Author: தேமொழி

  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

    தேமொழி

     

    புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
           பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே – அதைக்
           கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

    தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

    கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
    -பாரதியார்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>

    Share
  • திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?

    தேமொழி

    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை.  இதன் காரணத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்து கொள்ள விரும்பியிருப்போம்.  நம் பெற்றோரை நாம் கேட்டு நச்சரித்த கேள்விகளில் இது ஒன்றாகவும் இருக்கலாம்.

    ஆன்மீக வழியில் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு இக்கேள்விக்கு விடை சுலபம். இதற்குக் காரணம் இறவைனின் விருப்பம், இறைவன் படைத்தபடி உலகம் இயங்குகிறது, அதில் வாழும் உயிரினங்களும் இயங்குகின்றன என்று விளக்குவார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதற்கும் மேலான விளக்கத்தைத் தேடி ஆராய்வார்கள், இந்த ஆர்வம் அவர்கள் இயல்பு. உயிரியல் (biology), சூழலியல் (ecology),  பரிணாமம் (evolution) போன்ற துறைகளின் அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அளவு, விலங்கினங்களின் கூட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை என இவையாவற்றையும் ஆராய்ந்து அவற்றை விளக்கும் கோட்பாடுகளை உருவாக்குவார்கள். மேலும் அதிக அறிவியல் தகவல்கள் தெரியத் தெரிய, விளக்கம் தரும் இக்கோட்பாடுகளும் இவர்களால் மாற்றியமைக்கப் படும். ஆனால் காரணம் அறிய விரும்பும் ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

    அந்நாள் அறிவியல் அறிஞர் ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin), தற்கால அறிவியல் அறிஞர்களான ‘டெட் கேஸ்’ (Ted Case), ‘ஜான் டைலெர் போனெர்’ (John Tyler Bonner) போன்றவர்கள் உயிரினங்களின் வளர்ச்சி பற்றி  ஆராயந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.  ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவை நிர்ணயிப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள உலகிலேயே மிகப் பெரிய உயிரினமான நீலத்திங்கிலம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் இக்கேள்விக்கு விடை காண முயல்வோம்.

     

    புவியினை வாழுமிடமாகக் கொண்ட உயிரினங்களில், அதாவது இதுவரை புவியின் வரலாற்றில் தோன்றி அழிந்த மற்றும் இன்றும் வாழும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டால், திமிங்கிலங்கள் தான் அளவில் பெரியவை.  உலகின் மிகப் பெரிய விலங்கினங்களைப் பட்டியலிட்டால், பட்டியலில் தரவரிசைப்படி வரும் முதல் பத்து விலங்குகளுமே வெவ்வேறு வகையான திமிங்கிலங்கள்தான். நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானையைவிடப் பலமடங்குப் பெரியவை திமிங்கிலங்கள். இந்த திமிங்கிலங்களிலும் நீலத்திமிங்கிலமே மிகப் பெரியது.

    பெருங்கடல்களில் வாழும் நீர்வாழ் விலங்கான திமிங்கிலம் முன்னொரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகவும், ஏதோ சில சுற்றுச்சூழல் காரணங்களினால் கடலுக்கு இடம் பெயர்ந்ததாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே குட்டியீன்று பாலூட்டும் பாலூட்டி வகையான திமிங்கிலங்களின் தோற்றம் நீர்வாழ்கைக் கேற்ற தகவமைப்புகளைப் பெற்று மீன்கள் போன்று தோன்றுகின்றன. ஆனால் மீன் போன்ற தோற்றமளித்தாலும் திமிங்கிலங்கள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.

    மற்ற பாலூட்டிகளைப் போலவே உடல் உறுப்புகள் கொண்டவை நீலத்திமிங்கிலங்கள். இதய அமைப்பு, நுரையீரல்கள் வழி சுவாசிப்பது என யாவும் பாலூட்டிகள் போன்றே இவற்றிற்கு அமைந்திருக்கிறது.  மீன்களைப்போல செவுள்களால்  நீலத்திமிங்கிலங்கள் சுவாசிப்பதில்லை.   நீலத்திமிங்கிலங்கள் தலையில் உள்ள துவாரங்கள் வழியே காற்றை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். உணவிற்காகக் கடலின் ஆழம் வரை சென்றாலும் 20 நிமிடங்கள் வரை கூட நீலத்திமிங்கிலங்களால் தாக்குப் பிடிக்க முடியும்.  மீண்டும் காற்றை வெளியேற்ற நீர்பரப்பிற்கு வந்து துவாரங்கள் வழியே கற்றை வெளியேற்றும் பொழுது 30 அடிகள் உயரம் வரை ஒரு நீர் ஊற்றுபோல நீரைப் பீய்ச்சி அடிக்கும்.

    இந்த நீலத்திமிங்கிலங்கள் (Balaenoptera musculus, விலங்கியல் இனப் பெயர்), பாலூட்டிகள் வகுப்பு (Class: Mammalia), கடற்பாலூட்டி வரிசை (Order: Cetacea) என வகைப்படுத்தப் படுகிறது. நீலத்திமிங்கிலம் ஒரு ஊனுண்ணி/விலங்குண்ணி (carnivore). இது உண்பது ஓரிரு சென்டிமீட்டர் நீளம் அளவேயுள்ள கூனிப்பொடி (Krill) என்னும் அளவில் மிகச் சிறிய இறால் வகை கணுக்காலி (tiny Crustaceans, a group of Arthropods). சராசரியாக 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் ஒரு நீலத்திமிங்கிலத்தின் நீளம் ஏறத்தாழ 100 அடிகள் (up to 33 meters in length). இதன் உடல் எடையோ 200 டன்கள் வரை இருக்கும்.  அதாவது ஒரு நீலத்திமிங்கிலத்தின் எடை 40 யானைகளின் மொத்த உடல் எடைக்குச் சமம். இரு மிகப் பெரிய டயனோசாரின் உடல் எடைக்குச் சமம். மனித உடலின் நீளத்துடனும், யானையின் உடல் எடையுடனும் ஒப்பிடப்பட்ட படங்கள் விளக்கத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

