Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பார்த்தனுக்கு முன்பே பசுவுக்கு கீதையை
    வார்த்தைகள் இல்லாது, வேய்ங்குழல் -கீர்த்தனையாய்
    ஊதுகிறான் கண்ணன்; உலக உயிர்களில்,
    பேதமில்லை என்றே பொருள்”….
    (OR)
    பாடுகிறான் கண்ணன் ;பசுபார்த்தன் என்றவேறு
    பாடுபோக ஞானம் பிறப்பு”….கிரேசி மோகன்”….கிரேசி மோகன்….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ” கண்ணனைக் கண்டேன்நான் கேசவ்கை வண்ணத்தில்,
    ZENனென கண்மூடி சர்பம்மேல் -நின்னவன்;
    மென்பூ கசங்காது மேவிடும் வண்டேபோல்
    KUNGFU கிருஷ்ணா குதிப்பு”….கிரேசி மோகன்….

    This is Kung Fu Krishna drawn years back. 🙂 Rhis also includes
    the Yin and Yang- subject is Kaliyamardhana.
    With regards,
    Keshav

    Share
  • வெற்றிப் பத்து

    கே.ரவி

    [ரமணனும், சு.ரவியும் நவராத்திரி ஒன்பது நாட்களும் மாறிமாறிப் பெய்யும் கவிமாரியில் நனைந்து, நெகிழ்ந்து, குளிர்ந்து வீரமாகாளி, விண்ணும் மண்ணும் ஆளும் வீரை சக்தி, அகணித தாரா கணங்களின் நடுவே ஆடும் பராசக்தி, இனியொரு யுகம் சாந்த ஸ்வ்ரூபிணியாய், அழகே உருவான வாலைக் குமரியாய், ஒயிலே வடிவான மதுரைப் பேரரசியாய்ப், பொன்மழை பொழியும் செங்கமலத் தாயாய், மேலவர் நாவெனும் மலர்ப்பதங்கள் கொண்ட கலைச்செல்வியாய் மட்டுமே இருப்பதென்று சங்கல்பம் செய்யப் கூடுமோ!]

    vetri 10

    [mixcloud]http://www.mixcloud.com/jothi-s-themozhi/yaarindha-azhagu-chelvi/[/mixcloud]

    (01-10-2014)

    யாரிந்த அழகுச் செல்வி யாழெடுத் தமர்ந்து கொண்ட

    வாறெந்தென் உள்ள மெங்கும் ஆனந்த லஹரி யாய்த்தேன்

    மாரிபெய் தந்தத் தேனில் மலர்ந்ததோர் வண்ணப் பூவாய்

    மாறியப் பூவில் மொய்க்கும் வண்டுமாய் ஆன தென்னே (1)

     

    பொன்வண்டுச் சிறகின் ஓசை பூந்தென்றல் காற்றின் ஓசை

    மின்னலே வீணை யாக மீட்டும்கை விரல்கள் ஓசை

    புன்னகை ஓசை நெஞ்சில் புரள்கின்ற அலைகள் ஓசை

    என்னென்ன ஓசை அம்மா எழில்கொஞ்ச நடக்கி றாளே (2)

     

    ஓசையைச் சொல்லப் பாடல் ஒருநூறு வேண்டும் நெஞ்சின்

    ஆசையைச் சொல்ல வோபல் லாயிரம் வேண்டும் காற்று

    வீசவும் அந்த வீச்சில் சருகுகள் சரச ரத்துப்

    பேசவும் கவிதை யொன்று பேசாமல் மலர்ந்த தாமே (3)

     

    கவிதையின் நடனத் தைக்கண் கொட்டாமல் பார்த்தி ருக்கும்

    புவியெனும் குழந்தை யாகிக் குழந்தையை மடியி ருத்தும்

    தவிசாகித் தாயும் ஆகி தாய்மையின் ஊற்றும் ஆகிச்

    செவியாகிச் சிந்தை யாகிச் சிலிர்க்கின்ற சிலையா னாளே (4)

     

    சிலையென்றா சொல்லி விட்டேன் சிலையிலே சிறக சைக்கும்

    கலையாகி உளியு மாகிக் கலையிலே பின்னி வைத்த

    வலையாகி என்ம னத்தை வானமாய் விழுங்கு கின்ற

    உலைநெருப் பில்சி ரிக்கும் ஊர்த்துவ ஜ்வாலை யன்றோ (5)

     

    சிரிப்பிலே சிந்து கன்னக் கதுப்பிலே விருத்தம் பார்வைத்

    தெறிப்பிலே வஞ்சி என்னைச் சேர்த்தணைக் கின்ற அன்பு

    நெறிப்பிலே அகவல் எந்தன் நெஞ்சிலே வெண்பா காட்சி

    விரிப்பிலே கலித்து றையென் நெற்றியில் வெற்றிப் பொட்டே (6)

     

    கலியினைப் பிளந்து சாடக் கைகளா யிரமா வேண்டும்

    கலியாணக் கோலங் காட்டிக் கண்ஜாடை செய்தால் போதும்

    நலியாத நெஞ்சுக் குள்ளே நம்பிக்கைச் சுடரை ஏற்றும்

    மெலிதான புன்ன கைப்பூ அதுபோதும் அதுவே போதும் (7)

     

    புன்னகை யாலே இந்தப் புவியெலாம் நின்று காக்கும்

    அன்னையை வணங்கு கின்றேன் அன்பிலே ஒடுங்கு கின்றேன்

    சொன்னசொல் பலிக்கச் சொர்ண பிம்பமாய் ஜொலிக்கச் சொன்ன

    வண்ணமே வெற்றி சேர்க்க வருமலர்ப் பதங்கள் போற்றி (8)

     

    வெற்றியாய் வேலெ றிந்து விண்ணவர் தம்மைக் காத்த

    பெற்றியைப் பெற்றெ டுத்த பெண்மையாய் உண்மைத் தீயாய்ச்

    சுற்றிலும் உள்ள சூழ்ச்சித் திரைகளை அகற்றி எந்தன்

    நெற்றியில் திலக மாகி வளர்கின்ற முழுநி லாவாம் (9)

     

    திலகவா ணுதலாம் திங்கள் உதிக்கின்ற உச்சி யாமிவ்

    வுலகவாழ் வினையும் தூய ஒளிதந்து துலங்கச் செய்யும்

    மலர்மகள் கலைம கள்மா மலைமகள் மூன்று மாகி

    விளங்கிடும் மாதா வாம்ஶ்ரீ வித்யாவை வணங்கு கின்றேன் (10)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(124)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    cameron confஇனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    வசந்தகாலம் வந்த சுவடு தெரியாமல் மறைந்ததும் அடுத்து வந்த கோடைக்காலம் காற்றோடு காற்றாக மறைந்ததும் இதோ கண்முன்னே இலையுதிர் காலம் சதிராடுவதும் பச்சைப் புற்தரையை பொன்னிறக் கம்பளம் கொண்டு மூடியதைப் போல புற்களை உதிர்ந்த பொன்னிற இலைகள் மூடி நிற்பது எமக்கு உணர்த்துக்கிறது.

