காணவேணும் இந்தியாவை!

எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

Gandhi At 78

 

 

 

 

 

 

 

 

 

அறமதனைக் கடைப்பிடித்து
அனைவரையும் அரவணைத்து
ப்
பிறர்நலமே பேணிநிதம்
பெரும்பணிகள் ஆற்றிநின்றார்!

குறைகள் பலவந்தாலும்
குனியாமல் நின்றுஅவர்
பணிகள்பல செய்தமையால்
பார்போற்ற நிற்கின்றார்!

கீதைதனைப் படித்துக்
கீழ்க்குணத்தை விட்டெறிந்தார்
பாதைதனைத் தெரிந்து
பக்குவமாய் வாழ்ந்துநின்றார்!

போதை  தனைஊட்டும்
பொருளையெலாம் ஒழிக்கவேண்டி
நீதிதனை உணர்த்துதற்கு
நீண்டயுத்தம் செய்தாரே!

காந்திமகான் தன்வாழ்வில்
கடவுளிடம் வேண்டிநின்றார்
கருணையுள்ளம் கொண்டவராய்க்
காலமெல்லாம் இருப்பதற்கு!

இந்திய மக்களிடம்
ஏற்றத்தாழ்வு காணாது
எல்லோரும் இந்தியரே
எனவெண்ணி இருந்தாரே!

பதவிகளை நாடாமல் பணமெதையும் சேராமல்
உதவிகளைச் செய்வதிலே ஊக்கமாய் நின்றாரே
தெருவெங்கும் நடைநடந்து சிரமமுடன் பணியாற்றி
உருக்குலைந்த உருவமொடு ஊருக்காய் உழைத்தனரே!

எளிமைக்கு இலக்கணமாய் என்றுமவர் இருந்தாரே
ஏகபோக வாழ்க்கையினை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
எல்லோரும் சுதந்திரமாய் இருக்கஅவர் எண்ணியதால்
இரவுபகல் பாராமல் இளைக்காமல் இயங்கினரே!

எதிர்த்து நின்றவெள்ளையனை
இரக்கமுடன் அவர்பார்த்தார்
எதற்குமே அஞ்சாதான்
இரக்கத்தால் அடிபணிந்தான்!

தரக்குறைவாய் நடந்தாரும்
தலைகவிழ்ந்து நின்றார்கள்
தன்னுடைய பொறுமையினால்
தானுயர்ந்தார் காந்திமகான்!

காந்திமகான் வந்துஇங்கே
காணவேணும் இந்தியாவைக்
கண்டவுடன் காந்திமகான்
கண்ணீரில் மிதந்திடுவார்!

என்னுடைய பாரதமா?!
எனவெண்ணிக்
காந்திமகான்
தன்னிலமை
 இழந்தங்குத்
தலைசுற்றி
நின்றிடுவார்!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *