Blog

  • முத்தான கவிஞர் நா முத்துகுமார்! பத்தாண்டுகளாய் முதலிடம்!!

     

    வற்றாத கவியுள்ளம் வைத்திருக்கும் முத்து இவர்…

    வழிந்தோடும் நேசத்தால் மனம் கவரும் முத்துக்குமார்!!

    பத்தாண்டு காலங்கள் முதலிடத்தில் இருப்பதெல்லாம் 

    முத்தான கவிஞர் இவர் என்பதையே காட்டுகிறது!!

     

    பரபரப்பு துடிதுடிப்பு இவைகளுக்கு மத்தியில் 

    உயிர்த் துடிப்பாய் பாடல் வர என்ன செய்வார்?

    இசைக் குறிப்பு எனும் வரிக்குள் வார்த்தைச்சிலைகளை 

    அசைய வைத்துக் காட்டுகின்ற கவிஞர் இவரன்றோ?

     

    வெற்றிக் கொடிகட்டி புகழைத் தொட்டாலும் 

    சற்றும் மமதையின்றி தன் பணியைத் தொடர்கின்றார் 

    கற்றும் கவித் துறையில் கால்பதித்த   காஞ்சி மைந்தன் 

    எட்டும் புகழ் அனைத்தும் தமிழ்த்தாய்க்கே என்கின்றார்!!

     

     

    ……..

     

    வாழ்க.. இவ்வையகம் உள்ளமட்டும்

    தங்கத் தமிழ்போல் 

     

    என வாழ்த்தும்..

    காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல், சென்னை 600 075

    தற்போது – துபாய்.
    00971 50 2519693
    kaviri2012@gmail.com

    Share
  • கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் – கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

    கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

    பலவகைக் குருடர் இந்தப்Yesunathar Pesinaal Enna Pesuvaar

    பரந்ததோர் உலகில் உண்டு

    சிலவகைக் குருடர் நோய்க்குச்

    செகத்தினில் மருந்தே இல்லை

    நிலைபெறும் கண்கள் இல்லா

    நிச்சயக் குருடர் தம்மை உலகினைக்

    காண வைத்தார் உன்னத இயேசு நாதர்!

    வழிவழி செல்லும்போது

    தேவனின் மைந்தன் தன்முன்

    விழியிலா இருவர் தோன்றி

    விளித்தனர் கண்கள் கேட்டார்

    அழிவிலா விசுவா சத்தால்

    அன்புடன் கேட்டதாலே விழிகளைப் பெறுவீர் !

    என்றார் விழித்தனர் குருடர் ஆங்கே!

    எத்தனை கோடி செய்திகளோ இங்கு

    இயேசுவைப் பற்றிவரும்

    அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்

    ஆசையில் கற்றவரும்

    இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்

    இதிலொரு சக்தி வரும்

    தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்

    தயவுடன் பொறுத்தருளும்!

    மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!

    புண்கள் இருக்கும் வரை மருந்து

    தேவை நித்தியமே

    விண்ணர சமையும் உலகம் முழுதும்

    இதுதான் தத்துவமே

    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

    கவியரசு கண்ணதாசன் – இயேசு காவியத்தில்

    இம்மண்ணிலே புண்ணியன் தோன்றி எண்ணரும் இன்னல்கள் ஏற்று … மனிதர் பாவங்கள் கழுவிட தனது இரத்தத்தை ஈந்ததாலே இயேசுவை உலகமக்கள் ஏற்றிட்ட கதையைப் பாரீர்!

    வாசிக்க பலபேர் பாதிரிமார்கள் சூழ கவிதை யோசிக்கவேயின்றி சரம்சரமாகத் தந்தார் கவியரசர் மொழிபெயர்த்த ஏசுவின் வரலாறு ஒரு காவியம்! இத்தகு மேன்மைதன்னை எடுத்துரைத்த கவிஞரே! உங்களுக்கு காவிரிமைந்தனின் நன்றிகள்!!

    அன்புடன், காவிரிமைந்தன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் பம்மல், சென்னை 600 075

    கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம்

    சகோ. மார்கரெட் பாஸ்டின்

    கவியரசு படைத்த காவியம் பற்றி சகோதரியின் வெள்ளை அறிக்கை

    கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் பற்றி சகோதரி மார்கரெட் பாஸ்டின் எழுதியுள்ள இக்கட்டுரை கவியரசு அவர்கள் இயேசுநாதர் மீது கொண்ட பக்தியையும் ஈடுபாட்டையும் பறைசாற்றுகிறது. இதே கவியரசு அவர்கள்தான் இன்றுவரை பல பதிப்புகளைக்கண்டுவரும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற சிறப்பான நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் ஒரே கவிஞரால் போற்றிப் பாராட்டும் வகையில் எழுத முடிகிறது என்றால், அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பாரேயானால், நபிகள் நாயகத்தைப் பற்றியும் நற்றமிழ்க் காவியத்தை எழுதியிருப்பார்.

    மதமாச்சரியங்கள் மகாகவிகளுக்குள் இருக்காது. அதனால்தான் அவர்கள் மகாகவிகள்! சொல்லடி சிவசக்தி என்ற பாரதி, அல்லா அல்லா என்றும், இயேசுவின் தந்தை என்றும் கவிதை எழுதினார். இதுதான் மகாகவியின் மாண்பு.

    மகாகவி அல்லாதவர்கள் பல மைல்களுக்கு முன்பே பட்டுப் போய், கெட்டுப் போய், விட்டுப் போய் பிறரைத் தூசிப்பார்கள். தங்கள் சமய அருளாளர்களைப் பற்றியே யோசிப்பார்கள்.

    கவியரசு கண்ணதாசன் பாரதிக்குப் பின்வந்த மகாகவி. பாரதியோ, வள்ளலாருக்குப் பின்வந்த மகாகவிவள்ளலாரோ, தாயுமானவருக்குப் பின்வந்த மகாகவி. இப்படியே பின்னோக்கிச் சென்றால் கம்பனை, இளங்கோவை, வள்ளுவனை நாம் செல்லும் வழியில் சந்தித்துச்சந்தித்துக்கை குலுக்கிக் கொண்டே செல்லலாம்.

    கவியரசு படைத்த காவியம் பற்றி சகோதரியின் வெள்ளை அறிக்கை இது. படியுங்கள். – (பொ.ஆர்.)

    மூன்று லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பின்னும் இந்நூல் கிடைக்குமா? என்று கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆவலைத் தூண்டக்கூடிய ஓர் ஒப்பற்ற காப்பியம் வேறு எதுவுமல்ல, கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும்இறவாக் காவியமான இயேசு காவியம்தான்.

    இறைவன் உலகை எவ்வளவு அன்பு செய்தார் என்று எண்பிக்கத் தம் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பினார். உலகை மீட்க இறைமகன் இயேசு வருவார் என்பது காலாகாலமாக முன்னுரைக்கப்பட்டது. காலம் நிறைவுற்றபோது அவர் கன்னி மரியிடம் கருவானார். மனித உருவாகி நம்மிடையே வாழ்ந்து நமக்கு வாழ்வளித்ததோடல்லாமல், உலக மக்கள் அனைவரும் இறைமக்களாகும் வழியையும் காட்டிச் சென்றார்.

    வரலாற்று நாயகனான இறைமகன் இயேசுவினது வாழ்வு, வாக்கு, இறப்பு மற்றும் உயிர்ப்பைச் சித்தரிக்கும்மறைநூலான விவிலியத்தை கவிதைகளும் இசைப் பாடல்களும் பொதிந்த ஈடிணையற்றக் காவியமாக்கி அளித்தவர் நம் அனைவரின் உள்ளங்களையும் ஒருசேரக் கொள்ளை கொண்ட தனிப் பெருங்கவி கண்ணதாசன் அவர்கள்.

    இதனை எழுதி முடித்தபின் திருச்சியில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய அரசவைக் கவிஞர் கண்ணதாசன் இயேசு காவியம் என்பது பேச்சு வாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி. ஆனால் வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப் பீடித்தது, என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம் கைவைத்து விட்டோம் என்று பீதியடைந்தேன். இயேசு பெருமான்தான் எனக்கு அருள் பாலித்தார்! இதுவரை நான் உழைக்காத வகையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து இப்பணியைமுடித்தேனென்றால், நிச்சயம் அது இயேசுவின் கருணையே! என்று வியக்கின்றார்.

    இப்பணி நிறைவேறுவதற்கு மிக முக்கியக் காரணமாய் இருந்தவர் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் நிறுவனரும் 25 ஆண்டுகள் அதன் இயக்குனராய் இருந்து திறம்படத் தமது பணியை ஆற்றியவருமான மறைந்த மொன்சிஞோர் எஸ்.எம். ஜார்ஜ் அடிகளாரும்அவரோடு இப்பணியில் உதவிக்கரம் நீட்டிய அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் அடிகளாரும் ஆவர். கலைக்காவிரியையும் கவிஞரையும்இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் அந்நாளைய இந்நிறுவனப் பணியாளர் திருவாளர் சந்திரமோகன் ஆவார்.

    உன் வாய்ச்சொல்லைக் கொண்டே உன்னை எடை போடுவேன் என்பது வேதாகம வாக்கு. அதன்படி, செவ்விய தமிழில் சிந்து பயின்றவன்

    ஒவ்வொரு சொல்லையும் உருக்கிப் படைத்தவன் கவ்வி இழுத்திடும் கவிதையில் வல்லவன் எவ்விதம் அன்னவன் ஏற்றம் இயம்புவேன்

    என்று பிறிதொரு கவிஞரைப் பற்றிக் கண்ணதாசன் அவர்கள் பாடிய கவிதை கவியரசருக்கே முற்றிலும் பொருந்துமென்று இக்காவியம் உருவாகிய கதையில் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் கவிஞரை ஏத்திப் போற்றுகின்றார்.

