சச்சிதானந்தம்

முயலுக்கு இரங்குதல்

 

விரிந்தும் விரியாத கல்வாழை மலர்போன்ற,

சுருண்டும் சுருளாத செவிமடலைச் சுழற்றி,

உருகும் பனிபோல உடல்கொண்ட வெண்முயல்,

மருளும் செவ்விழியால் இவ்வுலகைக் காணும்!                                                                               60

 

முயலைக் கண்டு முயலைப் போலத்,

துள்ளிக் குதித்து ஓடிச் சென்று,

கயலைக் கண்ட கரடியைப் போலக்,

கையால் அடித்து முயலைப் பிடித்தான்!                                                                                  61

 

கண்கள் சிவந்த முயலைக் கண்டு,

கனிந்து நின்றது குறவன் நெஞ்சம்,

கொல்லத் துணிந்து பிடித்த முயலை,

உள்ளம் இரங்கி அனுப்பி வைத்தான்.                                                                                                       62

 

தேன் சேகரித்தல் 

 

வானுயர்ந்த தருவின் மீது தேனுயர்ந்த கூடிருக்க,

கறும்பாறை என்றதன்மேல் கருடனொன்று கால்பதிக்க,

கோவம்கொண்ட குளவிகள் கருடன்மீது படையெடுக்க,

பாறைதுரத்து தென்றெண்ணிப் பருந்துபயந்து பறந்தது!                                                               63

 

சிதைந்து நின்ற தேன்கூட்டில், ஆழப்

புதைந்திருந்த தேனெல்லாம், கிளையில் வடிந்து,

அடிமரத்தில் பொன்னிறத்தில் ஒளிர, அதைப்

பிசினென்றெடுத்துத் தேனென்றுணர்ந்து குறவன் சேகரித்தான்!                                              64

 

பருந்தின் பயமும் பாசமும்

 

பாறைதுரத்து தென்றெண்ணிப் பறந்துவந்த பருந்துதன்,

கூடிருக்கும் பாறைமீதும் அமரபயந்து நின்றது!

குஞ்சிருக்கும் கூடிருக்கும் பாறைதன்னைச் சுற்றியே,

வட்டமிட்டு வட்டமிட்டு வானிலுயரப் பறந்தது!                                                                  65

 

பாசமிக்க பருந்துதன் பயம் தெளிந்து நின்றது,

குஞ்சினருகில் குதித்துக்குதித்து வந்தமர்ந்து கொண்டது!

கண்திறக்காக் குஞ்சுகள் தாயின்வரவை உணர்ந்து,

தேன்நிறைந்த தாயின்காலைக் கொத்திக்கொத்திச் சுவைத்தன!                                              66

 

ஊனெடுத்துக் குஞ்சுக்கு ஊட்டுகின்ற பருந்துக்கு,

தேனெடுத்துத் தெரியாமல் ஊட்டுகின்ற விருந்துக்கு,

கானெடுத்த கவினெல்லாம் கண்டுகண்டு களிப்புற்று,

தானெடுத்த பிறவிப்பயன் அடைந்திடுமே குறவனுயிர்!                                                               67

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “குறவன் பாட்டு – 8

  1. குறவனின் அழகான, மனிதநேயமிக்க மறுபக்கம் வெளிப்பட்டிருக்கின்றது. தங்கள் எழுத்துக்களின் வாயிலாக, நானும்,

    ////கானெடுத்த கவினெல்லாம் கண்டுகண்டு களிப்புற்று,
    தானெடுத்த பிறவிப்பயன் ///

    அடைந்தேன். ஆவலுடன் தொடரக் காத்திருக்கின்றேன்.

  2. /// வானுயர்ந்த தருவின் மீது தேனுயர்ந்த கூடிருக்க,
    கறும்பாறை என்றதன்மேல் கருடனொன்று கால்பதிக்க,
    கோவம்கொண்ட குளவிகள் கருடன்மீது படையெடுக்க,
    பாறைதுரத்து தென்றெண்ணிப் பருந்துபயந்து பறந்தது!///

    எதை எடுப்பது எதை விடுப்பது 
    என்றெண்ணி திகைத்த பொழுது 
    வாசித்தப் பொழுதே நகைகப்பையும் 
    கொணர்ந்த வரிகள் இவை….

    கவிதையும் கற்பனையும் அருமை! அருமை !!

  3. பாடலில் சொன்னது போல் முயலை மட்டும் குறவர்கள் வளர்க்கிறார்கள். தேன் சேகரித்தலும், பருந்தின் பாசமும் அழகான வரிகளில் நேரலையாய் தெரிந்தது.

  4. @@திருமதி.பார்வதி இராமச்சந்திரன்,

    கவிதைகளைத் தொடர்ந்து படித்துப் பாராட்டி வரும் தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, சக எழுத்தாளர்களின் பதிவுகளைத் தொடர்ந்து கவனமுடன் படித்து கருத்துக்களை உடனுக்குடன் தொடர்ந்து பதிவு செய்யும் தங்கள் பண்பை மனதாரப் பாராட்டுகிறேன். நன்றி!

    @@திரு.ஆலாசியம்,

    கவிதையையும் கற்பனையையும் இரசித்தமைக்கு என் அன்பு நன்றிகள்!

    @@திரு.தனுசு,

    மனக் கண்களால் காட்சிகளைக் கண்டு இரசித்த தங்களுக்கு என் நன்றிகள் நண்பரே!

  5. ஊனெடுத்து ஊட்டுகின்ற பருந்தைக்
    காட்டி
    தேனெடுத்து ஊட்டுகின்ற விருந்தாய்த்
    தொடர வாழ்த்துக்கள்…!

  6. கவிதைகளைப் படித்துத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் நண்பர் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *