Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    ஊதியது போதும் உடனே எழுந்துவா
    பாதியில் நிற்குதாம் பாரதப்போர் -சேதிசொன்ன
    COURIERரை மேய்க்காத காரணத்தால் உண்டுவிட்டேன்
    WARRIORகள் காத்துள்ளார் வா”….கிரேசி மோகன் ….

    கண்ணன் குழலூதும் சுவாரஸ்யத்தில் பாரதப்போரை ,பசுக்களை மேய்ப்பதை மறந்து விட மாடும் கன்றும் நினைவு படுத்துவதாகக் கற்பனை….

    COURIER தின்ற மாடு -துவாபர யுகத்திலேயே பேப்பர் உண்ணும் பழக்கம் பசுக்களுக்கு வந்து விட்டது போலும் ….கலியுகத்தில் போஸ்டர் ….நன்றி கேசவ்ஜி….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    அந்த நாளும் வந்திடாதோ ஆசையில் கண்ணன் காலச் சக்கிரத்தை பொறி பறக்க பின்னோக்கித் தள்ளுகிறான் போலும்….

    crazy

    “கதர்சனம் கட்டுமாறு காந்தியின் கூற்றை
    நிதர்சனம் ஆக்க நினைத்து -சுதர்சன
    WHEELசாட் சியாய்கண்ணன் கால்கொண்டு காலத்தை
    நூல்ராட்டை நாளுக்கு நூற்பு”….கிரேசி மோகன்….

    தந்திரக் கண்ணனின் சக்கிரம் சுதர்சனம்
    சுதந்திர காந்தியின் சக்கிரம் கைராட்டை….

    This began as Krishna killing the shakatasura, in the form of a cart. But as it progressed, the wheel dominated. The wheel was juxtaposed with Krishna’s Sudarshana. Here he stops the wheel of time – when sparks emerge from the force which is stopped with his tender feet.
    Now for your ideas. 🙂

    With regards,
    Keshav

    Share
  • புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (50)

    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF/[/mixcloud]

    10696393_527498384049731_9145572385221776042_n
    உன்முகம் பார்த்துப் பார்த்துத்தான்
    ஒவ்வொரு காலையும் புலர்கிறது! அதில்
    உதிக்கும் புன்னகை தயவில்தான்
    உயிரும் உயிராய் மலர்கிறது
    என்மனம் என்றே எதுவுமில்லை
    இதயம் மட்டும் துடிக்கிறது, நீ
    எதிரே இருந்தும் எங்கே என்று
    ஏனோ பாவம் தவிக்கிறது…

    இதயம் என்பது உள்ளே இல்லை
    இரண்டு விழிகளில் சிரிக்கிறது
    இம்மியும் எனக்குத் துன்பம் வந்தால்
    இருகரம் ஒன்றாய் அணைக்கிறது
    கதைகள் கனவுகள் கற்பனை எல்லாம்
    கண்முன் தினமும் நடக்கிறது
    காலம் எந்தன் தலையணை அருகே
    கவிதைத் தாளாய்க் கிடக்கிறது

    ஒவ்வொரு சமயம் இருக்கின்றாயா
    என்றொரு கேள்வி குடைகிறது
    ஒவ்வொரு நேரம் உன்னைத் தவிர
    ஒன்றும் இல்லை புரிகிறது
    கவ்விய தாயின் வாயில், குட்டிக்
    கன்றாய்க் கிடக்கின்றேனே! உன்
    காதல் என்னும் காவல் ஒளியில்
    கண்ணைத் திறக்கின்றேனே!

    இதயக் கதவைத் திறந்து திறந்து
    எத்தனை முறைநான் பார்த்தாலும், அதன்
    இருண்ட மூலையில் புன்னகை நினைப்பை
    விளக்காய் ஏற்றிப் பார்த்தாலும்
    பதிந்து பதிந்து பரந்து விரிந்து
    பலவித வண்ண வடிவாக, உன்
    பாதம்! சதங்கை கீதம்! இவையே
    பார்த்து நெகிழ்கிறேன் என் தேவி!

    என்னை முழுதும் இழந்தேனா? அதில்
    ஏழை மகிழ்ந்தேனா?
    உன்றன் நிழலை அடைந்தேனா? அதில்
    ஊமை பிழைத்தேனா?
    என்னை இழப்பது போலோர் இன்பம்
    எதிலும் இல்லையம்மா! உன்
    எதிரே நின்று நின்று கரைவதே
    எனக்கு முக்தியம்மா!

    எங்கும் இருந்தும் எனக்கே எனக்காய்
    எதிரே வந்தாயே!
    எல்லாம் ஆகியும் ஏழையை அணைத்து
    எல்லாம் தந்தாயே!
    பொங்கும் புனலாய்க் கண்ணில் இதயம்
    பொங்கிப் பொங்கிவர..
    புன்னகை ஒன்றின் பூரணமாய் நீ
    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க…..

    படத்திற்கு நன்றி

     

    Share
  • திருமால் திருப்புகழ்

    கிரேசி மோகன்

    வழக்கமாக காலையில் கேசவ் கண்ணனில் கண்முழித்து காலெண்டர் கிழித்த பின்தான் காப்பி என்றாகிவிட்டது…. இன்று கேசவ் கண்ணனுக்குப் போட்டியாக மயிலை சீனிவாசப் பெருமாள் முந்திக்கொண்டு எங்கள் வீதியில் எழுந்தருளினார்….

    crazy

    “அதிகாலை நேரம் அழகன் மயிலைப்
    பதிசீனி வாசன் பதும -சதியோடு, (மனைவிமார்களோடு)
    தாம்புக் கயிற்றுதரன் தேதி கிழிக்கும்முன்
    வீம்புக்கு வாசல் வரவு”….கிரேசி மோகன்….

    crazy1

    Share
  • எல்லை என்பது

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (49)

    எல்லை என்பது

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4/[/mixcloud]

    10599449_623510557769007_4186651122590924176_n

    எல்லை என்பது
    இல்லை! இதற்கு மேல்
    இன்னொன்று இருக்க முடியாது
    இப்படிச்
    சொல்லிச் சொல்லித்தான்
    எல்லைகள் சொள்ளையாகிப் போயின

    சிறகின்றிப் பறந்த மனிதன்
    கால்முளைத்து மலினப்பட்டான்

    பரந்து கிடக்கிறது வானம்! அதைப்
    பருகிப் பாடுகிறது பறவை!

    எல்லையற்ற பிரபஞ்சத்தில்
    எங்கேநாம்? எவ்வளவு நாம்?
    ஆனால் நம் உள்ளேதான்
    அண்டமும் பிண்டமும்

    வீடும் வீதியும் வீணாகும் தேகமும்
    கூடாகுமோ என்று கூரையைப் பிளந்துகொண்டு
    கொக்கரிப்பது ஒருவகை

    படைகளும் அம்புகளும் பரபரத்து வந்தாலும்
    முன்னே யோகதண்டம் நட்டு
    முகவாய் சற்றே தூக்கிப்
    பதறாமல் அமர்ந்து பார்த்திருப்பது ஒருவகை

    ஏறி இறங்குமொரு மலைவெளியில்
    யாரோ எறிந்த மாராப்பு போல
    வளைந்து நெளிகின்ற சிற்றோடையால்தான்
    வனப்பு விகசிக்கிறது

    பாறையில் தலைகாட்டும்
    பசும்புல்தான் அதற்குப்
    பதவி கொடுக்கிறது

    பொட்டுவைத்த நெற்றி
    முத்தமிட்ட கன்னம்
    கூட்டக் களேபரத்தில் முறுவலிக்கும் குழந்தை
    வானைத் தின்றபடி வளையவரும் வெண்ணிலா

    இப்படி
    பெரிதுகளுக்குச் சிறிதுகள்தான்
    பெருமை சேர்க்கின்றன
    அவற்றுள்ளும்
    சின்னஞ் சிறுசுகள்
    இன்னும் கவர்கின்றன

    ஓடையில் துள்ளும் கெண்டை
    ஒசிந்த புல்லில் சிரிக்கும் சிறுமலர்
    பொட்டைச் சுற்றியொரு வியர்வை அரும்பு
    கன்னத்தில் காயாத ஈரம்
    குழந்தையின் வாயில் தின்பண்டத் துகள்
    வெண்ணிலவின் தங்கக் கவசம்

    எது பெரிது? எதுதான் சிறிது?
    எல்லையென்று ஒன்று ஏது?

    என்ன பார்க்கிறாய் நீ?
    உன்னைவிட உயர்ந்தவன் என்றோ
    உன்னை உயர்த்துபவன் என்றோ
    என்றும் நான் நினைப்பதற்கு
    எதுவுமில்லை கண்மணி

    நிலவாய் இருந்த நீ
    நிலத்திற்கு இறங்கிவந்தாய்
    முகம் துடைக்கும் முகிலாகச்
    சற்று
    முன்பு வந்து காத்திருந்தேன்

    ஒருமுறை துடைத்துவிட்டுத்
    தூர எறிந்துவிடு
    வையத்தில் அப்படித்தான்
    வற்றாத சுனைகள் தோன்றின.

     

    Share
  • அது பணக்காரர்களுக்கான தேசம்..!

    சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

    கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை அடிக்கடி சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    “நீ எப்போது இங்கு வந்தாய்?” என்று கேட்டார்.

    “நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்” என்றேன்.

    “இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?” என்றார்.

    “வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்.” என்றேன்.

    “இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?”

    “நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம்பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையைக் கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.” என்றேன்.

    சிரித்துக்கொண்டே, “இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது.” என்றார்.

    “உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?” என்று கேட்டேன்.

    “என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, ‘அது பணக்காரர்களுக்கான தேசம்!’.” என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்! உன்னுடைய தேசமும் அப்படித்தான்.” என்று அவர் மேலும் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

    அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    “அது பணக்காரர்களுக்கான தேசம்!”

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 22

    சு.கோதண்டராமன்.

     

     

    மருத்துகளும் வாயுவும்

    Vayu Deva
    மருத்துகள்
    மருத்துகள் என்பது ஒரு தெய்வக் கூட்டம். இதில் மொத்தம் 49 பேர் — ஏழு ஏழு பேர் கொண்ட ஏழு குழுக்கள்- இருப்பதாக ரிக் 5.52.17 கூறுகிறது. இவர்களது எண்ணிக்கை த்ரிஷஷ்டி என்று ரிக் 8.96.8 கூறுகிறது. இதன் நேர்ப் பொருள் 3X60=180 ஆனால் சாயணர் இதை 3+60= 63 என்று பொருள் கொள்கிறார். மொத்தத்தில் இவர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் என்பது அறியப்படுகிறது.

    இவர்களது தந்தை ருத்ரன். தாயின் பெயர் ப்ருச்னி. இதற்குப் புள்ளிகள் கொண்டவள் என்று பொருள். இது ஒரு பசு என்று கூறும் குறிப்புகள் உள்ளன.

    இவர்கள் எல்லோரும் ஒரே தன்மையர். இவர்களில் மூத்தவர் இளையவர் என்று எவரையும் கூற முடியாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. இவர்கள் இளைஞர்கள், களைப்பு அறியாதவர்கள். ரிஷபம் போலக் கொம்புகளையும், சூரியன் போலக் கண்களையும், குதிரை போல அழகிய தோற்றத்தையும், மாப்பிள்ளை போலக் கம்பீரத்தையும் கொண்டவர்கள்.

    இவர்கள் விண்ணில் வாழ்பவர்கள். இவர்களது வாகனம் கிலாஸ்ய, அதாவது, வெண்புள்ளிகள் கொண்ட மான். அது ப்ருஷத் அச்வா (புள்ளிகளுள்ள குதிரை) என்றும் அழைக்கப்படுகிறது.

    காட்டைக் கலக்கி, மலையைப் பிளக்க வல்ல இவர்களின் உதவியோடுதான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நதிகளை விடுவித்தார். வலிமையானவர்களும் விரைந்து செல்பவர்களுமான இவர்களை மலைகளோ நதிகளோ தடுக்க முடியாது. விண்ணையும் மண்ணையும் நடுங்க வைப்பவர்கள். மருத்துகளால் உதவப்பட்டோரை எவரும் வீழ்த்த முடியாது. இவர்கள் இந்திரனின் படை வீரர்கள். இந்திரனுக்கு அவருடைய அருஞ் செயல்களில் உதவியதால்தான் இவர்கள் யக்ஞியமான பெயர்களைப்  (தேவத் தன்மை) பெற்றார்கள் என்கிறது வேதம்.

    உரத்த குரலில் பாடுபவர்கள், மழையின் சோதரர்கள், வர்ஷ நிர்ணிஜ (மழையை உடையாகத் தரித்தவர்கள்), மேகத்தை விடுவிக்கிறவர்கள், மறைந்த செல்வத்தை வெளிப்படுத்துபவர்கள், தெய்வீக செல்வத்தைக் கீழே இறக்கித் தருபவர்கள், மூவுலகிலும் நதிகளின் சுழல்களிலும் இருப்பவர்கள் என்று கூறப்படுவதிலிருந்து மருத்துகள் என்பது புயற் காற்றைக் குறிக்கும் என அறிகிறோம்.

    புயற் காற்று கண்ணுக்குத் தெரியாது என்றாலும் இவர்கள் கண்ணுக்குத் தெரிகின்றவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். தங்க ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள், தங்க ரதத்தில் செல்கிறார்கள், தங்க நகை அணிந்துள்ளார்கள். ஒளி உடை தரித்தவர்கள். இவர்கள் செல்லுமிடத்தில் எல்லாம் ஒரு ஒளி பின் தொடர்கிறது. மின்னலை ஆயுதமாக உடையவர்கள் என்ற வர்ணனைகள் அவர்கள் புகழ் ஒளி பெற்றவர்கள் என்பதையே குறிப்பிடுகிறது.

