Blog

  • வரலாற்றின் வரலாறு – புத்தக மதிப்புரை

    மதிப்பு​ரை – தேமொழி 

     

    rasamaanikkanaar

     

    நூல்குறிப்பு:
    நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
    ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
    புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
    பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
    சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
    தில்லைநகர் மேற்கு
    திருச்சிராப்ப்பள்ளி – 620 018
    பதிப்பு: முதற் பதிப்பு
    பதிப்பு ஆண்டு: 2006
    மொத்தப் பக்கங்கள்: 160
    விலை: 100 ரூபாய்

    __________________________________

     

    முன்னுரை:

    தன்னிகரில்லாத் தமிழினம் பெற்ற
    தகையவர் கோடி இந்நாட்டில்
    அன்னவருள்ளும் அறிஞருக்கறிஞர்
    ஆயிரத்தொருவரே ஏட்டில்
    என்னிவன் பெருமை எனப் புவி வியக்க
    எண்ணிடும் சிலரிடை வந்து
    மன்னிய புகழில் வாழ்ந்தவர் எங்கள்
    ‘மா. ரா.’ எனும் புகழ்க் கோவே!
    – – கவியரசர் கண்ணதாசன்

    எனக் கவியரசர் பாராட்டியது போன்றே, தமிழ்மொழி பெருமைப் படும் வகையில் தமிழ்த் தொண்டாற்றியப் பல்வேறு அறிஞர்களுள் தனித்தன்மை வாய்ந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இன்றியமையாத இவரது சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், கால ஆராய்ச்சி, மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழ்மொழி இலக்கிய வரலாறு போன்ற வரலாற்றாராய்ச்சி நூல்கள் வரலாற்றுக் கோணத்தில் இவர் ஆற்றிய தமிழ்ப் பங்களிப்பினைப் பறை சாற்றும்.

    ஆசிரியர் குறிப்பு:
    பொதுவாக சாதனையாளராகக் கருதும் எந்த ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அறிந்து அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனைக்கு ஒரு முழுமையான உருவம் கொடுக்க விழைவது சராசரி மனித இயல்பு. தமிழக அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் வரிசையில் சிறப்பான இடம் பிடித்துள்ள தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் (http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm) அவர்களைப் பற்றி சென்ற தலைமுறையினர் மிகவும் அறிந்திருந்தாலும், இக்கால இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றியத் தகவல்களோ, அவர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகளின் முக்கியத்துவமோ அதிகம் தெரிய வாய்ப்பிருந்ததில்லை. அக்குறையை நீக்க இந்நூலை எழுதியவர் அவரது அன்பு மகனார், திருச்சியில் புகழ் பெற்ற கண் மருத்துவராய்ப் பணியாற்றும் முனைவர். மருத்துவர். இரா. கலைக்கோவன் அவர்கள்.

    முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர் ஒருவர் நேர்முகக் காணல்கள், நூலாராய்ச்சிகள் போன்ற பல வழிகளிலும் தகவல் சேகரித்து வாய்வழியாகக் கேட்டறிந்த செய்திகளை வாழ்கை வரலாறாக அறியத் தருவதைக் காட்டிலும், குடும்பத்தினர் தாங்களே நேரே கண்டுணர்ந்து, ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களையும், செய்திகளையும் பகிர்ந்து தகவல்களைச் சரிபார்த்து வழங்கும் வாழ்க்கை வரலாறு முழுமையானதாகும். இரா. கலைக்கோவன் அவர்கள் நூலை எழுத்து வடிவத்தில் அளித்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளை மற்ற சகோதர சகோதரிகள் அளித்து தங்கள் தந்தையின் தமிழ்த் தொண்டு அனைத்தையும் பிழையின்றி, எந்த ஒரு தகவலும் விட்டுப் போகாதவாறு ஆவணப்படுத்த உதவியதாக நூலாசிரியர் கூறுகிறார்.

    நூல் வழங்கும் செய்திகள்:
    நூலின் உள்ளுறையில்; வரலாற்றின் வரலாறு, இலக்கிய ஆய்வில் முத்திரைப் பதிவுகள், சைவ சமயப் பகலவன், வரலாற்றுத் தடங்களில், திருக்கோயில் ஆய்வுகளும் கல்வெட்டுப் புலமையும், இளையோரின் இனிய நண்பர், மனிதரில் தலையாய மனிதரே என்ற ஏழு அத்தியாயங்களின் மூலம் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமுற மிக எளிய நடையில் சுவையுற வழங்கியுள்ளார் ஆசிரியர். அத்துடன் சுவை சேர்க்கும் மேலதிகத் தகவல்களாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், குடும்பம், இராசமாணிக்கனாரின் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி இராசமாணிக்கனாரின் நூல்கள், துணை நூற்பட்டியல், ஒளிப்படங்கள் ஆகிய இணைப்புகளும் தமிழறிஞரின் மறுபக்கத்தையும், அவரது படைப்புகள் அனைத்தையம் கொடுப்பதன் மூலமும் சிறப்பாக நிறைவு பெற்று அமைகிறது.

    வரலாற்றின் வரலாறு / டாக்டர் மா. இராசமாணிக்கனார் வாழ்க்கை வரலாறு:
    நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்த மாணிக்கம் என்பாருக்கும், தாயாரம்மாளுக்கும் கடைசி மகனாக கர்நூலில், 1907 ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் பிறந்தவர் இராசமாணிக்கனார். தந்தையின் தொழில் காரணமாக ஆந்திரா பகுதியில் பற்பல ஊர்களில் வாழ நேரிட்டதால் பிற்காலத்தில் தமிழறிஞகராக மாறிய இவர் நான்காம் வகுப்புவரை படித்தது என்னவோ தெலுங்குதான். பிறகு அவரது தந்தையாருக்கு மதுரைக்கு மாற்றல் ஏற்பட்ட பொழுது தீவிரமாக முயன்று தமிழ் கற்றுக் கொண்டார். தனது பத்து வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து தஞ்சையில் வசித்த அண்ணன் குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்தார். கல்வி தடைபட்டு தடைப்பட்டுத் தொடர, இடையில் தையல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறார். பள்ளி படிப்பு முடிந்து இருபதாவது வயதில் சென்னை தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியறாகப் பணியைத் துவக்கினார்.

    தொடர்ந்து வித்துவான் பட்டம், பி. ஓ.எல், பட்டம், எல். டி பட்டம், எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். பெரியபுராண ஆராய்ச்சியை ஆய்வு செய்து எம். ஓ.எல் பட்டம் பெற்றார். தனது நாற்பதாவது வயதில் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றத் துவங்கினார். “சைவ சமய வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1959 ஆண்டு முதல் சென்னைப் பல்கலை கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்று, தனது ஐம்பத்தி ஒன்பதாம் வயதில் (26.5.1967) இதயநோயால் மரணமடையும் வரை அங்கு பணியாற்றினார். தனது வாழ்நாளில் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நூற்றினைத் தாண்டுகிறது. அத்துடன் பாட நூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என இவருடைய பற்பலப் படைப்புகளின் பட்டியலை நூலின் பின் இணைப்பில் காணலாம். அப்படைப்புகளின் தலைப்புகளைப் படிக்குங்கால் இந்த அறிஞரின் பரந்துபட்ட அறிவினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நூலாசிரியர் சிரத்தையுடன் அனைத்தையும் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது நூலின் இந்த இணைப்புப் பகுதி.

    வரலாற்றுத் தடங்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார்:
    தமிழிலக்கியம் பயின்று, தமிழாசிரியராக வளர்ந்து, தமிழறிஞராக மலர்ந்த போதும் இராசமாணிக்கனாரின் படைப்புகள் பெரும்பான்மையும் வரலாற்று நோக்கில் அமைந்தவை. நூற்றுக்கும் அதிகமாக இவர் எழுதிய நூல்களில் நாற்பத்து மூன்று நூல்கள் வராலாற்றைப் பொருளாகவும், மற்றுமொரு பதொனொரு இலக்கிய நூல்கள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். இப்பணியே இவரை தமிழறிஞர்கள் வரிசையில் தனித்துக் காட்டுவது. சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘நாற்பெரும் வள்ளல்கள்’ என்ற தலைப்பில் 1930 இல் வெளிவந்த இவரது முதல் நூலே வரலாற்று நூல்தான்.

    டாக்டர் மா. இராசமாணிக்கனாரது ‘மொஹெஞ்சொதரோ – அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூல் ஏழுமுறை மறுபதிப்பு செய்யப்பட்ட நூலாகும். மற்றறொரு சிறப்புமிக்க நூல் ‘பல்லவர் வரலாறு’. இந்நூலிற்காகக் களஆய்வுகள் பல மேற்கொண்டார். அறுபத்தாறு நூல்கள், இருபத்திமூன்று கல்வெட்டுத் தொகுதிகள், ஆராய்ச்சி இதழ்கள், திங்கள் இதழ்கள் எனப் பலப் பின்புலத் தகவல்களின் தொகுப்பாக உருவான நூலாகும் இவருடைய பல்லவர் வரலாறு. பல்லவர் நகரங்களை நேரிடையாகப் பார்வையிட்டு, கல்வெட்டுகளை ஆராய இவர் சென்ற ஊர்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், வல்லம், மண்டகப்பட்டு, பாகூர், திருச்சி, திருவதிகை போன்றவைகளாகும். இந்நூலிற்காக அறிஞர்களால் பெரிதும் போற்றபட்டார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இந்நூலை ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் காட்ட, அவர் அதனை படிக்க எடுத்துச் சென்றுவிட்டாராம் . பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவரிடம் இந்நூல் என்னிடமே இருக்கட்டும், ‘சிவகாமியின் சபதம் ‘எழுதத் தேவைப்படுகிறது, நீங்கள் வேறு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாவும் நூலாசிரியர் தகவல் கூறுகிறார்.

    கடிகை என்று தமிழிலும், கடிகா என்றும் அழைக்கப்படும் கடிகாசலம் உண்மையில் காஞ்சி அல்ல. கடிகா என்பது கல்லூரியையும் அது இருந்த ஊரையும் குறிக்கும். இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள கடிகாசலம் என்னும் சோழசிங்கபுரமே என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து கூறியத் தகவல். இதற்கு இவர் கல்வெட்டு மற்றும் இலகியச் சான்றுகளையும் ஒப்பிட்டு வரையறுத்தார். இலக்கியம், கல்வெட்டு இரண்டையும் உரியவாறு ஒப்பிட்டு நோக்கினால் அவை இரண்டும் ஒன்றுபடும் இடங்கள் மிகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் அறியமுடியும். ஆனால், இதற்கு இவ்விரு துறைகளிலும் ஆழ்ந்த பயிற்சி தேவை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவ்வாறு இருதுறைகளிலும் சிறந்து இருந்தது தமிழக வரலாற்றைப் பற்றியப் பல அறிய செய்திகளை நாம் அறிய பெரும் உதவியாக இருந்தது.

    பல்லவர் வரலாற்றைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட ‘சோழ வரலாறு’ நூலுக்கு கோயில்களின் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டார். தமிழ்நாடு வரலாற்றாசிரியர்கள் எவரும் கருதாத இப்புதிய சிந்தனைக் கோணத்தினால் மிகவும் பாராட்டப் பெற்றார். பிற்காலச் சோழ வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்தது, வரலாற்று மூலமாக அமைந்தது, தமிழக கோயில்களே எனவும் இராசமாணிக்கனார் கூறினார். காவிரிப்பூம்பட்டினத்திற்கு 1943 இல் களஆய்வுக்கு சென்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார், எங்கெங்கு தோண்டினும் கிடைப்பது பழைய செங்கற்கள், மட்பாண்ட சிதைவுகள் எனக் குறிப்பிட்டதுடன், அவற்றுள் சில அருகாமையில் உள்ள புதுவை அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்திருந்ததையும், பத்தடி ஆழத்தில் கிடைத்த செங்கல்லின் அளவினையும் (நீளம் 9 அங்குலம், அகலம் 6 அங்குலம், கனம் ஒன்றரை அங்குலம் எனவும்) குறிப்பெழுதி வைத்துள்ளார். அத்துடன் சோழர் வரலாற்றை முழுமையாகக் கொண்ட இந்நூலில் இவர் நாயன்மார்களில் ஒருவராக சமயப் போர்வையில் சிக்கியிருந்த கோச்செங்கட்ச்சோழரை சோழ மன்னராகவும், பல்லவ அரசரான புத்தவர்மனுடன் போரிட்டவரே இந்த கோச்செங்கணான் எனவும் தெளிவுபடுத்தினார்.

    சுதந்திர இந்தியாவில் தமிழகமும் ஆந்திரமும் பிரிவினையால் எல்லைத் தகராறு பற்றிய விவாதங்கள் நிகழ்ந்த காலத்தில், ஆராய்ச்சி அடிப்படையில் ‘தமிழ்நாட்டு வட எல்லை’ என்ற நூலை எழுதினர். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், சென்னை மேலவை மற்றும் கீழவை உறுபினர்களுக்கும் இலவசமாக வழங்கப் பட்டது. கால ஆராய்ச்சி, தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், தமிழக வரலாறு, தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்பன போன்ற நூல்கள் பலவற்றையும் வரலாற்று நோக்கில் எழுதினர். தமிழகத்துக் கோயில்கள் (கோயில்களின் விமானம் என்பதைக் குறிக்க இறையிடம் என்ற கலைச்சொல்லை பயன்படுத்தினார்), தமிழ் நூல்களில் சிற்பக்கலை, கட்டடக் கலை, கல்வெட்டுகள், கல்வெட்டுகளும் சமுதாய வரலாறும், வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும், தமிழ் நூற்செய்திகளும் கல்வெட்டுகளும், பற்பல ஊர்ப்பெயராய்வுகள் எனக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்.

    இவருடைய பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி எனும் இரண்டு ஆய்வு நூல்களும் தமிழ்நாட்டு கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றவை. இதன் மூலம் ஒரு சமயத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கல்வெட்டுகளின் பின்னணியில் உருவாக்கித் தந்த ஒரே தமிழறிஞர் என்ற பெருமையையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் பெறுகிறார். வெகுக் குறைவான அளவிலேயே கல்வெட்டாய்வு,கோயிற்கலை ஆய்வில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழறிஞர்கள் ஈடுபடிருந்தனர். அவர்களில் களஆய்வு மேற்கொண்டோரும் குறைவு. அவர்களிலும் தமிழிலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சி இரண்டினையும் ஒருங்கிணைத்து தமிழக, இலக்கிய வரலாற்றினை எழுதப் போந்தவர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவிர வேறொருவர் இருந்திருக்கவில்லை என்பதனை உறுதிபட உரைக்கலாம். ஆயினும் இவ்வாறு கல்வெட்டு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களஆய்வுகள் பலவும் மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வெட்டு படிப்பதற்குப் பயிற்சி எடுத்தார், எங்கனம் அக்கலையைக் கற்றார் என அறியக்கூடவில்லை என்று அவர் மகனாராம் இந்நூலாசிரியர் இரா. கலைக்கோவன் வியப்புறுகிறார்.

    வரலாற்றின் வரலாறு பற்றி நூலாசிரியர் கருத்து:
    தனது விரிவான முன்னுரையில் தனது அன்புத் தந்தையார் பற்றியும் அவரது அன்பைப் பற்றியும் குறிப்பிடுகிறார் இரா. கலைக்கோவன். அத்துடன் நூலாசிரியர் இரா. கலைக்கோவன் தனது புகுமுக வகுப்பில் அவருடைய வரலாற்று ஆசிரியர் வள்ளுவன் கிளாரன்சு மோத்தாவின் பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, மருத்துவம் பயில்வதைக் குறிக்கோளாகக் கொண்ட தான் வரலாற்றில்தான் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அறிவியலைவிட அதிக மதிப்பெண்கள் வரலாற்றிலா என வியந்து கேட்டோருக்கெல்லாம் இராசமாணிக்கனார் தனது மகன் அவருடைய வரலாற்று ஆசிரியரின் தாக்கத்தால் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்றதாக பெருமையுடன் குறிப்பிட்டதாகவும் கூறுகிறார். ஆனால் மா. இராசமாணிக்கனார் அப்பொழுது தனது மகனின் அறிவுத் தேடலில் தானே கொண்டிருந்த தாக்கத்தை அன்று சற்றும் அறிந்திருக்கவில்லை போலும்.

    மருத்துவராக மாறிய பின்னரும் தனது தந்தையின் அடிச்சுவடைப் பின்பற்றியே தமிழில் முனைவர் பட்டமும், தனது தந்தையின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் விதமாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நூலாசிரியர். தந்தையைப் போலவே கல்வெட்டுகள் காணுமிடமெல்லாம் சென்று அவற்றைப் பற்றியத் தகவல்களையும் சேகரித்து வருகிறார், அதன் மூலம் தமிழுக்கும் தமிழக வரலாற்றிற்கும் தனது பங்களிப்பைக் கொடுத்து வருகின்றார். தாம் அறிந்துகொண்டவற்றை வரலாறு.காம் (http://www.varalaaru.com) என்ற தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார். கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு அவற்றைப் பற்றியக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் கொண்ட இதழ்கள் மூலம் அத்தளத்தில் நாம் பல தவல்களைத் தெரிந்து கொள்ள இயலும்.

    “ஒரு மகனாய் அவரைப் புரிந்து கொண்டதைவிட, ஒரு வரலாற்று மாணவனாய் மாறியபோதுதான் அந்த மனிதரின் பாடுகள் புரிந்தது. எவ்வளவு குழப்பமான காலப் படப்பிடிப்புகள். காழ்ப்புணர்ச்சியும் கயமையும், மொழி, இனம், நாடு எனக் கோடுகள் கிழித்துக் கொண்டு, குழுச் சேர்த்து குதூகலிக்கும் சிறுமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில் நேர்மையும் துணிவும் மட்டுமே கருவிகளாய்ப் பயணப்பட்ட அந்த மனிதர் எத்தனை சோதனைகளைச் சந்தித்திருப்பார்! எவ்வளவு துன்பங்களை, ஏளனங்களைச் சுமந்திருப்பார்! இருந்தபோதும் ‘இதுதான் வாழ்க்கை’ என்ற முடிவுடன்தானே அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவரை மாணவர்கள் மறக்கலாம்! வரலாற்று ஆய்வாளர்கள் மறக்கலாம்! ஏன் தமிழ் கூட மறக்கலாம்! ஆனால் காலம் மறக்காது. உழைப்பாளிகளைக் காலம் என்றென்றும் மதித்தே வந்திருக்கிறது”, என்று வியந்து தனது தந்தையின் கடின உழைப்பைப் போற்றும்  முகமாக “வரலாற்றின் வரலாறு” என்னும் நூலாக இராசமாணிக்கனாரின் வாழ்வைப் பதிவு செய்ததாகவும் பகர்கின்றார் நூலாசிரியர். இது ஒரு ஆய்வறிஞரைப் பற்றி ஓர் ஆய்வாளர் எழுதிய நூல் என்பது படிப்போருக்கும் விளங்கும். அத்துடன் நூலுக்குக் என்ன ஒரு பொருத்தமான தலைப்பினையும் இரா. கலைக்கோவன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

    நூல் வழங்கும் பாடம்:
    தனது தந்தையின் வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது, இராசமாணிக்கனாரின் வழிகாட்டியாக விளங்கிய திண்டுக்கல் ஆசிரியர் ஒருவர் சிறு வயதில் இராசமாணிக்கனாரை திண்டுக்கல் குன்றின் மீது அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டைக்கு அழைத்துச் சென்றதையும், “படிக்கும் பிள்ளைகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறு, அங்குள்ள கட்டடங்கள், விளைபொருள்கள், செய்பொருள்கள் இவற்றைப் பற்றி அறிய வேண்டும். இந்த அறிவு வேண்டற்பாலது. பலர் இவவற்றைக் கவனிப்பதே இல்லை” என்று கூறிய அறிவுரையே பின்னாளில் இராசமாணிக்கனார் ஒரு வரலாற்று அறிஞராக மலரக் காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

    கல்வெட்டுகள் வழி வரலாற்றை அறிவது போலவே, இந்த வரலாற்று நூலைப் படிக்கும் பொழுதும், இராசமாணிக்கனாரும், அவர் மகனாரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்களே முக்கியக் காரணம் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். இதனால் ஆக்கபூர்வமான தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டிகளுக்குள்ள பொறுப்பை நூலாசிரியர் குறிப்பிடாமலே நாம் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வழியே இச்சான்றோர்களின் பணியினால் ஈர்க்கப்பட்டு மேலும் பலர் தமிழுக்கும், தமிழின் வரலாற்றிக்கும், தமிழகத்தின் வரலாற்றிற்கும் தங்கள் பணியைத் தொடர வழிவகுக்கும் வகையில் இந்த நூல் பங்காற்ற வேண்டும் என்பதே என் போன்ற வாசகர் பலரின் விருப்பமாகவும் இருக்கும்.

    “மாணவர் தென்னிந்திய வரலாற்றையும் தமிழ் நூல்களையும் கல்வெட்டுகளையும் படித்துத் தம் தாய்நாட்டுச் சிறப்பை நன்கு அறிய வேண்டும் என்பதே இந்நூல் எழுதப் பட்டதன் நோக்கமாகும்” எனக் குறிப்பிட்டார் இராசமாணிக்கனார் தனது ‘ஆற்றங்கறரை நாகரிகம்’ என்ற நூலின் முன்னுரையில். அவருடைய இக்கனவு அவரது மகனாரின் ‘வரலாற்றின் வரலாறு’ நூல் படிபவர்களால் நிறைவேறும் என நம்பிக்கைக் கொள்வோம்.

    வரலாற்றின் வரலாறு நூலின் முதல் அத்தியாயத்தை மட்டும் ஐந்து பகுதிகளாகக் கீழ் காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்…
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=319
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=337
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=353
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=382
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=407

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 106

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை


    அவர்கள் பழவினை குறித்து
    சாரணன் அறிந்தபோதும்
    விருப்பு வெறுப்பு கடந்தவன்
    தவம் செய்தவன் என்பதால்
    தன்னை வணங்கி நின்ற அவர்களின்
    துன்பம் அறிந்திட்ட போதும்
    கலக்கம் கொள்ளவில்லை.

    குறிப்பால் அவர்களுக்கு உணர்த்த எண்ணியே
    கவுந்தியடிகளிடம் பேசலானான்;
    “மிக்க பெருஞ்சிறப்பினையுடைய கவுந்தியே!
    ஒழிக என்றாலும் யாராலும் ஒழிக்க முடியாத
    தீவினையைக் காண்பாயாக!
    விளைநிலத்தில் இட்ட வித்து
    விளைந்து தகுந்த பயன் தருவதுபோலவே
    இவர்களின் பழவினையும் வந்து
    அதன் பயனை இவர்கள் அனுபவிக்க நேரும்போது
    அதைத் தவிர்க்க முடியாது..
    இதனை இவர்கள் மூலமாக அறிந்து கொள்வாய்.

    கடுமையாகக் காற்று வீசுகின்ற
    திறந்த வெளியிடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட
    விளக்கின் சுடரானது
    காற்றில் அழிந்து மறைவதைப்போல
    பழவினைப் பயன் வந்து தக்கும்போது
    உடலைவிட்டு உயிர் பிரிவது உறுதி” என்று கூறினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  168 – 175
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    தமிழ்மொழி தேனினும் இனிய மொழி. பல்வகை சிறப்புகளைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டும், காலத்துக்கேற்ற மாறுதல்களையும் தனக்கெனத் தனியாக உள்வாங்கிக் கொண்டும் எக்காலத்துக்கும் சிறந்த மொழியாகத் திகழ்கிறது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாதுதான். அதே சமயத்தில் தமிழ் மொழியின் சிறப்பு அதன் பழைய இலக்கியங்களிலேயே அடங்கிக் கிடப்பதும், புத்தம் புதிய இலக்கியங்கள் என வரும்போது அதன் தன்மை இன்னமும் அதிகமாக வெளிப்படவில்லையென்றுதான் தற்சமயம் நமக்குப் படுகின்றது. எதிர்காலத்தில் இன்றைய தமிழ் உலகம் தமிழுக்குக் கொடுத்த சிறப்புகள் என்னென்ன என்பதை வாழ்வாங்கு வாழ்விக்குமா என்பதும் நமக்கு இப்போதைக்குத் தெரியாதுதான்.

    இன்றைய தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத்தில் பேசப்பட வேண்டும் என்று நினைத்து எழுதும் எண்ணம் நம் தமிழ் மண்ணில் இருப்பதை விட தமிழ்நாடு தவிர்த்த பிற மண்ணில் வாழும் தமிழரிடையே பரவலாக இருப்பதைக் காண்கிறேன். தமிழ் எல்லோருக்கும் பரவலாகவே வளைந்து கொடுக்கும் மொழி எனும்போது புலம்பெயர்ந்த மண்ணில் இருந்தாலும் தமிழில் நல்ல நூல்கள் சமீப காலங்களில் படைக்கப்பட்டுள்ளன. இவை காலம் கடந்து நிற்கவேண்டுமென்பதே நம் ஆசை. அதே சமயத்தில் இப்படி புலம்பெயர்ந்த மண்ணில் தோன்றும் தமிழ் நூல்களையும் எழுத்தாளர்களையும் தமிழ்நாடு எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இப்படி ஒரு உற்சாக விழாவாக சமீபத்தில் கோவையில் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் மாநாடு ஒன்று நடந்ததும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த திரு மாலன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், திரு மாலன் அவர்களின் செயல்பாடு குறித்தும் திருமதி பவளசங்கரி அவர்களின் கட்டுரை வல்லமையில் வெளியாகி உள்ளது. அதிலிருந்து சில பகுதி..

    Maalan//கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற *திரு மாலன்* தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது.
    “புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது//

    இப்படிப் போற்றுதலுக்குரிய திரு மாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு மாலன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் தமிழ்நாடு தவிர பாரதத்திலேயே உள்ள பிற பாகங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இலக்கியப் பணிகளையும் வெளிக்கொணர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: தஞ்சை திரு வே. கோபாலன் அவர்களின் பின்னூட்டம் வல்லமையில்:
    64 வயது ஆன இந்திய குடியரசு இன்னமும் ஜனநாயக நெறிகளைப் பின்பற்றவில்லையென்றால், நம்மை நாமே ஆளும் தகுதி நமக்கு வரவில்லை என்று பொருள்.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (11)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மனக்கவலை நீங்கிய ராமனும் சுக்ரீவனும் அடுத்துச் செய்யவேண்டியதை ஆலோசித்தனர். அதன்படி ஒரு மாபெரும் வானர சேனையோடு அனைவரும் இலங்கை நோக்கிப் புறப்பட்டனர். கீழ்க்கடற்கரை ஓரம் அப்படை தண்டு கொண்டிருந்தபோது வானில் ராவணன் தம்பி விபீஷணனும் மேலும் நான்கு அரக்கர்களும் தோன்றி, “இலங்கேசனால் உதாசீனம் செய்யப்பட்ட நாங்கள் ராமனைச் சரண் அடைய நிச்சயித்துள்ளோம். அப்பிரபு எங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்றனர்.

    இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்பதனைப் பார்ப்போமா? அனுமன் கடல் தாண்டி இலங்காபுரியை எரித்து நாசம் செய்தது ராவணனைக் கலங்க வைத்தது. தன் தம்பிமார்களையும் இந்திரஜித் உள்ளிட்ட தம் மக்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து அவசர ஆலோசனை செய்தான். விபீஷணனைத் தவிர அனைவரும் ”ராம லக்ஷ்மணரையும் வானரப்படையையும் அவர்கள் தண்டு கொண்டிருக்கும் இடத்திற்கே சென்று நாசம் செய்ய வேண்டும்” என்றனர்.

    விபீஷணனோ, “ஸீதையை அபகரித்து வந்தது மாபெரும் குற்றமென்றும், நாமும் நம் அரக்கர் குலமும் நிச்சயமான அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ராமபத்தினியை உரியவனிடம் ஓப்படைப்பதே” என்றான்.

    ராவணன் சினத்தில் உடல் துடிக்க, “விபீஷணா, சில நாட்களாகவே உன் நடப்பு சரியாக இல்லை. நம் எதிரியை சிலாகித்துப் பேசுகிறாய். நீ அந்த குரங்கைக் கொல்ல விடாமல் தடுத்ததால் இலங்கை நகரமே தீக்கிரையாகி விட்டது. உன் மகள் திரிஜடையை அனுப்பி ஸீதைக்கு ஆறுதல் சொல்ல வைக்கிறாய். உன் நோக்கம் என்ன?” என்று கர்ஜித்தான்.

    “அண்ணா, என் நோக்கம் தங்களையும் நம் அரக்கர் குலத்தையும் காப்பதே” என்ற விபீஷணனை ராவணன், “வேண்டுமானால் நீ ராமனிடம் அடைக்கலம் புகுந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய். உன்னை என் தம்பியென்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொல்லி மேலும் பல சுடுசொற்களால் அவனைச் சாடினான். அங்கு கூடியிருந்த அனைவரும் மன்னன் கூற்றினை ஆமோதித்தவாறு விபீஷணனை எள்ளி நகையாடினர். வருத்தத்தோடும் குனிந்த தலையோடும் அவன் அங்கிருந்து அகன்று தன் நண்பர்கள் நால்வரோடு ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்தான்.

    அபயம் கோரும் விபீஷணனை தம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா என்று சுக்ரீவனையும் ஜாம்பவானையும் மூத்த வானர வீரர்களையும் ராமன் கேட்டபோது அனுமனைத் தவிர அனைவரும் தேவையில்லை எனக்கூறினர். அனுமனோ வீபீஷணனின் நற்பண்புகளைச் சுட்டிக்காட்டி “அவன் வரவு நமக்கு நல்வரவே” என்றான்.

    முடிவில் ராமன் தன்னுடைய அடைக்கலம் அளிக்கும் பண்பினை ஒட்டி, “சரண் புகுந்தவரைக் காப்பது என் தர்மமாகும். ஒருவேளை ராவணனே மனம் திருந்தி என்னிடம் சரணடைந்தால், அவனையும் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறி, விபீஷணனை அழைத்து, லக்ஷ்மணனையும் சுக்ரீவனையும் அவ்வரக்கனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டுமாறி பணித்தான்.

    பின்னர் அவனோடும் சுக்ரீவனோடும் எவ்வாறு கடல் கடந்து இலங்கை சேர்வது என்று ஆலோசித்தான். அதன்படி கடலரசனை வழிவிடுமாறு வேண்டுவது என முடிவு செய்தான். இன்று திருப்புல்லாணி என வழங்கும் இடத்தில் ராமன் தர்ப்பைகளைப் பரப்பி மூன்று நாள் உபவாசத்தோடு சமுத்திரராஜனைப் பிரார்த்தித்தவாறு இருந்தான். அதற்கு பலன் இல்லாமல் போகவே, கோபம்கொண்ட கோதண்ட ராமன் அக்கடலினை வற்றி தரைமட்டமாக்கத் தன் வில்லின் நாணேற்றினான். இந்த சீற்றத்தைக் கண்டு கடலரசன் நடுநடுங்கி, ராமனிடம் சரண் புகுந்து, “இயற்கை நியதிகளுக்குக் கட்டுப்பட்டவனான என்னை மன்னித்தருள்வீர். என்னால் தங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். அதாவது என்மீது பெருங்கற்களைக் கொண்டு அணை ஒன்றைக் கட்டுங்கள். அதனை நான் தாங்குகிறேன். அந்த அணைமீதே நீங்க்ள் யாவரும் நடந்து இலங்கை சேரலாம்” என்று கூப்பிய கரங்களோடு பகர்ந்தான். திருப்புல்லாணி அருகாமையில் உள்ள ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து சேதுவை நிர்மாணிக்கலாம் என்றும் கூறினான்.

    வானர வீரர்களில் ஒருவனான நளன் என்பான் முன்வந்து, “ஐயனே! நான் விஸ்வகர்மனிடம் அணைகள்  கட்டுவதற்கான பயிற்சி பெற்றிருக்கிறேன். அனுமன் போன்ற வலிமை கொண்ட வானரர்கள் அருகில் உள்ள மலைகளிருந்து பெரும் பாறாங்கற்களை எடுத்து வந்தால் இப்பணி எளிதாக முடிந்துவிடும்” என்றான். அவன் மேற்பார்வையில் வானரர்கள் ராம நாமத்தை ஜபித்தவாறு பெரும் பாறாங்கற்களையும் வெட்டப்பட்ட மரங்களையும் அணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்பாதையில் போட்டு சேதுவை உருவாக்குவதில் ஈடுபட்டனர். கடலரசன் கருணையால் அவைகள் ஒரு மிதவைப் பாலமாக அமைந்தன.

    இதையெல்லாம் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன் ‘இந்த பளுவான கற்கள் எவ்வாறு மிதக்கின்றன’ என நினைத்து ஒரு மாலைப் பொழுது யாருமில்லாத சமயம் தானும் ஒரு கல்லை அவ்விடத்தில் போட்டான். அது ‘தொபுக்கடீர்’ என்று தண்ணீரில் அமிழ்ந்தது. திடீரென்று யாரோ ‘களுக்’ என்று நகைப்பது கேட்டது. அனுமன்தான் அங்கு நகைத்தபடி நின்றிருந்தான். “ஏன் சிரிக்கிறாய் அனுமா?” என்று ராமன் கேட்க அனுமன், “ஐயனே! நீ கைவிட்டால் கல் என்ன  எவர்க்குமே அதோகதிதான்” என்றான்.

    சில நாட்களில் சேதுபந்தனம் முடிந்து வானரப் படை மொத்தமும் அந்த நீண்ட வீதியின்மேல் நடந்து இலங்கையை அடைந்தனர். ராமனை அனுமனும் லக்ஷ்மணனை அங்கதனும் சுமந்து அக்கரை சேர்ந்தனர். கடைசி முயற்சியாக ராமன் அங்கதனை தூதுவனாக ராவணனிடம் அனுப்பி “ஸீதையை என்னிடம் சமர்ப்பித்துச் சரண் புகுந்தால் போரினைத் தவிர்க்கலாம்” என்று சொல்ல வைத்தான். அகந்தைகொண்ட ராவணன் அதனை நிராகரிக்கப் போர் தொடங்கியது.

    (​தொடரும்)

    Share
  • இந்தப் பாடம்…

    செண்பக ஜெகதீசன்i-flowerndex

    நாளை மலரப்போகும் மொட்டு
    நடுக்கத்துடன் பார்க்கிறது,
    அரைக்கண் திறந்து..

    நன்றாக மலர்ந்த பூக்கள்
    அங்கே
    பறிக்கப்படுகின்றன..

    நாளைக்கு
    நம் கதியும் இதுதானே..

    ஆனாலும்,
    ஆறுதல் ஒன்று-
    வாடி உதிர்வதைவிட
    யாராவது
    சூடிக்கொண்டால் சிறப்புத்தானே..

    கற்றுக்கொள் மனிதா
    இயற்கை காட்டும்
    இந்தப் பாடத்தை…!

    படத்துக்கு நன்றி

    http://commons.wikimedia.org/wiki/File:Rosa_pomifera_-_wolley_dod%27s_rose_-_desc-flower_bud.jpg 

    Share
  • 23. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!…

    சுபாஷிணி ட்ரெம்மல்

     

    23. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (3),தாய்லாந்து

     

    அருங்காட்சியகத்தின் கீழ்தளத்தில் படங்களுடன் கூடிய விவரணைகள் நிறைந்துள்ளன. அத்தோடு அக்கால சூழலை விளக்கும் சில மாடல்கள் (models) இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இந்த மாடல்களைப் போர்க்கைதிகள் நினைவாக ஆஸ்திரேலியா, ஹாலந்து, இங்கிலாந்திலிருந்து தனியாரும் அரசாங்கமும் வழங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்த ரயில் பாதை அமைத்த வேளையில் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் எத்தகைய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டது? பணியாளர்கள் தங்கும் வீடுகள், பணியாளர்கள் ஜப்பானியப் படைகளால் தண்டிக்கப்படும் காட்சி என்பன இதில் இடம்பெறுகின்றன. அதை பார்த்து முடித்து கீழ்தளத்திலிருந்து படிகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றால் அங்கு தொடர்ச்சியாக பல அரும்பொருட்களை நாம் காணலாம்.

    இப்பகுதியில் ஜப்பானியப் படைகள் பயன்படுத்திய ரகஸிய தொலைத் தொடர்பு கருவிகள், ஆங்கிலேய, டச்சு போர்கைதிகள் பயன்படுத்திய தொலைத்தொடர்பு கருவிகள், தட்டச்சுக் கருவி, பணியாளர்கள் அடையாள அட்டை, ஜப்பானியப் படையினர் உடைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ரகசியமாகக் கையாளப்பட்ட சில ஆவனங்களும் இங்குள்ளன. அதுமட்டுமல்ல.. இந்த மரண ரயில் பாதை அமைப்பைப் பற்றி விளக்கும் இரண்டு நூல்களையும் இங்கு கண்டேன். இந்த அருங்காட்சியகத்தில் புகைப்படமும் வீடியோ பதிவும் செய்வதை தடைசெய்திருப்பதால் இவையனைத்தையும் புகைப்படங்களாகப் பதிய முடியாததில் எனக்கு சற்று வருத்தமே.

    suba_wmuseum2

    செக்ஷன் 277

    போர்க்கைதிகளும் மலாயாவின் கூலிகளும் கட்டி முடித்த இந்த முழு ரயில் பாதையில் பாலம் செக்ஷன் 277 மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது க்வாய் நதியைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம். 1943ம் ஆண்டில் இதன் முழு பணியும் முடிக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் இந்த பாலத்தை குண்டுகள் போட்டு தகர்த்து. இது ஜப்பானியப் படைகளைப் பலமிழக்கச் செய்தது என்பது மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் ஒரு கால கட்டத்தில் இப்பாலத்தின் தொடர்ச்சியான தண்டவாளப் பகுதியில் 3.9 கிமீ அளவு பகுதியை ஆங்கிலேய படைகள் நீக்கின. ஆனால் பின்னர் மீண்டும் இவை கட்டிமுடிக்கப்பட்டன. ஆயினும் பர்மாவை இணைக்கும் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படாமலேயே இருந்தன என்பதால் இன்று வரை இப்பாலம் பர்மா-சியாமை முழுமையாக இணைக்காத நிலையிலேயே இருக்கின்றது.

    இந்த பர்மா-சியாம் மரண ரயில்பாதை பற்றி ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    suba 2

    நன்றி: http://en.wikipedia.org/wiki/The_Bridge_on_the_River_Kwai

    ப்ரென்ச் நாவலாசிரியர் Pierre Boulle அவர்களின் 1952ம் ஆண்டு நாவலான Le Pont de la Rivière Kwai நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அது. இந்த நாவல் ஆங்கிலத்தில் The Bridge over the River Kwai என்ற பெயரில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்தத் திரைப்பட்டம் இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு படைப்பாக உருவாக்கப்பட்டது. பர்மா-சியாம் மரண ரயில் பாதை என்றாலும் இந்த முழுப்படமும் தாய்லாந்து பர்மாவில் இல்லாமல் இலங்கையில் படமாக்கப்பட்டதாம். மரண ரயில்பாதையாக இப்படத்தில் காட்டப்பட்ட பகுதி இலங்கையில் `கிட்டுல்கால` என்ற பகுதியில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தைத் தாய்லாந்து காஞ்சனாபுரியில் என்றில்லாமல் இலங்கையில் படமாக்கியதற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை.

    இந்தத் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஒருவகையில் இது மிகப் பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. 7 அக்காடெமி அவார்டுகளைத் தட்டிச் சென்றிருக்கின்றது இந்தத் திரைப்படம். அதில் அவ்வாண்டின் சிறந்த படத்திற்கான பரிசும் அடங்கும். ஆனால் முழு மரணப்பாதை கொடுமைகளையும் பிரச்சனைகளையும் சரியாக வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனமும் இந்தப் படத்திற்கு இருக்கின்றது.

    காஞ்சனாபுரிக்கு நான் சென்றிருந்த போது அருங்காட்சியகத்தைப் பார்த்ததோடு அதன் எதிர்புறம் இருக்கும் போர்க்கைதிகள் நினைவு மண்டபத்திற்கும் சென்று அங்கிருக்கும் நினைவுக்கற்களைப் பார்வையிட்டேன். நாடு வாரியாக இவர்களது பெயர்கள் வரிசைக் கிரமமாக புல் தரையில் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நினைவுக் கற்கள் மீதும் போர்க் கைதியாக இருந்து மரணப்பாதை அமைப்பில் பணியாற்றி மரணித்தவர்களின் பெயர், அவர்களது நாடு, சில பொன்மொழிகள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன.

    suba_wmuseum1

    அருங்காட்சியகத்தின் வாசலில் (டிசம்பர் 2013)

    எங்கள் பயண வழிகாட்டி இந்த அருங்காட்சியகத்தை நாங்கள் பார்த்த பிறகு இம்மரணப்பாதையில் ஓடும் ரயிலில் பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு டிக்கட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். காஞ்சனாபுரியிலிருந்து ரயில் எடுத்து 1 மணி நேரப் பயணத்தை இந்த மரணப் பாதையில் மேற்கொண்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது என்று தயங்காமல் கூறுவேன். அதுமட்டுமல்லாமல் மறு நாள் காலையில் இந்த ரயில் பாதையின் ஒரு பகுதில் 30 நிமிடங்கள் நடந்து வர எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்தார். அருங்காட்சியகத்தைப் பார்த்து பின்னர் இந்த ரயில் பயணம் செய்து, ரயில் தண்டவாளத்திலும் நடந்து வந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே அமைந்தது.

    காலங்கள் கடந்து விட்ட நிலையிலும் 2ம் உலகப்போர் விட்டுச் சென்றிருக்கும் தடையங்கள் இன்று வரலாற்றினை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. என் அருங்காட்சியகத் தேடல்களில் விதம் விதமான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண்கின்றேன். அதில் இது ஒரு வகை.

    தாய்லாந்திலிருந்து புறப்பட்டு அடுத்து நாம் வேறொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோம். அடுத்து நாம் செல்லவிருப்பது வித்தியாசமான ஓர் அருங்காட்சியகம். சற்றே ஆச்சரியத்தைக்கொடுக்கக் கூடிய ஒன்று தான். எங்கு செல்லப் போகின்றோம் என ஊகிக்க முடிகிறதா..?

    தொடரும்

    Share
  • ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
    ஆயிரம் இருக்குது சுப தினம்

    சுபதினம் என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிக்கொடுத்த மங்கலச்சீட்டு.. வரிக்கு வரி சுபதினம் என்று எழுதுவது என்பது அந்த வரிகள் எல்லாம் சொல்கின்ற சேதியைப் பொறுத்து பெருமை பெறுகின்றது. வாழ்த்திப்பாடும் மங்கலங்களை அந்நாள்முதல் அரசர் முதல் ஆண்டி வரை அனைவரும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அதுவும் கற்றறிந்த புலவர்தம் திருவாயில் கிட்டும் அமுதமொழியது என்பதால்தான்! நான்கே வரிகளில் நல்வாழ்த்து கிடைத்தாலும் கிடைத்தற்கரிய பேறு என்பது உண்மைதானே!
    திரைப்படத்தின் பெயரில் உள்ள சுபதினத்தைப் பற்றி கவிஞரின் எண்ணரதம் ஊர்வலம் வருகிறது! எழுதிக்குவித்த அனைத்துவரிகளிலும் சுபதினத்தைத் தருகிறது!

    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
    இதைவிட வேறென்ன சொல் வேண்டும் நண்பர்களே.. எண்ணம்போல் வாழ்வு என்பார்கள்.. நல்லன எண்ணி நாளும் பொழுதும் வாழும் உள்ளங்கள் ஒருநாளும் அல்லலுறுவதில்லை. தானும் வாழ்வதுடன் இத்தரணியில் எல்லா உயிர்களும் நலம்பெற வாழவேண்டும் என்கிற எண்ணம்தானே உயர்ந்தது. அதுவும் அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு ஆயுள்முழுவதும் சுபதினம் அமையவேண்டும் என்று கவிஞர் வாழ்த்தியிருக்கிறார்.

    தன்னலம் மறக்கச் சொல்லவில்லை.. பொதுநலம் எண்ண வேண்டும்.

    தன்னைப் போல பிறரையும் எண்ணுதல் தவத்தினும் பெரியதாம்.

    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
    எளியவர்க்கெல்லாம் சுப தினம்

    எதார்த்தங்களைக்கூட இந்தப் பட்டியலில் இட்டு சராசரி மனிதனையும் தட்டி எழுப்புகிற யுக்தி வாலியினுடையது. மொத்தத்தில் வெண்கலக் குரலோன் தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மறக்க முடியாத பாடல்களுள் இதுவும் ஒன்று!

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

    வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
    வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
    புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
    புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்

    காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
    உரிமைக்கு அதுதான் சுப தினம்

    ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
    உலகுக்கு அதுதான் சுப தினம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

    நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
    ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
    நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
    ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
    உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
    அறுவடை நாளே சுப தினம்
    உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
    அறுவடை நாளே சுப தினம்

    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
    எளியவர்க்கெல்லாம் சுப தினம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.

    Share
  • வார ராசி பலன்: 27-01-14 – 02-02-14

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சிக்கு இந்த வாரம் அடித்தளமாய் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.தள்ளிப் போடப்பட்டிருந்த காரியங்கள் உடன் முடியும். கலைஞர் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே திறமையோடு புத்திசாலித் தனத்தையும் இணைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் வரும் வழிகள் மேலும் உயரும்.
    ரிஷபம்:இந்த வாரம் வியாபாரிகளின் முன்னேற்றத்தில் இருந்த தேக்க நிலை மாறி பரபரப்புடன் செயல்படுவார்கள்.உறவுகளின் மீது பெண்கள் வீண் சந்தேகங்களை வளர்த்துக் கொண்டு அவதிப் பட வேண்டாம். கலைஞர்கள் வேண்டிய உழைப்பை நல்கினால், இது வரை எட்டாக் கனியாய் இருந்தவாய்ப்புக்கள் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். உபத்திரவம் தந்தவர்கள், விலகி விடுவதால் பொது வாழ்வில் இருப்பவர்களின் செயலாற்றல் மேலும் சிறப்பாக இருக்கும். பணி புரியும் இடங்களில் வீண் பகை வளராதிருக்க, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுங்கள்.
    மிதுனம்: பணியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை குறித்து, அதன்படி செயலாற்றினால், பணம் ,லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும். இந்த வாரம் தாய் வழி சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.
    கடகம்: கலைஞர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள் . ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்.
    சிம்மம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்.
    கன்னி: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.
    துலாம்: இது நாள் வரை உங்களோடு இருந்த பிள்ளைகள் படிப்பு, பணி போன்றவற்றிற்காக, வேறிடம் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள். நீண்ட நாள் நட்பில் இருந்த விரிசல் விலகுவதால் உங்கள் நட்பு வட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலரும். இந்த வாரம் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, மாணவர்கள் விழிப்புடனிருப்பது அவசியம். கலைஞர்கள் மற்றவர்களுடன் பழகும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பியவளமான வாழ்க்கை உங்கள் வசமாகும்.
    விருச்சிகம்:  மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.
    தனுசு: பெண்கள் இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை, மன உளைச்சல் இரண்டும் ஏற்படாது. எதிரிகள் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உண்டு.கூட்டாக செயல்படும் போது மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். முதியோர்களுக்கு பல் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். எனவே குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
    மகரம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.
    கும்பம்: பெண்கள் பதற்றத்திற்கு இடம் தராமல், பணிவான முறையில் உரையாடினால், குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் தீய சகவாசம், வேளை தவறிய உணவு, வீண் செலவு, ஆகிய அனைத்தையும் தவிர்த்து சீரான வழியில் சென்றால், சிக்கல்கள் ஏதும் உருவாகாது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பெயரும்,நல்ல மதிப்பெண்ணும் கட்டாயம் கிடைக்கும்.வியாபாரிகள் மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து விட்டு அல்லல் படாதீர்கள். தன் கையே தனக்கு உதவி என்று பணி புரிந்தால், பணிகளும், வர வேண்டிய பண வரவும் தேங்காது.
    மீனம்: பொறுப்பில் இருப்பவர்கள்,  பணியாளர்கள் முன் சொந்த விஷயங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. வாங்கிய கடன் ஓரளவு அடைவதால், பெண்கள் மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், மாணவர்கள் நேர்மையான வழியிலேயே சென்றால், உங்கள் நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், தீர்வுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்கு வேண்டிய மருந்துகளை தவறாது உண்டு வந்தால், பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    Share
  • சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு

    சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு

    Water found in Ceres


    (Herschel Space Observatory Finds Water Vapour Spouts on the Dwarf Planet Ceres)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் உளவ இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கும் விண்ணுளவி !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண் எடுத்து
    பூமிக்கு மீண்டது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண்கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    புலர்ச்சி விண்ணுளவி
    குள்ளக் கோள் செரிஸ் நோக்கி,
    நீரெழுச்சி காணச் செல்லும்
    சூரிய மண்டலம் ஆய்வதற்கு !

    +++++++++++

     

    Dawn approaches Ceres

    “ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுகள் இருப்பதாக நாங்கள் கண்டது இதுவே முதன்முறை.   மேலும் இந்தக் கண்டுபிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபித்துக் காட்டியது.”

    மைக்கேல் கியூப்பர்ஸ் [European Space Agency -ESA Spain] 

    “செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் உண்டாக அடித்தளக் கடல் உறைதுள்ளதா ?   அல்லது தென்படும் இருபுற நீர் எழுச்சி ஊற்றுகள் மட்டும் தனித்து இயங்குபவையா என்னும் வினாக்கள் எழுகின்றன. ”

    ஃபிரான்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சித் தேசீய மையம் வானியலார்.

    செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு பில்லிய ஆண்டுகளுக்கு முன்பு  நீரும், கார்பன் மூலக்கூறுகளும் சுமந்து வந்த முரண் கோள்கள் [Comets & Asteroids] பூமியைத் தாக்கின என்னும் முன்னோடி நியதிகளை வலியுறுத்தும்.    அடுத்த  ஆண்டு நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [Dawn Spacecraft] செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றும் போது மேலும் புதிய தகவல் கிடைக்கும்.”

    ஹம்பர்டோ  காம்பின்ஸ் & கிரிஸ்டீன் கம்ஃபர்ட்,  வானியலார், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்.  

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு [Asteroid]] அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    சூரிய மண்டலத்தைச் சேர்ந்த குள்ளக் கோள் செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு  

    2014 ஜனவரி 22 இல் ஈசாவின் விஞ்ஞானிகள் [ESA European Space Agency Scientists]  தமது ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் [Herschel Space Observatory] குள்ளக் கோள் செரிஸிலிருந்து விட்டுவிட்டுத் தெரியும் இரண்டு நீர் எழுச்சி ஆவி ஊற்றுகள் [Water Vapour Spouts, like Geysers] வெளியேறு வதை நோக்கியுள்ளார்.   முழு உருண்டையான குள்ளக் கோள் செரிஸ் முரண் கோள்கள் சுற்றும் வளையத்தில் [Asteroid Belt]  ஒன்றாக உள்ளது.  முரண்கோள்கள் வளையம் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன.  செரிஸ் குள்ளக் கோள், முரண்கோள்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரியது !

     

    Herschel Space Observatory

    2007 இல் நாசா ஏவிய “புலர்ச்சி” விண்ணுளவி வெஸ்டா முரண் கோளை முதலில் சுற்றி உளவித் தற்போது குள்ளக் கோளை நோக்கிச் செல்கிறது.  புலர்ச்சி 2015 ஏப்ரலில் செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றி நீர் எழுச்சி ஊற்றுக்களை நெருங்கி ஆராய்ந்து, புதுத் தகவலை அனுப்பும்.  செரிஸ் குள்ளக் கோளை முதன்முதல் 1801 இல் இத்தாலிய வானியல் விஞ்ஞானி கியூஸெப் பியாஸ்ஸி [Giuseppe Piazzi] கண்டுபிடித்தார்.  அது வேளாண்மை, இனவிருத்தியைக் குறிப்பிடும்  ஒரு ரோமன் பெண் தெய்வத்தின் பெயர்.  செரிஸின் விட்டம் 950 கி.மீ. [590 மைல்].  அது ஒருதரம் சூரியனைச் சுற்றிவர நாலரை ஆண்டுகள் எடுக்கும்.   முதலில் அதைச் சூரிய மண்டலத் தோற்றத்தில் எச்சமான ஒரு பளுமிக்க முரண்கோள் [Massive Asteroid] என்றுதான் கருதினார்.   கூர்ந்து நோக்கியதில் அது முழு உருண்டை வடிவத்தில் சிலிகேட் உட்கரு கொண்ட, பனிக்கவச உட்புறத்தை  உடைய சிறுகோள் என்று முடிவு செய்யப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் அகில் வானியல் ஐக்கியக் குழுவினர்   [IAU – International Astronomical Union] தீர்ப்புப்படி அது குள்ளக் கோள்கள் [Dwarf Planets] வகுப்பில் ஒன்றாய் புளுடோ கோளுடன் இடப்பட்டது.

     

    2011 -2013 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா விண்வெளி  ஆணையகத்தைச் [ESA -European Space Agency] சேர்ந்த மைக்கேல் கியூப்பர்ஸ் [Michael Kueppers] என்பவர் பூமியைச் சுற்றிவரும் ஹெர்ச்செல் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி மூலம் [Infra-Red Instrument] நான்கு முறை, குள்ளக் கோள் செரிஸை உளவி வந்தார்.   அப்போது அவர் வியக்கத் தக்க முறையில் செரிஸ் குள்ளக் கோளில் முதன் முறையாக இரண்டு நீர் எழுச்சி ஊற்றுக்களைக் கண்டார்.  அவை இரண்டும் சூரியனை நோக்கும் திசையில் தெளிவாய்த் தெரிந்தன.   நீள்வட்ட  வீதியில் சூரியனைச் சுற்றி வரும் செரிஸ் குள்ளக் கோள் சூரியனை நெருங்கும் போது மட்டுமே அந்த நீர் ஊற்றுகள் தென்பட்டன.   அந்த இரண்டு நீர் ஊற்றுக்களும் வினாடிக்கு [6 கி.கி.] 13 பவுண்டு வீதம் நீரை வெளியேற்றியன.  விஞ்ஞானிகள் நீர் எழுச்சி ஊற்றுகள் செரிஸில் இருப்பதாகக் கண்டது இதுவே முதன்முறை.   மேலும் இந்தக் கண்டு பிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபிக்க  வழி வகுத்தது.

    Dwarf Planets

    செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் ஒரு சமயம் தெரிந்தும், மறு சமயம் மறைந்தும் மாறி மாறி  வருவதற்குக் காரணம் என்ன ?   விந்தையாக நீர் எழுச்சி ஊற்றுகள் சூரியனுக்கு நேர் எதிரில் வரும் போதுதான் தெரிகின்றன.   சூரியனுக்கு அப்பால் செரிஸ் நீள்வட்ட வீதியில்  செல்லும் போது, நீர் ஊற்றுகள் தெரிவதில்லை.   அதவது செரிஸ் சூரியனுக்கு அருகில் வரும் போது  மேற்தளம் சூடாகி, அதன் அடித்தளத்தில் உள்ள உறைந்த நீர் உருகி, அழுத்தம் ஏறி பீறிட்டு எழுகிறது !   சூரியனைச் செரிஸ் தாண்டிப் போனதும் அடித்தளம் குளிர்ந்து போவதால் நீர் எழுச்சி ஊற்று நிறுத்தம் அடைகிறது !  2015 ஏப்ரலில்சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸை நெருங்கி நோக்கும் போது இன்னும் புதிய தகவல் வெளியாகும்.

    Dawn Orbit around Ceres -1

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.   அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவி லிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

     

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனி லிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

     

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

     

    Relative Sizes of Dwarf Planets

     

    விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லா வற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானி களுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள் தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான

    ​செ​

    ரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது. 

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

     

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

     

    Complete Project

     

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp [Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp [October 31, 2012]

    29. http://spaceref.com/asteroids/dawn-spacecraft-heads-for-ceres.html  [December 4, 2013]

    30. http://articles.timesofindia.indiatimes.com/2014-01-23/science/46513244_1_ceres-dwarf-planet-asteroid-belt [January 23, 2014]

    31.    http://www.skyandtelescope.com/news/home/Dwarf-Planet-Ceres-Exhales-Water-241639001.html  [January 23, 2014]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) ( January 25, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • குடியரசு தினம் என்றால் என்ன?…

    ஷைலஜா

     

    images

    நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

    சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

    இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது. மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்? பள்ளியில் ஆசிரியர்களா? வீட்டில் பெற்றோர்களா? சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.

    தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி……..இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

    இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி….. இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்?

    ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள் இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?

    நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

    முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றே வாழ்ந்தார்கள்.

    ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும் பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

    மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

    குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி அட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம்.

    மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப் போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

    சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

    இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.

    ஜெய்ஹிந்த்!

