Blog

  • சங்கத் தமிழன் சாகாவரம் வேண்டினானா?

     


    கோ. ஆலாசியம் 

     agathiyar

    அறிவினில் உயரியத் தமிழ்மொழி என்பேன் நான்.

    மொழி என்பது கருவியாகும். ஒருவனுடைய உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி வளர்வதற்கும், வளர்ந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்வதற்கும் பயன்படும் கருவியே மொழி என்பதாகும்.

    அறிவினிலுயரியத் தமிழ்மொழி பேராழி 

    ஊறிய அமிழ்தினும் சிறந்ததென்பேன்

    பாரினில் உயரிய மகாகவியோடவன் தாசன் 

    கூறிய உன்னதறிவுப் போற்றியே

    தொன்று நிகழ்ந்தது அனைத்தும்

    உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் இவள்

    என்றுப் பிறந்தவள் என்றுணராத

    இயல்பினளாம் எங்கள் தாய்

    ஆதி சிவன் பெற்றுவிட்டன என்னை என்று தமிழ் மொழியின் தொன்மையை மகாகவி பாரதி பாடிச் சென்றான்

    ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

    ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்

    வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

     

    முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,

    ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்

    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

    வாழும் மொழியான செம்மொழி மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றும்; அதன் சிரஞ்ஜீவித் தன்மைக்கு அதன் அறிவுச் செழுமையும்; உலகப் பொருள்களிலும்; படைப்பைப் பற்றிய அதன் தெளிவை ஐயம் திரிபுர விளக்கும் தன்மையையும்; கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அது முழுமை பெற்றதை; அதாவது முழு வளர்ச்சிப்  பெற்று விட்டதும், அதன் இலக்கண அமைப்பின் வழியே காணும் போது உலக மொழிகளில் வேறந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கணம் அதுவும் பொருளிலக்கணம் எழுதப்படவில்லை என்னும் உயர்வும் இந்த அறிவினில் உயரிய அன்னை தமிழுக்கு உண்டு என்பது நமக்குப் பெருமையே.

    இன்றைய நவீன அறிவியல் கூறும் அனைத்துப் பிரபஞ்சக் கூறுகளும் அதன் உருவாக்க அமைப்பின் முறையை முறையே முதல் கரு உரிப் பொருள்கள் வழியே முறைப் படுத்தி இருவரிகளில் பிரபஞ்சத்தை சுருக்கிய தொல்காப்பியச் செய்யுள் எத்தனைப் பெரிய சான்று இம்மொழி அறிவினில் உயர்ந்து முழுமைப் பெற்ற மொழி என்பதற்கு.

    முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே

    நுவலுங் காலை முறை சிறந்தனவே…..

    ஒரு வரிசையைத் தருகிறார், அதுவே இன்றைய அறிவியலும் கூறுகிறது.

    இப்படிப் பொருளிலக்கணம் அதாவது வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்த மொழியின், அதன் அகம் புறம் என்னும் அன்றைய இலக்கியங்கள் இவற்றின்

    முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே என்று  கூறிவிட்டு அடுத்த அடியில் ‘நுவலுங்காலை முறை சிறந்தன’ என்பது இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் வரிசை அதாவது படைப்பின் வரிசையை அதாவது நிலம், பொழுது; அடுத்து கருப் பொருளான தாவரம், விலங்குகள் அதன் பின்பு பல்லாயிரம் வருடங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான் என்பதாக. இதை இப்போது அறிவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

    தொல்காப்பிய இலக்கண நூல் எழுத்தது சொல் என்று மட்டும் அல்லாது மனித வாழ்விற்கு இலக்கணமும் கூறிய நூல். இது வேறெந்த உலக மொழியிலும் இல்லாத சிறப்பு என்பர்.

    அதனால் அதனை நான் அறிவினில் உயரிய செம்மொழி என்பேன்.

    சற்று உற்று நோக்கினால்…. இப்படியொரு உயரிய இலக்கணத்தை படைக்கும் போது, அது அற்றைய நாட்களில் தமிழன் வாழ்ந்த வாழ்வினையே விளக்கும் என்பதைக புரிந்துக் கொள்ளலாம்.

    இருந்தும் அப்படியொரு வாழ்வு வாழும் போது, இப்படி இலக்கணம் படைபானானேன் என்று எண்ணினால், அது அந்த பண்பாட்டை ஒரு முழு ஒழுங்கு பெறாத பண்பாட்டை ஒரு முழு வடிவுக்கு கொண்டு வரவும், இன்னும் நுண்ணியதாக கூராக்கவும் எண்ணியே தொல்காப்பியர் செய்திருக்க வேண்டும்.

    இல்லாத ஒன்றை; அறியாத ஒன்றை திடீரென ஒருவன் வரையறை செய்ய முடியுமா? என்பதும், அப்படி செய்வானாயின்; தமது வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஒன்றை புரிந்துக்கொண்டு  சாதாரண மக்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியுமா? என்பதையும் சிந்தித்தால்; அது அன்றைய தமிழனின் வாழ்வியல் அமைப்பு தான், அதை அவன் ஒருவாறு கைக் கொண்டிருந்தான் என்பது விளங்கும்.  இலக்கணம் பிறந்தது அப்போதே என்றால் அந்த இனம் எத்தனை நாகரிகமும், வாழ்வியல் விழுமங்களையும் பெற்றிருந்தது என்பதையும் இதன் வழி நன்கு அறியலாம்.

    அகம் புறம் பிரிவு!

    அகமும் புறமும் பற்றிய இலக்கியங்கள் இந்த இலக்கண அடிப்படையிலே தோன்றி தமிழ் மக்கள் வாழ்வின் முழுமையும் பறைசாற்றுகின்றன.

    கவிஞன் ஞானோ காலக் கணிதம் என்பதைப் போல…

    இலக்கியம் என்பது மண்ணின், மாந்தரின் அது தோன்றிய காலத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுவதே. அப்படியானால் அக்கால மக்களின் மனப் பாங்கை அது காட்டும் கண்ணாடி என்று தமிழ் சான்றோர் கூறுவதற்கு இணங்க; தமிழன் தனது உணர்ச்சியின் அடிப்படையில் எப்படிச் செயல் பட்டான்.

    அதாவது, தனது மெய் சார்ந்த உணர்ச்சியில் அவனின் செயல் பாடு அவன் இந்த சமூகத்தில் மற்றோருடன் கொண்ட உறவு; குடும்பம், சமூகம் என்ற அமைப்பில் அவனது பங்கு என்பதும்; அவன் இந்த உலகை, பற்றிய எண்ணம், இயற்கையை பற்றிய கருத்து, புரிந்துணர்வு அதை அவன் கையாண்ட முறை ஆகிய அனைத்தையும் பற்றிய விழுப் பொருள்களை நமக்கு இன்று இந்த அகமும், புறமும் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை,

    அருமையான அகத்திலே ஏனிந்த அழுக்கு!

    மக்கள் நுதலிய அகன் ஐந்திணை‘ (தொல் -அகத்திணை-57)

    அனைவரும் அறிந்ததே ஐந்திணைகள்; குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம். இந்த ஐந்திணைகளிலே தமிழர் வாழ்வு அமைந்திருக்க வேண்டும் ஆனாலும் அதிலே வரும் மருதத் திணை இவர்களின் வாழ்வை நாசமாக்கி இருக்க வேண்டும்.

    அதை நாமும் வள்ளுவரின் மறைவழியே அறிய முடியும். பரத்தையருடன் வாழும் வாழ்வை சித்தரிப்பது மருதம் ஆகும். இது சங்ககால தமிழனின் வாழ்வை சங்கருத்ததும்  ஆகும்.

    பரத்தமை ஒழுக்கத்தை திருக்குறள் எப்படி எல்லாம் சாடியுள்ளது என்பதை யாவரும் அறிவோம்.

    இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும்

    திருநீக்கப் பட்டார் தொடர்பு  – (திருக்குறள் 920)

    பொது மகளிர்த் தொடர்பு, கள்ளுன்னுதல், சூதாடுதல் இவைகள் கொண்டொழுகும் மனிதனை இலக்குமி கைவிட்டு விடுவாள். தரித்திரன் ஆகி விடுவான் என்பதே அது.

    புறத்திலே புரையோடிய போரென்னும் போதை!

     

    கொடுத்தல் எய்திய கொடாமை யானும்‘ (புறத்திணை – 7)

    கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்‘ (புறத்திணை-29)

    இது சமூக ஏற்றத் தாழ்வை அந்நாளில் இருப்பதை நமக்குணர்த்தும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக புறத்திலே அதிகம் பேசப் படுவது வீரம் பற்றியனவாகும் என்பதை நாம் யாவரும் அறிவோம். அது தொண்ணூறு விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள், ஆழ்ந்துப் பயின்ற தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்.

    இந்த வீரத்தைப் புகழும் அதே வேளையில் அந்தப் போரினால் விளைந்த அவலனிலைகளைப் பற்றியும் அதுக் கூற தவற வில்லை.

    காஞ்சித் திணையிலே காணக் கிடைக்கும் அவலம் எத்தனை கொடுமை என்பதை காண்பார் உணர்வார். கணவனை போரினிலே இழந்த மனைவியரின் அவலமும், தனது மகனை இழந்த தாயின் நிலையையும், சுற்றத்தாரும் உற்ற பெருந்துயரங்களும் சொல்லி இருப்பதையும் அறியலாம். அப்படி கூறிய அந்த காஞ்சித் திணை; போரிலே புகுந்து வீரம் காட்டுதலையே பெரிதும் விரும்பிப் போற்றின என்று தான் கூற வேண்டும்.

    இதிலே பரத்தமையும், கள்ளும், சூதும் தவறெனக் கூறிய வள்ளுவன் கூட வீரத்தைப் பெரிதாக புகழ்ந்துக் கூறினான்.

    புறத்திணை குறிக்கும் கொடை, வீரம் போக, வாகைத்திணையில் சான்றாண்மை, நல்லொழுக்கம், பிறர் பிழை பொறுக்கும் பண்பு, அருளை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை துறவு, காமம் நீத்த சிறப்பு என்பவைகளையும் காணலாம்.

    ———————————————–

    துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

    கட்டில் நீத்த பாலினானும்

    கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்

    ————————————————

    அருளோடு புணர்ந்த அகற்சியானும்

    காம நீத்தப் பாலினாலும். (தொல் -புறத்திணை-17)

    ஆக போர், வெற்றிப் புகழ் என்பதிலே பெரிதும் மயங்கிக் கிடந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், அரசு கட்டிலைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டு துறவு மேற்கொண்டோழுகுவது பெரிய வெற்றி என்று வாழ்ந்தாரும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

    கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் இதற்கு நச்சினார்கினியர் உரை கூறுகிறார் ‘ வேதம் முதலிய வற்றாற் கட்டுதல் ஒழுக்கத்தோடு கூடியக் காட்சி’

    வேதம் கூறிய படி ஐம்புலன்களையும் கட்டுதல் அது எப்படி சாத்தியமாம் அதற்கான ஒழுக்கத்தைக் கொண்டு கட்டு. அதாவது ஐம்புலன்களின் வழியே உந்தன் மனத்தை அழுக்காக்கிக் கொள்ளாது கட்டு. அப்படிக் கட்டும்கால்  காணும் காட்சி. ஆக, தொல்காப்பியத்திலே இதையும் காண்கிறோம்.

    ஒப்பு நோக்க மனித வாழ்வு என்பது இன்ப துன்பம் கலந்தது என்பது தான் ஆன்றோர் வாக்கும். ஐம்பூதங்களினால் ஆன அண்டம்; இந்த பிண்டமும் அப்படியே! அவைகள் ஒவ்வொன்று வேறு வேறானது ஒத்த தன்மைக் கொண்டு விளங்காது என்பதும் உண்மையே…

    ஆகையால் வள்ளுவனார் கூறியது போல்…

    குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்க கொளல்

    தமிழ் மக்களின் வாழ்வுக் குறைகளை நீக்கினால், அந்தத் தமிழனின் வாழ்வு உலகிற்கு முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.

    வடவேங்கடம் தென்குமரி

    ஆயிடை தமிழ்கூறு நல் உலகம். —(தொல் -பாயிரம்-1)

    இது பழந்தமிழ் நாட்டின் பரப்பு என்பதை தொல்காப்பியம் வழி அறிகிறோம். இதை சேர, சோழப் பாண்டிய மூவேந்தர்களும்.. எண்ணிலா சிற்றரசர்களும் ஆண்டு வந்தனர் என்பது அறிந்ததே.

    பக்காளிச் சண்டைகளை வீரம் என்பதா?

    veeram

    இம்மூன்று மன்னர்களும் ஓயாத, ஒழியாத போர்கள். இவர்கள் சில காலம் சும்மா இருப்பினும், இவர்களைத் தூண்டிவிட்டுப் போர் செய்ய செய்தவர்களும் உண்டு என்பர். போரிடா மன்னனே இல்லை. மேலும், சோழர்களுள் அரசு கட்டிலுக்காக நடந்த போர். ஏன்? தந்தை மகனுக்குமான போர்களும் இருந்தன என்பர்.

    இப்படி மூவருள்ளும் சண்டை இட்டுக் கொள்வதால் வலியவன் வெல்வதும்; அதனால் தோற்றுப் போனவன் நாட்டில் சில பகுதிகளையும், விளைந்த விளைச்சல் மிகுந்த நிலங்களை கொழுத்துவதும், போரில் மடிந்த மனிதர்களின் குடும்பத் துயரத்தை பொருள் கொள்ளாது சர்வ சதாக் காலமும்… தமிழனுக்குள் தமிழன் அடித்துக் கொள்வதே இவர்களின் வேலையாகவும் இருந்திருகிறது.