    ஆமாம் இங்கிலாந்திலே இலையுதிர்காலத்தில் எது நடக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகளின் வருடாந்த மாகாநாடு தவறாமல் நடந்தேறி விடும்.

    இதுவரை இங்கிலாந்து அரசியல் தளத்தினில் நடக்கும் அரசியல் போராட்டம் மும்முனைத் தாக்குதலாகத்தான் இருந்தது.

    ஆமாம் கன்சர்வேடிவ் கட்சி , லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி என இவை மூன்றுமே அரசியல் களத்தில் முக்கியமாக மோதிக் கொள்ளும் கட்சிகளாக இருந்தன.

    ஆனால் கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் அடையாததினால் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததும் இப்போராட்டக்களத்தில் இரண்டு கட்சிகளின் மோதல்களே பெருமளவில் இடம்பெற்றன.

    ஆனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய இராச்சியத்தையும் விட்டுவைக்காத காரணத்தினால் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் எடுத்த மிகவும் சிக்கலான செலவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களினால் மத்தியதர, அடித்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது.

    இப்பாதிப்போடு ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டால் பொதுவாக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பாதிப்பினாலும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சமீப காலத்தில் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலுள்ள பலர் ஐக்கிய இராச்சியத்தினுள் இலகுவாக நுழைந்து இந்நாட்டின் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனும் பொதுக் கருத்தின் பாதிப்பினாலும் இவைகளை எதிர்க்கிறோம் என்று தொடங்கப்பட்ட யூகிப் எனும் அரசியல் கட்சியின் ஆதரவு பலமாகியது.

                                      milliband confFarage confclegg conf

    அந்தக் கட்சியின் தலைவரான மைக்கல் ப்ஃராஜ் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராகவிருந்தவர்.  தமது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனதும் தன்னைப் போன்ற மற்றைய உறுப்பினர்களினதும் கொள்கையை முன்னெடுக்கத் தயங்கியதால் அக்கட்சியிலிருந்து வெளியேறி யூகிப் எனும் கட்சியை அரம்பித்தார்.

    ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதை விட அதனிலிருந்து வெளியேறுவதே ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதே இக்கட்சியின் பிரதானக் கொள்கையாகும்.

    இக்கட்சியின் ஆதரவு பெருகி இப்போது இக்கட்சி கருத்துக்கணிப்பில் இதுவரை மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியை விட முன்னனியில் நிற்கிறது.

    அதுதவிர சமீபத்தில் இரண்டு கன்சர்வேடிவ் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு யூகிப் கட்சிக்குத் தாவி இடைத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

    இது ஆளும் கட்சிகளில் முக்கியமான கன்சர்வேடிவ் கட்சிக்கும் அதன் தலைவர் பிரதமர் டேவிட் கமரனுக்கும் தலையிடியைக் கொடுத்துள்ளது…

    இந்நிலையில் தான் 2014ம் ஆண்டு அரசியல் மகாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. முதலில் நடந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மாநாடு சோபிக்கவில்லை. அவர்கள் கொள்கையில் தமக்கு நேர் எதிரான கன்சர்வேடிவ் கட்சியோடு கூட்டரசாங்கத்தில் இணைந்தது அவர்களுக்கு செல்வாக்குச் சரிவையே ஏற்படுத்தியுள்ளது.

    அடுத்து நடந்து முடிந்த யூகிப் கட்சியின் மநாடு அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அரசியலில் புது அதிர்வலையை ஏற்படுத்தியவர்களின் மற்றைய கொள்கைகள் ஏதுவாயிருக்கும் எனும் எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஆயினும் இதுவரை பராளுமன்றக் கதிரையையேக் கண்டிராத இக்கட்சியினர் பதவியிலமர்ந்ததும் அவர்களது நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதுவே அனைவரினதும் கேள்விக்குறி.

    எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சியினரின் மாநாடு அவர்களின் அரசியல் அந்தஸ்திற்கேற்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பேடுகள் எதுவுமின்றி 80 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட், தான் குறிப்பில்லாமல் பேசுகிறேன் என்பதில் கவனமாக இருந்து முக்கியமான கொள்கைகள் இரண்டைப் பற்றிப் பேச மறந்து விட்டார்.

    அட இவரா? பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் போச்சுடா ! எனும் வகையில் பல ஊடகங்கள் இப்பவே அவரது தோல்வியைக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன.

    கடைசியாக நேற்று நடந்து முடிந்த பதவியிலிருக்கும் கட்சியின் மாநாடு கொஞ்சம் விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கின்றன. நாட்டின் உண்மையான நிதி நிலைமையையயும் அதைச் சீர் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அப்படியே மக்களுக்குப் புட்டு  புட்டு வைக்கிறேன் என்று மத்தியதரக் குடும்பத்தினர் பலரை கவலை கொள்ள வைத்த நிதியமைச்சர் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் பொதுக்மக்களின் சர்வஜன வாக்கெடுப்பை 2017ல் நடத்துவோம் என்று மக்களுக்குக் குரல் அளிக்கும் அதிகாரத்தை எமது கட்சியை விட வேறெந்தக் கட்சியும் நடத்துவதாக உறுதியளிக்கவில்லை என்று மார்தட்டிய பிரதமர் மறுபுபுறம்.

