Blog

  • திருமூலர்  வாழ்வும் வாக்கும்!

    -முனைவர்.த.பாலமுருகன்

    ‘திரு’என்பதற்குச் செல்வம், சிறப்பு, அழகு, ஒளி, இலக்குமி, தெய்வத்தன்மை எனப் பல பொருள்கள் உண்டு. எனினும் இதற்குத் தெய்வத் தன்மை வாய்ந்த என்னும் பொருள் பொருந்துவதாகக் கூறலாம். உரையாசிரியரான பேராசிரியர் திருக்கோவையார் உரையில் ῾திரு` என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மையின் நோக்கம் என்று குறிப்பிடுகிறார்.1 பிறந்த நட்சத்திரங்களில் பெயர்சூட்டிக் கொள்ளும் மரபு இன்றும் இருக்கிறது. கார்த்திகேயன், ஆதிரையான், ரேவதி முதலிய பெயர்களைச் சுட்டலாம். மூலத்தில் பிறந்ததனால் மாமூலன், ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார், மூலங்கீரனார் போன்று திருமூலரும் இவ்வகையில் பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுவர்.

    திருமூலருக்குத் தாய் தந்தையார் இட்ட பெயர் சுந்தரன் என்பதாகும். இவர் அகத்தியர் நடத்திய தமிழ்ச் சங்கத்தில் உலக நூல் கற்றார். அகத்தியரின் விருப்பத்தால் வடகயிலையில் நடைபெற்ற வேதாகமங்களை நந்தி பெருமானிடம் கற்று ῾நாதர்’என்ற பட்டமும் பெற்றுச் சுந்தரநாதராய்த் தவம் செய்து வாழ்ந்திருந்தார். இவருடன் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகியோர் பயின்று வந்துள்ளனர்.

    அந்தணர்களின் ஆநிரைகளை மேய்த்து வந்த மூலன் இறந்து விடவே, அவன் உடலைச் சுற்றிப் பசுக்கள் கதறின. அத்துன்பத்தைப் போக்க சுந்தரநாதர் மூலனின் உடலில் தம் உயிரைச் செலுத்தினார். இது அட்டமாசித்திகளுள் ஒன்றாகியப் ‘பிராகாமியம்’ எனப்படும்.  உயிர் பெற்ற மூலன் எழுந்து விடவே பசுக்கள் மகிழ்ந்தன. மூலன் உடலில் புகுந்த சுந்தரநாதனுக்கு மீள முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் அவனை மூலன் என்றே அழைத்து வந்துள்ளனர். இதனை,

                                “நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
                                 நந்தி வழிகாட்ட நானிருந் தேனே”2 என்றும்,

                                “நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
                             நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்”3 என வரும் கூற்றுக்கள் மூலம் விளங்கும்.

    நீடு வாழ்ந்தவர்

    திருமூலர், காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிந்ததால் திருவருள் நலம் பெறுதற்குரிய தோய்வும் பெற்றார் எனலாம். அதனால் அவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருந்தார் என்பதை,

          “நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
            வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை”4 எனவும்,

         “காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
      கூற்றை யுதைக்கும் குறியது வாமே” 5 எனவும் திருமூலர் குறிப்பிடுவதனால் அவர் நீண்ட நாள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை அறியலாம். இதனை,

    “உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”6 எனவும்,

      “அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை”7

    எனவும் திருமூலர் குறிப்பிடுகிறார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருத்தமைக்குரிய காரணத்தைத் திருமந்திரம் என்னும் நூலினை இயற்றவே என்று அவரே தம் நூலில் குறிப்பிடுகிறார். இதனை,

                              மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
                              நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு
                              மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
                              சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே” 8 எனவும்,

                           “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
                            தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” 9 எனக் கூறுவதன் மூலமும் புலப்படுத்துகிறார். மேலும் இவர் எண் வகைச் சித்திகளையும் கைவரப் பெற்றிருந்தமையை,

                  “அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
                  பெரிதருள் செய்து பிறப்பறுத்தேனே” 10 என்ற அடிகளின் மூலம் அறியமுடிகிறது.

    உடலை வளர்ப்பதன் மூலமே உயிரை வளர்க்க முடியும் எனத் தான் அறிந்து இருந்ததால் உடலை வளர்க்கும் கலையான காற்றைப் பிடிக்கும் கணக்கும் அட்டமா சித்திகளையும் கைவரப் பெற்று திருமூலர் நீண்ட நாள் உயிர் வாழ்ந்து இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

    திருமூலரின்  காலம்

    திருமூலரின் காலத்தினை அறிந்து கொள்வதற்கு அவரோடு தொடர்புடையவர்கள், சமகாலத்தவர்கள், இலக்கியம், இலக்கணம், புராணச் சான்றுகள் ஆகியவற்றை  ஆராய்ந்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.

    திருமூலரோடு தொடர்புடைய வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய இருவரும் அவரோடு கயிலையில் சிவனிடம் உபதேசம் பெற்றவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இவர்களுள் வியாக்ரபாதர், வசிட்டர் என்னும் ரிஷியின் மைத்துனர் என்று புராணங்கள் கூறுவதாக வே. சங்கர் கூறுகின்றார்11.  வசிட்டர் இராமாயணக் காலத்தில் வாழ்ந்தவர். இராமாயணம் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாறு என்று ‘கார்பன் தியரி’என்ற முறை மூலம் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் கார்பன் தியரி கூறும் இக்கருத்து ஏற்புடையதாக இல்லை என்று இரா.மாணிக்கவாசகம் அவர்கள் தமது திருமந்திர ஆராய்ச்சி என்னும் நூலில் பல்வேறு காரணங்களைக் கூறி விளக்கம் தந்து மறுத்துள்ளார். 12

    எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் திருமூலர் சங்க காலத்தினைச் சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்.13 தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்  முதலானோர் திருமூலர் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று கூறுகின்றனர்.14

    கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிம்மவர்மன், பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் திருவம்பலத்தில் தங்கிச் சிவனை வணங்கி வருவதை அறிந்து, அக்கோயிலுக்குப் பொன் வேய்ந்து கொடுத்தான் என்று குறிப்பிடுவர். இக்கருத்தினைச் சதாசிவபண்டாரத்தார் தம்முடைய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.15 திருமூலரின் சமக்காலத்தவர்களான பதஞ்சலி, வியாக்கிர பாதரும் சிம்மவர்மனைக் குறிப்பிடுவதால் இவர்களுடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனலாம்.

    எனவே, கிடைக்கும் பல்வேறு சான்றுகளிலிருந்தும், அறிஞர்களின் கருத்துக்களைக் கொண்டும் திருமூலரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என முடிவுக்கு வரலாம்.

    திருமூலரின் நூல்கள்

    தமிழில் தொன்மையான தந்திர நூல் திருமந்திரம் ஆகும். இதன் பகுப்பு தந்திரம் என்னும் பெயருடன் அமைந்திருக்கிறது. திருமந்திரம், ஒன்பது தந்திரங்களையும் மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. இதனைத்,

                                “தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
                                 சுந்தரவா கமச் சொல்மொழிந் தானே”16

    என்னும் திருமந்திர அடிகளால் காணலாம். திருமந்திரம் பொதுப் பாயிரத்தில் இறைவனைப் பற்றியும், வேதச்சிறப்பு, ஆகமச்சிறப்பு, தொடங்கி அவையடக்கம் வரையிலான பல்வேறு கருத்துகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. சிறப்பாயிரத்தில் நூலினது பெயர், நூலின் எல்லை, நூல் கூறும் செய்தி போன்ற பல்வேறு கருத்துகளைக் கூறுகின்றது.

    • முதல் தந்திரம், உபதேசம் முதல் கள்ளுண்ணாமை வரை பல்வேறு கருத்துகளைக் கூறுகின்றது.
    • இரண்டாம் தந்திரம், அகத்தியம் முதல் பெரியாரைத் துணைக்கோடல் வரை பல்வேறு உட்பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றது.
    • மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகம் முதல் சந்திரயோகம் வரையுள்ள இருபத்தோரு உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
    • நான்காம் தந்திரத்தில் அசபை மந்திரம் முதல் நவாக்கிரி சக்கரம் வரை பதிமூன்று உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
    • ஐந்தாம் தந்திரத்தில் சுத்த சைவம் முதல் உட்சமயம் வரை பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன.
    • ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் முதல் பக்குவன் வரை உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
    • ஏழாம் தந்திரத்தில் ஆறாதாரம் முதல் இதோபதேசம் வரையில் காணப்படுகின்றன.
    • எட்டாம் தந்திரத்தில் உடலில் பஞ்சபேதம் முதல் சோதனை இறுதியாக பலப்பிரிவுகள் காணப்படுகின்றன.
    • ஒன்பதாம் தந்திரத்தில் குருமட தரிசனம் முதல் சர்வ வியாபகம் இறுதியாக உள்ள உட்பிரிவுகள் அமைந்துள்ளன.

    இந்நூல் இறை, உயிர், தளை என்னும் முப்பொருளைப் பற்றி குறிப்பிடுகிறது என்பர். இறைவனை உணர்வதற்கு உயிரும் உடலும் தேவை. உடலைப் பேணிக் காத்தால் உயிர் உடலினுள் நீண்ட காலம் தங்கும். அதனால் உயிர் உடலினை விட்டு நீங்குவதற்கு முன்பே இறையைக் காண முயல வேண்டும். உயிராகிய சீவனும் இறைவனாகிய சிவனும் இரண்டறக் கலந்து பெறும் பேரின்பமே எல்லாவற்றையும் விடச் சிறந்தது. இந்த இன்பமே நிலையானது. இதன்மூலமே பிறவித் துன்பத்திலிருந்து விடுபட இயலும். ஆகவே உடல் உயிர் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டே திருமூலர் பல்வேறு தத்துவங்களைக் குறிப்பிடுகின்றார் என்றால் பொருத்தமாக உள்ளது.

    திருமூலர் பெயரில் பல்வேறு நூல்கள் கிடைக்கின்றன. திருமூலர் கருக்கிடை அறுநூறு, திருமூலர் அருளிய மருத்துவ மந்திரம் 8000, திருமூலர் குணவாகடம், திருமூலர் தியானக் குறிப்பு, திருமூலர் கருக்கிடை தொள்ளாயிரம், திருமூலர் ஞானம், திருமூலர் ஆயிரம் என்பன போன்ற நூல்கள்  திருமூலர் எழுதியதாகக் கூறப்படுகிறன. எனினும் இது ஆராய்ச்சிக்குரியது என்று இரா. மாணிக்கவாசகம் தமது நூலில் குறிப்பிடுகின்றார். 17

     அடிக்குறிப்பு:

    1. திருக்கோவையார் உரை,ப. 6.
    2. திருமந்திரம்,ப. 83.
    3. மேலது. ப. 71.
    4. மேலது. ப. 597.
    5. மேலது. ப. 564.
    6. மேலது. பா. 717.
    7. மேலது. பா. 728.
    8. மேலது. பா. 74.
    9. மேலது. பா. 63.
    10. மேலது. பா. 634.
    11. வே. சங்கர் உயிர்ப் பயணம்,ப. 60.
    12. இரா. மாணிக்கவாசகம், திருமந்திர ஆராய்ச்சி, ப. 123.
    13. தமிழ் இலக்கிய வரலாறு, திருமூலர் காலம், ப. 243.
    14. Tamil Plutarch, 4.
    15. V.சதாசிவ பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு, ப. 83.
    16. திருமந்திரம், பா. 83.
    17. இரா. மாணிக்கவாசகம், நம்நாட்டுச் சித்தர்கள், ப. 161.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் -20

    Share
  • மரணத்தைத் தடுத்த மனித நேயம்!

    -முனைவா். இரா. மூர்த்தி 

    புகைவண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரமே இருந்தது. நேரத்தை விரயம் செய்யாமல் எப்படியாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு வேகமாக நடந்தான் ரகிம்.

    டீக்கெட் கவுண்டரில் பதினைந்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்து நிமிடத்திலே டிக்கெட்டும் கிடைத்தது.  நடைபாதையில் வரும் வழியில் ஒருவரிடம் ‘சார் அமிர்தா எக்ஸ்பிரஸ் எத்தனையாவது நடைமேடையில் நிக்குது.

    “தம்பி மூன்றாவது நடைமேடையில்” சரி நன்றி சார். எனச் சொல்லிவிட்டு வேகமாக சென்றான். அங்கு கடைசியாக இருந்த அன் ரிசர்வ்டு பெட்டியில் நுழைந்து ஒவ்வொரு சீட்டாகக் கேட்டுக்கொண்டு சென்றவன், ஒரு சீட்டில் ஒரே பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தனள்.

    இங்கே யாராவது வாராங்களா? இல்லைங்க… தான் சுமந்து வந்து பேக்கை அதில் வைத்து அருகில் அமர்ந்தான்.

    ரகிம் இவ்வளவு வேகமாக வருவதற்குக் காரணம்? தீபாவளி முடிந்த மறுநாள். கூட்டம் அதிகமாக இருக்கும். பொள்ளாச்சி வரைக்கும் இடம் கிடைக்காது. நின்று கொண்டே போக வேண்டும் என்ற பயத்தில் வீட்டிலிருந்து கிளம்பும் போதே பஸ்சில் அடித்துப் பிடித்து ஏறினான்.

    ரகிம் சொந்த ஊர் மேற்குத்தொடர்ச்சி மலை அருகிலுள்ள சதுரகிரி. விருதுநகர் மாவட்டம். சிவன் (லிங்கம்) சுயம்பாக உருவாகிய தளம். பிரசித்தி பெற்ற மலைத்தளம்.

    நண்பகல் ஒரு மணிக்கு பேருந்தில் ஏறியவன், திருமங்கலம் இறங்கி அங்கிருந்து வேறு ஒரு பேருந்தில் ஏறி மதுரை பெரியார் பேருந்து நிலையம் இறங்கி இரயில் நிலையத்திற்கு நடந்துபோக வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அவனுக்குப் புகைவண்டியில் இடமும் கிடைத்தது.

    புகைவண்டி சரியாக 3.45 மணிக்கு திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டது. புகைவண்டி திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாகத் திருவனந்தபுரத்திற்குச் செல்லக் கூடியது.

    வண்டி கிளம்பி பத்து நிமிடத்தில் எனது இருக்கையைக் கடந்து கூட்டத்தில் கழிவறைக்கு 23 வயது மதிக்கத் தக்க நாகரிகத் தோற்றத்தில் இளைஞன் ஒருவன் நடந்து சென்றான். போகும்போது ஒரு சிரிப்பு. வரும்போது ஒரு சிரிப்பு சிரித்தான். என் தலைக்கு மேல் பெர்த் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து…

    திடீரென முன்னே எட்டு வைத்த இளைஞன் வழிப்பாதையிலே கீழே விழுந்தான். அருகிலிருந்தவர்கள் தூக்கும்போது நிலைகுலைந்து கிடந்தான். தூக்கி உட்கார வைத்தால் உட்காரவில்லை. வண்டியில் சிலர் அபாயச் செயினைப் பிடித்து இழுத்து விடுங்கள் என்றனர். சிலர் இரயில்வே போலிசுக்குப் போன் போடுங்கள் என்றனர். சிலர் தண்ணீர் கொடுங்கள் என்றனர். அந்த இளைஞனால் எதுவுமே பேச முடியவில்லை. காரணம் ‘லோ சுகர்’, பதற்றம் வேறு அதிகரித்தது.

