Blog

  • மார்கழி மலர்கள் – வாசலே இல்லாத குடிலில் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4/[/mixcloud]

     
    வாசலே இல்லாத குடிலில்shiva_parvati_close_large
    வந்துநட மாடுமிளங் களிறே!
    நேசமே தள்ளாடும் அன்பே!
    நெஞ்சுகொள் ளாத என் அழகே!

    பேசவே அறியாத நாவில்
    பெருவெள்ளம் கங்கை போல் பெருக
    ஈசனே நீயாக வருக
    இனியென்னை நீங்காமல் வருக!

    ஆசையாய் உனைப்பாட வருக
    அமிழ்தூறும் செந்தமிழைத் தருக
    ஏதுமே இல்லா பேதையேன் ஐயே
    ஏழையின் வாழ்வே வருக!
    ஈசனே எனக்காக வருக வருக (வாசலே)

    திருந்தாத வருந்தாத உள்ளம், அதில்
    திருமயிலைக் காபாலி வருக
    பொருந்தாத உறவு புரிந்ததென்றாலும்
    போகுமோ நீ தந்த மோகம்? நீ
    வாராமல் தாராமல் தீராது தாகம் (வாசலே)

    திருஞான சம்பந்தன் உயிர்தந்த தமிழ்வாழும்
    தென்கயிலை தானெந்தன் மயிலை
    திரைவீசும் கடலோரம் திசைகாட்டும் சுடராகத்
    திகழ்கின்ற தேதேனின் திவலை
    அருள்செய்ய வேநிற்கும் அன்னையென் அன்னையவள்
    அன்பென்னும் அலைவீசும் குளமே, அதன்
    அந்தப் புறம்நின்று சொந்தக் கதைசொல்லி
    அழுகின்ற மழலையுன் மகனே! அதை
    ஆதரித் தருள்வதுன் கடனே!

    26.12.2014 / வெள்ளி / 9.15

    Share
  • ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள்

     

    ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள்
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
    ____________________________

    1. இருண்ட சொற்கள்

    உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
    எமது எண்ணங்களில் துடிப்பவற்றை
    ஒரு பெரும் மத்தளத்தின் துணையுடன்
    பித்துப் பிடித்தவனொருவன் அம்பலப்படுத்துகிறான்

    ஒரு கல் தட்டப்படுகிறது
    அதனுடன் ஒப்பிடுகையில்
    தண்ணீரும் புற்களும்
    எமது துயரங்களின்
    விகாரமான வடிவங்களைக் காட்டுகின்றன

    ‘நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?’ என
    திரும்பவும் கேட்க மாட்டேன்
    அப்படிக் கேட்பதன் மூலம்
    கற்களின் வரலாற்றின் பின்னாலிருக்கும்
    பளபளப்பான வார்த்தைகளின் மீது
    சோர்வுகளை ஊற்ற முடியாது

    எளிமையாகவும் பிரகாசமாகவும் இருப்போம்
    எனவே யன்னலிலிருந்து உனது
    பார்வையைத் திருப்பும்போதெல்லாமோர்
    பாடலின் வடிவம் கொள்ளும் யன்னல்

    எனது ஆகாயம் அதன் நீல நிலையிழந்து
    வெறிச்சோடிப் போகும் அக் கணத்தில்
    எனது பிறப்பின் காரணத்தை நான்
    இவ்விதத்தில் கற்றுக்கொள்ளக் கூடும்

    ஆனால் அது சாத்தியமில்லை
    எமது இரவுக்குரிய நிலவின்
    மகிழ்ச்சிகரமானதான மெல்லிசை
    இல்லாத நிலையில்
    சாலையோரத்தில்
    யன்னலும் காணாமல் போகும்

    எனது தேர்ச்சியற்ற பயணங்களின் போது
    வளைந்து சோர்ந்த கற்களோடும்
    இருண்ட வார்த்தைகளோடும்
    நானும் தனியாக வளர்வேன்

    நானொரு ஒலியை செவிமடுக்கிறேன்
    பித்துப்பிடித்தவனொருவன் தொடர்ந்தும்
    எமது சிந்தனைகளில் அடித்துக் கொண்டிருக்கிறான்
    உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து

    —————————————

     

    2. குடை

    மழை பெய்து கொண்டிருக்கிறது
    துளை விழுந்த குடையொன்றுடன்
    தெருவைக் கடக்கிறேன் நான்
    சிவப்பு விளக்குக்குப் பின்னால்
    எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
    ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
    மழை வடிவம் கொண்டு
    இந்தத் தெருவில் கரையக்கூடியது

    தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
    என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
    அந்தப் பெண்ணின் கரங்களில்
    அதோ எனது குடை

    —————————————

     

    கவிஞர் மஹ்மூத் ஃபலாகி (கவிஞர் பற்றிய குறிப்பு)

    arishஈரான் தேசத்து கஸ்பியன் கடற்பிரதேசத்தை அண்டிய நகரமொன்றில் 1951 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, தனது ஆரம்பக் கல்வியை ஈரானில் கற்றதோடு பட்டப்படிப்பை ஜேர்மனியில் பூர்த்தி செய்துள்ளார். மன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அவரது ஆட்சிக்கெதிரான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததன் காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, மூன்று வருடங்களின் பிறகு, 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதோடு, தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

    தொடர்ந்து ஈரானின் திறந்த பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த இவர், புதிய ஆட்சியில் கவிதைகள் எழுதுவது தடை செய்யப்பட்டு, கவிஞர்களுக்கு ஆபத்தான சூழல் உருவானதால், நாட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, 1986 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

    தற்போது பாரசீக மொழி மற்றும் இலக்கியங்கள் சம்பந்தமான விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், கவிதைகள், நாவல், புனைவு, விமர்சனங்கள் என எழுதி, இதுவரையில் கிட்டத்தட்ட 19 தொகுப்புக்களை பாரசீக மற்றும் ஜேர்மன் மொழிகளில் வெளியிட்டிருக்கிறார். இவரது கவிதைகள் இதுவரையில் ஆங்கிலம், ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 29, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திருவாளர் திரு.ஜாதவ் பயேங் அவர்கள் 

     

    Jadav Payeng

     

    ஜான் ஜியானோ (Jean Giono) என்ற ஃபிரென்ச் எழுத்தாளர், 1953 ஆம் ஆண்டு “தி மேன் ஹூ ப்ளாண்ட்டெட் ட்ரீஸ்” (The Man Who Planted Trees) என்ற நூலை எழுதி வெளியிட்டார். எல்சார்ட் பூஃபியர் (Elzeard Bouffier) என்ற ஒருவர் மரங்கள் நடுவதில் ஆர்வம் மிக்கவராக அந்நூலில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அவர் விவரித்த நிகழ்வுகள் மிகவும் உண்மைத் தன்மை நிரம்பியதாக இருந்ததால் அந்த மனிதரை அறியும் முயற்சிகள் அந்நூலின் வாசகர்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நூலின் ஆசிரியர் அக்குறிப்பிட்ட மனிதர் தனது கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகன் என்றும், மக்களுக்கு மரங்களின் மீது ஆர்வம் வர வேண்டியே அவர் தனது நூலில் நிகழ்வுகளைப் புனைந்ததாகவும் கூறினார். அவர் கற்பனையில் கண்ட மனிதர் நூல் வெளிவந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயர் திரு.ஜாதவ் பயேங் (Jadav Payeng). பிரம்மபுத்திரா நதியின் நடுவில் உள்ள 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் தனியொரு மனிதராக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார் இந்த அதிசய மனிதர் ஜாதவ். இப்பொழுது அக்காட்டில் அழிவின் நிலையில் இருந்த பல்வேறு மிருங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறைந்தது ஐந்து புலிகளும் அடங்கும், அவற்றில் ஒன்று சமீபத்தில் இரு குட்டிகளையும் ஈன்றுள்ளது. இவரது சாதனைப் பற்றிக் கேள்விப்பட்ட வல்லமையின் எழுத்தாளரும், வாசகருமான திரு. ந. உ . துரை அவர்கள் வல்லமையாளர் விருதிற்கு ஜாதவ் பயேங்கை பரிந்துரைத்துள்ளார்.

    ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் உள்ள இந்தக் காடு உள்ளூர் மக்களால் ஜாதவின் செல்லப்பெயர் “முலாய்” என்பதை ஒட்டி “முலாய்யின் காடு” (Molai Kathoni = Molai’s woods) என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்கத் துவங்கியபொழுது ஜாதவிற்கு வயது பதினாறு. தற்பொழுது ஜாதவிற்கு வயது ஐம்பது ஆகிறது, 35 ஆண்டிகளில் தனியொருவராக இந்தக் காட்டை உருவாக்கியுள்ளார் ஜாதவ். இவரது முயற்சியின் தொடக்கதிற்குக் காரணம் 1979 ஆண்டு பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளம். அந்த வெள்ளத்தில் பல விலங்குகள் இறந்தன. வெள்ளம் வடிந்த பிறகு இப்பொழுது காடு இருக்கும் மணல்திட்டில் பல பாம்புகள் இறந்து கிடப்பதைப் பார்த்தார் ஜாதவ். வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு, மணல்திட்டில் ஒதுங்கிய பாம்புகள் மரநிழலின்றி வெய்யிலில் காய்ந்து இறந்திருந்தன. அவற்றைக் கண்டு கலங்கிய ஜாதவ், அந்த மணல்திட்டில் மரங்கள் நடுமாறு கோரிக்கை வைத்து காட்டிலாகா அதிகாரிகளை அணுகினார். அவர்களோ எந்த மரமும் வளரும் தன்மை அந்த மண்ணிற்கில்லை, வேண்டுமானால் மூங்கிலை வளர்ப்பதை முயற்சிக்குமாறு ஆலோசனை வழங்கி தட்டிக் கழித்துவிட்டனர். ஜாதவிற்கு உதவி செய்வோர் யாருமில்லை, அந்த வேலையும் கடினமாக இருந்தது, ஆனாலும் ஜாதவ் தளரவில்லை.

    தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தானே விரும்பி தனிமை வாழ்க்கையை ஏற்று அந்த மணற்திட்டிற்கே குடியேறினார் ஜாதவ். பல மூங்கில்களை நட்டு காலையும் மாலையும் நீரூற்றிப் பராமரித்தார். சில ஆண்டுகளில் மூங்கில்கள் வளர்ந்து சிறிய மூங்கில் காடு உருவாகியது. அதனையொட்டி பிறவகை மரங்களையும் சேகரித்து அங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினார். அவரது கிராமத்திற்குச் சென்று சிவப்பு கட்டெறும்புகளைச் சேகரித்து வந்து விலங்குகள் உயிர்வாழாத அந்த திட்டில் வளர்த்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அந்த மணல்திட்டின் மண்ணின் பண்பு அந்த எறும்புகளால் மாற்றப்பட்டது. அச்சமயம் “சமூகக் காடுகள் வளர்ப்பு” திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் சில தொழிலாளர்களும் இணைந்து 200 ஹெக்டேர் மணல் படுகையில் மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சென்ற பின்னர் அந்த மரங்களின் பராமரிப்பையும் ஜாதவ் மேற்கொண்டார். மரங்கள் வளர்ந்ததைத் தொடர்ந்து எந்த உயிருமே வாழத் தகுதியற்று இருந்த அந்த மணல்திட்டில் பல உயிரினங்களும் குடியேறத் துவங்கின.

    molai woods-map

    அவ்வாறு குடியேறிய விலங்குகளில் இனஅழிவு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும், வங்காளப் புலியும் அடங்கும். பன்னிரு ஆண்டுகள் கழித்து வல்லூறு போன்ற பறவைகளும், வலசை போகும் பறவைகளும் பிற பறவையினங்களும், பல முயல்களும், நூற்றுகணக்கான மான்களும், மற்றும் பல சிறு விலங்குகளும் அக்காட்டை தங்கள் வாழிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கின. மான்கள், மாடுகள் போன்ற சிறு உயிரினங்களால் கவரப்பட்டு பெரிய விலங்குண்ணிகளும் அக்காட்டில் குடியேறத் துவங்கின. மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் அடர்ந்து வளரத் துவங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டின் ஆறு மாதங்கள் அக்காட்டில் வந்து தங்கி குட்டிகளையும் ஈனுகின்றன. மரங்களின் மீது கொண்ட அன்பால் ஜாதவ் தனது கிராமத்தைத் தவிர்த்துக் காட்டிலேயே சிறு குடில் போன்ற வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு தனது மனைவி, இருமகன்கள் மற்றும் மகள் ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவிற்கு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுகிறார்.

    molai woods2

    அஸ்ஸாம் மாநில வனத்துறையினர், ஜாதவ் தனது முயற்சியைத் துவங்கி முப்பதாண்டுகள் கழித்தே அந்தக் காட்டைப் பற்றி அறிந்து கொண்டனர். அந்தக்காட்டின் அருகில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளை உணவிற்காக நூற்றிற்கும் அதிகமான யானைகள் சேதம் செய்யத் துவங்கின. அவற்றை வனத்துறையினர் விரட்டிவர, அவை ஓடி வந்து முலாய்யின் காட்டில் அடைக்கலம் புகுந்தன. அரசின் பதிவேடுகளில் இடம் பெறாத ஒரு காட்டை அங்கு கண்ட வனத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர். அன்றுதான் முலாய்யின் புதிய காடு அவர்களது கவனத்திற்கு வந்தது. யானைகளால் இழப்பு நேர்ந்தவர்கள் அந்தக் காட்டை அழிக்கக் கோரிக்கை வைத்தார்கள். ஜாதவ் அதற்குக் காட்டையும் விலங்குகளையும் அழிப்பதற்குப் பதில் என்னைக் கொன்றுவிடுங்கள் எனத் தீர்மானமாகச் சொல்லவும், வனத்துறையினர் ஜாதவிற்கு உதவ உறுதி பூண்டார்கள். மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றது ஜாதவின் சாதனை, முலாய்யின் காட்டை இப்பொழுது வனவிலங்குகளில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சுற்றலாப் பயணிகளையும், திரைப்பட வெளிப்புறக் காட்சி படம் பிடிப்போரது கவனத்தையும் கவர்ந்துள்ளது முலாய்யின் காடு. தனியொரு மனிதராக இந்த சாதனையைச் செய்த ஜாதவ் பயேங், இதனை ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என்றும் அரசின் வனத்துறை காட்டின் பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் வேறு ஓரிடம் சென்று புதிய காடோன்றை உருவாக்கவும் தயார் என்று சொல்கிறார். சுற்றுச்சூழல் கல்வி, மரம் நடுதல் பள்ளி நாட்களிலேயே தொடங்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் பள்ளி முடிக்கும் முணர் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இயற்கையில் இருக்கும் உணவுச் சங்கிலியைக் காப்பது நம் கடமை, நம் போன்ற மனிதர்களைவிட்டால் வேறு யாரால் உயிரினங்களைக் காக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார் ஜாதவ். அனைவரையும் சுற்றுச்சூழலின் மீது கவனம் கொள்ளவும், மரங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் முன்மாதிரியாக இருக்கும் ஜாதவ் பயேங் என்னும் காட்டுமனிதர் முலாய் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    தகவல்கள் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் தளத்தின் பல செய்திகளின் தொகுப்பு

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • எல்லோரும் அங்கேதான் போறோம்!

    எல்லோரும் அங்கேதான் போறோம்!

    ஒரு அரிசோனன்

     

    முன்குறிப்பு: இக்கதை நடந்ததாகக் குறிப்பிடும் காலம் பதினெட்டாம் நூற்றாண்டுத் துவக்கம்.  அப்போதைய தமிழ்நாட்டில் ஆங்கிலம் என்று ஒரு மொழி இருப்பதாகவே பலருக்குத்தெரியாது.  மக்கள் தனித்தனிக் குமுகமாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்வுமுறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன.  நான் செவிவழிக்கேட்ட ஒருகட்டுப்பாட்டைப்பற்றி எழுதிய கதையே இது.

     

    “கடைசியாத்து காமாச்சி போயிட்டாளாம்.   ஒரே அமக்களமா இருக்கு!” என்று தன் தந்தையின் மூன்றாம் தாரத்து மகள் பாரவதி யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பது முத்தண்ணா காதில் விழுந்தது. எல்லோருக்கும் அவர் முத்தண்ணாதான்.  அவர் பெயர் முத்துசுப்பிரமணியம் என்பது அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.  எண்பத்தொன்பது வயதான அவர்தான் அந்த கிராமத்திலேயே மூத்தவர் என்பதாலும், அவருக்கடுத்த முதியவர் அவரைவிட இருபத்திரண்டு வயது குறைந்த மூதாட்டி என்பதுமே காரணம்.

    “எலே, கறுப்புக்கண்ணா, இங்கே வாடா!” என்று இரைந்தார் முத்தண்ணா.

    “இப்ப கருப்பனை எதுக்குக் கூப்பிடறேள், முத்தண்ணா?” என்று வாசலில் எட்டிப்பார்த்தவாறே பதிலுக்கு இரைந்தாள் அறுபது வயதான பார்வதி.

    “உன்னால முடியாத காரியத்துக்குத்தான் அவனைக் கூப்பிடுவேன்!  எலே, கருப்பா? எங்கேடா போயிட்டே!” என்று மீண்டும் குரலை உயர்த்தினார் முத்தண்ணா.

    “இங்கேதான் இருக்கேன் சாமி.  மாட்டுக்கு கழனி காட்டிக்கினு இருந்தேன்.” என்று துண்டை இடுப்பில் கட்டுக்கொண்டு ஓடிவந்தான் கறுப்புக்கண்ணன் என்று அழைக்கப்பட்ட கருப்பன்.

    பெயருக்கேற்றபடி கருநீலக்கருப்பு, எடுப்பான நாசி, வேலை செய்துசெய்து உரமேறிய உடல்கட்டு;  சுருட்டை சுருட்டையான தலைமயிரைப் பின்னால் இழுத்துப் பெரிய குடுமியாக முடிந்திருந்தான்.  பத்துப் பதினைந்து நாளாக மழிக்கப்படாத முகத்தில் மிளகுப்போடியில் உப்பை ஆங்காங்கே தூவிவைத்ததுபோல கருப்பில் கொஞ்சம் நரைமுடி கலந்த முடிகள் அரிசி நீளத்திற்கு வளர்ந்திருந்தன. முப்பத்தேழு வயதான அவனுக்குத் நினைவு அறிந்த நாள் முதல் தெரிந்ததெல்லாம் முத்தண்ணாவுக்குச் சேவை செய்வதுதான்.

    “கோடியாத்து மாமி போயிட்டானு காதுலே விழுந்தது.  அங்கே என்ன நடக்கறதுன்னு பார்ந்த்துண்டு வாடா!” என்று முத்தண்ணா சொன்னதும் தலையைச் சொரிந்தான் கருப்பன்.

    “என்னடா மரமாட்டம் நிக்கறே!  சொன்னது காதுல விழுந்ததோல்லியோ?” என்று மீண்டும் விரட்டினார் முத்தண்ணா.

    அவர் குரலில் அதட்டல் இருந்தாலும், உள்ளத்தில் இல்லை என்று உணர்ந்திருந்த கருப்பன், “என்ன சாமி, இப்படிக் கேக்குறீக? சாமிமாரு வூட்டுல கேதம் விழுந்தா, அங்கிட்டு நா போகலாங்களா?  சும்மா உட்டுடுவாகளா?” என்று அவர் சொன்னதைச் தான் செய்ய இயலாத நிலைமையில் இருப்பதைத் தெரிவித்தான்.

    “ஆமாம்.  அது ஒண்ணுதான் இந்த ஊருக்குக் கொறச்சல்!  கட்டையிலே வச்சதுக்கு அப்பறம் வேகவைக்கறதையும் இவங்கனுளே செய்வானுங்களா? அப்பமட்டும் தலையாரி வேணாமா இவனுகளுக்கு!” என்று அலுத்துக்கொண்டவர், “ஒனக்குத்தான் கண்ணும் காதும் தீட்சண்யமாச்சே! தள்ளி நின்னு பாத்து, என்ன விவரம்னு தெரிஞ்சுண்டு வா.  பார்வதி, என் கைத்தடிய எடுத்துக்கொடு, எங்கேயோ மறந்து வச்சிட்டேன்!” என்று தன் தங்கையும் அதே குரலில் விரட்டினார்.

    “நான் என்ன சின்னப் பொண்ணுன்னு நெனப்பா, முத்தண்ணா!  சும்மா வெரட்டிண்டே இருக்கேள்!” என்று மெல்ல எழுந்து, அவரது தடியை எடுக்கச் சென்றாள் பார்வதி.

    இருபது வயதிலேயே கணவனை இழந்து, பிறந்தவீட்டுக்கு வந்தவள் — தனது தந்தையின் மூத்தமகனும், முப்பது வயதிலேயே மனைவியையும், மூன்று குழந்தைகளையும் வைசூரிக்குப் பறிகொடுத்துவிட்டு, இனித் திருமணமே வேண்டாம் என்று தனிக்கட்டையாக் இருந்துவிட்ட —  தன்னைத் தந்தையாக வளர்த்து ஆளாக்கிய தமையன் முத்தண்ணாவுக்குத் துணையாக இருந்துவிட்டாள்.

    அண்ணன் தடி எங்கு இருக்கிறது என்று மறந்து போய்த் தன்னை விரட்டவில்லை, வம்பு பேசாதே என்று மறைமுகமாகச் சொல்லுகிறார் என்றையும் உணர்ந்துதான் இருந்தாள்.  தனக்கு அறுபது வயதாகியும், ஆறுவயதுக் குழந்தையாக நடத்தப்படுவதுதான் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.  இருந்தாலும், தந்தையாக நினைக்கும் முத்தண்ணாவை எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றவில்லை.

    “பக்கத்திலேயே கைத்தடியை வச்சுண்டு, ஊர்பூராத் தேடினா, எங்கே கெடைக்குமாம்?” என்ற திட்டலுடன் அவர் அருகில் கிடந்த தடியை எடுத்து, தரையில் ஒரு தட்டுத் தட்டி, அவரிடம் நீட்டினாள்.

    “பொணம் போறவரைக்கும் சாப்பிட முடியாது.  சமையக்கட்டுலே இருக்கறதத் தூக்கி கழனித் தொட்டீல கடாசு!” என்று தடியை ஊன்றிக்கொண்டு எழுந்தார் முத்தண்ணா.

    அவர் வாயிலுக்கு வருவதற்கும், கருப்பன் திரும்ப வருவதற்கும் சரியாக இருந்தது.

    ‘சாமி, எதோ தகராறு நடக்குது.  ஊரு சாமிகளெல்லாம் சேந்து எதோ சத்தம் போட்டுகினு இருக்காக.  எளவு வீட்டுச் சின்னசாமி மத்தசாமிகள ஏதோ கெஞ்சிக்கினு இருக்காக.  முடியாது, முடியாதுங்கற பேச்சுத்தான் கேக்குது.” கருப்பன் தகவல் தந்தான்.

    “ஆமாம், வைத்தா அங்கே இருக்கானா?”

    வைத்தாதான் ஊர் விசேஷங்களுக்கு உபாத்தியாயம் செய்பவர். பிறக்குமுன்னர் செய்யும் சடங்குகளில் இருந்து, முடிவுவரை அவர்தான் எல்லாவற்றிற்கும் வரவேண்டும்.

    “இருக்காரு சாமி.”

    “சரி!  என்னோட வா!” என்று தடியை ஊன்றிக்கொண்டு விடுவிவென்று நடந்தார் முத்தண்ணா.

    “நா அங்கிட்டு வர்றது சரியா இருக்குமா சாமி?  நா வேணும்னா தலையாரிக்குத் தகவல் சொல்லட்டுமா?” தனித்த குரலில் கேட்டான் கருப்பன்.

    “நான் பெரியவனா, நீ பெரியவனா?  எதுக்கு மேப்பேச்சுப் பேசறே?  வேண்டியதில்லை.  நான் இருக்கறச்சே எவனும் நீ ஏன் என்கூட வரேன்னு கேக்கமுடியாது.  வாய மூடிண்டு வா, என்கூட.”  என்று கடிந்துவிட்டு வேகத்தைக் குறைக்காமலேயே நடந்தார் முத்தண்ணா.  அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தான் கருப்பன்.

    அந்தச் சிற்றூர் – குக்குடநல்லூர் —  எப்பொழுதோ எந்த மன்னனாலோ முத்தண்ணாவின் முன்னோருக்கு பிரமதேயமாக வழங்கப்பட்டதாம்.  மொத்தம் இருநூறுபேர்களுக்கும் குறைவாகவே உள்ள அந்தச் சிற்றூருக்கு ஒரு தலபுராணமும் உண்டு.  அந்தக்கதை இப்போது வேண்டாம்.

    ஒவ்வொரு குமுகத்திற்கும் ஒரு கோவில். பதினெட்டு வீடுகள் உள்ள அந்தணர் தெரு, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை உள்ள வேளாளர் தெரு, இன்னும் பல குடிசைகள், என்று அவரவர்கள், அவரவர்கள் தொழிலைச் செய்துகொண்டிருந்தார்கள்.  அதேமாதிரி அந்தந்தக் குமுகங்களுக்கு அவரவர்கள் நீதி, கட்டுப்பாடு.  ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை.

    முத்தண்ணாவின் குடும்பம் மட்டுமல்ல, எல்லோரின் குடும்பமுமே பெரிதாகத்தான் இருந்தன.  அப்பொழுது குக்குடநல்லூரின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேலாக இருந்தது.  எப்போதும்போல் திடுமென்று வந்த வைசூரி, முக்கால்வாசிப்பேரை வாரிக்கொண்டுபோய்விட்டது.  முத்தண்ணா குடும்பத்தில் மிஞ்சியவர்கள் அவரும், அவர் தங்கையும்தான்.

    அந்த ஊரில் முத்தண்ணாதான் மிகவும் கற்றவர்.  யஜுர்வேதம், சம்ஹிதை, கணம், பல உபநிஷத்துகள், ஜோசியம், இன்னும் வைதிகச் சடங்குகள் எல்லாம் தெரியும்.  நிறைய நிலபுலங்கள் உண்டு.  இருந்தாலும், நிலத்தில் பயிரிடுபவர்களிடம் தடலடி செய்து எதையும் வாங்குவதில்லை.  அவர்களாகக் கொண்டுவந்து கொடுப்பதிலேயே வீட்டுக்குதிர் நிரம்பி வழியும்.

    அதிலும், தனக்குத் தேவையானதுபோக மிச்சத்தைத் தேவையானவர்களுக்கு வழங்கிவிடுவார். அவரை எதிர்த்துப்பேச ஊரில் எவருக்குமே துணிவுகிடையாது.  ஆனால், பின்னர் பேசுபவர்கள் அவர் குமுகத்தில் நிறைய உண்டு…

    …”என்ன நடக்கிறது இங்கே?  காமாச்சி போய்ட்டானு பார்வதி சொன்னா.  இங்கே எதோ தகராறுன்னு கருப்புக்கண்ணன் கண்ணுலே பட்டது.  அதான் என்னனு பாக்கலாம்னு வந்தேன்.” என்று தான் வந்த நோக்கத்தை யாரும் கேட்பதற்கு முன்பே கணீர் என்று அறிவித்தார்.

    யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.

    “டேய் ராமா, எண்டா பச்ச மட்டை வல்லே?  காமாச்சி காஞ்சிரங்காடு (சுடுகாடு இருக்குமிடம்) போக வேணாமா?” என்றவர், “டேய் வைத்தா, அபர காரியத்துக்கு ஒண்ணுமே நீ கொண்டுவல்லையேடா.  அவ இங்கேந்து போனாத்தானே நாம புண்டம் திங்கமுடியும்?” என்று வைத்தாவை விரட்டினார்.

    வைத்தா தலையை நிமிரவே இல்லை.

    “கிச்சா, சொல்லுடா.  என்ன தகராறு இங்கே?” என்று கிருஷ்ணசாமியை – இறந்த காமாச்சியின் ஒரே மகனைக் கேட்டார்.

    பதினாறு வயதான கிச்சாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

    அருகில் சென்று அவன் தலையை வருடினார் முத்தண்ணா.

    “சொல்லுடா, கிச்சா! ஒன் கொள்ளுத்தாத்தா வயசாறது நேக்கு.  காமாச்சி என் பேத்தி மாதிரி.  ஏன் எல்லோரும் பித்துப் பிடிச்சமாதிரி, காரியங்களைக் கவனிக்காம நின்னுண்டிருக்கேள்?”

    “யாரும் அம்மாவைக் கொண்டுபோக முடியாதுங்கறா, முத்தண்ணா!”  ஓவென்று கதை அழுதான் கிச்சா.

    “என்னது?  எவண்டாது அப்படிச் சொன்னது?”  கிழட்டுச் சிங்கமாக உறுமினார் முத்தண்ணா.

    “ஆத்துலே திரண்ட(வயதுக்குவந்த)பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்காம ரெண்டு வருஷமா ஆத்திலே வச்சிருக்கா.  நாங்க என்னசொல்லியும் காமாச்சி கேக்க மாட்டேனுட்டா.  நம்ம சம்பிரதாயமே கெட்டுப்போச்சு.  திரண்டபொண்ணு சும்மா இருப்பாளா? அவனை, இவனைப் பாத்து வலைவீசமாட்டாளா?  இப்படிப்பட்ட, ஜாதிகேட்ட விட்டுக்கு சம்ஸ்காரம் ஒண்ணுதான் கொறச்சல்!”  முத்தண்ணா பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

    “யாரடாது பின்னலேந்து பேசறது?  முன்னால வாடா!” என்று அதட்டினார் முத்தண்ணா.

    பதிலே வரவில்லை.

    brahmins

    “பொம்மனாட்டிப்பசங்க!  முன்னால வந்து நிக்காம பின்னால பேசறாங்க, தலையைசெறச்சு முட்டாக்கு போட்டுண்டு ஒக்காந்துக்கவேண்டிய பசங்கல்லாம்!  .பார்வதியை பழம்பொடவையைத் தரச் சொல்லறேண்டா, கட்டிக்குங்கடா!”  அவர் குரலில் இருந்த உஷ்ணம் எல்லோரையும் சுட்டது.

    muththannaa

    “நான்தான் சொன்னேன், முத்தண்ணா!” என்று முன்னால் வந்து நின்றார் ஐம்பது வயதான அய்யாச்சாமி.

    “நீ எப்பலேந்துடா ஊருக்குப் பெரியமனுஷன் ஆனே?”

    “ஏன் முத்தண்ணா, நியாயத்தை எடுத்துச் சொல்ல பெரிய மனுஷனாத்தான் இருக்கவேணுமா?  உங்களைத் தவிர வேற பெரிய மனுஷாளே இந்த ஊரில இருக்கப்படாதா?”

    “ஓகோ, அப்படியா விஷயம்? என்னடா நியாயம் இங்கே இருக்கு?  ஒருத்தி கட்டையிலே போகவேணும்.  அதைச் செய்யவிடாம தடுக்கறது எந்த விதத்துலடா நியாயம்?”

    “உங்களுக்குத் தெரியாததில்லே, முத்தண்ணா!  பெரிய மனுஷி ஆகி, மூணுமாசத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிவைக்கணும், அப்படி இல்லாட்டி, அந்தப் பொண்ணு யாரைவேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சாஸ்திரம் சொல்லிஇருக்கு.  அப்படி நடக்கக்கூடாதுன்னுதானே பொண்ணு பெரியமனுஷி ஆகறத்துக்குமுன்னாலே கல்யாணம் பண்ணிவைக்கணும்கற சாஸ்திரத்தை நாம அனுஷ்டிக்கிறோம்!  அதை ஒத்தத்தரா மீற ஆரம்பிச்சா, நம்ப சாஸ்திர சம்பிரதாயங்கள்ளாம் காத்தோடபோயிடும்!”

    “அதுனால…”

    “அதுனாலதான் ஒன் தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு….  கிச்சா மாட்டேன்னுட்டான்!”

    “அடி சக்கை!  ஒனக்கு அம்பது வயசாறது.  உனக்கு பதினஞ்சு வயசுப் பொண்ணு கேக்கறதாக்கும்!  ஓம் பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கறதுதானே, அவனுக்கு இருபத்தாறு வயசுதானே ஆறது!”  முத்தாண்ணாவின் குரலில் கிண்டல் இருந்தது.

    “அதெப்படி?  அவனுக்குத்தான் ஒரு பொண்டாட்டி இருக்காளே!”

    “இருந்தா என்னடா?  ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிக்கப்படாதுன்னு சாஸ்திரம் எங்கேயாவது சொல்றதா?”

    “கிச்சாவோட அப்பன் சொத்தையெல்லாம் கண்ட எடத்துலே கொண்டுபோயி அழிச்சிட்டான்.  அவனுக்கு எல்லாக் கேட்ட பழக்கமும் இருந்துது. அப்படிப்பட்டவன் பொண்ணை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு வரதே பெரிசு.”

    “எப்படிடா இப்படிப் பேசறே!  அப்பன் எப்படி இருந்தா எப்படிடா?  காமாச்சியும், அவ கொழந்தைகளும் தங்கக்கம்பிகள்டா!  பொண்ணு முக்கியமா, அல்லது செத்துப்போன அவன் அப்பன் முக்கியமா?”

    “முத்தண்ணா, என் பையனுக்குக் கல்யாணம் செஞ்சுவச்சா, சீரு செனத்தி என்ன செஞ்சானு கேள்வி வரும்.  என்னைக் கல்யாணம் பண்ணிண்டா அப்படிக் கேள்வி ஒண்ணும்….”

    “சீ!  வாயக் கழுவு.  வாயால மட்டும் பேசுடா.  வேறு இன்னோத்தால பேசாதேடா.  அதுக்கும், காமாச்சி பொறப்படறதைத் தடுக்கறதுக்கும் என்னடா சம்பந்தம்?”

    “பாடம் கல்பிச்சாத்தான் இனிமே தப்பு நடக்காது.”

    “அப்படியாடா அண்ணாவி?”  என்றவர், அங்கிருந்த கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.  “உங்க முடிவு என்னங்கடா?  டேய் வைத்தா, காரியத்தை ஆரம்பிப்பியா, மாட்டியா?” என்று வைதிகர் வைத்தாவை அதட்டினார்.

    “முத்தண்ணா,  நீங்க சொல்றேள்னு நான் எதையாவது செஞ்சா, என்னை கிராமத்தை விட்டு இவா ஒதுக்கி வச்சுடுவா.  நான் மூணு பொண்குழந்தைகளைக் கரையேத்தணும்.  இப்பவேணும்னா நீங்க என்னை சம்ரட்சணை பண்ணுவேள்.  அப்பறம்….” என்று இழுத்தார் வைத்தா.

    vaithaa

    “இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே!  வேற நீ என்னடா பண்ணுவே!  அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழை பெய்யுமாடா?  நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம்.  அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா.  இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?” என்றவர், மற்றவர்களை நோக்கித் திரும்பினார்.

    “டேய் பசங்களா!  ஊருக்குப் பெரியவன்கற முறையிலே கேக்கறேங்கடா!  இப்ப காமாச்சியை வழியனுப்ப நீங்க வரப்போறீங்களா இல்லையா?”

    பதிலே இல்லை.

    “இங்கே யாருடா உங்களுக்கு மூப்பு, வாடா இந்த முத்தண்ணா முன்னாலே!”

    முத்தண்ணாவின் சவாலை ஏற்றுக்கொள்வதுபோல அவர் முன்னால் வந்து நின்றார் அய்யாச்சாமி.

    “நான்தான் முத்தண்ணா இவங்களைத் தடுத்தேன்!  இப்ப எல்லோரும் என் வார்த்தைக்குத்தான் கட்டுப்பட்டுண்டு இருக்கா.  நாங்க எல்லோரும் எங்க வழியைப்பார்த்துண்டு போறதாத்தான் இருந்தோம்.  நீங்க வரேளேன்னுதான் இங்கே நின்னுண்டு இருந்தோம்.”

    அய்யாச்சாமியை ஏற இறங்கப்பார்த்தார் முத்தண்ணா.

    “எண்டா அய்யாச்சாமி!  அப்ப காமாச்சி இங்கே நாறிண்டே இருக்கணுங்கறதுதான் உங்க தீர்மானமா?”

    பதிலே இல்லை.

    ‘காமாச்சி இங்கே இருக்கறவரை யாராத்திலேயும் அடுப்பு எரியாது.  கோவில்லே சாயரட்சை பூஜை நடக்காது. அது பரவாயில்லையாடா நோக்கு?”  கேள்வியில் தீப்பொறி பறந்தது.

    “அப்ப கிச்சாப்பயலை எங்க வழிக்கு வரச்சொல்லுங்கோ!”

    “அப்படீன்னா?”

    “அவன் தங்கையை எனக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம்னு சொல்லச்சொல்லுங்கோ!’”