    தெய்வ பூஜையில் ராட்சசர்களை அழைக்கும் மனிதர்களைச் சக்கரமில்லாத தேரில் வைத்துக் கீழே தள்ளுவது இவர்களது திறமை. இவர்கள் பக்தர்களின் அழைப்பை ஏற்று அவர்களிடம் வருகிறார்கள், அவர்கள் அளிக்கும் உணவை ஏற்று மகிழ்கிறார்கள். அவர்களுக்கு விரைவாக செல்வம், மக்கட்பேறு, உணவு, நீண்ட ஆயுள் முதலியன கொடுத்து அருள் புரிகிறார்கள். மக்களைக் காப்பாற்றுகிறார்கள். ஸுதானவ: (மிகுதியாகத் தானம் கொடுப்பவர்கள்) என்ற அடைமொழி இவர்களுக்குப் பல முறை அளிக்கப்படுகிறது.

    எல்லாத் தேவர்களுக்கும் வழங்கப்படும் அடைமொழிகளான  கவி, அறிவாளி, நர, ருதாவ்ருத, ஸ்வதாவின் படி நடப்பவர்கள், சூரி என்பவை இவர்களுக்கும் கொடுக்கப்- பட்டுள்ளன.

    வழிபாட்டுக்கு உரிய பெருமை உடையவர்கள் என்பதால் யஜத என்று சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்திரனையும் வருணனையும் வர்ணித்தது போல் இவர்களையும் சூரியன் பயணிக்க ஒரு ஒளிமயமான பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் என்று கூறி பரம்பொருளாகவே காண்கிறார்கள். 8.7.8

    வாயு
    மருத் என்பது மழை தரும் காற்றையும் வாயு என்பது சாதாரணக் காற்றையும் குறிப்பிடுகின்றன. மருத்துகள் பற்றி விரிவாகப் புகழும் வேதம் வாயுவுக்கு அவ்வளவு சிறப்பிடம் தரவில்லை.

    மற்ற தேவர்களைப் போல வாயுவும் அசுரர், மயோபு மகிழ்ச்சி தருபவர், த்ரவிணோதா செல்வம் கொடுப்பவர், நரர் என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்-படுகிறார். வாயுவின் தனித்தன்மைகளாவன- இவர் ப்ருஷத் யோனி (பல நிறமுள்ள ஆகாயத்தில் தோன்றியவர்). பஞ்சஹோதா (ஐந்து வகையான வாயுக்களையும் அழைப்பவர்). அதூர்த்த பந்தா (தடைபடாத வழியை உடைவர்). சோமபானம் வடிக்கப்பட்டால் அதை முதலில் பருகும் உரிமை வாயுவுக்கே உள்ளது.

    வாயு பூஷனுடன் சேர்ந்து பிரார்த்தனைகளைத் தூண்டுகிறார். இவருடைய குதிரைகளின் பெயர் நியுத். குளிர்ந்த இடத்திலிருந்து வெப்பமாக உள்ள இடத்தை நோக்கி வீசுவது வாயுவின் இயல்பு. அதை ரிஷி, வறுமை உள்ள இடத்துக்கு செல்வம் கொடுக்கப் போகிறார்  என்று வர்ணிக்கிறார்.

    படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா – http://upload.wikimedia.org/wikipedia/commons/1/19/Vayu_Deva.jpg

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 4

    இன்னம்பூரான்.

     

     

    dog_tribute_frame

    டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.

    ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:

    • உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
    • அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
    • நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
    • மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
    • அப்படியானால் என்ன முடிவு?
    • இல்லையென்றால், ஏன்?
    • நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
    • ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
    • இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?

    என்னத்தைச் சொல்ல?

     

    -#-

    இன்னம்பூரான்
    10 09  2014

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.mtn-edge.com/images/dog_tribute_frame.gif

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

    –எம்.ஜெயராமசர்மா.

     

    புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும்,
    கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

     

    [எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS]
    (முன்னாள் கல்விப்பணிப்பாளர்)

    yoga-youth-camp-33

    “சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாங்கள் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

    சமயம் என்பது நல்ல வழியைக்காட்டுவது. மதம் என்று அதற்கு இன்னுமொருபெயர்.   மனிதனிடம் காணப்படுகின்ற ஆணவம் என்கின்ற மதத்தை இல்லாமல் செய்ய உதவுவதால் ஒரு காரணப்பெயராக இப்படி அழைத்தனர். நான் என்னும் தன்முனைப்பு வாழ்க்கையில் இருக்குமானால் எவ்வளவு வரமும் உரமும் இருந்தும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீர்போலவே ஆகிவிடும். ஆகவே தன்முனைப்பு அற்ற நல்ல பாதை அமையுமானால் அதுவே மனித வாழ்வில் கிடைக்கும் நல்ல சமயமாக அமையும். இப்படி நல்ல ஒரு வாய்ப்பே சமயமானது. எனவே வேறு பெயர்களும் வேறு காரணங்களும் அடிப்படையாக அமைந்த பொழுதிலும் “சமயமும்” மதம்  என்ற ஒன்றேதான் என்பதை நாமும் தெரிந்திருப்பதோடு நமது பிள்ளைகளுக்கும் விளக்கி நிற்கவேண்டும்.

    வெளிநாட்டில் பல்வேறுவிதமான கலாசாரச் சூழல்களில் நாமே திக்கித்திணறுகின்றோம். நாங்களே இப்படி என்றால் எங்களின் பிள்ளைகள் என்னதான் செய்வார்கள்? இப்படியான சூழலில் வாழும் நாங்கள் சமயத்தை எப்படி அணுக வேண்டும் என்பது மிகவும் இலகுவான ஒரு காரியமல்ல.

    ஊரிலே எங்களுக்குச் சமயம் கற்பது பாடசாலைகளிலே கட்டாயமானது. விரும்பியோ விரும்பாமலோ சமயம் என்பது பாடசாலைகள் மூலம் கொடுக்கப்படுகிறது. ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து திருவருட்பயனும், தேவாரங்களும் பாடமாக்கினோம். இளம்பருவத்தில் விருப்பமில்லாமல் படித்தாலும் — வயது வந்தபின்னர் அவை விளங்கிய பொழுதுதான் அவற்றின் அருமையும் பெருமையும் எங்களுக்கெல்லாம் தெரியவந்தது எனலாம். அதைவிட எங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஏனைய உறவினர்கள் அத்தனை பேருமே எங்களின் சமய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. நாங்கள் சற்று வழிதடுமாற நினைத்தாலும் அவர்கள் அனைவ ருமே எம்மைத் தாங்கிப்பிடித்து மடைமாற்றம் செய்து நின்றார்கள். இவை எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ வந்த அத்தனை பேரும் மனங்கொள்வது அவசியமானதாகும்.