    ஆரவாரம் ஓய்ந்ததும் இலைகள் உதிரவும் சரியாகத்தான் இருக்கின்றது.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்பது என்னவோ உண்மைதான் !

    ஆனால் வசந்தத்தின் முடிவில் கோடையின் நுழைவாசலில் வரப்போகும் 2015ம் ஆண்டுத் தேர்தல் என்ன மாறுதலைக் கொண்டுவரக்கூடும் ?

    ஒரு வித்தியாசம் மூன்று கட்சிகளுக்கிடையில் அல்ல நான்கு கட்சிகளுக்கிடையில் நடக்கும் அரசியல் போராட்டம் மக்களுக்கு என்ன மாறுதலைக் கொண்டுவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • நவராத்திரியில் ஒரு ராத்திரி

    -மாதவ. பூவராக மூர்த்தி

    navratri-dollsசொன்னால் நம்ப மாட்டீர்கள். நீங்கள் இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னால் நான் கூட நம்ப மாட்டேன்.

    என் பெண், அம்மாவுக்கு முடியவில்லையென்றால் என்ன? நான் கொலு வைக்கிறேன் என்று அமாவாசை அன்று ஆபீஸிலிருந்து லேட்டாக வந்து நான் தூங்கப் போனவுடன் என் புது வேஷ்டியைக் குட்டி மர பீரோ ஸ்டூல் எல்லாம் வைத்து என்னைத் தொந்தரவு செய்யாமல் பரணிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து ஐந்து படி கொலு வைத்தாள்.

    காலை எழுந்த நான் பிரமித்து என் மோட்டோ ஜீயில் போட்டோ எடுத்து வாட் சாப்பில் போட்டு எல்லாரையும் கொலுவுக்கு அழைத்து விட்டேன். என் மகள் வேலைக்குப் போவதால் காலை ஆபீஸ் போவதற்கு முன் விளக்கேத்தி வாழைப்பழமோ ஆப்பிளோ சாத்துக்குடியோ நைவேத்தியம் பண்ணிவிட்டு அவசரமாக ஓடி விடுவாள்.

    என் மனைவி வருகிறவர்களுக்கு மூன்று நாளாக மில்க் பிஸ்கட், மேரி பிஸ்கட் அல்லது குட் டே பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன் கடைக்குப் போகும்போது கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் என்று மாவுகட்டுப் போட்டு சுழலும் நாற்காலியில் வீட்டைச் சுற்றி வருவதால் கொலுவும் வந்தவர்களும் அவளின் பிரசாதங்களை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் மட்டும் குழந்தைகளின் தயவால் வகை வகையாகச் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்

    நவராத்திரியில் தினமும் சாயங்காலம் என் மச்சினன் குழந்தைகள் புடவை கட்டிக்கொண்டு பிளாட்டில் எல்லா வீடுகளுக்கும் குங்குமச் சிமிழும் ஒரு பையும் எடுத்துக் கொண்டு “குறையொன்றும் இல்லை” பாட்டும் “கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் கண்ணனையும்” பாடி வகை வகையாய்ச் சுண்டல் எடுத்து வர நான் அளவு தெரியாமல் சாப்பிட்டுத் தொலைத்தேன்.

    நேற்று இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க எனக்கு வயிறு கொஞ்சம் கடமுட என்றது. எழுந்து பாத்ரூம் போகலாம் என்று பெட்ரூம் கதவைத் திறக்க முயன்ற போது ஹாலில் பேச்சுச் சப்தம் கேட்டது.

    நான் முதலின் என் பெண் பூர்வஜாதான் டி.வி ஆஃப் பண்ணாமல் வந்து விட்டாள் என்று நினைத்தேன். பாட்டு, வடிவேலு விவேக் குரல் போல இல்லை. உற்றுக் கவனித்தேன்; லேசாக கதவைத் திறந்து பார்த்தேன். திகைத்துப் போனேன். மறுபடியும் சொல்கிறேன். நான் கேட்டதையும் பார்த்ததையும் சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஏதாவது ஒன்று நடக்கும்போது நான் சொன்னதும் நடந்திருக்கக் கூடும் என்று நீங்கள் நம்புவீர்கள் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    படியில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த பொம்மைகள் மிஸ் இல்லாத பள்ளிக் குழந்தைகள் போல இடம் மாறி திரும்பி ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டிருந்தது. என் வயிறு உபாதை மாயமாய் மறைந்தது.

    இடுக்கு வழியாகப் பார்த்தேன். என்ன ஸ்வாரஸ்யமான வம்பு. அவைகளுக்குத்தான் எத்தனை மனக் கிலேசங்கள், பொறாமைகள், குறைகள். எப்போது பேச ஆரம்பித்ததோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கும்போது அது ஒரு சுவாரஸ்யமான பகுதியில் இருந்தது.

    மேல் படியில் இருந்த மரப்பாச்சி பொம்மைகள் குரல் கரகரப்போடு அதற்கு முன்னால் இருந்த மஹாலஷ்மியிடம் தம் குறையைச் சொல்லிக்கொண்டிருந்தன. ”உங்களுக்கு என்ன? பொம்மை செய்யும் போதே வர்ணம் அடித்துப் புடவை…அதில் ஜரிகை. உங்க வீட்டுக் காரருக்குப் பட்டு பீதாம்பரம் எல்லாம் இருக்கிறது. என்னையும் என் வீட்டுக்காரரையும் பாருங்கள். ஒரே பச்சை நிறத்துணி நாலு வருஷமாய்.

    அம்மாவும் பொண்ணும் கடைக்குப் போகும் போதெல்லாம் துணி வாங்க முடிகிறது. எங்களுக்கு ஏன் ஒரு சூடிதார் ஜீன்ஸ் வாங்கி போடக்கூடாது?”

    அவைகளின் ஆதங்கம் நியாயமானதுதான் எனக்கே அந்த மாதிரி ஒரு எண்ணம் உண்டு இவர்கள் மேல்.

