,  அரசவைச் சோதிடர்களுக்குப் பெருங்கணிகன் என்ற பெயரும் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இதற்குச் சான்றாகப் பெருங்கதையில்

    “தம்மிற் பெற்ற தவம்புரி தருக்கத்

    தரும்பரி சாரத்துப் பெருங்கணி வகுத்த” (இ.கா.2:23–24)

    என்ற அடியினைச் சான்றாகக் கூறலாம். இவ்வடியில் “பெருங்கணி” என்ற சொல்லிற்கு “அரசனுக்குரியக் கணியைப் பெருங்கணி” என்பர்3 என்று பெருங்கதை குறிப்புரை ஆசிரியர் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

    பிறந்தநாள் கணிப்பு:

    பெருங்கதையின் உஞ்சைக்கண்டத்தில் சேடக முனிவரின் மகளான மிருகாபதிக்கு ஆலங்காடு என்னும் காட்டில் ஆண் குழந்தை ஒன்று பிறக்கின்றது. இதனைக் கண்டச் சேடக முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். மேலும் அம்மகவு தோன்றிய நாளினை ஆராய்ந்து சாதகம் எழுதினர் என்று பெருங்கதை குறிப்பிடுகின்றது, இதனை

    “ஆதிரா ஞாலத் தரசுவீற் றிருந்த

    கணித வுரைக் கெல்லாங் காரண னாதலிற்

    புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம்

    உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇ” (உ.கா.11:79–83)

    இப்பாடல் வரிகள் மூலம் சூரிய உதயத்தில் பிறந்தமையினால் அவன் உதயணன் என்னும் பெயர் பெறுவதற்கு உரியவனென்று நாமகரணம் (பெயர் சூட்டுதல்) செய்தது மட்டுமின்றி அவனுடைய வரலாறு அநேகருடைய வரலாறுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் கூறுவதாகக் கொங்குவேளிர் உஞ்சைக் காண்டச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் நம்பி பிறந்தான் என்ற செய்தி தெரிந்ததும் உதயணனின் தோழர்களும், நகர மாந்தர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர்ப் பெருங்கணிகள் ஒன்று கூடி நம்பிக்குச் ”சாதகர்மம்”4 (பிறந்த போது செய்யும் ஒரு சடங்கு) செய்தனர்.

    ”பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்

    சிறந்த நற்கோ ளுயர்ந்துழி நின்று

    வீக்கஞ் சான்ற வாருயி ரோகையும்

    நோக்கி யவரு நுகருஞ் செல்வத்

    தியாண்டுந் திங்களுங் காண்டகு சிறப்பிற்

    பக்கமுங் கோளு முட்கோ ளறைஇ

    இழிவு மிவையென விசைய நாடி

    வழியோ ரறிய வழுவுத லின்றிச்

    சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்

    அரும்பொறி நெறியி னாற்ற வமைத்த” (ந.கா.5:73–82)

    மேற்கண்ட பாடல் வரிகள் மூலம் சாதகம் நன்குக் கணித்து வரைந்த சாதகப் பட்டிகையினை (சாதகம் எழுதிய பத்திரிக்கை) இலச்சினையிட்டு (மூடி முத்திரையிட்டு) மன்னனிடம் வழங்கியதாகவும், அச்சாதகமானது மரபு பிறழாமல் எழுதப்பட்டது என்பதனையும் அறிய முடிகிறது.

    திருமணநாள் கணிப்பு:

         உதயணன் வாசவதத்தைத் திருமணத்திற்கான நல்ல நாளினைச் சோதிடர் குறித்துத் தருகின்றார். அதனை முரசு கொட்டும் வள்ளுவன் யானை மீது அமர்ந்து முரசறைந்து நகர மக்களுக்கு அறிவிக்கின்றான். இதனை

    ”வாசவதத் தையொடு வதுவைக் கூடிக்

    கோல நீள்மதிற் கொடிக்கோ சம்பி

    மாலை மன்னவன் மண்மகன் ஆகும்

    காலை இதுவெனக் கதிர்மணிக் கடிப்பில்” (இ.கா.2:49–52)

    என்ற இலாவாண காண்டத்தின் கடிக்கம்பலை என்னும் காதையின் பாடலடிகள் சுட்டிக்காட்டுகின்றன.

         உதயணனுக்கும், பதுமாபதிக்கும் திருமணம் நடைபெறுவதற்காக நாள் குறித்ததனைக் கோள்களின் வழி மூலம் ஆராய்ந்து உறுதி செய்யும் மரபு இருந்ததாகப் பெருங்கதையில் மகத காண்டத்தில் “பதுமாபதி வதுவை” என்னும் காதையின் பாடல் வரிகள் மூலம் நாம் அறிய முடிகிறது.

    “தோழ ரெல்லாந் தோழிச்சி யாகத்

    தாழ்வ ளாமெனத் தாழாது வலிப்ப

    நன்னெறி யறியுநர் நாடறிந் துரைப்ப” (ம.கா.22:39–41)

    வேள்விக்கு நேரம் குறித்தல்:

    உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் திருமணம் முடிந்தவுடன் உயிர் ஒன்று என்னும் உரிமையைத் தருகின்ற திருமண வேள்வி நடத்துதற்கேற்ற அந்தணர்களுக்குரிய நேரத்தினைப் பெருங்கணிகன் மூலம் நாள்கோள் முதலியவற்றை விழிப்புடன் ஆராய்ந்து குறிக்கப்பட்டு மக்களுக்கு வள்ளுவன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதனை

    ”இடிஉறழ் முரசின் ஏயர்பெரு மகற்கும்

    பிடிமகிழ் யானைப் பிரச்சோதனன் மகன்

    வடிமலர்த் தடக்கை வாசவதத் தைக்கும்

    ஓருயிர்க் கிழமை ஓரை அளக்கும்

    பேரிய லாளர்” (இ.கா.3:2–6)

    எனும் பாடல் வரிகள் மூலம் பொழுதறிந்து (வேள்வி நடத்துதற்கேற்ற காலத்தினை) கூறியதாகக் கொங்குவேளிர் குறிப்பிடுகின்றார்

    சோதிட நூல்கள்:

    தமிழில் சோதிட நூல்கள் வீமேசுரி உள்ளமுடையான், குமாரசுவாமியம், சாதகாலங்காரம், சாதக சிந்தாமணி, செகராஜசேகரம், சந்தான தீபிகை, கார்த்திகேயம், அம்மனீயம் போன்ற நூல்களேயன்றிப் பல தற்கால சோதிட நூல்களும், சோதிட இதழ்களும் உள்ளன. அகத்தியர் நாடி சோதிடம் போன்ற நூல்களும் உள்ளன5.

     முடிவுரை:

    • சோதிடம் தொடர்பான பல செய்திகள் பெருங்கதையில் மிகுதியாகப் பதிவாகியுள்ளன.
    • சோதிடர்களுக்குச் சமுதாயத்திலிருந்த மதிப்பினைப் பெருங்கதைப் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
    • அரசவைச் சோதிடர் பெருங்கணிகன் எனப்பட்டார்.
    • தமிழர்கள் குழந்தை பிறந்த நாளைச் சாதகமாகக் கணித்து எழுதினர் என்பதைப் பெருங்கதை எடுத்துரைக்கிறது.
    • ஆண்டு, திங்கள், பக்கம், கோள் ஆகியவற்றின் துணை கொண்டு சாதகம் எழுதி அதற்குச் ”சாதகப் பட்டிகை” என்று பெயர் வைத்த பெருமையும் பெருங்கதைக்கே உரியதாகும்.

    ——————————————–

    அடிக்குறிப்புகள்:

    1. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி ப. 726
    2. சிலம்பு, நடுகற்காதை
    3. உ. வே. சா.,பெருங்கதை, இ.கா. பக்கம்.6
    4. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி ப. 617
    5. சி. நா. கிருஸ்ணமாச்சாரியார், உலகை வளர்த்த ஆய கலைகள் : 64, ப. 88

     

     

    Share
  • பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்

    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்

    தமிழியற் புலம்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21

                பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே நிறுவனம், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஆகியன தனிநபர் சார்ந்து, பதிப்புக்குழுவை உருவாக்கிப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வெளியிட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் பாட நூல்கள் சார்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இவை பெரிதும் வணிக நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டிருந்தன. மேலும் எளிமைப்படுத்துதல் என்ற தன்மையில் சுருக்கமான உரைகளைக் கொண்ட பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிவரக் கூடிய கீழ்க்கணக்குப் பதிப்புகள் குறித்துத் தனியொரு சூழலில் விவாதிக்க வாய்ப்புண்டு. இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே, கழகம் ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புச் செயல்பாடுகள், பதினெண்கீழ்க்கணக்கின் தொகுப்பு முறைகள், பதினெட்டு நூல்களின் எண்ணிக்கை குறித்த வரையறைகள் மட்டும் இங்குக் கவனப்படுத்தப்படுகின்றன.

                இரங்கசாமி நாயக்கர் 1870இல் சென்னைத் துறைமுகம் அருகே உள்ள கந்தகோட்டத்தில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினார். இது 1920இல் பி.இரத்தின நாயக்கர் ஸன்ஸ் பதிப்பகமாக உயர்வு பெற்றது. இப்பதிப்பகத்தின் மூலம் ஆத்திசூடி, சித்தர் ஞானக்கோவை, தனிப்பாடற்றிரட்டுகள், சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன. 1838ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், திருக்குறளின் பரிமேலழகர் உரையைத் தழுவி, பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் எழுதிப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பினைக் களத்தூர் வேதகிரி முதலியார் மீள்பதிப்பாகப் பி.இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாக ஒரு குறிப்பு கிடைக்கின்றது. புத்தகங்களில் இடம்பெற்றிருந்த சிறிய எழுத்துகள் வாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் எழுத்துக்கள் பெரியதாக இடம்பெறும் வகையில், பெரிய எழுத்து கருட புராணம் பெரிய எழுத்து மகாபாரதம் என்று அட்டைகளில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிட்டனர். இதனைப் பிற பதிப்பகங்களும் பின்பற்றியுள்ளன. மேலும் கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரிதிகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1934இல் இரத்தின நாயகர் ஸன்ஸ் நிறுவனம் திருமகள் விலாச அச்சியந்திரசாலையின் மூலம் நாலடியார் மூலத்தையும் களத்தூர் வேதகிரி முதலியார் இயற்றிய உரையையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடல்,  பன்னிரு பாட்டியல் கூறும் கீழ்க்கணக்கு என்பதற்கான விளக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

    பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியோ(டு) ஏலாதி யென்பவே

    கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு.

    இப்பாடலின் பின்னிரண்டு அடிகள், முந்தைய பதிப்பாசிரியர்கள் கொண்ட அடிகளில் இருந்து மாறுபட்டுள்ளன. ஆனால் பொருண்மை கொள்ளல் முறையில் மாற்றமில்லை. பதினெட்டு நூல்களின் பெயர்களை வேதகிரி முதலியார் தமது நாலடியார் பதிப்பில் தந்ததோடு, அவற்றுள் ஒன்றாகக் கைந்நிலையினைக் குறிப்பிடுகின்றார். இன்னிலையினைக் குறிப்பிடவில்லை.

    பதினெண் கீழ்க்கணக்கின் நூல்களாவன:-

    1. நாலடியார் 9. திணைமொழி ஐம்பது
    2. நாண்மணிக்கடிகை 10. திணைமாலை நூற்றைம்பது

                            நால் நாற்பது                         11. முப்பால்

    1. இனியவை நாற்பது 12. திரிகடுகம்
    2. இன்னா நாற்பது 13. கோவை ‘ஆசாரக்கோவை’
    3. கார்நாற்பது 14. பழமொழி
    4. களவழி நாற்பறது 15. மாமூலம் ‘சிறுபஞ்சமூலம்’

                நால் ஐந்திணை    16. காஞ்சி ஷமுதுமொழிக்காஞ்சி|

    1. ஐந்திணை ஐம்பது 17. ஏலாதி
    2. ஐந்திணை எழுபது 18. கைந்நிலை என்பன.