    எங்கள் பிள்ளைகள் படிக்கும் சூழல் பழகும் சூழல் யாவும் எமக்குப் புதிதானவை. அவர்களது பாடசாலைச் சூழலும் மிகவும் வித்தியாச மானதாகும். அங்கே சந்திக்கும் பல தரப்பட்ட சமூகச் சூழலிலிருந்து வந்த பிள்ளைகளும் ஆசிரியர்களும் எங்கள் பிள்ளைகளில் பல தாங்கங்கள் ஏற்படக் காரணமாகிவிடுகிறார்கள்.

    பெரும்பாலானவர்களுக்குச் சமயம் பற்றிய அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதைப்பற்றியே பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. இந்த நிலைமையில் படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுவதில்.. கட்டாயம் என்பது இருக்கவே கூடாது. அவர்களுக்குச் சமயத்தை மிகவும் இலகுவாக .. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொருத்தமாக மறுமொழி சொல்லியே .. விளங்கவைக்க முனைதல் வேண்டும். எங்களுக்குச் சமயம் போதித்த முறைகளை அடிமனத்தில் வைத்துக்கொண் டு .. செயற்பட முற்பட்டோமே யானால் யாவும் ஆரம்பத்திலேயே ஆட்டம் காண ஆரம்பி த்துவிடலாம்.

    புராணக்கதைகளைப் பிள்ளைகளுக்குக் கூறலாமா? புராணக்கதைகளைச் சமயம் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா? மிகவும் கவனமாகக் கதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    எங்கள் வீட்டுக்கு முன்னால் பன்றிக்குட்டிகள் சில யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுது வந்துவிட்டன. எனது மனைவி அருவருப்போடு அவற்றைப் பார்த்து வெறுப்படை ந்து கல்லெடுத்து எறிந்து விரட்டி அடித்தார். உள்ளே இருந்த எனது ஏழுவயதுடைய மகள் ஓடிவந்து அம்மா .. அம்மா .. என்ன செய்துவிட்டீர்கள். நீங்கள் செய்தது பாவம் இல்லையா? எனக் கேட்டதும் எனது மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது. மகளை முறைத்துப் பார்த்து அசிங்கத்தை விரட்டாமல் அடுப்படியிலா வைப்பார்கள் என்று  பொரிந்து தள்ளி விட்டார். அம்மாவின் கத்தலுக்கு ச் சற்றும் அசையாத எனதுமகள் .. அம்மாவைப்பார்த்து .. அம்மா இந்தக்குட்டிகளுக்குச் சிவபெருமான் தாயக வந்து பால் கொடுத்தார் என்று நீதானே நேற்று எனக்குப் புராணக்கதை சொல்லித்தந்துவிட்டு இப்போது அசிங்கம் என்று விரட்டுகிறாயே! சிவன் தாயாகிவந்து பால் கொடுத்தபடியால் இவையும் சிவனின் பிள்ளைகள்தானே என்றதும் ..  அம்மா அதாவது எனது மனைவி வாயடைத்து மெளனியாகிவிட்டார் இதனை ஓரத்தில் நின்று கவனித்த நான் எனது பிள்ளையின் சமய அறிதலையும் உணர்தலையும் பார்த்து மெய்சிலிர்த்தேன்.

    அதே மகளுடன் புலம்பெயர்ந்து இங்கு வந்தபின் அவளுக்குப் பிறந்த மகள் எனது பேரப்பிள்ளை கோவிலில் “சூரன் போரைப்பார்த்து”  தாயிடம் கேட்டாள்.. சாமி ஏன் அம்மா மற்றவர்களைக் கொலை செய்யவேணும்? சாமி என்றால் நல்லது என்றுதானே நீங்கள் சொல்லித்தந்தது. இதைக் கேட்டதும் எனது மகள் தனது மகளுக்குத் தலையில் ஒரு குட்டுக் குட்டினாள். அவள் அழுதபடியே கோவிலில் நின்றாள். அதைத் தொடர்ந்து அவள் கோவில் என்றாலே விருப்பம் இல்லாத நிலைக்கு வந்துவிட்டாள்.

    இது ஒரு குடும்பப் பிரச்சனை போல இருந்தாலும் இங்குதான் .. புலம்பெயர் நாடுகளில் சமயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் பாடம் உருவாகிறது என நினைக்கின்றேன். பெரிய புராணத்திலே வருகின்ற கதைகள் பலவற்றை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் பயபக்தியோடு நாங்கள் படித்தோம். பிரசங்கங்கள் மூலமாகவும் கேட்டோம். ஆனால் அதைப்பற்றிய சந்தேகங்கள் எங்களுக்கு வந்தாலும் அப்பா இடமோ அம்மா இடமோ கேட்கவே மாட்டோம். காரணம் அது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று மனத்தில் இருந்த பயமாகும். ஆனாலும் எங்கள் மனத்திலும் கேள்விகள் இருந்தன என்பதை ஒத்துகொள்ளுதல் வேண்டும். எங்கள் சூழலால் அவை அப்படியே மனத்துள் புதைந்தே விட்டன என்றே எண்ணமுடிகிறது.

    இன்றைய புலம்பெயர் சூழல் அப்படிப்பட்ட தல்ல. கண்ணப்பர்கதை, சிறுத்தொண்டர்கதை, திருநீலகண்டர் கதை, நால்வர் வரலாறுகளில் காணப்படும் சம்பவங்கள்.. இவைபற்றி யெல்லாம் சமயத்தினூடாகக் கற்பிக்கும் பொழுது மிகவும் அவதான மாகவே கையாள வேண்டியுள்ளது. இங்கு வளரும் பிள்ளைகள் பல வித விஞ்ஞானக் கருவிகளோடு உறவாடுகிறார்கள். விரல் நுனியிலே விஞ்ஞானம் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கங்கள்தான் முன்னிற்கின்றன. இதனால் சமயத்தைக் கற்பிப்பது என்பது புலம்பெயர் நாடுகளில் மிகவும் இலகு என்று எடுத்து விடக்கூடாது.

    கோவில்களில் இடம்பெறும் யாவுமே இங்கு வளரும் பிள்ளைகளுக்கு விளங்காதன. அவற்றைச் சமயத்தோடு இணைக்கும் பொழுது அவர்கள் தடுமாறாமல் இணைத்துக் காட்டும் வகையில் சமயக்கல்வியைப் போதிக்க வேண்டும். சந்தேகமோ , தடுமாற்றமோ ஏற்படாவண்ணம் சமயபாட போதனை அமைதல் கட்டாயமானது. சந்தேகம் எழுந்தால் அதற்குத் தக்கபடி பதிலைக் கொடுக்க வேண்டும். இதுவாக இருக்கலாம், அல்லது அதுவாக இருக்கலாம் என்னும் வகையில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூ டாது.

    சமயம் என்பது அறிவு ஆராய்ச்சிக்கு உட்பட்டதன்று. அது உணர்வு ரீதியானது என்பதை வலியுறுத்துவது சமயபோதனையில் மிக அவசியமானதாகும். விஞ்ஞான கூடப்பரிசோதனை.. சமயம் அல்ல என்று சொல்ல வேண்டும். கற்கண்டு இனிக்கும். மிளகாய் உறைக்கும். ஐஸ்கிறீம் இனிக்கும். பிஸ்கற்றுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு  சுவை. இவற்றை எப்படி அறிவீர்கள் என்று அவர்களையே சமய பாடவேளையில் கேட்கும்பொழுது ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொல்ல முன்வருவார்கள். அப்பொழுது அவர்களை எங்கள் விஷயத்துக்குள் இலகுவாகக் கொண்டுவந்து விட முடியுமல்லவா?

