முகமும் முதுகும்

முனைவர் கு. வளர்மதி,
உதவிப்பேராசிரியர்,
இளங்கலைத் தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.

“அணுக்கமான அன்புகள்
அந்நியமாக்கிய அலைபேசிகள்!
அன்றாடம் அலுவலகத்தில்,
முகம்பார்க்க அகம்இல்லை.
வணக்கமும் சிரிப்பும்
நற்பண்பின் அடையாளம்!
கரம்குவித்து வாய்திறந்து
சொல்லவேண்டிய வணக்கம்,
புலனக்குழுவில் மட்டுமே!
அலைபேசியில் அலைந்தமனம்,
முகம்பார்த்து சிரிக்கமறந்தது.
நேரேபார்த்து வணங்கமறுத்தது!
பண்பற்ற மனிதவாழ்வில்
பண்பாடு சீர்குலைந்தது.
அலைபேசியில் மணிக்கணக்கில்
உரையாடி மகிழ்கின்றோம்.
அருகிலிருப்போரிடம் அரைமணிநேரம்கூட
உறவாடத் தயங்குகின்றோம்!
தயக்கத்தின் காரணமென்ன?
பேசநேரம் இல்லையோ?
அப்படியொன்றும் வேலையில்லை.
உள்ளுர அன்பிருந்தும்,
வார்த்தைகள் இல்லையே…
முகம்பார்த்துப் பேசவிடாமல்,
தடுப்பதுஎது? ஏன்இப்படி?
உள்ளிருக்கும் ஆணவமே,
அனைத்திற்கும் காரணம்!

நிஜத்தைவிட்டு நிழலைத்தேடி…
பாதைதெரியாமல் செல்லும்பயணத்தில்…
நீபெரிதா? நான்பெரிதா?
ஏன்இந்தப் போராட்டம்?
ஆணவத்தை அகற்றுவோம்.
முகம் பார்ப்போம்,
நித்தம் பேசுவோம்,
நிஜமாகச் சிரிப்போம்!

கவலைகள் மறப்போம்,
நிலையில்லா வாழ்வில்…
உறவுகளுக்கே முதலிடம்!
முதுகுபார்க்கும் அலைபேசிபேச்சுக்கு,
வைப்போம் முற்றுப்புள்ளி.
முகம்பார்த்து நேரில்பேசி,
தொடர்வோம்… வாழ்க்கைப்படகு!”

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *