Blog

  • பயிலரங்கு – அழைப்பிதழ்

    அன்புடையீர் வணக்கம்

    கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது .அது சமயம் கலை ஆர்வலர்கள் பங்கு பற்றி பலன் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறேன் .

    இவண்

    மு ஹரிகிருஷ்ணன்

    குறிப்பு;

    பயிற்சிக்கட்டணம்- ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மாத்திரம்

    முன்பதிவு செய்ய கடைசி நாள் 30-9-2013

    நிகழ்ச்சி நிரல்

    நாள் – 4-10-2013

    இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

    காலை – 9 மணிக்கு

    பயிலரங்கு துவக்கி வைப்பவர் – முனைவர் – சே . ராமானுஜம்

    அமர்வு -1 -காலை -10 மணி

    தமிழ் தொல்கலைகள் – ஓர் அறிமுகம்

    முனைவர் – மு . இராமசாமி

    முனைவர் -நா -ராமச்சந்திரன்

    முனைவர் -தனஞ்செயன்

    எழுத்தாளர் – தவசிக்கருப்புசாமி

    நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை

    அமர்வு -2- மாலை – 3- மணிக்கு

    தொல்கலைகள் – பயில்வதின் அவசியமும் தேவையும் .

    முனைவர் -செ .இரவீந்திரன்

    அமர்வு -3- மாலை – 4- மணிக்கு

    நவீனத் தமிழ் இலக்கியமும்- நாட்டார் கலைகளும் – ஓர் ஓட்டுறவை வேண்டி- உரையாடல்

    எழுத்தாளர் – நாஞ்சில் நாடன்

    எழுத்தாளர் -பெருமாள் முருகன்

    எழுத்தாளர் -இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

    எழுத்தாளர் -கரிகாலன்

    எழுத்தாளர் -தமிழ் செல்வி

    எழுத்தாளர் -சக்தி அருளானந்தம்

    அமர்வு -4- மாலை -6 மணிக்கு கொங்கு மண்டல கூத்திசை

    வழங்குபவர் – அம்மாப்பேட்டை செல்லப்பன்

    அமர்வு -5-இரவு 7 – மணிக்கு

    நல்லதங்காள் -கட்டப்பொம்மலாட்டம்

    கொங்குப்பட்டி கோவிந்தராஜா குழுவினர்

    நாள் – 5-10-2013

    நாள் – 5-10-2013

    இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

    அமர்வு -1-காலை – 10 மணிக்கு

    பாவை உருவாக்கம் ( மரப்பாவை )

    துவக்கி வைப்பவர் – ஹேமநாதன் – உதவி இயக்குனர் -கலை பண்பாட்டுத்துறை -சேலம்

    சிற்பி மாணிக்கம்

    நிகழ்த்துமுறை – கட்டப்பொம்மலாட்டம்

    கொங்குப்பட்டி கோவிந்தராஜா

    நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை

    அமர்வு -2-மாலை – 3 மணிக்கு

    பாவை உருவாக்கம் & நிகழ்த்துமுறை -( தோற்பாவை )

    அம்மாபேட்டை கணேசன்

    அமர்வு -3 – இரவு 7 மணி

    லங்காதகனம் – தோற்பாவை கூத்து

    அம்மாபேட்டை கணேசன் – களரி

    6-10-2013

    அமர்வு -1 -காலை – 10 மணி

    நிகழ்த்து கலைஞர்களுடன் ஓர் சந்திப்பு

    துவக்கிவைப்பவர் -பியுஷ் மானுஷ் – சுற்றுசூழல் செயற்பாட்டாளர் மற்றும் நிர்வாகி – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

    கூலிப்பட்டி சுப்பிரமணி

    எகாபுரம் சுப்ரு

    மாணிககம்பட்டி கணேசன்

    வடிவேல்

    அம்மாபேட்டை கணேசன்

    பகல் 12 மணி

    பயிலரங்கு நிறைவு

    தொடர்புக்கு – ர .தனபால் -09677520060- 09894605371

    Share
  • பேராண்மை!

    பவள சங்கரி

    “ஏண்ணா, கோவில் நடையைத் திறக்க நாழியாயிடுத்துன்னு பறந்துண்டு ஓடினேள்…. என்ன ஆச்சு, திரும்ப வந்துட்டேள்”

    “என்னத்தச் சொல்ல.. வழக்கம் போலத்தான். அந்தப் பக்கத்தாத்துல புதுசா குடி வந்திருக்காளே அந்த தில்லிக்காரா.. அந்தப் பொண்ணு காலங்கார்த்தாலே வந்து நிக்கிறா.. நல்ல காரியமா போறச்சே இவோ மூஞ்சியில முழிச்சுட்டுப் போக சங்கடமா இருக்கு. கொஞ்சம் தூத்தம் கொண்டாடி. குடிச்சிப்பிட்டு கிளம்பறேன்”

    “ஏண்ணா நம்மாத்தை விட்டு வெளியில் படியிறங்கறா வரையிலத்தான் சகுனம் எல்லாம் பார்க்க முடியும். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிச்சப்பறம் யார், யாரோ வருவா.. போவா…  அதெல்லாம் சகுனத்தடையா நினைச்சா எப்படிண்ணா..”

    “அப்படியில்லைடி.. புதுசா எதிர்த்தாத்துக்கு வந்திருக்கவா, அந்தப் பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்கு கரெக்டா எதிர்ல வந்துட்றா.. அவளைப் பார்த்துட்டு அப்படியே கிளம்ப மனசு ஒப்பலைடி நேக்கு. நல்ல காரியம்  பண்றதுக்கு கிளம்பும்போது இப்படி வெறுங்கழுத்தோடவும், பாழும் நெற்றியோடவும் இருப்பவளைப் பார்த்துட்டுக் கிளம்ப மனசு என்ன்மோ பண்றது.. அதான் வந்து, தண்ணி குடிச்சுப்பிட்டு, சித்த நாழி கழிச்சி புறப்படலாம்னு வந்தேன்”

    “அந்தப் பொண்ணு நம்ம பக்கத்துல இருக்கிற பள்ளியில டீச்சரா வேலை மாத்தி வந்திருக்காண்ணா.. குடும்பத்தோட வந்திருக்காங்க. அவ்ளுக்கு ஒரு பையனும் இருக்கான். ஐந்து வயசு இருக்கும். அவனையும் கூட்டிண்டு ஏதேதோ கிளாஸ், அப்பறம் பள்ளிக்கூடம் போவா.. தினமும் நீங்களும் அதே நேரத்துல கிளம்பறேள். இனிமேல் அரை மணி முன்னாலேயே கிளம்புங்கோ. அவ்ளோதானே. அதுக்கு ஏன் சலிச்சுக்கறேள்”

    “ ம்ம்.. அதுவும் சரிதான்.. சரி நான் வறேன்..”

    அருணா, அன்று சமையல் எல்லாம் முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் புதிதாகக் குடி வந்திருக்கும் அவர்கள் வீட்டில் போய் பேச்சுக் கொடுக்கலாம் என்று கிளம்பினாள். என்ன இருந்தாலும் தன் கணவர் இப்படி மூஞ்சியில் அடித்தாற்போல படக்கென்று திரும்பி உள்ளே வந்ததாலே, அந்தப் பெண் மனசு என்ன பாடு பட்டிருக்கும் பாவம் என்று வேதனையாக இருந்தது. அன்று மார்கழி மாத, ஆண்டாள் உற்சவத்திற்காக கோவிலில்  கொடுத்த அக்கார அடிசல் பிரசாதம் இருந்ததை, ஒரு தொண்ணையில் எடுத்துக் கொண்டு, அதன் மேல் மற்றொரு தொண்ணையால் மூடிக்கொண்டு கிளம்பினாள்..

    அவர்கள் வீட்டு வாசலை நெருங்கும்போதே வெளி நடையில் உட்கார்ந்து ’இந்து’ நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,

    “வாங்க, வாங்கம்மா.. “ என்று இன்முகத்துடன் வரவேற்றார். உள்ளே எட்டிப் பார்த்து ’பிரமீளா’, என்று குரல் கொடுக்கவும்,

    “இதோ வ்றேன் மாமா” என்ற மெல்லிய குரல் வந்த திசையை ஆர்வமாகத் திரும்பிப் பார்த்தாள், அருணா. ஓரிரு முறை பள்ளிக்குச் செல்லும் தன் மாட்டுப் பெண்ணை வழியனுப்ப வாசல்வரை அந்த அம்மா வரும்போது பார்த்திருக்கிறாள். அதைத் தவிர அதிகமாக வெளியே பார்த்ததில்லை.

    “வாங்க.. வாங்கம்மா” என்று முகம் மலர வரவேற்றவர் அதற்குமேல் அதிகம் பேசவில்லை. அருணாவும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம் ஒரே மகள் பற்றி சொல்லிவிட்டு, அதற்குமேல் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த அம்மாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், தான் வந்த விசயத்தை மெல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டுவந்த பிரசாதத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு, மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

    “நாங்க பரம்பரையா இதே ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அர்ச்சகரா சேவகம் பண்ணிண்டிருக்கோம். அவர் கொஞ்சம் சகுனம் பார்ப்பவர். அதான் சில வேளைகளில் உங்க மாட்டுப் பெண்ணைப் பார்த்துவிட்டுக் கிளம்ப முடியாமல், திரும்ப வீட்டிற்குள் வந்துடுவார். அந்தப் பெண் மனசு எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்னு நேக்குப் புரியறது. அவராண்டையும் அதைப்பத்தி சொல்லியிருக்கேன். ஆனாலும், அவர்  தன்னையறியாமல் ஒவ்வொரு முறையும்  அப்படியே நடந்துக்கறார். உங்க மாட்டுப் பொண்ணுகிட்ட அதை பெரிசா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லுங்கோ. எல்லாம் பகவான் கிருபை. நாம என்ன செய்ய முடியும். எந்தப் பொண்ணுதான் இந்தக் கோலத்தை விரும்பி ஏத்துப்போ.. என்னமோ மனசு சங்கடமா இருந்துச்சு. இப்ப பாரத்தை இறக்கி வச்சாப்பல இருக்கு. நான் வரேன்.. எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எங்காத்துக்கு வாங்கோ” என்று சொல்லிவிட்டு அதிகம் வாய் திறந்து பேசாத அந்த அம்மாவிற்கு, தான் இவ்வளவு நேரம் பேசியது ஏதாவது புரிந்ததா இல்லையா என்றே தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே வந்துவிட்டாள். ஆனால் அன்று அவள் பேசிய விசயம் அவர்களுக்கு நன்றாகவேப் புரிந்திருந்தது என்பது அவர்களின் நடவடிக்கையில் தெரிந்தது. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை தன் கணவன் கிளம்பும் நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை.

    “அருணா.. இங்க வாம்மா.. எதிர்த்தாத்துல யாரும் இல்லையா.. அவாளுக்கு ஏதோ கொரியர் வந்திருக்கு. அவா நம்மளாண்ட கொடுக்கச் சொல்லியிருக்காளாம்.  உன்கிட்ட ஏதாவது  சொல்லிட்டுப் போனாளா அவா…?”

    “ஆமாண்ணா, அவா எல்லாரும் தில்லியில ஏதோ விழாவாம். அதுக்குப் போயிருக்காண்ணா. கொரியர் வந்தா வாங்கி வைக்கச் சொல்லியிருக்கா. இன்னும் ஒரு வாரம் ஆகுமாம் திரும்பி வர்றதுக்கு”

    அன்று மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தபோது எதிர்த்த வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பார்த்து அவர்கள் ஊரிலிருந்து வந்துவிட்டது தெரிந்தது.

    “அருணா.. எதிர்த்தாத்துக்காராளுக்கு ஒரு கொரியர் வந்ததே. அவா வந்துட்டா போலயிருக்கே. அதைக் கொடுத்திட்டியோ?”

    “இல்லண்ணா மதியம்தான் வந்திருப்பாங்க போல. இனிமேதான் கொண்டுபோய் கொடுக்கணும். “

    “சரி, கொடு நானே கொடுத்துட்டு வறேன் என்று வாங்கிக் கொண்டு சென்றார். சென்றவர் அரை மணி நேரமாக வரவில்லையே. அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லையே என்று யோசிக்கும் போதே, மளமளவென உள்ளே வந்தவர் தன் அருகில் வந்து, ஒன்றும் பேசாமல் தரதரவென கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, எதிர் வீடு  நோக்கிச்  செல்பவரின் செயல் எதுவுமே புரியாமல் பின்னாலேயே சென்றாள். நேரே உள்ளே அழைத்துச் சென்றவர் அங்கு ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பெரியவரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு, தன்னையும் விழுந்து வணங்கச் சொன்னதன் காரணம் ஏதும் புரியாவிட்டாலும், பெரியவரை வணங்குவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை என்றே எண்ணி தானும் சற்றும் தாமதியாமல் விழுந்து வணங்கினாள். ஆனால் எவர் காலிலும் சட்டென விழத் தயங்கும் தன் கணவனின் போக்குதான் அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவையனைத்தும் அவளுக்கு அந்த விசயத்தை தன் கணவன் மூலமாக அறிந்து கொள்ளும் வரைதான்……. அவர் அங்கு சென்ற போது நடந்ததைப் பற்றி சொன்ன விசயம் இதுதான்….

    “வாங்க.. வாங்க. நானே உங்களை வந்து சந்திக்கணும்னு இருந்தேன். எங்க வீட்டுப் பெண்ணால உங்களுக்கு சில சங்கடம்னு சொன்னாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துக்கலாம். டெல்லியில என் மகனுக்கு ஒரு பாராட்டு விழா வச்சிருந்தாங்க. அதுக்காகப் போயிட்டு வந்தோம். அதான் கொரியரை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லியிருந்தேன். சிரமத்திற்கு மன்னிக்கணும். வந்ததிலிருந்து ஒரே கால்வலி. அதான் வந்து வாங்க முடியல”

    “பரவாயில்லைங்க. கால்ல என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாமா?”

    “அதுங்களா, செயற்கைக் கால் பொருத்தியிருக்கேன். வயசாகுதில்லையா, டிராவல் பண்ணினா வலி அதிகமாயிடுது” என்று சொல்லி, காலைக் காண்பித்தார். ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனிடம் பெருமை பொங்க,

    ”1962ம் ஆண்டில் இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லைப் பிரச்சனையினால் நடந்த போரில், இந்தியப் படையை முன்னின்று நடத்திச் செல்லும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த யுத்தத்தில் ஒரு கால் போனதால் செயற்கைக் கால் பொருத்தியிருக்கேன” என்றார் சர்வ சாதாரணமாக.

    அவர்மீது இருந்த மரியாதை அதிகமாக இருக்கையின் விளிம்பிற்கு நகர்ந்து வந்த ராமச்சந்திரன், “மகனுக்கு ஏதோ பாராட்டுவிழா என்றீர்களே” என்று ஆர்வமாகக் கேட்டான்.

    தன் மகனைப் பற்றிக் கேட்டவுடன், கண்களில் மின்னல் தீப்பொறியாய் பிரகாசிக்க, பெருமை பொங்க,  ” சிங்கம் போல என் ஒரே மகன் வீரேந்திரன். நம் இந்திய இராணுவத்தின் கமாண்டரா பணிபுரிந்து கொண்டிருந்தான். கார்கில் போரில் அவனுடைய பங்கும் இருந்தது. கார்கிலில் முதன்முதலில் நம் நாட்டு தேசியக் கொடியை நட்டது வீரேந்திரன் தான்! அதற்குப் பிறகு பீகார்ல நடந்த நக்சலைட் தீவிரவாதிகளுக்கு எதிரான  போராட்டத்திற்கு தலைமை தாங்கிச் சென்றபோது, அங்கு நடந்த போரில் தன்னுடைய இன்னுயிரை இழக்க வேண்டிவந்தது. அந்த இறுதி நேரத்திலேயும், தம் ஆயுளை முழுமையா நாட்டிற்கு அர்ப்பணிக்க முடியலையே, அதற்குள்ளாக இறப்பு வந்துவிட்டதேன்னு வேதனைப்பட்டானாம் என் சிங்கக்குட்டி. தான் பெற்ற குழந்தையைக்கூட சரியாத் தூக்கி கொஞ்ச முடியலயேங்கற வேதனையைவிட நாட்டிற்குத் தன்னுடைய சேவையை முழுமையா அர்ப்பணிக்க முடியலையேன்னு நொந்து போனதோட, தன் மகனையும் இராணுவப் பள்ளியில் சேர்க்கணும்னு சொல்லியிருக்கான். என் பேரன் பரத்தும், என் மகனுக்குக் கொஞ்சமும் சளைத்தவன் இல்லை. அத்தனை சூட்டிப்பு. அத்தனை தேசபக்தி. அப்படியே அப்பாவைக் கொண்டு பிறந்திருந்தான். பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருக்கும்போது, எதிரிகளின் தாக்குதலால், பல உயிர்களைக் காக்கும் பொருட்டு தம் இன்னுயிரைக் கொடுத்தவன். தன்னுடைய  குழந்தைக்கு இரண்டு வயசாக இருக்கும் போதுதான் அவன் கடைசியாப் பார்த்தது. தம் மகனை இராணுவத்தின் ஒரு உயர் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் பேரனுடைய தீராத ஆசை. அதை நிறைவேத்த வேணும்னுதான் ஆண்டவ்ன் என்னை இன்னும் வச்சிருக்கான் போல. பேரனை விரைவில் டேராடூனில் உள்ள இராணுவப் பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்”

    இதைச் சொல்லும்போது அந்தப் பெரியவரின் முகத்தில் துளியும் அச்சமோ, வேதனையோ இல்லை. மாறாக தாய்நாட்டிற்காக, பிறந்த மண்ணிற்காகத் தங்கள் கடமையைச் செவ்வனே செய்கிறோம் என்ற பெருமிதம்தான் தெரிந்தது.

    ராமச்சந்திரனின் உள்ளத்தில் சொல்லொணா பலவிதமான எண்ணங்கள் சூழ்ந்துகொண்டு இருக்கையில் உட்காரவும் முடியாமல் எழுந்தவன்,  செய்வதறியாமல் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து அந்தப் பெரியவரின் கால்களில் விழுந்தபோது பாரதமாதாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது போன்றதொரு உணர்வில் புளங்காகிதம் அடைய அவர் கைகளைப் பிடித்து தம் கண்களில் ஒற்றிக் கொண்டபோது, ஏற்பட்ட பரவசம் சாட்சாத் அந்தப் பெருமாளையேத் தீண்டிய இன்பம் பெற்றது போல உணர்ந்தான்..