    வாழ்ந்தவன் ஒருத் தமிழன் என்றால் மடிந்தவனும் தமிழன் தான். சமுதாயத்தில் ஒரே வாழ்வியல் என்பதால் பொருளாதாரத்தைத் தவிர வேறு பெரிய மாற்றம் இருந்திருக்க மாட்டா.

     veeram2

    இதிலே, கரிகாலன், பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுங்செழியன், சேரன் செங்குட்டுவன் பொன்றோர் ஆட்சிக் காலத்திலேயே தான் தமிழ்ப் பெருநிலம் ஒரு குடையின் கீழே இருந்திருப்பதாகவும் வரலாறு காட்டுகிறது.அதுவும் மிகக் குறுகிய காலமென்பர். எஞ்சியக் காலம் எல்லாம் போர் தான் அதுவும் பங்காளிச் சண்டை தான். இவர்கள் சும்மா இருந்தால், இவர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் அடித்துக் கொள்வார்ககளாம்.

    போர் வெறி, எப்படி த் தமிழனை பிடித்து ஆட்டியது என்பதையும் அதை எப்படி தமிழினம் போற்றியது என்பதையும் புறம் நமக்கு காட்டி நம்மையும் உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டுத் தள்ளிவிடும் இந்த புறநானூற்றுப் பாடல்களை நான் வாசிக்கும் போதே. இன்னும் சொன்னால் புல் தடுக்கிப் பயில்வான்கள் கூட வீறுகொண்டு எழுந்து வாள் கொண்டு போரிடத் தூண்டும் உணர்விற்கு ஆளாக்கும் அந்த பாடல்கள் கூறும் காட்சிகள்.

    முறத்தைக் கொண்டு பாயவந்தப் புலியை விரட்டி அடித்தாள் வீரமறத்தாய்  என்பதையும். புறமுதுகில் பட்டக் காயம் மார்பின் வழியே வந்துப் பாய்ந்தது என்பதை அறியாதத் தாய் தனது மகனுக்கு வீரப் பாலூட்டிய தனது முலைகளையே அறுத்து எறியத் துணிந்து பிறகு தெளிந்தக் காட்சிகள் எல்லாம் காணலாம்.

    சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் இரு சகோதரர்கள். இருவரிடையே போர் மூண்டது. அதை கண்ட கோவூர் கிழார் என்ற சான்றோர் இருவரையும் அமைதி பெற இப்படிப் பாடுகிறார்.

    நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

    பொருவோன் கண்ணியம் ஆர்மிடைந் தன்றே

    ஒருவீர் தோற்பினும்: தோற்பது நும்குடியே  -(புறம் 45)

    அத்திமாலை தரித்த நீவீர் இருவரும் பொருதி யார் தோற்றாலும் அது சோழன் தோற்றான் என்பது தானே. விட்டு விடுங்கள் என்கிறார்.

    வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்

    நாடு சுடு கமழ புகை எரித்தலானே   -(புறம்-6)

    உனது தலையிலே நீ சூடிய வெற்றி வாகை மலர் உனது பகைவர் நாட்டை கொளுத்திய நெருப்பால் வாடுகிறதே. ஆக, இப்படி நெருப்பால் கொளுத்துவதும் தமிழனுக்குள் தமிழ் அடித்துக் கொள்வதும்.

    அட, அப்பவே அப்படித் தானா! 🙂

    மேலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, காரிகிழார்  இப்படியும் பாடுவதாக குறிப்பர்.

    பணியியர் அத்தை, நின் குடையே -முனிவர்

    மக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே.

    நினது குடை, முனிவர் பெருமக்களுக்கும், சிவனுக்கும் அல்லாது வேறு யாருக்குப் பணியும் என்பதே. ஆக, புறநானூறில் பாடப் படுவதில் அறிஞர்கள் கூறுவது போல் தொண்ணூறு விழுக்காடு பெரும்பாலும் சகோதரப் போர்களைப் பற்றியதே இருக்கிறது.

    இதன் பயனாக, ஆக்கப் பூர்வமான சமுதாய வளர்சிக் குன்றி இருந்தது என்று நினைப்பதில் தவறு ஏது?

    இந்த அரசர்களுக்கு அறிவுரைகள் கூறுவோர் வெகு சிலராகவே இருந்திருக்கிறார்கள்.

    மதுரைக் காஞ்சியிலே அவைகள் காணக் கிடப்பதை கூறும் அறிஞர் பெருமக்கள்.

    அது ஓயாமல் போர் மூண்டு கொண்டிருக்கும் போது தலையானங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை விழித்துப் பாடப் பட்டமையைக் கூறுகிறது.

    கோதையின் புனைந்த சேக்கை துஞ்சி – (ம.கா. 713)

    முருகு இயன்றன்ன உருவினை ஆகி – (ம.கா. 724)

    பூத்த சுற்றமொடு இயன்ற உருவினை ஆகி- (ம.கா.770)

    மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

    வரைந்து நீ பெற்ற நல ஊழியையே! – (ம.கா. 782)love

    உண்டும், உற்றவளோடு மகிழ்ந்தும் களித்து, சுற்றமொடு வாழ்வாய்  என்கிறார் அவர். நல் விதி நயந்த வாழ்க்கை என்பதை குறிப்பிடுகிறார்.

    ஆக, தமிழராக இருந்தாலும், தன்னாட்டையும், தம் மக்களையும் காக்க போரிடுவது வீரம். அது ஓர் சிறந்த அரசனின் கடமையும் கூட. பெரும்பாலும் அப்படி இல்லாமலும் வெத்துப் புகழுக்கும், நாட்டை பெரிதாக்கி பெருமைப் பட்டுக் கொள்ளவும் தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.

    இதில் பெரும் கொடுமை தோல்வி யடைந்த நாட்டையும் விளைச்சல் நிலத்தையும் கொளுத்துவது தான்.

    இப்படியாகிப் போன பண்டையத் தமிழனின் வாழ்வு பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திட்டிருக்குமே ஒழிய வேறென்ன.. வேறு பாதிப்புகள் என்ன என்பதை யூகித்தும் கொள்ளலாம்..

    புலவர்களில் வெகு சிலரே இடித்துரைத்து கூறி மன்னர்களின் போக்கை மாற்ற முயன்று இருக்கிறார்கள் என்பதும் உண்மையே என்பதை இலக்கியப் பேராசிரியர்களின் ஆய்வு நூல்களில் காணமுடிகிறது.

    தமிழுக்கு நோய்களானவை.

    சங்கத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்திருந்தாலும்; அவர்களைச் சில நோய் கிருமிகள் தொற்றி இருந்ததை அறியாதும் இருந்தார்கள் என்பதை தமிழ்ப் பயின்ற சான்றோர் அறுதியிட்டு உரைப்பர்.

    அவைகளாவன… பரத்தமை, கள்ளுண் ணுதல், அரசியலில் சகிப்புத் தன்மை இன்மை, அன்புடைமை இன்மை… மனித அன்பு அகங்காரத்தால் மறைந்திருந்தமை என்றும் கூறலாம்.

    இப்படி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒருவனை ஒருவன் வீழ்த்தியதால் என்ன மிஞ்சியது… திருடர்களாய் வந்தக் களப்பிரர்கள்; நாட்டில் புகுந்து கொள்ளை அடித்தார்கள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள், தமிழர் ஒன்று பட்டு எதிர்த்தாலும் அவர்களை அசைக்க முடியாமல் இருந்திருக்கிறது.

    அன்பின் வழியது உயிர்நிலை என்பார் வள்ளுவனார்.  அறிவின் வழியது அதன் உயர்நிலை என்பேன் நான். அதையே, சங்ககாலத் தமிழரின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடும் போது; தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் தனது கம்பன் – புதியபார்வை என்ற நூலில் தெளிவுறு நடையினில் குறிப்பிடுகிறார். அதனின் சாரத்தை நானும் இங்கே குறிப்பிடுகிறேன்.

    ‘மனிதன் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கூட்டால் ஆனவன்; விலங்கிலிருந்து மனிதனை வேறு படுத்துவது அவன் பெற்றுள்ள அறிவே; மனிதப் பண்பு என்று எடுத்துக் கொண்டால் அன்பு, அருள் என்பனவற்றின் மேல்தான் அது நிலைத்து நிற்கின்றது. அதை யாரும் மறுக்க முடியாது.

    அப்படிஎன்றால் அறிவின் பயன் என்ன? அவரே பதிலுரைக்கிறார். அன்பென்பது, தான் என்ற ஒன்றின் அடிப்படையில் பிறந்து, தனது குடும்பம் தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனக்குத் தொடர்புடையவர்கள் என்பவரின் மாட்டு விரிந்து செல்வது. இது அன்பின் இயல்பு. ஆனால், அவ்வாறு செய்கையில் தனக்குத் தொடர்புடையார் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகும் தன்மையைத் தானாக அது தருகிறது.

    ஆனால், அறிவுடன் கலந்த அன்பானால்; அத்தவறுகளை இடித்துக் கூறி அது அன்புடையாரையும் திருத்த முயற்சிக்கும்.

    மெய்ப் பொருள் காண்பதறிவு

    தீது ஒரீஇ நன்றின்பால், உய்ப்பது அறிவு.

    ஆக, இத்தகைய அறிவின் துணையை நாடாது, உணர்வை மட்டுமே கொண்டு ஒரு சமுதாயம் இயங்குமானால் அது முழுவாழ்வாகாது. அது சிறு காற்றிற்கும் தாக்குப் பிடிக்காது என்கிறார்.

    மேலும் கூறுவார், பழந்தமிழ் வாழ்க்கையை எடுத்துக் கூறுவது இந்த இலக்கியங்கள் தாம். எந்த ஒரு இனத்தின் வாழ்வு முறையை அறிய உதவும் கருவி அந்த இனம் படைத்த இலக்கியமே.. இலக்கணம் அறியாதவர்களின் வாழ்வு ஒருபுடை வளர்சியுடையது. அதே போல் இப்பழந் தமிழரின் வாழ்க்கையில் உணர்வு பெற்றிருந்த இடத்தில், ஒரு மிகச் சிறு பங்கைக் கூட அறிவுப் பெற்று இருந்ததா? என்ற கேள்விக்கான சரியான விடையை இன்று கூட கூற முடியவில்லை. இத்துணை சிறந்த நாகரிகம், அந்த நாகரிகத்தின் கொழுந்து போன்ற வெளிப்பாடு தான் அவர்கள் ஆக்கிய இலக்கியம் என்கிறார்.

    முத்தாய்ப்பாய் கூறுகிறார். அக வாழ்க்கையை அணுவணுவாய் ரசித்து ருசித்து இன்புற்று வாழ்ந்தத் தமிழன் இந்த அக, புற வாழ்க்கை இடையே நான் யார் என் உள்ளம் யார்?’ என்ற வினாவை அவன் கேட்டதாகவோ, அவ வினாக்கட்களுக்கு அவன் விடைத் தேட முயன்றதாகவோ அறிய வாய்ப்பில்லை.

    இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார், புல், பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர்களுள் ஒருத் தொடர்பு உண்டு என்று ஒருக் குறிப்பால் உணர்த்தினரே ஒழிய, இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், தன பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ளத் தொடர்புகள் பற்றியும் எந்த வினாவையும் எழுப்பினதாக அதற்கு விடை காண முயன்றதாக அவன் இலக்கியத்தில் இருந்து அறிய முடியவில்லை.

    வடமொழியில் உபநிடதங்கள் தோன்றியக் காலத்தே சங்கப் பாடல்களும் தோன்றி இருக்க வேண்டும் அப்படி இருந்தும் அவற்றின் துணை கொண்டு மட்டும் ஆராயப் படவேண்டிய மேற்கூறிய வினாக்கள் எதையும் இவர்கள் எழுப்பியதாகக் கூறும் எந்த இலக்கியமும் இன்று இல்லை. தத்துவ ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்து, ஏதேனும் நூல்கள் எழுதியிருந்தால் இன்று அவற்றில் ஓன்று கூட கிடைக்கவில்லை.

    வாகைத் திணை

    உணர்ச்சிக்கு அளவுமீறி இடங்கொடுத்து விட்டமையால் அறிவாராய்ச்சிக்கோ, தத்துவ விசாரணைக்கோ வாழ்வில் நேரம் கிடைக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. அன்றியும் தொல்காப்பியப் புறத்திணை இயல் 230 வரிகளில் அமைந்துள்ளது. புலனடக்கம் பற்றியும், துறவுப் பற்றியும், ஆசை நீக்கம் பற்றியும், அருளைப் பெருக்கி கொள்ள வேண்டிய இன்றியமையாமையை பற்றியும் மொத்தமாக நான்கே வரிகள் தாம் உள்ளன என்றால், அற்றைநாள் தமிழர் இவைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும்.

    இவ்வாறு கூறுவதால் புலனடக்கம், அருளுடைமை, துறவு என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த தமிழர்களே அந்நாளில் இல்லையென்று யாரும் நினைத்து விடக் கூடாது சிறிய அளவினரே தலைப் பட்டனர். அது வியப்புக்கு உரியதாக மற்றவர்களுக்குத் தோன்றி போற்றினர். ஆகவே தான், தொல்காப்பியம் இந்த நான்கையும் வாகைத் திணையினுள்  அடக்கிற்று போலும்.

    வாகை என்றால் வெற்றி, புலனடக்கம், தன்னலத்தைத் துறத்தல் என்பவை, தன்னையே வெற்றி கொள்வதாகும்… கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பவைப் பற்றித் தொல்காப்பியம் கூறுவதை அறிந்தாலும், அதன் பொருள் தெரியாததும்.. ஆன்ம விசாரணை இருந்ததா என்பதைப் பற்றி அறிய முடியாது என்று அருமையாக தெளிவுறக் கூறுகிறார்.’

    எனது முந்தையப் பதிவில் வந்த எனதுக் கவிதையின் கருவிற்கு உயிரூட்டிச் செல்கிறார் இந்தப் பெருந்தகை.

    உண்மையிலே சொல்கிறேன், எனதுக் கவிதையை எழுதும் போது;  இந்த கருத்தை நான் படித்திருக்க வில்லை. எனது கவிதை நான் இதுவரை வாசித்த சில நூல்களின் வாயில் பெற்ற அறிவின் மூலமாக எழுந்ததே. வேதாந்த கருத்துக்கள், அனுபூதிகளின் மெய்யுணர்வு விளக்கங்கள் என்று சிலவைகளும், மகாகவி பாரதியின் பாடல்களும் எனக்கு கொடுத்த முடிபே அது. அது சங்கத் தமிழில் காணவில்லை என்பதையும் அறிந்திருந்தேன்.

    திருவாளர் சச்சிதானத்தம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தை வாசித்து எனக்குள் ஒரு சிறு பயம் கலந்த நெருடல் வந்தது… இன்னும் பெரிதும் ஆய்ந்து நோக்காமல்; அறிவினை உபயோகிக்காது உணர்ச்சி வசப் பட்டு எழுதி இருக்கிறேனோ என்று…. சற்று நேரத்தில் அந்த மன வருத்தம் என்னை விட்டு போக இந்த அறிஞர் ஆய்வுக் கருத்துகள் உதவின. எதேச்சையாக வீட்டில் இருந்த அந்த நூலில் இருக்கும் கருத்தைக் கண்டு மன நிம்மதியுற்றேன் அதை உடனே இங்கு பகிர்ந்துக் கொள்வது கடமையென உணர்ந்து எழுதுகிறேன்.

    முதுபெரும் தமிழ்அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நமது நன்றிகள் உரியதாகட்டும்.

    இங்கே மீண்டும் எனது கருத்துகளை ஓரிரு வரிகளில் கூறிக் கொள்கிறேன். ஒருவரிடமே இறைவன் அனைத்தையும் தந்துவிடுவதில்லை என்பது தான் பேருண்மை. மேலைநாட்டாரை விஞ்ஞானத்திற்கும் உலக மதங்கள் எல்லாம் தோன்றுவிக்க கீழைநாட்டாரை மெஞ்ஞானத்திற்கும் படைத்து போன்றும்.

    சற்று ஆழ்ந்து யோசித்தால் ஓர் உண்மை விளங்கும்.

    தமிழ் மொழியில் தமிழர் வாழ்வின் விழுமியப் பொருள்கள் என்பன இகலோகம் என்னும் இந்த புவியும் புவிசார்ந்த இயற்கையோடு வாழும் நெறிமுறைகளை; தமிழன் மாத்திரம் அல்ல மனிதனுக்கே உரியதாக; யாவரும் பின்பற்ற தக்கவாறு உயரியதாகச்  செய்திருப்பதைக் காணலாம்.

    அதைப் போன்று… சமஸ்கிருதம் என்னும் வேதங்கள் பூத்த மொழி, தனிப்பட்ட யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாதது போலும்… பாரத பெருங்கண்ட மக்களாகிய மூதாதையர் தொடங்கி உலகமெல்லாம் பரவி இருக்கும் அனைத்து பாரதக் குழந்தைகளுக்கும் உரிமையானதும்; அதே நேரம் அது மனித குலத்துக்காக இறைவனால் உண்டாக்கப் பட்டது என்பதும் தெளிவு.

    மனித வாழ்வியல் முறையை அறம் பொருள் இன்பம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு  தமிழரின் வாழ்விலக்கணம் உலக மானுடத்திற்கே காப்பியனாரால் தரப் பட்டுள்ளது.

    அதைப் போல அடுத்த படியான நிலையாமையை குறித்தும் வீடுபேறு என்பதை நோக்கியும் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறி நம்மை காப்பியனார் தமிழின் இரட்டைப் பிறவியான வடமொழியினை நோக்கிச் செலுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

    அதைத் தான் சங்க இலக்கியக் காலத்திற்குப் பின்பு வந்த வள்ளுவனாரும்… இளங்கோவும், கம்பனும் நமக்கு தங்களது காப்பியங்களின் வழியே பாதை அமைக்கிறார்கள் என்பது நடுநிலைமையுடன் உணர்ச்சிக்கு மாத்திரம் இடம் தராத அறிவுடையோர் யாவரும் ஏற்பர்.

    அதோடு, அதற்கு பின்பு தோன்றிய  நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று நீளும் வரிசை… இந்த தமிழ் மகான்களின் ஆக்கங்கள் யாவும் தம்ழுக்கு சிறப்பு சேர்த்தாலும்; அதன் உள்ளே இருக்கும் ஒளி , இயக்கம் அது வேதங்கள் கூறும் கருத்துக்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் அது வெறும் விகண்டவாதமேத் தவிர அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து.

    ‘அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்

    பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார்

    இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!’

    இந்த வரிகள் தாம் யான் குறிப்பிடும் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஒளிபெற்ற இறவாப் புகழ் பெற்ற ஆக்கங்களை தமிழுக்கு அளித்தனர். அவர்கள் ஆக்கங்கள் இன்னமும் ஒளிர்கின்றன. அப்படி பார்க்கையில் அவர்கள் ஒளிபெற்று நிரந்தரமானாவர்கள் என்னும் உண்மை நன்கு விளங்கும். இன்னும் சொன்னால் ஒளி பெற்றவர்களாலே இப்படி அழியாப் புகழுடைய காவியங்களைப் படைக்கவும் முடியும்.

    ஆயிரமாண்டுகளாய் ஓங்கி உயர்ந்த தமிழரின் வாழ்வு தடமாறிப் போவதைத் தடுக்கவே தெய்வப் புலவர் அவதரித்தார் எனலாம்…. அதன் பின்னே அடியார் படைகள் அணிவகுத்தனவே… ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியில் திளைத்தாலும் ஒளிபெற்றது இறைவனின் அருளால் என்றாலும், நச்சினார்கினியர் கூறுவது போன்று ‘புலனடக்கத்தோடு கூடிய காட்சி’ என்பதை மறுப்பதற்கில்லை.

    இந்த மகான்கள் எல்லாம் தமிழில் இறவாப் புகழ் உடைய அமரகவிகளை படைத்ததே அந்த ஒளியினில் திளைத்துக் கொண்டிருக்கையிலே தான் என்பதையும் அவைகள் வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது.

    மெஞ்ஞானியாகட்டும், விஞ்ஞானியாகட்டும் இருவரும் தனது மனதின் ஆழ்நிலையில் அகக் கண்ணால் தான் யுகங்களுக்கும் நிலை பெற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

    அப்படிப் பார்க்கையிலே பன்மொழித் திறனாளர், வடமொழியில் பெரும் புலமைக் கொண்ட பேரறிஞர் காப்பியனார் எழுதிய இலக்கணம் ஆதிமுதல் இன்றுவரை அல்ல இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை மாறுதல் என்பதையே காணாத ஒருப் பொக்கிசமாக விளங்கும். அந்த ஒளி  பொருந்திய மகான் மேற்கூறியோருக்கு எல்லாம் மூத்தோரே.

    எட்டயபுரக் குயில் அது என்ன கூவியது.

    பாரதி நாம் ஒவ்வொருவரும் அமர நிலை பெறவேண்டும் அதற்கு முயல வேண்டும், தியானம் பயில வேண்டும் ஒளி பெறவேண்டும்; அதை இந்த உலகிற்கு நாமே சொல்லியும் கொடுக்கவேண்டும்; அப்படி உலகில் உள்ளவர்கள் யாவரும் அமர நிலைப் பெறுவார்களாயின் இந்தக் கொடும் கலி வீழும். என்பது, பாரதி நமக்குச் சொல்லிச் சென்றுள்ளான்….

    இவைகள் எல்லாம் உபநிடதங்கள் வழியே; தமிழ் மொழி பெரிதும் பெற்று இருக்கிறது. அதைத் தமிழர் கைக்கொள்ளவேண்டும் என்பதே தெய்வப் புலவர் தொடங்கியோர் கூறியது. அதைச் செய்வோம்.. அதோடு அந்த உபநிடதங்கள் படைக்கப்பட்ட மொழியும் நமக்கும் சொந்தம் அது நமது தந்தையர் மொழி என்னும் உரிமையையும் உறுதி செய்வோம்.

    சரி, வாழ்வாங்கு வாழவும், வீடுபேறு பெறவும் வழி கூறிச் சென்றத் தமிழனின் தொடர்ச்சியில் மேற்கூறிய அத்தனையையும்; தானும் பயின்று அதையே நமக்கும் பகன்று; இன்னும் இந்த உலகும் வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்; என்பதை எட்டயபுரத் தமிழன் அந்த மகாகவி பாரதி அத்துனை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளான்.

    பாரதியின் புதியதோர் வேண்டுகோள்

    கடைசியாக மகாகவி பாரதி இன்னும் ஒரு புதிய வேண்டுகோளையும் வைக்கிறான்.

    “புத்தம் புதிய கலைகள் – பஞ்ச”

    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

    மெத்த வளருது மேற்கே – அந்த

    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

    இறவாப் புகழுடைய புதுநூல்கள்

    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

    ————————————————-

    சென் றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    அவனது வேண்டுகோளை அனைவரும் ஏற்போம். நம்மால் இயன்றதை இந்த அமரத்தன்மை வாய்ந்த தமிழுக்குச் செய்வோம்.

    தெய்வ நம்பிக்கையும், மறுபிறவிக் கொள்கையும் இருக்குமானால் இது போன்ற மாச்சரியங்கள் வரவேக் கூடாது.

    யார் கண்டார் முற்பிறவியிலே நாம் எதை அந்நிய மொழி என்றும் அந்நிய சமூகம் என்றும்  நினைத்து வெறுப்புறு கிறோமோ, ஒதுக்குகிறோமோ அந்த மொழிக்கும், அந்த சமூகத்திற்கும் அயராது பாடுபட்டு இந்நிலைக்கு நாமும் அதை உயர்த்தியும் இருக்கலாம்.

    இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே நற் 

    குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே

    மனமிருந்தால் மார்க்கமுண்டேமண்ணில் வாழ்வோருக்கே

    மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

     

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

    நன்றி!

    எனது உயர்நிலைப் பள்ளித் தமிழாசான் திருவாளர். கரு. சண்முகம் அவர்கள்.

    எனது மேல்நிலைப் பள்ளி தமிழாசான் திருவாளர். புதுகை கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    பாரதியார் கவிதைகள். (நியூ செஞ்சுரி புக் கவுஸ்)

    தமிழறிஞர். அ .ச. ஞானசம்பந்தன் அவர்கள் (கம்பன்- புதியபார்வை)

    தமிழிலக்கிய முதுகலைப் பாடப் புத்தகம் (அண்ணாமலை பல்கலைக் கழகம்)

    மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். (தொல்காப்பியக் கடல்)

    http://www.projectmadurai.org/pmworks.html

    http://www.google.com

     

    Share
  • அன்னையினருள்

     

    புவனேஷ்வர்

     

    ஸ்ரீ காமாக்ஷி துணை:

    மயங்கிய நிலை:

     

    தீதிது செய்ய நலமிதென் றறியோம்

    மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;

    சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்

    செய்யா தன செய்வோம்;

     

    உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்

    பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே

    செய்யா தனபல செய்துழி வீழ்வோம்

    மெய்யா னதுகா ணோம்.

     

    அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்

    கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்

    உண்டான் உலகம் உலகே ழானான்

    உண்மை யதை யுணரோம்;

     

    உய்த நிலை:

     

    போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை

    பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;

    தாயெனக் கொண்டுவிட் டோம் – பெற்ற

    சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!

     

    உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை

    கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;

    வேறென்ற நிலை களைவா ளொருமாயத்

    திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .

     

     

    படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/09/16/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (3) – பெர்காமோன் அருங்காட்சியகம் பெர்லின், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் : பெர்காமோன் அருங்காட்சியகம்
    நகரம் : பெர்லின்
    நாடு :ஜெர்மனி
    தொடங்கப்பட்ட ஆண்டு :1930
    சிறப்புகள் : தொல்லியல் ஆய்வுகள் – பெர்காமோன் கோயில், இஸ்லாமிய கலைப்பொருட்கள், இஸ்தார் மண்டபக் கதவு, 5000 ஆண்டுகள் பழம் நகரம் ஊருக்.

    பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)

     

    இன்றைய துருக்கியின் மேற்குக் கடற்கரை நகரமான பெர்காமும் (துருக்கிய மொழி) நகர் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான பேகன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்தது. பல ஆண்டுகளின் தொடர்ச்சியான போர், அரசாட்சி மாற்றம், சித்தாந்த மாற்றம், இயற்கை அழிவுகள் இவைகளால் பாதிக்கப்பட்ட இந்த நகரத்தின் எஞ்சிய சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அப்பகுதி மக்களுக்கோ துருக்கியின் அப்போதைய அரசாங்கத்துக்கோ எழவில்லை. உடைந்து சிதைந்து கிடந்த பெருந்தூண்கள், கோயிற்சுவர்கள், சிலைகளைத் தங்கள் சுய தேவைக்காக மேலும் சிதைத்துவிட்டிருந்தனர் அப்பகுதி மக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீறும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்நகர் 19ம் நூற்றாண்டிலோ அடையாளம் தெரியாமல் சுவடிழந்து மறைந்திருந்த நேரம் அது. 1864ம் ஆண்டு இப்பகுதிக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த ஒரு ஜெர்மானிய பொறியியலாளர் கார்ல் ஹூமன் இந்தச் சிதைந்து கிடைந்த நகரின் எச்சங்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார். விலைமதிப்பற்ற இந்தக் கோயில் மண்டபங்களையும் சிற்பங்களையும் கண்டு அவர் இதனை ஏதாகினும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டார்.

    ஜெர்மனியிலும் அன்றைய துருக்கியிலும் முறையான அனுமதி பெற்று இந்நகரின் அகழ்வாராய்ச்சிப் பணியில் இறங்கினார். 1878ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. அவரது முயற்சி வீண் போகவில்லை. அவருக்குக் கிடைத்ததோ விலைமதிக்க முடியாத ஒரு பரிசு. பண்டைய கிரேக்க தெய்வம் ஸியூஸ் (Zeuz) க்காக எழுப்பப்பட்ட கோயில் முழுமையாக இவ்வாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்டது!

