Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 311

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 311

    சக்தி சக்திதாசன்

    அன்புநிறை வல்லமை வாசக பெருமக்களே !

    நலம். நலமறிய ஆவல் எனும் ஆரம்பத்தோடு இம்மாத இங்கிலாந்திலிருந்து எனது மடலை ஆரம்பிக்கிறேன்.

    இந்த மாதம் மட்டுமல்ல கடந்த சில காலங்களாகவே இங்கிலாந்துப் பிரதமர் கியர் ஸ்டாமரின் நிலையைப் பார்க்கும் போது எங்கே இவரையும்ம் ஏழரைச் சனி பிடித்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஒன்று மாறி ஒன்றாக பல திக்குகளிலிருந்தும் இவர் மீதும் இவர் அசாங்கத்தின் மீதும் சராமாறியாக எதிர்மறை விமர்சனக் கற்கள் கொட்டிக் குவிகின்றன.

    அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    அரசியல் குழப்பங்கள் மற்றும் லேபர் அரசின் சவால்கள்

    ஏற்கனவே சட்டவிரோத குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசாங்கம் தவிக்கிறது என்று பரவலான விமர்சனங்கள் உலாவுகின்றன.

    வேறு யாராவது பதவியில் இருந்தால் மட்டும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க

    வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போங்கள்.

    எசெக்ஸ் பகுதியில், 14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக Hadush Gerberslasie Kebatu என்ற எத்தியோப்பிய சட்டவிரோத குடியேற்றவாசி குற்றம் சாட்டப்பட்டு கைதாகினார்.

    இவர் ஒரு சிறிய படகில் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் புகுந்தவர்.

    காவல் துறையின் கவனக்குறைவால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இரண்டுநாள் காணாமல் போய்விட்டார்.

    தீவிர தேடுதலுக்குப் பின் கிழக்கு லண்டனில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர், அவரை நாடு கடத்த முயற்சிக்கும்போது, குழப்பம் ஏற்படாமல் இருக்க £500 பவுண்ஸ் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இது லேபர் அரசின் சட்ட ஒழுங்கு மீதான நம்பிக்கையை பெரிதும் சிதைத்தது.

    விடுவார்களா எதிர்கட்சியினர். நாய் வாயில் அருகே கிடைத்த எலும்புத்துண்டு ஆகிவிட்டார் நம்ப பிரதமர்.

    அது மட்டுமா ?

    ரேச்சல் ரீவ்ஸ் வேறு யாருமில்லை நம்ப நிதியனைச்சர்.

    நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது வீட்டை வாடகைக்கு விட்டபோது, அதற்கான உரிய அனுமதி பெறவில்லை என்பதற்காக விமர்சனங்கள் எழுந்தன.

    பிரதமர் ஸ்டார்மர் அவரை கடிதம் மூலம் “தவறான கணக்கீடு” எனக் கண்டித்தார்.

    ஏற்கனவே முந்தைய அரசாங்கத்தின் பொருளாதாரச் சீர்கேடுகளைச் சரியாக்குகிறேன் என்று இந்த அம்மா எடுத்த நடவடிக்கைகள் இவரை ஒரு வேண்டாதவர் ஆக்கியிருந்தது.

    இப்போ அவங்க மீதே சர்ச்சை விட்டிடுவோமா சும்மா ?

    ஆனால், தூய்மையான நோக்கத்தில் தவறான செயல் எனக் கருதி, மேலதிக நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது லேபர் அரசின் நம்பகத்தன்மையை மேலும் சோதனைக்கு உட்படுத்தியது.

    இது இப்படியிருக்க ,

    நம்ப ரீவோர்ம் கட்சியின் கதைக்கு வருவோம்.

    இந்தக் கட்சியின் ஒரு எம்.பி சாரா போசின் இவர்,

    Reform UK கட்சியின் எம்.பி. சாரா போசின், TalkTV எனும் ஊடகத்தில் பேசியபோது:

    “விளம்பரங்களில் கறுப்பு, ஆசிய இனத்தவர்கள் நிறைந்திருப்பது எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளை குடும்பங்களை காண முடியவில்லை.”

    என்றார். இது வன்கொடுமையான இனவாத பேச்சு என பலரும் கண்டித்தனர்.

    அவர் பின்னர் “தவறாக சொன்னேன், வருத்தப்படுகிறேன்” என மன்னிப்பு கேட்டாலும், அது உண்மையான மன்னிப்பு அல்ல என விமர்சனங்கள் எழுந்தன.

    இதற்கான லேபர் அரசின் பதிலடி

    பிரதமர், துணை பிரதமர், மற்றும் சுகாதார அமைச்சர் வெளிப்படையாக இந்த பேச்சை இனவாதமாக கண்டித்தனர். Wes Streeting கூறினார்:

    “இது 1970களின் இனவாதத்தை மீண்டும் கொண்டு வந்தது. இது வெறுப்பை தூண்டும் வகையில் உள்ளது.”

    பாராளுமன்றத்தில் எதிர்ப்பு  கிளம்பியது

    எம்.பி. Dawn Butler பாராளுமன்றத்தில் பேசும்போது, “இது இனவாதம், அதை வெளிப்படையாக இனவாதம் என அழைக்க வேண்டும்” என்றார்.

    இதற்கான Reform UK கட்சியின் பதில்

    கட்சியின் கொள்கைத் தலைவர் Zia Yusuf – இவர் இலங்கையிலிருந்து பல வருடங்களின் முன் புலம்பெயர்ந்த ஒருவரின் மகன்.

    இவர் கூறியது,

    சாரா போசின் ஒரு “நல்ல எம்.பி.” என்றும், “தவறாக சொன்னார், ஆனால் இதைப்பற்றி உரையாடல் தேவை” என்றும் கூறினார்.

    இப்படியான பிரச்சனைகளை இனவாதம் என ஒதுக்கி வைக்க முடியாது என்றார்.

    இது கட்சியின் உள்நிலைப் பிளவுகளை வெளிப்படுத்தியது.

    சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்வினை பலவகையாக வெளிவந்தது.

    சாரா போசின் பதவி விலக வேண்டும் என்ற ஹாஷ்டேக் Twitter-இல் பரவியது.

    Change.org மூலம் பதவி விலகும் கோரிக்கைக்கு ஆயிரக்கணக்கான கையெழுத்துகள் குவிந்தன.

    மூத்த ஊடகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் Reform கட்சியின் பார்வை மற்றும் மதிப்பீடுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

    சாரா போசின்-இன் பேச்சு, இங்கிலாந்து அரசியலில் இனவாதம், பிரதிநிதித்துவம், மற்றும் சமூக ஒற்றுமை குறித்து தீவிர விவாதங்களை தூண்டியது.

    இது Reform UK-இன் வளர்ச்சியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இந்தப் பேச்சு இனவாதமா ? எனும் கேள்விக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட பதில் ஆரம்பத்தில் தெளிவாக இல்லை.

    ஆனால் பின்பு இதனை இனவாதம் தான் என ஏற்றுக்கொள்ளும் பாணியில் அவர்களின் பதில்கள் இருந்தன.

    பொதுமக்கள், அரசியல்வாதிகள், மற்றும் ஊடகங்கள் இணைந்து இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த இந்த நிகழ்வு, புதிய அரசியல் நெறிமுறைகளின் தேவை குறித்து சிந்திக்க வைக்கிறது.

    சொன்னவைகள் போதுமா ? இன்னும் கொஞ்சம் தேவையா ?

    சமூக மற்றும் இயற்கை பேரழிவுகள்

    ஜமேய்க்கா மீது இயற்கை பேரழிவு

    மேற்கிந்திய தீவுகளில் ஜமேய்க்கா தீவுக்கு கடும் புயல் தாக்கியது.

    வீடுகள் சேதமடைந்தன, மின் மற்றும் நீர் வசதிகள் பாதிக்கப்பட்டன.

    இங்கிலாந்து அரசு மனிதாபிமான உதவிகளை அறிவித்தாலும், குடியேற்றக் கொள்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மீதான விவாதங்களை இது தூண்டியது.

    மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள்

    எசெக்ஸ், போர்ட்ஸ்முத், லீட்ஸ், மற்றும் லண்டனில் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.
    சட்டவிரோதனாக சிறிய படகுகளில் வந்தவர்களை தற்காலிகமாக தங்க வைக்கும் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மக்கள் கோபம் வெளிப்பட்டது.

    பிரித்தானிய அரச குடும்பம் மீதான சர்ச்சைகள்

    அன்றூவின் எப்ஸ்டீன் தொடர்பு

    இராஜா சார்ள்ஸின் தம்பி அன்றூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையிலான பழைய தொடர்புகள் மீண்டும் வெளிவந்தன.

    அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில், அன்றூவின் பயணங்கள், சந்திப்புகள், மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றன.

    இது அரச குடும்பத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் மீடியா மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 2025 இங்கிலாந்து அரசியல், சமூக, மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் அனைத்தும் அமைதியற்ற, நம்பிக்கையிழந்த, மற்றும் புதுப்பிக்க வேண்டிய நிலையை வெளிப்படுத்துகின்றன.

    லேபர் அரசு, அரச குடும்பம், மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் புதிய நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    சர்வதேச சூழ்நிலைகள் , சரி இனி சர்வதேச அரங்கிற்கு வருவோம்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜப்பான் மற்றும் சீன விஜயம்

    ஜனாதிபதி டிரம்ப் ஜப்பானில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர், சீன அதிபருடன் சந்தித்து வர்த்தக மற்றும் தெற்காசிய பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.

    இது பசிபிக் பகுதியில் புதிய சக்தி சமநிலையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தம்

    அக்டோபரில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், தற்காலிக மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக மீண்டும் மோதல்கள் ஏற்பட்டன.

    இங்கிலாந்து, ஐ.நா. வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியது.

    என் இனிய வல்லமை வாசகர்களே இத்துடன் என் இம்மாத மடலை முடிக்கிறேன்.

    Share
  • பல்லழகன் – பகுதி 6

    திவாகர்

     

    ரவியும் கலந்துகொண்டான்.

    ஆமாம் சார்.. பாக்கறதுக்கு பரிதாபமா பட்டாலும் தீர விசாரிச்சா பலன் கிடைக்கும்.

     

    காவல் நிலையம் வருகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பத்தி விசாரிக்கிறார்

    ‘என்னய்யா ஆச்சு.. அந்த கந்தசாமி PM ரிப்போர்ட் வந்தாச்சா? ‘வந்தாச்சு சார்.. இப்ப கூட அந்த பொண்ணு பேரு கோம்டி.. என்கிட்டே வந்து உங்க ரெண்டு பேரையும் சொல்லி கந்தசாமி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காப்பி வாங்கிண்டு போச்சு..’ ‘வாங்கிண்டு போச்சா.. நானே இன்னும் பார்க்கலே.. அதுக்குள்ளே அந்த பொண்ணுக்கு என்ன அவசரம்?’ ‘சார்.. நாங்க ஒரிஜினல் கொடுக்கலை சார்.. ஜெராக்ஸ் காப்பித்தான் கொடுத்திருக்கோம்.. உங்க பேரையும் கல்யாண் பேரையும் சொல்லி கேட்கறச்சே இல்லே’ன்னு சொல்ல முடியுமா சார்..’

    கோம்டி வீடு.

    கோம்டியின் பல் மருத்துவ மனையில், சாந்தி, அவளது தோழி மற்றும் நர்ஸ்.

     

    பல் சுத்தப்படுத்திக்கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணை அப்படி சுத்தப்படுத்தி முடித்த நர்ஸ்பெண் வெளியே செல்ல அனுமதி கேட்டாள்.

     

    “மேடம், இன்னிக்கு ரெண்டு பேர்தான்.. நாளைக்கு நாலு கேஸ் புக் ஆகியிருக்கு.. இன்னிக்கு வேற எந்த கேசும் இல்லே.. என் வேலை முடிஞ்சுடுச்சு. நான் போவட்டா?” “சரி, நீ நாளைக்கு மறக்காம வந்துடு.. டெண்டல் செக்கிங்க் கேஸ்ங்க வந்தா நீயே பார்த்துடு.. சீரியஸ் கேஸ்ன்னா அப்பாயிண்ட்மென்ட் ரெண்டு நாளைக்கப்பறம் கொடு. அப்போ பாக்கறேன். எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்கு.. நீதான் எல்லாம் பார்த்துக்கணும்.”

    தலையாட்டிவிட்டு போகிறாள் நர்ஸ். சாந்தியும் கோமதியும் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டனர். சாந்தி வேடிக்கையாகக் கேட்டாள்..

    ‘ஏய்.. இப்படியா டென்டல் கிலினிக்கை வெச்சுருப்பே. கிளாஸ்ல நீதான் முதல்ல வருவே. ஆனா என்ன பிரயோசனம்? கோம்டி.. நீ நல்லா பெரிய கிலினிக் வெச்சு கொஞ்சம் தீவிரமா இந்த பிசினஸ் எப்போ நடத்தபோறியோ? விஸாதான் கிடைச்சுடுச்சு இல்லே.. என்னோட அமெரிக்க வந்துடுடி.. நமக்கெல்லாம் அங்கதான் மௌசு..”‘ ‘எங்கம்மா மாதிரி ஆரம்பிக்காதே.. நான் சொன்னேன் இல்லே? எனக்கு இந்த டெண்டலை விட முக்கியமான வேலை இருக்கு. இந்த கந்தசாமி கொலை கேஸை நான் தீவிரமா கையிலஎடுத்திருக்கேன் இல்லையா.. மேலும் கந்தசாமியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எப்படியோ ஒரு காப்பி வாங்கிட்டேன்.. என்ன விசேஷம்னா இது தற்கொலை ஆ கூட இருக்கலாம்னு ரிமார்க் பண்ணியிருக்காங்க.”  ‘எப்படி போனா என்னடி, அவன் போயிட்டான்.. நாசமா போகணும்னு தினம் சாபம் போட்டோம்.. அப்படியே போயிட்டான்.. அது சரி, போலீஸ் இந்த பக்கம்லாம் இந்த கேஸ் விசாரிக்க ஏன் வரல்லே? ஆச்சரியம்தாண்டி. ஏய் சாந்தி, உனக்கு ரவி மூலம் இவனைத் தெரியணுமே?’  ‘தெரியுமே.. ரவியும் பல்லழகனும் பார்ட்னர்ஸ்னு நல்லாவே தெரியும்.’ ‘என்னா ஆச்சரியம்னா, நம்ம ரவி இவனுக்கு ஃப்ரெண்ட்’ந்னு வைசாக்கில தெரியறச்ச எப்படி இவன் நம்மளுக்கு தெரியாம போயிடுச்சுன்னு பார்த்தேன்’.  சாந்தி புன்னகைத்தாள். ‘வைசாக்ல இவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ். எனக்கு இவனை நம்ம காலேஜ் காலத்திலயே தெரியும். ஆனா ரவிக்கு எவ்வளவோ ஃப்ரெண்ட்ஸ்.. அதனால ஆச்சரியமா படலே. வைசாக்’ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பிக்கறச்சே ஒரு தடவை எங்க வீட்டுக்கு ரவியோட வந்துருந்தான். அப்பவே இவன் நம்ம கிளாஸ்’ல பல்லைக் காட்டி டிஷ்யூ பேப்பர் தின்ன வெச்சது ஞாபகம் வந்தது. ஆனா மரியாதைகாக அவன் முன்னாடி எதுவும் காமிச்சுக்கலே. ஆனா அவன் போனப்பறம் ரவிகிட்ட பல்லழகனோட பல்லைக் காமிச்சு கலாய்ச்சினது கூட இப்போ ஞாபகத்துக்கு வருது’ ‘அதை விடு.. அது எப்படி இந்த கேஸ் தற்கொலை வழக்குன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சந்தேகமா கூட சொல்லமுடியும்? ரெண்டு குண்டு உடம்புல பட்டுருக்கு. ஒண்ணு நெத்தில.. இன்னொண்ணு மார்புல.. சரி, தற்கொலைன்னே வெச்சுக்குவோம். ஒரு கையாலே அவன் மார்புல சுட்டுருக்கான்? ஆனா உடனே உயிர் போகலேதான்.. இன்னொருவாட்டி அதே துப்பாக்கியாலே அவனே அவனோட  நெத்திப் பொட்டுல குறி வெச்சு சுட்டுருக்கான்.. சரி.. உடனே உயிர் போயிடறது.. இந்த தியரி எப்படி ஒத்து வரும்? ஒருவாட்டி தன்னைச் சுட்டுண்டவுடனே அவன் கீழே விழறதுக்குதான் சான்ஸ் அதிகம்.. அதெப்படி அவன் ரெண்டாவது முறை சுட்டுக்கமுடியும்.. அதுவும் முதல்ல மார்புல அதுக்கப்பறம் சரியா அவன் நெத்திபொட்டுல.. பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறை எப்படி வந்துச்சு.. இதெல்லாம் தற்கொலைக்கு நோ சான்ஸ்.” ‘ஆமாமா.. தற்கொலை பண்றவனா அவன்? நாலு பேரை அப்படி பண்ணிக்க வெச்சு சந்தோஷமா பாத்துட்டுருப்பான். தற்கொலைன்னு முடிவா சொல்லறதா அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்?’ சாந்தி ஆச்சரியத்தோடு கேட்டாள். ‘இல்லே. துப்பாக்கில அவன் கைரேகையில இருக்கு.. ட்ரிக்கெர் பிடில அவன் விரல் இருக்கு.. ஆனா அவனோட ரத்தக்கறை தரையிலயும் பீரோ கைப்பிடியிலும் இருக்கு. அவன் உடம்பு மேல எந்தத் தடயமும் இல்லை, அந்த ரூம்ல யாருமே இல்லாத சமயம் . இதெல்லாம் பாக்கறச்சே தற்கொலைக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.. ஆனா இது ஒரு நிச்சயமான கொலைன்னு எந்த ஆங்கிள்ல்ல சொல்லமுடியும்னு தெரியலே.. அப்படின்னு ரிப்போர்ட் எழுதி கொடுத்திருக்காங்க போஸ்ட்மார்ட்டத்துல.’ ‘உன்னோட பல்லழகர் என்ன சொல்லப் போறாரோ?’ ‘எதுக்குடி அந்த ஆளை என்னோட ஆள்னு சொல்லறே? அவனால் எனக்கு என்ன யூஸ்? அவனோட கேஸ் நான் எதுக்கு ஹாண்டில் பண்றேன்னா என்னோட ஒரே நோக்கம் இந்த கேஸ் மூலமா அந்தக் கந்தசாமியோட லீலைகள் வெளியே தெரியணும்னுதான். என்னோட டிரெயின்ல டிராவல் பண்றச்சே என்னமா அவன் பெரியப்பா பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துண்டு பீத்திண்டு வந்தான் தெரியுமா.. நானும் உண்மை தெரியாம அம்போ’ன்னு ஆனந்தமா காது கொடுத்துக் கேட்டுட்டு அவன்கூட சேர்ந்து நாலு எக்ஸ்ட்ரா புகழ் வார்த்தைங்களை கந்தசாமின்னு தெரியாமயே சொல்லி வெச்சேன்.. இல்லல்ல.. இந்த பல்லழகன் ஒரு பாசக்கார ஆசாமி.. இவனுக்கு இவன் பெரியப்பா பெரிய நோபிள் பெர்சன்னு நினைப்பு. இந்த கேஸை விசாரிக்க தெய்வமே நமக்கு ஒரு சந்தர்ப்பமா கொடுத்துருக்கு. நாம் சரியா இதை ப்ரூவ் பண்ணி அந்த கந்தசாமி மகா பெரிய அயோக்கியன்னு அட்லீஸ்ட் இந்த வளர்ப்பு மகனாவது தெரிஞ்சுக்கணும்டி, பார்ப்போம். இவ்வளோதான் இவனால எனக்கு உபயோகம்.. வேறென்னடி இவனால எனக்கு பிரயோசனம். வேணுமின்னா இவன் எத்துப்பல்லை அழகா ஒரு க்லிக் பண்ணி ஃப்ரேம் போட்டு இந்த க்லினிக்’ல மாட்டலாம். விளம்பரத்துக்கு உபயோகப்படும்.’ திடீரென எதையோ நினைத்துக்கொண்டவள் போல சாந்தியைக் கேட்டாள். ‘ஏண்டி சாந்தி.. ரவிக்கு கந்தசாமி விஷயம், நாம சம்பந்தப்பட்டது எல்லாம் தெரியுமா? நீ எதுவும் சொன்னியா? ஐய்யய்யோ.. இதெயெல்லாம் வீட்டுல சொன்னா அன்னிக்கே என்னை பேக் பண்ணி அமெரிக்கா அனுப்பியிருப்பாங்க.. ஏண்டி.. உங்கப்பாவும் உங்க அம்மாவும்தானே இத்தோட விட்டுருங்க இந்த விஷயத்தைன்னு சொல்லி நமக்கு அட்வைஸ் பண்ணினாங்களே.. மறந்துட்டியா? ரவிகிட்டே சொன்னா சும்மா இருந்திருப்பானா? இல்லே அவனுக்கும் தெரியாது.. கம்முனு இருப்போம்.. இப்போ கூட நாம் எதுவும் இவங்ககிட்ட அதைப் பத்திச் சொல்லப்போறதில்ல..

