Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 15, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. எம். ஜெயராமசர்மா அவர்கள்

     

    எம்.ஜெயராமசர்மா

     

    சமயக் கல்வி பயிற்றுவித்தலுக்கு  நல்லதொரு செயல் வடிவம் அமைத்து, புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டும் பணியில்  ஈடுபட்டிருக்கிறார்  திரு. எம். ஜெயராமசர்மா.  இவர் வல்லமை இதழில் சென்ற வாரம், மதக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கில் எழுதியக் கட்டுரைக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    சமயம் என்றால் என்ன, மதங்களின் நோக்கம் என்ன, அவை சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை   போன்ற  சமயத்தின் தேவையின் அடிப்படையை  மக்கள் மறந்து வெகுகாலமாகிவிட்டது. வெறும் சடங்கு சம்பிராதயங்களில் மூழ்குவதும், மதத்தின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வதும் இன்று நேற்று என்று இல்லாமல் தொடர் கதைகளாக நடந்து வருகிறது. அது மனித குலமே மதம் பிடித்து  ஒன்றை ஒன்று தங்களை  அழித்துக் கொள்ளும் நிலையாக  உலகத்தில் பரவியிருக்கிறது.

    உலக மதங்கள்  அனைத்திலுமே இன்று காணப்படும் இந்த  தடம் மாறிய நிலைக்கு  இந்து மதமும் விதிவிலக்கல்ல.  இந்து மதத்தின் தாய்நாடான  இந்தியாவில் பிறந்து வளந்தவர்களுக்கும் தங்கள் இந்து  மதத்தின்  சமுதாயப் பங்கு பற்றிய தவறானக் கருத்துகள் வேரூன்றிவிட்ட  நிலையில், வரும் தலைமுறையினரை, அதுவும் தாய்நாட்டிற்கு வெளியே வாழும் அடுத்த தலைமுறையினரை, அறிவில் சிறந்து பல்நோக்கும் கொண்டு வளரும் சிறார்களை, இந்து மதம் காட்டும் உண்மை நல்வழியை உணரச் செய்வது எப்படி என்ற கேள்விகள் புலம் பெயர்ந்த பெற்றோர்கள் மனதில் எழுந்த வண்ணம்தான் உள்ளன.

    இந்து மதத்தின் பண்பு, மிகப் பண்டையத் தோற்றத் தொன்மையின் காரணமாகவே காலத்திற்குப் பொருந்தாத சில கருத்துக்களையும் கதைகளையும் உள்ளடக்கியிருப்பது.  கைபேசி வழியே உலகத்தையே அறிந்து தகவல்களை விரல் நுனியில் கொண்டிருக்கும் இக்கால சிறுவர்களிடம், நடப்புலகிற்குப் பொருந்தாத அந்தக் கதைகளே சமயக்கல்வி கொடுத்து வழிநடத்தும் முயலும் பெற்றோர்களுக்கு  மேலும் சவாலை முன் வைத்து விடுகிறது.  சமயக் கல்வியினை  சரியான முறையில் வழங்க இக்காலத் தேவைகள் யாவை? புதிய கோணத்தில் முன்னெடுத்துச் செல்ல  வழியென்ன?  இதற்கு யாரால் சரியான வழியைக் காட்ட இயலும்? என்ற கேள்விகள் நம்மிடையே தோன்றிய வண்ணம் உள்ளன.

    இந்தத் தேவையை சரியான முறையில் எதிர் கொண்டு  தீர்வு காணும் பின்புலத்தைக் கொண்டிருக்கிறார் வல்லமையாளர்  ஜெயராமசர்மா.  தமிழ்நாட்டின்  தாராபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமசர்மா வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்.  தற்போது  ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்று அங்கு மெல்பேண்னில் வசிக்கிறார்.

    பேராதனை பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வியியல் துறையில் டிப்ளமா, சமூகவியல் துறையில் டிப்ளமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர். உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், தமிழ், இந்துகலாச்சார  விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது சமயப் பணிகளில், 2008ல் மதுரை மாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் பங்கேற்றமையும்; அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று தமிழ், கலாச்சாரம், இந்து சமயம், சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளவையும் அடங்கும்.  சமயம், தமிழர் பண்பாடு சம்பந்தமாக பேட்டி கண்டு நேரடியாக வானொலி ஒளிபரப்புகளையும் வழங்கியுள்ளார். தற்பொழுது தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும், விக்டோரியா இந்து கல்வி மையத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவருக்கு, சமயக் கல்வி பற்றிய வழிமுறைகளை வகுத்துத் தர  இவரது கல்வித்துறை மற்றும் சமயத்துறை அறப்பணிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றன எனக் கொள்வது மிகையாகாது.

    வல்லமையில் தொடர்ந்து தனது படைப்புகளைப் பகிர்ந்து வரும் இவரை வல்லமை வாசகர்கள் ஒரு சிறந்த கவிஞராகவே அறிவார்கள்.  இவர் எழுதிய பற்பல கவிதைகள் பல கருத்துகளையும் உள்ளடக்கியவை. வல்லமையின் ஆண்டுவிழா வாழ்த்து முதற்கொண்டு, சில இறைவணக்கப் பாடல்களும் வழங்கியுள்ளார்.  பொதுவாக கவிதைகள் பாடப்பெறாத இக்கால பிரபலங்கள் பலரைப் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளார்.  அவரால் பாடப்பெற்றவர்கள் வரிசையில் நெல்சன்மண்டேலோ, பாலு மகேந்திரா, உ வே சா, வாரியார், அன்னை தெரசா, ராமகிருஷ்ணர், சிவாஜி, வாலி, வைர முத்து, பாலமுரளி கிருஷ்ணா,  பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, விவேகானந்தர், கண்ணதாசன் எனப் பலர் அடங்குவர்.

    அம்மா, அப்பா , குழந்தை, பெண்ணினம் போன்ற உறவுகளைப் போற்றும் கவிதைகளுடன், சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதைகள் அழகு தமிழ் பேசிட, பக்குவத்தை அடைய, தலைவனாய் உயர, தாய்ப்பால் கொடுத்திட,  பெண்ணினைக் காத்திட என்ற வகையில் விரிகின்றன.   சற்றே வித்தியாசமான கவிதைக் கருக்களைக் கொண்ட சர்க்கரை வியாதி, ஆலமரம், குருவிக்கூடு, விஞ்ஞான வளர்ச்சி, புத்தாண்டு, மாடிவீட்டு ஏழைகள், நூலகம் போன்ற கவிதைகளும் இவரது கவிதைக் களத்தில் அடங்கும்.

    எடுத்துக்காட்டாக, யாழ் நூலகம் எரியுண்ட தினமான மே 31, 1981 நினைவாக…

    “சூறை ஆடி விட்டார்கள்!”(http://www.vallamai.com/?p=46342) என்ற கவிதையில்

    […]
    யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
    சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்
    […]

    என அந்த நிகழ்ச்சிக்கு வருந்தி கவிதை  வடித்துள்ளார்.

    இவரது படைப்புகள் வல்லமையில் மட்டுமின்றி திண்ணை, தமிழ் ஆஸ்திரேலியன், தமிழ்முரசு, அக்கினிக்குஞ்சு, நெற்றிக்கண், தேனீ, ஜியோ தமிழ், மாற்றம்,  ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன.  பிற கலைத் துறைகளிலும் இவர் பங்களிப்பு அதிகம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய இவர்,  10க்கு மேற்பட்ட நூல்களையும், 100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்ட வில்லுப் பாட்டுக்களையும், 20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து வெளியிட்டுள்ளார்.

    பல்துறை வித்தகரான ஜெயராமசர்மா வல்லமையில் பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளினால் ஏற்படும் கருத்து பேதங்கள், சமையக் கல்வியின் முக்கியத்துவம் போன்ற வகைகயில் அமைந்தவை.

    சென்ற வாரக் கட்டுரையான ,

    “புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்”  என்ற கட்டுரையில்  முன்னாள் கல்விப்பணிப்பாளரான இவர் தனது சிந்தனைகளையும் அனுபவத்தையும் முன்னிறுத்தி பலருக்கும் பயன்தரும் வகையில் அதை  எழுதியுள்ளார்.  சிறந்த விளக்கங்களுடன், தனது வாழ்வில் பெற்ற அனுபவங்களையும்  சான்றாகக் காட்டி இவர் அளித்தக் கட்டுரை முழுமையாக வாசிக்க வேண்டிய ஒன்று.  அக்கட்டுரையின் முக்கியக் கருத்து கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

    “சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாம் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

    […]

    புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

    1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
    2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
    3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று.
    4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
    5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
    6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
    7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
    8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
    9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
    10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவை மனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

    சமயய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”

    என்று கூறி செயல்முறை நடவடிக்கையாக சமயக்கல்வியை  இந்த  வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்றுக்  காட்டிய ஜெயராமசர்மா அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 8, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. பாலமுருகன்அவர்கள்

     

    sa.balamurugan

    நம்நாடு தொன்மை நிறைந்த நாடு, தொன்மையான மரபுச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் நாடு.  பெரும்பாலோருக்கு அவற்றின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. அவற்றைப்  பாதுகாக்கவும் முன் வருவதில்லை.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியகத்தின் துணை வட்டாட்சியரான  திரு. பாலமுருகன் அவர்கள்  “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” பற்றிய முறைகளைப் பற்றிய திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், அதனை அத்துறை ஆய்வறிஞர்கள் கருத்தரங்கிலும்  வழங்கியுள்ளார்.  தமிழக மரபுச் செல்வங்களைக்  காக்க முன்னெடுத்த இவரது  முயற்சிக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி பெருமிதம் கொண்டு பாடியதை இக்கால மக்கள் அறிவோம்.
    ஆனால் …..
    தென்குமரி வட பெருங்கல்
    குணகுட கடலா எல்லைத்
    தொன்று மொழிந்து தொழில் கேட்ப…”
    — மதுரைக்காஞ்சி   (70-72)

    என்ற மதுரைக்காஞ்சி பாடலிலேயே நம் நாட்டின் தொன்மை குறிப்பிடப்படுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து’ என்பது பாண்டிய மன்னன்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து, ‘மிகவும் பழங்காலந்தொட்டுத் தொடர்புடையராயுள்ளமையைப் பாராட்டிச்  சொல்கிறது’ இந்தப் பாடலின் வரிகள்.  இதனால் தமிழத்தின் தொன்மை நன்கு புலப்படுகிறது.  உண்மை நிலை இவ்வாறிருந்தும் நம் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றி வெகு சிலரே அக்கறை காட்டுகிறார்கள்.  அவர்களிலும் பலர் வாய்ச்சொல்லோடு நிறுத்தியும் விடுகிறார்கள்.  பாதுகாக்கும் செயலில் இறங்குபவர்கள் அதனினும் குறைவு.  அவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் தொழில் முறையில் தொல்லியல் துறையில் பணியாற்றுபவர்களாக இல்லாததும் வியப்புக்குரியதாக இருக்கிறது.  இத்தகைய செயல் மரபுச் செல்வங்கள் மீது இவர்கள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.  இந்த ஒரு சில ஆர்வலர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள்.

    துணை வட்டாட்சியரான இவரது பணியில் இவரது பொறுப்பு மின் ஆளுமைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக செயலாற்றுவது. படித்தது  எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்.சி. புவியியல். எந்த வகையிலும் தொல்லியியல் துறைக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்றாலும்  தமிழ்நாடு, சமூகம், பண்பாடு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். ஓய்வு பெற்ற தமிழ், தலைமை ஆசிரியரின் மகனான பாலமுருகனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊர்.  அவரது  ஊரில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைக்கோயிலும் இவரை வரலாறு, கல்வெட்டு, நடுகற்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ள வைத்தன என்கிறார் இவர்.

    இப்பொழுது அவரது ஊரில் உள்ள கோயில் வரலாற்றை கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து எழுதி வருகிறார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற வரலாற்றுத் தடங்களையும் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார்.  தமிழ், தமிழக வரலாறு, தொல்லியல், சூழலியல் தொடர்பான துறைகளில் ஆர்வமுள்ள பாலமுருகன், குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதைப்பாதுகாப்பதற்கும் முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளார்.

    மேலும், தேவிகாபுரம் பற்றிய வரலாறு, புகைப்படங்கள் பற்றி விக்கிபீடியாவிலும் பங்களித்து வருகிறார். அண்மையில் நடந்த தமிழ்விக்கிபீடியா ஊடகப்போட்டியில் இவரது தேவிகாபுரத்தில் கைத்தறி பட்டுசேலை நெசவு குறிக்கும் புகைப்படம் தமிழர் தொழிற்கலைப்பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

    days-of-the-hero

    கடந்த ஜூன் மாதம் “நடுகற்கள்” என்ற தலைப்பில் தொல்லியல் துறை நடத்திய, தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவும் நடுகற்கள் பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் (The Days of Heroes) ஒன்றில் அத்துறையின் ஆய்வறிஞர்கள் பலர் பங்கு பெற்றனர். இக்கருத்தரங்கத்தில் “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” என்ற தலைப்பில் பாலமுருகன் தனது கருத்துக்களையும் ஒரு கட்டுரையாக முன்வைத்துள்ளார்.

    தமிழ் மரபில் இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது தொன்மையான வழக்கம்.  இவ்வாறு நடப்பட்ட நடுகற்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடப்படுவதுண்டு. நீத்தோர் நினைவாக நடுகற்கள் நடும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை  “காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர” எனத் தொல்காப்பியம் வழி அறிய முடிகிறது.  பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஒரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு. தமிழக  தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) கி. மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமை வாய்ந்தவை.

    sa.balamurugan2தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்படுகின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாகியுள்ள தேவையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற  வழிமுறைத் திட்டங்களை  தனது கட்டுரையின் வாயிலாக பாலமுருகன் கருத்தரங்கில்  பகிர்ந்து கொண்டார்.

    நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும். அதனால் வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:

    1. மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்

    2. மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் (நடுகற்கள், கோட்டைகள், சிலைகள், பழைய மண்டபங்கள், இராச பாட்டை மற்றும் பல) பற்றிய கணக்கெடுத்தல்

    3. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல்

    4. நடுகற்கள் பற்றிய முழுமையான தொகுப்புப்புத்தகம் உருவாக்கி  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

    5. நடுகற்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி வலைத்தளம் அமைத்தல்

    6. நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல் தொடர்பாக அரசை வலியுறுத்துதல், அதன் தொடர்பாக அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல்

    என்ற வழிமுறைகளை விளக்கியுள்ளார் பாலமுருகன்.  மேலும் மரபுச்சின்னங்கள் வரைபடம்  தயாரித்தலைப் பற்றிய விரிவான திட்டத்தையும் குறிபிட்டுள்ளார் பாலமுருகன். அத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். இதற்கு மாவட்ட மரபுச்சின்ன வரைபடம் (District Heritage Map) எனப் பெயரிடலாம். இதற்குத் தற்போது புவியிடங்காட்டு முறைமை [Global positioning system (GPS)] / புவியியல் தகவல் முறைமை [geographic information systems (GISs)] என்ற தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நடுகல்லின் அதன் அமைவிடம் நிலநேர்க்கோடு, நிலக் கிடைக்கோடு (Latitude and Longitude) என்ற அளவில் வரைபடத்தில் குறிக்கலாம். இதன் மூலம் இந்நடுகற்கள் பிற்காலத்தில் இடம்பெயர்வு ஏற்பட்டாலும், அவை காணாமல் போனாலும் கண்டுபிடிக்க உதவும்.