    Share
  • குடியரசு தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    republic
    நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்நந்நாளில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தத்தோடு சில வற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் நாடு பொருளாதாரத்தில் வளமிக்க நாடாக உயர்ந்துள்ளது. அங்கு தனி மனித வருமானமும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயில் அதிகமாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரால் முற்றிலும் சிதைந்துபோன ஜப்பான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் நம் நாட்டின் நிலையை எண்ணும்போது அந்த மகிழ்ச்சிக்கான முகாந்திரமே இல்லை. பாரதி கூறிய, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற நிலை வேண்டுமானால் மாறியுள்ளதே தவிர, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இன்னும் நம்மால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு காலம்தான் வளரும் நாடுகள் பட்டியலிலேயே நாம் இருந்து கொண்டிருப்போம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் இந்த குடியரசு ஆட்சி, மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கும், எதிலும் ஊழல். என்ற இன்றைய நிலையைத் தவிர்த்தாலே நம் நாடு வெகு விரைவில் வல்லரசு ஆவது உறுதி. நமது நாட்டில் அறிவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கும்கூட பஞ்சமில்லை என்பது சந்திரனுக்கு அடுத்ததாக செவ்வாய்க் கிரகத்திற்கும் ஆய்வுக்காக விண்கலத்தை அனுப்பியதன் மூலமாக நிரூபித்துவிட்டோம். பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்கள் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். உலகிலேயே, பொருளாதார அடிப்படையில் வலிமை மிக்க நாடான அமெரிக்காவின் வளர்ச்சியில் நம்முடைய இந்தியர்களின் பங்கு மிக அதிகம். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை இனம் கண்டு பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றாலும், ஆட்சியில் இருப்பவர்கள் பொது மக்களுக்காக அன்றி தனிப்பட்ட முறையில் வெகு சிலருக்காகவே சேவை செய்கிறார்கள். இந்த நிலை மாறி மக்கள் இவர்களைத் தட்டிக்கேட்கும் உரிமையைப் பெற வேண்டுமானால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்காக, பணமாகவோ அல்லது , பொருளாகவோ எந்த வகையிலும் இலவசங்களைப் பெறாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப் பெற்றால் அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். இதனால் நாம் நம் கண் முன்னால் நடக்கும் தவறைத் தட்டிக்கேட்டும் உரிமையை இழந்துவிடுகிறோம். இந்த குடியரசு தினத்தில், மக்களுக்காக யார் தங்கள் தன்னலமற்ற சேவையை வழங்குகிறார்களோ, அவர்களைத்தான் வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைப்போம். மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், முழுமையான அமைதி ஆகியவைகள் தொடர்ந்து நிலவிட, தேசபக்தி உணர்வோடு இந்த குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம் .

    வாழ்க குடியரசு! வெல்க ஜனநாயகம்! ஜெய்ஹிந்த்!

    Share
  • கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா!

    பவள சங்கரி 

    DSC09929

    ஜனவரி 20, 2014 திங்கட்கிழமை மாலை தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக கோவை மெடிகல் சென்டர், மருத்துவ மையத்தில் ’தாயகம் கடந்த தமிழ் ’ என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 19ம் நாள், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான, மருத்துவர். நல்ல பழனிசாமி அவர்களின் முயற்சியால், ”தமிழின் வளம் தமிழர் நலம்” என்னும் இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் பண்பாட்டு மையம். ‘எங்கெங்கு காணினும் தமிழனடா’ என்று சொல்லும் அளவிற்கு, உலகம் முழுவதும் பரவி வாழும் நம் தமிழர்களின் ஆழ்ந்த மொழிப்பற்று, எத்தகையச் சூழலிலும், எதுவிதமான நெருக்கடியிலும் உயிர்ப்போடு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உயிர்த் துடிப்பில் உருவானதுதான் இம்மையம். நம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வளமை குறித்து அளவற்ற பெருமிதம் கொள்ளும் அளவிற்கு, நாம் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கு ஒரு செல்வமாக இதனை அளித்துவிட்டுப் போகும் பொறுப்பு எனும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற கருத்தின் ஆணி வேருக்கு உரம் இடும் வகையில், தமிழ் மக்களிடம், தமிழ் ஓர் உலகளாவிய மொழி உலகின் பல பகுதிகளிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும் . அப்படிச் செய்வதால் இயல்பாக தமிழர் மனதில் எழும் பெருமித உணர்வு, தமிழ் மொழியைத் தொடர்ந்து மேன்மைப்படுத்தி காப்பாற்றி வரக்கூடும் என்ற சீரிய ஆக்கப்பூர்வமான, உளவியல் அணுகுமுறையிலான சிந்தனையுடன் 12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்க்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்திச் சிறப்பித்தார்கள்.  முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

    கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு மாலன் தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது. “புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது.

    “சிறுகதை ஒரு படைப்பாளியின் திறனை எடை போடுவதற்கு உகந்த வடிவம்” என்னும் திரு மாலன், மேலும், சிறுகதைகள் என்பது நீதிக்கதைகள் அல்ல, நீளம் சார்ந்தும் தீர்மானிக்கப்படுவதல்ல, ஒரு கவிதைக்குரிய நேர்த்தியும், வார்த்தை சிக்கனமும், சொற்தேர்வும், நீர்ப்பரவல் போன்ற எடுத்துரைப்பும் அதற்கு இலக்கணங்கள். அவற்றுடன் தொடக்கத்தில் போடும் முடிச்சை கதைசொல்லி எப்படி அவிழ்க்கிறார், எதற்காக, ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் அடிப்படையில் சிறுகதைகள் அமைய வேண்டும்” என்ற இவருடைய கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டது. அதே போன்று “மொழிபெயர்ப்பிற்கு மூல மொழியை வாங்கிக்கொள்ளும் திறனும், சொந்த மொழியில் அதை வெளிப்படுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியரின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருத்தல் வேண்டும் இக்குறைகளைப் போக்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர இயலும்” என்ற சிந்தனையும் கருத்தில் கொள்ளத்தக்கவை.

    DSC09939

    தமிழறிஞர் பேராசிரியர் தொ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் மாணவர் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம், காமன்வெல்த் நாடுகளின் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 23 நூல்கள் எழுதியுள்ள சிறந்த பேச்சாளர், ’மொழியாக்கம் ஒரு முடிவற்ற பயணம்’ என்று கூறும் முனைவர் . கா. செல்லப்பன், “ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு மொழிபெயர்ப்பாளனே, ஏனென்றால் அவன் தன் உள்ளொளியை, உலகொளியாக்கும்போது, அக மொழியிலிருந்து புறமொழியில் ஆக்கம் செய்கிறான்” என்ற சுவையான, சிந்திக்கத்தகுந்த கருத்தை முன் வைக்கிறார்.

    குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.இலெ. தங்கப்பா அவர்கள், “மொழிபெயர்ப்பையும் இலக்கியப் படைப்பாகவே கருதி மேற்கொண்டு வந்துள்ளேன். எந்த ஒரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நான் என் மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டதும் இல்லை. ஒரு பாவலன் என்ற முறையில் என்னுள் இருக்கும் அழகுணர்வே என் மொழிபெயர்ப்புகட்கு அடிப்படையாக இருந்திருக்கின்றது “ என்கிற சிந்தனைக்குரிய கருத்தையும் முன்வைக்கிறார்.

    மொழிபெயர்ப்பிற்காகவும், கவிதைத் தொகுதிக்காகவும் இரு சாகித்ய அகாதெமி பரிசுகள் பெற்றவர், தமிழில் முதல் மொழியாக்க நூல் ‘விவிலியம்’ என்று கூறும், கவிஞர் புவியரசு அவர்கள். மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்களை மிகச் சுவைப்படவே விளக்கியுள்ளார். ”மிகவும் அன்னியமான பழக்க வழக்கங்கள், நமக்குப் பொருந்தாத பழமொழிகள், நாம் கண்டிராத மரம் செடிகொடிகள், ஒரு விசயத்தை அவர்கள் வெளிப்படுத்தும் முறை, அசைச் சொற்கள் போன்றவை தமிழ் மரபில் பொருந்தாமற்போவதால், தமிழில் இறக்கி வைக்க முடியாமல் போகிறது. இதற்காக நட்சத்திரக் குறிபோட்டு பக்கத்தின் கீழே அடிக்குறிப்பு எழுதுவதும் வாசகரைக் காலிடறச் செய்துவிடும்; எரிச்சலை உண்டாக்கிவிடும். இதை வெல்லும் வழி, உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர், குந்தர் கிராஸ் முன் வைத்துள்ளது போல ‘மறுபடைப்பாக்கம்’ ஒன்றுதான் சாத்தியக்கூறான தீர்வு என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழ் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்ட, தமிழில் இல்லாத ஓசையை உச்சரிக்க உருவாக்கப்பட்ட, ஜ, ஷ, ஸ, ஹ, ஷீ (அவை வடமொழி எழுத்துக்கள் இல்லை) போன்ற எழுத்துகளை தேவைப்பட்ட இடத்தில், தவிர்க்க முடியாத இடங்களில் பயன்படுத்துவதில் தவறே இல்லை என்கிறார். குந்தர் கிராஸ் சொன்ன, “எந்த மொழியும் புனிதமானது அன்று; மாறாதது அன்று; மாற்றக்கூடாதது அன்று. உலக நாகரீகங்களின் தாக்கம் ஏற்படும்போது எந்த மொழியும் விரிவடையவே செய்யும். புதியன புகுதலுக்கு வழியடைத்து, மொழியை சின்னச் சிமிழுக்குள் அடக்க முற்பட்டால், அந்த மொழி மெல்லச் சாகும்’ என்று சொன்னது மொழியாக்கத்திற்கு மட்டுமல்லாமல், மொழியின் விரிவாக்கத்திற்கும் உதவும் கருத்து இது என்கிறார்.

    கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றவருமான, திரு இந்திரன் அவர்கள், “மரபணுக்களின் சோதனை எப்படி உடம்பின் பரம்பரை குறித்த செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறதோ, அதே போன்றுதான் ஒரு மொழியின் சொற்கள் பற்றிய சோதனை பாரம்பரியமான அந்த பண்பாடு பற்றிய செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது. பண்பாட்டு விழுமியங்களின் ஒரு ஞாபகக் கிடங்காகச் செயல்படுகிற மொழி, நம்மைச் சுற்றியுள்ளவை குறித்த மதிப்பீடுகளை காலத்துக்குக் காலம் கட்டமைக்கிற கருவியாகவும் செயல்படுகிறது. தனக்கென்றிருக்கிற ஒரு மொழியை இழந்துவிட்ட பண்பாடும், தனக்கென்று இருக்கிற ஒரு பண்பாட்டை இழந்துவிட்ட மொழியும் பலகீனமாகி நாளடைவில் இல்லாது போகின்றன.” என்ற கருத்தை உறுதிபட முன் வைக்கிறார்.

    இறுதி நாள் நிகழ்வுகளை மிக அழகாகத் தொகுத்து வழங்கிய முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின் மிக யதார்த்தமான பேச்சு நல்ல வரவேற்பைப் பெற்றது. எந்தவிதமான வெளிப்பூச்சும் இல்லாமல் இருக்கும் உண்மை நிலையை அவர் எடுத்துரைத்த விதம், ‘ஆமாங்க ஐயா, எல்லார் வீட்டிலும் இந்த நிலைதானுங்க’ என்று சொல்லும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னைப் பொறுத்தவரை தம் மனைவியும் தமிழ் பேசுபவராக இருப்பதால், குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், 1970 ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரான பேரக் குழந்தைகளின் நிலை பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை என்றது சத்தியமான வார்த்தைகளாகத்தான் பட்டது. குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில் ஆரம்பிக்கும் பிரச்சனை பேசும் மொழி, எழுத்து மொழி என அனைத்திலும் பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணங்களாக அவர் சொன்னது கலப்புத் திருமணம். பெற்றோர் இருவரும் வெவ்வேறு மொழி பேசுபவராக இருந்தால் குழந்தை எந்த மொழியை பின்பற்றப் போகிறதோ அல்லது பொது மொழியான ஆங்கிலமே நிலைத்துவிடுமோ என்ற அவருடைய கவலை நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கான தீர்வு என்று அவரால் ஏதும் சொல்ல முடியாத நிலையே நிதர்சனம்.

    அடுத்து பேசிய ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, நம் தமிழ் நாட்டின் மதுரை மாநகரத்து மருமகளான, பேராசிரியர் உல்ரிக்கே நிகோலஸ் அவர்கள் மிக அழகாகத் தமிழ் பேசி சபையோரை வெகு எளிதாகக் கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, தென்கிழக்காசிய ஆய்வுத் துறையின் தலைவரும், இந்தியவியல் துறைப் பேராசிரியருமான இவர், முத்தொள்ளாயிரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணி இலக்கணம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்ந்தவர். தொல்காப்பியத்தின் உவமையியலை, வடமொழி நூலான தண்டியின் அலங்கார சாத்திரத்துடன் ஒப்பாய்வு செய்தவர். மத்திய அரசின் கல்வித் தொகை பெற்ற ஆய்வாளராக, தமிழ்ப் பல்கலைக் கழகங்களிலும், புதுவை தூரக்கிழக்கு பிரஞ்சுப் பள்ளியிலும் பணியாற்ற பெற்ற வாய்ப்பால் தமிழகத்தில் சில காலம் வசித்தவர். ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலில் அறியப்பட்ட இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி மட்டுமே என்கிறார். இவருடைய ஆதங்கமும் மேற்படிப்பு தமிழ் படிப்பதில் குழந்தைகளுக்கு உள்ள சிக்கல். இவர் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று புரிந்தது.

    தாயகத்திற்கப்பால் தமிழ்மொழிக் கல்வி கற்பித்தல்; நோக்கம், முயற்சிகள், அனுபவங்கள் குறித்த கட்டுரையை வழங்கியுள்ள திருமதி வெற்றிச்செல்வி கலிபோர்னியா தமிழ் கழகம் என்று இவர் நிறுவிய அமைப்பின் வழி அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புலம் பெயர்ந்து வசிக்கும் 4000 குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வகுத்து இந்த அமைப்பு தமிழ் கற்பிக்கிறது . இதன் காரணமாக ஒரு தலைமுறைக் குழந்தைகளுடன் தமிழ் மரபு பேணப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாடுகள் மற்றும் 5000 பேர் பங்கு கொண்ட உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழ்க் கல்வி மாநாட்டை 2012ல் நடத்தியவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து “கலைஞர் களஞ்சியம்” என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார். இவர் தங்கள் பள்ளியின் விரைவான வளர்ச்சி பற்றி மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டாலும், அதை மேலும் செம்மையாக நடத்த அவருக்கு உள்ள குறைபாடுகளையும் வெகு நேர்த்தியாக பகிர்ந்துகொண்டார். தங்களுடைய சர்வதேச தமிழ் கல்வி நிலையம், இன்றைய தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறுவது:

    தமிழ் உரைநடை நூல்கள் , சிறுகதை நூல்கள் மற்றும் மின்னூல்கள்.

    புலம்பெயர் மாணவர்களுக்கு உகந்த வகையில் பாடங்களையும், கதைகளையும், படைக்க தமிழ் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

    மாணவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி படிக்கும் வகையில் பாடங்களும், கதைகளும் அமைய வேண்டியது அவசியம்.

    புலம்பெயர் மாணவர்கள் வாழும் சூழல் குறித்து எழுத்தாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    எழுத்தாளர்கள் தமிழ் நாட்டுக் கல்வி முறை மற்றும் தமிழ் வகுப்புகள் மற்றும் புலம்பெயர் மாணவர்களின் கல்வி முறை மற்றும் மொழி வகுப்புகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்.

    மாணவர்கள் தங்களுடைய வழமையான பாடத்திட்டங்களுடன், அதிகப்படியான திணிப்புகளும் இருப்பதாக நினைப்பதால் அவர்களுக்குரிய புத்தகங்கள், கண்ணைக் கவரும் வகையில் வண்ணமயமாகவும், சுவையான உள்ளீடுகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

    சொல்லகராதிகள் எளிமையாக இருக்க வேண்டும் போன்ற பல எதிர்பார்ப்புகளை முன்வைத்தார். இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எழுத்தாளர்களின் கடமை என்பதும் நிதர்சனம்.

    சிங்கப்பூரில் தமிழ் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் முனைவர் அ.வீரமணி அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தற்சமயம் ஜப்பானின் இரிட்சுமேய்க்கான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழி ஆர்வமும், கல்வியும் பெற மாணவர்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திய அமைப்பு முக்கிய காரணியாக அமைந்தது. தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். தமிழுக்காக பல ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி பல தொகுப்பு நூல்களையும், பிற எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் தமிழ்க் கல்வி குறித்து, “பன்னாட்டு அறிஞர்கள் கூடும் சிங்கப்பூரில் தமிழ்க் கூட்டங்களில் அறிஞர்களைக் காண்பது அரிது, உலகளாவிய அறிஞர்கள் சிங்கப்பூரில் இருப்பது கூட சில குறிப்பிட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலமாக மட்டுமே அறிய முடிகிறது. இதனால், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி என்பதெல்லாம், எல்லாக் காலங்களிலும் அரசாங்க அரவணைப்பினால்தான் நடந்துள்ளது என்ற எண்ணம் எங்கும் நிலவுவதை உணரலாம். இந்த எண்ணம் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தொடர்பிலான ஆராய்ச்சியை மேற்கொள்வோர் மத்தியிலும் வாழ்கிறது. இந்த மனப்போக்கு ஆங்கில மொழியை அதிகம் கற்றதனால் ஏற்படுகிறதா அல்லது காலனித்துவ ஆட்சியின் தாக்கத்தால் தொடர்ந்து இருக்கிறதா என்று பகுத்தறிய முடியவில்லை. இன்றைய சிங்கப்பூர் அரசின் ஏகாதிபத்திய ஆதிக்கமும் இந்த மன நிலைக்குக் காரணமாகலாம்” என்ற கருத்தின் அடிப்படையில் இருந்தது சிந்திக்கத்தக்கது. மேலும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் ஒன்று , அரசியல் பொருளாதார செல்வாக்கில்லாமல் தனது மொழியைத் தொடர்ந்து வளர்க்க முடியுமா என்ற ஐயம் தொடர்ந்து நிலவவேச் செய்வதாகக் கூறுகிறார். பல குடும்பங்களில் தமிழ் வெறும் பள்ளி மொழியாக மட்டுமே கருதப்படுவதாகவும் கூறுகிறார்.

    ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி வளர்ச்சி, வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய திரு அன்பு ஜெயா அவர்கள் மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற்வர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று, இருபது ஆண்டுகளாகச் சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளின் ஹோல்ஸ்வொர்தி கிளைக்கு முதல்வராகவும், தற்போது அப்பள்ளியின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் 15 ஆண்டுகளாக பங்குபற்றி தமிழ்ப்பாடப் புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் பல நடத்தி வருவதுடன் 2012 ஆம் ஆண்டு கலிபோர்னியா தமிழ்க் கல்விக் கழக மாநாட்டில் ஆசிரியர்களுக்கு ஒரு பயிலரங்கும் நடத்தியுள்ளார். தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் பல பயிற்சிகளைத் தன்னுடைய இணையதளத்தில் (www.anbujaya.com) வெளியிட்டு வருகிறார். மதுரைத் திட்டத்தில் பங்கெடுத்து 2000 பக்கங்களுக்கு மேல் தட்டச்சு செய்தும் பிழை திருத்தியும் பணி செய்திருக்கிறார்.

    தமிழ்க்கல்விக்கு உள்ள சவால்களாக இவர் குறிப்பிடுவது, “முற்றிலும் வேற்றுமொழிச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தல் என்பது எளிதான செயல் இல்லை. அதற்காகப் பல விதமான சவால்களையும் தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சில சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிகிறது. சில சவால்களுக்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை”

    தமிழ்மொழி தமிழர்களின் அடையாளம் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த முயலாத, சில சமயங்களில் தாங்களே உணராத பெற்றோர்கள்.

    தமிழைப் படிப்பதால் என்ன பயன் என்று பொருளாதார நோக்கில் எழும் கேள்வி.

    வீட்டில் பிள்ளைகளுடன் எப்போதும் தமிழில் பேசவேண்டியதின் அவசியத்தை உணராது இருத்தல்.

    வார இறுதி நாட்களில் பாட்டு, நடனம், விளையாட்டு, நீச்சல் போன்ற பிள்ளைகளின் மற்ற வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

    என் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரிந்தால் மட்டும் போதும் என்று கூறும் பெற்றோர்களின் மனப்பாங்கு.

    வாரத்தில் இரண்டு மணி நேரம் தமிழ் படித்தாலே பிள்ளைகளுக்குத் தமிழில் முழு திறமையும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

    பல்கலைக்கழகத்தில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்க தற்போது வாய்ப்பு இல்லாத சூழ்நிலை.

    இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, பெற்றோர்கள் தமிழ் மொழியின் இன்றியமையாமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். வீட்டில் தங்கள் பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசவேண்டும். அவர்களை தமிழ்ப் பள்ளிகளுக்குத் தவறாது அழைத்துவர வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் தங்களால் முடிந்த பங்களிப்பைத் தவறாது செய்தார்களானால் அயல்நாடுகளில் தமிழ்மொழி தலைமுறை தலைமுறைகளாகச் செழித்தோங்கும் என்பது உறுதி, என்கிறார் திரு அன்பு ஜெயா.

    DSC09983

    சீன வானொலியின் தமிழ்ப்பணி என்னும் தலைப்பில் தம் கருத்துகளை நிறுவியுள்ள சீனப்பெண் செல்வி. சாவோ ஜியாங் சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப்பிரிவின் தலைவர். தமிழ்மீது கொண்ட பற்று காரணமாகத் தன் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டவர். இவர் எழுதியுள்ள ‘சீனாவில் இன்ப உலா’ என்னும் புத்தகம், ஒரு சீனர் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் மொழி புத்தகம் ஆகும். 2013ஆம் ஆண்டு சீனாவின் புகழ் பெற்ற சி.பி. பதிப்பகத்திற்காக, “சீனம் தமிழ் கலைச்சொல் அகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இந்த அகராதியில் சுமார் 27,000 சொற்கள் உள்ளன . தமிழர்கள் சீன மொழியைப் படிப்பதற்கு இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கலைமகளின் தலைமையில் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் சேவையில் பெரும் முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இப்பொழுது சிற்றலை ஒலிபரப்பு, பண்பலை ஒலிபரப்பு மட்டுமல்லாமல், தமிழ் இணையதளம், கைப்பேசி இணையம், தமிழொலி என்னும் இதழ் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.

    “தமிழ் மொழி அருமையான மொழி என்பது என் கருத்து. தமிழுக்கு அமுது என்று பெயர் என்பது உண்மைதான்” என்கிறார் கலைமகள். எதிர்காலத்தில் தமிழ் மொழி போல் சீனத் தமிழ் ஒலிபரப்பும் நீண்டு நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்குவது எமது கடமையாகும். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுவதற்கு சீனத் தமிழ் ஒலிபரப்பு பங்காற்றுகிறது என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார் கலைச்செல்வி, முத்தாய்ப்பாக.

    தம்முடைய நன்றியுரையில், திரு மாலன் அவர்கள் குறிப்பிட்டது போல, தாயகம் கடந்த தமிழ் என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு, வெற்றுப் பெருமைகள் மட்டுமே பேசாமல், நம் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள், அதன் தீர்வுகள் போன்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்தார்கள் என்பதே சத்தியம். கலந்து கொண்ட அனைவரும் மன நெகிழ்வுடன் விடைபெற்றது கருத்தரங்கக் குழுவினரின் அக்கறையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. இறுதியில் தமிழ் படிக்கும் ஒரு மாணவி படித்து முடித்தவுடன் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பியது அரங்கில் சிறு சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை.

    Share
  • வேண்டாம் உன் நட்பு

    விசாலம்-drinkindex

    என் இனிய சிநேகிதியே ,
    நீயா ? எனக்கு  ..இப்படி?
    உன்னை மார்பில் அணைத்தேனே !
    இனிய சுகத்தைத் தந்தாயே ,
    உதடுடன் உன்னை இணைத்தேனே!
    இனிய ரசத்தைக் கொடுத்தாயே ,
    மாலையில் சந்தித்த நான்,
    திரும்பப் பார்க்கும்  எக்கம் ,
    அடுத்தடுத்து ஏற்பட
    காலையிலும்  இணைந்தேனே ,
    உன் நட்பு எனக்கு பெரிது ,
    உன்னை நான் விரும்ப ,
    என்னை நீ விடாமல் பிடிக்க
    சுவர்க்கத்தில்  மிதந்தேன் ,
    உன்னால் பல நட்பு போனது ,
    காலால் உதைப்பட்ட மனைவி
    கர்ப்பம்  கலைந்து நின்றாள் ,
    என்னை விட்டுப் போனாள்
    பின்னும் நீதான் எனக்கு
    என்றும் துணை நின்றாய்
    சோகமா நீ கைக் கொடுத்தாய் ,
    தனிமையா, ஓடி வந்தாய் ,
    கோபமா ?என் கூட நின்றாய் ,
    சிநேகிதியாக நடித்து
    ஏன் இன்று துரோகியானாய்! ,
    நிம்மதிக் கொடுப்பதுப் போல்
    என் நிம்மதியை    கெடுத்தாயே ,

    இன்று  ஆஸ்பத்திரியில் நான்
    இது நீ கொடுத்தப் பரிசு ,
    கல்லீரலில்  புற்று நோய்
    இதோ உன்னைத் தூக்கி எறிகின்றேன் ,
    வேண்டாம் உன் சகவாசம் ,
    நட்பாக நடித்து
    என் உயிருகே உலையா?
    ஏ மதுப்புட்டியே, விஸ்கியே
    ஒழிந்து போ !
    இன்னும்  சிறிது காலம் தான் வாழ்வு
    உன்னால் வந்தது இந்தத் தாழ்வு
    கண்கெட்டப்பின்  சூரிய நம்ஸ்காரம்
    இனி  உன் திக்கிற்கும் ஒரு நமஸ்காரம்

    பின் குறிப்பு   புற்றுநோயினால் உயிருக்கு மனறாடும் ஒருவரைப்பற்றி
    என் தோழி சொல்ல அதனால் எழுதப்பட்டது இந்தக்கவிதை என் இனிய சிநேகிதியே ,

     

    படத்துக்கு நன்றி
    Share
  • மணிக்கொடி – புத்தக மதிப்புரை

    மணிக்கொடி  

    எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா 

     

    “கல்கி” பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல்.

    ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.

    வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டிக்கான நூல் மதிப்புரை

    கலந்து கொள்பவர் : ஜெயஸ்ரீ சங்கர்.

    ஆசிரியர் குறிப்பு:                                                                                            

    நாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    jeyashree

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    jeyaஎழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன. ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள்,  காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள்,  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ,  சத்தியசாயி பாபாவின் வரலாறு  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் “தி போயட் ” இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, மன்னார்குடி, சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கௌரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    இந்த ஆண்டு 2013இல் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பெண் எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு இவருக்கும் ‘விருது’ வழங்கப்பட்டது.

    அண்மையில் கம்பன் கழகத்தின் ‘சிவசங்கரி விருது’ம்  கிடைக்கப் பெற்றார்.

    மணிக்கொடி சென்னை வானொலியிலும் தொடர்ந்து 10 மாதங்கள் காலம் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

     “மணிக்கொடிநூல் வெளியான ஆண்டு :

    முதற் பதிப்பு : டிசம்பர் , 1995

    வானதி பதிப்பகம், சென்னை.

    இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2013

    உரிமை : ஆசிரியைக்கு

    பக்கங்கள் : 900

    விலை : ரூ.500/-

    பதிப்பகத்தார் முகவரி :

    சேது அலமி பிரசுரம்

    நி -7, அரவிந்த் நரேன் என்கிளேவ்,

    8, மாசிலாமணி தெரு,

    பாண்டி பஜார், தியாகராய நகர்,

    சென்னை – 600 017.

    ——————————————————————————————————————–

     

     

     

    முன்னுரை :

    மணிக்கொடிஎன்ற இந்த வரலாற்றுப் புதினம் உருவாகக் காரணம்:  

    நமது நாட்டை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்பதற்காக நம் முன்னோர்கள் பட்ட துன்பங்களும், செய்த தியாகங்களும் தக்க ஆதாரங்களுடன் எழுதப்பட்டு அந்தக் காலகட்டத்தை, தேசப் பற்றை காட்டக்கூடிய கண்ணாடியாக, காலம் போட்ட கையெழுத்தென   ‘இந்திய வரலாற்றுச் சுதந்திரம்’ என்ற ரசவாதத்தை மையமாகக் கலந்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் தலையாயப் பொறுப்பு நமது நாட்டின் இளைய சந்ததியினருக்கு என்றென்றும் உண்டு என்பதை எடுத்துக்காட்டி உருவானதே ‘மணிக்கொடியின்’ தலையாய நோக்கமாகும்.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் ; எண்ணியார்

      திண்ணிய ராகப் பெறின் “

    என்ற வாக்கின்படி அவர்களின் உறுதியும், நம்பிக்கையும், உழைப்புமே அவர்களுக்கு  நாட்டைப்  பெற்றுக் கொடுத்தன. அதே உறுதியும், நம்பிக்கையும், உழைப்பும் ‘ஆசிரியர் .ஜோதிர்லதா கிரிஜா’ அவர்களுக்குள்ளும் இருந்ததை அவருடைய இந்தப் புதினத்தில் பக்கத்துக்குப் பக்கம் நாம் காணலாம்.

    “மணிமிடை பவளம்” என்பார்கள். அதைப்போல கதையோடு இணைந்து தேசிய உணர்வும் நிறைந்ததாக  இந்நூல் உள்ளது.  இது வெறும் கதையல்ல…நமது பாரத தேசத்துச் சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாறு.

    முன்னோட்டம் :

    “கிருஷ்ணா இத பாரு. எனக்கு என்ன வயசு?”

      இதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

      “நான் பிறந்தது 1905-ஆம் வருஷம். அக்டோபர் மாசம், பதினாறாந்தேதி. அன்னிக்குத்தான் வெள்ளைக்காரன் பெங்காலை ரெண்டா உடைச்சான்!” எதைச் சொன்னாலும் முடிந்த அளவுக்கு அதில் சரித்திர நிகழ்ச்சியைக் கலக்காமல் பேசப் பெரியப்பாவுக்குத் தெரியாது.

    “இன்னிக்கு என்ன தேதி? டிசம்பர் பதினெட்டு,1985; காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கொண்டாடிண்டிருக்கிற வருஷம், அப்ப எனக்கென்ன வயசு இப்ப? எண்பது முடிஞ்சுடுத்து. இத்தனை வயசுக்கு மேலயும் நான் இந்த உலகத்துல – இன்னும் சொல்லணும்னா – இந்த நாட்டில – நான் வாழணுமா?”

    “இந்த நாட்டிலே’ என்கிற இரண்டு சொற்களில் பெரியப்பாவின் ஏமாற்றம் முழுவதும் வெளிப்பட்டது எனலாம். ஆனால் இப்போது தமது இறுதி நாளில் படுகிடையாய்ப் படுத்துக்கொண்டு அவர் சொன்ன அந்த வாக்கியம்”.

    “சுதந்திரம் அடையறதுக்காக அந்தக் காலத்துல எத்தனை மனுஷா எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டா?, எப்படி எப்படியெல்லாம் தியாகங்கள் பண்ணினா? என்பதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு சுத்தமாத் தெரியல்லே. ஸ்கூல் பாடத்திலேர்ந்து இண்டியன் ஹிஸ்டரிங்கிற சப்ஜெக்டையே கம்ப்ளீட்டா எடுத்துட்டான். அரையுங்குறையுமா ஏதோ சொல்றான்!”

    இப்படியாக , “கதை உருவாக பெரியப்பா ஊன்றிய விதை”.

    1995 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தில், மரணப் படுக்கையில் தமது  இறுதி நாட்களைக் கடத்தும் வேளையில் , தனது பெரியப்பா தன்னை அருகில் அழைத்து பரணிலிருந்த1920 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நமது இந்தியா சுதந்திரம் அடையும் வரைக்குமான அவரது   அனுபவங்களை , ரத்தம், சத்தம், சிரிப்பு, வெறுப்பு, சோகம்..காதல், மோகம், பாசம், மோசம், வேஷம்…கோஷம்…!  இப்படி நவரசங்களும் கலந்த டயரி குறிப்புகளை, காலம் விட்டு விட்டு நடந்து சென்ற நிகழ்வுகளை அப்படியே வரலாற்று மதிப்பு மாறாமல் ஒரு நாவலாக மாற்றச் சொன்னார்.

    பெரியப்பாவின் கடைசி ஆசையாய் அவரது அன்புக் கட்டளையை பூர்த்தி செய்யும் விதமாக அவரின் டயரிக் குறிப்புகள் அனைத்தும் சேர்ந்து  அப்படியே ஒரு நவரச நாவலாக மாறி மலர்ச்சி அடைந்த விதம் அருமையாக இருக்கிறது.

    பாரத மக்களின் ‘ஜெய் ஹிந்த் ‘ என்ற வீரக் கோஷத்தோடு கண்களில் மின்னல் தெறிக்க மிதந்தது ‘சுதந்திர மணிக்கொடி’. இப்பேர்ப்பட்ட ‘மணிக்கொடி’யை வெறும் தலைப்பாக மட்டும் தங்கவிடாமல் உலகத்தைப் பின்னோக்கி நகரச் செய்த புத்தகமாக அமர்க்களமான கதைக்களத்துடன் ஆக்கியுள்ளார். அதற்கு  ஆதார சுருதியாக  ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்து நமது இந்தியா  அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுதலையைப் பெற அனுபவித்த பல இன்னல்களையும், போராட்டங்களையும் களிநடனம் புரிகின்ற இனிய தமிழில் கடின உழைப்பிற்கு பின்னால் உருவாக்கி அதற்கு ‘மணிக்கொடி’ என்று  பெயரிட்டுள்ளார் நூலாசிரியர் ஜோதிர்லதா கிரிஜா.

    அவர்களது  இலக்கிய வாகைக்கு இந்த ‘மணிக்கொடி’ நாவல்  ஒரு மணிமகுடமாகும். ‘மணிக்கொடி’ என்று  பெயரிட்டுள்ளார் நூலாசிரியர் ஜோதிர்லதா கிரிஜா. அவர்களது  இலக்கிய வாகைக்கு இந்த ‘மணிக்கொடி’ நாவல்  ஒரு மணிமகுடமாகும்.

    சூழ்ந்துள்ள இருளை பழித்துக் கொண்டே இருப்பதை விட, ஒரு சிறு சுடர் விளக்காவது ஏற்றி வைக்க முற்படுவதே உன்னதம் என்பது போல  ஆயிரமாயிரம் தலைமுறைக்குப் பாயிரமாக, ஒரு நல்ல சரித்திர நாவல் வெறும் எழுத்துக்களாலோ சொற்றொடர்களாலோ மட்டும் அமைந்து விடாமல்,பல மலர்களிலிருந்து சேமித்த தேன் துளியை ஒரு தேன்கூட்டில் அடைக்கும்  தேனீயைப் போல மாதக் கணக்கில் பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து தனது விடா முயற்சியும், தேசப்பற்றும் கலந்து உருவாக்கிய சுதந்திர வரலாற்றுச் ‘சுடர்மணி சகாப்தம்’ தான் இந்த ‘மணிக்கொடி’ என்றாலும், அது மிகையாகாது.

    மணிக்கொடிஎன்னும் நவரச நாவலின் கதைச் சுருக்கம்:

    பெரியப்பாவின் டைரிக் குறிப்புகளே நாவலின் உட்கருவாக உள்ளது.  மற்றும் அம்மா, அப்பா,கொடுத்த சில முக்கியமான விவரங்கள், மற்றும் பெரியப்பா குறிப்பிட்டிருந்த சிலர் கொடுத்த தகவலாலும் மற்றும் ஆதாரங்களுக்காக சில புத்தகங்கள் கொடுத்த தகவல்களாலும் குறிப்புகளை இணைக்கும் உண்மை வரலாற்று நிகழ்ச்சிள் கதைக்குள் எடுத்தாளப் பட்டுள்ளன.

    கதையை ஆரம்பிக்கும் போது, பெரியப்பாவின் நாற்காலி நிரந்தரமாய்க் காலியாகிக் காட்சிப் பொருளாய் ஆனதோடு, அதே நாற்காலியில் அவரது டயரிகளை எடுத்து வைத்த போது, அவரது மடியில் வைத்தே நாவலை ஆரம்பித்த உணர்வும் வாசகர்களைத் தொற்றிக் கொள்கிறது.

    ‘மணிக்கொடி’,  தேசபக்தி நிறைந்த இரண்டு குடும்பங்களைப்  பின்னணியாக அமைத்து எழுதப் பட்ட புதினம்.

    தேசபக்தரும், பள்ளிக்கூட ஆசிரியருமான காங்கிரஸ்காரர் ராமசாமி, அவரது மனைவி குஞ்சம்மாள், இவர்களது ஐந்து வயதான மகன் கங்காதரன்,சிறு வயதிலேயே கணவனை இழந்த ராமசாமியின் சகோதரி  விசாலம், என அன்பும், பாசமும் நிறைந்த எளிமையானதொரு  குடும்பத்தை மிகவும் யதார்த்தமாகச் சித்திரித்து அந்தக் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ராமசாமியின் குடும்பத்துள் சென்று அமர்ந்து கொண்டது போன்ற பிரமையை ஏற்படுத்தும் விதமாக எழுதியிருப்பது, அருமையான ஆரம்பம்.

    வக்கீல் ராஜாராமன், அவரது மனைவி பாமா, லண்டனில் படித்தபடியே இந்திய தேசபக்த இயக்கத்தில் ரகசியமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  மூத்தமகன் அருணாச்சலம் எனும் அருண், மகள் தேசபக்தை அஞ்சனாதேவி, கல்லூரியில் படிக்கும் இளைய மகள் அமராவதி என்று இவர்கள் குடும்பமும் தேசபக்தி நிறைந்த குடும்பமாக வாசகர்களின் கண்களில் காட்சி விரிவது போன்ற பிரமையுடன்

    இரண்டாவது குடும்பத்தை அறிமுகப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கும் விதம் சிறப்பு.