    பளார் என்று அய்யாச்சாமியின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.  அதிர்ந்துபோய் இரண்டடி பின்னல் எடுத்துவைத்தார் அய்யாச்சாமி.

    “எப்ப, எதைப் பேசறதுன்னு தெரியாத நீ ஒரு மனுஷன், உனக்குப் பின்னால ஒரு பட்டாளம்!  தூத்தெறி!” என்று காறி உமிழ்ந்தார் முத்தண்ணா.

    “எந்திருந்து போங்கடா, போக்கத்த பசங்களா!  காமாச்சியைக் கரையேத்தறது எப்படீன்னு எனக்குத்தெரியும்.  டேய் வைத்தா, உன் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுன்னு ஒருநாளைக்கு கேப்பான், இந்த அய்யாச்சாமி.  அப்ப உன்பாடு, அவன்பாடு.  அப்ப அதுக்கு மட்டுமில்லே, எதுக்குமே நீ எங்காத்து வாசல்படி ஏறி வரக்கூடாது. தெரிஞ்சுக்கோ.” என்று உறுமிய அவர், குனிந்து வைத்தாவின் ஒலைப்பையைப் பிடுங்கினார்.

    “காமாச்சியை அனுப்பி வச்சுட்டு, இந்தப்பையை தலையைச் சுத்தி வீசி எறியறேன்.  பொறுக்கிக்கோ!” என்றவர்,  கருப்பன் பக்கம் திரும்பி, “டேய் கருப்புக்கண்ணா, நெல்மூட்டை ஏத்திண்டு வருவியே, அந்தக் கட்டைவண்டியைக் கொண்டுவாடா! ஏன் என்னன்னு கேள்வி கேக்காதே!  பச்ச மட்ட ரெண்டையும் கொண்டுவந்து போடு.” என்று வழக்கம்போல அதட்டும் குரலில் விரட்டினார்.

    “இதோ சாமி!”  என்று ஓடினவனிடம், “எவனாவது உன்னைத் தடுத்து நிறுத்தினா, அவன் கையைக் காலை உடைச்சிடு.  எவன் என்ன பண்ணுவான்னு நான் பார்க்கறேன்!” என்று இரைந்தார்.  தலையை ஆட்டியபடி ஓடினான் கருப்பன்.

    “முத்தண்ணா, நீங்க பண்றது அநியாயம்.  உங்களுக்கும் ஒருநாள் எங்க தேவை வரும்.  உங்களையும் நாங்கதான் கரைசேக்கணும்  மறந்துடாதீங்கோ!”

    குரல் வந்த திசையை நோக்கித் தன் கைத்தடியைச் சுழற்றினார்.

    “ஆ!” என்று அய்யாச்சாமியிடமிருந்து ஒரு கத்தல் கிளம்பியது.

    “டேய், என்னை எப்படி கரையேத்திக்கணும்னு எனக்குத் தெரியும்டா.  உங்க கொட்டத்த எப்படி அடக்கணும்னும் எனக்குத் தெரியுங்கடா.  மனுஷனுக்கு மனுஷனா உபகாரம் செய்யலேன்னா, நரகலைத் திங்கற மிருகத்துக்கும் உங்களுக்கும் என்னங்கடா வித்தியாசம்!” என்றவர், கிச்சாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

    சிரித்து நேரம் சென்று வெளிவந்த அவர், பச்சைமட்டையுடன் கட்டைவண்டியில் வந்த கறுப்பனைப் பார்த்து விரல்களால் சைகை செய்தார்.

    கருப்பன் அரிவாளால் மட்டையை வெட்டி, பாடைபின்னத் துவங்கினான்.

    நேரம் சென்றது.

    “கருப்புக்கண்ணா, உள்ளே வாடா!” என்று முத்தண்ணாவின் அதட்டல் குரல் ஒலித்தது.

    “நானா?  வூட்டுக்கு உள்ளேயா  சாமி?” என்று இரைந்து குரல் கொடுத்தான் கருப்பன்.

    “ஆமாண்டா மடசாம்பிராணி! உன்னத்தான்.  காது செவிடாயிடுத்தா நோக்கு?” என்று திரும்பவும் அதட்டல் வந்தது.

    கலைந்து கிடந்த மயிர்க்கற்றையை அள்ளிமுடிந்துகொண்டு உள்ளே போன கருப்பன், காமாச்சியின் உடலைக் குழந்தையைப்போலத் தூக்கிக்கொண்டு வந்தான். முத்தண்ணா கண்ணைக்காட்டவே, பாடையை வண்டியில் தூக்கிவைத்தான் கிச்சா.

    காமாச்சியைப் பாடையில் கிடத்தினான் கருப்பன்.

    தீச்சட்டியைக் கீழே வைத்த முத்தண்ணா, கிச்சாவைப்பார்த்து தலையை ஆட்டினார்.

    தீச்சட்டியை எடுத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் மயானத்தை நோக்கி நடந்தான் கிச்சா.

    மாட்டின் மூக்கணாங்கயிறைப்பிடித்தவாறே வண்டியை மெல்ல நடத்திச் சென்றான் கருப்பன்.

    தடியை ஊன்றியவாறே அவனைப் பின்தொடர்ந்த முத்தண்ணா, கதறி அழுதுகொண்டிருந்த கிச்சாவின் தங்கையைத் திரும்பி பார்த்து, தனக்கே உரிய உரத்த அதட்டும்குரலில், “நாங்க உங்க அம்மாவைக் கரையேத்திவிடப்போறோம்மா. காலம் கெட்டுக்குக்கெடக்கும்மா, பொறுக்கிநாய்க்கூட்டம் காத்துக்கெடக்கு.  கதவைத் சாத்தித் தாப்பாப் போட்டுக்கோ!” என்று இறைந்துவிட்டு நடக்கத் துவங்கினார்.

     

                    ***************************

     

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(52)

    -செண்பக ஜெகதீசன்

    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
    டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (திருக்குறள்:211-ஒப்புரவறிதல்)

    புதுக் கவிதையில்…

    மண்ணிடம் பலனேதும்
    எதிர்பார்க்காமலே
    மழை பொழிகிறது…                                      rain

    அதுபோல்தான்
    சான்றோர் செய்யும் உதவியும்
    கைம்மாறு கருதியல்ல…!

    குறும்பாவில்…

    மண்குளிர மழை பெய்வதும்,
    சான்றோர்தம் உதவியும்
    பிரதிபலன் எதிர்பார்த்தல்ல…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மழையது பெய்தேதான்
    மண்ணின் வளத்தைப் பெருக்கிடுதல்
    மண்ணிடம் பலனெதிர் பார்த்தல்ல,
    மழையின் குணமும் அதுதானே,
    கண்ணின் இமையாய்க் காக்கும்நற்
    குணத்தை யுடைய சான்றோர்கள்
    மண்ணில் மற்றவர்க் குதவிடுதல்,
    மழைபோல் மறுபலன் பாராததே…!

    லிமரைக்கூ…

    மண்ணிடம் மழையது எதிர்பார்ப்பதில்லை பலனை,
    மாந்தரில் மழைபோல் சான்றோர்
    பிரதிபலன் எதிர்பாராமல் பேணுவர்பிறர் நலனை…!

    கிராமிய பாணியில்…

    மழபெய்யுது மழபெய்யுது
    மண்ணுகுளுர மழபெய்யுது,
    மண்ணுகிட்ட மறுஒதவி
    கேக்காமலே மழபெய்யுது…

    மனுசருலயும் மழபோல
    மத்தவனுக்கு ஒதவிசெய்ய
    மனசுவுள்ள மனுசருண்டு,
    அவுரு
    மறுஒதவி எதயுமே
    மனசாலயும் கேக்கமாட்டாரே…

    மழபெய்யுது மழபெய்யுது
    மண்ணுகுளுர மனசுகுளுர
    மழபெய்யுது மழபெய்யுது…!

     

    Share
  • மார்கழி மலர்கள் – எண்ணமெல்லாம் வண்ணமாய் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF/[/mixcloud]

    732_radha-krishna-wallpaper-009
    வண்ணமெல்லாம் கண்ணனாய்
    கண்ணனெல்லாம் காதலாய்
    காதலெல்லாம் ராதையாய்
    ராதை அன்பு தாரையாய், அந்த
    தாரையே என் கூரையாய்
    கூரையின் ஓரம் குழலோசை நெஞ்சில்
    கொடிவளரும் எண்ணமாய் (எண்ணமெல்லாம்)

    கண்ணில் படாமலே என்னைத் தொடாமலே
    நெஞ்சைக் கொள்ளை கொண்டான் நித்தமும் ஏங்கவைத்தான்
    தன்னைத் தராமலே என்னை அடிமை செய்தான்
    தாழ்திறந்தே என் தலைவன் எதிரில் நின்றான்
    கண்ணா கண்ணா அபயம் அபயமென்றேன்
    கண்ணீரின் நதியில் கனவாய்க் கரைந்துநின்றேன்
    ஏழ்கடல் விழியாலே என்னடா என்றான்
    ஏழைநான் வாழவே எங்கிருந்தோ வந்தான்
    என் அன்பன் என் தலைவன் என் மன்னன் என் துணைவன்
    என் தோழன் நண்பன் நேசன் ஈசன் என் என் என் கண்ணன்
    (எண்ணமெல்லாம்)
    ஒருபுறம் தேகம் ஒரு புறம் ராகம்
    ஒருபுறம் ஒன்றுமில்லா வெளி வானம்
    மறுபுறம் இல்லாத மன்னரின் மன்னன்
    மாயைகள் வீழ்ந்திடும் நேயத்தின் நாயகன்
    அன்பே கண்ணனின் ஆலயமாகும்
    அவன்நினை வொன்றே ஆனந்த கீதம்
    தாள்களில் தாள்களில் தஞ்சம் தஞ்சம்
    தழுவிய பொழுதே தணிந்தது நெஞ்சம்
    என் அன்பன் என் தலைவன் என் மன்னன் என் துணைவன்
    என் தோழன் நண்பன் நேசன் ஈசன் என் என் என் கண்ணன்

    (எண்ணமெல்லாம்)
    23.12.2014 / செவ்வாய் / 19.15

    Share
  • நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4)

    Picture1

    நரபலி நர்த்தகி ஸாலமி

    (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4)

    (Based on Oscar Wilde ‘s Play Salome)

    சி. ஜெயபாரதன், கனடா

    ‘வாழ்க்கையில் புரியும் அறநெறிப் பணிகள் யாவும், பரிவு உணர்ச்சியற்ற மாந்தருக்கு மூடச் செயல்களாகத் தோன்றும்! ஆனால் அது மிகச் சிறிய எதிர்ச் சிந்தனை ! சிலுவையிலே அறையப் பட்ட எளியவரை விட, அவ்விதம் ஆணியடித்த வலியவர் மீது நான் மிகவும் கவலைப் படுகிறேன். ‘

    டேவிட் பார்க்கின்ஸ் கைச்சுவடி (மார்ச் 4, 1934)

    ‘நீதி வழங்கும் நாள் வரும்போது, பீடத்தின் மேலிருந்து ஒருவரின் பாபச் செயல்கள் யாவும் உரக்க வாசிக்கப் படும் என்று மாந்தர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்! அவ்விதம் பலமாக முழக்கி ஒருவரின் பாபத்தை உலகுக்கு வெளியிடுபவர் தேவலோக விசாரணை வழக்காளர் அல்லர்! ஆனால் பாபிகளின் அந்தரங்க ஆத்மாவே அவருக்கு அறிவுரை புகட்டும் என்பதை நான் தெளிவாக நம்புகிறேன்! ‘

    ‘கடந்து போன வாழ்க்கையை ஒருவர் மீண்டும் வாழ ஏங்குவது மாபெரும் தவறு! குதிரை திசைபோக்குக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஒருவர் குதிரையைப் பின்புறம் நோக்கிச் சவாரி செய்ய முயல்வது முடியாத செயலாகும் ! ‘

    டேவிட் பார்க்கின்ஸ்.

    நாடக நபர்கள்:

    ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee]

    ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

    ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

    (ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

    ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

    ஏரோதியாஸின் சேடியர், காவலர்

    ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

    சேனைக் காவலர்.

    கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

    நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

    நேரம்:

    அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

    Picture2

     

    காட்சி அமைப்பு:

    ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [புனித நீராட்டி, ஜான்] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

    ***********************

    ஸாலமி: [ஆர்வமுடன்] நான் இதுவரைப் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை! காண வேண்டும் நான் அந்த ஞானியை! யார் போய் அவரை மாடிக்கு அழைத்து வர முடியும் ?