    எடுத்துக்காட்டாக அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள 15 நடுகற்களையும் தொழில்நுட்ப உதவி கொண்டு வரைந்த வரைபடத்தின் மாதிரிகளையும் கருத்தரங்கில் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன் 1. மரபுச் சின்னங்களின் தொகுப்புப் பட்டியல் மற்றும் 2. மரபுச் சின்னங்கள் கணக்கெடுப்புப்  படிவம் ஆகியவற்றையும் வடிவமைத்துக் காட்டியுள்ளார்.

    sa.balamurugan3sa.balamurugan4

    மரபுச் செல்வங்களை பாதுகாப்பது என்று பேசிக் கொண்டே இருக்கும் பெரும்பாலோர்  போல அல்லாமல், செயல்முறை நடவடிக்கையில் இந்த இந்த வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று வழி வகுத்துக்  காட்டிய பாலமுருகன் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வல்லமையாளரைப்  பாராட்ட விரும்புவோருக்காக அவரது தொடர்புத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
    ச.பாலமுருகன் (S.Balamurugan)
    துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியகம், திருவண்ணாமலை
    Phone: 90475 78421
    Email: balu_606902@yahoo.com
    இணைய முகவரிகள்
    1. www.devikapuram.in
    2. www.devigai.blogspot.in
    3. www.facebook.com/devikapuram (The birth place of King krishnadeveraya)

    குறிப்பு: தகவல் வழங்கிய அகர முதல இதழுக்கு நன்றி.  திரு. பாலமுருகனின் கருத்தரங்கக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் அகர முதல இதழில் இந்த சுட்டியைச் சொடுக்கிப் படிக்கலாம்

    நடுகற்கள் பற்றிய தகவல்:
    http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/natukal.htm

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 1, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்

     

    vaidaehi herbert

    சங்கத்தமிழின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அமெரிக்கத் தமிழரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் அனைத்து சங்கத்தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். சென்ற ஜூலை 2014 இல் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில் நடைபெற்ற வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில் பங்கேற்ற வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், அனைத்து மக்களும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.   பல்கலைக்கழகங்களில்  பல பேர் செய்ய வேண்டிய வேலையை, தனி ஒருவராக தனது கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும்  பெரும் மொழிபெயர்ப்புப் பணி ஒன்றை நிகழ்த்திக்காட்டிய வைதேகி ஹெர்பர்ட்  அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.  இவரது தமிழ்ப்பணியால் கவரப்பட்டு   இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

    தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் 33 ஆண்டுகளாகவும், குறிப்பாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 14 ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருபவர்  வைதேகி ஹெர்பர்ட்.  தமிழை  இரண்டாவது மொழியாகக் கொண்ட வைதேகி, சங்க இலக்கியங்களின் அழகால்  ஈர்க்கப்பட்டார். ஆர்வம் காரணமாக ராணிமேரிக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ருக்மணி ராமச்சந்திரனிடம்  முல்லைப்பாட்டு பயிலத் தொடங்கினார். பிறகு சங்க இலக்கியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டார்.

    வைதேகியின் சங்க இலக்கிய ஆர்வத்திற்கு எல்லையே இல்லை, இவரைப்போல இந்த அளவிற்குத் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தமிழகத்திலும் இல்லை, உலகில் வேறு எங்கும் இல்லை” என்று இவரது தமிழாசிரியரான ருக்மணி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்கள் உள்ளன.

    தமிழின் அடிப்படை இலக்கியமான சங்க இலக்கியத்தில் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லாத பல தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளதால், மற்ற இலக்கிய மொழி பெயர்ப்புகளை விட இது அதிக சவாலை முன் வைக்கும் பணியாகும்.  உதாரணமாக ‘விறலி’ எனும் சொல்லுக்கு நேரடிப் பொருள் தரும்  ஆங்கிலச் சொல் இல்லாததால், தக்க சொல்லைத் தேடுவது சிரமம் தருவது   என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார்.

    இவருடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்பையும் அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைகழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள்.

               vaidehi_tamil_scholar_with_her_books          books of vaidaehi

    சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து இவரால்தான் முதன் முதலாக  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும், இதுவரை சங்க இலக்கியத்தை மொழி பெயர்த்தவர்கள் ஒரு நூலிற்கு மேல் மொழி பெயர்க்க முயலவில்லை என்பதும், அரசு மானியம், ஆதரவு போன்ற எதையும் எதிர்பார்க்காது சொந்த முயற்சியில் வைதேகி ஹெர்பர்ட் மொழி பெயர்த்துள்ளார் என்பதுவும்  இவரது பணியின் சிறப்பைக் கூறும்.

    மேலும், சங்க இலக்கிய அகராதி ஒன்றும் உருவாக்கியுள்ளார்.
    தனது காதலியை அடைய  “மடல் ஏறுதல்” என்ற  வழக்கத்தை  மேற்கொள்ளும்  சங்ககாலக் காதலனின் செய்கை இடம்பெறுவது எந்த சங்க இலக்கியங்களில் என்ற பட்டியல் கீழே:
    குறுந்தொகை –  (5 முறை) 14, 17, 32, 173, 182
    நற்றிணை –  (5 முறை) 146, 152, 220, 342, 377
    கலித்தொகை  – (6 முறை) 58, 61, 138, 139, 140, 141
    என்பது போன்ற தகவல்களும் வழங்கியுள்ளார்.

    மொழிபெயர்ப்பில் முதலில் தமிழ்ப்பாடலை வழங்கி, பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பையும், பிறகு பதம் பிரித்து பொருள் தரும் முறையைக் கையாண்டுள்ளார்.  இவரது மொழிபெயர்ப்புகளை அவரது வலைத்தளத்தில்  (http://sangamtranslationsbyvaidehi.com/)  படிக்கலாம்.  சான்றாக ஒரு பாடலுக்கு இவர் வழங்கிய  மொழிபெயர்ப்பொன்று  இங்கு வழங்கப்பட்டுள்ளது…

    __________________________

    குறுந்தொகை 40
    செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை  – தலைவன் தலைவியிடம் சொன்னது:

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

    Kurunthokai 40
    Sempulapēyaneerār, Kurinji Thinai – What the hero said to the heroine, about their love:

    My mother and your mother,
    what are they to each other?
    My father and your father,
    how are they related?
    You and I,
    how did we know each other?

    Like rainwater that falls and
    merges with the red earth, our
    loving hearts have become one.

    Notes:     This is the only poem that this poet wrote.  The poet’s name is a pseudonym taken from the key words in the poem.  The hero reassures the heroine that everything will be good for them.  He explains to her that their love is eternal, despite their families not knowing each other. The red earth and water are muthal.

    Meanings:  யாயும் – (my) mother, ஞாயும் – your mother, யார் ஆகியரோ – who are they to each other, எந்தையும் – my father, நுந்தையும் – your father, எம்முறை – in what way, கேளிர் – relatives, யானும் நீயும் – myself and you, எவ்வழி – in what way, அறிதும் – knew, செம்புலப் பெயல் நீர் போல – like rain falling on the red earth, அன்புடை நெஞ்சம் – loving hearts, தாம் கலந்தனவே – have merged
    ________________________________

    இம்மொழி பெயர்ப்புகளை நூலாக வெளியிட்டால் வர்த்தக ரீதியில் ஆதாயம் தராது  என்பது தெளிவாகத் தெரிந்தும் அவற்றை அச்சு நூல்களாகவும்  வெளியிட்டுள்ளார்.  இவருடைய நூல்கள் சிலவற்றை முதலில் முனைவர் ருக்மணி வெளியிட்டார்.  இப்பொழுது அனைத்து  நூல்களும் Digital Maxim என்ற பதிப்பகத்தால், (அமெரிக்காவில் இருக்கும்) திருமூர்த்தி ரங்கநாதன் என்பவரால் வெளியிடப்படுகின்றது. வர்த்தக மனப்பான்மை இவருக்கு இல்லை என்பதும் தமிழ்த்தொண்டு மட்டுமே இவரது முதன்மை நோக்கம் என்பதும் இவர்  வலைத்தமிழ்.காம் (http://www.valaitamil.com/) தளத்திற்கு வழங்கிய பேட்டியின் வழியாகத் தெரிகிறது.  நான்கு நிமிடமே உள்ள பேட்டியில்  இவையெல்லாம் எனது வலைத்தளத்தில் உள்ளது, என் நூலை வாங்க வேண்டியத் தேவை இல்லை(?!) வலைப்பதிவிலும் படிக்கலாம் என ஒருமுறைக்கும் மேல் வலியுறுத்துவதில் இருந்து இவரது தமிழ்ப்பணியின் நோக்கம் தெளிவாகிறது (https://www.youtube.com/watch?v=cItNOQHzfGs).  தமிழிலக்கிய மொழிபெயர்ப்பு பலரை சென்றடைய வேண்டும் என்ற இவரது சிந்தனையும், தொண்டு நோக்கில் மட்டுமே இவர் கருத்தாக இருப்பதும் புலனாகிறது.

    https://www.youtube.com/watch?v=cItNOQHzfGs

    இவரது நூல்கள் மின்நூலாகவும், அச்சு நூல்களாகவும் கிடைக்கின்றன. மின்நூலாக “ஆப்பிள் ஐ டியூன்” தளத்தில் பெறலாம் (https://itunes.apple.com/br/artist/vaidehi-herbert/id788436153?l=en&mt=11).

    சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக வைதேகி ஹெர்பர்ட்  அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் (2012 ஆம் ஆண்டில்) விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.

    vaidehi_tamil_scholar
    இலக்கியத் தோட்டம் விருது. படம் உதவி: BBC NEWS

    நல்லி திசையெட்டும் நடத்திய ஆகஸ்ட் 2013 மொழி பெயர்ப்பாளர்களை சிறப்பிக்கும் விழாவில் “பாஷா பூஷன்” விருதும் வழங்கப் பட்டு  இவர் சிறப்பிக்கப் பட்டார்.

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில், படம் உதவி: siragu.com
    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில், படம் உதவி: siragu.com

    வட கரொலினா மாநிலத்தின் தமிழ்ச் சங்கத்திற்காக  மூன்றுநாட்கள் நடைபெறும் சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும்  சென்ற  ஆகஸ்ட்  2013 இல் நிகழ்த்தினார். சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனத் தொடங்கி சங்க இலக்கிய  நூல்கள் பற்றிய முன்னுரை அறிமுகத்தில் தொடர்ந்து, அகப்பாடல்களில் இருக்கும் முதல், கரு, உரி என்பவை பற்றிய விளக்கம் என விரிவுரையாகத் தனது இலக்கியப் பயிற்சிப் பட்டறையை தொகுத்து வழங்கி அமெரிக்கத் தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

    தனது தமிழ்ப்பணியின் மற்றொரு பகுதியாக குழந்தைகளுக்குச் சூட்ட சங்கத் தமிழ்ப் பெயர்களையும் திரட்டி அதற்காக ஒரு வலைத்தளமும் உருவாக்கியுள்ளார் (http://puretamilbabynames.wordpress.com/).  தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்காது இருப்பது வருந்தத்தக்கது  என்று அத்தளத்தின் அறிமுகப் பகுதியில்  குறிப்பிடும் வைதேகி, அவர் வசிக்கும் ஹவாய் மாநில மக்களுடன் ஒப்பிடுகிறார்.   நூறாண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலும் ஹவாய் மக்கள் அவர்கள் மொழியில், அவர்கள் மரபுப் பெயர்களை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதையும் அதைப் பற்றி பெருமிதம் கொள்வதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    தனது கணவருடன் இணைந்து ஆண்டுக்கொருமுறை தமிழகச்சுற்றுலா ஒன்றினை (‘Tamil Heritage Tour’) ஏற்பாடு செய்து, மகாபலிபுரம், புதுச்சேரி, பிச்சாவரம், தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை, காஞ்சீபுரம், சென்னை போன்ற ஊர்களுக்கும், யானைகள், புலிகள் சரணாலயம் புராதன சமணக்கோயில்கள், போன்றவற்றையும் இவரது  சுற்றுலா (Herbert’s Tamil Heritage Tour, http://www.nivalink.com/corporate-groups/inbound/tamilnadu-vaidehi) அறிமுகப்படுத்துகிறது.

    சிறந்த தமிழ்த் தொண்டாற்றி வரும் வைதேகி ஹெர்பர்ட் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவரை பாராட்ட விரும்புவோருக்காக இவரது மின்னஞ்சல் முகவரி: kavini100@gmail.com

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 25, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள்

    Hedy Epstein
    அமெரிக்க மிசௌரி மாநிலத்தில் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடியதால் கைது செய்யபட்டவர் போராளி ‘ஹீடி எப்ஸ்டீன்‘ (Hedy Epstein). தனது 90 ஆவது வயதிலும் துடிப்புடன்   அயர்வின்றி மனித உரிமைகளுக்காகப்  போராடி வரும்  மனித உரிமைப் போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

     

     

    hedyepstein_collage
    இவர் ஆகஸ்ட் 15, 1924 ஜெர்மனியில் பிறந்தவர்.  யூத மதத்தைச் சேர்ந்தவர்.  இவரது குடும்பத்தினர் பரம்பரைப் பரம்பரையாக அங்கு வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.  பெற்றோருக்கு ஒரே குழந்தையான இவரது 8 ஆவது வயதில் ஜெர்மனியில் சர்வாதிகாரி  ஹிட்லர் பதவியேற்று இருக்கிறார்.  ஹிட்லரின் அடக்குமுறையால் பிற யூதர்களின் குடும்பம் அல்லலுற்றது போலவே இவர்களும் துன்பம் அடைந்திருக்கிறார்கள்.  குடும்பமாக வெளியேற முயற்சித்தும் அகதிகளாக அவர்களுக்கு வேறு நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.  கிண்டர் ட்ரான்ஸ்போர்ட்  என்ற மக்கள் நல நிறுவனம் ஆயிரக்கணக்கான சிறுவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அனாதைவிடுதிகள் போன்ற இடங்களில் தங்கவைத்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது.  இதை அறிந்த ஹீடி எப்ஸ்டீனின் பெற்றோர்கள் இவரிடம் பேசி நிலைமையை உணர்த்தி, இவரை மட்டும் அந்த தொண்டு  நிறுவனத்தின் உதவியுடன் இவரது 14 வயதில் தப்ப வைத்தனர்.  அதன் பிறகு அவருடைய பெற்றோர்களையும் மற்ற குடும்ப நண்பர்களையும் அவர் பார்த்ததில்லை.  அவர்கள் யாவரும் ஹோலோகாஸ்ட் முகாமில் உயரிழந்தனர் என்று நம்பப்படுகிறது.

    அவ்வாறு ஜெர்மனி அரசால் முகாமில் அடைபட்டு இருந்த பொழுது அவரது அன்னை எழுதிய கடைசிக் கடிதமான அஞ்சல் அட்டையில் அவர் தங்களது துயரங்கள் எதையும் சொல்லி இவரை வருத்த விரும்பாமல், அன்பு மகளுக்கு நாங்கள் கிழக்கு நோக்கிப் பயணமாகிறோம், இறுதியாக விடைபெற்றுக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.  போர் முடிந்தவுடன் ஜெர்மனி திரும்பியும் அவர்களை இவரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  பிறகு ஹிட்லரின் கொடுஞ்செயலில் இறந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

    ஜெர்மனியில் இவர் கொஞ்ச நாட்கள் பல பணிகளில் ஈடுபட்டாலும் அவையாவிலும் இவர்  நோக்கம் மனித உரிமைகளுக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கிறது.  பிறகு அமெரிக்காவிற்கு குடியேறி தற்பொழுது மிசௌரி மாநிலத்தில் வசிக்கிறார்.   தொடர்ந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவற்றில் சில சிறைக்கைதிகளின் அனுமதியின்றி அவர்கள் மீது மருத்துவ ஆராய்ச்சி நடத்திய வழக்கில் தகவல் சேகரிக்க உதவியது, வீட்டுவசதியில் இனவேறுபாடு என்ற பிரிவற்ற சமத்துவம், கருச்சிதைவு உரிமை, போர்களை எதிர்த்துப் போராடுவது போன்றவை ஆகும்.  தனது போராட்டங்களுக்கு ஆதரவாக உரை நிகழ்த்த, போரை எதிர்த்து அமைதி காக்கும் முயற்சி போன்றவற்றிற்காக கட்டமேலா, நிக்கராகுவா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு 1989 ஆம் ஆண்டில் பயணம் செய்தவர்.

    யூத மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்ப்பவர்.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் அநீதிகளுக்ககாக 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் வெஸ்ட் பேங்க் பகுதிக்குச் சென்று அங்கு அமைதியான  போராட்டம் செய்பவர், உண்ணாவிரதம் இருப்பவர்.  யூதராக இருந்தும் இஸ்ரேலுக்கு இவர் ஆதரவு தராத காரணத்தினால் யூத மக்கள் இவர் மீது கோபம் கொண்டு அவரது சொற்பொழிவுகளை நடத்த விடாமல் இடையூறு செய்வதுண்டு.  இவ்வாறு உலக நாடுகளுக்குப் பயணம் செய்து அமைதிக்காகப் போராடும் இவருக்கு இவர் வசிக்கும் ஊரிலேயே அமைதி குலையும் நிலையும் அதற்காகப் போராடும் தேவையும் ஏற்பட்டது.

    ஆகஸ்ட் 9, 2014 முதல், கடந்த அரை மாதமாக அமெரிக்க மக்களின் விவாதத்திற்குரியதாக, தொடர்ந்து ஊடகச் செய்திகளில் அலசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி மிசௌரி மாநிலத்தைச் சேர்ந்த ‘மைக்கேல் பிரவுன்’ என்ற  18 வயது  இளைஞர் காவல்துறை அதிகாரி ‘டேரன் வில்சன்’ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி.  சுடப்பட்டவர் ஆயுதம் எதையும் வைத்திராத ஒரு கறுப்பின இளைஞர் என்பதும், அவரை சரமாரியாக ஆறுமுறை சுட்டுக் கொன்றவர்  வெள்ளையர்  என்பதால்  அந்த நிகழ்ச்சி நடந்த ஃபெர்குசான் நகர மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து காவல் துறையினரால் கறுப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, அதிலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அதிகாரியால் உயிரிழக்க நேரிடுவது ஒடுக்கப்படிருந்த சிறுபான்மையினர் மீது இன்றும் தொடர்ந்து நிகழ்ந்தப்படும் அடக்குமுறை  என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது.   இது ஒரு பெரும் போராட்டமாக வெடித்து மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது, அத்துமீறிய நிகழ்வுகள் நடந்தால் காவல்துறை அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தாக்குவதும் தொடர்ந்து வருகிறது. இரவில் ஊரடங்கு உத்தரவு, போராளிகளைக் கலைக்க கண்ணீர்ப்புகை போன்ற வழியில் கலவரம் முற்றும் நிலைக்கும் போனது.  நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல தரப்புகளில் இருந்தும்  ஃபெர்குசான் நகரக் காவல்துறை கண்டனதிற்கு உள்ளானது.

    நகரக்காவல்துறை நிலைமையைக் கையாள்வதை நிறுத்தச் சொல்லி மாநில ஆளுநர் நெடுஞ்சாலை காவல்துறையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அதுவும் பலனளிக்காமல் போன பிறகு இராணுவத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.  ஏற்கனவே போராடுபவர்களை தீவிரவாதிகளைப்  போல நடத்திப் போர்க்கால ஆயுதங்கள் கொண்டு அடக்கப்பட்டதில் கொதித்திருந்த போராளிகள், இராணுவத்தை  ஆளுநர் வரவழைக்கிறார் எனத் தெரிந்ததும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஒருவருடன் ஒருவர் கை கோர்த்து அரசு அலுவலகம் முன் நின்று வாசலை வழிமறித்து முற்றுகை இட்டனர்.

    இவ்வாறு சென்ற திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2014) அன்று முற்றுகை இட்டவர்களில் மனித உரிமைப் போராளி  ஹீடி எப்ஸ்டீனும் ஒருவர்.  காவல்துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொன்னதையும் பொருட்படுத்தாது முற்றுகையிட்டோர் தொடர்ந்து போராடவும் அவர்களில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் (ஒருவரைத் தவிர மற்றவர்களை சிலமணி நேரத்திற்குப் பின்னர்  விடுதலை செய்துவிட்டனர்).  வரும் அக்டோபர் 21, 2014 அன்று நீதிமன்றதிக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையில்  ஹீடி எப்ஸ்டீனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    ஹீடி எப்ஸ்டீனைக் கைது செய்த பொழுது அவர் காவல்துறையிடம் சொன்னது மக்களைக் கவர அது “டுவிட்டர்” சமூகவலைதளத்தில் பலரால் பரப்பப்பட்டது. வியந்து பாராட்டப்பட்டது.

    ferguson arrest
    “நான் என் பதின்ம வயதிலிருந்து மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறேன், எனது 90 வயதிலும் நான் போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்த்ததில்லை…. நாம் இப்பொழுது அநீதிகளை எதிர்த்தால்தான்  பிற்காலத்தில் மக்களும் தங்களது 90 வயதுகளில் போராடவேண்டிய நிலை வராமலிருக்கும்”

    ஹீடி எப்ஸ்டீன் அம்மையார் கைதாகும் நிகழ்ச்சியைப் பற்றிய தொலைகாட்சி செய்தி வழங்கிய காணொளி:
    http://youtu.be/cS3wGvsYik8

    தன்னைவிட வேறுபட்டு இருப்பவர்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறையும், அவர்களை தங்களைவிடத் தகுதியில் குறைந்தவர் என்ற எண்ணம் கொண்டு ஏளனப்படுத்துவதும், அவர்களை மதிக்காது நம்பிக்கையற்று நோக்குவதும், கண்காணிப்பதும் இன்றுவரை நிகழும் ஒரு மனிதாபிமானம் அற்ற செயல்.  ஒருவரது இனத்தின் பின்புலம் காரணமாக இன்றும் அடக்குமுறை அமெரிக்காவில் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இது போன்ற அநீதிகள் என்னை மிகவும் பாதிக்கிறது என்று கூறுகிறார் ஹீடி எப்ஸ்டீன்.

    மனித உரிமைகளுக்காகத் தனது தள்ளாத வயதிலும் போராட்டத்தில் இறங்கும் ஹீடி எப்ஸ்டீன்அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அவருடைய போராட்டத்தையும் கைதான செய்தியையும் அறிந்து  தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அவருக்குப்  பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  காலை ஆறுமணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து அழைத்து பாராட்டுபவர்களுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.  அவரைப்பாராட்ட விரும்புவோருக்காக கீழே அவரைத் தொடர்பு கொள்ள உதவும்  தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது.

     

     

    மேலதிகத் தகவல்கள்:
    Hedy Epstein
    Wikipedia Link: http://en.wikipedia.org/wiki/Hedy_Epstein
    Personal Website: http://www.hedyepstein.com/
    Mail: 5547 Waterman, #1E , St. Louis, MO 63112, USA
    Phone: (314) 361-6820
    Email: hedy@hedyepstein.com

     

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • சிங்காரச் சென்னை என்றோர் கிழவி

    — தேமொழி.

    இந்த ஆகஸ்ட்  22, 2014 இல் தமிழகத்தின் தலைநகர் சென்னை தோன்றி 375  ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  சென்னை ஒரு பழம் பெரும் நகரம்தான் என்றாலும்   இச்சென்னை மாநகர் தனது 257 ஆம் ஆண்டில் நடை போடும் பொழுதே சென்னை நகரைக் “கிழவி” என்று ருட்யார்ட் கிப்லிங் எழுதியுள்ளார்.

    ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது.  அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான “தி ஜங்கில்  புக்” என்பதாகும்.  அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகச் சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர்.  தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப்  பிறந்தவர்.  அவர் பிறந்தபொழுது அவர் தந்தை “Sir J. J. College of Architecture” என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார்.  அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது.  கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஓர் இடத்தில் பொறிக்கப்படுள்ளது. அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

    அதற்குக் குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது.  எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வதற்கில்லை.  ஆனால் அவர் கூறிய மற்றொரு கூற்று “தி வைட் மேன்ஸ் பர்டன்” (The White Man’s Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது.  ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார்.  இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதிய அக்கால ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து. நமது கடிகாரம் சரி என நாமே நினைத்து நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்….அது சரியா? எனவே இது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான்.

    நோபல் பரிசுகள்  வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்)  என்ற பெருமைகள் இவரைச் சாரும்.  மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலை பார்த்தார்.  பின்னர் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை.  அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது.  இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார்.  ஜங்கிள் புக் கதையின் கருவாக இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல அவரது பிற படைப்புகளிலும்  இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.

    இவரது “If___” (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருத்து தெரவித்துள்ளார். சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் ஜெர்மனின் நாஃசிப் படைகளின் குறியாக  சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

    தனது  “The Seven Seas” என்ற புத்தகத்தை (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm)  கிப்லிங் பம்பாய் நகரத்திற்குச் சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே அதில் எழுதியுள்ளார்.  இந்தப் படைப்பில் ஓரிடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக “The song of the Cities” என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன.  அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec, Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland).  அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் கவிதைப் பகுதிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

    The song of the Cities
    (by Rudyard Kipling, 1896)

    Bombay
    Royal and Dower-royal, I the Queen
    Fronting thy richest sea with richer hands —
    A thousand mills roar through me where I
    glean
    All races from all lands.

    Calcutta
    Me the Sea-captain loved, the River built,
    Wealth sought and Kings adventured life to hold.
    Hail, England!  I am Asia-Power on silt,
    Death in my hands, but Gold!

    Madras
    Clive kissed me on the mouth and eyes and brow,
    Wonderful kisses, so that I became
    Crowned above Queens –a withered beldame now,
    Brooding on ancient fame.

    (* beldame என்றால் பாட்டி , முதியவள், கிழவி என்று பொருள்)

    இராபர்ட் கிளைவ் கொடுத்த அருமையான  அன்பு முத்தங்களினால் முடிசூடிய இங்கிலாந்து அரசியைவிடவும் உயர்ந்த புகழுடன் இருந்த சென்னை நகரம் பிறகு பழம்பெருமையை எண்ணி வாடிய கிழவியாக  இருப்பதாக சென்னை தன்னைப்பற்றிக்  கூறுவது போல அக்கவிதைவரிகள் எழுதப்பட்ட ஆண்டு 1896, அதாவது  118 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையின் நிலை கிழவியாக இவரால் கருதப்பட்டிருக்கிறது.

    Chennai Mount Road in - 1896Chennai Chepauk Cricket-1891Chennai HARBOUR-1891Chennai high courts -1895Chennai Marina beach-1890Chennai Moubray Road-1885Chennai Napier Bridge-1895Chennai Parrys Corner-1890

     

     

     

     

     

     

     

    படங்கள் உதவிக்கு நன்றி:
    https://groups.yahoo.com/neo/groups/sagakkal/conversations/topics/979

     

     

    இக்கட்டுரையின் “ருட்யார்ட் கிப்லிங்” பகுதி வேறு ஒரு கட்டுரையாக முன்னர் வெளிவந்தது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 18, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் அவர்கள்

    Mohanarangan Srirangam

     

    ஆன்மிக சிந்தனையாளர் திரு. மோகனரங்கன் அவர்கள் பரந்துபட்ட பல ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவர்.  அவ்வாறு தான் படித்ததைப்  படித்தவாறே ஏற்றுக் கொள்ளாது அவற்றை  வெவ்வேறு கோணங்களில் ஆராய்பவரும் கூட. சிந்தனையின்  முடிவில் அவர்கொண்ட கருத்துகள் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு  மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும் அவற்றைப் பிரதிபலிப்பதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்.  இந்தப் பிரதிபலிப்பின் நீட்சியாக, தொடர்ந்து இவரது எழுத்தைப் படிப்பவர்களும் சிந்திக்கத் தூண்டப் படுகிறார்கள்.  தனது எழுத்தின் மூலம் வாசகர்களின் ஆன்மிக சிந்தனைக்கு வினையூக்கியாக இருக்கும் மோகனரங்கன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார். இவரது ஆன்மிக சிந்தனைகளின் பிரதிபலிப்பை வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

    சென்னை வங்கி ஒன்றில்  பணிபுரியும்  திரு. மோகனரங்கன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலக்கியம், தத்துவம், இறையியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர், அத்துடன்  வரம்பற்ற வாசிக்கும் பழக்கமும் கொண்டவர்.  ஆன்மிக சிந்தனையாளர்கள் ராமகிருஷ்ணர், ரமணர், விவேகானந்தர் என்று ஒரு பக்கமும், நாத்திக சிந்தனையாளர் அயன் ரேண்ட் பற்றியும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் பற்றி மறுபக்கமும் ஆர்வத்துடன் படிப்பவர்.  அதேபோலத்தான் இலக்கியத்திலும் இவரது ஆர்வம் பல துறைகளையும் தொட்டுச் செல்லும்.  தமிழிலக்கியத்தில் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள்  என்ற வைணவ இலக்கியங்களையும், பெரிய புராணம் போன்ற  சைவ இலக்கியங்களையும் ஒரு சேர படிப்பவர்.  விக்டர் ஹ்யூகோ பற்றியும் விளக்கம் தருகிறாரே இவர் என்று வியந்தால்  அக்கால ஸ்ரீ  ராமானுஜர் தத்துவங்களைப் பற்றியும்  இக்கால அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாதாசாரியார் பற்றியும் விரிவுரை வழங்குவார்.  பொருளாதாரக் கொள்கை , கம்யூனிசக் கொள்கை  …இல்லை…இல்லை இவற்றையும் இவர் விட்டு வைத்ததில்லை. பலநூல் படிப்பும் அவற்றை ஒப்பிட்டு ஆராயும் பாங்கும் இவரது சிந்தனையை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் குடத்திலிட்ட விளக்காக தான் அறிந்து கொண்டதை மறைத்துவிடாமல் குன்றிலிட்ட விளக்கொளி போல பலர் பயன்பெற தனது பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்வது இவரது சிறப்பு.

    இதற்குக் காரணம் “படிப்புதான் உண்மையான யோகம்”என்று இவர் கொண்டுள்ள கருத்தாகும்.  அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே …

    “நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

    இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் – எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் – படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

    எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.”  

    குறிப்பாக ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களுக்கு இவரது சிந்தனை மற்றொரு கோணத்தைக் காட்டும் என்பதை கீழ்வரும் கட்டுரையின் பகுதி வெளிப்படுத்துகிறது …

    “கற்றலும் நம்பிக்கையும்
    பழைய மரபுகளைப் பற்றி ஆர்வம் கொண்டு அதைக் கற்பவர்கள் கட்டாயமாக அந்த மரபுகளைத் தம் வாழ்நெறியாகத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை.பண்டைய நெறிகளைக் கற்று அறியும் ஆர்வம்தான் போதிய காரணம். ஆனால் பழம் மரபுகளில் பெரும் நம்பிக்கை கொண்டு அவற்றைத் தம் வாழ் நெறியாகவே கொள்பவர்கள் அறிவதற்காக மட்டும் அந்த மரபுகளில் தோய்வது இல்லை. அந்த மரபு சார்ந்த நெறிகள் சொல்லும் உலகம் அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இன்றும் உண்மையான ஓர் உலகமாக ஒரே உலகமாகப் போய் விடுகிறது. அந்த மரபு சொல்லும் உலகக் கோட்பாடுதான் ‘தி உண்மை’ என்ற கடும் கருதல் விரதத்திற்குத் தங்களை ஈடு கொடுத்துவிடுகின்றனர். அப்படி, சொல் செயல், மனம் எல்லாவற்றையும் ஒரு நெறியில் காவு கொடுத்து, அதில் தன்னையே இழக்கும் வெறியான மனப்பான்மைக்குத்தான் பண்டைய நெறிகள் பெரும்பான்மையும் நம்பிக்கையாளர்களை மறைமுகமாகவோ நேரடியான ஆணைகள் மூலமாகவோ ஊக்குவிக்கின்றன. எனவே ஒரு நம்பிக்கையாளராக மத மரபுக் கருத்துகளைப் பயில்வோர் ஒரு விதத்தில் Probation for religious exclusivism if not fanaticism என்ற நிலையில் தம்மைப் பெய்து விடுகின்றனர்.

    விவேகாநந்தரின் கருத்துகள் பற்றிய விமரிசனம்சத்சங்க மஹிமை, சமய நெறிகளும் சமரஸ வாதமும், எது பக்தி? தற்கால ஆன்மிகம், நாத்திகம் பரவ வேண்டும் என்று ஆன்மிக சிந்தனையைப் பல கோணங்களில் ஆராயும் இவர் தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் வலியுறுத்துவது  “சிந்தனை செய்ய…”

    “அகல்யா கற்பிழந்தாள் என்ற அபத்தக் கதை” என்ற பதிவில்…

    அகல்யாவின் கற்பிழத்தலைப் பற்றி காலம் நெடுக பேசுகிறார்கள். யாராவது காட்டில் இருந்த வேறொரு முனிவரிடமோ, அல்லது அரசன் ஒருவனிடமோ, அல்லது ரிஷி குமாரன் ஒருவரிடமோ உறவு கொண்டிருந்து அதனால் அவளுக்கு இந்தப் பெயர் என்றாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு இந்திரனிடம் கற்பு இழந்தாள் என்று கூறப்படுகிறது.

    அதையே தாருக வனத்தில் நிர்வாணமாகச் சிவபெருமான் சென்று ரிஷி பத்தினிகளை மயங்கச் செய்தது உயர்ந்த தத்வார்த்தமான ஒன்றின் ஸிம்பாலிஸமாகப் பார்க்கப் படுகிறது.

