Blog

  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (12)

    எண்ணிம எழுத்தும் தரவும்

     

    மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும்.

    எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் சேர்ந்து வரிகளாகவும் வரிகள் சேர்ந்து பத்தியாகவும் பத்திகள் பக்கங்களாகவும் பக்கங்கள் சேர்ந்து நூலாகவும் உருவாகும்.

    எண்ணிம வடிவில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதும்போது சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். வரிக்கும் வரிக்கும் இடையில் இரண்டு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். பத்திக்கும் பத்திக்கும் இடையில் மூன்றெழுத்து இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரு பக்கத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குறிப்பிட்ட காலி இடம் இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல் ஆய்வு இதழில் கொள்கையாகவும் வடிவ அமைப்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் இதழுக்கு இதழ் மாற்றம் இருக்கும் என்பதால் ஆய்வுக் கட்டுரை எழுதும் முன் அந்த இதழைப் பார்க்க வேண்டும்.

    ஆய்வாளர் கட்டுரை எழுதும்போது காகிதத்தில் பேனாவில் எழுதி திருத்தங்கள் செய்து கணிணியில் எண்ணிம வடிவில் பதிவிடலாம் அல்லது நேரடியாகக் கணினியில் பதியலாம். கணினியில் பதிவிடும்போது முதலில் கட்டுரைக் குறிப்புகளை நோட் பேடில் வரியாகப் பதிவிடலாம். மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் எழுதுவதைவிட இதுவே சிறந்தது.

    கணினியில் மென்பொருள் மூலம் வடிவ மாற்றம் செய்ய இயலும். கணினியில் சொற்கள் மட்டும் உள்ள பதிவுகள் வரிவடிவில் இருக்கும். எழுத்தில்லாமல் உருவம் அமைந்தால் அது பட வடிவம். ஒலி வடிவிலும் உருவாக்கலாம். இவை எல்லாம் தனித்தனி ஊடக வடிவங்களாகும். ஒன்றோடொன்று இணைந்தால் அதுவே பல்லூடக வடிவத்தைப் பெறும்.

    இணையத்தில் வெளியாகும் ஆய்வுகள் வரி வடிவிலும் ஒலி வடிவிலும் ஒளிக்காட்சி வடிவிலும் அமையலாம். பல்லூடக வடிவில் அமைவது மேலும் சிறப்பானதாக அமையும். அச்சு ஊடகத்தில் இதுபோன்ற முயற்சி செயல்பட வாய்ப்புகள் குறைவு.

    நாகராசன்

    Share
  • சேக்கிழார் பா நயம் – 10

    =======================

    திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————-

     

    வேளாண்தொழிலில் நெற்பயிரோடு வாழை , கரும்பு ஆகியவை நன்செய் நிலப்பயிர்கள் ஆகும்.  விளைந்த கரும்புகள்  கமுக  மரங்களுக்கு  இணையாக விளங்கின என்று முன்னரே கண்டோம். அந்தக் கரும்புகளை வெட்டி, ஆலைகளில் இட்டுப் பிழிந்து, மிகப் பெரிய அண்டாக்களில் ஊற்றிக்  காய்ச்சுவார்கள். அவ்வாறு காய்ச்சும்போது எழும் கரும்புகை வானில் எங்கும் பரவும்.  அந்தப் புகையில் கரும்பின் இனிய மணம் கமழும்.

    அந்நாட்டில் பெண்கள் நன்றாகக்  குளித்து உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொண்டு, தம் இல்லத்தின் மேல்மாடங்களில் நிற்பர். அப்போது  மணம் மிக்க அகில், சாம்பிராணிப்  புகையை உருவாக்கித்  தம் கூந்தலில் அவற்றின் புகையை வாங்கி உலர்த்துவர். அப்புகையும் வானில் எழுந்து பரவும். அதிலும் அகிலின் நறுமணம் கமழும்.  அவர்தம் கூந்தலில் புதுமலர்ச் சரங்களைச்  சூடிக் கொள்வர்.   அப்பூக்களின் நறுமணமும் வானெங்கும் பரவும்.

    ஊரிலுள்ள அந்தணர்கள் தம் இல்லங்களில் சிறுசிறு வேள்விக் குண்டங்களை அமைத்து அன்றாடம் தீவேள்வி புரிவர். ஆனால் ஊரின் நன்மை கருதி, மிகப்பெரிய  யாகங்களையம் செய்வர். அவற்றுக்காக ஊரின் புறத்திலே வெட்ட வெளிக் களங்களில்  , பெரிய யாக குண்டங்களை அமைப்பர். அவற்றின் நடுவே யூபம் எனப்படும் பெரிய தூண்களை நடுவர். அவற்றை நம் பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு,

    ‘’நற் பனுவல் நால் வேதத்து

     அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

     நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

     வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

     யூபம் நட்ட வியன்களம் பலகொல்?’’

    என்று பாடுகிறது. அந்த யூபத்தூண்களில் இடப்பெறும் தசைகளைத்  தின்பதற்காகப் பருந்துகள்  வானில் வட்டமிட்டுப் பறக்கும் . இதனைப் புறநானூறு,

    ‘’பருதி உருவின் பல்படைப் புரிசை

     எருவை  நுகர்ச்சி யூப நெடுந்தூண்

     வேத வேள்வித்  தொழில்முடித்  ததூஉம் ‘’  

    என்று பாடுகிறது. இவ்வாறு அமைக்கப்பெறும் வேள்விச்சாலைக் களங்கள்  பெரிய சுவர்களுடன் கட்டப்பெறும். அந்த வேல்விச் சாலைகளிலிருந்து மேலே கிளம்பும் பெரும் புகை வானில் பரவும். அந்தப் புகையிலும் ஆவுதி மணம் கமழும். இதனை வில்லிபாரதம்,

    ‘’அரசினை அவிய அரசினை அருளும் அரிபுருடோத்தமன் அமர்வு

      நிரைநிரையாக நெடியன யூபம்  நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு

      கரை புரை வேள்வி புகைகமழ் ‘’ 

    என்று பாடும். இந்த வேள்விச் சாலையை சேக்கிழார் ‘’ பெரும் பெயர்ச் சாலை ‘’ என்று பாடுவார்.