    புகைவண்டியும் வேகமாகச் சென்றது. அடுத்து திண்டுக்கல்லில் தான் நிற்கும். திண்டுக்கல் வருவதற்கு இன்னும் நாற்பது மணித்துளி நேரம் ஆகும். ஒரு நிலையில் உயிர் போகும் நிலையும் ஏற்பட்டன.

    அருகிலிருந்த ஒரு பெண்மணியிடம் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செய்து எழுப்பிய பின்பும் ஒரே பதற்றம், அந்த இளைஞன் நெஞ்சைப் பிசைத்துக் கொண்டே இருந்தான்.

    ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தம்பி நீ யாரு? எங்கே போற? என்று கேட்டார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை. வாய்பேசவும் இல்லை. அவனது சட்டை, பேண்ட் பாக்கெட்டிலும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அப்பாவோடு போன் எண்ணைக் கேட்டாலும் சொல்லவில்லை.

    இதற்கு இடையிலே, பிஸ்கட், மிட்டாய், பழம் அருகிலிருந்தவர்களிடம் வாங்கி சாப்பிட வைத்துக் கேட்டபோது, வாய் மட்டுமே சைகை செய்தான். பார்த்தவர்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கின….

    ஒரு பேப்பரில் திண்டுக்கல் என்று மட்டுமே எழுதினான். சிறிது நேரம் கடந்த பின்பு, சைகை மூலம் கூறத் தொடங்கினான். திண்டுக்கல் ஊர். பாட்டிக்கு உடம்பு சரியில்ல. மதுரை பெரியாஸ்பத்திரிக்கு போய்விட்டுட்டு வரேன்.

    டீக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்துட்டு வரும்போது என்னுடைய பர்ஸ், பணம் எல்லாம் பிடிங்கிட்டு விட்டானுக. மதுரைக்காரனுக. கூட்டத்தில் சில வயதான பெண்களும், முஸ்லிம் பெண்களும் வாய்ப்பேச்சாக “மதுரைக்காரனுக பகலிலே ஆள முழுங்கிடுவனுக” என்று சொல்லிக் கொண்டனர்.

    இதைக் கேட்டதும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் கண்கலங்கியதுடன் தன்னுடைய பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்து அவனது பையில் வைத்தார். அவன் வாங்க மறுத்தான் சைகை மூலமாக.

    பின்பு சமாதானப்படுத்தி அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஐம்பது ரூபாய் சேர்த்து 200 ரூபாய்  அவனது சட்டைப் பையில் வைத்தனர். கூட்டத்தில் சிலர் வாய் பேசமுடியாத, ‘லோ’ சுகரில் உள்ள இந்த பையனை ஏன் தனியா அனுப்புறாங்க இவனது அப்பா அம்மா? என்று கோபப்பட்டனர். உடல் நடுக்கம் குறையவே இல்லை.

    இத்தகைய சூழலில் சிலரது மனதிற்குள் பல உளப்போராட்டங்கள் எழுந்திருக்கும். இந்த நிலைமை நாளை நமக்கும் தான்? அல்லது தனியாகக் கல்லூரிக்கு அனுப்பும் நமது மகளுக்கு? மகனுக்கு? என்று எண்ணத் தொடங்கி இருக்கும். இதை வாசிக்கும் நமக்கும் அந்த எண்ணங்கள் எழக் கூடும்.

    ஆனால் நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. இருந்து கொண்டுதான் இருக்கு. உயிர்போகக் கூடிய நேரத்துலகூட  சாதி, மத வேறுபாடு என எதையும் பார்க்காமல் உயிர்மேல் உள்ள பற்றால், முன்வந்து உதவக்கூடிய சில மனிதர்கள் இருக்கும் வரை மனிதநேயம் வாழ்வதுடன் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆகையால் பேருந்திலோ, வண்டியிலோ தனியாக இரவு, பகல் நேரங்களில் பிரயாணம் செய்யும் நபர்கள் தங்களது சுயமுகவரி, போன் எண் முதலியவைகளை எடுத்துச் செல்லுங்கள்.

    நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்நாட்கள் எப்போது நிறைவுறும் என்பது புரியாத புதிர். வாழட்டும் மரணத்தை சாகடித்த மனித நேயம்……

    *****

    கதாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் -20

    Share
  • ஜவ்வாதுமலையில் காவல் தெய்வ வழிபாட்டு மரபு

    ரே.கோவிந்தராஜ்

    உதவிப்பேராசிரியர்,

    தமிழ்த்துறை,

    தியாகராசர் கல்லூரி,

    மதுரை-09.

    கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு கூறாக ஜவ்வாதுமலை அமைந்திருக்கிறது. மலைவாழ் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் முதலானவற்றைத் தன்னகத்தே கொண்டு,  தனித்த பழமையான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. ஜவ்வாதுமலையில் நடைபெறும் காவல் தெய்வ வழிபாட்டு மரபுகளைக் கள ஆய்வு செய்ததன் அடிபடையில் சில கூறுகளைப் பின்வரும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கைகள் இருந்துள்ளன. மக்களின் பழக்க வழக்கங்கள்,  நம்பிக்கைகள், சடங்குகள் இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. இவற்றை ஆராய்வதில் பல கல்வித்துறைகளின் அறிவு தேவைப்படுகின்றன. அவற்றில், சமூகவியல் (sociology ), மானிடவியல் (Anthropology), உளவியல் (psychology) ஆகிய மூன்றும் மிக இன்றியமைதாவை (காந்தி 2003:5).

     

    1.தெய்வ வழிபாட்டு மரபு

    வழிபாடு என்பது ஒரு மரபாகும் (Cult). “ஒரு குறிப்பிட்ட விலங்கு, தாவரம், (அல்லது குலக்குறி), இயற்கைபொருள், ஆவி, முன்னோர் முனிவர், தெய்வம் ஆகிய எந்த ஒன்றின் ஆற்றல் மீது கொண்டுள்ள அனைத்துவகையான நம்பிக்கைகளும், சடங்குகளும், வழிபாடு சார்ந்தது” (பக்தவத்சல பாரதி 2002:215). மனித சமுதாயத்தில் தெய்வ வழிபாட்டுமரபு மிகப் பழமையானது. அச்சத்தின் வாயிலாகத் தோன்றிய வழிபாட்டு முறையின் எச்சம் பெரும்பான்மையும் இன்றும் தெய்வ வழிபாட்டு முறையில் பொதிந்திருக்கிறது. மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான ஜவ்வாதுமலையில் வேந்தியப்பன், வேடியப்பன் ஆகிய ஆண் தெய்வ வழிபாட்டு மரபும், திக்கியம்மன், நாச்சியம்மன், காளியம்மன் ஆகிய பெண் தெய்வ வழிபாட்டு மரபும் பெரும் வழக்காக உள்ளது. ஒவ்வொரு மலைக்கிராமத்திலும் அவ்வப்பகுதியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுக் காரண காரிய முறையில் ஒற்றுமைப்படுத்தி மேலே கூறப்பட்ட வழிப்பாட்டு முறைகளில் ஏதேனும் ஒன்று வழக்கில் உள்ளது. அச்சத்தில் வாயிலாகத் தோன்றிய வழிபாட்டு முறை அந்த அச்ச உணர்வின் காரணமாகவே நிலைப்பெற்றிருப்பதை ஜவ்வாதுமலையில் நடைபெறும் வழிபாட்டு முறை எடுத்துக் காட்டுகிறது.

    2.தைப்பொங்கல்

    தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருவிழா ஜவ்வாதுமலையிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவின் இறுதிநாள்  தெய்வ வழிபாட்டிற்குத் தொடக்கத்தை அமைத்துத் தருகிறது.  தெய்வங்களுக்கு முறைப்படி வழிபாடு நடத்த எண்ணிய ஊர்மக்கள் ஊர்த் தலைவரின் ஆலோசனையின்படி ஒன்றுகூடிக் கலந்து ஆலோசித்துத் திருவிழாவை முடிவு செய்கின்றனர். இத்திருவிழாவுடன் கூடிய வழிபாட்டுமுறை வழக்கமாக தை மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும் திட்டமிட்டபடி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

     

    2.1.தோரணம் கட்டுதல்:

    தோரணம் கட்டுதல் என்றால் கொடியேற்றம் என்றும் காப்புக் கட்டுதல் என்றும் பொருள். குறிப்பாகக் காப்புக்கட்டுதல் என்பது திருவிழாவை நடத்துவதற்கு உரிய தொடக்கமாகக் கொள்ளப்படும். திருவிழாவை நடத்துவதற்கு இறைவனிடம் முறைப்படி அனுமதி கேட்டல் என்பதும் இதன் பொருளாகும். ஜவ்வாதுமலையில் ஒவ்வொரு மலைக்கிராமத்திலும் மந்தை என்று சொல்லக்கூடிய பொது இடம் உண்டு. இங்கு சுமார் ஏறக்குறைய ஐம்பது அடி உயரமுள்ள மூங்கில் மரம் நாட்டப்பட்டு இருக்கும். இம்மரத்தில் வழிப்பாட்டுக்குரிய தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட துணியில் பூக்களை இட்டு வணங்க வேண்டிய முறைபடி வணங்கிக் கொடியேற்றுவார்கள் இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

     

    2.2.சோறு எடுத்துச் செல்லுதல்

    திருவிழா தொடங்கிவிட்டதைத் தம்முடைய உறவுகளுக்கு அறிவித்து அவர்களைத் திருவிழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுப்பதற்காகத் தத்தம் வீடுகளில் உணவு சமைத்து அவ்வுணவை எடுத்துக்கொண்டு உறவினர்களின் ஊர்களுக்குச் செல்கிறார்கள். தாம் எடுத்துச் சென்ற சோற்றை முறைப்படி உறவினர்களுக்குக் கொடுத்து அவர்களைத் திருவிழாவில் கலந்துக்கொள்ள அழைக்கின்றனர். தை மாதம் புன்செய் பயிர்கள் குறிப்பாக மொச்சை, அவரை, துவரை, கிழங்கு வகைகள் தாராளமாகக் கிடைக்கும். ஆதலால் பலாப் பிஞ்சுடன் சேர்த்துக் கூட்டுச் செய்து எடுத்துக் கொண்டு செல்வதும் உண்டு. தாம் செல்லும் உறவினர்களின் இல்லம் எச்சூழ்நிலையிலும் இருக்கலாம். எடுத்துச் செல்லும் உணவு அவர்களின் பசியை ஆற்றுவதுடன் உறவையும் பலப்படுத்துகிறது. கடமைக்காக நடைபெறாமல் உள்ளார்ந்த அன்போடும், அக்கரையோடும் இந்நிகழ்வு பன்னெடுங்காலமாக ஜவ்வாதுமலையில் நடந்தேறிவருகிறது.

    2.3.சாமி கீழிரங்குதல்

    சாமி கீழிரங்குதல் என்னும் இந்நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெறும். திருவிழா கொண்டாடப்படும் தெய்வத்தின் வழிபாட்டிற்குத் தேவையான ஆடை ஆபரணங்கள் முதலான அனைத்துப் பொருட்களும் ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும். இப்பொருள்களை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே எடுப்பர். அப்பொருள்களை எடுத்துச் சுத்தம் செய்து வழிபாட்டிற்காகக் கொண்டுவருவதை, சாமி கீழிரங்குதல் என்று குறிப்பிடுகின்றனர்.

    வழிபாட்டிற்குரிய அவ்வீடு தம்பிரான் வீடு எனப்படுகிறது. வழிபாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எல்லாத் தெய்வங்களையும் அழைக்கும் முகமாகத் தம்பிரான் வீட்டில் கொலு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சியில் திரளாக மக்கள் பங்குபெறுவார்கள். புரட்டாசியில் நடைபெறும் கொலு வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிறபகுதிகளில் படி அமைப்பினைச் செய்து ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரையும் பூதகணம், அசுரகணம், தேவகணம் என வரிசை முறைப்படி அமைப்பது உண்டு. ஆனால் தம்பிரான் வீட்டில் நடைபெறக்கூடிய கொலு நிகழ்வு ஜவ்வாதுமலையில் கிடைக்கக்கூடிய தானியங்கள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் முதலானவற்றைக் காட்சிப்படுத்துவதாக அமைகிறது. நிலவியலுக்கு ஏற்றவாறு மக்களின் பண்பாட்டுமுறை மாறுபடுகிறது. கொலு நிகழ்ச்சி முடிவடைந்ததும் தம்பிரான் வீட்டிலிருந்து வழிபாட்டிற்கு உரிய அனைத்துப் பொருட்களும் ஊரின் புறத்தே இருக்கும். காவல் தெய்வக் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் காவல் தெய்வத்திற்குப் பொங்கல் வைப்பதற்காகப் பானைகளையும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருள்களையும் எடுத்துச் செல்வார்கள். இவ்வாறு செல்லும்போது பறையொலியின் இசைக்கேற்ப சேவையாட்டம் நடைபெறும்.

     

    2.4.பச்சைபோடுதல்

    பச்சைபோடுதல் என்றால் வழிபடும் தெய்வத்திற்கு இயற்கை உணவினைப் படையல் போடுதல் என்று பொருள். கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பொதுமக்கள் தாம் வணங்கும் தெய்வத்திற்கு இலைபோட்டு இனிப்புக் கலந்த மாவு, வாழைக்கனி, அவல், தேன், கிழங்கு முதலான பொருள்களைப் படைத்து வழிபடுவார்கள். மலையில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருள்கள் இவை என்பதால் இப்பொருள்கள் எவ்விதமான குறைவும் இல்லாமல் காலந்தோறும் அங்கு வாழ்கின்ற மக்களுக்குக்; கிடைக்க வேண்டும் என்பதையும் வழிபடும் தெய்வத்திடம் வேண்டுவதாக அமையும். வழிபாட்டின் பின்பு பச்சைப் படையலிட்ட பொருள்கள் உறவுமுறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இறுதியாக ஊர் தலைவருக்கும் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த கலைஞர்களுக்கும் சிறப்புச் செய்யப்படும்.

    2.5.நாட்டாருக்குச் சிறப்புச் செய்தல்:

    ஐவ்வாது மலைப்பகுதியில் பதினெட்டு நாடுகள் இருக்கின்றன. நாடுகள் தற்போது கிராம ஊராட்சிகளாக மாற்றம்பெற்று இருக்கின்றன. புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, தென்மலைநாடு, கானமலைநாடு, முட்டநாடு முதலான நாடுகள் வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் கலந்து கொள்வதற்குப் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் நாட்டார் என அழைக்கப்படுகிறார்கள். விழாவை நடத்தும் ஊர்க்காரர்கள் விழாவிற்காகக் கொண்டு வந்த ஆட்டுக்கிடாயை விழாவிற்கு வந்திருக்கும் வேற்று நாட்டவர்களே வெட்டிப் பலிகொடுக்கின்றனர். கிடாய் வெட்டியதற்காக உள்ளுரைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றனர். பின்பு கோயிலை வலம்வந்து வழிபடுகின்றனர்.

    2.6.சாமி வலம் வருதலும் கலை நிகழ்ச்சிகளும்:

    கோயிலில் எழுந்தருளி இருக்கும் தெய்வம் ஊருக்குள் வலம் வருதல் தன்னைக் காண இயலாத பக்தர்கள் காணும் பொருட்டே ஆகும். காவல் தெய்வம் ஆண்டுக்கொரு முறை ஊருக்குள் வலம் வந்து மக்களுக்கு நன்மை செய்யும் நம்பிக்கையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியையொட்டிப் பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், சேவையாட்டம், கோலாட்டம் முதலிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மலைவாழ் மக்களே நிகழ்த்துகின்றனர்.

     

    2.7.பூப்பந்தலில் சாமி இளைப்பாறுதல்

    விழாவில் பங்கேற்ற தெய்வத்தின் களைப்பைப் போக்கும் பொருட்டு மூங்கிலால் பந்தல் அமைத்துக் கூந்தல் பனையை மேற்புறம் பரப்பிப் பூக்களால் ஆகிய மாலைகளைத் தொங்கவிட்டுத் தெய்வத்தை இளைப்பாற்றுவர். இறுதியாக, தெய்வம் இளைப்பாறிய பின்பு ஊருக்குள் அழைத்து வரப்படும். மக்கள் அனைவரும் தரையில் நீர் ஊற்றித் தூய்மை செய்து அவ்விடத்தில் நெருப்பையிட்டுத் தெய்வத்தை வழிபடுவார்கள். தொடர்ந்து இரவுப் பொழுதில் தெருக்கூத்து நடைபெறும்.

    ஜவ்வாதுலையில் நடைபெறும் காவல் தெய்வ வழிபாட்டு முறையிலிருந்து மலைவாழ் மக்களின் ஒற்றுமை, பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம், உணவுமுறை, வழிபாட்டுமுறை, உறவுகளை பேணும் திறம், கலையின் நுட்பம் மரபு மாறாத நிகழ்ச்சிகள், மண்ணிற்கே உரிய சிறப்புகள் முதலானவற்றை அறிய முடிகிறது. இங்கு, கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உற்றுநோக்கி இம்மக்களின் வாழ்வியல் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    சான்று நூல்கள்

    காந்தி,க. 2003,தமிழரின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

    பக்தவத்சல பாரதி, 2002, தமிழர் மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம்.

    பக்தவத்சல பாரதி, 2003(1990),  “பண்பாட்டு மானிடவியல்”, மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம்.

    பக்தவத்சல பாரதி, 2015 (2006), மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் பதிப்பகம்.

    Levi-Strasus Claude, 1955, The Structural Study of Myth, The Journal of Americal Folklore,Vol.68, No 270, pp.428-444.

    Levi-Strasus Claude, 1995 (1979), Myth and Meaning, Schocken Books New York, USA.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181019- DWA mural -acrylic on wall-wm

    கொஞ்சம் இருந்தது, கேசவ் கொடுத்தனர்
    விஞ்சிடும் ஓவியமாய், விற்பன்னர்: -அஞ்சிடும்
    அர்ஜுன் அடிபணிய ஆண்டவர் கண்ணபிரான்
    கர்ஜனை கீதைக் குரல்(ள்)…..கிரேசி மோகன்….!

    Share
  • கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில்

    நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

    – நூல் வெளியீட்டு விழாவில் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., பேச்சு –

    செங்கற்பட்டு.நவம்.13. லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில்
    குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில்,
    பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாக குழந்தைகளின்
    மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு
    சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசினார்.
    இவ்விழாவிற்கு செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர்
    ஞா.ஜாஷ்வா சாம் டானி தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.லட்சுமி
    அனைவரையும் வரவேற்றார்.

    கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’
    குழந்தைகளுக்கான கதை நூலினை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
    ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட, லிட்டில் ஜாக்கி கல்விக்
    குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக் கொண்டார்.
    நூலினை வெளியிட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
    ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசும்போது, “ இன்றைக்கு
    குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது
    என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின்
    இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களுமே
    முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை
    வகுப்புகளில் எங்களுக்கு கதைகள் சொல்வார்கள். அந்த கதைகளில்
    வரும் நீதி எங்களின் மனதில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின்
    கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும்
    ஒழுக்கத்தோடும் இருப்பார்கள்.

    இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை
    திருப்பப்படுகிறது. குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும்
    புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள்
    மனதில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க
    முடியும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை
    மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை
    வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் கொள்ள வேண்டும்.
    மு.முருகேஷ் எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய
    தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக
    வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.

    விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமஸ், பொன்.வாசுதேவன்,
    பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை
    வழங்கினர்.

    நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார். விழாவில்,
    கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த லிட்டில் ஜாக்கி பள்ளியைச் சேர்ந்த
    16 மாணவ – மாணவிகளுக்குப் பாராட்டுச் செய்யப்பட்டது.
    விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
    நிறைவாக, பள்ளி ஆசிரியர் பி.ரேணுகாதேவி நன்றி கூறினார்.

     

    படக்குறிப்பு;

    செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில் குழந்தைகள்
    தினவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக்
    குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தை கதை நூலை தமிழ்நாடு கூட்டுறவு
    சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட,
    லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக்கொண்டார்.
    அருகில், (இடமிருந்து) செங்கை தாமஸ், நூலாசிரியர் மு.முருகேஷ், கவிஞர் அ.வெண்ணிலா,
    பேராசிரியர் கிள்ளிவளவன் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • ஆறுபடை அழகா…. (6)

     

     

    திருத்தணிகை

     

    விண்ணசையும் மண்ணசையும் கோளசையும் கண்ணசைவில்

    வேலசையும் வேகத்தில் விதியசையும் நல்லிசையாய்

    பண்ணிசைத்துப் பாடிடவே உன்புகழைப் பேரழகா

    காற்றிசைக்கும் தென்றலாய் காலமெல்லாம் மாறாதோ ?

     

    பணியேதும் இனியில்லை உன்னருகில் அமர்ந்திடுவேன்

    தணிகைமலைப் புகழ்பாடி தனிப்பொழுதைக் கழித்திடுவேன்  

    மணியோசை ஒலித்துவிடும் திருக்கோவில் வாசலிலே

    அணிசெய்த உன்னழகை அனுதினமும் பார்த்திருப்பேன் !

     

    அகத்தியனுக்கே தமிழ்த்தந்தாய் அகிலமெல்லாம் பயனுறவே

    அகமுவந்து வாசுகிக்கே அருள்புரிந்தாய்  நோய்தீர்த்து

    அசுரனின் சக்கரத்தை அன்புடனே நெஞ்சிலேநிறுத்தி

    அகிலமெல்லாம் காத்துநின்றாய் ஆறுமுகனே அடைக்கலமே !

     

    மனத்துள்ளே கோயில்கட்டி மலையப்பா அழைத்துடுவேன்

    எனக்குள்ளே நீயிருந்தால் இல்லையென்றும் எதிர்மறைகள்

    குகைக்குள்ளே நீயிருந்த தவக்கோலம் போதுமய்யா

    குடியிருக்க நீவருவாய் எனக்குள்ளே குருபரனே !

     

    மலர்தூவி மாலையிட்டு மனதாரப்  போற்றிவிட்டேன்

    மறக்காமல் பாலோடுதேனும் பஞ்சாமிர்தம் படைத்துவிட்டேன்

    மறைக்காமல் என்குறைகள் உன்னிடமே சொல்லிவிட்டேன்

    மனமிரங்கி வாராயோ மனத்தினிலே  ஆட்சிசெய்ய ?

     

    Share
  • “ஸ்ரீ வாணி பதிகம்”

     

     

    மீ.விசுவநாதன்

     

    ஆயிரங் கோடி அருமைக் கவிகளைத்

    தாயெனும் சாரதை தந்தவள் – தூயவள்

    வாயிலே தாம்பூல மங்கலம் கொண்டவள்;

    சேயிவன் வாக்கிலே தேன்.

     

     

    ஆவெனக் காட்டிட அற்புதத் தீந்தமிழ்ப்

    பூமலர்ப் பாட்டினை புத்தியில் தூமழை

    போலவே கொட்டுவாள் ; பொன்னெனும் நெஞ்சிலே

    காலமாய் வாழுவாள் காத்து.

     

    காத்திடச் செய்திடாள்; கண்ணிலே கண்டவள்

    தோத்திரம் செய்திடத் துன்பமே போக்குவாள்;

    மாத்திரைப் போதிலே மாமன ஆழியின்

    ஆத்திரம் நீக்கிடும் அன்பு.

     

     

    அன்பொளி காட்டியே அத்துணை பேர்க்குமே

    இன்முகங் கொண்டவள் ஏற்றமே பண்ணுவாள் ;

    தன்னுடைப் பிள்ளைகள் தப்பினை விட்டிட

    முன்னமே காத்திடும் முத்து.

     

     

    முத்தவள், பக்தரின் மூலவள், ஏழ்மையை

    மொத்தமாய்த் தீர்ப்பவள்; மூர்த்தனை நித்தமே

    பித்தென எண்ணிடப் பேரொளி யோகியாய்

    சத்தென ஆக்கிடும் தாய்.

     

     

    தாயெனக் கூப்பிடத் தன்னுயிர் வேருடன்

    தாவியே வந்தருள் தந்திடும் – வாவியில்

    தாமரைப் பூக்களாய்த் தன்னெழில் காட்டியே

    காமனை ஓட்டுவாள் காண்.

     

     

    காண்கிற அத்தனை காட்சியும் மாயையாய்க்

    காண்எனக் கற்றிடக் காதலால் கூறுவாள் ;

    பேணுவாள், செல்லமாய்ப் பித்தனே என்றெனை

    மாணுவாள் புண்ணிய மாது.

     

     

    மாதவ ஞானியர் மண்ணிலே தோன்றிட

    மாதவள் சாரதை மாண்புதான் காரணம் ;

    நாதமோ வேதமோ நாவிலே நித்தமும்

    நூதனம் செய்குவாள் நூறு.

     

     

    நூறென வேண்டிட நூபுரம் காட்டுவாள்

    ஆறெனத் துங்கையை அன்பினால் ஏற்றவள்;

    ஊர்சிருங் கேரியில் ஓமென வாழ்பவள்

    பேரவள் வாணிநம் பேறு.

     

     

    பேரவள் சொல்லப் பெரும்பிணி நீங்கிடும்;

    சீரவள் செல்வமா சீர்த்தியை, நேர்மையை

    நெஞ்சிலே வைத்திட நித்திய சோதியாம்

    அஞ்செழுத் தாகிடும் ஆ.

    (ஆ — ஆத்மா)

    Share
  • திருத்திடு கந்தப் பெருமானே !

     

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    மனம் உருகும் அடியார்கள்
    தினமும் உனைக் காண
    மரகத மயிலேறும் பெருமானே
    அரு உருவமாய் இருந்து
    திரு உருவமாய் வந்த
    அழகு வடிவேலப் பெருமானே
    கருவிலே வளரும் பிள்ளை
    உனது நினைவிலே வளர கருணையே தருவாய் கந்தபெருமானே
    தெரு எலாம் திரியும்
    சிறு மதி படைத்தோரை
    திருத்திடு கந்தப் பெருமானே !

    Share
  • படக்கவிதைப் போட்டி 186-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமதி. ராமலக்ஷ்மி எடுத்த இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றிகள்!

    இணைந்து அமர்ந்திருந்தாலும் ஒருவரோடு ஒருவர் கொஞ்சமும் பேசிக்கொள்ளாமல் செல்பேசியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் இவர்களைக் காண்கையில் தொழில்நுட்பம் மானுட வாழ்வுக்கு வரமா சாபமா என்ற எண்ணம் எழாமலில்லை.

    மக்களுக்கு, நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறிவிட்ட செல்பேசியையும் அதன் நேசர்களையும் பற்றிக் கவியெழுதக் கவிஞர்கள் வருக என்று வரவேற்கின்றேன்.

    *****

    மூவரும் அருகிருந்தாலும் அவர்களுக்குள் ’சொல்’லெடுத்துப் பேசாமல், ஆளுக்கொரு ’செல்’லெடுத்துப் பேசிக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருக்கும் அவலத்தைத் தன் கவிதையில் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திரு. கிரிதரன்.  

    ஆற்றம் கரையோரம்
    ஆத்திமரம் நிழல் கொடுக்க
    ஆழ்துயராம் எதுவென்று நாமறியோம்
    சூழ் நிலைதான் பாதகமோ?
    மூவராய் இருந்தாலும்
    முணுமுணுப்பு ஏதுமற்று
    முழுவதும் தொலைத்த சோகம்
    முகமெல்லாம் பரவி நிற்க
    திசைக்கொருவராய் தனித்தே சென்றார் நிஜத்தில்
    யாரோ ஒருவர் குரல் கொடுக்க
    நிஜம் திரும்பும் நிலைபோல
    காலம் கடத்தும் காரணமோ?
    வெற்றியோ தோல்வியோ
    வேண்டும் விடைதனிலே
    பரவி நிற்கும் சந்தேகம்
    விடையறியா மானிடனே
    காத்து இரு கனிந்து வரும் காலம்.

    *****

    அவசர உலகில் எல்லாமும் எல்லாரும் அந்நியப்பட்டு நிற்கும் வெறுமைநிலையைத் தன் கவிதைவழி அருமையாய் விளக்குகின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.

    அவசர உலகில்
    நடப்பதற்கு பயிற்சி
    இருப்பதற்கு முயற்சி
    தேடி அலைந்து கண்ட 
    மகிழ்ச்சியில் நானும் இல்லை
    நாதியும் இல்லை
    எல்லாவற்றுடனும் நான்
    அந்நியத்துடன்
    வெறுமையின் நிழல்
    நீக்கமற திசைகள் 
    எல்லாம் தப்பிக்க வழியில்லை
    அா்த்தமற்ற கண்களொடு அவர்கள்.