    “இதையெல்லாம் பெரிது படுத்தாதே! அவர்கள் நம்மைப் பொம்மைகளாக நினைக்கிறார்கள்.” என்று விஷ்ணு சமாதானம் சொன்னார். “என்னை மேல் படியில் வைத்திருக்கிறார்கள். இருந்து என்ன? ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கிறார்களா? இல்லை ஒரு எம்.எஸ் பாடியதையாவது போடுகிறார்களா? அதுவும் இல்லை. பக்கத்தில் டி.வியைப் பெரியதாக வைத்து விடுகிறார்கள். அடுத்த படியில் இருந்த தசாவதார பொம்மைகள் மெதுவாக ஆரம்பித்தன. தசாவதாரம் வரிசையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன் புதிதாக செட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்தப் பெண் பூர்வஜா பொம்மை அடுக்கும்போது வாமனாவதாரத்தைக் கீழே போட்டு உடைத்து விட்டாள். பழைய பொம்மை; இந்த அம்மாள் கல்யாணம் பண்ணின புதிதில் வாங்கின தசாவதார செட்டில் சேதாரம் போக மீந்திருந்த எங்களை விடச் சின்ன வாமனரை எங்கள் பக்கத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். எங்கள் உயரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குறுகி நிற்கிறார் என்றது ராமர் பொம்மை.

    மூன்றாம் படியில் இருந்த அஷ்ட லக்ஷ்மிகள் போன வருடம் வந்தவர்கள். ஜொலித்தார்கள். மேல் படியில் இருந்த லக்ஷ்மி ஸரஸ்வதி இந்த அஷ்ட லக்ஷ்மிகள் ரொம்பத் திமிராக நம்மிடம் பேசாமல் அவர்களுக்குள் மட்டும் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டு வருஷம் போனால் நம் கதிதான் இவர்களுக்கு என்று தங்கள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாலாவது படியில் இருந்த சிவன் பார்வதி பேச வேண்டாம் என்று இருந்தேன். என் வாயைக் கிளப்பி விட்டீர்கள். அடி முடி காண முடியாத விஷ்ணுவை மேல் படியில் வைத்துவிட்டு இவர்கள் ஹரி தாசர்களாம் (விஷ்ணுவை ஸ்மரிக்கிறவர்கள்) அதனால் என்னை ஒரு படி இறக்கி என்னை நாலாவது படியில் வைத்து என் குடும்பத்தையும் வைத்து என்னை அவமதிக்கிறார்கள்.

    “என்ன செட்டியாரே உங்க வியாபாரம் எப்படி? என்று மேற்படியில் இருந்த மரப்பாச்சி உரக்கக் கேட்டது. செட்டியார் மெதுவாகத் திரும்பி இந்தக் கிண்டல் தானே வேண்டாம். என்னை இங்கு உட்கார வைத்து ஒரு பண்டம் கூட விற்பதற்கு இல்லை. இவர்கள் ஃப்லிப்கார்டில் எல்லாம் வாங்குவதால் ஆன் லைன் டிரேடிங்க் காலமாகப் போகிவிட்டது.

    ராகவேந்திர சுவாமிகள் மௌனமாகவே இருந்தார். இதற்குள் இந்த மரப்பாச்சி வந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை. நேத்திக்கு வந்த 43 பிளாட் நம்பர் மாமி ஸ்ருதி சேராம ஶ்ரீமன் நாராயண பாடினாள். விஷ்ணு கண்ணை மூடிக்கொண்டு விட்டார்.

    இன்னும் ரெண்டு மாமிகள் வந்து உட்கார்ந்து பாட்டுப் பாடாமல் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் கொலு வைப்பதைவிட நம்மைக் கொலுப் பெட்டியிலே வைத்து இருக்கலாம். டி வி யில் சிந்துஜா நவராத்திரி பற்றிப் பேசுவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அவள் கழுத்தை நெரித்து இவர்கள் சிரிப்பொலி வைக்கும்போது அப்படிப் பற்றிக் கொண்டு வருகிறது. என்ன பண்ணுவது நாம் பொம்மைகளாகப் போய்விட்டோம்.

    சரி சரி யாராவது வந்துவிடப் போகிறார்கள் பேசாமல் பொம்மையாக மாறி விடுங்கள் என்று மஹாவிஷ்ணு சொன்னவுடன் மாயமாய் எல்லாம் பூர்வஜா (என் மகள்) வைத்த மாதிரியே இருக்கிறார்கள்.

    நான் வெளியே வந்து பாத்ரூம் போய்விட்டுக் கொலு அருகில் போய் நின்றேன். எல்லாம் பொம்மைகளாகத்தான் இருந்தன. எனக்குத்தான் பிரமையா?

    உள்ளே போய்ப் படுத்தேன். நாளை முதல் பக்தியுடன் மாலை சுண்டல் செய்யச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ் அம்மா பாட்டுப் போட வேண்டும். சாயங்காலம் கொஞ்ச நேரமாவது டி வியில் சினிமா சம்பந்தமாகப் போடக்கூடாது என்று முடிவு செய்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

    “என்ன எழுந்திருக்கிறேளா…? பால் வாங்கிண்டு வரணும்…காலங்காத்தால அப்படி என்ன குறட்டை விட்டுண்டு தூக்கம்?” என்றாள். எழுந்தேன் வந்து ஹாலில் பார்த்தால் எல்லா பொம்மைகளும் ஒன்றுமே நடக்காதது மாதிரி உட்கார்ந்திருக்கின்றன.

    நான் நேற்று இரவு கேட்டதும் பார்த்ததும் உண்மையா பொய்யா சொல்லுங்களேன்?

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 25

    –சு.கோதண்டராமன்.

     

    விஷ்ணுவும் ருத்ரனும்

     

    sivavishnu

     

    விஷ்ணு

     

    vamanவேதத்தில் விஷ்ணு பற்றிய மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும் அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப் பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன், அர்யமன், வருணன், மித்ரன் முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.

    விஷ்ணு என்ற சொல் எங்கும் வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும், இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.

    இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

    விஷ்ணுவின் ஒரு அடைமொழியான அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.

    மனிதன் தேவனாகும் மார்க்கத்தில், தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும் அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். (1.22.20)    

    தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால் (1.110.3, 4.54.2)  விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர்தான் என ஊகிக்க முடிகிறது. சூரியன், ஸவிதா, பகன், பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக் குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.