    கோபியரின் காதலும் கண்ணனிடத்தில் ஈடுபாடும் உயர்ந்த பக்திநிலையைக் குறிக்கும் அவஸ்தைகளாகப் பார்க்கப் படுகிறது.

    அனைவரும் தேவர்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே.

    ஆனால் அகல்யாவின் விஷயத்தில் ஏன் அது ‘கற்பிழந்தாள்’ என்று பெரும் மானக்கேடாகச் சித்திரிக்கப்பட வேண்டும்?

    அரசனிடமோ, முனிவனிடமோ, வேறு மானிடர் யாரிடமோ உறவு என்றால் இந்தக் களங்கக் குற்றம் புரிந்துகொள்ள முடியும்.

     “இங்கு உறவு என்பது அந்தக் காலத்தில் கடவுள் என்று கருதப்பட்ட, மானிட மெய்மை அல்லாத ஒரு தத்துவ வடிவினால் ஆய உருவத்திடம்தானே!”

    மற்ற உதாரணங்களில் எல்லாம், தத்வார்த்தமாக ஸிம்பாலிஸம் என்றால் அகல்யா விஷயத்தில் மட்டும் அது அப்படியே காமத்தனமான நடவடிக்கை ஆகிவிடுகிறதா?

    சிந்தனை செய் மனமே!

    […]

    இந்த அபத்தக் கதைகளின் ஆரம்பகால நோக்கமே ஒரு பக்தி நெறி தலைதூக்கி முன்னிருந்த பக்தி நெறியொன்றை வழ்க்கத்திலிருது நீக்கியிருக்கிறது என்பதில்தான் நிறைவேறியிருக்கிறது.

    எவ்வளவு காலம்! காலம் காலமாக நம் நாட்டுப் பண்டிதர்களும், அறிவு ஜீவிகளும், தற்கால எழுத்தாளர் பிரம்மாக்களும் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களோ!

    “நாத்திகம் பரவ வேண்டும்” என்ற சிந்தனை நோக்கில் இவர் முன்னிறுத்தும் கருத்துக்கள்,  மதங்கள் மக்களின் சிந்தனையை முடக்குவதால் மாற்றுவழி தேவை என்ற நோக்கில் வைக்கப்படுகிறது…

    மிகவும் ஆழ்ந்து நோக்கினால் மனிதர்களின் இயல்பான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் குந்தகமும் தடையும் விளைவிப்பனவாய் இருக்கின்றன மதங்கள். அதுவும் ஹிந்து மத சமுதாயத்தைப் புனரமைப்பது, சீர்திருத்துவது என்பதெல்லாம் ஒருவர் தம்மைத்தாமே தற்காலிகமாக ஏமாற்றிக் கொள்ளும் வேலை என்றுதான் படுகிறது. ஹிந்து மதத்தை விட்டுப் பிரிந்து தனி மதமாக ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சில காலங்களின் முன்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியர் சிலர் முயற்சி செய்ததைப் பற்றிக் கடும் விமரிசன எண்ணத்தை முன்னரெல்லாம் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் விரும்பியதிலும் ஒரு காரணமும் நியாயமும் இருப்பதை இப்பொழுது உணர்கிறேன். அவர்களைப் பற்றிய விமரிசன எண்ணம் எனக்கு மாறிவிட்டது (Posted: August 9 at 11:43pm)
    https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969343329749350

    எப்படிப்பட்ட தன்மை உள்ள செய்கைகளையும், கருத்துகளையும் பற்றி, தம்மளவில் நல்ல மனிதர்கள் கூட, உள்ளத்தின் அதிர்வுகளுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளத்த தகுந்த வழியில் மனசாட்சியை மழுங்க அடித்துவிடும் கலையை மத நம்பிக்கைகள் பயிற்றுவிக்கும் (August 9 at 10:57pm)
    https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969328769750806

    ஆன்மிகம் தவிர்த்து பொருளாதார  சித்தாந்தங்கள் பற்றியும் ‘உபரி மதிப்பு’ கட்டுரையில் இவர் சிந்திக்கும் கோணம்…

    “இந்தியாவில்    ஒரு  மணி  நேரம்   ஒருவர்   உழைக்கிறார்.   அதற்கு    ஒரு  மதிப்பு  நிர்ணயமாகிறது.     அதே  நேரம்  அதே  உழைப்பு   அவர்    வேறு  ஒரு  நாட்டில்    செய்தால்     பலமடங்கு    மதிப்பு    பெற முடிகிறது.    அப்பொழுது     உழைப்புக்கான  உரிய  மதிப்பை    முடிவு  செய்வது   எது?     சந்தையின்    தேவை   என்பதுதானே      அனைத்து  மதிப்புகளையும்   நிணயிக்கும்     மூலம்.     சந்தையின்   தேவை    நிர்ணயித்துத்    தரும்    மதிப்பு    உழைப்புக்கு  வந்தடையாமல்    போக   இடைப்பட்ட    தடங்கல்கள்    ஏற்படலாம்.  அப்பொழுது    அந்தத்   தடங்கல்களை     சமாளித்து    உரிய  மதிப்பைப்  பெற்றுத்தரவும்,    எதிர்காலத்தில்   தடங்கல்கள்   ஏற்படாதவாறு   பார்த்துக்கொள்ளவும்     உழைப்பவரின்  ஒருங்கிணைந்த    அமைப்பு     அவசியம்  இல்லையா?”       

    மோகனரங்கன்  ஒரு சிறந்த கவிஞரும் கூட.  உணர்வின் உயிர்ப்பு, காற்றுகளின் குரல் என்ற கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.  காற்றுகளின் குரல் கவிதை நூலில்    4000 கி மு விலிருந்து இன்றுவரை, சுமார் 25 நாடுகளிலிருந்து நூறு கவிதைகளை  மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    கட்டளைக் கலித்துறையில் பாடல்கள், சங்கத்தமிழ்  கவிதைகளை ஒத்த கவிதைகள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

    “If you have knowledge, let others light their candles in it” என்றும் “Sharing will enrich everyone with more knowledge” ஆங்கிலப் பொன்மொழிகளுண்டு.  அதற்கொப்ப தான் அறிந்து கொண்டதை, தான் சிந்தித்த ஆன்மிகத்தின் மாறுபட்ட கோணத்தை தனது பதிவுகளின் மூலம் வழங்கிவரும் மோகனரங்கன் அவரது சிந்தனையைத் தூண்டும் எழுத்துகளுக்காகப் பாரட்டப்பட வேண்டியவர். இவ்வாரத்தின் வல்லமையாளராக மோகனரங்கன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    மோகனரங்கனை “அரங்கனார்” என்றும் அன்புடன் சிலர் அழைப்பதுண்டு…வல்லமை மின்னிதழில் கட்டுரைகள் எழுதியுள்ள இவர் கூகிள் குழுமங்களில்; குறிப்பாக வல்லமை கூகிள் குழுமத்திலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.  இவர் எழுத்துக்களை  படிக்க விரும்பினால் …

    இடம் பிடிக்க வேண்டுமெனில்
    வடம்பிடிக்க வாருங்கள்
    “அரங்கன்” தேர் அசைகிறது …

    (இவரது  “உணர்வின் உயிர்ப்பு”, என்ற கவிதை நூலில் உள்ள “கவி தைத் தேர்” என்ற கவிதையில் வரும் வரிகள் இவை.  தமிழினி, நவம்பர் 2002, பக்கம் 27 )

    https://www.facebook.com/mohanarangan.srirangamv
    http://thiruvarangan.blogspot.in/

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • My India, My Pride

    My-India-My-Pride

    INDIA

    Contents:
    Introduction
    Geography
    People and Society
    Government
    Economy
    Energy
    Communications
    Transportation
    Military
    Transnational Issues

    Introduction

    Background:
    The Indus Valley civilization, one of the world’s oldest, flourished during the 3rd and 2nd millennia B.C. and extended into northwestern India. Aryan tribes from the northwest infiltrated the Indian subcontinent about 1500 B.C.; their merger with the earlier Dravidian inhabitants created the classical Indian culture. The Maurya Empire of the 4th and 3rd centuries B.C. – which reached its zenith under ASHOKA – united much of South Asia. The Golden Age ushered in by the Gupta dynasty (4th to 6th centuries A.D.) saw a flowering of Indian science, art, and culture. Islam spread across the subcontinent over a period of 700 years. In the 10th and 11th centuries, Turks and Afghans invaded India and established the Delhi Sultanate. In the early 16th century, the Emperor BABUR established the Mughal Dynasty which ruled India for more than three centuries. European explorers began establishing footholds in India during the 16th century. By the 19th century, Great Britain had become the dominant political power on the subcontinent. The British Indian Army played a vital role in both World Wars. Years of nonviolent resistance to British rule, led by Mohandas GANDHI and Jawaharlal NEHRU, eventually resulted in Indian independence, which was granted in 1947. Large-scale communal violence took place before and after the subcontinent partition into two separate states – India and Pakistan. The neighboring nations have fought three wars since independence, the last of which was in 1971 and resulted in East Pakistan becoming the separate nation of Bangladesh. India’s nuclear weapons tests in 1998 emboldened Pakistan to conduct its own tests that same year. In November 2008, terrorists originating from Pakistan conducted a series of coordinated attacks in Mumbai, India’s financial capital. Despite pressing problems such as significant overpopulation, environmental degradation, extensive poverty, and widespread corruption, economic growth following the launch of economic reforms in 1991 and a massive youthful population are driving India’s emergence as a regional and global power.

    Geography

    Location:
    Southern Asia, bordering the Arabian Sea and the Bay of Bengal, between Burma and Pakistan

    Geographic coordinates:
    20 00 N, 77 00 E

    Map references:
    Asia

    Area:
    total: 3,287,263 sq km
    country comparison to the world: 7
    land: 2,973,193 sq km
    water: 314,070 sq km

    Land boundaries:
    total: 13,888 km
    border countries: Bangladesh 4,142 km, Bhutan 659 km, Burma 1,468 km, China 2,659 km, Nepal 1,770 km, Pakistan 3,190 km

    Coastline:
    7,000 km

    Maritime claims:
    territorial sea: 12 nm
    contiguous zone: 24 nm
    exclusive economic zone: 200 nm
    continental shelf: 200 nm or to the edge of the continental margin

    Climate:
    varies from tropical monsoon in south to temperate in north

    Terrain:
    upland plain (Deccan Plateau) in south, flat to rolling plain along the Ganges, deserts in west, Himalayas in north

    Elevation extremes:
    lowest point: Indian Ocean 0 m
    highest point: Kanchenjunga 8,598 m

    Natural resources:
    coal (fourth-largest reserves in the world), iron ore, manganese, mica, bauxite, rare earth elements, titanium ore, chromite, natural gas, diamonds, petroleum, limestone, arable land

    Land use:
    arable land: 47.87%
    permanent crops: 3.74%
    other: 48.39% (2011)

    Irrigated land:
    663,340 sq km (2008)

    Total renewable water resources:
    1,911 cu km (2011)

    Freshwater withdrawal (domestic/industrial/agricultural):
    total: 761 cu km/yr (7%/2%/90%)
    per capita: 613 cu m/yr (2010)

    Natural hazards:
    droughts; flash floods, as well as widespread and destructive flooding from monsoonal rains; severe thunderstorms; earthquakes
    volcanism: Barren Island (elev. 354 m) in the Andaman Sea has been active in recent years

    Environment – current issues:
    deforestation; soil erosion; overgrazing; desertification; air pollution from industrial effluents and vehicle emissions; water pollution from raw sewage and runoff of agricultural pesticides; tap water is not potable throughout the country; huge and growing population is overstraining natural resources

    Environment – international agreements:
    party to: Antarctic-Environmental Protocol, Antarctic-Marine Living Resources, Antarctic Treaty, Biodiversity, Climate Change, Climate Change-Kyoto Protocol, Desertification, Endangered Species, Environmental Modification, Hazardous Wastes, Law of the Sea, Ozone Layer Protection, Ship Pollution, Tropical Timber 83, Tropical Timber 94, Wetlands, Whaling
    signed, but not ratified: none of the selected agreements

    Geography – note:
    dominates South Asian subcontinent; near important Indian Ocean trade routes; Kanchenjunga, third tallest mountain in the world, lies on the border with Nepal

    People and Society

    Nationality:
    noun: Indian(s)
    adjective: Indian

    Ethnic groups:
    Indo-Aryan 72%, Dravidian 25%, Mongoloid and other 3% (2000)

    Languages:
    Hindi 41%, Bengali 8.1%, Telugu 7.2%, Marathi 7%, Tamil 5.9%, Urdu 5%, Gujarati 4.5%, Kannada 3.7%, Malayalam 3.2%, Oriya 3.2%, Punjabi 2.8%, Assamese 1.3%, Maithili 1.2%, other 5.9%

    note: English enjoys the status of subsidiary official language but is the most important language for national, political, and commercial communication; Hindi is the most widely spoken language and primary tongue of 41% of the people; there are 14 other official languages: Bengali, Telugu, Marathi, Tamil, Urdu, Gujarati, Malayalam, Kannada, Oriya, Punjabi, Assamese, Kashmiri, Sindhi, and Sanskrit; Hindustani is a popular variant of Hindi/Urdu spoken widely throughout northern India but is not an official language (2001 census)

    Religions:
    Hindu 80.5%, Muslim 13.4%, Christian 2.3%, Sikh 1.9%, other 1.8%, unspecified 0.1% (2001 census)

    Population:
    1,236,344,631 (July 2014 est.)
    country comparison to the world: 2

    Age structure:
    0-14 years: 28.5% (male 187,016,401/female 165,048,695)
    15-24 years: 18.1% (male 118,696,540/female 105,342,764)
    25-54 years: 40.6% (male 258,202,535/female 243,293,143)
    55-64 years: 7% (male 43,625,668/female 43,175,111)
    65 years and over: 5.7% (male 34,133,175/female 37,810,599) (2014 est.)

    population pyramid:


    https://www.cia.gov/library/publications/the-world-factbook/graphics/population/IN_popgraph%202014.bmp

    Dependency ratios:
    total dependency ratio: 51.8 %
    youth dependency ratio: 43.6 %
    elderly dependency ratio: 8.1 %
    potential support ratio: 12.3 (2014 est.)

    Median age:
    total: 27 years
    male: 26.4 years
    female: 27.7 years (2014 est.)

    Population growth rate:
    1.25% (2014 est.)
    country comparison to the world: 94

    Birth rate:
    19.89 births/1,000 population (2014 est.)
    country comparison to the world: 86

    Death rate:
    7.35 deaths/1,000 population (2014 est.)
    country comparison to the world: 118

    Net migration rate:
    -0.05 migrant(s)/1,000 population (2014 est.)
    country comparison to the world: 112

    Urbanization:
    urban population: 31.3% of total population (2011)
    rate of urbanization: 2.47% annual rate of change (2010-15 est.)

    Major urban areas – population:
    NEW DELHI (capital) 22.654 million; Mumbai 19.744 million; Kolkata 14.402 million; Chennai 8.784 million; Bangalore 8.614 million; Hyderabad 7.837 million (2011)

    Sex ratio:
    at birth: 1.12 male(s)/female
    0-14 years: 1.13 male(s)/female
    15-24 years: 1.13 male(s)/female
    25-54 years: 1.06 male(s)/female
    55-64 years: 1.08 male(s)/female
    65 years and over: 0.91 male(s)/female
    total population: 1.08 male(s)/female (2014 est.)

    Mother’s mean age at first birth:
    19.9 (2005-06 est.)

    Maternal mortality rate:
    200 deaths/100,000 live births (2010)
    country comparison to the world: 55

    Infant mortality rate:
    total: 43.19 deaths/1,000 live births
    country comparison to the world: 50

    male: 41.9 deaths/1,000 live births
    female: 44.63 deaths/1,000 live births (2014 est.)

    Life expectancy at birth:
    total population: 67.8 years
    country comparison to the world: 163

    male: 66.68 years
    female: 69.06 years (2014 est.)

    Total fertility rate:
    2.51 children born/woman (2014 est.)
    country comparison to the world: 81

    Contraceptive prevalence rate:
    54.8% (2007/08)

    Health expenditures:
    3.9% of GDP (2011)
    country comparison to the world: 167

    Physicians density:
    0.65 physicians/1,000 population (2009)

    Hospital bed density:
    0.9 beds/1,000 population (2005)

    Drinking water source:
    improved:
    urban: 96.7% of population
    rural: 90.7% of population
    total: 92.6% of population
    unimproved:
    urban: 3.3% of population
    rural: 9.3% of population
    total: 7.4% of population (2012 est.)