    *****

    ”அண்டைவீட்டுக்காரரையும் அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது கைப்பேசி” என்று அதன் வீரியத்தை நேர்மையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கடிவாளமாய்…

    நண்பர் நால்வர் சேர்ந்தாலே
    நன்றாய்ப் பேசி ஒன்றாகப்
    பண்புடன் நடந்த செயலெல்லாம்
    பழங்கதை யாகிப் போனதுவே,
    அண்மையில் வந்தே அமர்ந்தாலும்
    அடுத்த வீட்டுக் காரரையும்
    கண்ணில் படாமல் வைத்திருந்தே
    கட்டிப் போட்டிடும் கைபேசியே…!

     ***** 

    ”மாந்தர்களே! ஊடக அலைகளோடு நாடகமாடியது போதும்! இனியேனும் உணர்வலைகளுக்கு இடம்கொடுப்போம்! உயிருள்ளவர்களாய் வாழ்வோம்!” என்று நல்லறிவு கொளுத்துகின்றார் முனைவர் மு. புஷ்பரெஜினா.

    அருகில் இருந்தாலும் … தொலைவே

    அந்த நாள் ஞாபகங்களை
    அண்டையில் அல்ல
    அலைகளில் அனுப்பி விட்டு
    உணர்வால் உறவால் அல்ல
    தண்ணீர்க்குழாயில் தஞ்சமடைந்து
    இணைந்துள்ளனர்!
    இப்போது உறவுகள் எல்லாம்
    உல்லாசமாக வாழ்வதற்கே தவிர
    உணர்வு பரிமாற்றத்திற்கு அல்ல.
    ஊடக அலை மறுத்து
    உணர்வலைக்கு இடம் கொடுப்போம்!
    உண்மைக்கு வழிவிடுவோம்
    உயிருள்ளவர்களாக வாழ்வோம்…

    *****

    ஒன்றையொன்று பார்த்திடா ஒன்பது கிரங்களைப்போல் உண்மை உறவுகளை, நட்புகளைப் புறந்தள்ளி, தொல்லைபேசியையே மானிடர் அல்லும் பகலும் அணைத்துறவாடும் இழிநிலை என்று மாறும்? என்று கேட்கும் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா, ’கேட்டினும் உள்ள உறுதி’போல் தொல்லைபேசியிலேயே மக்கள் மூழ்கிக்கிடப்பதால் அடுத்தவர்க்கு அல்லல் செய்ய யாருக்கும் நேரம் இல்லையே! என்று பகடியும் செய்கிறார்.

    தொல்லை பேசி

    ஒருவரையொருவர் பார்த்திடாத
    ஒன்பது கிரகச் சிலைகளைப் போல
    உறவு, நட்பு, பரிச்சயத்திற்கென
    உயர்ந்த மதிப்பெதும் அழித்திடாது
    உற்றுப் பார்க்கத் தம்மை மட்டும்
    உலகமெங்கும் தொல்லை பேசிகள்
    மாந்தர் கைகளில் வலம்வரும் பாங்கு
    எங்கு போய் முடியும்? என்னதான் நடக்கும்?

    தெருத்தெருவாய் செல்பேசி தன்னைக் காதில்
    செருகியவா றுலகத்து மாந்தரெல்லாம்
    சிரித்திடவும் விரும்பாது பிறரைப் பார்த்து
    திரிகின்றார் தெரியாத தெருவைக் கேட்க
    ஒருத்தரைத்தான் தேடிடினும் கிடைப்பதில்லை
    ஒவ்வொருவர் காதிலுமோர் தொல்லைபேசி
    வருத்தமிந்தத் துயர நிலை வழிகாணாது
    வருவோர்கள் புதிதாயோர் ஊரில் நிற்பார்.

    காதில்லைத் தீயவற்றையுற்றுக் கேட்கக்
    கண்ணில்லைக் கொடுமைகளைய வதானிக்க
    கையில்லைத் தீச்செயல்கள் செய்ய யாவும்
    கைத்தொலை்லை பேசிகள்மேல் கவனம் வைக்கும்
    தீதில்லையதனாலே உலகிற் கிந்த
    ரெலிபோன்கள் அமைதிக்கும் வழிவகுக்கும்
    ஆதலினால் தொழில் நுட்பம் எமக்கு ஈந்த
    அரியதொரு பரிசன்றோ தொல்லை பேசி.

    *****

    இவ்வார நிழற்படத்துக்குத் தத்தம் சிந்தனைகளின் அடிப்படையில் நயமான கருத்துக்களை நல்ல கவிதைகளாக்கித் தந்திருக்கின்றார்கள் நம் வித்தகக் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

    ஆத்தங்கரைச் சோறு

    ஆளுக்கொரு திசையில் பொருளீட்ட
    ஆழி கடந்து சென்ற பின்னும்
    அலுக்கவில்லை எங்களுக்கு
    ஆத்தங்கரைச் சோறு, மீண்டும் சந்தித்து
    அன்றைய நாள் போல
    அமர்ந்துள்ளோம் அருகருகே
    அரிசிச் சோற்றை உருட்டிக் கொடுக்க
    ஆச்சி இல்லாத குறை தான்!
    அருமை நண்பன் பேசி வரவழைப்பான்
    அறுசுவை பிரியாணி!
    அது வரும் நேரம் வரை
    அடுத்தமர்ந்த நண்பனுடன் கை
    அகலக் கைப்பேசியில் விளையாடுகிறேன் கைப்பந்து
    அரச மரத்தில் ஏறி அமர
    ஆல விழுதில் ஊஞ்சலாட
    ஆசைதான், செய்வோம் அதையும் இனி
    ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளில்!

    ”ஆழிகடந்து வேலைசெய்யும் ஊழ் அமைந்துவிட்டாலும் ஒருகாலத்தில் ஒன்றாய் அமர்ந்துண்ட ஆற்றங்கரைச் சோறு அலுக்காததால் மீண்டும் கூடியிருக்கிறோம் மரத்தடியில். இதோ வந்துவிடும் பிரியாணி சிறிது நேரத்தில்; தந்துவிடும் பழைய மகிழ்ச்சியை எங்களுக்கு!” என்று ஆவலோடு காத்திருக்கும் நண்பர்களைத் தன் பாவிலே காணச்செய்திருக்கும் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

    Share
  • கலித்தொகை

    எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி)பாரதிஇலக்கியச்செல்வர்.

    சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர்.

    கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் கூறிநிற்கின்றது.

    கலித்தொகை பாடிய புலவர்கள் விபரம் பின்வருமாறு:

    பாலைக்கலி: பெருங்கடுங்கோன், குறிஞ்சிக்கலி: கபிலர், மருதக்கலி: மருதனிளநாகன், முல்லைக்கலி: அருஞ்சோழன் நல்லுருத்திரன், நெய்தற்கலி: நல்லந்துவன். கலித்தொகையைத் தொகுத்தவர் நெய்தற் கலிபாடிய நல்லந்துவனார் என்றும், முதலில் உரைசெய்தவர் நச்சினார்க்கினியரென்றும் கூறப்படுகின்றது. பழஞ்சுவடிகளைத் தேடியெடுத்து முன்முதலில் பதிப்பித்தவர் பெருந்தகை சி வை தாமோதரம்பிள்ளையாவார்.

    கலித்தொகையின் இலக்கியப் பரப்பினுட் சென்று அதன் நயங்களைக் கூறுவதை ஏனைய நண்பர்களிடம் விட்டு கலித்தொகை போன்ற நூல்கள் உருவான பின்னணியை ஆய்வு செய்வதே என்பங்கில் இங்கு முதன்மை பெறுகின்றது.

    அகத்திணைப் பிரிவுகள்

    தமிழரின் அகவாழ்வில் காதலும் காமமும் பெரும்பங்கு வகித்தன. ஆடவர் பெண்டிரிடையே ஏற்பட்ட ஒருதலைக்காதல் கைக்கிளையெனப்பட்டது. வயது வித்தியாசம் மிக அதிகப்பட்ட நிலையில் அல்லது மனம் ஒருமைப்படா நிலையில் ஏற்படும் பொருந்தாக் காமம் பெருந்திணையெனப்பட்டது. கருத்தொருமித்து ஆதரவுபட்ட அன்புடைக்காதல் அன்பின் ஐந்திணைக் கூறுகளாய் வகுக்கப்பட்டு ஐவகை நிலங்களுக்குமேற்ப அவ்வச் சூழல்களுடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் குறிப்பனவாய் புலவர்களால் இலக்கியம் சமைக்கப்பட்டது. ஆதலின் அத்திணை இலக்கியங்கள் அவ்வந் நிலத்தின்தன்மைக்கேற்ப அந்நிலம் வாழ் மாந்தர்களின் காதல், காமவுணர்வகளை ஊட்டும் முதற்பொருளெனும் காலமும் பொழுதும், அந்நில மாந்தர்களின் உள்ளத்தேயெழுகின்ற வேறுபட்ட உணர்வுகள் என்னும் உரிப்பொருள், நிலங்களின் கருப்பொருள்களான தெய்வம், உயர்குடி, தாழ்குடி, பறவை, விலங்கு, ஊரைக்குறிக்கும் பெயர், அம்மாந்தர் அருந்த நீர்பெற்ற இடங்கள், உண்ட உணவுவகை, நிலங்களுக்குரிய பூக்கள், மரங்கள், பறை, யாழ், பண், தொழில் போன்றன தொடர்பாய் வேறுபட்டமைந்தன.

    மேற்கண்ட பொருட் பிரிவுகள் புறத்திணை இலக்கியங்களுக்கும் பொருந்துவனவாம். அன்பின் ஐந்திணைகளுக்கும் புறம்பே தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் கூறும் கைக்கிளை, பெருந்திணையுட்பட அகப்புறத் திணைகளை மொத்தம் பதின்மூன்றாக வகுப்பர். மேலும் தொல்காப்பியம் ‘மாயோன் மேய காடுறை உலகம(முல்லை), சேயோன் மேய மைவரை உலகம்(குறிஞ்சி), வேந்தன்(இந்திரன்)மேய தீம்புனல் உலகம்(மருதம்), வருணன் மேய பெருமணல் உலகம்(நெய்தல்) என நான்கு நிலங்களையே கூறுகின்றது.

    பாலை நிலமென்பது நாம் பொதுவாகக் கருதும் பாலைவன நிலமன்று. அத்தகைய பாலை தமிழகத்திலில்லை. அதனால் பாலையென்பது சிலப்பதிகாரக் கூற்றுப்படி ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்து வெம்மையாலே தண்மையிழந்து காலத்திற்கேற்ப பாலையென்பதோர் கோலங்கொண்ட வரண்ட நிலத்தையே குறிக்கும். அக்காலத்திற்கேற்ப அந்நிலத்திற்குரிய மக்களின் வாழ்வியலும் மாறியமைந்ததென்றே கொள்ளவேண்டியுள்ளது.

    இவ்வாறமைந்த நிலத்தியல்புகளும் மக்கட்பண்பும் அக்காலத் தமிழிலக்கியத்தின் போக்கை வழிப்படுத்தி குறித்த நியமங்களினூடாக இட்டுச் சென்றதால் அம்மரபையொட்டியே சங்க இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

    இந்த ஒத்த பண்பு எம் பண்டைய இலக்கியங்களில் காணப்பட்டதாலேயே இதனை நெறிப்படுத்த ஆன்றோர்கூடியவோர் தமிழ்ச்சங்கம் இருந்திருக்க வேண்டுமென்னும் ஊகம் ஏற்பட்டது. அது உண்மையென்றே இன்று தோன்றுகின்றது. அவ்வகையில், கலித்தொகை பாடிய புலவர்களின் இலக்கிய ஆக்க முறைமை அக்காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் இருப்புக்கு மேலும் சான்றாயமைகின்றது.

    சங்கம் இருந்தது உண்மையா?

    ஆன்றோர் அன்று பேணிய இலக்கிய மரபையும் அதனை நிருவகித்த சங்கத்தையும் சீர்தூக்கிப் பார்க்காது, சிலர் தமிழர் காட்டு வாழ்விலிருந்து நகரங்களை உருவாக்கி நகர்ந்த பரிணாமப் போக்கில் காணப்பட்ட ஐந்து வித்தியாசமான படிமுறைகளின் விளைவே இத் திணைசார் இலக்கியங்கள் என்கின்றனர். அப்படி நோக்கும்போது சமகாலத்தில் இப்படிமுறைச் சமுதாயங்கள் வாழ்ந்திருக்கவில்லை என்று பொருள்படுகின்றது. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார், தொல்காப்பியர் உட்படப் பல தனிப்பட்ட புலவர்கள் திணைவழி இலக்கணமும் பல்திணை இலக்கியங்களும் செய்திருப்பதன்மூலம் அக்கால ஆன்றோர் மத்தியில் ஓர் எழுதப்படாத வரன் முறையாகவேனும் இந்த இலக்கியமரபு நிர்வகிக்கப்பட்டும் பேணப்பட்டும் வந்துள்ளமை புலனாவதோடு பல்வேறு காலகட்டங்களுக்கேற்ப அவ்விலக்கியங்கள் தோன்றவில்லையென்பதையும், ஓர் மரபு வழிப்பட்ட இலக்கியப்பண்பின் அடிப்படையிலேயே அவை உருவாகியுள்ளனவென்பதையும் கூறக்கூடியதாயுள்ளது. இந்தப் பண்பைக் கட்டிக்காத்தது யார்? ஓர் எழுதப்படாத யாப்புடன்கூடிய சங்கமாய் அது ஏன் இருந்திருக்கக்கூடாது?

    தற்காலத்தில் தலித்துவம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியப் போக்குகள் சமகால எழுத்தாளர்களிடையே காணப்படுவதைப்போன்று அக்காலத்திலும் இத்தகைய திணைஇலக்கியப் பிரிவுகளை அவரவர் விருப்புக்குக்கேற்ப சமகாலப் பெரும்புலவர்கள் தெரிந்தெடுத்திருக்கக்கூடும்.

    மேற் குறித்தவாறு சங்கம் என்னும் போது பலரும் சேர்ந்து யாப்புடன் உருவாக்கி மாதாமாதம் அன்றேல் வாராவாரம் ஓரிடத்திற்கூடி தமிழாய்வு செய்தவோர் நிறுவனமாயியிருந்திருக்க வேண்டுமென்னும் உருவகத்தை மனதிற்கொண்டோர் அதன் அடிப்படையிலேயே எமது பண்டைய தமிழ்ச்சங்கத்தை அது அப்படி இருந்திருக்கவில்லையென்று வாதிடுகின்றனர். ஆனால் நிலைமை அத்தகையதன்று. திணை மரபைப்பேணி இலக்கியஞ் சமைத்தலும் அதனை அக்கால முன்னணி இலக்கியகர்த்தாக்கள் பார்வையிடலும் அதற்கு அங்கீகாரம் வழங்கலுமாய் இருந்தவோர் திணை இலக்கணம் எழுதப்படாத காலத்திலிருந்து பரிணாமம் பெற்று, ஆன்றோரின் அங்கீகாரத்துடன் தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்கள் உருவாகி மரபைப் பேணவேண்டிய விதிமுறைகள் எழுத்தில் கொணரப்பட்ட காலம்வரை இருந்த புலவோரின் ஒத்த கருத்தையும் அக்கருத்துக்கள் காலங்காலமாய்ப் பேணப்படக்காலாயிருந்த பொதுக்கொள்கையை நிருவகித்த ஆன்றோர் கூட்டத்தையுமே சங்கமெனக் கொள்ளல் வேண்டும். அந்த வகையில் நோக்கும்போது சங்கத்தைப்பற்றிய மருட்சி ஏற்பட இடமேயில்லை. மேலும் இந்தோனேசியாவில் கிடைத்தவோர் கல்வெட்டுப்படி தமிழ் வணிகர்சங்கம் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அவ்வாறாயின் இலக்கியச் சங்கமும் தமிழர் மத்தியில் இருந்தமையை அதிசயமாகக் கொள்ளமுடியாது.

    கடவுளர்கள் சங்கத் தலைவர்களாயிருந்தார்களாவென்று நகையுற நோக்கும் புத்தி ஜீவிகள் ஏன் அக் கடவுளர்கள் எம்மைப்போன்ற சாதாரண மனிதர்களாயிருந்திருக்கக்கூடாது? என்று பகுத்தறிவுடன் நோக்குவதாகத் தெரியவில்லை. பின்னாளில் அம்மனிதர்கள் கடவுளர்களாக்கப்பட்டதற்குத் தமிழன்னை பொறுப்பாளியாகமாட்டாள் என்று இவர்கள் உணர்வார்களாக.

    திணை மயக்கமாவது யாது?

    ஒரு குறித்த நிலத்திற்கு அதாவது திணைக்கு உரிய மாந்தரின் முதல் உரி கருப் பொருள்களை வேறொரு திணக்குரியதாய் இலக்கியஞ் சமைத்தல் திணை மயக்கத்தின் பாற்பட்டதாம். உதாரணமாக மருதநில மாதொருத்தி கடலிற் சென்ற தலைவனுக்காய் இரங்கல் அல்லது நெய்தல் நிலப்பெண்ணாள் கடலினின்றும் மீண்டு பசியோடு களைத்து வந்த கணவனுடன் ஊடுதல் போன்றன இத்திணை மயக்கத்தைக் குறிப்பனவாம்.

    மேலும் தத்தம் நிலத்திற்குப் பொருந்தாத பூக்களை மாதர் அணிதல் – உதாரணமாக மருதத்திற்குரிய தாமரையை பாலைப் பெண் சூடியுள்ளதாக வர்ணித்தல், குறிஞ்சித் தெய்வமாம் சேயோனை(முருகனை) வழிபடவேண்டிய குறக்குலமாது நெய்தற் கடவுளாம் வருணனைப் பணிந்ததாகக் காவியம் சமைத்தல் போன்றன மரபு பிறழ்வுபட்ட திணை மயக்கங்களாக அந்நாளில் கருதப்பட்டது எனலாம். இம்மரபை மீற முற்பட்ட புலவர்களைச் சங்கப் பலகையிற் சாடி அக்காலத்தைய புலவர்கள் நியமங் காத்தனர். இதனாலேயே தமிழன்னையைச் சங்கம் வளர்த்த தமிழ் என்று அடைமொழியிட்டு இன்றுவரை ஆன்றோர் கூறுகின்றனர்.

    இனிக் கலித்தொகைக்கு வருவோம்:

    கலித்தொகை தரும் ஐந்து திணைகளுக்குமான உரிப்பொருள்களை அஃது, காதலர் மனவுணர்வுகளின் வகையறாக்களை இங்கே நோக்குவது அவசியமாகின்றது.அவை முறையே: குறிஞ்சிக்கு – புணர்தலும் புணர்தல் நிமித்தமாகவும், பாலைக்கு – பாலையுட் சென்ற தலைவனைப் பிரிதலும் பிரிதல் நிமித்தமாகவும், முல்லைக்கு – காத்திருத்தலும் இருத்தல் நிமித்தமாகவும், மருதத்திற்கு – ஊடலும் ஊடல் நிமித்தமாகவும், நெய்தலுக்கு – கடலிற் சென்ற தலைவன் வராதபோது இரங்கலும் இரங்கல் நிமித்தமாகவும் உணர்வு வழிப்படுவதாக புலவோர் இலக்கியஞ் செய்தனர். இவ்வாறு ஓர் நியம வரைமுறையின் கீழ் கூடியவரை திணை மயக்கங்கள் உருவாகாதவாறு பண்டைய புலவோர் இலக்கியஞ் செய்துள்ளமை தமிழ் தவிர்ந்த வேறெந்த மொழிக்குமில்லாத பெருஞ்சிறப்பாகும். அதனாலேயே சங்கம் இருந்திருக்கின்றது என்று அடித்துக் கூறக்கூடிதாயுள்ளது.

    பாலைக்கலி

    கடவுள் வாழ்த்தாய்ச் சிவனைப் பணிதலோடு தொடங்கும் கலித்தொகையில் முதன் வருவது பெருங்கடுங்கோவின் பாலைக்கலியாகும். ஆறலைகள்வர் களவும் கொலைத் தொழிலும் புரியும் வரண்ட பாலைநிலத்தைக் கடந்து பொருள் தேடுவான் பொருட்டுச் செல்லும் அல்லது செல்ல முயலும் தலைவனது பிரிவாற்றாமையான் வருந்தும் தலைவி அவனைத் தடுத்து நிறுத்த முயலுதல் அல்லது தலைவி சார்பாய் தோழி தலைவனிடம் தலைவியின் வருத்தம் கூறல், பிரிவின் வாடும் தலைவியைத் தேற்றல் போன்றன பாலைக்கலியின் உரிப்பொருளாகும். மேலும் காதலனுடன் உடன்போக்கிலீடுபட்ட தலைவியைத் தேடும் பெற்றோரின் அவல நிலைகளும் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.

    பாலையின் கொடுமை, வெம்மை, வரட்சி போன்ற புறச்சூழல்களும், தலைவியின் பிரிவுத்துயர், தலைவனின் பிரிவால் அவளுக்கேற்படும் கையறுநிலை உட்பட்ட அகச்சூழல்களும் பெருங்கடுங்கோனால் பாலைக்கலியில் விபரிக்கப்படும் அதேவேளை தலைவனை பாலையுள் விடுத்து அவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வளமிக்க வாழிடம் தொடர்பான வர்ணனைகளுக்கும் குறைவில்லை. பாலைக்கலி முப்பத்தைந்து பாடல்களைக் கொண்டது.

    குறிஞ்சிக்கலி

    கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி மலைப் பிரதேச மக்களின் காதல் வாழ்வை மையப்படுத்தி எழுதியதாகும். குறவன,; குறத்தி வேட்டுவன், வேட்டுவிச்சி போன்ற தலைவன் தலைவியரைச்சுற்றிப் பின்னப்பட்ட அழகிய காதற் குறிப்புகளாய்க் குறிஞ்சிக்கலி அமைந்துள்ளது. கிளி, மயில், மான்கள், புலி,கரடி, சிங்கம், யானையென்று பல சாதுவானதும், கொடியவையுமான காட்டுவிலங்குகள் வாழும் கானகத்தில் சந்தனம், அகில் போன்ற வாசனை மரங்கள் நிறைந்த சூழலில் தினைப்புனங்காக்கும் வஞ்சியருக்கும் வேட்டையாடும் வாலிபருக்குமிடையில் நிகழ்ந்த களவொழுக்கம் மக்கட்பண்பின் தகைமை குன்றாவகையில் இருபத்தியொன்பது கலிப்பாக்களடங்கிய அழகிய இலக்கியமாகக் கபிலர் பெருமானால் படைக்கப்பட்டுள்ளது.

    மருதக்கலி

    மிகுந்த பொருள் வளமுடைய பெருநிலக்கிழார்கள் வாழ்ந்த பிரதேசம் மருதநிலமாகும். நீர் நிலவளங்கள் நிறைந்து உழைப்பும் உற்பத்தியும் மிகுந்திருந்த சூழலில் வாழ்ந்த இம்மாந்தர் கூட்டம் இல்வாழ்விலீடுபட்டு அறம் வளர்த்த அதேவேளை காமக்களியாட்டங்களிலும் ஈடுபட்டது. அதனால் பரத்தமை இம்மாந்தர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று. இல்லங்களில் கற்பின் செல்வியர் கணவன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க வரைவின்மகளிர் மாடங்களில் கணிகையருடன் களியாட்டம் நடாத்திவிட்டு பொழுது புலரும் வேளையில் வீடுதிரும்பும் தலைவன்பால் தலைவியர்; காட்டும் ஊடலே மருதக்கலியின் உரிப்பொருளாயிற்று. அறம் பேசும் குறளும் இப்பரத்தமையை அதன் விளைவான ‘ஊடுதல் காமத்திற்கின்பம்’ என்னுமாறாய் அங்கீகரிததுள்ளமையினால்; தமிழர் வாழ்வில் இதுவோர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பாகவே கொள்ளல் வேண்டும். சிறியதோர் ஊடலுடன் கணவனின் இப்பரத்தமைப் பண்பை மன்னித்து அவனை இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும் அன்புடை நெஞ்சர்களான தலைவியரின் தாபங்களை அழகுறச் சித்தரிக்கும் மருதனிளநாகர் உரிப்பொருளான ஊடல் விடுத்து நகைச்சுவை ததும்பும் பாடலும் பாடியுள்ளார். முப்பத்தைந்து அழகிய பாடல்கள் மருதக்கலியில் காணப்படுகின்றன.

    முல்லைக்கலி

    மந்தைகளை மேய்க்கும் ஆயர் குலத்தவர் பாடிகளமைத்து வாழ்ந்த இடம் முல்லையாகும். அதனால் இவர்கள் நாடோடிகளாகவே இருந்திருக்க வேண்டும். பசும்புற்றரை வரட்சியினால் பாலையாகும்போது தமது மந்தைகளை வேற்றிடம் கூட்டிச்செல்லும் வழக்கத்தைக் கொண்ட இவர்களின் காதல் வாழ்வில் தலைவன் தலைவியரது திருமணம் நிறைவேறக் காளையர் ஏறுதழுவித் தம்வீரத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதால் தலைவி தலைவனை அடைதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகின்றது. அதனால் தலைவியர் தமக்குரிய தலைவன் அல்லது காதலன் வந்து ஏறு தழுவித் தம்மை வெற்றி கொள்ளும்வரை களவொழுக்கங்களில் ஈடுபடாது நிறைகாத்து இருத்தல் முல்லையின் உரிப்பொருளாகின்றது. காதலும் கூடலும் இம்மாந்தர் வாழ்விலே இல்லாமலும் இல்லை. ஆயினும் இத்தகைய களவொழுக்கத்தினரும் உடன்போக்கிலீடுபடாது ஏறுதழுவி வெற்றிவாகை சூடும் திருமண நாள்வரை காத்திருக்க நேரிடுகிறது. இத்தகைய காதலரின் மனவுணர்ச்சிகளைச் சித்தரிக்கும் குறுங்கதைக் கூறுகளை பதினேழுபாடல்களில் புலவர் நல்லுருத்திரனார் தமிழுலகு மகிழத் தனது முல்லைக்கலியிற் தந்துள்ளார்.

    நெய்தற்கலி

    நெய்தநிலம் வாழ் மாந்தர் கடற்றொழில் செய்தனர். மாலையிற் கடல் ஓடி மறுநாட் காலைவரை அலைகளுடன் போராடி மீன்கொணரும் தம் தலைவரின் வரவை நாளும் மிகுந்த பதட்டத்துடன் எதிர்பார்க்கும் தலைவியர் தம் காதலர் திரும்பும்வரை அவரை நினைந்து இரங்கலே நெய்தற்கலியின் உரிப்பொருளாயமைகின்றது. காதலன் பிரிவால் கலக்கமுற்று கடலைக் காற்றை நிலவை விலங்குகளை விழித்துத் தம் துயர்கூறல், பொருள்தேடி அன்றேல் போர்புரியக் கடல்மீது கலஞ் செலுத்திச் சென்ற கணவனுக்காக வருந்துதுல் போன்ற காட்சிகளைக் கொண்ட நெய்தற்கலியை முப்பத்திரண்டு பாடல்கள் கொண்ட சொற்சித்திரங்களாக வகுத்தவர் நல்லந்துவனார் ஆவர்.

    முடிவாக:

    இவ்வாய்வில் கலித்தொகையின் கட்டமைப்பே சுருக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனுட் சென்று அதன் இலக்கிய நயங்களை நண்பர்கள் சுவைபடத் தருவார்களாக. உலகின் நாகரீகங்கள் தோன்றிய அன்றேல் அதற்கும் முற்பட்ட காலத்தே எம் புலவர் பெருமக்கள் ஓர் செழுமை மிக்க மொழியாகத் தமிழன்னையை இத்தகைய தமிழிலக்கியக்கங்கள் மூலம் வளர்த்தெடுத்தனர். இன்தமிழின் பெருமையறிந்து எம் எதிர்காலச்சந்ததி இப்பொக்கிசங்களை நன்கறிந்து, ஆய்ந்து உலகமுள்ளவரை அன்னை தமிழின் இருப்பை உறுதிசெய்யுமாக.கலித்தொகையில்பாலைக்கலியில்படித்தஒருசிறுபாடலைஎளியதமிழில்இங்குஅனைவரும்புரியும்படிகீழ்வரும்கவிதையாக்கியிருக்கிறேன்.

    தலைவியின்பிடிவாதம்

    தன்தலைவன்பொருள்தேடிப்பாலையுயூடே

    தனிவழியில்போவதற்குத்துணிந்துவிட்டான்

    என்பதறிந்தப்பேதைமனம்கவன்றாள்

    என்னையும்நீகூட்டிப்போஎனத்துடித்தாள்.

    ‘கானிடையேபசுமைதனைக்காணாதேகி

    கள்ளிதனைமுள்ளோடுபுசித்துச்சோரும்

    ஆனிரைகள்அலைகின்றவனத்திலாங்கே

    ஆறலைகள்வர்தொடுக்கும்அம்பால்மாய்ந்து

    போனவர்கள்எத்தனைபேர்அறியீரோநீர்

    போகத்தான்புறப்பட்டீர்நீரேகாணா

    வானமழைபொழியாதபூமியாங்கே

    வாழ்பவரும்வெப்பத்தால்வருந்திச்சாவார்

    ஆனதனால்அதிற்போவோர்துயரத்தாலே

    அழுகின்றகண்ணீரேநிலம்நனைக்கும்

    ஏனுமக்குஇவ்வெண்ணம்துன்பம்தன்னை

    ஏற்பதுவேவிருப்பென்றால்அதனையேற்க

    நானுமுடன்வருகின்றேன்நண்ணும்துன்பம்

    நமக்கின்பம்அன்பறுத்தபிரிவுவேண்டாம்.‘

    என்றுரைத்தான்தலைவியவள்இதயதாபம்

    எழிற்கலியில்பாலைக்குத்திணையமைத்து

    அன்றுநிலம்ஐந்தாகவரையறுத்த

    அருங்கவிஞன்பெருங்கடுங்கோஅறிகமாதோ!