    விஷ்ணு இந்திரனின் நண்பர். அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத் தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில் இருப்பதாக ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.

    எல்லாத் தேவர்களையும் போல, இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும் ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு அளிக்கிறார்.

     

    ருத்ரன்

     

    SHIVAரிக் வேதத்தில் ருத்ரனைப் போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள் இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம். தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன் வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர், நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம் மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.

    ருத்ரன் கோபம் மிகுந்தவர். உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.

    மற்ற தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள் இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.

    மருத்துகளின் தந்தை என்று போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.

    அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன், மருத், இந்திரன். இவர்களில் குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன்தான்.

    எல்லாத் தேவர்களும் ருதம் என்னும் இயற்கை நியதியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகக் கூறப்படும்போது, ருத்ரன் அவ்வாறு தொடர்பு படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்கு உரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.

    ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. யஜுர் வேதத்தில் ருத்ரனின்  கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும் வலியுறுத்தப்படுகின்றன.  பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.

     

     

     

     

     

     

    படங்களின் தேர்வு இணையத்திலிருந்து

    Share
  • தாமரைத் தெய்வம்

    இசைக்கவி ரமணன்

    942642_763177157075789_1200482388492604033_n

    சின்னக் குழந்தை சிரிப்பினிலும், அந்தச்
    சித்திரை வானத் தெறிப்பினிலும். நல்ல
    கன்னலி லேமுண்டும் கணுக்களிலும், நம்
    கண்ணில் படாத அணுக்களிலும், மங்கை
    கன்னத்தில் ததும்பும் மின்னலிலும், தென்றல்
    கானத்தில் அசையும் சென்னெலிலும், தோன்றி
    என்னை மயக்கிக் கவிதைசொல்வாள், இசை
    ஏழுக்கும் எட்டாத வாணியவள்!

    ஓரக் குயில்மேவும் காதலினால், மனம்
    உருகி இசைத்திடும் பாட்டினிலும், விழி
    சோரக் கருத்திடும் வேளையிலே, மழை
    சொட்டுச்சொட் டாய்விழும் ஓசையிலும்
    நேரமென் னும்பொய்யை நீக்கிவிட்டே, நம்
    நெஞ்சினி லேவளர் கானத்திலும்
    தூரத்தி லிருந்து தூண்டிவிடும், ஒலித்
    தூய்மையி லேயிவள் தோன்றிடுவாள்!

    கல்லை உடைக்கின்ற கைகளிலே, அந்தக்10574236_1490587474554176_3016036001259081854_n
    கழனி அளைகின்ற கால்களிலே, ஒற்றைச்
    சொல்லுக் குயிரைப் பணயம்வைத்து, நின்று
    துடிக்கும் கவிஞரின் உள்ளத்திலே
    மல்லுக்கு நிற்கின்ற மடமையெல்லாம். வீழ்ந்து
    மாய்ந்தபின் னெழும்கர வொலியினிலே, நெஞ்ச
    வில்லுக்கு விசையும் அம்பும்தந்து, அதை
    வீணையாய் மீட்டிடும் விந்தையிவள்!

    அறிவை வெறுப்பவன் வெறும்முட்டாள், ஆனால்
    அறிவைத் தொழுபவன் அடிமுட்டாள், என்று
    செறிவுடன் பேசிடும் வேதமொழி, இவள்
    சேல்விழி ஓரத்தில் மையெழுதும்
    அறிவை வழங்கியும் ஆதரிப்பாள், அதை
    அறிந்து துறப்பவ ரையணைப்பாள், புத்தித்
    தறியினில் சிக்காது தெய்வநெறி, எங்கள்
    தாமரைத் தெய்வத்தின் தாளைப்பணி!

    உழைப்பை மதிப்பவ ரைவணங்கி, அவர்
    உள்ளத்தில் வாழ்ந்திட வேயிணங்கி
    அழைப்பவர் அழைத்த படிநுழைந்து, அவர்
    ஆடிடப் பாடிட அகமகிழ்ந்து, தமிழ்
    தழைக்கச் செய்திடும் தாள்களினை, என்னைத்
    தாங்கி அசைத்திடும் தோள்களினை, வீழும்
    மழைக்குள் இறங்கி மண்மணக்கும், எந்தன்
    மனத் தறுவாயில் மணியொலிக்கும்

    கானத்தின் ராணியைக் காதலித்தேன், எந்தன்
    கவிதையின் சோதியைக் கைபிடித்தேன்
    மோனத் தவத்தினில் மூண்டுவரும், இந்த
    மெளனத்தின் தேவிமேல் மோகம்கொண்டேன்
    தேனந்தி மாலை நேரத்திலே, ஒரு
    தெய்வீக நதியின் தீரத்திலே, அங்கு
    நானற்றுப் போனவோர் நற்கணத்தே, எந்தன்
    நாதத்தின் தேவியை நான்கலந்தேன்!

    03.10.2014 / வியாழன் / 6.30

    Share
  • ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    AADALUDAN...

     

    ஆடலுடன் பாடலைக் கேட்டு..

    தமிழ்த்திரை வரலாற்றில் எத்தனையோ பஞ்சாபி வகைப் பாடல்கள் இடம்பெற்ற போதும்.. இப்பாடல் அவற்றுக்கெல்லாம் தலைமை தாங்கும்!

    மக்கள் திலகத்துடன் இணைந்து விஜயலட்சுமி ஆடல்தர.. மனதில் மகிழ்ச்சியைக் கொட்டிக்கவிழ்க்கின்ற திரைப்பாடலாய்!  பள்ளி கல்லூரி தளங்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில் அன்றும் இன்றும் என்றும் என பெரும்பாலும் இடம்பெற்ற இந்தப் பாடல் இசையில் ஒரு குதூகலம்!

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு!  ஆடல் கலையை பயின்று அறிந்து வைத்திருந்த விஜயலட்சுமி அவர்களுடன் எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து ஆடியது இந்தக் காட்சியில் …

    கதையின் போக்கை உள்வாங்கி கவிஞர் ஆலங்குடி சோமு வரைந்தளித்த இப்பாடலை உச்சஸ்தாயியில் டி.எம்.செளந்திரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள்! இதில் ஆடலும் உண்டு!  பாடலும் உண்டு!  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் புதுமைகளை நாளும் கொண்டுவரவேண்டும் என்கிற அவரின் உள்மனதின் தாகம் – வட இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் பஞ்சாபி நடனம் பாணியில் வழங்கிய முத்திரைப் பாடல்!

    http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw
    காணொளி: http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw

    ஆடலுடன்பாடலைக்கேட்டு
    படம்: (குடியிருந்த கோவில் (1968)
    பாடல்: ஆலங்குடி சோமு
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    ………………………………………………………………..

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    கண்ணருகில் பெண்மை குடி ஏற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இள நீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக
    கண்ணருகில் பெண்மை குடி ஏற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இள நீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக

    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
    உரியவன் நீ தானே

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம் போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு
    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம் போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு

    விம்மி வரும் அழகில் நடை போடு
    வந்திருக்கும் மனதை எடை போடு
    வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
    விம்மி வரும் அழகில் நடை போடு
    வந்திருக்கும் மனதை எடை போடு
    வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
    உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
    புதுமையை நீ பாடு

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ஆடலுடன் ………………….
                           Alangudi+Somumsvtmsps

    Share
  • கருணைக் கடலே…கலைமகளே!

    -மேகலா இராமமூர்த்தி

    saraswatiவெள்ளத்தால் போகாத வெந்தணலால் வேகாத செல்வம் கல்விச் செல்வம் ஒன்றேயாகும். ஏனைய செல்வங்கள் எல்லாம் கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடும்; கல்வி ஒன்றே மற்றவர்க்கு வழங்க வழங்க (அதனைத் தருபவனுக்குக்) குறையாது மிகும். செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவதும்; செல்லும் தேயமெல்லாம் புகழ் பெறுவதும் கற்றாரே.

    கல்வி எனும் உயரிய செல்வத்தை மாந்தர்க்கு வாரி வழங்கும் தெய்வமாகக் கருதப்படுபவள் நான்முகனின் நாயகியாகிய கலைவாணி. கல்வியேயன்றி ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள் அவள்.

    மனிதர்களின் நாவில் அந்தக் கலைமகள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. அதனாலேயே அவள் ’நாமகள்’ என்று தமிழிலும் ’வாக்தேவி’ என்று வடமொழியிலும்  அழைக்கப்படுகின்றாள். கொள்ளை இன்பத்தைக் கேட்பார்க்குத் தருகின்ற பாவலர்களின் கவிதையிலும், இனிய குரலில் மாதர்கள் பாடும் பாட்டிலும் விரும்பிப் பவனி வருபவள் அவள். தன் திருக்கரத்தில் மாணிக்க வீணையேந்தி அதன் ஒலியில் மகிழ்ந்திருக்கும் அந்த மாதரசி, மழலை மிழற்றும் கிள்ளையின் நாவிலும், கீதமினிய குயிலின் குரலிலும்கூட விருப்பமொடு வாசம் செய்பவள் என்கிறார் மகாகவி பாரதி.

    கலைவாணியைப் போற்றுமுகத்தான், ‘நாமகள் இலம்பகம்’ எனும் பெயரோடு நா வீற்றிருந்த புலமா மகளோடு….” என்ற அடியை ஆரம்பமாகக் கொண்டே ஐம்பெருங்காப்பியங்களில் சிறந்த ஒன்றான சீவக சிந்தாமணி தொடங்குகின்றது. சாத்தனாரின் மணிமேகலையிலும் ஆபுத்திரனின் வரலாற்றைக் கூறும் பகுதியில் ’சிந்தாதேவி’ எனும் பெயரால் கலைமகள் குறிக்கப்பெறுகிறாள்.

    இதோ அவ்வரலாறு …

    தன் வளர்ப்புத் தந்தையான இளம்பூதி என்பவனால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் எனும் அந்தண இளைஞன் செல்வர்கள் பலர் வாழ்ந்துவந்த மதுரை நகரின்கண் பிச்சை வாங்கிக் குருடர்கள், முடவர்கள் முதலிய உடற்குறையுடையோர்க்கெல்லாம் முதலில் அளித்துவிட்டு மீதமிருந்த உணவைத் தான் உண்டு, அவ்வூரிலே இருந்த ‘சிந்தாதேவி’யின் கலை நியமத்தில் (கோயில்) தங்கியிருந்தான்.

    மாரிக் காலத்து நள்ளிருள் வேளையில் ஒருநாள், சில ஏழை மக்கள் ஆபுத்திரன் தங்கியிருந்த சிந்தாதேவிக் கோயிலுக்கு வந்து அவனிடம் தங்கள் பசிக்கொடுமையைக் கூறி உணவளிக்கும்படி வேண்ட, பிச்சையாய்ப் பெறும் உணவேயன்றி வேறு உணவு ஏதுமில்லாத தன் வறுமை நிலையை அவன் அவர்களுக்கு வேதனையோடு விளக்க, ஆபுத்திரன் உணவளிப்பான் என்று நம்பிவந்த அந்த ஏழை மக்கள் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.

    மற்றவர்களின் பசிப்பிணியைத் தீர்க்க இயலாத தன் நிலையை எண்ணி அவன் கழிவிரக்கத்தோடு வருந்தியிருந்த அவ்வேளையில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! ஆம்…நியமத்தில் சிலையாயிருந்த சிந்தாதேவி உயிர்பெற்றாள்; ஆபுத்திரன் அருகே ஓர் பாத்திரத்தோடு அவள் தோன்றி, ”வருந்தாதே! இதோ என் கையிலுள்ள ஓட்டினைக் கொள்வாய்; நாடு வறுமையுற்றாலும் இந்த ஓடு வறுமையுறாது. இதிலிருந்து வரும் அளவிலா உணவை வாங்குவோர் கைகள்தான் வருந்துமேயின்றி; இதில் உணவு ஒருநாளும் குறைவுபடாது” எனக்கூறி அந்த அமுதசுரபியை ஆபுத்திரனுக்கு அளித்தாள்.

    தேவி சிந்தா விளக்குத் தோன்றி
    ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
    நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
    வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
    தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே. (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

    சிந்தாதேவியை நேரில் கண்ட அதிசயத்தில் வாயடைத்துப்போன ஆபுத்திரன், ”சிந்தையில் உறையும் தேவியே, கலைக் கோட்டத்தில் வீற்றிருக்கும் நந்தா விளக்கே, நாமகளே, வானோர்க்கெல்லாம் தலைவியே, மண்ணோர்க்கெல்லாம் முதல்வியே, மக்களின் இடர்கள் அனைத்தையும் நீ களைவாயாக!” என்று அவளைத் தொழுது வணங்கினான்.

    சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
    நந்தா
    விளக்கே நாமிசைப் பாவாய்
    வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
    ஏனோர் உற்ற இடர்களை வாய்…” (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

    கிடைத்தற்கரிய அந்த அமுதசுரபியின் உதவியோடு மக்களின் பசியைப் போக்கிவந்தான் ஆபுத்திரன் என்கிறது மணிமேகலைக் காப்பியம்.

    இதன்மூலம் கல்விக்குத் தெய்வமான கலைமகள் கருணைக்கும் பிறப்பிடமாக இருப்பதை உணரமுடிகின்றது அல்லவா?

    கலைவாணியின் மகிமையை உணர்த்தும் மற்றொரு நிகழ்வு…

    முருகன் அருளால் பேசிய குழந்தையாகக் கருதப்படும் குமரகுருபரர் புண்ணியத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் காசித் திருத்தலத்தில் ஓர் சைவமடத்தை நிறுவும் ஆசை கொண்டார். அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்துவந்த முகலாய மன்னரிடம் (ஷாஜஹான்?) அதுகுறித்துத் தன் கோரிக்கையை வைக்க விரும்பினார். ஆனால் அவருக்கோ மன்னருடன் உரையாடுவதற்குத் தேவையான ஹிந்துஸ்தானி மொழி தெரியாது; மன்னருக்காவது நம் தமிழ் மொழி தெரியுமா என்றால் அவருக்கும் தமிழ் தெரியாது.

    இந்தச் சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசித்தார் குமரகுருபர சுவாமிகள். அவர் மனத்திலே திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் உதித்தது. ஹிந்துஸ்தானி மொழியில் புலமை பெறுவதற்குக் கலைமகளின் அருளை உடனடியாக நாடினால் என்ன? என்பதே அது.

    உடனே சகலகலாவல்லியான சரஸ்வதியின் அருள்வேண்டிச் ’சகலகலாவல்லி மாலை’ என்னும் தெள்ளுதமிழ்ப் பாக்களைக் கொண்ட பதிகத்தைப் பாடிமுடித்தார். அப்பாடல்கள் அனைத்துமே சுவாமிகளின் தமிழ்ப் புலமைக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன.

    சான்றாகச் சில:

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

    இப்பாடல்களின் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சிந்தாதேவியே தன் சிந்தையைப் பறிகொடுத்தாள் போலும். குமரகுருபரரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்துஸ்தானி மொழிப்புலமையை அவருக்கு நல்கினாள். அவரும் மன்னரைக் கண்டு உரையாடிக் காசியில் ஓர் மடத்தை நிறுவினார் என்று ஆன்மிக அருளாளர்கள் கூறுகின்றனர். அம்மடம் ‘காசிமடம்’ எனும் பெயரால் இன்றும் காசி நகரில் காட்சியளிக்கின்றது.

    வேண்டுவோர்க்கு வேண்டுவனவற்றை நல்கும் இக்கலைத் தெய்வத்தை, கருணைக் கடலை அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி என்கிறார் கல்வியில் பெரியவரான கம்பர் தன் சரஸ்வதி அந்தாதியில். எனவே கல்வியிலும், கலைகளிலும் நாமும் சிறந்து விளங்க  எல்லையில்லா அருள்முதல்வியான கலைமகளை ஒன்பான் இரவுகளின் (நவராத்திரி) ஒன்பதாம் நாளான வாணி பூசையன்று துதித்துப் பயன்பெறுவோம்.

    Share
  • காணவேணும் இந்தியாவை!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    Gandhi At 78

     

     

     

     

     

     

     

     

     

    அறமதனைக் கடைப்பிடித்து
    அனைவரையும் அரவணைத்து
    ப்
    பிறர்நலமே பேணிநிதம்
    பெரும்பணிகள் ஆற்றிநின்றார்!

    குறைகள் பலவந்தாலும்
    குனியாமல் நின்றுஅவர்
    பணிகள்பல செய்தமையால்
    பார்போற்ற நிற்கின்றார்!

    கீதைதனைப் படித்துக்
    கீழ்க்குணத்தை விட்டெறிந்தார்
    பாதைதனைத் தெரிந்து
    பக்குவமாய் வாழ்ந்துநின்றார்!

    போதை  தனைஊட்டும்
    பொருளையெலாம் ஒழிக்கவேண்டி
    நீதிதனை உணர்த்துதற்கு
    நீண்டயுத்தம் செய்தாரே!

    காந்திமகான் தன்வாழ்வில்
    கடவுளிடம் வேண்டிநின்றார்
    கருணையுள்ளம் கொண்டவராய்க்
    காலமெல்லாம் இருப்பதற்கு!

    இந்திய மக்களிடம்
    ஏற்றத்தாழ்வு காணாது
    எல்லோரும் இந்தியரே
    எனவெண்ணி இருந்தாரே!

    பதவிகளை நாடாமல் பணமெதையும் சேராமல்
    உதவிகளைச் செய்வதிலே ஊக்கமாய் நின்றாரே
    தெருவெங்கும் நடைநடந்து சிரமமுடன் பணியாற்றி
    உருக்குலைந்த உருவமொடு ஊருக்காய் உழைத்தனரே!

    எளிமைக்கு இலக்கணமாய் என்றுமவர் இருந்தாரே
    ஏகபோக வாழ்க்கையினை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
    எல்லோரும் சுதந்திரமாய் இருக்கஅவர் எண்ணியதால்
    இரவுபகல் பாராமல் இளைக்காமல் இயங்கினரே!

    எதிர்த்து நின்றவெள்ளையனை
    இரக்கமுடன் அவர்பார்த்தார்
    எதற்குமே அஞ்சாதான்
    இரக்கத்தால் அடிபணிந்தான்!