    Sanitation facility access:
    improved:
    urban: 60.2% of population
    rural: 24.7% of population
    total: 36% of population

    unimproved:
    urban: 39.8% of population
    rural: 75.3% of population
    total: 64% of population (2012 est.)

    HIV/AIDS – adult prevalence rate:
    0.3% (2012 est.)
    country comparison to the world: 101

    HIV/AIDS – people living with HIV/AIDS:
    2.085 million (2012 est.)
    country comparison to the world: 3

    HIV/AIDS – deaths:
    135,500 (2012 est.)
    country comparison to the world: 3

    Major infectious diseases:
    degree of risk: very high
    food or waterborne diseases: bacterial diarrhea, hepatitis A and E, and typhoid fever
    vectorborne diseases: dengue fever, Japanese encephalitis, and malaria
    water contact disease: leptospirosis
    animal contact disease: rabies
    note: highly pathogenic H5N1 avian influenza has been identified in this country; it poses a negligible risk with extremely rare cases possible among US citizens who have close contact with birds (2013)

    Obesity – adult prevalence rate:
    1.9% (2008)
    country comparison to the world: 184

    Children under the age of 5 years underweight:
    43.5% (2006)
    country comparison to the world: 2

    Education expenditures:
    3.2% of GDP (2011)
    country comparison to the world: 134

    Literacy:
    definition: age 15 and over can read and write
    total population: 62.8%
    male: 75.2%
    female: 50.8% (2006 est.)

    School life expectancy (primary to tertiary education):
    total: 12 years
    male: 12 years
    female: 11 years (2011)

    Child labor – children ages 5-14:
    total number: 26,965,074
    percentage: 12 % (2006 est.)
    Unemployment, youth ages 15-24:
    total: 10.7%
    country comparison to the world: 107
    male: 10.4%
    female: 11.6% (2012)

    Government

    Country name:
    conventional long form: Republic of India
    conventional short form: India
    local long form: Republic of India/Bharatiya Ganarajya
    local short form: India/Bharat

    Government type:
    federal republic

    Capital:
    name: New Delhi
    geographic coordinates: 28 36 N, 77 12 E
    time difference: UTC+5.5 (10.5 hours ahead of Washington, DC, during Standard Time)

    Administrative divisions:
    29 states and 7 union territories*; Andaman and Nicobar Islands*, Andhra Pradesh, Arunachal Pradesh, Assam, Bihar, Chandigarh*, Chhattisgarh, Dadra and Nagar Haveli*, Daman and Diu*, Delhi*, Goa, Gujarat, Haryana, Himachal Pradesh, Jammu and Kashmir, Jharkhand, Karnataka, Kerala, Lakshadweep*, Madhya Pradesh, Maharashtra, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Odisha, Puducherry*, Punjab, Rajasthan, Sikkim, Tamil Nadu, Telangana, Tripura, Uttar Pradesh, Uttarakhand, West Bengal
    note: although its status is that of a union territory, the official name of Delhi is National Capital Territory of Delhi

    Independence:
    15 August 1947 (from the UK)

    National holiday:
    Republic Day, 26 January (1950)

    Constitution:
    previous 1935 (preindependence); latest draft completed 4 November 1949, adopted 26 November 1949, effective 26 January 1950; amended many times, last in 2013 (2013)

    Legal system:
    common law system based on the English model; separate personal law codes apply to Muslims, Christians, and Hindus; judicial review of legislative acts

    International law organization participation:
    accepts compulsory ICJ jurisdiction with reservations; non-party state to the ICCt

    Suffrage:
    18 years of age; universal

    Executive branch:
    chief of state: President Pranab MUKHERJEE (since 22 July 2012);
    Vice President Mohammad Hamid ANSARI (since 11 August 2007)
    head of government: Prime Minister Narendra MODI (since 26 May 2014)
    cabinet: Union Council of Ministers appointed by the president on the recommendation of the prime minister

    elections: president elected by an electoral college consisting of elected members of both houses of Parliament and the legislatures of the states for a five-year term (no term limits); election last held in July 2012 (next to be held in July 2017); vice president elected by both houses of Parliament for a five-year term; election last held in August 2012 (next to be held in August 2017); prime minister chosen by parliamentary members of the majority party following legislative elections
    election results: Pranab MUKHERJEE elected president; percent of vote – Pranab MUKHERJEE 69.31%, Purno SANGMA – 30.69%

    Legislative branch:
    bicameral Parliament or Sansad consists of the Council of States or Rajya Sabha (a body consisting of 245 seats up to 12 of which are appointed by the president, the remainder chosen in staggered elections by the elected members of the state and territorial assemblies; members serve six-year terms) and the People’s Assembly or Lok Sabha (545 seats; 543 members elected by popular vote, 2 appointed by the president; members serve five-year terms)
    elections: People’s Assembly – last held April-May 2014 in 9 phases; (next election must be held by May 2019)
    election results: People’s Assembly – percent of vote by party – NA, ; seats by party – BJP 282, INC 44, AIADMK 37, AITC 34, BJD 20, SS 18, TDP 16, TRS 11, CPI(M) 9, YSRC 9, LJP 6, NCP 6, SP 5, AAP 4, RJD 4, SAD 4, independents 3, other 31

    Judicial branch:
    highest court(s): Supreme Court (the chief justice and 25 associate justices); note – parliament approved an additional 5 judges in 2008
    note – in mid-2011 India’s Cabinet approved the program, National Mission for Justice Delivery and Legal Reform, to eliminate judicial corruption and reduce the backlog of cases
    judge selection and term of office: justices appointed by the president to serve until age 65
    subordinate courts: High Courts; District Courts; Labour Court

    Political parties and leaders:
    Aam Aadmi Party or AAP [Arvind KEJRIWAL]
    All India Anna Dravida Munnetra Kazhagam or AIADMK [J. JAYALALITHAA]
    All India Trinamool Congress or AITC [Mamata BANERJEE]
    Bahujan Samaj Party or BSP [MAYAWATI]
    Bharatiya Janata Party or BJP [Rajnath SINGH]
    Biju Janata Dal or BJD [Naveen PATNAIK]
    Communist Party of India or CPI [Suravaram Sudhakar REDDY, Secretary-General]
    Communist Party of India-Marxist or CPI(M) [Prakash KARAT]
    Dravida Munnetra Kazhagam or DMK [M.KARUNANIDHI]
    Indian National Congress or INC [Sonia GANDHI]
    Janata Dal (United) or JD(U) [Sharad YADAV]
    Lok Janshakti Party (LJP) [Ram Vilas PASWAN]
    Nationalist Congress Party or NCP [Sharad PAWAR]
    Rashtriya Janata Dal or RJD [Lalu Prasad YADAV]
    Rashtriya Lok Dal or RLD [Ajit SINGH]
    Samajwadi Party or SP [Mulayam Singh YADAV]
    Shiromani Akali Dal or SAD [Parkash Singh BADAL]
    Shiv Sena or SS [Uddhav THACKERAY]
    Telugu Desam Party or TDP [Chandrababu NAIDU]
    Telegana Rashtra Samithi (TRS) [K. Chandrashekar RAO]
    YSR Congress(YSRC) [Jaganmohan REDDY]
    note: India has dozens of national and regional political parties

    Political pressure groups and leaders:
    All Parties Hurriyat Conference in the Kashmir Valley (separatist group)
    Bajrang Dal (religious organization)
    India Against Corruption [Anna HAZARE]
    Jamiat Ulema-e Hind (religious organization)
    Rashtriya Swayamsevak Sangh [Mohan BHAGWAT] (nationalist organization)
    Vishwa Hindu Parishad [Ashok SINGHAL] (religious organization)

    other:
    numerous religious or militant/chauvinistic organizations
    hundreds of social reform, anti-corruption, and environmental groups at state and local level
    various separatist groups seeking greater communal and/or regional autonomy

    International organization participation:
    ABEDA, ADB, AfDB (nonregional member), ARF, ASEAN (dialogue partner), BIMSTEC, BIS, BRICS, C, CD, CERN (observer), CICA, CP, EAS, FAO, FATF, G-15, G-20, G-24, G-77, IAEA, IBRD, ICAO, ICC (national committees), ICRM, IDA, IFAD, IFC, IFRCS, IHO, ILO, IMF, IMO, IMSO, Interpol, IOC, IOM, IPU, ISO, ITSO, ITU, ITUC (NGOs), LAS (observer), MIGA, MONUSCO, NAM, OAS (observer), OECD, OPCW, Pacific Alliance (observer), PCA, PIF (partner), SAARC, SACEP, SCO (observer), UN, UNCTAD, UNDOF, UNESCO, UNHCR, UNIDO, UNIFIL, UNISFA, UNITAR, UNMISS, UNOCI, UNSC (temporary), UNWTO, UPU, WCO, WFTU (NGOs), WHO, WIPO, WMO, WTO

    Diplomatic representation in the US:
    chief of mission: Ambassador Subrahmanyam JAISHANKAR (since 10 March 2014)

    Flag description:
    three equal horizontal bands of saffron (subdued orange) (top), white, and green, with a blue chakra (24-spoked wheel) centered in the white band; saffron represents courage, sacrifice, and the spirit of renunciation; white signifies purity and truth; green stands for faith and fertility; the blue chakra symbolizes the wheel of life in movement and death in stagnation

    National symbol(s):
    the Lion Capital of Ashoka, which depicts four Asiatic lions standing back to back mounted on a circular abacus, is the official emblem; the Bengal tiger is the national animal; the lotus is the national flower

    National anthem:
    name: “Jana-Gana-Mana” (Thou Art the Ruler of the Minds of All People)
    lyrics/music: Rabindranath TAGORE
    note: adopted 1950; Rabindranath TAGORE, a Nobel laureate, also wrote Bangladesh’s national anthem

    Economy

    Economy – overview:
    India is developing into an open-market economy, yet traces of its past autarkic policies remain. Economic liberalization measures, including industrial deregulation, privatization of state-owned enterprises, and reduced controls on foreign trade and investment, began in the early 1990s and served to accelerate the country’s growth, which averaged under 7% per year from 1997 to 2011. India’s diverse economy encompasses traditional village farming, modern agriculture, handicrafts, a wide range of modern industries, and a multitude of services. Slightly less than half of the work force is in agriculture, but, services are the major source of economic growth, accounting for nearly two-thirds of India’s output with less than one-third of its labor force. India has capitalized on its large educated English-speaking population to become a major exporter of information technology services, business outsourcing services, and software workers. India’s economic growth began slowing in 2011 because of a decline in investment, caused by high interest rates, rising inflation, and investor pessimism about the government’s commitment to further economic reforms and about the global situation. In late 2012, the Indian Government announced additional reforms and deficit reduction measures, including allowing higher levels of foreign participation in direct investment in the economy. The outlook for India’s long-term growth is moderately positive due to a young population and corresponding low dependency ratio, healthy savings and investment rates, and increasing integration into the global economy. However, India has many challenges that it has yet to fully address, including poverty, corruption, violence and discrimination against women and girls, an inefficient power generation and distribution system, ineffective enforcement of intellectual property rights, decades-long civil litigation dockets, inadequate transport and agricultural infrastructure, limited non-agricultural employment opportunities, high spending and poorly-targeted subsidies, inadequate availability of quality basic and higher education, and accommodating rural-to-urban migration. Growth in 2013 fell to a decade low, as India’s economic leaders struggled to improve the country’s wide fiscal and current account deficits. Rising macroeconomic imbalances in India and improving economic conditions in Western countries, led investors to shift capital away from India, prompting a sharp depreciation of the rupee. However, investors’ perceptions of India improved in early 2014, due to a reduction of the current account deficit and expectations of post-election economic reform, resulting in a surge of inbound capital flows and stabilization of the rupee.

    GDP (purchasing power parity):
    $4.99 trillion (2013 est.)
    country comparison to the world: 4
    $4.833 trillion (2012 est.)
    $4.63 trillion (2011 est.)
    note: data are in 2013 US dollars

    GDP (official exchange rate):
    $1.67 trillion (2013 est.)

    GDP – real growth rate:
    3.2% (2013 est.)
    country comparison to the world: 108
    5.1% (2012 est.)
    7.5% (2011 est.)

    GDP – per capita (PPP):
    $4,000 (2013 est.)
    country comparison to the world: 169
    $3,900 (2012 est.)
    $3,800 (2011 est.)
    note: data are in 2013 US dollars

    Gross national saving:
    33.7% of GDP (2013 est.)
    country comparison to the world: 16
    28.8% of GDP (2012 est.)
    30.3% of GDP (2011 est.)

    GDP – composition, by end use:
    household consumption: 56.4%
    government consumption: 12.4%
    investment in fixed capital: 29.6%
    investment in inventories: 8.2%
    exports of goods and services: 25.2%
    imports of goods and services: -31.8%
    (2013 est.)

    GDP – composition, by sector of origin:
    agriculture: 17.4%
    industry: 25.8%
    services: 56.9% (2013 est.)

    Agriculture – products:
    rice, wheat, oilseed, cotton, jute, tea, sugarcane, lentils, onions, potatoes; dairy products, sheep, goats, poultry; fish

    Industries:
    textiles, chemicals, food processing, steel, transportation equipment, cement, mining, petroleum, machinery, software, pharmaceuticals

    Industrial production growth rate:
    0.9% (2013 est.)
    country comparison to the world: 152

    Labor force:
    487.3 million (2013 est.)
    country comparison to the world: 2

    Labor force – by occupation:
    agriculture: 49%
    industry: 20%
    services: 31% (2012 est.)

    Unemployment rate:
    8.8% (2013 est.)
    country comparison to the world: 98
    8.5% (2012 est.)

    Population below poverty line:
    29.8% (2010 est.)

    Household income or consumption by percentage share:
    lowest 10%: 3.6%
    highest 10%: 31.1% (2005)

    Distribution of family income – Gini index:
    36.8 (2004)
    country comparison to the world: 80
    37.8 (1997)

    Budget:
    revenues: $181.3 billion
    expenditures: $281.6 billion (2013 est.)

    Taxes and other revenues:
    10.3% of GDP (2013 est.)
    country comparison to the world: 208

    Budget surplus (+) or deficit (-):
    -5.7% of GDP (2013 est.)
    country comparison to the world: 175

    Public debt:
    51.8% of GDP (2013 est.)
    country comparison to the world: 63
    51.7% of GDP (2012 est.)
    note: data cover central government debt, and exclude debt instruments issued (or owned) by government entities other than the treasury; the data include treasury debt held by foreign entities; the data exclude debt issued by subnational entities, as well as intra-governmental debt; intra-governmental debt consists of treasury borrowings from surpluses in the social funds, such as for retirement, medical care, and unemployment; debt instruments for the social funds are not sold at public auctions

    Fiscal year:
    1 April – 31 March

    Inflation rate (consumer prices):
    9.6% (2013 est.)
    country comparison to the world: 208
    9.7% (2012 est.)

    Central bank discount rate:
    7.75% (31 December 2013 est.)
    country comparison to the world: 34
    8% (31 December 2010 est.)
    note: this is the Indian central bank’s policy rate – the repurchase rate

    Commercial bank prime lending rate:
    10.6% (31 December 2013 est.)
    country comparison to the world: 76
    10.63% (31 December 2012 est.)

    Stock of narrow money:
    $303.1 billion (31 December 2013 est.)
    country comparison to the world: 16
    $317.4 billion (31 December 2012 est.)

    Stock of broad money:
    $1.376 trillion (31 December 2013 est.)
    country comparison to the world: 13
    $1.396 trillion (31 December 2012 est.)

    Stock of domestic credit:
    $1.379 trillion (31 December 2013 est.)
    country comparison to the world: 15
    $1.401 trillion (31 December 2012 est.)

    Market value of publicly traded shares:
    $1.263 trillion (31 December 2012 est.)
    country comparison to the world: 13
    $1.015 trillion (31 December 2011)
    $1.616 trillion (31 December 2010 est.)

    Current account balance:
    -$74.79 billion (2013 est.)
    country comparison to the world: 190
    -$91.47 billion (2012 est.)

    Exports:
    $313.2 billion (2013 est.)
    country comparison to the world: 19
    $296.8 billion (2012 est.)

    Exports – commodities:
    petroleum products, precious stones, machinery, iron and steel, chemicals, vehicles, apparel

    Exports – partners:
    UAE 12.3%, US 12.2%, China 5%, Singapore 4.9%, Hong Kong 4.1% (2012)

    Imports:
    $467.5 billion (2013 est.)
    country comparison to the world: 12
    $488.9 billion (2012 est.)

