சிங்காரச் சென்னை என்றோர் கிழவி

3

— தேமொழி.

இந்த ஆகஸ்ட்  22, 2014 இல் தமிழகத்தின் தலைநகர் சென்னை தோன்றி 375  ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  சென்னை ஒரு பழம் பெரும் நகரம்தான் என்றாலும்   இச்சென்னை மாநகர் தனது 257 ஆம் ஆண்டில் நடை போடும் பொழுதே சென்னை நகரைக் “கிழவி” என்று ருட்யார்ட் கிப்லிங் எழுதியுள்ளார்.

ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது.  அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான “தி ஜங்கில்  புக்” என்பதாகும்.  அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகச் சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர்.  தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப்  பிறந்தவர்.  அவர் பிறந்தபொழுது அவர் தந்தை “Sir J. J. College of Architecture” என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார்.  அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது.  கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஓர் இடத்தில் பொறிக்கப்படுள்ளது. அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

அதற்குக் குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது.  எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வதற்கில்லை.  ஆனால் அவர் கூறிய மற்றொரு கூற்று “தி வைட் மேன்ஸ் பர்டன்” (The White Man’s Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது.  ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார்.  இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதிய அக்கால ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து. நமது கடிகாரம் சரி என நாமே நினைத்து நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்….அது சரியா? எனவே இது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான்.

நோபல் பரிசுகள்  வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்)  என்ற பெருமைகள் இவரைச் சாரும்.  மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலை பார்த்தார்.  பின்னர் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை.  அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது.  இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார்.  ஜங்கிள் புக் கதையின் கருவாக இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல அவரது பிற படைப்புகளிலும்  இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.

இவரது “If___” (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருத்து தெரவித்துள்ளார். சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் ஜெர்மனின் நாஃசிப் படைகளின் குறியாக  சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

தனது  “The Seven Seas” என்ற புத்தகத்தை (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm)  கிப்லிங் பம்பாய் நகரத்திற்குச் சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே அதில் எழுதியுள்ளார்.  இந்தப் படைப்பில் ஓரிடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக “The song of the Cities” என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன.  அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec, Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland).  அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் கவிதைப் பகுதிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

The song of the Cities
(by Rudyard Kipling, 1896)

Bombay
Royal and Dower-royal, I the Queen
Fronting thy richest sea with richer hands —
A thousand mills roar through me where I
glean
All races from all lands.

Calcutta
Me the Sea-captain loved, the River built,
Wealth sought and Kings adventured life to hold.
Hail, England!  I am Asia-Power on silt,
Death in my hands, but Gold!

Madras
Clive kissed me on the mouth and eyes and brow,
Wonderful kisses, so that I became
Crowned above Queens –a withered beldame now,
Brooding on ancient fame.

(* beldame என்றால் பாட்டி , முதியவள், கிழவி என்று பொருள்)

இராபர்ட் கிளைவ் கொடுத்த அருமையான  அன்பு முத்தங்களினால் முடிசூடிய இங்கிலாந்து அரசியைவிடவும் உயர்ந்த புகழுடன் இருந்த சென்னை நகரம் பிறகு பழம்பெருமையை எண்ணி வாடிய கிழவியாக  இருப்பதாக சென்னை தன்னைப்பற்றிக்  கூறுவது போல அக்கவிதைவரிகள் எழுதப்பட்ட ஆண்டு 1896, அதாவது  118 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையின் நிலை கிழவியாக இவரால் கருதப்பட்டிருக்கிறது.

Chennai Mount Road in - 1896Chennai Chepauk Cricket-1891Chennai HARBOUR-1891Chennai high courts -1895Chennai Marina beach-1890Chennai Moubray Road-1885Chennai Napier Bridge-1895Chennai Parrys Corner-1890

 

 

 

 

 

 

 

படங்கள் உதவிக்கு நன்றி:
https://groups.yahoo.com/neo/groups/sagakkal/conversations/topics/979

 

 

இக்கட்டுரையின் “ருட்யார்ட் கிப்லிங்” பகுதி வேறு ஒரு கட்டுரையாக முன்னர் வெளிவந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சிங்காரச் சென்னை என்றோர் கிழவி

  1. பழைய புகைப்படங்கள் என்னை அக்காலத்தைப் பார்க்க உதவும் சாளரமாக அமைந்தது.  பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

  2. ருத்யார்ட் கிப்லிங் பற்றித் தெரியாத விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன்.  சென்னையைப் பற்றிய அவரது கவிதையும் எனக்குப் புதுசு தான்.  பழைய படங்கள் அக்காலச் சென்னையைப் பார்க்க உதவின.  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தேமொழி!

  3. அன்பு நண்பர்கள் திரு. அரிசோனனும், கலையும் வழங்கிய கருத்துரைகளுக்கு நன்றி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.