Author: தேமொழி

  • விழித்தெழுங்கள் இந்தியர்களே!

    — தேமொழி

     

    முதியவரின் நம்பிக்கை

    ஆலன் அக்டோவியன் ஹ்யூம்

    இந்திய மக்களே உங்கள் சோர்வின் காரணமென்னவோ ?
    இறைவனின் உதவியைத்தான் எதிர்பார்த்துள்ளீர்களோ ?
    வரிந்து கட்டி, எழுச்சியுடன் போராடுங்கள்
    தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன

    தீர்மானிக்கப்படுகிறது உங்களின், உங்கள் நாட்டின் எதிர்காலம்
    ஆனாலும் அதைத் தீர்மானிப்பவர் நீங்களல்லவே
    ஊமைகளாகிவிட்டீர்களா? உரிமைக்குக் குரல் கொடுங்கள்
    தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன

    கல்வியும் செல்வமும்தான் இருந்தென்ன செய்தீர்கள்
    வெற்றுப் பட்டங்கள் அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டீர்கள்
    தன்னாட்சி செய்வதன் மதிப்பிற்கு ஈடாகுமா அவையாவும்
    தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன

    இருளாகப் பரவும் இரகசியப் புலம்பல்கள்
    பசுந்தரையின்கீழ் நெளியும் புழுக்களன்றோ
    இத்தகையப் புலம்பல்கள் அநீதியை அகற்றாது
    தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன

    நீங்கள் அடிமைகளா? சுதந்திரம் உள்ளவர்களா?
    அல்லது மறைவிலே அஞ்சி வாழும் கோழைகளா?
    முடிவு இருப்பது உங்கள் கைகளில்
    தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன

    இந்திய மக்களே எழுச்சியுடன் போராடுங்கள்
    தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்
    விடிந்துவிட்டது! கிழக்கு வெளுத்துவிட்டது
    தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன

    1886 ஆம் ஆண்டில் இந்தியர்களைத் தன்னாட்சி அமைக்கத் தூண்டி, இந்தியன் நேஷனல் காங்கிரஸைத் தோற்றுவித்தஆலன் அக்டோவியன் ஹ்யூம் அவர்கள் எழுதிய கவிதை
    மொழிபெயர்ப்பு: தேமொழி

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

     

    250px-A_O_Hume

     

    Old Man’s Hope

    — by Allan Octavian Hume

    Sons of Ind, why sit ye idle,
    Wait ye for some Deva’s aid?
    Buckle to, be up and doing!
    Nations by themselves are made!

    Yours the land, lives, all, at stake, tho’
    Not by you the cards are played;
    Are ye dumb? Speak up and claim them!
    By themselves are nations made!

    What avail your wealth, your learning,
    Empty titles, sordid trade?
    True self-rule were worth them all!
    Nations by themselves are made!

    Whispered murmurs darkly creeping,
    Hidden worms beneath the glade,
    Not by such shall wrong be righted!
    Nations by themselves are made!

    Are ye Serfs or are ye Freemen,
    Ye that grovel in the shade?
    In your own hands rest the issues!
    By themselves are nations made!

    Sons of Ind, be up and doing,
    Let your course by none be stayed;
    Lo! the Dawn is in the East;
    By themselves are nations made!

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: அணியெல்லாம் ஆடையின் பின்

     

    அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன்
    பிறிதினால் மாண்ட தெவனாம்? – பொறியின்
    மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
    அணியெல்லாம் ஆடையின் பின்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
    பிறிதினால் மாண்டது எவனாம்?-பொறியின்
    மணி பொன்னும், சாந்தமும், மாலையும், இன்ன
    அணி எல்லாம், ஆடையின் பின்.

    பொருள் விளக்கம்:
    அறிவுடையவர் என்ற பெருமையைப் பெற்றிராத ஒருவருக்கு, பிற செல்வங்களைப் பெற்றிருப்பினும் அவை என்ன பெருமையைத் தந்துவிடும்? (சாணைத் தீட்டும்), பொறியினால் தீட்டி பொலிவு பெற்ற அரிய மணிகளும், பொன் நகையும், சந்தனமும், மாலையும் என மற்ற பிற அணிகலன்கள் எவை அணிந்திருந்தாலும், அவை ஆடை உடுத்தியது போன்ற பயனைத் தராது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    பொருட்செல்வம் ஒருவருக்குப் பெருமை தருவதில்லை, அறிவுடைமையே ஆன்ற பெருமை தரும். அறியாமை நிறைந்தவர் ஒருவர் தான் பொருள் பெற்றிருப்பதை பெருமை என நினைப்பது, ஆடை அணியாது விலையுயர்ந்த அணிகலன்களை மட்டும் அணிந்திருந்திருப்பதை பெருமையாகக் கருதுவதற்கு ஒப்பாகும். அறிவுடைமையின் பெருமையை வள்ளுவர் கூறும் பொழுது,

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

    எதுவும் இல்லாது போனாலும் அறிவுள்ளவர் ஒருவர் எல்லாவற்றையும் பெற்றவராகவே மதிக்கப்படுவார், அறிவில்லாதவர் எல்லாவற்றையும் பெற்றும் அறிவில்லாததால் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர்

    பழமொழி: தோற்பனகொண்டு புகாஅர் அவை

     

    கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
    வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் – வேட்கையால்
    வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
    கொண்டு புகாஅ ரவை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
    வேட்கை அறிந்து, உரைப்பார் வித்தகர்;-வேட்கையால்
    வண்டு வழி படரும் வாள் கண்ணாய்!-தோற்பன
    கொண்டு புகாஅர், அவை.

    பொருள் விளக்கம்:
    சொல்வதைக் கவனமுடன் கேட்கக் கூடியவரிடம் சென்று, தான் சொல்வதைக் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் இருக்குமா எனத் தெரிந்து கொண்டு சொல்பவரே அறிவாளி. விருப்பத்துடன் வண்டு (மலரென நினைத்து) மொய்க்க வரும் ஒளிபொருந்திய மலர்களை ஒத்த கண்களைக் கொண்ட பெண்ணே! சபை ஏறாது தனது கருத்து என்று தெரியுமாயின் அவையினரிடம் கொண்டு செல்லத் தேவையில்லை.

    பழமொழி சொல்லும் பாடம்:
    அறிவாளிகள் விரும்பிக் கேட்கக் கூடியவர்களிடம் மட்டுமே சென்று தனது கருத்தைக் கூறுவார், சபை ஏற்காது புறக்கணிக்கும் என்று தெரியுமாயின் கருத்துகளைச் சொல்ல முற்படார். இக்கருத்தைக் கூறும் வள்ளுவரின் வாக்கு,

    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர். (குறள்: 711)

    சொற்களின் திறன் அறிந்த அறிஞர்கள், அவற்றை அவையினரின் தரமறிந்து, சபையின் தன்மைக்கு ஏற்ப சொல்லுவர் என்று குறிப்பிடுகிறது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 10, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் 

    MBG- 28-4-17

    வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடருக்காக அவர் பாராட்டப் படுகிறார்.

    அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றிய மீனாட்சி பாலகணேஷ் அவர்கள், பணி ஓய்விற்குப் பிறகு தனது நெடுநாளையக் கனவான தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டு தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழ் இலக்கியக் கட்டுரைகளைப் பல இணையதளங்களிலும் எழுதி வருகிறார். இவரது பாடுதும் காண் அம்மானை, குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல், திருநடனம் ஆடினது எப்படியோ, கோபுலுவின் ஏகலைவி, காதலின் பொன்வீதியில் ஆகிய கட்டுரைகள் வல்லமை இதழில் வெளிவந்துள்ளன. சென்ற வாரத்தின் ‘காதலின் பொன்வீதியில்’ தொடரில் வாசவதத்தையும் உதயணனும் கொண்ட காதலை விவரித்து, “உதயணகுமார காவியம்”  நூல் வழங்கும் பாடல்களின் இலக்கியநயத்தோடு இணைத்து வழங்கியவிதம் சிறப்பானது.

    காதலின் பொன்வீதியில் என்ற தொடரை கீழ்வரும் அறிமுகத்துடன் தொடங்கினார் மீனாட்சி பாலகணேஷ் …

    காதல், காதல், காதல் இன்றேல்
    சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

    என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இருபாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும்தான் எனலாம். ஆகவேதான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

    இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனைப் புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கம்.

    இந்தியத் தொன்மமாகிய இராமாயணக்கதையில் வரும் காதலர்களான இராமன் சீதையின் காதலைக் குறித்துக் கூறி, கம்பராமாயணத்தில் கம்பரின் வரிகளிலும் அக்காதலின் தன்மையை விவரிக்கிறார். ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ பிறகு, இராமனின் வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்கச் சீதையின் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

    விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
    மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
    எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
    கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

    “மண்ணுள் இழிந்த விண்மேகம்” என வந்த இராமனின் வடிவழகை காண ஏங்கும் சீதையின் கனிந்துருகும் காதல் உள்ளத்தை மீனாட்சி உணர்த்தும் பாணி இலக்கிய வாசகர்களை மகிழ்விக்கக்கூடியது.

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரில் தொடர்ந்து …

    புலவர் புகழேந்தியார் யாத்த ‘நளவெண்பா’ வரிகளின் மூலம் நளன் – தமயந்தி காதலையும்,

    கவியரசர் தாகூர் படைப்பில் ஒரு புதிய கோணத்தில் அவர் அறிமுகப்படுத்திய சித்ராங்கதா – அர்ஜுனன் காதலையும்,

    அரசிளங்குமரி ருக்மிணி கிருஷ்ணனுக்கு காதல்கடிதமாக எழுதிய ஏழு ஸ்லோகங்களின் வழி ருக்மிணி – கிருஷ்ணன் காதலையும்,

    பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான் பாடல்களின்வழி சுந்தரர் – பரவை நாச்சியார் காதலையும்,

    ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு மூலம் இளம் காதலர்கள் ரூப்மதி – பாஜ்பஹதூர் காதலையும்,

    காளிதாசரின் குமாரசம்பவம் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தின் பாடல்களின் துணைகொண்டு பார்வதி – பரமசிவன்  காதலையும்,

    கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் வரிகளின் வழி வள்ளி – முருகன்  காதலையும்,

    உதயணகுமார காவியம் பாடல்கள் மூலம் வாசவதத்தை – உதயணன்  காதலையும்,

    காதலின் பொன்வீதியில் உலாவரும் பொழுது நாமும் படித்துப் பரவசமடைந்தோம்.

    இலக்கியவிருந்து வழங்கும் இந்த அறிவியல் பின்புலம் கொண்ட மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் ஒரு பன்முகம் கொண்ட கலைஞர்.

    சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு ஓவியர் கோபுலு வரைந்த அழகிய படம் ஒன்றை அவர் போலவே வரைந்து கோபுலுவிடம் காட்டி, “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்” என்று கோபுலுவிடம் கையொப்பமும், பாராட்டும், ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்.

    விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
    த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
    ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
    நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம்
    — சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66)

    அந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தமிழ்ப் பாடலாகவும் மொழிபெயர்த்துள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

    பல்லவி
    நாதன் பெருமைதனை நாத வீணையினில்
    வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

    அனுபல்லவி
    யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
    ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

    சரணம்
    இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
    இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
    இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
    கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

    அத்துடன் நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்வதில் திறமைசாலியான அவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளின் படங்களையும் வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

    மீனாட்சி பாலகணேஷ்2

    பலகலைகளிலும் சிறந்து விளங்கும் மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் நெடுநாள் கனவான தமிழில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை அவர் வெற்றியுடன் முடிக்கவும், தொடர்ந்து இலக்கியப்பணியாற்றவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: நாவல்கீழ்ப் பெற்ற கனி

     

    கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
    தெற்ற உணரார் பொருள்களை – எற்றேல்
    அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
    நாவற்கீழ்ப் பெற்ற கனி.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
    தெற்ற உணரார், பொருள்களை; எற்றேல்,
    அறிவு இலார் மெய்த் தலைப்பாடு பிறிது இல்லை;
    நாவல் கீழ்ப் பெற்ற கனி.

    பொருள் விளக்கம்:
    (அறிவுபெறும் பொருட்டு தாமே முயன்று) கற்றோ அல்லது கற்றறிந்தவர் சொல்லித்தருவதைக் கேட்கவோ வாய்ப்பு இல்லாதவர், தெளிவாகப் பொருளுணர்ந்து புரிந்து கொண்டிருக்க மாட்டார். நிலை இவ்வாறிருக்க, கல்வி கேள்வி அறிவு இல்லாதவர் ஒருகால் மெய்ப்பொருள் அறிந்து கொண்டார் என்றால் அதை அவரது திறமை என்று கருத வழியில்லை. (தன்முயற்சி சிறிதும் இன்றி) நாவல் மரத்தின் கீழ் விழுந்திருக்கும் பழத்தை எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு ஒப்பானதாகும் அச்செயல்.

    பழமொழி சொல்லும் பாடம்: முறையாகப் பெறப்படாத, தகுந்த அடிப்படையற்ற அறிவாற்றலை உலகத்தார் மதிப்பதில்லை. கல்வி, கேள்வி இன்றியே ஒருவர் கற்றறிந்தார் மட்டுமே அறிந்த பொருளை கூறுவாராகில் அது தனது முயற்சி இன்றி மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை பெற்றதைப் போன்றது. அத்தகைய செயல் அவரது திறமையை உணர்த்தும் செயலாகாது. இதனை வள்ளுவரும்,

    கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார். (குறள்: 404)

    கல்லாதவருடைய அறிவொளி சிறந்ததாக இருந்தாலும், கல்வியறிவு பெற்றவர் அவரை அறிவாளி என்று ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறுகிறார். மேலும்,

    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம். (குறள்: 249)

    அறிந்து தெளியாதவர் உண்மைப்பொருளைக் கண்டறிந்து கூறுவது போன்ற செயலை போன்றதாகவே அருள் இல்லாதவர் செய்யும் அறச்செயலும் இருக்கும் அருளின்றி செய்யும் அறச்செயலுடன் பிறிதொரு குறளில் அத்தகைய அறிவை ஒப்பிட்டும் கூறுகிறார்.

    Share
  • நன்னயம் செய்தவர்

    தேமொழி.

    இனபேதம், குறிப்பாக வெள்ளையர் உயர்ந்தவர் என்ற எண்ணம் பரவலாக அமெரிக்காவில் இருந்தது, இருக்கிறது….இன்றும் கூட !!!!

    சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்பினத்தவரை அடிமையாக அடக்கி ஆள்வதை தடை செய்ததில் துவங்கிய அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலத்தில், அமெரிக்காவின் தென்மாநிலங்கள் “கன்ஃபெடரேட்” (Confederate) கூட்டமைப்பாக அமெரிக்க வடமாநிலங்களுடன் போரைத் துவக்கியது. கறுப்பின உழைப்பாளிகளை அடிமைகளாக, தங்களது சொத்துகளாக வைத்திருப்பது தென்மாநில மக்களுக்கு, குறிப்பாகப் பெரிய நிலபுலன்கள் கொண்ட நிலக்கிழார்களுக்கு மிகவும் உதவிய சமூக அமைப்பு. தனிமனித உரிமை அடிப்படைக் கருத்தினைக் கொண்ட வடமாநிலத்தவர் இதனை எதிர்த்தனர், குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் அடிமைகளை விடுவித்தவர், கறுப்பின மக்களுக்கு சுதந்திரம் வழங்கியவர்  என்பது உலக வரலாற்றில் நாம் அறிந்தது. அப்பொழுது தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து, ஆரிய இன மேன்மையின் அறிகுறியாக ‘கன்ஃபெடரேட் கொடியை’ தங்களுக்குரிய அடையாளமாகக் கொண்டது.

    இக்கொடியை தென்மாநில அரசுகளும், நகர்களும் கூட தங்களது வரலாற்றின் சிறப்பாக வைத்திருந்தன, வைத்திருக்கின்றன. இது கறுப்பர்கள் அடிமைகளாக இருந்தவர்கள் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடும், ஆரிய இன உயர்வு என்ற கருத்தை நினைவூட்டும் வண்ணம் இருப்பதை இக்கால அமெரிக்கர் பலர் விரும்புவதில்லை. கொடியை நீக்கக் கோரிக்கை வைத்த வண்ணம் இருப்பர். ஆனால் நீக்கக்கூடாது என்று நிறவெறி கொண்ட “கே.கே.கே” (KKK – Ku Klux Klan) வெள்ளையர் இனத்தவர் இதனை எதிர்த்த வண்ணம் இருப்பர். வெள்ளையர்கள் இது தென்மாநில பாரம்பரியம், மரபின் அறிகுறி என்று வாதாட, இக்கொடியை விரும்பாதவர்களோ இது மறக்கப்படவேண்டிய இனபேதம், வெறுப்பின் அறிகுறி என்று வாதிப்பர்.

    சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பினர் பலர் காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் உயிர் இழந்த சில நிகழ்வுகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனக்கலவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிடத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையில் தென்கரோலினா மாநிலம் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அரங்கேற்றியது. தென்கரோலினா மாநில ஆளுநர் மாண்புமிகு ‘நிக்கி ஹேலி‘ (Nikki Haley – Nimrata Nikki Randhawa Haley) அவர்கள் இனி கன்ஃபெடரேட் கொடி தென்கரோலினா அரசின் தலைமையகத்தில் பறக்கக்கூடாது என்று ஜூலை 10, 2015 அன்று சட்டவரையறை ஒன்றில் கையெழுத்திட்டார்.

    Nikki Haley

    (பார்க்க காணொளி: https://www.youtube.com/watch?v=GpfEzZUFWfY).

    இது அமெரிக்க வரலாற்றில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. இதனை நிகழ்த்திய ஆளுநர் இந்திய சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணியான நிக்கி என்பதில் இந்தியர் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வும் கூட.

    kkk

    இதனை எதிர்த்தனர் கே.கே.கே குழுவினர். போராட்ட நாளில் கறுப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் கோடை வெயிலின் காரணமாக பலர் மயங்கி விழத் தொடங்கினர். வயதான வெள்ளையர் ஒருவர் தள்ளாடத் துவங்கியபொழுது அவரைத் தாங்கிப்பிடித்து உதவி செய்தவர் ஒரு கறுப்பின காவல்துறை அதிகாரியான ‘ஆஃபீசர் லீராய் ஸ்மித்’ (Officer Leroy Smith) என்பவர்.

    aa73cc20-2e5d-11e5-99c7-15c5718d0c11_caacace70b1695207c0f6a7067003947

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்பதைப் போல தோற்றமளித்த அந்தப்படம் கண்டு நெகிழ்ந்த பலர் இணையத்தில் அதிகமாக தங்களுக்குள் பகிரத் தொடங்கினர். இதைக் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் வினவியபொழுது ஆஃபீசர் லீராய் ஸ்மித் தனது கடமையை செய்ததாகக் கூறினார்.

    NEWS & PICTURES Source:
    Black officer helps white supremacist suffering from heat at KKK rally, Powerful image from South Carolina Confederate flag protest goes viral, By Dylan Stablefor, July 19, 2015
    http://news.yahoo.com/black-cop-kkk-rally-south-carolina-heat-viral-213215780.html

    Black Officer Helps White Supremacist Suffering From Heat at KKK Rally, By orb204, July 19, 2015
    http://trinilulz.com/black-officer-helps-white-supremacist-suffering-from-heat-at-kkk-rally/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 3, 2015

    இவ்வார வல்லமையாளர்கள்
    வல்லமைமிகு “ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்” குழுவினர்

    freetamilebooks-troup

     

    சென்ற வாரம் ஜூலை 26, 2015 அன்று “மூலிகை வளம்” என்ற மின்னூல் வெளியீட்டின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 200 மின்னூல்களை வெளியிட்டு தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள தன்னார்வப் பணி செய்யும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரை (freetamilebooks.com) இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னை, மும்பை, காரைக்குடி, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, பூனே என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அரேபியா ஆகிய நாடுகளிலும் வாழ்ந்து வரும் 15 தன்னார்வப் பணியாளர்கள், சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. த.சீனிவாசன் தலைமையில் இணையம் வழியாக ஒருங்கிணைந்து தன்னார்வப் பணியாகத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள். படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமத்தின் கீழ் தங்கள் நூல்களைப் பதிப்பிக்க அனுமதி அளித்த 80 நூலாசிரியர்களின் நூல்களை மின்னூல்களாக மாற்றி இணையம் வழி அனைவரும் பெறச் செய்யும் சிறப்பான பணியை மேற்கொண்ட இக்குழுவினர் தங்களது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் அவர்களது தொடர் வெற்றிக்காகப் பாராட்டவேண்டியது தமிழர்களின் கடமை. தங்கள் நூல்களைப் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர்களும் மின்னூலாக்கம் செய்து வழங்கும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரின் தன்னார்வத் தொண்டும் காலத்தால் நிலைத்து நிற்கும்.

    freetamilebooks-books

    மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல், மென்பொருள் உருவாக்கம், அட்டைப்படம் உருவாக்கம், ஒருங்குறியாக்கம் செய்தல், ஆன்டிராய்டு செயலி உருவாக்கம், மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு, திட்ட மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, மின்னூல் வெளியீடு, பதிப்பகப்பணி என தங்கள் திறமைக்கேற்ற பணியைத் தேர்ந்தெடுத்து தன்னார்வப் பணி செய்துவரும் இக்குழுவிலுள்ள 15 உறுப்பினர்களின் பணியும், அவர்களது பங்களிப்பும், வசிப்பிடம் பற்றிய தகவலும் கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்:
    அ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு)
    அன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு)
    இராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்)
    கலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்)
    கிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்)
    சிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்)
    த.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்)
    நித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்)
    பிரியா – மும்பை (மின்னூலாக்கம்)
    ப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்)
    மனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்)
    மு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்)
    லெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்)
    ஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்)
    ஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்)

    தன்னார்வலர்களாகச் செயல்படுகின்ற இக்குழுவினரின் நோக்கம், தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாகப் பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வரும் இவர்களது பணியின் பயனாக வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெற்ற நூல்களையும், பல்லாயிரக் கணக்கான வாசகர்களையும் பெற்றிருப்பது இவர்களது உழைப்பின் சிறப்பு.

    மின்னூல்களைப் படிக்க வசதியான கையடக்கமான கருவிகள் பலவும் சந்தையில் சிறந்த தொழில் நுட்பத்துடனும், குறைந்த விலையிலும் கிடைக்கத் துவங்கிய காரணத்தினால் பலரும் அவற்றைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். ஆங்கில மொழி வாசகர்களுக்கு எண்ணிறைந்த மின்னூல்கள் இலவசமாகவும் கிடைத்து வருகின்றன. தமிழிலும் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற தன்னார்வக் குழுக்களும், இணைய ஆவணகம், கூகுள் புத்தகங்கள், திறந்த நூலகம், திறந்த வாசிப்பகம் போன்ற நிறுவனங்களும், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிறுவனங்களும் தமிழ் மின்னூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளன என்றாலும் இவையாவும் காப்புரிமை காலம் முடிந்த பல பழமையான நூல்களையே சட்ட சிக்கல்கள் இன்றி செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றன.

    ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் இவர்களில் இருந்து வேறுபட்டு தற்கால எழுத்தாளர்களையும், இணையம் வழி வலைப்பூக்களில் எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை காப்புரிமையற்ற இலவச மின்னூல்களாகத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இரண்டாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சியால் தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்னூல்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளோம். கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் உரிமத்தின் கீழ் நூல்கள் வெளியிடப்படுவதால் மூல ஆசிரியருக்கான உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது மக்கள் அதிக அளவில் மின்னூல்களைப் படிக்க வசதியான கருவிகள் பயன்படுத்துவதால் எழுத்தாளர்களுக்கும் அவர்களை நெருங்குவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    இக்குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய நூலாசிரியர் சிலரது புகழுரைகள் சில …

    சிறப்பானசேவை. பாராட்டுகள். என் நான்கு நூல்களில் வேதமும் சைவமும் என்ற நூல் மட்டும் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பத்து சதவீதத்தினராவது படித்திருப்பார்கள் எனநினைக்கிறேன். இதே நூல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக சந்தைப்படுத்தப் பட்டபோது ஐந்து ஆண்டுகளில் 1400 பிரதிகளுக்கு மேல் ஓடவில்லை. உங்கள் சேவை மூலம் இது மிக அதிகமான மக்களைச் சென்றடைந்தது பற்றி எழுத்தாளன் என்ற முறையில் மிக மகிழ்கிறேன்.
    – கோதண்டராமன்

    ஒரே மாதத்தில் என் மின்னூல் வெளியாக, மகிழ்ச்சி பொங்கியது. இப்போது எனது பல சிறுகதைத்தொகுப்புகளையும், நாவல்களையும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு வாசகர் மட்டும் கானடா நாட்டிலிருந்து என்னைப் பாராட்டி, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறார். உற்சாகமாக இருந்தது — நம் எழுத்து உலகின் பல பாகங்களுக்கும் பரவுகிறதே என்று.
    – நிர்மலா ராகவன்

    ஒரு சிலரால் மட்டுமே எவரும் நினைத்துப் பார்க்காத சில புதிய முயற்சிகளை யோசித்து அதனைப் பிடிவாதமான முயற்சிகளின் மூலம் நிலைநிறுத்தி தன்னை மிகச் சிறந்த ஆளுமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தன் சுய வளர்ச்சிக்கு, வருமானத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் பொதுநலம் சார்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது. தன் நேரம், பல சமயம் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற அழுத்தங்கள் இருந்தாலும் இதே நோக்கத்தில் ஒரு குழுவாக அமைந்து ஒத்த கருத்தோடு செயல்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான நிகழ்வே. அப்படியொரு ஆச்சரியத்தைத் தந்த தளம் தான் freetamilebooks.com
    – ஜோதிஜி திருப்பூர்

    அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு நூல் வகைகள் என்ற பல்வகை நூல்களையும் வெளியிடும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள், “ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்ததை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே. இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்” என்ற ஊக்க மொழிகளைத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வைக்கிறார்.