    Imports – commodities:
    crude oil, precious stones, machinery, fertilizer, iron and steel, chemicals

    Imports – partners:
    China 10.7%, UAE 7.8%, Saudi Arabia 6.8%, Switzerland 6.2%, US 5.1% (2012)

    Reserves of foreign exchange and gold:
    $295 billion (31 December 2013 est.)
    country comparison to the world: 11
    $296 billion (28 December 2012 est.)

    Debt – external:
    $412.2 billion (31 December 2013 est.)
    country comparison to the world: 29
    $378.9 billion (31 December 2012 est.)

    Stock of direct foreign investment – at home:
    $310 billion (30 November 2013 est.)
    country comparison to the world: 20
    $225.1 billion (31 December 2012 est.)

    Stock of direct foreign investment – abroad:
    $120.1 billion (31 December 2013 est.)
    country comparison to the world: 28
    $118.1 billion (31 December 2012 est.)

    Exchange rates:
    Indian rupees (INR) per US dollar –
    58.68 (2013 est.)
    53.437 (2012 est.)
    45.726 (2010 est.)
    48.405 (2009)
    43.319 (2008)

    Energy

    Electricity – production:
    871 billion kWh (FY11/12 est.)
    country comparison to the world: 6

    Electricity – consumption:
    698.8 billion kWh (2010 est.)
    country comparison to the world: 6

    Electricity – exports:
    62 million kWh (2011 est.)
    country comparison to the world: 81

    Electricity – imports:
    5.7 billion kWh (2011 est.)
    country comparison to the world: 36

    Electricity – installed generating capacity:
    199.9 million kW (31 March 2012 est)
    country comparison to the world: 6

    Electricity – from fossil fuels:
    65.8% of total installed capacity (31 March 2012 est)
    country comparison to the world: 118

    Electricity – from nuclear fuels:
    2.4% of total installed capacity (31 March 2012 est)
    country comparison to the world: 25

    Electricity – from hydroelectric plants:
    19.5% of total installed capacity (31 March 2012 est)
    country comparison to the world: 91

    Electricity – from other renewable sources:
    12.3% of total installed capacity (31 March 2012 est)
    country comparison to the world: 21

    Crude oil – production:
    990,200 bbl/day (2012 est.)
    country comparison to the world: 21

    Crude oil – exports:
    0 bbl/day (2010 est.)
    country comparison to the world: 130

    Crude oil – imports:
    3.272 million bbl/day (2010 est.)
    country comparison to the world: 4

    Crude oil – proved reserves:
    5.476 billion bbl (1 January 2013 est.)
    country comparison to the world: 23

    Refined petroleum products – production:
    4.216 million bbl/day (2010 est.)
    country comparison to the world: 5

    Refined petroleum products – consumption:
    3.292 million bbl/day (2011 est.)
    country comparison to the world: 5

    Refined petroleum products – exports:
    1.247 million bbl/day (2010 est.)
    country comparison to the world: 6

    Refined petroleum products – imports:
    379,600 bbl/day (2010 est.)
    country comparison to the world: 16

    Natural gas – production:
    40.38 billion cu m (2012 est.)
    country comparison to the world: 22

    Natural gas – consumption:
    64.49 billion cu m (2010 est.)
    country comparison to the world: 11

    Natural gas – exports:
    0 cu m (2011 est.)
    country comparison to the world: 119

    Natural gas – imports:
    16.39 billion cu m (2011 est.)
    country comparison to the world: 23

    Natural gas – proved reserves:
    1.241 trillion cu m (1 January 2013 est.)
    country comparison to the world: 23

    Carbon dioxide emissions from consumption of energy:
    1.726 billion Mt (2011 est.)

    Communications

    Telephones – main lines in use:
    31.08 million (2012)
    country comparison to the world: 10

    Telephones – mobile cellular:
    893.862 million (2013)
    country comparison to the world: 2

    Telephone system:
    general assessment: supported by recent deregulation and liberalization of telecommunications laws and policies, India has emerged as one of the fastest growing telecom markets in the world; total telephone subscribership base exceeded 900 million in 2011, an overall teledensity of roughly 75%, and subscribership is currently growing more than 20 million per month; urban teledensity now exceeds 100% and rural teledensity is steadily growing

    domestic: mobile cellular service introduced in 1994 and organized nationwide into four metropolitan areas and 19 telecom circles each with multiple private service providers and one or more state-owned service providers; in recent years significant trunk capacity added in the form of fiber-optic cable and one of the world’s largest domestic satellite systems, the Indian National Satellite system (INSAT), with 6 satellites supporting 33,000 very small aperture terminals (VSAT)

    international: country code – 91; a number of major international submarine cable systems, including Sea-Me-We-3 with landing sites at Cochin and Mumbai (Bombay), Sea-Me-We-4 with a landing site at Chennai, Fiber-Optic Link Around the Globe (FLAG) with a landing site at Mumbai (Bombay), South Africa – Far East (SAFE) with a landing site at Cochin, the i2i cable network linking to Singapore with landing sites at Mumbai (Bombay) and Chennai (Madras), and Tata Indicom linking Singapore and Chennai (Madras), provide a significant increase in the bandwidth available for both voice and data traffic; satellite earth stations – 8 Intelsat (Indian Ocean) and 1 Inmarsat (Indian Ocean region); 9 gateway exchanges operating from Mumbai (Bombay), New Delhi, Kolkata (Calcutta), Chennai (Madras), Jalandhar, Kanpur, Gandhinagar, Hyderabad, and Ernakulam (2011)

    Broadcast media:
    Doordarshan, India’s public TV network, operates about 20 national, regional, and local services; a large and increasing number of privately owned TV stations are distributed by cable and satellite service providers; by 2011, more than 100 million homes had access to cable and satellite TV offering more than 700 TV channels; government controls AM radio with All India Radio operating domestic and external networks; news broadcasts via radio are limited to the All India Radio Network; since 2000, privately-owned FM stations have been permitted and their numbers have increased rapidly (2007)

    Internet country code:
    .in

    Internet hosts:
    6.746 million (2012)
    country comparison to the world: 17

    Internet users:
    61.338 million (2009)
    country comparison to the world: 6

    Transportation

    Airports:
    346 (2013)
    country comparison to the world: 21

    Airports – with paved runways:
    total: 253
    over 3,047 m: 22
    2,438 to 3,047 m: 59
    1,524 to 2,437 m: 76
    914 to 1,523 m: 82
    under 914 m: 14 (2013)

    Airports – with unpaved runways:
    total: 93
    over 3,047 m: 1
    2,438 to 3,047 m: 3
    1,524 to 2,437 m: 6
    914 to 1,523 m: 38
    under 914 m:
    45 (2013)

    Heliports:
    45 (2013)

    Pipelines:
    condensate/gas 9 km; gas 13,581 km; liquid petroleum gas 2,054 km; oil 8,943 km; oil/gas/water 20 km; refined products 11,069 km (2013)

    Railways:
    total: 63,974 km
    country comparison to the world: 4
    broad gauge: 54,257 km 1.676-m gauge (18,927 km electrified)
    narrow gauge: 7,180 km 1.000-m gauge; 2,537 km 0.762-m gauge and 0.610-m gauge (2009)

    Roadways:
    total: 4,689,842 km
    country comparison to the world: 2
    note: includes 79,116 km of national highways and expressways, 155,716 km of state highways, and 4,455,010 km of other roads (2013)

    Waterways:
    14,500 km (5,200 km on major rivers and 485 km on canals suitable for mechanized vessels) (2012)
    country comparison to the world: 9

    Merchant marine:
    total: 340
    country comparison to the world: 29

    by type: bulk carrier 104, cargo 78, chemical tanker 22, container 14, liquefied gas 11, passenger 4, passenger/cargo 15, petroleum tanker 92
    foreign-owned: 10 (China 1, Hong Kong 2, Jersey 2, Malaysia 1, UAE 4)
    registered in other countries: 76 (Cyprus 4, Dominica 2, Liberia 8, Malta 3, Marshall Islands 10, Nigeria 1, Panama 24, Saint Kitts and Nevis 2, Singapore 21, unknown 1) (2010)

    Ports and terminals:
    major seaport(s): Chennai, Jawaharal Nehru Port, Kandla, Kolkata (Calcutta), Mumbai (Bombay), Sikka, Vishakhapatnam
    container port(s) (TEUs): Chennai (1,558,343), Jawaharal Nehru Port (4,307,622)

    Military

    Military branches:
    Army; Navy (includes naval air arm); Air Force; Coast Guard (2011)

    Military service age and obligation:
    16-18 years of age for voluntary military service (Army 17 1/2, Air Force 17, Navy 16 1/2); no conscription; women may join as officers, but for noncombat roles only (2012)

    Manpower available for military service:
    males age 16-49: 319,129,420
    females age 16-49: 296,071,637 (2010 est.)

    Manpower fit for military service:
    males age 16-49: 249,531,562
    females age 16-49: 240,039,958 (2010 est.)

    Manpower reaching militarily significant age annually:
    male: 12,151,065
    female: 10,745,891 (2010 est.)

    Military expenditures:
    2.43% of GDP (2012)
    country comparison to the world: 31
    2.58% of GDP (2011)
    2.43% of GDP (2010)

    Transnational Issues

    Disputes – international:
    since China and India launched a security and foreign policy dialogue in 2005, consolidated discussions related to the dispute over most of their rugged, militarized boundary, regional nuclear proliferation, Indian claims that China transferred missiles to Pakistan, and other matters continue; Kashmir remains the site of the world’s largest and most militarized territorial dispute with portions under the de facto administration of China (Aksai Chin), India (Jammu and Kashmir), and Pakistan (Azad Kashmir and Northern Areas); India and Pakistan resumed bilateral dialogue in February 2011 after a two-year hiatus, have maintained the 2003 cease-fire in Kashmir, and continue to have disputes over water sharing of the Indus River and its tributaries; UN Military Observer Group in India and Pakistan has maintained a small group of peacekeepers since 1949; India does not recognize Pakistan’s ceding historic Kashmir lands to China in 1964; to defuse tensions and prepare for discussions on a maritime boundary, India and Pakistan seek technical resolution of the disputed boundary in Sir Creek estuary at the mouth of the Rann of Kutch in the Arabian Sea; Pakistani maps continue to show its Junagadh claim in Indian Gujarat State; Prime Minister Singh’s September 2011 visit to Bangladesh resulted in the signing of a Protocol to the 1974 Land Boundary Agreement between India and Bangladesh, which had called for the settlement of longstanding boundary disputes over undemarcated areas and the exchange of territorial enclaves, but which had never been implemented; Bangladesh referred its maritime boundary claims with Burma and India to the International Tribunal on the Law of the Sea; Joint Border Committee with Nepal continues to examine contested boundary sections, including the 400 sq km dispute over the source of the Kalapani River; India maintains a strict border regime to keep out Maoist insurgents and control illegal cross-border activities from Nepal

    Refugees and internally displaced persons:
    refugees (country of origin): 100,003 (Tibet/China); 65,674 (Sri Lanka); 11,122 (Burma); 10,328 (Afghanistan) (2013)
    IDPs: at least 531,000 (about 250,000 are Kashmiri Pandits from Jammu and Kashmir) (2014)

    Illicit drugs:
    world’s largest producer of licit opium for the pharmaceutical trade, but an undetermined quantity of opium is diverted to illicit international drug markets; transit point for illicit narcotics produced in neighboring countries and throughout Southwest Asia; illicit producer of methaqualone; vulnerable to narcotics money laundering through the hawala system; licit ketamine and precursor production

    Source:
    The Central Intelligence Agency of the United States of America
    https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html
    Copyright: Public Domain
    [PAGE LAST UPDATED ON JUNE 22, 2014]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 11, 2014

    இவ்வார வல்லமையாளர்கள்
    வல்லமைமிகு “வழிகாட்டும் ஒளி” குழுவினர்
    வல்லமைமிகு பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி ஆகியோர்

    வழிகாட்டும் ஒளிகள்
    பெண்களுக்கெதிரான கொடுமைகளில் இருந்து அவர்களைக் காக்கும் நோக்குடன் வழிகாட்டும் ஒளி’ நிறுவனத்தைத் துவக்கி வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா குழுவினர் மற்றும் அவர்களது சேவையை நமக்கு தனது கட்டுரையின் மூலம் அறிவித்த ‘குங்குமம் தோழி’யின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் இவ்வார வல்லமையாளர்களாக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்கள்.

    இவ்வார வல்லமையாளர் விருதிற்காக “வழிகாட்டும் ஒளி” குழுவினரைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்கள். வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காக ஒருங்கிணைந்து செயலாற்றும் இப்பெண்மணிகளை இவ்வாரத்தின் வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

    வழிகாட்டும் ஒளிகள்3

    நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து அமைதியான குடும்ப வாழ்வை எதிர்நோக்கும் பெண்களில் பலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக  வாழ்க்கை அமைந்துவிடுகிறது.  பலருக்குக் கிடைத்த துணையே துன்பத்திற்கு துவக்க விழாநடத்தும் வேலையைச் செவ்வனே செய்பவர்களாக அமைகிறார்கள்.  உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள்.  போதும் இந்த வாழ்க்கை என்று சலிப்படையும் பெண்கள் பலர்.  இவர்களில் ஒருவர் வழிகாட்டும் ஒளியின் தலைவி பிரேமா.

    இவர் காதலித்துக் கைபிடித்து பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவரால் அடைந்த துன்பங்கள் பல.  வேறுவழியின்றி கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருக்கு கணவராலும் சமூகத்தாலும் தொடர் தொல்லைகள்.  ஆதரவு தந்த அன்புள்ளங்களால் மீண்ட  இவருக்கு மீண்டும் சோதனையாக ஒரு விபத்து.  அதிலிருந்து உயிர் பிழைத்த இவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததன்  காரணம் பிறருக்கு உதவுவதற்காக என்ற முடிவெடுத்து ‘நேசம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, இயலாத மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார்.  அப்பொழுது பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சிக்கிக் கொண்ட தன்னைப் போன்ற பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கு ஆதரவுதர விரும்பி  ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டும், உறவுகளின்றியும்  தனித்துவிடப்பட்ட பெண்களுக்காக  தனது பணியைத் தொடங்கி இருக்கிறார்.  ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பின் வழியாக அந்தப் பெண்களின் தகுதிக்கேற்ற பணியில் அவர்களை அமர்த்தி, அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க உதவியிருக்கிறார்.  குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஓர் அமைப்பு  இவருடைய ‘வழிகாட்டும் ஒளி’.

    இந்த அமைப்பின் செயலாளர் ரேவதி, எம்.ஏ படித்தவர், பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கப்பட்டவர்.  இவரது கணவருக்குப் படித்த பெண்களின் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால்  இவரைச் சந்தேகித்து சித்திரவதை செய்திருக்கிறார்.  மனஉளைச்சல் தாள முடியாது தனது படிப்பை மட்டும் நம்பி மூன்று வயது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தனியாக உன்னால் வாழ்ந்து விட முடியுமா என்று கணவர் இட்ட சவாலைப் ஏற்று, ஆசிரியத் தொழில் புரிந்து தனது மகனை வளர்த்து எம்.பி.ஏ. வரை படிக்க வைத்துள்ளார்.  தனது அண்ணனுடன் பணிபுரியும் பிரேமாவின் தொடர்பு கிடைக்க, தன்னைப் போன்று துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உதவ ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்புடன் தன்னை  இணைத்துக் கொண்டுள்ளார்.