    1886 வரை இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. அன்றைய துருக்கி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இக்கோயில் முழுமையாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. உலக அகழ்வாராய்ச்சி வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியாக இது இன்றளவும் திகழ்கின்றது.

    1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.
    1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.

    ஸியூஸ் கடவுளுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் இன்று வரை பழம் நகரான பெர்காமோன் நகரிலேயே இருந்திருந்தால் என்ன நிலைக்கு உள்ளாகியிருக்குமோ எவரும் அறிகிலர். தொல்லியல் ஆராய்ச்சியினாலும் ஒரு தனி மனித முயற்சியாலும் இக்கோயில் முழுமையாகக் காப்பாற்றப்பட்டு இன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பெர்காமோன் அருங்காட்சியகத்தில், உலக மக்கள் அனைவரும் வந்து பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது.

    பெர்காமோன் கோயில் ஜெர்மனிக்குக் கொண்டு வரப்பட்ட சமயம் முதலில் `போட` அருங்காட்சியகத்தில் (Bode Museum) தான் வைக்கப்பட்டது. ஆனால் இந்த அருங்காட்சியகம் இக்கோயிலின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. இதனை மனதிற்கொண்டு புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டியதன் அவசியம் உருவாகியது. அந்தச் சிந்தனையின் அடிப்படையில் தோன்றியதே இன்றிருக்கும் பெர்காமோன் அருங்காட்சியகம். 1910 முதல் 1930 வரை இப்புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்றன.

    முதலாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளையும் சமாளித்து இந்த அருங்காட்சியகப் பணிகள் தொடர்ந்தன. இருபது ஆண்டுகால உழைப்பில் இந்த அருங்காட்சியகம் 1930ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்ககாகத் திறக்கப்பட்டது. 1933ம் ஆண்டு ஹிட்லரின் நாஸி கட்சி வெற்றி பெற்று அடோல்வ் ஹிட்லர் பெர்லினைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் பெர்கமோன் அருங்காட்சியகம் பெர்லினின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பெர்கமோன் அருங்காட்சியகத்தில் உள்ள ஸீயூஸ் கடவுளுக்கான பெர்கமோன் கோயில் கட்டிடத்தின் தூண்களின் வடிவிலே ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்த ஹிட்லர் இதே அமைப்பில் தனது தலைமையகத்தைக் கட்டினார். அந்த மண்டபம் இன்று இல்லை. ஆனால் பெர்காமோன் கோயிலோ இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பெரும் சேதத்தையும் தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு இன்றளவும் பெர்லின் நகரில் அழியாது இருக்கிறது.

    பெர்காமோன் அருங்காட்சியகத்தினுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ் : அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் அருங்காட்சியகத்தினுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ் : அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)

    பெர்கமோன் கோயிலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மட்டுமே இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணி விட வேண்டாம். இங்கே குறிப்பிடத்தக்க ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் பலர் பண்டைய ஈராக், ஈரான், பாபிலோன், ஊருக், அசூர்,ஆகிய இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றுச் சான்றுகள் பல நிறைந்திருக்கின்றன.

    இந்த அருங்காட்சியகத்திற்கு நான் இருமுறை சென்று வந்திருக்கிறேன். 2010ம் ஆண்டில் ஒரு முறையும் இவ்வாண்டில் சில வாரங்களுக்கு முன்னரும் இங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

    பண்டைய பாபிலோனின் இஸ்டார் கதவு (Ishtar Gate), ஊருக் நகரம், சுமேரிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஆகியவை பெர்காமோன் கோயிலைப் போன்றே இந்த அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கும் ஏனைய விலைமதிக்க முடியாத கண்டுபிடிப்புகளாகத் திகழ்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு தனிச்சிறப்புப் பகுதியாக இஸ்லாமிய கலைப்பொருட்களின் நிரந்தரக் கண்காட்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவு ஒன்று தேவை என நான் கருதுவதால் விரிவாக பின்னர் ஒரு பதிவில் எழுத நினைத்திருக்கிறேன். அதே போல பெர்காமோன் கோயிலின் முக்கியத்துவத்தை நினைத்து இதற்காக ஒன்று அல்லது இரண்டு தனிப்பதிவுகளை வழங்க நினைத்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கு முன்னராக இந்த அருங்காட்சியகத்தில் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நான் சென்றிருந்த வேளையில் அங்கு சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடாகியிருந்த 5000 ஆண்டு பழமை வாய்ந்த ஊருக் நகரத்திற்கு உங்களை பெர்காமான் அருங்காட்சியகத்தின் வழியாக அழைத்துச் செல்கிறேன். உடன் வரத் தயார் தானே?

    தொடரும்….!

    சுபா

    Share
  • 2012 – 2013 ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். கடந்த ஓராண்டு காலமாக பல சிறுகதைகள், மிக வித்தியாசமான கதைக் களங்களுடன், தேர்ந்த எழுத்தாளர்களின் சிறப்பான நடையுடன், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற இடைவிடாத முயற்சியில் தன்னை மென்மேலும் பட்டை தீட்டிக்கொண்டு களம் இறங்கியவர்களின் அருமையான படைப்புகள் வாசகர்களாகிய நம் அனைவருக்கும் பெருவிருந்தாக அமைந்தது. ஓராண்டு முடிந்து விட்டது என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மாதா மாதம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில், தம் இடைவிடாத பணிகளுக்கிடையேயும், காலந்தவறாமல் தம் தீர்ப்பை வழங்கி வந்தார் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர்களின் கடமையுணர்ச்சியைப் பார்த்து பல முறை வியந்திருக்கிறேன் நான். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் உயர்திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுவோம். ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. மேலும் தொடர்ந்து சில போட்டிகள் ஐக்கியா தொண்டு நிறுவனம் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    போட்டி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்ற இத்தருணத்தில் இறுதிக்கட்ட திறனாய்வை மேற்கொள்ள பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடன் அவர்கள் மனமுவந்து இசைந்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திற்கும் அற்புதமாக மதிப்புரை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    IMG_7849

    போட்டியில் வெற்றிபெற்ற திரு பழமைபேசி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து நம் வல்லமையுடன் இணைந்திருங்கள் . புதுமையான பல போட்டிகளைச் சந்திக்கக் காத்திருங்கள் நண்பர்களே!

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    நாஞ்சில் நாடன்

    nanjilஆகஸ்ட் 2013-ல் சென்னை கம்பன் விழாவில், பெரியவர் இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கவலை தொனிக்கும் குரலில் குறிப்பிட்டார் – தமிழில் நாவல் வரத்து அருகி, சிறுகதை எழுத்து குறைந்து போய்விட்டது என. எனக்கும் அந்தக் கருத்தே தான். காரணம் கேட்டு வாடி என ஒற்றை வரியில் நாம் தட்டிக் கழித்து விட இயலாது. படைப்பாற்றல் குறைந்து போனதா, எழுத்து ஊக்கம் தளர்ந்து வருகிறதா, வாழ்க்கை பற்றிய பார்வையும், அனுபவமும் இல்லாமல் ஆகிவிட்டதா? முயற்சி இனமையா, மொழி வசப்படவில்லையா, உழைக்கத் தயாரில்லையா, என்ன எழுதி என்ன ஆகப்போகிறது எனும் சலிப்பா, இவை எல்லாமுமேயா, அல்லது இவற்றுக்கும் வெளியேயும் வேறுள காரணங்களா?

    மாய்ந்து, மாய்ந்து எழுதத் தேவையற்று, எளிதான கணினி தட்டச்சு வந்துவிட்டது. முன்னைப்போல வெளியீட்டு சிரமங்கள் இல்லை. தாளிதழ்கள் இல்லை என்றாலும் மின்னிதழ்கள் பல உள. எதிர்காலத்தில் அரசு நூலக ஆணைகளை நம்பி, புத்தகம் எழுதவும், வெளியிடவும் இயலாது. எந்தக் காலத்திலும் அது எழுத்தாளன் கவலையாக இருந்தது இல்லை. அவனைப் பொறுத்தவரை, விற்றாலும் காப்பீடு இல்லை, விற்காவிட்டாலும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வாசகனை , ஒற்றைப் பிரதி விற்பனையை நம்பித்தான் படைப்பாளியும் வெளியீட்டாளர்களும் இயங்க வேண்டியது இருக்கும்.

    பேரம் இல்லாதிருந்த அல்லது சின்ன ஊழலுடன் இருந்த அரசு நூலகத் துறை இன்று நூலகங்களுக்கு புத்தகம் வாங்கினாலும், தமது பை நிறையும் என்று கண்டுகொண்டது. வெளியே உரத்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக விடுதலை என்று பேசுகிறவர்களும், தமது நிறுவனங்களுக்கான ஆணைகள் பெற அனைத்து குறுக்கு வழிகளையும் அரசியல் செல்வாக்கையும் கட்சி அனுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். காரசாரமாகக் கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதுகிறவர்களும் இதனை நோகாமல், கூசாமல் செய்கிறார்கள்.

    அது கிடக்க…….

    ‘இலக்கிய சிந்தனை’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாதம் தோறும், ஆண்டு தோறும் நல்ல சிறுகதைகளைத் தெரிந்து, பரிசளித்து ஊக்கப்படுத்தி வரும் அமைப்பு. அவர்களது நடுவர்களின் தெரிவுகளில், பல சமயம் தீவிர, நவீன படைப்பாளிகளுக்கு விமர்சனம் உண்டு என்றாலும் பணி போற்றுதலுக்கு உரியதுதான். அதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. திரு ப.இலட்சுமணன் அவர்களுடைய கவலை மெய்யானது.

    குறிப்பிட்டுச் சொல்லும்படியான தமிழ்ச் சிறுகதையாளர்கள் பலரும் இன்று நாற்பது அகவை கடந்தவர்கள். இளம் படைப்பாளிகள் என்று முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் சிலரை மட்டுமே நம்மால் குறிப்பிட முடிகிறது. சாகித்ய அகாதமிக்கு வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் கிடைப்பார்கள். அவர்கள் தர மதிப்பீடு இலக்கியம் மட்டுமே அல்ல. ஈழத்துப் படைப்பாளிகள் பலர் இன்னும் தீவிரத்துடன் இயங்கி வருகிறார்கள். அவர்களது அனுபவக் களம் இணைய தளத்தில் புகைப்பட திரைப்படக் காட்சிகளில், புத்தகங்களில் வாசித்த அனுபவங்கள் அல்ல. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின், அகதி வாழ்க்கையின் சொந்த வலிகள். சமீபத்தில் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்று இளங்கோ எனும் ஈழத்தமிழ் இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வாசித்தபோது எனக்கது மீண்டும் உறுதியானது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு.

    ‘உயிர் எழுத்து’ போன்ற சில இதழ்கள் தவிர்த்து, மற்றெவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஒரு இதழில் வெளியிடுவதில்லை. அவற்றுள்ளும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கே பொட்டுக் கட்டிக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், இணையதள இதழ்களில் நடக்கும் சிறுகதை முயற்சிகள் உற்சாகமூட்டுகின்றன.

    ‘ஐக்கியா & வல்லமை.காம்’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த 2012 ஆகஸ்ட் முதல் 2013 ஜூலை வரையில் எழுதப்பட்ட, எட்டு எழுத்தாளர்களின் பதினேழு சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை அனைத்தும் மதிப்புறு திறனாய்வாளர், திரு. வெங்கட் சாமிநாதன் தெரிவு செய்தவை. எனக்குக் கிடைத்த நம்பிக்கை, தமிழ்ச் சிறுகதை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்பது.

    கவனமாக வாசிக்கும்போது, கதை கூறலின் பாணி சுதந்திரம் பெற்று காணப்படுகிறது என்பதும், வழக்கமான கதை கூறல் உத்தியில் இருந்து வெகுவாக விலகி, கதைகள் யோசிக்கவும் எழுதவும்படுகின்றன என்பதும் ஆறுதலான விடயங்கள். வெ.சா. தெரிவு செய்தபின் மறுபடியும் அவற்றில் என்ன தெரிவு செய்வது என்று எனக்குத் தோன்றியது. எல்லாக் கதைகளுமே பண்பட்ட எழுத்து. காலம் அவர்களுக்கான கவனிப்பையும் இடத்தையும் பெற்றுத் தரும். மேலும் இந்த எட்டு படைப்பாளிகளுமே எனக்கு முற்றிலும் புது முகங்கள்.

    பழமைபேசியின், ‘செவ்வந்தி’, பார்வதி இராமச்சந்திரனின், ‘நம்மில் ஒருவர்’, ஜெயஸ்ரீ சங்கரனின், ‘நாலடிக் கோபுரங்கள்’ எனும் கதைகள் நல்ல கதைகள் என்றபோதும், வாசகன் பழகிய தடத்திலேயே பயணம் செய்கின்றன. சுதாகரின், ‘காட்சிப் பிழை’ வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. அரவிந்த் சச்சிதானந்தத்தின், ‘கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்’ நல்ல முயற்சி. ஆனால் சற்று கூர்மையும், தீவிரமும் குவியப் பெற்றிருக்கலாம். தேமொழியின், ‘ஜினா என்றொரு க்ருயல்லா’ சுறுசுறுப்பான வாசிப்பைத் தருகிறது. ஆங்கில வாசிப்புப் பழக்கம் உடையவருக்குப் புதுமை தராதது.

    மணி ராமலிங்கத்தின் ‘நோ- பால்’ படைப்பு நேர்த்தியும், தேர்ச்சியும் கொண்ட எழுத்து. மாதவன் இளங்கோவின், ‘அம்மாவின் தேன்குழல்’ நல்ல கதை. தாய் மனத்தின் ஆழமன நீரோட்டம். பேசுவது மற்றொரு சிறந்த கதை. பழமைபேசியின், ‘மணவாளன்’ இந்தக் கதையின் பிற்பகுதி, கவிதையின் ஆழம் கொண்டது. வரலாற்றில் கவித்துவம் உடைய சிறுகதைகளே நின்று வாழ்கின்றன.

    எனக்குத் தரப்பட்ட இந்தப் பதினேழு கதைகளில், சிறந்த மூன்று என வரிசைப்படுத்தச் சொன்னால்,

    1.மணவாளன் – பழமைபேசி
    2. நோ-பால் – மணி ராமலிங்கம்
    3. அம்மாவின் தேன்குழல் – மாதவன் இளங்கோ

    என்பதாக இருக்கும் அது. என்னை ஒத்த இன்னொருவர் இந்த வரிசையை மாற்றவும் கூடும். அது அவ்வளவு முக்கியம் இல்லை. தமிழில் நல்ல சிறுகதைகள் இன்னும் எழுதப்படுகின்றன எனும் மகிழ்ச்சியே போதுமானது.
    ஏனெனில் முதல், இரண்டு, மூன்று எனும் வரிசை வெறும் சடங்குதான். ஓட்டப் பந்தயம் என்று எடுத்துக் கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாளில், அந்த மைதானத்தில், அந்தக் கணத்தில், அந்தத் தட்ப வெப்பத்தில் அவர் முதலாவதாக வந்தார் என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.

    எட்டுச் சிறுகதை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஐக்கியா & வல்லமை.காம் நிறுவனங்களுக்கும் எனது நன்றியும், பாராட்டும். இத்தொகுப்பில் கண்ட எட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் தனித்தனித் தொகுப்புகளுக்காகக் காத்திருப்போம்.

    மிக்க அன்புடன்

    நாஞ்சில் நாடன்

    கோவை – 641028

     30 – ஆகஸ்ட் – 2013

    Share
  • என்று கதவு திறக்கும்?

     

    என்று கதவு திறக்கும்?

    (சொடுக்கினால் செவிக்கும் விருந்து!)

     

    ஆர்.எஸ்.மணி

     

    Loves to create- The Record 1998-

     

     

    ஏன் இன்னும் இந்தக் கதவு திறக்கவில்லை?

    என் பயணம்தான் இன்று முடிந்துவிட்டதே!

     

    அன்று குழந்தையாய்த் தவழ்ந்தேன்

    இன்று கிழவனாய் நிற்கின்றேன்

     

    நடந்து வந்த பாதையிலேதான்

    எத்தனை எத்தனைத் திருப்பங்கள்!

    கண்டு ரசித்த காட்சிகளில்

    எத்தனை வண்ண ஜாலங்கள்!

     

    வாழ்க்கையெனும் தோட்டத்தில்

    சேர்த்து வைத்த செல்வத்தில்

    நானே பறித்த பூக்களுண்டு – பிறர்

    தானாய் கொடுத்த மலருமுண்டு

     

    கணக்கிலடங்கா பூக்களெல்லாம்

    வாடி கீழே விழுந்தபின்னே

    மிஞ்சி இன்னும் இருப்பதோ

    என் ஆசைத்தீயின் ஆறாத காயங்கள்

     

    இன்னும் ஏன் இந்தக் கதவு திறக்கவில்லை?

    என் பயணம்தான் அன்றே முடிந்துவிட்டதே!

     

    நான் சேர்த்த சொத்தையெல்லாம்

    என் தோளில் சுமந்து வந்தேன்

    ஒரு பையிலே கனத்திடும் பாவம்

    இன்னொன்றில் புண்ணிய பூஜ்ஜியம்

     

    எவ்வளவு நீரை நான் குடித்தபோதும்

    எந்தன் தாகம் தணியவேயில்லை

    உடம்பு எல்லாம் தேய்ந்த பின்னும்

    உள்ளம் ஏனோ ஓயவேயில்லை

     

    உறவு என்று சொல்லிக் கொள்ள

    ஒருவரும் இங்கே காணவில்லை

    என்னைச் சுற்றி வருவதெல்லாம் – என்

    சென்றகால நினைவுப் பேய்கள்!

     

    இன்னுமா இந்தக் கதவு திறக்கவில்லை?

    என் பயணம்தான் என்றோ முடிந்துவிட்டதே!

     

    —ஆர்.எஸ்.மணி

    (கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

    இந்தப் பாடலைக் கேட்டு மகிழ, இங்கே சொடுக்குங்கள்:

    Share
  • ஈசனுடுக்கை எழுப்பிய ஒளியில் உயர்ந்தது எதுவோ!

     

    கோ. ஆலாசியம்  

    Alasiam G Photo

    (பெற்றோர் இட்ட பெயர்: ஹாலாஸ்ய சுந்தரம்)

    நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறேன்.

    கப்பல் கட்டும் துறையில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியளாராக பணி புரிந்து வருகிறேன்.

    மகாகவி பாரதியின் மீது தீவிர பற்று கொண்ட நான் தமிழை தொடர்ந்து படித்து வருகிறேன்…

    பேரறிவாளர்களும், தமிழறிஞர்களும் வந்து குழுமி தாம் கற்று ஆய்ந்து புரிந்து உணர்ந்த நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த வல்லமையில் எனது இந்தக் கவிதையையும் பதிவு செய்கிறேன்.

    எனது வலைப்பூ: http://tamizhvirumbi.blogspot.sg/

     

     

     

    Sri Natarajar

    ஒட்டிப் பிறந்த யிரட்டயரின் பொருட்டு

    முட்டி மோதிக் கொள்வதோ -ஈசனுடுக்கை

    தட்டிப் பிறந்த இருவரின் பெயரால்

    கட்டிப்பிடித்து ருண்டடித்துக் கொள்வதோ

     

    பாரினி லுயரிய பாரதத்தைப் படைகொண்டு

    பிரித்தாளெண்ணிய ஆங்கிலேயன் காலத்தில் -கால்டுவெல்

    கூறிய ஆரியத் திராவிட கட்டுக் கதைகளை

    கூரியப்புத்தி யிலாய்ந்துப் பொய்யென்றுரைப்பர்

     

    திராவிடனென்றும் திராவிட மொழிகளென்றும் பொய்

    பரப்பிய அம்மதப்போதகர் மேலுமு ரைப்பார்

    பரந்ததுலகில் திராவிடனென்பான் துரானிய வம்சமென்றெவன்

    கறந்ததிவ்விசத்தை பருகியதால் கசந்தோமே

     

    மலர்மன்னன் கூர்ந்து ஆய்ந்துத் தேர்ந்தோர்ந்து

    விளம்பியப் புதுநூலதை வாசித்திடினில் -சங்கரன்

    விளக்கிய திராவிடனவன் தென்னாட்டானென யாவரும்

    விளங்கிடுவது தீர்க்கமென அறிவோமே!

     

    ஒருத்தாயின் முலைகளில் சுரக்கும் அமுதில்

    ஒருபுறம் சுரப்பதுயர்வென்றும் மறுபுறம் மாசென்றும்

    குறுகிய நோக்கினால் குறிப்பதுப்பொருந்துமோ – அழகின்

    முருகுத்தமிழும் வேதமொழியும் இரட்டையரே!

     

    சங்கம் வளர்த்த சான்றோரும் அதில்

    அங்கம் வகித்த ஆன்றோரும் ஒரு

    பங்கமில்லாத் தமிழோடு வடமொழியும் கற்றாரே

    அங்ஙனம்கற்காத் தமிழறிஞர் யாருளரோ

     

    வேதம்பாடிய விண்ணவர் மொழியினை உயர்பாரதம்தந்த

    பகவத்கீதையை படித்துணர்ந்து தம்படைப்பில் புகுத்திடாத

    தமிழ்காப்பியக் கவியேதும்கண்டவரைக் காண்கிலேன் அவைதாம்

    தந்தையர் மொழியென்றுரைப்பதில் தயங்கிளேன்

     

    தமிழ்வேதம் பாடியவள்ளுவனும் தன்னிகரில்லாத் -தண்

    டமிழ்க் கவிபாடியக் கம்பனும் -உயர்முத்

    தமிழால் கற்பின் கனலியையுல கோரேத்தக்காவியம் 

    அமிழ்ந்த இளங்கோவும் நமக்குரைத்ததுவே!

     

    பிரிவினைப் பேசுவதொன்றும் அறிவினில் உயர்வாகா

    அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்

    பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார் 

    இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!

     

    அறிவெங்குக் கிடைக்கினும் தவம்கொண்டுப் பருகுவது

    அறிவுடையார்ச் செய்யும் செயலே -அன்றி

    பிரிவு பற்பலப் பேசியதனை மறுப்பது

    அறிவாளி களுக்கே அதி லழகே!

     

    இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே – நற்  

    குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே

    ‘மனமிருந்தால் மார்க்கமுண்டே’ மண்ணில் வாழ்வோருக்கே

     

    மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

     

    இது ஒரு சாமான்யனின் தமிழ் கவிதை! அது  தரும் கருத்துகள் இந்த மன்றத்திலே இருக்கும் தமிழ்ச் சான்றோர்கள் ஏற்பார்கள் என்பதே எனது நம்பிக்கை. உலகில் உள்ளத் தொன்மையான மொழிகளில் முழுமை பெற்ற இரு செம்மொழிகளுக்கும் எனக்கும் தொடர்பிருக்கிறது என்பது எனது பெருமை. அதே வேளையில் கருவிகளை ஆய்வதைவிட அது கொய்து தந்த கனியை சுவைப்பதிலே தான் உண்மையான இன்பமும் இருக்கிறது என்பதே எனது முடிவும்.

    மிக்க நன்றியும் அன்புகலந்த வணக்கங்களும் உரியதாகட்டும்.

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 24

     

    குன்றக்குடி அடிகள்

    24.  அழுக்காறு தீண்டா உள்ளம் பெறுக!

    மனிதன் வெற்றி பெறுவது குணநலன்களினாலேயாம். குணநலன்களுடன் ஊக்கமும், திறனும் அமையின் மேலும் புகழ்மிக்க வாழ்க்கை கிடைக்கும். தீய குணங்கள் தாமே விலகா. நற்குணங்களைப் பயில்வதன் மூலமே தீய குணங்கள் அகலும். நற்குணங்கள் வளர்க்கப் பெறுவன. தீய குணங்கள் தானே வளர்வன. மனத்தைக் கெடுக்கும் தீய குணங்களுள் தலையாயது அழுக்காறு. அதாவது மற்றவர் பெறும் பெருஞ் சிறப்புகளைக் கண்டு மகிழ இயலாத உள்ளம் பெறுதல்; மற்றவர் பெறும் பேறுகளைப் பாராட்டும் உணர்வின்மை; மற்றவர் பெற்றுள்ள பெருஞ்சிறப்புகளை அங்கீகரிக்க மனம் இல்லாமல் குற்றங்குறைகளைக் கூறுதல். இவையெல்லாம் அழுக்காற்றின் இயல்புகள். அழுக்காறுடையான், தான் ஒன்றைப்பெற முயல மாட்டான். மற்றவர்கள் பெற்றிருப்பவைகளுக்குக் களங்கம் கற்பிக்கவே முயற்சி செய்வான். அதனால், தான் நலம் பெறும் முயற்சிகளில் அவனுடைய மனம் தலைப்படாது. கல்வி போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம் என்று சிலர் அறியாமல் கூறுவார். இது தவறு. ஒரு பொழுதும் அழுக்காறுடையார் நன் முயற்சியில் ஈடுபடார்; நன்னெறியில் நிற்க ஒருப்படார். அழுக்காற்றினைப் “பாவி” என்று கூறியது திருக்குறள்.

    அழுக்காறு என்ற தீயகுணம் நம்மைத் தீண்டாமல் இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் பெற்றுள்ள தனித்திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங் குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும்.  இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.

    அழுக்காறு – பொறாமைக் குணம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை.  ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுகாற்றுக் குணமுடையவர்கள் ஒருபொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக் குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியோடு தொடர்புடையதல்ல. அழுக்காறுடையாரிடம் உள்ள செல்வம், களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக! அது போலவே அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறைபிறழ்வுகள் உள்ளன! தேர்ந்து தெளிதலே முறை!

    அறிவில் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள்!

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (2) – பெர்லின், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஜெர்மனியில் எனது கடந்த 14 ஆண்டு கால வாசத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். நான் வாழ்கின்ற பாடன் உட்டென்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரிலேயே குறிப்பிடத்தக்க உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளன.

    ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வருடத்திற்கு இருமுறை, அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தின் இறுதியிலும் இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் Lange Nacht der Museen அதாவது “நீண்ட இரவில் அருங்காட்சியகங்கள்” என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு அந்த நகரில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களையும் சென்று பார்த்து வரக் கூடிய வாய்ப்பினை நகராண்மைக் கழகம் பொது மக்களுக்காக வழங்குகிறது. இந்த அருங்காட்சியக பார்வைக்காக பேருந்துகளைத் தயார் செய்து பொது மக்கள் ஒரு அருங்காட்சியகத்திலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதியில் அன்றைய தினத்தில் அமைந்திருக்கும். மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு மூன்று மணி வரை பொதுவாக அருங்காட்சியகங்கள் இத்தினத்தில் திறக்கப்பட்டிருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது நான் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இணையத்திலேயே முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்து பெற்றுக் கொண்டு அன்று இலவசமாக இரயிலில் பயணித்து நகருக்குச் சென்று அங்குள்ள பேருந்துகளில் ஒவ்வொரு அருங்காட்சியகமாகச் சென்று அறிமுகம் பெற்று கண்காட்சிகளையும் கண்டு பயன்பெற முடியும்.