    ஸிரியா வாலிபன்: வேண்டாம் ஸாலமி ! வேண்டாம்! புனித நீராட்டி ஜானை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! உனக்குப் புனித நீராட்டம் தேவை யில்லை! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! அவர் கரத்தால் புனித நீராட வேண்டுவோர், அவரைக் காணலாம்! நீ விரும்பினாலும், அவர் புனித நீரூற்ற மறுத்து உன்னைப் புறக்கணிப்பார்! நீ அவரைப் பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்ட கவர்ச்சியில் நீயும் பாபம் செய்யத் துணிவாய்! அவரைத் தேடி நீ செல்லாதே!

    ஸாலமி: நானவர் முகத்தை ஒருமுறைக் காண வேண்டும்! அவர் வாலிபரா அல்லது ஏரோத் போல் வயோதிகரா என்று அறிய வேண்டும்! அவர் ஓர் அழகான ஆடவரா என்று காண ஆவல் உள்ளது எனக்கு ! திருமணமாகி அவருக்கோர் மனைவி யிருந்தால், அவர் திருமுகத்தைப் பார்க்க மாட்டேன்!

    [கீழே சிறையிலிருந்து மீண்டும் ஜொஹானன் கூக்குரல் உரக்கக் கேட்கிறது]

    ஜொஹானன்: [பலத்த குரலில்] அறிவு கெட்ட மாதே! இது துரோகம்! கட்டிய கணவனின் கழுத்தை நெரித்து விட்டு, மாற்றான் மார்பில் தலை வைக்கும் உனக்கு எப்படித் தூக்கம் வருகிறது ? துரோகிகளே! உங்கள் கை அளிக்கும் உணவைத் தொடமாட்டேன்! உங்கள் கை ஊற்றும் நீரை அருந்த மாட்டேன்! எனக்கும் பெரிய போதகர் இங்கே வரப் போகிறார். உங்களைத் தராசில் வைத்து நிறுக்கப் போகிறார் அவர்! பாவிகளே! புனித நீராட்டுவதற்குப் பதிலாக உம்மைத் தீயால் குளிப்பாட்டப் போகிறார்! அவர் முன்னே வராதீர்! அவர் வருவதற்கு முன்பே துரோகிகளே, எங்காவது ஓடிப் போவீர்!

    ஸாலமி: [ஐயத்துடன், பரபரப்புற்று] யாரைத் திட்டுகிறார் போதகர் ? கட்டிய கணவரின் கழுத்தை நெரித்தவள், யாரவள் ? மாற்றான் மார்பில் தலை வைத்துக் கிடப்பவள், யாரவள் ? ஓ! என் அன்னையைத் திட்டுவது போல் தெரிகிறது! நியாய மற்ற பழிகளை என் அன்னை மீது போடுகிறார்! என் தந்தையின் கழுத்தை என் தாய் நெரிக்க வில்லை! அபாண்டப் பழி அது! என் தாயை ஏனவர் வெறுக்கிறார் ? சொல்லால் அடித்து என் தாயை ஏன் கொல்லாமல் கொல்கிறார்!

    இரண்டாம் காவலன்: உண்மைதான் இளவரசி! போதகர் பழியை மகாராணி மீது போடுவது தவறு! நியாய மற்றது! உங்கள் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்றவன் ஓர் வன்முறைக் கருப்பன்!

    ஸாலமி: கிரேக்க, ரோமானியர், யூதர், எகிப்திய விருந்தினர் முன்பாக, என் தாய் மீது பழிசுமத்தி இழிவு படுத்துவது நியாயமா ?

    [அப்போது அரண்மனைச் சேவகன் வந்து, ஒருவன் ஸாலமியை வணங்குகிறான்]

    அரண்மனைக் காவலன்: இளவரசி! தங்களை ஆடலரங்கு வரும்படி மன்னர் வேண்டிக் கொள்கிறார்.

    ஸிரியா வாலிபன்: இளவரசி! போகாதீர் அங்கே என்று வேண்டுகிறேன்! ஆடலரசி ஆடும் அரங்க மில்லை அது! ஆடு மாடுகள் ஆடும் வன அரங்கு! போகாதீர் அங்கே! போனால் ஆபத்து நேருமென்று தோன்றுகிறது எனக்கு!

    ஸாலமி: [சேவகனைப் பார்த்து] நான் வர விரும்ப வில்லை என்று மன்னருக்கு எடுத்துச் சொல்! போ! நானங்கு வரப் போவதில்லை! [சேவகன் திரும்பிச் செல்கிறான்] ஜான் போதகர் கூன் விழுந்த வயோதிகரா ? அல்லது நெஞ்சம் நிமிர்ந்த வாலிபரா ? உடல் உறுதி பெற்ற மனிதரா ?

     Picture3

     இரண்டாம் காவலன்: ஜொஹானன் முதுகு வளைந்த வயோதிகர் அல்லர்! தலை நரைத்துத் தள்ளாடும் கிழவர் அல்லர்! ஆம், அவர் ஓர் வாலிபர்தான்! உடல் உறுதி மட்டுமில்லை, மன உறுதியும் பெற்றவர்! அவர் மண்டைக்குள்ளே ஓர் அரிய அறிவுக் களஞ்சியம் உள்ளது! பாபிகளைப் பம்பரமாக ஆட்டிப் பாபங்களை நீக்குபவர்! அவரது ஊசிக் கண்கள் யாருடைய உள்ளத்தையும் ஊடுருவிச் சென்று, உண்மைகளைக் குத்தூசி போல் இழுத்து வரும் கூர்மை கொண்டவை!

    ஸாலமி: வாலிபர் என்றால் அந்தப் போதகர் கவர்ச்சியைப் பார்க்க விரும்புகிறேன்.

    ஸிரியா வாலிபன்: இளவரசி! உங்களை மன்னர் அழைக்கிறார். போதகரா ? அல்லது வேந்தரா ? யாரைப் பார்ப்பது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். சிறையில் கிடப்பது செம்மறி ஆடு! ஆனால் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்வது சிங்கம்! இந்த இரண்டில் எது பாதுகாப்பானது என்று நான் சொல்கிறேன். ஆட்டோடு நரகத்தில் அடைபடுவதை விட சிங்கத்துடன் சொர்க்கத்தில் வாழ்வது மேல்! சிங்கம் உங்களுடைய எழிலை ஆராதனை செய்கிறது! ஆடு உங்கள் பாவங்களை ஆழ்ந்து கணக்கெடுத்து, தீக்குளிக்க வைத்து விடும்! மீண்டும் சொல்கிறேன். போதகரைக் காண வேண்டாம் இளவரசி! காலை வாரி விழ வைப்பவர் போதகர்! அழைப்பை ஏற்றுக் கொண்டு ஏரோத் மன்னர் முன் ஆடுங்கள்! உங்கள் காலில் பூக்களை இட்டு பூஜிப்பவர் ஏரோத் மன்னர்!

    ஜொஹானன்: [உரத்த குரலில்] நெறி கெட்ட மாந்தரே! கூத்தடிக்க வேண்டாம்! கும்மாளம் போட வேண்டாம்! குடியும், கொண்டாட்டமும் வேண்டாம்! உங்களை அடித்தவன் கோல் உடைந்து விட்டது! பாம்பு வயிற்றில் பிறந்த பூரான்கள், பறவை யினத்தைக் கொத்திக் தின்னப் போகின்றன! குடித்த வெறியில் மனமாறி அடுத்தவன் மனைவிமேல் காமப்படும் அறிவிலிகளே! உங்களுக்கு அறிவு புகட்ட அதோ வருகிறார் ஒரு மகாத்மா! உங்கள் பாவக் குருதியால் அவர் கால்களைக் கழுவிப் புனிதம் பெறச் செல்லுவீர்!

    ஸாலமி: [மனம் மகிழ்ந்து] என்ன புனிதமான போதனை! என் தாயை அவர் வெறுத்தாலும், பிறரை அவர் நேசிக்கிறார். அந்தப் போதகரை நான் நிச்சயம் காண வேண்டும்! [முதற் காவலனைப் பார்த்து] அழைத்து வா அந்த மகாத்மாவை! கண்குளிரக் காண வேண்டும் அந்த கண்ணியவானை!

    முதற் காவலன்: [மிகுந்த பயத்துடன்] இளவரசி! அப்படிச் செய்தால், ஏரோத் மன்னர் என் தலையை வாளால் அறுத்து விடுவார்! யாரும் போதகருடன் பேசக் கூடாது, யாரும் அவரைத் தொடக் கூடாது என்பது அரசரின் ஆணை! அதை மீறச் சொல்ல வேண்டாம், இளவரசி! [ஸாலமி காலில் விழுகிறான்] என்னை மன்னித்து விடுங்கள்.

    ஸிரியா வாலிபன்: இளவரசி! மன்னர் உத்தரவை மதிக்கும்படி வேண்டுகிறேன். அவரது அழைப்பை ஏற்று விருந்து மாளிகைக்குப் போவதுதான் நல்லது! மன்னர் கட்டளையை மதித்து, போதகரைப் பாராது செல்வது மிகவும் நல்லது! அரசரது கோபத்திலிருந்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்!

    ஸாலமி: அரசருக்குப் பயந்தவர் நீவிர்! எனக்குச் சிறிதும் பயம் கிடையாது! [இரண்டாம் காவலனைப் பார்த்து] நீ போ! நீ போய் அந்த போதகரை அழைத்துவா!

    இரண்டாம் காவலன்: [மண்டியிட்டு] இளவரசி! காலில் விழுந்து வேண்டுகிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது! நாங்கள் உயிரோடும், உடலோடும் வீடு திரும்ப வேண்டும்!

    ஸாலமி: [படியில் பாதி தூரம் இறங்கி, குனிந்து சிறையைக் கண்ணோட்ட மிட்டு] எத்தகைய இருட்டுச் சிறையாக உள்ளது ? அனுதாபப் படுகிறேன்! இந்தக் கருங்குகையில் மிருகம் கூட வாழாது! போதகரை இந்தப் புதைப்பு பூமியிலா அடைப்பது ? [காவலனைப் பார்த்து] உன் செவியில் விழுகிறதா ? போதகரை அந்த குகையிலிருந்து வெளியே அழைத்து வா. அவர் இன்னும் உயிரோடு உள்ளாரா என்று பார்க்க வேண்டும்! அவரது கண்கள் இன்னும் குருடாகாமல் உள்ளனவா என்று காண வேண்டும்! அவரது உடம்பு எலும்புக் கூடாக நடமாடி வருகிறதா வென்று நோக்க வேண்டும்!

     Picture4

    முதற் காவலன்: இளவரசி! போதகரை அழைத்து வந்தால், எங்கள் தலையற்ற முண்டம்தான் இன்று வீடு திரும்பும்! உத்தரவின்றி தனியே நாங்கள் செய்யும் பணி யில்லை இது! அரசர் ஆணையை நாங்கள் மீற முடியாது! மீறவும் கூடாது. சிறைக் கதவைத் திறக்க அனுமதி அளிப்பவர் அரசர். அவரைத் தயவு பண்ணிக் கேளுங்கள்! எங்கள் அற்ப உயிர் உங்கள் கையில் உள்ளது! எங்கள் அற்ப உயிருக்கு சொற்ப ஆயுளைத் தராதீர்!

    ஸாலமி: [ஸிரியா வாலிபனைக் கனிவுடன் பார்த்து] வாலிபனே! என்னை மகிழ்விக்க நீ வீணை மீட்கிறாய். உன் வீணையின் கானம் ஒளிந்திருக்கும் என் பெண்மையை வெளிப்படுத்தி விட்டது! என் கண்கள் மறுபடியும் காதலனைத் தேடுகின்றன! என்னை மகிழ்விக்கப் போதகரை அழைத்து வருவாயா ? உனதினிய வீணை இசைவெள்ளம் காய்ந்து போவதற்குள், அந்த மகாத்மாவை அழைத்து வருவாயா ? எனது காந்த விழிகளுக்கு நீ காத்திருப்பது எனக்குத் தெரியாம லில்லை! எனக்காக அதைச் செய்வாயா ? என் அன்னை போதருக்கு அஞ்சுகிறாள்! என் சித்தப்பா போதகரைக் கண்டு நடுங்கிறார்! அவரைப் போல் நீயும் போதகருக்குப் பயப்படுகிறாயா ? என்னைக் காதலிப்பவன், என்னை வேண்டுபவன் ஒரு வீரனாகத்தான் இருப்பான்! நீ ஒரு மாவீரன் அல்லவா! நீயுமா அரசருக்கு அஞ்சுகிறாய் ? நான் உன்னருகில் உள்ள போது நீ யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை! உன் தலைக்குக் கத்தி வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்! போ, போதகரை அழைத்து வரச் செல்வாயா ?

