சங்கத் தமிழன் சாகாவரம் வேண்டினானா?

18

 


கோ. ஆலாசியம் 

 agathiyar

அறிவினில் உயரியத் தமிழ்மொழி என்பேன் நான்.

மொழி என்பது கருவியாகும். ஒருவனுடைய உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி வளர்வதற்கும், வளர்ந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்வதற்கும் பயன்படும் கருவியே மொழி என்பதாகும்.

அறிவினிலுயரியத் தமிழ்மொழி பேராழி 

ஊறிய அமிழ்தினும் சிறந்ததென்பேன்

பாரினில் உயரிய மகாகவியோடவன் தாசன் 

கூறிய உன்னதறிவுப் போற்றியே

தொன்று நிகழ்ந்தது அனைத்தும்

உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் இவள்

என்றுப் பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்

ஆதி சிவன் பெற்றுவிட்டன என்னை என்று தமிழ் மொழியின் தொன்மையை மகாகவி பாரதி பாடிச் சென்றான்

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

 

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,

ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்

ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

வாழும் மொழியான செம்மொழி மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றும்; அதன் சிரஞ்ஜீவித் தன்மைக்கு அதன் அறிவுச் செழுமையும்; உலகப் பொருள்களிலும்; படைப்பைப் பற்றிய அதன் தெளிவை ஐயம் திரிபுர விளக்கும் தன்மையையும்; கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அது முழுமை பெற்றதை; அதாவது முழு வளர்ச்சிப்  பெற்று விட்டதும், அதன் இலக்கண அமைப்பின் வழியே காணும் போது உலக மொழிகளில் வேறந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கணம் அதுவும் பொருளிலக்கணம் எழுதப்படவில்லை என்னும் உயர்வும் இந்த அறிவினில் உயரிய அன்னை தமிழுக்கு உண்டு என்பது நமக்குப் பெருமையே.

இன்றைய நவீன அறிவியல் கூறும் அனைத்துப் பிரபஞ்சக் கூறுகளும் அதன் உருவாக்க அமைப்பின் முறையை முறையே முதல் கரு உரிப் பொருள்கள் வழியே முறைப் படுத்தி இருவரிகளில் பிரபஞ்சத்தை சுருக்கிய தொல்காப்பியச் செய்யுள் எத்தனைப் பெரிய சான்று இம்மொழி அறிவினில் உயர்ந்து முழுமைப் பெற்ற மொழி என்பதற்கு.

முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறை சிறந்தனவே…..

ஒரு வரிசையைத் தருகிறார், அதுவே இன்றைய அறிவியலும் கூறுகிறது.

இப்படிப் பொருளிலக்கணம் அதாவது வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்த மொழியின், அதன் அகம் புறம் என்னும் அன்றைய இலக்கியங்கள் இவற்றின்

முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே என்று  கூறிவிட்டு அடுத்த அடியில் ‘நுவலுங்காலை முறை சிறந்தன’ என்பது இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் வரிசை அதாவது படைப்பின் வரிசையை அதாவது நிலம், பொழுது; அடுத்து கருப் பொருளான தாவரம், விலங்குகள் அதன் பின்பு பல்லாயிரம் வருடங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான் என்பதாக. இதை இப்போது அறிவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தொல்காப்பிய இலக்கண நூல் எழுத்தது சொல் என்று மட்டும் அல்லாது மனித வாழ்விற்கு இலக்கணமும் கூறிய நூல். இது வேறெந்த உலக மொழியிலும் இல்லாத சிறப்பு என்பர்.

அதனால் அதனை நான் அறிவினில் உயரிய செம்மொழி என்பேன்.

சற்று உற்று நோக்கினால்…. இப்படியொரு உயரிய இலக்கணத்தை படைக்கும் போது, அது அற்றைய நாட்களில் தமிழன் வாழ்ந்த வாழ்வினையே விளக்கும் என்பதைக புரிந்துக் கொள்ளலாம்.

இருந்தும் அப்படியொரு வாழ்வு வாழும் போது, இப்படி இலக்கணம் படைபானானேன் என்று எண்ணினால், அது அந்த பண்பாட்டை ஒரு முழு ஒழுங்கு பெறாத பண்பாட்டை ஒரு முழு வடிவுக்கு கொண்டு வரவும், இன்னும் நுண்ணியதாக கூராக்கவும் எண்ணியே தொல்காப்பியர் செய்திருக்க வேண்டும்.

இல்லாத ஒன்றை; அறியாத ஒன்றை திடீரென ஒருவன் வரையறை செய்ய முடியுமா? என்பதும், அப்படி செய்வானாயின்; தமது வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஒன்றை புரிந்துக்கொண்டு  சாதாரண மக்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியுமா? என்பதையும் சிந்தித்தால்; அது அன்றைய தமிழனின் வாழ்வியல் அமைப்பு தான், அதை அவன் ஒருவாறு கைக் கொண்டிருந்தான் என்பது விளங்கும்.  இலக்கணம் பிறந்தது அப்போதே என்றால் அந்த இனம் எத்தனை நாகரிகமும், வாழ்வியல் விழுமங்களையும் பெற்றிருந்தது என்பதையும் இதன் வழி நன்கு அறியலாம்.

அகம் புறம் பிரிவு!

அகமும் புறமும் பற்றிய இலக்கியங்கள் இந்த இலக்கண அடிப்படையிலே தோன்றி தமிழ் மக்கள் வாழ்வின் முழுமையும் பறைசாற்றுகின்றன.

கவிஞன் ஞானோ காலக் கணிதம் என்பதைப் போல…

இலக்கியம் என்பது மண்ணின், மாந்தரின் அது தோன்றிய காலத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுவதே. அப்படியானால் அக்கால மக்களின் மனப் பாங்கை அது காட்டும் கண்ணாடி என்று தமிழ் சான்றோர் கூறுவதற்கு இணங்க; தமிழன் தனது உணர்ச்சியின் அடிப்படையில் எப்படிச் செயல் பட்டான்.

அதாவது, தனது மெய் சார்ந்த உணர்ச்சியில் அவனின் செயல் பாடு அவன் இந்த சமூகத்தில் மற்றோருடன் கொண்ட உறவு; குடும்பம், சமூகம் என்ற அமைப்பில் அவனது பங்கு என்பதும்; அவன் இந்த உலகை, பற்றிய எண்ணம், இயற்கையை பற்றிய கருத்து, புரிந்துணர்வு அதை அவன் கையாண்ட முறை ஆகிய அனைத்தையும் பற்றிய விழுப் பொருள்களை நமக்கு இன்று இந்த அகமும், புறமும் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை,

அருமையான அகத்திலே ஏனிந்த அழுக்கு!

மக்கள் நுதலிய அகன் ஐந்திணை‘ (தொல் -அகத்திணை-57)

அனைவரும் அறிந்ததே ஐந்திணைகள்; குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம். இந்த ஐந்திணைகளிலே தமிழர் வாழ்வு அமைந்திருக்க வேண்டும் ஆனாலும் அதிலே வரும் மருதத் திணை இவர்களின் வாழ்வை நாசமாக்கி இருக்க வேண்டும்.

அதை நாமும் வள்ளுவரின் மறைவழியே அறிய முடியும். பரத்தையருடன் வாழும் வாழ்வை சித்தரிப்பது மருதம் ஆகும். இது சங்ககால தமிழனின் வாழ்வை சங்கருத்ததும்  ஆகும்.

பரத்தமை ஒழுக்கத்தை திருக்குறள் எப்படி எல்லாம் சாடியுள்ளது என்பதை யாவரும் அறிவோம்.

இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு  – (திருக்குறள் 920)

பொது மகளிர்த் தொடர்பு, கள்ளுன்னுதல், சூதாடுதல் இவைகள் கொண்டொழுகும் மனிதனை இலக்குமி கைவிட்டு விடுவாள். தரித்திரன் ஆகி விடுவான் என்பதே அது.

புறத்திலே புரையோடிய போரென்னும் போதை!

 

கொடுத்தல் எய்திய கொடாமை யானும்‘ (புறத்திணை – 7)

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்‘ (புறத்திணை-29)

இது சமூக ஏற்றத் தாழ்வை அந்நாளில் இருப்பதை நமக்குணர்த்தும்.

எல்லாவற்றிற்கும் மேலாக புறத்திலே அதிகம் பேசப் படுவது வீரம் பற்றியனவாகும் என்பதை நாம் யாவரும் அறிவோம். அது தொண்ணூறு விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள், ஆழ்ந்துப் பயின்ற தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்.

இந்த வீரத்தைப் புகழும் அதே வேளையில் அந்தப் போரினால் விளைந்த அவலனிலைகளைப் பற்றியும் அதுக் கூற தவற வில்லை.

காஞ்சித் திணையிலே காணக் கிடைக்கும் அவலம் எத்தனை கொடுமை என்பதை காண்பார் உணர்வார். கணவனை போரினிலே இழந்த மனைவியரின் அவலமும், தனது மகனை இழந்த தாயின் நிலையையும், சுற்றத்தாரும் உற்ற பெருந்துயரங்களும் சொல்லி இருப்பதையும் அறியலாம். அப்படி கூறிய அந்த காஞ்சித் திணை; போரிலே புகுந்து வீரம் காட்டுதலையே பெரிதும் விரும்பிப் போற்றின என்று தான் கூற வேண்டும்.

இதிலே பரத்தமையும், கள்ளும், சூதும் தவறெனக் கூறிய வள்ளுவன் கூட வீரத்தைப் பெரிதாக புகழ்ந்துக் கூறினான்.

புறத்திணை குறிக்கும் கொடை, வீரம் போக, வாகைத்திணையில் சான்றாண்மை, நல்லொழுக்கம், பிறர் பிழை பொறுக்கும் பண்பு, அருளை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை துறவு, காமம் நீத்த சிறப்பு என்பவைகளையும் காணலாம்.

———————————————–

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

கட்டில் நீத்த பாலினானும்

கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்

————————————————

அருளோடு புணர்ந்த அகற்சியானும்

காம நீத்தப் பாலினாலும். (தொல் -புறத்திணை-17)

ஆக போர், வெற்றிப் புகழ் என்பதிலே பெரிதும் மயங்கிக் கிடந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், அரசு கட்டிலைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டு துறவு மேற்கொண்டோழுகுவது பெரிய வெற்றி என்று வாழ்ந்தாரும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் இதற்கு நச்சினார்கினியர் உரை கூறுகிறார் ‘ வேதம் முதலிய வற்றாற் கட்டுதல் ஒழுக்கத்தோடு கூடியக் காட்சி’

வேதம் கூறிய படி ஐம்புலன்களையும் கட்டுதல் அது எப்படி சாத்தியமாம் அதற்கான ஒழுக்கத்தைக் கொண்டு கட்டு. அதாவது ஐம்புலன்களின் வழியே உந்தன் மனத்தை அழுக்காக்கிக் கொள்ளாது கட்டு. அப்படிக் கட்டும்கால்  காணும் காட்சி. ஆக, தொல்காப்பியத்திலே இதையும் காண்கிறோம்.

ஒப்பு நோக்க மனித வாழ்வு என்பது இன்ப துன்பம் கலந்தது என்பது தான் ஆன்றோர் வாக்கும். ஐம்பூதங்களினால் ஆன அண்டம்; இந்த பிண்டமும் அப்படியே! அவைகள் ஒவ்வொன்று வேறு வேறானது ஒத்த தன்மைக் கொண்டு விளங்காது என்பதும் உண்மையே…

ஆகையால் வள்ளுவனார் கூறியது போல்…

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

தமிழ் மக்களின் வாழ்வுக் குறைகளை நீக்கினால், அந்தத் தமிழனின் வாழ்வு உலகிற்கு முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடை தமிழ்கூறு நல் உலகம். —(தொல் -பாயிரம்-1)

இது பழந்தமிழ் நாட்டின் பரப்பு என்பதை தொல்காப்பியம் வழி அறிகிறோம். இதை சேர, சோழப் பாண்டிய மூவேந்தர்களும்.. எண்ணிலா சிற்றரசர்களும் ஆண்டு வந்தனர் என்பது அறிந்ததே.

பக்காளிச் சண்டைகளை வீரம் என்பதா?

veeram

இம்மூன்று மன்னர்களும் ஓயாத, ஒழியாத போர்கள். இவர்கள் சில காலம் சும்மா இருப்பினும், இவர்களைத் தூண்டிவிட்டுப் போர் செய்ய செய்தவர்களும் உண்டு என்பர். போரிடா மன்னனே இல்லை. மேலும், சோழர்களுள் அரசு கட்டிலுக்காக நடந்த போர். ஏன்? தந்தை மகனுக்குமான போர்களும் இருந்தன என்பர்.

இப்படி மூவருள்ளும் சண்டை இட்டுக் கொள்வதால் வலியவன் வெல்வதும்; அதனால் தோற்றுப் போனவன் நாட்டில் சில பகுதிகளையும், விளைந்த விளைச்சல் மிகுந்த நிலங்களை கொழுத்துவதும், போரில் மடிந்த மனிதர்களின் குடும்பத் துயரத்தை பொருள் கொள்ளாது சர்வ சதாக் காலமும்… தமிழனுக்குள் தமிழன் அடித்துக் கொள்வதே இவர்களின் வேலையாகவும் இருந்திருகிறது.

வாழ்ந்தவன் ஒருத் தமிழன் என்றால் மடிந்தவனும் தமிழன் தான். சமுதாயத்தில் ஒரே வாழ்வியல் என்பதால் பொருளாதாரத்தைத் தவிர வேறு பெரிய மாற்றம் இருந்திருக்க மாட்டா.

 veeram2

இதிலே, கரிகாலன், பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுங்செழியன், சேரன் செங்குட்டுவன் பொன்றோர் ஆட்சிக் காலத்திலேயே தான் தமிழ்ப் பெருநிலம் ஒரு குடையின் கீழே இருந்திருப்பதாகவும் வரலாறு காட்டுகிறது.அதுவும் மிகக் குறுகிய காலமென்பர். எஞ்சியக் காலம் எல்லாம் போர் தான் அதுவும் பங்காளிச் சண்டை தான். இவர்கள் சும்மா இருந்தால், இவர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் அடித்துக் கொள்வார்ககளாம்.

போர் வெறி, எப்படி த் தமிழனை பிடித்து ஆட்டியது என்பதையும் அதை எப்படி தமிழினம் போற்றியது என்பதையும் புறம் நமக்கு காட்டி நம்மையும் உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டுத் தள்ளிவிடும் இந்த புறநானூற்றுப் பாடல்களை நான் வாசிக்கும் போதே. இன்னும் சொன்னால் புல் தடுக்கிப் பயில்வான்கள் கூட வீறுகொண்டு எழுந்து வாள் கொண்டு போரிடத் தூண்டும் உணர்விற்கு ஆளாக்கும் அந்த பாடல்கள் கூறும் காட்சிகள்.

முறத்தைக் கொண்டு பாயவந்தப் புலியை விரட்டி அடித்தாள் வீரமறத்தாய்  என்பதையும். புறமுதுகில் பட்டக் காயம் மார்பின் வழியே வந்துப் பாய்ந்தது என்பதை அறியாதத் தாய் தனது மகனுக்கு வீரப் பாலூட்டிய தனது முலைகளையே அறுத்து எறியத் துணிந்து பிறகு தெளிந்தக் காட்சிகள் எல்லாம் காணலாம்.

சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் இரு சகோதரர்கள். இருவரிடையே போர் மூண்டது. அதை கண்ட கோவூர் கிழார் என்ற சான்றோர் இருவரையும் அமைதி பெற இப்படிப் பாடுகிறார்.

நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

பொருவோன் கண்ணியம் ஆர்மிடைந் தன்றே

ஒருவீர் தோற்பினும்: தோற்பது நும்குடியே  -(புறம் 45)

அத்திமாலை தரித்த நீவீர் இருவரும் பொருதி யார் தோற்றாலும் அது சோழன் தோற்றான் என்பது தானே. விட்டு விடுங்கள் என்கிறார்.

வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்

நாடு சுடு கமழ புகை எரித்தலானே   -(புறம்-6)

உனது தலையிலே நீ சூடிய வெற்றி வாகை மலர் உனது பகைவர் நாட்டை கொளுத்திய நெருப்பால் வாடுகிறதே. ஆக, இப்படி நெருப்பால் கொளுத்துவதும் தமிழனுக்குள் தமிழ் அடித்துக் கொள்வதும்.

அட, அப்பவே அப்படித் தானா! 🙂

மேலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, காரிகிழார்  இப்படியும் பாடுவதாக குறிப்பர்.

பணியியர் அத்தை, நின் குடையே -முனிவர்

மக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே.

நினது குடை, முனிவர் பெருமக்களுக்கும், சிவனுக்கும் அல்லாது வேறு யாருக்குப் பணியும் என்பதே. ஆக, புறநானூறில் பாடப் படுவதில் அறிஞர்கள் கூறுவது போல் தொண்ணூறு விழுக்காடு பெரும்பாலும் சகோதரப் போர்களைப் பற்றியதே இருக்கிறது.

இதன் பயனாக, ஆக்கப் பூர்வமான சமுதாய வளர்சிக் குன்றி இருந்தது என்று நினைப்பதில் தவறு ஏது?

இந்த அரசர்களுக்கு அறிவுரைகள் கூறுவோர் வெகு சிலராகவே இருந்திருக்கிறார்கள்.

மதுரைக் காஞ்சியிலே அவைகள் காணக் கிடப்பதை கூறும் அறிஞர் பெருமக்கள்.

அது ஓயாமல் போர் மூண்டு கொண்டிருக்கும் போது தலையானங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை விழித்துப் பாடப் பட்டமையைக் கூறுகிறது.

கோதையின் புனைந்த சேக்கை துஞ்சி – (ம.கா. 713)

முருகு இயன்றன்ன உருவினை ஆகி – (ம.கா. 724)

பூத்த சுற்றமொடு இயன்ற உருவினை ஆகி- (ம.கா.770)

மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

வரைந்து நீ பெற்ற நல ஊழியையே! – (ம.கா. 782)love

உண்டும், உற்றவளோடு மகிழ்ந்தும் களித்து, சுற்றமொடு வாழ்வாய்  என்கிறார் அவர். நல் விதி நயந்த வாழ்க்கை என்பதை குறிப்பிடுகிறார்.

ஆக, தமிழராக இருந்தாலும், தன்னாட்டையும், தம் மக்களையும் காக்க போரிடுவது வீரம். அது ஓர் சிறந்த அரசனின் கடமையும் கூட. பெரும்பாலும் அப்படி இல்லாமலும் வெத்துப் புகழுக்கும், நாட்டை பெரிதாக்கி பெருமைப் பட்டுக் கொள்ளவும் தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.

இதில் பெரும் கொடுமை தோல்வி யடைந்த நாட்டையும் விளைச்சல் நிலத்தையும் கொளுத்துவது தான்.

இப்படியாகிப் போன பண்டையத் தமிழனின் வாழ்வு பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திட்டிருக்குமே ஒழிய வேறென்ன.. வேறு பாதிப்புகள் என்ன என்பதை யூகித்தும் கொள்ளலாம்..

புலவர்களில் வெகு சிலரே இடித்துரைத்து கூறி மன்னர்களின் போக்கை மாற்ற முயன்று இருக்கிறார்கள் என்பதும் உண்மையே என்பதை இலக்கியப் பேராசிரியர்களின் ஆய்வு நூல்களில் காணமுடிகிறது.

தமிழுக்கு நோய்களானவை.

சங்கத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்திருந்தாலும்; அவர்களைச் சில நோய் கிருமிகள் தொற்றி இருந்ததை அறியாதும் இருந்தார்கள் என்பதை தமிழ்ப் பயின்ற சான்றோர் அறுதியிட்டு உரைப்பர்.

அவைகளாவன… பரத்தமை, கள்ளுண் ணுதல், அரசியலில் சகிப்புத் தன்மை இன்மை, அன்புடைமை இன்மை… மனித அன்பு அகங்காரத்தால் மறைந்திருந்தமை என்றும் கூறலாம்.

இப்படி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒருவனை ஒருவன் வீழ்த்தியதால் என்ன மிஞ்சியது… திருடர்களாய் வந்தக் களப்பிரர்கள்; நாட்டில் புகுந்து கொள்ளை அடித்தார்கள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள், தமிழர் ஒன்று பட்டு எதிர்த்தாலும் அவர்களை அசைக்க முடியாமல் இருந்திருக்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை என்பார் வள்ளுவனார்.  அறிவின் வழியது அதன் உயர்நிலை என்பேன் நான். அதையே, சங்ககாலத் தமிழரின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடும் போது; தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் தனது கம்பன் – புதியபார்வை என்ற நூலில் தெளிவுறு நடையினில் குறிப்பிடுகிறார். அதனின் சாரத்தை நானும் இங்கே குறிப்பிடுகிறேன்.

‘மனிதன் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கூட்டால் ஆனவன்; விலங்கிலிருந்து மனிதனை வேறு படுத்துவது அவன் பெற்றுள்ள அறிவே; மனிதப் பண்பு என்று எடுத்துக் கொண்டால் அன்பு, அருள் என்பனவற்றின் மேல்தான் அது நிலைத்து நிற்கின்றது. அதை யாரும் மறுக்க முடியாது.

அப்படிஎன்றால் அறிவின் பயன் என்ன? அவரே பதிலுரைக்கிறார். அன்பென்பது, தான் என்ற ஒன்றின் அடிப்படையில் பிறந்து, தனது குடும்பம் தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனக்குத் தொடர்புடையவர்கள் என்பவரின் மாட்டு விரிந்து செல்வது. இது அன்பின் இயல்பு. ஆனால், அவ்வாறு செய்கையில் தனக்குத் தொடர்புடையார் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகும் தன்மையைத் தானாக அது தருகிறது.

ஆனால், அறிவுடன் கலந்த அன்பானால்; அத்தவறுகளை இடித்துக் கூறி அது அன்புடையாரையும் திருத்த முயற்சிக்கும்.

மெய்ப் பொருள் காண்பதறிவு

தீது ஒரீஇ நன்றின்பால், உய்ப்பது அறிவு.

ஆக, இத்தகைய அறிவின் துணையை நாடாது, உணர்வை மட்டுமே கொண்டு ஒரு சமுதாயம் இயங்குமானால் அது முழுவாழ்வாகாது. அது சிறு காற்றிற்கும் தாக்குப் பிடிக்காது என்கிறார்.

மேலும் கூறுவார், பழந்தமிழ் வாழ்க்கையை எடுத்துக் கூறுவது இந்த இலக்கியங்கள் தாம். எந்த ஒரு இனத்தின் வாழ்வு முறையை அறிய உதவும் கருவி அந்த இனம் படைத்த இலக்கியமே.. இலக்கணம் அறியாதவர்களின் வாழ்வு ஒருபுடை வளர்சியுடையது. அதே போல் இப்பழந் தமிழரின் வாழ்க்கையில் உணர்வு பெற்றிருந்த இடத்தில், ஒரு மிகச் சிறு பங்கைக் கூட அறிவுப் பெற்று இருந்ததா? என்ற கேள்விக்கான சரியான விடையை இன்று கூட கூற முடியவில்லை. இத்துணை சிறந்த நாகரிகம், அந்த நாகரிகத்தின் கொழுந்து போன்ற வெளிப்பாடு தான் அவர்கள் ஆக்கிய இலக்கியம் என்கிறார்.

முத்தாய்ப்பாய் கூறுகிறார். அக வாழ்க்கையை அணுவணுவாய் ரசித்து ருசித்து இன்புற்று வாழ்ந்தத் தமிழன் இந்த அக, புற வாழ்க்கை இடையே நான் யார் என் உள்ளம் யார்?’ என்ற வினாவை அவன் கேட்டதாகவோ, அவ வினாக்கட்களுக்கு அவன் விடைத் தேட முயன்றதாகவோ அறிய வாய்ப்பில்லை.

இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார், புல், பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர்களுள் ஒருத் தொடர்பு உண்டு என்று ஒருக் குறிப்பால் உணர்த்தினரே ஒழிய, இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், தன பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ளத் தொடர்புகள் பற்றியும் எந்த வினாவையும் எழுப்பினதாக அதற்கு விடை காண முயன்றதாக அவன் இலக்கியத்தில் இருந்து அறிய முடியவில்லை.

வடமொழியில் உபநிடதங்கள் தோன்றியக் காலத்தே சங்கப் பாடல்களும் தோன்றி இருக்க வேண்டும் அப்படி இருந்தும் அவற்றின் துணை கொண்டு மட்டும் ஆராயப் படவேண்டிய மேற்கூறிய வினாக்கள் எதையும் இவர்கள் எழுப்பியதாகக் கூறும் எந்த இலக்கியமும் இன்று இல்லை. தத்துவ ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்து, ஏதேனும் நூல்கள் எழுதியிருந்தால் இன்று அவற்றில் ஓன்று கூட கிடைக்கவில்லை.

வாகைத் திணை

உணர்ச்சிக்கு அளவுமீறி இடங்கொடுத்து விட்டமையால் அறிவாராய்ச்சிக்கோ, தத்துவ விசாரணைக்கோ வாழ்வில் நேரம் கிடைக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. அன்றியும் தொல்காப்பியப் புறத்திணை இயல் 230 வரிகளில் அமைந்துள்ளது. புலனடக்கம் பற்றியும், துறவுப் பற்றியும், ஆசை நீக்கம் பற்றியும், அருளைப் பெருக்கி கொள்ள வேண்டிய இன்றியமையாமையை பற்றியும் மொத்தமாக நான்கே வரிகள் தாம் உள்ளன என்றால், அற்றைநாள் தமிழர் இவைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும்.

இவ்வாறு கூறுவதால் புலனடக்கம், அருளுடைமை, துறவு என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த தமிழர்களே அந்நாளில் இல்லையென்று யாரும் நினைத்து விடக் கூடாது சிறிய அளவினரே தலைப் பட்டனர். அது வியப்புக்கு உரியதாக மற்றவர்களுக்குத் தோன்றி போற்றினர். ஆகவே தான், தொல்காப்பியம் இந்த நான்கையும் வாகைத் திணையினுள்  அடக்கிற்று போலும்.

வாகை என்றால் வெற்றி, புலனடக்கம், தன்னலத்தைத் துறத்தல் என்பவை, தன்னையே வெற்றி கொள்வதாகும்… கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பவைப் பற்றித் தொல்காப்பியம் கூறுவதை அறிந்தாலும், அதன் பொருள் தெரியாததும்.. ஆன்ம விசாரணை இருந்ததா என்பதைப் பற்றி அறிய முடியாது என்று அருமையாக தெளிவுறக் கூறுகிறார்.’

எனது முந்தையப் பதிவில் வந்த எனதுக் கவிதையின் கருவிற்கு உயிரூட்டிச் செல்கிறார் இந்தப் பெருந்தகை.

உண்மையிலே சொல்கிறேன், எனதுக் கவிதையை எழுதும் போது;  இந்த கருத்தை நான் படித்திருக்க வில்லை. எனது கவிதை நான் இதுவரை வாசித்த சில நூல்களின் வாயில் பெற்ற அறிவின் மூலமாக எழுந்ததே. வேதாந்த கருத்துக்கள், அனுபூதிகளின் மெய்யுணர்வு விளக்கங்கள் என்று சிலவைகளும், மகாகவி பாரதியின் பாடல்களும் எனக்கு கொடுத்த முடிபே அது. அது சங்கத் தமிழில் காணவில்லை என்பதையும் அறிந்திருந்தேன்.

திருவாளர் சச்சிதானத்தம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தை வாசித்து எனக்குள் ஒரு சிறு பயம் கலந்த நெருடல் வந்தது… இன்னும் பெரிதும் ஆய்ந்து நோக்காமல்; அறிவினை உபயோகிக்காது உணர்ச்சி வசப் பட்டு எழுதி இருக்கிறேனோ என்று…. சற்று நேரத்தில் அந்த மன வருத்தம் என்னை விட்டு போக இந்த அறிஞர் ஆய்வுக் கருத்துகள் உதவின. எதேச்சையாக வீட்டில் இருந்த அந்த நூலில் இருக்கும் கருத்தைக் கண்டு மன நிம்மதியுற்றேன் அதை உடனே இங்கு பகிர்ந்துக் கொள்வது கடமையென உணர்ந்து எழுதுகிறேன்.

முதுபெரும் தமிழ்அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நமது நன்றிகள் உரியதாகட்டும்.

இங்கே மீண்டும் எனது கருத்துகளை ஓரிரு வரிகளில் கூறிக் கொள்கிறேன். ஒருவரிடமே இறைவன் அனைத்தையும் தந்துவிடுவதில்லை என்பது தான் பேருண்மை. மேலைநாட்டாரை விஞ்ஞானத்திற்கும் உலக மதங்கள் எல்லாம் தோன்றுவிக்க கீழைநாட்டாரை மெஞ்ஞானத்திற்கும் படைத்து போன்றும்.

சற்று ஆழ்ந்து யோசித்தால் ஓர் உண்மை விளங்கும்.

தமிழ் மொழியில் தமிழர் வாழ்வின் விழுமியப் பொருள்கள் என்பன இகலோகம் என்னும் இந்த புவியும் புவிசார்ந்த இயற்கையோடு வாழும் நெறிமுறைகளை; தமிழன் மாத்திரம் அல்ல மனிதனுக்கே உரியதாக; யாவரும் பின்பற்ற தக்கவாறு உயரியதாகச்  செய்திருப்பதைக் காணலாம்.

அதைப் போன்று… சமஸ்கிருதம் என்னும் வேதங்கள் பூத்த மொழி, தனிப்பட்ட யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாதது போலும்… பாரத பெருங்கண்ட மக்களாகிய மூதாதையர் தொடங்கி உலகமெல்லாம் பரவி இருக்கும் அனைத்து பாரதக் குழந்தைகளுக்கும் உரிமையானதும்; அதே நேரம் அது மனித குலத்துக்காக இறைவனால் உண்டாக்கப் பட்டது என்பதும் தெளிவு.

மனித வாழ்வியல் முறையை அறம் பொருள் இன்பம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு  தமிழரின் வாழ்விலக்கணம் உலக மானுடத்திற்கே காப்பியனாரால் தரப் பட்டுள்ளது.

அதைப் போல அடுத்த படியான நிலையாமையை குறித்தும் வீடுபேறு என்பதை நோக்கியும் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறி நம்மை காப்பியனார் தமிழின் இரட்டைப் பிறவியான வடமொழியினை நோக்கிச் செலுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

அதைத் தான் சங்க இலக்கியக் காலத்திற்குப் பின்பு வந்த வள்ளுவனாரும்… இளங்கோவும், கம்பனும் நமக்கு தங்களது காப்பியங்களின் வழியே பாதை அமைக்கிறார்கள் என்பது நடுநிலைமையுடன் உணர்ச்சிக்கு மாத்திரம் இடம் தராத அறிவுடையோர் யாவரும் ஏற்பர்.

அதோடு, அதற்கு பின்பு தோன்றிய  நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று நீளும் வரிசை… இந்த தமிழ் மகான்களின் ஆக்கங்கள் யாவும் தம்ழுக்கு சிறப்பு சேர்த்தாலும்; அதன் உள்ளே இருக்கும் ஒளி , இயக்கம் அது வேதங்கள் கூறும் கருத்துக்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் அது வெறும் விகண்டவாதமேத் தவிர அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து.

‘அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்

பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார்

இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!’

இந்த வரிகள் தாம் யான் குறிப்பிடும் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஒளிபெற்ற இறவாப் புகழ் பெற்ற ஆக்கங்களை தமிழுக்கு அளித்தனர். அவர்கள் ஆக்கங்கள் இன்னமும் ஒளிர்கின்றன. அப்படி பார்க்கையில் அவர்கள் ஒளிபெற்று நிரந்தரமானாவர்கள் என்னும் உண்மை நன்கு விளங்கும். இன்னும் சொன்னால் ஒளி பெற்றவர்களாலே இப்படி அழியாப் புகழுடைய காவியங்களைப் படைக்கவும் முடியும்.

ஆயிரமாண்டுகளாய் ஓங்கி உயர்ந்த தமிழரின் வாழ்வு தடமாறிப் போவதைத் தடுக்கவே தெய்வப் புலவர் அவதரித்தார் எனலாம்…. அதன் பின்னே அடியார் படைகள் அணிவகுத்தனவே… ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியில் திளைத்தாலும் ஒளிபெற்றது இறைவனின் அருளால் என்றாலும், நச்சினார்கினியர் கூறுவது போன்று ‘புலனடக்கத்தோடு கூடிய காட்சி’ என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த மகான்கள் எல்லாம் தமிழில் இறவாப் புகழ் உடைய அமரகவிகளை படைத்ததே அந்த ஒளியினில் திளைத்துக் கொண்டிருக்கையிலே தான் என்பதையும் அவைகள் வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது.

மெஞ்ஞானியாகட்டும், விஞ்ஞானியாகட்டும் இருவரும் தனது மனதின் ஆழ்நிலையில் அகக் கண்ணால் தான் யுகங்களுக்கும் நிலை பெற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

அப்படிப் பார்க்கையிலே பன்மொழித் திறனாளர், வடமொழியில் பெரும் புலமைக் கொண்ட பேரறிஞர் காப்பியனார் எழுதிய இலக்கணம் ஆதிமுதல் இன்றுவரை அல்ல இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை மாறுதல் என்பதையே காணாத ஒருப் பொக்கிசமாக விளங்கும். அந்த ஒளி  பொருந்திய மகான் மேற்கூறியோருக்கு எல்லாம் மூத்தோரே.

எட்டயபுரக் குயில் அது என்ன கூவியது.

பாரதி நாம் ஒவ்வொருவரும் அமர நிலை பெறவேண்டும் அதற்கு முயல வேண்டும், தியானம் பயில வேண்டும் ஒளி பெறவேண்டும்; அதை இந்த உலகிற்கு நாமே சொல்லியும் கொடுக்கவேண்டும்; அப்படி உலகில் உள்ளவர்கள் யாவரும் அமர நிலைப் பெறுவார்களாயின் இந்தக் கொடும் கலி வீழும். என்பது, பாரதி நமக்குச் சொல்லிச் சென்றுள்ளான்….

இவைகள் எல்லாம் உபநிடதங்கள் வழியே; தமிழ் மொழி பெரிதும் பெற்று இருக்கிறது. அதைத் தமிழர் கைக்கொள்ளவேண்டும் என்பதே தெய்வப் புலவர் தொடங்கியோர் கூறியது. அதைச் செய்வோம்.. அதோடு அந்த உபநிடதங்கள் படைக்கப்பட்ட மொழியும் நமக்கும் சொந்தம் அது நமது தந்தையர் மொழி என்னும் உரிமையையும் உறுதி செய்வோம்.

சரி, வாழ்வாங்கு வாழவும், வீடுபேறு பெறவும் வழி கூறிச் சென்றத் தமிழனின் தொடர்ச்சியில் மேற்கூறிய அத்தனையையும்; தானும் பயின்று அதையே நமக்கும் பகன்று; இன்னும் இந்த உலகும் வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்; என்பதை எட்டயபுரத் தமிழன் அந்த மகாகவி பாரதி அத்துனை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளான்.

பாரதியின் புதியதோர் வேண்டுகோள்

கடைசியாக மகாகவி பாரதி இன்னும் ஒரு புதிய வேண்டுகோளையும் வைக்கிறான்.

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச”

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாப் புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

————————————————-

சென் றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

அவனது வேண்டுகோளை அனைவரும் ஏற்போம். நம்மால் இயன்றதை இந்த அமரத்தன்மை வாய்ந்த தமிழுக்குச் செய்வோம்.

தெய்வ நம்பிக்கையும், மறுபிறவிக் கொள்கையும் இருக்குமானால் இது போன்ற மாச்சரியங்கள் வரவேக் கூடாது.

யார் கண்டார் முற்பிறவியிலே நாம் எதை அந்நிய மொழி என்றும் அந்நிய சமூகம் என்றும்  நினைத்து வெறுப்புறு கிறோமோ, ஒதுக்குகிறோமோ அந்த மொழிக்கும், அந்த சமூகத்திற்கும் அயராது பாடுபட்டு இந்நிலைக்கு நாமும் அதை உயர்த்தியும் இருக்கலாம்.

இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே நற் 

குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே

மனமிருந்தால் மார்க்கமுண்டேமண்ணில் வாழ்வோருக்கே

மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

நன்றி!

எனது உயர்நிலைப் பள்ளித் தமிழாசான் திருவாளர். கரு. சண்முகம் அவர்கள்.

எனது மேல்நிலைப் பள்ளி தமிழாசான் திருவாளர். புதுகை கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

பாரதியார் கவிதைகள். (நியூ செஞ்சுரி புக் கவுஸ்)

தமிழறிஞர். அ .ச. ஞானசம்பந்தன் அவர்கள் (கம்பன்- புதியபார்வை)

தமிழிலக்கிய முதுகலைப் பாடப் புத்தகம் (அண்ணாமலை பல்கலைக் கழகம்)

மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். (தொல்காப்பியக் கடல்)

http://www.projectmadurai.org/pmworks.html

http://www.google.com

 

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “சங்கத் தமிழன் சாகாவரம் வேண்டினானா?

  1. பிரமிக்க வைக்கும் கட்டுரை!. எத்தனை எத்தனை தகவல்கள்!. அருமையான கருத்தாக்கம்!. சற்று நீண்டதானாலும் சுவாரஸ்யமாகப் படிக்க வைக்கிறது எழுத்து நடை!. தங்களது பரந்து பட்ட தமிழறிவும், ஆராய்ச்சி அறிவும், அயரா உழைப்பும் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது என்றால் மிகையாகாது.

    தங்கள் கட்டுரையில்,

    ////ஒருவரிடமே இறைவன் அனைத்தையும் தந்துவிடுவதில்லை என்பது தான் பேருண்மை. மேலைநாட்டாரை விஞ்ஞானத்திற்கும் உலக மதங்கள் எல்லாம் தோன்றுவிக்க கீழைநாட்டாரை மெஞ்ஞானத்திற்கும் படைத்து போன்றும்.////

    ////மெஞ்ஞானியாகட்டும், விஞ்ஞானியாகட்டும் இருவரும் தனது மனதின் ஆழ்நிலையில் அகக் கண்ணால் தான் யுகங்களுக்கும் நிலை பெற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்./////

    ///தெய்வ நம்பிக்கையும், மறுபிறவிக் கொள்கையும் இருக்குமானால் இது போன்ற மாச்சரியங்கள் வரவேக் கூடாது.////

    இப்படி மனம் கவர்ந்த வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    தங்கள் தமிழாசிரியர்களிலிருந்து, தாங்கள் படித்த நூலாசிரியர்கள் வரை தாங்கள் நன்றி சொல்லியிருக்கும் பாங்கு, இணையில்லாத தங்கள் பண்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

    தங்கள் பகிர்விற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதவே போதாது!. ஆயினும் என் மனம் கனிந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  2. ஸ்ரீமதி. பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் கருத்துக்களை நான் அமோதிக்கிறேன். ஆழ்ந்த கருத்துடைய கட்டுரை. ஒருதாய் மக்கள் நாம் என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள். எந்த ஒரு சமூகமுமே பிறர் துணையே இன்றி வளர்ந்து விட்டதாகவோ, “நாங்கள் கொடுத்து மட்டுமே இருக்கிறோம், வாங்கியதே இல்லை” என்றோ சொல்ல முடியாது. அதை இந்தியாவில் இன்று பலர் செய்வது வேதனை. இது போன்ற sensible கட்டுரைகள் whiff of fresh air என்றால் மிகையாகாது. இக்கட்டுரைக்கு அடியேனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    மேலும் எழுதுக, அண்ணா.
    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  3. தமிழ்,தமிழ்,தமிழ் என்று கட்டுரை முழுக்க தமிழின் ஆளுமை, எங்கேசென்றாய் இத்தனை நாளாய் என என்னுள் கவிதை எழுகிறது. சற்றே நேரம் ஒதுக்கி ஆர அமர படித்தேன். தமிழின் மேன்மைக்கு பொருளிலக்கணம் முதல் அகம் புறம் இலக்கியங்கள், மூவேந்தர், தொல்காப்பியம், என்று அனைத்தையும் ஒரு தொட்டு தொட்டுவிட்டு,தமிழரின் வீழ்சிக்கு சுட்டிகாட்டிய

    ////தமிழராக இருந்தாலும், தன்னாட்டையும், தம் மக்களையும் காக்க போரிடுவது வீரம். அது ஓர் சிறந்த அரசனின் கடமையும் கூட. பெரும்பாலும் அப்படி இல்லாமலும் வெத்துப் புகழுக்கும், நாட்டை பெரிதாக்கி பெருமைப் பட்டுக் கொள்ளவும் தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.

    இதில் பெரும் கொடுமை தோல்வி யடைந்த நாட்டையும் விளைச்சல் நிலத்தையும் கொளுத்துவது தான்.

    இப்படியாகிப் போன பண்டையத் தமிழனின் வாழ்வு பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திட்டிருக்குமே ஒழிய வேறென்ன..////

    என்று கூறும் கட்டுரையின் மூலம்ஆலாசியத்தின் தமிழின்,தமிழரின் ஆய்வறிவை கண்டு வியக்கிறேன்.

  4. தமிழறிஞர் அ .ச.ஞானசம்பந்தனாருக்கே இந்த பாராட்டுகளை கூறவேண்டும். அவர் தான் ஆணிவேர் அதிலே மலர்ந்து உதிரும் பூவாக எனது சிந்தனைகளும் சிலவே.

    ///தங்கள் தமிழாசிரியர்களிலிருந்து, தாங்கள் படித்த நூலாசிரியர்கள் வரை தாங்கள் நன்றி சொல்லியிருக்கும் பாங்கு, இணையில்லாத தங்கள் பண்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.///

    நான் பெரும் தவறு செய்து விட்டேன். நாம் அனைவரும் காலமெல்லாம் நன்றி கூற  வேண்டியது; வெயிலென்றும் மழையென்றும் பாராது; கடன் பட்டு ஓலைச்  சுவடிகளையெல்லாம் சேகரித்து இன்று பழந்தமிழரின் வாழ்வை நமக்கு புரியச் செய்த செம்மொழி தமிழ்த் தாய்  பெற்ற தெய்வத் தமிழர் உ.வே.சா. ஐயரவர்களுக்கே. அதை குறிபிட்டே இருக்க வேண்டும். வழக்கம் போல எல்லோரையும் போல மறந்து விட்டேன்.

    நல்லவேளை இன்னமும் நீட்டி இருப்பேன்… சுருக்கிக் கொண்டேன்.
    கருத்திற்கும் அன்பிற்கும் நன்றிகள் சகோதரியாரே .

  5. ///தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.////

    அன்றைய மரபு போர் செய்து நாட்டை விரிவாக்குவதாக இருந்தாலும் அது போதையாகி அதற்கு அடிமையாகிப் போனதும் பெரும் பாதிப்பே.

    கடாரம் கொண்டான்… உலகளவில் வர்த்தகம் செய்தான்… இமயம் வரைச் சென்றான், கப்பல் படையே கொண்டியங்கினான்… இருந்தும் பங்காளிகள் ஒற்றுமை இல்லாமல் போனதால் களப்பிரர்களின் பிடிகளில் அகப்பட்டு சில நூறு வருடம் படாத பாடும் பட்டான்….

    இருந்தும் அதுவே  பக்தி தழைக்க வழி விட்டது. தீமைக்குப் பின்னால் இருந்த நன்மை அதுவே.

    நன்றி கவிஞரே!

  6. மதிப்பிற்குரிய ஆலாசியம் அவர்களுக்கு,

    தங்களது தமிழகம் பற்றிய இந்த நீண்ட கட்டுரையைப் படித்து பிரம்மித்து விட்டேன். தமிழின்/தமிழினத்தின் பெருமையை விளக்கியிருக்கும் அதே நேரத்தில் அதிலுள்ள குறைபாடுகளையும் மிக நேர்த்தியாகச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். நன்றி.