    சிறுவயதில் திருமணமான பொழுது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்திராதவர் பொருளாளர் சுஜாதா, வேலைவெட்டி இன்றி நாள்முழுவதும் குடிபோதையில் இருந்த அவரது கணவரால் குடும்பத்தில் அமைதி இன்றிப் புழுங்கியபடி வாழ்ந்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக, குடிபோதையில் சச்சரவு ஏற்பட்டு நடுஇரவில் கணவனால் துரத்தப்பட்டு நடுத்தெருவிற்கு இவர் வந்த பொழுது இவருடன் வெளியேற்றப்பட்டவர்கள் இவரது பத்து வயது மகளும், ஒன்றேகால் வயது கைக்குழந்தையான மகனும்.  நீ தற்கொலை செய்து கொள்ளும் வரை உன்னைத் துன்புறுத்துவேன் என்று அச்சுறுத்திய கணவனுக்கு எதிராக தனது குழந்தைகளுக்காக வாழவேண்டி, பள்ளித் தோழி உதவியுடன் வேலை பெற்று பணி செய்து கொண்டே படித்து எம்.ஏ. முடித்திருக்கிறார். தற்பொழுது பொதுமக்கள் தொடர்புப் பணியாளராக பணிபுரிகிறார். ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இவர் பிரேமாவை எதிர்கொள்ள, அவரது பணியால் ஈர்க்கப்பட்டு ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளராக அந்த அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

    வழக்கறிஞர், உளவியல் நிபுணர்கள் போன்றவர்களை தங்கள் அமைப்பில் கொண்டு முடிந்தவரை பெண்கள் தங்கள் நிலையைக் கையாள ஆலோசனைகள் வழங்கும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு, அவை உதவாத நிலையில் பெண்களுக்கு மாற்றுவழியாக அவர்களது திறனுக்கேற்ற பணியில் அமர்த்தி தன்னிறைவுடன் வாழ உதவி செய்து வருகிறது.  அல்லல்களில் இருந்து மீண்ட இந்த மூன்று பெண்மணிகளும் தங்களைப் போன்று வாழ்வில் அல்லலுறும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்களது கதைகளையும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு பற்றியும் குங்குமம் தோழி இதழில் கட்டுரை எழுதி மக்களுக்கு இவர்களது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி அவர்கள்.

    பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ‘லாட்லி ஊடக விருது’ என்று அழைக்கப்படும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை வெளிக்கொணரும் விழிப்புணர்வுச் செய்திக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’கள்  (Laadli Media and Advertising Awards for gender sensitivity) இந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.  குங்குமம் தோழி இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி, தாம் எழுதிய ‘வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்காக  தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான  லாட்லி ஊடக விருதினைப்  (ஃபார் பெஸ்ட் கேம்ப்பெயின்) பெற்றார். ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஏ.எல்.சாரதாவும் சென்ற 2013 டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதை வைதேகிக்கு வழங்கினார்கள்.

    வழிகாட்டும் ஒளிகள்2

    பெண்கொடுமைகளுக்கெதிராக பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவான செயல்களைப் புரிந்துவரும் இப்பெண்மணிகள் யாவருமே, தற்கால இளம்பெண்கள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டிகளாக இருப்பதற்காகப் பாரட்டப்பட வேண்டியவர்கள். இக்கருத்தை மிக அழகாக தனது பரிந்துரை மடலில் முன்வைத்துள்ளார் கவிஞர் காவிரிமைந்தன். இதோ  அவருடைய ஆக்கப்பூர்வமான பரிந்துரை:

    ”இல்லற வாழ்க்கை என்கிற ஒன்றை.. மரபு வழியில் தேர்ந்தெடுத்து .. அமைகின்ற துணை சரியில்லாமல் போய்விடும்போது இன்னலுறும் லட்சோபலட்சம் மக்கள்.. தங்கள் வாழ்க்கையை.. கண்ணீரால்தான் எழுதுகிறார்கள்.  விதி என்கிற ஒற்றை வார்த்தையால் சமூகம் அதை அலட்டிக்கொள்ளாமல் மேற்பார்வையிடுகிறது.  கதைகளிலும்.. திரைப்படங்களிலும் மட்டுமல்ல.. இதுபோன்ற சம்பவங்கள்.. கைவிடப்பட்ட அகலிகைகளாக ..  அடுத்த கட்டம் என்ன என்பதை தீர்மானிக்க முடியாதவர்களாக .. வாழ்க்கையே சூனியமாகிவிட்டதாக கருதும் சராசரி பெண்களின் வரிசையில் நின்றுவிடாமல்..  வாழ்ந்து காட்டுவோம் என்று தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்ததோடு..  இதுபோல் ஜீவிக்க முடியாமல் போராடும் பலருக்கும் “வழிகாட்டும் ஒளி ” என்கிற அமைப்பு ரீதியான உங்களின் மேலாண்மை.. வெறும் வார்த்தைகளால் பாராட்டி .. வாழ்த்துக்களால் நிறைவுபெறும் ஒன்றல்ல.

    நேர்மையற்ற நெஞ்சம் கொண்டோர்..  தேவையற்ற பழக்கங்களால் வாழ்வைக் கெடுத்துக்கொள்வதோடு தன்னைச் சார்ந்திருப்போர் வாழ்க்கையையும் பாழாக்கும் அவலங்கள் நிறைந்துவரும் இன்றைய சூழலில்..  வழிகாட்டும் ஒளி .. போன்ற அமைப்புகள் தேவையான ஒன்று என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரம்..  அரசாங்கம் .. மத்திய மாநில அரசுகள்.. இது போன்ற தூய தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி.. அங்கீகாரம் வழங்க வேண்டும்..”

     

     

    படங்கள் உதவி:  
    ஆர்.சந்திரசேகர்  &  http://tamilscreen.com/laadli-media-award-for-gender-sensitivity-r-vaidehi/

    தகவல் உதவி:   
    ஆர்.வைதேகி, குங்குமம் தோழி இதழ்

    நன்றி:
    குங்குமம் தோழி இதழ் வலைத்தளம்
    https://kungumamthozhi.wordpress.com/

    வழிகாட்டும் ஒளி!

    வழிகாட்டும் ஒளி!

    குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

    குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

    வழிகாட்டும் ஒளி!
    http://dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1210

    குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=72023

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 4, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள்

    kamatchi

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது.  ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை.  விகடனின் தீவிர வாசிப்பளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர்.  பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்தற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத்  தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாக கலந்துரையாடுகிறார்.

    இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர் ரஞ்சனி  அவர்கள். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் எழுதி வரும் “சொல்லுகிறேன் காமாட்சி” அம்மையாரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    காமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப்  படிப்பு நின்று போயிருக்கிறது.  அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட  ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்  (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன்  போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து  மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடை பட்டிருக்கிறது.  பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார்.  காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com)  வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான்.

    ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது  தனது 82 ஆவது வயதிலும்  தொடர்ந்து  “சொல்லுகிறேன்”  என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிபிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள்,  நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார்.  அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்து பதிகிறார் என்பது  இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!’ என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின்  வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது.

    ஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர் தொடர்ந்து  அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார்.  அதன் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.  “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்த கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் ? பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார்.  அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்  படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

    அன்னையர் தினத் தொடர்வு

    என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா  நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில்  விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய வேண்டும்,  என்பதால்,  சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள்.  ஆதலால் வயது வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள போலும்………..

    ……. மற்றொரு பதிவில் …….

    அது ஒருகாலம்.  குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள்   கண்டு பிடித்த காலம் அது என்றும்  சொல்லலாம். எங்கு நோக்கினாலும்    ஒரு வயதுக் குழந்தைகள்  வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி  இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை.,   மாதமொரு  முறை  ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம் எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல    வார்த்தை  டாக்டர்  சொல்ல  வேண்டுமே  என்று  வேண்டும் தாயின்  உள்ளங்கள்.

    பத்துரூபாய் மருந்து என்றால்   பாப்பையா மருந்து.   வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால்  ஜம்மியோ, ஜிம்மியோ? வியாதி  ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனை தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு………..

    அக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் எனஅவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள்.  அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலதத்வருக்கு, அந்த ஏக்கத்தை தீர்க்க  ‘இணையப்பாட்டி’ போல  காமாட்சி அம்மையார்  எழுதி வருகிறார்.  இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ  தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 28, 2014

     

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்கள்
    Kutti Revathy

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவுக் குரலை எழுப்பி வருபவர்.  இவர் தனது சமுதாய அக்கறை கொண்ட இடைவிடாத தொடர்முயற்சியின் ஓர் அங்கமாக இந்த மாதம் குறிப்பிடத்தக்க இரு செயல்களை ஆற்றி மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளார். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய உரைக்காகவும், இம்மாத கணையாழி இதழில் இவர்  எழுதிய கட்டுரைக்காகவும்  இவர் பாராட்டப்படுகிறார். கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் இயற்பெயர் ரேவதி சுயம்புலிங்கம்.  சென்னையில் வசிக்கும் சித்த மருத்துவரான இவர்தம் முற்போக்கு சிந்தனைகளைத்  தொடர்ந்து தனது எழுத்துக்களின் மூலம்  வெளிப்படுத்துவதில் முனைப்பு மிகக் கொண்டவர். தற்கால பெண்ணெழுத்தாளர்களில் பெண்ணிய எண்ணம் நிறைந்த குட்டி ரேவதி “பனிக்குடம்” என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இப்பதிப்பகம் வெளியிடும்  பனிக்குடம் என்ற  தமிழ் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருக்கிறார். “பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வது என்பது  இந்தக் காலாண்டிதழின் நோக்கம்.

    அத்துடன் பனிக்குடம் பதிப்பகம்   பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளை மட்டுமே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதே இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர் குட்டி ரேவதி. சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருகிறார்.

    ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் பங்காற்றியுள்ள  குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000), முலைகள் (2002), தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003), உடலின் கதவு (2006) ஆகிய கவிதை நூல்களையும், காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார்.

    இந்த மாதம் (2014 ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில்) அமெரிக்க செயின்ட் லூயி, மிசௌரி நகரில் நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று இவ்வாண்டில் தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கியுள்ளார்.   மேலும் விழாவில்  “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமையேற்று  இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற, தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு ஊடகக் கல்விக்கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

    “பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை” என்ற தலைப்பில் இந்த மாதம் ஜூலை 2014 இல்  வெளியான “கணையாழி” இதழில் இவர் எழுதிய கட்டுரையில், தமிழ் பெண்எழுத்தாளர்களின் மீது  தமிழ்ச் சமுதாயம் கொண்டிருக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டத்தைக் கண்டித்து எழுதியுள்ளார்.  தமிழ் இந்துவில் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் இலக்கியவாதிகளை அவர்கள் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருப்பதாக* எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக அவருக்கு பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் விடுத்த கண்டன அறிக்கையின் எதிரொலிகளில்  ஒன்றாக இக்கட்டுரையைக் கணையாழி இதழில் குட்டி ரேவதி எழுதியிருந்தார். கட்டுரை  முழுவதையும் இச்சுட்டிவழி சென்று படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு, கட்டுரையின் முக்கியக் கருத்துகள் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

     

    பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை

    kutty raevathi 2

    இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது………….

    பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அதுவரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான்………….

    இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் “பாதுகாப்பின்மை உணர்வு” ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது………….

    அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது………….

    தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி ‘ஊடகப்பிம்பங்களாக’ ஆகிவிட முடிவது இல்லை. ‘உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!’ என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்………….

    இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அல்லது புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காததுதான். மனித இனமாகப் போற்றியதுதான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண் படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்…………

    ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அறிந்திராத  அல்லது அவர்களால் இயலாத சூழ்நிலையில் குட்டி ரேவதி போன்ற சமூகப் பொறுப்புள்ளவர் செய்யும் சேவையை சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பாக அங்கீகரித்துப் போற்ற வேண்டியது நமது கடமை.

     

    இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: kuttirevathi@gmail.com

    இவரைப் பற்றி மேலும் தகவல்களை கீழ்காணும் சுட்டிகளின் வழி அறியலாம்:
    Facebook.com: https://www.facebook.com/pages/Kutti-Revathi/191482800885454
    Twitter.com: https://twitter.com/kuttirevathi
    Blogspot: http://www.kuttyrevathy.blogspot.com
    Wiki: https://ta.wikipedia.org/s/cqa

     

    சான்றுகளும் குறிப்புகளும்:

    பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் – தி இந்து
    http://tamil.thehindu.com/general/literature/article6136159.ece

    எழுத்தாளர் ஜெயமோகன் மீது பெண் எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் தாக்கு! – தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article6132852.ece

    பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை
    http://kuttyrevathy.blogspot.com/2014/07/blog-post.html

    * தனது இணையதளத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை  ஜெயமோகன் மறுத்துள்ளார்

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • அன்றும், இன்றும், என்றும் !!!

    — தேமொழி.
    thalaivan
    அன்று:
    தலைவன் (தனது நெஞ்சிற்குக் கூறியது):

    பெறுவ தியையா தாயினு முறுவதொன்
    றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
    கைவள் ளோரி கானந் தீண்டி
    எறிவளி கமழு நெறிபடு கூந்தல்     
    மையீ ரோதி மாஅ யோள்வயின்
    இன்றை யன்ன நட்பி னிந்நோய்
    இறுமுறை யெனவொன் றின்றி
    மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.

    — பரணர், குறுந்தொகை பாடல் 199

    பின்புலம்:
    “தலைவா, இனி தலைவியை நீங்கள் காண்பது அரிது.  அவள் வீட்டை விட்டு வெளியேற வழியின்றி அவளது பெற்றோர் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்”,  என்று  தலைவியின் தோழி தலைவனுக்குச் செய்தி சொல்லிச் செல்கிறாள்.  “இனி என் அன்புக்குரிய காதலியை இப்பிறவியில் காணவே முடியாதோ! ஆனாலும் இந்தச் சூழ்நிலையால் என் காதல் மாறாது எனது நெஞ்சே, ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வருவது என் காதல் என்பதை அறிவாய்” என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான் அந்தத் தலைவன்.

    பாடலின் பொருள்:
    எனது நெஞ்சே, உறுதியான தேரையும், சிறந்த கைவண்மையும் பெற்ற ஓரியின் காட்டின் வழியே வீசும் மணம் கமழும் காற்றினைப் போல நறுமணம் கொண்ட, நெளி நெளியான முடியினால் ஆன மைபோன்ற கரிய கூந்தலை உடைய என் காதலியை நான் இப்பிறவியில் காண முடியாமல் போனாலும்  நான் அவளிடம் கொண்ட காதலுக்கு அழிவில்லை. அடுத்து வரும் பிறவிகளிலும் என் காதல் தொடர்ந்து வரும்.

    ***

    இன்று:
    தலைவன் (தனது தலைவியிடம் கூறியது):

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

    — கவிஞர் கண்ணதாசன்

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://www.dinamani.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!
    ஜூலை 21, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள்

    seetha natarajan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிறுவனத்தின், ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (J.Krishnamurti Foundation – Rishi Valley School) யில் சமூகவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  தனது சமூகவியல் வகுப்பில்  செயல்முறைக் கல்விமுறையில்  மாணவர்களுக்கு பாடத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக  இவர் பாராட்டப்படுகிறார்.

    வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் பரிந்துரையில் சமூகவியல் பாடங்களை பெரும் முயற்சியுடன் செயல்முறை பாடங்களாக அறிமுகப்படுத்தும் திருமிகு. சீதா நடராஜன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம். இவருடைய இணையதளம் :

    வண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு

    கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சீதா நடராஜன் சமூகப் பாடங்களுடன்  ஆங்கிலம், சுற்றுச் சூழல் பாடங்களும் கற்பிக்கிறார். கற்றல் திறன் குறைந்த, சிறப்பு பயிற்சி தேவையான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பயிற்சியையும் சீதா நடராஜன் பெற்றுள்ளார். நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றிலும் ஆர்வம்  உள்ளவர் இவர்.

    உலக மற்றும் வாழ்வியல் பார்வையை விரிவாக்கும் சமூகவியல் பாடங்கள் கல்விக்கூடங்களில் அதற்குரிய மதிப்பினைப் பெறுவதில்லை.  பலநாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிவதன் மூலமும், நமது நாட்டின் பண்டைய  மக்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும்  அறிவதன் மூலமும், தொடரும் இந்தக் காலவெளியில், தொடர்ச்சியாக வாழ்ந்து வரும்  மனிதஇனத்தின் அருமையை நாம் உணர்ந்து பாராட்ட முடியும். மனித இனத்தின்  சிறப்பினை அறிவதன் மூலமாக  இக்காலகட்டத்தில் வாழும் நாமும் நம் பங்கை செம்மையாகச் செய்யவேண்டிய பொறுப்பும் நமக்கு விளங்கும்.   ஆனால் இப்பாடம் அதிக சிரத்தையின்றிதான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  மாணவர்களும்  ஆர்வமின்றிக் கடனே என்றுதான்  மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே  முன்னிறுத்தி பயில்கிறார்கள். பிறகு  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல வாழ்க்கைக்கும் உதவாத கல்விப் பயிற்சியாக இது  பயனற்று முற்றுப் பெற்றுவிடுகிறது.