    தன்னார்வப் பணி மூலம் தமிழ்த் தொண்டாற்றி தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரும்பணி ஆற்றிவரும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு பாராட்டுகளையும், அவர்கள் மேலும் பல வெற்றி எல்லைகளை மின்பதிப்புத் துறையில் அடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல் பெற்ற இடம்:
    http://freetamilebooks.com/
    http://freetamilebooks.com/meet-the-team/
    http://freetamilebooks.com/how-to-publish-your-works-here/

    தொடர்புக்கு:
    email: freetamilebooksteam@gmail.com
    Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
    Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
    Web: http://freetamilebooks.com/

    * மின்னூல் வெளியீட்டில் பங்கு பெற விரும்பும் எழுத்தாளர்களுக்காக படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமம் பற்றிய தகவல்:
    Attributions:
    Attribution CC BY – http://creativecommons.org/licenses/by/4.0/
    Attribution-ShareAlike CC BY-SA – http://creativecommons.org/licenses/by-sa/4.0/
    Attribution-NoDerivs CC BY-ND – http://creativecommons.org/licenses/by-nd/4.0/
    Attribution-NonCommercial CC BY-NC – http://creativecommons.org/licenses/by-nc/4.0/
    Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA – http://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/
    Attribution-NonCommercial-NoDerivs CC BY-NC-ND – http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை

    பழமொழி: மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை

     

    ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
    போற்று மெனவும் புணருமோ? – ஆற்றச்
    சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
    மரம்போக்கிக் கூலிகொண் டார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
    போற்றும் எனவும் புணருமோ?-ஆற்றச்
    சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே; இல்லை,
    மரம் போக்கிக் கூலி கொண்டார்.

    பொருள் விளக்கம்:
    (‘பசுமரத்தாணி போல’ எளிதாகக் கற்று நினைவில் கொள்வதற்கு) இயலும் இளம் வயதில் கல்வி கற்பதைத் தவறவிட்டவர், முதுமையில் கற்று வல்லவராவார் என்பது இயலுமா? (இயலாது). சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுவிட்டவரைத் தொடர்ந்து சென்று வரி பெறுவதும் இயலாது. ஓடத்தில் பயணித்து (மரம் என்பது இவ்விடத்தில் ஓடம்) கரை சேர்ந்துவிட்ட பயணியிடம் சரியான பயணச்சத்தம் பெறுவதென்பதும் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்க வேண்டிய இளமைக்காலத்தில் கல்வியைக் கற்கத் தவறிய பின்னர், முதுமையில் கற்க நினைப்பது மாட்டின் “தும்பை விட்டு, வாலைப் பிடித்து” கட்டுப்படுத்தும் கடினமான செயலை ஒத்தது. “காலத்தே பயிர் செய்” என்று கூறி தக்க நேரத்தில் அதற்கேற்ற செயலைச் செய்க என அறிவுறுத்தும் சொல்வழக்கும் இதே பொருளில் அமைந்ததே. இதனை வள்ளுவர்,

    பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு. (குறள்: 482)

    காலத்தைத் தவறவிடாமல் காரியம் ஆற்றுவது, செல்வம் தம்மை விட்டு நழுவ விடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும் என்ற நேர்மறைப்பொருளில் உணர்த்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தம்மை யுடைமை தலை

     

    எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
    மன்ன ருடைய உடைமையும் – மன்னரால்
    இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
    தம்மை யுடைமை தலை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    எண்ணக் குறைபடாச் செல்வமும், இல் பிறப்பும்,
    மன்னர் உடைய உடைமையும், மன்னரால்
    இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
    தம்மை உடைமை தலை.

    பொருள் விளக்கம்:
    எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட குறைவற்ற செல்வ வளமும், சிறந்த குடியில் பிறந்தவர் என்ற பெருமையும், மன்னருக்கு நெருக்கமானவர் என்ற செல்வாக்கு உடையவராக இருத்தலும், மன்னரால் திறமையானவர் இவர் எனப் பாராட்டிப் புகழப்படும் வாழ்க்கையை உடையவராக இருக்கும் தகுதியும் விரும்பத்தக்கவை அல்ல. இன்றும் என்றும் சான்றோர் எனப் பாராட்டும்படி தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் ஒழுக்கம் உடையவராய் வாழ்வதே தலைசிறந்தது.

    பழமொழி சொல்லும் பாடம்: பேரும் புகழும் பெரும் செல்வமும் பெற்று பெருமையுடன் வாழ்வதையும் விட, சான்றோர் எனப் பிறர் மதிக்கும் நிலையில் என்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையே வாழ்வதே சிறந்தது. இக்கருத்தையே வள்ளுவரும்,

    குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (குறள்: 982)

    சான்றோரின் குணநலம் என்று கூறப்படுவது அவருடைய நற்பண்பு மட்டுமே, வேறு எத்தகைய தகுதியும் பெருமைதராது என்கிறார். இதை மேலும் வலியுறுத்த,

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும். (குறள்: 131)

    ஒருவருக்கு மேன்மையைத் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 27, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  எம்.  ஆர். ஹப்பர்ட்  அவர்கள் 

    m r hurbert

     

    வறட்சிக்குப் பிறகு புத்துயிர் அளிக்கும் மழைக்கு ஷப்னம் என்று பெயர். அதைப் போன்று வறண்டு போன வறிய நிலையில் வாழும் சிறுவர், சிறுமியரும், இளைஞர்களும் வாழ்வில் வளம் பெறும் வகையில் தொண்டூழியம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஷப்னம் ரிசோர்செஸ் என்ற அறக்கட்டளை அமைப்பு. அரசு பதிவு பெற்ற இந்த  ஷப்னம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்து, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருபவர் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் திரு. எம். ஆர். ஹப்பர்ட் என அழைக்கப்படும் மைக்கேல் ஹப்பர்ட் அவர்கள். இவரது ஷப்னம் தொண்டு நிறுவனத்தின் குறிக்கோள் புறநகர், கிராமப்பகுதிகளில் வறுமையின் பிடியிலும், வன்முறைகள் நிறைந்த குடும்பச் சூழலில் வாழும் சிறுவர், சிறுமியர்கள்; கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றில் பின்தங்கும் சூழ்நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது. குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம், கல்வி வளர்ச்சிக்கு உதவுவதும் ஷப்னம் அமைப்பின் நோக்கம்.

    சிறுவர்களுக்காக காலணிகள் வழங்குவது முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்குவது வரை பலவகைகளில் ஷப்னம் அமைப்பால் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு உழைத்துக் கொண்டே கல்வியைத் தொடர உதவுவதும், TUPA (The underpriveleged angels) என்ற வாழ்த்து அட்டைகளை கைவினைப்பொருட்களாக உருவாக்கி விற்பனை செய்து நிதி திரட்டுவதும் ஷப்னம் ஈடுபட்டுள்ள பணிகளின் சில கோணங்கள் என்றால், சமூகத்திற்கு விழிப்புணர்வுச் செய்திகள்தரும் நோக்கில் ஓட்டங்கள் போன்ற கவன ஈர்ப்பு நிகழ்வுகளும், தற்கால இளைஞர்களுக்கு உதவும் காலத்திற்கேற்ற பயிற்சி பட்டறைகளும் நடத்தி வருவது ஷப்னம் அமைப்பின் மற்றொரு வகை பரிமாணம்.

    hurbert2

    இந்த வகையில் சென்ற சனிக்கிழமையன்று ஒரு பயிற்சிப் பட்டறை ஒன்றின் வழியாக ஷப்னம் தொண்டு நிறுவனம் இளைஞர்களுக்கு தனிமையை எதிர்கொள்ளும் பயிற்சியை அளித்தது.

    Mr Hubert 2

    lonliness

    “தனிமை நிறைந்த வாழ்க்கை வறுமையையும் விடக் கொடிதானது” என்பதன்   அடிப்படையில் முதியோரும், இளைஞர்களும்,  சிறுவர்களும் இக்கால வாழ்க்கை முறையினால் எவ்வாறு தனித்து விடப்படுகிறார்கள் என்பதையும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இக்கால சமூகம் இழந்து நிற்கும் ஒன்று மூதாதையர் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்று இரு சாராரையும் இணைக்க இருந்த ஒரு பிணைப்பு  மறைந்து போனது.  தனிமை வாழ்க்கையில் அகப்படுபவர்களை எப்படி தனிமையில் இருந்து மீட்கலாம் என்பதற்கான வழிகள் சில பயிற்சி பட்டறையில் பங்கேற்ற உளவியல், சமூகவியல் புலம்சார்ந்த கல்லூரி மாணவ மாணவியரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    சிறுவர்களின் நல்வாழ்விற்காகவும், கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் எம். ஆர். ஹப்பர்ட் அவர்களும் அவரது சமூகப் பணிகளுக்காக பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

    Mr Hubert 1

    வறிய நிலையில் உள்ள சிறுவர் நல்வாழ்விற்காக சமூக அமைப்பை நிறுவித் தொண்டாற்றிவரும் திரு. மைக்கேல் ஹப்பர்ட் அவர்களின் தொண்டு மனப்பான்மையைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    Mr. M.R. Hubert
    SHABNAM RESOURCES
    (REGD. Charitable Non Profit Trust)
    Old No 5, New No 13, Buddha Street,
    Rangarajapuram, Kodambakkam.
    Chennai 600 024
    Phone: +91-44-64547089
    E-Mail: mrhubert72@gmail.com
    http://www.shabnamresources.com/
    https://www.facebook.com/pages/Shabnam-Resources/161348097284778

     

    Sources of News and Pictures:
    Free workshop on tackling loneliness
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/free-workshop-on-tackling-loneliness/article7438905.ece
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/free-workshop-on-tackling-loneliness/article7438849.ece

    Hundreds Run for the Better Future of the World in Kodambakkam
    http://www.newindianexpress.com/cities/chennai/Hundreds-Run-for-the-Better-Future-of-the-World-in-Kodambakkam/2015/06/30/article2893326.ece

    Chennai-based NGO celebrating Christmas differently
    http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-based-NGO-celebrating-Christmas-differently/articleshow/27803350.cms

    Sketches of a safe Deepavali
    http://www.newindianexpress.com/education/student/article251398.ece

    Director of Shabnam Resources awarded for his work in education and children’s welfare
    http://overcomingpoverty.org/article/director-of-shabnam-resources-awarded-for-his-work-in-education-and-childrens-welfare

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: அயிரை விட்டு வராஅஅல் வாங்குபவர்

     

    சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
    பெரிய பொருள்கருது வாரே – விரிபூ
    விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு
    வராஅஅல் வாங்கு பவர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
    பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ
    விராஅம் புனல் ஊர! வேண்டு அயிரை இட்டு,
    வராஅஅல் வாங்குபவர்.