    இதற்கு முந்தைய தங்கள் கவிதைக்கான பின்னூட்டத்தில் தங்களது ஒருசில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி இருந்தேன்.
    அதனை முதலில் விளக்கி விடுகிறேன்.

    //பங்கமில்லாத் தமிழோடு வடமொழியும் கற்றாரே

    அங்ஙனம்கற்காத் தமிழறிஞர் யாருளரோ//

    என்று எழுதி இருந்தீர்கள். சங்ககாலப் புலவர்கள் அனைவரும் வடமொழி கற்றிருந்தனர் என்பது போல எழுதி இருந்தீர்கள். அவ்வாறு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது என் பணிவான கருத்து. இதனை சங்க இலக்கியத்தில் பயன்படுத்தியுள்ள தமிழ்ச் சொற்களையும் பிற்கால இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ள சொற்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிய முடியும். நிச்சயம் வடமொழி/வடஇந்திய வரலாற்றை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வடமொழியை அவர்கள் கற்றிருந்தால் நிச்சயம் அவற்றைத் தங்கள் தமிழ்ப் பாடல்களில் பரவலாகப் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நமக்குக் கிடைக்காததால் அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகக் குறைந்த அளவே இருக்கக் கூடும் ஆதலால் சங்கப் புலவர்கள் அனைவரும் வடமொழி கற்றிருக்க வாப்பில்லை என்பது என் கருத்து.

    நிச்சயமாக வடமொழியைக் கற்றுக் கொள்ளுதல் நம் அறிவை மேலும் வளர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.

    அடுத்து,

    //இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், தன பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ளத் தொடர்புகள் பற்றியும் எந்த வினாவையும் எழுப்பினதாக அதற்கு விடை காண முயன்றதாக அவன் இலக்கியத்தில் இருந்து அறிய முடியவில்லை.//

    நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வகைப்படுத்தியதே பரந்த உலகம் பற்றிய அறிவின் வெளிப்பாடே.

    அகத்தினைப் பாடல்கள் பெரும்பாலும் மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வையும் இயற்கையை உள்ளுறை உவமையாக வைத்துத்தான் விளக்கும். தன்னைச் சார்ந்துள்ள மரம், செடி, கொடி, மலர், மண், மலை, அருவி, ஆறு, குளம், அதில் வாழும் பலப்பல பறவைகள், விலங்குகள் என சங்ககாலப் புலவர்கள் விளக்கிக் கொண்டே செல்வதைப் படிக்கப் படிக்க இயற்கை மீது அவர்கள் கொண்ட ஈடுபாடும், அவர்களின் நுண்ணறிவும் புலப்படும். உதாரணமாக ஐங்குறுநூற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களின் தலைப்பில் சிலவற்றைக் காணலாம். வேழப்பத்து, கள்வன்பத்து, எருமைப்பத்து, வெள்ளான்குருகுப்பத்து, சிறுவெண்காக்கைப்பத்து,………..

    //தத்துவ ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தெரியவில்லை.//

    சங்கம் நிறுவப்பட்டதின் நோக்கமே, புலவர்களும் அறிஞர் பெருமக்களும் ஒன்றுகூடி பொதுவான கருத்தைப் பற்றி விவாதிக்கத்தான் என்று கருதுகிறேன். வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தும் சங்ககாலப் பாடல்களில் வாழ்க்கை நெறியைப் பற்றி விளக்குவதில் அடங்கிவிடுகின்றன என்பது என் தாழ்மையான கருத்து.

    தத்துவங்கள் என்பதற்கு மதரீதியான அடையாளம் எதுவும் சங்க காலத்தில் பூசப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் வந்த சமய இலக்கியங்கள் அந்தப் பணியைச் செய்தன. அவற்றில் தாங்கள் கூறி இருப்பது போல வடமொழிக் கருத்துக்கள் நிறைந்திருப்பதாகவே படுகிறது.

    இது தவிர்த்துத் தாங்கள் குறிப்பிட்டுள்ள பல நிறை/குறைகள் இருக்கவே செய்கின்றன. நம்மை நாமே தொடர்ந்து சரி செய்துகொள்ள முயற்சித்துக் கொண்டே இருப்போம்.

    மிகவும் ஆழ்ந்த சிந்தனையுடன், ஆராய்ச்சி நோக்கில் இக்கட்டுரையைப் படைத்தமைக்காக என் மனமார்ந்த பாராட்டுக்கள். கட்டுரையில் முடிவில் தமிழாசிரியர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க பண்பு.

    சங்கத்தமிழன் சாகா வரம் கேட்டானோ இல்லையோ, சங்கத் தமிழ் சாகா வரம் பெற்று நம்முடன் நிலைத்து விட்டது.

    நன்றி!

  7. //சங்ககாலப் புலவர்கள் அனைவரும் வடமொழி கற்றிருந்தனர் என்பது போல எழுதி இருந்தீர்கள். அவ்வாறு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது என் பணிவான கருத்து//

    இதனை அடியேன் ஒப்புக் கொள்ளவில்லை. வேத அத்யயனம் எனபது காஷ்மீரம் முதல் குமரி வரை பறந்து இருந்த ஒன்று. தமிழகம் மட்டும் விலக்கல்ல. துங்கபத்ரை முதல் தமிழகம் ஆரம்பிக்கிறது. இன்றைய தமிழக எல்லை சிறியது. சோழ தேசம் என்ற பெயரே வேத சம்பந்தம் உடையது. பரசுராமரால் கேரளத்துக்கு தன்ஹாவூர் பக்கம் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்தணர்கள் அங்கே இருக்காமல் திரும்பி வந்தனர். பரசுராமர் மாற்றம் செய்த ஆசாரம் உச்சிக்க்குடுமி. சோளத்தின் குடுமி போல அது இருந்ததால், அவர்கள் திரும்ப வந்து எங்கே குடிஎரினார்களோ அந்த தேசம் சோள தேசம் ஆனது. தமிழின் சாம வேத பிரதானத்தால் ளகாரம் ழகாரம் ஆகி சோழ தேசம் ஆனது.
    சங்க இலக்கியத்தில் முக்கோல் அந்தணர் என்று வரும். சந்தேகம் இன்றி அது வேதமததின் த்ரிதண்டத்தை குறிப்பது. வேதம் படிக்காமல் இது மட்டும் யாரும் வைத்திருக்கப்போவதில்லை. சரி சந்நியாசியாக்கும் என்று பார்த்தால் முப்புரிநூலும் முத்தீ (ஐந்தீ) ஓம்பும் அந்தணர் என்றும் வருகிறது. இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தமிழ் தேசத்தில் வேத அத்தியயனம் தடையற ஜாம் ஜாம் என்று நடந்ததை காட்டுகிறது.

    சிலப்பதிகாரத்திலேயே (சமணர் எழுதிய நூலிலேயே) பாண்டியனுடைய மதுரை வேத கோஷத்தில் கண் விழித்தது என்று வரும். “கூடாரக் காவதம் கூறுமின்” என கோவலன் (கோபாலன் என்பதின் தமிழாக்கம்) கேட்டதற்கு பாணர்கள் கூறும் விடையில் அப்படி வரும். பத்மநாபசுவாமி கோயில் பற்றி வரும்.

    இன்ன மாசத்தில் இன்ன நாளில் இன்ன திதியில் மதுரை எரியூட்டப்பெறும் என்ற சோதிடச் சொல் இருப்பதாக கண்ணகியிடம் சொல்லப்படும், சிலம்பில். சோதிடம் வேதத்தின் ஆறாவது அங்கம். வேத புருஷனின் கண் ஆகும் சோதிடம். வேதம்

    // வடமொழியை அவர்கள் கற்றிருந்தால் நிச்சயம் அவற்றைத் தங்கள் தமிழ்ப் பாடல்களில் பரவலாகப் பயன்படுத்தி இருப்பார்கள். //

    ஆங்கிலத்தை கற்றிருந்தால் நிச்சயம் அவற்றை வல்லமையில் எழுதுவோர் பரவலாகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று சொன்னால் ஏற்பீர்களா? எனக்கும் தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும். ஆனால் இங்கே, முறையான தமிழில் எழுதவில்லையா? அது போலத்தான். வடமொழி அறிந்தாலும் தமிழில் எழுதும் காலம் தமிழை சுத்தமாக கையாண்டார்கள்.

    சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலக் கல்வெட்டில் தமிழும் செப்பேடுகளில் வடமொழியும் தான் பயன்படுத்தப் பட்டன எனபது நாம் அறிந்தது,.

    தமிழ்நாடு வடமொழிக்கு அப்பாற்ப்பட்டதல்ல. தமிழ் சொற்களில் பல, நாம் அறியாமலேயே வடமொழியில் இருந்து வந்தவை. உச்தாரணம்: உதாரணம், அமைச்சர், நித்திலம், முத்து, மங்களம்/மங்கலம்……..

  8. மதிப்பிற்குரிய திரு. சச்சிதாந்தம் அவர்களே,

    //சங்ககாலப் புலவர்கள் அனைவரும் வடமொழி கற்றிருந்தனர் என்பது போல எழுதி இருந்தீர்கள். அவ்வாறு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது என் பணிவான கருத்து//

    இதனை அடியேன் ஒப்புக் கொள்ளவில்லை. வேத அத்யயனம் எனபது காஷ்மீரம் முதல் குமரி வரை பறந்து இருந்த ஒன்று. தமிழகம் மட்டும் விலக்கல்ல. துங்கபத்ரை முதல் தமிழகம் ஆரம்பிக்கிறது. இன்றைய தமிழக எல்லை சிறியது. சோழ தேசம் என்ற பெயரே வேத சம்பந்தம் உடையது. பரசுராமரால் கேரளத்துக்கு தஞ்சை பக்கம் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்தணர்கள் அங்கே இருக்காமல் திரும்பி வந்தனர். பரசுராமர் மாற்றம் செய்த ஆசாரம் உச்சிக்க்குடுமி. சோளத்தின் குடுமி போல அது இருந்ததால், அவர்கள் திரும்ப வந்து எங்கே குடி ஏறினார்களோ அந்த தேசம் சோள தேசம் ஆனது. தமிழின் சாம வேத பிரதானத்தால் ளகாரம் ழகாரம் ஆகி சோழ தேசம் ஆனது.
    சங்க இலக்கியத்தில் முக்கோல் அந்தணர் என்று வரும். சந்தேகம் இன்றி அது வேதமததின் த்ரிதண்டத்தை குறிப்பது. வேதம் படிக்காமல் இது மட்டும் யாரும் வைத்திருக்கப்போவதில்லை. சரி சந்நியாசியாக்கும் என்று பார்த்தால் முப்புரிநூலும் முத்தீ (ஐந்தீ) ஓம்பும் அந்தணர் என்றும் வருகிறது. இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தமிழ் தேசத்தில் வேத அத்தியயனம் தடையற ஜாம் ஜாம் என்று நடந்ததை காட்டுகிறது.