    Share
  • நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

     

    ஜோதிர்லதா கிரிஜா

     

    கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும்
    தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்!
    பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும்
    தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர்.

    குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே,
    உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த் துறந்திட்டேன்:
    கடும்பசியில் குடும்பத்தார் கலாங்காதி ருந்திடவே
    அயர்வின்றி அலுவலகம் பலஏறி இறங்கிட்டேன்.

    எனைஈன்ற தந்தைதாய் எந்தையின் தந்தைதாய்
    உடன்பிறந்த தங்கை-தம்பி இவரன்றி எழுவராவர்;
    எனைஎன்றும் சோற்றுக்கிவர் எதிர்நோக்கி நின்றவராய்க்
    கடன்படவே வைத்திட்டார் – எனையன்றிக் காப்பரெவர்!

    பாதியாய் இளைத்திட்டேன் ஏறிப் பல வாசற்படி;
    இறுதியாய்க் கிடைத்ததொரு சிறுவேலை தகுதிப்படி:
    ஊதியம் போதாமல் வீதிபல உலவிட்டேன்,
    குருதிநிறம் குன்றிடவே பகுதிநேரம் உழைத்திட்டேன்.

    என்னிரு கைகளாலே எண்ணிறந்த பணிசெய்தும்,
    சம்பளம் போதவில்லை; சங்கடம் பலவாக,
    பன்னிரு வயிறுகளைப் பராம ரிக்கவேண்டிப்
    பம்பரமாய்ச் சுழன்றிட்டேன், பணமொன்றே குறியாக!

    அழகனாம் எனைக்காணும் அலுவலக அணங்குகளின்
    அகல்விழிகள் ஆர்வத்தால் அகன்றிட்ட போதெல்லாம்,
    விழிகளைத் தாழ்த்திடுவேன், வீணாசை என்பதுடன்,
    பகல்கனவு கண்பதனால் பயனிலை என்பதாலும்!

    தங்கைகள் வரிசையிலே தாலிபெற நிற்கையிலே,
    தமையனவன் குமையலாமோ துணைதேடும் ஏக்கத்தில்?
    என்கைகள் பாடுபட்டு என்னதான் சேமித்தாலும்,
    அமையவில்லை துணையவர்க்கு வரன்விலைதன் ஏற்றத்தால்.

    பெண்களின் திருமனங்கள் ஐந்தாட்டுத் திட்டங்கள்!
    மூவர்தம் திருமணங்கள் முடிப்பதற்குள் மூப்புற்றேன்;
    கண்களின் கீழ்ப்புறத்தே வந்தன கரு வட்டங்கள்;
    ஆவலுடன் ஆசைகளும் அற்றுப்போய் அலுப்புற்றேன்.
    கன்னத்து எலும்புகளும் காதோர நரைமுடியும்
    முன்புறத்து வழுக்கையுமே முடங்கிட்ட முதியோனின்
    சின்னத்தைச் செத்தி யென்னைச் சேதாரப் படுத்தியதால்,
    என்புறத்தே பெண்களிந்நாள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

    கலியாணச் சந்தையிலே கன்னி மட்டும் நிற்பதில்லை:
    கடந்தநாள் காளைஎனைப் போன்றோரும் நிற்பதுண்டு:
    மலிவான மாப்பிள்ளைமார் மலியும் நாள் வருகையிலே,
    முடிந்தகதை தொடர்ந்திடவே முத்தான வாய்ப்புண்டு.

    பெண்களில்தான் பிறர்தமக்காய்ப் பெருந்தியாகம் புரிந்திடுவோர்
    உண்டென்று உரைக்கின்ற திவ்வுலகம் முழுமையுமே;
    எங்களிலும் எனையொத்தோர் எண்ணற்றோர் அறிந்திருவீர்!
    விண்டுரைத்தேன் கண்டுகொள்வீர் அவர்தமது அழுகையுமே.

     

    நன்றி: அமுத சுரபி

     

     

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம்! (பகுதி 1)

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சமயமும் அறிவியலும் :

    சமயம் வேறு ; அறிவியல் வேறு! பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து இது. ஆனால்,சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை அறிவியல் ; அது போலவே சமயமும் அறிவியலைச் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. என்றாலும், அறிவியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கின்றனர்.

    இரண்டும் தம்முள் முரண்பட்டவை என்ற கருத்து 19 -ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்று இருந்தது. இதனை ‘Conflict thesis’ என்பர். ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கவில்லை! சமயம் சொல்வதை எல்லாம் அறிவியல் உறுதிப்படுத்த வேண்டும் என்றோ அறிவியல் கூறுகளைச் சமயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ கட்டாயமில்லை. இவை இரண்டும் இணையாகச் செல்லும் இரு கோடுகள் ; என்றும் எங்குமே இணையாதவை. இது ‘Independance’ என அழைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. அதாவது, இவை இரண்டுக்கும் பொதுப் பண்புகள் உள ; மதத்தில் இருக்கும் கருத்துகள் அறிவியலில் உண்டு ; அறிவியல் கூறும் கருத்துகள் சில, சமயத்தில் உள்ளன. இரண்டின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான் : உண்மையைத் தேடிக் கண்டறிவது.

    “உண்மையா? அது என்ன?” – கேட்டவன் பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilatus). இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உரோமைச் சக்கரவர்த்தி சார்பாகப் பாலத்தீன நாட்டை ஆண்டவன். ஏசு பிரானை விசாரிக்கும் பொது இக்கேள்வியை எழுப்புகிறான். (பைபிள் – யோவான் – அருளப்பர்- நற்செய்தி அதிகாரம் 18 : திருவசனம் 38). ஆனால் அவனுக்கு முந்திய காலத்திலும் சரி இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் சரி அக்கேள்விக்கு விடைதான் கிடைத்தபாடில்லை! ஏனெனில் உண்மை சார்புடையது. இடம் காலத்தைச் சார்ந்திருப்பது.

    காட்டாக, இப்போது இந்தியாவில் மணி காலை 11.30 என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இருந்து பிரான்சுக்குத் தொலைபேசியில் உரையாடும் ஒருவர் ‘மணி என்ன?’ என்று கேட்கிறார். பிரான்சில் இருப்பவர், ‘இங்கு, மணி இப்போது காலை 8.00!’ என்கிறார்! இவ்விரண்டு நேரங்களில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான்- எனவே காலம் இடத்தைப் பொருத்து உண்மை அமைகிறது. சமயங்களுக்கும் அவற்றில் இடம் பெறும் கதைகளுக்கும் இது பொருந்தும்.

    முழுமுதல் கடவுள் சிவன் எனச் சைவம் கூறும். ‘அடி, முடி தேடிய படலத்தில் பிரமன், திருமாலை விட உயர்ந்தவன் சிவனே என்று உணர்த்தப்படுகிறது. உண்மை இது எனக் கொள்வோம். வைணவத்தில் வைணவப் புராணக் கதையில் இது பொய்யாகிறது! வரங் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப் பத்மாசுரன் ஓடி வர, வரங் கொடுத்த சிவனைக் காப்பாற்ற திருமால் மோகினி அவதாரம் எடுத்து வரவேண்டி இருந்தது. இவ்விரண்டு கதைகளில் எது உண்மை? சைவக் களங்களில் முன்னது உண்மையானது ; வைணவச் சமயத்தில் பின்னதுதான் உண்மை! சரி, சமயங்கள் சொல்லும் இறைவன் உருவம் அற்றவனா? (‘ஒரு நாமம் ஓருருவம் இலார்க்கு’) உருவம் பெற்றவனா? (‘ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமா’ !) எது உண்மை? சமயங்களில்தான் இப்படிக் குழப்பங்கள் ; அறிவியலில் எப்படி?

    17-18 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் அறிஞர் சர் ஐசக் நியுட்டன் ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர். 1704 -இல் இவர் optiks என்றோர் ஆராய்ச்சி நூல் எழுதினார். அதில் அவர் ஒளி, துகள்களாக உள்ளது, அது நேர்க் கோட்டில் பயணம் செய்கிறது என்று நிறுவினார். பெரிய அறிவியல் மேதை அல்லவா, ஆகவே அவர் கூற்றை 18 -ஆம் நூற்றாண்டு உண்மை என ஏற்றுக்கொண்டது. Robert Hooke (1635-1703), Christiaan Huygens (1629-1695) போன்றோர் ஒளிக்கு ‘அலை வடிவக் கொள்கையை’ (wave theory) ஏற்கனவே வகுத்துத் தந்திருந்தனர். அதனால் நியுட்டன் கருத்து உண்மை அல்ல என்று மெல்ல, மெல்ல மறைந்தது; காலக் காற்றில் கரைந்தது. ‘அலை’ கொள்கையே உண்மை என அறிவியல் அறிவித்தது. இவை இரண்டில் எது உண்மை? இருபதாம் நூற்றாண்டு மலர்ந்த போது Max Planck, Albert Einstein, Arthur Holly Compton…போன்றோரின் ஆய்வுகளால் ஒளி சில சமயம் துகளாகவும் சில போழ்து அலையாகவும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், 19 ஆம் நூற்றாண்டிலேயே James Clerk Maxwell, Heinrich Hertz என்னும் அறிவியல் அறிஞர்கள் ஒளி வெறும் மின்காந்தக் கதிர்களே (elctromagnetic radiation) என நிறுவினர். இப்போது சொல்லுங்கள் ஒளி என்பது என்ன? துகளா? அலையா? துகள் -அலையா? மின்காந்தக் கதிரா? இவற்றுள் எது உண்மை?

    இப்படி அலசிப் பார்த்தால், உண்மை என்பது மாய மானாகத் துள்ளி ஓடிகொண்டே இருகிறதே தவிர எட்டிப் பிடிக்கவோ கட்டிப் போடவோ முடியவில்லையே! இருப்பினும் இந்த மாய மானைத்தான் சமயமும் அறிவியலும் துரத்திகொண்டே இருக்கின்றன.

    சமயம், உண்மையின் கொடுமுடியான இறைவனை அடையத் தேடுகிறது! அறிவியலோ இயற்கையின் இரகசியங்களைத் தேடி ஓடுகிறது. எனவே சமயத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒற்றுமை ‘தேடல்’தான்.

    ஆற்றலுக்கும் பொருளுக்கும் உள்ள பிணைப்பைப் புகழ் பெற்ற தம் சமன்பாட்டால் (E= mC2 )நிறுவிய மாமேதை ஐன்ஸ்டீன்

    ‘சமயம் இல்லா அறிவியல் முடம்
    அறிவியல் இல்லா சமயம் குருடு’ என்கிறார்.
    (‘Science without Religion is lame ;
    Religion without science is blind’ ).

    அப்படி என்றால் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று உதவி செய்தால் முது சூரியர் இளஞ்சூரியர் என்ற இரட்டைப் புலவர்களைப் போல நலமாக உலவலாமே! இதனால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் அல்லது சமயத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டு பண்ணலாம்! ; ஒன்றில் காணப்படும் கருத்து மற்றதில் இருக்கும், இது கூறும் கருத்தை அது உறுதிப்படுத்தக் கூடும்…என்பதை மட்டும் நம் கருத்தில் கொள்வோம். இக்கால அறிவியல் கூறும் கருத்துகளை அக்காலச் சமயம் ஒன்று தனக்கே உரிய முறையில் கூறுகிறது ; அக்காலச் சமயம் சொல்லும் கருத்துகளை இக்கால அறிவியல் உறுதிப்படுத்துகிறது ! வியப்புதான், இல்லையா! அந்தச் சமயம் எது? அது கூறும் கருத்துகள் எவை? அவற்றை இக்கால அறிவியல் எப்படி உறுதிப்படுத்துகிறது? இவை பற்றித்தான் இங்கே காணப் போகிறோம்!

    ___________________________________________________________________.

    Share
  • மகாபாரத முத்துக்கள் – பகுதி 4

    புவனேஷ்வர்

    பூரிசிரவஸ் வதம்- நிறைவுப்பகுதி:

    முன்கதைச் சுருக்கம்:
    சாத்யகியைக் காக்க, எதிர்பாராத விதமாக தனது வலது கை அருச்சுனனால் வெட்டப்பட்டதை கண்ட பூரிசிரவஸ் அதிர்ச்சி உற்றான். அடுத்து சோகமும் இகழ்ச்சியும் ஊறிய மொழிகளை அவன் அருச்சுனனுக்கு சொல்லத் தொடங்கினான். இனி பார்ப்போம்.
    +++++

    “குந்தி மைந்தனே! இரக்கமற்ற ஒரு காரியத்தை நீ செய்து விட்டாயே! நான் உன்னோடு போர் செய்யாத போது, எனக்கு பின்னாலிருந்து என் கையை வெட்டி விட்டாய். உன்னைக்கேட்கிறேன், இதைப்பற்றி தர்மராஜா யுதிஷ்டிரனிடம் என்ன சொல்வாய்? “வேறு யாருடனோ யுத்தம் செய்து கொண்டிருந்த பூரிசிரவசை நான் பாணத்தால் அடித்தேன்”” என்று சொல்வாயா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாய்? இந்த மாதிரி ஆயுதப்ப்ரயோகத்தை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் அர்ஜுனா? இந்திரன் சொல்லிக்கொடுத்தானா? ருத்ரர் சொல்லிக்கொடுத்தாரா? இல்லை அந்த துரோணரா? அன்றி ஒருவேளை, கிருபரா? யார் சொல்லிக் கொடுத்தது?

    இந்த உலகத்தில் மற்ற எல்லாரையும் விட யுத்த நீதி அறிந்தவன் நீ. அப்புறம் ஏன் அர்ஜுனா, உன்னோடு யுத்தம் செய்யாத ஒருத்தான் கையை அவன் அறியாமல் வெட்டினாய்? அஜாக்ரதையாய் உள்ளவன், பயந்து விட்டவன், தேரை இழந்தவன், கருணை காட்டுமாறு இறைஞ்சுபவன், யுத்தத்தில் செயலறு நிலைக்கு தள்ளப்பட்டவன் ஆகியோரை தர்மம் அறிந்த க்ஷத்ரியர்கள் தாக்குவதில்லை. பின் ஏன், அருச்சுனா, இந்த மாதிரி, உன் கீர்த்திக்கும் தகுதிக்கும் நினைத்துக்கூட பார்க்க முடியாத, ஒரு கீழ்மகன் மட்டுமே செய்யும் இழிந்த காரியத்தை செய்தாய்? உலகால் போற்றப்படும் செயற்கரிய செயலை சான்றோர்கள் விளையாட்டுப்போல எளிதில் செய்து முடிப்பர். ஆனால் அப்பேர்ப்பட்ட சான்றோரும் பழிக்கு அஞ்சுவர். உலகம் இகழும் இழி செயல்களை செய்தல் அவர்க்கு இயலாத காரியம். ஒரு மனிதன் யாருடன் ஒட்டி உறவாடுகிரானோ, அவன் குணங்களை தானும் அடைகிறான். இதை நான் உன்னில் காண்கிறேன், பார்த்தா. ராஜ வம்சத்தில், அதுவும் குரு வம்சத்தில் பிறந்து, இது வரை நடத்தையில் களங்கமில்லாமல், உயரிய விரத நியமங்கள் பூண்டு புகழுடன் இருந்த நீ, இன்று க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டாய். நீயாக இந்த மாதிரி செயலை செய்திருக்கவே மாட்டாய். எனக்கென்னவோ, வருஷ்ணி குலத்து வீரனுக்காக (சாத்யகிக்காக) நீ செய்த இந்த மூர்க்கத்தனம் இந்த வாசுதேவன் சொல்லித்தான் நீ செய்திருக்க வேண்டும் எனப்படுகின்றது. இப்படியாம்மபட்ட வீரச்செயலை செய்ய உனக்கு தானாக எங்கே தோன்றியிருக்கப்போகிறது? இந்த புன்மதியாளன் கிருஷ்ணனுடைய யோசனையைக் கேட்கும் அவன் நண்பர் குழாம் தவிர வேறு யார் தன்னோடு யுத்தம் செய்யாதவனை அடிப்பார்கள்?

    வ்ருஷ்ணிகளும் அந்தகர்களும் கெட்டுப்போன க்ஷத்ரியர்கள். சதா தீய செயல்கள் இயற்றும் கெடுமதியாளர்கள். தீயநடத்தை இவர்களுக்கு ஒரு போதை போல ஒட்டிக்கொண்டு விட்டது. நீ ஏன் அர்ஜுனா, போயும் போயும் இந்த துன்மதியாளரை உனக்கு முன்னுதாரணமாக கொள்கிறாய்?”

    இவ்வாறு பூரிசிரவஸால் யுத்த அரங்கத்தில் இகழப்பட்ட பார்த்தன் பூரிசிரவசை பார்த்து, “அரசே! முதுமையால் தங்கள் அறிவும் தளர்ச்சி உற்றது போலும். பொருளற்ற தங்கள் பேசினால் இதைத் தான் தெரிந்து கொள்கிறேன். என்னையும் ஹ்ருஷீகேசனையும் நன்கு அறிந்தவரான தாங்கள், எங்களை நன்கு அறிந்தும் எப்படி எங்களை இகழ்கிரீர்கள்? யுத்தநீதிகளையும் தர்ம சாஸ்திரங்களையும் அறிந்த நான் ஒருபோதும் பாபகாரியத்தை செய்யமாட்டேன். இது தங்களுக்கு தெரிந்தாலும் என்னை திட்டுகிறீர்கள். நண்பர்களும், படைகளும், உறவினர்களும் உதவிக்கு பின்தொடர்ந்து புடைசூழ, அவர்கள் பலத்தையும் நம்பியல்லவோ க்ஷத்ரியர்கள் சத்ருவுடன் யுத்தம் செய்கிறார்கள்? பின்தொடரும் வீரர்களும் முன்னே செல்லும் வீரர்களின் வலிமையை நம்பியல்லவோ சண்டை செய்கிறார்கள்? அப்படி இருக்கும் பொழுது, எங்கள் நன்மைக்காக தனது அரிய உயிரையும் கொடுக்க துணிந்து போராடும் எனது சிஷ்யனும், தோழனும், உறவினனுமான சாத்யகியை நான் ஏன் பாதுகாக்கக்கூடாது? யாராலும் ஜெயிக்க முடியாத இந்த சாத்யகி யுத்தத்தில் எனது வலக்கை ஆவான். கோழைகளுக்கு பயம் தரும் யுத்தத்தில், உண்மையான வீரன் சுயநலமாக தன்னை மட்டும் பாதுகாத்துக்கொள்வதில்லை. தன்னைக்காக்கவும், தனக்கு உதவவும் தன் பின்னே வரும் மற்ற வீரர்களையும் அவன் பாதுகாக்க வேண்டும். (யுத்தத்தில் தான் மட்டும் காயப்படாமல் வீடு சேரும் ஆண்மகன் இகழப்படுகிறான்). இப்படி வீரர்கள் ஒருவரை ஒருவர் காப்பதால் அங்கே மொத்தத்தில் அரசன் காக்கப்படுகிறான். ஜயிக்கப்பட்டு நிராயுதபாணியாக்கப்பட்ட சாத்யகி உங்களால் கொல்லப்படுவதை அமைதியாக நான் வேடிக்கை பார்த்திருந்தால் அந்த கொலைபாவம் என் தலையில் தான் விடிந்திருக்கும். அரசே, அப்படி இருக்க, நான் சாத்யகியை காப்பாற்றியது குறித்து தாங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? “வேறு ஒருத்தனுடன் போர் செய்யும் பொது உன்னால் நான் அங்கபங்கம் செய்யப்பட்டேன்” என்று குற்றம் சாட்டுகிறீர். அது தவறு. யானைகளும் ரதங்களும் குதிரைகளும் சிம்மநாதங்களும் நிறைந்த இந்த கடல் போன்ற இந்த சத்ரு சேனையின் நடுவில் கவசம் அணிந்து தேரேறி வில் பிடித்து நாணேற்றி நான் யுத்தம் பண்ணுகிறேன்.