    பொருள் விளக்கம்:
    சிறிய பொருளைக் கொடுத்துச் செய்கின்ற செய்கைக்குப் பலனாக, பெரிய பொருள் ஒன்றைப் பயனாக அடையக் கருதுபவரின் செய்கை, விரிந்து மலர்ந்த பூக்கள் விரவி மிதக்கும் நதிநீர் பாயும் ஊரைச் சேர்ந்தவரே; தேவை கருதி சிறிய அயிரை மீனைத் தூண்டிலில் இட்டு பெரிய வரால் மீனைப் பிடிக்கும் செயலை ஒத்தது.

    பழமொழி சொல்லும் பாடம்: சிறிய மீனை தூண்டிலில் இட்டு பெரிய மீனைப் பிடிக்கும் செய்கையைப் போல, ஒரு பயனை எதிர்நோக்கிச் செய்த உதவியை ஈகை என்று கூற இயலாது. அதனால் இன்று கொடுக்கும் ஒரு கொடையின் பயனாகப் பின்னர் பலன் பெறலாம் என்ற எண்ணத்தில் செய்ய நினைக்கும் செயலை ஈகை எனக் கருத வழியில்லை. இதனையே வள்ளுவரும்,

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்: 221)

    வறியவர்க்கு உதவும் நோக்கில் ஒரு பொருளைக் கொடுப்பதையே ஈகை எனக் கூறலாம், அதைத் தவிர்த்து பலன் ஒன்றைப் பெரும் நோக்கில் மற்றவர்களுக்கு வழங்குவது ஈகை ஆகாது, அது ஏதேனும் ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவது மட்டுமே என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சுமையொடு மேல்வைப்பா மாறு

     

    சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வ முடையார்
    அறஞ்செய் தருளுடைய ராதல் – பிறங்கல்
    அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
    சுமையொடு மேல்வைப்பா மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
    அறம் செய்து அருள் உடையர் ஆதல்-பிறங்கல்
    அமையொடு வேய் கலாம் வெற்ப! அதுவே
    சுமையொடு மேல் வைப்பு ஆமாறு.

    பொருள் விளக்கம்:
    சிறப்பாக இன்பங்களைத் துய்த்து வாழும் செல்வந்தர்கள், அறங்களைச் செய்து அருள் உடையவராகவும் வாழ்வதென்பது; மலையில் மூங்கில்களும், வேய்களும் (உட்பக்கம் துளையுடைய மற்றொருவகை மூங்கில்) நெருங்கிச்செறிந்து வளர்ந்துள்ள மலை நாட்டைச் சேர்ந்தவரே, அத்தகைய வாழ்வு பொற்குவியல் சுமையின் மேல் விலைமதிப்பற்ற கற்களையும் வைத்துச் சுமந்து செல்வதைப் போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: இம்மையில் செல்வந்தராக இன்புற்று வாழ்பவர், அவர் செய்யும் அறச்செயல்களால் மறுமைக்கும் பயன் தரும் அருள் பெறத்தக்க வாழ்க்கையை வாழ்வது, பொற்குவியலின் மேல் மணிகளையும் சுமந்து செல்வதைப் போன்ற செய்கை என்பதால், செல்வந்தர்கள் அறச்செயல் புரிந்து வாழ்ந்திட வேண்டும். பொருள், அருள் ஆகியவை இம்மையிலும் மறுமையிலும் அடையும் பேறு என்பதைக் குறிக்க வள்ளுவர்,

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)

    பொருள் இல்லாதவர்க்கு இப்புவியில் இன்ப வாழ்வு இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மறுமையில் இன்பம் இல்லை என்று குறிக்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 20, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு சொற்பொழிவாளர் இசைக்கவி இரமணன் அவர்கள் 

     

     

    best of isaikkavi -ramanan

    இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் இசைக்கவி இரமணன் அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் முற்றிலும் தேவையற்றது. அவரது இலக்கிய பகிர்வுகளில் மூழ்கித் திளைத்திராத தமிழரும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முன்னுரையாக ஓரிரு அறிமுக வரிகள் தரவேண்டும் என்ற மரபில் அடுத்து சில வரிகள் அவரைப் பற்றி இங்கு தரப்படுகிறது. நெல்லையில் பிறந்த இசைக்கவி இரமணன், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட பல்கலை வித்தகர் என்று அறியப்படுகிறார். ‘தி இந்து’ பத்திரிகையில் 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

    இசைக்கவி இரமணன் பொதிகை தொலைக்காட்சியில் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும், அகில இந்திய வானொலியிலும் பல சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். தற்பொழுது சங்கரா தொலைக்காட்சியில், மஹா பெரியவா என்று போற்றி வணங்கப்படும் காஞ்சி மகான் அவர்களைப் பற்றி தினமும் காலை 5.40 மணிக்கு ‘காஞ்சி மகான் பற்றிய சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார். இதுவரை ‘காஞ்சி மகான்’ பற்றி 139 சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சியின் மூலம் வழங்கியுள்ளார் (https://www.youtube.com/watch?v=tzYeHk_Zoz8&list=TLp3FHEL4CnDUxNzA3MjAxNQ).

    வல்லமை இதழின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் இசைக்கவி ரமணன். வல்லமை இதழ் தொடங்கிய 2010 ஆம் ஆண்டு, ஒரு நூல் அறிமுகக் கட்டுரையை வல்லமையில் எழுதியது முதல், வல்லமை இதழின் வளர்ச்சியில் தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து பங்களித்து வருகிறார். வல்லமை தனது ஐந்தாண்டு இலக்கியப் பயணத்தைக் கடந்து ஆறாம் ஆண்டில் காலடி வைத்ததைக் கண்டு மகிழ்ந்து, வாழ்த்துக் கவிதையொன்றையும் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். கவிதையின் சிறு பகுதி கீழே, முழுக்கவிதையையும் இந்தச் சுட்டி வழி சென்று ஆண்டுவிழாக் காணும் வல்லமைக்கு வாழ்த்து! (- http://www.vallamai.com/?p=57588) படிக்கலாம்.

    […]
    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
    சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
    எல்லோர்க்கும் இடம்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
    ஏழைக்கும் இடம்தந்தீர் என்நன்றி ஏற்க!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    சென்ற ஆண்டின் மகளிர் தினத்தை (மே 2014) முன்னிட்டு வல்லமை இதழ் ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் நடத்திய கடித இலக்கியப் பரிசுப் போட்டியின் (http://www.vallamai.com/?p=44563) நடுவராகப் பொறுப்பேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வழங்கியதுடன், படைப்புகளின் சிறப்புகள் கண்டு  மனம் மகிழ்ந்து, வழக்கமான, குறிப்பிட்ட முதல், இரண்டு, மூன்று, ஆறுதல் பரிசுகளையும் தேர்ந்தெடுத்த பின்னர்; தனது சார்பாக மேலும் அறுவரைத் தெரிவு செய்து சிறப்புப் பரிசு என, அவரே  தலா ரூ. 200 பரிசுத் தொகையை ஒவ்வொருவருக்கும் வழங்கி மகிழ்ந்தவர். வல்லமை இதழ், எழுத்தாளர்களின் எழுத்துகளின் மேன்மையைக் கருதி சிறப்புப் பிரிவு ஒதுக்கிய எழுத்தாளர்களுள் இசைக்கவி இரமணனும் ஒருவர். இசைக்கவியின் இதயம், கவிப்பேழை ஆகிய பிரிவுகளின் கீழ் இசைக்கவி இரமணனின் பல்வேறு படைப்புகள் தொடர்ந்து சென்றவாரம் வரை வல்லமையில் வந்துள்ளன.

    சென்னைக் கம்பன் கழகமும், பாரதிய வித்யா பவனும், சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை 2011 ஆண்டு சென்னையில் நடத்தின. அந்த நிகழ்ச்சியில் ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார். அதுமட்டுமன்று, இன்றுவரை சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பல இலக்கிய சங்கங்களுடன் இணைந்து வழங்கும் இலக்கிய விழாக்களில் சொற்பொழிவாற்றி வருகிறார். சென்ற சனிக்கிழமையன்று ‘(ஜூலை, 18, 2015) , தத்வலோகா – ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் தொடர் நிகழ்ச்சியின் குறள் விளக்கம் என்ற சொற்பொழிவொன்றையும் வழங்கியிருக்கிறார்.

    திறமைமிகு புலவர்கள் அக்காலத்தில் அரசவைப் புலவர்கள் என்ற பெருமையுடன் மன்னர்களின் அரசவையை அலங்கரித்தது போல, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அரசவை சொற்பொழிவாளர் போன்று தொடர்ந்து அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார் இவர். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நடத்தும் மாதாந்திரத் தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான, தேவியும் மனிதனும் (தசமஹா வித்யா) என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பராசக்தியின் ஒவ்வோர் அம்சம் பற்றிய விளக்கங்கள் வழங்கி வருகிறார். சென்ற வாரம் வியாழக்கிழமையன்று மாலை, சென்னை பாரதிய வித்யா பவனில், தசமஹா வித்யையில் ஏழாவதாய் வரும் தூமாவதி தேவியைப் பற்றி சொற்பொழிவாற்றினார். இந்த உரையின் கட்டுரை வடிவத்தை வல்லமையில், சென்ற வெள்ளிக்கிழமையன்று தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி என்று அவர் வழங்கிய கட்டுரையின் (http://www.vallamai.com/?p=59719) மூலம் அறியலாம்.

    அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி! தூமாவதி பற்றியும், அவள் தோற்றம் செயல் பற்றியும் விளக்கும் இசைக்கவி இரமணனின் கட்டுரை இங்கு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. கவிதைகளையும், மேலும் விளக்கங்களையும் காண “தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி” கட்டுரையைப் படிக்கவும்.

    ஒளிக்கு விளக்கமுண்டு. இருட்டுக்கு விளக்கமேது, துலக்கமேது, திகழ்ச்சியேது?
    இன்மையிலிருந்தே இருப்பு.

    ஆனால், ஒளிக்கு இத்தனை சிறப்பிருப்பதற்குக் காரணம், இருள் என்று ஒன்று இருப்பதால். அதாவது இல்லாத ஒன்று இருப்பதால். அந்த இல்லாத ஒன்றாகிய இருட்டிலிருந்துதான், இருப்பு என்னும் ஒளி தோன்றுகின்றது.

    அந்த இல்லாதது என்பது மூன்று வகைப்படும்:
    1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை

    2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை

    3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயற்கொம்பு, கானல் நீர்

    ஆனால், இல்லாதது என்பது அறவே இல்லாத சூனிய நிலை இல்லை:

    · விதையில் மரத்தின் கருத்து இருப்பதால்தான், அது உந்துவதால்தான் விதை விழிக்கிறது

    · மண்ணிலிருந்து விளைந்த பானை மண்ணிலேயே சேர்வது, தோற்றத்தின் மாற்றமே

    · நீரைக் கண்ட நினைப்புதான் கானலில் நீரைக் காண வைக்கிறது. கொம்பின் ஞாபகம்தான் அதை, அது இல்லாத முயலில் பொருத்திப் பார்க்கிறது

    அறியாமைக்கும் அறிவுக்கும்
    இருளுக்கும் ஒளிக்கும்
    அழிவுக்கும் தோற்றத்திற்கும்
    ப்ரளயத்திற்கும் படைப்புக்கும்
    இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை,
    அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி!

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை
    அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி.

    சந்திகளின் உருவகம்
    இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை
    பகலுக்கும் இரவுக்கும் நடுவில் ஒரு சந்தி, அது அந்திப் பொழுது
    முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது

    அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி
    பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி
    தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள்.

    ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை.
    இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை.

    அழிவுக்குப் பின் நேரும் ஆயாசம் இளைப்பாறத் தோதான மடியாகவும் இருக்கிறாள்.
    ஆக்கத்திற்கு முன்னிருக்கும் எண்ணமற்ற தன்னந்தனிமையாகவும் இருக்கிறாள்.
    வீட்டைக் கூட்டும் விளக்குமாறாகவும் இருக்கிறாள். விளக்கு ஏற்றப்படும் முன் எண்ணெய்யும் திரியும் நிமிண்டும் நேரமாகவும் இருக்கிறாள்.

    […]

    இவளே காலராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி.
    ஒவ்வொரு தேவிக்கும் தேவன் உண்டு. ஆனால் தூமாவதிக்குக் கணவன் கிடையாது. ஏன்?
    பிரளயத்துக்கும், படைப்புக்கும் உள்ள இடைவெளியில், சக்தியைப் பிரிந்த சிவன் சவமாக இருக்கிறான்.
    அந்த இடைவெளியின் உருவகம்தான் தூமாவதி.
    அது, இருட்டு முழுவதும் அகலாத, ஒளி சரியாய்ப் புலர்ந்துவிடாத புகை நிலை. புகை, நெருப்புக்கு அறிகுறி. தூமாவதி, இனி தோன்றப் போகும் படைப்புக்கு அறிகுறி.

    […]

    படைப்புக்கெல்லாம் மூத்தவளாயிற்றே, அதனால் மூத்த தேவி, மூதேவி, ஜ்யேஷ்டா, தவ்வை.
    எல்லோருக்கும் முந்தியவள் என்பதால் கிழவி. உடைந்த பற்கள், குறைந்த பற்கள் கொண்டவள்.
    உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் என்பதால் கையில் முறம் வைத்திருப்பவள்.
    அவ்விதம், காலனின் தன்மை இருப்பதால் அவளுடைய வாகனமும், கொடியும் காக்கைதான்.
    வெளுத்த முகம், நீண்ட கைகள், கால்கள், தொங்கும் முலைகள், பெரிய காதுகள், கொடூரமான பார்வை.
    அழுக்கடைந்த உடைகள் கொண்டவள். மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டிருப்பதால் இவள் துஷ்டா எனப்படுகிறாள்.

    வாழ்ந்தே புரிவது வாழ்க்கை, அதில்
    வருவதும் செல்வதும் இயற்கை
    வழுக்கி விழுந்தபின் எழுவதில்தான்
    வளரும் மானிட மேன்மை
    சூழ்ந்தே புரிவது உறவு, அதில்
    சுவாரசியம்தான் பிரிவு
    சுடரை இருளும் இருளைச் சுடரும்
    ஒருபோதும் விழுங்காது!

    என்பது போன்ற அழகிய கவிதைகள் சொல்லும்…

    வல்லமைமிகு கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பல்கலை வித்தகர் என அயராது பலதுறைகளிலும் பங்களித்து, தமிழக மக்களை பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் மகிழ்விக்கும் இசைக்கவி இரமணன் அவர்களுக்கு வல்லமை  இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    ஃபேஸ்புக் வலைத்தளம்: https://www.facebook.com/venkateswaran.taruvai?fref=ts

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  உமிக்குற்றுக் கைவருந்துமாறு

     

    தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
    தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்?
    இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட
    உமிக்குற்றுக் கைவருந்து மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
    எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?
    இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!
    உமிக் குற்றுக் கை வருந்துமாறு.

    பொருள் விளக்கம்:
    தனக்கு ஏற்பட்டதாகவே கருதி, தன்னை அடைந்த சுற்றத்தார்க்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை தனக்கு ஏற்பட்டது போல உணர்ந்து உதவாத உறவினரால் என்னதான் ஆகப் போகிறது? தொடர்ந்து அருவிநீர் பாய்வதால் பொன் கொழிக்கும் விளைச்சல் தரும் ஈரநிலத்தைக் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, உமியைக் குற்றி கை சலித்துப் போவதை ஒத்த பயனற்ற செயல் (உதவாத உறவினரிடம் சென்று உதவி பெற நினைக்கும் செயல்)

    பழமொழி சொல்லும் பாடம்: உறவினரின் துயர் களைய உதவிடாத அன்பற்ற உறவினரிடம் உதவி கேட்டுச் செல்வது கைவலிக்க உமியைக் குற்றுவதை ஒத்த வீண் செயல். எனவே ஒருவருக்கு அமையும் சுற்றம் எவ்வாறாக இருத்தல் வேண்டும் என்று விளக்க முற்படும் வள்ளுவர்,

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும். (குறள்: 522)

    அன்பு நீங்காத உறவினர் ஒருவருக்கு அமைந்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் பயப்பதாக அமையும் என்று கூறுகிறார்.

    Share
  • இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்!

    தேமொழி.

    உயர்கல்வியின் சிகரமாக விளங்கும் முனைவர் படிப்பை முடித்து, முனைவர் பட்டம் என்ற வெற்றிக் கொடியை நாட்ட விரும்புவது பெரும்பாலோருக்கு நிறைவேறாக் கனவாகவே முடிந்துவிடும். அதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை, திறமையில்லை போன்ற காரணங்களைச் சொல்வதற்குக் கூட சிலசமயம் வழியிருக்காது. பெரும்பாலும் படித்து முடித்து சொந்தக்காலில் நிற்கவேண்டிய நேரம், தனது கடமைகளும் தன்னை அழைக்கிறது என்ற வயதில் பலர் சிக்கிக் கொள்ளும் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் அது. சரி இப்பொழுது கொஞ்சம் விலகிச் சென்று மீண்டும் திரும்ப வந்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கல்விக்கு தற்காலிக இடைவெளி விடுபவர் மீண்டும் முடிக்கமுடியாமல் கூட போய்விடுவதும் பலர் வாழ்வில் எதிர்கொள்ளும் உண்மை. அதற்குள் வாழ்க்கையில் பெரிய திருப்பங்கள் தோன்ற நிரந்தரமாகவே தங்கள் முனைவர் பட்டக் கனவை கைவிடும் நிலை ஏற்பட்டு விடுவதும் உண்டு.

    இங்கு அடுத்து வைக்கப்படும் கருத்துகள் இந்தியக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு கூறுவது. பெரும்பாலும் அறிவியல், கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் படிப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், அதுவும் அவர்கள் வீட்டிற்கு அவர்கள் கடைசி மகனாய் இருந்தால் அவர்களுக்கு முனைவர் படிப்பை முடிப்பதற்கு தடைகள் மிக மிகக் குறைவு. வீட்டின் மூத்தபிள்ளையாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையில் ஆர்வமுள்ள ஒருவர் இருப்பார் என்றால், வேலைக்குச் சென்று கொண்டே மாற்றுவழியில், பகுதி நேரமாக முனைவர் ஆய்வு செய்து முடிக்க வேண்டிய நிலைமை இருக்கும். இதில் வயதும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆண்கள் முப்பது வயது வரை குடும்ப வாழ்க்கையைத் துவக்குவதற்கு முன்னால் எந்த இடையூறும் இல்லாமல் முனைவர் படிப்பு மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுவதில்லை.

    ஆனால் பெண்களாக இருந்தால், அவளுக்கு இருபத்தியைந்து வயது நெருங்கத் துவங்கும் பொழுதே பெற்றோர்களுக்கு மகளின் வயது கவலை தரத் தொடங்கிவிடும். அந்தப் பெண்ணே திருமணம் பற்றிக் கவலைப்படாமல், படிப்பிலேயே கவனமாக இருந்தாலும்கூட பெற்றோர்களிடம் இருந்து திருமணம் பற்றிய கேள்விகளும் முயற்சிகளும் துவங்கிவிடும். அதுவும் அந்தப்பெண் மூத்த பெண்ணாக இருந்தால், அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கும் படிப்பை முடித்து, திருமணத்தை முடித்து தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பைப் பற்றியக் கவலை பெற்றோருக்கு இருக்கும். ஆனால் அதுவே கடைசி மகளாக இருந்தால் தாங்கள் பாடும் பாட்டை மாற்றிப் பாடுவார்கள். நாங்கள் கண்ணை மூடுவதற்குள் உனக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று மகளின் படிப்பை ஒரு வழி செய்துவிடுவார்கள். இது போன்ற நெருக்கடிகளுக்குக் காரணம் முனைவர் பட்டப்படிப்பும் ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் முடியாமல் ஆராய்ச்சிநிலை பலமுறை வரையறுக்கப்பட்ட கால எல்லையையும் தாண்டி நீடித்து விடுவதுதான்.

    Ingeborg Rapoport3

    முனைவர் பட்டத்தை முடிப்பதற்கு இது போன்ற வழக்கமான தடைகளை பார்த்துப் பழகிய நமக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ‘இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்’ (Ingeborg Syllm-Rapopor) என்பவர் எதிர்கொண்ட தடை மேலும் வியப்பைத் தரும். சென்ற மாதம் (ஜூன் 9, 2015) தனது 102 வயதில் (ஆம், சரியாகத்தான் படிக்கிறீர்கள், சந்தேகம் வேண்டாம்) தனது முனைவர் படிப்பை முடித்து பட்டம் வாங்கியிருக்கிறார். உலகிலேயே மிகவும் வயதாகி முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பட்டத்தையும் இதனால் இவர் பெறுகிறார். இவரது இந்தச் சாதனையை முறியடிப்பதற்கு வரலாற்றில் மேலும் பல ஆண்டுகள் கூட ஆகலாம். இனி இவர் ஏன் இந்த வயதில் முனைவர் பட்டம் பெறுகிறார், இவர் எதிர்கொண்ட வழக்கத்திற்கு மாறான தடை என்ன என்று பார்ப்போம்.

    Ingeborg Rapoport

    அவர் எதிர்கொண்ட தடை இனப்பேதம். இந்த நூற்றாண்டில் நம்மால் இது நம்பக்கூட முடியாத ஒன்றுதான். ஆனால் சென்ற நூற்றாண்டில் ஒருவரது இனம் என்ற பின்புலம் கல்வி கற்பதில் இடையிட்ட போராட்டங்கள் நிறைந்த காலம்.

    இன்ஜ்போர்க் 1912 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் காமரூன் (Cameroon) பகுதியில் பிறந்தவர். ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் (Hamburg University) 1937 ஆம் ஆண்டில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். தொடர்ந்து அதில் முனைவர் பட்டப்படிப்பும் மேற்கொண்டார். அவரது 25 ஆவது வயதில், 1938–ம் ஆண்டில் அத்துறையில் ஆய்வுகள் செய்து, அக்காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதித்த தொண்டை அழற்சி தொற்றுநோய் பற்றி முனைவர் பட்ட ஆய்வறிக்கையை (PhD thesis on infectious disease – diphtheria) சமர்ப்பித்தார். அந்த நாட்களில் உலகப் போர் சூடுபிடித்திருந்தது. ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோலாட்சி நிகழ்ந்த காலமது. இனப்பேதம் தலைவிரித்தாடிய அக்கால கட்டத்தில், ஹிட்லரின் கட்டளைக்கிணங்க யூதக்குலத்தை அடியோடு அழித்தொழிக்கும் நிலையை ஜெர்மன் நாடு நடைமுறைப்படுத்தியது. நியாயம் கேட்பார் இல்லை. யூதர்கள் பணம், பதவி, உடமை, சொத்து, சுகம் என அனைத்தும் இழந்து உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிடிபட்டவர்களை சிறையில் அடைத்து நச்சுவாயு அறையில் அடைத்து உயிரை எடுத்தார்கள்.

    Ingeborg Rapoport12

    இந்தக் கொடிய காலகட்டத்தில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இன்ஜ்போர்க் ஒரு கலப்பினப் பெண்ணாக இருந்தார், ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்த்துவராக வளர்க்கப்பட்டவர் இவர். ஆனால், இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர், அவர் ஒரு பியோனா இசைக்கலைஞர். இன்ஜ்போர்க் அவர்களது ஆய்வறிக்கையின் மேல் அவரது ஆய்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்படாமல், இவர் யூத பின்புலம் கொண்டவர் அதனால் பட்டம்பெற தகுதியற்றவர் என்று மஞ்சள் வண்ணத்தில் கோடிட்டு இவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப் பட்டது (அந்நாட்களில் யூதர்கள் தங்கள் ஆடைகளின் மீது அடையாளம் தெரிவதற்காக மஞ்சள் வண்ண நட்சத்திரங்களை அணிய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்). இவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மேற்கொண்டு வாய்வழித் தேர்வில் இவர் பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டார்.

    ஒருவரது மூதாதையரின் இனம் அடிப்படையில் அவரது தகுதியை நிர்ணயிக்கும் நாட்டின் சட்டங்கள் குறுக்கிடாவிட்டால் மட்டுமே இவர் தேர்வில் அமர அனுமதிக்கலாம் என்ற குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டு இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையில் இணைக்கப்பட்டுவிட்டது. செய்வதறியாது திகைத்த இன்ஜ்போர்க் பிற யூதர்கள் போல நாட்டை விட்டு வெளியேறினார். தனது மருத்துவப் பணியின் எதிர்காலமே நொறுங்கிப் போனதாக பின்னர் இதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். அது ஜெர்மனிக்கும், அறிவியல் உலகத்திற்கும் அவமானம் தரும் ஒரு நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

    Ingeborg Rapoport6

    அமெரிக்க மண் இந்த அகதிக்குப் புகலிடம் கொடுத்தது. கையில் பணமின்றி வேலைக்கு அலைந்தார். நியூயார்க், பால்ட்டிமோர் போன்ற நகர்களில் சிறு சிறு வேலைகளை ஏற்று வாழ்க்கையுடன் போராடினார். அமெரிக்காவின் மருத்துவக் கல்லூரிகளில் 48 கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சியைத் தொடர விண்ணப்பித்ததில் பென்செல்வேனியா பல்கலைக்கழக மருத்துவமனையில் மட்டுமே பயிற்சியாளராக சேரும் வாய்ப்பு கிடைத்து, பயிற்சியைத் தொடர்ந்து மருத்துவப் பட்டம் பெற்று, 1944 ஆம் ஆண்டில் சின்சினாட்டி மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவரானார்.