    சிறந்த ஆசிரியர்களாக இருந்தாலும் பலர் மாணவர்களைக் கவரும் கோணத்தில் பாடங்களை வழங்க முயலுவதில்லை. இந்தப் போக்கினை மாற்றி, செயல்முறை அடிப்படையில் பாடத்தை அமைத்து, களப்பணிகள் பகுதியை உள்ளடக்கிய பாடங்களை கற்றுத் தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சீதா நடராஜன்.

    சைனா, எகிப்து, கிரேக்க நாடுகளையும், அவர்களது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றுடன், தற்கால வாழ்வியலையும் கற்கும் பாடமாக இருந்தால்,
    1. அந்த நாட்டு நூல்களையும், படங்களையும், பொருட்களையும் சேகரித்து காட்சிக்கு வைத்து விளக்குதல்
    2. அந்த நாடுகளின் இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
    3. சிறு நாடகங்களை எழுதி நடித்தல், நாட்டியங்களை ஆடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும்

    உள்ளடக்கி பாடமுறையை வடிவமைக்கிறார்  சீதா நடராஜன்.

    இவ்வாறு மாணவர்கள் பாடங்களை அறிவதன் மூலம் அவர்கள் ஆர்வம் தூண்டப்படுவதால், அதைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக பிறநாடுகளின் கலாச்சார நிகழ்வுகளுடன் நம் நாட்டு கலாசாரத்தை  ஒப்பிட மாணவர்களும் ஆர்வம் கொண்டு தானே முன்வருகிறார்கள்.

    எடுத்துக்காட்டாக, சைனாவைப் பற்றிய பாடத்தில் அங்குள்ள மக்கள், இடங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, பள்ளியில்  ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார் சீதா நடராஜன்.  மாமன்னர்  சின் ஹுயாங்க்டி பற்றிய அறிமுகத்தில், மன்னரின் கல்லறைக்கருகில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உயிருள்ள மனிதர்களின் அளவில் வடிக்கப்பட்டிருந்த சுட்டகளிமண் பொம்மைகளான வீரர்கள் குதிரைகள் போன்ற பொம்மைகளை குயவர்களின் உதவியுடன் களிமண்ணில் உருவாகியிருக்கிறார். சைனாவின் புகழ்பெற்ற டிராகன் நடனம் மாணவர்களால் சைனா மக்களின் உடையலங்காரத்துடன் நடத்திக்காட்டப்பட்டிருக்கிறது. சீன மக்களின் மத நம்பிக்கைகைகள், இறப்பிற்கு பின்னர் ஆவி, வாழ்வு சடங்குகள் போன்ற நம்பிக்கைகள் விவாதிக்கப்பட்ட பொழுது , மாணவர்களே விவாதத்தை முன்னெடுத்து இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் அவற்றை ஒப்பிட்டு அறிய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

    அத்துடன் இந்த ஒப்புநோக்கும் ஆய்வு பிறமத சடங்குகள், நம்பிக்கைகள் எனவும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு இவையாவும் இக்காலத்திற்கு பொருத்தமானவையா, இவற்றின் குறை நிறைகள் என்ன? என்ற கோணத்திலும் மாணவர்கள் தங்கள் கற்றலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.  மன்னராட்சி, அரசபரம்பரை அவர்களது  அரசாளும் உரிமையைப்  பெறும் நிலை, இக்கால அரசாங்க அமைப்புகள் என்றும் பாடம் தொடர்ந்திருக்கிறது. கன்பூஷியஸ் வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் பள்ளியைத் தோற்றுவித்த   சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டிருக்கிறது.

    சைனா  போன்றே மற்ற பிறநாடுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  எகிப்தின் புராதனம்,  கிராக்க நாட்டின் மக்களாட்சி முறையின் ஆரம்பம், புராணக்கதைகள், தத்துவ மேதைகள், போர் நிகழ்சிகள் என பாடங்கள் செயல்முறை வடிவெடுத்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வெறுமே நூலில் தொடர்புகள் புரியாது பாடங்கள் படிப்பது, தேர்வுக்கு பிறகு படித்ததை மறப்பது என்ற வகையிலிருந்து இது மாறுபட்ட வகையில் நினைவில் நிறுத்தப்பட்டது என்பதை மாணவர்களின் நினைவுகூர்தல் மூலம்  அறியும் வாய்ப்பும் சீதா நடராஜனுக்கு கிடைத்திருக்கிறது.

    இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: nats_k@yahoo.com

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 14, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. கிரேசி மோகன்  அவர்கள்

    கிரேசி மோகன்

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து, ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்கள் நன்கறிந்த நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள்.  வல்லமையில் “தாம்புக் கட்டு”  என்ற தலைப்பில் அவர் சென்ற வாரம் எழுதிய கதைக்காகவும், வெப்துனியா செய்தித்தளத்தில் அவர் எழுதிய திரைப்பட விமர்சனத்திற்காகவும் வல்லமையாளராகத் தெரிவு செய்யப்படுகிறார்.  வல்லமையாளர் விருதிற்கு அவரைப் பரிந்துரைத்து தேர்வுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் வாசகர் திரு. சு. ரவி அவர்கள்.

    “தாம்புக் கட்டு”  கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த  நிகழ்வுகளையும், பின்நாளில்   அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம்.  ஆனாலும் கிரேசி மோகன் வழங்கிய கோணம் முற்றிலும் புதுமையானது.

    “தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன்  தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும், சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது.  எட்டவதாகப்  பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்ப்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய  வாசு மாமாவும்  (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை  அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார்.  அவருக்கு உதவி செய்கிறாள்  ஆயர்பாடியில் வசிக்கும்  சிறுமி ஒருத்தி.

    கண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்ற உதவிய அந்தச் சிறுமி யார்?  இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம்  பெற்ற பின்னர் உதவி செய்தாள்? அவள் விருப்பம் என்ன? யாரவள்?  இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு.  இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்த சுட்டி வழி சென்று  காண்க.  படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித்  தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

    “பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…”  

    “கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…”

    கதையில் வரும் இந்த வர்ணனைகள்  கிரேசி மோகனின் “டச்”.  இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று.  இது போன்ற மற்றொரு   வியக்கவைக்கும் கற்பனையை  மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற  கவிதைத் தொகுப்பிலும் காணலாம் …

    அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… முழுக்கவிதையும் இந்த சுட்டியில் கிடைக்கும்..

    கன்னிகாதானம்
    ——————

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு…

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து…

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று…

    கிரேசி மோகன் அவருக்கு  கைவந்த கலையான “குப்பாச்சுலு VS கோடபட்ரி” என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றையும் , அத்துடன் மற்றொரு கைவந்த கலையான ஓவியங்களையும் வல்லமை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.  ஆம்… கிரேசி மோகன் ஒரு சிறந்த ஓவியரும் கூட, வல்லமையில் வெளியான அவரது ஓவியங்கள் ஒரு சில இங்கே  உங்கள் பார்வைக்கு…

    சென்ற வார இறுதியில் (2014 ஜூலை 11 அன்று) வெளிவந்த இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களின்  ராமானுஜன் திரைப்படத்திற்கு   கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது …

    எனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….!

    ‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்….

    ‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது….

    பெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டு தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்….

    படம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது….

    அமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் வினாயகத்தின் இசையும் சூப்பர்….

    ‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் ….

    தயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100….

     

    அத்துடன் முத்தாய்ப்பாக,  படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களைப் பாராட்டி,  அவர் இசை அமைத்த   “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்றுவாழ்த்துறைத்து  ஒரு  வெண்பாவும்   பாடியுள்ளார் ….

    “புனிதமே தையும், கணிதமே தையும்,
    மனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக,
    கேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன்,
    காட்ல மழைவினாய கம்”

    திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில்  தினமும் வெண்பாக்கள்  புனைந்து வரும் கிரேசி மோகன், இதுவரை அந்த வெண்பாக்களை (இதுவரை 140  வெண்பா பதிவுகள்) வல்லமை மின்னிதழ் வாசகர்களுடனும், வல்லமை கூகிள் குழுவிலும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பாபாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா …ஆதலால்…

    வெண்பா வடித்து வெகுமதியாய்  நாளுமொரு
    பண்பாடும் பாவல, நீவிர் திரையுலக
    எல்லை  கடந்திங்கே என்றும் புகழ்காணும்
    வல்லமை யாளர்தாம்  இன்று”   

    என்று வெண்பா சொல்லிப்  பாராட்டி …

    சிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த   நாடகம் மற்றும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   கிரேசி மோகன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    நன்றி:
    வெப்துனியா –
    http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/crazy-mohan-on-ramanujan-movie-114071200014_1.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 7, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. செண்பக ஜெகதீசன்  அவர்கள்

    Shenbaga Jagatheesan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  சுசீந்திரத்தில் உள்ள  காசித்திருமடம், ஆசிரமத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் திரு. செண்பக ஜெகதீசன்.  சென்றவாரம் வல்லமை வாசகர்களுடன் இவர் பகிரிந்து கொண்ட  “தடை தகர்த்து…”  என்ற தன்னம்பிக்கையூட்டும் கவிதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    தற்பொழுது நிர்வகிக்கும் காசித்திருமடப் பணிக்கும் முன்னர் நெல்லையப்பர் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,  “இரைதேடுவதுடன் இறையும் தேடும் அரசுப்பணி”யாற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.  இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் சற்றேறக்குறைய எட்டு ஆண்டுகளாகப் பற்பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  அவற்றில் சில:  வல்லமை, வார்ப்பு, பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, நந்தலாலா.

    இவர் கவிதைகளின் கருப்பொருளாகக் கொண்டவை; இயற்கை, தத்துவம், எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை போன்றவையாகும்.   கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வல்லமை வாசகர்களுடன் தனது கவிதைகளை பகிர்ந்து வருகிறார் இக்கவிஞர்.  இவருடைய இவ்வாரக் கவிதை, வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவளுதல் கூடாது, அவற்றை எதிர் கொண்டாலே அவை வழங்கும் படிப்பினை மூலம் திறமை  மிக்கவராக மாறலாம் என்ற தன்னம்பிக்கையூட்டும் கருத்தினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

    தடை தகர்த்து…

    சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    
         சிறந்த மாலுமி உருவாக்கும்,
           மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை           
         மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
    கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
         காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
    ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
         ஏற்றம் என்றும் பெறுவாரே…!

    இவர் எழுதி வல்லமையில் வெளிவந்த மேலும் சில கவிதைகள் கீழே…..

    கிடக்கட்டும் குப்பைகள்…

    குறைசொல்ல ஒரு
    கூட்டம் உள்ளவரை,
    நிறைய வருகின்றன
    நீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்..

    உறங்கவிடமாட்டார்கள்
    உன்னை,
    உறங்கிடவும் மாட்டார்கள்-
    உன்மீது
    பொறாமை கொண்டவர்கள்..

    உரிய சமயமிது,
    உணர்ந்துகொள்
    உழைத்திடு
    உயர்ந்திடு..

    உதாசீனப்படுத்திடு
    குறைசொல்லும் அந்தக்
    குப்பைகளை…!

    __________________________________________

    கலங்காதே…

    கலங்குவதில்லை மலர்,
    காய்ந்து
    கீழே விழுவதற்கு…

    காரணம் இதுதான்-
    அதன்
    கனி உதிர்க்கும்
    விதை முளைத்து
    மீண்டும்
    மரமாகும் நம்பிக்கை…!

    கலங்கி நிற்கிறாயே
    மனிதா,
    மரணத்தைத் தினம்
    மனதில் எண்ணி…!

    __________________________________________

    ரேகை

    போடும் ஒரு நெல்லுக்காக
    கிளி எடுத்த
    பொய்யான சீட்டை வைத்துப்
    புளுகுவதை நம்பாமல்,
    கைரேகைக்
    கதைகளையும் நம்பாமல்,
    கைரேகை தேயக்
    கடும் உழைப்பு உழைத்தால்
    உன்ரேகை (அடையாளம்) தெரியும்
    உயர்வாக…!

    __________________________________________

    இக்கவிதைகளுக்கும் மேலாக செண்பக ஜெகதீசன் கையெடுக்கும் மற்றொரு கவிதை முயற்சியை இதுவரை பிறர் கையாண்டு பார்த்ததில்லை.  இவை கவிதைகள் வடிப்பதில் முற்றிலும் ஒரு புதிய முயற்சி.  வியக்க வைக்கும் கோணமென்றும் கூறலாம்.

    இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணிலடங்கா விளக்க உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளது.  செண்பக ஜெகதீசன் தனது “குறளின் கதிர்களாய்…” கவிதைத் தொடர் வரிசையில்  திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதன் விளக்கத்தை பல்வேறு கவிதை பாணிகளில் வடிப்பது  இவர் கவிபுனையும் திறமையைக் காட்டுகிறது.  எடுத்துக்காட்டாக, “பீலிபெய் சாகாடும் ” என்ற குறளை இவர் புதுக்கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, புதுப்பா, கிராமிய பாணி என பல்வேறு கவிதை பாணிகளில் வழங்குவதைக் கீழே காணலாம்….

    குறளின் கதிர்களாய்…

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்…!
    -திருக்குறள்-475(வலியறிதல்)

    புதுக்கவிதையில்…

     மலரினும் மெல்லிதென்று
    மயிலிறகைச் சேர்த்து
    வண்டியில்
    மனம்போல ஏற்றிவைத்தால்,
    முறிந்துவிடும் அச்சாணி..
    மிஞ்சாது எதுவும்
    அளவை
    மீறினால் எதிலும்…!

    குறும்பாவாய்…

    குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
    கூடினால் மயிலிறகும்..
    கதையிதுதான் வாழ்க்கை…!

    மரபுக் கவிதையில்…

    வண்டியில் ஏற்றும் பாரமது
    வலிமை யில்லா மென்பொருளாம்
    கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
    கோல மயிலின் இறகெனிலும்,
    உண்டே யதற்கும் அளவதுவும்,
    உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
    கண்டிடு வாழ்வில் கதையிதுவே
    கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

    புதுப்பாவில்…

    மெல்லிய பொருள்தான்
    மயிலிறகு,
    மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
    அதுவும் உடைந்து
    மிஞ்சுவதில்லை எதுவுமே..

    நல்லதுக்கு
    எதிர்மறைப் பலன்தான்
    எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

    கிராமிய பாணியில்…

    ஏலேலோ ஐலசா
    ஏத்து பாரம் ஐலசா..
    அளவாப் பாரம் ஐலசா
    அளந்து ஏத்து ஐலசா..
    மயிலுப் பீலி ஆனாலும்
    மிஞ்சா வண்டி ஒடையுமே..
    மனுசங் கதயும் இதுதானே
    மனசில கொள்ளு இதத்தானே..
    ஏலேலோ ஐலசா
    ஏத்து பாரம் ஐலசா…!

    சிந்தனையைக் கவரும் கவிதைகளை வழங்கி, கவிதை இலக்கிய மரபில் புதுமை புரிந்து வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   செண்பக ஜெகதீசன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    முகநூலில் செண்பக ஜெகதீசன்: https://www.facebook.com/jagatheesa.perumal.3?ref=tn_tnmn

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? – கவிதை

    –தேமொழி.

    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

    Maya Angelou

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

     

    சுதந்திர பறவை வேகமெடுத்து
    காற்றில் பாய்ந்தது,
    காற்றோட்டத்தின் எல்லை வரை
    காற்றில் மிதந்தது,
    செங்கதிரின் வண்ணத்தில் தன்
    சிறகைத் தோய்த்து
    வானம் எனக்கே  சொந்தம்
    என எண்ணத் துணிந்தது

    கூண்டுப் பறவையோ குறுகிய
    கூண்டில் கொதிப்புடன் உலவியது,
    பொங்கி வரும் ஆத்திரம்
    அதன் கண்ணை மறைத்தது,
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

    சுதந்திர பறவை மற்றொரு
    இளந் தென்றலை நினைந்தது
    அசையும் மரங்களின் பெருமூச்சாய்
    மெல்லத் தவழ்ந்து   செல்லும்
    பருவக் காற்றை நினைந்தது
    காலைக்கதிரொளியில்
    ஒளிர்ந்திடும் புல்வெளியில்
    ஊர்ந்திடும் கொழுத்தபுழு
    உணவை மனதினில்  நினைந்தது
    இந்த வானமே எனதென மகிழ்ந்தது

    கூண்டுப்பறவையோ கனவுகளின்
    கல்லறை மேடையில் நின்றது
    பயங்கரக் கனவின் அலறலாக
    அதன் நிழல்  ஓலமிட்டது
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

     

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share