    நீலத்திமிங்கிலத்தின் நாக்கின் பரப்பளவு 50  பேர் அமரும் அளவு பெரியது. அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடையளவு ஆகும். அதன் இதயத்தின் அளவு ஒரு சிறிய ஊர்தியின் (car) அளவும், அதன் குருதி நாளங்கள் ஒருசிறிய மனிதன் அதன் வழியே நீந்திச் செல்லும் அளவு பெரியவை. ஆனால் அதன் உணவுக்குழாய் (oesophagus) மிகவும் சிறியது. ஒரு சிறிய ரொட்டித் துண்டும் அதன்வழியாகச் செல்லமுடியாமல் சிக்கிக் கொள்ளும் அளவு சிறியது.  நீலத்திமிங்கிலத்தின் வாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் பெரிய விலங்குகளை உண்ண முடியாது. உருவில் மிகச்சிறிய கூனிப்பொடி இறால்களையும், அதே அளவுள்ள மிகச் சிறிய மீன்களை மட்டுமே உண்ணமுடியும்.  ஆனால் இக்குறையைத் தீர்க்கும் வண்ணம் அதன் உணவு உண்ணும் முறை தகவமைந்துள்ளது.

     

    நீலத்திமிங்கிலம் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?
    நீலத்திமிங்கிலம் உணவு உண்ணும் முறை பெரிதும் வேறுபட்டது.  இதன் வாயில் ஒரு மீட்டர் அகலமுள்ள பலீன் தகடுகள் (baleen plates) 30 இருக்கிறது.  இவை சீப்பு போன்ற உருவத்தில் பல சிறிய இழைகளைக் கொண்டிருக்கும்.  இதன் உணவான கூனிப்பொடி இறால்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நீந்தும்.  இக்கூட்டத்தை நெருங்கியதும் நீலத்திமிங்கிலம் வாயை மிக அகலமாகத் திறந்து நீருடன் கூனிப்பொடி இறால்களை விழுங்கும் (lunge feeding behavior).  இவ்வாறு விழுங்கும் உணவும் நீரும் நீலத்திமிங்கிலத்தின் உடல் எடையைவிட 125% அதிகமாக இருக்கும்.  இவ்வாறு விழுங்குவதற்கு ஏதுவாக அதன் வாயும் கீழ்தாடையும் மிக அகலமாகத் திறக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிறகு விழுங்கிய நீரை பலீன் தகடுகள் வழியாகத் துப்பும். நாவை மேல்நோக்கி அழுத்தி நீரை வெளியேற்றும்.  அப்பொழுது பலீன் தகடுகளின் இழைகளால் கூனிப்பொடி இறால்கள் சலிக்கப் பட்டு அதன் வாய்க்குள் சிக்கி விடும்.  இவற்றை அப்படியே நீலத்திமிங்கிலம் விழுங்கி விடும்.

    ஒரு நாளைக்கு 40 மில்லியன்கள் கூனிப்பொடி இறால்களை (4 டன்கள் எடை வரை) நீலத்திமிங்கிலம் உணவாக உண்ணும், அதனால் அது பெறும் சக்தியின் அளவு 480,000 கலோரிகள். நீலத்திமிங்கிலத்தின் உணவான கூனிப்பொடிகளின் தொகையும் உலகில் மிக மிக அதிகம். கூனிப்பொடிகளின் உருவ அளவும் அதிகத் தொகையும்; அது போலவே நீலத்திமிங்கிலத்தின் வாயும் உணவு உண்ணும் முறையும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருந்தியுள்ளது. நீலத்திமிங்கிலங்களின் உணவாவதற்கே கூனிப்பொடிகள் பிறந்தது போலவும், அவற்றை உண்ணவே நீலத்திமிங்கிலங்கள் பிறந்தது போலவும் இயற்கையில் அமைந்திருக்கிறது.  இந்த சாதகமான உணவு சூழ்நிலை நீலத்திமிங்கிலம் அதிகம் உண்டு மிகப் பெரிய அளவாக வளர பரிணாம வளர்ச்சிப்படி ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    மற்றொரு காரணம் அது வாழும் நீர்நிலை செய்யும் உதவி.  நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெரிதானால்,  அந்த உடலுக்கேற்ற அதிக எடை புவியீர்ப்பு விசையினால் புவி நோக்கி இழுக்கப்பட்டு சிரமம் கொடுக்கும்.  அதற்குத் தீர்வாகப் பெரிய விலங்குகள் உடல் எடையைத் தாங்கும் பருத்த கால்களைக் கொண்டிருக்கும், காட்டாக யானையைக் கொள்ளலாம்.

    நிலவாழ் உயிரனங்களுக்கு இருக்கும் புவியீர்ப்புத் தாக்கம் நீர்வாழும் உயிரினங்களுக்கு இல்லை.  மாறாக நீரின் மேல்நோக்கு விசை (buoyancy) நீர்வாழ் விலங்குகளுக்கு நீரில் மிதக்க உதவுகிறது. ஆர்கிமிடீஸ் கொள்கை விளக்கும் நீரின் இப்பண்பினால் பெறப்படும் உதவியால் சக்தி விரயமாவது குறைகிறது. இதுபோல வாழும்  நீர்நிலையின் சூழல் வழங்கும் உதவி, அதிக உணவு வளம், அதை உண்ணும் உடலின் தகவமைப்பு ஆகியவை நீலத்திமிங்கிலங்கள் உருவில் பெரியவையாக வளர உதவியிருக்கிறது. அடுத்து நமக்கு நியாயமாக எழ வேண்டிய கேள்வி, அவ்வாறானால் நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேலும் ஏன் பெரிதாக வளரக்கூடாது என்பது.

    உயிரினத்தின் உருவம் பெரிதாகப் பெரிதாக,  அதன் வளர்ச்சிக்கேற்ப வளர்சிதை மாற்றத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் உடலினைப் பராமரிப்பதற்கும் அதிக சக்தி தேவைப்படும்.  அதற்கு வேண்டிய சக்தியைப் பெற அதிகம் உண்ண வேண்டியிருக்கும். இவ்வாறு உணவைத் தேடி உண்டு, செரிமானம் செய்து சக்தி பெறுவதற்கும் அந்த உயிரினம் சக்தியை விரயம் செய்ய வேண்டி இருக்கிறது. நீலத்திமிங்கிலம் நிலையாக ஒரிடத்தில் நிலைத்து இருந்து உணவு உண்ணுவதற்கு 15 மடங்கு அதிக சக்தி செலவழிக்கப் படுகிறது.  இது நீந்துவதற்குத் தேவையான சக்தியை விடவும் 5 மடங்கு அதிகம்.

    வணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது போன்ற செயலை இந்த உணவு தேடும் முயற்சிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு உணவின் மூலம் பெறப்படும் சக்தி (வரவு), அந்த சக்தியைப் பெற செலவழித்த சக்தியையும் அத்துடன் உடலைப் பராமரிக்க செலவிடப்படும் வளர்சிதை மாற்றதிற்கு தேவையான சக்தியையும் (செலவு) விட அதிகமாக இருந்தாலே இந்த உணவு வேட்டை லாபம் தரும் செயலாக இருக்கும். உபரியாக கிடைக்கும் சக்தி உடலை மேலும் வளர்க்க உதவும். இதற்கு உதவும் வகையில் உயிரினம் உண்ணும் உணவும் தகுந்த அளவு கிடைக்க வேண்டும்.

    ‘ஜான் டைலெர் போனெர்’ என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதன் முக்கிய உயிரியல் காரணிகள் எனக் குறிப்பிடுபவை (1) உயிரினத்தின் திறன், (2) உடலின் புறப் பரப்பளவு, (3) உடலின் கட்டமைப்பு, (4) வளர்சிதை மாற்றத்தின் அளவு, மற்றும் (5) உயிரினத்தின் எண்ணிக்கையின் தொகை (five important biological features: strength, surface area, complexity, rate of metabolism, and organism abundance). அறிவியல் அறிஞர்கள் இந்தக் காரணிகளை ஒரு கணித சமன்பாடு/வாய்ப்பாடாக உருவாக்கிய  பின்பு, ஒரு உயிரினத்தின் தகவல்களை அதில் பொருத்தி கணக்கிடுவார்கள். கணித மதிப்பீடுபடி அந்த உயிரினத்தின் வளர்ச்சி அதன் சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கைத் தகவமைப்பு படி, அதற்கு சாதகமான முறையில் எந்த அளவு வளர்ச்சி அடைய முடியும் என்பது இதனால் தெரிய வரும்.

    இவ்வாறு நீலத்திமிங்கிலத்தினைப் பற்றிய தகவல்களைக் கொண்டு மதிப்பிட்ட பொழுது, அது தேவைகளை சமாளித்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ 33 மீட்டர் வரை வளர முடியும் எனத் தெரிந்தது.  இதுவரை காணப்பட்ட நீலத்திமிங்கிலங்களின் சராசரி நீளமும் ஏறத்தாழ இதே அளவுதான்.  இதிலிருந்து நீலத்திமிங்கிலத்தின் உணவு வகை, அதன் சூழ்நிலை காரணிகள் நிர்ணயித்தபடி நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேல் வளர வாய்ப்பில்லை என்பதை இயற்கை நிர்ணயித்துள்ளது தெரிய வருகிறது.

     

    சிந்தனைக்கு: ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எதற்காக? போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆர்வமுள்ள குழந்தைகளின் மனநிலையை வளர்ந்த பின்பு பலர் கைவிட்டு விடுகிறோம்.  ஆனால் இது போன்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம்.   இவ்வாறு ஆர்வத்தில் ஆராய்ந்து தாங்கள் கண்டறிந்து சொல்லப்படும் உண்மைகள், சமுதாயத்தில் காலம் காலமாக நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக இருந்தால், அவற்றைச் சொல்லுபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக, நவீன அறிவியலின் தந்தை என ஐன்ஸ்டினால் புகழப்பட்டவர் வானியல் மேதை கலிலியோ, இவர் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை வலியுறுத்தியதற்காகக் கிறிஸ்துவ மதக் குருமார்களால் கண்டிக்கப் பட்டார். முதுமையிலும் வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டார். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும், முதன் முதல் நிலவில் காலடி எடுத்து வைத்த  நாடான அமெரிக்காவின் சில பள்ளிகளில் டார்வினின் ‘இயற்கைத் தேர்வு நியதி’யைக் (Theory of Natural Selection) கற்பிக்கத் தடைகள் போடப்படுகின்றன.  இது போன்ற ‘மதத் துரோகம்!’ என்று கூறி தடைகள் போடும் குறுகிய மனப்பான்மை மனித அறிவு வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வது மனித குல மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    [குறள் 396]

    Content References:
    Blue whale
    http://en.wikipedia.org/wiki/Blue_whale
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    National Geographic Explorer : Kingdom of the Blue Whale
    http://channel.nationalgeographic.com/channel/videos/kingdom-of-the-blue-whale/
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    Why are blue whales so enormous?
    http://ed.ted.com/lessons/why-are-blue-whales-so-enormous-asha-de-vos

    John Tyler Bonner, Why Size Matters: From Bacteria to Blue Whales, 2011, Princeton University Press; Reprint edition
    http://books.google.com/books/about/Why_Size_Matters.html?id=pNIkFBA0kdAC

    Ted J. Case, 1979, Optimal body size and an animal’s diet, Acta Biotheoretica, Volume 28, Issue 1, pp 54-69
    http://link.springer.com/article/10.1007%2FBF00054680?LI=true

    Pictures Source:
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/blue-whale_477_600x450.jpg
    http://animals.nationalgeographic.com/animals/blue-whale-interactive/
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/length
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/weight
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/006/cache/krill_601_600x450.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Buoyancy.svg/301px-Buoyancy.svg.png

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
    அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
    எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
    முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
    மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
    வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
    வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)

    – பாஞ்சாலி சபதம், பாரதியார்

     

    பாடல் சொல்வது:
    சூரியனாகிய கோளம், அடிவானத்தில் மிக விரைவாகச் சுழல்வதைப் பார்.  வானத்தில் இடிகளோடு கூடிய பத்துக் கோடி மின்னல்களை எடுத்து, அவற்றை உருக்கி, வார்த்து, ஒரு தகட்டை உருவாக்கிக் காளி அம்மை என்ன விரைவாகச் சுற்றுகிறாள் என்பதைக் காண்பாய்.  என்ன வலிமை, என்ன மாட்சி இங்கே வெளிப்படுகிறது, பார்!  ஒரு தகடு என்றா சொன்னேன்!  இரண்டு தகடுகள் அல்லவா இருக்கின்றன!  இரண்டு தகடுகள் ஒன்றன் மேலொன்றாகப் பொருந்தி, இங்கே வட்டமாகச் சுழல்கின்றன.

    பதவுரை – ஹரிகி (ஹரி கிருஷ்ணன்)
    அவர்களின் பாஞ்சாலி சபதம் – என்னுரை தொகுப்பிலிருந்து

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6>>

    Share
  • கணக்குப் பார்த்துக் காதல் வந்ததா?

    தேமொழி

    படத்தில் உள்ள காதலர் தின சிறப்புப் படம் ஃபேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இந்தக் கணிதக் கேள்வியினைச் சமன் செய்தால் வரும் விடை “நான் உன்னைக் காதலிக்கிறேன்” (I Love You என்பதன் சங்கேதக் குறியான IOU, இங்கு ‘O’ என்பது இதயத்தைக் குறிக்கும் குறி) என்பதாகும்.

    ஆனால் வேறு வகையில் கணக்குப் பார்த்து வரும் இக்காலக் காதல்களைச் சாடுகிறார் கவிஞர் மீரா. சமுதாய மறுமலர்ச்சிக்கான புரட்சிக் கருத்துக்களை கவிதைகள் மூலம் சொல்லும் அவர், அன்றைய சங்ககாலக் குறுந்தொகை சொல்லும் காதலுடன் இக்காலக் காதலை ஒப்பிடுகிறார். அக்காலத்தில் முன்னறிமுகம் இல்லாத, எவ்வகையிலும் தொடர்பு இல்லாத தலைவனும்  தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, அச்சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு,  செம்புலப் பெயல் நீர் போல அவர்கள் மனம் ஒன்றுடன் ஒன்று அன்பால் இணைந்து விடுகிறது.  ஆனால் இக்காலத்தில் காதலர்கள் கணக்கிட்டு அபாயம் குறைவான (calculated risk) வகையில் துணையைத் தேர்ந்தெடுத்து காதலிக்கிறார்கள் என்பதைக் கீழ் வரும் கவிதை மூலம் சுட்டிக் காட்டி நகைக்கிறார்.

    உனக்கும் எனக்கும்
    ஒரே ஊர் –
    வாசுதேவ நல்லூர் …
    நீயும் நானும்
    ஒரே மதம்…
    திருநெல்வேலிச்
    சைவப் பிள்ளைமார்
    வகுப்பும் கூட…
    உன்றன் தந்தையும்
    என்றன் தந்தையும்
    சொந்தக் காரர்கள்…
    மைத்துனன் மார்கள்.
    எனவே
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

    – கவிஞர் மீரா (மீ. ராசேந்திரன்), ஊசிகள் (1974) பக். 48

    இதுபோல கணக்குப் போட்டுத் துணை சேர்க்கும் சேவையையும் இக்கால இணையதளங்கள் செய்து வருகின்றன. இருவருக்கிடையே பேதங்கள் அதிகரிக்கும் பொழுது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுகிறது. இவற்றினால் சண்டை சச்சரவுகள் எழுந்து, மனக் கசப்பு ஏற்பட்டு உறவு முறிகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு சரியானப் பொருத்தம் உள்ள துணைகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வைப்பது இந்த சேவைகளைச் செய்யும் இணையதளங்களின் குறிக்கோள்.  இது போன்ற டேட்டிங் (dating) இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன, அவற்றை உபயோகப் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கோடிகளைத் தாண்டுகிறது.  இந்த முயற்சி காதலின் வெற்றிக்கு வழி வகுக்கிறதா? அதன் விளைவாக திருமணமுறிவுகளும் குறைகிறதா? என்பதனைப் பொறுத்திருந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த தளங்கள் இயங்கும் வழி முறை, அவை பொருத்தம் செய்யும் வழி முறையின் அடிப்படையாவும் கணிதம்தான்.  இக்கணித முறையை ‘கிறிஸ்டியன் ரட்டர்‘ (Christian Rudder) என்பவர் விளக்கியுள்ளார். இவர் ‘ஒகேகுப்பிட்’ (OKCupid – dating websit) என்ற பொருத்தம் செய்யும் ஒரு சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

    துணை தேடும் இருவரிடம் அவர்களைப் பற்றியக் கேள்விகள் பலக் கேட்கப்படுகிறது.  அவற்றில் இருந்து அவர்களுக்குப் பொதுவாக எவற்றில் ஆர்வம் உள்ளது, தங்கள் துணை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப் படுகிறது. இப்பதில்களை ஆராய்ந்து சரியானப் பொருத்தம் உள்ள நபர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள் என்பதை நாமறிவோம்.  ஆனால், இந்த முடிவு எவ்வாறு எடுக்கபடுகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

    கணிப்பொறி நிரலாக்கத்தின் விதிமுறை (Computational Matching Algorithm) இந்த பொருத்தம் செய்யும் கணித முறைக்கு அடிப்படை. பலரும் ‘அல்காரிதம்’ என்று அறியும் இந்தப் பதத்தின் பொருள் எளிமையானது.  முறையாக, படிப்படியாக கொடுக்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒரு கணக்கிற்கு விடை காண்பது என்பதுதான் அதன் விளக்கம்.  கூட்டல், பெருக்கல், வர்க்க மூலம் (addition, multiplication and square root) ஆகியவைதான்  இந்த நிரலியில் (program) அடிப்படைக் கணித முறைகள்.  தகவல்களும், புள்ளிவிவரங்களும் (data) பல கேள்விகள் வழியாக உறுப்பினர்களிடம் இருந்து கேட்டுப் பெறப்படுகிறது.

    இக்கேள்விகள் பொதுவாக பெரும்பாலும் உறுப்பினர்களின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளாகவும், அவர்களது விருப்பங்கள், கொள்கைகள், ஆர்வங்கள் போன்ற பல பின்னணிகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு செய்யப் பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக;
    உங்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளதா?
    ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவீர்கள்?
    திகில் திரைப் படங்கள் பார்க்கப் பிடிக்குமா?
    கடவுள் நம்பிக்கை உள்ளதா?
    எனக் கேள்விகள் மிகச் சாதாரண தகவல்கள் முதல் கொண்டு மிக முக்கியத் தகவல்கள் வரை யாவற்றையும் தெரிந்து கொள்ளுமாறு அமைக்கப் பட்டிருக்கும்.

    சில பதில்கள் ஒத்திருப்பது ஒருவகையில் நல்ல பொருத்தத்தை தேர்ந்தெடுக்க உதவும், காட்டாக இருவருக்கும் திகில் படங்கள் பார்ப்பதில் உள்ள விருப்பம் அவற்றில் ஒன்று.  ஆனால், நான்தான் முக்கிய நபராக இருக்க வேண்டும், என் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள இருவர் பொருந்த மாட்டார்கள்.  அவர்களுக்குள் நாளும் பிரச்சனைதான் வரும். யாராவது ஒருவர் இதை ஒரு பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டியது அவசியம். அதனால் மேலும் பல தகவல்களும் தேவைப்படுகிறது.

    இத்தகவல்கள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அந்த பண்புகளுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.  எனவே மூன்று வகைத் தகவல்கள் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவை,
    (1) ஒரு நபரைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
    (2) அவர் வாழ்க்கைத்துணையாக வரும் நபரிடம் எதிர்பார்க்கும் பண்புகள்
    (3) அவற்றிற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்

    இந்த மூன்று வகை தகவல்களும் நிரலியில் உபயோகப் படுத்தப் பட்டு சரியானப் பொருத்தமுள்ள துணை தேர்வு செய்யப் படும்.
    இந்தக் கணித நிரலியின் உதவியுடன் இருவரது பொருத்தத்தை நிர்ணயிக்கும் முறையை, அதாவது நிரலி எவ்வாறு ஒரு ஒழுங்கு முறையுடன் படிப்படியாகத் தீர்வு காண்கிறது என்பதை ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம். விளக்குவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு இரண்டு கேள்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

    ஒன்று: ஒழுங்குமுறையைப் பற்றியக் கருத்து.  எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புபவரா நீங்கள்? அடுத்தவரும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புபவரா?  இந்த ஒழுங்குமுறைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

    மற்றொரு கேள்வி: வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? இதைப் பற்றி உங்கள் துணையின் கருத்து என்னவாக இருக்க வேண்டும்?  இக்கேள்விக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவம் என்ன?

    இக்கேள்விகளை இருவரிடம் கேட்டு அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு பொருத்தம் தெரிவு செய்யப்படுவதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் விளக்குகிறது. முதல் கட்டமாக, இக்கேள்விகளின் பதில்களை கணினி புரிந்தும் கொள்ளும் வகையில் அவை எண்களாக மாற்றப் பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. குறைவான முக்கியத்திற்கு குறைந்த மதிப்பெண்ணும், அதிக முக்கியத்துவம் என்பதற்கு அதிக மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக கணினி இரு சிறிய கணக்குகளை தீர்வு செய்கிறது.
    முதலில், இருவரது பதில்களும் ஒப்பிடப்பட்டு, அனைத்துக் கேள்விகளின் மதிப்பெண்களும் கூட்டப் பட்டு ஒரு சதவிகிதம் நிர்ணயிக்கப் படுகிறது.


    (1) ஒருவரின் பதில்கள் அடுத்தவருக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கிறது என்பதை இருவர் பதிலையும் ஒப்பிட்டு ஒருவரின் கண்ணோட்டத்தில் திருப்தியின் சதவிகிதம் அறியப்படுகிறது. படத்தில் பெண்ணின் கோணத்தில் குறிப்பிட்ட அந்த ஆண் 98% திருப்திகரமாகத் தெரிவார் என கணினி மதிப்பிடுகிறது.

    (2) அடுத்தவரின் கோணத்தினைக் காண முதலில் உள்ளவரின் பதில்களுடன் மற்றவரது பதில்களை ஒப்பிட்டு அவர் அடையப்போகும் திருப்தியின் அளவு கணினியால் கண்டறியப்படுகிறது.  படத்தில் ஆணின் எதிர்பார்ப்புகளின் படி  பெண் அவருக்கு 91% திருப்திகரமாகத் தோன்றுவார்.  படத்தில் அடுத்தவர் கோணத்தில் மற்றவர் பெரும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு பொருதுவார் என கணக்கிட இருவரது சதவிகிதங்களும் பெருக்கப்பட்டு, எத்தனை கேள்விகள் கேட்கப் பட்டதோ அக்கேள்விகளின் எண்ணிக்கை அடிப்படையில் வர்க்க மூலம் கண்டுபிடிக்கபடுகிறது.  இவ்வாறு வரும் விடையே அவர்கள் இருவரின் பொருத்ததிற்கான மதிப்பெண்.  அதிக சதவிகிதம் இருவரும் சச்சரவின்றி அதிகம் ஒருவருக்கொருவர் ஒத்துப் போவார்கள் என்பதைக்  குறிக்கும்.  படத்தில் காட்டப் பட்டவர்களின் பொருத்தம் 94% அக இருக்கிறது. இது விடைகளின் பெருக்கலின்  சராசரி (geometric mean) மதிப்பாகும்.

    இங்கு உதாரணமாகக் காட்டப் பட்டிருப்பது இரு கேள்விகள் மட்டுமே.  ஆனால் கேள்விகள் அரசியல் மதம், நம்பிக்கைகள், திரைப்பட விருப்பங்கள் போன்று பற்பல கேள்விகளைக் கணக்கில் கொள்வதால் பொருத்தத்தின் துல்லியம் அதிகரிக்கும்.  அவ்வாறு பொருத்தம் அதிகமான இருவர் ஒருவருக்கொருவர் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

    இவ்வாறு அறிமுகப் படுத்தப் படுபவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகும் பொழுது அவர்களுக்குள் காதல் பிறக்கிறதா?   அது திருமணத்தில் முடிகிறதா? அவ்வாறு அமையும் திருமணங்களும் மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடாமல் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    சிந்தனைக்கு: பொருத்தம் பார்ப்பதன் அடிப்படையே மணமக்கள் ஒத்துபோகும் மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத்தான். இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகிறது. அம்முறையில் கணினி நிர்ணயிப்பது போலவே, பெற்றோர்களும் ஆண் பெண் இருவரின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை குடும்ப வாழ்வில் சச்சரவுகளைக் குறைக்கும் பண்புகளைத் தவிர்த்து பொருத்தம் செய்கின்றனர்.  கீழை நாடுகளில் ஜோசியம் பார்க்கும் வழக்கமும் உள்ளது.  இந்தியாவில் இது திருமணத்தை நிச்சயம் செய்வதிலும் பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படை, வானில் கோள்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும் நேரத்தில் பிறந்தவர்களை அவர்கள் பிறந்த நட்சத்திரம், அது அமைந்த ராசியினைக் கொண்டு பிரித்து அவர்களுக்கு சில பிறவிக் குணங்கள் அமைந்திருக்கும் என அறிந்து கொள்வது.  அந்தக் குணங்களுக்கு ஒத்துப் போகும் குணங்கள் மற்றொரு  நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு இருக்கும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஜோசியப் பொருத்தமும் பார்க்கப் படுகிறது.  கணினி, பெற்றோர், ஜோசியம் எனப்  பொருத்தம் காணும் முறைப் பலவாறாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழும் பண்புகள் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்குமே மனவாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

        அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
        பண்பும் பயனும் அது. [குறள் 45]

    Sources:
    How OkCupid Sets You Up With The Perfect Match, Megan Rose Dickey, February 14, 2013, San Francisco Chronicle – http://www.sfgate.com/technology/businessinsider/article/How-OkCupid-Sets-You-Up-With-The-Perfect-Match-4278690.php

    “The math of online dating, the algorithm behind ‘hitting it off,” Christian Rudder, OkCupid co-founder of dating site OKCupid, TED-Ed – http://ed.ted.com/lessons/inside-okcupid-the-math-of-online-dating-christian-rudder

    How the Matching Algorithm Works, an example – http://www.nrmp.org/res_match/about_res/algorithms.html

    OkCupid – http://en.wikipedia.org/wiki/OkCupid

    Join the best dating site on Earth – http://www.okcupid.com/

    Picture Sources:

    TED-Ed, http://www.facebook.com/pages/Nerd-love-solve-for-i-9x-7i33x-7u-i3u/123506964330770

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

    தேமொழி

     

     

    முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போலே ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா

    வரிகள்: வாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5>>

    Share
  • பழங்கணக்கு

    தேமொழி

    மாமா வந்திருந்தார்.  சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது வீட்டிற்கு எங்கள் வீட்டு சாப்பாட்டு அறையின் மேஜை போலவே ஒன்று செய்ய விரும்பினார்.

    “அம்மாடி, ஒரு அளவு நாடா எடுத்துட்டு வாம்மா.”

    “இதோ மாமா, இந்தாங்க, என்ன செய்யப்போறீங்க?”

    “ஒரு தாளும் பேனாவும் எடு, நான் இந்த மேஜை அளவை அளந்து சொல்றேன், குறிச்சுக்கோ.”

    “சரிங்க மாமா, சொல்லுங்க.”

    “அகலம்  ….ம்ம்ம்.. (என்று ஹம் செய்துவிட்டு) மூணு அடி மூணு அங்குலம்னு, எழுதிக்கோ.”

    மெட்ரிக் அளவு படித்த என் கணித அறிவை மாமாவிடம் காட்ட எண்ணினேன், “ஒரு மீட்டர்னு எழுதவா மாமா?”

    “வேணாம் எனக்கு அது ஒத்து வராது, இது ஒரு 99 சென்டிமீட்டர் சொச்சம்தான் இருக்கு, எனக்கு பழைய கணக்குதான் வசதி, பேசாம நான் சொல்றத எழுது.”

    சே …சே… இந்த பழைய பஞ்சாங்கங்கள் மாறவே மாறாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்யாமல் சொன்னதை எழுதினேன்.

    கல்லூரியில் வேறு பாடம் எடுத்துப் படித்திருந்தாலும் மாமா கணக்கில் புலி என்று பள்ளியில் படிக்கும் காலத்தில் பெயர் வாங்கியவர்.  இருபதாம் வாய்ப்பாட்டை இருபது வரைப் படித்தவர்.  நம்மைப் போல பன்னிரண்டாம் வாய்பாட்டை பன்னிரண்டுடன் நிறுத்தியவர் இல்லை. பள்ளிநாட்களில் தங்கப் பதக்கம் கொடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், ஒவ்வொரு ஆண்டும் என் அண்ணன் தங்கப் பதக்கம் வாங்கியிருக்குமாக்கும் என்று அம்மா தனது அண்ணனைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.

    மாமா மேஜைக்கு அடுத்த பக்கம் சுற்றி வந்தார்.  ஒரு கை தேர்ந்த சிற்பி தான் வடித்த சிற்பத்தைப் பல கோணங்களில் இருந்து பார்ப்பது போல யாரோ முன்பின் தெரியாத ஒரு தச்சர் செய்த மேஜையைப் பல கோணங்களில் நின்று பார்த்தார்.

    “நீளம் இந்த மேஜைய விட கொஞ்சம் ஒரு அடி அதிகமா வச்சு செஞ்சுக்கலாமா?” என்று சித்திரகுப்தன் போல வெறும் கணக்கைக் குறித்துக் கொண்டிருந்த என்னிடம் யோசனை கேட்டார்.

    நானும் என் மேதா விலாசத்தை காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாமல், “மாமா, உங்க வீட்டு சாப்பாட்டு அறை நீளத்திற்கு இன்னமும் கொஞ்சம் 30 சென்டிமீட்டர் அதிக நீளமாக செய்யலாமே” என்றேன்.

    “அப்படியா சொல்ற?” மாமா நாற்காலியில் அமர்ந்தார், “என் வீட்டு  சாப்பாட்டு அறையை இந்த அறையோட ஒப்பிட்டா அது கொஞ்சம் பெரிசுதான், இல்லியா?”

    சொல்லிவிட்டு மாமா அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தார்.  நானும் எதிர் நாற்காலியில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவரைப் பார்த்தேன்.  மாமா அவர் வீட்டின் அறையை மனக்கண்ணில் கொண்டு வருவதற்காக விட்டத்தைப் பார்த்து யோசித்தார்.  நானும் அவருடன் சேர்ந்து விட்டத்தைப் பார்த்தேன்.  விட்டத்தில் எந்தக் காட்சியும் எனக்குத் தெரியவில்லை. மாமா எழுந்து யோசனையுடன், “சரி நாம ஒரு அடி கூட அளவு வச்சுக்கலாம், சரியா?”

