-விவேக்பாரதி

வெடியற்ற விடியலைக் காணவேண்டும் – மண்ணின் 
   வேதனை கூடாதிருக்க வேண்டும் – கோர
இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! – அன்று 
   இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! – நொந்து
மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற – அசுரன் 
   மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி – அன்று 
விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் – நம்மை 
   விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்! 

குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? – நிலம் 
   கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? – இதனைத் 
தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் – நம்மைத்
   தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! – தேவை 
முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் – விட்டு 
   முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் – பல 
குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் – கட்டி 
   கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்! 

விடுமுறை நாளிலும் வெடிமாசினால் – புவி 
   விக்கிட வைப்பதோர் விளையாடலோ? – வளம் 
தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் – இங்கு 
   செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? – வையம் 
அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர – அதனை 
   ஆனந்தம் ஆனந்தம் எனச்சொல்வமோ? – இதை 
விடுத்துயர் வெய்தினோம் என்னும்புகழ் – நம் 
   வரலாற்றில் பெயர்மாற்றும்! அதையெண்ணுவோம்! 

இனிப்புக்குத் தானிந்த தீபாவளி – மக்கள் 
   இதயங்கள் மகிழவே தீபாவளி – பச்சை 
வனப்புக்குத் தானிந்த தீபாவளி – மாசின் 
   வாட்டங்கள் நீங்கவே தீபாவளி – நமது 
மனப்புட்கள் பறக்கின்ற படிவாழ்த்துவோம் – புகையின் 
   மாசின்றி இந்நாளை நாமேத்துவோம்! – சத்த 
நினைப்புக்குத் திரைபோட்டுக் கொண்டாடுவோம் – எந்த 
   நாளிலும் சந்தோஷப் பண்பாடுவோம்!!

-06.11.2018.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.