     (களத்தூர் வேதகிரி முதலியார்: 1934 : 4).

    கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடலில் உள்ள கோவை, முப்பால் ஐந்தொகை என்ற தொடர்களுக்குரிய பொருள் கொள்ளல் முறையைக் குறித்தும் வேதகிரி முதலியார் தெளிவாக விளக்கியுள்ளார். கோவை, காஞ்சி என்பதற்குப் பொருள் – திருக்கோவையார், மதுரைக்காஞ்சி. முப்பாலுக்குத் திருக்குறள் அல்லாது வேறு நூல். ஐந்திணை என்பதற்கு ஐந்தொகை எனப் பாடங்கொண்டு வேறு ஐந்து நூல்கள் என இவர் காலத்து வழக்கிலிருந்த தொகை முடிபுகளை வேதகிரி முதலியார் மறுத்துரைக்கின்றார்.

                வேதகிரி முதலியாருக்குக் கீழ்க்கணக்கைச் சார்ந்து கைந்நிலை என்ற தெளிவான கருத்திருந்ததை மேற்கண்ட கூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

                மர்ரே ராஜம் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ஏல நிறுவனத்தில் கணக்களாராகப் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்தை ஏற்று நடத்தினார். ஏலத் தொழிலின் மூலம் பல்வேறு அறச்செயல்களைச் செய்து வந்த இவருக்குச் ச.வையாபுரிப்பிள்ளையோடு 1940இல் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு அறச்செயல்களைச் செய்வதுபோல் நூல்களை அச்சிட்டு வழங்குவதும் அறக்கொடை எனச் ச.வையாபுரிப்பிள்ளை ராஜத்திடம் கூறுகின்றார். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பைச் ச.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமே கொடுக்கின்றார். இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள் பல சந்தி பிரித்து எளிமையாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அச்சிட்டு வெளியிடப்பட்டன. திவ்ய பிரபந்தம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்கணக்கு, வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூற் பதிப்பு முயற்சி குறித்தும், பதினெட்டு நூல்கள் எவை என்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

                செவ்விலக்கிய நூல்களையும் பிற நூல்களையும் தனித்தனி நூல்களாக வெளியிட்ட மர்ரே நிறுவனம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை ஒரே தொகுதியாகப் பதிப்பித்தது. இப்பதிப்புப் பணியில் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, வி.மு.சுப்பிரமணியம், மு.சண்முகம் மூவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பை உருவாக்கினர். இப்பதிப்பிற்குரிய ஆலோசனைகளைப் பெ.நா.அப்புஸ்வாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வேங்கடராஜுலு ரெட்டியார். கி.வா.ஜாகநாதன், அ.ச.ஞானசம்பந்தன், சா.கணேசன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பதிப்பின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு என்ற சொல்லுக்கான விளக்கம், பதினெட்டு நூல்கள் குறித்த விவாதங்கள், பதினெட்டு நூல்களிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை, ஆழ்வார் திருநகரியின் ஏட்டுப் பிரதிக் குறிப்பு, பதினெட்டு நூல்களின் காலம், பதினெட்டு நூல்களின் பொருண்மை அடிப்படையிலான பகுப்பு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பல செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. பதினெட்டு நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையையே மர்ரே பதிப்பு கொண்டுள்ளது. இதற்குக் காரணம் மர்ரே பதிப்பு முயற்சியில் முன்னோடி நிலையில் செயல்பட்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. இப்பின்புலத்திலேயே மர்ரே பதிப்பு கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கின் ஒன்றாகச் சேர்த்து, இன்னிலையைச் சேர்க்கவில்லை.

                பதினெண்கீழ்க்கணக்கின் பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்க உதவி மூவருள் ஒருவரான மு.சண்முகம் பிள்ளை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதவுரை எழுதிய வெளியிடும்போது இன்னிலையைச் சேர்த்து வெளியிட்டுள்ளார். இது இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்கது

                இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழின் பல்வேறு பொருண்மை சார்ந்த நூல்களை உரைகளோடு வெளியிட்டது. அவற்றுள் பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பும் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.பாலசுந்தனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர் உள்ளிட்ட அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். அவ்வுரைகளின் முன்னுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். இதில் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்பது குறித்த விரிவாய் விவாதித்துள்ளனர். அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

    • இன்னிலையை ஏற்பவர்கள் – ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.சு.பாலசுந்தரனார் (இளவழகனார்)
    • கைந்நிலையை ஏற்பவர் – சி.புன்னைவனநாத முதலியார்
    • இன்னிலை, கைந்நிலை இரண்டையும் குறிப்பிட்டு இதில் எதை ஏற்பது என்ற தெளிவில்லாதவர் – சங்குப் புலவர்
    • திணைமாலை – மணி.திருநாவுக்கரசு

                பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த பதினெட்டு நூல்கள் எவையெவை என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளிவந்த கழகப் பதிப்புகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தின. திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்வழி வெளிவந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூற்பதிப்புகளில் ஒன்றாக இன்னிலை தொகுக்கப்படவில்லை (பக்.345). இக்குறிப்பை நெ.சுப்பையா பிள்ளை ‘பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்| என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்காலங்களில் வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகளில் இன்னிலை, கைந்நிலை இரண்டும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. கழகப் பதிப்புகளை உருவாக்கிய பதிப்பாசிரியர்கள் சிலர், தொடக்ககால பதிப்பாசிரியர்கள் முன்னெடுத்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்துள்ளனர். இதன்மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சில குழப்பமான முடிவுகளைத் தங்களது பதிப்புகளில் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பு.சி.புன்னைவனநாத முதலியார், வா.மகாதேவ முதலியார், அ.நடராசப் பிள்ளை ஆகியோர்.

                ந.மு.வேங்கடசாமி நாட்டார் கீழ்க்கணக்கின் கார்நாற்பது (1925), களவழி நாற்பது (1924, 1935), இன்னா நாற்பது (1935), இனியவை நாற்பது (1936) என்னும் நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவற்றை ‘நானாற்பது மூலமும் உரையும் என்று ஒரே தொகுப்பாக்கி கழகம் வெளியிட்டுள்ளது. இவற்றின் முகவுரைகளில் பதினெட்டு நூல்களுள் ஒன்றாக இவர் இன்னிலையினைச் சுட்டுகின்றார். கைந்நிலையினை ஏற்கவில்லை. ஆனால் இவர் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் குறிப்பிடும் பழம்பெரும் வெண்பாவைக் காட்டி அதற்குக் கீழ் நால், ஐந்திணை, என்ற தொடரின் அடிப்படையில் எழுந்த விவாதங்களையும் சேர்த்து பதிவு செய்கின்றார்.

                நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்களுக்குத் தி.பாலசுந்தரனார் இயற்றிய உரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இதில் நான்மணிக்கடிகையின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன எவை என்று கூறும்போது இவர் இன்னிலையினைச் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். கைந்நிலையினைக் குறிப்பிடவில்லை (தி.சு.பாலசுந்தரம்: 2007: iii). பிற நூல்களின் பதிப்புரையில் அந்நூல்கள் குறித்த செய்திகளை மட்டுமே சுட்டியிருக்கின்றார். பாலசுந்தரனார் கீழ்க்கணக்கு நூல்களுக்கு  உரை எழுதிய காலத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இன்னிலை பதிப்பு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இக்காரணத்தினால் இன்னிலையை இவர் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் குறித்திருக்க வேண்டும்.

                திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஐந்திணையைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்களுக்குச் சி.புன்னைவனநாத முதலியார் இயற்றிய விருத்தியுரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது குறித்த தமது கருத்துகளைச் சி.புன்னைவனநாத முதலியார் முன்வைத்துள்ளார். குறிப்பாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஐந்திணையைம்பது ஆகிய நூல்களின் முகவுரைகளில் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னிலையினை இவர் குறிப்பிடவில்லை. பிற நூற்பதிப்புகளின் முகவுரையில் இவ்வெண்ணிக்கைப் பற்றிய கருத்து எதையும் கூறாமல் அந்நூற்களின் அமைப்பு, பாடல்களின் சிறப்பு ஆகியவற்றை மட்டுமே விளக்கிச் சென்றுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும்போது கைந்நிலையினைக் குறிப்பிட்டாலும், கழக உரையாசிரியர்களில் மற்றவர்களுக்கு இருந்த கருத்துத் தெளிவு சி.புன்னைவனநாத முதலியாருக்கும் இல்லை. (2007: xvv). இக்கருத்தையே சிறுபஞ்சமூலத்தின் நூன்முகத்திலும் (2007:v) இவர் குறிப்பிட்டுள்ளார்.

                கழகத்தார் இன்னிலை, கைந்நிலை இரு நூல்களுக்கும் சங்குப்புலவரை உரையெழுதச் சொல்லி இரு நூல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர். அவற்றின் பதிப்புரையில் இவற்றில் எதை நீக்கி எதைக் கொள்ளுவது என்ற மயக்கம் கழகத்திற்கு ஏற்பட்டதாகச் சங்குப்புலவர் குறிப்பிடுகின்றார். ‘‘பதினேழு நூல்களைக் காண்பீர்கள்: பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. ‘நாலடி நான்மணி’ என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந்நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது” (இன்னிலை – கைந்நிலை, பதிப்புரை, ப.3). அடுத்து ‘கைந்நிலை வரலாறு’ என்ற தலைப்பில் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை பதிப்பு முயற்சிகள், கிடைக்கும் கைந்நிலை ஏட்டுச் சுவடியில் உள்ள பாடல்களின் சிதைவு நிலை, ரா.இராகவையங்காரின் ஆலோசனை மற்றும் அவரிடம் இருந்து பெற்ற கைந்நிலை ஏட்டுச் சுவடியினை ஒப்புநோக்கிப் பதிப்பித்த இ.வை.அனந்தராமையாரின் கருத்து விளக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைந்நிலையின் பாடல்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமையினை எடுத்துக்காட்டி கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்று நிறுவ முயல்கின்றார். ஆனால் இறுதியாக இன்னிலை, கைந்நிலை இரு நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற தெளிவினைச் சங்குப்புலவர் கூறவில்லை. மாறாக இதைத் தமிழ்ப்புலவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கின்றார்.

    “இன்னிலை, கைந்நிலை என்ற இரு நூல்களிற் பதினெண்கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்கத்தக்க நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இனித் தமிழ் மொழிப் புலவர் கடமையாம்; இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரிய தாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரை வரைந்து தந்தேன்”(சங்குப் புலவர், 2007: 9, 10).

    கழகத்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு நூல்களுக்கும் சங்குப்புலவர் உரையெழுதியதை மேற்சுட்டிய கருத்தின் வழிப் புரிந்துகொள்ள முடிகின்றது.

                மணி.திருநாவுக்கரசு முதலியார் ‘நாலடி நான்மணி’ என்று தொடக்கும் வெண்பாவில் ‘மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே’ என்ற பாடத்தைக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பான விவாதத்தினை முன்னெடுக்கின்றார். பதினெட்டு நூல்களுள் இன்னிலையை ஒரு சாராரும், கைந்நிலையை ஒரு சாராரும், திணைமாலையை ஒரு சாராரும் உடன்படுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். இவர் ஒரு சாரார் கருத்தை மட்டும்; பதிவுசெய்வது இங்குக் கவனத்திற்குரியது. “இனியொரு சாரார் மேலே கூறியவாறு ஐந்து திணை நூல்களையும் உடன்பட்டு, அதனோடு ‘இன்னிலை’, ‘கைந்நிலை’ என்னும் இரு நூல்களையும் கூட்டிக் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவெனக் கூறும் வெண்பாவின்கண் தொகை வரையறை காணப்படாமையின், பதினெட்டுக்குமேலும் இருபது நூல்கள் கீழ்க்கணக்கைச் சார்ந்தனவெனக் கொள்ளுதற் கண் வரக் கடவதாய இழுக்கென்னை என்பர். அது பொருந்தாமை மேலே காட்டிய பேராசிரியர் உரையான் இனிது உணரப்படும். அதனுள் அவர் பதினெண்கீழ்க்கணக்கெனத் தெளிவுறக் கூறியிருத்தல் காண்க” (மணி. திருநாவுக்கரசு முதலியார்: 2007: 5). திணைமாலை என்ற பெயரிலான நூலை ஐந்திணை நூல்களோடு சேர்த்து இவர் கணக்கிட்டு கொள்கின்றார். இன்னிலை, கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களையும் சேர்க்க இருபது நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என்று கருத்து இருந்தது இதன்மூலம் புலனாகின்றது.