    “சரி மாமா, ஒரு 30 சென்டிமீட்டர் அதிகமா வச்சுக்கலாம்.”

    எனக்கென்ன போயிற்று, அவர் வீடு, அவர் மேஜை.  மேலும் ஒரு 45 சென்டிமீட்டர் என்றாலும் அதனால் எனக்கென்ன பாதிப்பு?

    “சரி நாடவப் புடி அம்மாடி,”  நான் தாளையும் பேனாவையும் மேஜையில் போட்டு விட்டு நாடாவின் ஒரு பக்க முனையைப் பிடித்தேன்.

    “நீளம்..ம்ம்ம்….(மீண்டும் ஹம்மிங்) இந்த மேஜை அஞ்சு அடி, கூட ஒரு முக்காலே அரைக்கால் இருக்கு. நாம கூட ஒரு அடி வச்சுக்கலாம், ஆறு அடி முக்காலே அரைக்கால் அப்படின்னு எழுதும்மா”

    என்னது முக்காலே அரைக்காலா? இத எப்புடி மெட்ரிக் அளவாக மாற்றி எனது புத்திக் கூர்மையைக் காட்டுவது?  குழம்பினேன். நமக்கெல்லாம் அட்ரா.. அட்ரா.. நாக்க முக்க, நாக்க முக்கதானே தெரியும்.

    “என்னம்மா யோசனை? எழுதும்மா.”

    “நீளம் ஆறு அடி முக்காலே அரைக்கால்” என்று சத்தாமாகச் சொல்லிக் குறித்துக் கொண்டேன்.

    அடுத்து மாமா தொடர்ந்து மேஜையின் கால் ஒன்றினை அளந்து “காலே அரைக்கால்” என்று ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

    “இல்லீங்க மாமா, மேஜையோட கால் முழுக்காலாத்தானே இருக்குது,” என்று குழம்பினேன்.

    “அம்மாடி, அறுக்காதம்மா.”

    “அறுத்தாதானே மாமா அரைக்காலா மாத்த முடியும்”

    “என்னால தாங்க முடியல, பேசாம நான் சொல்றத எழுது,” என்று சொல்லிவிட்டு மேஜையின் கால் அளவு, மேற்பலகையின் தடிமன் என அளந்து மாமா சொன்னதை எல்லாம் மறு பேச்சில்லாமல் குறித்துக் கொண்டேன்.

    இருவரும்  மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தோம்.  “அந்த தாளக் கொடு, அளவைப் பார்ப்போம்,” என்றார் மாமா.

    மாமா பார்த்துவிட்டு சிரித்தார்.  ஹி..ஹீ.ஹீ.ஹீ….

    எனக்குக் கோபம் வந்தது.  “ஏன் மாமா சிரிக்கிறீங்க?”

    மாமாவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.   ஹி..ஹீ.ஹீ.ஹீ….என்று சிரித்துவிட்டு மீண்டும் தாளைப் பார்த்தார்.  மீண்டும் ஹி..ஹீ.ஹீ.ஹீ…..

    அவரால் படிக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு  நகைச்சுவையையும் நான் எழுதவில்லையே.  என் கையழுத்து அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது? கோபத்துடன் அவர் கையிலிருந்த தாளைப் பிடுங்கிப்  பார்த்தேன்.

    முக்காலே அரைக்கால் என்பதில் எழுத்துப் பிழை, ‘மூக்காலே அரைக்கால்’ என எழுதியிருந்தேன்.  எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் ஒரு சின்னத் தவறுக்கு இப்படி ஒரு சிரிப்பா? என்று எரிச்சலும் வந்தது.  உர்ர் என்று முகத்தை வைத்துக் கொண்டு பிழையைத் திருத்தி அவரிடம் நீட்டினேன்.  கையில் வாங்கிப் பார்த்த மாமா மீண்டும் சிரித்தார். ஹி..ஹீ.ஹீ.ஹீ….

    “போதும் மாமா, அதான் திருத்திட்டேனே, இன்னமும் என்ன சிரிப்பு?” என்று கடுப்படித்தேன்.  மாமாவிற்கு சிரித்துச் சிரித்துக் கண்ணீரே வந்து விட்டது.

    “காலே அரைக்கால், முக்காலே அரைக்கால், இந்த அளவெல்லாம் உனக்கு எழுதத் தெரியாதாம்மா?”

    “அதான் எழுதி இருக்கேனே மாமா!!”

    “இல்லம்மாடி, எழுத்தால இல்லம்மா, எண்ணால் எழுதணும். கால், அரை, முக்கால் இதெல்லாம் எப்படி எழுதுவியோ…. ஒன்னுங் கீழ நாலு, ஒன்னுங் கீழ ரெண்டு, மூனுங் கீழ நாலு அப்படின்னு, அதுபோல எண்ணால எழுதணும்மா.”

    காலே அரைக்கால் = 3/8, முக்காலே அரைக்கால் = 7/8 என்று மாமா எழுதிக் காண்பித்து, “இப்படி எண்ணால எழுதணும்மா” என்றார்.

    “இல்ல மாமா, என்னால எழுத முடியாது, எனக்குத் தெரியாது” என்று சொல்லி மாமா சிரித்த காரணம் புரிந்து அசடு வழிந்தேன்.

     

     

    படங்கள் உதவி:
    http://jawoodworking.com/google-sketchup/
    http://www.madurai247.com/2011/08/tamil-actress-anjali-photos-stills.html

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

     

    தேமொழி

     

     

     
    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
    கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

    வரிகள்: கண்ணதாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>

    Share
  • குடதிசை மருங்கில் – 5

    தேமொழி

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

    சூர்யா

    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

    இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாக சூரியனைக் குறிப்பவர். இங்கு காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. சூரியாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூரியாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

    ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூரியாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாக காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

    இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

     

     

    இறைவிகள்

    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

    சிதைவிற்கு முன் இந்தக் கற்பாளத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

    இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

    சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

    ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

     

     

    கருடன்

    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

    கருடன் என்னும் புராணக் கடவுளுக்கு மனித உடலும், பறவையின் உடலமைப்பினைப் போல இறகுகள், அலகு, காலில் கூர் நகங்களும் அமைந்திருக்கும். கருடனுக்கு சூரியக் கதிர்களின் சக்தியும், நாகங்களை அழிக்கும் சக்தியும் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது. இந்திரனின், மரணத்தை நீக்கும்தேவாமிர்தத்தைக் காக்கும் இரு நாகங்களைக் கருடன் கொன்றழித்ததாகவும் கருதப் படுகிறது. பெரும்பாலும், எட்டு நாகங்களை அணியாக அணிந்து, பணிவுடன் மண்டியிட்டு, கரம் கூப்பிய வடிவுடன் கருடனின் உருவம் அமைக்கப் பட்டிருக்கும். ஆதிகால விஷ்ணுவின் கோயில்களின் முன்புறத் தூண்களில் கருடனின் உருவம் செதுக்கப் பட்டிருக்கும். கருடனை விஷ்ணுவின் வாகனமாக இந்துமத வேதங்கள் குறிப்பிடுகிறது.