    அது போல, நண்பர்களும் சத்ருக்களும் கலந்த இந்த கூட்டத்தில் போராடும் சாத்யகியை எப்படி உம் ஒருவனுடன் மட்டும் யுத்தம் செய்வதாக தாங்கள் கருதலாம்? பல வீரர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்த சாத்யகி களைத்திருந்தான். ஆயுதங்களால் காயங்கள் பல பட்ட அவ்வீரன் மனச்சோர்வும் உற்றிருந்தான். ஆந்த சமயத்தில் தாங்கள் அவனை அறைகூவி அழைத்தீர்கள், வெற்றியும் அடைந்தீர்கள். நிராயுதபாணியாக தங்கள் காலடியில் கிடந்த அந்த வீரனின் தலையை வெட்டி ஏறிய தாங்கள் முயல, அவனை நான் காத்தேன். அதை நான் எப்படி சும்மா வேடிக்கை பார்த்திருக்க முடியும்? யுத்தத்தில் சுற்றும் முற்றும் நடப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்த தாங்கள் இவ்விஷயத்தில் தங்களையே தான் நொந்துகொள்ள வேண்டும்.. எனது இடத்தில் தாங்கள் இருந்தால் தாங்கள் என்ன செய்திருப்பீர்கள் அரசே?” என்றான்.

    இதைக்கேட்டதும் யூபஸ்தம்பத்தை தன் கொடியில் உடைய பூரிசிரவஸ் வெட்கினான். சாத்யகியை விட்டு விட்டு, பிரயோபவேசம் (வடக்கிருத்தல்) பண்ணி பிராணத்த்யாகம் செய்ய உத்தேசித்தான். சாத்யகியை விட்டு விட்டு, மகா தர்மவானான பூரிசிரவஸ், தனது இடக்கையால் தரையில் அம்புகளைப் பாயலாகப் பரப்பி, பிரம்மத்தினை த்யானித்து, யோக நிஷ்டனாக அதில் அமர்ந்தான். புலன்களை ஒவ்வொன்றாக உரிய தேவதைகளிடம் நாட்டி மௌனமானான். கண்களை சூரியன் மேல் நாட்டி, ஹ்ருதயத்தை சந்திரனிடம் நாட்டி, உபநிஷத் மகாவாக்யத்தை ஸ்மரித்து, ஓம் எனும் பிரணவத்தை உள்ளுக்குள் நிலை நிறுத்தி, சமாதி நிலையில் உடலை விடும் நோக்கத்தோடு யோக நிஷ்டனாக, மெளனமாக அமர்ந்தான்.

    அங்கிருந்த சேனாவீரர்கள் அனைவரும் அவனை புகழ்ந்து துதித்தனர். கிருஷ்ணனையும் அருச்சுனனையும் இகழத் துவங்கினர். எல்லோராலும் இகழப்பட்டாலும் அந்த இரு வீரர்களும் (அருச்சுனனும் கிருஷ்ணனும்) எந்த கடும் சொல்லையும் பேசாமல் இருந்தனர். அதே போல எல்லாராலும் புகழப் பட்டாலும் பூரிசிரவஸ் ஆனந்திக்கவில்லை. இன்ப துன்பத்துக்கு அப்பாற்ப்பட்ட ஒரு மேனிலையை அவன் அடைந்திருந்தான்.

    எல்லாரும் தூற்றுவதைக் கேட்ட பல்குணன், மேலும் ஏச்சுக்களை பொறுக்க இயலாதவனாகி (அபிமன்யுவை நினைத்தும், வீரர்களின் ஏச்சுக்களைக் கேட்டும்) அளவில்லா சோகத்துடன் அமைதியாகப் பேசலுற்றான். “பூரிசிரவசே! அரசே! காண்டீபத்தின் பாணங்களின் எல்லைக்குட்பட்ட சமர்க்களத்தில் எங்களைச் சேர்ந்த எந்த வீரனையும் ஒரு எதிரி கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்ற எனது சபதம் உலகறிந்தது. இங்குள்ள அரசர்கள் அனைவரும் அதை அறிவர். இது அறிந்தும், நீங்கள் என்னை இகழ்வது தகாது. தருமத்தை சரியாகப் புரிந்துணராதோர் பிறரை விமர்சிப்பது தகாது. பூரிசிரவசே, நிராயுதபாணியான சாத்யகியை யுத்த தருமத்துக்குப் புறம்பாக, வாளால் தாங்கள் கொல்ல முயன்ற போது தங்கள் கரத்தை நான் பின்னால் இருந்து வெட்டியது தரும விரோதம் ஆகாது. (இங்கே என்னை இகழும்) தருமம் தெரிந்த எந்த நேர்மையான க்ஷத்ரியன் அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை புகழ்வான்? பதினாறு வயது பூர்த்தி ஆகாத சிறுவன், தேர் இழந்து, வில் இழந்து, ஆயுதங்கள் தீர்ந்து, கவசம் உடைந்து, களைத்து இருந்த வேளையில் அபிமன்யு ஆறு மகாரதர்களால் பின்பக்கத்தில் இருந்தும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான். என்னை இகழும் தர்மம் அறிந்த வீரர்களில் யார் அதை புகழ்வார்கள் அப்பனே?” என்றான் அருச்சுனன், பூரிசிரவசைப் பார்த்து.

    புத்திர சோகத்தோடு அருச்சுனன் பணிவுடன் சொன்ன ஆழ்ந்த பொருள் பொதிந்த அந்த வார்த்தைகளை கேட்ட பூரிசிரவஸ் மறுமொழி எதுவும் சொல்லவில்லை. வெட்கத்தில் தலை குனிந்து தரையைத் தொட்டான். அவ்வளவே. ஒன்றும் பேசவில்லை.

    அவனது அந்த நிலையை கண்ட பார்த்தன் “பூரிசிரவசே, தருமராஜர் மேலும், பீமன் மேலும், நகுல சகாதேவர்கள் மீதும் நான் வைத்துள்ள அளவு பாசம் உங்கள்மீதும் வைத்துள்ளேன். நானும் கிருஷ்ணனும் சொல்கிறோம், ஐயனே, தருமவான்களுக்குரிய உலகங்களுக்கு நீர் ஏகுவீராக. அடைக்கலம் என்று வந்த புறாவுக்காக தன் தசையையே அரிந்தளித்த வள்ளல் சிபிச் சக்ரவர்த்தி வாழும் உலகங்களுக்கு நீரும் ஏகுவீர்” என்றான்.

    வாசுதேவனும் “பூரிசிரவசே, இடையறாது யாகங்களும் அக்னிஹோத்திரமும் நியமம் காத்து செய்து வந்த தருமவானே, நீர் தாமதம் இன்றி பிரம்மா முதலிய தேவரும் விரும்பும் எனது ஒளிபடைத்த வைகுண்டத்துக்கு செல்வீராக. எனக்கு சமானமாக, கருடனால் சுமக்கப் பட்டு, நீர் வைகுண்டம் சேர்வீராக” என்றான்.

    இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் சாத்யகி களைத்துப் போய் கிடந்தான். கண்ணன் பேசி முடிக்கையில் அவன் எழுந்தான். கண் விழித்துப் பார்த்தான். அவமானத்துக்கு பழி வாங்கும் ஆத்திரத்துடன் வாளை உருவி, பூரிசிரவசின் வாழ்நாளை முடிக்க தீர்மானித்துப் பாய்ந்தான். ஐம்புலன்களையும் அடக்கி, துதிக்கை வெட்டப் பெற்ற யானை போல, அருச்சுனனால் பாதி கொல்லப்பட்டு, யோகத்தில் அமர்ந்த அரசனை கொல்ல விரைந்த சாத்யகியை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். “ஐயோ இந்த அதர்மம் வேண்டாம்! வேண்டாம்” என பாண்டவர் படையே கூக்குரலிட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும், பீமனும், யுதாமன்யுவும், உத்தமௌஜனும் பெருங்குரலில் அவனை “இது தருமமில்லை” என்று தடுத்தனர். கௌரவர் சேனையும் “ஐயோ” என அலறியது.

    அஸ்வத்தாமனும், கிருபரும், கர்ணனும், அவன் மகன் வருஷசேனனும், ஜயத்ரதனும் “வேண்டாம்” என தடுத்தனர். இதையெல்லாம் கேட்டும் லட்சியமே பண்ணாமல், யோக நிஷ்டையில் பிரம்மத்தை த்யானித்து அமர்ந்திருந்த பூரிசிரவசின் சிரஸை தனது கத்தியால் சாத்யகி செத்த பாம்பை அடிப்பது போல வெட்டித் தள்ளினான்.

    சேனா வழக்கப்படி பாண்டவ வீரர்கள் சாத்யகியை பாராட்டவில்லை. சித்தர்களும் சாரணர்களும் இருபக்க சேனாவீரர்களும் பூரிசிரவசையும், அவன் வாழ்நாளில் புரிந்த எண்ணிறந்த தானங்களையும் யாகங்களையும் அறச்செயல்களையும் போற்றி கொண்டாடினர்.

    கௌரவர்கள் தங்களுக்குள் கசமுசா எனப் பேசத் துவங்கினர். “இது வருஷ்ணி குல சாத்யகியின் தவறல்ல. முன்பே விதிக்கப்பட்டது நடந்து விட்டது. அதனால் நாம் கோபப் படக் கூடாது. கோபமே துக்கத்துக்கு காரணம். சாத்யகி தான் பூரிசிரவசை வதைக்க வேண்டும் என்று அவன் விதி இருந்தால் நாம் என்ன செய்ய இயலும்? பிரம்மா எழுதிய எழுத்தின் படி பூரிசிரவசின் யமன் சாத்யகி என்று இருக்கையில் இது சரியா தவறா என்று நாம் விவாதிப்பதில் பயனில்லை………”

    இதைக் கேட்ட சாத்யகி கடுங்கோபத்துடன் “பாபிகளே! பசுத்தோல் போர்த்திய புலி போல தருமம் பேசும் மூடர்களே! இப்போது தருமவான்களைப் போல தருமம் பேசுகிறீர்கள். நல்லது. ஆனால், சௌபத்ரன் (அபிமன்யு) கொல்லப்பட்ட போது நேற்று ஆனந்தக் கூத்தாடியது நீங்கள் தானே? அப்போது எங்கே போயிற்று உங்கள் தர்மம்? என்னை எவன் காலால் உதைக்கிறானோ அவன் சந்நியாசி ஆனாலும் அவனை வதைப்பேன் எனபது எனது சபதம். யுத்தத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே நான் செத்து விட்டதாக நினைத்தது உங்கள் குற்றம். பூரிசிரவசை நான் கொன்றது தருமமே. இன்னும் சொல்லப்போனால் இந்த பார்த்தன், என் மேல் உள்ள அன்பாலும், தன் சபதத்தை காக்கும் பொருட்டும், இவன் கையை வெட்டி, எனக்குக் கிடைக்க வேண்டிய பெருமையில் பாதியை கிடைக்க விடாமல் செய்து விட்டான்! விதிக்கப்பட்டது நடக்கும். வலியது விதி. நான் என்ன பாப்பம் செய்தேன்? முன்பே ராமாயணத்தில் வால்மீகி பாடினாரே, “வானரமே, பெண்களைக் கொல்லக் கூடாது என்று நீ சொல்கிறாய், ஆனால் எதிரிகளுக்கு துன்பம் தரும் செயலை வீரர்கள் எந்தக் காலத்திலும் உறுதிகொண்டு செய்ய வேண்டும்”. (பின் குறிப்பு காண்க).

    சாத்யகியின் இந்த வார்த்தைகளைக் கெட்டு அங்கே இருந்த யாரும் – பாண்டவரும் கௌரவர்களும் – எதுவும் பேசவில்லை. ஆனால் மனதுக்குள் பூரிசிரவசை மெச்சினார்கள். சாத்யகியை மனதுக்குள் இகழ்ந்தார்கள். அங்கிருந்த ஒரு வீரன் கூட, ரிஷியைப் போன்ற பூரிசிரவசின் வதத்தை பாராட்டவில்லை. வெட்டப்பட்ட பூரிசிரவசின் கருத்த மயிரும் சிவந்த கண்களும் கொண்ட தலை, அஸ்வமேத யாகத்தில் காணப்படும் குதிரையின் தலை போல, அழகில் சற்றும் குறையாமல் ஜொலித்தது. யுத்தத்தில் வீரமரணம் அடைந்த மாவீரனும் தர்மாத்மாவுமான வள்ளல் பூரிசிரவஸ், அழியும் தேகத்தை போர்க்களத்தில் உகுத்து, அழியாப் புகழுடம்பை உலகில் நாட்டி, புண்ணியச் செயல்களால் தான் சம்பாதித்த தனது ஜோதிமயமான வடிவத்தோடு காண்போர் கண்கள் கூசும் வண்ணம், ரிஷிகளாலும் சித்தர்களாலும் தேவர்களாலும் போற்றிக் கொண்டாடப்பெற்று பிரம்மலோகம் ஏகினான்.

    பின் குறிப்பு:

    சாத்யகி சொன்ன வால்மீகி பாடிய சுலோகம் இடம்பெறும் இடம்: வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டம் – சர்க்கம் 81 – ஸ்லோகம் 28 (6-81-28)

    न हन्तव्याः स्त्रियश्चेति यद्ब्रवीषि प्लवङ्गम ||
    पीडा करममित्राणां यत्स्यात्कर्तव्यमेत तत् |

    ந ஹந்தவ்யா ஸ்த்ரியஸ்சேதி யத்ப்ரவீஷி ப்ளவங்கம|

    பீடா கரமமித்ரானாம் யத்ஸ்யாத் கர்தவ்யமேத தத்||

    “ஏ தாவும் வானரமே (ப்ளவங்கம), பெண் கொலை கூடாது என்று நீ சொல்லுவது உண்மைதான். ஆனாலும் மித்திரர் அல்லாதோரை – எதிரிகளைப் பீடிக்கும் காரியங்களை கட்டாயம் முயன்று செய்ய வேண்டும்”

    இதில் இருந்து வால்மீகி ராமாயணம் கட்டுக் கதை அல்ல என்று புலன் ஆகிறது. மகாபாரதத்தில் வால்மீகிக்கு மேற்கோள்/reference வருகிறது என்றால் ராம சரித்திரம் அநாதி காலமாக வழக்கில் இருந்து வந்திருக்கின்றது என்று தானே அர்த்தம்? மகாபாரதத்தில் ராமாயணமே முழுதாக வரும். மார்க்கண்டேயர் தருமனுக்கு, அவனை விட கஷ்டப்பட்ட ராஜாக்கள் உண்டு என்று ஒரு சமயம் தேற்றுவார். அப்போது ராமாயணம் சொல்லுவார். இருந்தாலும், வால்மீகி ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகத்துக்கு மேற்கோள் வருவது இந்த இடத்தில் தான். சாத்யகி எந்த அளவுக்கு கல்வி அறிவு பெற்றவன் என்பதும் இங்கு விளங்கும். சாத்யகியே இவ்வளவு படித்திருந்தால் பாண்டவர்களும் கண்ணனும் துரோணரும் பீஷ்மரும் கிருபரும் எவ்வளவு அறிவு உடையவர்களாக இருந்திருப்பார்கள் எனபது விளங்கும். அவ்வளவு அறிவு இருந்தும், அதர்மத்துக்குத் துணை போனதால் அவர்கள் எவ்வாறு தோற்றார்கள் என்பதும் விளங்கும்.

    பூரிசிரவஸ் வதம் முற்றிற்று.

    அடுத்த வாரம் அடுத்த பதிவில் மகாபாரதத்தில் வேறு ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • தொலைத்ததும்.. கிடைத்ததும்..2

    ஜெயஸ்ரீ ஷங்கர் 

     

    என்னாச்சுடி மலரு……? ஷீலா, தானிருந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள்.

    முள்ளு குத்திருச்சு, லேசா வலிச்சுச்சு.. அவ்வளவு தான்…வேற ஒண்ணுமில்ல…மலர் சொல்லும்போது ஷீலாவின் ஆளு….பாண்டியன் ஜன்னல் பக்கமாக வந்து நின்று இவளைப் பார்த்து சிரித்துவிட்டு, இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவுடன் …. “ஷ்…ஷ்…மலர்விழி,  அந்தப் பிள்ளை .ஷீலாவை கூப்பிடு.” என்கிறான்.

    இவள் திரும்பி வேறு யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள், ஏய்…ஷீலா உன் ஆளு..இங்கன வந்து நின்னு உன்னிய கூப்பிடுது..என்னான்னு கேளு.

    ஷீலா வாயெல்லாம் பல்லாக அவனைப் பார்த்து சிரித்தபடியே ஜன்னலருகில் போகிறாள்.சிறிது நேரம் பேசிவிட்டு, மலர் இருக்கும் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக தன் இடம் நோக்கி செல்கிறாள்.

    ஏமாற்றமடைந்த மலர்விழி, ம்ம்…..எதுனா நல்ல விஷயமாயிருக்கும். அதான் சிலுப்பிகிட்டு போறா. அவன், சொல்லாதேன்னு சொல்லியிருப்பான். இப்ப அவளுக்கு காதலன் தான் கண் கண்ட தெய்வம்….நான் யாரு? என்று மனத்துக்குள் நினைத்தவள். நானும் மெல்ல அந்த மேனேஜர் சொன்னாரே வேற இடம் ..பாக்கிங் செய்யிற இடத்துக்கு மாத்தி விட்டுர்றேன்ண்டு அங்கனக்குள்ள கேட்டுக்கிட்டு போயிறலாம். இங்கன இந்த சாவுக் கிராக்கி வந்து வந்து நின்னு தொல்லை பண்ணிக்கிட்டே கெடக்கும் போல.. வீணா எனக்கு எதுக்கு இவுங்க  வம்பு? சடக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவளாக காரியத்தில் கவனமாயிருந்தாள் மலர்.

    நேரம் செல்லச் செல்ல வேலைகள் முடிந்ததற்கான அறிகுறிகள் ஆரம்பமாயின. ஒவ்வொருவராக கிளம்பி கணக்குப் பிள்ளை டேபிளின் முன்பு கூடி நின்றனர்.  மெல்ல மெல்ல குசு குசு வென்ற பேச்சுக்கள் நேரமாக நேரமாக மீன் மார்க்கெட் லெவலுக்கு சத்தம்  எகிறுவதைப் கேட்டதும், மேனஜர் அங்கு வந்து நின்று கொண்டார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….அம்புட்டு பேரும் ஒண்ணாக் குமியாதீங்கன்னு சொன்னாக் கேட்க மாட்டீங்களா? காதை  வாடகைக்கு விட்டிருக்கீங்களா?…இல்லாட்டி களட்டி வெச்சிட்டீங்களா….? க்யூல வாங்க…..க்யூல வாங்க…என்றபடி கையை ஆட்டியபடியே அதட்டிக் கொண்டிருந்தான்.

    அவனது கண்கள் தப்பாமல் மலரை ‘மொய்த்த பார்வையில்’ அவளுக்குப் ‘பலானது’ புரிந்தது.

    சீ…..நாயே….உன்  மோப்பத்துக்கு வெக்கிறேண்டி ஆப்பு…! என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். முதல் வாரச் சம்பளம் வாங்கற சந்தொஷத்தையே கெடுக்கிறான்..தூத்தேரி..!

    இன்னிக்கு சம்பள நாளில்லியா ..அதான் அதுக்கு மூக்குல வேர்த்துப் போச்சு என் ஆளுக்கு..அதாண்டி மலரு..பாண்டியனுக்கு. பார்த்தியா….ஓடியாந்திருச்சி …இப்படித்தான் ஓடியாந்துரும்…வாங்குற துட்டில் கொஞ்சமாச்சும் வெட்டனும் அதுக்கும்..இல்லாங்காட்டி எகிறி எகிறி ஏசும்.

    உனக்கு இது தேவையாடி..? அவிங்கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கிறே.

    தவிக்கலைடி …செலசமயம் அதும் மருவாதி தான். எனக்குண்டு ஒரு ஆள் இருக்குற நெனப்பு…அது ஒரு கிக்குதான்டி. அதெல்லாம் உனக்கு இப்பத் தெரியாது…உனக்கும்……ஷீலா குசு குசு வென்று மலரின் காதில் கிசு கிசுத்தாள்.

    செருப்படி…! என்று பல்லைக் கடித்துக் கொண்டே தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு ஷீலாவைப் பார்த்து முறைத்து விட்டு க்யூவில் சேர்ந்து நின்று கொண்டாள். என்கிட்டே இது மாதிரி ஒரு ஆள் மாட்டினா…அம்புட்டுத்தான்…..சும்மாப் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்….! பொட்டச்சி சம்பாத்தியத்துல வக்கணையா என்ன வாழ்வு வேண்டிக்கெடக்கு கசமாலத்துக்கு. நான் மட்டும் டீச்சர் ஆனால், அம்புட்டுப் பசங்களுக்கும் எப்பிடி வாழனும்னு சொல்லித் தரோணம்..அம்புட்டுப் பிள்ளைகளையும் நல்லாப் பெரிய பெரிய படிப்பு படிங்கடாண்டு சொல்லிக் கொடுப்பேன்.  வளரும் போதே நல்லதைச் சொல்லிக் கொடுத்துப்புட்டா இந்த மாதிரி புல்லுருவிங்க வளராது. எதை எதையோ நினைத்தபடியே கியூவுக்கு அருகில் வந்தவள்…மனக் கணக்கு போட ஆரம்பித்தாள் .”ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வீதம் ஒரு வாரத்துக்கு எவ்வளவு?” முந்நூற ஏழாலப் பெருக்கினா எம்புட்டு வரும்….விரல்களை ஒவ்வொன்றாக எண்ணி விட்டவள், இருபத்தி ஒண்ணு …அப்டின்னா இரண்டாயிரத்தி நூறு ரூபாய்….ஹம்மாடியோ..அம்புட்டு ரூபாயா இப்ப நான் சம்பாதிச்சது. கையில் வரப்போகும் பணத்தை எண்ணி வாய் பிளந்தவளாக உள்ளமெல்லாம் தள்ளாட கணக்குப் பிள்ளை டேபிளின் எதிரே நின்றாள் .

    என்ன பேரும்மா…..? நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கேட்கும் அவரிடம்.. பணிவாக மலர்விழி….புதுசா இந்த வாரம் தான் சேர்ந்தேன் ஐயா…தயக்கத்துடன் சொல்கிறாள்.

    ம்ம்…ம்ம்….இங்கன ஒரு கைநாட்டு வைய்யி..என்று லேட்ஜரைத் திருப்புகிறார்.

    ஐயா …நான் கையெழுத்துப் போடுவேனுங்க..என்றவள் “பேனா…” என்று இழுக்கிறாள்.

    நிமிர்ந்து பார்த்தவர், இந்தா…இங்க போடு என்று பேனாவை அவள் பக்கம் நகர்த்துகிறார்.

    நாலாயிரம் ரூபாய்க்கான வவுச்சர் அது. அதில் கையெழுத்தை போட்டவள்…அவர் தந்த பணத்தை எண்ணிப் பார்த்தபடியே..ஐயா எனக்கொரு டவுட்டு..என்கிறாள்.

    அதெல்லாம் முதலாளிட்ட கேளு..இப்ப எடத்தக் காலி பண்ணு…ம்ம்…நேரமாயிட்டுப் போகுது..அடுத்தது யாரும்மா வா வா..கொடுக்குற துட்ட வாங்கிட்டு காட்டுற இடத்துல கைநாட்டப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்…டவுட்டாம்…டவுட்டு……!

    மலர்விழி ஒரு அடி கூட நகராமல் அங்கேயே நின்றிருந்தாள் .

    இந்தாம்மா….நகுரு…கொஞ்சம் குரலில் கறாருடன் சொன்னார் கணக்குப்பிள்ளை.

    எனக்கு நீங்க இரண்டாயிரம் மட்டும் தான் கூலி தந்தீங்கய்யா. கெயெழுத்து மட்டும் நாலாயிரத்துக்கு வாங்கிக் கிட்டீங்க…அது ஏன்..? அப்டீண்டா இன்னும் அந்த ரெண்டாயிரத்தையும் தந்துடுங்க அதானே நியாயம்.

    உனக்கு முன்னாலயே ஏதும் சொல்லலியா. இங்க இப்படித்தான். நீ வேணா உன் வீட்டாண்ட ஆயிரம் தான் இந்த வாரம் சம்பளம் கொடுத்தாங்கன்னு சொல்லிக்க. பிடிச்சா வேலையில இரு..இதுக்கு மேல ஒரு கேள்வி கேட்ட நாளைக்கு வேலை இருக்காது. ஆமா சொல்லிப்புட்டேன். இந்தாம்மா நீ வா..என்று மலருக்குப் பின்னால் நின்றிருதவளைப் பார்த்து அழைக்கிறார் அவர்.

    திருட்டுப் பசங்க…கொள்ளையடிக்கிறாங்க. கால் கடுக்க கை வலிக்க வேலை பார்க்கிறது நாங்க…நோகாம நொங்கெடுக்க இதுங்களா…? காதுல கெண்டைய மாட்டுதுங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நானும் உங்க அத்தனை பேர் காதுலயும் ஜெயிலு மணியை மாட்டித் தொங்க விடலை…என் பேரு மலரு இல்லை. மனம் வீரத்துடன் சபதம் போட  மெளனமாக நகர்ந்தாள் அவள்.

    இதுங்கள எல்லாம் யாருடா பிடிச்சாந்தது…..பத்து குறத்திய வெச்சு செஞ்சு முடிக்க வேணடிய வேலைய இதுகளுக்கு என்னாத்துக்கு கொடுக்கணம்….இப்படி கேள்வி கேட்கவா..?  அந்த மேனஜர் எங்க? இந்தப் பிள்ளைய கணக்கு முடிஞ்சிருச்சின்னு சொல்லி வெளிய அனுப்பச் சொல்லு.நான் சொன்னேன்னு சொல்லு…இப்ப வரிக்கும் என்னியப் பார்த்து ஏதாச்சும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியிருக்குமா ? டவுட்டு கேக்குற மூஞ்சியப் பாரு..! கோபத்தில் கணக்குப் பிள்ளை கத்திக் கொண்டிருந்தார்.

    பணப் பட்டுவாடா முடிந்து அனைவரும் கலைந்த நிலையில், மனேஜர் அருகில் வந்து…”ஏம்மா மலரு…இத்த அந்த ஷீலா உன் கையில சொல்லலியா?  சரி விடு…இங்கன இப்படித் தான்..ஆனால் அந்த பாக்கிங் ஆபீசில் இப்படி கெடையாது..உன்னிய நாளைக்கு அங்கன போட்டுர்றேன். சரியா.நீ பொழக்கத் தெரியாத பிள்ளையா இருக்கியே. இதே உன்னோட கூட்டாளி என்ன சொன்னாத் தெரியுமா? அந்த அமீர் பெட் ஆஞ்சநேயலு ஊறுகாய் கம்பெனில விளம்பரப் படத்துல நடிக்க ஒத்துக்கிச்சி..ஒரு படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். சும்மால்ல …அவரு உன்னியத் தான் இதுக்கு கூப்பிட்டாரு..ஷீலாட்ட நான் தான் உன்கிட்ட சொல்லச் சொன்னேன்…

    பட பட வென்று அடித்துக் கொள்ளும் இதயத்தோடு ஷீலா என்ன சொல்லியிருப்பா என்று கேட்கும் ஆவலுடன் அவரது முகத்தைப் பார்க்கிறாள் மலர்.

    அது என்ன சொல்லிச்சி தெரியுமா…? நான் தான் சீனியர்…இந்த விளம்பரத்துல நானே நடிக்கிறேன்…மலர் கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிருச்சி.

    ஷீலாவா அப்படிச் சொன்னாள்…? ஆச்சரியத்தில் விரிந்தது மலரின் விழிகள்.

    பின்ன..நான் என்ன பொய்யா சொல்றேன்…நீ வேணாக் கேட்டுப் பாரு..ஆனா…நல்ல வேளை , உனக்கு வேற ஒரு வேலை வந்திருக்கு..அதாவது, ஒரு டிவி சீரியல்ல நடிக்கிற சான்ஸ்…வேலையே இல்லை..சும்மா ஒரு வீட்டில் இருக்கோணம்..அங்கிட்டு ஒரு இருபது பொண்ணுங்க கூட இருப்பாங்க.அம்புட்டுப் பேருமே நடிக்க உன்னிய மாதிரி வந்தவங்க தான். சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் அங்கனயே கம்பெனி பார்த்துக்கும். தெனம் வந்து ஷூட்டிங் பண்ணிட்டுப் போவாங்க…ஒரு வாரம் ஐயாயிரம் சுளையா அள்ளித் தந்துடுவாங்க…டிவி இருக்கும், ஏஸி எல்லாம் இருக்கும். உனக்கு இஷ்டம்னா இப்பமே சொல்லிடு..இல்லாட்டிப் போனா இந்த சான்ஸும் போயிறும். ஆசை காட்டினான் அவன்.

    நான் எதுக்கும் ஷீலாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்க கிட்ட பதில் சொல்லிர்றேன்..ஆனா அந்த வீட்டில் இருக்குற இருபது பொண்ணுங்களுக்கும் என்ன வேலை இருக்கும்? என்னத்த படம் பிடிப்பாங்க? மெல்ல எழுந்த சந்தேகத்தை அவளையும் அறியாமல் கேட்டு வைக்கிறாள்.

    அப்டிகேளு….இந்த டிவில வார “டாடி எனக்கொரு டவுட்டு..” ன்னு கொமட்டுல குத்துறாப்பல இருக்குது உன் கேள்வி. எதோ ஒரு டிவி சீரியல் வருதாம்….அதுல ஒரு ஊறுகாய் கம்பெனில வேலை பார்க்கிறா அந்த நடிகை. இப்படி கதை போகுது. அந்த ஊறுகாய் கம்பெனி தான் அந்த வீடு….அங்க ஊறுகாய் பாக்கிங் பண்ணுற பொண்ணுங்க நிறைய பேரு வேலைக்கு இருக்குறாப்பல அதுங்களோட அந்த நடிகையும் பாக்கிங் பண்ணுறாப்பல படம் பிடிப்பாங்க. இந்த ஷூட்டிங் வெறும் ஒரு வாரம் மட்டும் தான்.அதுக்குத் தான் அம்புட்டு துட்டும், சொகுசும்…என்ன இருந்தாலும் சீரியல் படம் இல்லையா..? இப்பச் சொல்லு நீ வாரியா…வரலியா? அவளைக் கேள்வி கேட்டு மடக்குகிறான் அந்த மேனேஜர். ஷீலா மட்டும் உன்னைய கேட்டுகிட்டா என்கிட்டே வாரேன்னு சொல்லிச்சு. பெறவு நீ மட்டும் ஏன் அந்தப் பிள்ளையைக் கேட்கோணம்.

    அப்டீங்களா…..அவள் மனத்துக்குள் அவள் ஷீலாவிடம் தங்கியிருக்கும் அறையில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது. மேலும் இந்த மீனில் முள்ளு எடுத்து அலம்பும் வேலையை விட வேறு வேலை கிடைத்தால் நல்லது தானே….என்றும்  யோசித்தவள்,  சரீங்கய்யா…நானும் வரேன்…என்கிறாள் மலர்விழி.

    (தொடரும்)

    Share
  • “Sadhus of Badrinath”

    R.S.Mani

    reverse drawing on “Claybord Black”

    Sadhus of Bhadrinath- scratch -board drawing 1
    This method of drawing is called “scratch-board” technique.

    R.S.ManiIn the earlier days, a card board would be coated with black ink. By scratching on it, one could bring out the images.

    In a normal drawing, we bring darkness to light on a white paper, to create an image. On a scratch-board we bring the light to darkness on the black surface. With this technique we can create powerful lighting effects.

    Nowadays a product called Claybord is available. This is much more durable than the traditional scratch-board. You can read a short description of Claybord Black in the following Wikipedia link:

    http://en.wikipedia.org/wiki/Claybord

    I love to work on white Claybord for watercolors and acrylics. The result would be different from working on paper or canvas.

    Using a photograph I took in Badrinath as reference, I made the attached drawing on a Claybord Black. This is one of my favourite art works.

    — R.S.Mani

    (Cambridge, Ontario, Canada)

    Share
  • மர்ம பாலம்

     

    மாதவன் இளங்கோ

     

    அது ஒரு நீண்ட பாலம்.

    அவனொரு விந்தை மனிதன்.

    பாலத்தைக் கடக்க

    அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய்

    மகிழ்வுற்றான் –

    வாழ்த்தினான்.

    பாலத்தைக் கடந்து

    விலகிப் போன ஒருவனுக்காய்

    துயருற்றான் –

    பிரார்த்தித்தான்.

    பாலத்தின் நடுவே

    கடக்கவியலாமல் அயர்வுற்று

    விடைபெற்றுக்கொண்ட வேறொருவனுக்காய்

    மீளாத்துயருற்றான்.

    பிரார்த்தித்தான்.

    அவனும் அதே பாலத்தின்

    ஏதோ ஒரு புள்ளியில்

    நின்றுகொண்டு

    ‘தெளிவாகத் தெரியுமந்த’

    பாலத்தின் மறுமுனைக்கும்

    தனக்குமான தூரத்திற்கு

    எதிர்காலம் எனப்பெயர் வைத்து,

    அது வருவதற்குள் முடித்துவிட

    ஒரு நீண்ட பட்டியலொன்றை

    தயாரித்தான்.

    எண்ணற்ற கனவுகளும்

    எண்ணற்ற கவலைகளும்

    எண்ணற்ற எதிர்பார்ப்புகளும்

    எண்ணற்ற ஏக்கங்களும்

    எண்ணற்ற திட்டங்களும்

    எண்ணற்ற குறிக்கோள்களும்

    நிறைந்த பட்டியல் அது.

    பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை

    தன் தலையில் சுமந்துகொண்டு

    பாலத்தின் மறுமுனை நோக்கிய

    தன்னுடைய பயணத்திற்கு

    வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான்.

    எண்ணற்ற உறவுகளும்

    எண்ணற்ற துரோகங்களும்

    எண்ணற்ற மகிழ்ச்சிகளும்

    எண்ணற்ற துயரங்களும்

    எண்ணற்ற சாதனைகளும்

    எண்ணற்ற சோதனைகளும்

    எண்ணற்ற அனுபவங்களும்

    எண்ணற்ற பாடங்களும்

    நிறைந்த பயணம் அது.

    பயணத்தின் நடுவே

    பட்டியல் நீண்டுகொண்டே போனது.

    பயணத்தின் சுமை

    கூடிக்கொண்டே போனது.

    நடையின் வேகம் குறைந்து

    மெதுவாக பயணித்து

    முன்சென்று கொண்டிருந்தான்

    அந்த விந்தை மனிதன்!

    நடந்து நடந்து அவனுடல்

    ஓய்ந்துகொண்டே போக

    அவன் உருவாக்கிய எதிர்காலம்

    தேய்ந்துகொண்டே போனது.

    பாலத்தின் மறுமுனையும் வந்தது

    அங்கே மலைபோல் குவிந்து கிடந்த

    பட்டியல்களின் மேல்

    எடை பன்மடங்கு கூடியிருந்த

    தன பட்டியலையும்

    இறக்கி வைத்துவிட்டு,

    திரும்பிப் பார்த்தான்.

    அந்த மர்ம பாலம் –

    காணாமல் போயிருந்தது.

    அவனைப் பார்த்து

    மர்மமாய் புன்னகைத்தது –

    வெற்றிடம்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 87 (02.09.13)

    மலர் சபாmalathi

    தேவந்தியின் வரலாறு சாத்தன் கலை பல பயின்று,   தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்

    இங்ஙனம்
    மாலதியின் கணவன்
    மறையோன் வாரிசாகச்
    சாத்தன் வளர்ந்து வந்தனன்.
    பிரம்மச்சரிய நிலையில்
    கல்வியறிவு கேள்வியறிவில்
    சிறந்து விளங்கினன்.
    பெற்றோர்கள் இறந்த போது
    அவர்தமக்கு ஈமக்கடன்களையும்
    செய்து முடித்தனன்.

    உறவுமுறைப் பங்காளியரிடம்
    வழக்குரைத்து வென்றனன்.
    தேவந்தி என்பவளை மணந்து
    இல்லறத்தில் அமர்ந்து வாழ்ந்து வந்தனன்.
    அப்படி வாழ்ந்து வந்த
    ஒரு நாளில்,
    தேவந்தியிடம் கூறினன்:
    “பூவை ஒத்த உன் கண்கள்
    என் தெய்வ வடிவத்தின்
    பேரொளியைக் காணப் பொறுத்திருப்பனவாக.”

    பின்னர்
    மூப்பு எய்தாத தம் இளைய தோற்றத்தை
    அவளுக்குக் காண்பித்து
    “என் கோயிலுக்கு நீ தினம் வருக..”
    எனக்கூறு அவளை விட்டு நீங்கினன்.

    தேவந்தி சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்

    “என் மனதைக் கவர்ந்த என் கணவன்
    திர்த்தத்துறைகளில் நீராடி வரச் சென்றிருக்கிறார்;
    அவரை மறுபடியும் இங்கு கொணர்ந்து
    என்னுடன் சேர்ப்பாயாக”
    என்று சாத்தனை
    வேண்டி வழிபடுவதற்காகவென்று
    நாள்தோறும் ஒரு பொய்க் காரணம் கற்பித்துத்
    தூய மொழியாள் தேவந்தி
    அவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 29 – 39
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

    படத்துக்கு நன்றி:

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்திய சுதந்திர சரித்திரம் என்பது இன்றைய தலைமுறையினருக்கு எப்படி புரியவைக்கப்படுகின்றது என்பதில் ஏகப்பட்ட கேள்விக்குறி உள்ளது. பொதுவாக இந்திய சுதந்திரம் எனும்போது காந்தியடிகள் முதலான தேசத்தலைவர்களே அதிகம் பேசப்படுவதும் தேசத்துக்கான சுதந்திரம் ஏதோ சுலபமாக அஹிம்சை முறையில் பெற்றதுமாகவும் கத்தியின்றி ரத்தமின்றி பெற்றதுமாகவும் அதிகம் புரியப்படுகின்றது. தேசம் சுதந்திரம் ஆன கால கட்டத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மதக் கலவரங்களும், பாரதமக்களின் ரத்தமானது ஆறு போல புரண்டு ஓடியதையும் நாம் மறந்து விடுகிறோம்.

    இது இப்படியே இருக்க, தேசச் சுதந்திரப் போராட்டமானது ஏதோ 1857 ஆம் ஆண்டில் முதல் இந்திய சுதந்திரப் போராக தேசத்து வடபுலத்தில்தான் ஆரம்பமாகி பிறகு காங்கிரஸ் தோன்றி அதைப் பெரிதாக்கியது என்று இப்போது அரசாங்க ஆதரவுடன் எழுதி வருகிறார்கள். ஆனால் உண்மையில் தென்னகத்தில்தான் மிகப் பெரிய விதத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் 1725 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது, இவ்வரலாற்றை பழனியப்பா பிரதர்ஸ் ஆங்கிலத்தில் புத்தகமாகக் கூட கொண்டு வந்துள்ளார்கள்.

    இதுவும் இருக்கட்டும், ஏற்கனவே சொன்னது போல இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் வரலாறு மிக விஸ்தாரமாக சொல்லப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. சுப்ரமணிய பாரதியார், வ.உ.சி போன்றோர் (உபயம் தமிழ் சினிமா) போன்றோர் பற்றி ஏதோ சுமாராகத் தெரிந்தாலும் முக்கியமாக தேசத்துக்காக உயிர் நீத்த திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பற்றி கூட நம் இளைஞர்களுக்கு இன்னமும் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.

    இப்படி இருக்கையில் சுவாமி ஓம்கார் எனும் நீலகண்ட பிரம்மச்சாரியைப் பற்றி ஒரு பதிவு கண்டேன். அதை அப்படியே கீழே தருகிறேன்.இது நீலகண்ட பிரும்மச்சாரியின் சுயசரிதம்

    சென்னையில் 566, பைக்கிராப்ட்ஸ் ரோடில் ஒரு வாடகை இடத்தில் தங்கிக் கொண்டு வாயப்பிள்ளைத் தெருவில் 8ஆம் நம்பரில் உள்ள காசி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 1921-22ஆம் ஆண்டில் நான் உண்ண உணவின்றியும், கையில் காசு இல்லாமலும் கஷ்டப்பட்ட நாட்கள் பல உண்டு. சில சமயம் ஒருவரும் அறியாமல் இரவில் பிச்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு பகலில் சுதேசிப் பிரச்சாரமும் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

    ஒரு நாள் கையில் காசும் இல்லை, அதனால் சாப்பிடவும் இல்லை. பிறரிடம் கையேந்த மனமும் வரவில்லை. பசியின் கொடுமையைத் தாளமுடியாமல் சோர்வுற்றிருந்த சமயம் மகாகவி பாரதியின் ஞாபகம் வந்தது. மெதுவாக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னை குதூகலமாக வரவேற்று அளவளாவினார். இந்த அன்புப் பிடியில் சிக்கிய நான் அவரிடம் என் நிலையைக் கூற மனம் துணியவில்லை. ஆனால் பசியோ வயிற்றைக் கிள்ளுகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி, “ஒரு நாலணா இருக்குமோ?” என்று கேட்டு விட்டேன். அவர் “திடுக்கிட்டு, ஏன்? ஏன்?” என்றார். நான் அன்று பூராவும் சாப்பாட்டைப் பாராதது பற்றிக் கூறவே அவர் பதறிப்போய் நாலணா கொண்டு வந்து கொடுத்து, “பாண்டியா! உடனே போய் சாப்பிட்டு வாரும்” என்று கூறினார். அப்போது அவர் பாடிய பாட்டுதான் “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்பது. என்னால், என் நிலைக்காக கவியின் உள்ளத்தில் சுரந்த ஊற்றுதான், அந்த ஆவேசம் நிறைந்த பாட்டு. அகாகா! எவ்வளவு அன்பு! எவ்வளவு பாசம்! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! இந்த ஏழையால் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? அந்தப் புரட்சிக் கவிஞர் அகால மரணமெய்திய போது உடனிருந்து, அவரது மயான யாத்திரைக்குத் தோள் கொடுத்த நால்வரில் நானும் ஒருவன். அவரது உயிரற்ற உடலை சுமக்கும் பாக்கியமாவது என் தோளுக்குக் கிடைத்ததே என்று நான் பெருமைப்படுவது உண்டு.

    இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்.

    இவ்வளவு கஷ்டப்பட்டும் “புரட்சி புரட்சி” என்ற ஒரு குரல் என் உள்ளத்தின் அடியில் சதா ஒலித்துக் கொண்டே இருந்தது. என்னால் சும்மா இருக்கவே முடியவில்லை, என்ன செய்வேன்.

    நாட்டின் உயர்விற்கும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கும், கம்யூனிசத்தை நாட்டில் பரப்புவது ஒன்றே வழி எனத் தேர்ந்தேன். சென்னையில் சிங்காரவேலருடன் தங்கிக் கொண்டு, கம்யூனிசம் பற்றி ஒரு சிறு நூல் வெளியிட்டேன். அன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கண்டித்ததுடன், அன்றைய சட்ட திட்டங்களும், நீதிமன்றங்களும், நீதிபதிகளும், முதலாளித்துவ அமைப்புகளுக்கு அனுசரணையாகவே இருப்பதால் இவற்றையும் அடியுடன் தகர்த்தெரிய வேண்டுமென்று அதில் தெரிவித்திருந்தேன்.

    என் கம்யூனிச நடவடிக்கைகாகவும் வர்க்கப் போராட்டத்தைத் தூண்டியதற்காகவும், நீதிமன்றங்களைத் தாக்கியதற்காகவும் 1922ஆம் ஆண்டில் திரும்பவும் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டேன். இந்தியாவிலேயே முதல் கம்யூனிஸ்ட் நான் தான். இந்தத் தடவை தென்னாட்டில் என்னை எங்கும் வைக்காமல் வட நாட்டுச் சிறைகளுக்குக் கொண்டு சென்றனர். ஏனெனில் அப்போது நான் ஒரு கருப்புக் குல்லாய்! அதாவது முன்னமே சிறை தண்டனை பெற்றவன். அதனால் அதற்குத் தகுந்த மரியாதையை அரசாங்கம் எனக்குக் காட்டாமல் இருக்க முடியுமா?

    இப்போது பாகிஸ்தானில் உள்ள மாண்ட்கோமரி ஜெயிலிலும், மூல்தான் சிறையிலும் 5, 6 ஆண்டுகள் இருந்தேன். இறுதியாக மீதி காலத்தை ரங்கூன் சிறையில் கழித்துவிட்டு 1930ஆம் ஆண்டு விடுதலை பெற்று வெளிவந்தேன். எனது சிறைக் காலங்களில் யாரும் என்னிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. எந்தவிதமான துன்புறுத்தலும், பயமுறுத்தலும் என்னை பணிய வைக்காது என்பதை சிறை அதிகாரிகள் உணர்ந்திருந்ததுதான் அதற்குக் காரணம். அதனால் சிறை வாழ்க்கையில் நான் துன்புறுத்தப்பட்டேன் என்றோ, என் சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படும் காரியங்களை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்றோ கூறமுடியாது. எல்லாச் சிறை அதிகாரிகளும், எல்லா இடத்திலும் என்னை கெளரவமாகவே நடத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும். நான் தேசத்தின் வடகோடி சிறையில் இருக்கும்போது நான் தமிழகத்தைச் சார்ந்தவன் என்பதை உணர்ந்து, என் சமையலுக்குத் தென்னாட்டிலிருந்து புளி வரவழைத்துக் கொடுத்தார்கள் என்றால், அதிகாரிகள் என்பால் எவ்வளவு சிரத்தையுடன் நடந்து கொண்டார்கள் என்று நான் கூறத் தேவையில்லை.

    ஓம்கார் ஆஸ்ரமம்.

    என் தாய்மாமன் வெங்கட்டராம சாஸ்திரி பி.ஏ.,எல்.டி. மாயவரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவரிடம் நான் அடிக்கடி வேதாந்த விசாரம் செய்வதுண்டு. சிறையில் தனிமையாகப் பல வருஷங்களைக் கழித்ததால், அவ்வப்போது வேதாந்த கருத்துக்களும் என் மனதில் உதிப்பதுண்டு. சிறுகச் சிறுக அது என்ன, நான் அறியாமலேயே கைப்பற்றி கொண்டு வந்திருக்கிறது.

    விடுதலை அடைந்து வெளி வந்தபோது பல வழிகளில் நான் மாறியிருப்பதை உணர்ந்தேன். இரண்டு ஆண்டு காலம் கால்நடையாகப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தேன். தி இந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளுக்கு எழுதி, என் எழுத்தை விற்று காலக்ஷேபம் செய்து வந்தேன்.

    பின் சாது, துறவியாக மாறினேன். விஜயநகர ராஜ்யத்திற்குட்பட்டிருந்த ஆனைக்குன்று மலையில் சிறு ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு சில காலம் வாழ்ந்தேன். 90 வயது நிரம்பிய விஜயநகர ராஜ்ய ராணி ஒருவர் என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டி உதவினார். அந்த அன்புப் பிடியில் சிக்க மனமில்லாததால் யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென ஒரு நாள் புறப்பட்டு பத்து மைல் தூரம் நடந்து ஹோஸ்பெட் எனும் ஊரை அடைந்தேன். கையில் இரண்டு ரூபாய் மட்டுமே இருந்தது. எனது கலெக்டர் சீடர் தம்பிதுரைக்குத் தந்தி கொடுத்துப் பணம் பெற்று, திரும்பவும் பல இடங்களைச் சுற்றி முடிவாக நந்தி மலை (Nandi Hilla)வந்து அடைந்தேன்.

    கர்நாடகத்தின் வனப்புமிக்க கோடை வாசஸ்தலம் நந்தி மலை. அதற்கு வடக்கே அதனை ஒட்டினாற்போல அமைந்திருப்பது சென்னகிரிமலை. பெங்களூரிலிருந்து முப்பது மைல் தொலைவில் நந்தி கிராமத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலும், சுல்தான்பேட்டையிலிருந்து அரை மைல் வலப்புறமும் ஒரு மலைச்சரிவில் அமைந்திருப்பதுதான் ஓம்காரேச்வரருடைய (சென்னகேஸ்வரர்) திருக்கோயில். இதற்கு நேர் எதிரில் சில அடி தூரத்தில் சென்னகிரி குன்றின் ஓர் பாறையைப் பிளந்துகொண்டு அதன் கீழாக ஓடி வருவதுதான் தென்பெண்ணை (தக்ஷிணபினாகினி) ஆற்றின் உற்பத்தி ஸ்தானம். எக்காலத்தும் அதன் வழியாக நல்ல தெளிவான ஊற்று நீர் சதா வந்து கொண்டிருக்கும்.

    இந்த இடத்திற்கு நான் வந்தபோது அங்கிருக்கும் லிங்கம் ஒரு புற்றால் மறைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அதற்கு ஓர் சிறு கோயிலும் கட்டினேன். அது அமைதி நிறைந்த இடமாக இருந்ததால் அதனையே என் வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்டேன். என் பெயரிலுள்ள நீலகண்டன், பிரம்மச்சாரி எல்லாம் மறைந்து சாது ஓம்கார் ஆனேன்.

    காந்திஜியுடன் சந்திப்பு.

    அங்கு சென்றபோது சென்னகிரி மலையின் உச்சியில் காய் கனிகளைப் புசித்துக் கொண்டு சில வருஷங்கள் தவமிருந்தேன். அப்போது ஒரு நாள் 1936ஆம் ஆண்டு மே மாதம் ஜே.சி.குமரப்பா அங்கு என்னைத் தற்செயலாக சந்தித்தார். மகாத்மாஜி ஓய்வு எடுப்பதற்காக தனது கோஷ்டியுடன் நந்திமலையில் வந்து தங்கியிருப்பதாகவும் கூறினார். மறுநாள் சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய் இவர்களை அழைத்துக் கொண்டு திரு குமரப்பா அவர்கள் திரும்ப வந்தார். என்னுடன் நெடுநேரம் அவர்கள் ஆன்ம விசாரணை செய்துவிட்டு திரும்பினார். அடுத்து மகாதேவ தேசாயிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் மகாத்மாஜி என்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கண்டிருந்தது. 1936ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நந்திமலை சென்று மகாத்மா காந்தியடிகளுடன் இரண்டு மணி நேரம் தங்கி ஆன்ம விசாரணை செய்துவிட்டுப் பூரணத்திருப்தியுடனும், மனச்சாந்தியுடனும் திரும்பினேன். அது சமயம் வடநாடு யாத்திரை வரும்போது, சேவாகிராமம் வருமாறு காந்திஜி எனக்கு அழைப்பு விடுத்தார்.

    தற்போதுள்ள ஓம்கார் ஆஸ்ரமத்தில், சாது ஓம்காராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். 3 ஆண்டுகள் புரட்சியாளனாக இருந்தேன். மூன்று ஆண்டுகள் கம்யூனிஸ்டாக இருந்தேன். பதினேழரை ஆண்டுகள் சிறைக் கைதியாக இருந்தேன். இந்த நீண்ட எனது 85 ஆண்டு கால வாழ்க்கையில் சிறப்பான பகுதி எது?

    VGopalan (1)என் வாழ்க்கைப் படிக்கட்டுகளில் பெருமைக்குரிய படிக்கட்டு எது? இளைஞர்கள் நன்கு சிந்தித்து ஒரு முடிவிற்கு வரவேண்டுமென்பது என் ஆசை. வாசகர்கள் அனைவருக்கும் என் நல்லாசிகள். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

    (நந்தி மலையில் சாது ஓம்காரைச் சந்தித்து உரையாடி அவர் சொல்லியதை கட்டுரையாக்கியவர் தியாகி அரியலூர் L. சபாபதி அவர்கள். 1976இல் தியாகி அரியலூர் சபாபதி “இந்திய சுதந்திரப் போர்” எனும் பெயரில் திருச்சி ஜில்லா சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ் கமிட்டி, குளித்தலை எனும் முகவரியில் இருந்து வெளியிட்ட நூலில் இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. அரியலூர் L.சபாபதி அவர்கள், ஆசிரியராகவும், திருச்சி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் காங்கிரசில் பொதுச் செயலாளராகவும் இருந்தவர்.)

    இதை இந்த வாரத்தில் நமக்குத் தந்தவர் தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர். அற்புதமான ஒரு வரலாற்றில் எத்தனை புதிய செய்திகள் அடங்கியிருக்கின்றன பார்த்தீர்களா.. இந்த சரித்திரத்தை நமக்குத் தந்து பல நல்ல விஷயங்களை வெளிக்கொணர்ந்த தஞ்சை திரு கோபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ’ரசனையின் சிலிர்ப்பு’ திருமதி தி.சுபாஷிணி:
    சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும் ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளும்,

    Share
  • காதலோ காதல்.


    தனுசு

     

    நீ
    எதையோ தொலைத்ததுபோல்
    தேடுகிறாய்
    தேடுவது என்னவென்று
    உனக்கே தெரியவில்லை…

    நீ
    எதையோ இழந்ததைப்போல்
    தவிக்கிறாய்
    இழந்ததும் என்னவென்று
    உனக்கே தெரியவில்லை…

    நீ
    எங்கேயோ சேர
    துடிக்கிறாய்
    எங்கே என்று
    உனக்கே தெரியவில்லை…

    நீ
    தங்கிக்கொள்ள ஒர் இடம்
    தேடுகிறாய்
    அது எந்த இடமென்று
    உனக்கே தெரியவில்லை…

    அனைத்திற்கும்
    நான் பதில் தரவா?

    நீ
    தேடுவது என்னை
    நீ
    இழந்தது உன்னை
    நீ
    சேர துடிப்பது என்னிடம்
    நீ
    தங்க ஏங்குவது என் இதயம்

    இன்னுமா
    உனக்கு புரியவில்லை
    நீ
    என்னை
    காதலிக்க தொடங்கிவிட்டாய்.

    ஆனால்
    வேண்டாமடா பாலகா
    பின்னாளில்
    தாடி தான் வளர்ப்பாய்
    கண்ணாடியில் பார்
    இன்னும் உனக்கு
    மீசையே முளைக்கவில்லை.

     

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-6)

    ராமஸ்வாமி சம்பத்

    images (3)

    images

    images (1)

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         புருஷோத்தமன் கூறியதுபோல். அக்காட்டு வழி கரடு முரடான பாதையாகத்தான் இருந்தது.  பல இடைஞ்சல்களைத் தாண்டி ஆசுதோஷரின் ஆசிரமத்தை அவ்விருவரும் அடைந்தனர்.

    “மாசிடோனிய மன்னரே! இதுதான் ஆசுதோஷ முனிவரின் குடில். நீங்கள் அவருடன் உரையாடி வரும் வரை நமது குதிரைகளுக்குப் பாதுகாப்பாக நான் இங்கு இருக்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்” என்றான் உடன் வந்தவன்.

    அலெக்சாண்டர் ஆசிரமத்திற்குள் நுழைந்து மோன நிலையில் இருந்த ஆசுதோஷரைக் கண்டான். சதைப்பற்றே இல்லாத ஒரு எலும்புக்கூட்டைப் போல் காணப்பட்ட அவர் மேனியைப் பார்த்த்தும் அவனுக்கு உள்ளூற சிரிப்பு மேலிட்டது. ‘இவரா நமக்கு ஆன்மீக பலம் தரப்போகிறார்?’ என்ற எண்ணம் ஏற்பட்டாலும், வெளியே அதைக் காட்டாமல் இருகரம் கூப்பி, “முனிவரே! மாவீரன் அலெக்சாண்டரின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்”  என்றான்.

    ஆழ்நிலை தியானத்தில் இருந்த அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. அலெக்சாண்டர் சற்று தன் குரலை உயர்த்தி மீண்டும் தன் வணக்கங்களைத் தெரிவித்தான். அவரிடம் எந்த சலனமும் காணாது, அவன் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை மொழிந்தான். ஒரு பயனும் இல்லை. அவர் மோன நிலையிலேயே இருந்தார்.

    ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், ’இந்த கர்வம்படைத்த முனிவருக்கு என் வாளின் கூர்மையால்தான் புத்தி புகட்டவேண்டும்’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டு தன் வலது கையை உயர்த்தி அவரைத் தாக்கப் போனான்.

    என்ன ஆச்சரியம்! அவனது உயர்த்தப்பட்ட வலது கரம் உறையிலிருந்து உறுவப்பட்ட வாளோடு சித்திரங்களில் காணப்படுவதுபோல் அப்படியே நின்றுவிட்டது. அவ்வாறு எவ்வளவு நொடிகள் இருந்தானோ அவனுக்கே தெரியவில்லை.

    “நீ யாரப்பா? எதற்காக வாளோந்திய கையோடு இப்படி நிற்கிறாய்? உனக்கு யார்மீது கோபம்?” சட்டென்று வந்த முனிவரின் வார்த்தைகள் அவனை மண்ணுலகிற்குத் திரும்பி கொண்டு வந்தன.

    வியப்பினால் நிலைகுலைந்த அலெக்சாண்டர்,” ஓஹோ, நீங்கள்தான் மாய மந்திரம் செய்து என்னை இப்படி நிறுத்திவிட்டீரோ?” என்றான்.

    புன்னகை ததும்பும் முகத்தோடு அம்முனிவர், “குழந்தாய்! நான் மாய மந்திர வேலை எதுவும் செய்யவில்லை. ஆத்திரத்தாலும் அவசரமாகவும் நீதான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் உன் வலது கையை வாளோடு உயர்த்தியிருப்பாய். அது அந்த மரக்கிளையில் வகையாக மாட்டிக்கொண்டு விட்டது” என்றார்.

    அலெக்சாண்டருகு ஒரே ஆச்சரியம். அவனை யாரும் இவ்வாறு செல்லமாக அழைத்ததில்லை. தலை நிமிர்ந்து பார்த்த அவ்வரசன் தன் கை அம்மரக்கிளையில் சிக்கியிருப்பதைக் கண்டு வெட்கித் தலை குனிந்தான். ஆனால் என்ன முயற்சி செய்தாலும் கை விடுபடவில்லை. ஆசுதோஷர் மெள்ள அவன் கையை அக்கிளையிலிருந்து மீட்டார்.

    பட்டகாயத்திலேயே அக்கிளை உரசியிருந்ததால், குருதி பெருகிற்று. முனிவர் அவனை மெதுவாகத் தன் குடிலுக்குள் அழைத்துச் சென்று கமண்டலத்தில் உள்ள நீரை அக்காயத்தின் மேல் தெளித்து தன் வலது கையால் நீவி விட்டார். ரத்தப்பெருக்கும் விரைவில் நின்றது. அலெக்சாண்டர் அவரை நன்றியோடு பார்த்தான்.

    “இப்போது சொல் நீ யாரென்று. உனக்கு என்ன வேண்டும் இந்த எலும்புக்கூட்டிடமிருந்து?” என்று கேட்டார் ஆசுதோஷர்.

    அலெக்சாண்டருக்குத் தூக்கிவாரிப்போட்ட்து. ‘இவர் நம் மனத்தில் உள்ளதை அப்படியே சொல்கிறாரே’ என்று வியப்படைந்தான்.

    “முனிவரே! என்னை மன்னியுங்கள். வெற்றிமேல் வெற்றிகண்டு பல நாடுகளை வீழ்த்திய மாசிடோனிய மன்னன் “மாவீரன் அலெக்சாண்டர்” நான். என் ஆணைக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிடில் அவர்களுக்கு மரணம்தான் தண்டனை. தாங்கள் என் வணக்கங்களை உதாசீனம் செய்வதாக நினைத்து அவசரப்பட்டு விட்டேன். உங்கள் தவ வலிமையை நான் இப்போது புரிந்து கொண்டுவிட்டேன். மீண்டும் தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.”

    “பார்த்தாயா சிகந்தர்! உன் சினம் உன்னையே எப்படி ஆட்டிப்படைத்து இருக்கிறது! ஆன்மீக பலம் வேண்டி என்னிடம் வந்த நீ என்னையே கொல்லவும் முற்பட்டு விட்டாய். கோபம் என்பது ஒவ்வொரு மனிதனிலும் காணப்படும் ஆறு உட்பகைவர்களில் ஒன்று” என்றார் ஆசுதோஷர்.

    ’ஆசிரமத்திற்கு வந்த என் நோக்கத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறாரே இந்த முனிவர்!’ என்று வியப்படைந்த அலெக்சாண்டர், “உட்பகைவர்களா? கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?” என்றான்.

    “ஆசை, சினம், அனைத்தையும் பிறர்க்குதவாமல் தனதாக்கிக் கொள்ளும் கருமித்தனம், கட்டுக்கடங்காத மோகம், ’நானே உயர்ந்தவன்’ எனும் கர்வம், பொறாமை இவை ஆறும் தான் ஒரு மனிதனின் உட்பகைவர்கள். இவற்றில் ஆசையும் சினமும் தான் மிக்க பலம் பொருந்திய விரோதிகள். மற்றவற்றை ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எனும் மூன்று பிரிவாக பேராசை மனிதனைப் படுகுழியில் தள்ளுகிறது. இவ்வாசைகளை ஒரு மனிதன் தீர்க்க முடியாத போது சினம் மேலிடுகிறது. அதேபோல் விரும்பிய ஓரு பொருள் கைப்படாவிட்டாலும் கோபம் வருகிறது. வசியப்படுத்த முடியாது போதும் எரிச்சல் உண்டாகிறது. கர்வபங்கம் ஆனாலும் மூக்கின்மேல் கோபம் வரும். பொறாமையும் கோபத்திற்கு ஒரு அடிப்படையே! ஆக ஆசையும் சினமுமே ஒருவனை தவறான பாதையில் இட்டுச்செல்கின்றன. உன்னையே நீ ஆராய்ந்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கும்.

    “உன்னால் என்னை எளிதாகக் கொன்றிருக்க முடியும். ஆனால் நீ என் உடலைத்தான் வதைத்திருப்பாய், என் ஆன்மாவை ஏதும் செய்திருக்க முடியாது. ஏனெனில் ஆன்மா எங்கும் நிறைந்து, சுயமாய் ஒளிர்ந்து, மற்றவற்றையும் ஒளிரவைக்கும் பரமாத்மாவைச் சேர்ந்தது. அதனை கத்தியால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; தண்ணீரால் கரைக்க முடியாது; காற்றினால் உறிஞ்ச முடியாது. கூரிய வாளைக்கொண்டு என்னைத் தாக்க நினைத்தாய். அதைவிட கூர்மை வாய்ந்த உன் அறிவென்னும் வாளைக் கொண்டு, வைராக்யம் எனும் கவசத்தை அணிந்து, உன் உட்பகைவர்களைத் தாக்கி அவற்றை வென்றால் உன் ஆன்மா பலம் பெறும்” என்றார் ஆசுதோஷர்.

    அலெக்சாண்டரின் மூளையில் மின்னல்போல் திடீரென்று ஒரு தாக்கல் ஏற்பட்டது. ‘எவ்வளவு பெரிய உண்மையை இம்முனிவர் ரத்தினச் சுருக்கமாக எனக்கு எடுத்துக்காட்டிவிட்டார்! மண்ணாசையால்தானே நான் நாடு நாடாக போர் புரிந்து வருகிறேன். பொன்னாசையால் அல்லவா என் வீரர்கள் என்னைத் தொடர்கிறார்கள்; பொற்குவியல்களுக்கு மயங்கித்தானே தக்‌ஷசீல அம்பி எனக்கு உதவினான். பெண்ணாசைதானே உலகெங்கும் ஆண் ஜன்மங்களை வாட்டி வதைக்கிறது’ என்று ஆலோசனையில் வீழ்ந்தான் யவன அரசன்.

    (தொடரும்)

    Share
  • தோற்றால்…


     செண்பக ஜெகதீசன்successimages

    இயலாமையால் தோற்றால்

    இது தோல்வியல்ல..

     

    இன்னும்

    இருக்குது வாய்ப்பு,

    முன்னேற-

    முயன்று வெற்றி பெற..

     

    இன்னொருவரை நம்பித் தோற்றால்

    இல்லை வாய்ப்பே..

     

    எதற்கும்

    இறைவனை நம்பு,

    குறையும் தடங்கல் வாழ்வில்…!

     

    படத்துக்கு நன்றி

    http://lifehacker.com/5926309/how-the-people-around-you-affect-personal-success


    Share
  • வார ராசி பலன்!…02-09-13 – 08-09-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: வியாபாரிகள் சரக்குகள் தேங்குவதைத் தவிர்க்க, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவற்றை தருவித்துக் கொள்ளுதல் புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் புதிய முயற்சிகளில் முழு வீச்சுடன் இறங்குவதற்கு நல்ல பலன் கிடைக்கும்.மாணவர்கள் வலுவில் வரும் வம்புச் சண்டைகளிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது.சுய தொழில் புரிபவர்கள் எடுக்கும் முயற்சிகள், சிறிது தேக்கத்திற்குப் பின் விறுவிறுவென்று நடைபெறும். அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புக்களில் முழு கவனத்துடன் இருப்பது நல்லது.

    ரிஷபம்: மாணவர்கள் உங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றுங்கள். வெற்றி வாகை சூடுவது சுலபமாகும். புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் கடன் அட்டைகளை கருத்துடன் கையாளவும். தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு மன ரீதியாக சில தொந்தரவுகள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல்,பணியை முடித்து விடும் ஆற்றலைப் பெறுவார்கள். கலைஞர்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைக்கலாம்.

    மிதுனம்: மாணவர்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி வரும். பணியில் உள்ளவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வது நல்லது. முதியவர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். இல்லத்தில் கருத்து வேறுபாடு ஆகியவை அதிகரிக்கும் போது பெண்கள் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. கலைஞர்கள் பொது இடம் மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களிலிருந்து ஒதுங்கி இருங்கள். . மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும்.

    கடகம்: மற்றவர்களுக்கு உதவும் குணத்தால், மாணவர்களின் தேவைகள் யாவும், சிரமமின்றி பூர்த்தியாகிவிடும். வியாபாரிகள் புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருங்கள். லாபம் குறையாது. பெண்கள் பிள்ளைகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பிருப்பதால் எதிலும் கவனமாக செயல்படவும். சுய தொழில் புரிபவர்கள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது. மாணவர்கள் ,கூட இருந்தே குழி பறிப்பவர்களை இனங்கண்டு ஒதுக்கிவிடுங்கள்.

    சிம்மம்: உத்தியோகத்தில் உள்ளவர்கள், பதவி உயர்வு பெற்று,வெளியிடங்களுக்கு மாற்றலாகி அதிக வசதியுள்ள இடங்களில் பணி புரிவார்கள். வியாபாரிகளின் கையைக் கட்டிப் போட்டிருந்த பொருளாதாரம் இந்த வாரம் சரளமாக இருக்கும் . கர்ப்பிணிப் பெண்கள் எனவே வேளை தவறிய உணவு, அலைச்சல் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும். கலைஞர்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பதோடு வேண்டிய யோசனைகளும் கிட்டும்.

    கன்னி: பொது வாழ்வில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அலட்சியம் வேண்டாம். மாணவர்கள் முன்பின் யோசியாமல் எந்த வேலையிலும் இறங்காதீர்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பண சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுதல் அவசியம். சில நேரங்களில் நண்பர்களே உங்களை எதிரிகளாய் பார்க்கும் நிலை உண்டாகும். எனவே எதிலும் கவனமாக இருப்பது நல்லது. . கலைஞர்களுக்கு வரும் ஒப்பந்தங்களை சிலர் குறுக்கு வழியில் தட்டிப் பறிக்க முயலுவார்கள். எனவே நிதானமாகப் பேசி நினைத்த காரியத்தை பக்குவமாக முடித்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது .

    துலாம்: பெண்கள் விலை உயர்ந்த சாதனங்களை விவரமறிந்தவரிடம் கொடுத்து பழுது பார்த்தால், வீண் செலவுகள் அதிகரிக்காது. மாணவர்கள் பழகிய நண்பர்களின் சொல்லுக்கு கட்டுப்படும் நிலையும், அதனால் சில சிக்கல்களையும் சகித்துக் கொள்ள வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் சட்டென்று உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்தாலே சங்கடங்கள் தானே குறையும். பணியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உயர் அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம்.

    விருச்சிகம்: மாணவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும்.வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் காசோலை மற்றும் வாக்குறுதி வழங்குதல்- இரண்டிலும் நிதானமாக இருப்பது நல்லது.பெண்கள் உறவுகளிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பு ஏற்படாது. கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் . நல்ல பெயரோடு வாய்ப்புக்களும் வந்து சேரும்.

    தனுசு: சுய தொழில் புரிபவர்கள் மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். தொழிலில் இருந்த இடைஞ்சல்கள் தானே விலகும்.உறவினர் வருகையால்,பெண்களின் வேலைப் பளு சற்றே கூடும். பெற்றோர்கள் பிள்ளைகளோடு விவாதத்தில் இறங்காமல், இதமாக நடந்தால், தானே உங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே தன் வேலைகளை முடிப்பதில் விழிப்புடன் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் சக ஊழியரின் பணிகளையும், பொறுப்புக்களையும் நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும்.

    மகரம்: கலைஞர்கள் , வேலையாட்கள் முன் சொந்த விஷயங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடை பிடிப்பது அவசியம். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்படுவதுடன், வாக்குறுதிகளையும் அள்ளி வீசாமலிருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, பணிவாக எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    கும்பம்: பெண்கள் தங்கள் மனதில் பட்டதை வெளியில் சொல்லுவதிலும் ,சாதுரியமாகச் செயல்பட்டால், மற்றவர்களின் வெறுப்பிற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளலாம். நண்பர்கள் தரும் தெம்பால், மாணவர்கள் சவாலான காரியங்களையும் முடிக்கும் திறமையைப் பெறுவார்கள். வியாபாரிகள் சலுகைகளைப் பெற முறையற்ற வழிகளை நாடாமலிருப்பது நல்லது. இந்த வாரம் பணியில் உள்ளவர்கள் புது பொறுப்புகளை தக்க ஆலோசனை பேரில் ஏற்றுக் கொள்வது நலம். சோர்வும், தடுமாற்றமும் உங்களின் வேகத்தை குறைக்கலாம். எனவே முதியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

    மீனம்: நெருங்கிய உறவினர்களின் வருகையால், பெண்களின் மகிழ்ச்சி பெருகும். இந்த வாரம் மாணவர்கள் கையில் உள்ள பணம் கரையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை உருவாகாது. பொறுப்பில் இருப்பவர்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காமல் வேலைகளை செய்தல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாது. கலைஞர்கள் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாகவும், புத்திசாலித் தனமாகவும் நடந்து கொண்டால், ஏமாற்றத்தைத் தவிர்த்து, ஏற்றமான பாதைக்கு மாறலாம்.

    Share
  • சங்கத் தமிழன் சாகாவரம் வேண்டினானா?

     


    கோ. ஆலாசியம் 

     agathiyar

    அறிவினில் உயரியத் தமிழ்மொழி என்பேன் நான்.

    மொழி என்பது கருவியாகும். ஒருவனுடைய உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி வளர்வதற்கும், வளர்ந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்வதற்கும் பயன்படும் கருவியே மொழி என்பதாகும்.

    அறிவினிலுயரியத் தமிழ்மொழி பேராழி 

    ஊறிய அமிழ்தினும் சிறந்ததென்பேன்

    பாரினில் உயரிய மகாகவியோடவன் தாசன் 

    கூறிய உன்னதறிவுப் போற்றியே

    தொன்று நிகழ்ந்தது அனைத்தும்

    உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் இவள்

    என்றுப் பிறந்தவள் என்றுணராத

    இயல்பினளாம் எங்கள் தாய்

    ஆதி சிவன் பெற்றுவிட்டன என்னை என்று தமிழ் மொழியின் தொன்மையை மகாகவி பாரதி பாடிச் சென்றான்

    ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

    ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்

    வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

     

    முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,

    ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்

    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

    வாழும் மொழியான செம்மொழி மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றும்; அதன் சிரஞ்ஜீவித் தன்மைக்கு அதன் அறிவுச் செழுமையும்; உலகப் பொருள்களிலும்; படைப்பைப் பற்றிய அதன் தெளிவை ஐயம் திரிபுர விளக்கும் தன்மையையும்; கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அது முழுமை பெற்றதை; அதாவது முழு வளர்ச்சிப்  பெற்று விட்டதும், அதன் இலக்கண அமைப்பின் வழியே காணும் போது உலக மொழிகளில் வேறந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கணம் அதுவும் பொருளிலக்கணம் எழுதப்படவில்லை என்னும் உயர்வும் இந்த அறிவினில் உயரிய அன்னை தமிழுக்கு உண்டு என்பது நமக்குப் பெருமையே.

    இன்றைய நவீன அறிவியல் கூறும் அனைத்துப் பிரபஞ்சக் கூறுகளும் அதன் உருவாக்க அமைப்பின் முறையை முறையே முதல் கரு உரிப் பொருள்கள் வழியே முறைப் படுத்தி இருவரிகளில் பிரபஞ்சத்தை சுருக்கிய தொல்காப்பியச் செய்யுள் எத்தனைப் பெரிய சான்று இம்மொழி அறிவினில் உயர்ந்து முழுமைப் பெற்ற மொழி என்பதற்கு.

    முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே

    நுவலுங் காலை முறை சிறந்தனவே…..

    ஒரு வரிசையைத் தருகிறார், அதுவே இன்றைய அறிவியலும் கூறுகிறது.

    இப்படிப் பொருளிலக்கணம் அதாவது வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்த மொழியின், அதன் அகம் புறம் என்னும் அன்றைய இலக்கியங்கள் இவற்றின்

    முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே என்று  கூறிவிட்டு அடுத்த அடியில் ‘நுவலுங்காலை முறை சிறந்தன’ என்பது இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் வரிசை அதாவது படைப்பின் வரிசையை அதாவது நிலம், பொழுது; அடுத்து கருப் பொருளான தாவரம், விலங்குகள் அதன் பின்பு பல்லாயிரம் வருடங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான் என்பதாக. இதை இப்போது அறிவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

    தொல்காப்பிய இலக்கண நூல் எழுத்தது சொல் என்று மட்டும் அல்லாது மனித வாழ்விற்கு இலக்கணமும் கூறிய நூல். இது வேறெந்த உலக மொழியிலும் இல்லாத சிறப்பு என்பர்.

    அதனால் அதனை நான் அறிவினில் உயரிய செம்மொழி என்பேன்.

    சற்று உற்று நோக்கினால்…. இப்படியொரு உயரிய இலக்கணத்தை படைக்கும் போது, அது அற்றைய நாட்களில் தமிழன் வாழ்ந்த வாழ்வினையே விளக்கும் என்பதைக புரிந்துக் கொள்ளலாம்.

    இருந்தும் அப்படியொரு வாழ்வு வாழும் போது, இப்படி இலக்கணம் படைபானானேன் என்று எண்ணினால், அது அந்த பண்பாட்டை ஒரு முழு ஒழுங்கு பெறாத பண்பாட்டை ஒரு முழு வடிவுக்கு கொண்டு வரவும், இன்னும் நுண்ணியதாக கூராக்கவும் எண்ணியே தொல்காப்பியர் செய்திருக்க வேண்டும்.

    இல்லாத ஒன்றை; அறியாத ஒன்றை திடீரென ஒருவன் வரையறை செய்ய முடியுமா? என்பதும், அப்படி செய்வானாயின்; தமது வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஒன்றை புரிந்துக்கொண்டு  சாதாரண மக்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியுமா? என்பதையும் சிந்தித்தால்; அது அன்றைய தமிழனின் வாழ்வியல் அமைப்பு தான், அதை அவன் ஒருவாறு கைக் கொண்டிருந்தான் என்பது விளங்கும்.  இலக்கணம் பிறந்தது அப்போதே என்றால் அந்த இனம் எத்தனை நாகரிகமும், வாழ்வியல் விழுமங்களையும் பெற்றிருந்தது என்பதையும் இதன் வழி நன்கு அறியலாம்.

    அகம் புறம் பிரிவு!

    அகமும் புறமும் பற்றிய இலக்கியங்கள் இந்த இலக்கண அடிப்படையிலே தோன்றி தமிழ் மக்கள் வாழ்வின் முழுமையும் பறைசாற்றுகின்றன.

    கவிஞன் ஞானோ காலக் கணிதம் என்பதைப் போல…

    இலக்கியம் என்பது மண்ணின், மாந்தரின் அது தோன்றிய காலத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுவதே. அப்படியானால் அக்கால மக்களின் மனப் பாங்கை அது காட்டும் கண்ணாடி என்று தமிழ் சான்றோர் கூறுவதற்கு இணங்க; தமிழன் தனது உணர்ச்சியின் அடிப்படையில் எப்படிச் செயல் பட்டான்.

    அதாவது, தனது மெய் சார்ந்த உணர்ச்சியில் அவனின் செயல் பாடு அவன் இந்த சமூகத்தில் மற்றோருடன் கொண்ட உறவு; குடும்பம், சமூகம் என்ற அமைப்பில் அவனது பங்கு என்பதும்; அவன் இந்த உலகை, பற்றிய எண்ணம், இயற்கையை பற்றிய கருத்து, புரிந்துணர்வு அதை அவன் கையாண்ட முறை ஆகிய அனைத்தையும் பற்றிய விழுப் பொருள்களை நமக்கு இன்று இந்த அகமும், புறமும் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை,

    அருமையான அகத்திலே ஏனிந்த அழுக்கு!

    மக்கள் நுதலிய அகன் ஐந்திணை‘ (தொல் -அகத்திணை-57)

    அனைவரும் அறிந்ததே ஐந்திணைகள்; குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம். இந்த ஐந்திணைகளிலே தமிழர் வாழ்வு அமைந்திருக்க வேண்டும் ஆனாலும் அதிலே வரும் மருதத் திணை இவர்களின் வாழ்வை நாசமாக்கி இருக்க வேண்டும்.

    அதை நாமும் வள்ளுவரின் மறைவழியே அறிய முடியும். பரத்தையருடன் வாழும் வாழ்வை சித்தரிப்பது மருதம் ஆகும். இது சங்ககால தமிழனின் வாழ்வை சங்கருத்ததும்  ஆகும்.

    பரத்தமை ஒழுக்கத்தை திருக்குறள் எப்படி எல்லாம் சாடியுள்ளது என்பதை யாவரும் அறிவோம்.

    இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும்

    திருநீக்கப் பட்டார் தொடர்பு  – (திருக்குறள் 920)

    பொது மகளிர்த் தொடர்பு, கள்ளுன்னுதல், சூதாடுதல் இவைகள் கொண்டொழுகும் மனிதனை இலக்குமி கைவிட்டு விடுவாள். தரித்திரன் ஆகி விடுவான் என்பதே அது.

    புறத்திலே புரையோடிய போரென்னும் போதை!

     

    கொடுத்தல் எய்திய கொடாமை யானும்‘ (புறத்திணை – 7)

    கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்‘ (புறத்திணை-29)

    இது சமூக ஏற்றத் தாழ்வை அந்நாளில் இருப்பதை நமக்குணர்த்தும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக புறத்திலே அதிகம் பேசப் படுவது வீரம் பற்றியனவாகும் என்பதை நாம் யாவரும் அறிவோம். அது தொண்ணூறு விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள், ஆழ்ந்துப் பயின்ற தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்.

    இந்த வீரத்தைப் புகழும் அதே வேளையில் அந்தப் போரினால் விளைந்த அவலனிலைகளைப் பற்றியும் அதுக் கூற தவற வில்லை.

    காஞ்சித் திணையிலே காணக் கிடைக்கும் அவலம் எத்தனை கொடுமை என்பதை காண்பார் உணர்வார். கணவனை போரினிலே இழந்த மனைவியரின் அவலமும், தனது மகனை இழந்த தாயின் நிலையையும், சுற்றத்தாரும் உற்ற பெருந்துயரங்களும் சொல்லி இருப்பதையும் அறியலாம். அப்படி கூறிய அந்த காஞ்சித் திணை; போரிலே புகுந்து வீரம் காட்டுதலையே பெரிதும் விரும்பிப் போற்றின என்று தான் கூற வேண்டும்.

    இதிலே பரத்தமையும், கள்ளும், சூதும் தவறெனக் கூறிய வள்ளுவன் கூட வீரத்தைப் பெரிதாக புகழ்ந்துக் கூறினான்.

    புறத்திணை குறிக்கும் கொடை, வீரம் போக, வாகைத்திணையில் சான்றாண்மை, நல்லொழுக்கம், பிறர் பிழை பொறுக்கும் பண்பு, அருளை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை துறவு, காமம் நீத்த சிறப்பு என்பவைகளையும் காணலாம்.

    ———————————————–

    துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

    கட்டில் நீத்த பாலினானும்

    கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்

    ————————————————

    அருளோடு புணர்ந்த அகற்சியானும்

    காம நீத்தப் பாலினாலும். (தொல் -புறத்திணை-17)

    ஆக போர், வெற்றிப் புகழ் என்பதிலே பெரிதும் மயங்கிக் கிடந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், அரசு கட்டிலைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டு துறவு மேற்கொண்டோழுகுவது பெரிய வெற்றி என்று வாழ்ந்தாரும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

    கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் இதற்கு நச்சினார்கினியர் உரை கூறுகிறார் ‘ வேதம் முதலிய வற்றாற் கட்டுதல் ஒழுக்கத்தோடு கூடியக் காட்சி’

    வேதம் கூறிய படி ஐம்புலன்களையும் கட்டுதல் அது எப்படி சாத்தியமாம் அதற்கான ஒழுக்கத்தைக் கொண்டு கட்டு. அதாவது ஐம்புலன்களின் வழியே உந்தன் மனத்தை அழுக்காக்கிக் கொள்ளாது கட்டு. அப்படிக் கட்டும்கால்  காணும் காட்சி. ஆக, தொல்காப்பியத்திலே இதையும் காண்கிறோம்.

    ஒப்பு நோக்க மனித வாழ்வு என்பது இன்ப துன்பம் கலந்தது என்பது தான் ஆன்றோர் வாக்கும். ஐம்பூதங்களினால் ஆன அண்டம்; இந்த பிண்டமும் அப்படியே! அவைகள் ஒவ்வொன்று வேறு வேறானது ஒத்த தன்மைக் கொண்டு விளங்காது என்பதும் உண்மையே…

    ஆகையால் வள்ளுவனார் கூறியது போல்…

    குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்க கொளல்

    தமிழ் மக்களின் வாழ்வுக் குறைகளை நீக்கினால், அந்தத் தமிழனின் வாழ்வு உலகிற்கு முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.

    வடவேங்கடம் தென்குமரி

    ஆயிடை தமிழ்கூறு நல் உலகம். —(தொல் -பாயிரம்-1)

    இது பழந்தமிழ் நாட்டின் பரப்பு என்பதை தொல்காப்பியம் வழி அறிகிறோம். இதை சேர, சோழப் பாண்டிய மூவேந்தர்களும்.. எண்ணிலா சிற்றரசர்களும் ஆண்டு வந்தனர் என்பது அறிந்ததே.

    பக்காளிச் சண்டைகளை வீரம் என்பதா?

    veeram

    இம்மூன்று மன்னர்களும் ஓயாத, ஒழியாத போர்கள். இவர்கள் சில காலம் சும்மா இருப்பினும், இவர்களைத் தூண்டிவிட்டுப் போர் செய்ய செய்தவர்களும் உண்டு என்பர். போரிடா மன்னனே இல்லை. மேலும், சோழர்களுள் அரசு கட்டிலுக்காக நடந்த போர். ஏன்? தந்தை மகனுக்குமான போர்களும் இருந்தன என்பர்.

    இப்படி மூவருள்ளும் சண்டை இட்டுக் கொள்வதால் வலியவன் வெல்வதும்; அதனால் தோற்றுப் போனவன் நாட்டில் சில பகுதிகளையும், விளைந்த விளைச்சல் மிகுந்த நிலங்களை கொழுத்துவதும், போரில் மடிந்த மனிதர்களின் குடும்பத் துயரத்தை பொருள் கொள்ளாது சர்வ சதாக் காலமும்… தமிழனுக்குள் தமிழன் அடித்துக் கொள்வதே இவர்களின் வேலையாகவும் இருந்திருகிறது.

    வாழ்ந்தவன் ஒருத் தமிழன் என்றால் மடிந்தவனும் தமிழன் தான். சமுதாயத்தில் ஒரே வாழ்வியல் என்பதால் பொருளாதாரத்தைத் தவிர வேறு பெரிய மாற்றம் இருந்திருக்க மாட்டா.

     veeram2

    இதிலே, கரிகாலன், பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுங்செழியன், சேரன் செங்குட்டுவன் பொன்றோர் ஆட்சிக் காலத்திலேயே தான் தமிழ்ப் பெருநிலம் ஒரு குடையின் கீழே இருந்திருப்பதாகவும் வரலாறு காட்டுகிறது.அதுவும் மிகக் குறுகிய காலமென்பர். எஞ்சியக் காலம் எல்லாம் போர் தான் அதுவும் பங்காளிச் சண்டை தான். இவர்கள் சும்மா இருந்தால், இவர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் அடித்துக் கொள்வார்ககளாம்.

    போர் வெறி, எப்படி த் தமிழனை பிடித்து ஆட்டியது என்பதையும் அதை எப்படி தமிழினம் போற்றியது என்பதையும் புறம் நமக்கு காட்டி நம்மையும் உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டுத் தள்ளிவிடும் இந்த புறநானூற்றுப் பாடல்களை நான் வாசிக்கும் போதே. இன்னும் சொன்னால் புல் தடுக்கிப் பயில்வான்கள் கூட வீறுகொண்டு எழுந்து வாள் கொண்டு போரிடத் தூண்டும் உணர்விற்கு ஆளாக்கும் அந்த பாடல்கள் கூறும் காட்சிகள்.

    முறத்தைக் கொண்டு பாயவந்தப் புலியை விரட்டி அடித்தாள் வீரமறத்தாய்  என்பதையும். புறமுதுகில் பட்டக் காயம் மார்பின் வழியே வந்துப் பாய்ந்தது என்பதை அறியாதத் தாய் தனது மகனுக்கு வீரப் பாலூட்டிய தனது முலைகளையே அறுத்து எறியத் துணிந்து பிறகு தெளிந்தக் காட்சிகள் எல்லாம் காணலாம்.

    சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் இரு சகோதரர்கள். இருவரிடையே போர் மூண்டது. அதை கண்ட கோவூர் கிழார் என்ற சான்றோர் இருவரையும் அமைதி பெற இப்படிப் பாடுகிறார்.

    நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

    பொருவோன் கண்ணியம் ஆர்மிடைந் தன்றே

    ஒருவீர் தோற்பினும்: தோற்பது நும்குடியே  -(புறம் 45)

    அத்திமாலை தரித்த நீவீர் இருவரும் பொருதி யார் தோற்றாலும் அது சோழன் தோற்றான் என்பது தானே. விட்டு விடுங்கள் என்கிறார்.

    வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்

    நாடு சுடு கமழ புகை எரித்தலானே   -(புறம்-6)

    உனது தலையிலே நீ சூடிய வெற்றி வாகை மலர் உனது பகைவர் நாட்டை கொளுத்திய நெருப்பால் வாடுகிறதே. ஆக, இப்படி நெருப்பால் கொளுத்துவதும் தமிழனுக்குள் தமிழ் அடித்துக் கொள்வதும்.

    அட, அப்பவே அப்படித் தானா! 🙂

    மேலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, காரிகிழார்  இப்படியும் பாடுவதாக குறிப்பர்.

    பணியியர் அத்தை, நின் குடையே -முனிவர்

    மக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே.

    நினது குடை, முனிவர் பெருமக்களுக்கும், சிவனுக்கும் அல்லாது வேறு யாருக்குப் பணியும் என்பதே. ஆக, புறநானூறில் பாடப் படுவதில் அறிஞர்கள் கூறுவது போல் தொண்ணூறு விழுக்காடு பெரும்பாலும் சகோதரப் போர்களைப் பற்றியதே இருக்கிறது.

    இதன் பயனாக, ஆக்கப் பூர்வமான சமுதாய வளர்சிக் குன்றி இருந்தது என்று நினைப்பதில் தவறு ஏது?

    இந்த அரசர்களுக்கு அறிவுரைகள் கூறுவோர் வெகு சிலராகவே இருந்திருக்கிறார்கள்.

    மதுரைக் காஞ்சியிலே அவைகள் காணக் கிடப்பதை கூறும் அறிஞர் பெருமக்கள்.

    அது ஓயாமல் போர் மூண்டு கொண்டிருக்கும் போது தலையானங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை விழித்துப் பாடப் பட்டமையைக் கூறுகிறது.

    கோதையின் புனைந்த சேக்கை துஞ்சி – (ம.கா. 713)

    முருகு இயன்றன்ன உருவினை ஆகி – (ம.கா. 724)

    பூத்த சுற்றமொடு இயன்ற உருவினை ஆகி- (ம.கா.770)

    மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

    வரைந்து நீ பெற்ற நல ஊழியையே! – (ம.கா. 782)love

    உண்டும், உற்றவளோடு மகிழ்ந்தும் களித்து, சுற்றமொடு வாழ்வாய்  என்கிறார் அவர். நல் விதி நயந்த வாழ்க்கை என்பதை குறிப்பிடுகிறார்.

    ஆக, தமிழராக இருந்தாலும், தன்னாட்டையும், தம் மக்களையும் காக்க போரிடுவது வீரம். அது ஓர் சிறந்த அரசனின் கடமையும் கூட. பெரும்பாலும் அப்படி இல்லாமலும் வெத்துப் புகழுக்கும், நாட்டை பெரிதாக்கி பெருமைப் பட்டுக் கொள்ளவும் தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.

    இதில் பெரும் கொடுமை தோல்வி யடைந்த நாட்டையும் விளைச்சல் நிலத்தையும் கொளுத்துவது தான்.

    இப்படியாகிப் போன பண்டையத் தமிழனின் வாழ்வு பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திட்டிருக்குமே ஒழிய வேறென்ன.. வேறு பாதிப்புகள் என்ன என்பதை யூகித்தும் கொள்ளலாம்..

    புலவர்களில் வெகு சிலரே இடித்துரைத்து கூறி மன்னர்களின் போக்கை மாற்ற முயன்று இருக்கிறார்கள் என்பதும் உண்மையே என்பதை இலக்கியப் பேராசிரியர்களின் ஆய்வு நூல்களில் காணமுடிகிறது.

    தமிழுக்கு நோய்களானவை.

    சங்கத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்திருந்தாலும்; அவர்களைச் சில நோய் கிருமிகள் தொற்றி இருந்ததை அறியாதும் இருந்தார்கள் என்பதை தமிழ்ப் பயின்ற சான்றோர் அறுதியிட்டு உரைப்பர்.

    அவைகளாவன… பரத்தமை, கள்ளுண் ணுதல், அரசியலில் சகிப்புத் தன்மை இன்மை, அன்புடைமை இன்மை… மனித அன்பு அகங்காரத்தால் மறைந்திருந்தமை என்றும் கூறலாம்.

    இப்படி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒருவனை ஒருவன் வீழ்த்தியதால் என்ன மிஞ்சியது… திருடர்களாய் வந்தக் களப்பிரர்கள்; நாட்டில் புகுந்து கொள்ளை அடித்தார்கள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள், தமிழர் ஒன்று பட்டு எதிர்த்தாலும் அவர்களை அசைக்க முடியாமல் இருந்திருக்கிறது.

    அன்பின் வழியது உயிர்நிலை என்பார் வள்ளுவனார்.  அறிவின் வழியது அதன் உயர்நிலை என்பேன் நான். அதையே, சங்ககாலத் தமிழரின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடும் போது; தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் தனது கம்பன் – புதியபார்வை என்ற நூலில் தெளிவுறு நடையினில் குறிப்பிடுகிறார். அதனின் சாரத்தை நானும் இங்கே குறிப்பிடுகிறேன்.

    ‘மனிதன் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கூட்டால் ஆனவன்; விலங்கிலிருந்து மனிதனை வேறு படுத்துவது அவன் பெற்றுள்ள அறிவே; மனிதப் பண்பு என்று எடுத்துக் கொண்டால் அன்பு, அருள் என்பனவற்றின் மேல்தான் அது நிலைத்து நிற்கின்றது. அதை யாரும் மறுக்க முடியாது.

    அப்படிஎன்றால் அறிவின் பயன் என்ன? அவரே பதிலுரைக்கிறார். அன்பென்பது, தான் என்ற ஒன்றின் அடிப்படையில் பிறந்து, தனது குடும்பம் தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனக்குத் தொடர்புடையவர்கள் என்பவரின் மாட்டு விரிந்து செல்வது. இது அன்பின் இயல்பு. ஆனால், அவ்வாறு செய்கையில் தனக்குத் தொடர்புடையார் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகும் தன்மையைத் தானாக அது தருகிறது.

    ஆனால், அறிவுடன் கலந்த அன்பானால்; அத்தவறுகளை இடித்துக் கூறி அது அன்புடையாரையும் திருத்த முயற்சிக்கும்.

    மெய்ப் பொருள் காண்பதறிவு

    தீது ஒரீஇ நன்றின்பால், உய்ப்பது அறிவு.

    ஆக, இத்தகைய அறிவின் துணையை நாடாது, உணர்வை மட்டுமே கொண்டு ஒரு சமுதாயம் இயங்குமானால் அது முழுவாழ்வாகாது. அது சிறு காற்றிற்கும் தாக்குப் பிடிக்காது என்கிறார்.

    மேலும் கூறுவார், பழந்தமிழ் வாழ்க்கையை எடுத்துக் கூறுவது இந்த இலக்கியங்கள் தாம். எந்த ஒரு இனத்தின் வாழ்வு முறையை அறிய உதவும் கருவி அந்த இனம் படைத்த இலக்கியமே.. இலக்கணம் அறியாதவர்களின் வாழ்வு ஒருபுடை வளர்சியுடையது. அதே போல் இப்பழந் தமிழரின் வாழ்க்கையில் உணர்வு பெற்றிருந்த இடத்தில், ஒரு மிகச் சிறு பங்கைக் கூட அறிவுப் பெற்று இருந்ததா? என்ற கேள்விக்கான சரியான விடையை இன்று கூட கூற முடியவில்லை. இத்துணை சிறந்த நாகரிகம், அந்த நாகரிகத்தின் கொழுந்து போன்ற வெளிப்பாடு தான் அவர்கள் ஆக்கிய இலக்கியம் என்கிறார்.

    முத்தாய்ப்பாய் கூறுகிறார். அக வாழ்க்கையை அணுவணுவாய் ரசித்து ருசித்து இன்புற்று வாழ்ந்தத் தமிழன் இந்த அக, புற வாழ்க்கை இடையே நான் யார் என் உள்ளம் யார்?’ என்ற வினாவை அவன் கேட்டதாகவோ, அவ வினாக்கட்களுக்கு அவன் விடைத் தேட முயன்றதாகவோ அறிய வாய்ப்பில்லை.

    இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார், புல், பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர்களுள் ஒருத் தொடர்பு உண்டு என்று ஒருக் குறிப்பால் உணர்த்தினரே ஒழிய, இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், தன பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ளத் தொடர்புகள் பற்றியும் எந்த வினாவையும் எழுப்பினதாக அதற்கு விடை காண முயன்றதாக அவன் இலக்கியத்தில் இருந்து அறிய முடியவில்லை.

    வடமொழியில் உபநிடதங்கள் தோன்றியக் காலத்தே சங்கப் பாடல்களும் தோன்றி இருக்க வேண்டும் அப்படி இருந்தும் அவற்றின் துணை கொண்டு மட்டும் ஆராயப் படவேண்டிய மேற்கூறிய வினாக்கள் எதையும் இவர்கள் எழுப்பியதாகக் கூறும் எந்த இலக்கியமும் இன்று இல்லை. தத்துவ ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்து, ஏதேனும் நூல்கள் எழுதியிருந்தால் இன்று அவற்றில் ஓன்று கூட கிடைக்கவில்லை.

    வாகைத் திணை

    உணர்ச்சிக்கு அளவுமீறி இடங்கொடுத்து விட்டமையால் அறிவாராய்ச்சிக்கோ, தத்துவ விசாரணைக்கோ வாழ்வில் நேரம் கிடைக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. அன்றியும் தொல்காப்பியப் புறத்திணை இயல் 230 வரிகளில் அமைந்துள்ளது. புலனடக்கம் பற்றியும், துறவுப் பற்றியும், ஆசை நீக்கம் பற்றியும், அருளைப் பெருக்கி கொள்ள வேண்டிய இன்றியமையாமையை பற்றியும் மொத்தமாக நான்கே வரிகள் தாம் உள்ளன என்றால், அற்றைநாள் தமிழர் இவைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும்.

    இவ்வாறு கூறுவதால் புலனடக்கம், அருளுடைமை, துறவு என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த தமிழர்களே அந்நாளில் இல்லையென்று யாரும் நினைத்து விடக் கூடாது சிறிய அளவினரே தலைப் பட்டனர். அது வியப்புக்கு உரியதாக மற்றவர்களுக்குத் தோன்றி போற்றினர். ஆகவே தான், தொல்காப்பியம் இந்த நான்கையும் வாகைத் திணையினுள்  அடக்கிற்று போலும்.

    வாகை என்றால் வெற்றி, புலனடக்கம், தன்னலத்தைத் துறத்தல் என்பவை, தன்னையே வெற்றி கொள்வதாகும்… கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பவைப் பற்றித் தொல்காப்பியம் கூறுவதை அறிந்தாலும், அதன் பொருள் தெரியாததும்.. ஆன்ம விசாரணை இருந்ததா என்பதைப் பற்றி அறிய முடியாது என்று அருமையாக தெளிவுறக் கூறுகிறார்.’

    எனது முந்தையப் பதிவில் வந்த எனதுக் கவிதையின் கருவிற்கு உயிரூட்டிச் செல்கிறார் இந்தப் பெருந்தகை.

    உண்மையிலே சொல்கிறேன், எனதுக் கவிதையை எழுதும் போது;  இந்த கருத்தை நான் படித்திருக்க வில்லை. எனது கவிதை நான் இதுவரை வாசித்த சில நூல்களின் வாயில் பெற்ற அறிவின் மூலமாக எழுந்ததே. வேதாந்த கருத்துக்கள், அனுபூதிகளின் மெய்யுணர்வு விளக்கங்கள் என்று சிலவைகளும், மகாகவி பாரதியின் பாடல்களும் எனக்கு கொடுத்த முடிபே அது. அது சங்கத் தமிழில் காணவில்லை என்பதையும் அறிந்திருந்தேன்.

    திருவாளர் சச்சிதானத்தம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தை வாசித்து எனக்குள் ஒரு சிறு பயம் கலந்த நெருடல் வந்தது… இன்னும் பெரிதும் ஆய்ந்து நோக்காமல்; அறிவினை உபயோகிக்காது உணர்ச்சி வசப் பட்டு எழுதி இருக்கிறேனோ என்று…. சற்று நேரத்தில் அந்த மன வருத்தம் என்னை விட்டு போக இந்த அறிஞர் ஆய்வுக் கருத்துகள் உதவின. எதேச்சையாக வீட்டில் இருந்த அந்த நூலில் இருக்கும் கருத்தைக் கண்டு மன நிம்மதியுற்றேன் அதை உடனே இங்கு பகிர்ந்துக் கொள்வது கடமையென உணர்ந்து எழுதுகிறேன்.

    முதுபெரும் தமிழ்அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நமது நன்றிகள் உரியதாகட்டும்.

    இங்கே மீண்டும் எனது கருத்துகளை ஓரிரு வரிகளில் கூறிக் கொள்கிறேன். ஒருவரிடமே இறைவன் அனைத்தையும் தந்துவிடுவதில்லை என்பது தான் பேருண்மை. மேலைநாட்டாரை விஞ்ஞானத்திற்கும் உலக மதங்கள் எல்லாம் தோன்றுவிக்க கீழைநாட்டாரை மெஞ்ஞானத்திற்கும் படைத்து போன்றும்.

    சற்று ஆழ்ந்து யோசித்தால் ஓர் உண்மை விளங்கும்.

    தமிழ் மொழியில் தமிழர் வாழ்வின் விழுமியப் பொருள்கள் என்பன இகலோகம் என்னும் இந்த புவியும் புவிசார்ந்த இயற்கையோடு வாழும் நெறிமுறைகளை; தமிழன் மாத்திரம் அல்ல மனிதனுக்கே உரியதாக; யாவரும் பின்பற்ற தக்கவாறு உயரியதாகச்  செய்திருப்பதைக் காணலாம்.

    அதைப் போன்று… சமஸ்கிருதம் என்னும் வேதங்கள் பூத்த மொழி, தனிப்பட்ட யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாதது போலும்… பாரத பெருங்கண்ட மக்களாகிய மூதாதையர் தொடங்கி உலகமெல்லாம் பரவி இருக்கும் அனைத்து பாரதக் குழந்தைகளுக்கும் உரிமையானதும்; அதே நேரம் அது மனித குலத்துக்காக இறைவனால் உண்டாக்கப் பட்டது என்பதும் தெளிவு.

    மனித வாழ்வியல் முறையை அறம் பொருள் இன்பம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு  தமிழரின் வாழ்விலக்கணம் உலக மானுடத்திற்கே காப்பியனாரால் தரப் பட்டுள்ளது.

    அதைப் போல அடுத்த படியான நிலையாமையை குறித்தும் வீடுபேறு என்பதை நோக்கியும் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறி நம்மை காப்பியனார் தமிழின் இரட்டைப் பிறவியான வடமொழியினை நோக்கிச் செலுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

    அதைத் தான் சங்க இலக்கியக் காலத்திற்குப் பின்பு வந்த வள்ளுவனாரும்… இளங்கோவும், கம்பனும் நமக்கு தங்களது காப்பியங்களின் வழியே பாதை அமைக்கிறார்கள் என்பது நடுநிலைமையுடன் உணர்ச்சிக்கு மாத்திரம் இடம் தராத அறிவுடையோர் யாவரும் ஏற்பர்.

    அதோடு, அதற்கு பின்பு தோன்றிய  நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று நீளும் வரிசை… இந்த தமிழ் மகான்களின் ஆக்கங்கள் யாவும் தம்ழுக்கு சிறப்பு சேர்த்தாலும்; அதன் உள்ளே இருக்கும் ஒளி , இயக்கம் அது வேதங்கள் கூறும் கருத்துக்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் அது வெறும் விகண்டவாதமேத் தவிர அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து.

    ‘அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்

    பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார்

    இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!’

    இந்த வரிகள் தாம் யான் குறிப்பிடும் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஒளிபெற்ற இறவாப் புகழ் பெற்ற ஆக்கங்களை தமிழுக்கு அளித்தனர். அவர்கள் ஆக்கங்கள் இன்னமும் ஒளிர்கின்றன. அப்படி பார்க்கையில் அவர்கள் ஒளிபெற்று நிரந்தரமானாவர்கள் என்னும் உண்மை நன்கு விளங்கும். இன்னும் சொன்னால் ஒளி பெற்றவர்களாலே இப்படி அழியாப் புகழுடைய காவியங்களைப் படைக்கவும் முடியும்.

    ஆயிரமாண்டுகளாய் ஓங்கி உயர்ந்த தமிழரின் வாழ்வு தடமாறிப் போவதைத் தடுக்கவே தெய்வப் புலவர் அவதரித்தார் எனலாம்…. அதன் பின்னே அடியார் படைகள் அணிவகுத்தனவே… ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியில் திளைத்தாலும் ஒளிபெற்றது இறைவனின் அருளால் என்றாலும், நச்சினார்கினியர் கூறுவது போன்று ‘புலனடக்கத்தோடு கூடிய காட்சி’ என்பதை மறுப்பதற்கில்லை.

    இந்த மகான்கள் எல்லாம் தமிழில் இறவாப் புகழ் உடைய அமரகவிகளை படைத்ததே அந்த ஒளியினில் திளைத்துக் கொண்டிருக்கையிலே தான் என்பதையும் அவைகள் வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது.

    மெஞ்ஞானியாகட்டும், விஞ்ஞானியாகட்டும் இருவரும் தனது மனதின் ஆழ்நிலையில் அகக் கண்ணால் தான் யுகங்களுக்கும் நிலை பெற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

    அப்படிப் பார்க்கையிலே பன்மொழித் திறனாளர், வடமொழியில் பெரும் புலமைக் கொண்ட பேரறிஞர் காப்பியனார் எழுதிய இலக்கணம் ஆதிமுதல் இன்றுவரை அல்ல இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை மாறுதல் என்பதையே காணாத ஒருப் பொக்கிசமாக விளங்கும். அந்த ஒளி  பொருந்திய மகான் மேற்கூறியோருக்கு எல்லாம் மூத்தோரே.

    எட்டயபுரக் குயில் அது என்ன கூவியது.

    பாரதி நாம் ஒவ்வொருவரும் அமர நிலை பெறவேண்டும் அதற்கு முயல வேண்டும், தியானம் பயில வேண்டும் ஒளி பெறவேண்டும்; அதை இந்த உலகிற்கு நாமே சொல்லியும் கொடுக்கவேண்டும்; அப்படி உலகில் உள்ளவர்கள் யாவரும் அமர நிலைப் பெறுவார்களாயின் இந்தக் கொடும் கலி வீழும். என்பது, பாரதி நமக்குச் சொல்லிச் சென்றுள்ளான்….

    இவைகள் எல்லாம் உபநிடதங்கள் வழியே; தமிழ் மொழி பெரிதும் பெற்று இருக்கிறது. அதைத் தமிழர் கைக்கொள்ளவேண்டும் என்பதே தெய்வப் புலவர் தொடங்கியோர் கூறியது. அதைச் செய்வோம்.. அதோடு அந்த உபநிடதங்கள் படைக்கப்பட்ட மொழியும் நமக்கும் சொந்தம் அது நமது தந்தையர் மொழி என்னும் உரிமையையும் உறுதி செய்வோம்.

    சரி, வாழ்வாங்கு வாழவும், வீடுபேறு பெறவும் வழி கூறிச் சென்றத் தமிழனின் தொடர்ச்சியில் மேற்கூறிய அத்தனையையும்; தானும் பயின்று அதையே நமக்கும் பகன்று; இன்னும் இந்த உலகும் வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்; என்பதை எட்டயபுரத் தமிழன் அந்த மகாகவி பாரதி அத்துனை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளான்.

    பாரதியின் புதியதோர் வேண்டுகோள்

    கடைசியாக மகாகவி பாரதி இன்னும் ஒரு புதிய வேண்டுகோளையும் வைக்கிறான்.

    “புத்தம் புதிய கலைகள் – பஞ்ச”

    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

    மெத்த வளருது மேற்கே – அந்த

    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

    இறவாப் புகழுடைய புதுநூல்கள்

    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

    ————————————————-

    சென் றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    அவனது வேண்டுகோளை அனைவரும் ஏற்போம். நம்மால் இயன்றதை இந்த அமரத்தன்மை வாய்ந்த தமிழுக்குச் செய்வோம்.

    தெய்வ நம்பிக்கையும், மறுபிறவிக் கொள்கையும் இருக்குமானால் இது போன்ற மாச்சரியங்கள் வரவேக் கூடாது.

    யார் கண்டார் முற்பிறவியிலே நாம் எதை அந்நிய மொழி என்றும் அந்நிய சமூகம் என்றும்  நினைத்து வெறுப்புறு கிறோமோ, ஒதுக்குகிறோமோ அந்த மொழிக்கும், அந்த சமூகத்திற்கும் அயராது பாடுபட்டு இந்நிலைக்கு நாமும் அதை உயர்த்தியும் இருக்கலாம்.

    இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே நற் 

    குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே

    மனமிருந்தால் மார்க்கமுண்டேமண்ணில் வாழ்வோருக்கே

    மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

     

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

    நன்றி!

    எனது உயர்நிலைப் பள்ளித் தமிழாசான் திருவாளர். கரு. சண்முகம் அவர்கள்.

    எனது மேல்நிலைப் பள்ளி தமிழாசான் திருவாளர். புதுகை கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    பாரதியார் கவிதைகள். (நியூ செஞ்சுரி புக் கவுஸ்)

    தமிழறிஞர். அ .ச. ஞானசம்பந்தன் அவர்கள் (கம்பன்- புதியபார்வை)

    தமிழிலக்கிய முதுகலைப் பாடப் புத்தகம் (அண்ணாமலை பல்கலைக் கழகம்)

    மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். (தொல்காப்பியக் கடல்)

    http://www.projectmadurai.org/pmworks.html

    http://www.google.com

     

    Share