    Share
  • அடித்தள மக்களின் எழுச்சியும் ஆணதிகாரத்திற்கு எதிரான வளர்ச்சியும் ( ‘சுகிர்தராணி’யின் கவிதைகளை முன்வைத்து )

    முனைவர் ந. இரகுதேவன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழியல்துறை, தமிழியற்புலம்,

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

    மதுரை 21.

    மின்னஞ்சல் : nsragudevan@gmail.com

     

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

    நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்

    திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்

    செம்மை மாதர் திறம்புவதில்லை யாம் 

    (பாரதி கவிதைகள்.புதுமைப்பெண்..195)

    என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கு ஏற்ப பெண்கள் இன்று அனைத்துத் துறைகளிலும் புதுமை படைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நூற்றாண்டில் இதன் வெளிப்பாடு இலக்கியங்களின் வழியே குறிப்பாக புதுக்கவிதைகள் வழியாக தன் உணர்வுகளையும், தன் உரிமைகளையும் சமுதாயத்தில் தேடிப்பெறும் பெண்களின் போராட்ட வாழ்வு வரலாற்றில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைப்பாடு உருவாவதற்கு அடித்தள மக்கள் மற்றும் விளிம்புநிலை குடும்பத்திலிருந்து வெளிவந்த பெண்சக்தியே அடிப்படைக்காரணம் எனலாம். இவ்வுண்மையை கைப்பற்றிய என் கனவுகேள், இரவு மிருகம், அவளை மொழிபெயர்த்தல், தீண்டப்படாத முத்தம், காமத்திப்பூ, இப்படிக்கு ஏவாள் போன்ற சுகிர்தராணியின்கவிதைகளின் வழி எடுத்துரைக்கலாம் என எண்ணுகிறேன். ஏனெனில், நெடுங்காலமாகவே பெண்கள்  சமையலறையிலும், படுக்கையறையிலும் மாறிமாறி ஆணதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு ஒடுங்கிக்கிடப்பதையும்,  இன்று பெண்ணுடலை வைத்து பெரும்புரட்சி நிகழ்வதையும் இவரது கவிதைகளின் வழி காணமுடிகிறது. மேலும், தமிழ்ச்சமூகம் பேசமறுத்த பெண் பிரச்சனையையும், பெண் இன்பத்தையும், பெண் அரசியலையும், பெண் விடுதலையையும், பெண்ணின் போராட்ட வாழ்வையும் வெளிப்படைத் தன்மையோடு இவரது கவிதைகள் தலித்தியம் சார்ந்து ஒன்றுக்கொன்று முழுவீச்சுடன் எடுத்துரைக்கின்றது. சமுதாயத்தில் உயர்சாதி இந்துக்களுக்கென்று உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம் போன்ற அனைத்தும் மிக ஒழுக்கத்துடனும் நேர்த்தியுடனும் இருப்பதாகவும் இதுதான் உயர்பண்பாட்டிற்கான அழகியல் என்றும் காலந்தோறும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அடித்தள மக்களுக்கும் இதுபோன்ற அழகியல் இருப்பதை எவரும் உணர்வதில்லை. கல்வி கற்பது, புரோகிதம் செய்வது, நீதி வழங்குவது, நாட்டை ஆள்வது போன்ற அனைத்துப் பணிகளுக்கும் தாங்கள்தான் தகுதியானவர்கள் என்ற உயர்சாதிப் பண்பாட்டின் அழகியலுக்கு எதிராக தலித்துகள் தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி இ

    துதான் தலித் அழகியல், தலித் பண்பாடு இதுதானென்று உணர்த்த வேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் மேலோங்கியுள்ளது. இதனை சுகிர்தராணி தன் கவிதைகளின் வழி பெரும்பாலும் இச்சமூகத்திற்கு உணர்த்த விரும்புகிறார். எனவேதான்,

    மெல்லிய

    புலால் நாற்றம் வீசுகின்ற

    நானும்

    தசைகளை முற்றாகப்

    பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்

    என் வீடும்

    கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி

    பறையொலி பழகும்

    விடலைகள் நிறைந்த

    என் தெருவும்

    ஊரின் கடைசியில் இருப்பதாக

    நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

    நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்

    முதலில் இருப்பதாக.”                      (சுகிர்தராணி. இரவுமிருகம்..31)

    என்ற கவிதை வரிகளில், அடித்தள மக்கள் எனப்படும் தலித்துக்களின் பண்பாடு, உணவு, தொழில், இருப்பிடம், பழக்கவழக்கங்கள், நாகரிகம் போன்றவையெல்லாம் ஏழ்மையிலும் எளிமை நிறைந்ததாக இருப்பதால் ஆதிக்கச் சாதியினர் இதனை அழகியலாகப் பார்க்காமல் மிகவும் இழிவாகப் பார்க்கின்றனர் என்பதனை தலித் அழகியலோடு எடுத்துரைத்துள்ளார் சுகிர்தராணி. ஆண்டைக்கு அடிமையாகப் பணிபுரிந்ததால் மாட்டிறைச்சி உண்ணுதல், காலில் செருப்பணிதல், நல்ல ஆடை ஆபரணங்களை அணிந்துகொள்ளுதல், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லுதல், தோலில் துண்டு அணிதல், கடைகளில் தேநீர் அருந்துதல், கோவிலுக்குள் நுழைதல், பொதுவெளியில் நடமாடத் தடைவித்தும் பல்வேறு பொதுச் செயல்பாடுகளுக்கு ஆதிக்கச்சாதியினர் பல நூற்றாண்டுகளாக தடைவிதித்திருந்தனர். மேலும், இரட்டைக்குவளை முறைகளும், தலித்துகளின் வாயில் மலம் திணித்தும் சிறுநீர்கழித்தும் செய்யும் கொடுமைகள் தொடர்நிகழ்வாகவே உள்ளன. அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்யும் செயல்களும், அவர்களின் வாழ்விடங்களை தீக்கிரையாக்கும் வன்முறைகளும் சமகால தீண்டாமை நிகழ்வுகளாக இன்றும் அரங்கேறிவருவதை தொலைக்காட்சிகளும் பத்திரிகை போன்ற ஊடகங்கத் தகவல்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அரசுப் பணியில் சாதிய இந்துக்களால் தலித் சமூகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மீது நிகழ்த்ப்படுகின்ற சாதியத் தீண்டாமை வன்மங்களும் கனந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை அரசாங்கம் கண்டுகொள்ளதில்லை என்பது உண்மை. மேலும் சாதிக் கொடுமைகளைச் செய்பவர்கள் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய சாதியக் கொடூரத் தாக்குதலால் உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு முடியும்போது அரசாங்கம் நஷ்டஈடு அறிவித்துவிட்டு விலகிச் சென்றுவிடுகிறது. தவறு செய்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மனித உரிமை ஆணையம்தான் இந்த கொடிய நிகழ்வுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் இத்தகைய கொடிய நிகழ்வுகளைச் செய்பவர்கள்மீது தக்க தண்டனையையும் வழங்கி வருகிறதுஇதனைத் தீண்டப்படாத முத்தம்என்ற கவிதைத்தொகுப்பில்,

    எம் வாய்களில் திணிக்கப்பட்ட

    மலத்தையெல்லாம் திணித்தவர்கள்மீதே

    துப்பத் தெரிந்துகொண்டோம்

    எம் வயிறுகளுக்குச்

    சாணிப்பால் புகட்டிய கரங்களை

    நரம்பறுக்கவும் கற்றுக்கொண்டோம்

    மறுக்கப்பட்ட தெருக்களில்கூடச்

    செருப்பணிந்து செல்லும்

    செருக்கினைப் பெற்றுவிட்டோம்

    ஆண்டைகள் முன் அடிபணிந்தே

    வளைந்துபோன முதுகெலும்புகளை

    நிமிர்த்திப் போடவும் அறிந்துகொண்டோம்

    நீரற்ற ஓடைகளில் நிகழும்

    கௌரவக் கொலைகளிலிருந்து

    உயிர்த்தெழவும் உணர்ந்துகொண்டோம்

    கைநாட்டுகளைத் தடமழித்து

    ஏடெடுக்கவும் எழுந்துநின்றோம்

    ஒடுக்கப்பட்ட தோற்பறையிலிருந்து

    விடுதலையின் மாஇசையை

    மீட்டெடுக்கவும் பழகிக்கொண்டோம்”  (சுகிர்தராணி. தீண்டப்படாத முத்தம்..27)

    என்ற கவிதையின் வழி, அடித்தட்டு மக்கள் மீது ஆதிக்கசாதியினர் நிகழ்த்திய அத்தனை மனிதவிரோதச் செயல்களையும் கோடிட்டுக் காட்டுவதோடு, அதனிலிருந்து விடுபடும் வழியை அறிந்துகொண்டோம் என தன்னினத்தின் விடுதலையைச் சாதிக்க முயலுகிறார் சுகிர்தராணி. மேலும், இச்சமூகத்தின் மீதான தாக்குதலுக்குத் தன் எழுத்துக்களையே ஆயுதமாக எடுத்துக்கொண்ட இம்மனநிலை தலித்பெண்ணாக தன்னை தரம் காட்டிக்கொள்ள ஏற்புடையதாகவும் எண்ணியிருக்கிறார். ஏனெனில், “தலித் பெண்களின் அனுபவங்கள் தனித்துவமானவை. உயர்சாதி ஆணாதிக்கச் சமூகத்தின் வன்கொடுமைக்குப் பலியான வரலாறு அவர்களுடையது. இந்திய வரலாற்றில் அடிமைகளாக விற்கப்பட்டப் பெண்கள், தேர்க்கால்களில் பலியிடப்பட்ட பெண்கள், விபச்சாரிகளாக்கப்பட்ட பெண்கள் என்றெல்லாம் பார்த்தோமானால், இவர்களில் பெரும்பாலானோர் தலித் பெண்கள் என்பது தெரியவரும். இன்றளவும் காவல்நிலையப் பாலியல் வன்முறைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால், அதிலும் தலித் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டோர் என்பது புலப்படும்.” (அன்புக்கரசி, மோகன் லார்பீர், (.) தலித் பெண்ணியம்..42) என்ற கருத்துடன் இப்படிக்கு ஏவாள்என்ற கவிதைத்தொகுப்பிலுள்ள பின்வரும் கவிதையைப் பொருத்திப்பார்க்கின்ற பொழுது சமுதாயத்தின் இழிநிலையை அறிந்துகொள்ள இடமளிக்கிறது. அதனைக் கவிதையினூடாகப் பயணிக்கின்றபொழுது உண்மை நிலையை உணரமுடியும்.

                    எங்கள் ஆடைகளை அவிழ்ப்பீர்

                    அம்மணமாக்குவீர்

                    வன்புணர்வீர்

                    தமையனோடு புணரச் சொல்வீர்

                    பிறப்புறுப்பில் துறடு செருகுவீர்

                    முலைகளை அரிவீர்

                    வாய்க்காலில் வீசுவீர்

                    அமிலத்தை ஊற்றுவீர்

                    தலையைத் துண்டிப்பீர்

                    காலை வெட்டுவீர்

                    காணாப் பிணமாக்குவீர்

                    மலத்தை வாயில் திணிப்பீர்

                    மூத்திரத்தைக் குடிக்கச் செய்வீர்

                    சேரியெனப் பிரித்து வைப்பீர்

                    செருப்புமாலை போடுவீர்

                    வேசீ என்பீர்

                    பறையன் என்பீர்

                    தீயிட்டுக் கொளுத்துவீர்

                    மரத்தில் தொங்கவிடுவீர்

                    தீண்டாமைச் சுவரெழுப்புவீர்

                    தனிக்குவளை கொடுப்பீர்

                    செருப்பணியத் தடை விதிப்பீர்  

                    காதலித்தால் நாடகம் என்பீர்

                    ஆணவக்கொலை செய்வீர்

                    இனி எவையும் மிச்சமில்லை

                    நீங்கள் செய்வதற்கு

                    ஆனால்

    நான் செய்ய ஒன்றுண்டு

                    அது

                    கொலையும் செய்வாள் பறச்சி.    (சுகிர்தராணி. இப்படிக்கு ஏவாள்..31)

    என்ற கவிதையில், அடித்தள மக்கள் மீது ஆதிக்கச்சாதியினர் நிகழ்த்திய வன்முறைகளை நன்கு உணர்த்தியுள்ளார். அதிலும், தலித் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டியவர்களாக தற்காலத்தில் இருக்கிறார்கள் என்பதனை கொலையும் செய்வாள் பறச்சிஎன்று ஒற்றைவரியில் ஆதிக்கச்சாதியினருக்கு முடிவுரைத்துள்ளார். இம்முடிவில்தான் தலித் பெண்ணடிமை நிலையும், தலித் மக்களின் மீதான சமூகத் தாழ்வுநிலையும் முழுவேகத்தோடு சமூகப்புரட்சியாக உருவெடுத்து மனிதப் பண்பாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு என்பனை உணர்த்தியுள்ளார். ஏனெனில், இதுபோன்ற மனிதப் பண்பாடு வளர்ச்சியுறுவதற்கு ஏற்றதொரு காலமாக இந்நூற்றாண்டு அமைந்துள்ளது என்பர். இதற்கு தலித்திலக்கியமும், தலித் இயக்கங்களும் பெருந்துணை செய்வது இம்மக்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது. தலித் மக்கள் சமூகத்தில் ஆதிக்கச்சாதியினரால் அழுத்தி வைக்கப்பட்டதற்கும், பொருளாதாரத்தில் மிகவும் பின்னுக்குத்தள்ளப்பட்டு வறியவர்களாய் இருப்பதற்கும், மனிதத் தரத்தில் மலிந்த விலங்குகளைப் போல நடத்தப்படுவதற்கும் சுயசிந்தனையும், தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியெனும் அறிவுச்செயல்பாட்டைப் பல நூற்றாண்டுகளாகப் பெறமுடியாமல் தடை செய்யப்பட்டு வருவதே இதற்குக் காரணம் என்பதை கவிதையின் வழி உணரமுடிகிறது.

     “செத்துப்போன மாட்டைத்

    தோலுரிக்கும்போது

    காகம் விரட்டுவேன்

    வெகுநேரம் நின்று வாங்கிய

    ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு

    சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.

    தப்பட்டை மாட்டிய அப்பா

    தெருவில் எதிர்ப்படும்போது

    முகம் மறைத்து கடந்துவிடுவேன்

    அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்

    சொல்ல முடியாமல்

    வாத்தியாரிடம் அடிவாங்குவேன்

    தோழிகளற்ற

    பின்வரிசையிலமர்ந்து

    தெரியாமல் அழுவேன்

    இப்போது

    யாரேனும் கேட்க நேர்ந்தால்

    பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்

    பறச்சி என்று.                                    (சுகிர்தராணி. இரவுமிருகம்..32)

    என்ற கவிதையில், தலித் பெண்கள் கல்விக்கூடங்களில்; எதிர்கொள்ளும் சொல்லஇயலாத சாதியப்பிரச்சனைகளைத் தன்னிலிருந்து மிக இயல்பாக கிளர்ந்தெழும் வார்த்தைகளால் கவிதையாக்கியுள்ளார் கவிஞர் சுகிர்தராணி. இதுபோன்று ஒடுக்குமுறைக்கு எதிராக இழப்பதற்கு இனி எதுவுமில்லை எனத்துணிந்த தலித் பெண்களின் முயற்சிகளால்தான், புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தடைகளாய் இருக்கின்ற முதலாளித்துவம், பார்ப்பனியம், ஆணாதிக்கம், சாதியம் இவற்றை இம்மண்ணிலிருந்து வேரறுக்க முடியும் எனவும் உணர்த்தியுள்ளார். எனவேதான், சமூகத்தின் ஏளனங்களைப் புறந்தள்ளிவிட்டு பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்றுஎனத் தன் எழுத்துகளால் எல்லோரிடமும் உரையாடுகிறார்.

    தமையனைக் கூடச்சொல்லும் வக்கிரம்

    இரவின் உச்சாடனமாய் ஒலிக்க

    ஆதிக்கத்தின் கருந்திரவத்தைப் பருகியவர்கள்

    என் யோனியில் பள்ளம் பறித்துப்

    பருத்த கம்பொன்றை நிறுத்துகிறார்கள்

    என் வலியின் ஓலத்தில்

    அரங்கேறுகிறது ஒரு சாதிக்கூத்து”                          (தீண்டப்படாத முத்தம்..13)

    என்ற கவிதை வரிகளில், தலித் பெண்கள் மீது உயர்சாதி ஆண்கள் நிகழ்த்துகின்ற பாலியல் வல்லுறவுகளை ஒரு பக்கம் சுட்டிக்காட்டிவதோடு, தன்னுடன் பிறந்த தமையனோடு புணரச்சொல்லும் வக்கிரபுத்தியுடைய மேட்டுக்குடி மக்களின் அருவெருக்கத்தக்க குணநலன்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,

     

    முதுகு வீரியக் காய்ந்தால்

    அதன்பெயர் பறவெயில்.

    உலரும் புழுத்த தானியத்தை

    அலகு கொத்தி விரையும்

    அது பறக்காகம்.

    கையிலிருப்பதை

    மணிக்கட்டோடு

    பறித்துச்சென்றால்

    அது பறநாய்.

    நிலத்தை உழுது

    வியர்வை விதைத்தால்

    அது பறப்பாடு.

    சகலத்திற்கும் இப்படியே

    பெயர் என்றால்

    இரத்தவெறியில் திளைக்கும்

    எது அந்தப் பறக்கடவுள்.”              (சுகிர்தராணி. இரவுமிருகம்..33)

    என்ற கவிதையில், பல்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்ற மரபார்ந்த தமிழ்ச்சமூகத்தில் நெடுங்காலமாக நிலவுகின்ற தவறான அணுகுமுறையினை புதுக்கவிதையால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் சுகிர்தராணி. அதாவது, இயற்கை தரும் தாங்க இயலாத அதீத வெயிலைக் காணும்போதும், சுகாதாரமில்லாத உணவினை உண்பவர்களை பார்க்கும்பொழுதும், ஒருவன் பொருளை மற்றொருவன் பறித்துச்செல்லும் போதும், மனிதர்கள் உடல் நோவும்படி உழைத்துத் தேயும்போதும், இருவர் கைகலப்பில் திட்டித்தீர்க்கும் போதுமான பல்வேறு சமூகக் காரணங்களில் தொழிலால் பெயர்பெற்ற பறையர்களை உள்ளிழுத்துப் பேசுவது சகமனிதர்களின் இயற்கையாகிப் போனது. இப்படிச் சகலத்திற்கும் இவர்களை திட்டித்தீர்க்கும் இந்தச்சமூகம் இரத்தவெறியில் திளைக்கும் கடவுளர்களில் எது பறக்கடவுள்எனச் சுட்டிக்காட்ட முடியுமா என வினவுகிறார் இச்சிந்தனையாளர்.

    தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், அணி சேராத தொழிலாளர்கள் போன்றவர்கள் பல்வேறு போராட்டங்களால் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்தான் சமுதாயத்தில் எந்தவொரு நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும். இந்த மாற்று முயற்சிக்குத் தலித் பெண்களும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்பதே சுகிர்தராணியின் கவிதைகள் வழி பெறப்பட்ட நிதர்சனமான உண்மை. இவ்வாறு தன் இருப்பில் நின்று இவ்வையகம் முழுவதும் நிகழ்கின்ற மனிதவிரோதச் செயல்களை உற்றுநோக்கி தன்னிலையில் சரியெனப்படும் எதையும் கவிதைகளாக்கி இச்சமூகத்தில் உலவவிட்டுள்ளார் கவிஞர் சுகிர்தராணி. மேலும்,

    எங்கள் வளநாடுஎன்னும் கவிதையில்,

    எல்லா வளங்களும் நிறைந்திருக்கின்றன

    என்னுடைய நாட்டில்

    பச்சைத்தமிழன் சிவப்புத் தமிழன்

    என்னும் இனப்பிரச்சனை இல்லை

    செந்தமிழ் சென்னைத்தமிழ்

    என்னும் மொழிப்பிரச்சனை இல்லை

    இரத்தத் தூண்களின் மீது கட்டப்பட்ட

    புத்த விகாரைகள் இல்லை

    தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப்

    பயன்படுத்தும் கொடூர யுத்தமில்லை

    உயிர்பிழைக்கப்

    பதுங்கிக்கொள்ளும் குழியுமில்லை

    போர்நிறுத்தம் என்னும் மாய்மாலமில்லை

    சயனைடு குப்பியைக் கழுத்திலணிந்த மாவீரரில்லை

    கொல்லப்பட்ட பிறகும்

    புணரப்பட்ட பெண் போராளிகளில்லை

    பிஞ்சுக் குழந்தைகள்மீது

    குண்டு வீசப்பட்ட செஞ்சோலைகளில்லை

    உயிரோடு உடலையும் காணாமலடிக்கும்

    முள்வேலி முகாம்களில்லை

    கூட இருந்தே குழிபறிக்கும்

    கருணையற்ற துரோகிகளில்லை

    வாய்க்காலில் எல்லாம் முடிந்தபோது

    பள்ளியறைகளில் யாரும் படுக்காமலில்லை

    இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும்

    எனக்கு மானமுமில்லை

    நான் தமிழச்சியும் இல்லை.                          (சுகிர்தராணி. தீண்டப்படாத முத்தம்..20)

    என்ற கவிதையில், அண்மைக் காலங்களில் அரங்கேறிய ஈழநாட்டின் இனப்படுகொலையை அருகில் இருந்தும் இல்லாமலிருந்தது போல் வேடிக்கை பார்த்த தமிழினத்தின் சமூக அரசியல் மனிதர்களை ஒப்பீட்டளவில் கேள்விக் கணைகளால் சிந்தனைக்குள்ளாக்கியிருக்கிறார் சுகிர்தராணி. ஏனெனில், வளங்கள் யாவும் நிறைந்து காணப்படுவது எங்கள்நாடு, உயிர்வாழ்வதற்கு எவ்விதச் சிக்கலும் இங்கு இல்லை, இனப்பிரச்சனை, மொழிப்பிரச்சனை, ஆயுதப்போர் என்று எவ்வித உடல்நோவும், உயர்நோவும் இல்லாத வளமான மாநிலம் எங்களுடையதென்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடித்தள மக்களையும், விளிம்புநிலை மக்களையும் தங்களுக்குள் ஒருவரென்று மனிதநேயத்தோடு உறவாட மறந்து தமிழகத்தின் எதோவொரு மூலையில் நாள்தோறும் ஆதிக்கச்சாதி வெறியர்கள் இவர்களை நசுக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான வன்முறைகளையும் கைவிட்டு வளமான நாடு எங்களுடையது என்றுரைத்தால் இம்மண்ணுக்கான மரபுகளை யாவரும் கொண்டாடி மகிழலாம். அவ்வாறு இல்லாததால்தான் இனம், மானம் என்று பெருமைபேசும் தமிழகத்தில் இருந்தும் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு மானமுமில்லை நான் தமிழச்சியும் இல்லைஎன்று தனக்கான வாழ்விடத்தை வெறுத்தொதுக்குகிறார் சுகிர்தராணி.

    அரசியல் வரலாறும், ஆளும் பரம்பரையினரின் வரலாறும், மேல் சாதியினரைப் புகழ்ந்தெழுதும் வரலாறும்தான் வரலாறு என்று நெடுங்காலமாக இச்சமூகத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை வரலாறுகளை எவரும் பேசுவதுமில்லை. பேச விடுவதுமில்லை. இப்படியான அதிகாரம் இம்மண்ணில் அரங்கேறும் ஆதிக்கச்சாதி வெறியர்களின் செயல்பாடுகளை எதிர்த்து ஒரு பெண்மையின் ஆளுமை குரலெழுப்புவது சற்று வியப்பிற்குரியதே. காதலின் மென்மையையும் காமத்தின் வன்மையையும் தாய்மையின் கசிவையும் தந்தைமையின் நெகிழ்வையும் மகளின் அன்பையும் தோழமையின் இணக்கத்தையும் பகைவெல்லும் துணிவையும் போராளியின் வீரமுழக்கத்தையும் ஒரு செயல்பாட்டாளியின் கருணையையும் தன் எழுத்துக்களால் வெளிப்படுத்திய சுகிர்தராணி, அடித்தள மக்களின் தீராத விடுதலை வேட்கையை இரத்தநாளங்கள் துடிக்க நரம்புகள் புடைக்கப் பெண்மொழியின் உச்சாடனத்தோடு கவிதைகளாக்கியுள்ளார்.

    –               ஏதேனும் நல்ல மாற்றங்கள் இச்சமூகத்தில் என்றாவது நிகழ்ந்துவிடாதா என்று

    பார்வை நூல்கள் :

     

    1.             விகரு.இராமநாதன்                         –               பாரதியார் கவிதைகள்

    ஸ்ரீ இந்து பதிப்பகம், சென்னை – 17.

    பதினேழாம் பதிப்பு – 2009.

    2.             சுகிர்தராணி                                       –               கைப்பற்றி என் கனவுகேள்           

                                                                                                    காலச்சுவடு, நாகர்கோயில். (2002)   

    3.             …………                                                   –               இரவு மிருகம்

                                                                                                    காலச்சுவடு, நாகர்கோயில். (2004)   

    4.             ………..                                                                     –               அவளை மொழி பெயர்த்தல்

                                                                                                                    காலச்சுவடு,  நாகர்கோயில். (2006)  

    5.             ………….                                                   –               தீண்டப்படாத முத்தம்

                                                                                                    காலச்சுவடு, நாகர்கோயில். (2010)   

    6.             ………….                                                   –               காமத்திப்பூ

                                                                                                    காலச்சுவடு,  நாகர்கோயில். (2012)  

    7.             …………..                                                   –               இப்படிக்கு ஏவாள்

    காலச்சுவடு,  நாகர்கோயில். (2016)  

    8.             அன்புக்கரசி,

    மோகன் லார்பீர் (.)   –               தலித் பெண்ணியம்

    தலித் ஆதார மய்யம்

    தமிழ்நாடு இறையியல் கல்லூரி,

    அரசரடி, மதுரை – 16.

    9.             ராஜ்கௌதமன்                  –               தலித்திய விமர்சனக் கட்டுரைகள்

    காலச்சுவடு பதிப்பகம்,

    நாகர்கோவில்01.

    முதற்பதிப்பு – 2012.

    ஆசிரியர் குறிப்பு

    .இரகுதேவன் சேலம் மாநகரைச் சார்ந்த இவர், பணிநிமித்தம் காரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு என தலித் இலக்கிய வெளியில் தொடர்ச்சியாக பயணித்து வருகிறார். இலக்கியப் பதிவுகள் மற்றும்  செவ்விலக்கியம் சில பார்வைகள் என்ற திறனாய்வு நூலும், ‘வேறுவழிசிறுகதைத்தொகுப்பும், ‘மூணாங்கொடிஎன்னும் தமிழக அரசின் பரிசுபெற்ற நாவல் மற்றும் வெந்தீ என்ற நாவலும் பூட்டிய கதவு பூட்டியே கிடப்பதில்லை என்ற கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன.

     

    ……………………………………………………………………………………………………………………………………………………

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • சுவடிப் பாதுகாப்பில் அறிவியல் நெறி

    முனைவர் த. ஆதித்தன்,

    இணைப்பேராசிரியர்,

    அரிய கையெழுத்துச் சுவடித் துறை,

    தமிழ்ப் பல்கலைக்கழகம்,

    தஞ்சாவூர் – 613 010

    இன்று கிடைக்கும் பழஞ்சுவடிகள் நம் முன்னோர்களின் அறிவுச் செல்வங்களாகும்.  அக்கால மக்களின் நாகரிகம், பழக்கவழக்கங்கள் முதலானவற்றை அறிந்து கொள்வதற்கு அவை பெரிதும் உதவுகின்றன.  அத்தகைய சிறப்பு வாய்ந்த சுவடிகளைக் காலம் காலமாகப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாத்து வருகிறோம்.

    இயற்கை முறையில் பல்வேறு வகையான பூச்சி எதிர்ப்புப் பொருள்களைப் பயன்படுத்தி சுவடிகளை முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர்.  அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இன்று சுவடிப் பாதுகாப்பு முறைகளிலும் பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளோம்.  அவற்றைக் குறித்து எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.  அறிவியல் வழிப் பாதுகாப்பு குறித்து, “அறிவியல் வளர்ச்சியினால் அறிவுப் பூர்வமாகச் சிந்தித்துப் பல்வேறு கண்டுபிடிப்புகளிலும் நவீன கருவிகள் மற்றும் வேதிப்பொருள்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பாதுகாப்பு முறைகளை அறிவியல் வழிப் பாதுகாப்பு என்பர்.  அதாவது, அறிவியல் வழிப் பாதுகாப்பு என்பது அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்துள்ள பல்வேறு வேதிப்பொருள்களைச் சுவடிப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்புச் சாதனங்களைத் தேர்வு செய்து சுவடிகளின் தன்மை, பாதிக்கும் காரணிகள், பயன்படுத்தும் பொருள்களினால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான முறைகளை, காலமுறையில் பயன்படுத்துதல் ஆகும்.”1  என்கிறார் மோ.கோ. கோவைமணி.