    ஏரோதியாசின் காவலன்: [நடுங்கிக் கொண்டு] அந்தோ! வேண்டாம் இளவரசி! போதகரை அழைத்து வந்தால், பேராபத்து நிகழக் போவதாய்த் தோன்றுது எனக்கு!

    ஸிரியா வாலிபன்: அரசருக்கு அஞ்ச வில்லை இளவரசி! நான் யாருக்கும் அஞ்சாதவன்! ஆனால் இளவரசிக்கு அஞ்சுகிறேன் நான்! அவளது சுடர்விழிகள் பட்டால் சுடப்பட்டு விழும் ஓர் ஆண் பறவை நான்! அந்தச் சிறைக் கதவை யாரும் திறக்கக் கூடாது என்பது ஏரோதின் கட்டளை! மன்னருக்கு அஞ்சா விட்டாலும், மன்னரின் ஆணைக்குக் கட்டுப் படுபவன் நான்!

    ஸாலமி: மன்னருக்கு அஞ்சாத வாலிபனே! என்னை மகிழ்விக்க நீயிதைச் செய்ய வேண்டும்! நீ மெய்யாக என்னை நேசித்தால் நீயிதைச் செய்ய வேண்டும்! உனக்கு என் வெகுமதி கிடைக்கும்! என்ன வெகுமதி அளிப்பேன் என்பதை நாளை உன்னைத் தனியே சந்திக்கும் போது சொல்வேன்! அங்காடி வழியே மாலையில் நான் போகும் போது, வழி நெடுவே பூக்களை சிந்திச் செல்வேன், உனக்காக! என்னிருப்பிடம் அறிந்து என்னைச் சந்திக்க வா! மறக்காமல் வா, நாளை மாலை!

    ஸிரியா வாலிபன்: இளவரசி! நானிதைச் செய்ய மாட்டேன்! செய்ய மாட்டேன்! செய்யவே மாட்டேன்! ஆனால் உங்களைத் தனியே சந்திக்க ஆவல்! போதகரை அழைத்து வராவிட்டால்,என்னைச் சந்திக்க விரும்புவீரா ?

    Picture5

     ஸாலமி: [அழுத்தமாக] வேலை முதலில், கூலி பின்னால்! பணியை மறுத்தால் கூலியும் நிறுத்தப்படும்! [கனிவுடன்] மன்னருக்கு அஞ்சாத நீ ஒருவன்தான் ஆணையை மீறி அப்பணியைச் செய்ய முடியும் எனக்கு! நிச்சயம் நீ எனக்குச் செய்வாய் என்பதை நான் அறிவேன். நாளை நான் தூக்கு ரதத்தில் முகத்திரை யிட்டுச் செல்லும் போது, நீ உன் வீட்டு வாசல் முன் நில்! நான் முகத்திரை நீக்கி உன்னைப் பார்த்துப் புன்னகை செய்வேன்! பார்! என்னைப் பார்! வாலிபனே! உன்னைப் பார்க்கும் என்னைப் பார்! என் காந்த விழிகளைப் பார்த்துச் சொல்! நீ எனக்காகச் செய்வாய் என்று உன்னிதயம் சொல்கிறது! நீ என் வேண்டுதலை மறுக்கக் கூடாது என்று உன்மனம் எதிர்க்கிறது மெய்யாக!

    ஸிரியா வாலிபன்: [தாளில் எழுதிக் கையெழுத்திட்டு, மூன்றாம் காவலனிடம்] போ! வாயில் காப்போனிடம் காட்டிப் போதகரை மேல் மாடிக்கு அழைத்து வா! மாண்புமிகு இளவரசி மன்றாடி வேண்டுகிறார்! வேறு யாரிடமும் இதைக் காட்டாதே! சீக்கிரம் போ! யாருக்கும் தெரியாமல் அழைத்து வா! இளவரசியின் விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்.

    ஸாலமி: [புன்னகையுடன் ஓடிப் போய்க் கனிவுடன் வாலிபன் கண்ணத்தில் முத்தமிட்டு] நீதான் என் உண்மைக் காதலன்! உயிருக்கு அஞ்சாதவன்! மன்னருக்கு அஞ்சாதவன்! மாவீரன்! நீ என் கனவுகளில் வந்து எனக்கின்பம் அளிப்பாய்! உன் பெயர் என்ன, வாலிபனே! உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.

     

    Picture6

     ஸிரியா வாலிபன்: [பூரிப்படைந்து, கன்னத்தைத் தடவி] வெகுமதி இப்போதே கிடைத்து விட்டது! ஸாலமி நேசிக்கிறாள் என்னை! என் பெயரைக் கேட்கிறாள்! சொல்கிறேன், என் பெயர் நாராபாத்! நாராபாத் ஸாலமியின் காதலன்! நினைக்கும் போதே நெஞ்சில் தேன் ஊறுகிறது! யாரும் இதுவரை என்னை முத்த மிட்ட தில்லை! ஸாலமி! உனக்காக நான் எதையும் செய்வேன்! என் உயிரையும் உனக்காகக் கொடுக்கத் தயார்!

    ஏரோதியாஸின் காவலன்: காரிருள் மேகம் கப்பி வெண்ணிலவு கருநிலவாய்ப் போனது! ஏதோ ஓர் அபாயம் நேரப் போவது எனக்குத் தெரிகிறது! பொன்னிலவு என் கண்களுக்குப் புண்ணிலவாய்த் தோன்றுகிறது!

    வாலிபன் நாராபாத்: அப்படியில்லை நண்பனே! முகத்திரை யிட்ட வெண்ணிலவு திரைநீக்கி என்னை முத்த மிடுகிறது! மேகத்தில் மறைந்தாலும், பொன்னிலவின் ஒளித்திரட்சி குறைவ தில்லை!

    [ஜொஹானன் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்டு மாடி மீது மெதுவாய் ஏறி நடந்து வருகிறார். ஸாலமி பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்குகிறாள்.]

     Picture7

    ஸாலமி: [பயந்து பரிவுடன்] போதகரே! இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டார்! காரிருட் சிறையில் மூடிய உங்கள் கண்களுக்கு ஒளியேறட்டும்! முடமாய்ப் போன உங்கள் கால்கள் விடுதலைப் பூமியில் நடமாடட்டும்! குடிப்பதற்கு ஏதாவது பானம் வேண்டுமா ? உண்பதற்கு ஏதாவது உணவு வேண்டுமா ? கேளுங்கள்.

    ஜொஹானன்: [பரிவோடு ஸாலமியைப் பார்த்து] அன்பைப் பொழியும் மங்கையே! எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை! நான் வேண்டுவது விடுதலை! செய்ய வேண்டிய அருட் பணிகள் எனக்கு அநேகம் உள்ளன! உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார்! தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன! ஒரு குடம் நீரைக் கொண்டு வா! குடித்தது போக எஞ்சியதை நான் என் தலையில் ஊற்றிப் புனித நீராட வேண்டும்! குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன! யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசிய தில்லை! கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா அழைத்து வந்தாய் ? உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் ? உன்னருமைத் தாய் வெறுக்கும் ஒரு வழிப்போக்கன் மீது ஏனம்மா உனக்குப் பரிவும், பாசமும் உண்டாகிறது ?

     Picture8

    (தொடரும்)

    [காட்சி-1, பாகம்-5 அடுத்து வரும்]

    Share
  • வாழும் வழி…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    நடந்ததை நினைத்து வருந்தாமல் – இனி
    நடப்பதில் கவனம் செலுத்தி விடு !
    உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் – நல்ல
    உயரிய பாத்திரம் படைப்பது மேல்
    இடரினைக் கண்டு அஞ்சாது – அதை
    இதய பலத்துடன் எதிர் கொள்ளு !
    இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் – தினம்
    கடமையைச் செய்து உயர்வடைவாய்…..!

    போன “பொழுதுகள்” – திரும்பாது என்றும்
    பொய்களும் நிலைத்து வாழாது !
    மானங்காத்து வாழ்பவரை – இங்கு
    மன்பதை என்றும் மறக்காது !
    தேனாய் வாழ்வை அமைப்பதற்கு – நிதம்
    திடமே வேண்டும் நெஞ்சத்தில்
    வானும் மண்ணும் நம் சொந்தம் – என்று
    வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்…..!

    சாதிபேதம் தொலைத்தே தான் – நல்ல
    சமத்துவம் வளர்த்தல் பணியாகும் !
    நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும்
    நெஞ்சில் அன்பு தனை வளர்த்து
    மேதினிதன்னில் ஒற்றுமையாய் – நல்ல
    மிடுக்காய் வாழ்வது வாழ்வாகும் !
    சாதனை வேண்டும் வாழ்க்கையிலே – வரும்
    சந்ததி வாழ்த்த வாழ்த்திடணும்…..!

     

    Share
  • ஏழு ஸ்வரங்களுக்குள் 

    காவிரி மைந்தன்

    காலச் சக்கரத்தின் பற்கள் வினாக்களால் ஆனவை போலும்.  பிறப்பு முதல் இறப்பு வரை இந்த வினாத் தொடர் நம்மை விடுவதேயில்லை.  கடமை என்கிற காரியங்கள் நடக்கும்.  காலை முதல் இரவு வரை வினாக்களும் விழிக்கின்றன. பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகள் எப்படி பரபரப்பை ஏற்படுத்துகின்றனவே அதைவிட பல மடங்கு மனதில் பதிப்பாகும்.  தினசரி வினாக்கள் எத்தனை? எத்தனை?  விடைதேடி அலைவதற்குத் தானே பொழுதே விடிகிறது!  அன்றைய பிரச்சினையை சமாளிப்பதும் அல்லது சந்திப்பதும் நடக்கும்போதே நாளைய கேள்வி நம்மைத் தாக்கும். என்ன செய்யப்போகிறாய்?  எப்படிச்  செய்யப்போகிறாய்?  உன்னால் முடியுமா? செய்யத்தான் வேண்டுமா?  என்று பல துணைக் கேள்விகளும் மனதிற்குள் ஒன்றன்பின் ஒன்றாய் ஒவ்வொரு நாளும் துள்ளி குதிக்கின்றன. இருதியிட்டுச் சொல்வதும்.. தீர்மானிப்பதும் எப்போதும் இலகுவாக இருப்பதில்லை.  இதனால்தான்,  மனச்சுமைகூடி மனிதன் தடுமாறுகிறான்.

     24-1419408252-balachender66-79

    ஏழே ஏழு ஸ்வரங்கள்தான்.   இதிலிருந்து பிறக்கும் ராகங்கள் பல. அதேபோல் இதயச் சுரங்கத்துள் எத்தனை எத்தனைக் கேள்விகள் எழுகின்றன.. கண்ணதாசனின் ஆழ்மனம் எழுதிய வரிகள் இவை என்றே நேசிக்கிறேன்.  வாழ்க்கையை பக்கம் பக்கம் படித்துப் பார்த்திட இவ்வரிகளை வாசிக்கிறேன்.

    மெல்லிசை மன்னரின் சங்கீத சாகரத்தில் சங்கீத வாணிதிருமதி வாணிஜெயராம் பாடிய பாடலிது.  பாலச்சந்தர் படங்களுக்கு பாடல் எழுதுவது என்பது இனிய அனுபவம் என்று கண்ணதாசன் கனிந்துருகிச் சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    இயக்குனரது பார்வை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் நிரூபித்த தாதா சாஹிப் பால்கே விருது பெற்ற கே.பாலச்சந்தர் .. அமரத்துவம் பெற்றாலும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றாலும் அவரின் பதிவுகள் இந்த பூமியில் நிலைபெறும். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் கற்பனைக்கு எட்டாத கதையமைப்பைக் கொண்டு அதற்கேற்ற இசை.. பாடல்கள் என்று கூட்டி..  நமக்கெல்லாம் புதுமை விருந்தளித்த இயக்குனர் சிகரத்திற்கு .. இந்தப் பாடல் சமர்ப்பணம்…

     62361_286344071491105_1020548492_n

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் –

    இயக்கம் – இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்

    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடல் – கவியரசு கண்ணதாசன்

    திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

    பாடியவர்: வாணி ஜெயராம்

    ஆ……… ஆ………..
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)

    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ…..
    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி – அது
    கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
    கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
    ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
    ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனிதன்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)

    vaanijeyaramஎனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ………
    எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் – நீ
    எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ………
    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்
    அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
    பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க – எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

    http://www.youtube.com/watch?v=csnyfoXugdE

    Share
  • காதல் நாற்பது – 29

    எந்நேரமும் உன் நினைவு !

    jay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    உன்னையே நினைக்கிறேன் !
    மரத்தின் மீது படர்ந்து
    இரட்டைக் கயிறாகப்
    பின்னிடும் கானகக் கொடி போல்,
    உன்னைச் சுற்றி மொட்டு விடும்
    என் எண்ணங்கள் !
    அகண்ட இலைகள் விரிந்து
    விரைவில் கானகம்
    மறையும் பச்சைப் போர்வையால் !

    ஓ என் தென்னை மரமே !
    எண்ணத்தைப் புரிந்து கொள்:
    எனக் கரிய, உன்னத மான,
    உனைத் தவிர்த்த எண்ணம்
    எதுவும் எனக்கில்லை !
    புதுப்பித்துக் கொள்ள
    முடியும் உன் தோற்றத்தை
    நொடிப் பொழுதில் !

    வலுத்த மரம் ஒன்று கிளைகளைக்
    குலுக்கி அடிமரம்
    அமணம் ஆவது போல்,
    உன்னைச் சுற்றிய
    பசுமைப் பட்டை வளையமும்
    படாரென விழுந்து
    வெடித்துச் சிதறும் எத்திசையும் !

    ஏனெனில்
    நானிந்த பூரிப்பு ஆழத்தில்
    காண்ப துன்னை !
    காதில் கேட்ப துன்னை !
    சுவாசிப்பேன் புதிய காற்றை,
    உன் நிழல்
    எல்லைக் குள்ளே !
    அப்போது
    நீ தெரிவ  தில்லை,
    நெருங்கி நான் உன்னை ஒட்டி
    இருப்பதால் !

    ************

    Poem -29

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    I think of thee!–my thoughts do twine and bud
    About thee, as wild vines, about a tree,
    Put out broad leaves, and soon there’s nought to see
    Except the straggling green which hides the wood.
    Yet, O my palm-tree, be it understood

    I will not have my thoughts instead of thee
    Who art dearer, better! rather, instantly
    Renew thy presence. As a strong tree should,
    Rustle thy boughs and set thy trunk all bare,
    And let these bands of greenery which insphere thee
    Drop heavily down,–burst, shattered, everywhere!
    Because, in this deep joy to see and hear thee
    And breathe within thy shadow a new air,
    I do not think of thee–I am too near thee.

    **********

    Share
  • சுகி ரங்கா ரங்கான்னு சொல்லு

    விசாலம்

    “தந்தையே இங்கே வாருங்கள். அழகான ஒன்றை நான் காட்டப்போகிறேன்.”

    “இதோ வருகிறேன் கோதை. அந்த அழகான ஒன்று எது?”

    “இதோ என் தோள் மேல் பாருங்கள்.  அழகான கிளி! நந்தவனத்தில் பறந்து என் தோளில்  வந்து அமர்ந்துவிட்டது.”

    “ஆமாம் மிக அழகான கிளிதான். தோளை அசக்கிவிடு  பறந்து போய்விடும்.”

    “இல்லை தந்தையே அது பறக்காமல் இருக்க வேண்டும் என்று நான் சிலைப்போல் அமர்ந்திருக்கிறேன். அன்பு தந்தையே இந்தக் கிளியை நானே வைத்துக்கொள்கிறேனே! ஆசையாக வளர்க்க விரும்புகிறேன்.”

    “சரி. அப்படியே செய். ஆனால் கூண்டில் அதைப்போட்டு அடைக்காதே. சுதந்திரமாக இருக்கட்டும்.”

    “சரி தந்தையே. இதற்கு நான் என்ன பெயர் சூட்டுவது?”

    “அம்மா கோதை நம் வீட்டிற்கு சுக பிரும்ம ரிஷியே வந்திருக்கிறார். அதனால் சுகர் என்றே பெயர் வை.”

    “தந்தையே அது என் பிரிய தோழியாக ஆக்கிவிடுவேன். அதனால் அதை சுகி என்று அழைக்கிறேன். “

    “சரி கோதை. நான் கோயிலுக்கு போக வேண்டும். அதற்கு பசிக்கப்போகிறது. ஏதாவது பழம் கொடு.”

    கோதையின் அன்பை நினைத்தபடியே அவளது தந்தை பெரியாழ்வார் அங்கிருந்து நகர்ந்தார்.

    “சுகி என் பட்டு சுகி. என்  பெயர்  கோதை. கோதைன்னு சொல்லு. அப்போ  இந்தப்பழம் தின்னக்கொடுப்பேன்.”

    “கோ……க்கோ……. கோதை”

    “ஆஹா அருமை. மிக சரியாக சொன்னாய். இந்தா இனிப்பான மாம்பழம்.”

    “இரு. சற்று பொறு. இன்னொரு சொல்  சொல்லட்டுமா? ரங்கா… ரங்கா… ரங்கா… சொல்லு பார்க்கலாம்.”

    “ர… ங்… கா… ரங்கா…”

    “ஆஹா என் காதில் தேன் வந்து பாயுது. யார் தெரியுமா அந்த  ரங்கா. நான் மணந்துக் கொள்ளப் போகும் மஹா புருஷர்.”

    சுகியும்  எல்லாம் புரிந்தது போல்  கீ கீ என்று சொல்லி ரசித்தது. மறு நாளிலிருந்து செல்லக்கிளிக்கு  பாடம் ஆரம்பமாகியது. பகவானின் நாமங்கள் அதன் வாயில் வர ஆரம்பித்தன. பேசும் பேச்சுக்கள்; புரிய ஆரம்பித்தன. நாளாக நாளாக  அரங்கனின் மேல் உள்ள காதல் அதிகமாகி தன் பிரேமையைத் தெரிவிக்க   குயிலை தூதாக அனுப்புகிறாள். மழை காற்று என்று பலவற்றை தூதாக அனுப்புகிறாள்.

    உணவு பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. எப்பொழுதும் அவர் நினைவே. எங்கும் அவரே  வந்து வந்து மறைகிறார். அவரைப் பார்க்கமுடியாமல் வருந்தி உடல் மெலிந்து போகிறது. சோகப்பதுமையாக அமர்ந்திருக்கிறாள்.

    “கோதை கோதை ஏன் இத்தனை சோகம்?”

    “சுகி  பலரை தூது அனுப்பியும்  என்  ரங்கா  ஒரு செய்தியும் அனுப்பவில்லை. அதுதான்  கவலையாக இருக்கிறது.”

    “என்னை அனுப்பு கோதை. நான் அந்த ரங்கனை கையோடு அழைத்து வருகிறேன் .கவலைப்படாதே.”

    “உனக்கு அந்த ரங்கநாதன் எங்கு இருக்கிறார் என்று தெரியுமா? நீயும் என்னைப்போல் இந்த இடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்கும் போகவில்லை. அவர் இருக்கும் கோயில் மிகப் பெரியது. பிராகாரமே மிகப்பெரிய அளவில் உள்ளது.”

    “என்னால் போக முடியும் கோதை.”

    “உஹூம் நான் விடமாட்டேன். அங்கு உள்ளே செல்ல பலத்த காவல் உண்டு. கட்டுக்காவல்களை மீறி உள்ளே போனால் பிடிபடுவாய். பின் எப்படி தப்பித்து வருவாய்? நீ இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வேன்?”

    “அழாதே கோதை. நான் உன்னுடனே இருக்கிறேன்.”

    நாட்கள் ஓடின. கோதையின் சோகத்தைப் பார்க்க இயலாமல் அவள்  சோகத்தில் மயங்கியிருக்கையில் கிளி அங்கிருந்து பறந்து வந்தது.

    பல இடங்கள் தேடி திருவரங்கம் வந்து சேர்ந்தது. நாலு பக்கமும் கோபுரங்கள். நாலு பக்கங்களும் வாசல்கள்.எங்கு செல்வது? எப்படி செல்வது? சரி அந்த ரங்கநாதனை மனதில் நினைத்து நுழையலாம் என்று எண்ணி  மனதில் தோன்றிய வாசலில் நுழைந்தது. அங்கு கம்பீரமாக கருடாழ்வார் அமர்ந்திருந்தார். அவர் பக்ஷிகளுக்கெல்லாம் ராஜா. உடனே அவர் காலடியில் அப்படியே விழுந்தது.

    அங்கு சமர்ப்பணம் நிகழ்ந்தது. அப்படியே கோதையின் சோக  சித்திரத்தைச் சொல்லி அவள் நிலைமையை எடுத்துக்கூறியது.

    “வணங்குகிறேன் கருடாழ்வாரே. தயவு செய்து என் கோதைக்கு ஏதாவது வழி சொல்லுங்கள். எப்படியும் ஶ்ரீ ரங்கநாதனை அழைத்து வாருங்கள். அப்போதுதான் அவளது முகம் மலரும்.”

    “கவலையை விடு. உன் கோதை தேடுவதற்குள் ஊருக்குச்செல். நான் அரங்கனிடம் இதைப்பற்றி பேசி அவரை அனுப்பி வைக்கிறேன். அங்கு கோதையை மனம் தளராமல் இருக்கச்சொல். நம்பிக்கையுடன் காத்திருக்கச்சொல். இந்தா பழமும் பாலும். இதை உண்டுவிட்டு நல்ல தெம்புடன் வீடு செல்.”

    “கருடாழ்வாரே தங்கள் இந்த உதவிக்கு நான் எப்படி நன்றியைத் தெரிவிக்கபோகிறேன்? சரி போய் வருகிறேன்”    என்று சொல்லி பறந்து வந்தது சுகி.

    “கோதை,  ஏன் உணவு ஒன்றும் உண்ணாமல் வேதனையாக இருக்கிறாய்? நானும் நேற்றைய தினத்திலிருந்து பார்த்து வருகிறேன். என்னிடம் சொல்லு கோதை.”

    “தந்தையே! என் சுகி எங்கு போயிற்று? தாங்கள் கண்டீர்களா?  அதைக் காணாமல் தவிக்கிறேன். அதுதான் என் வேதனைக்குக் காரணம்.”

    “இதோ பார் உன் கிளிக்கு பூரண ஆயுசு. நான் சொல்லி முடிப்பதற்குள்  வந்துவிட்டது பார். இப்போது மகிழ்ச்சிதானே!”

    “அட வந்து விட்டாயா?  என்னிடம் சொல்லாமல் என்னை விட்டு எங்கே சென்றிருந்தாய்? என் செல்லமே! என்னை அழ வைத்துவிட்டாயே!”

    “கோதை நான் உனக்காகத்தான் போயிருந்தேன். பக்ஷிராஜா திரு கருடாழ்வாரைப் பார்த்து உங்கள் நிலைமையைச் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். காரியம் ஜெயம் தான்.”

    “சுகியே எனக்காக இத்தனை சிரமம்  எடுத்து எத்தனை பெரிய வேலையைச் செய்து விட்டு வந்திருக்கிறாய்? நான் உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? கேள் உனக்கு என்ன  வேண்டும்?”

    “கோதை நீ எங்கே இருந்தாலும் நானும் உன்னுடனேயே இருக்க வேண்டும் இதுதான் என் ஆசை, வேண்டுகோள் எல்லாம்.”

    ஒரு வாரம் ஓடியது. அரங்கன் பலரது கனவில் வந்தார். கோதையின் தந்தையின் கனவிலும் வந்தார். பின்னர் பேசினார்.

    “கோதை நான் இருக்கும் திருவரங்கத்திற்கு வரட்டும். நான் அவள் வர முத்துச்சிவிகை  அனுப்புகிறேன். நான் அவளை மணந்துகொள்கிறேன்.”

    சொன்னபடியே முத்துச்சிவிகை வந்தது. முத்துச்சிவிகையில் ஆண்டாள்  மணமகளாக,  அலங்காரமாக  தலையில் அழகிய முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட  கொண்டையுடன்    பட்டுப்பீதாம்பரம் உடுத்திக்கொண்டு  பவனி வந்தாள். அவளுடன்  சுகியும் அமர்ந்து வந்தது. திருவரங்கம் கோயிலும் வந்தது. ஆண்டாள் சிவிகையிலிருந்து  எழுந்து வந்தாள். அவளது வாய் ரங்கா ரங்கா என அழைத்தபடி இருந்தது.அப்படியே உள்ளே கர்ப்பக்கிரகத்திற்குள் சென்றாள். கருவறையில் நுழைந்தாள். பின் அவள் வெளியிலே வரவில்லை.

    கொஞ்சம் நேரம் பார்த்தபடி இருந்த சுகி தன் கோதையைக் காணாமல் தேடியது. பின் அவளைக் காணாமல்  கதறி அழுதது. அங்கேயே வட்டவட்டமாகச் சுற்றியது . கோதை வரவில்லை. அங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த அதிசயத்தைக்கண்டு வியந்துப்போனார்கள்.

    கோதை அரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டாள் என்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இந்த சுகிக்கு இது தெரியவில்லை. அங்கேயே சுற்றிச்சுற்றி வந்து மயங்கி விழுந்தது. கோயில் காப்பாளர்கள் அந்தக்கிளியை எடுத்து ஒரு கூண்டில் வைத்தார்கள். உள்ளே சில பழங்களைப்போட்டுவிட்டு ஒரு மண்டபத்தில் மேற்கூறையில் தொங்க விட்டனர். கிளி மயக்கம் தெளிந்தது. “கோதை நீ எங்கே?

    நீ எங்கே என்னைவிட்டுவிட்டு சென்று விட்டாய்?” என்று அழுதது. பின் “ரங்கா ரங்கா! என்  கோதை எங்கே? என்று சொல்லியபடியே இருந்தது. உணவைத் தொடவே இல்லை. பின் ரங்கா என்றபடியே உயிரை விட்டது. ரங்கநாதன் அதையும் தன்னிடம்  ஐக்கியமாக்கிக்கொண்டார். அங்கு சென்ற சுகி ஆண்டாளுடன் சேர்ந்தது. இன்றும் கிளி இருந்த அந்த இடம் “கிளி  மண்டபம்” என்றே அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில்  இன்றும் ஆண்டாள், ரங்கமன்னாரும் எழுந்தருளி இருக்க  தன்னை அரங்க நாதனுடன் சேர்த்துவைத்த  கருடாழ்வாருக்கு சம ஆசனம் கொடுத்திருக்கிறாள் கோதை பிராட்டி. கிளிக்கு எங்கே இடம் தெரியுமா? முதன் முதலில் அந்தக் கிளி எங்கே வந்து அமர்ந்ததோ அந்தத் தோளின் மீதே தன் உயிர்த்தோழியான சுகிக்கு இடம் கொடுத்து தன்னிடம் எப்போதும் சுகி இருக்கும்படி அமைத்துக்கொண்டாள். இப்போதும் ஒரு இனத்தவர் ஆண்டாளுக்கு திருமாலைக் கைங்கரியத்தில் பச்சை இலைகள் பூக்கள் கொண்டு அழகிய கிளியைச்செய்து அதை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கின்றனர். பின் மறுநாள் மாலைகள் வடபத்ரசாயிக்கு கோயிலுக்குச்சென்று அங்கு பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றன. அப்போது இந்தக் கிளியும் அங்கு சாற்றப்படுகிறது. பின் அதை அன்பளிப்பாக ஒரு சில பக்தர்களுக்கு  அளிக்கப்படுகிறது. இந்தக்கிளி வாடாமல் பல நாட்கள் இருக்கிறதாம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடக்கும் விவாகத்தில் ஆண்டாள் மாலையும், இலைக்கிளியும் நிச்சயம் பங்கு  பெறும்.

    Share
  • புதியதோர் உலகம் செய்வோம்!

    காவிரி மைந்தன்

    BHARATHIDASANபுதுவைதந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதை வரிகள் .. திரைப்படத்திற்காக கையாளப்படும்போது பாடல் வரிகளாக மாறின! இந்தப் பாடலை எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டு முறை பயன்படுத்தியிருக்கிறார்!  ஆம்.. சந்திரோதயம் திரைப்படத்திலும்.. பல்லாண்டு வாழ்க என்னும் திரையோவியத்திலும்.. சந்திரோதயம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட இப்பாடல் பெற்ற வடிவம் வேறு!  பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடிய இப்பாடல் பெற்ற வடிவம் வேறு! ஆக மொத்தம் பாரதிதாசனின் பாடல் ஒன்றிற்கு இசை வடிவங்கள் வெவ்வாறாக அமைந்தபோதும் இரண்டும் வெற்றி பெற்றதை இங்கே குறித்தாக வேண்டும்!

    யுகங்களில் வாழும் கவிஞர்களின் எண்ணங்கள்.. குறுகிய அளவில் இல்லாமல்.. அடுத்தத் தலைமுறைகளையும் எண்ணும் எண்ணமே மிகச் சிறந்தது!  அதுவும் புதிய தலைமுறைக்காக கவிஞரின் நெஞ்சம் பூபாளமிசைத்திருக்கிறது பாருங்கள்! புதியதோர் உலகம் செய்வோம் என்று அவரின் சிந்தனை வீச்சு பற்றி மக்கள் எங்கும் பேச்சு!

    புரட்சியின் விளைவுகளாய் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் பாடலாகிறது! புரட்சித்தலைவர் பாடும் கொள்கை முழக்கத்திற்கு ஊட்டம் கிடைக்கிறது! பொதுவுடைமைக் கொள்கைக்கு ஊட்டம் தரும் உணர்ச்சிமிகு வரிகளால் சமுதாய அக்கறையின் வெளிப்பாடாய் உயர்வுக்கு என்ன வழிகள் என்கிற உத்திகளும் உள்ளடக்கி புதிய உலா வருகிற பாடலாய்.. ஆம்.. விடிவெள்ளிப் பாடலாய்!

    PURATCHIபுதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.

    பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    ‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்!

    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்

     “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
    பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்
    இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இதுஎனதென்றுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்”. – பாரதிதாசன்

    Share
  • கடக்கட்டும் மெட்டு மலரட்டும் மொட்டு..

    கடக்கட்டும் மெட்டு மலரட்டும் மொட்டு..

    நாளுக்கு நாள் மாற்றமாய்
    குரு இடம் பெயர்கிறான்
    ராசி பலனும் பிறழ்கிறது
    மனிதமனம் மாற மறுக்கிறது…

    புது வருடம் ஒளியாய் பிறக்கிறது
    பழம் பஞ்சாங்கம் ஒழிய மறுக்கிறது…மனமேடை
    பழங் காலத்துப் பலாபலன் தெரிந்தும் நடிக்கிறது
    புது வருடத்து ராசிபலன் அறியவும் துடிக்கிறது

    எதிர்கால பாதைக்கு
    தீட்டும் திட்டம் என்றும் தவறில்லை
    புதிர்ராகுகால பூஜைக்கு
    நாட்டும் நாட்டம் இன்றும் தவறவில்லை

    பழம் வருடத்து புதிர்ராகுகால பூஜை
    புது வருடத்து எதிர்கால பாதைக்குப்
    பாலமாகி இழப்பற்ற செழுமைவெள்ளம்
    பாய்ந்ததா? என எண்ணத் தோன்றவில்லை
    பக்குவப்பட்ட மனவானாய் மனிதன்
    பகுத்தறிவுத் தேர்வில் தேறவில்லை…

    கழிந்தவை யாவும் கழிந்தவையாய்
    கசப்பாய் இழப்புகள் தொலைந்தவையாய்
    கடுகாய் பாவங்கள் சுருங்கியவையாய
    கடக்கட்டும் கடக்கட்டும் நடப்பாண்டு மெட்டு…

    கருத்தாய் ஆக்கம் நிறைந்தவராய்
    கற்ற கல்வி வழி நடப்பவராய்
    கடமை நடைகண்ணியம் கொண்டவராய்
    கட்டுப்பாடு கொடைபுண்ணியம் மதிப்பவராய்
    கலங்கா இதயம் கொண்டவராய்
    காவலாகா பஞ்சாங்க ராகுராசி பலனை உடைப்பவராய்
    காலத்திற்கும் வாழ எண்ணுகவே இக்கணம் தொட்டு
    காப்பரணாய் மலரட்டும் புத்தாண்டு மொட்டு…!!

    … நாகினி[download id=”098765″]

    Share
  • மார்கழி மலர்கள் – சிரித்து வாழ்வேன்!

    இசைக்கவி ரமணன்

    images (1)

    நம்புவோர்க்கு விளக்கங்கள் தேவையில்லை
    நம்பார்க்கு விளக்கத்தால் பயனே இல்லை
    அன்பிருந்தால் ஐயங்கள் வாழ்வதில்லை
    அன்பிலையம் சேர்ந்துவிட்டால் வாழ்வே இல்லை
    தும்பியெலாம் தேவாரம் பாடிக் கொண்டு
    துள்ளிவரும் மயிலைவளர் தூய அன்பே!
    நம்பியுன்னை நாடிவந்தேன் ! நீயும் என்னை
    நம்புகின்றாய் என்றுநன்கு நம்பி வாழ்வேன்!

    பொங்குவதும் மங்குவதும் நெஞ்சியல்பு
    பூரணனே! காத்தருளல் நின்னியல்பு
    தங்காமல் பறப்பதுதான் வாழ்வியல்பு
    தாள்பொருந்தித் தங்கிடவே தழைத்த வாய்ப்பு
    எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தும்
    என்னைக்கரை சேர்க்கின்ற கருணையாலே
    பொங்குகடல் ஓரத்தே புடைத்திருக்கும்
    பூரிப்பே! உன்னடியே பொருந்திக் கொண்டேன்!

    மந்தைவெளி அடுத்திருக்கும் மயிலாப்பூரில்
    மயில்நாணும் ஒயிலோடு மலர்ந்திருக்கும்
    சிந்தைவளர் கற்பகத்தின் சிரிப்பைக் கண்டு
    சிலிர்த்திருக்கும் காபாலி! சிரத்தைத் தாழ்த்தி
    வந்தனைகள் பலவிதமாய் வாழ்த்துகின்றேன்
    வாழ்வெல்லாம் நீயென்றே வாழுகின்றேன்
    தந்திக்கும் கந்தனுக்கும் தந்தையான
    தான் தோன்றி! நீயே என் தலைவனென்பேன்!

    சிவன்மகனைக் கவலைகள் சீந்தலாமோ?
    சீயென்றே இகழ்ந்தென்ன? புகழ்ந்தாலென்ன?
    சிவனே! உன் சித்தமென்றே சிரிக்க வேண்டும்
    சிரம்தாழ்த்தி நன்றிசொல்லி வாழ்த்த வேண்டும்
    தவமுனிவோர் மிகவுவந்து தங்கி வாழும்
    தமிழோங்கும் நன்மயிலை தழைக்கும் கோவே
    அவன்சொன்னான் இவள்சொன்னாள் என்றில்லாமல்
    சிவன்சொன்னான் என்றுசெல்வேன் தெருவினூடே!

    கல்வியெதும் ஒருதுளியும் கற்கவில்லை
    கடுகளவும் கையிலொரு திறமையில்லை
    நல்லழகு முகமுமில்லை ; செல்வமில்லை
    நல்லவர்கள் மெச்சுமெந்த நலமுமில்லை
    பல்விதமாய் உனைப்பாடும் சொல்லும், கொஞ்சும்
    பசுமழலை நெஞ்சுமல்லால் பாவி எனக்கு
    வல்லவனே! நீயேதும் வழங்கவில்லை
    வழங்கியதை வழங்கிவிட்டே வருவேன் ஐயே!

    ஊர்புகழும் ; பார்புகழும் ; உள்வீட்டுக்குள்
    உற்றவர்கள் நமைக்காறி உமிழக் கூடும்
    தேர்நடந்து தேர்நடந்து தெரு நொறுங்கிப்
    போனாலும் தெருவுக்கோர் போக்கும் உண்டோ!
    சீர்குலவும் மயிலையிலே சிந்தை யெங்கும்
    சிறகடிக்கும் பரஞானக் குயிலே! உன்றன்
    சீரடியின் ஓரடிக்கீழ் சிரசே ஒற்றைச்
    சிறுதெருவாய் விரித்தபடிச் சிரித்து வாழ்வேன்!

    ரமணன்
    23.12.2014 / செவ்வாய் /9.40

    Share