    லண்டனில் இருந்து அண்ணன் அருண் அனுப்பிய ‘மதன்லால் திங்ரா’ தூக்கிலிடப் படும் முன்னர் எழுதிய கடைசி வாக்குமூலத்தை எடுத்து வந்த அஞ்சனாதேவி, காங்கிரஸ்காரர் ராமசாமியை சந்தித்து அவரிடம் அதைக்  கொடுத்து, இதை ரகசியமாக அச்சடித்து மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும் என்ற தனது அண்ணனின் கோரிக்கையை முன்வைகிறாள். அதற்குள் திடீரென போலீஸ்காரர் ராமசாமியின் வீட்டை சோதனை போடுவதற்காக நுழைய, அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அஞ்சனாதேவி தன்  கையிலிருந்த காகிதக் கற்றையை அடுப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்கி ‘தேச விரோத நடவடிக்கைக்கான சர்ச் வாரண்ட்’ டுடன் வந்த போலீஸ்காரர்களை ஏமாற்றத்துடன் திரும்ப வைக்கும் காட்சியும், அந்தக் கடிதத்தின் தடயத்தை அழித்ததன் மூலமாக  ராமசாமியைக் காப்பாற்றிய விதமும் தத்ரூபமாக மனதில் பதிக்கும் வண்ணம் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன.

    கதை முழுதும் சீரியஸாக கொண்டு செல்லாமல், இந்த போலீஸ் களேபரத்திற்குப்  பிறகு வீட்டில் ராமசாமியின் 5 வயது மகன் கங்காதரன் செய்யும், குறும்புகளும், விளையாட்டுக்களும் ஒரு பாசமுள்ள குடும்பத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற பிரமையை ஏற்படுத்தி ,அத்தோடு குஞ்சம்மாளும் , விசாலமும் வந்த பெண் அஞ்சனா தேவியின் சாதியைப் பற்றிப் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகள் மனம் விட்டுச் சிரிக்கும்படியாக ஹாஸ்யமுடன் எழுதப் பட்டிருக்கிறது.

    ராஜாஜாமனின் மகன் அருணின் நண்பனான  இந்திரநாத் பானர்ஜியின் சகோதரனான .நரேந்தரநாத் பானர்ஜி எனும் நரேன்.வக்கீல் ராஜாராமனின் வீட்டிற்கு வந்து, அவரது மகன் அருணைப் பற்றி புதிரான தகவல்களைச் தெரியப் படுத்துவது போல, கதையில் நரேனின் அறிமுகம் விறுவிறுப்பான உரையாடலுடன்  நகருகிறது..நரேன், வங்காளி வகுப்பைச் சேர்ந்தவர். தேசபக்தி இயக்கத்தில் இரண்டு முறை இரண்டு வெள்ளைக் காரர்களை சந்தர்ப்பவசத்தால் கொலை செய்து விட்டு தூக்குக் கைதியாக தலைமறைவாகி, போலீஸால் தேடப் படுபவர்.இதற்கான நிறைய நிகழ்வுகளை இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் பயங்கரவாதிகள் என அழைக்கப்படும் தீவிரவாதிகள் பற்றிய  உண்மை சம்பவங்களோடு இணைத்து கதை புனையப் பட்டிருக்கும் விதம் புதுமை.ஒரு ஆபத்திலிருந்து அமராவதியை தக்க தருணத்தில் காப்பாற்றியவன்.அதைத் தெரிந்து கொண்டதும் ராஜாராமன் நரேனைத் தன் மகனாகவே பாவிக்கிறார்.

    அருணாசலத்தைப் பற்றிக் கிடைக்கும் புதிரான தகவல்களை, அவ்வபோது நரேன்,ராஜாஜாமன் வீட்டில் தெரியப் படுத்தி வருகிறான்.பிறகு,ராஜாராமன் வீட்டிலேயே அடைக்கலமாக வந்து மீண்டும் தங்கிக் கொள்கிறான். இளைஞர் இயக்கத்தின் போராட்டத்தைப் பற்றியும், அவர்களது பணத் தேவைகளுக்கு அரசாங்க கஜானாவைத் தேவை இருப்பின் கொள்ளை அடிப்பதுவும், அவசியமானால் கொலை செய்வதும் பற்றி ராஜாராமனுக்கும்,.அஞ்சனாவுக்கும், அமராவதிக்கும்,விளக்கும்போது, அவரைத் தேடி செர்ச் வாரண்ட்டுடன் போலீஸ் வருகிறது. அதையறிந்ததும் ,நரேன் அங்கிருந்து போலீசுக்குத் தெரியாமல் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் அன்று இரவே ஒரு நீண்ட கடிதத்தில் தான் எந்த சந்தர்ப்பத்தினால்  ஆங்கிலயர்கள்  இரண்டு பேரைக் கொலை செய்ய நேர்ந்தது  என்பதையும்  விவரமாக ஒரு காகிதத்தில் எழுதி அதைச் சுருட்டி ராஜாராமனின் அறையில் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகிறான்.

    நம் நாட்டுப்  புரட்சி இயக்கத்தினருக்குத்  திருட்டுத்தனமாகக்  கைத்துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் போன்றவற்றை லண்டனிலிருந்து தருவித்து உதவும் இந்தியா ஹவுஸில் வாழும் நம் தேச பக்தர்கள், விநாயக் தாமோதர் சாவர்க்கர், அரவிந்த கோஷ், குதிராம் போஸ், கன்னயாலால் மற்றும் பல புரட்சியாளர்களைப் பற்றி நரேந்திரநாத் பானர்ஜி சொல்லும் தகவல்கள் மனம் பதைக்கச் செய்கின்றன.

    வக்கீல் ராஜாராமனின் நண்பர் லண்டனிலிருந்து திரும்பி வரும்போது அவருக்காக  எடுத்து வரப்பட்டு கொடுத்த பொட்டலத்தைச் சுற்றி வந்த பழைய லண்டன் நாளிதழில் தன் மகன் அருணின் புகைப்படத்தோடு அவன் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தியையும் படித்த ராஜாராமன் மனம் கலங்குகிறார். மகள்கள் அஞ்சனாவிடமும், அமராவதியிடமும் மட்டும் தனது சோகத்தை ரகசியமாகப் பகிர்ந்து கொள்கிறார். மனைவி பாமாவுக்குத் தெரியப் படுத்த வேண்டாம், மேலும் மனைவியை சமாதானப் படுத்த, அருண் இன்னும் இரண்டு வருடங்கள் மேல்படிப்பு படித்து விட்டுத் தான்  திரும்புவான் என்றும் தற்போது லண்டனிலிருந்து எந்தக் கடிதப் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்து விடுகிறார். அதற்குள் மீண்டும் நரேன் வந்து இவர்கள் வீட்டில் அடைக்கலமாகத் தங்குகிறான். ரகசிய  புரட்சிக் கும்பலில் ஈடுபட்டிருக்கும் நரேந்திரநாத் பானர்ஜிக்கும், அமராவதிக்கும்  இடையே  மெதுவாகத் காதல் அரும்புகிறது.

    அதே நேரத்தில் நரேனுக்கு,ரகசிய புரட்சி இயக்கத்தின் தலைவரிடமிருந்து கல்கத்தா வரச்சொல்லி ‘அழைப்பு வருகிறது. நரேன்  உடனே கல்கத்தா கிளம்பத் தயாராகிறான். அவனது  நீள் பிரிவை எதிர்கொள்ளும் முன்னர்  அமராவதி பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் நரேனை சந்தித்துப் பேசித்  தன்னை இழக்கிறாள். இவ்வாறாக கதை திரும்புகிறது. கல்கத்தா சென்று விட்ட நரேன் அமராவதிக்கு கடிதங்கள் எழுதி தொடர்பில் இருக்கிறான். அமராவதி கர்பவதியாகிறாள்.

    இவ்வாறிருக்க , ராஜாராமனின் மனைவி  பாமா ஏதோ படிக்க கதைப் புத்தகத்தை எடுக்கும்போது அதிலிருந்து தற்செயலாக விழுந்த அந்தச் செய்தித்தாளில் தனது மகனின் புகைப்படத்தையும் பார்த்து தன் மகன் அருண் சுட்டுக் கொலை செய்யப பட்டதை அறிந்து கொண்டதும் தாயின் மனம் சிதைந்து பைத்தியமாகி விடுவதால் நிரந்தரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விடுகிறாள்.

    சுவாரசியமாகச் செல்லும் கதையில் அஞ்சனாதேவி, ராமசாமியின் மீது அவர் திருமணமானவர் என்று அறிந்தும், ஒத்த கருத்துகள் அவர் மீது அவளுக்கு இருவருக்குமிடையே ஈர்ப்பை உண்டுபண்ண, அதை எடுத்துக் காட்டிய விதத்தையும், அஞ்சனாதேவிக்கு ராமசாமி மீது காதல் அரும்பும் காட்சியும், அதை அவரிடம் மறைமுகமாக சொல்லும்போது, அவருக்கும் அஞ்சனாவைப் பிடித்திருந்தாலும்,ஏகபத்தினி விரதனான அவருக்கு அப்படி ஓர் எண்ணம் வரவே இல்லை.. என்பதை  மிகவும்  நளினமாக கையாளப்பட்டு கதையோடு பிணைக்கப் பட்டிருக்கின்றன..

    இதன் நடுவில், அஞ்சனா கார் ஓட்டுவதையும், குஞ்சம்மாள் அஞ்சனாதேவியின் சாதியைப் பற்றி ராமசாமியிடம் கேட்டதால் வீட்டில் ஏற்படும் சண்டைப் பூசலும் காரசாரமான விவாதங்களும் ரசிக்கும் படியாக எழுதி, கதை ஒரே பாதையில் சென்று விடாமல் நவரசங்களும் அங்கங்கே அளவோடு எடுத்தாளப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

    பள்ளியில் நடந்த கூட்டத்தில் திடீரென கலகம் வந்துவிடவே, ராமசாமியும், அஞ்சனாதேவியும் ஓர்  இருட்டு அறையில் ஒளிந்து கொள்ள நேரிடுகிறது. அந்த விஷயம் வெளியில் வேறு விதமாகப் பரவியதால் ராமசாமியின் வீட்டிலும் புகைகிறது. அஞ்சனாதேவி மீது தான் வைத்திருந்த கண்ணியமான நட்பை மனைவி குஞ்சம்மாளுக்குப்  புரிய வைக்க விவேகத்துடன் முயலுகிறார் ராமசாமி.

    தன் மனைவி குஞ்சம்மாளுக்கு  இருக்கும் தாழ்வு மனப்பான்மை விலக ராமசாமி அவளுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கிறார். குஞ்சம்மாளை குஞ்சனா தேவியாகச் மாற்றி விடுகிறேன் என்று கேலி செய்கிறார்.  இதற்கிடையில், ஐந்து வருடங்கள் கழித்து குஞ்சம்மாள் மீண்டும் கருத்தரிக்கிறாள். அந்நிலையில் அவளுக்கு தன் கணவனைப் பற்றிய ஒரு மொட்டைக் கடிதம் வருகிறது. அதை எடுத்துக் கொண்டு வக்கீல் ராஜாராமன் வீட்டுக்குச் சென்று கடிதத்தைக் காண்பித்து படிக்கச் சொல்லி, அவரது மகளைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வருகிறாள் குஞ்சம்மாள். இந்த விஷயத்தை ராமசாமியிடம் மறைத்தாலும் தற்செயலாய்க் கண்டுபிடிக்கப்பட்ட பின், குற்ற உணர்வு காரணமாக உடனே ராமசாமியிடம் சொல்லிவிடுகிறாள்.இதே குழப்பத்தில் இரண்டாவதாக கங்காதரன் போலவே ஒரு மகனைப் பெற்றெடுத்த கையோடு இறந்து விடுகிறாள் குஞ்சம்மாள்.

    அஞ்சனாவை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் தனது சகோதரி விசாலத்திடம், அதை மறுத்துச் சொல்கிறார் ராமசாமி. நீண்ட நாட்கள் கழிந்து மீண்டும் அஞ்சனா ராமசாமியை நேரில் வந்து சந்தித்து, அமராவதிக்கு நரேன் மூலமாக பெண் குழந்தை பிறந்துள்ளத விஷயத்தையும், அந்தக் குழந்தைக்கு ‘ பவித்ரா’ என்று பெயரிட்டிருப்பதையும் சொல்லி விட்டுப் போக அவர்கள் வீடு தேடி வருகிறாள்.

    அப்போது ஆறு வயது மகன் கங்காதரன், தனது பள்ளித் தோழனின் அப்பா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டிருப்பதாகவும், தனக்கு அஞ்சனா மாமியைப் பிடித்திருப்பதாகவும், அப்பாவைக் அவர்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி குழந்தைத் தனமாகச் சொல்லும் போது , வக்கீல் ராஜாராமனின் குடும்பத்தில் சமீபத்தில் நடக்கும் விஷயங்களை கருத்தில் கொண்டு, அதில் தனக்கு உடன்பாடு சிறிதும் இல்லாததால் தனது தம்பி ராமசாமிக்கும், அஞ்சனா தேவிக்கும் முன்னிலையில் குழந்தை கங்காதரனின் முதுகில் ஓங்கி அறைந்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள் விசாலம்.

    இதைக் கண்ட ராமசாமி அதிர்ச்சி அடைந்து குழந்தையிடம், குஞ்சம்மாள் மட்டும் தான் அவனுக்கு அம்மா என்றும்,  வேறு யாரும் அவனுக்கு அம்மாவாக முடியாது என்று எடுத்துச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அஞ்சனாதேவி புரிந்து கொண்டு விடை பெற்றுச் செல்கிறாள்.

    சென்னைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த  எஸ்.எஸ்.மகாராஜா எனும் கப்பலில்  கைதிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட சிற்றறையில் அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லுமுன், குண்டு வெடிப்பினால் தனது இடது கையை இழந்த நிலையில் நரேந்திரநாத் பானர்ஜி பதினேழு ஆண்டுகள் கழித்து சென்னையைப் பார்ப்பதால் தனக்குத் தெரிந்தவர் யாரேனும் கண்ணில் அகப்பட மாட்டார்களா எனும் ஆவலும், ஏக்கமுமாக குறிப்பாக அமராவதியை நினைத்தபடியே தனது எதிர்பார்ப்பை தனது நண்பரிடம் விவரிக்கும் காட்சியாக ‘மணிக்கொடி’யின் இரண்டாவது  பாகம் ஆரம்பமாகி  உள்ளத்தை நெகிழச் செய்கிறது.

    அதே நேரத்தில் கல்லூரி மாணவ மாணவர்களாக கப்பலைச் சுற்றிப் பார்க்க அங்கு வந்திருந்த பவித்ராவும்,கங்காதரனும்  கைதிகளின் சிற்றறையை எட்டிப்பார்க்க, அங்கு ‘இடது கையை இழந்த அடையாளங்களுடன் இருந்த நரேனைக் கண்டதும் பவித்ரா தன்னைத் அவருக்கு அடையாளம் சொல்லித் தனது தாய் அமராவதி தான் என்றும் அவரிடம் பேசும் தருணங்களை தந்தை, மகளின் உணர்வுகளை எழுத்தால் செதுக்கி இருப்பதைக் காண முடிகிறது. உடனே,பவித்ரா அவருக்கு கங்காதரனை  செய்து விட்டு, வீட்டுக்கு தொலைபேசி மூலமாகத் தகவல் சொன்னதும், அடுத்த அரை மணி நேரத்தில் அமராவதியும், ராஜாராமனும், அஞ்சனாதேவியும் நரேனைப் பார்க்க கப்பலுக்குள் இருக்கிறார்கள். அந்த நெருக்கடியான நேரங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லப் பட்டுள்ளது.

    ராஜாராமனுக்கு நரேன் எழுதிய பல கடிதங்களில் சுதந்திரப் போராட்டத்தின் பல நிகழ்வுகளை எழுதியிருப்பதாகவும், அந்தக் கடிதங்களை அவரும் அஞ்சனாதேவியும் படிப்பது போலச் சொல்லப்பட்டதால், பல உண்மை வரலாற்று  நிகழ்வுகள், அதன் சாரம் மாறாமல் படிக்கும் போது நாமும் அந்தக் காலத்துக்குள் மனசளவில் பிரவேசிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அதையும் மீறி கதையாசிரியர் தன்னையே அந்தக் காலத்துக்குள் புகுத்தி, ஒவ்வொரு கதா பாத்திரதிற்குள்ளும் புகுந்து கொண்டு பேசுவது போல வசனங்களைத் உயிரோட்டமாக எழுதியிருப்பது அவரது அபாரமான திறமையை எண்ணி வியக்கும்படி செய்கிறது.

    கங்காதரன், தான் பவித்ராவோடு கப்பலைப் பார்க்கச் சென்றிருந்த போது, கப்பலுள்  அரசியல் கைதியாக நரேந்திரநாத் பானர்ஜி அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்வதை பார்க்க நேரிட்டதை தனது தந்தை ராமசாமியிடம் விவரிகிறான். பவித்ராவுக்கு தனது தந்தையை அடையாளம் தெரிந்து கொண்டு, உடனே தனது அம்மா அமராவதியையும், தாத்தா ராஜாராமனையும் பெரியம்மா அஞ்சனாதேவியையும் அங்கு வரவழைத்ததைப் பற்றியும் சொல்கிறான். இதைக் கேட்ட ராமசாமியின் சகோதரி விசாலம், கங்காதரனும், பவித்ராவிடம் காதல் வயப்பட்டு விடுவானோ என்ற பயத்தில் பாமர சிந்தனையோடு கங்காதரனை ராஜாராமன் வீட்டுக்கு செல்வதைத் தடுக்கிறாள். அஞ்சனாவைப் பற்றியும், அமராவதியைப் பற்றியும் அவதூறாகப் பேசுகிறாள். ராமசாமிக்கு இதைக் கேட்டதும் கோபம் வருகிறது. இரண்டு நாட்கள் முன்னமே, கங்காதரன் பவித்ராவிடம் தனது காதலைச் சொல்லி மனம் திறக்கிறான். பவித்ராவும் கங்காதரனை நேசிப்பதாகச் சொல்கிறாள். இதை நினைத்த கங்காதரன், தன் அத்தை அவனைச் சரியாகத் தான் கணக்குப் போட்டிருக்கிறாள் என்று பாராட்டி வியக்கிறான்.

    கங்காதரனின் தம்பி ரமணி பள்ளி முடிந்து வந்ததும், அவனது பள்ளிக் காம்பவுண்டு சுவற்றில் “வெள்ளைக்காரங்க எல்லாம் கொள்ளைக்காரங்க” என்று யாரோ எழுதியிருந்ததை கண்டு, எழுதியவரைக் கண்டுபிடிக்க போலீஸ் வந்ததாகவும், வெள்ளைக்காரனுக்கு எதிரா ஸ்லோகன்ஸ் எழுதுபவன் யார் என்று தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும், வேறு எந்தப் பள்ளியிலும் சேர விடாமல் செய்து விடுவதாகவும் சொல்லி மிரட்டியதாக ராமசாமியிடம் சொல்லுகிறான். அதைக் கேட்டதும் ராமசாமி, ஆலிவர் ஸ்மித் என்ற ஆங்கில புரொபசர், இந்தியர்களுக்கு இலக்கியமே தெரியாது என்று இழிவாகப் பேசியதும் ராமச்சந்திரன் என்பவருக்கு கோபம் வந்து வாக்குவாதம் எழவும்,புரொபசர் இவனை அடிக்கப் போக, இவனும் புரொபரசரை அடித்து விடுகிறான்.அப்படியே, தனது தாய்நாட்டைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்கு தான் அடித்து விட்டதாகவும், அதே சமயம், குரு ஸ்தானத்தில் இருப்பவரை அடித்து விட்டதற்காக அவரை நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்த கல்கத்தா யூனிவெர்சிட்டியை விட்டே வெளியேறினான், கல்கத்தா ராமச்சந்திரய்யர்.என்று அந்த  நிகழ்வைச் சொல்கிறார்.

    அதைக் கேட்டதும் ரமணி, இது போன்ற ஒரு எழுச்சி தான் நாட்டுக்குத் தேவை.. தீவிரவாதத்துல தான் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வரப் போறது…வெள்ளைக்காரன் பின்னால் கெஞ்சிக் கொண்டு போகக் கூடாது என்றும் சொல்கிறான்.  காந்திஜி சொல்வது போல அகிம்சா இயக்கத்தால் நம் நாடு சுதந்திரம் அடையாது என்றும் சொல்கிறான். அதைக் கேட்ட ராமசாமி, காந்திஜியின் சம்பரான் விவகாரம் பற்றிச் சொல்லி, அகிம்சா போராட்டத்திலும் வெற்றி கிட்டும் என்றும், தென் ஆப்பிரிக்காவில் சில போராட்டங்களை நடத்தி வந்த காந்தி அங்கிருக்கும் வெள்ளைக்கார அரசாங்கத்தைப் பணிய வைத்தது போல இங்கும் அவருக்கு மக்களிடத்தில் செல்வாக்கு பெருகிடும் என்ற பயமும் வெள்ளைக்காரனிடத்தில் பயம் இருக்கிறது….என்று அந்த நிகழ்ச்சியை விளக்கிச் சொல்லி மகன் ரமணிக்குப் புரிய வைக்கிறார் என்றார்.

    யாரை வேணா, எப்ப வேணா அரெஸ்ட் வாரண்ட் இல்லாமையே கைது செய்து சிறையில் வைக்கலாம் என்ற ஒரு சட்டத்தை ரௌலட் என்கிறவரின் தலைமையில் இங்கிலாந்திலிருந்து வந்ததை எதிர்த்து நாடு முழுக்க கூட்டங்கள் நடந்ததையும், அப்படி கைது பண்ணப் படும் ஆளுக்கு வக்கீல் வெச்சு வாதாடும் உரிமையும் கிடையாது என்ற ரௌலட் சட்டத்துக்கு எதிரா ஒரு சித்தியாகிரகம் செய்து இந்தியா முழுக்கக் கடையடைப்பு நடந்ததையும், அந்த சந்தர்ப்பத்தில் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது…என்று அந்த நிகழ்வை மிகவும் விரிவாகச் சொன்ன ராமசாமியைப் பார்த்து ,…இப்படிப் பட்ட ராட்சசங்கிட்ட அகிம்சையும் அன்பும் எடுபடுமாப்பா …என்று ரமணி கேட்கிறான்.  ஈடுபட்டால் அது காந்தியோட மகிமை தான் என்று சொன்ன ராமசாமி, ஒரு குறிப்பிட்ட தெருவழியா இந்தியன் போகும்போது, அவர்கள் படுத்துக் கொண்டு தனது வயிற்றாலும் காலாலும் தவழ்ந்து தான் செல்லவேண்டும் என்ற சட்டமும் இருந்தது. என்று அவர் சொல்லும்  போதே ரமணியின் இள இரத்தம் கொதித்தது. அவனுக்குள் இருந்த தேசபற்று கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு நாள் ரமணி வீட்டை விட்டு யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் தந்தை ராமசாமிக்கு வங்காளத்தில் இருக்கும் சிட்டகாங் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் செல்லும் வழியில் ரயிலில் பணத்துக்காக சிலரால் அடிக்கப்பட்டு கால் முறிந்த நிலையில் விஜயவாடாவில் இறங்கி அங்கு ஒருவர் வீட்டிலிருந்து ராமசாமிக்குத் தந்தி அனுப்புகிறான். ராமசாமி வந்து ரமணியை கால் முறிந்த நிலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

    அந்தமான் சிறையில் நரேந்திரநாத் பானர்ஜி அவரது மற்ற நண்பர்களோடு இருக்கையில் , விநாயக் தாமோதர் சர்வார்க்கர் இருந்த சிறையறை பற்றிய விஷயங்களையும், நிறைய இந்திய அரசியல் கைதிகள் தற்கொலை செய்து கொண்டதையும், நிறைய பேருக்குப் பைத்தியம் பிடித்துள்ள விஷயங்களையும் கண்களில் நீர் நிறைய  படுகின்றனர். அதே சிறையில் நரேந்திரநாத் பானர்ஜி சிறை மேற்பார்வையாளனால்  நடத்தப்பட்ட விதத்தைப் படிக்கும் போது நம் கண்களிலும் நீர் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

    வீர வாஞ்சி தனது கர்ப்பவதியான  இளம் மனைவியை வாழ முடியாதவளாக விட்டு விட்டு இறந்து போன அவலத்தை அறிந்த கங்காதரன், சுதந்திரப் போராட்டக் களத்தில் சேரப் போகும் தனக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் தான் காதலித்து மணக்கும் பவித்ராவின் நிலை என்னவாகும் என்றெண்ணித் தன் மனதிலிருந்த காதலை நசுக்கிவிட்டதாகவும், இனி நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருப்போம் என்றும் தன்னை மன்னித்து விடுமாறும் கடிதம் வாயிலாகப் பவித்ராவிடம் தெரியப் படுத்துகிறான்.

    பவித்ராவும், காதல் எனும் உணர்வு அப்படியெல்லாம் இலேசில் அழிக்கக்கூடிய உணர்வு இல்லை என்றும்,சுதந்திரப் போர்க்களத்தில் குதித்த பின் ஒருவேளை நம்மிருவருக்கும் தொடர்பு அறவே விட்டுப் போகவும் கூடும் என்றும், அதற்காக என்னைத் தடை செய்ய நீங்கள் யார்? உங்களைக் காதலிப்பது எனது சுதந்திரம் என்று நீண்ட பதிலை கங்காவுக்கு எழுதுகிறாள்.

    ராஜாராமனும், அமராவதியும், அஞ்சனாவும், பவித்ராவும், கங்காதரனுடன் அவர்கள் வீட்டில் ஒன்று கூடி சைமன் கமிஷன் பற்றியும், காந்திஜி பற்றியும், நேருஜி, சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் ஆனந்த மோகன் போஸ் பற்றியும் விவரமாகப் பேசி விவாதித்துக் கொண்டிருப்பது நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

    இந்நிலையில் பவித்ராவும், அவள் வீட்டில் வேலை பார்க்கும் தங்கம் என்பவளின் வற்புறுத்தலினால் தனது துணைக்கு அவளையும் அழைத்துக் கொண்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு விடுதலை இயக்கத்தில் சேருவதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

    கங்காதரனும் இயக்கத்தில் சேருவதற்காக புரட்சிக் கும்பலோடு சேர்ந்து கொண்டு டெல்லி செல்கிறான். அப்போது லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.அவரது தலைமையுரை இந்திய இளைஞர்களுக்கு அகிம்சையின் மகத்துவத்தை வலியுறுத்தியதோடு, வெள்ளைக்காரனுக்கு எதிராக அணி திரண்டு அனைவரும் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.முழுச் சுதந்திரமே காங்கிரஸின் குறிக்கோள் என்கிற அவரது அறைகூவல் பலத்த ஆரவாரத்துடன் ஏற்கப்பட்டது.இம்சை வழியில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் நிலையான பயன்களை அகிசைவழியால் தான் நாம் பெற முடியும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். காந்தியின் மீது சற்றே அவநம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட இளைய நேருவின் கனல் பரந்த பேச்சைக் கேட்டு வேகம் கொண்டனர். அவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் நாளில், ரவி நதித்திடல் நோக்கி மாபெரும் ஊர்வலத்தை நேரு சென்றார். நதிக்கரையில் மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டு, பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என்பதற்கான சூளுறவு அங்கு குழுமியிருந்த மூன்று இலட்சம் மக்களால் மேற்கொண்டு உரைக்கப்பட்டது.மதுவிலக்கு மாநாடும், அந்நியத் துணி மறுப்புப் போராட்டமும் ராஜாஜியின் தலைமையில் நடந்தது.நாடு தழுவிய உப்பு சத்தியாகிரகம் நடந்து முடிந்தது.

    கூடிய விரைவில் இந்தியா முழுவதும் பேசப்படப்போகும் ஒரு பெரிய காரியத்தை நாங்கள் செய்யப் போகிறோம் என்று பவித்திரா தனது தாய் அமராவதிக்கு கடிதம் எழுதித் தெரியப்படுத்தினாள். இதனிடையில், மோதிலால் நேரு காலமானார் .பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.இந்து-முஸ்லிம் கலவரத்தில் முடிந்தது, காந்திஜி இந்தப் பிரிவினையில் மனம் கலங்கினார். இது போன்ற எண்ணற்ற வேதனை சம்பவங்களைக் கண்கூடான காட்சியாக கதையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

    வீட்டை விட்டு வெளியேறிய கங்காதரனும், பவித்ராவும், துணைக்குச் சென்ற தங்கமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? போராட்டத்தில் என்னவானார்கள்? நரேந்திரநாத் பானர்ஜியின் நிலைமை என்னவாயிற்று…? இவையனைத்தையும் பக்கத்துக்குப் பக்கம் நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்வுகளோடு நீங்களும் அறிந்து கொள்ள ‘மணிக்கொடி’யைத் தேடுங்களேன்.

    இத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கதையோடு சேர்த்து வாசகர்களுக்கு கதையைத் தாண்டியும் ‘சுதந்திரம் பெறுவதற்காக நமது முன்னோர்கள் கொண்ட இன்னல்களை இம்மியும் விடாது சொல்லி ‘இந்தியன்’ என்ற உன்னத உணர்வை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த எழுத்தாளர் மேற்கொண்ட பெரும் சமூக சேவை என்றே சொல்லலாம். இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பு இருந்த அத்தனை நிகழ்வுகளையும் தக்க ஆதாரங்களுடன் திரட்டிய வரலாற்றுச் சின்னமாகப் படைத்திருக்கும் இந்தப் புதினத்தை ஒரு இலக்கியக் காவியப் படைப்பாக்கி ஒவ்வொருவரின் வீட்டிலும், பள்ளியிலும் அவசியம் வாசித்துத்   தெரிந்து கொண்டால் மட்டுமே நமது  தாய்நாட்டின் மீது நமக்குப் பற்று உண்டாகும்.

    வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்ற நமது இந்தியா தற்போது திரை உலகின்  பிடியில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறது. ‘தேசபக்தி’ என்ற எண்ணமே இல்லாமல், இன்றைய இளைய சமுதாயத்தைத் திரைப்படங்கள் ஆக்கிரமித்து விட்ட வேளையிலும், சுதந்திரம் கிடைத்து ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையிலும், மாணவர்களிடம் தேசப் பற்று மறைந்து கொண்டு வருவது கண்கூடு. இந்த நேரத்தில் இப்பேர்பட்ட சுதந்திரத்தை தங்களுக்கு வாங்கித்தர நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லும் தேசபக்தி நிறைந்த இந்த “மணிக்கொடி” அவர்களின் கண்பட்டு மனதில் பறந்தால் மட்டுமே கண்டிப்பாக நமது தாய்நாடு தப்பிக்கும்.

    கதைக்குள் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் சில அலைகள்:

    “இண்டியா ஆபீஸ்ல போன வருஷம் ஜூலை மாசம் நடந்த ஒரு விழாவப்ப ‘மதன்லால் திங்ரா’ங்கிற ஒரு இருபத்திரண்டு வயசு மாணவன் சர் கர்ஸான் வில்லிங்கிற வெள்ளைக்கார அதிகாரியைச் சுட்டுக்கொன்ன செய்தியும், அவன் அதற்குத் தண்டனையாத் தூக்கில்  போடப்பட்டபோது அவனுடைய கடைசி வாகுமுலத்தை விவரமாக எழுதி இருந்ததை அப்படியே மொழிபெயர்க்கப் பட்டதாக இருப்பதால், படிக்கும் போதே பல விஷயங்களை நமக்கு விளக்கச் செய்வதோடு ‘மதன்லால் திங்ரா’ கடைசியில் தூக்கில் இடப்படுவதற்கு முன்னதாக உணர்ச்சியுடன் விடுத்த அறிக்கையில் “என் இந்தியத் தாய்க்கு அளிக்க எனது இரத்தத்தைத் தவிர வேறு எந்த விலைஉயர்ந்த பொருளும் என்னிடம் இல்லை” என்று நெஞ்சுரத்துடனும், தைரியத்துடனும் குறிப்பிட்டிருப்பது அவரது தேசபக்தியை நமக்கு உணர்த்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

    ‘மதன்லால் திங்ரா’வுடைய கடைசி அறிக்கையை ‘தேசபக்தியைக் குறிக்கிற மிகச்சிறந்த சொற்கள்’ அப்படின்னு தம்மையும் மறந்து பாராட்டி இருக்கார். “இங்கிலாந்து மந்திரிசபையில ஃபினான்ஸ் மினிஸ்டரா இருக்கிற லாயிட்ஜார்ஜ்  – என்பதன் மூலம் வெள்ளைக்காரங்கள்ளயும் நல்லவங்க இருக்காங்க, என்ற அபிப்ராயத்தையும் சொல்லியிருந்த விதம் சிறப்பு..

    வீர சாவர்க்கர், 1857ஆம் வருஷத்துச் சிப்பாய்க் கலகத்தைப் பத்தி ‘எரிமலை’ங்கிற தலைப்பில ஒரு புத்தகம் எழுதி  இருக்கார்.

    அதனோட இங்கிலீஷ் எடிஷன் ஹாலண்ட்ல பப்ளிஷ் ஆனது.” அந்தப் புத்தகந்தான் மதன்லால் திங்ராவுக்கு இன்ஸ்பிரேஷனாம், அதைப் படிச்சுட்டுத்தான்  அவன் தேசபக்தனாயிட்டானாம்.” அந்த வீர சாவர்க்கர், மதன்லால் திங்ராவின் உடலைத் தங்கிட்ட ஒப்படைக்கச் சொல்லி விடுத்த வேண்டுகோளுக்கும் ஆங்கிலேயர்கள் செவிசாய்க்கவில்லை என்பதைப் படிக்கும் போது, படிப்பவரின் மனம் கண்டிப்பாக வருத்தமடையும்.

    இந்த விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது அபிப்ராயத்தை அஞ்சனாதேவி தெரிவித்ததும், ராமசாமியும் அவரது நண்பரும் மறுத்துச் சொன்ன போது ,”குடும்பம்கிற  அமைப்பை  ஆணும்பெண்ணும் சேர்ந்து நடத்தற மாதிரிதானே இதுவும்! நாட்டு நடப்பிலயும் ஆணும் பெண்ணும் இணைஞ்சு வேலை செய்யணும். அப்பதான் சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கும். பெண்கள்கூட இந்தப் போராட்டத்துல  பங்கெடுக்க  முன்வர்றான்னா, அது வெள்ளைக்காரனைக் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும். இப்ப மேடம் பிக்காஜி காமா,சர்தார் சிங்க் ராணா இல்லையா? 1907 இலே ஸ்டட்கார்ட் நகரத்துல நடந்த இண்டர்நேஷனல் சோஷலிஸ்ட் காங்கிரஸ் மகாநாட்டுல இவங்க ரெண்டு பேரும் இந்தியாவோட பிரதிநிதிகளாக் கலந்து கொண்டார்கள்.

    “இங்கேலீஷ்காரன் கண்ணுல மண்ணைத் தூவற இந்த வேலையை முதல்ல ஆரம்பிச்சு வெச்சது நம்ம பாரதியார் தான். இப்ப அவரை அரவிந்த கோஷ் முதக்கொண்டு ஃ பாலோ பண்ணத் தொடங்கிட்டாங்க பாரும்.  வெறுமனே சந்திப்பு, பேச்சு, எழுத்துன்னு மட்டும் போயிட்டிருந்தா எந்த ஜென்மத்துலேங்க்காணும் இந்தியா சுதந்திரம் அடையிறது? முதல்ல ஜனங்களுக்கு, நாம அடிமைகளா இருக்கோம்கிறது புரிஞ்சு அவங்களுக்கு வெள்ளைக்காரன் மேல தாங்க முடியாத ஆத்திரம் வரணம். அதுக்கு அப்புறந்தான் புரட்சி வெடிக்கும்.

    1908 ல திலகர் வேற நாடுகடத்தப்பட்டு இப்ப பர்மா ஜெயிலில் இருந்திட்டிருக்காரு. ஆறு வருஷம் கழிச்சு 1914 ஆம் வருஷம் தான் திரும்பி வரணும். பாவம்..! அம்பத்திரண்டு வயசுல நாடு கடத்தல், என்ன அயோக்கியத்தனம்! பம்பாயில அவரைத் திலக் மகராஜ்னு தான் சொல்லுவாங்களாம். கோர்ட்ல மூச்சு விடாம இருபத்தொரு மணி நேரம் தன கேசைத் தானே வாதாடிப் பேசி இருக்காரே….வெள்ளைக் காரங்க அசந்து போயிட்டாங்களாம்.திலகர் மாதிரி ஒரு பெரிய தலைவர் பர்மா மாண்டலே ஜெயில்ல இருக்குறதுங்கிறது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம்.

    பத்திரிகையில நம்ம கருத்துக்களை வெளியிடற சுதந்திரத்தை தடை செய்யற அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துக் கேசரி பத்திரிகையை நடத்திட்டிருந்த திலகர் அதுல எழுதாம இருப்பாரா? நம்ம நாட்டுல வந்து உக்காந்துக்கிட்டு, நம்ம பத்திரிகை சுதந்திரத்துல தலையிட்றதா ? ராமசாமி நண்பர் மனவாளரிடம் பேசும்போது திலகருக்காக கொந்தளித்துப் பேசுவது அந்த இடத்துக்கே நம்மையும் அழைத்துச் சென்று விடுகிறது.