    அறிவியல் முறையினில் பல்வேறு வகையான இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.  சுவடிகளின் வைப்பிடங்கள், சுத்தம் செய்யும் முறை, ஒன்றோடொன்று ஒட்டியச் சுவடிகளைப் பரித்தெடுத்தல், சுவடிகளின் உறுதித்தன்மையை மேம்படுத்துதல் என அனைத்து வகையான பாதுகாப்பு முறைகளலும் இந்த இரசாயனங்களின் பங்கு முதன்மையிடம் பெறுகிறது.

    அறிவியல் முறையில் சுவடிகள் வைக்கும் அறையானது தட்பவெட்ப நிலை மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படாதவாறு அமைதல் அவசியம்.  அதே போன்று சுவடிகளை மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாப்பது உகந்தது என்கின்றனர் சுவடியலாளர்கள்.  ஏனெனில் உலோகங்களால் ஆன அலமாரிகளில் வைக்கும்போது அவை எளிதில் வேதிவினைகளுக்கு ஆட்படக்கூடும்.  உதாரணமாக இரும்பு அலமாரிகள் எளிதில் துருபிடிக்கக் கூடியவை.  அவற்றில் ஏற்படும் துரு சுவடிகளையும் பாதிக்கும். சிதைவடையச் செய்யும்.  எனவே இரும்பு போன்ற ஆக்கிசிஜனேற்றத்தால் எளிதில் பாதிப்படையும் உலோகங்களால் ஆன அலமாரிகளைப் பயன்படுத்துவது அறிவியல் நெறியின்படி உகந்ததல்ல என்கின்றனர்.

    சுவடிகளை அறிவியல் முறையில் தூய்மை செய்வதற்கு எத்தில் ஆல்கஹால், கிளிசரின், அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

    சுற்றுப்புற மாசினால் படியும் தூசானது சுவடிகளைப் பெரிதும் பாதிக்கின்றன.  அவற்றை முதலில் பஞ்சு அல்லது மென்மையான துணிகளால் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.  அதன்பின்பும் இருக்கக்கூடிய கறைகளைப் போக்க இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இது குறித்து, “கறைகள் மற்றும் பூச்சிகளின் எச்சங்கள் இருப்பின் அவற்றைச் சுத்தமான நீருடன் சம அளவில் எத்தில் ஆல்கஹால் சேர்த்துச் சுத்தம் செய்யலாம்.  வேதிமக் குணம் கொண்ட படிவுகளை வேதிமக் கரைசலான அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடை குறைவான அளவு பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம்.

    அதிகமாக வேதிமக் கரைசலைப் பயன்படுத்தினால் சுவடிகளில் உள்ள சேர்ப்புப் பொருள்கள் கரைந்து சுவடியின் உறுதித்தன்மை இழக்க நேரிடும்.  ஓலைகளைக் கிளிசரின் மற்றும் சுத்தமான  நீர் 1:10 விகிதத்திலும் அல்லது கிளிசரின் மற்றும் எத்தில் ஆல்கஹால் (1:1)  விகிதத்திலும் கலந்து கொண்டு சுத்தம் செய்யலாம்”என்கிறார்.  மோ.கோ. கோவைமணி.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டச் சுவடிகள் நீண்ட காலம் பிரித்துப் பார்க்கப் படாமல் கட்டி வைத்தப்படியே இருந்தாலும் பாதிப்புக்குள்ளாகும்.  அவற்றில் பூஞ்சைக் காளான், புத்தகப்புழு போன்றவை உருவாகும்.  படியும் தூசு ஈரப்பதத்தோடு சேரும்போதும் சுவடிகளின் மீது பூசப்படும் மேற்பூச்சுத் தைலங்கள் மிகுதியாக இருப்பின் அவற்றிலும் பூஞ்சை எளிதில் ஏற்படும்.  இதனால் சுவடிகளின் ஓலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.  இச்சுவடிகளைப் பிரித்தெடுப்பதற்குப் பொதுவாக இருமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  ஒன்று குளிரூட்டுவது மற்றொன்று நீராவியல் வெப்பமூட்டிப் பிரிப்பது.  இவ்விரு முறைகளிலும் புத்தகப்புழு,  பூஞ்சைக் காளான் ஆகியவை அழிந்துவிடும்.  ப. பெருமாள் பிரித்தெடுக்கும் முறை  குறித்து,

    “ஒட்டியுள்ள சுவடிகளைக் குளிரூட்டப்பட்ட அறையில் 24 மணிநேரம் வைத்துப் பிரிக்கலாம்.  மேலும் நீராவியில் 15 முதல் 30 நிமிடங்கள் வைத்து ஒட்டியுள்ள ஓலைச் சுவடிகளைப் பிரித்தெடுக்கும் முறையும் பயன்படுத்தப்படுகிறது.  மேலை நாடுகளில் குளிர்ந்த அல்லது வெப்பமான நீராவி வெளிவிடும் இயந்திரத்திலிருந்து நீராவியைப் பாய்ச்சி பிரிக்கப்படுகிறது.  இம்முறைகளில் பிரித்தெடுக்கச் சிரமம் இருப்பின் பாதுகாப்புத் தைலம் அல்லது சுத்தமான நீருடன் சம அளவு எத்தில் ஆல்காஹால் சேர்த்துப் பூசிப் பரித்தெடுக்கலாம்” 3 என்கிறார்.

    சுவடிகளைப் பராமரிக்க எண்ணெய் பூசப்படும்பொழுது ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு லெமன்கிராஸ் தைலம், பாலி எதிலின் கிளைகால் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து பயன்படுத்தலாம் என்பர்.  இவ் இரசாயனக் கலவையைப் பயன்படுத்தும்போது சிதிலமான சுவடிகள் கூட விரைவாக உறுதியடைந்து வளைந்து கொடுக்கும் என்கின்றனர் சுவடியியலாளர்கள்.

    மரபுவழிப் பாதுகாப்பில் கிழிந்தஓலைகளை நூல்கொண்டு தைப்பதுண்டு. அவ்வாறு செய்யும்பொழுது சுவடிகளில் சிறுபிளவோ, வேறு பாதிப்புகளோ ஏற்படுவதுண்டு  எனவே இதற்கு மாற்றாக முதலில் பசை நாடா(செல்லோடேப்) கொண்டு ஒட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.  ஆனால் நாளடைவில் பசை நாடாவில் உள்ள பசை அதனைத் தாண்டி பக்கத்தில் ஊடுருவி ஒட்டப்பட்ட ஓலைகளிலும் ஒட்டுவதுண்டு.  அந்நிலையில் உள்ள ஓலைகளைப் பிரித்தெடுக்கும்போது அவை உடைந்துவிடுவதுண்டு.  எனவே இம்முறையும் கைவிடப்பட்டுள்ளது.  தற்பொழுது பயன்பாட்டில் உள்ள முறைகள் குறித்து மோ.கோ.கோவைமணி, “உடைந்த ஓலைகளை ஒட்டுவதற்குப் புதிய ஓலைகளின் பொடியுடன் பி.வி.ஏ. எமல்ஸன் சேர்த்து ஒட்டும் முறையை லக்னோ தேசிய பாதுகாப்பு ஆய்வகம் பயிற்றுவிக்கிறது.  இம்முறையில் ஒட்டப்பட்ட சுவடிகள் நல்ல நிலையில் வளையும் தன்மை கொண்டுள்ளது.  மேலை நாடுகளில் உடைந்த ஓலைகளைச் சேர்த்து மெல்லிய டிசு காகிதத்தின் நார்ப்பொருட்களைக் கொண்டு ஒட்டப்படுகிறது.

    மிகவும் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்க ஓலைச்சுவடிகளின் இருபுறமும் செல்லுலோஸ் அசிடேட் தாள் மற்றும் ஜப்பான் டிசுத்தாள் கொண்டும், சீபான் துணி, மெதில் செல்லுலோஸ் பசை கொண்டும் லேமினேசன் செய்யப்படுகின்றது.  மேலை நாடுகளில் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்கவும், கையாளவும் தற்பொழுது என்கேப்புசுலேசன் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.”4 என்கிறார்.

    இவ்வாறு அறிவியல் நெறிகளின் அடிப்படையில் புதிய பராமரிப்பு முறைகள் பலவற்றை சுவடியியலாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.  இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் அறிவியல் நெறி என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.  அது ஏற்புடையதல்ல.  இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வழிவழியாக நாம் பயன்படுத்தி வந்த முறைகளை அறிவியல் முறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.  அவற்றை எந்த விகிதாச்சாரத்தில் பயன்படுத்தினால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பனவற்றை அறிவியல் அணுகுமுறையில் துல்லியமாக ஆராய்தல் வேண்டும்.  அவ்வாறு முறையாக ஆராயும்பொழுது பல புதிய உத்திகளும் அதன் காப்புரிமைகளும் கூட நம்மவர்களுக்குக் கிடைக்கக் கூடும்.  மேலும் பாதுகாப்பு நெறிமுறைகளில் புதியமைல் கல்லையும் நாம் எட்டமுடியும்.

    சான்றெண் விளக்கம்:

    1. கோவை மணி , மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூர் – 613 010., இரண்டாம் பதிப்பு – செப்டம்பர் 2016, பக்கம் எண்:160
    2. மேலது, பக்கம் எண்:161
    3. பெருமாள்.ப., சுவடிப்பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் – 630 307., இரண்டாம் பதிப்பு- மார்ச் 2014., பக்கம் எண்:138
    4. கோவை மணி , மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூர் – 613 010., இரண்டாம் பதிப்பு – செப்டம்பர் 2016, பக்கம் எண்:162

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181112 Goverdhan -A4 acidfree —archival paper 160gsm- ink -72 dpi lr

    ”ஆனை(ஐராவதம்) அடிவருட அண்டர்கோன்(இந்திரன்) சார்பாக
    மோனைப் பசுஎதுகால்(எதுகை) மேய்ந்திட , -ஓணம்
    பிறந்தவன் வானைப் பிளக்கின்ற மின்னல்(வித்யுத்)
    திறந்திடும் ஆமனத் தோன்’’….கிரேசி மோகன்….!

    வாமனன் கோகுல ஆமனன்….!
    கண்ணன் எதுகையென்றால் பின்செல்லும் பசு மோனை….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (287)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    தெரிவு: முனைவர் நா. கணேசன்

     

       இயல் விருது கனடா எம்பி இராதிகாவிடம் பெறுதல்

    இந்த வார வல்லமையாளராக  சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவின் இன்றைய மாபெரும் பிரச்சினை, இயற்கை அழிவு தான். பல உயிரினங்கள் உலகிலே எங்கும் இல்லாதவை: கடலுயிரிகள், மீன்கள், பூச்சிகள், புழுக்கள், விலங்குகள், பறவைகள், வனவிலங்குகள், 10,000 ஆண்டுகளாக வேளாண்மையில் உருவாக்கிய நாட்டு மாடுகள், எருமைகள், கோழிகள், நாட்டு நாய்கள், … மரங்கள், தாவரங்கள், செடிகள், கொடிகள் எனப் பல இனங்கள் காணாமல் போகின்றன. மணல், கிரானைட், தாதுமணல், … அள்ளப்படுகின்றன. அரசியல் கட்சிகள் இயற்கைப் பாதுகாப்பு, காட்டு வளங்கள், எல்லைகளை ஊடுருவாமல் காத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் இல்லை.

    இந்த வாரம் 10-ஆம் தேதி அன்று, “கையிலிருக்கும் பூமி – இயற்கை சார்ந்த கட்டுரைகள்” என்னும் பாஸ்கரனின் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா, பண்டைய கலைவரலாறு, இயற்கைச் சூழலியல், கானுயிரிகள், நாட்டுநாய்கள், .. என்ற துறைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதிவருபவர். பல ஆண்டுகளாக என் ஆய்வுகளைப் படித்துப் பாராட்டுபவர் திரு. பாஸ்கரன். காந்திஜியின் நண்பர் கோவை அய்யாமுத்து திருப்பூரில் 1000 ராட்டைகள் சுழன்று கதர் இயக்கம் வளர்வதைப் படமாக்கியவர். அந்த அரிய பதிவு, மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கைவரலாற்று ஆவணப்படத்தில் பயன்பட்டதைச் சொல்லியுள்ளார். கேழையாடு, அழுங்கு/அணுங்கு என்னும் எறும்புதின்னி போன்றவற்றின் செய்திகளை விவரித்துள்ளார். பரதநாட்டியத்தை குஜராத்தில் பரப்பிய மிருணாளினி சாராபாய் – விக்ரம் சாராபாய் என்னும் விஞ்ஞானியின் மனைவியார் இந்தத் தமிழ்ப் பெண்மணி – பற்றி இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். முதல் நடராஜர் வடிவம், பல்லவர்களின் சீயமங்கலம் குகையில் இருப்பதை விளக்கி தமிழ் இந்துவில் எழுதினார். ஆங்கிலத்தில் மட்டுமே பேசப்பட்டுவந்த பல செய்திகளை நல்ல தமிழில் எழுதுபவர். பார்ப்போலாவைப் பேட்டி கண்டு ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் வெளியிட்டார். மிச்சிகன் பல்கலை வரலாற்றுப் பேராசிரியர் தாமஸ் ட்ரௌட்மன்   திராவிட மொழிக்குடும்பம் என்னும் கோட்பாடு கண்டறிந்த வரலாற்றை நூலாக ஆய்ந்தபோது பல்லாற்றானும் உதவினார். அவரது சகோதரர், முனைவர் சு. கி. ஜெயகரன் குமரிக்கண்டம் என்னும் புராண ஆக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளார் (காலச்சுவடு பதிப்பகம்).

    சீவக சிந்தாமணி காப்பியம் கம்பனுக்கு முன்னோடி. அக் காப்பியம் உருவான நகரம் தாராபுரம். பெருவஞ்சி என்று அழைக்கப்பட்ட தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் (78) சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுலைப்பட்டம் பெற்றார்.  இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராக இருந்தார். தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார்காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தால் 1996இல் வெளியிடப்பட்ட்து. சென்ற ஆண்டு பெங்குயின் பதிப்பகம்  இவரை தொகுப்பாசிரியராக்க் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை வெளியிட்ட்து.

    உயிர்மை பதிப்பகம் இவரது மூன்று நூல்களானஇன்னும் பிறக்கத தலைமுறைக்காக (2006)’, தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)  இவற்றைப் பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலைகானுறை வேங்கை  ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார்.    உயிர்மை, பசுமை விகடன் பத்திரிக்கைகளில் இவரது பத்தி வெளியாகின்றது. ஹிந்து நாளிதழிலும் ஃப்ரண்ட்லைன் இதழிலும் காட்டுயிர் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார்.  1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A)  தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக கருதப்படுகின்றது.  பற்றிய  The Eye of the Serpent என்ற  இவரது நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை  1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு  பாம்பின் கண்  2012இல் வெளிவந்தது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 187

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சுந்தரம் செந்தில்நாதன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

    Share