கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில்

0

நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

– நூல் வெளியீட்டு விழாவில் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., பேச்சு –

செங்கற்பட்டு.நவம்.13. லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில்
குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில்,
பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாக குழந்தைகளின்
மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு
சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசினார்.
இவ்விழாவிற்கு செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர்
ஞா.ஜாஷ்வா சாம் டானி தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.லட்சுமி
அனைவரையும் வரவேற்றார்.

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’
குழந்தைகளுக்கான கதை நூலினை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட, லிட்டில் ஜாக்கி கல்விக்
குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக் கொண்டார்.
நூலினை வெளியிட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசும்போது, “ இன்றைக்கு
குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது
என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின்
இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களுமே
முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை
வகுப்புகளில் எங்களுக்கு கதைகள் சொல்வார்கள். அந்த கதைகளில்
வரும் நீதி எங்களின் மனதில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின்
கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும்
ஒழுக்கத்தோடும் இருப்பார்கள்.

இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை
திருப்பப்படுகிறது. குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும்
புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள்
மனதில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க
முடியும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை
மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை
வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் கொள்ள வேண்டும்.
மு.முருகேஷ் எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய
தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக
வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.

விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமஸ், பொன்.வாசுதேவன்,
பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர்.

நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார். விழாவில்,
கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த லிட்டில் ஜாக்கி பள்ளியைச் சேர்ந்த
16 மாணவ – மாணவிகளுக்குப் பாராட்டுச் செய்யப்பட்டது.
விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
நிறைவாக, பள்ளி ஆசிரியர் பி.ரேணுகாதேவி நன்றி கூறினார்.

 

படக்குறிப்பு;

செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில் குழந்தைகள்
தினவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக்
குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தை கதை நூலை தமிழ்நாடு கூட்டுறவு
சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட,
லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக்கொண்டார்.
அருகில், (இடமிருந்து) செங்கை தாமஸ், நூலாசிரியர் மு.முருகேஷ், கவிஞர் அ.வெண்ணிலா,
பேராசிரியர் கிள்ளிவளவன் ஆகியோர் உள்ளனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *