Blog

  • பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாரதி வந்தார் பற்பல பாடினார்
    பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
    காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
    கன்னித் தமிழின் காவலன் ஆனார்

    பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
    ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
    நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
    நாடே அவரின் உயிராய் இருந்தது

    பாரதி காலம் கவிமணி இருந்தார்
    நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
    எட்டய புரத்து பாரதி மூச்சை
    சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

    நாமக் கல்லார் நற்கவி ஆவார்
    கவிமணி தமிழின் கற்கண் டாவார்
    பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
    அதுவே அவரின் ஆசியே ஆகும்

    சுப்பு ரத்தினம் எழுந்தார் தாசனாய்
    சுப்பிர மணிய பாரதி வாழ்த்தினார்
    வாழ்த்திய வாழ்த்து வளர்ந்தே வந்தது
    மாநிலம் பாரதி தாசனைப் பெற்றது

    அன்னிய ஆட்சியில் பாரதி வாழ்ந்தார்
    அடிமை என்பது அனலாய் கொதித்தது
    அனலை அகற்றப் பாரதி பாடினார்
    அடிமைக் கெதிராய் படைப்புகள் ஈந்தார்

    பாரதி தாசனின் காலமோ வேறு
    அடிமை அகன்று சுதந்திரம் மலர்ந்தது
    தமிழே ஆட்சி தமிழே தலைமை
    அதனால் தமிழை அமுதம் என்றார்

    பாரதி தமிழை தேனாய் ஆக்கினார்
    அவரின் தாசனோ உயிராய் ஆக்கினார்
    பரதி வழியில் பயணந் தொடரினும்
    அவரின் சிந்தனை புதிதாய் மிளிர்ந்தது

    கல்வியை இருவரும் கண்ணே என்றனர்
    பெண்ணின் கல்வியை பெரிதாய் எண்ணினர்
    குருவின் கருவை மனத்தில் கொளினும்
    அவரின் சிந்தனை அகன்றே நின்றது

    பாரதி உள்ளம் புதுமைகள் இருந்தும்
    பக்தியை பாரதி பக்குவம் என்றார்
    பாரதி தாசனோ பக்தியைப் பாரா
    புரட்சிக் கவியாய் ஊர்வலம் வந்தார்

    பாரதி பாடல்கள் திரைக்கு வந்தன
    பாரதி தாசனே திரைக்குள் நுழைந்தார்
    நாடகம் எழுதினார் நடிக்கவும் செய்தார்
    நாட்டுப் பாடலை நயமுடன் அணைத்தார்

    புரட்சிக் கவிஞராய் இருவரும் எழுந்தார்
    புதுமைகள் புகுத்தி கவிஞராய் ஒளிர்ந்தார்
    பாரதி வாழ்த்திய கவிஞராய் அமைந்தார்
    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்

    Share
  • இறகைச் சுமக்கும் காற்று

    திரிவேணி சுப்ரமணியம்
    கோயம்புத்தூர்

    பறவையின் எல்லை –
    கூண்டு கிடையாது
    பரந்த வானம்.
    சிறு இறகைச் சுமக்கும்
    காற்றென சுமந்து
    செல்கிறோம் வாழ்வை.
    நீரில் விழும் கல்
    பிம்பத்தை சலனப்படுத்துகிறது.
    நம் பிம்பங்களின் மீதும்
    கொட்டப்படுகிறது விமர்சனக்கல்.
    மனவலியின் சாயல்
    படிந்து படிந்து இறகின்
    சுமைதாங்காமல்
    தள்ளாடுகிறது காற்று.

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் மகாகவிகளின் பாடுபொருட்கள்

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
    நல்லமுத்துக் கவுண்டா் மகாலிங்கம் கல்லூரி,
    பொள்ளாச்சி

    இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் சுப்பிரமணிய பாரதியார், இரவீந்திரநாத தாகூர் என்ற இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள். தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்து ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்ற கொள்கையோடு கவிஞனாக வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் நாமகளின் திருவருளால் சொல்வளத்தில் சிறந்தாரே தவிர திருமகளின் திருவருள் கிடைக்காததால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடி தவித்தார்.  வங்காளத்தின் ஜெஸ்சூரில் பிறந்து நோபல் பரிசு பெற்றவர் இரவீந்திரநாத தாகூர். திருமகளின் செல்வத்துடன் நாமகளின் சொல்வளமும் ஒருங்கே பெற்றவர். தாகூரின் குடும்பம் சர்வதேச அளவில் கலையுலகத் தொடர்புடையது. தாகூர் பலமுறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

    பாரதி, தாகூரின் படைப்புகளில் தேசப்பற்று, பிரபஞ்ச சக்தி, தெய்வம் எங்கே?, இறைவேண்டல், ஒளி குறித்த வருணனை, பெண் முன்னேற்றம் யந்திரங்களின் வளர்ச்சி, மற்றும் காலனை மதித்தலும், மிதித்தலும் போன்ற சிந்தனைக் களங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தேசப்பற்று:

    சுப்பிரமணிய பாரதியார் மானிடத்தேவைகள் அனைத்திலும் மிக முக்கியமான சுதந்திரத்திற்காக அதிகமாகப் போராடுகிறார். இதற்காக போற்றுவதற்குரிய சுதந்திரதேவியின் பாதத்தில் எத்தகைய தியாகத்தைப் புரியவும் தயாராக இருக்கிறார். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை’ என வருத்தமுற்றப் பாட்டிலும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தாகத்தை உருவேற்ற முயலுகிறார்.

    ‘தேவி! நின்னொளி பெறாத
    தேயமோர் தேய மாமோ?
    ஆவியங் குண்டோ? செம்மை
    அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
    காவிய நூல்கள் ஞானக்
    கலைகள் வேதங்க ளுண்டோ?
    பாவிய ரன்றோ நிந்தன்
    பாலனம் படைத்தி லாதார்? ‘

    ‘சுதந்திர தேவியின் துதி’ என்ற பாடலில் தேசம், உயிர், அறிவு, ஆக்கம், காவியநூல்கள், கலைகள் என அனைத்தும் வேண்டுமென்றால் சுதந்திரம் வேண்டும் என்று தேசபக்தியை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைக்க முற்படுகிறார். ‘அச்சமில்லை! அச்சமில்லை!’ என்று அச்சத்தை நீக்கும் தாரக மந்திரத்தை முழங்குகிறார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே! இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு’ என நம்பிக்கையை மனதில் துளிர்விடச் செய்கிறார்.

    அச்சமின்றி தலைநிமிர்ந்து நிற்கும் இதயம், அறிவு வளர்ச்சிக்கான பூரணவிடுதலை, குடும்பத்தின் குறுகிய தடைகளால் குலையாத உலகின் ஒருமைப்பாடு, மெய்ந்நெறிகளின் அடிப்படையில் உருவாகும் வாய்ச்சொற்கள், விடாமுயற்சியுடன் பூரணத்துவத்தை நோக்கி செல்லுதல், தெளிந்த அறிவோட்டம், பாழடைந்த பழக்கத்தால் வறண்ட பாலையை நோக்காத, வழிதவறாத பயணம் என்பதுடன்

    ‘நோக்கம் விரியவும்
    ஆக்கவினை புரியவும்
    இதயத்தை எங்கே
    வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
    விடுதலைச் சுவர்க்க பூமியில்
    எந்தன் பிதாவே!
    விழித்தெழுக
    என் தேசம்’

    என்று தன் தேசம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை இரவீந்திரநாத தாகூர். கீதாஞ்சலியில் பதிவுசெய்துள்ளார். விடுதலையான பூமி சுவர்க்க பூமியாக அதாவது மகிழ்ச்சியின் குறியீடாக அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு இதயமும் ஆக்கப்பூர்வமாக, தனித்துவமாக, அச்சமின்றி ஒருமைப்பாட்டுடன் செயல்படவேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்துகிறார்.

    பிரபஞ்ச சக்தி:

    பாரதியார் பிரபஞ்சத்தைச் சக்தியின் வடிவமாக நோக்கியவர். துன்பமில்லா நிலை, தூக்கமில்லாத கண்விழிப்பு, அன்பு கனிந்த கனிவு, இன்பமுதிர்வு, முக்திநிலையின் முடிவு, சொல்லில் விளங்கும் சுடர், தெய்வத்தை எண்ணும் நினைவு, பாட்டினில் வந்த களிப்பு, வாழ்வைப் பெருக்கும் மதி, மாநிலம் காக்கும் மதி, ஊழ்வினை நீக்கும் உயர்வு, உள்ளத்தில் ஒளிரும் விளக்கே சக்தி என்று சக்தியின் வடிவங்களை மனக்கண்ணில் நிறுத்துகிறார். இச்சக்தியிடமே பாரதியார் காணிநிலம் வேண்டும் என்றும், மோகத்தைக் கொன்றுவிடு என்றும் தன் வேட்கைகளை முறையிடுகிறார்.

    ‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்…
    அசைவறு மதிகேட்டேன் இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?’

    என்று வினா தொடுக்கும் அளவிற்கு பாரதி பிரபஞ்ச சக்தியிடம் நெருக்கமானப் பிணைப்பைக் கொண்டிருக்கிறார். இவ்வுலகத்தை இயக்கும் சக்தியின் மேல் பாரதிக்கு இருந்த நிலைப்பாடு புலனாகின்றது.

    இயற்கையையும், ஐம்பூதங்களையும் சக்தியாக காணும் பாரதியார் ஓரிடத்தில் இவை அனைத்தும் மாயைகளோ? என்று தளர்ந்து போனதை ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாடலில் காணமுடிகிறது. சொற்பனங்களாக, தோற்ற மயக்கங்களாக, அற்பமான மாயைகளாக, கானல்நீராக, காட்சிப்பிழைகளாக, கண்முன் உள்ள காட்சிகள் மறைந்து தோன்றுவது ஏன்? என உலகை நோக்கி வினவுகிறார்.

    ‘காண்பதுவே உறுதி கண்டோம்
    காண்பதல்லால் உறுதி இல்லை
    காண்பது சக்தியாம் இந்தக்காட்சி நித்தியமாhம்’

    என்ற இறுதியடிகளின் வாயிலாக உலகின் இயக்கமாக சக்தியைக் காண்பது உறுதி என பாரதியார் கூறுவது திண்ணம்.

    இரவீந்திரநாத் தாகூர் இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக்கரையில் உள்ள படகு வீட்டில் தனிமையோடு வாழ்ந்தவர் என்பதால் இயற்கைக்கூறுகளே அவருக்கு துணையாக இருந்திருக்கின்றன. தனிமையில் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்ததன் விளைவாகவே கீதாஞ்சலி தோன்றியதாக தாகூர் குறிப்பிடுகிறார்.

    ‘சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்றமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்கு கேட்கும். எனக்கு இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல்களும், பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்களைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.’

    என்ற தாகூரின் உரை அவர் இயற்கையை உள்வாங்கிய விதத்தை வெளிப்படுத்துகிறது. தனிமையில் இருந்தபடி இயற்கையை ரசித்து. அனுபவித்து, உண்டு அவற்றில் தன் பிரம்மச் சக்தியைக் கீதங்களின் வாயிலாக நிரப்பி கீதாஞ்சலியை உலகுக்கு அளித்துள்ளார்.

    காற்றினிலே வருமென் கீதம், வானத்து விண்மீன், புல்லின் இலை, புல்லாங்குழலின் ஓசை, அகண்ட கடல், ஆனந்தப்பறவை, நித்திய ஒளி, மெல்லிசை போன்ற சொற்களின் மூலம் தாகூர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதன் வாயிலாக உலகை அறிய முற்படுகிறார். அதனால் சக்தியை நோக்கி வினாக்களைத் தொடுக்காதவராக அன்பு, கருணை, ரசனை என இன்பங்களை அமைதியாக உட்கொண்டவராக திகழ்வதைக் காணமுடிகிறது.

    தெய்வம் எங்கே? :

    பக்தியையும். மனிதாபிமானத்தையும் இணைத்து நோக்கிய பார்வையால் இரு மகாகவிகளுமே உழைப்பவர்களிடத்தில் தெய்வத்தின் திருவுருவைக் காணமுற்படுகின்றனர்.

    ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
    யந்தி ரங்கள் வகுத்திடு வீரே
    கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
    கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
    அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
    ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
    பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
    பிரம தேவன் கலையிங்கு நீரே!’

    என்று பாரதியார் பிரமதேவனின் கலையாக தொழில் செய்பவர்கள் இருப்பதாக பாடுகிறார். தாகூர் ‘இறைவன் எங்கிருக்கிறான்’ என்ற பாடலில் துதி பாடி, சுலோகம் கூறி. ருத்திராட்சம், ஜெபமாலை உருட்டி, கோயிலில் சென்று காரிருளில் இறைவனைத் தேடாதே! இறைவன் அங்கில்லை!

    ‘மெய்வருந்தி
    இறுகிப் போன வயலை
    உழவன் எங்கே
    உழுது கொண்டு இருக்கிறானோ,
    வேர்வை சிந்தி
    நடைபாதை போடுபவன்
    எங்கே கல்லுடைத்து வருகிறானோ
    அங்கே உள்ளான் இறைவன்!
    வெட்ட வெயிலிலும்
    கொட்டும் மழையிலும்
    தூசி படிந்த ஆடையுடன்,
    உழைப்பாளி
    கூடவே குடியுள்ளான் இறைவன்!’

    தியானத்தை விடுத்து, நறுமணப்புகைகளைப் புறக்கணித்து விட்டு வியர்வையைச் சிந்திடும் உழைப்பாளியிடம் இணைந்து நில்! என்று பாடுகிறார். உழைப்பவர்களின் உருவில் தெய்வத்தைக் காணும் போக்கில் இருகவிகளிடமும் வேறுபாடு உண்டு. பாரதியார் உழைப்பாளர்களைச் சிருஷ்டி கர்த்தாக்களாக காண தாகூர் உழைப்பாளர்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதைக் காணமுடிகிறது

    இறைவேண்டல்:

    இரு மகாகவிகளுமே இறைவனை நேசித்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள். தாகூர், நெஞ்சில் உதிக்கும் தாழ்வான எண்ணங்களை வேரோடு அழிப்பாயாக! இன்பதுன்பத்தைத் தாங்கும் பொறுமையை அளிப்பாயாக! நற்பலன்களைத் தரும் பணிகளைச் செய்வேனாகுக! வழியோரை என்றும் மறக்காமல், நெறியற்ற மூர்க்கரை வணங்காதிருக்கும் வைராக்கியத்தைத் தந்திடுவாயாக! தெய்வமிடும் பணிக்கு நான் பாசமோடு உழைக்கும் சக்தியைத் தருவாயாக!

    ‘தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
    மனம் அப்பால் சென்று
    எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
    மனத்தெளிவைத் தந்திடு!’

    என இறைவனிடம் வேண்டுவதில் தன் மனிதப்பண்பை மேம்படுத்த விரும்புவதை நோக்கமுடிகிறது. ஆனால் பாரதியோ,

              ‘எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லனவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்’

    என்பதில் எண்ணங்களின் தோற்றுவாய், உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம், நற்சிந்தனைக்கான நல்லறிவு போன்றவற்றை நல்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார். இங்கு இருமகாகவிகளின் எண்ணவோட்டங்கள் ஒரே அலையில் பயணிப்பதைக் கண்கூடாக அறியமுடிகிறது.

    ஒளி குறித்த வருணனை:

    ‘ஒளியே நீ யார்?
    ஞாயிறின் மகளா?
    அன்று நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்’

    ஞாயிற்றின் வடிவம் என்பது ஒரு உடல். ஓளியாகிய நீ தான் உயிர்? உன் தோற்றம் எப்போது?

    உன்னை யார் படைத்தார்? நீ அறிவின் மகளா? உறங்கிக் கிடக்கும் தெளிவா? உனக்கும், வானவெளிக்குமான பழக்கம் எத்தனை காலம்? எத்தகைய அன்பு? எவ்வாறு வானவெளியில் இரண்டறக் கலக்கிறாய். உன்னைப் படைத்த விந்தைக்கரிய மோஹினியைத் தொழுகிறோம் என பாரதியார் ஒளியைக் கண்டு வியப்படைந்து வினாக்களைத் தொடுக்கிறார். இறுதியில் சக்தியே ஒளியைப் படைத்ததாகக் குறிப்பிட்டு தலைவணங்குகிறார். ஓளியின் அழகைத் தாகூர் ஒளியின் நர்த்தனமாக உவமித்துப் பாடுகிறார்.

    ‘மின்னொளியே!
    என்னரும் ஒளியே!
    உள்ளத்துக் கினிய ஒளியே!
    விழிகள் முத்தமிடும் ஒளியே!
    உலகை மூழ்கடிக்கும் ஒளியே!
    நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்
    என் கண்மணியே!

    வானத்தின் வெடிச்சிரிப்பே மின்னல், பட்டுப்பூச்சிகள் ஒளிக்கடலில் மிதக்கும் படகுகள், ஒளியலையில் அல்லியும், மல்லியும் ஊர்திகள், முகிலில் பொன்னிறக்கதிர்கள் என ஒளியை வருணிக்கிறார். உள்ளத்தின் களிப்பு ஆகாயக் கங்கையால் வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது என ஆனந்தத் தாண்டவமிடும் ஒளியின் அழகைக் குறிப்பிடுவதில் இருமகாகவிகளின் உள்ளமும் ஒளிக்கு அடிமையாகியிருப்பதை அறியமுடிகிறது.

    பெண் முன்னேற்றம்:

    ‘பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
    பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமா?’

    என்று கேட்டதுடன் பெண்ணடிமையுற்றிருப்பதால் இந்திய மக்களும் அடிமையுற்றிருப்பதில் வியப்பில்லை. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் இருப்பது இயல்பு. அதனால் வீட்டில் பெண்களின் அடிமை நிலை மாறவேண்டும் என்று பாரதியார் ‘தாய் மாண்பு’ என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

    ‘சமூகத்தில் தாங்களே முக்கியமானவர்கள், தங்கள் ஆதிக்கமே ஓங்கியிருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணி வந்தது … பெண்கள் அறியாமையிருளிலும், குருட்டு நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் வரை நம் இஷ்டம் போல் ஆடலாம். பெண்களுக்கு இடங் கொடுத்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியாதே என்பதே அவர்கள் கருத்து”

    என தாகூர் கூறியதில் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக பெண்களை அடிமைப்படுத்தும் நிலையைச் சுட்டுகிறார். இருவருமே பெண்களை மதிக்கவேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றனர். தாகூர் தன் பெரிய தமக்கை முதல்முதலாக பல்லக்கில் ஏறி பள்ளிக்குச் சென்றபோது பெரியமனிதர்கள் தங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டதாக கருதியதைத் தாகூர் குறிப்பிடுகிறார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் என புதுமைப்பெண்ணிற்குரிய வரையறையாக பாரதியாரும் பெண்கல்வியை முன்னிறுத்துகிறார். இதன்வாயிலாக பெண்குல விடுதலையே மானிடகுல விடுதலை என்பதை இரு மகாகவிகளும் உணர்ந்து செயல்பட்டதை அறியமுடிகிறது.

    யந்திரங்களின் வளர்ச்சி:

    இன்றைய உலகின் தவிர்க்க முடியாத இயக்கச் சாதனங்களாக தொழில் வளர்ச்சியையும், எந்திரங்களையும் குறிப்பிடலாம். யந்திரத்தின் வருகையைப் பற்றி பாரதியும் தாகூரும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியார் ‘கைத்தொழில் போற்று’ என்றும் ‘கூடித்தொழில் செய்’ என்றும் புதிய ஆத்திச்சூடியில் இயற்றியுள்ளார். ‘பாரததேசம்’ என்ற பாடலிலே பல தொழில்கள் குறித்துப் பாடுகிறார்.

    ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
    ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்…
    வானையளப் போம், கடல் மீனையளப்போம்
    சந்திர மண் டலத்தியல் கண்டு தெளிவோம்’

    குடைகள், உழுபடைகள், இரும்பாணிகள், வண்டிகள், கப்பல்கள்   செய்வோம் என்று தொழிலுக்கு வந்தனை செய்கிறார். இன்று சந்திர மண்டலத்தில் விண்கலம் ஏவிவிடுதலை எதிர்நோக்கி அன்றே பாடியுள்ளார். புதிய இந்தியாவிலே கைத்தொழிலின் வளர்ச்சி, தொழில் செய்ய யந்திரங்கள் , அவற்றை இயக்கும் மனிதர்களின் அறிவு வளர்ச்சி சிறக்கவேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் எதிர்காலத்தை நோக்கி குறி சொல்லும் விதத்திலே

    ‘குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
    நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது…
    தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
    சாத்திரம் வளருது: சூத்திரம் தெரியுது:
    யந்திரம்; பெருகுது: தந்திரம் பெருகுது’

    என புதிய கோணங்கி பாடலில் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளியையும், யந்;திரங்களையும் குறித்து பேரானந்தத்தோடு பாடுவதை உணரமுடிகிறது. 1916 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய ‘புதிய உயிர்’ என்ற கட்டுரையிலே உலகம் மேன்மையுற கைத்தொழில்கள் பெருகவேண்டும், இவற்றில் சாத்தியமில்லை என்றுரைப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜப்பான் தொழிற்கல்வி’ என்ற கட்டுரையிலே நம் இந்தியப் பிள்ளைகளை ஜப்பானிற்கு அனுப்பி பலவிதமான தொழில்களும், சாஸ்திரங்களும் கற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும். மேலும் கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே என குறிப்பிட்டிருப்பதில் பாரதியின் தேசபக்தியை அறியமுடிகிறது.

    யந்திரங்களை அணுகிய விதத்தில் பாரதிக்கு நேர்முரணான கருத்தைத் தாகூர் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் அவர் நிகழ்த்திய ‘இந்தியாவில் தேசியம்’ என்ற சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்.

    ‘இன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் ஸ்தாபனங்களிலே எனக்கு நம்பிக்கையில்லை, அவை குருபமாக இருப்பதே சிருஷ்டியமைப்புக்கு முரணாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் மகத்தான சக்தியானது பயங்கரத்தில் தோற்றமளிப்பதில்லை. அழகிலேயே காட்சி தருகிறது. யந்திர நாகரிகமானது இன்பத்தைப் பலியிட்டுப் பணத்தைத் திரட்டுகிறது. தான் நிறுவும் (யந்திர) கருவிகளுக்கு அதிகபட்ச இடமளிப்பதற்காக மனிதன் தனது மனிதப்பண்பைக் குறைந்தபட்ச அளவு ஒடுக்கிக் கொள்கிறான். மனித உணர்ச்சிகள் யந்திரங்களை இலகுவில் ஏற்க மறுப்பதால் – யந்திரங்களின் பாதையை மறிப்பதால் – அந்த நல்லுணர்ச்சிகளை ஏளனம் பண்ணுகிறான் மனிதன்’

    என்பதில் இயற்கையின் மடியிலே பிறந்து வளர்ந்த தாகூர் இயற்கைக்கு முரணான யந்திரங்களையும், புகை கக்கும் ஆலைகளையும் விரும்பாதது இயல்பே. எனினும் வறுமையில் வாடும் மக்களின் வளர்ச்சிக்காக சிந்திக்காமல் யந்திரங்களை வேண்டாம் என்று கூறியது ஆச்சரியத்தையே அளிக்கிறது.

    பாரதியார் ஜப்பான் நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து நூல்களில் படித்தும், பிறர் சொல்ல கேள்விப்பட்டதையும் கொண்டு நம் இந்திய இளைஞர்கள் ஜப்பான் சென்று தொழில்நுட்பத்திறமை பெறவேண்டும் என்றார். ஆனால் தாகூரோ பல முறை ஜப்பானுக்கு சென்று அக்காட்சிகளையே நேரிலே கண்டவர். அதனால் ஜப்பான் நவீன மயமானதில் மானுடச்செல்வங்கள் அழிந்ததாக குறிப்பிடுகிறார். இரு மகாகவிகளின் இவ்வேறுபட்ட   சிந்தனைக்குக் காரணத்தை நுணுக்கமாக கவனித்தால் இருவரும் வளர்ந்த சூழல் மாறுபாட்டைக் குறிப்பிடலாம். பாரதியார் நாட்டின் வளர்ச்சிக்கு யந்திரங்களின் இன்றிமையாமையைக் கருத்தில் கொண்டு பாடியதில் அவருடைய இந்திய தேசியப்பற்றை அறியமுடிகிறது. ‘மனிதன் மனிதனே யந்திரம் யந்திரமே என்றுமே இணையமுடியாது’ என்ற கருத்துடைய தாகூர் நாட்டைவிட மனிதகுலப் பண்புகளையும், இயற்கையையும் நேசித்ததை அறியமுடிகிறது. யந்திரங்கள் உலகில் ஒருசிலரிடம் மட்டுமே இருந்து போட்டி, பொறாமைகளை உருவாக்கி மனிதனை அழிப்பதைக் கண்கூடாகக் கண்ட தாகூர் யந்திரங்களை நிராகரிக்க பாரதியார் சமத்துவம், வேலைக்குத் தகுந்த கூலி என்றதோடு யந்திரங்களை வரவேற்றதில் இருமகாகவிகளின் உள்ளுணர்வும் புலனாகின்றது.

    காலனை விரும்புதலும், எதிர்த்தலும்:

    மரணம் என்பது ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்படக்கூடியது. தவிர்க்கமுடியாதது என பாரதியார் பல பாடல்களில் குறிப்பிட்டிருப்பினும்,

    ‘பார் மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்
    சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி’

    என்பதில் பாரதியார் மரணபயத்தைத் தவிர்க்க விரும்புபவராகவும், சாகாவரத்தைத் தெய்வத்திடம் கேட்பவராகவும் காணப்படுகிறார். இதன் பொருட்டே பாரதியார் தமது இறுதியாண்டுகளின் போது மரணம் என்ற சிந்தனையில் உழன்று அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில்,

    ‘காலா உன்னைச் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன்
    காலருகே வாடா! சற்றே உன்னை மதிக்கிறேன்’

    என்று காலனின் மீது வெகுண்டெழுகிறார். ஆனால் தாகூரோ மரணதேவனை வரவேற்கிறார். இறைவனின் பணியாளான மரணதேவன் கடல்கடந்து என் வீட்டிற்கு வர காரிருள் சூழ்ந்த இரவில், நெஞ்சில் அகத்தடன் கையில் தீபமேந்தி வாசலைத் திறக்கிறேன்.

              ‘வரவேற்கிறேன் நான்
    சிரம் தாழ்த்தி
    மரணதேவனை!’

    நான் கரங்களைக் குவித்து, இதயத்தை அர்ப்பணிக்க மரணதேவன் ஒருநாள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி செல்வான். என் தனி ஆன்மா மட்டும் இறைவனுக்கு இறுதிக்கொடை என தாகூர் ‘மரணதேவனுக்கு வரவேற்பு’ பாடல் பாடியுள்ளார். ஒவ்வொரு நாளும் மரணதேவனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதாக ‘மரணதேவனுக்கு மணமாலை’ கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு இளம்வயதில் உயிரினைத் தொலைக்க முற்பட்ட சுப்பிரமணிய பாரதியார் காலனை மிதிக்க, முதுமைப்பருவத்தில் உயிரினைத் துறக்க முற்பட்ட தாகூர் மரணதேவனை வரவேற்று பரிசினையும் நல்குவதில் இரு மகாகவிகளின் இறப்பு குறித்த எண்ணங்கள் புலப்படுகின்றது.

    தொகுப்புரை:

    சமகால கவிஞர்களான பாரதியும், தாகூரும் ஒவ்வொரு இந்தியரிடத்தும் தேசப்பற்றை உருவாக்கவும், மனித மனதின் எண்ணங்களில் தெளிவை ஏற்படுத்தவும் விழைந்தனர். பிரபஞ்ச சக்தியிடம் பாரதி உரிமையுடன் வினாக்களைத் தொடுக்க தாகூர் இயற்கையை அமைதியுடன் உட்கொள்வராய் திகழ்கிறார். இருவருமே தெய்வத்தை உழைப்பாளரிடத்தில் வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றனர். மனித குலப்பண்புகளை மேம்படுத்த இறைவனிடம் வேண்டுவதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பெண் முன்னேற்றத்திலும் ஒத்த சிந்தனையே கொண்டுள்ளனர். யந்திரங்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றப் பார்வையில் பாரதி நோக்க, தாகூரோ மானிடகுலப்பண்புகளை அழிப்பதாக கருதுகிறார். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த தாகூர் முதுமைப்பருவத்தில் காலனை வரவேற்க, தன் விருப்பங்கள் நிறைவேறாத பாரதியார் காலனை மிதிக்க எண்ணுகிறார்.

    பாரதியார் உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத. வறுமையில் வாடினும் மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தான். தாகூர் வங்காளத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து, பல வெளிநாடுகளுக்கு செல்கின்ற வாய்ப்புகள் பெற்றவர். ஆங்கிலமொழி பாண்டித்தியமும், வெளிநாட்டு மக்களின் தொடர்பும் நட்புறவும் பெற்றிருந்ததால் உலக அரங்கில் தன் கீதங்களை எடுத்து செல்லும் வல்லமை கிட்டியது. அதனால் நோபல் பரிசு வெல்லும் வாய்ப்பும் பெற்றார். பாரதியின் பாடல்கள் எழுச்சி மிக்கதாக, கோபத்துடன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம் அவர் வாழ்ந்த சூழலேயாகும். தாகூரின் பாடல்கள் கனிவுடன் மென்மையான இறகுகளால் வருடுவதைப் போன்றிருப்பதற்கு காரணமாக அவருடைய தனிமையையும், பொருளாதார நிறைவையும் குறிப்பிடலாம். இரு மகாகவிகளுமே தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்நோக்கி வழிகாட்டுபவராக திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கக்கவிஞரான தாகூருக்கு சற்றும் சளைத்தவரல்ல நம் தமிழகக்கவிஞர் பாரதியார் என்பது திண்ணம்.

    துணைநூல்கள்:

          1.பாரதியார் கவிதைகள் – ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

    1. பாரதியார் கட்டுரைகள் – பாரதி புத்தக நிலையம்
    2. கீதாஞ்சலி – இரவீந்திரநாத தாகூர் மொழிபெயர்ப்பு – ஜெயபரதன்
    3. ரவிந்திரர் கட்டுரைத்திரட்டு – தமிழாக்கம்- த.நா.குமாரஸ்வாமி
    4. பாரதி என்றென்றும் – தொகுப்பாசிரியர் பொன்னீலன்
    5. இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புக்கள் – பதிப்பாசிரியர்கள் முனைவர்அ.பிச்சை, முனைவர் பா. ஆனந்தகுமார்
    6. மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் – பதிப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    7. இரு மகாகவிகள் – க.கைலாசபதி
    8. மகாகவி பாரதியார் – வ.ரா

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 17

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 17

    சக்தி சக்திதாசன்

    அன்பினுமினிய வல்லமை வாசகர்களே !

    மீண்டும் உங்கள் முன்னே கவியரசரின் பாடல் வரிகளுக்குள் புதைத்திருக்கும் வரிகளின் ஆன்மீகத்தை எனது கோணத்தில் பார்த்ததை பகிர்கிறேன்.

    1962ம் ஆண்டு வெளிவந்த ” வளர்பிறை ” எனும் திரைப்படத்தில் வெளிவந்த ” பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் ” எனும் பாடல் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் குரலில் ஒலித்தது.

    கவியரசரின் வரிகளை சரணங்களில் பார்ப்போம்,

    பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை
    புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

    தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
    தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
    தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் – அவனை
    தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

    முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
    முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனை
    தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் – அந்த
    ஏழையின் பேர் உலகில் இறைவன்

    கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரையிசை உலகில் மட்டுமல்ல, தத்துவ இலக்கிய உலகிலும் தனி இடம் பெற்றவர்.

    அவரது பாடல்கள் வெறும் சொல் அழகுக்காக மட்டும் எழுதப்படவில்லை.

    அவை மனித உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டு, இறைவனின் இயல்பை எளிய உருவகங்கள் வழி விளக்கும் தத்துவ நூல்கள்.

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்” என்ற இப்பாடல் அதற்கு சிறந்த சான்று.

    நான்கு சரணங்களில் அவர் இறைவனின் நான்கு வேறுபட்ட தத்துவ இயல்புகளை அகண்ட இயல்பு, மறைந்திருக்கும் தன்மை, அன்பின் வடிவம், படைப்பின் மர்மம்
    நேர்த்தியாக விரிக்கிறார்.

    முதல் சரணம்

    பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம்: அகண்ட தத்துவம்

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்” என்ற வரிகளில் கண்ணதாசன் வேதாந்தத்தின் உயரிய சிந்தனையை ஒரே வரியில் சுருக்கி வைக்கிறார்.

    பூஜ்ஜியம் என்பது வெறுமை அல்ல
    அது எல்லாமற்ற நிலை அல்ல, எல்லாமுடைய நிலை.

    கணித உலகில் பூஜ்ஜியம் இல்லாமல் எந்த எண்ணும் அர்த்தமற்றது.

    அதைப் போலவே இறைவன் இல்லாமல் எந்த படைப்பும் அர்த்தமற்றது என்பதை இந்த உருவகம் ஆழமாகப் பேசுகிறது.

    “ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான்” என்பது மிக முக்கியமான தத்துவம்.

    இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஆட்சி செய்கிறான் என்பது நம் அன்றாட வாழ்வில் நாம் காணவே முடியாத சக்திகளை சுட்டுகிறது.

    காற்று புரியாமலே மூச்சாகிறது.

    இதயம் புரியாமலே துடிக்கிறது.

    பூமி புரியாமலே சுழல்கிறது .

    இவை யாவும் அந்த “புரியாத ராஜ்ஜியத்தின்” வெளிப்பாடுகளே.

    “புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என்று கவிஞர் முடிக்கும்போது, இறைவனை அறிவது புத்தகங்களால் அல்ல, உள்ளுணர்வால் மட்டுமே என்ற உபநிஷத சாரத்தை உணர்த்துகிறார்.

    பூஜ்ஜியம் என்ற கணித சொல்லை இறையியல் தத்துவத்தோடு இணைத்தது கண்ணதாசனுக்கே உரிய அறிவுத் திறன்.

    இரண்டாம் சரணம்

    தேங்காய் உருவகம்: மறைவில் வாழும் இறைவன்

    “தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன்” இந்த உருவகம் தமிழ் கவிதை மரபில் அரிதானது.

    ஒரு தென்னை மரத்திலிருந்து இளநீரை எடுத்துக் கொள்கிறோம், குடிக்கிறோம்.

    ஆனால் அந்த இளநீரின் உள்ளே ஒரு மெல்லிய சதை படர்ந்திருக்கிறது.

    அது காலப் போக்கில் தேங்காயாக திடமாகிறது.

    ஆக, ஒரே பொருளுக்குள் மூன்று நிலைகள் இளநீர், ஓடு, தேங்காய்  ஒரே நேரத்தில் இருக்கின்றன.

    இறைவனும் அப்படியே உலகின் மேற்பரப்பில் புரிந்துகொள்ளும்போது வெறும் திரவமாகவே தெரிகிறான்.

    ஆழமாகத் தேடும்போது ஓட்டின் உறுதியாகத் தெரிகிறான்.

    மேலும் ஆழமாக உணரும்போது தேங்காயின் நிறைவாக அனுபவிக்கப்படுகிறான்.

    “தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என்ற வரி, இறைவனை அறிவது தேடல் மட்டுமே என்று சொல்கிறது.

    அறிவு சாஸ்திரங்களில் இல்லை, அனுபவத்தில் இருக்கிறது என்ற ஞானமார்க்கத்தை இந்தச் சாதாரண தென்னை மரம் கற்றுத் தருகிறது.

    கண்ணதாசனின் சிறப்பு என்னவென்றால், ஒரு தமிழகத் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை எடுத்து, அதனுள் பிரபஞ்ச ரகசியத்தை புதைத்து வைத்திருக்கிறார்.

    உயர்ந்த தத்துவம் உயரிய வார்த்தைகளில் மட்டுமல்ல, எளிய வாழ்வின் உருவகங்களிலும் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது.

    மூன்றாம் சரணம்

    துறவியின் சுற்றம்: அன்பின் இறைவன்

    “முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்” இந்த சரணம் உணர்வு நிலையில் மிகவும் ஆழமானது.

    உலகின் எல்லாப் பற்றுகளையும் விட்டு, சுற்றமும் நண்பரும் சொத்தும் சுகமும் கசந்துபோய், தனிமையாக நிற்கும் ஒருவனுக்கு இறைவன் என்ன செய்கிறான்?

    அவனுக்கு சுற்றமாக, குடும்பமாக நிற்கிறான் என்கிறார் கண்ணதாசன்.

    இது ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் திருவள்ளுவர் வரை பேசிய ஒரு உண்மை இறைவன் தேவையானவர்களுக்கே தன்னை வெளிப்படுத்துகிறான்.

    “பற்றறுத்து வந்தவர்க்கு” என்ற தேர்வு மிக முக்கியமானது.

    அனைவருக்கும் அல்ல பற்றை விட்டவர்களுக்கு மட்டுமே அவன் நெருங்குகிறான்.

    வெற்றிடத்தில் மட்டுமே ஒளி நுழையும்; நிறைந்த கலசத்தில் மழைத் தண்ணீர் சேராது என்ற ஆன்மீக விதியை இங்கே காண்கிறோம்.

    “தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்” என்ற வரி பக்தி மார்க்கத்தின் சாரம்.

    நாம் அவனைத் தேடினால் அவன் ஓடமாட்டான்.

    நாம் விலகினால் அவன் காத்திருப்பான்.

    ஆக, சாதனையும் தொடர்ச்சியும் மட்டுமே இறைவனை அடைவதற்கான வழி என்று கவிஞர் வழிகாட்டுகிறார்.

    நான்காம் சரணம்

    கோழி-முட்டை மர்மம்: படைப்பின் அதிசயம்

    “கோழிக்குள் முட்டை வைத்து, முட்டைக்குள் கோழி வைத்து, வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்” இந்த சரணம் படைப்பின் மர்மத்தை மிக அழகிய தர்க்கத்தில் சொல்கிறது.

    கோழி முதலா, முட்டை முதலா என்ற மனித மனத்தின் நெடுங்காலமான கேள்விக்கு கண்ணதாசன் பதில் சொல்ல மறுக்கிறார் ஏனெனில் அந்தக் கேள்வியே தவறானது.

    அந்த வட்டத்தை உருவாக்கியவன் இறைவன்.

    அதனுள் சிக்கிக் கேள்வி கேட்பவர்கள் மனிதர்கள்.

    “வாழைக்கும் கன்று வைத்தான்” என்பது மிக நுட்பமானது.

    வாழை மரம் விதையால் உருவாவதில்லை அது கன்றால் வளர்கிறது.

    ஆக, இயற்கையின் படைப்பு முறை ஒரே வழியில் இல்லை என்றும், படைப்பாளனின் கைவண்ணம் அளவற்றது என்றும் சொல்கிறார்.

    கோழி-முட்டை வட்டம் சுழல் படைப்பைக் காட்டுகிறது; வாழை கன்று நேர் படைப்பைக் காட்டுகிறது.

    இரண்டும் ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்கள்.

    “அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்” என்ற முடிவு முழு பாடலின் உயிர் நாடி.

    ஏழை என்று இறைவனை அழைப்பது ஆழமான அன்பின் வெளிப்பாடு.

    ஏனென்றால் எல்லா ஆடம்பரங்களையும் விட்டு, படைப்பின் மர்மத்தை தன்னுள் சுமந்து, யாரும் புரிந்துகொள்ளாமல் இருக்கும் அவன் ஒரு “ஏழை”யே.

    இது அன்பின் நகை  கடவுளை ஏழை என்று அழைக்கும் தைரியம் பக்திக்கு மட்டுமே உண்டு.

    இப்பாடலில் கண்ணதாசன் வெளிப்படுத்தும் சிறப்புகள் பன்முகமானவை.

    முதலில், அவர் கணிதம், இயற்கை, சமூகவியல், தர்க்கம் என்ற நான்கு வெவ்வேறு துறைகளிலிருந்து உருவகங்களை எடுத்து ஒரே இறைவனை நான்கு கோணங்களில் விவரிக்கிறார்.

    இது ஒரு கவிஞனுக்கு அரிதான அறிவுத் திறன்.

    இரண்டாவது சிறப்பு அவர் சமஸ்கிருத தத்துவ சொற்களை பயன்படுத்தாமல், தமிழ் மண்ணின் பொருட்களையே தென்னை, வாழை, கோழி, முட்டை  கருவிகளாகக் கொள்கிறார்.

    இது தமிழ் ஆன்மீகத்தின் நேரடி வாரிசு.

    சித்தர்கள் பாடல்களிலும், திருக்குறளிலும் காணும் “அகம் சொல்லி புறம் காட்டும்” மரபை அவர் தொடர்கிறார்.

    மூன்றாவது சிறப்பு ஒவ்வொரு சரணமும் ஒரு வேறுபட்ட மார்க்கத்தை சுட்டுகிறது.

    முதல் சரணம் ஞானமார்க்கம்.

    இரண்டாம் சரணம் தேட முயலும் சாதகனின் பாதை.

    மூன்றாம் சரணம் பக்தி மார்க்கம்.

    நான்காம் சரணம் படைப்பின் மர்மத்தை வியக்கும் சரணாகதி.

    நான்கு வழிகளிலும் ஒரே இறைவனை அடையலாம் என்று கவிஞர் சொல்கிறார்  இது பகவத் கீதையின் எதிரொலி.

    நான்காவது சிறப்பு “அவனை புரிந்தால், தெரிந்தால், தொடர்ந்தால்” என்று ஒவ்வொரு சரணமும் வேறு வேறு வினையால் முடிவடைகிறது.

    புரிதல் — புத்தி நிலை.

    தெரிதல் — அனுபவ நிலை.

    தொடர்தல் — சாதனை நிலை.

    இவை மூன்றும் வேவ்வேறு நிலையில் உள்ள மனிதர்களுக்கான அழைப்புகள்.

    எந்த நிலையில் இருந்தாலும் இறைவனை அடையலாம் என்ற அடக்கமான நம்பிக்கையை கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

    கண்ணதாசன் வெறும் வரிகள் எழுதவில்லை .

    அவர் ஒரு தத்துவ இலக்கியம் படைத்தார்.

    திரைப் பாடலின் இசை ஒரு நாள் மறைந்தாலும், இந்த வரிகளில் புதைந்திருக்கும் தத்துவம் மறையாது.
    பூஜ்ஜியம் முதல் ஏழை வரை  கணிதம் முதல் கருணை வரை  இறைவனை ஒரு பயணமாக வரையறுக்கும் இப்பாடல், தமிழ் ஆன்மீக கவிதையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக என்றும் நிலைத்திருக்கும்.

    அன்பினியவர்களே !

    கவியரசரின் ஆற்றல் ஒரு ஆழி போல எம்முன்னே விரிந்து கிடக்கிறது.

    இங்கே நான் ஒரு சிறுவன் கடற்கரையில் ஒரு வாளியினுள் அவ்வாழியின் நீரை அள்ளி விளையாடுவது போன்றே எனது முயற்சி.

    மீண்டும் அடுத்தொரு பகுதியில் சந்திக்கிறேன்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 32

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

    எலும்பைப் பெண்ணாக்கியது

    மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

     

    இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

    ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

     

    மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

     

    எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

     

    உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

    இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

     

    எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
    பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

    காழிவேந்தருக்குக் கடிமணம்!

     

    ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

     

    சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
    அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

     

    கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
    பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
    சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
    நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

    ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

     

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

    வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

    விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

    மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

    என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

    அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

    பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

    புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

     பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

     

     “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

    கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

     

     “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

    என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

     “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

    நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

    வாய்மைநீ அறத்தினுளன்புநீ

    மறத்தினுள் மைந்து நீ வேதத்து

    மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

    அனைத்தினுட் பொருளுநீ”

    என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

    வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

    சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

    காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

    அகண்டாகாரசிவ போக மென்னும்

    பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

    ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

    இனியெடுத்த தேகம் விழுமுன்

    புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

    எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

    ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

    வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

    1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

    தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

    அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

     

    1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

    எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

     

    1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

    ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

     

    1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

    அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

     

    சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

     

    வழிபாட்டு நெறிகள்

    1. சிவ வழிபாடு செய்தல்
    2. திருநீறு அணிந்து மகிழ்தல்
    3. ஐந்தெழுத்து ஓதல்

    ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

    திருஞானசம்பந்தர் துதி

    பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

    சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

    குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

    விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • சந்தா ஓ சந்தா பாடலில் ஒரு பிழை

    சந்தா ஓ சந்தா பாடலில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    சந்தா ஓ சந்தா என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1998ஆம் ஆண்டு வெளியான கண்ணெதிரே தோன்றினாள் படத்தில், தேவா இசையில், வைரமுத்து எழுதிய பாடல்.

    காதலனை எண்ணிக் காதலி நெஞ்சுருகிப் பாடுகிறாள். இந்தப் பாடலின் கடைசிச் சரணத்தில் இந்த வரிகள் வருகின்றன.

    பாவை உன்னைக் கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா?
    உனக்குள் சென்ற காற்று வேண்டும், எனக்கு மட்டும் தருவாயா?

    இந்த இரண்டாவது வரியைக் கேட்டு வியந்தேன்.

    மனிதன் ஆக்சிஜனை உள்ளிழுத்து சுவாசிக்கிறான். ஆனால், கார்பன் டை ஆக்சைடாக அதை வெளியே விடுகிறான். காதலனுக்குள் சென்ற காற்று வேண்டும் என்றால், அதை அவன் கார்பன் டை ஆக்சைடாகத்தான் வெளியிட முடியும். அதை மீண்டும் காதலி சுவாசிக்க முடியாது. அப்படியானால், அந்தக் கார்பன் டை ஆக்சைடை வைத்துக் காதலி என்ன செய்வாள்? எதற்காக அதைப் பரிசாகக் கேட்கிறாள்?

    வைரமுத்து எழுதிய பாடல்கள் பலவும் அறிவியல் பார்வையும் அறிவியல் செய்திகளும் நிறைந்தவை. இந்தப் பாடலில் எப்படி அவர், அறிவியலுக்கு ஒவ்வாத ஒன்றை எழுதினார்?

    சந்தா ஓ சந்தா என்றால் என்ன பொருள் என்றும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 313

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 313

    சக்தி சக்திதாசன்

    அன்பான வல்லமை வாசகர்களே!

    சில மாதங்கள் இடைவேளையின் பின்னால் உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.

    இந்த சில மாதங்களுக்குள் உலகில் எண்ண முடியாத பல நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கிலாந்தில் வாழும் எமக்கு எமது பிரதமர் மீது நடத்தப்படும் விமர்சனங்களும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுமே  இன்று எமது நாட்டின் பேசுபொருளாக இருக்கிறது.

    இந்த மடல் அவர்மீது ஒரு பார்வையை என் கோணத்தில் வீசுகின்றது.

    கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் பிரதமர்.

    கியர் ஸ்டார்மர் 1962ஆம் ஆண்டு பிறந்தார்.

    அவர் ஒரு வழக்கறிஞராக (barrister) தொழில் வாழ்க்கையை தொடங்கினார், பின்னர் அரசியலில் நுழைந்தார்.

    அவர் ரீகேட் கிராமர் பள்ளியில் படித்தார், பின்னர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

    தொழிலாளர் வர்க்கப் பின்னணியில் வளர்ந்த ஸ்டார்மர், தனது தந்தை ஒரு கருவி தயாரிக்கும் தொழிலாளியாகவும் தாயார் ஒரு செவிலியராகவும் இருந்ததாகக் கூறி வந்தார்.

    இந்த சாதாரண குடும்பப் பின்னணியை அவர் தனது அரசியல் அடையாளத்தின் மையமாக வைத்து வந்தார்.

    2008ஆம் ஆண்டு ஸ்டார்மர் இங்கிலாந்தின் பொது வழக்காடல் இயக்குனராகவும் (Director of Public Prosecutions) கிரீடன் வழக்காடல் சேவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

    2013 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

    இந்தப் பதவியில் அவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை கையாளும் முறையில் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

    இப்பணி அவருக்கு தேசிய அளவில் பெரும் அங்கீகாரம் தேடித் தந்தது.

    2015ஆம் ஆண்டு லண்டனின் ஹோல்பர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.

    2016இல் பிரெக்சிட் நெருக்கடியின்போது அவர் நிழல் பிரெக்சிட் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    2020ஆம் ஆண்டு லேபர் கட்சியின் தலைவரானார்.

    அவர் தலைமையில் லேபர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சியின் நீண்ட கால ஆட்சிக்கு எதிராக கட்சியை கட்டமைத்தது.

    2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிரதமரானார்.

    பிரதமராக பொறுப்பேற்றல்

    14 ஆண்டுகள் கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஸ்டார்மர் பதவியில் அமர்ந்தார்.

    பொருளாதாரம், குற்றம், தேசிய சுகாதார சேவை (NHS), கல்வி, காலநிலை நெருக்கடி ஆகியவற்றில் நோக்கங்களை அறிவித்தார்.

    ஒரு நீதித்துறை நிபுணர் தலைமையிலான அரசு, நாட்டை மீண்டும் கால்மேல் நிறுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

    பொருளாதார நெருக்கடி

    ஸ்டார்மர் அரசின் மிகப் பெரிய சவால் பொருளாதாரம்.

    பிரதமர் வாழ்க்கைச் செலவைத் தனது முன்னுரிமையாக குறிப்பிட்டு, மக்களின் பைகளில் அதிக பணம் வர வழி செய்வதாக உறுதியளித்தார்.

    வேலை உரிமைகளில் மாற்றங்கள், மருந்துக் கட்டண உச்சவரம்பு, மூன்று தசாப்தங்களில் முதன்முறையாக ரயில் கட்டண உறைவு ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

    ஆனால் இந்த வாக்குறுதிகள் வேகமாக நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் வளர்ந்தது.

    NHS சுகாதாரத் திட்டங்கள் மற்றும் நலன்புரி சீர்திருத்தம்

    NHS காத்திருப்பு பட்டியல்களை குறைப்பது தேர்தல் நம்பகத்தன்மைக்கான முக்கியமான போர்க்களமாக இருக்கிறது.

    மேலும் நலன்புரி சீர்திருத்த மசோதா மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    யுனிவர்சல் கிரெடிட் மற்றும் பர்சனல் இண்டிபென்டன்ஸ் பேமென்ட் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சித்த மசோதா, குறைபாடுடையோர் மற்றும் மனநல பாதிப்புள்ளவர்களுக்கான நலன்களை மட்டுப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது.

    கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு எதிராக கிளர்ச்சி செய்ததால் அரசு பெரும் திருப்பங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    கட்சிக்குள்ளும் அரசியல் நெருக்கடி

    2025 செப்டம்பரில் துணைப் பிரதமர் ஆஞ்சலா ரேனர் வரி சர்ச்சை காரணமாக பதவி விலகினார், இது ஸ்டார்மரின் தலைமைக்கு பெரும் அடியாக விவரிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பீட்டர் மேன்டெல்சன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டு, அவரது நடத்தை விவகாரங்கள் காரணமாக நீக்கப்பட்டார்.

    இந்த மேன்டெல்சன் சர்ச்சை, தலைமை நிர்வாகி மோர்கன் மெக்ஸ்வீனி மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் டிம் அலன் ஆகியோரின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது.

    வீழ்ச்சியடைந்த மக்கள் ஆதரவு

    ஐப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஸ்டார்மர் 1977 முதல் இதுவரையிலான பதிவுகளில் மிக மோசமான மக்கள் ஆதரவை கொண்ட பிரதமர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

    13 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடைந்தனர், 79 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர்.

    தேர்தலுக்குப் பின் அவரது ஆதரவு +5% இலிருந்து −30% ஆக சரிந்தது; பின்னர் −46% வரை தொடர்ந்து வீழ்ந்தது.

    ரிஃபார்ம் யூகேவின் எழுச்சி

    நைஜல் ஃபாரேஜின் ரிஃபார்ம் யூகே கட்சி ஒரு ஆண்டுக்கும் மேலாக கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் நிற்கிறது.

    2026ஆம் ஆண்டின் முதல் பெரிய கணிப்பு, ரிஃபார்ம் யூகே 381 இடங்களுடன் பெரும்பான்மை பெறும் எனவும், லேபர் வெறும் 85 இடங்களுக்கு சரியும் எனவும் கணிக்கிறது.

    இது ஸ்டார்மரின் நிர்வாகத்திற்கு மிகப் பெரிய அரசியல் எச்சரிக்கை மணி.

    ஸ்டார்மர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

    2018க்குப் பின் சீனாவிற்கு விஜயம் செய்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

    வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் 10வது ஆண்டு நினைவாண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்குவது என்ற ஸ்டார்மரின் குறிக்கோளை மையமாக வைக்கும்.

    ஒற்றைச் சந்தை அல்லது சுங்கத் தொழில்முறையில் மீண்டும் இணைவதை நிராகரிக்கும் அதே வேளையில், ஈராஸ்மஸ் திட்டத்தில் மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    வரும் தேர்தல்களில் சோதனை

    மே மாத உள்ளூராட்சி தேர்தல்கள் லேபர் கட்சிக்கு கடினமான இரவாக மாறலாம் என அஞ்சப்படுகிறது.

    இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மூன்று இடங்களிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

    ஸ்டார்மர் மற்றும் அவரது குழு, சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்கூட பயனுள்ள ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதில் சிரமப்பட்டுள்ளனர்.

    கியர் ஸ்டார்மர் ஒரு சட்டவல்லுனராக, நீதியின் குரலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

    ஆனால் ஆட்சி என்பது சட்டமன்றக் கூடம் அல்ல என்பதை அவரது பிரதமர் பதவி உணர்த்துகிறது.

    இந்த நெருக்கடிகளை வெறுமனே ஸ்டார்மரின் தவறுகளில் மட்டும் திணிக்க முடியாது .

    இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்த பொருளாதார மந்தநிலை மற்றும் முக்கியப் பாரம்பரிய கட்சிகள் மீதான மக்கள் அவநம்பிக்கையின் விளைவும்கூட.

    2026ஆம் ஆண்டில் ஸ்டார்மர் தனது கட்சிக்கும் நாட்டிற்கும் தன்னைப் பின்பற்ற காரணங்களை வழங்க வேண்டியிருக்கிறது.

    அதற்கு வெறும் நேரம் மட்டும் போதாது ஒரு தெளிவான தொலைநோக்கு திட்டம் அவசியம்.

    இன்றைய அவரின் நிலை

    பீட்டர் மேன்டெல்சன் விவகாரம்  ஸ்டார்மரின் பிரதமர் பதவியை உலுக்கும் சர்ச்சை

    பீட்டர் மேன்டெல்சன் யார்?

    பீட்டர் மேன்டெல்சன் பிரிட்டனின் “நியூ லேபர்” இயக்கத்தின் சிற்பியாகக் கருதப்படுகிறார்.

    டோனி பிளேர் மற்றும் கோர்டன் பிரவுன் ஆட்சிகளில் மிக முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

    இரண்டு முறை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததன் பின்னரும், இங்கிலாந்தின் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கி வந்தார்.

    ஆனால் 2025-2026 காலகட்டத்தில் அவரது பெயர் ஒரு மாபெரும் ஊழலின் மையத்தில் சிக்கிக்கொண்டது .

    அந்த ஊழல் ஸ்டார்மரின் ஆட்சியையே கேள்விக்குறியாக்கியது.

    இது எப்படி தொடங்கியது?

    தூதர் நியமனம்

    2024 டிசம்பரில் ஸ்டார்மர், மேன்டெல்சனை அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமித்தார்.

    2025 பிப்ரவரியில் மேன்டெல்சன் வாஷிங்டனில் பதவியேற்றார்.

    இந்த நியமனம் தொடக்கத்திலேயே சர்ச்சையை உருவாக்கியது .

    ஏனெனில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மேன்டெல்சனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது அரசியல் வட்டாரங்களுக்கு முன்பே தெரிந்திருந்தது.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு அமெரிக்க பணக்கார நிதியாளர். 2008ஆம் ஆண்டு 18 வயதிற்கு கீழான சிறுமியிடம் பாலியல் வக்கிரத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டு, 2019ஆம் ஆண்டு சிறார் கடத்தல் குற்றங்களுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது மரணமடைந்தார்.

    அவரது மரணத்திற்குப் பிறகு அமெரிக்கா வெளியிட்ட ஆவணங்கள் உலகெங்கும் பல முக்கியஸ்தர்களின் பெயர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன அவற்றில் மேன்டெல்சனின் பெயரும் முன்னணியில் இருந்தது.

    “மிகவும் நெருங்கிய நண்பர்”  நெடுங்கால உறவு வெளிப்படுகிறது.

    2025 செப்டம்பரில் அமெரிக்க நாடாளுமன்ற கண்காணிப்பு குழு வெளியிட்ட ஆவணங்களில், எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அடங்கிய புத்தகத்தில் மேன்டெல்சன் எப்ஸ்டீனை “என் சிறந்த தோழன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இது மேன்டெல்சன் முன்பு கூறிய “அவரை சரிவரத் தெரியாது” என்ற வாதத்தை நொறுக்கியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டார்மர் மேன்டெல்சனை தூதர் பதவியில் இருந்து நீக்கினார்.

    அரசு ரகசியங்கள் கசிந்ததா?

    மிகப் பெரிய குற்றச்சாட்டு

    2026 பிப்ரவரியில் வெளிவந்த அறிக்கைகள், 2009-2010 காலகட்டத்தில் மேன்டெல்சன் வணிக அமைச்சராக இருந்தபோது எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசு தகவல்களை கசிவு செய்தார் என்று சுட்டிக்காட்டின.

    குறிப்பாக, 2010 மே 9ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் யூரோவைக் காப்பாற்றுவதற்காக ₹500 பில்லியன் நிதி உதவி திட்டத்தை அறிவிக்க இருந்தது.

    இந்த சந்தை முக்கியத் தகவலை மேன்டெல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக மின்னஞ்சல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

    மேலும் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையிலான ரகசிய நிலத்தடி தொடர்பு பாதை பற்றிய தகவலையும் எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல் கூறுகிறது.

    பாதுகாப்பு ஆய்வு நிராகரிக்கப்பட்டதா?

    மிக முக்கியமான வெளிப்பாடு

    ஏப்ரல் 16, 2026ஆம் தேதி வெளியான செய்தி, யுகேஎஸ்வி (UK Security Vetting) என்ற பாதுகாப்பு ஆய்வு அமைப்பு 2025 ஜனவரி 28ஆம் தேதி மேன்டெல்சனுக்கு பாதுகாப்பு அனுமதியை மறுத்தது என வெளிப்படுத்தியது.

    ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகே அவர் தூதராக உறுதி செய்யப்பட்டார்.

    வெளியுறவு அமைச்சகத்தின் (FCDO) அதிகாரிகள் பாதுகாப்பு ஆய்வு அமைப்பின் பரிந்துரையை மீறி, மேன்டெல்சனுக்கு அனுமதி வழங்கியதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டார்.

    இந்த வெளிப்பாடு அரசியல் நெருப்பை மேலும் பரவடித்தது “முறையான நடைமுறை பின்பற்றப்பட்டது” என்று ஸ்டார்மர் பலமுறை கூறியிருந்தனர், அது பொய் என நிரூபணமாயிற்று.

    “எனக்கு சொல்லப்படவில்லை” என்பதே ஸ்டார்மரின் வாதம்.

    ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் மேன்டெல்சன் நியமனம் ஒரு தவறு என்று ஒப்புக்கொண்டார்.

    ஆனால் ராஜினாமா கோரிக்கைகளை நிராகரித்தார்.

    தாம் 2026 ஏப்ரல் 14ஆம் தேதிதான் பாதுகாப்பு அனுமதி மறுப்பு பற்றி அறிந்ததாக பிரதமர் கூறினார்.

    “இது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பது திகைப்பளிக்கிறது” என்று ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

    எதிர்க்கட்சி கன்சர்வேடிவ் தலைவர் கேமி பேடனோக், “அவர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; ஏனெனில் தெரிந்துகொள்ள விரும்பவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

    2025 செப்டம்பரில் மேன்டெல்சன் பதவியில் இருந்திருந்தால் அவரை ஆதரித்து நிற்பதாக ஸ்டார்மரின் தலைமை நிர்வாகி மோர்கன் மெக்ஸ்வீனி தொடர்ந்து வற்புறுத்தினார் .

    இந்த நியமனத்தை முன்னின்று ஆதரித்தவரும் மெக்ஸ்வீனியே.

    2026 பிப்ரவரி 8ஆம் தேதி மெக்ஸ்வீனி ராஜினாமா செய்தார்.

    “பிரதமரை மேன்டெல்சனை நியமிக்கும்படி ஆலோசனை வழங்கியதற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்” என்று கூறினார்.

    ஆஞ்சலா ரேனரின் நெருங்கிய ஆதரவாளர்கள், 2024இலேயே அவர் மேன்டெல்சன் நியமனத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஸ்டார்மரை எச்சரித்திருந்ததாக வெளிப்படுத்தினார்கள்.

    இது மேலும் சேதத்தை அதிகரித்தது.

    2026 பிப்ரவரி 23ஆம் தேதி பொது பதவியில் ஊழல் (Misconduct in Public Office) சந்தேகத்தின் பேரில் மேன்டெல்சன் கைது செய்யப்பட்டார்.

    கைதை தொடர்ந்து, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளுக்கு சென்று நிரந்தரமாக குடியேற திட்டமிட்டதாக நாடாளுமன்றத் தலைவர் சர் லிண்ட்சே ஹோயல் போலீசாரிடம் தகவல் அளித்தார்.

    மேன்டெல்சன் இதை மறுத்தார்.

    மார்ச் 6ஆம் தேதி ஜாமின் நிபந்தனைகள் நீக்கப்பட்டு கடவுச்சீட்டு திரும்ப வழங்கப்பட்டது.

    மார்ச் 10ஆம் தேதி மேன்டெல்சன் புரிவி கவுன்சில் உறுப்பினர் பட்டத்தில் இருந்து இராஜாவின் ஒப்புதலோடு நீக்கப்பட்டார்.

    ஸ்டார்மரின் நிலை இன்று

    இந்த சர்ச்சை, ஸ்டார்மரின் ஆட்சிக்கு மிக பாதகமானதாக விவரிக்கப்படுகிறது.

    பல லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் மோசமான முடிவுகள் வந்தால் தலைமை சவால் எழலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

    ஸ்டார்மர், மேன்டெல்சன் வேட்டு செய்தல் செயல்முறையில் குறைபாடு இருந்தது என்று ஒப்புக்கொண்டு, துண்டரவு அமைச்சகத்தின் மதிப்பீட்டை மீறும் அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தார்.

    மேலும் வெளியுறவு செயலாளர் ஈவெட் கூப்பரும் மூத்த அதிகாரி ஆலிவர் ராபின்ஸும் “நம்பிக்கை இழந்தோம்” என கூறப்பட்டு, ராபின்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மேன்டெல்சன் விவகாரம் வெறுமனே ஒரு தனி நபர் சர்ச்சை அல்ல.

    இது ஸ்டார்மரின் தீர்ப்பாண்மை, அரசின் வெளிப்படையான தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

    ஒரு நியமனத்தில் தொடங்கிய இந்த விவகாரம், கைது, ஆவணங்கள் வெளியீடு, கட்சி உள் கலகம் என படிப்படியாக விரிந்து, இன்று பிரதமரின் பதவியையே அசைக்கும் அளவுக்கு பெரிதாகியுள்ளது.

    காத்திருந்துதான் பார்ப்போமே !

    Share
  • சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மேன்மைகொள் சைவநீதி விளங்கிட வைப்பதற்கு
    மாதராய் வந்தமைந்தார் மங்கையர் கரசியாரும்
    அரசியாய் ஆனபோதும் அரனது அடியைப்பற்றி
    தினமுமே தொழுதுநின்றார் தீயவை அகன்றுபோக

    தீயதாம் சமணந்தன்னை சிந்தையில் கொண்டதாலே
    பாண்டிய நாட்டுமன்னன் பரமனை மறந்துபோனான்
    பரமனைப் பற்றிநின்ற அவனது மனைவியான
    மங்கையர் கரசியாரோ பரமனைப் பணிந்துநின்றார்

    சைவத்தின் போக்குவேறு சமணத்தின் போக்குவேறு
    அனைவரும் இணைந்துநிற்கும் அன்பதே சைவமாகும்
    ஒறுப்பது சமணமாகும் வெறுப்பது சமணமாகும்
    மக்களை விட்டுவிட்டு தத்துவம் சொல்லிநிற்கும்

    பெண்களைச் சைவமென்றும் பெருதுமே போற்றிநிற்க
    பெண்களை சமணமென்றும் வெறுத்துமே நின்றதாலே
    பொங்கியே எழுந்துநின்ற மங்கையற் கரசியாரும்
    சைவத்தை மீட்டெடுக்கத் தலைமையைத் தாங்கினார்கள்

    ஆடலும் வேண்டாம் பாடலும் வேண்டாம்
    அழகும் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
    எல்லாம் மாயை எதுவும் வேண்டாம்
    என்று சொன்னதே இப்புவி சமணம்

    சமணம் வெறுத்ததைச் சைவம் உயர்த்தி
    இறைவனை வழிபட ஏற்றது என்றது
    ஆலயம் அனைத்தும் ஆடலும் பாடலும்
    ஆண்டவன் பிரார்த்தனை ஆகியே நின்றது

    பாண்டிய மக்கள் மனங்கள் மாறின
    மன்னனின் மனமே சமணத்தில் இருந்தது
    மன்னனை மாற்றிட மங்கையற் கரசியார்
    தென் னாடுடைய சிவனையே வேண்டினார்

    சிவனது அருளாலே தவமுதல் வந்தார்
    கால்பதித்த உடனே கடுங்கோபம் கொண்டார்
    எதிர்த்தார் எரித்தார் எத்தனையோ செய்தார்
    அத்தனையும் அரசர்க்கு வெப்புநோயாய் ஆகியதே

    சமணத் தலைமைகள் மந்திரமோ தந்திரமே
    எதுவுமே அரசர்க்கு ஏற்றசுகம் அளிக்கவில்லை
    மனைவியின் கருத்தை மன்னனப்போ கேட்டான்
    மந்திராமாம் திருநீற்றை சம்பந்தர் கொடுத்தார்

    திருநீறு மன்னனின் நோயினையும் போக்கியது
    திருநீறு மன்னனின் மனதினையும் மாற்றியது
    தீமையென சமணத்தை உணரவும் வைத்தது
    மங்கையற் கரசியார் மனநிறைவை எய்தினார்

    வளவர்கோன் பாவை வழிகாட்டி ஆகினார்
    சம்பந்தர் தலைமையிலே சைவத்தை நிலைநாட்டினார்
    சேக்கிழார் போற்றினார் சிவனாரின் அடியாரை
    சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    Share
  • பாவேந்தர் பாடல்களில் கம்பரின் சிந்தனைகள்!

    -மேகலா இராமமூர்த்தி

    பாவேந்தர் பாரதிதாசன் தாம் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணப் பாத்திரப் படைப்புகளை விமர்சித்தவர்; கம்பர் எதிர்நிலைத் தலைவனாக (Antagonist) உருவகித்த இரணியனைத் தலைவனாக்கிக் காப்பியம் படைத்தவர். எனினும், கம்பரின் கவிநயத்திலும் கற்பனை வளத்திலும் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டவர்.

    கம்பரின் கவிநயத்தில் பாரதிதாசனுக்கிருந்த ஈடுபாட்டை அவரின் பாடல்களில் நாம் தெளிவாகவே காணமுடிகின்றது; சான்றுகளாகச் சிலவற்றைக் காண்போம்.

    மிதிலையில் இராமன் சிவதனுசை முறித்த பின்னர்ச் சீதையை மணமகளாக அணிசெய்து மண்டபத்துக்கு அழைத்துவருகின்றனர் அரண்மனைப் பெண்டிர். அழகரசி சீதை புத்தாடையும் அணிமணிகளும் புனைந்து பெடையன்னம் என நடை பயின்றுவந்து தன் தந்தை சனகனின் ஆசனத்துக்கு அருகிலிருந்த ஆசனத்தில் அமர்கின்றாள்.

    இராமன் அவளைக்கண்டு பரவசமுற்றிருக்கையில், இராமனை மிதிலைக்கு அழைத்துவந்த விசுவாமித்திர முனிவன் சீதையைப் பார்க்கிறான்.

    ”அடடா…உயர்குல மாதர்க்கெல்லாம் ஆதாரம் இவளே; சிவதனுசை முறித்தால் கிடைக்கக்கூடிய பரிசு, பார்வையிலேயே ஆளைக்கொல்லும் நஞ்சுடைக் கூர்விழிகளுடைய மலர்மங்கையாகிய இந்தச் சீதையே என்பதை மட்டும் பச்சைமாமலை மேனியனாகிய இராமன் அறிந்திருந்தால் இந்தச் சிவதனுசு என்ன…ஏழு மலைகளைக் கொண்டுவந்து வைத்தாலும் பொடிப் பொடியாக்கியிருக்க மாட்டானோ?” என்று எண்ணுகின்றான்.

    ”…பச்சைமலை யொத்த படிவத்து  அடல்இராமன்
    நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவளென்றால்
    இச்சிலை கிடக்க மலைஏழையும் இறானோ?”
    (கம்ப. கோலங்காண் படலம்)

    இந்த உவமை பாவேந்தர் பாரதிதாசனைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றது. தக்க சமயத்தில் இதனைப் பயன்படுத்த எண்ணியிருந்தவர், சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் தம்முடைய குறுங்காப்பியத்தில் அதன் தலைவன் குப்பன் தன் காதலியின் விருப்பத்தைச் சிரமேற்கொண்டு நிறைவேற்ற முற்படுகையில்,

    ”கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”
    என்றுரைக்கின்றார்.

    ’பரிசாய்க் கிடைக்கப் போகின்றவள் சீதையென்றால் இந்தச் சிலையென்ன? பல மலைகளைத் தூளாக்குவான் இராமன்!’ எனும் கம்பரின் கற்பனையே, காதலியரின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் குமரர்க்கு மாமலையும் சிறுகடுகு எனும் பாவேந்தரின் பாடலில் புதுக்கோலம் காண்கின்றது.

    கம்பராமாயணத்தில் மற்றொரு காட்சி!

    வனவாசத்தின்போது பஞ்சவடி எனுமிடத்தில் பர்ணசாலை அமைத்து இராம இலக்குவரும் சீதையும் தங்கியிருந்தனர். இராமன் மாரீச மாயமானைத் துரத்திச் சென்றபின் தொலைவில் அவன் குரலில் ஓர் அலறல் சத்தம் கேட்கிறது; அதனால் அச்சமுற்ற சீதை, அவனுக்கு ஆபத்து என்றுகருதி இலக்குவனை அங்கே வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டுப் பர்ணசாலையில் தனித்திருக்கின்றாள். அந்த வேளைக்காகவே காத்திருந்த இராவணன் அவளைப் பர்ணசாலையோடு தூக்கிச் சென்றுவிடுகின்றான்.

    இராம இலக்குவர் திரும்பவந்து பார்த்தபோது பர்ணசாலையில் சீதை இல்லை. கவலையோடு அவளைத் தேடிக்கொண்டு வருகின்றனர் இருவரும். இரவு வருகின்றது; அஃது இராமனின் துயரைக் கூட்டுகின்றது. ”இந்தக் கொடிய கங்குல், சானகியின் கண்களை விடவும் நீண்டதோ?” என்று அவளை நினைந்து பெருமூச்செறிகின்றான் இராமன்.

    ”…தண்நறுங் கருங்குழல் சனகன் மாமகள்
    கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே?”
    (கம்ப. அயோமுகிப் படலம்)

    வானை நோக்குகிறான்! அங்குள்ள விண்மீன்கள்மீது அவன் பார்வை பதிகின்றது.

    “அழகான நிலவுபோல் உதித்த சூரியனின் ஊழித் தீயை ஒத்த வெம்மைமிகு கதிர்களால் சுடப்பட்டுக் கொதிப்பேறிய வானத்தின் உடம்பெல்லாம் தோன்றிய கொப்புளங்களோ இந்த விண்மீன்கள்?” எனும் விசித்திர எண்ணம் எழுகின்றது மனப்புழுக்கத்தில் இருக்கும் அவனுக்கு!

    ”அப்புடை அலங்குமீன் அலர்ந்ததாம் என
    உப்புடை இந்துஎன்று உதித்த ஊழித்தீ
    வெப்புடை விரிகதிர் வெதுப்ப மெய்யெலாம்
    கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே?”
    (கம்ப. அயோமுகிப் படலம்)

    சூரியனைக் கனல் கக்கும் நிலவாக உருவகிக்கும் கம்பர், அந்தக் கனலால் வானத்தின் உடம்பில் தோன்றிய கொப்புளங்களோ விண்மீன்கள் என்று கேட்பது அவர் கவிச்சக்கரவர்த்தி மட்டுமல்லர்; கற்பனையின் சக்கரவர்த்தியும்கூட எனும் எண்ணத்தை நமக்குத் தோற்றுவிக்கின்றது.

    இந்தக் கற்பனையும் பாவேந்தரின் உள்ளத்திரையில் ஓவியமாய்ப் பதிந்துவிட்டது. ஆதலால், ’அழகின் சிரிப்பு’ எனும் தமது கவிதைத் தொகுதியில் ’வான்’ எனும் தலைப்பில் பாட்டாளி வர்க்கத்தினரின் பாடுகளைப் பதிவுசெய்திருக்கும் பாடலில் இதனைத் தக்க வகையில் சேர்த்திருக்கின்றார்.

    ”மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம் உரிமைகேட்டால்
    புண்மீதில் அம்புபாய்ச்சும் புலையர் செல்வராம் இதைத்தன்
    கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண்டு அந்திக்குப்பின்
    விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி! ” 

    ”மண்மீதில் மாடாய் உழைப்பவரெல்லாம் வறியராகவும் அவர்களை ஏய்த்துப் பிழைப்பவரெல்லாம் வளமை படைத்தவராகவும் வாழும் முறையற்ற நிலைகண்டு பகலெல்லாம் சினத்தீயில் குமுறிக்கொண்டிருந்தது வானம்; அந்தக் குமுறல் அந்திக்குப்பின் அதன் உடலெங்கும் கொப்புளங்களாய் வெடித்தது; அவைதாம் வானில் தெரியும் விண்மீன்கள்!” என்பது இப்பாடலின் கருத்து.

    சூரியனின் வெங்கதிர்களின் தாக்கத்தால் வானின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் விண்மீன்கள் என்று கம்பர் சொல்ல, பாட்டாளி வர்க்கத்தினரின் பாடுகளால் வானம் கொதிப்படைந்து அதனால் அதன் உடலில் தோன்றிய கொப்புளங்களே விண்மீன்கள் என்கிறார் பாவேந்தர்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கற்பனைகளுக்குத் தம் பாத்திறத்தால் மேலும் மெருகூட்டியிருக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் என்பதைத்தானே இப்பாடல்கள் புலப்படுத்துகின்றன?

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

     

    Share
  • அரவிந்தன் பற்றிய ஜெயமோகன் கருத்துகள் – எனது பார்வை

    அரவிந்தன் பற்றிய ஜெயமோகன் கருத்துகள் – எனது பார்வை

    அண்ணாகண்ணன்

    அரவிந்தன், அஞ்சலி, சர்ச்சை என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய பதிவைப் படித்தேன்.

    ‘கீழ்மையே கீழ்களின் ஆசாரம்’ என்றார் ஜெயகாந்தன் என ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அச்சமே கீழ்களது ஆசாரம் என்று எழுதியவர், திருவள்ளுவர். ஜெயகாந்தன் இவ்வாறு ஏதும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

    /அரவிந்தனுக்கு தன் அடிப்படைச் சூழலில் இருந்து உருவான ஓர் இயல்பு இருந்தது என இன்று நினைக்கிறேன். அது ‘அன்றன்றைய முதலாளிகளுக்கு விசுவாசமாக நயந்து இருத்தல்’ என வரையறுக்கத்தக்கது./

    இவ்வாறு நயந்து இருக்க வேண்டிய தேவை, இன்று பெரும்பாலோரிடம் இருக்கிறது. இது, படிநிலை அமைப்பினைக் கொண்டது. படிநிலையில் கீழே உள்ளோர், மேலே உள்ளோரிடம் அப்படித்தான் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்களால் அங்கே பணியாற்ற முடியாது, வாழவும் முடியாது.

    காவல் துறையில், அரசு அலுவலகங்களில், கட்சி அதிகார அடுக்குகளில். கல்வி நிலையங்களில், ஆன்மீக நிறுவனங்களில், ஊடகத் துறையில், குடும்பங்களில் இப்படி எல்லா இடங்களிலும் இதை நேரடியாகக் காணலாம். இது தனி நபர்களின் கீழ்மை இல்லை. இந்தச் சமுதாயத்தின் அவல நிலை. எங்கெங்கும் கிளைபரப்பி, வேர் ஊன்றி இருக்கும் அதிகாரத்தின் கோர முகம்.

    தங்களுக்கென உச்சமான, தனித்த செல்வாக்கு, புகழ், ஆற்றல் கொண்டோர் மட்டுமே சற்றே சக நிலையில் உரையாடலாம். ஜெயமோகன், தான் பணியாற்றிய திரைப்படங்களில் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் நயந்து இருக்கவில்லையா? வைரமுத்துக்கு வாழ்த்துக் கூறும் கமல் ஹாசனை வாழும் தமிழ் நிகழ்வின் தூதுவராக அறிவிக்கவில்லையா?

    /அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்/ என முந்தைய அஞ்சலிக் குறிப்பில் எழுதியிருந்தார்.

    இரண்டாவது குறிப்பில் /அவருக்கு இந்தியா டுடே இதழில் வேலை கிடைப்பதற்காக அவரை அழைத்துச்சென்று, ஆர்.எஸ்.எஸ். மேலிடத்தில் இருந்தவர்களை சந்தித்து அவர் தகுதியை விளக்கி வாய்ப்பு வாங்கி கொடுத்தவனும் நான்தான். ஏனென்றால் அன்று நான் முக்கியமானவனாக இருந்தேன்/ என எழுதியுள்ளார்.

    /அரவிந்தனுக்கு வருகிறேன். என் இயல்பால் என்னால் உண்மையாக மட்டுமே வெளிப்பட முடியும். நான் ஒன்றை எழுதிய பின்னரும்கூட அதில் உண்மையாக வெளிப்பட்டுள்ளேனா என பலமுறை யோசிப்பேன். மிகை என்று கொஞ்ச ஐயம் வந்தால்கூட சமநிலைக்கு முயல்வேன். அரவிந்தன் பற்றிய என் அஞ்சலிக்குறிப்பு கூட அவ்வாறான உண்மையான உணர்வின் வெளிப்பாடே./

    இந்த ஒரே பத்தியில், மும்முறை உண்மையாக என எழுதுகிறார். ஆனால், அரவிந்தன், இந்தியா டுடே இதழில் சேர்ந்ததில் ஏன் முன்னுக்குப் பின் முரண்பாடு? இவற்றில் எது உண்மை?

    /உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை, அன்று அரவிந்தன் எதையும் எழுதி நிரூபித்தவர் அல்ல. மிக இளைஞர். அவருக்கு நான் உதவியது அவர் அந்த உடற்குறையுடன் எடைமிக்க மூட்டையுடன் பேருந்தில் ஏறுவதைக் கண்டு அடைந்த மனவருத்தம் காரணமாகவே. அன்று அவருடன் சென்று அந்த காகித மூட்டைகளை நான் பேருந்தில் ஏற்ற உதவியிருக்கிறேன்./

    ஜெயமோகன் எழுதியதில் மனம் வருத்தும் பகுதி இது. அவருக்குத் தகுதி என்று ஏதும் இல்லை. பரிவு, இரக்கம், பச்சாத்தாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பரிந்துரைத்தேன். வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன் என்கிறார். /இதைக் கடந்து அவரை அந்த இளைஞராக மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வேன்/ என எழுதுகிறார். எழுதி எதையும் நிறுவாத 19 வயது இளைஞரை நினைவில் ஏன் வைக்க வேண்டும்? அன்று அரவிந்தன், ஜெயமோகனை மதித்து அவரை வந்து சந்தித்தார். அப்போது அவர் கடுமையான உடலுழைப்பினை முன்வைத்தார். அவரைப் பார்த்து ஜெயமோகன் பரிதாபப்பட்டார். அதன்பின் அரவிந்தன் எழுதத் தொடங்கிய பிறகு, பேசத் தொடங்கிய பிறகு, இருவருக்குமான விலகல் ஏற்பட்டது.

    அடிப்படையில் ஜெயமோகன், இலக்கியத்தில் தன்னை வியந்து பார்ப்பவர்களையே, ரசிப்பவர்களையே, கொண்டாடுபவர்களையே விரும்புகிறார். விமர்சகர்களைத் தூற்றுகிறார். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஆழ்ந்து பார்ப்பதில்லை. என்னை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள், நான் தாக்கப்பட்ட போது அவர்கள் என்ன செய்தார்கள், நான் நடத்திய நிகழ்ச்சி குறித்து அவர்கள் என்ன பேசினார்கள்… இவை அனைத்தின் பின்னணியில் இருப்பது என்ன? நான் என்பதே ஜெயமோகன் மனத்தில் ஓங்கி நிற்கிறது. தன்னை மையப்படுத்தியே அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார்.

    /இந்தியா டுடேயில் இருந்து வெளிவந்தபின் அரவிந்தன் காலச்சுவடின் விசுவாசியானார். காலச்சுவடு எனக்கு எதிராக திரும்பியபோது காலச்சுவடு முதலாளிகளை மகிழ்விப்பதற்காக என்னை வசைபாடி, நையாண்டி செய்து, அவதூறு செய்து கட்டுரைகள் எழுதினார். தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள்./

    இந்தக் கட்டுரைகள் எவற்றையும் நான் படிக்கவில்லை. அரவிந்தன் பிற பெயரில் எழுதியதற்கு என்ன ஆதாரம்? அவற்றை அரவிந்தன் தான் எழுதினார் என ஜெயமோகன் எதை வைத்துச் சொல்கிறார்?

    /உதவவேண்டும், ஆனால் உதவியதும் விலகிவிடவும் வேண்டும் என்பதே இன்று பெரிய உதவிகளைச் செய்யும் எல்லா நண்பர்களிடமும் நான் சொல்வது. இன்று உக்கிரமான வசைகளை பொழிபவர்கள் பெற்ற உதவிகள் அவர்களுக்குத் தெரியும்/

    தான் உதவியதிலிருந்து ஜெயமோகன் இன்னும் விலகி வரவில்லை. நண்பர் என்று இல்லை, சக மனிதர் ஒருவருக்குத் தன்னால் இயலக்கூடிய ஒன்றைச் செய்வதை உதவி என்றுகூடச் சொல்லக் கூடாது. அது ஒரு வகையில் நம் கடமை. அறம் என வாய்க்கு வாய் கூறும் ஜெயமோகன், தத்துவங்கள் பற்றி வகுப்பு எடுக்கும் ஜெயமோகன், இந்த நான் என்ற மனோபாவத்திலிருந்து வெளிவரவே இல்லை. நம்மிடம் உதவி பெற்றவர்கள் நம்மிடம் நன்றிக் கடன்பட்டு இருக்க வேண்டும் என்ற மனநிலைதான் அவரிடம் உள்ளது. அவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பினை நமக்கு அவர்கள் அளித்தார்கள், நம் உதவியை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என நினைப்பதில்லை. இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து நவீன சிந்தனை எப்படி வௌிப்படும்?