    கப்பல் மாலுமிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியா ஹவுஸில் வாழும் நம் நாட்டு தேசபக்த வாலிபர்கள் லண்டனிலிருந்து  கைத்துப்பாக்கிகள் ,  வெடிகுண்டுகள்போன்றவற்றைத் திருட்டுத்தனமாக நம் நாட்டுப் புரட்சி இயக்கத்தினர் அடைய உதவி வருகின்றனர். அவர்கள் மூலம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத நடவடிக்கைகள் வலுத்து வருகின்றன. அயல் நாட்டினருடன் நாங்கள் இடைவிடாத தொடர்பு கொண்டு மிஸஸ் கென்னடி என்கிற வெள்ளைக்காரப் பெண்மணியையும் அவள் மகளையும் சுட்டுக்கொன்ற குதிராம் போஸ் தூக்கில் இடப்பட்டபோது கல்கத்தா நகரம் முழுவதும் அமளி துமளிப்பட்டது. எங்கு பார்த்தாலும் குதிராம் போஸ் பற்றியே மக்கள்பேசினார்கள். கண் கலங்கினார்கள். மனம் கொதித்து வெள்ளைக்காரன் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

    “இந்தப்பாரபட்சமானநீதிவழங்கலால்மனக்கசப்புற்றவர்களில் பரீந்திரகுமார் கோஷின் அனுசீலன் சமிதிக்காரர்கள் சிலர். இவ்வாறு பாரபட்சமாக நீதி வழங்கிய ஒரு மாஜிஸ்டிரேட்டைக் கொலை  செய்துவிடவேண்டும்  என்று  இந்த  அமைப்பு முடிவெடுத்தது. அதன்படி,  பிரபுல்லா  சக்கி,  குதிராம்போஸ் எனும் இரண்டு இளைஞர்கள் அந்த மாஜிஸ்டிரேட்டின் ஊரான முசபர்பூருக்குப் போனார்கள். கென்னடி எனும் வெள்ளைக்காரர் தம் மனைவி, மகள் ஆகியோருடன் பயணம் செய்துகொண்டிருந்த கோச்சு வண்டியை அந்த மாஜிஸ்டிரேட்டினுடையது என்று தவறாக எண்ணிவிட்ட இருவரும் அதன் மீது ஒரு குண்டை வீச, அதன் விளைவாக அந்த வெள்ளையரின் மனைவியும் மகளும் மாண்டுபோனார்கள். இரண்டு புரட்சிக்காரர்களும் உடனே அங்கேயே கைது செய்யப்பட்டார்கள். பிரபுல்லா சக்கி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனான். குதிராம் போஸ் தூக்கில் இடப்பட்டான். அவர்களது இரகசிய அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய புரட்சிக்காரர்கள் பிடிபட்டனர். பரீந்திரகுமார் கோஷ், அவர் அண்ணன் அரவிந்தகோஷ் ஆகிய இருவரும்கூடப் பிடிபட்டனர்.

    குதிரோம் போஸைப் பிடித்துக் கைது செய்த நந்தலால் எனும் இந்திய சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டான். குதிராம்

    போஸைத் தூக்கில் போட்ட பிறகு அவனது நினைவாகப் பள்ளிகள் இரண்டு நாள் விடுமுறையை அனுஷ்டித்தன. எங்கு பார்த்தாலும் அவனது புகைப்படம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு அவை ஆயிரக்கணக்கில் விற்பனை ஆயின! பரீந்திரகோஷின் கும்பலைச் சேர்ந்த நரேந்திரகோசேங் என்பவன்  துரோகியாக  மாறி,  காட்டிக்கொடுத்ததால்தான் வெள்ளைக்காரர்களால் அவர்களது இரகசிய அலுவலகம், கடிதப்  போக்குவரத்து  பற்றிய  தகவல்கள்,  திட்டங்கள் போன்றவற்றை அறிய முடிந்தது. “குதிராம் போஸ், பிரபுல்லா சக்கி ஆகிய இருவரும் கென்னடி குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, கோர்ட்டிலேயே வைத்து பப்ளிக் பிராசிக்யூட்டரும், டெபுடி சூப்பரின்டென்டென்ட் ஆஃப் போலீஸும் சில பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

    “தேசபக்தர்களைக் காட்டிக்கொடுத்த நரேந்திர கோசேங்யை கன்னயாலால் தத்தா என்பவனும் சத்தியன் போஸ் என்பவனும் சிறைச்சாலச்   சுற்றுச்   சுவரினுள்ளேயே சுட்டுக்கொன்றுவிட்டார்கள். கன்னயாலால் கூடத் தூக்கிலிடப்பட்டான். மாவீரனாய்க் கருதப்பட்ட அவனது சவ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். என்று நரேந்த்ரநாத் ராஜாராமனிடம் சொல்லும்போது அவர்களின் அராஜகம் மனக்கண் முன்னே காட்சியாய் விரிகிறது.

    சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்து வந்த 1857 புரட்சிக்கு முதல் சுதந்திரப் போர் என்று பெயரிட்ட வீர சாவர்க்கர் மீது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட இந்தியர்களைத் தூண்டியது, பயங்கரவாதிகளுக்கு இரகசியமாய்த் துப்பாக்கிகள் அனுப்பியது ஆகிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. நாசிக் கலெக்டர் ஜாக்சனின் கொலைக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனையாக அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டு ஆயுள் முழுதும் அந்தச் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இன்னும், ஜாலியன் வாலாபாக் படுகொலை, மற்றும் பல போராட்டங்களின் விபரங்களோடு, காங்கிரஸ் பிளவு, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மதச் சண்டைகள் எனவும் பல இயக்கங்களைப் பற்றிய விரிவான தகவலையும் தருகிறார் ஆசிரியர்.

    க்விட் இண்டியா மூவ்மெண்ட்ல கலந்து கொண்ட பதினெட்டு வயது நிரம்பிய ஹேமூ காலாணி என்னும் சிந்திப்பையன் பிரிட்டனுக்கு எதிரா நிறைய அறிக்கைகளையும் புத்தகங்களையும் விநியோகித்தும், சுக்கூர் வழியாக ஸ்பெஷல் ட்ரெயின் பிரிட்டிஷ் ஜவாங்கலையும் வெடி மருந்துகளையும் ஏத்திண்டு வரப்போவதாக தனக்குக் கிடைத்த தகவலின்படி அதைத் தடுக்க தண்டவாளத்திலிருந்து ஃபிஷ்ப்ப்ளேட்சை அப்புறப்படுத்தும் போது , தான் கூட உதவிய நண்பர்களைத் தப்பிக்க விட்டு தான் மட்டும் மாட்டிக்கொண்டான். அந்த நண்பர்களின் விலாசங்களைக் கொடுத்துவிட்டு அப்ரூவராக இவன் மாறினால் அவனை விட்டுவிடுவதாக பிரிட்டிஷ்காரன் சொன்னபோதும், “நண்பர்களைக் காட்டிக் கொடுப்பதை விட நான் சாவேன்” என்றவன் 1943, ஜனவரியில் தூக்கில் போடப்பட்டான். அவனை இறுதியாகப் பார்க்க வந்த அவனது அம்மாவுக்கு அவன் கூறிய ஆறுதல், ” அம்மா…ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு பகவத் கீதையில் சொல்லி இருக்குன்னு நீ தானே அடிக்கடி சொல்லுவே..! அதனால நீ அழக்கூடாது ” என்றவனின் நெஞ்சுரமும் தீரமும் அவனது தேசப்பற்றை படிக்கும் போதே, மனம் கலங்குகிறது.

    நம்ம திருப்பூர் குமரன் போலவே, வங்காளத்தைச் சேர்ந்த  மாதங்கினின்னு ஒரு வயதான பெண்மணி 1929 இல் தனி ஆளாக கவர்னருக்குக் கறுப்புக் கொடி காண்பித்ததற்க்காக ஆறு மாத காலம் சிறை சென்று திரும்பி, மறுபடியும் நடந்த போராட்டத்தில் 1942இல் போலீசால் சுடப்பட்டு இறந்தார். இறக்கும் நேரத்திலும், இறந்த பின்பும் கூட கையில் பிடித்திருந்த கொடியை விடவே இல்லையாம். இதற்குப் பேரும் வீரம் தானே.

    அஸ்ஸாம்ல கனகலதான்னு ஒரு பெண் 1942 செப்டெம்பரில் “வெள்ளையனே வெளியேறு” என்று கோஷமிட்டபடி ஒரு பெண்கள் ஊர்வலத்தைத் தலைமை தாங்கிய படி போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துல தேசியக் கொடியை ஏத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சென்றவர்களை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தவும், “கொடியை ஏத்திவிட்டு சென்று விடுவோம்”என்று அவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் தடுக்கவே, ” உங்களால் எங்க உடம்புகளைத்தான் கொல்ல முடியும், எங்க உணர்வுகளைக் கொல்ல முடியாது” என்று சொல்லியிருக்கிறாள். அந்த வாக்கியம் தான் அவள் பேசிய கடைசி பேச்சாக இருந்தது. அதற்குள் அவள் மேல் குண்டு பாய்ந்து அவள் இறந்து விட்டாள்…இது போன்ற உயிரைப் பணயம் வைத்த வீராங்கனைகளை இந்நூல் அடையாளம் காட்டுகிறது.

    அன்னியத்துணிகள் இருந்த டிரக்குக்கு முன்னால் நின்று மறியல் செய்ததற்காக, 1930 இல் சையது பாபு கேணு என்கிற மகாராஷ்டிர வாலிபனை வேண்டுமென்றே வெள்ளைக்கார சார்ஜெண்டு டிரக்கை அவன் மேல் ஏற்றிக் கொன்று விட்டான். இதைப் படிக்கும் போது எத்தனை அராஜகத்துக்கு அவர்கள் பலியானார்கள் என்று திடுக்கிட வைக்கிறது மனம்.

    கோதாவரி ஜில்லாவில் அல்லூரி சீதாராமராஜு என்பவர் பழங்குடி மக்களை வைத்துப் படை திரட்டி வெள்ளைக்காரப் போலீசையே பலதரம் அச்சுறுத்தினார். கடைசியில் பழங்குடி மக்களுக்கு வெள்ளைக்காரன் கொடுத்த தொல்லை தாங்க மாட்டாமல் தானாகவே சரணடைந்ததும் அவர்கள் அவரைச் சுட்டுத் தள்ளிவிட்டார்கள்.

    இது போல நாடு முழுவதும் எல்லா ராஜாதானிகளிளிருந்தும் சுதந்திரத்திற்காக பொங்கி எழுவது என்பது சாமான்ய விஷயமில்லையே.

    இதைப் போன்ற இன்னும் ஏராளமான நிகழ்வுகள், உண்மையை அடிப்படையாகக் கொண்டு தகவல் களஞ்சியமாக ‘மணிக்கொடி’ விளங்குவதால், அந்தப் புதினத்தை முழுவதும் படிப்பதால் மட்டுமே முழுமையை உணர முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    பட்ட துன்பங்களுக்கும், செய்த போராட்டங்களுக்கும் வெற்றியாக…!

    சுதந்திர நாளுக்குரிய கோலாகலத்துடன் தில்லி விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளைக்காரர்கள் நிறைய பேர் ஆங்காங்கு சுறுசுறுப்பாகத் தெருக்களில், கடைகளில், ரெயில்வே நிலையத்தில், விமான தளத்தில் என்று கும்பல் கும்பலாய்க் குடும்பங்களுடன் காணப்பட்டார்கள். இந்தியாவை விட்டுக் கிளம்ப நேர்ந்து விட்டதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம் தான் என்று சோர்ந்த அவர்களின் முகங்களைப் பார்த்து கங்காவும், நரேந்திரநாத் பானர்ஜியும், ரமணியும் நினைத்தார்கள்.

    பதினான்காம் நாள் இரவிலிருந்தே மக்கள் தெருக்களில் சாரிசாரியாக நடந்து அமைச்சர்கள் ஊர்வலம் செல்ல இருந்த வீதிகளில் இரு மருங்கிலும் கூடத் தொடங்கினார்கள். இந்திய வரலாற்றில் சிறப்பு மிக்க அத்திருப்பம் அன்றிரவு சரியாக மணி பன்னிரண்டு அடித்ததும் தொடங்கியது. பதினைந்தாம் நாளின் விடியல் நோக்கி உலகம் புறப்படத் தொடங்கிய அந்த இருண்ட நேரத்தில் இந்தியா ஒளி பெற்றது.

    சுதந்திர நாளைத் தொடங்கி வைத்த ஜவகர்லால் நேரு பேசலானார்…என்று  அவர் பேசிய அருமையான பேச்சை எழுதிவிட்டு,

    மவுண்ட் பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர்- ஜெனரலாக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து மக்களின் ஆரவாரத்துடன், நன்றியுரையாக ராஜேந்திர பிரசாத் கூறியதை ” நாம் அடைந்துள்ள வெற்றிக்கு நம் தியாகங்களும், நாம் பட்ட துன்பங்களும் பெருமளவுக்குக் காரணங்களானாலும் , உலகத்துச் சக்திகளும் நிகழ்ச்சிகளின் போக்கும் நமக்கு உதவியுள்ளன என்பதும் உண்மையாகும். பிரிட்டிஷ் மக்களின் ஜனநாயகக் கோட்பாடுகளுடையவும், வரலாற்று மரபுகளுடையவும் உச்ச நிலையே நமது சுதந்திரத்தில் முடிந்தது ”  என்று பதவியேர்புப் பிரமாணம் முடிந்தபின் அமைச்சர்களின் ஊர்வலம் நடைபெற்றது

    என்றும், அதைத் தொடர்ந்து கூட்டம் மெல்லக் கலையவும் கரையவும் தொடங்கினாலும், காந்திஜியைப் பொறுத்தவரை

    இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆகஸ்ட் 15 ஒரு துக்க நாள். அவர் கனவு கண்ட ஏக இந்தியா, இந்துக்களும்,முஸ்லிம்களும் இணைந்திருக்க சம்மதிக்காததால் அமையவில்லை. என்றும் பேசிக் கொண்டனர்.

    நமது இந்தியா வன்முறையும் அகிம்சையும் சேர்ந்ததால் தான் சுதந்திரம் கிடைத்தது என்னும் கருத்தை வலியுறுத்தி மேலும் பல விஷயங்களை விவாதித்தபடியே கங்காவும், நரேந்திரநாத்தும், ரமணியுடன் பேசிக் கொண்டே ” உலக அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுத்தும் இனிமேல் இங்கே இருப்பது அசிங்கம் என்பதை நம் எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து புரிந்து கொண்டும் கவுரவத்துடன் பிரிட்டன் விலகியது பெரிது தான்…அதில் துளியும் சந்தேகமில்லை என்று கங்காதரன் முடிக்கிறான்.

    “சாரே ஜஹாங்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ” என்ற இனிய பாடலுடன் கதையின் நிறைவை நேரில் காண்பது போலவே எழுதி இருக்கிறார்.

    ‘ஒரு பானைச் சோற்றுக்கு சில பருக்கைகள்’ பதம் என்பது போல, முதல் பகுதியின் முக்கியமான பல நிகழ்வுகள் எழுதப் பட்டிருந்தாலும் அதிலும் ஒரு சிறிய பாகத்தை மட்டும் இங்கே எடுத்து எழுதியுள்ளேன். கதையைப் படித்து முடித்ததும், தேசத்தின் மீது ‘பற்று’ நம்மையும் மீறி பற்றிக் கொள்கிறது. மஹா சமுத்திரம் முன்பு நின்று பார்த்தால் அலைகள் அடித்துப் பெருகி வருவது போல ‘நிகழ்வுகள்’ தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கண்டிப்பாக இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புதினத்தை வாங்கிப் படித்துப் பாதுகாக்கும் ஆவல் உருவானால், அதன்மூலம்  நான் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியும்  வீண் போகவில்லை என்று

    முடிவுரை:

    மனித மனங்களின் உணர்வுகளையும், நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் போதே நாமும் கதாபாத்திரங்களோடு சேர்ந்து பயணிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திய விதமும், ஆசிரியரின் எழுத்தின் பலம் நாவல் முழுவதும் வியாபித்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.எத்தனை விஷயங்கள்….! எத்தனை விவரங்கள்..! படிக்கப் படிக்க ஆச்சரியம் நெஞ்சம் முழுதும் வியாபிப்பது தான் நிஜம்.

    பயங்கரவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. அப்படி சாதிக்க முடிந்தாலும் அது தற்காலிகமானதாகத் தானிருக்கும். நிரந்தரமான வெற்றி, அது காந்தி வழி அகிம்ஸா கொள்கையின் மூலமாகத் தான் பெற முடியும் என்பதை வலியுறுத்தி பல வாக்குவாதங்களை சொல்லியிருந்தாலும், இந்தியா முழுக்க முழுக்க அகிம்சை வழியில்தான் சுதந்திரம் பெற்றது என்று சொல்லிவிட முடியாது. சுதந்திரம் பெரும் போராட்டத்தில் மனிதர்கள் அவ்வபோது இரத்தம் சிந்த வேண்டிய நிர்பந்தமும், உயிர்த் தியாகம் செய்யும்படியான கட்டாயமும் உண்டாகிறது. காந்தியடிகளின் அகிம்சையை பின்பற்றினாலும், தீவிரவாதத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என்பது வலியுறுத்தும்படி கதையின் போக்கு அமைந்துள்ளது. பல வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த நிகழ்வுகளை கதையோடு பின்னியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு மேலும் காரணமாயிருக்கிறது.

    ராபர்ட் ப்ராஸ்ட் அவர்களின் ‘இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்’ என்னும் சொற்றொடருக்கேற்ப ஆண்டுகள் பல கடந்து கொண்டிருக்கையில், ஆயுட்காலம் முழுதும் நாட்டுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தியாகசீலர்கள் மீட்டுத் தந்த சுதந்திர இந்தியாவை….அறுபத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட ‘பழைமை’ என்ற எண்ணம் மேலோங்கியபடி வளரும் ‘புதுமைத் தலைமுறையினருக்கு’ இந்தியாவின் அருமையையும் தேசப் பற்றின் பெருமையையும் உணரச் செய்ய மீண்டும் ‘மணிக்கொடி’ புதுப் பொலிவோடு பட்டுடுத்தி 2013இல்  இரண்டாம் பதிப்பாக ‘சேது அலமி பதிப்பகம்’ மூலமாக வெளிவருகிறாள் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உறங்கிக் கிடக்கும் விழிகளும், மனமும், இது போன்ற நல்ல நூல்களால்  தட்டித் திறக்கபடட்டும்.

    ஆங்கிலேய ஆட்சியில் அடிமை பட்டுக் கிடந்த இந்திய அரசியல் சூழ்நிலையைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு நடந்த உண்மை வரலாறுகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்து கொள்ளும் ஆவலும்,  முதலில் தமிழ் கூட சிறிதும் அறியாத இளைய தலைமுறையினரும் இருப்பதைக் கருத்தில் கொண்டு ‘மணிக்கொடி’ ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு பிரசுரத்திற்கு தயாரான நிலையில் இருக்கிறது.

    எனது சிறிய வேண்டுகோள்:

    இந்த வரலாற்று நாவலைப் பற்றிய மதிப்புரை எழுத வேண்டும் என்று நினைத்து, ‘மணிக்கொடி’யைப் முழுதுமாகப்  பல தடவைகள் படித்துப் பார்த்ததும், அத்தனை நிகழ்வுகளையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாலும், என்னால் ஆசிரியை எழுதி இருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு மேற்கோளாகக் கூட சொல்ல முடியவில்லை. அது கடலுக்கு அருகில் நின்று ‘வேடிக்கைப் பார்க்கும்’ மன நிலையை மட்டும் தான் எனக்குள் உண்டுபண்ணுகிறது. புதினம் அவ்வளவு பிரம்மாண்டம். அதைப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும். ஆதலால், ‘மணிக்கொடி’ என்ற இந்திய வரலாற்றுக் களஞ்சியத்தை உங்களுக்கே ‘சொந்தமாக்கிக் கொள்வதே’ உகந்தது என்பது எனது அன்பான வேண்டுகோள்.

    அதே சமயம். நமது நாடு சுதந்திரம் அடைந்து, பிறகு இன்று வரையில்  நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கூட வரலாற்றில் இடம் பெறத் தகுதியானவை தான். அதையும் தக்க ஆதாரங்களுடன் “மணிக்கொடி” யின் தொடராக வர வேண்டும் அதையும் ஆசிரியை எழுத முன்வரவேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு எனது  கோரிக்கையை இத்துடன் வைத்து எனது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். ஜெய்ஹிந்த்.

              வந்தே மாதரம்.! வந்தே மாதரம்.!வந்தே மாதரம்

    Share