    தரக்குறைவாய் நடந்தாரும்
    தலைகவிழ்ந்து நின்றார்கள்
    தன்னுடைய பொறுமையினால்
    தானுயர்ந்தார் காந்திமகான்!

    காந்திமகான் வந்துஇங்கே
    காணவேணும் இந்தியாவைக்
    கண்டவுடன் காந்திமகான்
    கண்ணீரில் மிதந்திடுவார்!

    என்னுடைய பாரதமா?!
    எனவெண்ணிக்
    காந்திமகான்
    தன்னிலமை
     இழந்தங்குத்
    தலைசுற்றி
    நின்றிடுவார்!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    ”அச்சுறுத்தும் பூதமா ! அன்றிமாத்ரு பூதமா!
    எச்சரிக்கை யோடுன்னை நச்சரிப்பேன்! -உச்சமது,
    அண்ணா மலைராணி, எண்ணா மனம்வெளுக்க
    வண்ணாத் திகழுதையில் வா’’….கிரேசி மோகன்….

    Share
  • வணங்குவோம் வாணியை…

    -செண்பக ஜெகதீசன்

     

    saraswati

     

     

     

     

     

     

     

     

    வெள்ளைத் தாமரை உன்வாசம்
         வீணை செய்திடும் உன்ஓசை,
    பிள்ளைத் தமிழ்முதல் பெருங்கவிதைப்
         பனுவல் பலதிலும் நிறைந்திருப்பாய்,
    அள்ளி அருளது தந்திடுவாய்
         ஆய கலையெலாம் நீதருவாய்,
    பள்ளித் தலமெலாம் உறைபவளே
         பணிந்தோம் வாணித் தாயவளே…!

     

    Share
  • காந்தி நாமம் வாழ்க!

    அக்டோபர் பெட்டகம்
    ஷைலஜா

    148513_324138741024966_1845415878_n

     

     

    அன்பாய் நிறைந்தவர்gan1

    அகிம்சையை போதித்தவர்

    இன்பக்குறுநகையை

    இதழினில் கொண்டவர்

    சத்தியப்பாதையின்

    சாந்தத்தலைவரவர்

    உத்தமப்பணியினில்

    உலகையே வென்றவர்gan

    கொள்ளையர்போல் வந்த

    வெள்ளையர் ஆட்சியை

    மெள்ள மெள்ளவே

    கிள்ளிக்களைந்தவர்

    இன்றுநமக்குள்ள

    இன்பசுதந்திரம்gandhi

    இவராலன்றோ

    இங்குக்கிடைத்தது!

    பின்னைத்தலை முறைக்கும்

    பெட்டகமாயிருக்கும்

    அன்னவரை நாம்

    என்றும் வணங்குவோம்!

     

     

    Share
  • கேசவ், எனக்கென்னவோ அம்பாள் பார்வைக்கு ‘’நெமிலி பாலாம்பிகையாகத்’’ தோன்றினாள்….

     

    ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….

    crazy

    ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–
    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….கிரேசி மோகன்….

    Share
  • வாக்கு தரும் ராணி

    இசைக்கவி ரமணன்

    images (9)
    வாக்கினைத் தந்தனள் வாணி, என்
    வாழ்வினை வளம்செய்த வற்றாத கேணி
    போக்கெதுவும் புரியாத ராணி, இவள்
    புயலிலும் கரைசேர்க்கும் பூப்போன்ற தோணி
    நாக்கினை இல்லமாக்கி, நித்தம்
    நலமான வார்த்தைகள் நவமாகத் தருவாள்
    தேக்கங்கள் இல்லாமலே, நான்
    தெம்புமிகு நெஞ்சமுடன் திசையெங்கும் பாடவே!

    வாய்பேசி டாதிருந்தேன், பின்பு
    வாயிருந் தும்பேச்சு வாரா திருந்தேன்
    வாயிருந் தும்பேசியும், நல்ல
    வார்த்தையொன் றும்நன்கு வாரா திருந்தேன்
    தாயிவள் பொறுத்திடாமல், தேன்
    தடவினாள் தாம்பூலம் தரித்துப் பகிர்ந்தாள்
    வாயெலாம் வாசகங்கள்! வெற்று
    வாழ்வினை வெற்றிவாழ் வாக்கினாள் தேவி!

    எண்ணத்தின் பின்னிருக்கும், ஓர்
    ஏகாந்த மெளனத்தில் வீணையொலி கேட்கும்
    வண்ணமாய்ப் பண்கள் புரளும், ஒரு
    வார்த்தைவரும் பார்க்கையில் வரிவரிகள் ஓடும்
    கண்ணிமைக் கும்நேரத்தில், மிக
    கனமான யுகமொன்று மனம்தடவிச் செல்லும்
    கண்முன்பு வந்து நின்று, நல்ல
    கவிதை கொடுக்கின்ற கருணையென் வாணி!

    வாணியெனில் வார்த்தையில்லை, பிறர்
    வாழ்ந்திடப் பயன்படும் வாழ்க்கைநெறி யாகும்
    ஏணியாய் வாழவேண்டும், பிறர்
    ஏற்றமே சேவையென இன்புறுதல் வேண்டும்
    கோணிகளில் தோள்சுமக்கும், வெற்றுக்
    குப்பையில் அக்கினிக் குஞ்சொன்று நட்டு
    வாணியைச் சரண்புகுந்தால், அங்கு
    வருவதே வார்த்தை! வளர்வதே வாழ்க்கையே!

    உண்மையில் காதல்கொண்டால், நெஞ்சில்
    உருவாகும் சொல்லிலே ஒளிவந்து கூடும்
    கண்ணெலாம் தீபறக்கும், வினைக்
    காடெரியும், மற்றவர் கவலைகள் பொடிபடும்
    பெண்மையைப் போற்றவைக்கும், எந்தப்
    பேய்வரினும் அஞ்சாத பெருங்கர்வம் தோன்றும்
    உண்ணாக்கில் தேன்சொட்டுவாள், என்
    உள்ளமெனும் வெள்ளைக் கமலத்தி லுறைவாள்!

    01.10.2014 / புதன் / 15.00

     

    Share