    /தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள்./

    /அரவிந்தன் எழுதிய ஒரு கட்டுரைக்குக் கூட நான் எதிர்வினையாற்றியதில்லை. அவதூறுகளை புறக்கணிப்பதே என் வழக்கம்./

    அவதூறுகளை புறக்கணிப்பவர், அகத் தீவிரம் கொண்டவர்… ஆனால், தன்னைப் பற்றிய அத்தனைக் கட்டுரைகளையும் எதிர்வினைகளையும் தேடித் தேடிப் படித்திருக்கிறார். யார், எத்தனைக் கட்டுரைகள் எழுதினார்கள், எந்தப் பெயர்களில் எழுதினார்கள் என அனைத்தும் தெரிகிறது. அவர்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர்கள், எந்தக் கண்ணோட்டம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் கண்டறிகிறார். இது, படைப்பு மனோநிலை இல்லை, அரசியல் மனோநிலை.

    /integrity என்பதற்கு ஒரு திமிர் தேவை, அது அவரிடம் இல்லை. உண்மையில் நம் நடுத்தரக்குடும்பத்தினரிடமுள்ள அந்த பணிவு அவர்கள் தங்களை தாங்களெ சிறுமை செய்துகொள்ள வழிவகுக்கிறது. எந்த இளைஞரும் எச்சரிக்கைகொள்ளவேண்டிய ஓர் படுகுழி இது. /

    / அவரே என்னிடம் அவருடைய இரு நாவல்களை அளித்து கருத்து கேட்டார். இதை அவரிடம் நேரிலும் சொல்லியிருக்கிறேன். “கொஞ்சமாவது திமிர் இருக்கணும்” இதுதான் அவரிடம் நான் சொன்ன ஆலோசனை. /

    ஜெயமோகன் விழுந்திருக்கிற படுகுழியே இந்தத் திமிர் தான். இது, தான் சொல்வதே சரி என்று தன்னையே நம்ப வைக்கும். நானே இங்கு முதன்மையானவன் என்று எண்ண வைக்கும். மற்ற யாருடைய தகுதியும் கண்ணுக்குத் தெரியாது. நான் என்ற இறுமாப்பும் இந்தத் திமிரும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. அவர் யாரைப் பற்றி எழுதினாலும் அதில் சரிபாதிக்கு மேல், தன்னைப் பற்றியே இருக்கும். தனக்குக் கீழேயே அனைவரையும் வைத்திருக்கும்.

    /அவர் மறைந்த இத்தருணத்தில் ‘ஆகா மகத்தான படைப்பாளி’ என்பார்கள் பலர். அது தமிழ்ச்சூழலின் சம்பிரதாயப் பாவனை. ஆனால் அவர் எழுதிய எவையும் எந்த வாசகனையும் எவ்வகையிலும் தொட்டதில்லை./

    நடுநிலையான ஒருவர், இந்தக் கருத்தை முன்வைக்க முடியுமா? இதை ஆபாசம், அபாண்டம், அநீதி என எந்தப் பெட்டியில் போடலாம் என நீங்களே முடிவு செய்யுங்கள். அரவிந்தனின் புதிய பார்வையும் ஆழமான கருத்துகளும் கச்சிதமான நடையும், என்னைக் கவர்ந்துள்ளன. என்னைப் போல் யாரும் சொன்னால், நீங்கள் வாசகரே இல்லை என்று ஜெயமோகன் கூறுவார்.

    அரவிந்தன் எழுதிய அனைத்தும் சரியானவை, சிறப்பானவை என்று நான் சொல்லவில்லை. சமரசங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். இது, ஜெயமோகன் உள்ளிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற குறளை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.

    /உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை/

    அன்பு மிகுந்திருந்த போது, அவருடைய தகுதிகளைத் தேடி எடுத்துரைத்தார். அன்பு வற்றிய பிறகு, குறைகளைத் தேடிச் சொல்கிறார். சிக்கல், அரவிந்தனிடம் மட்டும் இல்லை. அன்பு குறைந்துபோனதிலும் தான் இருக்கிறது.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 31

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (4)

    சண்பை வேந்தர் முன்பு சென்று பணிந்த மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையும் தம் மலர்க்கரங்களால் எடுத்தருளியவர், அவர்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் உணர்விலா சமணர்களை அவர்கள் கண்டு மகிழும்படி வென்று விதிப்படி பாண்டிய வேந்தனை வெண்ணீறு அணிவிப்பான் எனக் கூறியருளினார். அதன்படி ஞானசம்பந்தர் எம்பெருமான் திருவருள் பெற்று பாண்டிமாதேவியின் அழைப்பினை ஏற்று அரண்மனை சென்றடைந்தார். ஞானப்பிள்ளையாரின் திருவடியைத் தொழுது வரவேற்றவர்கள் மன்னன் படுத்துக்கொண்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவர் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளச் செய்தனர். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் மகிழ்ச்சியுடன் அவரோடு உரையாடும் முறையில் அவர்தம் ஊர் குறித்துக் கேட்டவரிடம் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.

     

    சமணர்கள் அச்சமுற்றாலும் அதனை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் உறுதிப் பொருளைக் கூறி வாது செய்து வென்றவர்கள் மதத்தை ஏற்போம்` எனக்கூறினர். `மன்னனும், வாது செய்வதெல்லாம் வேண்டாம் என்றும் தமது உடற்பிணியை யார் இறையருளால் நீக்குகிறார்களோ அவர்கள் பக்கமே தாம் சாரப்போவதாகவும், நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றும் கூறினார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணை நிற்க வாதில் வெல்வோம்` என்றார். அது கேட்ட சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை தாங்கள் குணப்படுத்துகிறோம் என்றும் வலது பக்கம் அவர் தீர்க்கட்டும் என்று கூறி குண்டிகை நீரைத் தெளித்து பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் அது தீயில் பட்ட நீராகக் கொதிக்க நோய் மேலும் கூடியது. ஆனால் ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திருநீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது.

     

    மந்திர மாவது நீறு

      வானவர் மேலது நீறு

    சுந்தர மாவது நீறு

      துதிக்கப் படுவது நீறு

    தந்திர மாவது நீறு

      சமயத்தி லுள்ளது நீறு

    செந்துவர் வாயுமை பங்கன்

      திருஆல வாயான் திருநீறே.

     

    ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப்

    புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

    பாண்டிய மன்னன் முற்றாகக் குணமுற்றுத் தெளிந்து எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றினான்.

     

    பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று மனக்கணக்குப் போட்டனர். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையே பேசுமின்` எனப் பணித்தார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டிய மன்னனும் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.
    அத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சிவபெருமானே மெய்ப்பொருள் என உணர்ந்த ஞானசம்பந்தர் தாம் அதுவரை  அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் திருநள்ளாற்று இறைவனைப் போற்றி அவ்வேட்டினை எடுத்து மெய்ப்பொருளாகும் இவ்வுலக மாந்தருக்கு அறிவுறுத்தும் வகை இவ்வேடு அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வளரொளி` எனத்தொடங்கும் திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு கொழுந்து விட்டு எரியும் தீயில் வேகாது பசுமையாய்க் காட்சியளித்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது தீயில் இட்டும் முன்னையினும் பசுமையாக இருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று.

     

    சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு நகைத்த மன்னனை நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இரு தரப்பினரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் விட்டால் எவருடைய ஏடு நீரில் அடித்துச் செல்லாமல் எதிர்த்து வருகிறதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டார். அது கேட்ட சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவில் ஏற்றட்டும் என்றனர். மன்னனும் அவர்கள் ஆத்திரத்தில் அறிவிழந்துப் பேசிவிட்டதாகக் கூறி அதற்கு உடன் பட்டான்.

    ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் `அதி நாதி` என வடமொழி மந்திரத்தை எழுதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே கடலை நோக்கி விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், தம் திருக்கரத்தால்,

    வாழ்க அந்தணர்

      வானவர் ஆனினம்

    வீழ்க தண்புனல்

      வேந்தனும் ஓங்குக

    ஆழ்க தீயதெல்

      லாம்அரன் நாமமே

    சூழ்க வையக

      முந்துயர் தீர்கவே

     

    என்னும் திருப்பதிகத்தை எழுதி அதனை வைகையாற்றில் இட்டனர். வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. குலச்சிறையாரும் அந்த ஏட்டினையொட்டி குதிரை மீது ஏறிச் சென்றார். இத்திருப்பாட்டில் `வேந்தனும் ஓங்குக` என ஞானசம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆக மாறினான். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வண்ணியும் மத்தடும் மதிபொதி சடையினன்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று சேர்ந்தது. அதனை குலச்சிறையார் வணங்கி எடுத்து வந்தவர், நின்றசீர் நெடுமாறனிடமும், மங்கையர்கரசியாரிடமும் காட்டினார். மக்களும் இறைவன் திருவருளை எண்ணி வியந்துப் போற்றினர்.  ஏடு நின்ற இத்திருக்கோயில் இன்றும் திருவேடகம் என்று வழங்கப்படுகிறது.
    வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். பாண்டிய மன்னன் கட்டளைப்படி குலச்சிறையாரும் அதை நிறைவேற்றினார். ஞானசம்பந்தர் பாண்டிய மன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று `வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.

    ஆளுடைய பிள்ளையார் மதுரையில் சில நாள் தங்கியிருந்து ஆலவாய் அப்பனைப் பரவினார். பின்னர் பாண்டிய மன்னன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகியோரோடு திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி முதலிய தலங்களை வழிபட்டு திருஇராமேச்சுரம் சென்றடைந்தார். திருமால் இராமாவதாரத்தில் சிவ வழிபாடு செய்த இராமேசுவரத்தை அடைந்து அங்கு இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து போற்றினார். இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற்குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.

     

    பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டுச் சோழ நாட்டையடைந்த பிள்ளையார் திருக்களர், திருப்பாதாளீச்சுரம் முதலிய தலங்களையும் வழிபட்டு முள்ளிவாய்க்கரை என்னும் ஊரைச் சேர்ந்தார். அங்கு முள்ளியாறு எனும் ஆறு உள்ளது. ஆற்றின் மறுகரையில் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் உள்ளது. அங்கு சென்று பரமனைப் பாடும் அவாவினால் சம்பந்தர் தம் அடியார் குழாத்துடன் முள்ளியாற்றின் கரையை அடைந்தார். முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடக்காரர்கள் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக்கொண்டு கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றி, `கொட்டமே கமழும்` என்ற திருப்பதிகத்தை இசைத்துத் தன் நாவன்மையே கோலாகக் கொண்டு ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடல் பாடும்போது ஓடம் கரையை அடைந்தது. ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய திருநள்ளாற்று இறைவன் மீது `பாடகமெல்லடி` என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

    ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.
    திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்தபோது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர்களை வினவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையிலிருந்து இறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச் சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடு செல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக் கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்ல விரும்பினார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து பயணம் மேற்கொண்டனர். ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீர்காழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

    தொண்டைநாட்டில் உலா

    தொண்டை நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் விருப்பத்துடன் சீர்காழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருஇரும்பை, மாகாளம் முதலிய தலங்களை வழிபட்டு அப்பரடிகட்கு அருள் செய்த, தற்போது பண்ருட்டி என வழங்கும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அழகிய ஆலயமான திருவதிகை வீரட்டானத்தைச் சென்றடைந்தார். அங்கு வீரட்டானத்து இறையைத் தொழுது போற்றியவர், பின்னர் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய நடுவன்’ எனும் திருப்பதிக இசை பாடி திருவோத்தூர் எனும் திருத்தலத்தை அடைந்து இறைவனைப் போற்றினார். திருவோத்தூர் தற்போது செய்யாறு திருவத்தூர் என வழங்கப்படுகிறது.

     

    திருவோத்தூரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்தருகில் அன்பர்கள் வேனிற்காலத்தே பருகுவதற்காகப் பனை மரங்கள் நட்டு நீர் வார்த்து வளர்த்து வந்தார். அடியவர்க்கெனத் தான் வளர்த்த, வானுற ஓங்கி வளர்ந்த அப்பனை மரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனைக் கண்ணுற்ற சமணர்கள் அவ்வடியாரைக் கேலி செய்து உன் சிவனருளால் ஆண் பனையெல்லாம் பெண் பனையாக மாறி காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞானசம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில்,

     

    குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்    

        அரும்பு கொன்றை யடிகளைப்    

        பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்    

        விரும்பு வார்வினை வீடே.    

    என முடிக்கும்போது ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றதைக் கண்ட அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழை பொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.

     

    திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம், காமகோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங்களைப் போற்றி, காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங்காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றி திருக்காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள திருக்கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

    தொடரும்

    Share
  • சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ
    சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
    அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
    அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம்

    தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
    தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
    உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
    உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

    உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
    தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
    சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
    அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

    தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
    பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
    மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
    மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

    பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
    சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
    திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
    சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

    புத்தாடை  உடுத்துவார் புத்துணர்வு பெறுவார்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழச் செய்யும்
    இல்லங்கள் தோறும் இனிப்பான பலகாரம்
    எல்லோரும் சித்திரையை ஏந்தியே மகிழுவார்

    ஆலயம் செல்லுவார் ஆண்டவனைப் பணிவார்
    அறிவோடு தெளிவும் அமைந்திடவே வேண்டுவார்
    உறவுகளை அழைப்பார் உபசாரம் செய்குவார்
    மூத்தோரை வணங்கி முழுவாசி பெற்றிடுவார்

    ஈழத்தில் இருவினத்தார் கொண்டாடி மகிழ்வார்
    சிங்களமும் செந்தமிழும் சித்திரையைச் சிறப்பிக்கும்
    தமிழகமும் கொண்டாடும் வடநாடும் கொண்டாடும்
    தனிச்சிறப்பாய் சித்திரையும் சிறப்பாக மலர்ந்துவிடும்

    அறிவியலும் கலந்திருக்கு ஆன்மீகம் நிறைந்திருக்கு
    சமயமொடு சன்மார்க்கம் சமத்துவம் அமைந்திருக்கு
    இல்லார்க்கும் இன்பந்தரும் இருப்பார்க்கும் இன்பந்தரும்
    எல்லோர்க்கும் நல்லதையே நல்கவரும் சித்திரையே

    பட்டிமன்றம் பாட்டரங்கம் பாங்காக நடக்கும்
    பலவறிஞர் பாடகர்கள் விருந்தளித்து நிற்பார்
    ஆண்டவனின் கோவில்களில் உற்சவங்கள் நடக்கும்
    ஆனந்தம் பொங்கிடவே சித்திரையும் மலரும்!

    Share
  • கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்!

    கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கீதை சொல்லக் கண்ணன் தேரேறி வந்தான்
    பார்த்தனுக்குப் பாதை காட்டியவன் நின்றான்
    பார்த்தனவன் தெளிந்தான் பக்குவத்தை அடைந்தான்
    பாரிலுள்ளார் விழிக்கப் படித்திடுவோம் கீதை

    கீதையைப் படித்தால் பாதை தெளிவாகும்
    பாதை தெளிவானால் பயணம் சிறப்பாகும்
    பயணம் சிறப்பானால் மனது மகிழ்வடையும்
    மனது மகிழ்வடைந்தால் நிறைவுவங்கே பொலியும்

    எண்ணுகின்ற எண்ணம் இழுக்ககற்ற வேண்டும்
    இழுக்ககன்று நிற்க இறைநினைப்பு வேண்டும்
    இறைநினைப்பை ஊட்ட கீதை வழிகாட்டும்
    வழிகாட்டும் கீதை வாழ்க்கைத் துணையாகும்

    கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்
    வாழும் நெறியாக்கினால் வாழ்வு வளமாகிடும்
    வாழ்வு வளமாகிட  மனிதமனம் நினைக்குது
    மனிதமனம் துலங்கிட கீதை வழிக்காட்டிடும்

    கீதைசொல்லக் கண்ணன் நாளும் வருகின்றான்
    பார்த்தனாய் இருப்பார் பக்கம் வருகின்றான்
    உயர்வான கீதையை உபதேசம் செய்து
    மகிழ்வாகக் கண்ணனும் வருகின்றான் தினமும்

    பார்த்தனாய் நாமும் பக்குவமாய் இருந்தால்
    கண்ணனது கீதை கருத்தினிலே பதியும்
    கருத்தினிலே பதிந்தால் கண்ணனுமே தெரிவான்
    கண்ணனது கீதை கண்ணனையே காட்டும்!

    Share
  • முகமும் முதுகும்

    முகமும் முதுகும்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “அணுக்கமான அன்புகள்
    அந்நியமாக்கிய அலைபேசிகள்!
    அன்றாடம் அலுவலகத்தில்,
    முகம்பார்க்க அகம்இல்லை.
    வணக்கமும் சிரிப்பும்
    நற்பண்பின் அடையாளம்!
    கரம்குவித்து வாய்திறந்து
    சொல்லவேண்டிய வணக்கம்,
    புலனக்குழுவில் மட்டுமே!
    அலைபேசியில் அலைந்தமனம்,
    முகம்பார்த்து சிரிக்கமறந்தது.
    நேரேபார்த்து வணங்கமறுத்தது!
    பண்பற்ற மனிதவாழ்வில்
    பண்பாடு சீர்குலைந்தது.
    அலைபேசியில் மணிக்கணக்கில்
    உரையாடி மகிழ்கின்றோம்.
    அருகிலிருப்போரிடம் அரைமணிநேரம்கூட
    உறவாடத் தயங்குகின்றோம்!
    தயக்கத்தின் காரணமென்ன?
    பேசநேரம் இல்லையோ?
    அப்படியொன்றும் வேலையில்லை.
    உள்ளுர அன்பிருந்தும்,
    வார்த்தைகள் இல்லையே…
    முகம்பார்த்துப் பேசவிடாமல்,
    தடுப்பதுஎது? ஏன்இப்படி?
    உள்ளிருக்கும் ஆணவமே,
    அனைத்திற்கும் காரணம்!

    நிஜத்தைவிட்டு நிழலைத்தேடி…
    பாதைதெரியாமல் செல்லும்பயணத்தில்…
    நீபெரிதா? நான்பெரிதா?
    ஏன்இந்தப் போராட்டம்?
    ஆணவத்தை அகற்றுவோம்.
    முகம் பார்ப்போம்,
    நித்தம் பேசுவோம்,
    நிஜமாகச் சிரிப்போம்!

    கவலைகள் மறப்போம்,
    நிலையில்லா வாழ்வில்…
    உறவுகளுக்கே முதலிடம்!
    முதுகுபார்க்கும் அலைபேசிபேச்சுக்கு,
    வைப்போம் முற்றுப்புள்ளி.
    முகம்பார்த்து நேரில்பேசி,
    தொடர்வோம்… வாழ்க்கைப்படகு!”

    Share
  • அமெரிக்க இதழியல் புரட்சியாளர்!

    அமெரிக்க இதழியல் புரட்சியாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலுள்ள மேக்கோவில் (Makó, Hungary) ஏப்ரல் 10, 1847ஆம் ஆண்டு பூலாப் புலிட்சர், எலிஸ் பெர்கர் (Fülöp Pulitzer, Elize Berger) எனும் யூத இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ஜோசப் புலிட்சர் (Joseph Pulitzer). அவருக்கு 4 உடன்பிறப்புகளும் இருந்ததாகத் தெரிகின்றது; ஜோசப்பின் தந்தையார் கூலவாணிகம் செய்து ஓரளவு வளமையுடன் இருந்தமையால் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளித்துவந்தார். ஆனால் ஜோசப் சிறுவனாக இருந்தபோதே அவர் மறைந்தமையால் குடும்பத்தின் பொருளாதாரம் நொடித்துப் போனது.

    வாய்ப்புகளின் தேயமாக விளங்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தால் தம் வாழ்க்கை வளம்பெறும் என்று கருதிய புலிட்சர் அமெரிக்காவுக்குச் செல்லவிரும்பினார்.

    ஆனால் எப்படிச் செல்வது? பயணச் செலவுக்கான பணத்தை எப்படிப் பெறுவது?

    அக்காலக்கட்டத்தில் (1864) அமெரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டுப் போரில் (Civil War) ஈடுபடுவதற்கு ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வீரர்களைத் தெரிவுசெய்துகொண்டிருந்தது அமெரிக்க இராணுவம். அதனைப் பயன்படுத்தித் தம்மையும் படைவீரராகப் பதிவுசெய்துகொண்டார் புலிட்சர். எனவே அவரது அமெரிக்கப் பயணத்திற்கான செலவை அமெரிக்க இராணுவமே பார்த்துக்கொண்டது.

    தம்முடைய 17ஆவது அகவையில் அமெரிக்கா வந்த அவர் ஒன்றியப் படையில் (Union Army) இணைந்தார். ஆபிரகாம் இலிங்கனின் குதிரைப் படையில் (Cavalry) ஓராண்டுக்காலம் பணியாற்றினார். 1865இல் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பல்வேறு இடங்களில் சிறுசிறு பணிகள் செய்துவந்த அவர் பின்னர் மிசௌரி மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸுக்கு (St. Louis, Missouri) வந்துசேர்ந்தார். அங்கிருந்த அச்சகங்களில் வேலைசெய்து இதழியலைக் கற்று, செயின்ட் லூயிஸிலிருந்து வெளிவந்த ஜெர்மன்மொழிச் செய்தித்தாளான வெஸ்ட்லிக்கே போஸ்ட்டில் (Westliche Post) அச்சுக்கோப்பவரானார்; பின்னர் இதழாளராகவும் பயிற்சிபெற்றார். இதழியல்சார் பணிகள் அனைத்தையும் தம்மோடு பணியாற்றிய சக ஊழியர்களைப் பார்த்தே கற்றுக்கொண்டார் புலிட்சர்!

    1872இல், ‘செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச்’ (St. Louis Post-Dispatch) எனும் நாளிதழின் இணை உரிமையாளரானார் புலிட்சர்; 1878-ஆம் ஆண்டிற்குள் அந்த நாளிதழ் அவரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது. புலனாய்வு இதழியல், ஊழல் எதிர்ப்புச் செய்திகள், தொழிலாளர்கள், குடியேறிகளுக்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்ட புரட்சிகரமான நாளிதழாக அது திகழ்ந்தது. அமெரிக்காவில் புலனாய்வு இதழியல் (investigative journalism) எனும் துறையைப் பிரபலப்படுத்திய பெருமை ஜோசப் புலிட்சரையே சாரும்.

    அக்காலத்தில் ’நியூயார்க் வேர்ல்ட்’ (New York World) எனும் நாளிதழைச் சிரமப்பட்டு நடத்திக்கொண்டிருந்த அதன் உரிமையாளர் பிராங்க் மன்சியிடமிருந்து (Frank Munsey) அவ்விதழை 1883இல் வாங்கிய புலிட்சர், வெகுமக்களைக் கவரும் வகையில் அந்நாளிதழில் தொடர்கதைகள், கேலிச்சித்திரங்கள், புலனாய்வுச் செய்திகள், விளக்கப்படங்கள் எனப் பலவற்றை அறிமுகப்படுத்தினார். நியூயார்க் வேர்ல்ட் நாளிதழைப் புதிதாக வாங்கி நடத்தியபோதும் செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச் நாளிதழின் உரிமையாளராகவும் மேலாளராகவும் தொடர்ந்து செயற்பட்டுவந்தார் அவர்.

    நியூயார்க் வேர்ல்ட் நாளிதழில் 1886இல் பணிக்குச் சேர்ந்த நெல்லி பிளை (Nellie Bly) எனும் பெண் இதழாளர் துணிச்சலாகச் செயற்பட்டு நியூயார்க்கின் பிளாக்வெல் தீவிலிருந்த மனநலக் காப்பகத்தில் (Blackwell’s Island Insane Asylum, New York City) நடந்த முறைகேடுகளை, தாமே மனநோயாளிபோல் அங்கே தங்கி, அறிந்துவந்து அம்பலப்படுத்திப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    காலவோட்டத்தில் ’நியூயார்க் வேர்ல்ட்’ நாளிதழுக்குக் கடும்போட்டியாக விளங்கத் தொடங்கியது வில்லியம் ராண்டால்ப் ஹர்ஸ்ட் (William Randolph Hearst) என்பவர் நடத்திவந்த ’நியூயார்க் ஜர்னல்’ எனும் மற்றொரு நாளிதழ். தொழில்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று கருதிய புலிட்சர் பெரிய மனிதர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கிசுகிசுக்களையும் நியூயார்க் வேர்ல்டில் வெளியிட்டு மக்களின் மலின விருப்பங்களுக்குத் தீனிபோட்டார். இதனால் மஞ்சள் பத்திரிகை (yellow journalism) எனும் விமர்சனத்தை எதிர்கொண்டது அந்நாளிதழ். தொழில்போட்டியில் வெல்லவேண்டும் எனும் எண்ணமானது உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்களையும் தரந்தாழ்ந்த செயல்களைச் செய்ய வைக்கும் என்பதற்கு இஃதோர் சான்று!

    எனினும் சமூகநலன்சார் கருத்துக்கள், அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்துதல் போன்றவற்றையும் தொடர்ந்து வெளியிட்டு நாளிதழின் முதன்மை நோக்கத்தைக் கைவிடாது காத்துவந்தார் புலிட்சர். சிறிது காலத்திற்குப்பின் போட்டி வேகம் தணிந்து, சமூக முன்னேற்றம், அறக்கேட்டிற்கு எதிரான கருத்துக்கள், மறைக்கப்பட்ட உண்மைகளைப் புலனாய்வின் வாயிலாய் வெளிக்கொணர்தல் போன்றவற்றுக்கே முதன்மை தந்தார் புலிட்சர் என்றறிகின்றோம்.

    இதழியல், இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்குப் பரிசளிக்கும் நோக்கிலும், இதழியல் பள்ளியை நிறுவும் நோக்கிலும், 1904ஆம் ஆண்டு, தம் சொத்தின் ஒரு பகுதியை நியூயார்க்கிலுள்ள கொலம்பியாப் பல்கலைக்கழகத்திற்கு (Columbia University, New York) ஒதுக்கி உயில் எழுதிவைத்தார் ஜோசப் புலிட்சர்.

    இதற்கிடையே பார்வையிழப்பு, நரம்புச் சிதைவு போன்ற பல கடுமையான உடல்நலக் கேடுகளால் அவதியுற்றுவந்த புலிட்சர், 1911ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் தம்முடைய 64ஆவது அகவையில் உயிர்நீத்தார். 1917ஆம் ஆண்டு புலிட்சர் பரிசுகள் (Pulitzer Prizes) நிறுவப்பட்டுத் தகுதியானோர்க்கு ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. [1943ஆம் ஆண்டுமுதல் இசைத்துறைச் சாதனையாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்படுகின்றது.] 1912ஆம் ஆண்டுமுதல் இதழியல் பள்ளி கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் (Columbia University Graduate School of Journalism) செயல்படத் தொடங்கிற்று.

    ஹங்கேரியில் பிறந்த ஜோசப் புலிட்சர், கண்டம்விட்டுக் கண்டம்வந்து தம் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இதழியல் துறையில் சாதனை படைத்ததோடல்லாமல் அத்துறையிலும் பிற படைப்பாக்கத் துறைகளிலும் சாதனை புரிவோரைப் பாராட்டும் வகையில் பரிசுகளையும் நிறுவியது பெரும் பாராட்டுக்குரியதன்றோ?

    புலிட்சர் பரிசின் முன்பக்கம்/பின்பக்கம்

    அமெரிக்காவின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசாகக் கருதப்பெறும் புலிட்சர் பரிசினைப் பெறுவதற்கு நாம் அமெரிக்கராக இருக்கவேண்டும் என்பதில்லை; அமெரிக்காவில் வாழும் பிறநாட்டினரும் இப்பரிசுக்குத் தகுதியானவரே; ஆனால் பரிசுக்காக அனுப்பப்படும் படைப்புகள் அமெரிக்காவில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்; ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்; பிறமொழி நூல்களாக இருப்பினும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தே அனுப்பவேண்டும்.

    புலிட்சர் பரிசினை வெல்வோருக்கு 15,000 அமெரிக்க வெள்ளியும் வெண்கலப் பதக்கமும் சான்றிதழும் ($15,000 USD, a certificate and a bronze medallion) வழங்கப்பெறும்!

    *****
    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://www.britannica.com/biography/Joseph-Pulitzer
    2. https://americanaristocracy.com/people/joseph-pulitzer
    3. https://en.wikipedia.org/wiki/Joseph_Pulitzer
    Share