    அந்த சமயத்துலே கல்யாண் கதவைத் தட்டுகிறான்

    ‘உள்ளே வரலாமா?’ கல்யாண் குரல் கேட்கிறது. ஒரு சிரிப்பை வேண்டுமேன்றே வரவழைத்துக்கொண்டு அவனை உள்ளே வரவேற்கிறாள். ‘வாங்க வாங்க.. அட, நீங்க எப்படியும் என்னோட டென்டல் கிலினிக் என்னிக்காவது ஒரு நாள் வரவேணும்தான்.. வாங்க உட்காருங்க!!’ ‘இது சாந்தி.. ஹேய்.. எப்படி இருக்கே.. .’ என்று சாந்தியைப் பார்க்கிறான். ‘ஓ.. ரவியோட தங்கை உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லையா.. எனக்குதான் இதெல்லாம் தெரியாம போயிடுசு.. இவள் என்னோட கிளாஸ்மேட் கூடவே க்லோஸ் ஃப்ரெண்ட். உங்களுக்கு எங்க கிளாஸ்ல நான் அந்த டிஷ்யூ பேப்பரை உள்ள தள்ளறச்சே கூடவே இருந்து அது உங்க வாய்க்குள்ள நல்லா போகறதா’ன்னு பார்த்தவ.. அத்தோட இவளோட அண்ணன் உங்க ஃப்ரெண்ட்ங்கிற விஷயம் இப்போதான் சொன்னா.. இவ சீக்கிரமே யுஎஸ் ல டென்டல் கிளினிக் வெக்க போறா,. எனக்கும் வேலை வாங்கி தர்ரேன்னு அங்க வர சொல்லறா. ஆனால் நான் இன்னும் ஒண்ணும் சொல்லலே..’ ‘ஆமாங்க.. நான் உங்களுக்குப் பெரிய பொறுப்பு கொடுத்திருக்கேன், அதை முடிச்சுட்டு நீங்க எங்க வேணும்னாலும் போகலாம்.’ சாந்தி ஆச்சர்யமாக பார்க்கிறாள். “என்ன பொறுப்பு கல்யாண்?” “ஓ.. உனக்கு இன்னும் சொல்லலியா?” கோமதி சட்டென குறுக்கிடுகிறாள் “சாந்தி, இவர் என் கூட டிரெய்ன்ல வரச்சே எனக்கு சாதாரணமா ரவியோட பார்ட்னர்ன்னுதான் தெரியும். இவங்க பெரியப்பாதான் எதிர்வீட்டுக்காரர்னு தெரியாது. உனக்கு சொன்னேன் இல்லையா எதிரிவீட்டுல கொலை ஒண்ணு விழுந்துடுச்சுன்னு. இப்போ இவரோட பெரியப்பா கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல நானும் ஒரு பங்கு எடுத்துண்டிருக்கேன்..”

    “உனக்கு எதுக்குடி இந்த பெரிய மர்டர் கேஸெல்லாம்?” வேண்டுமென்றே கேட்டாள் சாந்தி.

     

    கல்யாண் குறுக்கிடுகிறான்.

    “சாந்தி! உன் ஃப்ரெண்ட் இந்த மாதிரி இன்வெஸ்டிகேஷன் நல்லாவே பண்றாங்க.. உங்கண்ணனோட வைசாக்’ல சாகஸ வேலைல்லாம் செஞ்சு ஒரு நல்ல குடிமகனை பிரிச்சு வெச்சிருக்காங்க.. ரவியைக் கூட கொஞ்ச நாள் இங்கயே இருந்து உன் ஃப்ரெண்ட்க்கு உதவும்படி சொல்லியிருக்கேன். பாரு சாந்தி.. எங்க இன்ஸ்பெக்டர் பாக்கறதுக்கு முன்னாடியே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட பார்த்துட்டாங்க.. கோம்டி! பி எம் ரிப்போர்ட்ல எங்க பெரியப்பா தற்கொலை பண்ணியிருக்காராம். ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் நம்பறார். அப்படி ஒரு சந்தர்ப்பம் அதிகம் இருக்குங்கிறார்.” “நான் நம்பலே கல்யாண். பி எம் ரிப்போர்ட்ல கூட ஒரு சந்தேகமாதான் தற்கொலையைப் பத்தி சொல்லியிருக்கு. சான்ஸ் இருக்குன்னு சொல்லிச்சே தவிர தற்கொலைதான்னு முடிவாச் சொல்லலியே.. நீங்க என்ன ஃபீல் பண்ணறீங்க?” “எனக்கும் அவர் தற்கொலை பண்ணியிருப்பார்னு தோணலீங்க. நான் ஏற்கனவே சொன்னமாதிரி முதல்ல அவர் கோழை இல்ல.. தற்கொலைக்கான மோடிவ் கூட அவரைப் பொறுத்தவரை கிடையாது”. “சரியா சொன்னீங்கதான். ரெண்டு குண்டும் வெவ்வேற இடத்துல பாய்ஞ்சுருக்கறதை வெச்சே இதை ஒரு கொலைன்னு நிரூபிக்கலாம். ஆனா கொலைகாரன் யாரு? மோடிவ் என்னங்கறதைத் தெரிஞ்சுண்டாகணும்.”  “ஆமாங்க.. பொட்டுல பாய்ஞ்ச குண்டு ரொம்ப ஆழமா பாய்ஞ்சிருக்கறச்சயே அவர் உயிர் போயிருக்கணும். ஆனா போஸ்ட்மார்ட்டம் ஒரு சின்ன குறிப்பு சொல்றது பார்த்தீங்களா..?” “என்ன குறிப்பு?” “மார்புல உள்ள குண்டுதான் முதல்ல பாய்ஞ்சதுன்னும் அதுக்கடுத்த ரெண்டாவது குண்டு மினிமம் அரை மணி நேரம் கழிச்சுதான் பாய்ஞ்சிருக்குன்னு சொல்றது. அந்த டாக்டர் குழப்பி இருக்காரான்னு தெரியல.. இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாருன்னா தற்கொலைன்னு வரப்போ இவரே துப்பாக்கியை எடுத்து  முதல்ல தன் மார்புல சுட்டுண்டு இருப்பார். ஆனா அதுல உயிர் போகாம வலியால அவதிப்பட்டிருக்கலாம்.. மயக்கம் வந்திருக்கலாம் அல்லது அரை மணி நேரம் கழிச்சு கொஞ்சம் தெளிஞ்சுபோய் எங்க இந்த துப்பாக்கி குண்டு சரியா பாயலையோன்னு நினைச்சு திரும்பவும் துப்பாக்கியைத் தேடித் துழாவி எடுத்துத் தன் பொட்டுல அழுத்திச் சுட்டுருக்கலாம். அந்த குண்டு கொஞ்சம் ஆழமா உள்ளே போனதாலே உயிரும் உடனடியாக போயிருக்கும்.. இப்படியெல்லாம் வாய்ப்பு இருந்தாலும் அந்த துப்பாக்கி அவரோட கையிலேதான் இருந்ததே தவிர கைவிரல் ரேகை முழுசா இருந்தாலும் அதை யாராவது அவரு கையில கொடுத்திருக்கலாம்னும் ரிப்போர்ட் சொல்றது.. உயிர் போகல்லேன்னு தெரிஞ்சுதும் மார்புல சுட்டவன் மறுபடியும் அரை மணி நேரம் கழிச்சு வந்து இவர் பொட்டுல வெச்சுச் சுட்டிருக்கவும் வாய்ப்பிருக்குன்னும் ரிப்போர்ட் சொல்லுது. கன்ஃபூஷன்.”

    கோம்டி அவனை உற்றுப் பார்த்துக் கேட்டாள்..

    “அந்த அரை மணி நேரம் அங்க ஒரு குழப்பம் நிலவியிருக்கு. அதுக்கப்பறம்தான் அதாவது மார்புல சுட்ட அரை மணி நேரம் கழிச்சுதான் கொலைகாரன் பொட்டுல அழுத்தி வெச்சு சுட்டுருக்கான். யாரா இருக்கும் அவன்?. அப்படின்னா மார்புல சுட்டுட்டு சினிமாவுல வர்ர மாதிரி வசனமெல்லாம் பேசி கேள்வி கேட்டு அதுக்கு அவர் பதில் கொடுத்தவுடனே அதுக்கப்பறம் கோபம் வந்து பொட்டுல துப்பாக்கியை வெச்சு அழுத்தி சுட்டுருக்கான் அந்த வில்லன். சரியா கல்யாண்?..” “இப்போ டோடல் கன்ஃபூஷன்.”

    கோம்டி அவனை சாந்தமாகப் பார்த்தாள்.

    “கல்யாண்.. துப்பாக்கியால சுட்டது உங்க பெரியப்பாவா அல்லது இன்னொருத்தனா என்பதை ஒரு பக்கம் வையுங்க.. ஆனா அதுக்கு முன்னாலே இந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரியணும்.. ஆனா ஒரு குண்டுக்கும் இன்னொரு குண்டுக்கும் உள்ள இடைவெளியே இது தற்கொலை இல்லேன்னு நிச்சயமா சொல்லலாம். போலீஸ் எப்பவுமே கேஸை முடிக்கறதுக்குதான் பாக்கும். அவங்க தற்கொலைன்னு சொன்னாலும் நாம எப்படியும் கொலைங்கற ஆங்கிள்ல பார்த்தாதான் கொலைகாரனைப் பிடிக்கமுடியும். அதனாலே மிஸ்டர் கல்யாண்.. உங்க பெரியப்பா நிச்சயமா கொலை செய்யப்பட்டிருக்கார்.”

    கல்யாண் அவளையே பார்த்துக்கொண்டு தலையசைத்தான். சாந்தி மட்டும் அவளைத் திருப்பிக் கேட்டாள்.

    “கோம்டி.. இது ரொம்ப பெரிய கேஸா போகறமாதிரி தெரியுதுடி.. இந்த கேஸை எடுத்தேன்னா நீ எப்போ அமெரிக்கா வர்றதுடி?.. இதைப் பேசாம போலீஸ் கையிலே விட்டுடு.. அவங்க பார்த்துக்கட்டும்.”  இல்லை என தலையசைத்தாள் கோம்டி.

    தொடரும்

    Share
  • ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு – 3

    ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு – 3

    ஷெல்லி கவிதை
    தமிழாக்கம் – சக்தி சக்திதாசன்

    The flower that smiles to-day
    To-morrow dies;
    All that we wish to stay
    Tempts and then flies.
    What is this world’s delight?
    Lightning that mocks the night,
    Brief even as bright …

    இதன் மொழிபெயர்ப்பு

    இன்று புன்னகை மலரும் பூ
    நாளை மடிந்திடுமே;
    நம்மால் நிலைக்க வேண்டப்படும் அனைத்தும்
    ஆசையூட்டிப் பறந்திடுமே.
    இவ்வுலகின் இன்பம் எது?
    இரவைக் கேலி செய்யும் மின்னல்,
    ஒளிபோல் விரைவிலே மறையும்!

    இந்தக் கவிதையில், கவிஞர் இந்த உலகின் இன்பங்களும், நாம் விரும்பும் பொருட்களும் எவ்வளவு நிலையற்றவை (அதாவது, நிரந்தரம் இல்லாதவை) என்பதை அழகாகச் சொல்கிறார்.

    “இன்று புன்னகை மலரும் பூ, நாளை மடிந்திடுமே;”

    இன்று அழகாக, புன்னகைப்பது போல் மலர்ந்திருக்கும் ஒரு பூ, நாளைக்கே வாடிப்போய், தன் அழகை இழந்து மடிந்துவிடும். உலகின் அழகும், மகிழ்ச்சியும் இப்படித்தான்!

    “நம்மால் நிலைக்க வேண்டப்படும் அனைத்தும், ஆசையூட்டிப் பறந்திடுமே.”

    ‘இது எப்போதும் இருக்க வேண்டும்’, ‘இது நீடிக்க வேண்டும்’ என்று நாம் ஆசையுடன் கட்டிப்பிடிக்க நினைக்கும் நல்ல விஷயங்கள், நம்மை ஆசையூட்டிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மைவிட்டுப் போய்விடும்.

    “இவ்வுலகின் இன்பம் எது? மின்னல் இரவைக் கேலி செய்யும் மின்னல், ஒளிபோல் விரைவிலே மறையும்!”

    இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, இன்பம் என்றால் என்ன? அது இருட்டில் திடீரெனத் தோன்றி, கண்ணைப் பறிக்கும் ஒளியைத் தந்து, ஆனால் மிக மிக வேகமாக மறைந்துபோகும் மின்னலைப் போன்றதுதான். எவ்வளவு பிரகாசமானாலும், அது நிலைக்காது.

    சுருக்கமாகச் சொன்னால்:

    இந்த உலகில் இருக்கும் எதுவுமே நிரந்தரமில்லை; மகிழ்ச்சி, அழகு, இன்பம் என எல்லாமே வந்து, கண்ணுக்குத் தெரியாமல் மிக விரைவிலேயே மறைந்து போகும் இயல்புடையவை.

    Share
  • பல்லழகன் – பகுதி 5

    திவாகர்

    கோம்டி இன்ஸ்பெக்டர் போவதை எரிச்சலுடன் பார்க்கிறாள். கோபம் கூட வருகிறது.

    ‘இந்த போலீஸ்காரங்களுக்கே இந்த புத்தி போகாதுதான், அவங்களும் செய்ய மாட்டாங்க. யாரவது ஹெல்ப் பண்ண வந்தா அவங்களையும் பயமுறுத்தி வேலை செய்ய விடமாட்டாங்க.’ ‘சரி விடுங்க கோம்டி.. நீங்க எதிர்வீடுதானா? தெரியாம போயிடுச்சு. இல்லே.. நானே இந்த இடத்துக்கு கொஞ்சம் புதுசு மாதிரித்தான். எப்பவாவது வருவேன்.. இந்த வீட்ல எனக்குத் தெரிஞ்சவங்க ரெண்டு பேர்தான். ஒண்ணு எங்க பெரியப்பா.. இன்னொண்ணு இந்த வீட்ல வேலை செய்யற பொன்னம்மா.. தோட்டத்து பக்கம் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்.. நம்ம ரவி மாதிரி சென்னைல ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் எனக்கு இங்கே கிடையாது.. எல்லாரும் எங்கம்மா வழியில உறவுக்கார பசங்கதான்.. எங்க  அம்மாவோட அக்கா, தங்கை அதான் என் சித்தி பிள்ளை பெரியம்மா பிள்ளைன்னு ரெண்டு பேர் முரளியும் சுந்தரும் இருக்காங்க. அவங்கதான் இன்னிக்குக் காலைல செண்ட்ரல் ஸ்டேஷன் வந்தாங்க. ஆனா பெரியப்பாவுக்கு நெருக்கமான பசங்க.. அதுல எங்க பெரியம்மா பிள்ளை முரளி கொஞ்சம் கூடவே நெருக்கம். ரொம்ப கலங்கிட்டான் அவன். எனக்கே எப்படி அவனை சமாதானப்படுத்தறதுன்னு தெரியலே..’ ‘அதனாலேதான் நான் உங்களை இந்த வீட்டிலே எப்பவுமே கவனிக்கலே.’ ரவியைப் பார்க்கிறாள்.  ‘நீ எப்படா வந்தே?’  ‘மத்தியானம் வந்து நேரா எங்க வீட்டுக்குப் போனேன்.. அங்க சாந்தியும் நீயும் விஸா கலக்ட் பண்ண அமெரிக்கன் எம்பாஸி போயிருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க. உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன். கல்யாண் வீட்டுக்கு இப்போ வரைக்கும் வந்தது இல்லே. உன் வீட்டுக்கு எதிரேதான்னு கல்யாண் வீடுன்னு அம்மாகிட்ட சாந்தி இன்னிக்கு சொன்னதை எனக்குச் சொல்லி அனுப்பினாங்க. ’அது சரி, கல்யாண், உங்ககிட்ட ஒரு கேள்வி.. இவர் கொலைபட்டு விழறச்சே சப்தம் போடலியா? துப்பாக்கி கிடைச்சதுன்னு டி வில சொன்னாங்களாம்.. அப்படினா கை விரல் ரேகை வெச்சு கொலைகாரனைத் தேடலாமே..’ ‘எங்க பெரியப்பா லைசென்ஸ் துப்பாக்கி வெச்சுருக்கார். சைலன்ஸர் துப்பாக்கி. அதை எடுத்துத்தான் அவன் சுட்டுருக்கான். ஆனா அந்த துப்பாக்கில கைரேகைன்னுப் பார்த்தாங்களான்னு இல்லையான்னு இன்னும் தெரிய வரலே.. துப்பாக்கி கூட எங்க பெரியப்பா அவரோட  கையிலதான் இருந்ததுன்னும் ஒரு விரல் ட்ரிக்கர்ல மாட்டிக்கிச்சுன்னும் இன்ஸ்பெக்டர் சொல்லறாரு. கொலைங்கிற கோணத்துல இந்த கேஸைப் பார்த்தா கொலைகாரன் அவர் கையிலே வெச்சுட்டு எஸ்கேப் ஆகியிருக்கான்னு சொல்றாரு. இது பொதுவாவே எல்லா கொலைகாரங்க இந்த மாதிரி கொலைசெய்யறச்சே அப்படி விக்டிம் கையில வெச்சுட்டுப் போவாங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு. அதனாலேதான் இது தற்கொலைன்னு ஒரு சந்தேகம் கிளப்பமுடியும்னு.. ஆனா பெரியப்பா ஒண்ணும் கோழையுமில்லே அதுக்கான காரணமும் இல்லே…” “இல்லை இல்லை… நாம  எல்லா கோணத்துலயும் பாக்கணும்தான்..” கோமதி அவனை மறுத்தாள். ‘அப்படியெல்லாம் பாக்கணுங்கிறதுக்கு முன்னாடி மோடிவ் ஏதாவது இருக்கான்னு பார்க்கணும். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அவர் ஜாலி மனுஷனாதான் எனக்கும் என் கஸின் கண்களுக்கும் பட்டாரு. எதுக்கும் நாளைக்கு வரப் போகிற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நிறைய க்ளூ கொடுக்கணும்னு நினைக்கிறேன்..”  “ம்ம்.. இந்த போலீஸ்லாம் இங்க பக்கத்து வீட்டுக்காரர்களை கூப்பிட்டு விசாரிச்சாங்களா?” ‘போலீஸ் கான்ஸ்டபிள் கொஞ்சம் பேரு போனாங்க.. ஆமா உங்க வீடு எதிர்வீடாச்சே.. விசாரிக்க யாரும் வரலியா? ‘ ‘இதோ இப்போ உங்க முன்னாடியே ஒரு கேள்வி கேட்கலை?.. அவ்வளவுதான் இவங்க விசாரணை. இப்படியெல்லாம் விசாரிச்சா போலீஸ் ஒண்ணும் கண்டுபிடிக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன்தான் போலிஸ் விசாரணையை விட பெஸ்ட்னு பேசறாங்களே. சரி. இந்த வேலையை நான் தீவிரமாக எடுத்துச் செய்யறேன்.. நீங்க உங்களை பத்தி சொல்லுங்க..”

     

    அவன் அசையாமல் அப்படியே அவனைப் பார்க்கிறான்.

    ‘என்னங்க.. உங்களுக்கு வேலை கொடுத்த என்னையே விசாரிக்கிறீங்க. நீங்க இங்கே உள்ளே எல்லாம் பாருங்க.. எங்க பெரியப்பா வெளியில எப்படி இருப்பார்னு விசாரியுங்க. எல்லா கொலைங்களுக்கும் ஏதாவது ஒரு மோடிவ்’ன்னு ஒண்ணு இருக்கணும்.. அந்த மோட்டிவ் என்னன்னு பாருங்க. எனக்குக் கூட சாதாரணமா பாக்கறச்சே ஒண்ணுமே தெரியலேதான். ஆனா உங்க பார்வை ஒரு இன்வெஸ்டிகேடரோட பார்வை.. அதனாலே வித்தியாஸமா ஏதாவது படலாம்.”

    கோமதி ஆச்சரியமாகப் பேசினாள்..

    “அப்போ இது தற்கொலைங்கிற கோணத்துல கூட நான் கொஞ்சம் ஆராயணும். அதே சமயத்துல ரெண்டு குண்டு வேற வேற இடத்துல பாய்ஞ்சி இருக்குன்னாங்க.. அதையும் பார்க்கணும்..’ ‘ஓ.. ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்க. ரெண்டு குண்டுன்னு எப்படி தெரியும்..’ ‘என்ன சார்.. அதான் ஊரே பேசுதே.. அத வுடுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க.’

    கல்யாண் சோகத்துடன் சிரித்தான்.

    ‘என்னை பத்தி என்னங்க சொல்றது? நான் சுதந்திரமானவன். அப்பா இல்லை அம்மா இல்லே.. எங்க பெரியப்பா மேல அன்பு உள்ளவன். அவரும் அப்படித்தான். ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தோம். அவர் இப்போ இல்லே. அவர் சாதாரணமா செத்திருந்தா காலைல அழுதேனே, அத்தோடு போயிருக்கும். அவ்வளவுதான். ஆனா அவரை ஏன் கொலை பண்ணி சாகடிக்கணும்’னு எப்படியும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அப்படி என்ன வெறி அந்த கொலைகாரனுக்கு,, யார் அந்த கொலைகாரன்?’ ‘அது சரி, அவருக்கு ஏதாவது வித்தியாசமான பழக்கம், யாராவது வித்தியாசமான ஃப்ரெண்ட்ஸ், ஏதாவது அவுட்சைட் பிரெஷர், அல்லது யாராவது அடிக்கடி ஃபோன் செஞ்சு பயமுறுத்தறது அல்லது யாரோடையாவது தகராறு, அல்லது சூதாடறது மாதிரி கெட்ட பழக்கம்.. ஏதாவது பெரிய.. நோய்..  இல்லே..?’

     

    அவள் கேள்விகளைத் தடுத்து நிறுத்தினான்.

    “நிறுத்துங்க கோம்டி.. இதெல்லாம் கண்டுபிடிக்கறதுக்குதான் உங்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் எனக்குத் தெரிஞ்சிருந்தா நீங்க எதுக்கு? நானே கொலைக்கான காரணம் என்ன, கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிச்சுடுவேனே..’

    அவன் மௌனம் சாதித்துவிட்டு மறுபடியும் பேசினான்.

    ‘மனுஷன் எனக்குத் தெரிஞ்சு கடைசி வரைக்கும் நோய்’னு ஒரு நாளும் படுத்தது இல்லே. அவரு டாக்டர்கிட்டே போனதா எனக்குத் தெரியலே..  தினசரி அஞ்சு கிலோமீட்டர் நடப்பார்.. ஏன், நேத்திக்குக் கூட காலைலே வாக்கிங்க் போனார்.. கூடவே எங்க முரளியும்  நடப்பான்.  நேத்துதான் அவங்கிட்டே பெரியப்பாவே சொன்னாராம்.  இந்த தடவை நான் சென்னை வந்தவுடனே அவரோட உயில் என் பேருக்கு எழுதி பதிவு பண்ணிடனும்னு சொன்னாராம்.. சொன்னவர் இன்னிக்கு உயிரோட இல்லை..’ ‘அது எப்படிங்க? உங்க தாத்தா பாட்டி சொத்துதானே இது எல்லாம். அவர் உயில் எழுதினாலும் எழுதாமப் போனாலும் இதெல்லாம் உங்களுக்கு சொந்தம்தானே..’

    அவன் மீண்டும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்

     

    ‘எப்படிங்க இவ்வளோ தூரம் விசாரிச்சீங்க.. நீங்க எப்படியும் இந்த கொலைல துப்பு துலக்கறதுன்னு இங்க வரத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டீங்களா?.

     

    சிறிது நேரம் யோசித்தான். பின்னர் அவனே பேசினான்.

    ‘கரெக்ட்தான்.. முக்காவாசி தாத்தா பாட்டி சொத்து.. மீதி இவரு சுயமா சம்பாதிச்சதுதான். ஆனாலும் நான் இவங்க பணத்தைத் தொடறது இல்லேன்னு முடிவு பண்ணிட்டேனுங்க..’ ‘என்னங்க? ஏன் இப்படி?’ ‘ஏன் பயப்படறீங்க. உங்க ஃபீஸ் கிடைக்குமான்னு பாக்கறீங்களா? இவர்கிட்டே இருக்கற பணத்தை விட என்கிட்டே நிறைய இருக்கு..’

    அவன் முதல் முதலாக தெத்துப்பல் தெரிய சிரித்தான்.

    ‘ஐய்யய்யோ.. நான் அப்படிலாம் யோசிக்கவே இல்லை. நீங்க கொடுக்கற பணத்துக்காக நான் இந்த விசாரணை எடுக்கலை. எனக்கு இது ஒரு விருப்பமான சப்ஜெக்ட்.. இப்போ விசாகப்பட்டினம் வந்தது கூட இந்த மாதிரி ஒரு வழக்குக்காகத்தான்.. என்னடா ரவி.. நீ எதுவும் பேசாம இருக்கே.. ’ ரவி வழக்கமான மூடுக்கு வந்தான்.. ‘அம்மா தாயே.. உன்னோட எனக்கென்ன பேச்சு?. நீயாச்சு, இந்த கேஸாச்சு.. இது ஒரு மர்டர் கேஸ்.. உன்னால எடுத்து விசாரிக்க முடியும். யம்மா.. நேத்துக் காலைல நான் உயிருக்கு பயந்துண்டு அந்த வீடியோவை எடுத்தேனே.. அப்பவே நினைச்சேன்.. உன்னாலே எந்த கேஸையும் ஈஸியா எடுத்துக்கமுடியும். அந்த மாதிரியெல்லாம் தைரியசாலி நீ ஒத்திதான்னு இந்த மடையனுக்குச் சொல்லிடறேன்.. என்னை மட்டும் இந்த கேஸுக்கு உதவி அது இதுன்னு இழுக்காதே.. சொல்லிட்டேன்’. ‘ஓ! அது கூட கொலை வழக்கா? ஐயோ! என்னாங்க நீங்க பயங்கரமான ஆளா இருக்கீங்க..?’ ‘ஐய்யய்யோ.. கொலை வழக்கெல்லாம் இல்லீங்க. ஒரு விவாகரத்து வழக்கு.. இங்கே ஒரு குடும்பம் அங்கே ஒரு குடும்பம்.. அவனோட முதல் மனைவி இங்கத்தான் இருக்கா.. அவளுக்கு சந்தேகம் வந்துச்சு. என்கிட்டே வந்து சொன்னா.. விலாசம் விசாரிச்சேன். நீங்க இப்போ இருக்கற வைசாக் வீட்டு சொந்தக்காரிதான் அவனோட ரெண்டாவது குடும்பம், வீடியோ ஆதாரம் எல்லாம் கொண்டு வந்து இன்னிக்கு அவகிட்டே கொடுத்துட்டேன்.. அவ நிம்மதியா கேஸ் போட்டு விவாகரத்து வாங்கிடுவா.. இப்போ இந்த மாதிரி ரெண்டு கேஸ்ங்க வேற வெயிட் பண்றாங்க, நான் பெண்டிங்க்ல வெச்சிருக்கேன்.. ம்ம்ம்.. கொலை கேஸ்ன்னா நீங்க கொடுத்ததுதான் இன்னிக்குதான் என் முதல் கேஸ். கவலைப் படாதீங்க.. நான் ஒரு டெடிகேடிவ் டிடெக்டிவ்.’

    அவன் அவளை வெறித்துப் பார்த்தான்.

    ‘அப்போ அந்த டெடிகேட்டிவ் டென்டல் பிராக்டீஸ்?.. கஷ்டப்பட்டு படிச்சு டாக்டரேட் வாங்கி இருக்கீங்களே.. க்லினிக் வெச்சிருக்கீங்க,, அது என்னாகும்.?’ ‘அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது.. சரி வரேங்க.. கிலினிக் திறந்து வெக்க சொன்னேன்.. போகணும்..’  “யாராவது நோயாளிகள் வராங்களா என்ன?’ என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கேட்டான். ‘அதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே. பல்லு கிளீனிங்னு நிறைய பேரு வருவாங்க. அதுக்குன்னு ஒரு நர்ஸ் வெச்சிருக்கேன்.. அதுலேயே காசு வந்துடும்..  அது பாட்டுக்கு அது போகும்.. இது வீட்டில் முன்னாடி ரூம்லேயே கிளினிக் இருக்கு.. நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்.. நான் வரட்டுமா?’ என்று சொன்னவள் ரவியைப் பார்த்தாள். ‘டேய்.. போகறச்சே வீட்டுக்கு வந்துட்டு போடா.. சாந்தியும் இப்போ அங்க வருவா..’

    அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் போனதும் கல்யாண் காதில் கிசுகிசுக்கிறான்.

    ‘இவ கையிலே இந்தக் கேஸைக் கொடுத்திருக்கியா.. பயங்கரமான சுறுசுறுப்பு.. நேத்து பாக்கணுமே.. நம்ம வீட்டுக்கார அக்காவை கிடுக்குப்பிடி போட்டு கேள்வி கேட்க அந்தக்கா எப்படா இவகிட்டயிருந்து ஒதுங்கலாம்னு என்னை அடிக்கடிப் பாக்க ஆரம்பிச்சுடுத்து. கல்யாண தேதி, கல்யாணம் எங்க நடந்தது.. உறவுக்காரங்கள்லாம் வந்தாங்களான்னு ரெண்டு மூணு தடவ கேட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டுதான் வீட்டை விட்டு வெளியே வந்தா..’ ‘நல்லதுதானே.. ‘ ‘என்னடா நல்லது? நாளைக்குள்ள பாரு.. எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி என்னையும் தன்னோட சேர்த்துக்குவா.. நான் வைசாக் போனா மாதிரிதான்..’ ‘நீயும் சேர்ந்திட்டியானா ரொம்ப நல்லதா போச்சு’.

    கல்யாண் அந்த சோகத்திலும் சிரித்தான்.

     

    இடம்: காவல் நிலையம்:

     

    அடுத்த நாள் காவல் நிலையத்தில் கல்யாணும் ரவியும் இன்ஸ்பெக்டருடன் அமர்ந்திருந்தபோது இன்ஸ்பெக்டரின் மொபைலுக்கு ஒரு போன் வந்தது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், ‘தகவலுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு மூடினார்.

     

    ‘கல்யாண்! இந்த கேஸ் விஷயமா சுமதிங்கற  நர்ஸ் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு.. நீங்க ரெண்டுபேரும் என் கூட வாங்க போகலாம். ஆனா உங்க பெரியப்பா உறவு எதுவும் காமிக்காதீங்க. சாதாரணமா வாங்க.’

     

    கல்யாண் ரவி இன்ஸ்பெக்டர் மோகன் மூவரும் போலீஸ் காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றனர். பல வீடுகள் கொண்ட ஒரு சிறிய சாலை அது, அவர்கள் போலீஸ் வண்டியை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு ஒரு வீட்டிற்குச் சென்றார்கள், அங்கு ஒரு வயதான பெண்மணி வராண்டாவுக்கு வெளியே அமர்ந்து சில வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அது சரியாக செவி வரை கேட்கவில்லை. எனினும் உற்றுக் கேட்டான் ரவி.

     

    ‘வரலியே இன்னும்னு பார்த்தேன்.. வந்துட்டாங்க.. இந்த இழவோடு இந்தப் பொம்பளை எப்போதும் கஷ்டப்பட்டே இருக்கணும் போல..’

     

    சட்டென ரவி இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். ‘சார்.. அந்த அம்மா பாவம் சார் ஏதோ வேணும் போல.. நான் அந்தம்மாகிட்ட பேசிண்டிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க சார்.’

    ‘சரி மிஸ்டர் ரவி..’

    கல்யாண் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால் இன்ஸ்பெக்டர் அவளைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் சென்றார். இருபது இருபத்திரெண்டு வயதுடைய பெண் ஒருவர் சமையலறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​ஆச்சரியத்துடன் போலிஸாரைப் பார்த்தாள்.

    ‘எதுக்குங்க வந்தீங்க?.. போலீஸ்லாம் வீட்டுக்குள்ள வரலாமா?.. ஊருல என்ன நினைப்பாங்க. சார்.. ஏற்கனவே இங்கே இருக்கற நாங்க மூணு பேரும் பொம்பளைங்க.. இருக்கற வீட்டையும் காலி பண்ணச் சொல்லிட்டா எங்கேன்னு போவோம் நாங்க?’ ‘போலீஸ்ன்னா என்னம்மா ராட்சஸங்களா?  விசாரணைக்கோசரம் எங்கே வேணும்னாலும் வரத்தானே வேணும் சுமதி.. அதானே உன்னோட பேரு?’ ‘ஆமா சார்.. உங்களுக்கு என்ன வேணும்? எதைப் பத்தி பேசணும்?’ ‘கந்தசாமியைப் பத்தி’ ‘எந்த சாமி?’ ‘கந்தசாமி… சுமதி.. உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவரே.. அவரைப் பத்தித்தான்’. ‘கொஞ்சம் இருங்க.. (அவள் பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்) சார் அடிக்கடி இங்கே ஆம்பளைங்க யாரும் வந்தது இல்லே.. நீங்க சொல்றதைப் பார்த்தா ஒருவேளை இவரைச் சொல்றீங்களா.. ஒரு பெரியவர் ஒருத்தர் நாலு மாசம் முன்னாடி இங்கே வந்தார். இரவு நேரமா மாலையான்னு ஞாபகம் இல்லே. என் தங்கைக்கு கொஞ்சம் மூளைப் பிரச்சனை.. அவளுக்கு நிறைய செலவு பண்ணி ஹாஸ்பிடல்ல சேர்த்து குணம் ஆக்கிடலாம். இந்தப் பெரியவர் இந்த மாதிரி விஷயங்களுக்கு நிறைய பணம் கொடுப்பார். தெரிஞ்சவங்கதான் சொன்னாங்க. இத்தனைக்கும் நான் கேட்கலே.. எனக்குச் சொன்னவங்களே அவங்ககிட்டே போயி ஹெல்ப் கேட்டாங்க.. ஓஹோ அவரு பேரு கந்தசாமியா? தெரியாதுங்க.. நோயாளியை பார்க்க வந்தேன்மா ன்னு சொல்லிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டாங்க.. நான் உதவி கேட்டது உண்மையான்னு சோதனை பண்ணிருக்காருன்னு அப்போ தோணித்து அவ்வளவுதான்.. எனக்கு இவங்க யாரும் உதவி செய்யலைன்னா என்னங்க. தெய்வம் நம்மகிட்டே கூடவே இருந்து எல்லாம் செய்யும்.. அந்த நம்பிக்கைல தான் சொல்றேன். என்னாச்சு சார் அந்த கந்தசாமிக்கு?’

    கல்யாண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் மோகன் அவனைப் பார்க்கிறார். மெதுவாக அவன் காதில் பேசுகிறார், ‘என்னய்யா.. பொம்பளை அழகா இருக்குதேன்னு அவளையே உத்துப் பார்க்கறியா?.” கிண்டலாகச் சொன்னவர் மறுபடியும் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்.

    ‘சுமதி.. உனக்கு விஷயம் தெரியாதா? அந்த கந்தசாமியை யாரோ முந்தா நாள் சாயங்காலம் கொலை பண்ணிட்டாங்க.’ அவள் ஆச்சரியப்பட்டாள். ‘கடவுளே’ இது என்ன சார் இப்படிச் சொல்லறீங்க.. அடப் பாவமே.. அவரே வந்தாரு.. ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரு.. அப்புறம் எந்தத் தகவலும் இல்லே. நாங்களும் மறந்துட்டோம்.. இப்போ அவரு மேல போயிட்டாரா?’ ‘என்னம்மா.. இவ்வளோ ஈஸியா சொல்றே? உனக்கு ஷாக்கிங்கா இருக்கணுமே..’ ‘எனக்கு எதுக்கு சார் ஷாக்கடிக்கணும்..?  அன்னிக்கு அரை மணி நேரம் அவரைப் பார்த்திருப்பேன். இருந்தாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.’ ‘ஆனா அந்த மனக் கஷ்டம் மூஞ்சில தெரியலியே.. சரி, வேற எந்த விஷயமும் அவரைப் பத்தி உனக்குத் தெரியாதா?’ ‘எந்த விஷயமும்னா?.. புரியலை சார்.. எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..’

    இன்ஸ்பெக்டர் மோகன் சற்று கோபமாக பேசினார்

    ‘இதோ பாரு சுமதி.. எனக்கு ஒரு செய்தி கிடைச்சது.. கந்தசாமி உனக்கு ஏதோ கெடுதல் பண்ணியிருக்காருன்னு ஒரு இன்ஃபார்மர் சொன்னாரு.. உனக்கு என்ன விஷயத்துல கெடுதல் பண்ணியிருக்கார்னு எனக்குத் தெரியணும்.’

    சட்டென்று அழ ஆரம்பித்தாள்.

    ‘என் சார், எனக்கு அந்த ஆளை அறிமுகமே இல்லைன்னு சொல்லறேன். நீங்க எனக்கும் அந்த கொலைக்கும் லிங்க் பண்ணப் பாக்கறீங்களே.. இது என்ன நியாயம் சார்.. போலீஸ்ன்னா என்ன வேணா சொல்லலாமா சார்?’

    கல்யாண் திடீரென்று இடையில் வந்தான்.

    ‘சார்.. எனக்கும் அப்படித்தான் படறது சார்.. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னும்போது அவங்களை கன்ஃப்யூஸ் பண்ணி ஸ்டேட்மென்ட் வாங்கறது தப்பு இல்லயா சார்..’

    “இன்ஸ்பெக்டர் அவனை அனுதாபத்துடன் பார்த்தார். மெதுவாக அவனிடம் பேசினார். ‘என்னய்யா.. பொம்பளைன்னா கொஞ்சம் இரக்கம் காட்டறியா? பார்த்தா தெரியலே இது பொய் சொல்லுதுன்னு.”

     

    கல்யாண் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

     

    ‘ஏம்மா.. உங்க ஸ்டேட்மென்ட்லாம் வேணாம். ஆனா இந்த விஷயத்துல என்னவெல்லாம் தெரியும்னு கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். அவ்வளவுதான்.’ ‘நன்றி சார், உங்களைப் பாத்தா நல்ல மாதிரியாத்தான் தெரியுது. இருந்தாலும் சொல்றேன் சார்.. எனக்கும் அந்த பெரிய மனுஷனை அரை மணி நேரம் தான் தெரியும்.’ ‘சரிம்மா.. யார் மூலமா இந்தப் பெரிய மனுஷரை பிடிச்சீங்க?’ ‘சார், நான் என் தங்கையை ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வெளிய காத்திருந்தப்ப ஒரு ஏஜண்டும் இன்னொரு குடும்பமும் அங்கே பேசிண்டு இருந்தாங்க.. பெண் குழந்தைங்க 16 வயதுக்குள்ள இருந்தாங்கன்னா அவங்க ஆபரேஷனுக்கு இந்த மனுஷர் பண உதவி பண்ணறாராம். அந்த குடும்பம் அவங்களுக்காக அன்னிக்கு அவர்கிட்டே போய் ஹெல்ப் கேட்க போறதா சொன்னாங்க. அப்படியே என் தங்கை விஷயத்தையும் சொல்லி ஹெல்ப் கேளுங்க, கிடைச்சா நல்லது.. அதுக்காக உங்க குழந்தை கேஸ் ஐ வுட்டுடாதீங்க.. கடவுள் அருள் இருந்தா என் தங்கைக்கும் கிடைக்கட்டுமே’ அப்படின்னேன்.. அவரு நான் சொன்ன விஷயமெல்லாம் கரெக்டான்னு செக் பண்ணிக்க அன்னிக்கு இங்க வந்தாரு. அவ்வளவுதான். ஆனா இப்படி பொசுக்குன்னு போயிடுவார்ன்னு ஊகிக்கலே.”  கல்யாண் இன்ஸ்பெக்டர் ஐ பார்த்தான். மேலும் விஷயம் அறிய அவனை ஊக்கப்படுத்தினார். “கல்யாண்.. நீங்க கேரி ஆன் பண்ணுங்க.. நீங்க பேசிண்டு இருங்க,, எதுவாவது விஷயம் கிடைக்குதான்னு பாருங்க.. நான் இங்க சுத்துவட்டாரத்துல கொஞ்சம் விசாரிக்கறேன்.. இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே ரவி அந்த அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அருகே வந்தார். ‘என்ன மிஸ்டர் ரவி, இவங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’.  இல்லே சார்.. இவங்க இந்த சுத்துவட்டார வீடுகள் இவங்களைக் கொஞ்சம் ஏளனமா பாக்கறாங்களாம்.. இதுல போலீஸ் வேற வந்து விசாரிச்சா எப்படின்னாங்க? ஏதுக்கு ஏளனமாம்? அவங்க வீட்டுல ஒரு சின்னப் பொண்ணுக்குக் கொஞ்சம் மன வளர்ச்சி இல்லையாமே..  ‘ஆமாமா.. சம் டைம் க்ரூயல் மனசு உள்ளவங்கதான் ஜனங்க..’

    இருவரும் வெளியே வருகிறார்கள்.

     

    வெளியே இருந்த சிலரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்தார். கடந்த நாட்களில் ஒரு கருப்பு கார் இந்த சாலையில் வந்து இங்கு நின்றதை யாராவது பார்த்தீர்களா என்று இன்ஸ்பெக்டர் அங்கே அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.

     

    ஞாபகம் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கே எதிர் வீட்டுக்காரர்கள் சொன்னார்கள், ‘என் அப்பா கருப்பு கார் மட்டுமே வைத்திருப்பார், ஆனா அவர் ரெண்டு மாதமா அதையே கொண்டு வருவதை நிறுத்திட்டார். ‘என் பொண்டாட்டிக்கு அந்த கருப்பு கார் வேணும்னு அவ டைரக்டா கேட்டதாலே அவர் இங்கே  வர்ரது கிடையாது.’

     

    கொஞ்ச நேரம் கழித்தவுடன் கல்யாண் வெளியே வந்து இவர்களுடன் சேர்ந்தான்.

     

    ‘சார், அது அப்பாவி பொம்பளை’ன்னு தெரியறது. இவள் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் நர்ஸா வேலை செய்யறா. தன்னோட தங்கை ஆடிஸ்டிக் பொண்ணுன்னவுடனே குணப்படுத்த எல்லா முயற்சியும் எடுக்குறா. அவ்வளவுதான்,  இவளைப் பத்தி யார் இன்ஃபார்ம் கொடுத்தாங்கன்னு நான்  சொல்லட்டுமா?’ ‘சொல்லுங்க’ ‘இந்தப் பெண்ணுக்கு உதவி பண்றேன்னு முதல்ல ஒரு குடும்பம் சிபாரிசுக்கு வந்ததுன்னு சொன்னீங்க இல்லே. அவங்கதான் போன்ல இவங்க நியூஸ் கொடுத்திருப்பான்.’ ‘நீங்கள் கூறியது கொஞ்சம் சரிதான்.. நாங்க கந்தசாமி உதவி செஞ்ச எல்லா ஆட்களையும் விசாரிச்சிருக்கோம் மிஸ்டர் கல்யாண், அதுல சில விஷயம் கிடைச்சுது. உங்க பெரியப்பா கொஞ்சம் டெஸ்ட் பண்ணி உண்மையானவங்களான்னு பார்த்து அப்புறமா பணம் கொடுப்பாரு. அவர் ஆடிட்டர் இதை ஸ்டேட்மென்ட்ல சொல்லி இருக்காரு. ஆனா இன்னொரு ஆளும் இவளைப் பத்திச் சொன்னான். அதனாலதான் கொஞ்சம் ஹார்ஷா பேசினேன். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம்.. போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் வந்துருக்கும். ஏதாவது தகவல் தெரியுதான்னு பார்ப்போம்.’  ‘சரி சார்.. ஆனா இந்த பொம்பளை கேஸ் ரொம்ப பாவம் சார்.. பதினாலோ பதிமூணோ வயசுள்ள ஆடிஸ்டிக் தங்கை இருக்கு.. நான் பார்த்தேன் எத்தையோ பறிகொடுத்த மாதிரி எல்லாரையும் பாக்கறா.. நல்ல டாக்டர் கிடைச்சு சிகிச்சை பண்ணினா அந்த பொண்ணுக்கு சரியாயிடும்’. ‘உங்களை அப்பவே கவனிச்சேன்.. அந்த பொம்பளையை ஒரு மாதிரியாத்தான் பார்த்தீங்க.. ஜாக்கிரதையா இருங்கப்பா.. பொம்பளை, அதுவும் அவ எப்பிடி எதிர்த்து பேசினா பாரு,  உடனே ஒரு அழுகையும் வேற. அவ அழுதுட்டதால நாம இரக்கம் காமிக்க முடியாது மிஸ்டர் கல்யாண். ஆனா எதுக்கு நம்ம ஆளு இந்தப் பொம்பளையைப் பத்தி சரியா விலாசத்தோடு சொல்லணும்? நான் இன்னும் இந்தப் பெண்ணை விசாரணை லிஸ்ட்லயே வெக்கிறேன். மறுபடியும் தேவைப்பட்டா விசாரிக்கலாம்.’ “யார் சார் அந்த இன்ஃபார்மர்.. சொல்லணும்னு அவசியம் இல்லே.. ஒருவேளை கோம்டிகிட்டே சொல்லி இன்னும் ஆழமா என்னால இவகிட்டே அனுப்பி விசாரிக்கமுடியும். லேடீஸ்ங்க்கிறதனாலே கொஞ்சம் விஷயம் ஏதாவது இருந்தா வெளியே வரலாம்”.  “இன்ஃபார்மர் பேருதானே.. சொல்லிட்டா போச்சு. மிஸ்டர் முரளி.. உன்னோட கஸின் முரளி.. ரவி ஆச்சரியமாக கேட்டான். ‘இவன் கஸின் முரளியா?’  ‘அவனேதான். அவன் உங்க பெரியப்பாவை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கான்யா.. திடீர்னு ஞாபகம் வந்தது சார், எதுக்கும் அங்க போயி நீங்க அவளை விசாரிங்க சார்’னு இப்போதான் உன் முன்னாடியே போலீஸ் ஸ்டேஷன்ல  இருக்கறச்சே என் மொபைல்ல பேசி அட்ரஸ் மெஸேஜ்ல கொடுத்தான்”.  “முரளிகிட்டே நானும் பேசறேன் சார்.. என்னை விட பெரியப்பாவை கரைச்சுக் குடிச்சவன். ஆனா நல்லவன் சார். எங்க சொத்து மேல எல்லாம் அவனுக்கு ஆசை இல்லேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” “போலீஸைப் பொறுத்தவரை எல்லாமே சந்தேகம்தான். முரளி என்ன ஒழுங்கா.. அவனுக்கு ஆசை சொத்துமேலே இல்லேன்னு வெச்சுண்டா கூட அவன் அதிகம் கந்தசாமியோட பழகினான். என்னவேணா நடந்திருக்கும். ஆனா முரளி சுடலேன்னு எனக்குத் தெரியும். அவன் அன்னிக்கு சாயங்காலம் பூரா அவன் ஆபிஸ்லதான் இருந்தான். அதை எல்லாம் விசாரிச்சுட்டோம். ஆனா வெளியாள் வெச்சு கொலை பண்ணி இருக்கலாம்தான்.. என்ன அப்படி பாக்கறே? சான்ஸ் இருக்கா இல்லையா? அந்த சுந்தர், உன்னோட இன்னொரு க்லோஸ் கஸின்.. அவனையும் விசாரிச்சுட்டேன். அவன் ஊரிலேயே இல்லே.. கார்ல புறப்பட்டு அன்னிக்கு நடுராத்திரி வந்தான். எல்லாத்தையும் விசாரிக்கிறோம் கல்யாண்.. எங்கேயாவது எதிலாவது க்ளூ கிடைக்காம போகாது.. பிடிச்சுடுவோம் அந்தக் கொலைகாரனை.’.

     

     

    தொடரும்

    Share
  • புலனாய்வு இதழியலில் சாதனை படைத்த பெண்மணி

    புலனாய்வு இதழியலில் சாதனை படைத்த பெண்மணி

    -மேகலா இராமமூர்த்தி

    அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில், மைக்கேல் காக்ரன் (Michael Cochran), மேரி ஜேன் கென்னடி காக்ரன் (Mary Jane Kennedy Cochran) ஆகியோருக்கு மகளாக 1864ஆம் ஆண்டு மே 5இல் பிறந்தவர் எலிசபெத் ஜேன் காக்ரன் (Elizabeth Jane Cochran). வளமையானவராக விளங்கிய தந்தையார் மைக்கேல் காக்ரன், 6 வயதுக் குழந்தையாக எலிசபெத் இருந்தபோதே இறந்தமையால் குழந்தைப் பருவத்திலேயே பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் எலிசபெத்துக்கு ஏற்பட்டது.

    பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கிய எலிசபெத், இண்டியானா பள்ளியில் (Indiana Normal School, now Indiana University of Pennsylvania) ஆசிரியப் பணிக்கான கல்வியைப் பயின்றுவந்தார். குடும்பச் சூழல் அவரைத் தொடர்ந்து பயில அனுமதிக்காததால் தம் கல்வியை முடிக்காமலேயே அவர் வெளியேறவேண்டியதாயிற்று. எனினும் கல்வியிலிருந்த ஆர்வம் காரணமாகத் தாமே பலவற்றைப் படித்துத் தம் பொது அறிவை வளர்த்துக்கொண்டார் எலிசபெத்.

    அப்போது பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த ’Pittsburgh Dispatch’ எனும் நாளிதழில் ”பெண்கள் எதற்கு ஏற்றவர்கள்?” (What Girls Are Good For?) எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. ”பெண்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவும், வீட்டுப்பணிகளை ஆற்றவுமே ஏற்றவர்கள்; கல்வி கற்கவும் பணிபுரியவும் பெண்கள் கிளம்புவது அரக்கத்தனமானது” என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது (பெண்ணடிமைத்தனத்தில் நம் நாட்டுக்குச் சற்றும் குறைந்ததில்லை அமெரிக்கா என்றறிக!).

    அந்தக் கட்டுரையைப் படித்து வெகுண்ட எலிசபெத், ”பெண்கள் அடுப்பூதுவதற்கும், பிள்ளை பெறுவதற்கும் மட்டுமே ஏற்றவர்கள் எனும் எண்ணம் வன்மையாகக் கண்டிக்கத்தது; அறிவிற் சிறந்தவர்களான பெண்கள் கல்வி கற்கவும் வெளியில் சென்று பணிபுரியவும் ஏற்றவர்கள்; சமூகம் அவர்களைத் திருமண வாழ்வு எனும் பெயரில் வீட்டுக்குள் முடக்காமல் வெளியில் சென்று பணியாற்ற அனுமதிக்கவேண்டும்” என்று காட்டமாக மறுப்புக் கடிதம் எழுதி, ”தனித்திருக்கும் அபலைப்பெண்” (Lonely Orphan Girl) என்று கையொப்பமிட்டு Pittsburgh Dispatch நாளிதழுக்கு அனுப்பினார்.

    அவரின் கருத்துக்களால் கவரப்பட்ட அந்நாளிதழின் ஆசிரியர் ஜார்ஜ் மேடன் (George Madden), அக்கடிதத்தைத் தம் நாளிதழில் வெளியிட்டதோடு எலிசபெத்தைத் தம் நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றவும் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பினை ஏற்று அந்நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார் எலிசபெத். 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பாடலாசிரியராக விளங்கியவரும், ’அமெரிக்க இசையின் தந்தை’ (Father of American Music) என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் பாஸ்டரின் (Stephen Foster) பாடலொன்றில் இடம்பெற்ற பெண் பெயரான ’நெல்லி பிளை’ (Nellie Bly) என்பதை எலிசபெத்தின் புனைபெயராகச் சூட்டினார் ஜார்ஜ் மேடன். அதுமுதல் ’நெல்லி பிளை’ என்ற பெயரிலே எழுதத் தொடங்கினார் எலிசபெத். இனி நாமும் எலிசபெத்தை ’நெல்லி பிளை’ என்றே அழைப்போம்.

    பெண்களின் வாழ்க்கை, அமெரிக்கத் தொழிலாளர்களின் நிலை, அவர்களின் கல்வி குறித்தெல்லாம் Pittsburgh Dispatch நாளிதழில் எழுதினார் நெல்லி பிளை. ஆறு மாதங்களுக்கு மெக்சிகோ சென்று தங்கி அங்குள்ளோரின் வாழ்வியல் குறித்து ’Six Months in Mexico’ எனும் தலைப்பில் நாளிதழில் தொடர் கட்டுரைகள் எழுதினார். மெக்சிகோவிலிருந்து திரும்பி வந்த அவரை Pittsburgh Dispatch நாளிதழின் ”பெண்கள் பக்கம்” பகுதிக்குப் பொறுப்பாசிரியராக்கிய ஜார்ஜ் மேடன், பெண்களின் பேஷன் ஈடுபாடு, மலர்க் கண்காட்சிகள் குறித்தெல்லாம் எழுதுமாறு பணிக்கவே, பத்திரிகையாளர் பணியை ”சீரியஸ் பிசினஸாக”க் கருதிய நெல்லிக்கு இவை பிடிக்கவில்லை. எனவே Pittsburgh Dispatch நாளிதழிலிருந்து விலகினார்.

    பிட்ஸ்பர்க் நகரிலிருந்து பத்திரிகைத் துறையின் மையமாக அக்காலத்தில் விளங்கிய நியூ யார்க் நகருக்குக் குடிபெயர்ந்தார் நெல்லி. அப்போது அவருக்கு வயது 23. பத்திரிகையாளர் பணிதேடிப் பல மாதங்கள் அலைந்தார்; எதுவும் கிடைக்கவில்லை. ஜோசப் புலிட்சர் (Joseph Pulitzer) நடத்திவந்த ’தி நியூ யார்க் வேர்ல்ட்’ (The New York World) எனும் நாளிதழ் இயங்கிவந்த அலுவலகத்துக்கு ஒருநாள் சென்று அப்பத்திரிகையின் ஆசிரியர்களைச் சந்தித்த நெல்லி, பத்திரிகைத் துறையில் எத்தகு சவாலான பணியையும் ஏற்றுச் செய்வதற்குத் தாம் தயாராக இருப்பதை அவர்களிடம் தெரிவித்தார். அவரின் துணிவால் கவரப்பட்ட அந்நாளிதழ் ஆசிரியர்கள்,

    “மனநலக் காப்பகம் ஒன்றில் நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து அறிந்துவர நீங்கள் அங்கே மனநோயாளிபோலச் செல்ல வேண்டியிருக்கும். உங்களால் மனநோயாளிபோல் நடிக்க இயலுமா?” என்று நெல்லியிடம் கேட்க, சற்றும் தயங்காமல் அதற்கு ஒப்புக்கொண்டார் நெல்லி. உடனே பத்திரிகையாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டது.

    நியூ யார்க்கிலுள்ள பிளாக்வெல் தீவிலிருந்த (Blackwell’s Island; Now the island is renamed Roosevelt Island) பெண்களுக்கான மனநலக் காப்பகத்தின் (Women’s Lunatic Asylum) நிலையை அறிந்துவருவதே நெல்லிக்கு அளிக்கப்பட்டிருந்த பணி. மனநோயாளியாக அங்கே சென்றால்தான் அக்காப்பகத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவ்வாறு நடிப்பதற்கு ஆயத்தமான நெல்லி, அதன் முதற்கட்டமாகத் தாம் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென்று இரவுநேரத்தில் அலறுவது, சம்பந்தமில்லாமல் பேசுவது என்று தம் ’பைத்தியக்கார’ வேலைகளைத் தொடங்கினார்; அவரது சேட்டைகள் பொறுக்கமுடியாமல் போகவே அவர் தங்கியிருந்த குடியிருப்பின் உரிமையாளர் காவல்துறையில் புகாரளித்தார். காவல்துறையினரும், மருத்துவர்களும் நெல்லியின் நடவடிக்கைகளை அருகிலிருந்து கண்டு அவருக்கு உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று சான்றிதழ் அளிக்கவே, பிளாக்வெல் தீவிலிருந்த பெண்களுக்கான மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் நெல்லி.

    அங்கேயும் தன் நடிப்பைத் தொடர்ந்தார் அவர். மனநோயாளிகளாக அங்கே தங்கியிருந்த பெண்கள் கொடூரமாக நடத்தப்படுவதையும், அவர்களுக்குக் கெட்டுப்போன உணவு வழங்கப்படுவதையும், நாற்காலிகளில் கட்டிவைக்கப்பட்டு அப்பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதையும், உறைபனியின்மீது மணிக்கணக்கில் சிகிச்சை என்ற பெயரில் அவர்கள் அமர்த்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுவதையும், இன்னபிற கொடுமைகளையும் நேரில் கண்டார் நெல்லி. அதுமட்டுமா? மனநோயாளியாக உள்ளே சென்றதால் தாமும் அக்கொடுமைகளை அனுபவித்தார். அங்கு அவர் கண்டறிந்த மற்றொரு உண்மை, அங்கிருந்த எல்லாப் பெண்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர்; நல்ல அறிவுடன் இருந்த பெண்களும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டும், வறுமையால் மனநோயாளிகளெனத் தவறாக அடையாளப்படுத்தப்பட்டும் அந்தக் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    பத்து நாள்கள் அங்கே தங்கி அக்காப்பகத்தின் முறைகேடுகள் அனைத்தையும் அறிந்துகொண்டார் நெல்லி. பத்தாவது நாள் தி நியூ யார்க் வேர்ல்ட் நாளிதழ் சார்பில் அங்கே வந்த வழக்கறிஞர், நெல்லி குறித்த உண்மைகளைக் காப்பகத்தாரிடம் தெரிவித்து அவரை வெளியில் கொண்டுவந்தார்.

    வெளியில் வந்த நெல்லி மனநலக் காப்பகத்தில் தாம் கண்ட அனைத்து உண்மைகளையும் தி நியூ யார்க் வேர்ல்ட் நாளிதழில், ”பைத்தியக்கார விடுதியில் பத்து நாள்கள்” (Ten Days in a Mad-House) எனும் தலைப்பில் கட்டுரைகளாக வெளியிட்டார். அவற்றைப் படித்த நியூ யார்க் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர். பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்திய அக்கட்டுரைகளைத் தொகுத்து நெல்லி நூலாகவும் வெளியிட்டார்.

    அவரது கட்டுரைகளைக் கண்ட நியூ யார்க் நகர நிர்வாகம், அந்தக் காப்பகத்தின் செயற்பாடுகள் குறித்து நீதிபதிகளின் விசாரணைக்கு உத்தரவிட்டது. மனநலக் காப்பகங்களுக்கான பட்ஜெட்டை உயர்த்தி அங்கே முறையான சிகிச்சை, சுகாதாரமான இடவசதி, தரமான உணவு, மனிதநேய அணுகுமுறை ஆகியவற்றை வழங்கும்பொருட்டுச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. தம் துணிச்சலான செயற்பாடுகளால் அமெரிக்காவின் நட்சத்திரப் பத்திரிகையாளராக அனைவராலும் கொண்டாடப்பட்டார் நெல்லி பிளை.

    சமூக அக்கறையும் புதிய சாதனைகள் படைப்பதில் ஈடுபாடும் கொண்ட நெல்லி பிளை, ஜூல்ஸ் வெர்ன் எனும் புகழ்வாய்ந்த எழுத்தாளரின் ”80 நாள்களில் உலகைச் சுற்றி” (Jules Verne’s Around the World in Eighty Days) எனும் நாவலால் ஈர்க்கப்பட்டு அதனை முறியடிக்கும் வகையில் 72 நாள்களில் உலகைச் சுற்றிவரக் கிளம்பினார். அப்பயணத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், எகிப்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றார். ”உலகம் சுற்றிய வாலை’யான நெல்லி பிளை, 72 நாள்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்களில் தம் பயணத்தை நிறைவுசெய்து நியூ யார்க்கிற்குத் திரும்பி உலக சாதனை படைத்தார்.

    இப்பயணம் பெண்ணின் சுதந்திர உணர்வு, துணிவு, சாதிக்கும் திறன் ஆகியவற்றின் அடையாளங்களாக அப்போது பார்க்கப்பட்டது; இப்பயணத்தால் உலகப் பிரபலமாகவும் மாறினார் நெல்லி பிளை.

    தம்முடைய 31ஆவது வயதில் தம்மைவிட 40 வயதுக்குமேல் மூத்தவரான தொழிலதிபர் இராபர்ட் சீமேனை (Robert Seaman) மணந்த நெல்லி, இராபர்ட்டின் மரணத்திற்குப் பின்பு அவரது நிறுவனத்தையும் (Iron Clad Manufacturing Company) எடுத்து நடத்தித் தொழில்முனைவோராகவும் சாதித்தார். எதிர்பாராத விதமாகச் சில ஆண்டுகளில் அந்நிறுவனம் முடங்கிப்போனதால் மீண்டும் பத்திரிகையாளர் பணிக்குத் திரும்பினார் அவர்.

    புலனாய்வு இதழியலின் முன்னோடிப் பெண் பத்திரிகையாளர் (Pioneer woman in Investigative Journalism), சிறந்த ஊடகவியலாளர் (A great journalist), பெண்ணியவாதி, (Feminist), துணிவும் சுதந்திர உணர்வும் கொண்ட பெண் (A woman with courage and a sense of freedom), தொழில்முனைவோர் (Entrepreneur) எனப் பன்முகத் திறனாளராகத் திகழ்ந்த நெல்லி பிளை, 1922ஆம் ஆண்டு தம்முடைய 57ஆவது வயதில் நிமோனியா நோயால் மரித்தார்.

    2002ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அவரது அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள், புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. பல பள்ளிகள், பூங்காக்கள் அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

    ”சரியாகப் பயன்படுத்தப்பெறும் ஆற்றல் எதையும் சாதிக்கும்” என்று திடமாக நம்பி அவ்வாறே செயற்பட்ட நெல்லி பிளை மறைந்து ஒரு நூற்றாண்டுக்குமேல் ஆகிவிட்டது; எனினும், அவருடைய துணிச்சலான செயற்பாடுகளும் சாதனைகளும் இன்றும் நமக்கு வியப்பையும் பிரமிப்பையும் தருவனவாகவே இருக்கின்றன. நெல்லி பிளையின் வாழ்க்கை இன்றைய பெண்களுக்கும் சிறந்த வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனில் மிகையில்லை.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1.https://www.britannica.com/biography/Nellie-Bly?utm_source=chatgpt.com

    2.https://www.nationalgeographic.com/history/history-magazine/article/nellie-bly-united-states-first-investigative-journalist-started-asylum?utm_source=chatgpt.com

    3.https://www.womenshistory.org/education-resources/biographies/nellie-bly-0?utm_source=chatgpt.com

    4.https://en.wikipedia.org/wiki/Nellie_Bly

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 16

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 16

    சக்தி சக்திதாசன்

    கவியரசர் கண்ணதாசனின் இலக்கியச் செறிவும் தத்துவ விசாரணையும் அற்புதமானவை

    தமிழ்த்திரை இசைப் பாடல்களில் தத்துவம், ஆன்மீகம், சமூக விமர்சனம் ஆகியவற்றைத் தனித்தன்மையுடன் கலந்து தந்தவர் கவியரசர் கண்ணதாசன்.

    அவரது பாடல்கள் வெறும் வரிகளாக அல்லாமல், ஆழ்ந்த இலக்கியச் செறிவுடனும், கவிதை நயத்துடனும் விளங்குகின்றன.

    எளிமையான வார்த்தைகளைக் கொண்டு வாழ்வின் சிக்கலான உண்மைகளை மக்களின் மனதில் பதிய வைத்ததில் அவருக்கு நிகர் அவரே.

    மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை (அநித்யத்தை), உள்ளத்தின் ஆசைகளையும், ஞானம் தேடும் பயனையும் அவர் எந்தவித அச்சமும் இல்லாமல் பாடல்களில் புகுத்தினார்.

    கண்ணதாசனின் தனிச்சிறப்பு என்னவெனில், அவர் வேதாந்த உண்மைகளை, வெகுஜன மொழியில் வெளிப்படுத்தியதுதான்.

    மெய்யியல் கருத்துகளை நேரடிப் போதனையாக அல்லாமல், ஒரு திரையிசைப் பாடலின் உணர்ச்சி ஓட்டத்துக்குள் இயல்பாகப் பொருத்திவிடுவார்.

    அவரது தத்துவப் பாடல்கள் ஒரு ஆன்மீக அறிவியலின் அடிப்படையில் மனிதனைச் சுற்றியுள்ள உலகம், விதி, நல்லவன் – கெட்டவன் என்ற இரட்டைத் தன்மைகள் ஆகியவற்றை ஆராய்கின்றன.

    அந்த வகையில், “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” என்ற இந்தப் பாடல் மனிதனின் தேடல், பாசாங்குகள், ஊழ்வினை மற்றும் இறைவனின் இருத்தல் ஆகியவற்றை நுட்பமாகப் பேசுகிறது.

    “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” எனும் பாடலின் ஆன்மீக அறிவியலை இந்த சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பார்ப்போமா ?

    இந்தப் பாடலின் மையக் கருத்து ஞானத் தேடல் மற்றும் இறைவனின் இருப்பு பற்றியதாகும்.

    “ஞானத் தங்கமே” என்ற விளி (அழைப்பு), இந்தக் கருத்துக்களைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு சீடனையோ அல்லது சக மனிதனையோ குறிக்கிறது.

    ஒவ்வொரு சரணமும் மனித வாழ்வின் ஒரு முக்கியமான ஆன்மீக மற்றும் தத்துவ உண்மையை வெளிப்படுத்துகிறது.

    பல்லவி: இருப்பும் தேடலும்

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

    இதன் ஆன்மீக அறிவியல்:

    இந்தப் பல்லவி, அத்வைத (இரண்டற்ற) மற்றும் வேதாந்தத் தத்துவத்தின் அடிப்படை உண்மையை எடுத்துரைக்கிறது.

    மெய்யான ஆனந்தமும், இறைவனும் (அல்லது மெய்யான சுயமும்) மனிதனுக்கு வெளியே எங்கும் இல்லை.

    அது உனக்குள்ளேயே (இருக்கும் இடத்திலேயே) இருக்கிறது.

    ஆனால், மனிதன் அந்த உண்மையை அறியாமல், “இல்லாத இடம் தேடி” அதாவது, வெளியுலக இன்பங்கள், பொருள்கள், புகழ்ச்சி போன்ற மாயைகளில் ஞானத்தைத் தேடி அலைகிறான்.

    இதுவே மனிதனின் அறியாமை (அவித்தை).

    ஞானம் என்பது ‘இருக்கும் இடத்தில்’ அதாவது உள் மனதில் அடங்கியிருக்கும்போது, வெளியே அலைபவன் ‘ஏதும் அறியாதவன்’ ஆகிறான்.

    சரணம் 1: உண்மையாளரின் தனிமை

    உன்னையே நினைத்திருப்பான்
    உண்மையைத் தான் உரைப்பான்
    ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
    அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    இதற்கான ஆன்மீக அறிவியல்:

    இந்தக் கூற்று, ஞான மார்க்கத்தில் உள்ள அல்லது தர்ம வழியில் வாழும் ஒருவனின் சமூக நிலையை விவரிக்கிறது.

    “உன்னையே நினைத்திருப்பான்” என்பது, உலக இன்பங்களை விடுத்து, உண்மையை, நீதியை அல்லது இறைவனை மட்டுமே நினைத்து வாழ்பவனைக் குறிக்கும்.

    “உண்மையைத் தான் உரைப்பான்” என்பது, சமூகப் பாசாங்குகளையோ, பொய்மைகளையோ ஏற்காமல், தைரியமாக உண்மையை மட்டும் பேசுபவன்.

    இப்படிப்பட்டவன், சமூகத்தின் பெரும்பான்மைக்கு எதிராகவும், “ஊருக்குப் பகையாவான்”.

    ஏனெனில், மக்கள் மாயை, பொய், ஆசைகள் எனும் திரைக்குள் வாழும்போது, உண்மை பேசும் ஒருவன் அவர்களுக்கு எப்போதும் எதிரியாகவே கருதப்படுவான்.

    இதுவே ஞானியின் நிலையாகப் பல தத்துவ நூல்கள் கூறுகின்றன.

    “ஊழ்வினை என்ன சொல்வேன்” என்ற வரி, உண்மையை நாடும் மனிதன் அனுபவிக்கும் துன்பங்களும், தனிமையும் அவன் கடந்த கால வினைகளின் (கர்மாவின்) பலனாக இருக்கலாம் என்ற கர்ம விதி பற்றிய ஆழமான ஆன்மீக உண்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

    சரணம் 2: நடிப்பும் மாயையும்

    நஞ்சினை நெஞ்சில் வைத்து
    நாவினில் அன்பு வைத்து
    நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
    அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    இதன் பின்னனி ஆன்மீக அறிவியல்: இந்தச் சரணம் மனிதர்களின் இரட்டை நிலைப்பாட்டையும் (Hypocrisy) மற்றும் மாயையின் (Maya) ஆழத்தையும் பேசுகிறது.

    “நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பு வைத்து” என்பது, மனதில் பொறாமை, பேராசை, வஞ்சம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (நஞ்சு) இருந்தும், வெளியில் அன்பு, பாசம் போன்ற நல்ல சொற்களைப் (அன்பு) பேசும் பாசாங்கைக் குறிக்கிறது.

    ஆன்மீக அறிவியல் இதை, மனம், வாக்கு, காயம் (எண்ணம், சொல், செயல்) ஆகியவற்றின் ஒற்றுமையின்மை என்று கூறுகிறது.

    இந்த மூன்றும் ஒருங்கிணையாவிட்டால், அதுவே நாடகமாக (பாசாங்காக) மாறுகிறது.

    இந்த நடிப்பும், பாசாங்கும், வெளித்தோற்றமும் நிறைந்த வாழ்க்கையே “நாடகம்” எனக் கண்ணதாசன் அழைக்கிறார்.

    இந்த நாடகம் என்பது, நாம் வாழும் உலகம் முழுவதும் நிலையற்ற, தோற்றமயமான மாயைக்குள் சிக்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

    சரணம் 3: தொண்டும் இறைமையும்
    தொண்டுக்கென்றே அலைவான்
    கேலிக்கு ஆளாவான்
    கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
    அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே

    இதன் ஆன்மீக அறிவியலலை பார்ப்போம்: இந்தச் சரணம், சேவையின் (Service) மேன்மையையும், அதன் மூலம் கிட்டும் இறைத்தன்மையையும் விளக்குகிறது.

    “தொண்டுக்கென்றே அலைவான்” என்ற வரி, தன்னலமின்றிப் பிறருக்குச் சேவை செய்பவனைக் குறிக்கிறது.

    இருப்பினும், இந்த உலகில் சுயநலமே பிரதானமாக இருப்பதால், அத்தகையவன் “கேலிக்கு ஆளாவான்” அதாவது, உலகியல் பார்வையால் மதிக்கப்படமாட்டான்.

    ஆனால், அந்த மனிதனை “கண்டு கொள்வாய்” என்கிறார் கவியரசர்.

    காரணம், “அவன் கடவுளின் பாதியடி”.

    “கடவுளின் பாதி” என்ற சொல்லாடல் ஆழமானது. எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகிறான் (அகம்பிரம்மாஸ்மி) என்ற உபநிடத உண்மையை இது குறிக்கிறது.

    குறிப்பாக, தன்னை மறந்து பிறருக்குச் சேவை செய்பவன், இறைத்தன்மையின் கருணையை, ஜீவகாருண்யத்தை வெளிப்படுத்துகிறான்.

    எனவே, அவன் நடமாடும் தெய்வம் அல்லது இறைவனின் கருணை வடிவம் எனப் போற்றப்படுகிறான்.

    சரணம் 4: சிருஷ்டியும் விளையாட்டும்
    பிள்ளையைக் கிள்ளி விட்டு
    தொட்டிலை ஆட்டிவிட்டு
    தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
    அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே

    இதன் ஆன்மீக அறிவியல் என்ன சொல்கிறது:
    இது இறைவனின் சிருஷ்டி ரகசியத்தை (லீலா விபூதி) விளக்கும் உச்சக்கட்ட வரிகளாகும்.

    “பிள்ளையைக் கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டிவிட்டு” என்ற உவமை, இறைவனின் உலகைப் படைத்தல் (சிருஷ்டி), காத்தல் (ஸ்திதி) மற்றும் அழித்தல் (சம்ஹாரம்) ஆகிய முத்தொழில்களைச் சுருக்கமாகச் சொல்கிறது.

    கிள்ளுதல் – துன்பம், துயரம், சோதனை, அழித்தல் (அகங்காரத்தைக் கிள்ளுதல்).
    ஆட்டுதல் – இன்பம், பாதுகாப்பு, வாழ வைத்தல் (காத்தல்).

    இந்த இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு ஆகிய இரட்டைத் தன்மைகளைத் தந்த இறைவன், இவற்றில் சிக்காமல் “தள்ளி நின்றே சிரிப்பான்”. இந்தப் புன்னகையே இறைவனின் லீலை (திருவிளையாடல்) ஆகும்.

    இறைவனுக்கு இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு மட்டுமே.

    இதில் மனிதர்கள் ஆடும் பாத்திரங்களைப் பார்த்து, தான் சிருஷ்டித்த உலகின் போக்கை அவன் விலகி நின்று ரசிக்கிறான்.

    இந்தப் பாடலின் சிகரமான ஆன்மீக அறிவியல் இதுவே.

    நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் இறைவனின் விளையாட்டு மட்டுமே!

    கண்ணதாசனின் இந்தப் பாடல், மனிதனைத் தன்னுள் தேடவும், பிறர்மீது கருணை கொள்ளவும், உலகின் நிலையின்மையை உணரவும் தூண்டி, இறுதியாக இறைவனின் விளையாட்டை உணர்ந்து அமைதி கொள்ளவும் வழிவகுக்கும் ஒரு தத்துவப் பாடமாக உயர்ந்து நிற்கிறது.

    மீண்டும் கவியரசரின் முத்தோடு வருவேன்.

    Share
  • வண்டிக்கடை (சிறுகதை)

    வண்டிக்கடை (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
    கோவை- 49

    “அண்ணா இன்னக்கி சட்னி ரொம்ப நல்லா இருக்குண்ணா. இன்னு ரெண்டு இட்லி வைங்க” என்றான் முகிலன்.

    முத்தையா மகிழ்ச்சியுடன் பரிமாறினார். சாப்பிடுபவர் உறவும் இல்லை. தெரிந்தவரும் இல்லை. ஆனால் இரவு மட்டுமே இருக்கும் அந்த வண்டிக்கடைக்கு வருபவர்கள் அனைவரும் அவரிடம் மிகவிரைவில் நெருங்கிப்பழகி விடுவார்கள்.

    வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் கடை. வியாபாரம் செய்யும் இடம் அரசமரத்தடி. இரவு மட்டுமே வியாபாரம். வண்டியைத்தள்ளிக் கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். மாவு, சட்னி, குழம்பு எல்லாம் வீட்டிலேயே தயார்செய்து வண்டியில் வைத்து விடுவார். கடையில்வைத்து தான் பலகாரம் செய்வார். மனைவியை கடைக்கு வியாபாரம் செய்யவிட்டதில்லை. வீட்டில் அனைத்து வேலைகளையும் அவள் கவனித்துக்கொள்வாள். வீடும் வாடகைதான். இப்போது கடைக்கு உதவ மக்களாகிய சரவணனும், அசோகனும் மட்டும்.

    “பார்க்க சின்ன வண்டிக்கடைன்னு நெனைக்காதடா ..ஒரு தடவ சாப்பிட்டுப் பாரு, அப்புற நீ ஹோட்டல் பக்கமே போகமாட்டே. “ என சாப்பிடுபவர்கள் பேசிக்கொள்ளும் போது முத்தையாவிற்குப் பெருமையாக இருக்கும். எல்லாம் மனைவி சொல்லிக்கொடுத்த கைப்பக்குவம்.

    கடையில் இட்லி, தோசை, ரோஸ்டு, புரோட்டோ, பனியாரம், ஆப்பம், புட்டு இவ்வளவு வகை சுடச்சுட கிடைக்கும். ஒவ்வொரு டிஃபனுக்கும் தேங்காய் சட்னி, காரச்சட்னி, புளிச்சட்னி, சாம்பார், பொடி இவ்வளவும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். அடுப்பிற்குப் பக்கத்தில் நின்று ஆர்டர் கேட்பவர்களுக்கு சூடாக சுட்டுவைப்பது முத்தையாவின் வேலை. புரோட்டா தேய்ச்சு சுடறதும் பனியாரமும் மூத்தவன் சரவணனோட வேல. சாப்பிட வர்றவங்களுக்கு பரிமாறி காசு கணக்குபோட்டு வாங்கறது இளையவன் அசோகனோட வேல.

    வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வண்டியைத் தள்ளிக்கொண்டு போக மணி பத்தரை ஆகிவிடும். வீட்டிற்குப்போனதும் முத்தையா கை கால் கழுவி விட்டு முதல் வேலையாக மனைவி இரத்தினத்தின் படத்திற்கு விளக்கு வைப்பார்.

    ‘நீ இன்னக்கி இருந்திருந்தா நம்ம புள்ளகள நல்லா கவனிச்சிருப்ப. பாரு அதுகளும் நம்மள மாதிரியே கஷ்டப்படுதுக.”
    அப்பா இல்லாம ஒரு பொண்ணு புள்ளகள வெச்சிட்டு எவ்வளவு கஷ்டப்படுவாளோ அதவிடக் கஷ்டம் அம்மா இல்லாம அவங்கள வளர்த்தரதுன்னு நீ போனதுக்கப்பறந்தாம்மா தெரிஞ்சுது என்று கண்ணீர் வடித்தார்.

    அவரது கண்ணீரை யாரும் பார்க்கவில்லை பெரியவன் வண்டியிலிருந்து எல்லா பொருட்களையும் கீழே இறக்கிவிட்டு வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அசோகன் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருத்தான். முத்தையா மக்கள் இருவருக்கும் பால்கலக்கி கொடுத்து அவர்களை படுக்க சொல்லிவிட்டு அடுத்தநாளைக்குத் தேவையான அரிசி உளுந்து ஊறவைத்து வெங்காயம் தோலுரித்துவைத்து, சாம்பாருக்குத் தேவையான காய்கறிகளை சரிபார்த்து எடுத்துவைத்துவிட்டு படுக்கப்போகும்போது மணி 12.30.

    பறவைகளின் ஒலி அடங்கி தவளை சத்தம் நின்று, காற்றின் ஓசை காதுகளில் கேட்குமளவிற்கு ஊரே அமைதியாக இருந்தது. நேரத்தை அறிவிக்க ஒலிக்கும் பஞ்சாலையின் சைரன் ஒலி போன்று ஆந்தையின் அலறல் ஒலி இடைவிட்டு இடைவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

    தூங்காமல் விழித்துக்கொண்டிருந்த முத்தையாவின் காதுகளில் இரத்தினத்தின் குரலும் ஒலித்துக்கொண்டிருந்தது.
    “ஏங்க இந்த தாலி ஆறு பவுன் இருக்கும் என்ன கஷ்டம் வந்தாலும் அத மட்டும் வித்திடாதீங்க.”

    மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் வைத்த ஒரே வேண்டுகோள் அது. ஏங்க நா சாகறவர நா இத கழட்ட விடமாட்டே. நா செத்ததுக்கப்பறமும் இத மங்கலப்பொருளா தா பாக்கணும்”

    “ஏம்மா நான் சேத்து வெச்ச காசெல்லாம் வைத்தியத்துக்கு செலவாயிடுச்சு. அதப்பத்தி நா கவலப்படல. டாக்டர்தா ஒரு ரெண்டு இலட்சம் செலவு செஞ்சா சரி பண்ண வாய்ப்பு இருக்கானு பாக்கலாம்னு சொல்றாரேம்மா. இப்போ பவுனு இருபத்தஞ்சாயிரத்துக்குப்போகும்.. உன் தாலிய கொடுத்தா மீதி பணத்த எங்கயாவது பொரட்டிக்குவே”

    “இல்லீங்க இது நம்ம புள்ளகளுக்கு நான் சேத்து வெச்சிருக்கிற ஒரேசொத்து. இத ரெண்டா பிரிச்சு வர்ற மருமகளுக்கு தாலியா செஞ்சு போடுங்க. பசங்களக்குனு நாம வேறு எதயும் சேர்த்து வைக்கல. கிட்னி ஆப்பரேசன் செஞ்சாலும் வாய்ப்பு குறைவுதானு தானே டாக்டர் சொல்றாரு. எனக்கென்ன சாக ஆசயாவா இருக்கு. நம்ம பசங்களுக்கு ஒரு நல்ல காரியம் செஞ்சு பாக்கணுந்தா. ஆனா அன்னாடங்காச்சிகளுக்கு கடவுள் ஏதாவது ஒரு வியாதிய குடுத்திட்டா கடைசில கஞ்சிக்கே வழி இல்லாமப் போயிடும். எனக்கொன்னும் ஆகாது. நம்ம கோயில் பூசாரி சுந்தரத்துக்குத் தெரிஞ்ச ஏதோ வைத்தியர் இருக்காறாம். கைவைத்தியம் பண்றவரு. அவரப் போயி பாக்கலா. இப்போ போய் தூங்குங்க.” என்று இரத்தினத்துடன் பேசியதை எண்ணிப்பார்த்தான்.

    அவள் சாகும்போது பெரியவன் எட்டாவது. சின்னவன் ஆறாவது படிக்கிறான். இப்போ பெரியவனுக்கு வயசு இருபது. காலம் எவ்வளவு சீக்கிரம் ஓடுகிறது. பெரியவன பிளஸ்டூ வரைதா படிக்கவெக்க முடிஞ்சுது. சின்னவனயாவது படிக்க வெக்கலாம்னுதா நெனச்சே. ஆனா நானும் சரவணனும் தனியா கஷ்டப்படறத பாத்திட்டு அவனேதா ‘அப்பா நா இனிமே படிக்கலப்பா உங்ககூட கடை வேலயப்பாக்கறேனுட்டு பத்தாவதோட நிறுத்திட்டா. டீச்சரு வீட்டுக்கே வந்து கூப்பிட்டு பாத்தாங்க. அவெ எனக்கு படிக்கப்புடிக்கலனு ஒரே பதிலா சொல்லிட்டா. நானும் நமக்கு ஒத்தாசயா இருக்குமேனு விட்டுட்டே.. கல்யாணம்னு வரும்போது இப்படியெல்லா பிரச்சனை வருங்கற யோசன போகலெ.

    ” ஏம்ப்பா பசங்களுக்கு இன்னும் ரெண்டு மூணு வருசத்தில கல்யாண வயசு வந்துடும். வேலக்குப் போகாமா இப்படி உனக்கு ஒத்தாசயா வெச்சிட்டிருந்தா யாரு பொண்ணு கொடுப்பாங்க’ என்று புரோகித நண்பர் மாரிமுத்து கூறியது முத்தையாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தொழிலை மாற்றவும் மனதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்த போது இரத்தினத்தோட யோசனையோடு தொடங்கப்பட்ட தொழில். பலநேரங்களில் பட்டினியாக இருப்பதிலிருந்து எங்களக் காப்பாத்தின தொழில்.

    ஒரு பெரிய கடையாப் பார்த்து வாடகைக்கு எடுத்து கொஞ்கம் சாமான்களை வாங்கிப்போட்டு மக்கள வெச்சு ஹோட்டல் நடத்தினா பசங்களுக்குத் திருமணம் ஆக வசதியாக இருக்குமென்ற யோசனை வந்தது. அதற்கு முதலீடாக தாலி மட்டுந்தான் மனதில் தோன்றியது.

    ஒரு நாள் கடைவேலை முடிஞ்சு வந்ததும் மக்களை அழைத்தான். இரத்தினத்தின் படத்திற்கு முன்னால் மூவரும் நின்றனர். “இத பாருங்கப்பா அம்மா ஆசப்ட்டது இந்த தாலி வர்ற மருமக்களுக்குணு. அத உருக்கி ஆளுக்கு ரெண்டு பவுன் வச்சிட்டு, மீதி ரெண்டு பவுன வித்து, அந்தக்காச முதலீடா போட்டு நம்ம கடய பெரிசு பண்ணலாம்னு இருக்கே என்ன சொல்றீங்க”

    “இதெல்லா எதுக்குப்பா எங்ககிட்ட கேட்டுட்டு நீங்க எது செஞ்சாலும் செரியாதாப்பா இருக்கும்” என்று இருவரும் ஒரே பதிலை சொன்னார்கள்.

    மறுநாள் காலையிலிருந்தே அதே யோசனைதா ஓடிக்கிட்டே இருந்தது. அன்னிக்கினு பாத்து கடையில் சரியான கூட்டம். சட்னி தீர்ந்து விட்டது. சரி வீட்டிற்குச் சென்று சட்னி அரைத்து வரலாம் என்று சென்றான் முத்தையா. சட்னி அரைத்து விட்டு வெளியே வரும்போது

    “நாளக்கி வெள்ளிக்கிழமயு அதுவுமா ஏன் தாலியெ விக்கணும். இன்னக்கே கடய பசங்கள பாத்துக்கச்சொல்லிட்டு போயிட்டு வந்தர்லாம்’. என்றெண்ணி தாலியை டாயர் ஜோப்பில் போட்டான்.

    என்றுமில்லாத கூட்டம் அன்றைக்கு. தட்டுகளைக்கழுவ உட்காரும் போது ஞாபகம் வரவே தாலியை அசோகிடம் கொடுத்து யாருக்கும் தெரியாம வைக்கச் சொன்னான். ஜீன்சு போட்டிருந்ததால அவ கல்லாப்பெட்டில இருக்கற பணநோட்டுகள தூக்கி அதற்கடியில் வைத்தான். நாம தானே பணம் வாங்கறோம் இங்க பத்திரமாதா இருக்கும்னு எண்ணிக்கொண்டான். சரவணன் புரோட்டா போடுவதில் மும்முரமாக இருந்தான். அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால தாலி விற்க முடியவில்லை. மணி 10.30 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து பணம் எண்ணி கணக்கு சொல்வது அசோகின் வேலை.

    கை கால் கழுவிவிட்டு வந்த முத்தையா அசோகிடம் தாலியைக் கேட்டான். ஓடிப்போய் கல்லாப் பெட்டியைப் பார்த்த அவன் பேயறைந்து நின்றான். தாலி பெட்டியில் இல்லை. யாரையும் கல்லாவை தொடவிடமாட்டான் அசோகன். அன்று கூட்டத்தில், ஐ டி கம்பெனில வேல செய்யற மனோஜும், சுந்தர அண்ணாவும் சாப்பிட்டுருந்தாங்க. அவங்க ரெகுலர் கஸ்டமர்ஸ்தா. ஆனா என்ன கம்பெனில வேல பாக்கறாங்கனெல்லா தெரியாது. அசோகிடம் எப்போதுமே நெருங்கிப்பேசுவார்கள். அஞ்சோ, பத்தோ மீதியிருந்தா வாங்க மாட்டார்கள். வெச்சுக்கோப்பா’ என்று சொல்லிவிட்டு போவார்கள்.

    ஆனால் அன்று மீதி அம்பது ரூபாய் கேட்கவே. சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சட்னி ஊத்திக்கொண்டிருந்த அசோகன்,‘ சுந்தரண்ணா கல்லாவிலிருந்து எடுத்துக்கோங்கண்ணா என்று கூறிய நினைவில் ஸ்தம்பித்து சிலையாய் நின்றான்.

    Share
  • பல்லழகன் – பகுதி 4

    திவாகர்

    ‘அவனும் இந்த எதிர்வீட்டுலதான் இருக்கான்.. அவனோட பெரியப்பாவைத்தான் நேத்து சாயங்காலம் கொலை பண்ணி இருக்காங்க..’ “கொலையா?” “ஆமாண்டி.. பகல்லயே கொலை பண்ணியிருக்கான். கொடுமைதான். ஆனா அவனுக்கு ஆண்டவனாப் பாத்துதாண்டி இந்த தண்டனைக் கொடுத்திருக்கார்.” ‘அடக் கடவுளே.. ஆனா அவனை அதான் கல்யாணை இங்கே நான் பார்த்தது கிடையாதே..’ ‘அவன் எப்போவதுதான் வருவான்.. இந்த பெரியப்பா அவனை வேற ஊருலதான் வெச்சு படிக்கவெச்சாரு. அவன் கூட வைசாக்லத்தான் காலேஜ் முடிச்சான். அங்கயே இருக்கான்னு தெரியும்.. அவனைத்தான் நீ பார்த்துருக்கே.. தெத்துப்பல்லன்’னு எல்லாரும் கூப்பிடுவாங்கன்னு அந்த பொன்னம்மா, அவங்க வீட்டு வேலைக்காரி சொன்னாடி.’ ‘அப்படியா.. அப்போ இவன் இங்கேதான் வீடா? கரெக்ட்தான். இந்த கந்தசாமி கூட மூணு  வருஷம் முன்னாடித்தானே இந்த பங்களா வாங்கினான்!.’ ‘ஏம்மா.. அவன் என்கிட்டே பேசறச்சே எங்க பெரியப்பா ரொம்ப அன்பானவரு, ரொம்ப ரொம்ப நல்லவருன்னு பேசினான்.. அவனுக்கு இந்த ஆளைப் பத்தி சரியா தெரியாதா?’ ‘அடி கோமதி, நீ ரொம்ப வெச்சுக்காதே அவங்ககிட்டே.. அந்த கிழவனும் போயிட்டான்.. கொலையோ தற்கொலையோ.. ஒழிஞ்சான் விடுன்னு போவியா.’ ‘அம்மா.. நான் ஒருவாட்டி அந்த தெத்துப்பல்லனைப் பார்த்துட்டு வரட்டுமா.. நம்ம ரவியோட ஃப்ரெண்ட்மா.. நல்லா ஜோவியலா பேசினான்மா. என் கிளாஸ்லாம் மாடலிங் பண்ணிருக்கான், ஒரு ஆறுதல் சொல்லிட்டு வரேனே..’ ‘தறுதல போனதுக்கு ஆறுதல் சொல்லப்போறியா?  அந்த அயோக்கியன் வீட்டுக்குள்ள உன் கால் படக் கூடாது, சொல்லிட்டேன். இப்பகூட அந்தப் பாவியோட பொணம்  எடுக்கலியாம். உங்கப்பா சொன்னார். அவரும் போய். சும்மா பார்த்துட்டு வரேன்னார். ‘ஒண்ணும் வேணாம்’னு சொல்லி நிறுத்தினேன். ‘

     

    அப்பா அவர்களை நோக்கி வருகிறார்.

     

    ‘நான் ஏன் போகணும்னு சொன்னேன் தெரியுமா கோம்டி?. கடைசி நேரத்துல அவன் முகம் எவ்வளோ கோரமா இருக்கும்னு பாக்கற ஆசைதான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது நான் சாபம் விட்டுருக்கேன்.. என் சாபம் பலிச்சுடுச்சி.’ அம்மா தலையில் அடித்துக் கொள்கிறாள். ‘ஏய் கோமதி, இவரோட திருவாயை கொஞ்சம் மூட சொல்லுடி. இந்த ஓட்ட வாய் எத்தையாவது உளறிக்கொட்டுமோன்னு பயந்துதான் நான் இவரை போகவேணாம்னு சொன்னேன். கொலைகாரன் யாருன்னு போலீஸ்க்கு தெரியலை. தேடிக்கிட்டுருக்காங்க. உங்கப்பா அங்க போயி எத்தையாவது உளறினாருனு வெச்சுக்கோ…சந்தேகத்தின் பேரிலேயே அரெஸ்ட் பண்ணி உள்ளே வெச்சுடுவாங்க.’ ‘அது எப்படி வெப்பாங்க?  நாம என்ன கொலையா பண்ணோம்? எவன்கிட்டயாவது செமையா ‘மாட்டியிருப்பான்.. சுட்டுத் தள்ளிட்டான்…’ கோமதி அவனை அமைதிப்படுத்தினாள். ‘அப்பா.. நீ கொஞ்சம் திருவாயை மூடிண்டு சும்மா இருக்கணும். உன்னோட கமெண்ட், கோபம்லாம் மூட்டைகட்டி ஓரமா போடு. எப்படியோ போயிட்டான். திருப்தி! அவ்வளவுதான். இனிமே நமக்கு அதுவும் சம்பந்தமில்லாத விஷயம் கூட. ஒருவேளை எதிர்வீடு விசாரணைன்னு உன்னை போலீஸ் விசாரிச்சா கூட அந்தாளு ஏரியாவுக்கே இப்போதான் வந்தான்.. புதுசு.. எனக்கு ‘ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்லிடு.’ ‘அம்மா.. சாயங்காலமா வீடெல்லாம் அமைதியாயிடும் இல்லியா.. அப்போ போறேன்மா. நான் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ப்ரொஃபெஷன்ல இருக்கேன். என்னதான் ஆச்சுன்னு, எப்படி போனான்’னு எனக்குத் தெரிஞ்சிக்க ஆசைதான். ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இதை கையாளணும். அவன்கிட்டேயே கேட்கிறேன்.. சரி.. எனக்கு பசிக்குது.. இன்னிக்கு உஷா வீட்டுக்கு போயிட்டு அவ விஷயத்தை முடிச்சுக்கொடுத்துட்டு சாந்தி வீட்டுக்கு போகணும். எங்களோட அமெரிக்கா விசா க்ளியர் ஆயி வந்துடுச்சு.. அதை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துபோய் கலெக்ட் பண்ணிக்கணும்.’ ‘ஆமா.. உனக்கு விஸா வந்து என்ன யூஸ்? உன்கூட படிச்ச சாந்தி புத்திசாலித்தனமா யோசிச்சு அவங்க சொந்தக்காரங்க மூலமா அமெரிக்கா போயி பல் டாக்டரா வேலை பண்ணப்போறா. நீதான்.. விசாரணை.. விவாகரத்து சர்வீஸ்ன்னு சொல்லிட்டு ஊர் சுத்தறே.. பேசாம உங்கப்பா சொல்றமாதிரி கல்யாணம் பண்ணிக்கோடி..’ ‘அட போம்மா.. எதிர்வீட்ல ஒரு கொலையே விழுந்திருக்கு.. இப்போ நீ கல்யாணத்தைப் பத்திப் பேசறே.. போயி டிஃபனை எடுத்து வையு.’

     

    அந்த நாள் மாலை – கல்யாணின் வீடு

     

    இன்ஸ்பெக்டர் மோகன் மெதுவாக கல்யாணுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்யாணும் ரவியும் அங்கே இருந்தனர்.

     

    ‘கல்யாண்.. நாங்க எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பலமான பகை இருக்கற ஆள் யாருமே இல்லே. ஆனா ஷேர் மார்க்கெட்ல பயங்கரமா பிசினஸ் பண்ணிண்டு இருந்தார். ஒருவேளை ஷேர் மார்க்கெட் பிசினஸ்ல நஷ்டம்ன்னு தற்கொலை ஏதாவது பண்ணியிருக்கலாம்னா அதுவும் அப்பிடி இருக்கமுடியாதுன்னு அவர் ஆடிட்டர் சொல்றார். நல்ல லாபம் பார்த்துதான் பணம் போடுவாராம்.’ ‘ஆமாம் சார், நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேன்.. அவரோட ஷேர் எல்லாம் ரொம்ப காலமா பெரிய கம்பெனிங்கள்ல இருக்கு. ரிஸ்க் இல்லாத முதலீடு. அத்தோட தற்கொலைன்னு ஏன் பண்ணிக்கணும் அவரு? காரணம் இல்லையே.’ ‘நீங்க சொல்றது சரிதான்.. ஆனா நாங்க அந்த ஆங்கிள்லயும் பார்த்துட்டுதான் சார் விசாரணையை ஆரம்பிக்க முடியும். தற்கொலையா இருந்தா இந்த வழக்கு உடனடியா க்ளோஸ் பண்ணிடலாம்.. ஆனா நாங்க அப்பிடி நினைக்கலே.. எப்படி அவரோட கொலைக்கு மோட்டிவ் கிடைக்கலியோ அவர் தற்கொலைக்குக் கூட மோட்டிவ் இல்லே.’ ‘சார், காலைல வந்ததுலேர்ந்து அவரை நெருப்புல வெக்கற வரை நான் அவரையே பார்த்துண்டு இருந்தேன். சிரிப்பு முகம் சார்.. அவருக்கெல்லாம் கோவம் கூட வராது சார்.. அத்தோட அவர் ரொம்ப தைரியசாலி சார்.. வாழ்க்கைல எதிர்நீச்சல் போட்டு முன்னேறணும்னு சொல்லுவார். என்னை அப்படித்தான் வளர்த்தார்.’ ‘சார் இன்னொரு விஷயம் கவனிச்சேன்..’ ‘சொல்லுங்க கல்யாண்..’ ‘அவரோட பொட்டுல துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச இடத்துல பெரிய பள்ளம் இருக்கு. இது ஒருவேளை தன் கையாலேயே தற்கொலை பண்ணினால் வரலாம். ஆனா அவர் மார்புலயும் குண்டு பாய்ஞ்சிருக்கு.. ஒருவாட்டி தன் மேலேயே குண்டு போட்டுண்டு சுட்டா கூட கை தடுமாறாதா சார்? மார்புல சுட்டாலும் கை தடுமாறும் அல்லது உயிர் போகிற நிலையிலே ஞாபக சக்தியே போய்டும். அவர் எப்படி பொட்டுலே வெச்சு சுட்டுக்கமுடியும் சார்? எப்படி சார் நடந்துது.. புரியவே இல்லையே சார்.’ ரவி நடுவில் புகுந்தான். ‘ரெண்டு வாட்டி சுட அப்படி என்ன வன்மமோ.. இதை தீர விசாரிக்கணும் சார்.. இது கொலையாதான் என் மனசுக்குப் படுது’. ‘எக்ஸாக்ட்டா எனக்கும் அதுதான் தோணிச்சு கல்யாண். அத்தோட அந்த பீரோ ஹேண்டில்ல ரத்தக் கறை.. அங்க தரையிலயும் ரத்தக் கறை இருக்கு. ஒருவேளை திருட்டுப் போச்சான்னு அதுவும் இல்லே.. காஷ், கொஞ்சம் நகைங்க எல்லாம் அப்படியே இருக்கு. முரளி சொன்னது என்னன்னா அவரோட சொந்த லைசென்ஸ்ட் ரிவால்வர் பீரோலதான் வெச்சிருக்கார்ன்னாரு. எதுக்கும் அந்த ரத்தக் கறையெல்லாம் எடுத்துட்டுப் போயிருக்காங்க.. போஸ்ட் மார்ட்ட்ம் ரிசல்ட் எப்படியும் நாளைக்கு வந்துடும்.. அப்போ பார்த்துக்கலாம், இது கொலையா இல்லே தற்கொலையான்னு. இப்போ நீங்க சொல்லுங்க. உங்க பெரியப்பா எப்படிப்பட்டவரு? யார்கிட்டயாவது தகராறு பண்ணிண்டே இருப்பாரா? அவருக்கு உங்கப்பா ஒரே தம்பியா இல்லே அவருக்கு வேற யாராவது உறவுக்காரங்க இருக்காங்களா? இன்னிக்கு எத்தனை உறவுக்காரங்க வந்தாங்க?.. தூக்கம் விசாரிச்சாங்க?.’ ‘எங்க சொந்த ஊர் திருச்சி சார்.. எங்கப்பாவும் பெரியப்பாவும் சிநேகிதர் மாதிரி பழகினாங்களாம். எங்கப்பா எங்கம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கறப்பவே ஒரே நாளில் செத்துப்போனாங்க. ஆனா இது நடக்கறச்சா எங்க தாத்தா பாட்டி இருந்தாங்க. வீட்லேயே ஒரு சின்ன விபத்துல போயிட்டாங்கன்னு பாட்டியும் தாத்தாவும் சொன்னாங்க. நான் அப்போ. பள்ளிக்கு கூட போக ஆரம்பிக்கலே. ஆனா எங்க பெரியப்பா ரொம்ப தைரியமா என்னை வளர்த்து வந்தாரு. அப்பா அம்மா இல்லாத குறையை பாட்டி தாத்தா கொஞ்ச வருடம் போக்கினாங்கன்னா அதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பான்னு ஆகி போயிடுச்சு..’ ‘அப்போ பெரியப்பா கல்யாணம் பண்ணிக்காமயே இருந்துட்டாரா?’ ‘சார். எனக்கு தெரிஞ்சு அவருக்கு கல்யாணம் ஆகலை. எங்கப்பா கல்யாணத்துல சந்தோஷமா ஆடி ஓடி வேலை செஞ்சதை எங்க பாட்டி சொல்லிருக்காங்க. நான் பள்ளில படிக்கறச்சே என்னை ஜாக்கிரதையா கொண்டு விட்டு கொண்டு வருவார். நான் வேற ஊருக்கு காலேஜ் படிக்கப் போனதும்தான் அவருக்கு திருச்சில நான் இல்லாம ஊரே பிடிக்கலேன்னு சொல்லிண்டுருப்பார். வைசாக்ல நான் பிஜி படிச்சு முடிச்சேன். சென்னைக்கு என்னை வரவழைச்சு என்னோட இருக்கணும்கிறதுக்காக இந்த வீட்டையே வாங்கினார். ஆனா நான், என் படிப்பு, என் வேலைன்னு வைசாக்லேயே இருந்துட்டு எப்பவாவதுதான் பெரியப்பாவை இங்கே வந்து பார்ப்பேன்.  ஆனா எனக்கு பெரியப்பாவை வந்து சரியா கவனிக்க முடியலே.. இனிமேயாவது நம்ம பக்கத்துலேயே அவரை வெச்சுக்கணும்னு அப்பப்ப நினைப்பேன் சார்.. ஆனா அதுக்குள்ளே…’

     

    கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். ரவியும் சேர்ந்து கொண்டான்.

     

    “வைசாக்ல இருக்கறச்சே கூட அப்பப்போ பெரியப்பா பத்திதான் பேசுவான். பெத்த அப்பாவை விட பெரியப்பா மேல இப்படிப் பாசம் வெச்சிருக்கானேன்னு ஆச்சரியப்படுவேன். ஆனா இவங்கப்பா இவன் குழந்தையா இருக்கறச்சயே போயிட்டாரு இல்லையா.. வளர்த்த பெரியப்பா மேல வெச்சிருக்கற பாசம் சரிதான்னு தோணும்”.

     

    கல்யாண் ரவியை கையை ஆறுதலுக்காக பற்றிக்கொண்டான். ‘இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்குத் தெரியும்டா ரவி, . இப்படி அநியாயமா என்னை விட்டுப் போயிட்டாரேடா..’

     

    அப்போது அங்கே கோம்டி வருகிறாள்.

     

    திடீரென்று கல்யாண் எழுந்தான். ரவியும் கூடவே ஆச்சரியத்துடன்.

     

    ‘காலையில நான் உங்ககிட்டே எதுவும் பேச முடியலே கோமதி.. ஸாரி கோம்டி.. இதோ ரவியும் காலைல ஃப்ளைட் பிடிச்சு வந்துட்டான். ஆனா என் வீடு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது? ஓ.. டி.வில கூட இதைப் பத்தி நியூஸ் இன்னிக்கு மார்னிங் பார்த்தேனே.. நீங்களும் பார்த்திருப்பீங்கதான். சென்ட்ரல்ல போகறச்சே சொல்லிக்கொள்ளாம போகறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதிர்ச்சியான செய்தி இல்லையா?’ ‘பரவாயில்லே! உங்களை இந்த சமயத்துல இப்படி ஒரு நிலைமைல பார்க்கிறோமேன்னு வருத்தம்…. எவ்வளோ அன்பா உங்க பெரியப்பா பத்தி என்கிட்டே ட்ரெயின்ல நேத்து பூரா பேசிட்டு வந்தீங்க? ச்சே.. உலகம் தலைகீழா மாறிப் போன மாதிரி இருக்கு.’

     

    இன்ஸ்பெக்டர் மோகன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.

     

    ‘கோம்டி! நீங்களா.. நீங்க எப்படி இங்கே வந்தீங்க?’ ‘சார்,  நான் எதிர்வீட்டுக்காரி சார்.. கந்தசாமிதான் இவரோட பெரியப்பான்னு எனக்கு தெரியாதுதான். வைசாக்லேர்ந்து நானும் இவரும் பேசிண்டே ஒரே கம்பார்ட்மெண்ட்ல வந்தோம். இன்னிக்குக் காலைலதான் வண்டில இறங்கறச்சே இவரோட பெரியப்பா பத்தி நியூஸ் வந்தது. அதான் பார்த்துட்டுப் போகலாமேன்னு வந்தேன்.” வந்தவள் கல்யாணிடம் திரும்பினாள். “இன்ஸ்பெக்டர் மோகன் எனக்குத் தெரிஞ்சவர்தான். நிறைய விஷயங்களுக்காக அவர்கிட்டே உதவி கேட்பேன். ஆனா உங்க பெரியப்பாவைப் பத்தி எத்தனை அருமையாப் பேசினீங்க.. அவருக்கு இப்படி ஆயிடுச்சே..” ‘கோம்டி.. நீங்க எதிர்வீடுதானே.. கந்தசாமியைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்.’ “சார்.. என்னோட ப்ரொஃபெஷன் டென்டிஸ்ட்.. வீட்லேயே கிலினிக் வெச்சுருக்கேன்,  ஆனா ஃப்ரீ டைம் நிறையா இருக்கறதுனாலே பார்ட் டைம் ஜாப்ல இன்வெஸ்டிகேடிவ் வேலையை எடுத்துண்டு இருக்கேன் சார்.” “அதுதான் ஏற்கனவே எனக்குத் தெரியுமே.. நான் கேட்டது இவங்க பெரியப்பாவைப் பத்தி என்ன தெரியும்னு?”  “மிஸ்டர் கந்தசாமியைப் பத்தி எனக்கு, எங்க எதிர்வீட்டுக்காரர் என்கிற அளவுலதான் தெரியும். அவரு யார்கிட்டேயும் அவ்வளவு அதிகமா பழகறவர் இல்லேன்னு எங்க வீட்ல சொல்லுவாங்க…’. எனக்கு அவரைப் பத்தி பர்சனல் விஷயம் எதுவுமே தெரியாது சார்.”

     

    திடீரென கோமதியைப் பார்க்கிறான் கல்யாண்.

     

    ‘கோம்டி, நீங்க ஏதோ இன்வெஸ்டிகேஷன் தொழில் பாக்கறேன்னு சொன்னீங்களே.. இது.. இந்த வழக்கை ஒரு சவாலா எடுத்து செய்யுங்க.. எவ்வளோ பணம் செலவானாலும் நான் தரேன். இதோ நம்ம ரவியும் கூடவே இருப்பான். அத்தோட நம்ம இன்ஸ்பெக்டர் மோகன் நான் பழகினவரைக்கும் தங்கமானவர். அவரு உங்களுக்கு ஃபுல் கோஆபரேஷன் தருவார்..’

     

    இன்ஸ்பெக்டர் மோகன் மட்டும் கோமதியை ஒரு மாதிரி பார்த்தார்.

     

    ‘ஆகட்டும்.. செய்யலாம்.. ஆனா இவங்க சாதாரணமா இந்த விவாகரத்து கேஸுங்களுக்கு உதவி கேட்டுதான் வர வழக்கம்.. ஆனா இது கொலை கேஸ்.  போலீஸ்தான் உண்மையான விசாரணை செய்து சட்டப்படி பண்ணணும். இல்லையா கோம்டி?’ “ஆனா எங்களை மாதிரி உள்ளவங்கதான் சார் சரியான வழியிலே போய் விசாரிக்கமுடியும். உங்க சட்டப்படி போகறச்சே கொஞ்சம் இடைஞ்சல் வரலாம் இல்லையா.. நான் இதை எடுத்துச் செய்யறேன் சார்..” “இங்க பாருங்க கோம்டி.. இந்தக் கொலை வழக்குல ஏதாவது தகவல் தெரிஞ்சா நீங்க என்கிட்டே உடனடியா சொல்லணும். சட்டம் உங்களைப் பாதுகாக்கும் எப்போன்னா நீங்க சட்டத்துக்கு மதிப்புத் தரவரைக்கும்.. புரிஞ்சுதா..” என்றவர் கல்யாண் பக்கம் திரும்பினார். ‘சரி.. மிஸ்டர் கல்யாண்.. நான் இன்னும் இரண்டு நாள் கழிச்சு பாக்கறேன். ஏன்,  நீங்களே கூட என்னை ஸ்டேஷன்ல வந்து பாக்கலாம். என் மொபைல் நம்பர் உங்ககிட்டே இருக்கு இல்லே. சி ஐ டி அம்மா.. உங்களுக்கும்தான்.. இது கொலை கேஸுன்னு கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கணும். மர்ம ஆசாமியால இவரோட பெரியப்பா கொல்லப்பட்டிருக்கலாம்னு சந்தேகம் இருக்கு. அது மட்டும் நிஜமா இருந்தா அந்த ஆள் எப்படியோ.. நீங்க இதுல தலையிடறதுல கோபம் வந்து உங்களையும் போட்டு தள்ளினா?. எங்களுக்குத் தான் ஒரு வழக்கு எக்ஸ்ட்ரா ஆகும்.. ஜாக்கிரதை..!’

     

    அவளை எச்சரித்து விட்டு வீட்டை விட்டு வெளியே போனார்.

     

    தொடரும்

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 13

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 12. அரிவாட்டாயர் நாயனார்

    தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்

        தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்

    றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்

        துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை

    யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த

        வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே

    மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி

        வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.

    சோழ வளநாட்டில் சுரும்பும் வண்டும் சூழ்ந்து மொய்க்கும் வளம் கொழிக்கும் பசுமையான ஊர் கணமங்கலம். இதனால் இங்குள்ள உழவர்கள் குபேரன் போலச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். குளத்து நீரிலும் நீல மலர்கள் பூத்துக்குலுங்கி கொண்டாடச் செய்யும். இத்தகைய சிறப்புடைய கணமங்கலத்தில் வேளாண்குடி மக்களின் தலைவராக விளங்கியவர் தாயனார் என்ற ஒரு சிவனடியார். பொருட்செல்வமும், அருட்செல்வமும் குறைவிலாது பெற்று அறநெறி பிறழாமல் வாழ்ந்துவந்தவர். இல்லறத்தை நல்லறத்துடன் நடத்தும் பண்பாளர். அவர்தம் துணைவியாரும் நாயனாரின் குறிப்பறிந்து ஒழுகும் தன்மையர். நாயனார் என்பெருமானுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அன்றாடம் திருவமுது செய்வித்து வருவது வழக்கம். அண்ணலுக்கு அமுதூட்டும் பணி செம்மையாக நடந்துகொண்டு வந்திருக்கும் காலத்தில், நாயனாரின் பெருமையை உலகறியச் செய்யும் திருவுளம் கொண்ட எம்பெருமான் தம் திருவிளையாடலைத் தொடங்கினார். அதன் விளைவு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த நாயனாரின் செல்வம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்து, இறுதியில் மொத்தமாக வறுமையின் பிடியில் சிக்கியவராக கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெல் அனைத்தையும் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு தம் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

    ஆனால் இறையருளால் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகிவிட தாயனாரும் இதற்கு கவலைப்படாமல் முழுமனதுடன் அகமகிழ்ந்து, எம்பெருமானின் வழிபாட்டிற்குப் பயன்படுத்தக் கிடைத்த பெருவாய்ப்பாகக் கருதியவர் நாள்தோறும் வயல்களுக்குச் சென்று நெல்லறுத்து, கூலி வாங்கி சிவபெருமானுக்கு திருவமுது செய்விப்பாராயினார். அவரது செல்வம் யானை உண்ட விளாம்பழம் போல ஒன்றுமில்லாதது ஆனபோதும் சிவனடியார்க்கு உணவு வழங்கும் கடமையைத் தவறாமல் செய்துவந்தார். அவரது மனைவியார் ஆன்மா பெற்றிருக்கும் ஐந்து ஆகிய நமசிவாய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தம் கணவருக்கு துணை நின்றார்.

    கணவனும், மனைவியும் செந்நெல்லைப் பெருமானுக்கு அளித்துவிட்டு வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து எடுத்து வந்து அதை மட்டும் உணவாக்கிக் கொண்டனர். சில நாட்கள் இப்படியே செல்லவும், பின்னர் அந்தக் கீரையும் கிடைக்காமல் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தனர். பல நாட்கள் உணவின்றி, உடல் தள்ளாடிய நிலையில் அப்போதும் எம்பெருமானுக்கு செந்நெல்லும், செங்கீரையும் மாவடும் பஞ்ச கவ்வியமும் எடுத்துக்கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்றனர். வயல்வெளி வழியாகச் செல்லும்போது மேடு பள்ளமும், குண்டும், குழியுமாக விளங்கிய வயல்வெளியில் நாயனார் தடுமாறி கீழே சாயப்போனார். அப்போது நாயனாரின் மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். பெருமானாருக்குரிய பஞ்சகவ்யம் கீழே விழப்போகிறதே என்ற பதற்றத்தில் நாயனார் கீழே சாய்ந்தார். அப்போது அவர் கூடையில் சுமந்து சென்ற ஆண்டவன் திருவமுது செய்ய வைத்திருந்த செந்நெல்லும் மாவடும் வயல்வெளியின் வெடுப்பில் சிந்தியது. இனி கோயிலுக்குச் சென்று என்ன செய்யப்போகிறோம், அன்றுடன் தம் வழிபாடும், திருத்தொண்டும் முற்றுப் பெற்றதே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று கருதியவர், மனம் நொந்து அரிவாளை எடுத்துத் தன் ஊட்டியை (குரல்வளையை) அறுக்க முயன்றார். அப்பொழுது எம்பெருமான் அந்த வெடுப்பிலிருந்து எடுத்த மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும் எழுந்தது. அதுமட்டுமின்றி அவ்வெடுப்பிலிருந்து திருக்கரமும் உயரத் தோன்றி நாயனார் கரங்களைப் பற்றியது. நாயனார் தன்வசம் இழந்தார். ஊறு நீங்கியது. நாயனாரும், துணைவியாரும் எம்பெருமானின் கருணையை எண்ணிப் போற்றினர். அரிவாளால் கழுத்தை அறுக்கும் கையை சிவபெருமான் கை பிடித்து நிறுத்தியபோது தாயனாரின் பாவங்கள் நீங்கின. சிவன் அருளை எண்ணித் தாயனார் கைகூப்பித் தொழுதார். அடியேனின் அமுதை ஏற்றுக்கொண்ட பரனே போற்றி. அம்மையப்பா போற்றி. நீறு பூசிய நெருப்பு மேனியனே போற்றி, என்றெல்லாம் சொல்லிப் போற்றினார்.

    மாசறு சிந்தை அன்பர் கழுத்து

      அரி அரிவாள் பற்றும்

    ஆசில்வண் கையை மாற்ற

      அம்பலத்து ஆடும் ஐயர்

    வீசிய செய்ய கையும் மாவடு

      விடேல் விடேல் என்ற

    ஓசையும் கமரில் நின்றும்

      ஒக்கவே எழுந்த அன்றே

    விடைமேல் தோன்றிய எம்பெருமான், ‘நீ புரிந்த செயல் நன்று. நீயும் உன் துணைவியும் என்றும் நம் உலகில் வாழ்வீராக’ என்றருளினார். அரிவாளால் ஊட்டி அரிந்ததால் நாயனாருக்கு அரிவாட்தாயர் என்ற நாமமும் உண்டாயிற்று. நாயனாரும், அவர்தம் மனைவியாரும் பெறற்கரிய பேறு பெற்றனர்.

    அரிவாட்டாய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    ஊட்டியை அரிய முயன்ற கரத்தை வண் என்று (வலிய) கூறாமல் தனக்கு உணவு இல்லாமல் பட்டினியோடு இருந்தும் எம்பெருமானுக்கு செந்நெல்லும், மாவடும் அளித்த கொடையையே முன்நிறுத்த, ‘வண்’ கை (வள்ளன்மை மிக்க) என்று குறித்த தெய்வச் சேக்கிழார் தெய்வ நலக்கவிதை போற்றுதற்குரியது. நாயனார் வெடிப்பில் வெளிப்பட்ட பெருமானைப் போற்றியது நாமே வழிபாட்டில் நாளும் போற்றிச் சொல்லப் பயன்படுத்துவோம்.

    வைகலும் உணவு இலாமை

      மனைப் படப்பையினிற் புக்கு

    நைகரம் இல்லா அன்பின் நங்கை

      கைஅடகு** கொய்து

    பெய்கலத்து அமைத்து வைக்கப்

      பெருந்தகை அருந்தித் தங்கள்

    செய்கடன் முட்டா வண்ணந்

      திருப்பணி செய்யும் நாளில்.

    பொதுவாகவே தவம் செய்யும் முனிவர்கள் முற்றும் துறந்து காடு சென்று தண்ணீரையும், காற்றையுமே உணவாக உண்டு வாழ்வாராம். ஆனால் இல்லறத்திலே வாழ்ந்தும் கணவனும், மனைவியும் எம்பெருமான் மீது கொண்ட பக்தியால் தண்ணீரும் காற்றுமே உணவாக உண்டு தவ வாழ்க்கையை மேற்கொண்டனர்.

    இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வமெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும், கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெல் எல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் பிழைப்பு நடத்தி வரும் நாளிலும் சிவபெருமானுக்குத் தாம் செய்யும் தொண்டினைக் கைவிடாமல் இருப்பதே சிவனடியார்களின் தன்மை என்பதையும் விளங்கச் செய்கிறார்.

    அடியனேன் அறிவு இலாமை கண்டும்

      என் அடிமை வேண்டிப்

    படி மிசைக் கமரில் வந்து இங்கு

      அமுது செய் பரனே போற்றி

    துடியிடை பாக மான

      தூயநற் சோதி போற்றி

    பொடியணி பவள மேனிப் புரி

      சடைப் புராண போற்றி.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே!

    தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்த்திரேலியா

    தீயவை அகன்றால் நல்லவை மலரும்
    தீபா வளியின் தத்துவம் ஆகும்
    ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே
    ஆனந்தத் தீபா வளியாய் ஆனது

    அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார்
    அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார்
    புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார்
    அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்

    தீபா வளியில் தித்திப்பு நிறையும்
    திரும்பிய திசையெலாம் மத்தாப்புச் சிதறும்
    பட்டாசு சத்தம் பரவியே நிற்கும்
    குடும்பங்கள் எல்லாம் குதூகலம் கொள்ளும்

    தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே
    இருப்பாரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர்
    அவரவர் ஆனந்தம் அவரவர்க்கு உரியதே
    அகமகிழ் வுறுவுதே அனைவர்க்கும் பொதுவே

    பட்டி மன்றம் பாங்காய் நடக்கும்
    பற்பல இடங்களில் இசையும் ஒலிக்கும்
    நாட்டியம் இருக்கும் நல்லுரை இருக்கும்
    முத்தமிழ் யாவும் முத்தாய் ஒளிரும்

    ஆலயம் அனைத்தும் தீபத்தில் ஒளிரும்
    அனைவரும் ஆலயம் நோக்கியே செல்வர்
    அகத்தினில் இருக்கும் அனைத்தையும் கேட்பார்
    அமைதியாய் ஆண்டவன் அடியினைப் பரவுவார்

    அம்மா அப்பா உறவுகள் சேர்ந்து
    ஆலயம் சென்றால் ஆனந்தம் பெருகும்
    அன்பும் அறமும் அகத்தில் அமர்ந்திட
    வேண்டியே நிற்பது நல் வரமாகும்

    தீபா வளியில் தீமைகள் அகன்றிட
    யாவரும் இறையை வேண்டியே நிற்போம்
    கோபங்கள் தவிர்ப்போம் குணைத்தை இருத்துவோம்
    குவலயம் நலமுற வேண்டுவோம் இறையை!

    Share
  • முள்ளை, கல்லை மலரச் செய்வோம்!

    முள்ளை, கல்லை மலரச் செய்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முள்ளும் மலரும் உள்ளம் விரிந்தால்
    கல்லும் கரையும் கருணை நிறைந்தால்
    கள்ளம் அகன்றால் கசடு களைந்தால்
    மெள்ள மெள்ள வெளிச்சம் தெரியும்

    சொல்லச் சொல்ல உள்ளம் பதியும்
    மெள்ள மெள்ள உள்ளே நுழையும்
    வாக்கும் போக்கும் மாற முனையும்
    வழியில் தடைகள் விலகி நிற்கும்

    அரக்க எண்ணம் அகல எண்ணும்
    இரக்கம் அங்கே எட்டிப் பார்க்கும்
    தருக்கம் உள்ளே சன்னதம் ஆடும்
    முள்ளும் மலர முயற்சி நடக்கும்

    கள்ளக் குணங்கள் கலங்கி நிற்கும்
    உள்ளம் ஓங்கி அடிக்க முனையும்
    நல்ல எண்ணம் உள்ளே நுழையும்
    முள்ளும் கூட மலர எண்ணும்

    தள்ளும் அனைத்தும் தள்ளி நின்றால்
    முள்ளும் கல்லும் மெல்ல மலரும்
    நல்ல வாழ்வை வாழ எண்ணில்
    முள்ளை, கல்லை மலரச் செய்வோம் !

    Share
  • ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு – 2

    ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு – 2

    Poet Shelly
    தமிழாக்கம் – சக்தி சக்திதாசன்

    Love’s Philosophy

    The fountains mingle with the river
    And the rivers with the ocean,
    The winds of heaven mix forever
    With a sweet emotion;
    Nothing in the world is single;
    All things by a law divine
    In one another’s being mingle—
    Why not I with thine?

    See the mountains kiss high heaven
    And the waves clasp one another;
    No sister-flower would be forgiven
    If it disdained its brother;
    And the sunlight clasps the earth,
    And the moonbeams kiss the sea—
    What are all these kissings worth,
    If thou kiss not me?

    காதலின் தத்துவம்

    ஊற்றுகள் ஓடைகளோடு கலந்து,
    ஓடைகள் ஆறுகளோடு சேரும்,
    காற்றுகள் வானத்தோடு இணைந்து,
    பூமி, கடல், வானம்—all ஒன்றாகும்.
    மலைகள் வானத்தை முத்தமிடும்,
    அலைகள் ஒருவருக்கொருவர் அணைபவைகள்,
    இயற்கை அனைத்தும் ஒன்றிணைந்து வாழ்கிறது—
    நீ மட்டும் என்னை ஏன் தவிர்க்கிறாய்?

    சூரியன் நிலவுக்கு ஒளி தரும்,
    மலர்கள் வாசம் பரிமாறும்,
    அன்பு உணர்வுகள் பரவுகின்றன,
    மனங்கள் ஒன்றாக இணைகின்றன.
    நீ என் இதயத்தைத் தொடாதபோது,
    என் உயிர் ஏன் தனிமையாக இருக்க வேண்டும்?
    இயற்கை கூட இணைந்திருக்கும் போது—
    நீ என் முத்தத்தை ஏன் மறுக்கிறாய்?

    Share
  • பல்லழகன் – பகுதி 3

    திவாகர்

    அவள் புன்னகைக்கிறாள்.

    ‘உங்க பொட்டி பத்திரமா இருக்கு சார்! நான் மட்டும் இல்லே.. இதோ (எதிர் சீட்டில் அம்ர்ந்திருப்பவரைக் காண்பித்து) இவரும், யாரோ இருந்தாலும் கூட என்னை விட ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துண்டே இருந்தார்.’

    ‘ஆமாங்க.. யாரா இருந்தாலும் யாரோ ஒத்தர்னு சும்மா யார்தான் விடுவாங்க? அதனாலதான் நீங்க யாரோன்னாலும் கூட அப்பப்ப உங்க பொட்டி மேல கண்ணப் போட்டுண்டுதான் இருந்தேங்க. அவள் காதருகே வந்து கிசுகிசுத்தான் ‘ரொம்ப தேங்க்ஸ்ங்க..பணம் நிறைய வெச்சுருக்கேங்க. எல்லாம் இந்த பல்லால சம்பாதிச்சது.. போய் எங்க பெரியப்பாகிட்டே காமிக்கணும். அவரு முன்னாடி கவுரமா தலை நிமிர்ந்து நிற்கணும். அவரு ரொம்ப சந்தோஷப்படுவாருங்க’. ‘ஓ. பெரியப்பான்னா அவ்வளோ பாசமா?’ ‘இருக்காதா பின்னே.. அன்பா அக்கறையா வளர்த்தவர்.. அத்தோட அவரோட சொத்துக்கெல்லாம் நான் வாரிசு. ஆனா இப்போ வரைக்கும் ஒரு பைசா கூட வேணாம்னு சொல்லிண்டுருக்கேன். பணம் என்னங்க பெரிசு?  மரியாதையா மானத்தோடு வாழணும்.. இல்லீங்க?..’ அவள் புன்னகைக்கிறாள்.‘உங்க பல்லுதான் உங்களுக்கு இடைஞ்சலே தவிர உங்க கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. ஆமாம்.. என்ன சாப்பிட்டீங்க?’ ‘இல்லீங்க.. திருவேங்கடகிருஷ்ணமூர்த்திதான் ‘பிரியாணிக்கு ஆர்டர் பண்ணேன்.. சித்த இருடா’ ன்னான்.. ஆனா அதுக்குள்ள இந்தப்பொட்டி விசயம் தெரிஞ்சு ஓடி வந்துட்டேன். பயங்கர பசி.. வண்டியும் கிளம்பிடுச்சு.. அவனைப் பாக்கறதுக்குன்னா திருப்பியும் அத்தனை பெட்டியையும் க்ராஸ் பண்ணிண்டு போகணும்..”’ ‘சரி.. நான் தயிர்சாதம் கொண்டு வந்துருக்கேன்.. மேல பெர்த்ல வெச்சுருக்கேன்.. அதை முதல்ல எடுங்க.. சாப்பிடலாம்..’

    கல்யாண் எழுந்து அவள் வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்தான். பிலாஸ்டிக் பை முடிச்சு பலமாக இருந்தது. சட்டென அப்படியே வாயில் வைத்து தன் தன் தெத்துப்பல்லால் கிழித்து அவசர அவசரமாக அந்த முடிச்சை கழற்றிவிட்டு அதே அவசரத்தில் சாப்பிட ஆரம்பித்தான். அவள் காணச்சகியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘அவ்வளோ பசியா? காணாததை கண்டமாதிரி சாப்பிடறீங்க.. எனக்கும் சேர்த்துதான் இந்த தயிர்சாதங்க..’ ‘ஓ ஸாரி.. எச்சில் பண்ணிட்டேன்.. வேற ஏதாவது கொண்டு வந்தீங்களா?’

    அவள் எரிச்சலுடன் பதில் சொன்னாள்.

    “நான் ஒருத்தி சாப்பிட நாலஞ்சு பாக்கெட் சாப்பாடு கொண்டு வருவாங்களா? பரவாயில்லே.. சாப்பிட்டு முடிங்க.. நான் வாழைப் பழம் வெச்சுருக்கேன். சாப்பிட்டுக்கறேன்.” ‘அடடா.. விஜயவாடா தாண்டினப்புறம் வர்ற ஸ்டேஷன்ல இனிமே சாப்பாடு கிடைக்காதுங்க.. இதோ பாருங்க.. உடம்பு ஃபிட்னெஸ்க்கு வாழைப்பழம் நல்ல வேலை செய்யணும். நல்லதுதான்!’ ‘போனா போகறதுன்னு பசியோட இருக்கீங்களே.. ன்னு உங்களுக்கு சாப்பாடு கொடுத்தேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்.” ‘என்ன அப்படி சொல்லிட்டீங்க? தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம்’னு எங்க பெரியப்பா அடிக்கடி சொல்லுவார். நாளைக்குக் காலைல போனவுடனே நீங்க கொடுத்த இந்த அருமையான தயிர்சாத தானம் பத்தி எங்க பெரியப்பாகிட்டே கண்டிப்பா சொல்லுவேன்’

    சாப்பிட்டு முடித்துவிட்டு, அவள் வெறுப்போடு பார்க்க ஒரு ஏப்பமும் விட்டு, இருவரும் எழுந்து உறங்க மேல் பெர்த்துக்கு சென்றனர். படுத்துக்கொண்டே கல்யாண் பேச ஆரம்பித்தான்.

    ‘என்னங்க.. நீங்க பல் டாக்டர்தானே.. எதாவது கிலினிக் பிலினிக் வெச்சிருக்கீங்களா?’ ‘பிலினிக் இல்லே கிலினிக் வெச்சுருக்கேன்’ ‘ஆமாம் நீங்க சென்னைல எங்க தங்கறீங்க?’ ‘சென்னைல.. அது சரி! நீங்க எங்க தங்கறீங்க..?’ ‘எங்க பெரியப்பா வீட்டுலதான். ஆக்சுவலா அந்த வீட்டை என் பேருலதான் வாங்கினார்.’

    அவளுக்கு எரிச்சல் வந்தது.

    ‘அதைத்தான் நூறு தடவ சொல்லிட்டீங்களே.. சென்னைல எந்த இடத்துல உங்க பெரியப்பா வீடு இருக்கு?’

    அப்போது லோயர் பெர்த்திலிருந்து.. ‘ஏன்பா.. எங்களைத் தூங்க வுடுங்க..’ என்ற எரிச்சல் குரல் கேட்டது..

     

    தாழ்ந்த குரலில் கல்யாண் அவளிடம் ‘இந்தப் பெரிசுங்களுக்கே கொஞ்சம் பொறாமை அதிகங்க.. கொஞ்சம் சுமாரான அழகிய பொண்ணு நல்ல அழகான வாலிபன்கிட்டே பேசினா போதும்,

    நொய் நொய்யுன்னு வந்துடுவாங்க..’ என்றான்.

     

    ‘நீங்க எப்பவுமே உங்களை கண்ணாடியிலே பாத்துக்க மாட்டீங்களா?’ என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்.

    ‘ஏனுங்க?’ ‘உங்களை ரொம்ப அழகானவர் ன்னு சொல்லிக்கிறீங்களே.. அதுதான் கேட்டேன்.. அது சரி, அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்திகிட்டே அவ்வளோ நேரம் என்னதான் பேசினீங்க?’.. ‘அதுவாங்க.. அது வேற ஒண்ணும் இல்லீங்க.. அவன் சின்னப்போ பண்ண சேஷ்டையெல்லாம் ஞாபகம் வெச்சு சொன்னான். நானும் ரசிச்சு கேட்டேன்.. அப்புறம்…’

    அவள் கையைக் குவித்து வாயில் வைத்து ஒரு கொட்டாவி  விட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தவள் அப்படி திரும்பும்போது.. ‘நீங்க பாட்டுக்கு அப்படியே நிதானமா சொல்லுங்க. நான் ஃபுல்லா கேட்டுட்டு படுத்துடுவேன்’.

    ‘ஓ.. சின்னப்போ விஷயம்லாம் உங்களுக்கும் பிடிக்குமா? இப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டே போக, சடாரென அவளைப் பார்த்தான்.

    அவளிடமிருந்து மெதுவாகவும் சீராகவும் சுவாசம் வந்தது என்று புரிந்தது.. அவள் ஏற்கனவே தூங்கிவிட்டாள். அவன் பேச்சு வீண் என்று புரிந்து கொண்ட கல்யாண் நிறுத்தினான்.

    ‘அடிப்பாவி.. கதை சொல்லி கேட்டு தூங்கற பழக்கம் போல.. அதை எங்கிட்டயே காமிச்சுட்டியா..’

    அவனும் வேறு பக்கம் திரும்பினான். அதி வேகத்தில் அந்த ராத்திரியில் அசைந்துகொண்டே அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருவரும் இறங்கத் தயாரானார்கள்.

     

    அவள் அவனிடம் கேட்டாள்,

    “தூங்கினீங்களா.. நான் நல்லா தூங்கினேன். உங்க திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி கதை ஃபுல்லா கேட்டேன்.. ரொம்ப சிரிப்பா இருந்தது.. செம்ம காமெடி மனுஷன் இல்ல அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி?

    அவன் முறைத்தான்.

    ‘காலங்காத்தாலே ஒரு புத்தம்புது நாளை எதுக்குங்க இப்படி பொய்யோட ஆரம்பிக்கிறீங்க?  நான் பேச ஆரம்பிச்சதுமே நீங்க தூங்கிட்டதை நான் பார்த்தேன்!’

     

    அவள் பேய்முழி முழிக்க ரயில் நிலையம் வர ஆரம்பிக்கும் நிலையில் தன் பெட்டியை எடுத்துக் கொள்கிறான். இறங்கத் தயாராகிறான்..

    ‘ஹெல்லோ நில்லுங்க.. இவ்வளோ தூரம் சிநேகிதமா பழகினோமே.. ஒரு பெண்ணோட சூட்கேஸ் எடுத்துட்டு வெளிய வெக்கலாமுன்னு உங்களுக்குத் தோணலியா?’

    ‘ஆஹா.. எவ்வளோ பெரிய சிநேகிதம்!.. அப்படியே உங்க பெட்டியை தூக்கறேங்க.. ஆமாம் ரயிலில் வரும் சிநேகம் எல்லாம் ரயிலை விட்டு இறங்கினாலே போயிடும்னு சொல்லுவாங்களே… நீங்க யாரோ.. நான் யாரோ.. இதோ இவர் யாரோ’ என தன்னுடை சக பயணியைச் சுட்டிக் காண்பித்தான்.’

     

    ‘அட என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க.. நம்மளது சாதாரண ரயில் சினேகமாங்க? எங்க ரவியோட பெஸ்ட் ஃப்ரெண்ட். பெர்சனலா பார்த்தா நம்ம ரெண்டு பேரோட சினேகம் மூணு வருஷத்து சிநேகம். எங்க காலேஜ் கிளாஸ்ல டிஷ்யூ பேப்பர்ல ஆரம்பிச்சுது இல்லயா..?’ ‘ஓ.. அப்படி வரீங்களா? இருங்க! இந்தப் பொட்டியை கீழ வெச்சுட்டு உங்க பொட்டியை வாங்கறேன்.. வேண்டாம்.. இந்த பொட்டியிலே பணம் இருக்கு.. நீங்க உங்க பெட்டியையும் கொடுங்க.. ரெண்டுத்தையும் சேர்த்து எடுத்து வரேன். ‘ ‘நான் கோம்டி..’ ‘என்ன டீஈஈ?’ ‘டீஈஈ இல்லங்க.. டி.. கோம்டி.. ஜிஓஎம்டிஐ..  சரியா சொல்லணும்னா கோமதி’ன்னு எங்க அப்பா பேரு வெச்சாரு.. நான் கொஞ்சம் சிம்பிளா மாடர்னா கோம்டி’ன்னு வெச்சுகிட்டேன், நல்லா இருக்கா..’

    அவன் அவளை பார்த்து சிரிக்கிறான்.. ‘ஆஹா,, பேஷா ரொம்ப நல்லா இருக்கு..’ என்றவன் அவள் பெட்டியைத் தூக்குகிறான்.

     

    ‘சரி வாங்க கோமதி.. சாரி.. கோம்டி. ‘

     

    இருவரும் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலில் இருந்து வெளியே வந்தனர். திடீரென சிலர் அவனைத் தேடிப் பதற்றத்துடன் வந்தனர். கல்யாணின் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள்.

    ‘அடேய், நம்ம பெரியப்பா போயிட்டாருடா… உனக்குச் சொல்லலாம்னு மொபைல்ல ட்ரை பண்ணினோம்.. ஹவுரா மெயில்லதான் வரான்னு உன் வைசாக் ஃப்ரெண்ட் ரவி’ன்னு ஒத்தன் சொன்னான்.. உன் மொபைல் நம்பர் ராத்திரி பூரா ட்ரை பண்ணினா கூட கம்ப்ளீட்டா எடுக்கலை டா..’

    இன்னொருவன் அவனிடம் அழுதுகொண்டே சொல்லிக் கொண்டிருந்தான்.. ‘அடேய்.. நேத்து காலைலதான் பெரியப்பா சொல்லிண்டு இருந்தாருடா.. இந்த வாட்டி கல்யாண் வரச்சே இந்த சொத்து விஷயம்லாம் பேசி உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணப்போறேன்னு.. ஆனா இப்படி சடார்னு அவரோட வாழ்க்கை முடிஞ்சுடுச்சேடா…”

     

    அதிர்ச்சியுடன் பிளாட்பாரத்திலேயே முட்டிப் போட்டு அமர்ந்தான் கல்யாண். பின் அதே முட்டியில் தன் தலையைக் குனிந்து வைத்துக் கொண்டான். . அந்த பெண் தன் பெட்டியை எடுத்துக்கொண்டு தன் இன்னொரு கையால் அவனது முதுகில் தட்டினாள், அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள், ஆனால் இறுதியில் இருவரும் தங்கள் வழியில் சென்றனர்தாம்.

     

    கோமதியின் வீடு, அதே நாள்

     

    கோமதி குளித்து முடித்து ஒரு டவலால் தலைமுடியை உலர்த்திக்கொண்டு கிச்சனில் அம்மாவிடம் வந்தாள்

    ‘யாராவது என்னை தேடி வந்தாங்களாம்மா?’ ‘ஆமாண்டி, உன் க்லையண்ட் அந்த உஷாவாமே.. அவ வழக்குக்காகத்தானே நீ வைசாக் போனே? அவ நேத்து உன்னைத் தேடி இங்க வீட்டுக்கே வந்துட்டா.. நீ போன காரியம் என்னாச்சு?’ ‘சக்ஸஸ்மா.. உஷாவுக்கு ஈஸியா விவாகரத்து கிடைச்சுடும். அவ புருஷன் அங்க வைசாக்ல ஒரு சின்ன வீடு,  ஓ இல்லே இல்லே பெரிய வீட்டையே வெச்சுருக்கான். நம்ம சாந்தியோட அண்ணன் ரவி கூட அவங்க வீட்டுலதான் கீழே குடி இருக்கான்.   உஷாவோட இந்த ஊர் புருஷன் வைசாக்ல ஒரு பெரிய பணக்கார பொண்ணைக் கல்யாணம் கூட பண்ணிண்டு வீட்டு மாப்பிள்ளையா சந்தோஷமா வாழறான். போட்டோஸ் வீடியோலாம் எடுத்துண்டு வந்திருக்கேன்..   நிச்சயமா உஷாவுக்கு இது ஹேப்பி நியூஸ்தானே.. உடனடியா விவாகரத்து கிடைச்சுடும். போகட்டும் நம்ம மூலமா நாலு பேருக்கு நல்லது நடந்தா போதும்.’ அம்மா அலுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘கோமதி, உன்னை வைசாக் அனுப்பிச்சு பல் டாக்டருக்குப் படிக்கவெச்சு, வீட்டுக்கு முன்வாசல்லயே ஒரு கிளினிக் வெச்சு கொடுத்தா,  உனக்கு எதுக்குடி இந்த அனாவசிய வேலை எல்லாம்! அதுவும் உனக்கு வரும் வேலையெல்லாம் விவாகரத்து பண்ற கேஸாவே வருதா.. அப்புறம் பிராண்ட் விழப் போகுது.. இவகிட்டே விவாகரத்து கேஸ்க்கு போனா அந்தக் கேஸ் சக்சஸ் ஆகிடும்னு’ ‘அம்மா,  நான் என்ன விவாகரத்து வக்கீலா.. இதுதான்மா ஒரு இன்வெஸ்டிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை. இதோ பார்.. கிலினிக்ல சாயங்காலம் மூணு மணி நேரம்தான் வேலை பாக்கறேன்.. மீதி நேரத்தை இப்படி உருப்படியா செலவழிக்கறேன். பணத்துக்கு பணமும் வருது.. மனசுக்குத் திருப்தியும் கிடைக்குது..’

    இப்படிச் சொல்லிக்கொண்டே பால்கனியில் வருகிறாள். எதிர்வீட்டில் இருந்த கூட்டம் பார்த்து அம்மாவை ஆச்சரியமாக கேட்கிறாள்.

    ‘என்னம்மா.. எதிர்வீட்ல ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு? அந்த கந்தசாமி போயிட்டானா?‘ ‘சாதாரணமா அவன் போகலடி.. யாரோ ஒருத்தன் கொலை பண்ணிட்டானாம்’.. ‘கொலையா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. ‘கடவுளே.. எப்படிம்மா?’ ‘ஆமாண்டி.. கொலைதான்.. இப்போ காலம் ரொம்பவே மாறிப்போச்சு. மனுஷனுக்கு சாவு கூட நிம்மதியா வராது இல்லே..’ ‘காலையிலேர்ந்து இது ரெண்டாவது சாவு கேஸ் கேட்கறேன்.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல வந்து கால் வெக்கறேன்.. என் கூட வந்தவனோட பெரியப்பா  நேத்து சாயங்காலம் போயிட்டாருன்னு இந்த ஆள் வண்டியை வுட்டு இறங்கறச்சேயே வந்து சொன்னாங்க.. பாவம் ரொம்ப. நல்ல மனுஷன்..’ ‘அப்படியாடி.. யாருடி அவன்?’ ‘அம்மா.. அந்த ஆள் நம்ம ரவியோட பார்ட்னர்தான்மா.. அத்தோட எங்க காலேஜ்’ல ஒரு ஆளு பல் மாடலிங் பண்ண வருவாரும்மா.. என் கூடத்தான் வண்டி ஏறினாரு..’ ‘பல் மாடலிங்ன்னா என்னம்மா? ‘அப்நார்மல் பல் உள்ளவங்களை பிடிச்சி எங்க கிளாஸ்ல பிராக்டிகல்ஸ் பண்ணுவோம். இந்த ஆளுக்கு தெத்துப்பல்லு ரெண்டு.. அதை வெச்சு எங்ககிட்ட காமிச்சு மாடலிங் நிப்பான். ஒரு மாடலிங்க்கு பத்தாயிரம் சார்ஜ் பண்றாம்மா.. பல்லைக் காட்டி பொழைக்கிறான்னு பொதுவாச் சொல்லுவாங்க.. ஆனா. இவன் கில்லாடி.. தனக்கு வந்த தெத்துப்பல்லை வெச்சே ஆயிரம் ஆயிரம் சம்பாதிக்கிறான்மா’ ‘இருடி.. அப்போ அவன் பேரு கல்யாண் தானே?’ ‘ஆமாம்மா..’ கோம்டி ஆச்சரியப்பட்டாள்.

     

    தொடரும்

     

    Share
  • எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

    எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பிள்ளைகள் பிறந்தார்கள் பேரின்பம் கொண்டோம்
    அள்ளவள்ளக் குறையா ஆனந்தம் அடைந்தோம்
    எல்லாமே எங்களுக்கு வந்ததாய் நினைத்தோம்
    இன்பத்தில் மூழ்கி  கனவுகளில் மிதந்தோம்

    ஒவ்வொரு பருவத்தையும் உளமிருத்தி ரசித்தோம்
    ஓடுவதை பாடுவதை உவப்போடு பார்த்தோம்
    கள்ளமிலாச் சிரிப்பினிலே கட்டுண்டு போனோம்
    கனியமுதே கற்கண்டே எனக்கொஞ்சி மகிழ்ந்தோம்

    மார்பினிலும் தோளினிலும் மடிமீதும் தாங்கி
    மலரான முகத்தை வாஞ்சையுடன் பார்த்து
    காதலித்துக் காதலித்துக் கரைந்துருகி நின்று
    கண்ணுக்குள் மணியாக எண்ணியே வளர்த்தோம்

    விழுந்திட்டால் துடிப்போம் எழுந்திட்டால் தெளிவோம்
    அழுதிட்டால் அணைப்போம் அயர்ந்திட்டால் சோர்வோம்
    சிரித்தபடி இருக்க சேவிப்போம் இறையை
    சிறந்த செல்வமாக பிள்ளைகளை நினைப்போம்

    படிக்கவும் வைத்தோம் பட்டங்களும் பெற்றார்
    பக்குவமாய் திருமணமும் செய்துமே வைத்தோம்
    படிப்புக்கு ஏற்ற பதவிகளும் பெற்றார்
    பார்த்துமே நாங்களும் பரவசம் அடைந்தோம்

    வசதிகள் நிறைய வளமாக வாழ்ந்தார்
    வளமான நாங்கள் கிழடாகப் போனோம்
    பெற்றெடுத்த செல்வங்கள் பேணிடுவார் என்று
    எதிர்பார்த்த நாங்கள் ஏமாந்து போனோம்

    ஏணியாய் இருந்தோம் தோணியாய் இருந்தோம்
    ஏறினார் பயணித்தார் இயன்றவரை உதவினோம்
    ஏணியை மறந்தார் தோணியை மறந்தார்
    ஏக்கத்தில் இப்போது இருக்கிறோம் நாங்கள்

    கொஞ்சிய நினைவுகள் நெஞ்சிலே இருக்கிறது
    அஞ்சியே வாழுகிறோம் அழுதுமே நிற்கிறோம்
    எதிர்பார்ப்பு எங்களை ஏமாற்றி விட்டது
    எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

    Share
  • ஜி.டி.நாயுடு பெயர் சர்ச்சை – தீர்வு என்ன?

    ஜி.டி.நாயுடு பெயர் சர்ச்சை – தீர்வு என்ன?

    அண்ணாகண்ணன்

    விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர், சமூக வலைத்தளங்களில் படாத பாடு படுகிறது. இதைச் சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

    முதலில் இவர் விஞ்ஞானி இல்லை என்பவர்களுக்காக. எதையேனும் கண்டுபிடித்தவரைத் தான் விஞ்ஞானி என அழைக்க வேண்டும் என்பது இல்லை. விஞ்ஞானச் சிந்தனையும் அணுகுமுறையும் கொண்டு, பல்வேறு படிநிலைகள் கொண்ட இந்த மிகப் பரந்த துறையில் எந்த நிலையில் பணிபுரிந்தாலும் அவரை விஞ்ஞானி என அழைக்கலாம். மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ. உள்ளிட்ட துறைகளில் சயின்டிஸ்ட் என்பது ஒரு பதவியின் பெயர். அந்தப் பதவியில் இருந்தாலே அவரை விஞ்ஞானி என்று அழைக்கலாம். இளநிலை விஞ்ஞானி, முதுநிலை விஞ்ஞானி என்றெல்லாம் பதவிகள் உண்டு. ஜி.டி.நாயுடு, மிகக் குறைந்த வளங்களையும் வாய்ப்புகளையும் வைத்துக்கொண்டு, எத்தனையோ கருவிகளை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ளார். அவரைத் தாராளமாக விஞ்ஞானி என அழைக்கலாம்.

    ஜி.டி. என ஆங்கிலத்தில் ஏன் வைக்க வேண்டும்? கோபால்சாமி துரைசாமி எனத் தமிழில் வைக்கலாமே எனச் சிலர் சொல்கிறார்கள். வைக்கலாம் தான். ஆனால், இதே போன்ற கொள்கையை எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு நாம் ஆயத்தமாய் இருக்கிறோமா என்பதே கேள்வி. இன்றும் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., டி.எம்.எஸ்., எம்.எஸ்.வி…. எனப் பலரும் ஆங்கிலச் சுருக்கப் பெயர்களுடன் அழைக்கப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டு எழுதுவதும் அழைப்பதும் பெருவழக்காக இருந்தது. பின்னர் அதுவே அவர்களின் அடையாளமாய் ஆனது. ஜி.டி.யையும் அந்த வரிசையில் தான் நாம் வைக்க வேண்டும். காலத்தின் அடையாளமாக, ஒரு காலக்கட்டத்தின் போக்காக இதைக் கருத வேண்டும். அதை அப்படியே வைப்பதே எல்லோருக்கும் புரியும்.

    நாயுடு என்ற சாதிப் பெயரை ஏன் வைக்க வேண்டும் எனப் பலரும் கேட்டிருக்கிறார்கள். உ.வே.சாமிநாதர், வ.உ.சிதம்பரம் என இதர பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியது போல் இதையும் நீக்க வேண்டியது தானே எனக் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், அதை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். சரோஜினி நாயுடு என்ற பெயரை இன்று கவிக்குயில் சரோஜினி தேவி என எழுதுவதைப் பார்க்கிறேன். ராமசாமி நாயக்கர், காமராஜ் நாடார், வ.வே.சு.ஐயர் என அழைத்தவர்களை இன்று பெரியார், காமராஜர், வ.வே.சு. என அழைப்பது போல், முன்னோடி ஜி.டி. என அழைக்கலாம். நாம் எப்படிச் சொல்கிறோமோ அப்படித்தான் நமக்குப் பின்வரும் தலைமுறையினர் அழைக்கத் தலைப்படுவார்கள். எனவே இதில் தெளிவான ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஜி.டி.நாயுடு பெயரையே வைத்திருக்கக் கூடாது, வேறு பலர் பெயர்களை வைக்கலாமே என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள். இத்தகைய கருத்துகளை ஆளும் தரப்பினர் ஆக்கப்பூர்வமாகக் கருத வேண்டும். புயலுக்குப் பெயர் வைக்க ஒரு குழு அமைத்து, எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். அதுபோல், பொதுத் திட்டங்களுக்கு யார் யார் பெயரை வைக்கலாம் என அரசு கேட்கலாம். எல்லோரும் பரிந்துரைகளை வழங்கலாம். அனைத்துப் பரிந்துரைகளும் பரிந்துரைத்தவர் பெயர்களும் அதற்குரிய காரணங்களும் இணையத்தில் ஏற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட பகுதிக்கு, திட்டத்துக்குப் பங்களித்தவர் பெயர்களையும் வைக்கப் பரிசீலிக்கலாம். ஒரே பெயரை மீண்டும் மீண்டும் வைப்பது, தங்கள் தலைவர் பெயர்களை மட்டும் வைப்பது என்பது மக்களாட்சிக்கு அழகு இல்லை. நடுநிலையுடன் பெயர்களைப் பரிசீலித்து, தேவைப்பட்டால் இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி இதற்குரிய முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த நடைமுறை முழுவதும் ஒளிவு மறைவின்றி, திறந்த புத்தகமாக எவரும் காணும் வகையில் இருக்க வேண்டும்.

    ஜி.டி. என்ற ஆளுமையை வெறும் சாதியக் குறிப்புக்குள் அடைக்கக் கூடாது. சாதியை விட அவரது சாதனைகளே முன்னிறுத்தப்பட வேண்டும். அவரது பணிகளிலிருந்து ஊக்கமும் உத்வேகமும் பெறுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

    ஆளும் தரப்பினர் எந்தப் பெயரை வைத்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது நிலைபெறும். இப்படிப் பெயர் மாறிய பாலங்கள், ஊர்கள், ஆள்கள் பெயர்கள், நம்மிடையே அதிகம் உள்ளன. எனவே, மக்கள் அனைவரும் ஜி.டி.பாலம் என அழைக்கத் தொடங்கினால், நாயுடு என்ற பெயர் நாளடைவில் மறைந்துவிடும். ஜி.டி.பாலம் ஒன்னு கொடுங்க, ஜி.டி.பாலத்துல ஏறிக்கிட்டு இருக்கேன், ஜி.டி. பாலத்துக்குக் கீழ இடது பக்கம் திரும்புங்க என ஒவ்வொரு வாய்ப்பிலும் கூறினால், அதுவே நிலைபெறும். எனவே, இதில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் மக்களே.

    Share