    ‘’பெரும் பெயர் – மகா வாக்கியம். ஆகு பெயராய் ஈசுவரனை யுணர்த்திற்று. “தத்துவமசி” முதலிய மகா வாக்கியங்களாலே பேசப் பெறுபவன். “பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு” என்ற சிவஞான போதச் சிறப்புப்பாயிரமும் “பெரும் பெயர் முருக” என்ற திருமுருகாற்றுப்படையும் முதலியனவும் காண்க. பெரும் பெயர்ச்சாலை – ஊருக்கு வெளியிலே யூபத்தம்பங்கள் நாட்டி இறைவனை முன்னிட்டுச் செய்யப்பெறும் பொது வேள்விச் சாலைகள்’’. என்பார் சம்பந்த சரணாலயர்.

     “மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்,

      விண்ணிற் புயல் காட்டும் வீழிம் மிழலையே.”

    என்பது தேவாரம்.

    இவற்றைத் தவிர வானில்  இயல்பாகச் சூழும் கருமேகங்களும் விளங்கும். இவ்வகையில் திருவாரூர்  வானில் நால்வகைப்  புகைகளும், நால்வகை நறுமணங்களுடன் விளங்கும். இவை யனைத்தும் வானில் மருவிக் கலந்து எந்த நறுமணம் எங்கிருந்து வருவது? என்ற குழப்பத்தை விளைவிக்கும்.

    இதனைச் சாறு மணக்கும் குன்றத்தூர்த் தலைவராகிய சேக்கிழார் பாடுவதை இங்கே காண்போம்.

    ‘’கரும்படு   களமர் ஆலைக்  கமழ்நறும்  புகையோ, மாதர்

     சுரும்பெழ  அகிலால் இட்ட  தூபமோ,  யூப  வேள்விப்

     பெரும்பெயர்ச்   சாலை  தோறும் பிறங்கிய  புகையோ  வானின்

     வருங்கரு  முகிலோ  சூழ்வ  மாடமும் காவும் எங்கும் ‘’

    என்பது அவரருளிய  பாடல்!

    இப்பாடலில்  நால்வகைப்பட்ட புகைகள் நெடுநிலை மாடங்களையும், சோலைகளையும்  சூழ்கின்றனவாம். இவற்றுள் கரும்பைக் காய்ச்சும் ஆலைப்புகை நாட்டின் விளைச்சல் வளத்தையும், அதன் வழியே பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகிறது. அடுத்து பெண்கள் நெடுநிலை மாடத்தில் நின்று கூந்தலில் நறுமணப் புகை இடுவது, அந்நாட்டின் இல்லற இன்பநிலையைக் காட்டுகிறது.அடுத்து பொதுவேள்விச் சாலைகளில் அவி சொரிந்து நடத்தும் வேள்வி , வீடுபேற்றைக்  குறித்த  வழிபாட்டு  நெறியைக்   காட்டுகிறது. மேலும் வானில் சூழ்ந்து  நிற்கும் இயல்பான மேகங்கள், நாட்டு மக்களின் அறஞ்சார்ந்த வாழ்க்கையைக் காட்டுகின்றன. இதனைக் கம்பர் ,

    ‘’பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா
    நிற்பின் நின்றன நீதி மாதரார்
    அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
    கற்பின் நின்றன கால மாரியே’’

     

    என்று  அறத்தின் சிறப்பைக் கருமேகத்தின் வழியே காட்டுகிறார்.

    ‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

     வறக்குமேல்  வானோக்கும் ஈண்டு .’’

    என்றும்,

    ‘’தானம் தவமிரண்டும்  தங்கா  வியனுலகம்

    வானம் வழங்கா தெனின்’’

    .

    என்றும் ,

     

    நீரின்று  அமையாது உலகெனின்  யார்யார்க்கும்

    வானின்று  அமையாது  ஒழுக்கு.’’

    என்றும் திருக்குறள் பாடுகிறது.அறம்,பொருள் இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பால்களையும் காட்டும் பாடல் இது. இந்தச் சிந்தனைகள் அனைத்தையும் ஒருங்கே எண்ணிச்  சேக்கிழார்  பாடும்  பாடலின்  நுட்பம்  வியந்து  போற்றுதற்கு உரியது.

    =============================================

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 185-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்திருக்கும்  இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    சின்னஞ்சிறு கைகள் அடுப்பெரிக்க விறகினைச் செருகிக் கொண்டிருந்தாலும், சிறுவனின் முகத்தில் தெரியும் நம்பிக்கைக் கீற்று, உலகம் போற்றும் உயர்ந்த மனிதனாய் வரும் வாய்ப்பு இவனுக்கு உண்டு என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது!

    ”வறுமை கண்டு அஞ்சாதே தம்பி
    உன் திறமைதனை நீ என்றும் நம்பி
    கற்றிடவே உயர்ந்திடும் உன் வாழ்வு!
    விலகி ஓடிடுமே மிடிமையெனும் தாழ்வு!” என்று நானும் சிறுவனுக்கு நன்மொழி பகர்ந்து நகர்கின்றேன்.

    இனி கவிஞர்களின் முறை…

    பள்ளி செல்லத் தாமதமானாலும் பரவாயில்லை என்று நோயில் வீழ்ந்து பாயில் கிடக்கும் அன்னைக்கும், பசியில் துடித்துப் புரண்டழும் தம்பிக்கும் சேர்த்துச் சோறுபொங்கத் தலைப்படும் சிறுவனின் இரங்கத்தக்க நிலையை உருக்கமாய்த் தன் கவிதையில் வார்த்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    தாயிக்கு உதவடா!

    நேற்று முதல்
    தாயிக்கு நோய்!
    வாய்ச் சண்டை நடக்கும்
    வாடிக்கை யாய்!
    தந்தை மதுக் கடையில்,
    தவம் கிடப்பார் !
    கும்பி கொதிக்கிறது!
    தம்பி அழுகிறான்!
    பசி மிகுந்து
    தரையில் புரள்கிறான்!
    பள்ளிக்கு நான்
    போக வேண்டும்!
    தேர்வு இன்றெனக்கு!
    பாடம் கணக்கு!
    புரியாத மனப் பிணக்கு!
    யாருமில்லை
    சொல்லித் தர எனக்கு!
    தாய் வயிறு
    நிரம்பட்டும் இன்றாவது!
    தம்பி அழுகை
    நிற்கட்டும்!
    பள்ளிக்குச் செல்ல
    தாமத
    மாகட்டும்!

    *****

    காற்றுப்புகா அறையில் உறங்கி, கையகலக் கணினியில் கிறங்கி இதுவே வாழ்க்கை என எண்ணுவோருக்கு, ”விவசாயம் செய்து விளைந்ததைச் சமையல் செய்யும் நான் சாதனையும் செய்வேன்!” என்றுரைக்கும் பிஞ்சினைப் பெருமிதத்தோடு அறிமுகம் செய்கிறார் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீ.

    ……காற்று புகா அறையினிலே
    கண்ணுறக்கம் கொண்டெழுந்து
    காரில் சென்று
    கல்வி பயின்று
    கையகலக் கணினியிலே
    கண்டதே வாழ்க்கையென
    கதை பேசி வாழ்வோருக்கு
    விவசாயம் செய்து
    விளைந்ததைக் கூடி உண்டு
    வாழும் வாழ்வைக் காட்ட
    என் வீட்டுச் சமையலறையில்
    எடுப்பாக நானமர்ந்தேன்
    சமையலும் செய்வேன்
    சாதனையும் படைப்பேன்.

    இதே கவிஞர் தனது மற்றொரு கவிதையில், பல் மருத்துவம் பயில விரும்பும் பள்ளிமாணவனாய்ப் படத்திலுள்ள சிறுவனைச் சித்திரித்து, பாட்டியின் யோசனைப்படி சாம்பலிலே உப்பினையும் கற்பூரத்தையும் சேர்த்து அவன் செய்யும் அரிய பற்பொடியையும் நமக்கு அறியத் தருகின்றார்.

    படத்தைப் பார்த்து பதைக்காதீர்
    பள்ளி மாணவன் நான்
    பல் மருத்துவர் நினைப்பால் தூங்காமல்
    பரிதவித்த எனக்குப்
    பாட்டி சொன்ன யோசனை
    பல்லுக்குப் பலம் கொடுக்கப்
    பழைமைப் பற்பொடி தயாரிப்பு
    பண்ணை வீட்டுத் தொழுவத்தில்
    பாட்டனின் வெந்நீர் அடுப்புப்
    பசுஞ் சாணத்துச் சாம்பலுடன்
    பாத்திரத்திலுள்ள உப்பும் வறுத்துப்
    பொடித்த உமியையும் கற்பூரப்
    பொடியையும் கலந்து எனது
    பற்பொடி தயார்- இதைப்
    படித்தவர்கள் வரலாம் எங்கள்
    பண்ணை வீட்டுக்கு…
    பற்பொடி இலவசம்!

    *****

    ”ஏழைப் பெற்றோர், தன்னைப் படிக்கவைக்கப் படும் பாடறிந்து அவர்தம் பசிபோக்கப் பொறுப்போடு சமையல் செய்யும் உத்தமப் பையனிவன்” என்றுரைத்து நம்மை நெகிழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உத்தமன்…

    பிள்ளையைப் பள்ளிக் கனுப்பிடவே
    பெற்றோர் சென்றனர் வயல்வேலை,
    பள்ளி சென்ற பிள்ளையவன்
    பாடம் படித்து முடிந்ததுமே,
    எள்ளிப் பிறரெலாம் நகைத்தாலும்
    ஏழைப் பெற்றோர் பசியாற
    சுள்ளி பொறுக்கித் தீமூட்டி
    சமையல் செய்வது சிறப்பன்றோ…!

    *****

    சின்னஞ்சிறு பிள்ளையின் சீரிய செயலைப் போற்றிப் பாவியற்றித் தந்திருக்கும் வலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    சாதாரணனல்ல சாதனையாளன்!

    கலாமின் கனவுகளைக்
    கலசமிட்டுக் கனிச்சோறு கடைந்திட,
    திண்ணைப்பள்ளியும் அண்டிடா
    வண்ணக் கனவுகளுடன்
    எண்ணக் குவியலைக்
    கன்னத்தில் தேக்கியபடி
    மரத்தடிக் கொட்டகையில்
    மண்டியிட்ட மாணவனே!
    புகைமூட்டத்தின் நடுவே
    மேகமூட்டத்தில் மிதந்து
    பகைக் கூட்டம் கலைந்து
    பன்மணிக்கூட்டம் பார்த்தொழுகி
    போதிமர புத்தனானாயோ?
    நின் அழகு முகத்தின்
    சாந்தமும்
    செம்பவளவாயின் புன்சிரிப்பும்
    சான்று பகராதோ – நீ
    சாதாரணனல்ல
    சாதனையாளனென்று…!!!

    ”திண்ணைப் பள்ளியும் அண்டிடா வண்ணக் கனவுகளை எண்ணக் குவியலாய்த் தேக்கி, மரத்தடிக் கொட்டகையில் மண்டியிட்ட இவன் இவ்வையம் கண்டிரா புத்தனோ? வறுமையிலும் செம்மையாய்ப் புன்னகை சிந்தும் இவன் சாதரணன் அல்லன் சாதனையாளனே!” என இச்சிறுவனை வியந்தும் நயந்தும் பாப்புனைந்திருக்கும் முனைவர் மு. புஷ்பரெஜினாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டி மகிழ்கின்றேன். 

