வெடியற்ற விடியல்
-விவேக்பாரதி
வெடியற்ற விடியலைக் காணவேண்டும் – மண்ணின்
வேதனை கூடாதிருக்க வேண்டும் – கோர
இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! – அன்று
இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! – நொந்து
மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற – அசுரன்
மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி – அன்று
விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் – நம்மை
விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்!
குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? – நிலம்
கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? – இதனைத்
தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் – நம்மைத்
தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! – தேவை
முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் – விட்டு
முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் – பல
குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் – கட்டி
கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்!
விடுமுறை நாளிலும் வெடிமாசினால் – புவி
விக்கிட வைப்பதோர் விளையாடலோ? – வளம்
தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் – இங்கு
செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? – வையம்
அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர – அதனை
ஆனந்தம் ஆனந்தம் எனச்சொல்வமோ? – இதை
விடுத்துயர் வெய்தினோம் என்னும்புகழ் – நம்
வரலாற்றில் பெயர்மாற்றும்! அதையெண்ணுவோம்!
இனிப்புக்குத் தானிந்த தீபாவளி – மக்கள்
இதயங்கள் மகிழவே தீபாவளி – பச்சை
வனப்புக்குத் தானிந்த தீபாவளி – மாசின்
வாட்டங்கள் நீங்கவே தீபாவளி – நமது
மனப்புட்கள் பறக்கின்ற படிவாழ்த்துவோம் – புகையின்
மாசின்றி இந்நாளை நாமேத்துவோம்! – சத்த
நினைப்புக்குத் திரைபோட்டுக் கொண்டாடுவோம் – எந்த
நாளிலும் சந்தோஷப் பண்பாடுவோம்!!
-06.11.2018.