    ஜெர்மனியைப் பொறுத்த வரை பெரிய நகரங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன என்று சொல்லி விட முடியாது. சிறு கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கூட அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக தென் பகுதி கருங்காடு என அழைக்கப்படும் Black Forest பகுதியிலும் ஆங்காங்கே மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சில அருங்காட்சியகங்களைக் காணலாம். இப்படி மூலைக்கு மூலை அருங்காட்சியகங்கள் நிறைந்திருப்பது, பெரிதோ, சிறிதோ அந்த நகரத்தை, அக்குறிப்பிட்ட பூகோளப்பகுதியைப் பற்றிய சில தகவல்களை வருகைத் தருவோருக்கு வழங்கவே செய்கின்றன.

    ஜெர்மனியில் பல அருங்காட்சியகங்கள் உள்ள போதிலும் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரின் அருங்காட்சியகங்களிலிருந்து தொடங்குவது ஆர்வமளிப்பதாக உள்ளமையால் பெர்லின் நகரின் அருங்காட்சியகங்கள் பற்றி முதலில் காண்போமே!

    அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி - போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது. (ஆகஸ்ட் 2013)
    அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி – போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது. (ஆகஸ்ட் 2013)

    344.3 sq miles அளவு கொண்ட பெர்லின் நகரத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் ஒரு விஷயம் தானே. இணையத்தில் கிடைக்கும் ஒரு வலைப்பக்கத்தில் உள்ள குறிப்பின் அடிப்படையில் இங்குள்ள அருங்காட்சியகங்களின் பட்டியலைத் தருகிறேன். காண்க!.

    Alte Nationalgalerie
    Altes Museum
    Antikensammlung Berlin
    Bode Museum
    Neues Museum
    Egyptian Museum of Berlin
    Pergamon Museum
    Antikensammlung Berlin
    Anne Frank Zentrum
    Brecht House
    Bunker
    DDR Museum
    Deutsche Guggenheim
    Deutsches Historisches Museum
    Ephraim-Palais
    Knoblauchhaus
    Märkisches Museum
    Museum für Naturkunde
    Friedrichswerder Church
    galerie son, contemporary art gallery with a focus on German and Korean artists
    The Kennedys (museum)
    Hamburger Bahnhof: Museum of the Present, with exhibits of contemporary art
    Bauhaus Archive
    Kulturforum
    Berlin Musical Instrument Museum
    Gemäldegalerie, Berlin
    Kunstgewerbemuseum Berlin
    Kupferstichkabinett Berlin
    Neue Nationalgalerie
    Filmmuseum Berlin
    Memorial to the German Resistance
    Sugar Museum
    Computerspielemuseum Berlin (Computer Games Museum)
    East Side Gallery
    Berlinische Galerie
    Checkpoint Charlie Museum
    German Museum of Technology
    Jewish Museum Berlin
    Martin Gropius Bau
    Schwules Museum
    Topography of Terror
    Beate Uhse Erotic Museum
    Berggruen Museum (“Picasso and his Time”)
    Bröhan Museum
    Charlottenburg Palace
    Käthe Kollwitz Museum
    Museum of Photography
    Museum of Pre- and Early History
    Scharf-Gerstenberg Collection
    Allied Museum
    Botanical Garden and Botanical Museum
    Brücke Museum
    Ethnological Museum of Berlin
    Museum of Asian Art
    Museum Europäischer Kulturen
    Köpenick Palace
    Kunstgewerbemuseum Berlin
    Berlin-Hohenschönhausen Memorial
    Stasi Museum
    Liebermann Villa
    Schloss Britz
    நன்றி: http://en.wikipedia.org/wiki/List_of_museums_and_galleries_in_Berlin
    குறிப்பு: மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள பெயர்கள் டோய்ச் மொழியிலும் ஆங்கில மொழியிலும் என் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஒவ்வொரு அருங்காட்சியகமாக சென்று வருவது என்பது சற்றே கடினம் என்பதோடு அதற்காகத் தேவைப்படும் நேரத்தையும் ஒதுக்க வேண்டிவரும். ஆனால் நமது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ற வகையில் அருங்காட்சியகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குச் சென்று வருவது அருங்காட்சியக ஆர்வலர்களுக்குப் பயன்தரும்.

    பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).
    பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).

    பெர்லின் நகரைப் பொருத்தவரை இது நூற்றாண்டுகளின் சிறப்புகளைக் கொண்ட ஒரு நகரம். கடந்த நூற்றாண்டில்நிகழ்ந்த நாஸி அரசியல் படுகொலைகள், அரசியல் விஷயங்கள் இப்பட்டியலில் உள்ள சில அருங்காட்சியகங்களுக்கு மைய அம்சங்களாகத் திகழ்கின்றன. ஒரு சில குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் பெர்லின், ஜெர்மனி என்ற எல்லையைக் கடந்து உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நமக்கு காட்சிக்கு வழங்கும் கருவூலங்களாக இருக்கின்றன.

    ஜெர்மானிய கடல் ஆய்வுத்துறையினர் அட்லாண்டிக் சமுத்திரத்திலும், பஸிபிக் சமுத்திரத்திரத்திலும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட அறிய பொருட்கள் சில அருங்காட்சியகங்களைப் பெருமை செய்கின்றன. தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்க கண்டங்களிலும், வட ஆசிய கண்டத்திலும் செலவிட்ட பல தொல்லியல் ஆய்வுத்துறையினரின் அறிய கண்டுபிடிப்புக்கள் பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் இருந்து பெர்லின் மட்டுமல்லாது உலக நாகரிக வளர்ச்சியை மக்களுக்கு விளக்கும் நற்றொண்டை ஆற்றுகின்றன. தொழில்நுட்பத்துறையினரின் ஆய்வுகள் கணினி, மருத்துவம் போன்ற துறைகளில் தங்கள் வாழ் நாளையே அர்ப்பணித்த மேதைகளின் ஆய்வுகள் பல பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் நிறைந்திருக்கின்றன.

    ஜெர்மானிய தத்துவ மேதைகள் உலக தத்துவ சிந்தனை வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஆய்வுக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். இத்தத்துவ மேதைகளின் நூல்களையும் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்குவனவாக பெர்லினில் உள்ள சில அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. வாகனங்கள், தாவரங்கள், காடுகள், கடல் உயிரினங்கள ஆய்வு பற்றிய தகவல் நிறைந்த அருங்காட்சியகங்கள் உள்ளன. அத்தோடு நின்றுவிடவில்லை. ஜெர்மனிக்கே பிரபலமான Curry Würst (கரி உர்ஸ்ட்) எனச் சொல்லப்படும் உணவு வகையை விளக்கும் அருங்காட்சியகம், கட்டிடங்களைப் பற்றி விளக்கும் கட்டுமான அருங்காட்சியகம், கணினி விளையாட்டு பற்றிய வரலாறு கூறும் அருங்காட்சியகம் என்று விரிவான பல துறைகளை அடிப்படை அம்சமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள் பெர்லினில் உள்ளன.

    பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).
    பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).

    இதில் முதலில் பெர்லின் நகரின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாகவும், பெர்லினுக்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு அளிக்கப்படும் கையேட்டில் அருங்காட்சியகங்களின் பட்டியலில் முதலிடம் பெற்று நிற்கும் பெர்காமோன் அருங்காட்சியகத்திற்கு (Pergamon Museum) உங்களை முதலில் அழைத்துச் செல்கிறேன்.

    தொடரும்…

    Share
  • சின்ன சின்ன மாநிலங்கள் : தீர்வா? சிக்கலா?

    சு.பொ.அகத்தியலிங்கம்

    News_41557குட்டி குட்டி மாநிலங்களாக இருப்பின் உள்ளங் கைக்குள் பொத்திபொத்தி வளர்ப்பது போல் சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என் றொரு வாதம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. மாநிலங்களை துண்டு துக்காணியாகப் பிரித்துக் கொண்டே போனால் வெங்காயத்தை உரித்த கதையாக மாறிவிடாதோ என ஆழ்ந்த கவலை இன்னொரு பக்கம் வீரியமாக வெளிப்படுத்தப்படுகிறது. முன்னதின் நம்பிக்கையும் பின்னதின் கவலையும் புறங்கையால் தள்ளி விடக் கூடியதல்ல. ஒரு அர்த்தமுள்ள விவாதம் தேவைப்படுகிறது.

    “இந்திய துணைக் கண்டம் அரசியல் ரீதியில் 56 தேசங்களாக இருந்த காலமும் உண்டு. ஏன்? பிரிட்டிஷ் பார்லிமெண்ட் இந்தி யாவை ஆளும் பொறுப்பை ஏற்ற போதுகூட பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வெளியே 600 சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சுதந்திர ராஜ்யங்களுக்குத்தான் சமஸ்தான இந்தியா என்ற பொதுப்பெயரைத் தந்தது” என்கிறார் ம.பொ.சிவஞானம்.இந்த நேரத்தில் இன்னொன்றை நினைவு படுத்துவதில் தப்பில்லை. காந்திக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதம் ஒன்றில் – பிரிட் டிஸார் இந்தியாவை அடிமைப் படுத்திவிட்ட தாகக் கூறாதீர்கள்; நீங்கள் அடிமைப்பட்டீர்க ளென்று முதலில் ஒப்புக்கொள்ளுங்கள் என்றா ராம். முப்பது லட்சம் மக்களை வெறுமே 30 ஆயிரம்பேர் 3000 கி.மீ தொலைவிலிருந்து வந்து அடிமைப்படுத்தியது எப்படி? நீங்கள் பிளவுண்டு கிடந்தீர்கள், சண்டையிட்டுக் கொண்டு கிடந்தீர்கள், அதனால் அவன் அடிமைகொள்வது சுலபமானது என விளக் கினாராம்.

    மீண்டும் அதே சூழலை உருவாக்கி அந்நிய ஏகாதிபத்தியத்தை – நம் நாட்டு கனிம வளங்களை கபளீகரம் செய்ய மலைப்பாம்பாய் வாய்பிளந்து நிற்போர்களை வெற்றிலை பாக்குவைத்து அழைக்கப் போகிறோமா ?இந்தியா விடுதலை அடைந்த போது பிரிட்டிஸார் தங்கள் அடக்குமுறைக்குத் தோதாக அமைத்திருந்த மாநிலங்களும் சமஸ் தான ஆளுகையிலிருந்த பிரதேசங்கள் என அறிவியல்பூர்வ அடிப்படையின்றி மாநிலங் கள் பிரிக்கப்பட்டு குழம்பிக்கிடந்தன. ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச்சந்தை, பொது கலாச்சார அமைப்பு போன்ற காரணங்களைவிட மொழி தான் மிகமுக்கிய காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார்.

    அதுதான் அறிவியல் அணுகுமுறையாகவும் இருக்க முடியும். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்களும் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழிபேசும் மக்கள் குறித்து ஆய்வு செய்தார். 1942 ல் ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு “ஒன் றே கால்கோடி மலையா ளிகள்” என்பதாகும். அன்றைய மக்கள் தொகை அவ்வளவுதான் இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் தோழர் “பி.சுந் தரய்யா விசாலாந் திரா” என்ற ஆய்வுகட்டுரை யை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன் றிணைப்பதற்கான அடிப்படை யாக விளங் கியது. அதே காலகட்டத்தில் தோழர் பவானி சென் வங்க மொழி பேசும் மக்களைத் திரட்ட “புதிய வங்கம்” என்ற நூலை எழுதினார்.

    செழிப்பான நாஞ்சில் நாடும் குமரி மாவட் டமும் செங்கோட்டையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் அடக்கப்பட் டிருந்தன. அவையும் புதுக்கோட்டை சமஸ்தா னமும் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்று “ஐக்கிய தமிழகம்” என்ற நூலை ப.ஜீவானந்தம் எழுதினார்.விடுதலைக்குப் பிறகு மொழிவழி உணர்வு வலுப்பெற்றது. விசால ஆந்திரா கோரி 1953 ஆம் ஆண்டு பிரபல தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்து 58 – வது நாளில் உயிர் துறந்தார். ஆந்திரா பற்றி எரிந்தது. துப்பாக்கிச் சூட்டில் 7 வயது பள்ளிச் சிறுமி உட்பட மூவர் பலியானார்கள். நேரு அரசு இறங்கிவந்தது. ஆந்திர மாநிலம் அமைக்கப் பட்டது. கூடவே மாநில புனரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. 1956 ல் மொழிவழி மாநிலங் கள் உருவாயின. அது காலத்தின் தேவை.இப்போது காங்கிரஸ் கட்சி குறுகிய கணக் குப் போட்டு தெலுங்கானா, சீமந்தரா ஆந்திரா என பிரித்திட முடிவெடுத்து அறிவித்துவிட் டது.

    அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும். ம .பி .இரண்டாக, மேற்கு வங்கத்தை இரண்டாக, அசாமை ஜம்மு-காஷ்மீரை மூன்றாக பிரிக்கவேண் டும். கோலார் மாவட்டத்தை மாநிலமாக்க வேண்டும் ஐதராபாத் – கர்நாடக மாநிலம் கொங்கு சோழன், பாண்டியன், பல்லவன் மாநி லங்கள் இப்படி கரையான் புற்றைக் கலைத் ததும் அது வேகமாய் எங்கும் பரவுகிறது. சிறிய மாநிலங்கள் கேட்பது ஏன் ? யார் ? இக்கேள்வி முக்கியமானது. ஏன் என்பதற்கு பல காரணங்களை முன்வைத்தாலும்; 1. பின் தங்கிய நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி காணவும் 2. நிர்வாகத் திறமை மேம்படவும், 3. வட்டாரப் பண்பாட்டை பாதுகாக்கவும், 4. வட் டார அல்லது உள்ளூர் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கிடைக்கவும் – சிறிய மாநிலங்கள் தேவை என வாதிடப் படுகிறது. இது சரியா? ஒவ்வொன்றாய் அலசுவோம். மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம், பிரதேசத்துக்கு பிரதேசம் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மையே.

    இதன் அடிப்படைக் காரணம் மாநில, மாவட்ட விஸ்தீரணமோ, சிறிதா பெரிதா என்ப தோ அல்ல. மாறாக மத்திய அரசு கடைப் பிடித்துவரும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அது சார்ந்த அரசியல் பாரபட் சமுமே காரணமாகும். உலகமயமும் தாராள மயமும் இந்த ஏற்றத்தாழ்வை குறைக்கவில் லை, தீவிரப்படுத்தியிருக்கிறது.அசாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், திரிபுரா என்கிற ஏழுசகோதரிகள் என்றழைக்கப்படு கிற வடகிழக்கு மாநிலங்கள் அளவிலும் மக்கள் தொகையிலும் சிறியவையே. ஆயினும் அங்கெல்லாம் வளர்ச்சி இல்லவே இல்லை யே. நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறதே ! அங்கெல்லாம் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் தோன்றி ஏழு மாநிலங்களையும் இணைத்து தனி நாடு வேண்டும் என்றே கோரிக்கை தொடர்ந்து ஒலிக்கிறதே !

    ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் திறமையான நிர்வாகத்தின் பொருட்டு என்று சொல்லித்தானே தனி மாநிலங்களாக்கப் பட்டன. பின்தங்கிய நிலைமையும் வளர்ச்சி இன்மையும் தானே அங்கே நக்சலிசத்தின் பிடியை இறுக்கி இருக்கிறது. கனிம வளங் களை கொள்ளை அடிக்க உள்நாட்டு, வெளி நாட்டு சுரங்க முதலைகளும் உள்ளூர் அரசி யல் தலைமையும் கூட்டணி அமைத்து செயல்படுகிறதே! ஊழல் முறைகேட்டில் முன்னிலை வகிக்கிறது, அன்னியில் கண்ட மாற்றம் என்ன? சுரங்கப் பணக்காரர் கொஞ்சம் பெருகியதால் சராசரி தனிநபர் வருமானம் உயர்ந்ததாக புள்ளிவிவர மாயாஜாலம் நிகழ் கிறதே ஒழிய பெரும்பான்மை மக்கள் வறுமை யிலிருந்து அறியாமையிலிருந்து, விடுபடவே இல்லையே!

    வட்டாரப் பண்பாட்டைக் காத்திட சிறிய மாநிலங்கள் தேவை என்பதும் அர்த்தமற்றது . உலகமயப் பண்பாடு ஆக்டோபஸ் போல எல் லோரையும் விழுங்கி ஜீரணித்துக் கொண்டி ருக்கும் போது துண்டுதுக்காணியாக உடைந்து நின்று எந்தப் பண்பாட்டைப் பாதுகாக்கப் போகிறோம்?யார் யார் இக்கோரிக்கைகளை ஆதரிக் கிறார்களெனப் பார்ப்பதும் அவசியம். முதலா வதாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் – ஏற்கெ னவே மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ் சமாக அரித்து தின்று எதேச்சதிகார பசியோடு அலைகிறது.

    சின்னச் சின்ன மாநிலங்கள் அவர்களின் எதேச்சதிகாரக் கொடுங்கனவுக்கு உயிர் கொடுக்கும் . அடுத்து சங்பரிவார்- ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக – இவர்களின் இந்துராஷ்டிரக் கனவுக்கு மொழிவழி மாநிலங் கள் இடைஞ்சல். இந்து, இந்தி, இந்துராஷ் டிரம் என்பதே அவர்கள் இலக்கு. ஆகவே குட்டி குட்டி மாநிலங்களை அமைக்கத் துடி யாய்த் துடிக்கிறார்கள்.அப்போதுதானே தங்கள் வலையில் பிடித்து இந்துத்துவக் கூடைக்குள் கொட்ட முடியும்.மூன்றாவதாக முக்கியமான வில்லன் பன்னாட்டு முதலாளிகள். கனிம வளங்களை மொத்தமாய் முழுங்க – சிறிய மாநிலங்கள் எனில் அரசியல் சதுரங்க காய் நகர்த்திகாரி யத்தை எளிதாக முடிக்க இயலும். வேண்டிய வரை முதல்வராக்க குதிரை பேரமோ கழுதை பேரமோ எளிது. ஆகவேதான் குட்டி குட்டி மாநிலக் கோரிக்கைகளை எழுப்புவோருக்கு போராட பணமுடை இல்லை. தாராளம் அள்ளி வழங்குகிறார்கள்.

    இறுதியாக இந்திய ஜனநாயகமும் வலி மையும் கண்ணை உறுத்த; ஒற்றுமையைக் குலைத்து ஊடுருவவும் – தன் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் – மீண்டும் நவகாலனி யாக்க கனவு காணும் ஏகாதிபத்தியம் இது போன்ற கோரிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதை அறியாதவன் அரசியலில் ஏமாளியே!சின்ன மாநிலக் கோரிக்கைகளை இடது கோடியிலிருந்து ஆதரித்தாலும் – வலது கோடியிலிருந்து ஆதரித்தாலும் போய்ச் சேரு மிடம் ஒன்றே. அது யாருக்கு லாபம்? அது யாருடைய கோரிக்கை? இன்னுமா சந்தேகம். ஆயின் மக்கள் ஆதரிப்பது ஏன் என்கிற கேள்வி எழலாம். ஒரே பதில் தான் வளர்ச்சி யின்மை, வேலையின்மை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் – நிஜ வில் லனை அடையாளம் காணமுடியாமல் திணறு கிற போது அல்லது சாதுரியமாக நிஜவில்லன்கள் முகமூடி அணிந்து நிழல் வில்லன்களை முன்னிறுத்தும் போது; தடுமாறுகிறார்கள் அல்லது திசை திருப்பப்படுகிறார்கள்.

    லியோ டால்ஸ்டாய் அன்று காந்திக்கு எழுதிய கடிதத்தை இப்போது மீண்டும் அசைபோடுவோம். விழித்துக் கொள்வோம். தேசம் மீண்டும் களவு போவதைத் தடுத்திட ஒன்றுபட்டு எழுவோம்.

    **************

    நன்றி : தீக்கதிர் (29 08 2013)

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)

    பவள சங்கரி

    முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!

    “அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”

    அன்னை தெரசா

    images 5முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!

    build-success-from-scratch

    குறிப்பிட்ட அந்தச் சூழலின் முழுமையான ஆக்கிரமிப்பு, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது. இது ஆழ்ந்த நித்திரையிலிருந்து சட்டென விழிக்கும் நிலை அல்லது வெகு நாட்களாக இருண்டு கிடக்கும் ஒரு பகுதியில் பளிச்சென்று வெளிச்சம் தோன்றுவது போல்தான். நம்மைச் சுற்றி எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்ததெல்லாம் நம் மனதிற்குள்தான். அமைதியை நோக்கிய நம்முடைய உள்முகப் பயணம் மூலமாக சூழ்நிலைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வல்லமை பெறுகிறோம். நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்த்து தீர்வு சொல்ல விழைகிறோம். முழுமையான விழிப்புணர்வுடன் தெளிவான சிந்தையும் வசப்படுகிறது. அதனால் ஏற்கனவே மறைந்திருந்த சில உண்மைகள் அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மனத்தெளிவு ஏற்படுகிறது. சாதாரண விசயங்களில்கூட அதிக நாட்டம் ஏற்படுவதைக் காண முடியும். இயற்கை எத்தனை அதிசயமும் அழகும் நிறைந்தது ! நம் சக மனிதர்களையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அறியாமையையும், அழகையையும் சேர்த்தே அவர்களை ஒன்றுபோல நேசிக்க முடியும். தேவையில்லாத ஆய்வு செய்வதைவிட அவரவர்கள் இருக்கும் நிலையில் அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்யும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படையான அன்பைச் செலுத்த முற்படும்போது நல்ல உறவுகள் மேம்படும்.

    மனக்கட்டுப்பாடு என்பதன் மூலம், மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பெரிய பிரச்சனையையும் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அதாவது வேதனைப்படுத்தக்கூடிய அந்த குறிப்பிட்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அதிகப்படியான முக்கியத்துவம் பெறாமல், நாம் அதற்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்தாமல், தெளிவான, பக்குவப்பட்ட பார்வையை ஏற்படுத்தும். உதாரணமாக நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்களும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் சுவாசிக்கிறோம் என்பதை உணராமலே தானாக அது நடக்கிறது. ஆனால் பரீட்சார்த்தமாக ஒரு சில நிமிடங்கள் மூச்சு உள்வாங்குவதிலும், வெளிவிடுவதிலும் ஆழந்த கவனம் செலுத்த ஆரம்பித்தால் அது நமக்கு மிகவும் ஒரு சிரமமான காரியமாகத் தெரியும். இப்படித்தான் தேவையில்லாமல் கவனம் செலுத்தும் நம்முடைய சில பிரச்சனைகளும். ஒதுக்க வேண்டியதை ஒதுக்கிவிட்டு, தேவையானதில் மட்டும் கவனம் செலுத்தும் கலையை பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் துன்பங்களை மனக்கட்டுப்பாடுடன் எதிர்கொள்ள ஆரம்பித்தால் அது நம் இருதயத்தை விசாலமாக்கி ஓய்விற்கான இடத்தையும் கொடுக்கும். நம் அச்சத்தையும், ஆவேசத்தையும் விட்டொழித்து, அமைதியான, யதார்த்தமான கோணத்தில் எதிர்கொள்ள ஆரம்பித்தால் வலியும், வேதனையும் குறைந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற உண்மையை உணரச் செய்யும்.

    வாழ்க்கையில் நல்ல நட்புகளும், உறவுகளும் மட்டுமே நம்மை உற்சாகமாக இருக்கச் செய்யும் மந்திரக்கோல்கள். அன்பும், பரிவும், பாசமும் நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நட்பு மற்றும் உறவுகளுடன் வாழ்க்கைப் பயணம் இனிதாக அமையும். ஓக் மேண்டினோ கூறுவது போல,

    “அடுத்தவர்களை, இன்று அர்த்த சாமத்திற்குள் அவர்கள் இறந்து விடப்போகிறார்கள் என்பதுபோல நடத்துங்கள். உங்களுடைய முழுமையான அரவணைப்பையும், கருணையையும் மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒன்று திரட்டி, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவருக்குச் செலுத்துங்கள். உங்களுடைய வாழ்க்கை திரும்பவும் அதே பழைய வாழ்க்கையைப் போன்று நிச்சயம் இருக்காது”

    மற்றவர்களிடம் கோபத்தில் நிலைத்திருப்பதோ, வெறுப்பு அல்லது சீற்றம் கொள்வதற்குமான முக்கிய காரணம் நம்மால் பெருந்தன்மையுடன், மன்னிக்கும் மனப்பக்குவமும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான். நிலையில்லாத இந்த வாழ்க்கையில், அவர்களோ நாமோ எந்த நேரத்திலும், அன்று இரவேகூட இறந்து போகலாம் என்பதை நினைக்கத் தவறிவிடுகிறோம். அடுத்தவர் மீது செலுத்தும் கோபமும், வெறுப்பும் நமக்கே சுமையாகி நம்மை வேதனைப்படச் செய்யும் என்பதே சத்தியம். அதை வெளிப்படுத்த சரியான தருணம் பார்த்துக்கொண்டு அலைந்திருக்க வேண்டிய சூழலில் நம்முடைய கடமைகளும் பாதிக்கப்படலாம். நமக்கே இது பெரும்பாரமாகிப் போய்விடும். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும்முன் எவர் மீதும் கோபம், வெறுப்பு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என எதுவும் நம் மனதில் தேங்கி, அதை சாக்கடையாக்கி அசுத்தப்படுத்தாமல் இருக்கிறது என்ற உறுதிப்பாடு கொள்ள வேண்டியது அவசியம். அதுவே அடுத்த நாள் சுத்தமான மன நிலையுடன், உற்சாகமாக நம்மை விழித்தெழச் செய்யும் என்பதே சத்தியம்.

    அதே சமயம், அடுத்தவருடைய உணர்வுப்பூர்வமான மிரட்டல்களுக்கும், கோபம் மற்றும் சுயநலப்போக்கின், அர்த்தமற்ற வெளிப்பாடுகளுக்கும் அடி பணிந்து விடாமல், அடுத்தவரை திருப்தி படுத்துவதற்காக நம் கடமையைத் தவறவிடுதலாலும் நிம்மதி இழக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

    இறுதியாக, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை என்றும் வழி நடத்தும் என்ற பூரண நம்பிக்கையோடு நம் பயணத்தைத் தொடருவோமாக! தன் குஞ்சை சிறகினுள் பொத்தி வைத்துக் கொண்டு பறந்து செல்லும் கழுகு உயரமாகப் பறக்கும் வேளையில், கூர்மையான தன் பார்வையின் மூலம் தரையில் கிடக்கும் இரையைப் பார்த்தவுடன் சிறகு விரித்து கீழ் நோக்கிப் பறக்க யத்தனிக்கும் போது அந்த கழுகுக் குஞ்சு சிறகிலிருந்து விடுபட்டு விழுந்துவிடும். அப்போது அந்தத் தாய் கழுகு அதைவிட வேகமாகப் பறந்து வந்து அப்படியே அந்தக் குஞ்சை தரையில் விழுந்து மோதிவிடாமல், அணைத்து காப்பாற்றிவிடும். இது போலத்தான் நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியும் நம்மை ஒரு எல்லையில், வீழ்ந்து விடாமல் காத்து நிற்கும் என்ற நம்பிக்கையுடன் நம் வாழ்க்கையை பூரணமாக வாழுவோம்! வெற்றி நிச்சயம்!

    முற்றும்

     படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.dreamwisemarketing.com/wp-content/uploads/2013/07/SUCCESS_by_the_chosen_pessimist.jpg&imgrefurl=http://www.dreamwisemarketing.com/denver-marketing/5-keys-to-dm-success-releas/&h=600&w=750&sz=65&tbnid=4iU_waTlGMhgyM:&tbnh=90&tbnw=113&zoom=1&usg=__On3jVfdnfqsPgpX1iAeErHyLOGQ=&docid=v2lrJkem1G5GhM&sa=X&ei=H1QfUuGZIY7GrAfd4YDoBQ&ved=0CDQQ9QEwAQ&dur=402#imgdii=4iU_waTlGMhgyM%3A%3BTHrMwedrQaYndM%3B4iU_waTlGMhgyM%3A

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.insidegatlinburg.com/wp-content/fall-road.jpg&imgrefurl=http://www.insidegatlinburg.com/vacation-tips/when-do-the-leaves-change-color-in-the-fall/&h=2000&w=2956&sz=1248&tbnid=MujWZEXqWRb5cM:&tbnh=90&tbnw=133&zoom=1&usg=__BfmUgwk1LkzjV-JANvKiYv1jVtI=&docid=ME56hl4wOGktkM&sa=X&ei=CVMfUuTzHsaHrQfCkYGABA&ved=0CFkQ9QEwBw&dur=137#imgdii=_

     

    Share
  • “நடுத்தெரு நாராயணன்”

    தமிழ்த்தேனீ

    கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

    என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

    அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

    நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,

    ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

    சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

    அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

    சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

    மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

    இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

    சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,

    அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

    கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,

    இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

     இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

    அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

    அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

    அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

    நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

    எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

    அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

    Share
  • நாளை புத்தக வௌயீட்டு விழா அழைப்பிதழ் – ஈஸ்வரனின் சிறுகதைகள்

    மறவன்புலவு சச்சிதானந்தம்

    eswaran invite31.8.13 (1)

    அண்ணை, கண்ணீரை வரவழைத்தார் அந்த எழுத்தாளர் என்றார் தொலைப்பேசியில் அழைத்த திருமதி அங்கயற்கண்ணி.

    யார்? என்று கேட்டேன்.

    பெயர் சரியாக விளங்கவில்லை. இப்பொழுது (29.8.13 வியாழக்கிழமை காலை 0730 மணி) கேட்டுக் கொண்டிருக்கிறேன், இலங்கை வானொலியில் அவரது செவ்வி.

    அப்படி என்ன சொன்னார்? கேட்பவரை ஏன் அழ வைக்கிறார்?என்றேன்.

    உங்களைப் பற்றிச் சொன்னவை எனக்குக் கண்ணீரை வரவழைத்தன. நீங்கள் அவருக்குக் கொடுத்த உற்சாகமே, ஊக்கமே, ஆதரவே, வழிகாட்டலே அவரைச் சிறுகதை எழுத்தாளராக்கியதாம் என்று உணர்ச்சிவசப்பாட்டார் திருமதி அங்கயற்கண்ணி.

    அந்த எழுத்தாளர் காந்தளகத்தைப் பாராட்டினார். அங்கு பணி புரியும் திருமதி சசிரேகாவைப் பாராட்டினார். முன்பு தன் வாழ்க்கை அநுபவங்களை எழுதினாராம். இப்பொழுது சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்காம், புகழ் பூத்த வானதிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்களாம் என்றார் திருமதி அங்கயற்கண்ணி.

    ஓ.. ஈசுவரன் பேசுகிறாரா? அவர் என் நண்பர். வானொலியில் செவ்வியைக் கேட்டு முடிந்ததும் நேரே அவருடன் பேசுங்கள் எனக் கூறிய நான் திரு. ஈசுவரனின் தொலைப்பேசி எண் கொடுத்தேன்.

    ஈசுவரன் எனக்கு நண்பர். 1959இல் தொடங்கிய நட்பு. அவரது 72ஆவது பிறந்த நாளுக்குக் கொழும்பில் அவரது விருந்தோம்பலை ஏற்ற செய்தியை எழுதினேன்.

    நாளை மறுநாள் 31.8.13 சனிக்கிழமை மாலை 0630 மணி) . கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஈசுவரினின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா, நான் கலந்துகொண்டு பாராட்டிப் பேச உள்ளேன்.

     

     

    Share
  • குறவன் பாட்டு – 8

    சச்சிதானந்தம்
    
    முயலுக்கு இரங்குதல்

     

    விரிந்தும் விரியாத கல்வாழை மலர்போன்ற,

    சுருண்டும் சுருளாத செவிமடலைச் சுழற்றி,

    உருகும் பனிபோல உடல்கொண்ட வெண்முயல்,

    மருளும் செவ்விழியால் இவ்வுலகைக் காணும்!                                                                               60

     

    முயலைக் கண்டு முயலைப் போலத்,

    துள்ளிக் குதித்து ஓடிச் சென்று,

    கயலைக் கண்ட கரடியைப் போலக்,

    கையால் அடித்து முயலைப் பிடித்தான்!                                                                                  61

     

    கண்கள் சிவந்த முயலைக் கண்டு,

    கனிந்து நின்றது குறவன் நெஞ்சம்,

    கொல்லத் துணிந்து பிடித்த முயலை,

    உள்ளம் இரங்கி அனுப்பி வைத்தான்.                                                                                                       62

     

    தேன் சேகரித்தல் 

     

    வானுயர்ந்த தருவின் மீது தேனுயர்ந்த கூடிருக்க,

    கறும்பாறை என்றதன்மேல் கருடனொன்று கால்பதிக்க,

    கோவம்கொண்ட குளவிகள் கருடன்மீது படையெடுக்க,

    பாறைதுரத்து தென்றெண்ணிப் பருந்துபயந்து பறந்தது!                                                               63

     

    சிதைந்து நின்ற தேன்கூட்டில், ஆழப்

    புதைந்திருந்த தேனெல்லாம், கிளையில் வடிந்து,

    அடிமரத்தில் பொன்னிறத்தில் ஒளிர, அதைப்

    பிசினென்றெடுத்துத் தேனென்றுணர்ந்து குறவன் சேகரித்தான்!                                              64

     

    பருந்தின் பயமும் பாசமும்

     

    பாறைதுரத்து தென்றெண்ணிப் பறந்துவந்த பருந்துதன்,

    கூடிருக்கும் பாறைமீதும் அமரபயந்து நின்றது!

    குஞ்சிருக்கும் கூடிருக்கும் பாறைதன்னைச் சுற்றியே,

    வட்டமிட்டு வட்டமிட்டு வானிலுயரப் பறந்தது!                                                                  65

     

    பாசமிக்க பருந்துதன் பயம் தெளிந்து நின்றது,

    குஞ்சினருகில் குதித்துக்குதித்து வந்தமர்ந்து கொண்டது!

    கண்திறக்காக் குஞ்சுகள் தாயின்வரவை உணர்ந்து,

    தேன்நிறைந்த தாயின்காலைக் கொத்திக்கொத்திச் சுவைத்தன!                                              66

     

    ஊனெடுத்துக் குஞ்சுக்கு ஊட்டுகின்ற பருந்துக்கு,

    தேனெடுத்துத் தெரியாமல் ஊட்டுகின்ற விருந்துக்கு,

    கானெடுத்த கவினெல்லாம் கண்டுகண்டு களிப்புற்று,

    தானெடுத்த பிறவிப்பயன் அடைந்திடுமே குறவனுயிர்!                                                               67

    Share
  • அரசு 12 துரைத்தனம்.

    இன்னம்பூரான்

    Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.

    என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:

    தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
    குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.

    ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
    இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.

    கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!

    கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!

    அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!

    மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!

    அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”

    “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.

    ‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
    வர்ரேன்…

    சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com

     

    Share
  • அசரீரி

     

    சு.கோதண்டராமன்

    தொலை பேசி பழுதாகி விட்டது. குறை பதிவு செய்யும் அலுவலக எண்ணை வேறு ஒரு தொலை பேசி மூலமாகத் தொடர்பு கொண்டேன். ஆளிலாக் குரல் கேட்டது.

    BSNL welcomes you

    பிஎஸ்என்எல் ஆப்கா ஸ்வாகத் கர்தா ஹே

    பிஎஸ்என்எல் உங்களை வரவேற்கிறது

    To proceed in English, press one

    ஹிந்தீ மேம் ஜான்காரீ கே லியே தோ தபாயேன்

    தமிழில் விவரங்கள் அறிய எண் மூன்றை அழுத்தவும்  

    அழுத்தினேன்.

    பழுதுபட்ட தொலைபேசியின் எஸ்டிடி கோடை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எஸ்டிடி கோட் 044. இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பழுதடைந்த தொலைபேசி எண்ணை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எண் ்்்் ்்்். இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை  அழுத்தவும்.

    அழுத்தினேன்

    உங்கள் தொலைபேசியில் எந்தப் பழுதும் இல்லை. பிஎஸ்என்எல்லின் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    ????????????

    ………………………………………. ……………………………………………………. ……………………………………………….       இதோ மற்றொரு நிகழ்ச்சி.

    வோட­ஃபோன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    உங்களுக்கான ஸ்பெஷல் ஆஃபர். இப்பொழுது நீங்கள் வெறும் 34 ரூபாயில் பத்து நாட்களுக்கு இலவசமாக உங்கள் போன் மூலம் இண்டர்நெட் வசதி பெற முடியும்………………………………………………………………………………………………….. …………………..  (நீண்ட விளம்பரத்துக்குப் பின்)

    தமிழில் தொடர எண் மூன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பில் சம்பந்தமான விஷயங்களுக்கு ஒன்றை அழுத்தவும்.

    இண்டர்நெட் இணைப்பு தொடர்பான விஷயங்களுக்கு 2ஐ அழுத்தவும்.

    3ஜி சம்பந்தமான விஷயங்களுக்கு 3ஐ அழுத்தவும்.

    கால் டைரக்ட் சம்பந்தமான விஷயங்களுக்கு 4 ஐ அழுத்தவும்.

    ……………………………

    ………………………………..

    ………………………………….

    மீண்டும் முந்திய மெனுவுக்குப் போக 9 ஐ அழுத்தவும்.

    வரிசையாகப் போய்க் கொண்டிருந்தது. நான் வாங்கிய புதிய சிம்மை செயல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான வாய்ப்பே இல்லை. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து கவனமாகக் கேட்டேன். எனக்குத் தேவைப்பட்டது இல்லவே இல்லை.

    வேறு வழியில் அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது போல இருக்கிறதே. சரி முயன்று பார்ப்போம் என்று கருதி எண் ஒன்றை அழுத்தினேன்.

    மீண்டும் பதிவு செய்யப்பட்ட குரல்.

    எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். தயவு செய்து காத்திருக்கவும்.

    அவர்களுக்காக நான் காத்திருக்கும் நேரம் வெட்டியாகக் கழியக் கூடாது என்ற பெரிய பொறுப்புடன், என்னை மகிழ்விக்க, இசை ஒலிக்கத் தொடங்கியது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இசை தடைபட்டு,

    நீங்கள் எங்களுக்கு முக்கியமான வாடிக்கையாளர். தயவு செய்து காத்திருக்கவும். எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி உங்களைக் கவனிக்க வருவார்,

    என்று அறிவிப்பு. தொடர்ந்து இசை. பத்து நிமிடங்களுக்குப் பின் வேறு ஒரு அசரீரீக் குரல் கேட்டது.

    எங்கள் அதிகாரியுடனான உங்கள் உரையாடல் குறை தீர்த்தல் மற்றும் தர ஆய்வுச் சோதனைக்காகப் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறியவும்.

    …………

    …………..

    என் பெயர் சுபாஷிணி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? (அப்பாடா, கடைசியில், மனிதக் குரல்!)

    முதல்லே, புகாரைக் காது கொடுத்துக் கேட்கிற மனிதக் குரலைக் கேட்க எந்த நம்பரை அழுத்த வேண்டும், சொல்லுங்க.

    என்ன சார் விஷயம்?

    நான் ஒரு புது சிம் வாங்கியிருக்கேன். அதை ஆக்டிவேட் பண்ணணும்.

    அதுக்கு நீங்க 172ஐத் தொடர்பு கொள்ளணும், சார்.

    அது எனக்கு முதலிலேயே தெரியும். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்டால் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லைன்னு பதில் வருதே.  அந்தக் குறையை நான் யார் கிட்ட சொல்லி அழறது? குறை தீர்க்கும் நம்பர்னு போட்டிருக்கேன்னு இந்த நம்பரை டயல் செய்தால் ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்னு போய்க்கிட்டே இருக்கே தவிர என் புகாரைத் தெரிவிப்பதற்கான வழியையே காணுமே, அம்மா.

    மன்னிக்கணும் சார். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    நீங்க இப்ப பேசிக்கிட்டிருக்கிற நம்பர் உங்க பேர்லே தான் இருக்கா?

    இல்லே. என் மகன் பேர்லே இருக்கு.

    அவர் பேரை தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    அவருடைய விலாசம் சொல்லுங்க.

    சொன்னேன்.

    சரியா இருக்கு. இப்ப வாங்கின சிம் யார் பேரிலே வாங்கியிருக்கீங்க?

    சொன்னேன்.

    சரி சார். கம்ப்ளெய்ண்ட் புக் பண்ணிக்கிறேன். உங்க கம்ப்ளெய்ண்ட் நம்பர் 865348974562. மறுமுறை பேசும்போது இந்த நம்பரைக் குறிப்பிடுங்க. வேற ஏதாவது தேவையா?

    கொஞ்சம் இருங்க. நீங்க பாட்டுக்குப் படபடன்னு சொல்லிக்கிட்டே போனா, நான் எப்படி இத்தனை டிஜிட்டை ஞாபகம் வெச்சுக்கறது?

    சரி எழுதிக்கங்க சார்.

    இந்தப் பேச்சு முடிந்ததும் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுக்கு மறக்காமப் பதில் அனுப்பிவிடுங்க சார். அதுக்குக் கட்டணம் கிடையாது. வோடஃபோன் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    தொலை பேசி அலுவலகங்கள் மட்டுமல்ல. குடிநீர்ச் சுத்திகரிப்பு யந்திரம் பழுது பார்ப்பு மையம்  போன்ற வேறு எந்த அலுவலகமானாலும் இதே நிலை தான்.

    யந்திரங்களை நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது அவை நம்மை ஆள்கின்றனவா?

     

    Share