    சிலப்பதிகாரத்திலேயே (சமணர் எழுதிய நூலிலேயே) பாண்டியனுடைய மதுரை வேத கோஷத்தில் கண் விழித்தது என்று வரும். “கூடற்க்காவதம் கூறுமின்” என கோவலன் (கோபாலன் என்பதின் தமிழாக்கம்) கேட்டதற்கு பாணர்கள் கூறும் விடையில் அப்படி வரும். பத்மநாபசுவாமி கோயில் பற்றி வரும். காவதம் எனபது காதம் என்பதின் தமிழ்ச்சொல்.

    இன்ன மாசத்தில் இன்ன நாளில் இன்ன திதியில் மதுரை எரியூட்டப்பெறும் என்ற சோதிடச் சொல் இருப்பதாக கண்ணகியிடம் சொல்லப்படும், சிலம்பில். சோதிடம் வேதத்தின் ஆறாவது அங்கம். வேத புருஷனின் கண் ஆகும் சோதிடம். வேதம்

    // வடமொழியை அவர்கள் கற்றிருந்தால் நிச்சயம் அவற்றைத் தங்கள் தமிழ்ப் பாடல்களில் பரவலாகப் பயன்படுத்தி இருப்பார்கள். //

    ஆங்கிலத்தை கற்றிருந்தால் நிச்சயம் அவற்றை வல்லமையில் எழுதுவோர் பரவலாகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று சொன்னால் ஏற்பீர்களா? எனக்கும் தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும். ஆனால் இங்கே, முறையான தமிழில் எழுதவில்லையா? அது போலத்தான். வடமொழி அறிந்தாலும் தமிழில் எழுதும் காலம் தமிழை சுத்தமாக கையாண்டார்கள்.

    சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலக் கல்வெட்டில் தமிழும் செப்பேடுகளில் வடமொழியும் தான் பயன்படுத்தப் பட்டன எனபது நாம் அறிந்தது,.

    தமிழ்நாடு வடமொழிக்கு அப்பாற்ப்பட்டதல்ல. தமிழ் சொற்களில் பல, நாம் அறியாமலேயே வடமொழியில் இருந்து வந்தவை. உச்தாரணம்: உதாரணம், அமைச்சர், நித்திலம், முத்து, மங்களம்/மங்கலம்……..

    அன்னியமாக நினைத்தால் தான் அன்னியம். நம்முடையது என்று நினைத்தால் நம்முடையது. அப்போ இந்த பிரச்சினை வராது.

  9. மதிப்பிற்குரிய நண்பர்கள் திரு.புவனேஸ்வர் மற்றும் திரு.ஆலாசியம் அவர்களுக்கு,

    சோழ நாட்டின் பெயர் காரணம் குறித்துத் தங்கள் கூறியிருக்கும் செய்தி எனக்கு மிகவும் புதியது. இதற்கான ஆதார நூல் பற்றிக் கூறினால் நானும் அதைப் பற்றிப் படித்து மேலும் தெரிந்து கொள்வேன்.

    //சங்க இலக்கியத்தில் முக்கோல் அந்தணர் என்று வரும். சந்தேகம் இன்றி அது வேதமததின் த்ரிதண்டத்தை குறிப்பது. வேதம் படிக்காமல் இது மட்டும் யாரும் வைத்திருக்கப்போவதில்லை. சரி சந்நியாசியாக்கும் என்று பார்த்தால் முப்புரிநூலும் முத்தீ (ஐந்தீ) ஓம்பும் அந்தணர் என்றும் வருகிறது. இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தமிழ் தேசத்தில் வேத அத்தியயனம் தடையற ஜாம் ஜாம் என்று நடந்ததை காட்டுகிறது.//

    சங்க காலத்தில் அந்தணர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மையே. பொதுவாகவே தம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் உற்றுநோக்கி அதை கவிதையில் பதிவு செய்வது கவிஞர்கள் வழக்கம். இந்தத் திறன் சங்க இலக்கியப் புலவர்களிடம் மிகவும் அபரிமிதமாக இருந்தது என்பதற்கு அவர்களின் பாடல்களே சான்று. காலங்காலமாக தாங்கள் கண்டு களித்த இயற்கைக் காட்சிகளையே அவ்வளவு நுணுக்கமாகக் கண்டு பதிவு செய்தவர்கள் புதிதாகத் தமிழகத்தில் குடியேறியவர்களின் பழக்க வழக்கங்களைக் கவனிக்காமலா இருந்திருப்பார்கள். அப்படி கவனித்து எழுதியதால் கிடைத்த அழகான சொற்றொடரே “முக்கோல் அந்தணர்” என்பது.
    எனவே அக்காலத்தில் ஆட்சியாளர்களின் தயவுடன் வேத அத்தியயனம் ஜாம் ஜாம் என்று நடந்திருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை.

    //சிலப்பதிகாரத்திலேயே (சமணர் எழுதிய நூலிலேயே) பாண்டியனுடைய மதுரை வேத கோஷத்தில் கண் விழித்தது என்று வரும். “கூடற்க்காவதம் கூறுமின்” என கோவலன் (கோபாலன் என்பதின் தமிழாக்கம்) கேட்டதற்கு பாணர்கள் கூறும் விடையில் அப்படி வரும். பத்மநாபசுவாமி கோயில் பற்றி வரும். காவதம் எனபது காதம் என்பதின் தமிழ்ச்சொல்.//

    சங்க காலத்திலேயே வேதம் ஓதப்பட்டது என்பதால் அதற்குக் காலத்தால் சற்றுப் பிந்திய சிலப்பதிகார காலத்திலும் ஆட்சியாளர்களின் தயவுடன் ஓதப்பட்டே இருக்கும். கோபாலன் என்பதன் தமிழாக்கம் கோவலன் அல்ல நண்பரே. கோவலன் என்பதின் வடமொழி ஆக்கமே கோபாலன் என்பதே சரியாக இருக்கும்.

    //இன்ன மாசத்தில் இன்ன நாளில் இன்ன திதியில் மதுரை எரியூட்டப்பெறும் என்ற சோதிடச் சொல் இருப்பதாக கண்ணகியிடம் சொல்லப்படும், சிலம்பில். சோதிடம் வேதத்தின் ஆறாவது அங்கம். வேத புருஷனின் கண் ஆகும் சோதிடம். வேதம்//

    சோதிடச் சொல்லைச் சொன்னது யார் என்று அதில் சொல்லப்பட்டுள்ளதா நண்பரே? தமிழர்களின் வானியல் அறிவு என்பது மிகவும் பறந்து விரிந்தது. வரலாற்றின் சுவடுகள் நமக்குக் கிடைக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே சோதிடத்தை குலத்தொழிலாகவே கொண்ட வள்ளுவர் இனம் இன்னும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    மேலும் பெரிய புராணத்திலும் சேக்கிழார் பெருமான் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் கலியாணத்திற்கு “கணித நூல் புலவர்” நாள் குறித்துக் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணித நூல் புலவர் என்பது வள்ளுவக் குடிகளாகவே இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

    //ஆங்கிலத்தை கற்றிருந்தால் நிச்சயம் அவற்றை வல்லமையில் எழுதுவோர் பரவலாகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று சொன்னால் ஏற்பீர்களா? எனக்கும் தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும். ஆனால் இங்கே, முறையான தமிழில் எழுதவில்லையா? அது போலத்தான். வடமொழி அறிந்தாலும் தமிழில் எழுதும் காலம் தமிழை சுத்தமாக கையாண்டார்கள்.//

    சங்ககாலப் புலவர்கள் வடமொழியில் பாடல்கள் இயற்றவில்லை. எனவே அவர்கள் வடமொழி அறியாதவர்கள் என்று நான் குறிப்பிடவில்லை. அவர்கள் வாடமொழியைக் கற்றிருந்தால் அம்மொழியில் உள்ள உயரிய கருத்துக்கள் அவர்கள் இயற்றிய இயற்கையினும் இனிய தமிழ்ப் பாடல்களில் நிச்சயம் பரவலாக இடம் பெற்றிருக்கும் என்றே நான் குறிப்பிட்டேன். அவ்வாறு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லாததால் ஒருவேளை இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருக்கக் கூடும் என்பதால் சங்ககாலப் புலவர்கள் அனைவரும் வடமொழி கற்றிருந்தார்கள் என்ற கூற்றை நான் மறுக்கிறேன்.

    இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    நம் அனைவருக்கும் பரிச்சமான தேசியக் கவி பாரதியை எடுத்துக் கொள்வோம்.
    அவரது அகன்ற வடமொழி ஞானம் நாம் அனைவரும் அறிந்ததே. அவரது வடமொழிப் புலமை தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படும்படி அதனை எளிமைப் படுத்தி அதன் சீரிய கருத்துக்களை செந்தமிழ்க் கவிதைகளில் வடித்துக் கொடுத்தார். அதனால் தமிழ்ச் சமுதாயம் அடைந்துள்ள பயன்கள் எண்ணற்றவை.

    நமது வல்லமையிலும் “பாரதியின் வேதமுகம்” என்ற தலைப்பில் திரு.கோதண்டராமன் ஐயா அவர்கள் இக்கருத்தை மிகவும் அழகாக விளக்கி எழுதி இருந்தார்கள்.
    வடமொழி மட்டுமல்லாது மேனாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் பாரதி விரும்பிப் படித்து அதன் கருத்துக்களைத் தனது கவிதைகளில் பிரதிபலித்தார்.

    இவ்வாறான எந்தவொரு வடமொழி அறிவின் பிரதிபலிப்பும் இல்லாத சங்க இலக்கியப் பாடல்களை இயற்றிய புலவர்கள் அனைவரும் வடமொழி அறிந்திருந்தார்கள் என்பதை எதன் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது.

    //சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலக் கல்வெட்டில் தமிழும் செப்பேடுகளில் வடமொழியும் தான் பயன்படுத்தப் பட்டன எனபது நாம் அறிந்தது,//

    அந்தக் கல்வெட்டுகள் எல்லாம் தமிழகத்தை தமிழர் அல்லாத பிற இன மன்னர்கள் ஆளத் தொடங்கிய காலத்திற்கு பிற்பட்டவையாக இருக்கும் என்பது என் கருத்து. சீனத்துடன் நட்புறவு கொண்டிருந்த தமிழக அரசுகளின் பயனால் தற்பொழுது சீனாவில் ஒரு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நட்பு நாட்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழைப் பயன்படுத்தச் செய்த தமிழனால் தம் சொந்த நாட்டுக் கல்வெட்டில் தமிழை சில நூற்றாண்டுகள் பயன்படுத்த முடியாமல் போனது உண்மையிலேயே மனதை நெருடுகிறது நண்பர்களே!

    //தமிழ்நாடு வடமொழிக்கு அப்பாற்ப்பட்டதல்ல. தமிழ் சொற்களில் பல, நாம் அறியாமலேயே வடமொழியில் இருந்து வந்தவை. உச்தாரணம்: உதாரணம், அமைச்சர், நித்திலம், முத்து, மங்களம்/மங்கலம்……..
    //

    வடமொழியிலிருந்து சொற்களை தமிழ் மொழி ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கதே.

    தங்களின் கட்டுரை தொடர்பாகவும் கவிதை தொடர்பாகவும் மேலும் பலப்பல சந்தேகங்கள் என் மனதில் எழுந்து கொண்டே இருக்கும் போதும் பின்னூட்டத்தின் நீளம் ஏற்கனவே அதிகரித்து விட்டதால் அவற்றைப் பற்றிய கேள்விகளை எழுப்பவில்லை.