    தொகுப்பாக

                இரத்தின நாயகர் ஸன்ஸ், மர்ரே நிறுவனப் பதிப்புகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவாகக் கருத்துகள் இருந்ததைப் பார்க்க முடிகின்றது. திருநேல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகப் பதிப்புகள் சைவ சமயப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் உரையினை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார், இளவழகனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர், மணி.திருநாவுக்கரசு முதலியார் ஆகியோர் இன்னிலையினைக் கீழ்க்கணக்கினைச் சேர்ந்த நூல் என்று அடையாளப்படுத்த முயன்றுள்ளனர். இன்னிலை ஒரு போலி நூல், கற்பித நூல் என்று தெளிவான முடிபுகள் கண்ட பிறகும் இவ்வாறு இவர்கள் செயல்பட்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது.

                பதினெண்கீழ்க்கணக்கு என்ற எண்ணிக்கை வரையறையில் உள்ள குழப்பமான முடிவுகளுக்குத் தெளிவுகள் காணப்பட்ட பின்பும், மீண்டும் தெளிவைத் தேடிக் குழப்பங்கள் உருப்பெற்று வருகின்றன. இவ்வகையான குழப்பங்களுக்கு வெகுசனத் தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கின் பதிப்புகளைக் கொண்டு சென்ற பதிப்பு நிறுவனங்களே காரணமாக அமைகின்றன. இவை தொடக்க காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தனித்தனியே பெரும் புலவர்களைக் கொண்டு உரையெழுதச் செய்து பதிப்பித்தன. பின்னர்ப் பொருண்மை வாரியாக இவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தன. அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக உரையோடு கூடிய பதிப்பு, மூலப் பதிப்பு எனப் பல நிலைப்பட்ட பதிப்பாக்க முயற்சியில் ஈடுபட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தனர். இதுபோல் கல்வி நிறுவனங்களில் பயிலும் பாடமாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் தொடக்க காலம் முதல் இடம் பெற்றிருந்தன. எளிய உரை நோக்கிய மாணவர்களின் செயல்களால் பதிப்பு நிறுவனங்கள் பலரையும் உரையெழுதச் செய்து அதை அச்சிட்டு வழங்கலாயின. இம்முயற்சிகளே பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பதை மறுவாசிப்பு செய்யக் காரணமாயின. இந்த வாசிப்பினால் தொடக்க காலப் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்த கருத்துகளை இவர்கள் மீண்டும் புதியனவாகத் தாங்கள் முன்வைப்பதைப்போல் முன்வைத்து ஒரு மாயத் தோற்றத்தினைக் கட்டமைக்க முயன்றிருக்கின்றனர். இவ்வகையான முயற்சிகளில் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? திணைமாலையா? என்ற குழப்பம் மீண்டும் தலைத்தூக்கியது.

    —————————————————-

    சான்றாதார நூல்கள்

    1925    ந.மு.வேங்கடசாமி நாட்டார், நானாற்பது மூலமும் உரையும் (கார்நாற்பது, களவழி   நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ  சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை.

    1934    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியார் இயற்றிய உரையும், பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.

    1956    பதினெண்கீழ்க்கணக்கு – காஞ்சி யேலாதி கோவை பதவுரை விளக்கங்களுடன்,     திருநெல்வேலி  தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை.

    1981    பதினெண்கீழ்க்கணக்கு, பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கி  வெளியிடப்பட்டது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு.

    1982    வேம்பத்தூர் முத்துவேங்கடசுப் பாரதியார், பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்:             ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (திரிகடுகம், நான்மணிக்கடிகை,         சிறுபஞ்சமூலம்),           திருநெல்வேலி            தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற்          பதிப்புக்கழகம், சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (இன்னா நாற்பது, இனியவை நாற்பது,           கார்நாற்பது, களவழி நாற்பது), கழக வெளியீடு, சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது,           திணைமாலை நூற்றைம்பது, இன்னிலை – கைந்நிலை), கழக வெளியீடு, சென்னை.

    Share
  • குறளின் கதிர்களாய்…(232)

     

     

     

    உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி   

    யிடைக்கண் முரிந்தார் பலர்.

           -திருக்குறள் -473(வலியறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    தன் வலிமையின்

    அளவறியாமல்,

    தன் மன ஊக்கத்தினால்

    தொடங்கி,

    தொடர இயலாமல் கெட்டவர்கள்

    தரணியில் பலர்…!

     

    குறும்பாவில்…

     

    ஆர்வத்தில் தன்வலிமை அறியாமல்                  

    தொடங்கிய செயலைத் தொடரமுடியாமல்   

    கெட்டோர் பலர் காசினியில்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வலிமை தமக்கே என்னவென்ற

         விபரம் தன்னை அறியாமலே,

    வலியச் சென்றே தம்மைவிட

         வலியார் மாட்டுச் சென்றாங்கே

    வலிமை காட்டும் செயல்தொடங்கி

         வீணாய்த் திரும்புவர் தொடராமலே,

    நிலையிது கண்டே பலரிடத்தில்

         நினைந்து செயல்படு வலியறிந்தே…!

     

    லிமரைக்கூ..

     

    தன்வலிமை யறியாத போது,         

    வலியோரிடம் செயல்தொடங்கித் தொடராதோர்                        

    வாழ்வில் வெற்றியென்ப தேது…!

     

    கிராமிய பாணியில்…

     

    செயல்படணும் செயல்படணும்

    வலிமதெரிஞ்சி செயல்படணும்,

    தன்னோட

    வலிமதெரிஞ்சி செயல்படணும்..

     

    தம்பெலம் என்னண்ணு தெரியாமலே

    வலியவங்கிட்ட

    செயலச் செய்யத் தொடங்கி

    முடியாமத் திரும்பி

    அழிஞ்சிபோனவர் ஆயிரம்பேர்..

     

    அதால

    செயல்படணும் செயல்படணும்

    வலிமதெரிஞ்சி செயல்படணும்,

    தன்னோட

    வலிமதெரிஞ்சி செயல்படணும்…!

     

    செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 42

    க. பாலசுப்பிரமணியன்

     

    நம்மை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்

    நம்மைத் தோற்கடிக்க உலகில் நம்மைத் தவிர வேறு எந்த சக்தியும் தேவையில்லை. நம்மில் பலரும் நம்மை நாமே தோற்கடித்துக்கொண்டிருக்கின்றோம். முந்தைய பகுதிகளில் நாம் கண்டது போல வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைகள்தான். எந்த இரண்டு பேருடைய வெற்றியையும் தோல்வியையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் தவறானது.

    ஒரு பள்ளியில் படித்த இரண்டு பெண் குழந்தைகள். ஒரு பெண் நல்ல புத்திசாலி. நல்ல உழைப்பாளி. நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர். அந்தப் பெண்ணின் தோழி வாழ்க்கையை சற்றே எளிதாக எடுத்துக்கொண்டு மேலே சொல்லக்கூடியவர். அவருடைய தந்தை ஒரு பெரும் செல்வந்தர். திரைப்படத் துறைகளில் சாதனை படைத்தவர். ஆகவே அந்தப் பெண் ஒரே குழந்தை என்பதனால் வாழ்க்கை வசதிகளை அதிகம் கொடுத்தவர். இந்த இரண்டு நண்பர்களும் பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பொழுது முதலாவது பெண் மேலாண்மைத் துறையில் முதுநிலை படிப்பு முடித்து நிர்வாக வல்லுனராக வேலையில் சேர்ந்தார். இரண்டாவது பெண்ணோ  இளநிலை படிப்பு முடித்ததுமே தன்னுடைய தந்தையின் தொழில் நிர்வாகத்தில் பங்கேற்றுக் கொண்டார். ஒரு நிலையில் முதல் பெண்ணுக்குச்  சரியான வேலை கிடைக்காமல் தேடி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பொழுது அந்த நிறுவனத்தின் சொந்தக்காரராக இருப்பது தன்னுடைய தோழி எனத் தெரிய வந்தது.

    அதன் காரணமாக ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு தன் விதியையும் தன்னுடைய இயலாமையையும் மேற்கோளாக்கி மன உளைச்சலை உண்டாக்கிக்கொண்டார். நாளடைவில் இது வளர்ந்து ஒரு மன நோயாகவே உருவாகிவிட்டது.

    இது போன்ற பல நிகழ்வுகளை நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். அந்த நேரங்களில் நாம் ஏதோ தவறு செய்து விட்டது போன்ற குற்ற உணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மனப்பான்மை நம்முடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக மாறி வாழ்க்கையைத் தடம் புரளச் செய்யும். எனவே இந்த மாதிரி உணர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் மிக அவசியம். வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் ஒருவருடைய பதவியினாலோ அல்லது புகழினாலோ அல்லது செல்வத்தினாலோ மட்டும் வருவதில்லை. ஒருவருடைய வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டது -அதில் நேர்மையும் வாய்மையும் உழைப்பும் சேவை மனப்பான்மையும் எவ்வாறு ஓங்கி நிற்கின்றன என்பதைப் பொருத்துத் தான் ஒருவரை எடை போட வேண்டும்.

    பல செல்வந்தர்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் வெளி உலகிற்குத் தம்மை ஒரு பெரிய மனிதனாக காட்டிக்கொள்வதில் பெருமைப் படுகின்றனர். அதே நேரத்தில்தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டால் தங்களுடைய கடன்களைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வதற்கும் தயங்குவதில்லை. எனவே வாழ்க்கையில் செல்வம் மட்டும்  ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைப்பு முட்டாள்தனமானது.

    நம்மை நாமே ஏற்றுக்கொள்ளுதல்  (Self-Acceptance ) என்பது ஒரு மிகப் பெரிய வெற்றி  மற்றும் முதிர்ச்சியின் அறிகுறி.. அதுவே வாழ்க்கையின் முழு மகிழ்ச்சிக்கு அடிப்படை. நம்முடைய உடல், அழகு, நிறம், குடும்பம், கல்வி, சந்தர்ப்ப சூழ்நிலைகள், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு விட்டால் நம்மை விட அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. நம்முடைய உடமைகள் நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டவை. அதில் நிச்சயமாகக் குறையிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவைகளை நாம் எப்பொழுது மற்றவர்களின் உடமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோமோ அப்பொழுதே நமது துயரங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு விடுகின்றது. இதை நாம் உணர வேண்டும்.

    ஒரு முறை எனக்கு ஒரு விருது கிடைத்தது. அதைக் கொடுக்க வந்தவர் ஒரு நீதியரசர். சுமார் ஒரு மணி நேரம் மிகவும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களுக்குப் பின் அலுவலகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு காரணமாக  நீதிமன்றத்தில் நேரில் வரும்படி உத்தரவிடப்பட்டது. அன்று நான் சென்ற பொழுது அமர்ந்திருந்த நீதியரசர் எனக்கு விருது கொடுத்தவர். அந்த நேரத்தில் அவர் என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அது அவர் தொழில் தர்மம். நேர்மையின் விளக்கம். நான் வருத்தப்பட முடியுமா? அல்லது அவருடன் பழகியிருக்கிறேன் என்பதற்காக சலுகைகள் எதிர்பார்க்க முடியுமா? அவருடைய அந்தச் செயலுக்காக நான் அவரைப் பெரிதும் மதித்தேன்.

    இதுதான் வாழ்க்கையின் உண்மை. பல நேரங்களில் நம்முடைய உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், கூட வேலைபார்த்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் சென்றிருப்பார்கள். அவரவர்களுடைய சாதனைகள், பதவிகள், வாழ்க்கை நிலைகள் வேறு வேறாக இருக்கும். அதன் காரணமாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    சமீபத்தில் வந்த செய்தி. காவல் துறையில் இருக்கும் ஒரு போலீஸ்காரருடைய மகன் நன்கு படித்து அதே போலீஸ் துறையில் ஒரு மேலதிகாரியாக வந்த பொழுது அவருடைய தந்தை தன் மகன் முன் நின்று சல்யூட் அடித்தார். உண்மையில் தன் மகனை அந்தப் பதவியில் பார்த்த தந்தைக்கு நிச்சயம் பெருமிதமாக இருந்திருக்க வேண்டும். தன் மகன்கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கின்றதே என்று வருத்தப்பட முடியுமா? அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்ள முடியுமா?

    தந்தைக்கு உபதேசம் செய்ய முருகன் துணிந்தபொழுது தந்தையை தன் முன்னே ஒரு சீடனாக மண்டியிட்டு அமர வைக்கவில்லையா? வாழ்க்கையின் ஏற்றங்களும் தாழ்வுகளும் நம்முடைய வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பதில்லை. இரண்டும் வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது நாம் கொள்ளும் பார்வைகள்தான்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்த நேரத்தில் என்னோடு வேலை பார்த்த ஒரு ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னே சந்தித்தார். ” பார்த்தீர்களா சார். நம்மகிட்டே படித்த அந்த மாண்வர்களெல்லாம் எங்கேயோ மேல போய்விட்டார்கள். நாம தான் அப்படியே இருக்கோம்” நான் சிரித்தேன். உண்மை. நீதியரசர்கள் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், என்று பல சிறப்பான தொழிலில் அவர்களை பார்க்கும் பொழுது நமக்குப் பெருமையாக இருக்கின்றது. அதற்காக நாம் ஏன் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஏணிப்படிகள் ஏற்றிவிட்ட பின் தங்களுக்குச் சொந்தமான மூலையிலே ஒதுங்கிவிடுவதுதான் வாழ்க்கையின் நியதி?

    “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற மனப்பான்மையுடன் செய்யும் பொழுது எல்லாத் தொழில்களும் தெய்வீகத் தன்மை அடைந்து விடுகின்றனவே? இதற்காக நாம் ஏன் வாடி வதங்க வேண்டும்? ஒவ்வொரு நாளும் நாம் இன்று நன்றே செய்ய வேண்டும் என்று எழுந்து அதை நடத்திக் காட்டும் பொழுது அந்த ஒவ்வொரு நாளும் வெற்றியின் அறிகுறி தானே?

    தினமும் நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடலாமே? முயன்று பார்க்கலாமா?

    (தொடரும்)

    Share
  • சம்பந்தர் தேவாரம்: கூடசதுர்த்தமும் வஞ்சிவிருத்தமும்

    -முனைவர் அ.மோகனா

    சைவத்திருமுறைகளைப் பொறுத்தவரை பொருண்மையோடு, வடிவத்திற்கும் முதன்மை அளித்து பாடப்பெற்றவையாகச் சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் உள்ளன. பிற தேவார ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுந்த அளவிலான புது வடிவங்களைக் கையாண்டவர் சம்பந்தர். மரபாக வழக்கத்திலுள்ள வடிவங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார். சில புது வடிவங்களையும் இசையின் பொருட்டுக் கையாண்டுள்ளார். இதனை,

    இப்பாடல்களின் பாவமைப்பு, புதுமைக்கும் பழமைக்கும் பாலமாக அமைகின்ற இடைக்கால இலக்கிய நிலையை வெளிப்படுத்துகின்றது. மரபுவழி வருகின்ற பாவகைகளும் இனங்களும் பயின்றன; அதோடு, புதுவகைச் செய்யுட்களும் சித்திரக் கவிகளும் இணைந்தன. (யாப்பியல்: 1998:132,133) என்கிற அன்னிதாமசின் கருத்து அரண் செய்யும். மரபாக வழங்கி வருகின்ற வடிவங்களுள் காப்பியங்களில் ஆட்சி செலுத்திய விருத்த வடிவம் சம்பந்தரின் பாடல்களிலும் பெருமளவு இடம்பெற்றுள்ளது. பலவிதமான வாய்பாட்டு அமைப்புகளையுடைய விருத்தங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். சீர்களின் எண்ணிக்கையிலும் சோதனை முயற்சிகளைக் கையாண்டுள்ளார். முச்சீர் நான்கடிகளால் அமைந்த வஞ்சி விருத்தங்கள் முதல் ஒன்பது சீர்களைக் கொண்டமைந்த விருத்தங்கள் வரை அவர் பாடியுள்ளார். அவற்றுள் வஞ்சி விருத்தங்கள் குறித்த சில செய்திகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

    வஞ்சிவிருத்தம் என்பது முச்சீரடி நான்கு ஒத்து வருவது என்கிறது யாப்பருங்கலம். சிறுகாக்கை பாடினியம், காரிகை ஆகியனவும் இவ்வரையறையினையே கொண்டுள்ளன. இவ்வடிவத்தின் தோற்றுவாய் மற்றும் வளர்நிலைகள் குறித்த அ.சண்முகதாஸின் கருத்துகள் கவனத்திற்குரியன.

    வஞ்சிவிருத்தத்தின் வளர்ச்சி பற்றிக் கூறும் அ.சி.செ. அவர்கள் அது சாதாரண வஞ்சிப்பாவின் திரிபேயாகும் என்பர். ஆனால் இசைப் பண்பு கொண்டனவாகிய கலி, பரிபாட்டு ஆகியவற்றிலிருந்து வளர்ச்சியடைந்தன எனக்கூறுதல் மிகப் பொருத்தமாகும்.       இக்கருத்துக்குச் சான்று பகருவன போல அமைகின்றன 18-ஆம் பரிபாடலில் இடம்பெறும் நான்கு அடிகள்.

    ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி
    சூர்ததும்பு வரைய காவால்
    கார்ததும்பு நீர்ததும்புவன சுனையால்
    ஏர்ததும்புவன பூவணி செறிவு

    என்ற நான்கு அடிகளையும் அப்பரிபாடலிலிருந்து தனியாக எடுத்தால் அவை பிற்கால யாப்பிலக்கணக்காரர் வஞ்சிவிருத்தத்துக்கு கூறிய எல்லா இலக்கணங்களும் பொருந்தி  அமைகின்றன. ஒரு காலத்தில் வாழும் புலவன் தனக்கு முன்னெழுந்த இலக்கியங்களிற்       காணப்படும் கருக்களை நோக்கி அவற்றைத் தனியாக எடுத்து விரித்துக் கூறுவது ஓர்       இலக்கிய உண்மையாகும், ஆகவே பரிபாடலில் இடம்பெற்றுள்ள இத்தகைய அடிகளைத் தனியாக எடுத்துப் பிற்காலத்தவர்கள் வஞ்சி விருத்தத்தினை அமைத்துக்கொண்டனர்       என்று கூறலாம். இந்த வகையிலே பல்லவர் காலத்துக் கையாளப்பட்ட வஞ்சிவிருத்தவடிவம் வளர்ச்சியுற்றதாகும் (தமிழின் பாவடிவங்கள்:1998:117,118).

    பாவினக் கோட்பாடு பற்றிய எதிர்நிலைக் கருத்தாடல்களைக் கொண்ட உரைகாரர்கள் (பேராசிரியர், நச்சினார்க்கினியர்) இவ்வடிவத்தை முச்சீர் நான்கடித் தரவுக் கொச்சகம் என்பர். சோ.ந.கந்தசாமி இந்த இருவகை வழக்குகளையும் தனது ஆய்வில் பயன்படுத்துகின்றார். சம்பந்தரது பாடல்களைப் பொறுத்தவரை வடிவ வரையறையில் அவை வஞ்சிவிருத்தமாக அமைந்திருந்தாலும் சண்முகதாஸ் கூறியபடி அதன் வளர்ச்சியடைந்த வடிவமாகக் கொள்ளற்குரிய கூறுகள் பல அப்பாடல்களில் உள்ளன. அவை சந்த வஞ்சி விருத்தங்கள். பாக்களுக்குரிய ஓசை என்கிற இயல்பு நிலையைக் கடந்து இசையை முதன்மைப்படுத்திய மாத்திரை அளவுகளால் வரையறுக்கப்பட்ட பாடல்கள். வடிவ ஒப்புமை கருதி அவற்றை வஞ்சிவிருத்தங்கள் என்றும் இசைநலம் கருதி அவற்றை சந்த வஞ்சி விருத்தங்கள் என்றும் கொள்ளலாம். இவரது வஞ்சித்துறை மற்றும் வஞ்சி விருத்தப்பாடல்கள் குறித்த ப.பா.இராசேந்திரனின் மதிப்பீடு இங்கு கருதத்தக்கது.

    விழுமிய தத்துவக் கருத்துக்களை ஒழுகிய ஓசையினால் விளக்குவதற்கும், இறைவன் புகழ்       பாடுவதற்கும், கவிதைச் சுவை நலங் கூட்டுவதற்கும் பாவினங்களை இடமறிந்து கையாளுதல் சம்பந்தரின் போக்காக உள்ளது என்பதற்கு வஞ்சித்துறை பற்றிய பாடல்களும் வஞ்சிவிருத்தம் பற்றிய பாடல்களும் சான்றாகத் திகழ்கின்றன. (திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இலக்கியக் கொள்கைகள்:1988:246).

    சம்பந்தர் முதல்திருமுறையில் 12 பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 14 பதிகங்களும் பாடியுள்ளார். மொத்தம் 292 பாடல்கள் இவ்வடிவத்தைப் பெற்றுள்ளன என்று சோ.ந.கந்தசாமி கூறியுள்ளார். அன்னிதாமசும், சண்முகதாஸும் எண்ணிக்கையில் இவர் கருத்தினின்று மாறுபடுகின்றனர். முதல் திருமுறையில் 12 பதிகங்களும் மூன்றாம் திருமுறையில் 1பதிகமும் ஆக 133 பாடல்கள் வஞ்சிவிருத்தத்திற்குரியன என்று கூறியுள்ளனர். ஆனால் இரண்டாம் திருமுறையில் 148, 149 மற்றும் 153 முதல் 164 வரையிலான கலிவிருத்தப் பாடல்களை சோ.ந.கந்தசாமி வஞ்சிவிருத்தப்பாடல்களாகக் கணக்கிட்டுள்ளார். மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள 367வது பதிகத்தை இவர் தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வில் கவனத்தில் கொள்ளவில்லை.

    இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நாற்சீர் நான்கடி கொண்ட கலிவிருத்தப்பாடல்கள் என்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. சில கட்டளைக் கலிவிருத்தங்களாகவும் சில பதிகங்கள் வெண்டளைக் கலிவிருத்தங்களாகவும் அமைந்துள்ளன. அன்னிதாமசும் சண்முகதாஸும் குறிப்பிடும் மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள 367வது பதிகப் பாடல்கள் ‘கூடசதுர்த்தம்’ என்ற பெயரினைப் பெற்றுள்ளன. இது குறித்து சோ.ந.கந்தசாமி, யாப்பருங்கல விருத்தியில் ‘கூட சதுர்த்தம் ஆவது நான்காம் அடிக்கு எழுத்து முதல் மூன்றடியுள்ளும் பெருக்கிக் கொள்ளப் பாடுவது’ என்று விளக்கப்பெற்றது. குணசாகரர் அங்ஙனம் பாடப்பெற்ற கட்டளைக் கலித்துறைப் பாடலையும் மேற்கோள் தந்தார்…எனின், யாப்பருங்கலம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் தோன்றுவதற்குக் குறைந்தது முந்நூறு ஆண்டுகள் முற்பட்ட காலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தர் பாடியுள்ள கூட சதுக்கப்பதிகம் முற்றிலும் வேறுபட்டது… (2005:260,261) என்று திருமுறையில் இலக்கிய வகை என்னும் ஆய்வில் கூறிவிட்டு ஒரு பாடலைச் சான்று காட்டி இதனை வஞ்சி விருத்தத்திற்கு மூல இலக்கியமாகக் கொள்ளலாம் என்கிறார். இவர்களது எண்ணிக்கை மாறுபாடுகளிலிருந்து சம்பந்தரது வஞ்சிவிருத்தப் பாடல்கள் குறித்து இவர்கள் கொண்டிருந்த இருவேறு கருத்துநிலைகள் புலனாகின்றன. ஒன்று வரையறுக்கப்பட்ட சந்த வஞ்சிவிருத்தங்கள்; மற்றொன்று கலிவிருத்தங்களாகக் கொள்வதற்குச் சிற்சில மாறுபாடுகள் உள்ள பாடல்களைச் சீர்களை இணைத்து வஞ்சிவிருத்தங்களாகக் கணக்கிடுவது.

    அவ்வாறு கணக்கிடும்போது வஞ்சிவிருத்தத்தில் நாலசைச்சீர்கள் இடம் பெற்றுவிடுவதை இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. முதல்மூன்றடிகள் எழுத்தெண்ணிக்கையில் ஒத்தும் இறுதியடி மட்டும் ஓர் எழுத்து குறைந்தோ கூடியோ வருகின்ற கலிவிருத்த வடிவங்கள் சம்பந்தரது பாடல்களில் அதிக அளவு காணப்படுகின்றன. அந்த வகையில் மேற்கூறியவற்றுள் இரண்டாம் திருமுறை மற்றும் மூன்றாம் திருமுறைப் பாடல்களையும் கலிவிருத்தங்களாகக் கருதமுடியும். முதல் திருமுறையில் அமைந்துள்ள பன்னிரண்டு பதிகங்களும் சந்த வஞ்சிவிருத்த யாப்பிற்கு முழுமையாகப் பொருந்தி வருபவை. அவற்றை மட்டும் வஞ்சி விருத்தங்களாகக் கொள்ளலாம். சந்த வஞ்சிவிருத்தம் எனும்போது சந்த விருத்தங்களுக்குச் செழுமையான இலக்கணம் வகுத்த விருத்தப்பாவியலின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

    கலிசந்த விருத்தத்திற்கு இலக்கணம் கூறிய விருத்தப்பாவியல் ‘மனோரமா’ என்ற வகைமையினைப் பற்றிக் குறித்துள்ளது. முதல் மூன்று சீர்களும் மூன்று மாத்திரைகளைப் பெற்று நான்காம் சீர் நான்கு மாத்திரைகளைப் பெறுகின்றவை மனோரமா என்கிற கலிவிருத்தவடிவம் என்று வரையறுத்துள்ளது. மேலும் அதன் அடிக்குறிப்பில் வஞ்சிவிருத்தத்தில் அமைந்த சில கம்பராமாயணப் பாடல்களை எடுத்துக்காட்டி ‘ஒரு சீர் குறைந்து மனோராமா வினிலக்கணம் பொருந்தும் வஞ்சி விருத்தங்களுள’ (35) என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சம்பந்தரது வஞ்சி விருத்தங்கள் இவ்வாய்பாட்டிற்குப் பொருந்தி வரவில்லை. அவை முதல் மூன்று சீர்களும் நான்கு மாத்திரைகளும் நான்காம் சீர் ஆறுமாத்திரைகளும் பெற்றமைகின்றன. இவ்வமைப்பு குறித்து பாவலர் பண்ணையில் சில கருத்துக்களைக் காணமுடிகின்றது.

    முதற்சீராகத் தன்னா, தானா, தனனா, தத்தம், தந்தம் முதலியனவும் வரலாம். அவை 4 மாத்திரை உள்ள மாச்சீராக இருக்கவேண்டும். இரண்டாம் சீராகத் தன்னன, தானன, தத்தன முதலியனவும் வரலாம். அவை 4 மாத்திரையுள்ள விளச்சீராக இருக்கவேண்டும். மூன்றாம் சீராகத் தன்னானா, தானானா, தந்தானா, தத்தந்தா முதலியனவும் வரலாம். அவை 6 மாத்திரையுள்ள காய்ச்சீராக இருக்க வேண்டும். (இரா.திருமுருகன்:1997:117). இக்கருத்தில் இடம்பெற்றுள்ள மாத்திரை அளவிற்குச் சம்பந்தரின் பாடல்கள் பொருந்தி வருகின்றன. ஆனால் அவர் அளித்துள்ள சந்த வாய்பாட்டிற்குச் சில சீர்கள் பொருந்தி வரவில்லை. சான்றாக,

    அரையார் விரிகோ வணவாடை
    நரையார் விடையூர் திநயந்தான்
    விரையார் பொழில்வீ ழிம்மிழலை
    உரையா லுணர்வா ருயர்வாரே (1:35:1)

    இப்பாடலில் முதல் இரண்டு சீர்களும் நான்கு மாத்திரைகளைப் பெற்றும் இறுதிச் சீர் ஆறு மாத்திரைகளைக் கொண்டும் அமைந்துள்ளன. தனனா தனனா தனதானா என்கிற சந்த வாய்பாட்டைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பு முதல் திருமுறையில் இடம்பெற்றுள்ள அனைத்து வஞ்சி விருத்தங்களுக்கும் பொருந்தி வருகின்றது. பிற பாடல்களுக்கு ஆய்வாளர்கள் வகுத்துள்ள வரையறைகள் மறுபரிசீலனைக்கு உட்பட்டவை. அவற்றைக் கலிவிருத்தங்களாகக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகுதி.

    துணைநூற்பட்டியல்

    1. அன்னிதாமசு, யாப்பியல், அமுதநிலையம், சென்னை,1998
    2. இராசேந்திரன், ப.பா., திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகள், வேதவல்லி பதிப்பகம், மதுரை, 1988.
    3. கந்தசாமி,சோ.ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் – இரண்டாம் பகுதி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989
    4. கந்தசாமி,சோ.ந., திருமுறையில் இலக்கியவகை, மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2005
    5. கோபாலையர், தி.வே., தேவாரம் ஆய்வுத் துணை, ப்ரெஞ்சு இந்திய நிறுவனம், பாண்டிச்சேரி,1991.
    6. சண்முகதாஸ், அ., தமிழின் பாவடிவங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1998.
    7. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் திருமுறை 1,2,3., கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1973.
    8. திருமுருகன், இரா., பாவலர் பண்ணை, ஏழிசைச்சூழல், புதுச்சேரி,1997
    9. வீரபத்திரமுதலியார், தி., விருத்தப்பாவியல் (விருத்தப்பா யாப்பியல்), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1984.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி, மதுரை.

     

     

    Share
  • ஒரு நாள் கூத்து!

    -பேரா. ம. பரிமளா தேவி

    உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

    என்னங்க ..லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் திரும்பிப் பார்த்தான். ம்… இப்ப இயல்பாதான் பாக்குறானா? இல்ல கோபமா இருக்கானான்னு ஒன்னுமே புரியல யாழினிக்கு.

    நாளை ஆபிஸ்ல மீட்டிங்..

    நாளைக்கா…

    சனிக்கிழமை..

    செகண்ட் சாட்டா்டே கூட லீவ் இல்லையா.

    ம். இல்ல.

    அப்போ இந்த வாரம் கூட வீட்ல இருக்கமாட்டியா என்றான்.

    இல்ல. முக்கியமான மீட்டிங் பாஸ் என்னத்தான் போகச் சொல்லியிருக்காரு என்றாள்.

    குழந்தையை யாரு பாத்துக்கிறது.

    நீங்க பாத்துக்கங்க.

    இல்ல என்னால பாத்துக்க முடியாது . உங்க அம்மாவ பாத்துக்க சொல்லு…

    தமிழ் அப்படி சொன்னதுமே அவளுக்கு ஏனோ கடுப்பா இருந்தது. வருண் அவ்ளோ அடம். செல்லம். அவன் வேகத்துக்கு அம்மாவால ஈடுகொடுக்கவே முடியாது. எல்லா குழந்தையைப் போலவும் வருண் இல்ல. ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கும். துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பான். அம்மா சொல்வாங்க இவன் ரொம்ம சுட்டியா இருக்கான் பாப்பா. சொல்லறத கேக்கவே மாட்டேங்குறான். நிறைய அடம் பிடிக்குறான். எனக்கும் வயசாகுதில்ல. ஸ்கூல் போனதும் நானேகூட பாத்துகிறேன். இப்ப நீயே கொஞ்சநாள் பாத்துகோன்னுவாங்க. சில நேரங்களில் கோபம் தரக்ககூடியதா இருந்தாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுதுன்னு தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வாள். பாவம் அவங்களுக்கும் ஓய்வு வேணாம்மா. பதினைந்து வயசுல இருந்து கஷ்டப்பட்டுத்தான் யாழினியைப் படிக்கவைச்சு கட்டிக்குடுத்தாங்க. எவ்ளவோ ஓடி ஓடி உழைச்சாச்சு. கருப்பை பிரச்சனை முட்டிவலின்னு ஒவ்வொரு மாசமும் அவ அம்மா பட்ட வலியெல்லாம் பக்கம் இருந்து பாத்தவ. பொண்ண கட்டிக்குடுத்தப் பின்னாடியாச்சும் நேரத்துக்குப் சாப்புட்டு ஒய்வாக இருக்க முடியல. அண்ணன் குழந்தை தம்பி குழந்தன்னு எல்லாத்தையும் பாத்துக்கிறாங்க. தன்னால கூட்டிவந்து பாத்துக்க முடியலன்னு குற்றவுணா்ச்சியே அவளுக்கு. என்னதான் அம்மாவுக்குத் தேவையைப் பாத்துபாத்துச் செஞ்சாலும் அம்மா ஆசைப்படறதெல்லாம் பொண்ணு சோ்ந்தாப்பல நாலுநாள் கூட இருக்கனும். போனமுற வந்து போனதிலிருந்து இப்ப வரைக்கும் என்ன நடந்ததுன்னு சொல்ல நிறைய கதைகள் இருக்கும். அதெல்லாம் அம்மா சொல்ல சொல்ல ம் கொட்டிட்டே கேக்க யாழினிக்கு ரொம்ப பிடிக்கும். தன் கை சாப்பாடே பிடிக்கல பாப்பான்னு சொல்வாங்க. உன் கையால எதாச்சும் செஞ்சிக்குடுன்னு கேப்பாங்க. அவ்ளோ ருசியா செய்யலன்னாலும் ஆசையா செய்யறதால நிஜமாவே அவ்ளோ நல்லா இருக்கும்.

    யாழினிக்கு நல்லா வாசிக்கிற பழக்கம் உண்டு. அது அவ அம்மாக்கிட்ட இருந்து வந்தது. அம்மா அந்தக் காலத்துலே பத்தாவது படிச்சவங்க.  தனக்கு வந்த அரசாங்க வேலையை விட்டுட்டுக் குழந்தை கணவன்னு வீட்டோட இருந்துட்டாங்க. அப்ப தன்னோட பொழுதுபோக்குன்னா அது ஒன்னே ஒன்னு புத்தகம் மட்டும் தான். ஊருல நூலகம் எல்லாம் கிடையாது. அஞ்சு கிலோ மீட்டா் பஸ்ல போய் ராணி குமுதமுன்னு வாங்கிட்டு வந்து ஒரு வாரம் வச்சு வச்சு படிப்பாங்க. புத்தகத்த அம்மாவுக்குத் தெரியாம எடுத்துப் படிச்சிட்டு மறைச்சு வைச்சுருவா யாழினி. படிக்கிற பிள்ளைக்கு எதுக்குக் கதை புத்தகம். ஒழுங்காப் படின்னு சொல்வாங்க. ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு இருந்ததுனாலதான் தனக்கு எப்பயெல்லாம் ஓய்வுகிடைக்குதோ அப்பெல்லாம் புத்தகம் படிக்கத்தோனும். அது இப்ப வரைக்கும் தொடர்வதற்குக் காரணம் அம்மாதான்.

    அவங்க பேரக்குழந்தைகளோட நம்ம குழந்தையைப் பாத்துகறதுக்கு என்ன உங்க அம்மாவுக்கு. இங்க வாங்கன்னு கூப்புட்டா ஒருமுறையாச்சும் வராங்களா. டவுன்ல எல்லாம் வந்து இருந்து பழக்கம் இல்லைங்கறாங்க. நீண்ட பெருமூச்சு விட்டு.. சரிங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லிடுறேன். நீங்கப் போய் விட்டுட்டு வந்துருங்க என்றாள்.

    விடியற்காலையிலே கிளம்பனும். காலையிலே டிபன் செய்யவா. வேணா நான் பாத்துகிறேன். அப்பாடா இன்னிக்காவது திருவாயில் இருந்து சமைக்க வேணாம்னு வந்துச்சே. அதுவே பெரிய ஆறுதலா இருந்தது. தமிழுக்கு நிறைய கொள்கை எல்லாம் இருக்கு. அது என்னன்னா இவ்ளோ படிச்சிட்டு யாராச்சும் வீட்ல இருப்பாங்களா. பொண்ணுங்களும் வேலைக்குப் போகனும். அப்படி போகும்போது விடியகாலையில எந்திரிக்கனும். வாசல் தெளிச்சு கோலம் போடனும். பெட் காப்பி கொடுக்கணும். வேலைக்காரி வைக்கக்கூடாது. எல்லா வேலையும் செஞ்சுட்டுத்தான் வேலைக்குப் போகணும். சமைக்கும்போது மாமனார் மாமியார் என்ன சாப்பிடுவாங்களோ அததான் காலையில செய்யணும். மத்தியானதுக்கு அவங்களுக்குச் சாப்பாடும் செய்து வைக்கணும். ஏன்னா மாமியார் சமைக்கமாட்டாங்க. வேலைக்குப் போறவங்க எல்லாம் சமைக்காம தான் போறாங்களா என்பான். அந்தச் சாப்பாடு வருணுக்குத் தமிழ்தான் ஊட்டுவான். ஊட்டும் போதே திட்டிட்டே ஊட்டுவான். அரிசியை இன்னும் குழைய விட்டிருக்கலாம் இல்ல. அரைமணி நேரமாச்சும் அரிசியை ஊர வைக்கணும் இல்ல. குக்கா்ல செய்யாம நல்லா வடிக்கணும். அதயும் எடுத்து மிக்சில போட்டு அரைச்சு கொடுக்கனும். அப்போதான குழந்தைக்குச் சக்தி கிடைக்கும்னு தினமும் பாடுற புராணத்தை முடிச்சிருவான். ஏழரை மணி பஸ்ஸ பிடிக்க நைட்டு முடிக்காம விட்ட எல்லா வேலையும் செஞ்சிட்டு டிபன் பாக்ஸ் கையோடு ஓடிப்போய்தான் பஸ்ஸயே பிடிப்பாள் .அப்பவும் சொல்வான் கொஞ்சம் முன்னாடி எழுந்தா என்ன. ரிலாக்ஸா வேலையை முடிச்சிட்டுப் போலான்னு இலவசமா புத்திமதி தருவான்.

    யாழினிக்குச் சின்னச் சின்ன கனவு எல்லாம் இருந்தது. காலையில குளிச்சு முடிச்சிட்டு நல்ல பில்டா்காபி போட்டு அத ஆவிபறக்க ஊதி ஊதி நிறைய நேரம் குடிக்கணும். காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறதுல இருக்கற சொகமே  தனிதான். காப்பி குடிக்கும்போது நாக்கு நுனியில சா்க்கரையோட சுவை இருந்துட்டே இருக்கும். காலையில டிபன் சாப்பிட வரைக்கும். அந்தச் சா்க்கரை எப்படி ஒவ்வொரு நாளும் சுவைதருதோ அதுபோல வாழ்நாள் முழுக்க வாழ்க்கையும் சுவையா இருக்கும்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை. வருண் வயித்துல இருக்கும்போதுதான் கண்டுபிடிச்சாங்க பெண்களுக்குப் பேறுகாலத்துல வர சா்க்கரை நோய் இருக்குன்னு டாக்டா் சொல்லிட்டாங்க. அவன் பொறந்ததும் இரண்டு மாசத்துல சா்க்கரை இல்லை. இருந்தாலும் அவளால தனக்குச் சர்க்கரை இருந்ததா. எப்படி இவ்ளோ வயசாகியும் தன் அப்பா அம்மாவுக்கு இல்லாத ஒன்னு தனக்கு எப்படின்னு யோசிக்கும் போதுதலையே வெடிச்சிரும் போலயிருக்கும். அப்ப இருந்து இப்ப வரைக்கும் காபில சுகா் இல்லை. காபியைக் குடிச்சிட்டே நியூஸ் பேப்பரை காலையில படிக்கணும். ஆபிஸ் போயிட்டு வந்து நைட்ல படிக்கறதல என்ன சுவாரசியம் இருக்கு. சமைக்கும்போது இளையராஜா பாட்டுக் கேக்கணும். இல்ல தானாச்சும் பாடிட்டே சமைக்கணும். ஆனா அப்படி எதுமே நடக்காது .ஒவ்வொரு நாளும் காலையில என்ன சமைக்கணும் மத்தியானம் என்ன சமைக்கணும் குழந்தைக்கு என்ன செய்யணும் ஆபிசுக்கு என்ன மெயில் அனுப்பணும்.. ஆபிஸ்ல வொர்க் எப்ப முடிக்கணும். மூளைக்குள்ள அவ்ளோ வேகமா வேலைகள் ஓடிட்டே இருக்கும்.

    ஆபிஸ்ல வேலை முடிச்சிட்டுச் சோர்ந்து வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கத்தோணும். தெருவிலே மாமியார் பாத்துட்டு வருணு தங்கம் அம்மா வந்துட்டாங்க பாருன்னுவாங்க. அவங்க டியூட்டி டைம் அதுவரைக்கும்தான். என்கிட்ட கொடுத்துட்டுச் சீரியல் பாக்கப் போயிருவாங்க. அவங்களயும் கொற சொல்ல முடியாது. குழந்தையோட கொஞ்சநேரம் இருந்துட்டு மறுபடியும் பாத்திரம் தேய்ச்சு வீடு கூட்டி நைட்டுச் சாப்பாடு எடுத்து வைச்சு சாப்பிட உக்காரும் போது நைட்டுப் பத்தாயிரும்.

    எவ்வளவு சோர்வா இருந்தாலும் அடுத்த நாள் ஆபிஸ்ல என்ன செய்யணும் என்ற நெனப்பு ஒருபுறம் இருக்க, பெண்டிங் வொர்க் எல்லாம் முடிக்க நைட் எப்பவுமே பன்னிரண்டு ஒரு மணி ஆகும். தினசரி வாழ்க்கை இதுதான். இதுலஒரு மாற்றமும் இல்லை. இதவிட நிறைய சோர்வு என்னன்னா யாழினிக்கு எதையும் தமிழ்கிட்ட சோ் பண்ண முடியாது.

    ஆபிஸ்ல என்ன நடந்தாலும் அத உடனே வந்து சொல்லும் போதும் சரி அப்படியா அத தவிர வேற ஒன்னும் வராது.

    ஏதாவது பிரச்சனை வந்தா அத ஏன் என்கிட்ட சொல்ற வாசலுக்கு வெளியே செருப்ப கழட்டும்போதே எல்லாத்தையும் விட்டுரணும். அதையும் தாண்டி அலுவலகத்தில் சில நுண்ணரசியல் செயல்களையெல்லாம் தாங்காம சொல்லும் போதும் நீ தைரியமா இருக்கணும் வேலையை இன்னும் நல்லா செய்யின்னு சொல்லிட்டுப் போயிருவான். இதயெல்லாம் சொல்லாமலே அவளுக்கே தெரியணும். அவளுக்கு எப்பவுமே தோணும் தான் சோர்வா இருந்தா தோள்சாய அவன் இருக்கணும். தலையை வருடிக்கொடுக்கணும். உனக்கு நான் இருக்கன்னு சில வார்த்தைகள். இப்படிப்பட்டஆசைகள் எதுவுமே நடப்பது இல்லை.

    சமைக்கப்போறீங்களா. நான்மட்டும் தான ஓட்டல்ல வாங்கிறேன். பொதுவாக ஓட்டலில் சாப்பிடபோலாம்னாலோ இல்லை போனாலோ பெரிய பிரசங்கம் பண்ணுற ஆளு. மாசத்துக்கு ஒரு முறை போனாக்கூட ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லது இல்ல. எப்பவும் வீட்டுச் சாப்பாடுதான் நல்லதுன்னு சொல்வான். அப்படியே போனாலும் உனக்கு என்ன வேணுமோ அதஎல்லாம் ஆா்டா் செய். லேட் பண்ணாத எனக்கு வேலை இருக்கு உடனே கிளம்பணும்னு சொல்லும் போதே சாப்பிடற ஆசையே அவளுக்கு விட்டுபோயிரும். தினமும் நான் சமைச்சு நானே சாப்பிடுறேன். ஒரு டேஸ்ட்டுக்கு சேஞ் பண்ணிசாப்பிட்டா நல்லா இருக்குன்னுதானே பொண்ணுங்க வராங்க . அதுக்கூட புரியாதா இவங்களுக்கு எல்லாம் என்று மனசுக்குள்ளத் தோணும் யாழினிக்கு.

    ஓட்டலுக்குப் போயிருந்தபோது முழுக்க தன்னுடைய பார்வையால் சுழலவிட்டிருந்தாள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனா். உடனே தான் பார்த்த படத்தில் ஒரு காட்சி அவள் நினைவுக்கு வந்தது. நாயகனும் நாயகியும் சாப்பிட ஓட்டலுக்குப் போறாங்க. இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு வந்த கிராமத்துப் பெண்ணாகக் காட்டியிருப்பாங்க. சாப்பிட உட்கார்ந்ததும் எல்லோரையும் பார்க்கும்போது நிறைய பெண்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அய்ய இந்த ஊா்ல பொம்பளைங்க சமைக்கமாட்டாங்களா.. இங்க வந்து சாப்பிடுறாங்க. எங்க ஊா்ல எல்லாம் கழனி வேலைக்குப் போற பொம்பளைங்க எல்லாம் தூக்குச் சட்டியில சாப்பாடு கொண்டு போவாங்க என்பாள். இப்படி எல்லாம் யோசிக்கறவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் போயிருவேன். என்ன வாழ்க்கை எங்க போனாலும் எதப்பாத்தாலும் ஊா்ல இருக்கிறவன் எல்லாம் பொண்ணுங்களுக்கே கருத்துச் சொல்லிட்டு இருக்காங்க. சூடான பேல்பூரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டே கொண்டே தமிழைப் பார்த்தாள். அவன் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்பவும் இருக்கானா என்கிற கேள்வி எழுந்தது.

    அலுவலகத்தில் போன வாரம் பெண்கள் தினத்திற்குப் பேச விருப்பம் உள்ளவர்கள் பெயரைப் பதிவு செய்ய சொல்லியிருந்தாங்க. எல்லாரும் சொன்ன ஓரே பெயர் யாழினி. அவங்க பேசுனா சரியா இருக்கும் எனும் பதில் வந்தது.  யாழினியைப் பொறுத்தவரைக்கும் பெண்ணுக்கான இடத்தை யாருக்காகவும் விட்டுத்தரமாட்டாள். பெண் அப்படிங்கறதாலேயே சலுகையை எதிர்பார்க்க கூடாது. பிறருடைய அனுதாபத்தை விரும்பாதவள்.