    149 அதிகாரங்களைக் கொண்ட இந்நூல் 432 பக்கங்களால் ஆனது. தனக்குவமையிலாக் கவிஞர் கண்ணதாசனை எதிர்பாராமல் இழந்துவிட்டநிலையில் 1982 ஜனவரி 16ஆம் நாள் 5000 பேர் கூடியிருக்க அந்நாளைய மதுரை பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் இயேசுகாவியம் வெளியிடப்பட்டது.

    உலகில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் சார்பாக இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் அந்நாளைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்கள். அவர் தமது வாழ்த்துரையில் இந்த இயேசு காவியத்தை நான் என் கரங்களில்பெற்றுக்கொண்ட நேரம் மங்களகரமானது. இதன்வழி தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கப்போகின்றது என்று கூறியதோடு நில்லாமல், இந்த நேரத்தில் இங்குநான் ஒன்றை ஆணித்தரமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் இயன்றவரை என் தனிப்பட்ட வாழ்விலும்சரி அரசியல் வாழ்விலும் சரி, இனி யாரையும் எனது வார்த்தைகளால் புண்படுத்தமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

    இதே ஆண்டு ஏப்ரல் மாதம் பர்மாவிலும் இந்நூல் அச்சிடப்பட்டு வெளியானது. 1982-இல் முதல் பதிப்பாக 28000 பிரதிகளும், 1985&இல் 2&ஆம் பதிப்பாக 50000 பிரதிகளும், 1989-இல் 3-ஆம் பதிப்பாக 200000 பிரதிகளும், 1992-இல் 4-ஆம் பதிப்பாக 20000 பிரதிகளும், 1997-இல் 5-ஆம் பதிப்பாக 5000 பிரதிகளும், 2002-இல் 6-ஆம் பதிப்பாக 5000 பிரதிகளுமாகப் பதிப்பிக்கப்பட்டன.

    இவற்றுள் மூன்றாம் பதிப்பானது பிரத்யேகமாக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 அதிகாரங்களை உள்ளடக்கியதாகும்.

    எழுதப் படிக்கத் தெரிந்தவர் யாராயினும் இக் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுவே இதன் தனிச்சிறப்பு எனலாம். உள்ளர்த்தம் மாறாமல் இனிய தமிழில் எளிமையாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

    பிறவியிலேயே கண் தெரியாத குருடர் இருவர் தமக்குப் பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவை நாடி வருகின்றனர். எடுத்துக்காட்டாய் ஒரு சோற்றுப் பதம் இதோ :

    பலவகைக் குருடர் இந்தப் பரந்ததோர் உலகில் உண்டு சிலவகைக் குருடர் நோய்க்குச் செகத்தினில் மருந்தே இல்லை நிலைபெறும் கண்கள் இல்லா நிச்சயக் குருடர் தம்மை உலகினைக் காண வைத்தார் உன்னத இயேசு நாதர்!

    வழிவழி செல்லும்போது தேவனின் மைந்தன் தன்முன் விழியிலா இருவர் தோன்றி விளித்தனர் கண்கள் கேட்டார் அழிவிலா விசுவா சத்தால் அன்புடன் கேட்டதாலே விழிகளைப் பெறுவீர் ! என்றார் விழித்தனர் குருடர் ஆங்கே!

    இயேசு காவியத்தில் கம்பனின் வார்த்தைத் திறனும் வீரமாமுனிவரது ஆழ்ந்த கருத்துக்களும் பாரதியின் எளிய நடையும் பாரதிதாசனின் சொல் நயமும் இணைந்து காணப்படுவதால் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் கர்நாடகாவில் உள்ள மைசூர்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூரின் கல்வித் துறையும் இதனைப் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள் பலவும் பட்டப்படிப்பின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளன.

    சிலர் தங்களது முனைவர் பட்ட ஆய்விற்கே இந்நூலைத் தெரிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள கைதிகளும் கடிதம் எழுதி இந்நூலைப் பெற்றுப் படித்துவருவது இதன் பெருமைக்கு மற்றுமொரு சான்றாகும். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்நூல் வெளிவரவேண்டுமென்று பலர் தங்களது ஆவலை வெளியிட்டிருப்பது கவிஞரின் கவிநயத்துக்குக் கட்டியம் கூறும் சான்றாக உள்ளது.

    பலவித சந்தங்களில் சில பகுதிகளை இசை அமைப்புக்கு ஏற்றவாறும் இக்காவியத்தை அமைத்திருக்கிறேன் என்று கவியரசரே கூறியுள்ளார். இதனடிப்படையில் எம் கல்லூரியின் கலைக்குழு இயேசு காவியத்தின் சில பகுதிகளைத் தெரிவு செய்து நாட்டிய நாடகமாகவழங்கியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

    அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலினை 10 தொகுதிகளாக எழுதித் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற இம் மகாகவி தமது வாழ்நாட்களின்இறுதியில் இயேசுவுக்கென்று ஒரு காவியம் உருவாக்கியதோடல்லாமல், இறுதி அதிகாரமாக அமைத்துள்ள மங்களப்பாடலில் அவர் தமது உள்ளக் கருத்தை உறுதியான தொனியில், இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

    எத்தனை கோடி செய்திகளோ இங்கு இயேசுவைப் பற்றிவரும்

    அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம் ஆசையில் கற்றவரும்

    இத்தனை வந்தது மாலை தொடுத்தோம் இதிலொரு சக்தி வரும்

    தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால் தயவுடன் பொறுத்தருளும்!

    மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!

    புண்கள் இருக்கும் வரை மருந்து தேவை நித்தியமே

    விண்ணர சமையும் உலகம் முழுதும் இதுதான் தத்துவமே

    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

    பல சமயங்களில் பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் இயேசு காவியம்தான் என்று நான் உறுதியாகக் கூற முடியும் எனத் தன்னுரையில் கண்ணதாசன் அவர்களே கூறியிருப்பதும் இங்குநினைவுகூரத்தக்கது.

    திருச்சி மறை மாவட்டத்தின் 125-ஆவது ஆண்டையொட்டி இந்நூலின் ஏழாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றோம்.

    — என்றும் அன்புடன்,

    காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்)

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

    சென்னை 600 075

    தற்போது – துபாய் – அமீரகம் 00971 50 2519693

    kaviri2012@gmail.com

    Share
  • ஆம் ஆத்மி பார்ட்டி

    ஆம் ஆத்மி பார்டி(பாமர மக்கள் கட்சி)

    சமீபத்தில் டில்லியில் நடந்த தேர்தலில் ஒரு பின்னணியும் இல்லாத
    ‘டேவிட்’ போன்ற பா ம கட்சி ’கோலியத்’ போன்ற காங்கிரஸ், பா ஜ க போன்ற கட்சிகளுடன்
    மோதி அமோக வாக்குகளைப் பெற்று இன்று அரசாங்கம் அமைக்க உள்ளது.

    அக்கட்சியின் சின்னம் துடைப்பம். அது குறித்து ஒரு கவர்ச்சிகரமான இந்தி வாசகம் கண்டேன்.
    இந்தியில் ’ஜாடு கா ஜாது’ என்பதே அது. தமிழில் ‘துடைப்பத்தின் மாயாஜாலம்’ என மொழி பெயர்க்கலாம்.
    அதைக் கண்டதும் பல சிந்தனைகள் என் மனத்தில் ஓடின. அவை பின்வருமாறு:
    .

    துடைப்பம் லஞ்சக் குப்பைகளைத் துடைக்குமா?

    துடைப்பம் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்குமா?

    துடைப்பம் அதிகார தோரணைகளை உடைக்குமா?

    துடைப்பம் இவையெலாம் செய்து சரித்திரம் படைக்குமா?

     

    மொட்டவிழ்த்து பா ம கட்சி மலரும் முன்னரே சூழ்ச்சிகளைக்

    கட்டவிழ்த்து அதனை கசக்கிவிடுவரோ எதிர்க்கட்சியினர்?

     

    காத்திருப்போம் என்னதான் நடக்கப்போகிறது என்பதைக் காண

    எதிர்பார்த்திருப்போம் பா ம கட்சி சோதனையில் வெற்றி பெறவே!

     

    சு.கோபாலன்

    Share
  • நத்தார் வாழ்த்துகள்

    சக்தி சக்திதாசன்

    christmas_wallpaper_14_1024x768

    அன்பினை அகரமாக்கி

    அருளினை அகலமாக்கி

    அகிலத்தின் அடிப்படை

    அமைதி என்றுரைத்தார்

     

    மானிடர் வாழ்வு தனில்

    மாண்பு மிகு பண்பு

    மாட்சிமை தனை நல்கும்

    மனமிகு அன்பு என்றார்

     

    ஏற்றம் காண வேண்டி

    மாற்றம் தனைத் தேடி

    சீற்றம் தனை அகற்ற

    தோற்றம் கொண்டவர் இயேசு

     

    நோக்கம் ஏதுமற்றோர் உலகில்

    தேக்கம் கொண்டு வாழ்வதை

    நீக்கம் செய்யவே பூமியில்

    தாக்கம் கொண்டவர் கர்த்தர்

     

    மண்ணில் நாம் இயற்றும் பாவங்களை

    விண்ணின் தலைவன் மைந்தன்

    தன்னில் ஏந்திக் கொண்டான்

    முன்னில் நிகழ்ந்த வேதங்கள்

     

    கள்ளில் போதையுற்று மயங்கும்

    சொல்லில் கயமையுற்ற மாந்தருக்காய்

    முள்ளில் கீரிடமணிந்து தேவமைந்தன்

    சிலுவையில் தனை மாய்த்தனன்

     

    மேரியின் அன்பு மைந்தன் தன்னின்

    மேண்மைமிகு பிறந்தநாளில்

    மேதினியில் மனிதராய் நாம் பிறந்து

    மேன்மைகள் என்ன செய்தோம் ?

     

    நத்தார் திருநாளில் தன்னில்

    நற்திரு வாழ்த்துக்களுடன்

    சிறியவன் இவனின் உள்ளம்

    சிந்துது பல்லாயிர வாழ்த்துக்கள்

     

    படத்திற்கு நன்றி: http://biblecliparts-jesuspictures.blogspot.com/2010/08/jesus-christ-wallpapers-and-christian.html

     

    Share
  • அன்புத்தேவன் அவதரித்தான்…

        செண்பக ஜெகதீசன்christmas index

    தன்னைப் போலப் பிறரையுமே

    தயையுடன் என்றும் நேசியெனச்

    சொன்ன தேவ குமரனவன்

    சின்னக் குடிலில் அவதரித்தான்,

    அன்னை மரியாள் மடியினிலே

    அகில ரட்சகன் அருள்கின்றான்,

    அன்பைச் சொன்ன அருட்குமரன்

    அடிகள் பணிந்து வாழ்த்துவமே…!

    படத்துக்கு நன்றி

    http://inhabitat.com/family-shocks-guinness-world-records-by-hanging-over-500000-christmas-lights/

     


    Share
  • சிற்றருவி ! பேரருவி !

    kutralam-niagara1

    சி. ஜெயபாரதன், கனடா

     z

    இறை வணக்கம்

    அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
    தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
    குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
    வற்றாத் தமிழூட்ட வா !

    ***********

    கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
    ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
    தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
    ஓரளவு தேறிடவே ஓது !

    ***********

    குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.
    ஒரு கல்லில் அடிப்பேன்
    இரு மாங்காய் !
    இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
    ஒரு மூச்சில் !

    ******************

    குற்றால அருவி !

     

    குற்றாலச் சிற்றருவி !
    குதித்தோடும் தேனருவி !
    முத்தான நீரருவி !
    முகிலெட்டும் வானருவி !

    குற்றாலம் வெண்ணருவி !
    கொட்டுகின்ற தண்ணருவி!
    சிற்றாறுக் குன்றருவி !
    சிரித்தோடும் பொன்னருவி !

     

    நயாகரா அருவி !

     

    புவியிலே பேரருவி !
    பூத உடல் நீரருவி !
    கவிழ்ந்து விழும் கீழருவி !
    கழுத்தொடிக்கும் பேயருவி !

    முற்றிலும் மண்ணருவி !
    முதலிரவுப் பெண்ணருவி !
    குற்றாலம் விண்ணருவி !
    குறைவாகும் சின்னருவி !

    தோற்றம் கீழே உனக்கு ! வானத்
    தோரணம் ஏது உனக்கு ?
    போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
    நாற்றச் சாக்கடை தான் !

     

    குற்றால அருவி !

     

    குற்றாலம் குளியருவி !
    குடிமக்கள் தேனருவி !
    நெற்றி நிமிர் மேலருவி !
    நெளிதோடும் கானருவி !

    குரங்காடும் நீரருவி !
    கூடுகட்டும் ஊர்க்குருவி !
    மரமாடும் பேரருவி !
    மானோடும் வானருவி !

    குற்றாலம் சிற்றருவி ! மழைக்
    குன்றின் வெற்றருவி !
    நயாகரா பேரருவி !
    நல்வணிகர் பேருதவி !

     

    குற்றால அருவி !

    எளியவர் கண்டு களிக்கலாம் !
    எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
    துர்நாற்றம் இல்லா நீரது !
    தூய்மை யான மழையது !

    குற்றாலச் சூழ் மேடை
    சூழ்ந்து வரும் பூவாடை !
    நயாகரா நதி ஓடை
    நாகரீகச் சாக்கடையே !

     

    நயாகரா அருவி !

    ஆறாக ஓடி வரும் !
    ஆத்திரமாய்ப் பாய்ந்து விழும் !
    மாறாகக் கீழ் ஓடுது !
    மண்ணைப் போய்த் தாவுது !

    குரங்கில்லை ! குன்றில்லை !
    மரமில்லை ! மானில்லை !
    இயற்கை வனப்பழியும் ! எங்கும்
    செயற்கை மினுப்படிக்கும் !

    ஒரு நதி இடையில் பிரியுது !
    இரு நீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
    பிரமிப் பான காட்சிதான் !
    பேரிடி கேட்கும் மூச்சிதான் !

     

    குற்றால அருவி !

     

    வெள்ளிக் கதிர் எழுமருவி !
    வேகமாய் விழுமருவி !
    துள்ளி வரும் நீரருவி !
    தூங்கி விடும் ஓரருவி !

    ஆன்மீக நாட்டருவி !
    ஆடிவரும் காட்டருவி !
    நான் விழையும் நீரருவி
    நாத எழும் தூயருவி !
    நயாகரா அருவி !

     

    வாணிபச் சந்தை அது !
    வஞ்சிப்போர் மந்தை அது !
    தோணியிலே சென்றாலும்
    துட்டுத்தான் கரையுதடா !

    காசிருந்தால் நீர் வீழ்ச்சி !
    காசுரிக்க ஓர் சூழ்ச்சி !
    காசிருந்தால் சூதாட்டம் !
    காசிழந்தால் போராட்டம் !

    பகலிரவாய் நீர் பாயும் !
    பார்த்தாலே குடல் சாயும் !
    மகத்தான நீர்வீழ்ச்சி !
    மாறான கண்காட்சி !

    மின்சக்தி உருவாக்கும் !
    மின்வெளிச்சம் நிற மூட்டும் !
    வானூர்தி வட்டமிட்டு
    வானிருந்து நதி காட்டும் !’

     

    குற்றால அருவி !

     

    பசுமை மரமுண்டு !
    பாடும் குயிலுண்டு !
    அசையும் இலையுண்டு !
    அத்தனைக்கும் உயிருண்டு !

    பட்டப் பகலில் பரிதி ஒளி !
    பறவை பாடும் பண்ணின் ஒலி !
    எட்டும் இரவில் நிலவின் வெளி !
    என்றும் மாறா வண்ண ஒளி !

     

    நயாகரா அருவி !

     

    நயாகரா நீர்வீழ்ச்சி
    நாணயப் படக்காட்சி !
    உயிரில்லை !
    உணர்வில்லை
    ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

    நயாகரா காதலர்க்கு !
    நாடிவரும் வாணிபர்க்கு !
    வயாகரா மானிடர்க்கு !
    வாடிக்கை மாதருக்கு !

     

    சிற்றருவியா ? பேரருவியா ?

     

    டாலர் வாழும் நயாகாரா !
    டாலர் ஆளும் நயாகரா !
    டாலர் கூடும் நயாகரா !
    டாலர் நாடும் நயாகரா !

    குபேரச் சாக்கடையில் முங்கிக்
    குளிப்பது யார் தற்காலம் ?
    குசேலக் குற்றாலம் பொங்கிக்
    குளிப்பது நம் பொற்காலம் !

     

    ***********

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. கவிஞர் கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

    அண்மையில் இன்றைய பிரபலமான கவிஞர் ஒருவரோடு உரையாடும்போது.. கண்ணதாசனைப் பற்றி பேச்சு வந்தது.  அவரும்தன் பங்கிற்கு.. கண்ணதாசன் கூட மெட்டுக்காக சில நேரங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுத்திருக்கிறார் என்றார்.  நானும் அதை மறுப்பதற்கு ஆதாரமின்றி அமைதியாக இருந்தேன்.

    ஆம்.. அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை

    சமீபத்தில் சென்னையைச் சார்ந்த திரு.பரசுராமன் அவர்கள் எழுதிய கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் என்கிற நூலைப் படித்த போது, இந்தப் பாடலுக்கு முழுமையான விளக்கம் கண்டேன்.. ஆனந்தம் கொண்டேன்.

    ‘பூமாலையும் பாமாலையும் தந்த ஆண்டாள், கோ எனப்படும் பசுக்களைக் மேய்த்த கோபாலன் எனும்கண்ணன் அன்றி வேறுயாரையும்  திருமணம் வேண்டேன் என்றவள். அவளைப்போல் நீயும் யாரையாவது விரும்புகிறாயா சொல், உன்னுடைய அந்த அன்புத்துணையை நான் சீக்கிரமாய் அமைத்துத் தருகிறேன்’ என்று சூசகமாய் கேட்கிறான்,அன்பு அண்ணன் தன் தங்கையிடம்.

    தமிழை ஆண்டாள் என கோதைக்குப் பெயர் கொடுத்த கண்ணதாசன் எதற்கு அப்படிக் கூறினார் எனப்பார்த்தால் …..

    நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களில் தமிழுக்கே உரிதான ழ என்பதை அதிக அளவில் உபயோகப்படுத்தியது

    ஆண்டாள்தான். திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணா எனும் பாடலில் ‘ழ’கரம் அதிகம் .11தடவை ‘ழ’ உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

    “கோதை ஆண்டாள் தமிழை  ஆண்டாள்” என்கிற சொற்ப்ரயோகத்தைப்  பயன்படுத்தியிருக்கிறார் என்றால்..  கவிஞரின் தமிழ் ஆளுமை.. அறிவு..  எத்தனை  ஆழங்கால் பட்டது என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?

    அடுத்து….

    தோகைமீனாள் பூவை ஆனாள்

    சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்

    மாலை கண்டாள் கோவில் கொண்டாள்

    மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்

    தென்றல் தொட்டு ஆட‌

    கண் சங்கத்தமிழ் பாட

    தன் மக்கள் வெள்ளம் கூட

    காவல் கொண்டாள்

    இந்தவரிகளில் கண்ணதாசன் திருவிளையாடல் புராணத் தகவல்களான அம்பிகையின் திருமணப்பருவம்

    சொக்கேசன் துணையோடு ஊர்கோலம்போனாள் என்பது, திக்விஜய யாத்திரையின் போது சிவபெருமான் கூடவந்தது,திருமணம் நடந்தது, அம்பிகையின் அரசாட்சி இவைகளைக் கூறுகிறார்.  மதுரை என்றதும் சங்கம் வளர்ந்ததமிழ்,மீனாட்சி என்றதும் மாணிக்க மூக்குத்தி இவை யாவும் இடம்பெற்றுள்ளன.

    அம்பிகை திக்விஜய யாத்திரையின்போது பரமேஸ்வரனும் உடன் போனார் என்ற தகவல் திருவிளையாடல்புராணத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களுக்கு) மட்டுமே தெரியும். இத்தகவலை ‘சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்’ என அமைத்து பாமர மக்களிடமும் கொண்டு சென்ற கண்ணதாசனின் கவித்துவம் நம்மை வியக்க வைக்கிறது!

    மாப்பிள்ளை தேடக்கிளம்பிய அண்ணன்,மீனாட்சி கல்யாணத்தையும் ஆண்டாள் கல்யாணத்தையும் சொல்வதாக கண்ணதாசன் அமைத்திருப்பதில் மற்றொரு காரணமும் உண்டு.

    மீனாட்சிகல்யாணத்தில் மாப்பிளையான பரமேஸ்வரன் மீனாட்சியுடன் மதுரையிலேயே தங்கிவிட்டார் (அதாவது மாமனார் வீட்டோடு)

    ஆண்டாளோ புகுந்தவீடு போய் விட்டாள் (திருவரங்கம்)

    ‘அம்மா உனக்கு வீட்டுமாப்பிள்ளையாக பார்க்கட்டுமா அல்லது நீ மாப்பிளைவீட்டுக்குப் போகிறமாதிரியா, எப்படிப் பார்க்கட்டும்?’ என்று உள் அர்த்தமுடன் கேட்பதான கருத்துகொண்டது.

    எப்படி இருந்தாலும் சரி கல்யாணம் நல்லபடியாக நடக்கவேண்டும்; அதுமட்டுமல்ல கல்யாணத்துக்குப் பிறகு

    தன் தங்கை எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறான் அண்ணன்.

    ராமரும் சீதையும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்குவருகிறது.

    ராமரும் சீதையும் திருமணம்முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தந்தை சொல்லைக் காப்பதற்காக ராமன்

    வனவாசம்போக வேண்டியதாகிவிட்டது. சீதை கொஞ்சமும் வருத்தப்படாமல் கணவனுடன் காட்டிற்குப் போனாள். ராவணன் தூக்கிச்சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது உடல்கள் பிரிந்தனவே தவிர உள்ளங்கள்பிரியவில்லை. ராவணவதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. லவன் குசன் என்று இரு குழந்தைகள்பிறந்தார்கள்.

    இவ்வளவு நிகழ்ச்சிகளும் அண்ணன் மனதில் ஓடுகின்றன. தன்மனத்து எண்ணங்களை தங்கையிடம் சொல்கிறான் அவளும் அப்படி வாழவேண்டுமென்று..

    மாலை சூடி வாழ்ந்த‌ வேளை

    வ‌ன‌வாச‌ம் போனாலும்

    பிரியாத‌ சீதை

    ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம்

    லவ‌னாக‌ குசனாக‌

    உருவான‌ கீத‌ம்

    கண்ணதாசனின் இந்த வரிகளில் வேறு அற்புதமான தகவல்களும் அடங்கி உள்ளன. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல கல்யாணம் முடிந்ததும் ராமரும் சீதையும் வனவாசம் போகவில்லை. 12 ஆண்டுகள் சேர்ந்திருந்தனர்.  அதன்பிறகுதான் வனவாசம் .

    மாலை சூடிவாழ்ந்த வேளை என்கிறார் கண்ணதாசன்,

    இனி அந்த வரிகளில் ராமரைப்பற்றி ஏதும் சொல்லவில்லையே என்பவர்களுக்கு கன்ணதாசன் பதில் சொல்கிறார்.

    ‘வேளை’ என்ற வார்த்தைக்கு மன்மதன் என்ற பொருளும் உண்டு; வேளை காலத்தையும் குறிக்கும்.

    மன்மதன் போன்ற அழகு வாய்ந்த ராமனை வனவாசம் போனாலும் பிரியாத சீதை எனும் அர்த்தமும் வருகிறது.

    எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவைகளை உறுதியுடன் சமாளித்து வாழ்ந்து வழிகாட்டிய அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் குழந்தைகளான் லவனும் குசனும் ராமாயணம் என்ற பெயரில் கீதம் இசைத்தது (ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே) நாம் அறிந்ததே  இத்தகவல்!

    ராம நாமம் தந்தராகம்

    லவனாக குசனாக

    உருவான கீதம்

    என்றுதெரிவிக்கப படுகிறது.

    அற்புதத்திலும் அற்புதமான வரிகள் இவை .சாதாரண தகவலை ஒருபாமரனின் மனதிலும் ஆழப்பதியுமாறுசெய்த கண்ணதாசனின்

    ஆன்மீக அனுபவத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது.

    ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு விதமாக.. ஆம்.. காதல் திருமணம்,  வீட்டோடு மாப்பிள்ளை, சுயம்வரம் .. இதில் எந்தவிதம் உனக்கு கணவன் வேண்டும் என்கிற கேள்வியை உள்வைத்து, முத்தாய்ப்பாக கண்ணதாசன் முத்திரை பதிக்கிறார்…

         மாமன் என்று சொல்ல ஓர் அண்ணன் இல்லை அங்கே..

         அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளிவழங்க..

     

    ஆண்டாள் திருமணம், மீனாட்சி திருமணம், சீதா திருமணம்..  

    மீனாட்சி ஆண்டாள் சீதை மூவருக்கும் அண்ணன்கள் கிடையாது. ஆனால் உனக்கோ நான் இருக்கிறேன், உன்குழந்தைகள் என்னை மாமன் என அழைக்க, அவர்களுக்கு நான் எல்லாவற்றையும் வாரி வழங்குவேன் என்று அண்ணன் சொல்லிமுடிக்கிறான்.

    கண்ணதாசனின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது!

    வயிற்றுக்காக இட்டு நிரப்பி  கண்ணதாசன் எழுதிய பாடல் என்று குறிப்பிட்ட இந்தப் பாடலில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதென்றால்..  அவ்வாறு குறிப்பிட்ட இன்றைய கவிஞரின் அறியாமையைத்தான்  எண்ண வேண்டியுள்ளது.   உலக அளவில் தேடினாலும் உவமை சொல்ல முடியாத ஒரே கவிஞர் அல்லவா கண்ணதாசன்!!

    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
    அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
    பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
    பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
    நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன் 
    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

    சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள் 
    சுட‌ராக‌ எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் 
    கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் 
    கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள் 
    கன்னித்தமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி 
    தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள் 

    தோகை மீனாள் பூவையானாள் 
    சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள் 
    மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள் 
    மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள் 
    தென்றல் தொட்டு ஆட‌ 
    கண் சங்கத்தமிழ் பாட 
    தன் மக்கள் வெள்ளம் கூட 
    காவல் கொண்டாள் 
    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
    அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 

    மாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும் 
    பிரியாத‌ சீதை 
    ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ல‌வ‌னாக‌ குச‌னாக‌ 
    உருவான‌ கீத‌ம் 
    மாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே 
    அந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌ 

    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
    அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
    பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
    நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன் 
    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகை சுமித்ராவும் இப்பாடலில் முழுவதுமாய் வியாபிக்க ..  ஒளிப்பதிவும்… மெல்லிசை மன்னரின் இன்னிசையும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன பாருங்கள்.. கேளுங்கள்..

    சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணன் ஒரு கோயில் .. இது

    http://www.youtube.com/watch?v=GrmF1PIPT78

    கவியரசர் பாட்டுத் திறனைப்  பரிமாறி மகிழ்வோம்!

    என்றும் அன்புடன்..

    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது – துபாய்.
    00971 50 2519693
    kaviri2012@gmail.com

    Share
  • எந்திர வாழ்க்கையிலே !

    எந்திர வாழ்க்கையிலே மந்திரம் தேடுகிறார்
    தந்திரங் கற்றுபின்னர் மந்திரி ஆகவென()

    கம்மென் றிருந்திருந்தால் கணபதி தெரிவான்
    சம்மென் றிருந்திருந்தால் சண்முகன் வருவான்
    சிவனென் றிருந்திருந்தால் சிற்சபை கிடைக்கும்
    அவமான மின்றியிங்கே அருட்சபை மதிக்கும் ()

    அரியென் றிருந்திருந்தால் அறியாமை விலக்கும்
    சரிபுத்தர் வழியெனினும் சத்புத்தி பிறக்கும்
    ஒமென்றிருந்தாலும் உள்ளம் அமைதியிலே
    ஆமென்றிருந்தாலும் ஏசுவும் அன்பினிலே()

    அல்லா வென்றிருந்திருந்தால் எல்லாமும் உண்டு
    கல்லா லானச்சிலைக்குமே கருணையும் உண்டு
    சொல்லா முதுமைவரை பொல்லாகுணம் யெடுத்து
    எல்லாம் பெற்றிடினும் அருளின்றி யேதுபயன்()

    Share
  • இருட்டு நிலா

    ​பொன் ராம்

    பின்னால் வந்த வண்டி நின்ற பின் உலகம் சுற்றி மருந்து வாங்க சென்றபோது பின்னால் வந்தனர். அந்த மருந்து சாப்பிடவே முடியவில்லை. பல சைட் எஃபெக்ட். பயத்தால் அங்கு மறுபடி புத்தாண்டு டபுள் இயர் தமிழுக்குச்  செல்லவில்லை. அந்த மருந்தை நிறுத்தி தேர்ச்சி மதிப்பெண் வந்த பிறகுதான் தூக்கி எறிந்தேன். மறுபடி தேவையில்லாம எழுதுவானுங்க……..நின்னு போய்டுச்சுன்னா கண்ணகி கண்ணீரிலேயே அழுகியிருக்க வேண்டியதுதான் கல்லறையில. ஹரிஹரன் வெகுநேரம் நெட் பார்ப்பதால் வந்தது எனக்கூறியதால் வெகு நேரம் யோசித்தேன். ஏன் மாறுபாடு? மருந்தும் வேறுபாடு?………………

    செத்து வச்சேன்னா பத்தினி இல்ல……சாபம் பலிச்சிட்டுதுன்னு சந்தோஷப்படணும்……..கடவுளை உள்ளிருந்தே வேலிருக்க வினையுண்டா ! இல்லையா என ஆராய்ந்தேன். அப்போதும் உடல் இப்படி இருந்தது. இன்னமும் மோசம். கடைக்குப் போய்த்தான் ஆக வேண்டிய தேவையில் பகலவனிடம் சென்றேன். அது செலவு நிறைய என்பதால் வீட்டிலேயே யோகக்கலை பயின்றேன். அமைதி அதுதான் எனது உடல்நலத்தைக் காத்தது. மருந்தே தேவையில்லாமல் காத்தது. அதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவு. நான் மனத்திடமாக இருக்க வேண்டும். அன்றிலிருந்து குப்பையான பல நினைவிலிருந்து விடுபட்டேன். உடல்நலம் தெளிவாகியது. எதையும் புரிந்து கொள்ளாத நிலைத் துணையுடனும், வெளியே அனுப்பாத நிலையுடனும், போராடிய மனதுடனும் அரவிந்தன் மட்டுமே உற்ற துணை. வந்த இடம் தேடினால் அங்கேயும் நதிவழி, ரிஷி வழி எடுப்பானுங்க…..படு வீக்குங்க அங்க….செத்தே போய்டுவானுங்க……….குடும்பமே சமாதியாயிடும்.  பாத்தேன்…அதான்நான் மட்டும் தனி ரோஸ் போல……… சொன்னா குறைஞ்சா போயிட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்…… யாரோ இட்ட அகிற்புகையின் வாசனை அவள் நெஞ்சை என்னமோ செய்தது.

    சென்றேன் மணம் வீசும் மலர்கள் நிறைந்த தோட்டத்திற்கு……சென்றேன் பிடித்ததை எடுத்துவர…….மலரைப் பறிக்க தோட்டக்காரன் காசு கேட்க….சேர்க்க சித்தப்பாவை நாடினேன். செயற்கை மலருக்கு டைம் உள்ளது. வாடகை மலர் ஒன்று இப்போது இருக்கட்டும் என பல வருடக் கனவை நிறைவேற்ற சென்று கொண்டிருக்கிறேன்.இடையில் குருதி ஓட்ட பாசங்களின் அணிவகுப்பில் போராட்டம்…… தப்பு செய்யக்கூடாது. அது நாம யாரு மேல பாசமா இருக்கமோ அவங்களைப் பாதிக்கும்…இது என் வாழ்வில் கண்டது………….தனியே அமர்ந்தே பழகினேன்.மைண்ட் ரிலாக்ஸாக…..பாசம் என்னை இழுக்கக் கூடாது.. போகும்வழி நெருங்கி விட்டதென்று நினைத்தேன். அதையும் மீறி மகள் பாசம் அலுவலகத்திலும் இழுத்தது. அதுதான் நான்கு அடி கண்ட புதுமை……..

    இருப்பேனோ….இல்லையோ……………சாதாரண பணி…விட்டாலும் என்னை விட்டா ஆளா இல்லை….சைலண்டாக விலக நினைத்தேன்.

    நீ என்ன செல்வது….சாக்கடையில் நீயும் கிட கணபதி இருந்த இடத்தை வளைத்த கதை வெளியே வந்தால் என்ன செய்வது…..மறைந்தேன்……இது தான் ஹூயுமன் ரைட்ஸா! கேள்வி கேட்டேன். மௌனமாக மொபைலில் அகிலமாக அமர்ந்திருந்தவளிடம்…………….வேலிருக்கிறான் என நினைத்தேன். சென்றேன் கடவுளிடம்….விடை கிடைத்தது. சன்னலைத் திறந்து பார்த்தாள். வெளியே பத்து நாள் தாடியுடன் கண்தெரியாமல் பிஞ்ச செருப்புடன் வெற்று வெளியில் வழி தேடிக் காற்றில் கை வீசிக் கொண்டிருந்த பெரியவரைப் பார்த்தாள். சற்று அருகில் சிரித்தபடி வேடிக்கை பார்த்த லேப்டாப் விற்றுக் கொண்டிருந்த இளைஞனையும் பார்த்தாள். நடந்து போனால் வழி சொல்லும் மக்களும் இருக்கிறார்கள்.குருடனுக்கு வழி தெரியவில்லை என்றாலும் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள். படிக்கும்போதே பாடத்தை மறந்திருப்பார்கள் போலத் தெரிகிறது………அடுத்தவங்க வீக் பாயிண்டைப் பிடிச்சாத் தான ஜெயிக்க முடியும்…….

    பிஸ்தா ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல் இல்லை…காரணம் உலகம் திருந்த வேண்டும்…அதுவரை மேகம் நிலவை மூடியது போலத்தான் இந்த உலகம்…………….விவேகானந்தர் சொன்ன 100 இளைஞரைத் தேட வேண்டும்……….. எழுதி முடித்த பர்ப்பிள் பேனாவின் முனையை இடது கையால் ஒடித்தாள் புஷ்கரணி. இதுதான் கடைசி அத்தியாயமாக இருக்கலாம்…ஊக்குவித்த கைகள் மாறுகின்றன…………எனக்கிருப்பதோ ஒரே கை…..எழுது….. என்றவனும் மறைந்து கொண்டிருக்கிறானே தவிர வெளியில் வர மறுக்கிறான். இத்தனை பேர் வைத்திருக்கிறான்……… ப்ச்……. வலது தாளை ஒரு முறை படித்தாள்…….யானை புக்மார்க்கைப் பலமுறை தேடினாள்…….கிடைக்கவில்லை….சுவரில் ஆடிய ஃபோட்டோ மரத்தில் பொக்கிஷம் போல் வைத்திருந்தாயே….தூக்கிப் போட்டாயே குப்பைத் தொட்டியில்……………..வேண்டுமென்றே விதவிதமான பேனா யாருக்கு என்ன பிடிக்கும் என்பதற்காக….எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்தாளோ…..பாண்டிச்சேரி பூ கொடுத்தவள்……. எம்பாசிங் வடிவத்தில் திருமகள் சிரித்தாள் ப்ளு கலர் வடிவத்தில்.. ‘அமேசான்’ ஆற்றுப் படுகையில் வாழும் காட்டுவாசிகள் பற்றிய அதிசயமான ஒரு குறிப்பை விழுந்து விழுந்து நெட்டில் படித்தாள்.

    குறிப்பிட்ட காட்டுவாசி இனத்தார் வாழும் கிராமங்களில் ஒரு சிறிய மரம் இருக்கிறது. அந்த மரத்தின் மூலமாக, அவர்கள் அடுத்த கிராமத்துடன் தொடர்பு கொள்கிறார்கள்! என்று……இந்த காலத்தில் இப்படியா? அடுத்தவர் மனதையும் ஆராயும் குறிப்பு தேடிச் செல்லலாமா என யோசித்தாள்.

    தூண்டிய விளக்கின் சுடரைப் பார்க்க எழுந்து  சென்றாள் புஷ்கரணி.

    Share
  • கவிஞர்களே

    தேவாpoets dream banner

    கவிஞர்களே

    உங்கள் ,கவிதை தறியில்,

    கனவுகளையும் ,கற்பனையும் ,பொய்யையும்

    நெய்ததுபோதும் ,

    அரசனை பாராட்டி பரிசுகள் பெற்றதும் போதும் ,

    உங்கள் முன்னோர்கள் ,

    ஈரடி குறளும் ,நாளடி பாட்டும்

    பாரதியின் கனவுகளும் ஏதும் மெய்யாகவில்லை ,

    ஆக்கப்பூர்வமாக ,ஆரோக்யமாக மனிதன் வாழ்வதற்கு ,

    வழிதனை உங்கள் வரிகளில் வரைந்திடுக ….

    படத்துக்கு நன்றி

    http://lawrencecjordan.com/Films/poets%20dream.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 19

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 19 – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (4), பாரிஸ், ப்ரான்ஸ்

    சொல்ல வரும் ஒரு விஷயத்தை மறைபொருளாக உருவகப்படுத்தி வைப்பதில் சித்திரக்கலை படைப்பாளர்களுக்கு உதவத் தவறுவதில்லை. நேரடியாகக் காணும் ஒரு காட்சி தானே, அல்லது ஒருவரின் உருவகப் படம் தானே, அல்லது ஒரு நிகழ்வின் காட்சி தானே, அல்லது ஏதோ புரியாத கோடுகளின் சங்கமிப்பில் ஒரு படைப்பு என்பது தானே என ஒரு சித்திரத்தை எடைபோட முடியாது. பல நுணுக்கமான விஷயங்களை, ஒரு சரித்திர நிகழ்வை, சமூக நிகழ்வை அல்லது சமகால சிந்தனையை, ஒரு படைப்பாளியின் சிந்தனையை, கற்பனையை பிரதிபலிக்கும் கருவியாக சித்திரம் அமைந்து விடுகின்றது.

    ஐரோப்பாவில் சித்திரங்களின் அமைப்பில் புதிய பாணியும் அணுகு முறையும் 14ம் நூற்றாணடு தொடங்கி பின்னர் 15ம் நூற்றாண்டில் மிக வலுவடைந்தது. அரசர்களின், பிரபுக்களின் ஆதரவைப் பெற்று குறிப்பிடத்தக்க சித்திர வல்லுனர்கள் பல சித்திரங்களை இக்காலகட்டங்களில் படைத்தனர். குறிப்பிடத்தக்க வகையில் இக்கலை இத்தாலியில் சிறப்புடன் வளர்ந்தது. பல  சித்திரக்கூடங்களும் சித்திரங்கள் வரையும் பயிற்சி வழங்கும் பள்ளிகளும் இக்கால கட்டத்தில் உருவாகின. இப்படி எழுந்த முயற்சிகளின் விளைவாக குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தங்கள் ஓவியத்திறனைக் கொண்டு கருத்துகளுக்கு உருவம் வழங்கும் பணியை செய்து வந்தனர்.

    பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும், 13ம் நூற்றாண்டு தொடங்கி உருவாக்கப்பட்ட சித்திரங்களின் தன்மை கிறிஸ்துவ மறையான கத்தோலிக்க சமயத்தைப் பிரதிபலிக்கும் ஏதாகிலும் ஒரு அம்சத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதில் ஏசு சிறிஸ்துவின் இறுதித் தீர்ப்பு நாள்,  இரவு உணவு, ஏசுவின் சிலுவையில் ஏற்றப்பட்ட வடிவம், தேவதைகள் ஏசுவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை, இறந்த ஏசு பிரானின் உடலை அன்னை மேரியும் ஏனையோரும் சுற்றி நின்று கண்ணீர் உகுத்து மடியில் கிடத்தி வருந்தும் காட்சி என்பதாக ஒரு வகை; அடுத்ததாக, பைபிளில் உள்ள கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். உதாரணமாக ஆதாம் ஏவாள் இவர்களுடன் பாம்பு மரத்தில் தொங்க ஆப்பிளைப் பறிக்கும் சூழல், நரகத்தின் நிலை, தேவதைகள் சுவர்க்கத்தில் மகிழ்ந்திருக்கும் காட்சி என அமைந்திருக்கும். இவையல்லாது ஏனையன, போர்களை விவரிப்பதாக, மன்னனின் அல்லது மன்னனின் குடும்பத்தோர் உருவங்களை மையமாக வைத்து வரையப்பட்டதாக இருக்கும். இவற்றில் பைபிளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள் பல நேரடி விளக்கத்தைத் தருவன அல்ல. மறைமுக கருத்துக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டவை பல.

    லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்பதிவில் நாம் காணவிருப்பது இங்குள்ள சித்திரக்கூடத்தைத் தான்.   எண்ணற்ற விலைமதிக்க முடியாத பல சித்திரச் சேகரிப்புக்களின் கூடம் லூவ்ரே.  டெனோன் (Denon) பகுதியில் முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலுமாக இச்சித்திரங்களின் சேகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. முதலாம் மாடியில் இத்தாலி, ஸ்பெயின் கலைஞர்கள் உருவாக்கிய சித்திரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் மாடியில்  ப்ரான்ஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து, வடக்கு ஐரோப்பாவின் ஏனைய நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் என இடம் பெறுகின்றன.

    மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸ் முதலில் இத்தாலியின் அரச மாளிகையில் இருக்கும் சித்திரங்களைப் போல தனது மாளிகை ஒன்றில் சித்திரக்கூடம் ஒன்று அமைக்க திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் பலனாகச் சேர்ந்தவைதான் இன்று லூவ்ரேவில் இருக்கும் இப்பகுதி சேகரிப்புகள். இந்த மன்னன் இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கல் ஏஞ்சலோ,  ரஃபேல் ஆகியோரது கலைப் படைப்புக்களை வாங்கி தனது மாளிகையில் அவற்றை இணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாது சித்திரக் கலைஞர்களையும் தனது மாளிகைக்கு சிறப்பு அழைப்பில் அழைத்தார். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸின் அழைப்பின் பேரில் இங்கு  அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகை முயற்சிகளின் வழி சித்திரச் சேகரிப்புகள் பெருகின.

    மன்னன் 14ம் லூய்ஸ் மேலும் தொடர்ந்து தனது சேகரிப்பிற்காக இத்தாலிய சித்திரங்களை வாங்கி இணைத்தார். அதுமட்டுமில்லாது ஸ்பேனிஷ் கலைஞர்களின் ஓவியங்களையும் தனது சேகரிப்பில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் இறங்கி முரியோ (Murillo)  வின் கலைப்படைப்புகளை வாங்கி இணைத்தார்.  அதன் பின்னர் பல ப்ரென்ஞ்ச் சித்திரக் கலைஞர்களின் ஓவியங்கள் இச்சேகரிப்பில் இணைந்தன.

    இனி இங்குள்ள சில ஓவியங்களை மட்டும் அதன் விளக்கத்துடன் காண்போம்.

     image1

    Alexander in Babylon (1665)

    இது ப்ரெஞ்ச்  ஓவியக் கலைஞர் சார்ல்ஸ் லெ ப்ரூன் (Charles Le Brun ) வரைந்த சித்திரம்.

    கி.மு 333ல், பெர்ஸிய மன்னன் மூன்றாம் டார்ஸியுஸை போரில் தேற்கடித்து வெற்றிக் கொடி ஏந்திக் கொண்டு பாபிலோன் நகரத்திற்கு வருகின்றான் மாவீரன் அலெக்ஸாண்டர். அங்கே அவனுக்கு நகரின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நல்வரவு நல்கப்படுகின்றது.  இது அவனை திகைக்க வைக்கின்றது. 3ம் டாரியுஸின் படையிலிருந்து பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓட்டி வரும் வாகனத்தில் வலம் வருகின்றான் அலெக்ஸாண்டர். இக்காட்சியில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் பின்புறக்காட்சியாக அமைந்திருக்கின்றது.  1665ம் ஆண்டில் இந்த ஓவியம் வாங்கப்பட்டு சித்திரக் கூடத்தில் இணைக்கப்பட்டது.

    மன்னன் 14ம் லூய்ஸ் ஐரோப்பாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க போர்களில் சிறந்த வெற்றி பெற்றவன். தன் பெருமைகளை வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இதனை தன் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.  அது இப்போது லூவ்ரேவின் அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.

    image2

    A Table of Desserts (1640)

    இது ஒரு டச்சு கலைஞனின் படைப்பு. மாட்டிசே Matisse இதன் 1635 அசலான டி ஹீம் வரைந்த ஓவொயத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கி  அதில் அதிகப்படியான பிரமாண்டத்தைச் சேர்க்க பாரோக் கலைவடிவத்தை இணைத்து உருவாக்கிய ஒன்று இது.

    இது உணவு உண்ணல் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படைப்பு.  விசித்திரமான இச்சித்திரத்தில் வெவ்வேறு சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களையும் க்ளாஸில் உள்ள வைன்,  அதோடு ஆங்காங்கே இசைக் கருவிகள் என பல அமசங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு ஒழுங்கற்ற முறை தென்படுவதையும் காணமுடியும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு பொருள் இருப்பதாக குறியியல் அறிஞர்கள் (symbologist)  கருதுவதாகவும் குறிப்பு உள்ளது.  பைபிளில் குறிப்பிடப்படும் fruit if paradise  ஆகிய செர்ரி,  மறுக்கப்பட்ட பழங்களான ஆப்பிள், பீச் ஆகியவை தென்படுவதால் மறைமுக கருத்துக்கள் கொண்ட ஒரு கலைப்படைப்பு இது என்பது அவர்களின் விளக்கம்.

    image3

    Allegory of Fortune (1729)

    இது ஒரு ப்ளெமிஷ் (பெல்ஜியம்)  படைப்பு

    ரோமன் கடவுள் ஃபோர்ச்சுனா இதில் ஒரு உலக உருண்டையின் மேல் இருப்பதாகக் காணலாம். நிலையற்ற தன்மை கொண்டது அதிர்ஷ்டம். இந்த உலக உருண்டை ஒரு கப்பலில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  கடலில் பயணிக்கும் பயணம் போன்றது வாழ்க்கை; நிறைய எதிர்பாராத விஷயங்கள் நேரலாம், என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.

    மண்னன் 14ம் லூயிஸின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட ஓவியம் இது. இதன் அசலை உருவாக்கியவர் 2ம் ப்ரான்ஸ் எனப் பெயர்கொண்ட பெல்ஜிய ஓவியக் கலைஞர்.

    image4

    Charles VII (1403-1461), King of France (1445)

    1445ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சித்திரம் இது. பேரரசன் 7ம் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட ஓவியம். இந்த மன்னன் அச்சமயத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த நூறாண்டுப் போரில் மாபெரும் வெற்றியை ப்ராஸிற்கு பெற்று வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பு.  ப்ரெஞ்சுப் படைப்பான இதனை வரைந்தவர் Jean Fouquet. ஆரம்பத்தில் யாரால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது என்பதில் சரியான தகவல் கிடைக்காவிடினும் பல ஒப்பீடுகளுக்குப் பிறகு இவை ப்ரெஞ்சு ஓவியர் Jean Fouquet உருவாக்கிய சித்திரம் என்பது அறியப்பட்டது.

    இப்படி இங்கு இன்னும் பல ஓவியங்கள்.. அவற்றையும் அடுத்தடுத்து என பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதோடு உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் கலைப்பொருட்கலும் அரும்பொருட்களும் அடங்கியிருக்கும் மாபெரும் பொக்கிஷம் இம்மண்டபம். ஆனால் நாம் ஏனைய அருங்காட்சியகங்களுக்கும் செல்ல வேண்டுமல்லவா?

    அடுத்ததாக உங்களை மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஐரோப்பாவை விட்டு சற்றே நெடுந்தூரம் செல்வோம்.

    வேறொரு நாட்டிற்கு வேறொரு அருங்காட்சியகத்திற்கு!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 102

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உழவரின் ஒலியும் பாட்டும்

     

    உழப்படாத நுண்ணிய சேற்றில் புரண்டதால்

    உடலில் பூசியுள்ள சேறு;
    கழுவப்படாத முடியினையுடைய உடல் மற்றும்
    சிவந்த கண்களுடன் இருந்தன எருமைகள்.
    அவைதாமும் தம்

    தினவைப் போக்கிக் கொள்வதற்காக

    களத்து மேட்டில் உழவர்கள்
    வைக்கோற் புரியால்
    கட்டிவைத்த நெற்கூடுகளில்
    முதுகை உராய்ந்தன.

    வலிமையான கைகளையுடைய
    கூலியாட்களும் நில உரிமையாளரும்

    அவற்றை விரட்ட
    ஒருங்கே எழுப்பும்  ஒலி

    ஒருபுறம் ஒலிக்கும்.

     

     

    மணமிக்க ஆம்பல் முதலிய
    மலர்களையும் களைகளையும் பறித்தெறிந்து
    களைத்து நின்ற உழத்தியர்
    நாற்று முடிகளைப் பிரித்து அழுத்தி நட்டனர்.
    அப்போது,
    வளைந்த வளையணிந்த அவர்தம்

    தோளிலும் மார்பிலும்
    சேறு பூசிய கோலம் அழகு செய்தது.
    இதே கோலத்தில் அந்த உழத்தியர்
    கள்ளுண்டு களித்தனர்.
    அதனால் செக்கச்சிவந்த கண்களுடன்

    அவர்கள் தாமும்
    கொச்சை மொழியில்

    புதுப்பாடல்கள் பாடிக்களித்த ஒலி

    ஒருபுறம் ஒலிக்கும்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 131

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    sathyaசென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட சந்தித்திருந்தேன். என்னடா உனக்கு இப்படி வயசாகிவிட்டதே என்று அவனை கிண்டலடித்ததற்கு, ஆமாம்.. இவர் என்றும் மார்க்கண்டேயராக்கும்’ என்று பதிலடி கொடுத்தான்.. கூடவே என்னை அருகேயே இருந்த அவன் வீட்டுக்கும் அழைத்துப்போய் தூசி தட்டப்பட்டு அலமாரியில் வைத்திருந்த என் புத்தகங்களையும் (பெருமையாக) காண்பித்தான். அவன் மனைவிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தான்..

    அந்தப் பெண்மணி என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, உங்கள் புத்தகத்தில் உள்ள புகைப்படத்தைப் போலத்தான் இருக்கிறீர்கள்.. ஆனால் சின்னப்ப மட்டும் கொஞ்சம் அழகாகத்தான் இருந்தீர்கள்’ என சீரியஸ்ஸாகச் சொன்னதும் என் நண்பனை கேள்விக் குறியாகப் பார்த்தேன்..

    ’அட, அது வேற ஒண்ணுமில்லே.. நம்ம ஸ்கூல் போட்டோவைச் சொல்றாடா.. ’எங்கே இவனுக்கும் கொஞ்சம் காண்பியேன்.. இவன் அழகை இவனே மெச்சிக்கட்டும்’ என்று மனைவியைப் பார்த்துச் சொன்னதும் அவர் உள்ளே சென்று ஒரு பழைய ஆல்பம் கொண்டு வந்தார். என் நண்பனின் சித்திர சுய வரலாறு என்று பார்த்தவுடனே புரிந்தது. என்னுடனும் இன்னும் இரண்டு நண்பர்களுடனும் அந்தப் பள்ளி வயதில் போட்டோ எடுத்துக் கொண்டதை நான் அந்த நேரத்திலேயே மறந்திருந்தாலும், இவன் மறக்காமல் ஆல்பத்தில் இன்னும் வைத்துக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தாலும், அதே சமயத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் உள்ள அந்த நான், நான்தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்ததும் வாஸ்தவம்தான்.. நானேதான் என்பதை சத்தியம் செய்தான் அவன் என்பது இன்னொரு விஷயம்.

    இந்த விஷயங்கள் கீழே உள்ள அந்த சுட்டிப் பெண்ணைப் பார்த்ததும் நினைவுக்கு வந்ததுதான். நாளை வயதானபின் இந்தப் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்தப் பெண் என்ன நினைப்பாளோ என்ற ஒரு கற்பனையும் கூடவே எழுந்ததுதான். இனி இந்த வார வல்லமையாளரைத் தேர்ந்தெடுக்கும் அமைதிச்சாரல் சாந்திக்கு வழிவிடுவோம். இதோ சாந்தியின் எழுத்தில்:

    இந்த வார வல்லமையாளர்: திரு. சத்யா.

    ஒளிப்படக்கலையில் வல்லுனரான இவர் எதைக் க்ளிக் செய்தாலும், அந்தப் படம் உயிர் பெற்று வந்ததைப்போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஒளியமைப்பு, காட்சியமைப்பு, கோணங்கள், வண்ணங்களின் சேர்க்கை என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் அழகைக்கொண்டவை. இவரது படங்களை ரசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

    http://www.flickr.com/photos/snarayanank/with/9537102597

    ஒளிப்படங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துவதாக அல்லாமல் சில சமயங்களில் தகவல்களின் இருப்பிடமாகவும் இருப்பதுண்டு. ஒளிப்படங்கள் வழியாக கலைஞன் அந்த நொடியில் தான் உணர்ந்ததை பார்வையாளனுக்கும் கடத்துகிறான். அந்த வகையில் சத்யாவின் இந்த ஒளிப்படம் சிறப்புப்பெறுகிறது. பார்க்கும் அந்த நொடியிலேயே பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மனநிலை நமக்கும் ஏற்பட ஆரம்பிக்கிறது. அந்தப்பெண்ணின் குறும்புத்தனமான பார்வையும் வண்ணக்கலவையும், அழகான முகபாவமும் கவர்கின்றன. bokeh, dof போன்ற சிறப்பம்சங்களால் படம் மேலும் அழகுபெறுகிறது.

    sathya

    http://www.flickr.com/photos/snarayanank/11368702886

    இந்த வார வல்லமையாளரான திரு. சத்யாவுக்கு வல்லமை சார்பில் என் வாழ்த்துகள்.

    கடைசிப்பாரா: தேமொழியின் ”தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை”

    தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.

    Share
  • ராமன் வரும் வரை காத்திரு… (1)

    ராமஸ்வாமி ஸம்பத்

    பெருமையும் சக்தியும் பொருந்திய காயத்திரி மஹாமந்திரத்தைத் அளித்து ’விஸ்வாமித்திரர்’ – உலகுக்கே நண்பர் – எனப் பெயர் பெற்றதோடு வசிஷ்டர் வாயால் ’பிரம்மரிஷி’ எனவும் கெளரவிக்கப் பட்டவர் கெளசிக முனிவர். அந்த மாமுனிவர் ஒரு நாள் தன் ஆசிரமத்தில் மனக்கவலையோடு காணப்பெற்றார். சீடர்களுக்கு அவரது துயரம் புரியவில்லை. அவர் அருகில் சென்று கேட்கவும் துணிவு வரவில்லை. நல்லவேளையாக தேவரிஷியான நாரதர் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். சீடர்கள் அம்முனீந்திரரை வணங்கி வரவேற்று, ஆசானின் மனக்கவலைபற்றி கூறினர்.

    அவர்கள் முறையீட்டினைக் கேட்ட நாரதர், “கவலை வேண்டாம். அதனைப் போக்கவே இங்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லி மாமுனிவரிடம் சென்றவரை கெளசிகர் அடிபணிந்து வரவேற்றார்.

    “பிரம்மரிஷே! தாங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்ட தேவரிஷியிடம், “முனீந்திரரே, என்னுடைய கோரிக்கைகள் எல்லாம் விருப்பப்படி நிறைவேறியிருந்தாலும் என் மனம் சதா அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ இனம்புரியாத ஒரு சிந்தனை என்னை வாட்டி வதைக்கிறது. தங்களால்தான் அதனைப் போக்க முடியும்” என்றார் விஸ்வாமித்திரர்.

    “எண்ணிலா அருந்தவத்தோனான தாங்கள் ஒரு மனிதனால் சாதிக்க முடியாத பல காரியங்களைத் செய்துவிட்டு பெரும் பெயர் பெற்றுவிட்டீர்கள். ஆனாலும் தாங்கள் செய்த ஒரு பாபம் தங்களை வாட்டுகிறது” என்றார் நாரதர்.

    “நான் பாபம் செய்தேனா? திரிகால ஞானியான தாங்கள்தான் இப்புதிரை விடுவிக்க வேண்டும்.”

    “சற்று யோசியுங்கள். தாங்கள் ராஜா அரிச்சந்திரனையும் அவன் பட்டத்து ராணி சந்திரமதியையும் பிரித்து துன்பத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? அந்த வினைதான் தங்களைச் சுடுகிறது.”

    “அதனால் அரிச்சந்திரனுக்கு பரமசிவ தரிசனம் கிடைத்ததோடு சத்தியசந்தன் என்ற பெருமையும் சேர்ந்ததல்லவா? அது எப்படி பாபமாகும்?”

    “கெளசிகரே! என்னதான் அது நல்லபடியாக முடிந்தாலும், தம்பதிகளைப் பிரிப்பது ஒரு தீவினையே.”

    “முற்றிலும் உண்மைதான். நான் அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதை தாங்கள்தான் சொல்லவேண்டும்.”

    “இக்ஷ்வாகு குலத்தின் உன்னத ராஜ தம்பதிகளைப் பிரித்த வினையைப் போக்க, தாங்கள் அதே வம்சத்தில் உதிக்கவிருக்கும் ஒரு ‘மரியாதா புருஷோத்தமனுக்கு’  அவனுக்கேற்ற வாழ்க்கைத் துணையை மணம் செய்துவிக்க வேண்டும். அப்போதுதான் உமது மனக்கவலை மாறும்.”

    ”தேவரிஷே! பிள்ளைப் பேரற்ற வயது முதிர்ந்த தசரத மகராஜனுடன் இக்‌ஷ்வாகு குலம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி என்னால் எப்படி தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?”

    ”கவலை வேண்டாம் கெளசிகரே! மஹாவிஷ்ணுவே அந்த தசரதனுக்குப் புத்திரனாக அவதரித்து ‘ராமன்’ என்ற பெயரோடு செயற்கரிய செய்கைகள் பல புரியப் போகிறார். அந்த ராமனுக்காக, மஹாலக்ஷ்மியும் ’ஸீதை’ என்ற பெயரோடு அயோனிஜையாக சம்பவிக்கப் போகிறார். அந்த ஆதி தம்பதிகளை நீங்கள் சேர்த்து வைத்து, பெரும்புகழ் அடையப் போகிறீர்கள். ஆகவே தாங்கள் ராமன் வரும் வரை காத்திருக்கவேண்டும்” என்று கூறி கெளசிகரிடம் நாரதர் விடை பெற்றுக் கொண்டார்.

    விஸ்வாமித்திரரும் பொறுமையாக ராமன் வரும் வரை காத்திருந்து, உரிய காலத்தில் அயோத்தி அடைந்து தசரதனிடம் அரக்கர்கள் நிறைந்த தருவனத்தில் தான் நடத்தப் போகும் வேள்வியைக் காக்க ”நின் சிறுவர் நால்வரிலும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று இறைஞ்சினார். விருப்பம் இல்லாவிட்டாலும் குலகுரு வசிஷ்டரின் உந்துதலால், தசரதன் ராமனையும் அவனுடன் லக்ஷ்மணனையும் விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைத்தான்.

    அரசிளங்குமரர்களுக்கு பல அஸ்திரங்களின் பிரயோகங்களைப் புகட்டிய மாமுனிவர், ராமனை தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய வைத்து, பின்னர் தனது வேள்விச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அவர்களிடம், “இனி நான் யாக தீட்சையில் ஈடுபடப்போவதால் நீங்கள் இருவரும் அரக்கர்களால் இவ்வேள்விக்குத் தீங்கு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்றார். இளவரசர் இருவரும் தங்கள் வில்லேந்தும் வலிமையால் இடர்ப்பாடு செய்யும் அரக்கர்களை கொன்று குவித்தனர். பின் வந்த அரக்கர் தலைவனும் தாடகையின் புதல்வனுமான சுபாகுவை ராமன் வீழ்த்தி, அவ்வரக்கனின் உடன்பிறப்பான மாரீசனை ஒரு அம்பின்மூலம்  பல யோசனை தூரத்தில் உள்ள கடலில் விழுமாறு உய்த்தான்.

    வேள்வி வெற்றிகரமாக முடிந்ததும், மிக்க மகிழ்ச்சியோடு விஸ்வாமித்திரர் ராமனையும் இளவல் லக்ஷ்மணனையும் ஆசீர்வதித்து, “இப்போது நாம் மிதிலை நகர் நோக்கிச் செல்லப் போகிறோம். விதேக நாட்டு அரசன் ஜனகன் நடத்தும் யாகத்தைக் காண்போம்” என்றார். ‘யாகத்தைக் காணவா இந்த ராஜகுமாரர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்கிறேன்? அங்கு ஒரு பரிசு ராமன் வரும் வரை காத்திருக்கிறதல்லவா? அதனை அவனிடம் சேர்ப்பிக்க வேண்டாமா….’ என அவர் மனம் சிந்தனை செய்தது.

    மிதிலைநகர் செல்லும் வழியில் ஒரு பாழடைந்த ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு நிலவிய மயான அமைதியைக் கண்டு ராமன் “மாமுனிவரே! இந்த ஆசிரமம் ஏனிப்படி பொலிவிழந்து காணப்படுகிறது?” என்று கேட்டான்.

    ”கெளசலை மைந்தனே! இது கெளதம முனிவரின் குடில். இதன் பிண்ணனியில் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது” என்று சொல்லி அக்கதையை அவர்களுக்கு விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்….

    ….ஒரு சமயம் பிரமதேவர் படைத்த அகலிகை எனும் பேரழகியைக் கண்டு தேவேந்திரன் அவளை மணம்புரிய ஆசைப்பட்டு நான்முகனை அணுகினான். ஆனால் அவர், ‘முன்னமே அவள் கெளதம முனிவருக்கு மனைவி ஆகிவிட்டாள். ஆகவே அவ்வாசையை அழித்துவிடு’ என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார். அகலிகைமீது கொண்ட காமவேட்கையால், இந்திரன் நெறி தவறி பிறன்மனை விழைய முற்பட்டான். சேவல் உருக்கொண்டு கெளதம முனிவரின் ஆசிரமத்தை நள்ளிரவில் அடைந்து, கூவலுற்றான். அதனை வைகறை அறைகூவலாகக் கருதி அம்முனிவர் நதிக்கரைக்குச் சென்ற தருணத்தில் முனிவர் வடிவம் கொண்டு அகலிகையை ஏமாற்றி அவளுடன் தகாத உறவு கொண்டான். வந்தவன் இந்திரன் என்பது அகலிகைக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் வானோரின் அரசனே மயங்கும் தன் பேரெழில்மீது ஒரு கணம் பெருமை கொண்டாள். உடனே தன் தவற்றையும் உணர்ந்து சோகமடைந்தாள். இதற்கிடையில், நதிக்கரைக்குச் சென்ற கெளதமர் இந்திரனின் கயவாளித்தனத்தைத் தன் ஞானப்பார்வையால் அறிந்து, குடிலுக்குத் திரும்பினார். பூனை உருக்கொண்டு தப்பிக்க முயன்ற இந்திரனை கொடுஞ்சினம் கொண்ட முனிவர் ‘பிடி சாபம். நீ எதனை நாடி இத்தீயசெயலைப் புரிந்தாயோ அவ்வாறு உன் உடல் முழுதும் ஆகக்கடவது’ என்றார். இந்திரன் தலைகுனிவோடு தன் உலகத்திற்குத் திரும்பினான். தடம் புரண்ட மனைவி அகலிகையை கெளதமர் ஒரு கல்லாக மாறும்படி சபித்தார். அகலிகை, ’இந்திரனால் வஞ்சிக்கப்பட்ட எனக்குச் சாப விமோசனம் கிடையாதா?’ என்று கண்ணீர் மல்க தன் கணவனை வினவினாள். முனிவரும் மனமிரங்கி, ‘எப்போது அயோத்தி இளவரசன் ராமன் கால் தூசி உன்மீது படுகிறதோ அப்போது நீ உன் பழைய உருவை அடைவாய். அந்த ராமன் வரும் வரை காத்திரு’ என்று பகர்ந்து அங்கிருந்து அகன்றார்….

    அகலிகையின் கதையைக் கூறியபின், விஸ்வாமித்திரர், “ராமா, உன் பாததூளிக்காக குற்றமற்ற அவள் இங்கே காத்திருக்கிறாள். உன் வலது காலை அக்கல்லின்மேல் வை”  என்றார். ஆசானின்  ஆணைப்படி ராமன் பாதத்தை வைத்தவுடன் அகலிகை மீண்டும் பொலிவு பெற்று எழுந்து அந்த பதிதபாவனனின் தாள் பணிந்தாள். இக்காட்சியைக் கண்ட விஸ்வாமித்திர்ர் மனம் நெகிழ்ந்து, கம்பநாடர் மொழியில்

    “இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

    உய்வண்ணம் அன்றிமற்றுமோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ

    மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து  அண்ணலே உன்

    கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்”

    என்று பெருமிதமாகக் கூறினார்.

    [முக்காலத்தில் அகலிகை கல்லுருவத்தைப் பெற்ற நிகழ்ச்சி இவ்வாறு நடந்தது. நீ அவதரித்த பின்னர், இவ்வுலகத்தில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் விடுதலை பெறுவதன்றி, துன்பமடைவது என்பது உள்ளதாகுமோ? ஆகாது. மேகத்தின் கரிய வண்ணத்தைப் போன்ற ராமனே! மை போன்ற கருநிறத்து அரக்கியாகிய தாடகையுடன் நீ போரிட்ட அவ்விடத்தில் உன் கைத்திறமையைப் பார்த்தேன். இவ்விடத்தில் உன் கால் திறமையைப் பார்த்தேன்.]

    அதன்பின் அப்போதே அங்கு வந்து சேர்ந்த கெளதமரை ராமன் அகலிகையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட அவரும்  அவளை மன்னித்து இல்லறம் நடத்த சித்தமானார்.

    (​தொடரும்)

    Share
  • தில்லை நடராசன்

    சு. கோபாலன்

    chidambaram-nataraja-temple-tamilnadu

    எல்லை இல்லா ஆகாயமெனும் பஞ்சபூதத்திற்கு உரிய தலமாம் சிதம்பரம்

    தில்லை மரக்காட்டில் ஆதியில் இருந்ததால் தில்லையென்றும் அறியப்படும்.

    கண்டதில்லை இத்தலம்போல் என தில்லை கண்ட பக்தர்கள் திகைப்பர்

    கொண்டதில்லை இத்தகைய ஆனந்தம் என நடராசன் தரிசனத்தில் திளைப்பர்.

     

    விண்ணுலகில் தேவர் முனிவர் கண்டு மகிழ்ந்த தன் நடனத்தை

    மண்ணுலகில் மானிடரும் கண்டு மகிழ தில்லை வந்தாரே சிவபெருமான்

     

    அரவம் அணியாய் அமைந்த வலக் கரமொன்றால்

    உடுக்கடித்து ஊராரை எல்லாம் தன்னிடம் அழைத்து

    இடக்கையொன்றினால் எழுந்தாடும் இடக்காலினைக் காட்டி

    ”உய்திடுவீர்” இப்பதம் பக்தியுடன் பற்றிடில் என்றருளி

    ”இது சத்தியம்” என வாக்களிக்கும் வகையினில்

    மற்றொரு இடச் செங்கையில் வெந்தழல் ஏந்திடுவார்.

    வல்லசுரன் முயலகனை வலக்காலடியில் துகைத்து

    வலக்கரத்தால் அபய முத்திரை அளித்திடும்

    தில்லைத் தாண்டவன் தரிசனம் கண்டு

    எல்லை இல்லா இன்பம் பெறுவோமே!

     

    நந்தன் எனும் கீழ்குல பக்தன் ஆலயத்துள் அணுக முடியாதவன்

    சிந்தை எல்லாம் சிவ பக்தியைத் தேக்கி எக்கணமும் தொழுபவன்

    எந்தனைக் காண வாவென தில்லை நடராசன் நந்தனை அழைத்திட

    விந்தை விளைந்தது நந்தன் ஜோதியாய் இறைவனுடன் ஐக்கியமாயிட!

     

    சிதம்பர நாதன் பதங்களைப் பணிந்து

    இகபர வாழ்வுக்கு நல்வழி தேடுவோமே!

     

    படத்திற்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/10/chidambaram-nataraja-temple-tamilnadu.html

    Share