    சுவைகள் பல. அவற்றின் உருவம் எமக்குத்தெரியாது. ஆனால் அவற்றைச் சுவைத் தால்த்தான் என்ன சுவை என்பதை அறியமுடிகிறது. இங்கே சுவை என்பது உணர்வினால்தான் எமக்கு வந்து சேர்கிறது. அந்த உணர்வுதான் சமயம். அந்த உணர்வால் வரும் சுவைதான் கடவுள் என்று சமய போதனையை நடத்திப் பார்த்தோமேயானால் பிள்ளைகளிடம் நல்ல வரவேற்புக் கிடைப்பதோடு மனத்திலும் பதிந்து விடும்.

    புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

    1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
    2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
    3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று.
    4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
    5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
    6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
    7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
    8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
    9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
    10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவைமனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

    சமய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”  என்பதே சமயஇயலாளரது அசையாத நம்பிக்கையாகும்.

    “கற்றதனால் ஆயபயன் இறையுணர்வு பெறுதலே” இதை மனத்திற்கொண்டு செயற்பட்டால் எண்ணியது நிறைவேறும்.

    படம் உதவிக்கு நன்றி: http://vedicodyssey.com/spiritualadventures/tag/sv-youth-camp/

    Share
  • காற்று வாங்கப் போனேன் (40)

    கே.ரவி

    ஆன்மிகப் பாதையில் நான் அடியெடுத்த வைத்த பிறகு ஒருநாள் மாலை மீண்டும் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். வெளிச்சம் மறைந்து, இருட்டு மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் அலையலையாய் மேகச் சுருள்கள்; நடுவே பிறை நிலவு. திடீரென்று ஒரு மின்னல் மின்னி மூன்றாகக் கிழித்துச் சென்றது, வானத் திரையை! என் மனம் சற்றுப் பின்நோக்கிச் சென்றது. 1983-ஆம் ஆண்டு நான் குடும்பத்தோடு கஷ்மீர் சென்றிருந்த போது …..!

    மன்னிக்க வேண்டும், அது கஷ்மீர்தான். அதை நிறுவதற்காகத் தொலைக்காட்சியில் ஷோபனா போராட வேண்டியிருந்தது. தஞ்சாவூர் என்ற தமிழ்ச்சொல் சரியாக உச்சரிக்க முடியாதவர்கள் அதைத் ‘டேஞ்சூர்’ என்று மாற்றியதை எண்ணி நான் வருந்தியது போலவே, கஷ்மீர் என்ற பெயரைக் ‘கேஷ்மீர்’ என்று சொல்லக் கேட்டும் வருந்தினேன். சரி, கதைக்கு வருவோம்.

    aravi

    நாங்கள் கஷ்மீர் சென்று ஒரு படகு வீட்டிலேயே நாலைந்து நாட்கள் தங்கியதையும், 7 வயதும், 3 வயதும் ஆகியிருந்த என் மகள் மதுமதியும், ஐஸ்வர்யாவும் அங்கே ரசம் சாதம் வேண்டுமென்று கேட்டதும், அந்தப் படகு வீட்டை நடத்தி வந்த இஸ்லாமியர் வீட்டுச் சமையலறைக்குள் சென்று, என் வளர்ப்பு அன்னை அலங்காரவல்லி என்ற அலாப்பாட்டி, பர்தா அணிந்த மகளிர் புடைசூழத் தானே ரசமும், சாதமும் பண்ணி எடுத்து வந்து என் பெண்களுக்கு ஊட்டி விட்ட கதையையும் நான் இப்பொழுது நீட்டிச் சொல்லப் போவதில்லை. அதேபோல், கஷ்மீர் சென்றதும் அந்த மாநில மக்கள் எங்களை இந்தியர்களா என்று கேட்ட வருத்தத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், கஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் எங்கள் பேருந்து நுழைந்த போது, பாதித் தூக்கத்தில் இருந்த என்னைத் தட்டியெழுப்பி ஷோபனா காட்டிய காட்சியை மட்டும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். நெடிதுயர்ந்த பனிமலை, உடலெங்கும் வெண்ணீறு அணிந்து கொண்டு சிவபெருமானே தவக்கோலத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறாரோ என்பது போல் காட்சி தந்த மலைப்பு நீங்க வெகுநேரம் ஆயிற்று. வியப்பதா, கைகுவித்து வணங்குவதா என்ற குழப்பம்! ஆனால் அப்போது நான் இன்னும் மேலே சொன்னவாறு ஆன்மிகப் பாதைக்கு வரவில்லை. பிரமிப்பூட்டிய அந்தக் காட்சி என் மனத்தைக் கொஞ்ச நேரம் சலனமற்றதாகச் செய்ததனால், கவிதை எதுவும் வரவில்லை. ‘புதிய வானம் புதிய பூமி’ என்று பாடியாடத் தோன்றவில்லை.

    aravi1

    முதலில் சொன்னேனே, நான் ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்த பிறகு மொட்டை மாடியில் சுருள் மேகங்கள், அவற்றுக்கிடையே நிலாப்பிறை, மின்னல் வெட்டு, மூன்றாய்க் கிழிந்த வானத்திரை என்றெல்லாம்! அந்தக் காட்சியிலிருந்து நான் மீண்டும் கஷ்மீருக்கு மானசீகமாகச் சென்றுவிட்டேன். கஷ்மீரில் பேருந்து நுழைந்த போது ஷோபனா என்னை எழுப்பிக் காணச் செய்த காட்சியை, மலைத்தொடரே சிவனோ என்று மலைக்க வைத்த அனுபவத்தை மீண்டும் நினைத்துக் கொண்டேன். அப்போது நெஞ்சின் ஆழத்தில் ஒரு கவிதை உயிர்த்துக் கொண்டு புரளும் சப்தம் கேட்டது. அதற்குள், யாரோ வந்து என் த்யானநிலையைக் கலைத்ததால், நான் வாய்ப்பேச்சில் ஈடுபட வேண்டியதாயிற்று. பிறகு உறங்கி விட்டேன். மறுநாள் காலையில் கவிதையுடன்தான் கண்விழித்தேன். மாலையும், இரவும், காலையும் கலந்த காட்சியாய் அதில், ஆகாசமாகவே விரிந்தபடி, அதோ அந்தப் பரமசிவம்…….!

    கவிதையைப் படிப்பதோடு, என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தக் கவிதையைப் பாடியுள்ளதையும் கேட்கலாமே!

    பாடலைக் கேட்டு மகிழ இங்கே சொடுக்கலாமே

    நிலவை அணிந்து கொண்டு – சடைlord shiva

    புரளப் புரளவிழி நிறைந்தது வானம்

    மின்னல் த்ரிசூலம் – எட்டுத்

    திசையும் அதிரநகை குலுங்கிய தேகம்

    புலரும் போது சாம்பல் – பனிப்

    புகையப் புகைய மெல்லப் படர்ந்தது வெள்ளி

    காயழல் ஏந்தும் கைகள் – ஒளிக்

    கதிர்கள் விரியுமொரு கனக விதானம்

    ஆகாசம் சிவம் – உயிர்

    ஆதாரம் சிவம்

    தேஜோ மயம் சிவம்

    இருள் ஒளி எனும் பகை அறும் நிழல் சிவம்

    புயல் வடிவம் பூத கணங்கள்

    கோள்களாய் விண் மீன்களாய்

    சுழல் நடனம்

    அண்டமெல்லாம் ஜனிக்கும் மஹாசூன்யம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    ஆகாசம் சிவம் – உயிர்

    ஆதாரம் சிவம்

    தேஜோ மயம் சிவம்

    இருள் ஒளி எனும் பகை அறும் நிழல் சிவம்

    ப்ரணவ ஸ்வரூபம் – கங்கை

    ப்ரவாகமாய் அருள்மழை பொழியும் ஜடாதரம்

    ப்ரளையமாகி உலகைப் புசிக்கும் காலதேவம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    மங்கலம் சிவம் – சுப

    மந்திரம் சிவம்

    சங்கல்பம் சிவம்

    சலனமில் லாதது சதாசிவம்

    அந்தப் பாடலின் அனுபவக் களத்தை நினைத்தால், இன்னும் மெய்சிலிர்க்கிறது! இப்படிப்பட்ட சிலிர்ப்புகளும், சிறகடிப்புகளும் இல்லாத வரண்ட பாலைவனம் போன்ற தர்க்கப் பாதையில், சிற்றறிவுப் பட்டறையில் எத்தனைக் காலம் வீணடித்து விட்டேன்!

    ஒருநாள் ரமணன் என் வீட்டில் ஏதோ ஒரு கவிதை உதிக்கப் போகிறது என்று கட்டியம் கூறும் வெறித்த பார்வையோடு மெளனமாக அமர்ந்திருந்தான். திடீரென்று பாடினான். அப்போது, எஸ்.பி.பி. பாடி மிகவும் பிரபலமாகியிருந்த ஆதிசங்கரரின் சிவாஷ்டகம் மெட்டிலேயே ரமணனின் தமிழ்ப்பாட்டு வந்தது.

    images (3)

    இசைக்கவி ரமணன் பாட அதைக் கேட்கலாமே:

    மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்

    மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்

    விசித்ரம் வினோதம் விளங்காத போதம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்

    அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்

    சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்

    அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்

    கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்

    காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை

    அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை

    சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அலுக்காது நாமம் அடங்காது தாகம்

    கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்

    நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்

    பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்

    புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்

    கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல

    கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்

    கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்

    அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்

    அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்

    பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அவன் பாடி முடித்ததும், உடுக்கைச் சத்தம் கேட்டது போல் ஓர் ஓசை எழுந்தது. சிவபெருமானே வந்து விட்டாரோ? ரமணனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அப்புறம்தான் புரிந்தது, என் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த ‘ரோமுலஸ்’ என்ற நாய் தன் வாலை இருபுறமும் சுழற்றிச் சுழற்றி உடுக்கடித்துக் கொண்டது. என்ன புரிந்தது? அந்த வேளையில் உடுக்கடிக்கும் சத்தம் கேட்டதற்கு என்ன பிரபஞ்ச காரணம் என்று புரிந்து கொண்டோமா? அறிவு திகைக்கும் தருணத்தில், சிந்தனை ஸ்தம்பித்துவிடும் கணத்தில் என்ன புரியும், என்ன புரியாது?

    இப்படியாகக் கவிதை ஜனித்த கணங்களில், மெய்மறந்த நிலையில், ரிஷிகள் போல், பூத கணங்கள் போல், இந்திராதி தேவர்கள் போல், அட, எத்தனை அனுபவச் சுழல்களில் நாங்கள் சிக்கித் திக்குமுக்காடி எக்களித்திருக்கிறோம்! அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது என்று திருவிளையாடலில் சிவனாக வந்து சிவாஜி பேசிய வசனத்தைத்தான் பேச வேண்டும். என்னத்தைப் புரிந்து கொண்டோம் போங்கள்!

    கவிதையின் ஜனன ரகசியத்தைக் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டேனோ என்று மலைக்க வைத்த இன்னொரு சம்பவம் நடந்தது.

    1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தூக்கத்தில் நான் பாடுவதாக ஒரு கனவு. கனவு என்று சொல்லக் கூடக் கூச்சமாக இருக்கிறது. எது நிஜம், எது கனவு என்று சொல்ல முடியுமா? வ.வே.சு.வின் ஒரு பல்லவி நினைவுக்கு வருகிறது:

    கனவுக்குள் நானொரு கனவினில் ஆழ்ந்திருந்தேன்

    கனவு மறைந்திடக் காட்சிகள் மாறியும்

    கனவு தொடர்கிறது – வேறொரு

    நனவாய்ப் படர்கிறது

    1970-களிலேயே நானும் ஒரு பாடல் எழுதியிருந்தேன், ஆபோகி ராகத்தில்:

    உனக்கொரு சிலைநான் செய்வதற்குள் – நீ

    உருவம் மாறி விட்டாய்

    கணப்பொழு தெந்தன் கலைப்பொரு ளாகிக்

    கனவாய் ஓடி விட்டாய்

    தூக்கத்திலே ஒரு பாடல் எழுதி

    துயில்கலைந்ததும் அதை மறந்து விட்டேன் – பனித்

    துளிகளிலே ஒரு மாலை தொடுத்துச்

    சூரியன் வந்ததும் தோற்று விட்டேன்

    நீரில் வரைந்த கோலத்தைப் போலென்

    நிழலின் வடிவம் கலங்குவதை

    யாரிடம் சொல்வேன் எப்படித் தடுப்பேன்

    இதுதானோ மனச் சித்ரவதை

    மீண்டும் 1986 நிகழ்ச்சிக்கு வருவோம். தூக்கத்தில், சரி, கனவில், நான் பாடுகிறேன். தூக்கம் கலைந்து எழுந்ததும் அந்தப் பாடல் மறந்துவிட்டது. ஷோபனாவிடம் கனவு பற்றிச் சொல்லிவிட்டுப் பாடல் மறந்து போனதையும் சொல்லி அங்கலாய்க்கிறேன். சற்று நேரத்துக்கெல்லாம் தொலைபேசி மணியடிக்கிறது. அதை எடுக்கிறேன். எடுக்கும் போதே, நான் கனவில் பாடிய பாடல் முழுதும் அப்படியே நினவுவர, அதை மனத்துக்குள் பாடிக் கொண்டே தொலைபேசியை, அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது ஓய், காதில் எடுத்து வைத்துக் கொண்டு, ஆனால் எதுவும் பேசாமல் ஏறக்குறைய ஒரு நிமிடம் இருந்து விட்டேன். அடுத்த முனையிலிருந்த நபரும் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தது வியப்பாக இருந்தது. அந்த மெளனத்தை எனக்கு நன்கு தெரிந்த ஒரு சிரிப்பொலி கலைத்தது. தொலைபேசியின் எதிர்முனையில் டாக்டர்தான் சிரித்தார். சிரித்துவிட்டுக் கேட்டார், “என்னப்பா பாட்டுப் பாடி முடித்தாகி விட்டதா?” நான் வாயடைத்துப் போய் விட்டேன். யார் கனவில் யார் நுழைந்து ‘எப்படிப் பாடினரோ!’

    krishna

    ஆதி சேஷன் ஆகவா – ஓர்

    ஆலிலை என்றாகவா

    மாதவா ஶ்ரீ ராகவா – என்

    தாகம் தீர்க்க வா

    பார்த்தசாரதி உனக்குப் பாஞ்சசன்ய ம் ஆகவா

    கீதைசொன்ன பாதையோரம் வேணுகானம் ஆகவா

    அரிதுயில் கலைப்பதற்குக் கோதையாகிப் பாடவா – நீ

    ஆலிங்கனம் செய்யும் ராதையாக மாறவா

    மாதவா ஶ்ரீ ராகவா – என்

    தாகம் தீர்க்க வா – ஓ

    மாதவா ஶ்ரீ ராகவா – என்

    தாகம் தீர்க்க வா

    முதலைவாய் விழுந்த நெஞ்சின் கதறல் கேட்க வில்லையா – என்

    இதயத் தூணை இரணியன் உதைப்ப தறிய வில்லையா

    சார்ங்கமென்று சாற்றுகின்ற சத்தியத்தின் வில்லையா

    சார்வதிந்தச் சஞ்சலங்கள் தர்மவீரம் இல்லையா

    சங்குச் சக்ரம் ஏந்தி வா – என்

    சங்க டங்கள் நீங்க வா

    தர்ம வீரம் ஆனவா

    சர்வ லோக நாயகா

    கனவில் உதித்துக் கண்விழித்ததும் மனத்துக்கு வெகுதொலைவில் சென்று மறைந்த பாடல், தொலைபேசியில் டாக்டர் அழைத்ததும், மேலெழும்பி மலர்ந்த கதையைச் சொல்லி விட்டேன். அதைக் கனவில் நான் பாடிய மெட்டு மட்டும் நினவு வரவில்லை. பிறகு, அமீர்கல்யாண் ராகத்தில் பல்லவி தொடங்க, ராகமாலிகையாக இசையமைத்து ஷோபனா அதைப் பாடிக் காட்டினாள்.

    மறந்துபோய், மனத்தில் மீண்டும் பதிவான இந்தப் பாடல், ஒலிவடிவில் பதிவாகவே இல்லை. பதிவு ஆனது, ஆனால் ஆகவில்லை. ‘அட, நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா’ என்கிறீர்களா? எல்லாம் விளையாட்டுத்தானே. அவனே அலகிலா விளையாட்டுடையான்; தீராத விளையாட்டுப் பிள்ளைதானே!

    மலர்ந்தும் மலராத பாதிமலர் போலப் பதிந்தும் பதியாத பாடலின் கதையை அடுத்த முறை சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

    கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    மகாதேவி

    மகாதேவி திரைப்படத்தில் மக்கள் திலகம் கதாநாயகனாக.. மாறுவேடத்தில் கண்தெரியாதவராக… நடிக்கும் காட்சியில் நாட்டில் நடக்கும் சமுதாய பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளையும் ஒருங்கே சொல்லும் பட்டுக்கோட்டையாரின் பாடல் கேளுங்கள்..

    சூழ்ச்சியிலே சுவரமைத்து
    சுயநலத்தால் கோட்டைகட்டிச்
    சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
    சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று
    சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
    புதிரான உலகமடா _ உண்மைக்கு
    எதிரான உலகமடா _ இதில்
    பொறுமையைக் கிண்டிவிடும்
    போக்கிரிகள் அதிகமடா

    மேலே குறிப்பிட்ட இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா _ இது
    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா

    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா _ வாழ்வில்
    எந்த நேரமும் சண்டை ஓயாத
    முரட்டு உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…)

    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
    வெந்திடும் தோட்டக்காரனிடம்
    மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
    வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
    பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…)

    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
    அகந்தைக் குரங்கு தாவும் _ அதன்
    அழகைக் குலைக்க மேவும்
    கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
    குணமும் இதுபோல் குறுகிப்போகும்
    கிறுக்கு உலகமடா _ தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
    திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…)

    pattukottai_kalyanasundaram_400visramTamil Film Playback Legend T.M.Soundararajanmahadevi
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடுகின்ற பாடல்! காலங்கள் பல ஆண்டுகள் முன்பே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமாயிருக்கிறது என்றால் இந்தச் சமுதாயம் திருந்தவில்லை.. மாறாக.. சுயநலங்கள் பெருகி.. பொதுநலங்கள் மருகிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்!

    உழைப்பின்பால்பட்டே உயர்வு இருக்க வேண்டும் என்கிற நியதியை மாற்றி.. ஊரை ஏமாற்றி உலையில் போடும் கூட்டம் அதிகமாகிவிட்டபடியால்.. திருட்டு உலகம் இது என்பதை மறுக்க முடியுமா?  வஞ்சமும் சூதும் மக்களின் நெஞ்சில் குடிகொள்ளத் தொடங்கியதால்.. ஏழைகள் மட்டும் இன்னும் அவலத்திலே மிதக்கிறார்.. இந்தச் சமுதாயத்தை சீர்திருத்த இன்னும் எத்தனை பட்டுக்கோட்டையார் வேண்டுமோ தெரியவில்லை!  மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாய் கவிஞர் ஏக்கப்பெருமூச்சை பாட்டுவரிகளாக்கித் தந்திருப்பது நிதர்சனம்!

    1957 ஆம் ஆண்டு வெளிவந்த ” மகாதேவி ” என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . ” மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி ” இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும். இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார். அதில் ஒன்று தான் இந்தப்பாடல். இந்தப்பாடல் எழுதப்பட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும், இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே  இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்.

    படம்: மகாதேவி (1957)
    பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: டி. எம். சௌந்தரராஜன்
    http://www.youtube.com/watch?v=fhmWh9xD-4w
    காணொளி: http://www.youtube.com/watch?v=fhmWh9xD-4w

    Share
  • திரும்பி நீ வரவேண்டும்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    subramanya-bharathi-jpg

     

     

     

     

     

     

     

     

     

    முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
    பண்டாரமா  யிருந்து பலகவிதை தந்தாயே
    தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
    உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே!