    காலையில ஐந்து மணிக்கு எழுந்து டிபன் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணி பசங்கள ஸ்கூலுக்கும் கணவனை ஆபிஸ்க்கும் அனுப்பிட்டு எனக்கு டயா்டா சேச் சே நான் தான்… லைன் ஹனி குடிக்கறனே.. டீவில ஒரு பெண்  விளம்பரத்துல சொல்றதும்  பாத்ததும் இதை ஏன் ஆண் சொல்றது போல எடுக்கறதில்ல.. யோசிட்டே பெண்கள் தினத்துல என்ன பேசலான்னு குறிப்புகளைத் தயார் செய்தபடி இருந்தாள். தனக்கு எப்பவும் பிடித்துப் பிளாக் கலா்ல காட்டன் சேரியைக் கட்டிகொண்டு ரொம்ப நேரமாகக் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துட்டே இருந்தாள்.  தான் கல்லூரியில் படித்த நாட்கள் எல்லாம் கண் முன்னாடி வந்தது. அப்போவெல்லாம் பெண்கள் படித்தால் வேலைக்குப் போனா  சுயமரியாதையுடனும் யாருக்கும் அடிமை யில்லாமலும் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். ஆனா படிப்பு வேலை அவள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்குமே ஒழிய அவளுக்குகான சுதந்திரவெளியைச் சுயமரியாதையைக் கொடுத்துறாதுன்னு இப்பத்தான் புரிஞ்சது.

    நீண்ட பெருமூச்சுவிட்டு புன்னகையோடு அனைவருக்கும் வணக்கம் என்றாள். உங்க எல்லாருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். ஏன் ஒரு நாள் மட்டும் கொண்டாடணும் எல்லாம் நாளும் அவர்களுக்குக்கானது தான் என்று முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும், பெண்கள் தினத்துல கூட தான் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவிக்க தயங்குற பிற்போக்கான எண்ணம் கொண்டர்வா்களும் இன்று ஒரு நாள் தனக்கானது என்று மகிழ்ச்சியாக இருக்கின்றவா்களும் முதலில் இந்தத் தினத்திற்கான முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    பேச்சின் முடிவாக “நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் மனிதகுல விடுதலை சாத்தியமல்ல என்ற லெனின் வாசகத்தையும் வீட்டு வேலைகளில் ஆணும் பெண்ணும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதைச் சோவியத் நாடு சட்டமாக்கியது குறித்தும் சொல்லிய பின்பு” நம்முடைய சிந்தனையில் மாற்றம் வந்தால் ஒழிய இந்த பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி முடித்தாள்.

    “வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை வைப்போமா எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கு, குழந்தையையும் பாத்துக்கணும் கஷ்டமா இருக்கு”.

    “இப்பவே இவ்ளோ குண்டா இருக்க.  உன்னைப் போல வீட்டையும் பாத்துட்டு வேலையையும் செய்றவங்க யாருமே இல்லையா. கொஞ்சமாச்சும் வேலை செஞ்சு உடம்பைக் கொற”.

    கோவத்துல தீபாவளிக்கு வாங்கிட்டு வந்து இருந்த மொத்த ஸ்வீட்டையும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்!

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 133

    ஆத்திரத்தை ஆத்திரத்தால் வெல்ல முடியுமா?

    “நேற்று எனக்கு என் கணவர்மேல் ஒரே கோபம்!” என்றாள் என் சிநேகிதி குமுதினி.

    நான் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

    “ஒரு நாள் விட்டு ஒரு நாள் குப்பையை வெளியில் போடவேண்டியது அவருடைய கடமை. அவரோ மறந்துவிட்டதுபோல் இருந்தார். எல்லா வேலையும் நானே செய்ய வேண்டும் என்றால் எப்படி? அதான் அவரோடு பேசுவதை நிறுத்திவிட்டேன்”.

    அப்போது வந்த என் கணவர், “உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்?” என்று குமுதினியை விசாரித்தார், மரியாதையை உத்தேசித்து.

    அவள் பதில் சொல்லுமுன் நான் முந்திக்கொண்டேன். “தெரியாது. அவள் நேற்று ராத்திரியிலிருந்து அவருடன் பேசுவதில்லை!”

    நாங்கள் மூவரும் சேர்ந்து சிரித்தோம். எந்த தாம்பத்தியத்தில்தான் பிணக்குகள் இல்லை?

    இம்மாதிரி – சில நாட்கள் `மௌன விரதம்’ கடைப்பிடிப்பது — உணர்ச்சிபூர்வமான ஒரு மிரட்டல்தான். சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றலாம். ஆனால், கோபத்தையோ, ஏமாற்றத்தையோ, தடுமாற்றத்தையோ வெளிக்காட்ட வேறு வழி தெரியாததால் இப்படிச் செய்கிறோம்.

    பால்யப்பருவத்தில் இம்மாதிரியான நடத்தை சாதாரணமாக நிகழ்வது.

    என் சக ஆசிரியை மிஸஸ்.சிங், “நேற்று எனக்கு என் மகன்மேல் ஒரே கோபம். நான் சொல்வதையே கேட்பதில்லை. Go to hell! (நரகத்திற்குப் போ!) என்று கத்திவிட்டேன்,” என்றாள். குற்ற உணர்ச்சியா, இல்லை பேச ஏதோ ஒன்று கிடைத்ததே என்பதாலா என்று புரியவில்லை.

    இதையேதான் சிறுவர்களும் எதிர்பார்க்கிறார்கள். சிறுவர்கள் அப்படி நடந்தால், கவனியாது இருந்துவிடுவதே நலம்.

    நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால், அழுதபடி தாயை அடிப்பார்கள்! தம் வேதனையை வேறு எப்படித்தான் வெளிக்காட்டுவது!

    (எங்கள் வீட்டுப் பூனைக்குட்டியும் அப்படித்தான். தூக்கம் வந்துவிட்டாலோ, தொலைகாட்சியில் வருத்தமான காட்சி வந்தாலோ, தாங்கமுடியாது என்னை அடிக்கும். உணர்ச்சிப்பெருக்கை வெளிக்காட்ட அதற்குத் தெரிந்த வழி அது. காட்சி புரியாவிட்டாலும், சோக இசை புரியும் போலிருக்கிறது).

    சிறுவர்களோ, பெரியவர்களோ, நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த விடலாமா? பல சந்தர்ப்பங்களில் நம்மையும் அறியாமல் அப்படித்தான் செய்துவிடுகிறோம்.

    சிலர் எதற்கெடுத்தாலும் பிறர்மீதே குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, தாமும் நிம்மதியில்லாமல், பிறருக்கும் நிம்மதி கிடைக்காமல் செய்வார்கள். எதிர்பார்ப்புகள் மிகையாக இருப்பதும் ஒரு காரணம்.

    கதை

    உமாராணி செல்லமாக வளர்ந்தவள். மூன்று அண்ணன்களுக்குப்பிறகு பிறந்ததால், அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. தமிழ் திரைப்படங்களில் வரும் குழந்தைகள்போல் அவள் பெரியவர்களை எதிர்த்துப் பேசுவாள். அதையும் வியந்து பாராட்டுவார்கள், `எவ்வளவு தைரியமாகப் பேசுகிறாள்!’ என்று.

    இப்படி வளர்ந்தவள், கணவன் சிவராமனும் எல்லா விஷயங்களிலும் அவளை அனுசரித்துப் போகவேண்டுமென்று எதிர்பார்த்ததில் அதிசயமில்லை. தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அளவுக்கு மீறிய கோபம் எழ, உதட்டை இறுக்கியபடி, சில நாட்கள் அவனுடன் பேசுவதைத் தவிர்த்தாள்.

    எதற்கெடுத்தாலும் அவள் குற்றம் கண்டிபிடிக்க, அவன் பதிலுக்குக் கத்த, அவர்கள் உறவே கசப்பாகிவிடுகிறது என்று சில மாதங்களில் புரிந்துகொண்டான் சிவராமன்.

    `உன்னைப் பாதிப்பது எது? சொன்னால்தானே புரியும்?” என்று ஒரு தடவை சொல்லிவிட்டு, அகன்றுவிடுவதே சரியான முறை என்று தோன்றிப்போயிற்று.

    இந்த குழந்தைத்தனம் தான் சொன்னதாலோ, செய்ததாலோ இல்லை, அவள் வளர்ந்த முறையால்தான் என்று தெளிந்தான். பெற்றோர், அண்ணன்மார்களை மகாராணிபோல் அதிகாரத்துடன் நடத்தியவள் இல்லையா! அவளுடைய கோபத்தை அலட்சியம் செய்தான். அவனிடம் எந்த எதிர்ப்பும் இல்லாதுபோக, உமா அந்த நடத்தையைக் கைவிட்டாள்.

    `என்னுடன் ஒருவர் மோதுவதா!’ என்று ஆணவம் தலைதூக்கும்போதுதான் சச்சரவுகள் எழுகின்றன.

    கதை

    ஒரு பலசரக்குக்கடைக்கு நான் போனபோது, கடையை மூட அரைமணியே இருந்தது. நான் எப்போதும் போகும் கடைதான். என்னென்ன சாமான் வேண்டும் என்று நான் கூற, “முன்னாலேயே வந்திருப்பதுதானே? இவ்வளவு லேட்டா வந்து கழுத்தறுக்கறீங்களே!” என்று கடைச் சிப்பந்தி எரிந்துவிழுந்தார்.

    `கடை இன்னும் திறந்துதானே இருக்கிறது? உங்கள் வேலை எங்களைக் கவனிப்பதுதானே?’ என்ற ரீதியில் நானும் ஆத்திரப்படவில்லை.

    பிறர் நம்மீது ஆத்திரப்படுவது, அனேகமாக, அவர்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பதால்தானே! பிறரது நடத்தைக்கெல்லாம் நாம் பொறுப்பேற்று, குற்ற உணர்ச்சிக்கோ, கோபத்திற்கோ ஆளாவது முட்டாள்தனம்.

    `நாள் பூராவும் வேலை செய்து களைத்துப் போயிருக்கிறார், பாவம்! அத்துடன், அயல்நாட்டுக்கு வந்திருப்பதால் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்திருக்கும் ஏக்கம் வேறு!‘ என்று புரிந்தது.

    “எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள். நானே எடுத்துக்கொள்கிறேன்!” என்று ஓரிரு சாமான்களை எடுக்க, அவருக்கு அழுகை வந்துவிட்டது.

    இன்னொரு கடையில், சில வருடங்களாக வேலை பார்த்துவந்த கணபதியை எனக்குத் தெரியும், எல்லாரிடமும், மலாய், ஆங்கிலம், தமிழ், இந்தி என்று பல மொழிகளிலும் கலகலப்பாகப் பேசுவார். திடீரென்று அவர் நடத்தை மாறியது. ஒரே சிடுசிடுப்பு. ஏதாவது கேட்டால், மரியாதை இல்லாது கத்தினார்.

    சற்று யோசித்ததில், அடுத்த தெருவிலேயே குளிர் சாதன வசதியுடன் அக்கடையின் பெரிய கிளை ஒன்று திறக்க, கூடுதல் சம்பளத்துடன் அதை வகிக்க இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஆத்திரப்படுகிறார் என்று ஊகித்தேன். அவரே நொந்திருக்கும்போது, நானும் அவர் மனதைக் காயப்படுத்த வேண்டுமா என்று விலகிப்போனேன்.

    எப்படிச் சமாளிப்பது?

    நமக்கு ஆத்திரம் ஏற்பட்டாலோ, அல்லது பிறர் நம்மீது ஆத்திரப்பட்டு அவர்களைப்போல் நம்மையும் மாற்ற முயன்றாலோ, நமது உணர்ச்சிப்பெருக்கை அடக்க சிறந்த வழி மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விடுவதுதான்.