    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

    இந்து தெய்வம் தீரமிகுந்த பறவை-மனித வடிவுடைய கருடன்,  இந்தியாவின் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

     

    ஆகஸ்ட் 25, 2012 இல் துவங்கிய “இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்னும் இந்த  சிறப்புக் கண்காட்சி பிப்ரவரி 25, 2013  ஆம் தேதிவரை ஸான் ஃபிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதால் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு கண்காட்சியைக் காண ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது.

    இந்த சிறப்புக் கண்காட்சியைப் பற்றிய இக்கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது. படங்களுடன் கட்டுரையை வெளியிட இசைவளித்த ஆசிய அருங்காட்சியகத்தினருக்கு, குறிப்பாக அருங்காட்சிய அதிகாரி அமீலியா பன்ச் (Amelia Bunch) அவர்களுக்கு நன்றி.

     

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013
    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    குடதிசை மருங்கில் – 4 >>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

     

    தேமொழி

     

     

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே

    வரிகள்: கண்ணதாசன்

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>

    Share
  • குடதிசை மருங்கில் – 4

    தேமொழி

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

    எங்கெங்கு காணினும் சக்தியடா:

     

    பார்வதி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

    அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

    இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

     

    துர்கை:

    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

    துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.

    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

    மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

     

    திரிபுரசுந்தரி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

    திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

    இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

     

    காளி/சாமுண்டி:

    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப்  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

    ** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

    (தொடரும்)

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

      << குடதிசை மருங்கில் – 5                                                                                                         குடதிசை மருங்கில் – 3 >>

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    கை வீசம்மா கை வீசு…

    அன்றும்:
    கை வீசம்மா கை வீசு…
    கடைக்குப் போகலாம் கை வீசு…
    மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
    மெதுவாய் திங்கலாம் கை வீசு…

    சொக்காய் வாங்கலாம் கை வீசு…
    சொகுசாய் போடலாம் கை வீசு…
    கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
    கும்பிட்டு வரலாம் கை வீசு…

    இன்றும்:
    கை வீசம்மா கை வீசு…
    கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
    கொடியை ஏற்றலாம் கை வீசு…
    நாட்டை ஆளலாம் கை வீசு…

    படையில் சேரலாம் கை வீசு…
    பகைவரை அழிக்கலாம் கை வீசு…
    நாட்டைக் காக்கலாம் கை வீசு…
    நல்லோர்வழி நடக்கலாம் கை வீசு…

    – தேமொழி
    (இன்றைய வரிகள் மட்டும்)

     

    குடியரசு தின வாழ்த்துக்கள்…

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2>>

    Share
  • குடதிசை மருங்கில் – 3

    தேமொழி

    குடதிசை மருங்கில் – 3

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

     

    பிரம்மா:

     

    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


    பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்).  படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின்  வெளிபிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக,  கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்பவடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செதுக்குவது இயலாத செயலாகும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


    இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

     

     

    விஷ்ணு:

    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

    விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத்  தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார்.  அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது  அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவைகளும் ஆகும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

    இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தை சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தை  தங்கள் தலையில் மகுடமாக தரிதுள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாக சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப்  பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.

    இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

     

    சிவன்:

     

    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

    இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும்  பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்கு காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யம்  சிவன், தனது  காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.   உலகில் தோன்றும் மனிதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது  தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும்.  சமஸ்கிரதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

    இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

     

    ஹரிஹரன்:

    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

    இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்கு காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்படுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருபதாகக் காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

    இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது.
    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

     

    (தொடரும்)

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:

    http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    << குடதிசை மருங்கில் – 4                                                                                                         குடதிசை மருங்கில் – 2 >>

     


    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
    உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே…
    – கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள்

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1>>

    Share
  • குடதிசை மருங்கில் – 2

    தேமொழி இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:

    உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை  இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சியில்   ஆகஸ்ட் 25, 2012 முதல்  பிப்ரவரி 25, 2013 வரை பார்வைக்கு வைக்கப் பட்டன.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

     

    கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.

      அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

    இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

    இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

    இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.

    பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

    பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

    பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பர்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.

      கணேசா:

    அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.

    அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.

    இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

    (தொடரும்)

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:

    http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum

    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    << குடதிசை மருங்கில் – 3                                                                                                         குடதிசை மருங்கில் – 1 >>

    Share
  • பிக்கோலிம் போர்

    தேமொழி

    முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?

    படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை.  காரணம், அப்படி  ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

    கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, சமீபத்தில் அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).

    அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது.  அனைத்திற்கும் மேலாக விக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி  எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப்  பதிவுகள் இந்தப் பதிவினைவிடவும் அதிக காலம் வலம்  வந்திருக்கிறது.   ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.

    மோசடிக் கட்டுரைக்காக கொடுக்கபட்டிருந்த படங்கள்:

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கி கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது.  அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    சிந்தனைக்கு:  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று  மற்றும்  இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.  புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை  நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    செய்தி ஆதாரம்:

    http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/

    http://www.dailymail.co.uk/news/article-2257482/The-war-Wikipedia-fooled-years-Bicholim-Conflict-article-elaborate-4-500-word-hoax.html?ito=feeds-newsxml

    படம் உதவி:

    http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Wikipedia-logo.png

    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/War-elephant-illustrated-london-news.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    Share