    நன்றி!!

  10. மதிப்பிற்குரிய சச்சிதானந்தம் ஐயா!
    தங்களின் பாராட்டுகளுக்கு எனது இதயப் பூர்வமான நன்றிகள்.

    //பங்கமில்லாத் தமிழோடு வடமொழியும் கற்றாரே
    அங்ஙனம்கற்காத் தமிழறிஞர் யாருளரோ//

    தங்களின் பின்னூட்டம் பார்த்தவுடன் இதை ‘அஞ்ஞனம் கார்காத் தமிழறிஞர் வெகுசிலரே’ அல்லது ‘யாருளரோ?’ என்று செய்யலாம் என்றெண்ணினேன்… இருந்தும் வேறு சான்று இருக்கிறதா என்று தான் தேடுவோமே என்றும் துணிந்தேன்.

    தமிழ்மொழி வரலாறு – தி.போ.மீ களஞ்சியம். பக்கம் 260 ல் இதைக் காண்கிறேன்.
    தொல்காப்பியத்தில் காமம் முதலான சமஸ்கிருதச் சொற்கள் உண்டு அனைத்திந்தியத் தனமி உடைய ‘அறம்’ ‘பொருள்’ ‘காமம் என்னும் கருத்துவாக்கம் தொல்காப்பியத்தில் காணப் படுகிறது.

    தொல்காப்பியத்திலே வழக்கில் வாராத  வடிவங்களில் எல்லாம் பல சமஸ்கிருதச் சொற்கள் சங்க இலக்கியத்திலே வருகின்றன 

    சான்று: பவனர், பூபம்.
    சமஸ்கிருதப் பெயர்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
    (இப்போது நாமிருவருக்கும் இருப்பதை போல 🙂 )

    மார்க்கண்டேயனார், உருத்திரன், வான்மீகியார், கங்கை
    காப்பியனார் சொற்களை இயற், திரி, திசை மற்றும் வடசொல் பற்றியக் குறிப்பு..

    காப்பியர் காலத்தில் இலக்கணம் வகுத்தக் காலத்தில் இருந்தது அதைப் பற்றிய கருத்து இலக்கணத்திலே என்றால். அதை படித்திடாத புலவர்களே  அதிகம் என்றால் இங்கே காப்பியனார் என்னென்னமோ எழுதுகிறாரே என்ற கேள்வி வந்திருக்குமா இல்லையா? எண்ட கேள்வியும் வந்து நிற்கிறது.

    இதற்கு மேலாக, பாடப் பட்டவர்களின் பெயர்களைப் பாருங்கள்… எத்தனை சம்ஸ்கிருத வார்த்தைகள் புனையாக.

    இன்றைக்கு நம்மிடமே காணும் ராபர்ட், ஜோசப்,  சார்லஸ் இந்தப் பெயர்கள் புழக்கத்திலே வந்தது எப்போது… அந்த பெயர் தொடர்பான விசயங்களைப் படிக்காமல் அதை ஏற்காமல் அதை வைத்துக் கொண்டார்களா என்ற எண்ணமும் தொக்குகிறது!

    மேற்கூறிய நூலிலே 258 ம் பக்கத்தில் இன்னமும் நிறைய விளக்கங்கள் இருக்கின்றன.
    அதாவது நாம் பேசுவது உபநிடதக் காலமே… இந்த நூலில் கூறுகிறார். ஆரியர்கள் வேத காலத்திலிருந்து திராவிடர்கள் (தென் இந்தியர்களுடன்) தொடர்பு கொண்டதாக் நம்பப் படுகிறது………. இன்றைய சமஸ்கிருதம் போன்றது அல்ல அந்த பழைய சமஸ்கிருதம் என்றும் சொல்வார்கள்.. அது ஓரளவிற்கு பாரதி சாமர்த்தியமாக அறிந்தவன் என்பது கூட அறிஞர் கூற்று. சசக்ஸ் இருவேறுத் தன்மை யுள்ளவைகளும் இருப்பது ஆய்வுக்கு உரியது.

    மன்னன் தமிழைப் பெற்று அதை போற்றினான் என்றால்… அந்த மன்னன் தனது பெயரோடு அம்மொழித் தொடர்புள்ள பெயர்களை வைத்தும் கொடார் என்றால் அவனுக்கு யாரிடம் இருந்து அந்த அறிவு சென்றிருக்கும். அப்படி அந்த அறிவை புலவர்கள் தராது இருந்தால் அவர்களை அரண்மனைக் கதவுகளுக்கு வெளியே நிறுத்தி விட்டு இவைகளை கற்றுத் தந்த வான் மாத்திரமே தானே மன்னனின் நெருக்கத்திற்கு உரியவனாயிருப்பான்.

    அப்படி ரிக்க புலவன் விரும்பாவிட்டாலும் அதை பயின்று தானே இருக்க வேண்டும். அதற்கு மேலே இப்போது நம்மிடம் இருக்கும் இத்தனை ஆழமான துவேசம் அந்த தமிழர்களிடம் இருந்திருக்க வழியில்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது.    

    ‘யாது ஊரே யாவரும் கேளீ’ர்’ என்பவர்கள் காலம். உலகத்தை அன்பெனும் ஒரேப் பார்வையில் பார்த்தக் காலம். பண்பாட்டால் செம்மார்ந்திருந்தவர்கள், அதிகம் கற்றவர்கள் விஷய ஞானம் உள்ளவர்கள் அப்படி மறுத்தும் எதிர்த்தும் இருக்கமாட்டார்கள், அதற்கு மாறாக நாமும் அதை கற்போம் என்று தான் இருந்திருக்கணும். இலக்கனாசிரியன் வகுத்தான் என்றால் அதை பின்பற்றுவர் இருந்தப் பிறகு தான் அதை வகுத்தும் இருக்கணும். 

    மகாகவி பாரதி பல பாஷைகள் கற்று இருந்தவன் (பிரிக்கமுடியாத அளவிற்கு மறைமலை அடிகளே ரொம்ப சிரமப் பட்டு மேடையோடு தான் முடிந்தது)  அப்பேர்ப் பட்ட சமஸ்கிருதம் தவிர வேறெதையும் அவர் தனது ஆக்கத்திலே  சேர்க்கவில்லை. ஆங்கிலத்தை தனியாகச் செய்திருக்கிறார். கற்ற மொழிக்குத் தொடர்பான தகவல்களை ஆக்கமாக்க முயலுகையில் அம்மொழியைத் தவிர்த்திருக்கவும் முடியாது.

    தர்க்கத்திற்காக அல்ல எதார்த்தமாக…. தாங்கள் கூறியது போன்றும் எல்லோரும் கற்றிருப்பார்களா என்பது மறுப்பதிற்கில்லை… தாங்கள் கூறிய அளவுகோலைக் கொண்டு மட்டுமே கணிக்கவும் முடியாது. இன்றையத் தமிழனின் மன நிலை வேறு கடவுச் சீட்டு அற்ற அன்றைய தமிழன் வேறாக இருந்திருப்பான்… மிகவும் திறந்த மனது புதிய கருத்தை பற்றிய ஆவலும் இருந்திருக்கும். இருந்தும் ஆய்வுக்கு உரியதும் கூட.

    இன்னமும் ஆய்ந்தால் சங்க காலப் புலவர்கள் சமஸ்கிருதம் கற்றிருந்திருப்பதை காண முடியும் என்பதூ எனது கருத்துமே. முடிந்தால் அதற்கும் தனியாக பதிவு எழுதுவோம். 🙂

  11. /////சங்கம் நிறுவப்பட்டதின் நோக்கமே, புலவர்களும் அறிஞர் பெருமக்களும் ஒன்றுகூடி பொதுவான கருத்தைப் பற்றி விவாதிக்கத்தான் என்று கருதுகிறேன்.////

    இருக்க்கலாம், தங்களது ஆக்கங்களை அரங்கேற்றவும்… கற்றதை இப்போது நாம் இருக்கும் வேலைகளிலும் செய்வதைப் போல் அதையே வேலையாக இருந்தவர்கள் அப்படி கூடி இருப்பதும் அதற்கு மன்னன் உதவி இருப்பதும் நடந்திருக்கும்…

    தமிழன் அக்காலத்தில் புலன் இன்பங்களில் (நியாயமான முறையில்) அனுபவித்தக் காலமும் அல்லவா.. தமிழ் தான் போதை நிறைந்த அமுதமாயிற்றே!

  12. ///தன்னைச் சார்ந்துள்ள மரம், செடி, கொடி, மலர், மண், மலை, அருவி, ஆறு, குளம், அதில் வாழும் பலப்பல பறவைகள், விலங்குகள் என சங்ககாலப் புலவர்கள் விளக்கிக் கொண்டே செல்வதைப் படிக்கப் படிக்க இயற்கை மீது அவர்கள் கொண்ட ஈடுபாடும், அவர்களின் நுண்ணறிவும் புலப்படும். ///

    அவர கூற வருவது.. புல்லைப் பூண்டாய், வல்லசுரறாய், தேவ கணங்களாய் .. என்று வரிபடுத்துகிறாரே அந்த தொடர்சிகுள்ள சம்பந்தம்.. உலக உயிர்களின் ஆத்மத் தொடர்பு.. மனித இறப்புக்கு பின்பான நிலை.. உப்பர் உலகு என்பதைப் பற்றிய கருத்து.. இறப்பிற்கு பிறகு ஆத்மா எடுக்கும் நுட்பமான சூட்சும உடல்…. அதற்கும் மேலாக தவம் கொடு முக்தி பெற்றவர்கள் எடுக்கும் காரண உடல் என்ற தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சியை கூறுகிறார்..

    தைகள் கூறுவது நிலம் பொழுதை பிரித்து இயற்கையின் பயனை சீற்றத்தை கொடுமை சரியான முறையிலே வாழ தனது வாழ்வியலை அமைத்துக் கொண்ட தமிழரின் விழுமத்தை அல்லவா..

  13.  ///வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தும் சங்ககாலப் பாடல்களில் வாழ்க்கை நெறியைப் பற்றி விளக்குவதில் அடங்கிவிடுகின்றன என்பது என் தாழ்மையான கருத்து///

    வாழ்க்கைத் தத்துவங்கள் என்பது வாழ்வியலைப் பற்றிய உரைப்பென்றால் தாங்கள் சொல்வது சாலப் பொருந்தும்.

    தத்துவ ஆராய்ச்சி என்றது அகநோக்கு தத்துவ ஆராய்ச்சி…. தூலப் பொருள்களை அதன் அழகை, அதன் தன்மையை, பயனை முழுதும் அறிந்து ஏன்  ஆண்பெண் கலவி கூட எப்போது வேண்டும் என்பதற்கு கூட இஅல்க்கனம் கண்டு பொருளீட்ட செல்பவன் வழக்கமாக எப்போது திரும்பி வருவான் என்றெல்லாம் கணக்கு கொண்டு வாழ்ந்த குடியாயிற்றே… பேராசிரியர் குறிபிட்டது வேத முனிவர்கள் செய்தது போன்ற அக முக தத்துவ ஆராய்ச்சி என்பதை. இக லோக வாழ்க்கையை இனிதே கைக் கொண்ட இனம் என்பதில் ஐயம் இல்லை இவனே உலகிற்கும் முன்னணி…

    இப்போது அறிவியல் சொல்லுகிறதாம் ஆழ்மனத்தின் சக்தி வெளிமனத்தின் சக்தியை விட 30,000 மடங்கு அதிகம் என்று.. எப்படி இப்படி அளவு குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. பரபிரமத்தின் ஒரு துளி உயிர்களின் ஆத்மா ஒரு துளியானாலும் அமிர்தம் அமிர்தம் தானே…

    அதைக் குறிப்பிடுகிறார். செல்வம் கொழித்தது…. உண்டும் குடித்தும், கூத்தும் பாட்டுமாக போனான் தமிழன் இடையிலே சண்டை. .. பொதுவாக நிறைய பண இருந்தால் கூட எத்தனை பேர் சரியாக வரியை செலுத்துகிறார்கள்… வாழ்வியல் தத்துவம், பண்பாடு, கட்டொழுங்கு எழுத்தில் இப்போது போலவே அப்போதும் இருந்திருக்கும் அல்லவா..
    இந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் புறம் கூறுவது அது தானே..

    அளவுக்கு மீறும் போது ….. இதுவும் மனோதத்துவம் தான் புலன் இன்பத்தில் திளைத்தவனை அந்த புலன்களுக்கு தர்மமான முறையில் முதலில் இன்பங்களைத் தந்து அவன் மன நோய் ஓரளவிற்கு குனமானப் பின்பு அவனை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அளவிற்கு மாற்ற செய்யும் முயற்சி தான் பக்தி இயக்கத்திற்கான இறைவனின் ஏற்பாடு….

    இசையும், நாட்டியமும், கண்ணுக் காட்சியாக விக்ரக அலங்காரம் என்று அனைத்தையும் கோவில்களிலே கிடைக்கச் செய்தது பக்தி.. என்ன செய்வது ஏழைகளின்  வறுமையையும், தனது அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துதல் அங்கேயும் வக்கிர புத்தி உள்ளவன் அரங்கேற்றி இருக்கிறான்… இப்படி ஆய்ந்தால் தொடர்கிறது.. பக்தி காலம் இறைவன் எப்படி எதற்காகத் தொடங்கினான் அது மனிதன் எந்தக் கதி ஆக்கினான். இதற்கு மேலும் இதைப் பற்றிய விசாரணை தெளிவாக நியாயமாக ஆராய வேண்டியதே. 🙂

  14. ////தத்துவங்கள் என்பதற்கு மதரீதியான அடையாளம் எதுவும் சங்க காலத்தில் பூசப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் வந்த சமய இலக்கியங்கள் அந்தப் பணியைச் செய்தன. அவற்றில் தாங்கள் கூறி இருப்பது போல வடமொழிக் கருத்துக்கள் நிறைந்திருப்பதாகவே படுகிறது./////

    இதற்கான விளக்கமாக மேல் உள்ளதும் அதாவது மதமாற்றம் செய்ய மேற்கொண்ட ஒரு நல்ல ஏற்பாடும் ஆம்.  புலனின்பத்தில் திளைப்பவனை எல்லாம் விட்டுவிட்டு தியானத்தில் அமரச் சொன்னால் அமர்வானா.. நான் வீட்டிலே எனது குழந்தைகளுடன் சீட்டு ஆடுவதுண்டு.. எனது 87 வயது தந்தை அதை கண்டும் காணாமல் போகிறார். நான் சிறுவயதில் அவரிடம் வாங்கிய அடி எனக்கு ஞாபகம் இருக்கு… அப்படி செய்யாமல் நான் என் பிள்ளைக்கு இப்படி செய்கிறேன். காலம் மாறிடுச்சு.. அப்போ அது சரியே!

    இந்து மதமும் வேதமும் மனித சுதந்திரத்தை தடை செய்யவில்லை…. வேதாந்தம் கூறுவது  சுதந்திரம் ஆத்மாவின் பிறப்பு (ஆத்மா.. பிறப்பு என்பது தத்துவ ரீதியாக தவறு) உரிமை.
    அதைதான் முழக்கமாக திலகர் ஆரம்பித்தார்.

    மதம் என்னும் வலையைப் பின்னியது மனிதன். அகப் படுவது அவனது அறிவீனம். இருந்தும் ஒவ்வொரு மூடனம்பிக்கக்கும் ஒரு மறைவான உண்மைக் காரணம் இருக்கும் என்பார் விவேகானந்தர்.  

    அத்வைதம் அதைப் போதிக்கிறது. அதாவது மனிதப் பிறவிகளின் லட்சியம் வாழும் போதே ஒளி பெற வேண்டும் இல்லையாயின் மீண்டும் பிறப்போம். அது அவனவன் செய்த பாவ புண்ணியத்தை பொறுத்து தெரு வோரமா.. அல்லது பில்கேட்  வீட்டிலா என்பது.. இருந்தும் தேவர்கள் கூட அமரத்தனமைப் பெற மனிதனாக வந்து தான் தவம் பூண்டு அமரநிலை எய்த வேண்டும் என்பது வேதம் முடிபு…

    எல்லாம் அரசியல் தான்.. இறைவனை சரியாகப் புரிந்துக் கொள்ளாமல் மாயையின் வலையில் மாட்டியவர்களின் நாடகங்கள். நாம் புறப் பொருளைப் பார்த்து உணர்ச்சிவசப் பட்டப் பழகியவர்கள்… இருந்தும் அதற்கும் அகத்திற்கும் தொடர்பு உண்டென்றாலும்.. அறிவோடு நோக்க வேண்டியதை கூறுகிறார் பேராசிரியார். தட்டச்சு பிழைகள் இருந்தால் தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளவும்.. நேரமில்லை அவைகளை சரி செய்ய..

  15. திருவாளர்கள்  இருவருக்குமாக மீண்டும் எனது வணக்கங்கள்.

    நான் புராணத்தை இதில் கொண்டுவர வில்லை.. ஆத்மீக வாதிகளின் கருத்துப் பகிர்வேற்றாலும்.. (அதை எல்லோரும் ஏற்பதில்லை ன்பதை மனதில் கொண்டு)

    பாரதியைப் பற்றி சில கருத்தை கூறி இருக்கிறீர்கள்.. அதைப் பார்க்கும் முன்னமே அவரைத் தொடர்பு படுத்தியும்.. எனது பதில் பின்னூட்டத்தில் கூறி இருக்கிறேன்.

    அறிவியல் கவிதை என்றால் அது மிகுந்த மொழியைத் தவிர்க்கவே முடியாது. சுனாமியை பார்க்காதவன் அதே மொழியில் அழைக்கிறான்.. நாமோ ஆழிப் பேரலை என்கிறோம் காரணம் நாம் கண்டிருக்கிறோம். 

    சங்ககாலத்திற்கு முன்னமே தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது ஆய்வாளரின் முடிபு…. இருந்தும் எனது முந்தையப் பின்னூட்டங்கள் தனகுளின் கடைசி பின்னூட்டத்திற்கான சிலவற்றிற்கு பத்தி தரும். 

    தமிழ் மிகப் பழைய மொழி என்பது பேருண்மையே.. ஆக முந்தியது, வேதகால சமஸ்கிருதமா.. தமிழா என்ற சர்ச்சை வேண்டாம் அது ஆன்மீக வாதிகளின் ஆழ்ந்த நம்பிக்கையான ஆதிசிவனிடம் இருந்துப் பிறந்த இரட்டை மொழியென்று… நான் அந்த வகையச் சேந்தவன் இருந்தும் அதை ஆராய முடியுமா.. முடிந்து கூறினால் அதையும் கேட்டுனரவும் விரும்புகிறேன்….

    கொரிய மொழியிலே ஐநூறு வார்த்தைகள் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டு இருக்கிறதாம்.. ஜப்பானிலே வார்த்தைகள் உண்டு… ஆங்கிலம் சொல்லவே வேண்டாம்…  இப்படி பெரிய வர்த்தக மையமாக இருந்த தென் இந்தியாவின் தொன்மையான மொழி மற்ற மொழிகளுக்கு தாயாக இருக்கவும் வழி இருக்கிறது. 

    இப்போது மூத்தது எது என்பது என்னைப் பொருத்தவரையில் அவசியம் இல்லாதது…. இரண்டுக் குழந்தைகளில் ஓன்று உள்நோக்குடையது… பிரபஞ்ச ரகசியத்தை நோக்குவது.. இன்னொன்று புற நோக்கு உடையது.. உருவமும் அதுவே அருவமும் அதுவே…. தமிழும் அதுவே சமஸ்கிருதமும் அதுவே… இந்த பிரபஞ்சமும் அதுவே அதனின் அணுவினும் அணுவும் அதுவே… நீங்களும் அதுவே நானும் அதுவே.. அது அல்லாத ஓன்று எதுவும் இல்லை.. அதைப் போன்ற ஓன்று எங்கும் இல்லை.. காலங்களைக் கடந்தது ஆதியந்தமில்லாதது.. அதனின்றி அணுவும் அசையாது.. இதைத் தமிழும் கூறுகிறது சமஸ்கிருதமும் கூறுகிறது… உலகில் உள்ள அனைத்து மதங்களின் மறைகளும் கூறுகிறது. என்பதை நாம் நமக்கது தெரிந்த அதை மீண்டும் இங்கே நமக்கு ஞாபகப் படுத்திக் கொள்வோம். நன்றி.. 

    நல்லக் கருத்துப் பதிவுகள் இன்னும் ஆழமாகச் செல்லத் தோன்றுகிறது அதற்கு திருவாளர் சச்சிதானந்தம் அவர்களுக்குத் தான் நான் நன்றி கூற வேண்டும்.. ஒரு ஒப்பிற்கு பின்னூட்டம் போடாமல் தங்களின் அபிப்ராயம் கூறியது இத்தனை தூரம் சிந்தனையை தூடி ஆதாரத்தையும் தேடச் செய்தும் விட்டது… தொடரட்டும் நமது ஆரோக்கியமானக் கருத்துப் பகிர்வுகள். 🙂

  16. நான் குறிபிட்டது ”மடைமாற்றம்” எழுத்துப் பிழையில் மதமாற்றம் ஆகி இருக்கிறது.. இன்னும் நிறைய பிழைகள் இருக்கிறது.. கல்வெட்டைப் போன்று இதையும் ஆராய்ந்து வாசியுங்கள் 🙂 சிரமத்திற்கு மன்னிக்கணும். திரு சச்சிதானந்தம் அவர்களே.

    ///இதற்கான விளக்கமாக மேல் உள்ளதும் அதாவது மதமாற்றம் செய்ய மேற்கொண்ட ஒரு நல்ல ஏற்பாடும் ஆம்.////

  17. திரு.ஆலாசியம் அவர்களுக்கு,

    தங்களது பின்னூட்டம் கண்டேன். மிக நீண்ட விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் தங்களது கருத்துக்களை மதிக்கிறேன். எனினும் இது இன்னும் மிக நீண்ட விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய கருத்து. ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப பதிவுசெய்ய வாய்ப்பளித்த தங்களுக்கும் , நண்பர் திரு.புவனேஸ்வர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.