    எல்லோரிடமும் அடிக்கடி ஆத்திரப்படுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்களை, `அது அவர் வந்த வழி. அவர் எப்படியோ தம் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!’ என்று விடவேண்டியதுதான். கெடப்போவது அவரது ஆரோக்கியம்தானே!
    தொடருவோம்

    Share
  • ஆறுபடை அழகா…. (5)

     

     

    பழமுதிர்ச்சோலை

     

    தோகைமயில் பாதையிலே தோரணங்கள் போட்டிருக்கும்

    பாகைவழி நீக்கிவிட்டுக் கோள்களெலாம் கூடிநிற்கும்

    வாகைசூடி வருபவனை வாழ்த்திடவே காத்திருக்கும்

    தேவையென்றுத் தேடியிங்கே கந்தனவன் கண்விழியை !

     

    நாசியிலே காற்றடக்கி நானறியத் துடிப்போரும்

    ஆசையுடன் பாசம்விட்டு அகமகிழும் பெரியோரும்

    பூசையெனச் சேவையிலே புண்ணியத்தைச் சேர்ப்போரும்

    பாசத்துடன் குமரய்யா  பாதங்கள் தேடியிருப்பார் !

     

    பட்டமரம் மேலிருப்பாய் பசுமேய்க்கும் பாலகனாய்

    சுட்டப்பழம் கேட்டுவிட்டால் சுடாதபழம் தந்திடுவாய்

    வெட்டவெளி விண்ணெல்லாம் வேலவனே மறைந்திருப்பாய்

    கிட்டவந்தே கேட்டிருப்பாய் கிரங்கியிந்தன் தமிழ்ப்பாட்டை !

     

    வள்ளியுடன் தெய்வானை வளைத்திருக்க வேலவனை

    வெள்ளிமலை தம்பதியர் வாழ்த்திவிட பாலகனை

    அள்ளிவந்த ஆசியுடன் வானகத்து வித்தகரும்

    துள்ளிவந்தார் தேடியிங்கே சோலைமலை சூட்சுகனை.!

     

    கரையில்லாக் கருணைக்கடல் கலையறியா எழில்வண்ணம்

    மறையறியா முன்தோன்றல் மனம்நிறையும் ஒளிப்பிழம்பு

    சிறைப்பட்டேன் உன்நினைவில் சிதறாத சிந்தனையில்

    நிறைவாக  நிலைபெறுவாய் நித்தியனே என்னுயிரில் !

     

    Share
  • இன்னருளைச் சொரிந்துவிடு

     

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    பழனி மலை மீதமர்ந்தாய்
    பாவம் தனைப் போக்கிவிடு
    உளம் இரங்கி கேட்கின்றோம்
    உன் முகத்தைக் காட்டிவிடு
    தனம் எமக்குத் தந்தாலும்
    தயாளம் அதில் சேர்த்துவிடு
    உதவி விடும் உயர்குணத்தை
    உளம் இருக்க அருள்புரிவாய்

    கெட்ட எண்ணம் வாராமல்
    சஷ்டி தனைப் பிடிக்கின்றோம்
    குட்டி எங்கள் தலைமீது
    குமரா அருள் சொரிந்துவிடு
    நிட்டூரம் செய்து நிற்கும்
    துட்டர் எலாம் திருந்துதற்கு
    இஷ்டமுடன் உமை மைந்தா
    இன்னருளைச் சொரிந்து விடு

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181105a Yashoda krishna – watercolour – A4 100dpi with Yashoda Sundaralingam (SriLanka) live demo. lr

    கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
    கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
    உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
    இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!

     

    என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனை
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
    கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….!

    Share
  • ஆறுபடை அழகா…. (4)

     

     

    சுவாமிமலை (திருவேரகம்)

     

    ஓங்காரப் பொருளை உலகிற்குச் சொன்னவனே

    ஏங்காத நாளில்லை உன்னருளைத் தேடித்தேடி

    தாங்காத துயரெல்லாம் தானாக விலகிடுமே

    தணியாத அன்போடு திருவேரகம் கண்டிடவே !

     

    தந்தைக்கும் குருவாகி தர்மத்தைக் காத்தவனே

    தவிக்கின்ற நெஞ்சத்தின் தாகங்கள் தீர்ப்பவனே 

    தானென்ற அகந்தையைத்  தகர்த்திடும் கந்தா

    தரணியிலே உனையென்றித் துணையேது முருகா!

     

    குருவாக அமர்ந்தாலும் குழந்தை வடிவன்றோ

    வருவாயே நானழைத்தால் வாடாத முகத்தோடு

    அருவாக உருவாக எதுவாக நீயிருந்தாலும்

    கருவாக இருப்பாயே காலமெல்லாம் சிந்தனையில் !

     

    ஓமென்று சொல்லிடுவேன் ஓராயிரம் முறைகள்

    உள்ளத்தில் நீயிருப்பாய் உணர்வாகி நிறைவோடு 

    உயிரோடு ஒன்றான ஓங்காரத் தத்துவமே

    உனையன்றித் துணையேது உய்ந்திடவே இப்புவியில் ?

     

    நீராட்டி சீராட்டி தாலாட்ட அழைத்திடுவேன்

    நீயென்றும் குழந்தாய் என்றே நினைத்திடுவேன்

    நீலமயில் மீதேறி வருவாயோ நித்தியனே

    நிலையாத என்மனதின் நிலைகாக்க வாராயோ ! 

     

    Share
  • உனதடியைப் போற்றுகிறோம் !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

     

    வீரம்தனைக் கொடுத்து விடு
    வித்தைகளும் கொடுத்து விடு
    ஈரமுள்ள நெஞ்சம் தனை
    எல்லோர்க்கும் ஈய்ந்து விடு
    சூரன் உள்ளம் திருந்துவிட
    ஈரம் தனை காட்டியவா
    தொழு தழுது நிற்கின்றோம்
    சுடர் கொழுந்தே துணைநீயே !

    அருண கிரி கடைத்தேற
    அருள் கொடுத்த வேல்முருகா
    கச்சியப்பர் கவி புனைய
    கருணை தனைக் காட்டியவா
    இச்சை உடன் மயிலமர்ந்து
    எங்கள் துயர் போக்கிடவா
    என்னாளும் கதிர் வேலா
    எங்கள் மனம் உன்வசமே !

    பொருள் எமக்கு கொடுத்தாலும்
    அருள் அதனுள் சேர்த்துவிடு
    மருளென்னும் பேய் தன்னை
    மாண்டு விடச் செய்துவிடு
    செரு அதனை ஏற்றுநின்ற
    செருக்கு மிக்க அசுரரயே
    உரு காட்டி உய்வித்த
    உன தடியைப் போற்றுகிறோம் !

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    181110- when maya evaporates DWA -A4-Canson 200 wcol -72dpi lr

    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
    நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை)
    அண்டர்கோன்(இந்திரன்) கண்களாய், ஆவினம் காத்திட
    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி) கீ(KEY)….கிரேசி மோகன்….!

    KEY -SOLUTION….!

    Share
  • உலகின் முதல் பெண் பொறியியலாளர்!

    உலகின் முதல் பெண் பொறியியலாளர் எலிசா லியோனிடா சம்பிரியசுவிற்கு இன்று 131 ஆம் பிறந்த நாளைக்கொண்டாடுகிறது கூகிள். யார் இவர்? எலிசா லியோனிடா, உரோமானியரான, 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்த இவர் உலகின் முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவராக வரலாற்றை உருவாக்கியுள்ளவர்.

    தனது 86 வருட வாழ்க்கையில், ஆண் ஆதிக்கத்தினால் பெண் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், புவியியல் ஆய்வகங்களின் தலைமை பொறுப்போடு, உரோமானிய கனிம வளங்களைப் பற்றியும் ஆய்ந்தறிந்தார்.

    இவர் இந்த அளவிற்கு மதிக்கப்படுவதற்கான காரணங்கள் உள்ளன:

    பெண் கல்விக்கு எதிரான காரணத்தால் ஆரம்பப் பள்ளிக் கல்வியிலிருந்தே நிராகரிக்கப்பட்டவர் இவர். 10 உடன்பிறப்புகளுடன் வளர்ந்த இவர் போராடி, உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்றபின்னரும் பாலினம் காரணமாக உயர் கல்வியை தாம் விரும்பிய School of Bridges and Roads in Bucharest இல் பயில நிராகரிக்கப்பட்டார்.

    சற்றும் மனம் தளறாதவர், பெர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சார்லட்டன்பர்க், ராயல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் கல்வி பயின்று, 1912 இல் பட்டமும் பெற்றார். ஐரோப்பாவிலேயே முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றார்.

    எலிசா லியோனிடா, உரோமானிய மற்றும் செருமனிக்கு இடையே 1917 இல் உரோமானியப் படையில் நடந்த முதலாம் உலகப் போரின் இறுதிப் போரின்போது செஞ்சிலுவைச் சங்கத்தில் சிறிய நகரமான மாரெயிஸ்டி என்னும் இடத்தின் மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றினார்.

    காலையிலிருந்து மாலை வரை ஓய்வில்லாமல் முழுநேரமும் பணிபுரிந்த ஒரு தனித்தன்மை மிக்க, நவீன சிந்தனைகள் கொண்டவராக, தமது ஆய்வகத்தின் தலைவராக, புதிய வழிமுறைகளையும் புதிய பகுப்பாய்வு நுட்பங்களையும் கொண்டு தண்ணீர், நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற கனிமங்களையும், பொருட்களையும் ஆய்வு செய்ய உதவியுள்ளார். தமது 75 அகவை வரை ஓய்வின்றி உழைத்தவர்.

    அனைத்திற்கும் மேலாக, அணு ஆயுத அச்சுறுத்தலை மையமாகக் கொண்ட இலண்டன் லான்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற ஆயுதக் குழுவில் இதுபற்றி புகார் அளித்ததோடு, சர்வதேச ஆயுதக்குறைப்பிற்கான ஒரு வழக்கறிஞராகவும் வாதாடியுள்ளார்..

     

    Share
  • ஆறுபடை அழகா…. (3)

     

     

    பழனி  (திருவாவினன்குடி)

     

    பழமெதற்குப்  பூவெதற்கு பழனிமலை ஆண்டவனே

    பழமாகக் கனிந்து தரணியெல்லாம் மணப்பவனே

    நிழலாக நின்றாலும் நினைவெல்லாம் நிறைபவனே

    நிசமாக வருவாயோ நின்னருளைத் தந்திடவே ?

     

    பாலெதற்குத் தேனெதற்கு பழனிமலைப் பாலகனே

    வேலெடுத்த உனைக்கண்டால் வேதனைகள் மறையாதோ?

    சொல்லெடுத்துப் பாட்டிசைத்து உனையழைக்க முருகா

    சொல்லாமல் நீவருவாய் சோதனைகள் விலக்கிடவே !

     

    தோள்சுமக்கத் துணைதேடி உனைநாடும் காவடிகள்

    கண்ணிமையில் உனைநிறுத்தித் தேடிடுமே சேவடிகள்

    பவனிவரும் பழநியிலே பொங்கிவரும் பால்குடங்கள் 

    பாசத்துடன் அணைத்திடுவாயே பக்தர்களை பழனியப்பா !

     

    தோகைமயில் சேவல்கொடி ஏதுமின்றி நின்றாய்

    போகமில்லா வாழ்வென்றும் புதிதென்று சொன்னாய்

    சோகமெல்லாம் நீங்கிடுமே சொல்லிடவே உன்பெயரை

    போதகனே சாதகனே புவிக்காக்கும் வேலவனே !

     

    அவ்வையின் தமிழ்கேட்க ஓடிவந்த வடிவேலா

    அகத்தியனுக்கு அருள்புரிந்த ஆனந்தத் தமிழ்வேளே!

    ஆண்டியாகி நின்றாலும் அளவில்லா அருட்சுனையே

    ஆவினன்குடி மலையப்பா அருள்வாயே குறைவின்றி !

     

    Share