    பாரதத்தின் குரலாக பாட்டெல்லாம் ஒலித்தனவே
    பாரதியுன் குரல்கேட்டுப் பாரெல்லாம் அதிர்ந்ததுவே
    சீரான சிந்தனைகள் சீற்றமொடு சொன்னாயே
    சிம்மக் குரலோனே திரும்பிநீ வரவேண்டும்!!

    அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே
    உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
    மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
    இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே!

    வேதநெறி வழிவந்த வித்தகனாய் இருந்தாலும்
    சாதிநிலை தகர்த்தெறியச் சலியாது உழைத்தனையே
    ஓதி உணர்ந்ததனால் உண்மைதனை நீயறிந்து
    போதிமரமாக நின்று போதித்தாய் யாவருக்கும்!

    பாரதியுன் பாட்டாலே பண்டிதர்கள் பரிதவித்தார்
    பாட்டல்ல என்றவர்கள் பறையடித்து நின்றார்கள்
    பாமரர்கள் கைகோத்துப் பாரதியைப் பார்த்தவுடன்
    பண்டிதக் கூட்டமெலாம் பஞ்சாகப் பறந்தனவே!

    பல்கலைக் கழகமெல்லாம் பாரதியின் பாட்டிப்போ
    பாடமாய் இருக்கிறது படிக்கின்றார் பலபேரும்
    பாரதியின் பாட்டிப்போ பல்லக்கில் இருக்கிறது
    பாரதத்தில் பாரதியார் பக்குவமாய் உலவுகின்றார்!

    முத்தமிழும் பாரதியின் சொத்தாக இருந்தனவே
    எத்திக்கும் தமிழோங்க எண்ணியவர் இருந்தாரே
    சத்தாகத் தமிழையவர் சாகும்வரை நினைத்தாரே
    கைதூவி மலர்கொண்டு காதலித்து நிற்போமே!

    Share
  • Manadhil Urudhi Vendum

    AJITH SUBRAMANIAN

     

    The Original :images (4)

    Manathil uruthi vendum
    Vaakkinile inimai vendum
    Ninaivu nalladhu vendum
    Nerunggina porul kai pada vendum

    Kanavu mei pada vendum
    Kai vasamaavadhu viraivil vendum
    Dhanamum inbamum vendum
    Tharaniyile perumai vendum

    Kan thirandhida vendum
    Kaariyathil uruthi vendum
    Pen viduthalai vendum
    Periya kadavul kaakka vendum

    Mann payanura vendum
    Vaanagam inggu thenpada vendum
    Unmai nindrida vendum

     

    The Translation :

    A self that remains unflinching with every heart beat,bhara
    A self that can convey the most hurting words soft and sweet,
    A self that can always cherish the noble thought,
    And let the things within my reach always be sought!

    Let each of my dream come true, till the last!
    Let the objects that I hold in my thoughts reach me fast!
    Give me wealth, but also give me infinite happiness on the inside!
    Let the world flourish with abundant pride!

    Oh please open my eyes to understand this world and people too!
    Let there be steadfastness in whatever I do!
    Let there be full liberation of women,
    And let it be that you should always bless us from the heaven!

    Let the land be bountiful,
    And let the sky reflecting the self, be forever beautiful!
    Give me a self that remains calm and clear, no matter what situation I am in!
    Give me a self that remains true to itself, and let truth alone always win!!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    காப்பளிக்கும் கண்ணனின்று கன்னத்தில் வண்ணத்தின்
    தீப்பறக்கத் தோற்றம் தருகின்றான் ,-ஆப்பிரிக்க
    GOATSதோலைப் போர்த்தியக் COWஅவன் கால்கவ்வ;
    GODSMUSTBE க்ரேசி கரெக்ட்”…கிரேசி மோகன் ….

    Share
  • நினைப்போ நிஜமோ

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக  (48)

    நினைப்போ நிஜமோ

    10516698_295389760644498_189508891943409258_n

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%AE/[/mixcloud]
    நீ
    படுத்துப் புரண்ட மஞ்சம் – முகத்தைப்
    பதித்துக் களித்த நெஞ்சம் – நாணம்
    விடுத்துக் கொடுத்த இன்பம் – என்னை
    விட்டுப் பிரிந்த துன்பம் – இதனை
    அடுத்துக் கிளம்பும் கனவு – அதனை
    அடக்கத் திணறும் நினைவு – வாய்
    மடுத்துப் பரவும் வாசம் – எங்கும்
    மண்டிக் கிடக்கும் கண்ணே!

    உரத்துச் சிரித்த சிரிப்பும் – அதில்
    உதிர்ந்த முத்துத் தெறிப்பும் – அந்தக்
    கரத்தில் இருக்கும்நெருப்பும் – அதில்
    கலந்த தண்மை விரிப்பும் – பெரு
    வரத்தைப் பதியம் போட்டு – அதை
    வளர்த்து மகிழும் பொறுப்பும் – என்
    சிரத்தை வணங்க வைக்கும் – உன்
    சித்திரப் பதத்தில் மயங்கும்!

    கூடிக் கொழிக்கும் வனப்பும் – அதைக்
    கொட்டிக் கொடுக்கும் நினைப்பும் – மடி
    தேடி அமர்ந்த மிடுக்கும் – என்னைத்
    தேம்ப வைக்கின்ற செருக்கும் – இமை
    மூடிக் கிடக்கும் போதும் – என்னை
    முற்றும் அளக்கும் மதர்ப்பும் – மனம்
    பாடிக் களிக்கத் துடிக்கும் – அது
    படியில் குடமாய் உருளும்!

    உயிரை எடுத்துக் கொடுத்து – பின்
    உயிரைக் கொடுத்து எடுத்து – சில
    வயிரச் சுவைகளைத் தொடுத்து – மணி
    வாயின் அமிழ்தில் குழைத்து – கொஞ்சம்
    விடுத்து விடுத்துச் சுவைத்து – விழி
    கிறங்கி மனத்தில் குவித்து – கூடு
    விடுத்த பறவையைப் போலே – உயிரை
    விசைத்துப் பொருத்தினாயே!

    எனக்கும் உனக்கும் பழக்கம் – இது
    எதையும் கடந்த நெருக்கம் – ஒரு
    மனதும் மனதும் மயங்கி – சிறு
    மலரும் வண்டும் இணங்கி – வளர்
    கனவும் நினைவும் கலந்து – புதுக்
    காதல் கவிதை பிறந்து – இனி
    எனதுன தெல்லாம் மறந்து – நீளும்
    எல்லைக் கெதுபெயர் சொல்லேன்!

    என்னை உன்னிடம் தந்தேன் – அதில்
    எத்தனை நிம்மதி அடைந்தேன்! நீ
    புன்னகை யோடுனைத் தந்தாய் – காலைப்
    பொழுதாய்ச் சிவந்து கிளர்ந்தேன் – உன்
    அன்பின் மடியில் கிடத்தி – என்னை
    அமரனாக்கினாய் தேவி! நீ
    இன்னமும் செய்யவொன் றுண்டோ? அடி
    இறைவனை மிஞ்சுதல் நன்றோ?!

    Share