     

     

     

    Share
  • வெடியற்ற விடியல்

    -விவேக்பாரதி

    வெடியற்ற விடியலைக் காணவேண்டும் – மண்ணின் 
       வேதனை கூடாதிருக்க வேண்டும் – கோர
    இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! – அன்று 
       இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! – நொந்து
    மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற – அசுரன் 
       மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி – அன்று 
    விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் – நம்மை 
       விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்! 

    குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? – நிலம் 
       கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? – இதனைத் 
    தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் – நம்மைத்
       தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! – தேவை 
    முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் – விட்டு 
       முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் – பல 
    குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் – கட்டி 
       கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்! 

    விடுமுறை நாளிலும் வெடிமாசினால் – புவி 
       விக்கிட வைப்பதோர் விளையாடலோ? – வளம் 
    தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் – இங்கு 
       செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? – வையம் 
    அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர – அதனை 
       ஆனந்தம் ஆனந்தம் எனச்சொல்வமோ? – இதை 
    விடுத்துயர் வெய்தினோம் என்னும்புகழ் – நம் 
       வரலாற்றில் பெயர்மாற்றும்! அதையெண்ணுவோம்! 

    இனிப்புக்குத் தானிந்த தீபாவளி – மக்கள் 
       இதயங்கள் மகிழவே தீபாவளி – பச்சை 
    வனப்புக்குத் தானிந்த தீபாவளி – மாசின் 
       வாட்டங்கள் நீங்கவே தீபாவளி – நமது 
    மனப்புட்கள் பறக்கின்ற படிவாழ்த்துவோம் – புகையின் 
       மாசின்றி இந்நாளை நாமேத்துவோம்! – சத்த 
    நினைப்புக்குத் திரைபோட்டுக் கொண்டாடுவோம் – எந்த 
       நாளிலும் சந்தோஷப் பண்பாடுவோம்!!

    -06.11.2018.

    Share
  • இனிய வாழ்த்துகள்!


    அன்புடன்
    ஜெயராமசர்மா தம்பதியர்

    Share
  • தீபாவளி நினைவுகள்

    -விப்ரநாராயணன் 

    தீப  வொளியை  வணங்கிடுவோம்
       தீயவை  அகல  வேண்டிடுவோம்
    பாபம் தொலையப்  பாரதத்தில்
       பலரும்   சேர்ந்து   உழைத்திடுவோம்

    அன்பும்  கருணையும்  சுரந்திடவே
       ஆதவன் அருளை நாடிடுவோம்
    தன்னுள்   பகைமை  ஒழிந்திடவே
       தன்னிலை  யறிய  முனைந்திடுவோம்

    புதிய ஆடைகள்  அணிந்திடுவோம்
        புதியக்  கவிதையாய்  வாழ்ந்திடுவோம்
    விதியை நினைந்து  வருந்தாது
        வீரனாய்  வாழ நினைத்திடுவோம்

    வெடிகள்  கொளுத்தி  மகிழ்ந்திடுவோம்
       வேதனைகள்  வராது  தடுத்திடுவோம்
    படிகள்  தாண்டி  உயர்ந்திடவே
       பணிவாய் வாழக்  கற்றிடுவோம்

    வாழ்வின்  பொருளை  அறிந்திடுவோம்
       வாய்மை கூறத்  துணிந்திடுவோம்
    ஏழ்மை நீங்க  உறுதியுடன்
       எதையும் எதிர்க்க  இணைந்திடுவோம்

    அறத்தின்  வழியில் நடந்திடுவோம்
       ஆணவ மின்றி  உதவிடுவோம்
    புறத்தே தூய்மை  நிலைத்திடவே
       பசுமைப்  புரட்சி  செய்திடுவோம்

    நாட்டில்  ஊழலை  ஒழித்திடுவோம்
       நேர்மையாய் வாழக் கற்பிப்போம்
    வீட்டைச் சரியாய் அமைத்திடவே
        விளக்கமாய் உணர்ந்து செயல்படுவோம்

    ஆடிப்  பாடக்  கூடிடுவோம்
       அனைவரும் இறைவனைத் தொழுதிடுவோம்
    நாடும்  வீடும் நலம்பெறவே
       நாதன் திருவடி பணிந்திடுவோம்

    Share
  • ஜீவன் முக்த ஜகத்குரு

    மீ.விசுவநாதன்

    உனக்கும் எனக்கும் தெரியுமா? – அந்த
       உயர்ந்த துறவிப் பெருமைகள் ?
    கனக்கும் மனத்து கவலையை – அவர்
       கரைத்து விடுவார் புரியுமா?
    சினத்தை அடக்கி சிவனையே – தவம்
       செய்யும் சிறந்த தவசியாம் !
    தினத்தை அறிந்து உலகினை – நல்ல
       திசைக்குத் திருப்பி விடுவராம்.

    கருங்கற் சிலைக்குள் கடவுளை – நாம்
       காணும் வழியை உரைப்பராம்
    சிருங்க கிரியில் இருப்பினும் – நம்
       சிறிய உளத்தும் நிறைவராம் !
    பெருங்கு ணத்த பிநவரே – எளிய
       சீடர் நமக்கே அருள்வராம்
    நெருங்கி யவரை நினைவிலே – ஒரு
       நிமிடம் இருத்தப் பழகுவோம்.

    (இன்று 06.11.2018 தீபாவளித் திருநாள்.
    ஜகத்குரு அனந்த ஸ்ரீ விபூஷித
    ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரின் ஜெயந்தி தினம்)

    Share
  • தீபாவளி – மலரும் நினைவுகள்

    க. பாலசுப்பிரமணியன்

    நினைவலைகளில் முழுகி எழுந்திருக்கும்பொழுது -1957 – மதுரையிலே எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களின் துவக்கம்.. வீடு தோறும் பாட்டாசுகள். ஒரு பத்து ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் ஒரு பெரிய சாக்குப் பை நிறைய பட்டாசுகள்… வகை வகையாய் … ஓலை வெடியை வைத்துக்கொண்டு நித்தம்… காலையும் மாலையும் – கைகளிலெல்லாம் வெள்ளை வெளேரென்று பட்டாசு மருந்துகள்…

    “போய் கையை நல்லா சோப்பு போட்டு அலம்பிக்கொண்டு அப்புறம் சாப்பிட வா…” அன்னையின் ஆணை.

    நான்கு நாள் முன்னதாகவே பட்சணங்கள் தயாரிக்கும் பெரியவர்கள்… கைமுறுக்கு சுற்ற நாலு பேர்…

    “அம்மா.. அம்மா.. நானும் சுத்திப் பார்க்கட்டுமா”

    “வேண்டாம்.. தள்ளிப்போடா .. எண்ணை கொதித்துக்கொண்டிருக்கின்றது.. தண்ணி பட்டு வெடித்து விடப்போகின்றது…”  அப்போதுதான் டபால் என்று ஒரு சத்தம்.. சில நீர்த் துளிகள் எண்ணையில் தெளித்து ..

    “அய்யயோ ,, கையில் கொதிக்கிற எண்ணை தெளித்து விட்டது….. போய் அந்த இட்லிமாவை எடுத்து அங்கே போடு.. “

    ‘டேய்.. இந்தாடா. ” ஒரு பாதி வெந்த கைமுறுக்கை கையில் கொடுத்த அத்தை ” இது நல்ல மெதுவாக இருக்கும்.. ” அந்தச் சுவை இன்னும் நாவினில்..

    காலங்கள் ஓடுகின்றன… சில ஆண்டுகள் நகர.. பத்தாவது வகுப்பு..

    “அம்மா.. காலையில் சீக்கிரம் எழுந்து நாலு மணிக்கே பட்டாசு விடணும்…”

    மூன்று மணிக்கே தூக்கம் களைந்து விட , குளிக்கும் அறையில் ஒரு பெரிய பித்தளைப் பானையில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது..

    “கொஞ்சம் அந்த விறகடுப்பை ஊதிவிடேன்.. ” இது பாட்டி.  தன்னுடைய அரைகுரைப் பார்வையை வைத்துக்கொண்டு ..

    அந்தப் பித்தளை ஊதுகுழலை வைத்து ஈரமான விறகில் மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் அக்கினி பகவானோடு .  பேசிக்கொண்டு. சில நேரங்களில் கண்ணனைப் போல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு…

    “வரிசையாய் உட்காருங்கோ எல்லாரும்..:” நான், என் தம்பி, அத்தை குழந்தைகள் இருவர்.. “எனக்கு முதலில்.. எனக்கு முதலில்”.  இன்றும் நினைவில் சண்டைகள்… அழுகை..  “டேய், தீபாவளியும் அதுவுமா காலையிலே அழாதீங்கடா…”

    உறவுகள் வலுவாக இருந்த காலம்.. தேவைகள் குறைவாக இருந்த காலம்.. மகிழ்ச்சி நிரம்பியிருந்த காலம்…

    ” என்னுடைய கம்பி மத்தாப்பு சரியா எரியலை.. உன்னோடுதைக் கொடேன் ” என்று ஒருவன் கெஞ்ச ” அதெல்லாம் தர முடியாது ” என்று சொன்னவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அவன் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த முறத்திலிருந்து ஒன்றைத் திருட…

    வாழ்க்கை இனித்தது .. இனிப்புக்களை விட அதிகமாய்..

    இன்னிக்கு என்ன படம் ரிலீஸ்?  முதல் நாள் முதல் காட்சி போவதற்கான முயற்சிகள்…

    சிவாஜியும் பண்டரிபாயும் சேர்ந்து நடித்த அவள் யார் என்ற படம். நண்பகல் காட்சிக்காக காலை எட்டு மணிக்கே வரிசையில் நின்று..

    “டேய்.. அங்கே பாருடா… ஏறிக்குதிக்கிறான்.. ” என்று வரிசைக்காகச் சண்டைபோட்டு, தீபாவளிக்கான புதிய சட்டையைக் கிழித்துக்கொண்டு…

    நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை முழுமையாய்.. எத்தனை பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது.!!

    அடுத்த வருடம்…

    ” பாட்டி என்ன களிமண்ணா அங்கே…”

    “வெந்நீர் போடற மண்ணடுப்பு உடைந்திருக்கு .. ஒரு புது அடுப்பு பண்ணலாமென்று”

    “நான் பண்ணட்டுமா…” அந்தக் களிமண்ணோடு போராடி ஒரு அடுப்பை வடிவமைத்து.. ஒரு தொழில்நுட்ப பொறியியல் பட்டமே பெற்றிருக்கலாம்.

    காலங்கள் ஓடின..

    கல்லூரிக் காலம்… பட்டாசு மோகம் குறைந்து.. என்ன டிரஸ்?.. பெல் பாட்டம் பாண்ட் .. முழுக்கைச் சட்டை…

    “டிரஸ் சூப்பராக இருக்கே…” இது ஒரு சொந்தக்காரரின் நக்கலான வார்த்தைகள்…

    ஒரு முறை திருவல்லிக்கேணியில் குடியிருப்பு. நான்கு குடித்தனங்கள்… “ஹலோ , நண்பரே .. இந்த வருஷம் உங்க வீட்டிலே என்ன ஸ்வீட்?”

    “எனக்குத் தெரியாது.”

    “ஒரு ஐடியா பண்ணினால்  என்ன… மொத்தமா நாலுபேர் வீட்டுக்கும் சேர்த்து கோதுமை அல்வா பண்ணினால் .. “

    யோசனை வலுத்தது.  நாலு ஆண்கள் சேர்ந்து… ஒருவர் கோதுமையை ஊற வைத்து  ஆட்டுக்கல்லில் அரைத்து பாலெடுக்க, இருவர் அடுப்படியில்,,,

    “ரொம்ப நன்றாக வந்திண்டிருக்கே  ..” பக்கத்துக்கு வீட்டு மாமியின் கண் பட…

    கடைசி நேரத்தில் அல்வா கொஞ்சம் இறுகி விட…. அது “சாக்லேட் அவதாரத்தில் வெளியே வர…

    தீபாவளி இனித்தது.. அந்த சாக்லேட்டைப் போல…

    இன்று…

    “என்னங்க…” இது என் மனைவி… ” நாளைக்கு தீபாவளி… சீக்கிரம் கடைக்குப்போய் ஏதாவது ஸ்வீட்டும் மிக்ச்சரும் வாங்கிண்டு வாருங்க..

    காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.. பல நேரங்களில் மலரும் நினைவுகளில் நாம் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். !

    தீபாவளி வாழ்த்துக்கள் !

    Share
  • வல்லமையின் வாழ்த்துகள்!

    இருள் நீக்கி ஒளியூட்டி மருள் நீக்கி மங்கலம் நிறைக்கும்
    அருள் நிறை இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181105 – Vayu Vahana -watercolour – A4 Canson 200gsm 100dpi lr

    கோபத்தில் ராமன் கணையெடுத்து கர்ஜிக்க
    ஆபத்(து) உணர்ந்த அலையரசன் – சாபத்துக்(கு)
    அஞ்சி சகியோடு அண்ணல் சரணாகதி:
    அஞ்சனைசேய் வாசிவேகன் அங்கு….!

     

    அண்ணல் அலையரசனை அடக்கும் சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
    ————————————————————————————

    கோபத்தில் ராமன் கணையெடுத்து கர்ஜிக்க
    ஆபத்(து) உணர்ந்த அலையரசன் -சாபத்துக்(கு)
    அஞ்சி சகியோடு அண்ணல் சரணாகதி
    கெஞ்சிடும் கோலம் கவிதை….கிரேசி மோகன்….!

    Share
  • திருப்பம் பல தந்திடட்டும்!

    [மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா]

    தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ண வேண்டும்
    கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
    பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
    பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

    உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
    கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
    நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
    நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

    ஆணவத்தைப் போக்குவென ஆண்டவனை வேண்டிநிற்போம்
    அறஞ்செய்யும் எண்ணமதை அகம்நிறைய  வேண்டிடுவோம்
    அன்னைதந்தை மனம்வருந்தா அனைவருமே நடந்திடுவோம்
    அனைவருக்கும் தீபாவளி அமைந்திடுமே அற்புதமாய்

    ஆதரவு  அற்றோரை  அரவணைத்து  உதவிடுவோம்
    அனாதையெனும் கருத்ததனை அழித்துவிட எண்ணிடுவோம்
    போதையுடன் உலவுவதை பொறுக்காமல் பொங்கிடுவோம்
    நல்பாதையிலே செல்வதற்கு நம்மனதைத் திருப்பிடுவோம்

    புத்தாடை  உடுத்திடுவோம்  புதுவெடிகள்  வெடித்திடுவோம்
    எத்திக்கு  இருந்தாலும்  எல்லோரும்  மகிழ்ந்திடுவோம்
    தித்திக்கும்  தீபாவளி  திருப்பம்பல  தந்திடட்டும்
    அர்த்தமுள்ள  நல்லவற்றை ஆற்றிநின்று  அகமகிழ்வோம

    Share
  • செந்நிறக் கங்குகள்

    கவிஞர் இரமேஷ் அர்ஜூன்

    வார்த்தைகளில்
    உறைந்து கிடக்கும்
    உண்மைகள்
    சிலபோது
    உருகும் பனிக்கட்டியாக

    உருகிய  உண்மைகள்
    உள்வெளியில்
    வெந்நீரின் ஆவியில்
    புயலெனப் பொக்கிப்
    பிரவகிக்கும்

    ஆவியில் அழிந்து போகாது
    அடையாளம் கொள்கிறது
    ஆழ்மன அதிர்வுகள்

    செந்நிறக் கங்குகளாக
    உண்மை சுட்டுச் செல்கிறது
    எனக்கான
    பொய்களைக் கடந்து…

    Share
  • இந்த வார வல்லமையாளர் (286)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக இன்றைய இந்தியாவின் சிற்பி, ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை உலகத்தரத்தில் வடித்த  ராம் சுதார் என்னும் சிற்பியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.  பாரதத்தை வடிவமைத்தவர்களில் தலைவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் முக்கியமானவர். பாரதி, தாகூர், கலாயோகி ஆனந்த குமாரசாமி போன்றோர் கண்ட கனவு சிதறுண்டு போகாமல் பல தனி அரசர்களை ஒருங்கிணைத்தவர். கடைசியாக, ஐதராபாத் (இன்றைய தெலுங்கானம்) இந்திய ஒன்றியத்தில் தனி மாகாணம் ஆகியுள்ளது. அவை போன்றவை தனிநாடு ஆகாமல் இருப்பதன் காரணவர் ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ பட்டேல் தான்.

    ஒற்றுமைக்கு இந்தியாவில் பெரிய சிலை அமைந்துவிட்டது. மும்பையில் இதைவிடப் பெரிதாய் சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்குச் சிலை அமைய உள்ளதாம். இன்று ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பெருகிவருகிறது. கபிலபரணர் வந்தனர் என்றால் கபிலரும் பரணரும் வந்தனர் என்னும் உம்மைத்தொகை என்று இலக்கணம் கூறுவர். அதுபோல் ஸ்மார்ட்போனைத் தமிழில் “வலைபேசி” எனலாம். அதாவது, “வலையும் ஃபோனும்” ஒன்றாய் அமைந்த கருவி. 700 மில்லியன் வலைபேசிகளால் இந்தியாவில் இணைய அணுக்கம், ஒளிப்படமி (காமிரா), முகநூல், வாட்ஸப் அழைப்புகள், … எனப் பெருகிவரும் மிகப் பெரிய தகவல் யுகப்புரட்சிக் காலம் இது. எல்லா இந்திய மொழிகளையும் ரோமானிய எழுத்திலும் எழுதும் வழக்கம் மிகவேண்டும். இந்திய மொழிகளுக்கு இடையே பல அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன. அப்பிணைப்பு உணரவைக்க ரோமன் லிபி ஒற்றுமைக்கு எழுத்து எனலாம். ஒவ்வொரு மாநில எழுத்தும் அவ்வப் பிராந்திய அளவில் இயங்குகின்றன. ஆனால், ஒற்றுமைக்கான ஓரெழுத்து வடிவமாக ஆங்கில எழுத்தும் கூடவே இருப்பது எதிர்காலத்தில் பாரத மக்களிடையே ஒற்றுமை வளர நல்ல வழி அளிக்கும். India as a linguistic area (M. B. Emeneau’s theory).
    “முப்பது கோடி முகமுடையாள், உயிர்
    மொய்ம்புற ஒன்று உடையாள்
    செப்பு மொழி பதினெட்டு உடையாள், எனில்
    சிந்தனை ஒன்றுடையாள்” என்றார் சுப்பிரமணிய பாரதியார்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் நாட்டின் ஒற்றுமை பற்றிய சொற்பொழிவு. மொழிபெயர்க்கத் தக்கது. படித்தருளுக:
     

    சர்தார் படேல் வாழ்க!
    ====================
    திருச்சி புலவர் இராமமூர்த்தி 
    ============================
     

    ஒற்றுமை ஓங்கிடவே- தம்
    உழைப்பினை ஈந்திட்ட உயர்மனிதர்!
    கற்றவர் போற்றிடவே- இங்கு
    கலைந்து பிரிந்தமா நிலங்களையே,
    உற்ற வலிமையுடன் – ஓன்று
    படுத்திபா ரதத்தினுக் குருக்கொடுத்தார்!
    நற்றவ வல்லபபாய் – படேல்
    நாட்டினைக் காத்து நலமளித்தார்!

    நாடியாடு நகரினிலே – மிக
    நல்லதாய் தந்தையின் மைந்தரென,
    நீடிய திறமையுடன் – கல்வி
    நேத்திரம் திறந்துல கினைக்கண்டார்!
    வாடிய வறுமையிலே – நம்
    வளமிகு பாரதம் அந்நியரின்
    கோடிய கோலாட்சி – தனில்
    குலைந்தால் எதிர்த்தறப் போர்புரிந்தார்!

    ஒத்துழை யாமையெனும் – மிக
    ஓங்கிய போர்தனில் வெற்றிகண்டார்!
    புத்தொளி பர்தோலி – தனில்
    போரிட்டவர்கள் ”சர்தார்” ஆனார்!
    வித்தகர் அம்பேத்கார் – தமை
    வெற்றிசேர் குழுவின் தலைவரென
    அத்தினம் பரிந்துரைத்தே – நம
    தரசிய லமைப்பினை நிருணயித்தார்!

    அரசர்கள், நிலத்தலைவர் – பெரும்
    அதிகாரிகளை ஒன்றிணைத்தே,
    ஒருமைப் படுதேசம் – இங்
    குருவாக்கிடஉள் துறை அமைச்சர்
    பெரும்பணி புரிந்திட்டார் – துணைப்
    பிரதமர் பதவியைப் பெற்றவராய்
    இரும்பு மனிதரென – நம
    திந்திய நாட்டினை ஆண்டிட்டார்!

    பாரத ரத்தினமாம் – உயர்
    பட்டப் பதக்கம் அவர்க்களித்தே
    சீருயர்ந் தோங்கியதாம் – நம்
    தேசம் வணங்கியே போற்றியதாம்!
    நேருயர் வேதுமின்றி – உலகின்
    நெடியதோர் சிலைதனை இன்றமைத்தே
    பாரினில் அவர்புகழை – மிகப்
    பட்டொளி வீசிடப் பரப்புகின்றோம்!

    சர்தார் படேல் வாழ்க! – அவர்
    சாதனைக் கருத்துக்கள் உயர்ந்தோங்க,
    நிர்வா கத்திறமை – மிகும்
    நெறியா ளர்பலர் தோன்றிடுக!
    பர்தோ லித்தலைவர் – படேல்
    வழியில்வே ளாண்மக்கள் வாழ்ந்திடுக!
    சர்வமும் ஒற்றுமையால் – செயும்
    சாத்தியம் சத்திய மாகிடுக!

    தலைமைச் சிற்பி ராம் சுதார் அவர்களின் சிறந்த படைப்புகளில் சிலவற்றைக் கண்ணால் கண்டு மகிழ்வோம். சொடுக்கினால் படம் பெரிதாகும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

     

    சர்தார் மறைந்தபோது நாமக்கல் கவிஞர் சொன்ன சரமகவிகள்:

    வல்லபாய் பட்டேல்

    இல்லாத காந்திமகான் இருந்தாற் போல
    எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக்
    கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு
    குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக்
    கல்லான மனமுடையோர் எதிர்த்த போதும்
    கலங்காத் தெளிவுடைய கர்ம வீரன்
    வல்லாளன் வல்லபாய் பட்டேல் மாண்ட
    வருத்தமதை விரித்துரைக்க வார்த்தையுண்டோ? 1

    காந்தியென்ற தவநெருப்பில் காய்ச்சிக் காய்ச்சிக்
    கசடொழிய மாற்றுயர்ந்த கனக மாகும்.
    சாந்தியென்ற குளிர்மதியின் தன்மை யோடும்
    சத்தியத்தின் வாளேந்தும் சர்தா ராகும்
    மாந்தருக்குள் தீயவரை அடக்கி யாளும்
    மந்திரியின் தந்திரத்தின் மார்க்க மெல்லாம்
    வாய்ந்திருந்த வல்லபாய் பட்டேல் மாண்ட
    வருத்தமதைப் பொறுத்திருக்க வலிமை வேண்டும்.       2

    அன்புமுறை தவறாத அமைச்ச னாகும்;
    அரசுகுறையாத ஆற்ற லுள்ளோன்;
    துன்பநிலை பலகோடி சூழ்ந்திட் டாலும்
    துளங்காமல் துணிவுரைக்கும் துணைவனாகும்
    இன்பசுகம் தனக்கெதுவும் வேண்டா னாகி
    இந்தியத்தாய்த் திருப்பணிக்கே எல்லா மீந்தான்;
    நம்பகத்தின் வடிவெடுத்த வல்ல பாயை
    நாமிழந்த பெருந்துயரில் நாதன் காக்கும்.       3

    காந்தியண்ணல் மறைந்திடித்த கலக்கம் தீர்ந்து
    கண்திறந்து புண்மறையக் காணு முன்னால்
    சாந்தனவன் நமக்களித்த காவ லாளன்
    சர்தார்நம் வல்லபாய் பட்டேல் சாக
    நேர்ந்துவிட்ட இத்துயரால் நமது நெஞ்சம்
    நெக்குவிடத் தக்கதுதான் என்றிட் டாலும்
    சோர்ந்துவிடக் கூடாது பட்டேல் போலச்
    சுதந்தரத்தைக் காந்திவழி தொடர்ந்து காப்போம்.       4

    பிறந்தவர்கள் எல்லோரும் இறந்தே போவார்
    பின்னிருக்கும் தலைமுறையர் பெருமை கொள்ளும்
    அறந்தெரிந்து வாழ்ந்தவரே அறிஞராவர்
    அன்னவர்க்கே மக்களெல்லாம் அருமை செய்வார்
    திறந்தெரிந்து காந்திமகான் ஜோதி யான
    திருவிளக்கு மங்காமல் தினமுங் காத்து
    மறைந்துவிட்ட வல்லபாய் நமக்குத் தந்த
    மணிவிளக்கை நாம்காத்து வாழ வேண்டும்.       5

                                                                                                    –  நாமக்கல் கவிஞர்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – 186

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

    Share
  • POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM

    சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);.

    தமிழ் வளர்த்த மதுரை ,மீனாட்சி அம்மனை வணங்கி தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து ,ஆசான்கள் ஆசியுடன் படித்து தமிழ்ச்சங்க முத்தாக மாறி இளங்கலைப்பட்டம்(B.A.,)வும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும்(M.A.,)வும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மெய்ப்பொருளியல் நிறைஞர் பட்டமும் (M.phil.,) வும்,சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (B.Ed.,) பட்டமும் பெற்று இன்று பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர்(Ph.D.,) பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கின்றேன் .நான் *இயல்,*இசை ,*நாடகம்,*நடனம்,*கோலத்துறையிலும் படிப்படியாக என் வெற்றியைப் பதித்து அன்றைய, இன்றைய நாளிதழ் களின் பதிவுகளிலும் என்னை ஊக்குவித்த பெரியோர்களால் இன்று வரை என்னை சாதனைக் களமாக மாற்றிய பெருமை ஆசான்களையே சாரும்.இன்று அடையாற்றில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றி வருகின்றேன்.

    நம் பாரம்பரிய பொக்கிஷமான கோலத்தை,தொடர்ந்து 5 நாட்கள் 66 மணிநேரம் வண்ணக்கோலம், புள்ளி, சிக்குக் கோலம், மாக்கோலங்கள், இழைக்கோலம், உப்பு, அரிசி, தானியங்கள், பூக்கள், வெற்றிலை-பாக்கு, ஆகிய 10 வகையான கோலத்தையும், இருபதாயிரம் சதுரஅடி நிலப்பரப்பில், 55 வகை பொருட்களால் கோலத்தில் கின்னஸ் சாதனை படைக்க, என் பதிவை பதிவு செய்ய, மற்றும் இக்கின்னஸ் சாதனையை திறம் பட செயலாற்ற இப்பாரம்பரிய இக்கோலம் (POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM 66 HOURS..37000 DOTS(Approx.) 5 Days Individual (Place:ACS MEDICAL COLLEGE AND HOSPITAL, ACS CONVENTION CENTRE . POONAMALLEE)

    Date:22.11.2018 – 26.11.2018) இரண்டாயிரம் வருடமாக வரலாற்றுப் பதிவுகளில் இல்லாத மரபு சார்ந்த நிகழ்வான அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இதுவே முதல்முறை சாதனையாக நடைபெறும் .தங்கள் மேலான ஆசிகளுடன்,தங்களால் இயன்ற உதவி களை அளித்து இந் நிகழ்வினை சிறப்பாக நடத்திக் கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    இப்படிக்கு
    என்றும்
    உண்மையுள்ள. ஶ்ரீவித்யா
    (ஆசிரியை)

    Namaskaram.I am srividhya.I wish to make an attempt In the books of Guinness world Record under category of Indian Traditional Largest kolam(Individual). The details are attached here with.Seeking your blessings and support for the Grand success.
    Thanking you.
    Regards,
    S.Srividhya.

    My details follows:-
    REMIT. USD.………….
    To:STANDARD CHARTERED BANk
    MADISON AVENUE
    NEW YORK 10010–3603,USA
    SWIFT:SCBLUS33
    FOR CREDIT To: A/C NO:
    3582053746001.
    CORPORATION BANK
    SWIFT:CORPINBB122
    FURTHER CREDIT TO Indira Nagar
    Branch, Chennai(124)
    Bene Account No.:520101249778196
    Beneficiary Name:S.SRIVIDHYA.

    சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);.
    திருவான்மியூர்,
    சென்னை 600 041.
    கைப்பேசி-8939052902.
    மின்னஞ்சல்:srividhyanov3@gmail.com

    Share