    அந்நாட்களில், இவரைப்போலவே ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து அகதியாகத் தப்பி வந்த, வியன்னா, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘சாமுவேல் மிட்ஜா ரபோபோர்ட்’ (Samuel Mitja Rapoport) என்ற யூதரைச் சந்தித்தார். மருத்துவரும் உயிர்வேதியியல் துறையைச் சார்ந்தவருமான சாமுவேல் ரபோபோர்ட்டை விரும்பி மணந்து கொண்டார். இவர்களது அன்பான சிறிய குடும்பம் 1950 களில் மீண்டும் புதுவகை இடரைச் சந்தித்தது. கம்யூனிச, இடதுசாரி சிந்தனையைக் கொண்டவர்கள் ரபோபோர்ட் கணவன் மனைவி இருவருமே. ஐம்பதுகளில் அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு அலை மிகவும் தீவிரமடைந்திருந்தது. இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் அந்நாள் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு மீண்டும் 1952 ஆம் ஆண்டில் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தனர். முதலில் கருத்தரங்கு ஒன்றுக்காகச் சென்ற கணவர் அங்கேயே தங்கி வேலைத்தேட, நான்காவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருந்த இன்ஜ்போர்க் குழந்தைகளுடன் சென்று அவருடன் சேர்ந்து கொண்டார்.

    இன்ஜ்போர்க் கிழக்கு பெர்லினில் ஒரு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராகவும், குறிப்பாகப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணராக (neonatologist ) பணி புரிந்தார். இவர் பணிசெய்த காலத்தில் ‘குழந்தைகள் மரண விகிதம்’ (Infant mortality rate) வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிறகு, குழந்தைநல மருத்துவப் பேராசிரியராகவும் 1964 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார், குழந்தைகள் பராமரிப்புத் துறையின் முதல் தலைவராகவும் பெர்லினின் புகழ் பெற்ற சாரைட் மருத்துவமனையில் ( Charité Hospital in East Berlin) பதவி வகித்தார். பின்னர் 1973 – ஆம் ஆண்டு இன்ஜ்போர்க் ஓய்வு பெற்றாலும் தனது 80 வயதுகளிலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். குழந்தை இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைத்ததற்காக, கிழக்கு ஜெர்மனியின் தேசிய விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.

    Ingeborg Rapoport2

    இவரது இத்தனை சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளுவது, எந்த முனைவர் பட்டம் இவருக்கு அநீதியான முறையில் மறுக்கப்பட்டதோ அதை மீண்டும் உழைத்து நியாயமான முறையில், அதுவும் தனது 102 ஆவது வயதில் இவர் பெற்றதே. சற்றொப்ப 80 ஆண்டுகள் கடந்த பின்னர், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 77 ஆண்டுகளுக்கு பிறகு, இவர் முயற்சியின் அடிப்படையில் பெற்ற முனைவர் பட்டம், ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற விரும்புபவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான வழிகாட்டல் என்றால் அது வெறும் வெற்றுப் புகழுரை அல்ல.

    இவருக்கு கல்வியில் கிடைத்த மறுப்பு கசப்புணர்வு தராதவகையில் பணியில் பல வெற்றிகள் பெற்றாலும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இவரது மகன் ‘டாம் ரபோபோர்ட்’ (Tom Rapoport) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவப் பேராசிரியர். இவர் தனது தாயின் கதையை, அவர் முனைவர் பட்டம் பெறுவதில் எதிர்கொண்ட ஏமாற்றத்தை ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவரது நண்பர் ஒருவரிடம் பகிர்ந்திருந்தார். அவர் இன்ஜ்போர்க் படித்த ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைத் தலைவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது, இன்ஜ்போர்க்கின் கதையைக் குறிப்பிட்டார். துறைத்தலைவர் அநீதியைச் சரி செய்யவேண்டியத் தேவை இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தார்.

    இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரும் அமெரிக்காவில் படிப்பைத் தொடர்ந்து மருதவராகவும் ஆகிவிட்டார், ஆண்டுகள் பலவும் கழிந்துவிட்டன சட்டச் சிக்கல்கள் உள்ளன என்று மறுப்புக்கான காரணங்களை அடுக்கியது பல்கலைக்கழக நிர்வாகம். நிர்வாகம் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் இன்ஜ்போர்க் விவகாரத்தில் ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. அவருக்கு ஒரு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கதையை முடித்துவிட நினைத்தது. இதனை இன்ஜ்போர்க்கும், துறைத்தலைவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இரக்கத்தின் பேரில் தருவது போன்ற பட்டதை ஏற்க மனமில்லை இருவருக்கும். தகுதியுள்ள ஒருவர் மறுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு அவரது தகுதி அடிப்படையில் பட்டம் வழங்குவதையே இருவரும் எதிர்பார்த்தனர். இதனால் ஏற்படும் சட்டச்சிக்கல்களை, விதி புறக்கணிப்புகளை பல்கலைக்கழகம் எதிர் கொள்ளாதவாறு இன்ஜ்போர்க் மீண்டும் ஒரு ஆய்வறிக்கை தயார் செய்து, அதில் வாய்வழித் தேர்வை விதிகளின் முறைப்படி எதிர்கொண்டு வெற்றிபெற்றால் அவருக்கு முனைவர் பட்டம் வழங்க தீர்மானிக்கப் பட்டது.

    Ingeborg Rapoport9

    இன்ஜ்போர்க்கிற்கு பார்வை குறைந்ததால் படிப்பதோ, கணினி வழி ஆய்வு செய்வது இயலாது போனது. தற்கால மருத்துவ முன்னேற்றங்கள், கடந்த 80 ஆண்டுகளில் குழந்தைகளைப் பாதிக்கும் தொற்றுநோய் மருத்துவ சிகிச்சைமுறை ஆகியவற்றை ஆராய இவரது நண்பர்களும் உறவினர்களும் உதவ முன் வந்தார்கள். இணையத்தில் தகவல் சேகரித்து, அவரது ஆய்விற்குத் தேவையான தகவல்களை இவரிடம் கொண்டு வந்து தொலைபேசி வழியே சேர்த்தார்கள். இவர் அவற்றின் அடிப்படையில் மீண்டும் ஒரு அறிக்கை எழுதிச் சமர்ப்பித்தார். அவர் படித்த காலத்தைவிட இப்பொழுது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் இவருக்கு வியப்பளித்தது. பல்கலைக்கழகம் இவரது வேண்டுகோளுக்கு பொறுமையாக ஒத்துழைத்ததற்கும் இன்ஜ்போர்க் பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார்.

    AP GERMANY PHD NAZIS I DEU

    பல்கலைக்கழகத்தில் இருந்து இரு மருத்துவத் துறை ஆசிரியர்களும், துறைத் தலைவரும் வாய்வழித் தேர்விற்காக இவரது வீட்டிற்கே வந்தனர். இவரது வரவேற்பறையிலேயே இவருக்கு 45 மணித்துளிகள் கேள்விகள் மேல் கேள்விகள் வீசப்பட்டு தேர்வு நடந்தது. பரிசோதிக்க வந்தவர்கள் இவர் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தைக் கண்டு பேச்சிழந்து போனதாகப் பாராட்டினார்கள். தேர்வு இவருக்குக் கொஞ்சம் மனஉளைச்சளை உண்டாக்கியதாகக் கூறிய இன்ஜ்போர்க், இந்த முதுமையில் அவர் மேற்கொண்ட இந்த முயற்சி தனக்கு பட்டம் வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் காலத்தில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் நியாயம் கிடைத்ததாக ஏற்பட்ட உணர்விற்காக என்றும், இது கொள்கைக்கு கிடைத்த வெற்றிக்கான அறிகுறி என்றும் பட்டமளிப்பு விழா உரையில் குறிப்பிட்டார். தனக்கு வாழ்க்கையில் வாய்ப்புகள் மட்டும் அமையவில்லை, தன்னிடமும் விடாமுயற்சி இருந்தது என்றும் இன்ஜ்போர்க் குறிப்பிட்டார்.

    Ingeborg Rapoportphd

    கொள்கை வென்றது, நீதி வெற்றிபெற்றது, விடாமுயற்சி வெற்றி தரும், கல்விக்கு வயது ஒரு தடையல்ல என எத்தனையோ செய்திகளை தான் 102 வயதில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ள இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட் பாராட்டப்படவேண்டியவர்.

    படங்கள் :  பற்பல இணையதளங்களில் இருந்து திரட்டப்பட்டன, அத்தளங்களுக்கு  நன்றி.

    News Sources:
    The Wall Street Journal‎:
    Ingeborg Rapoport to Become Oldest Recipient of Doctorate After Nazi Injustice is Righted
    http://www.wsj.com/articles/from-nazi-germany-a-tale-of-redemption-1431576062

    The Daily Mirror:
    The shocking reason a 102-year-old woman waited 77 years to get her PhD published
    http://www.mirror.co.uk/news/world-news/shocking-reason-102-year-old-woman-waited-5802450

    The Sydney Morning Herald:
    Ingeborg Syllm-Rapoport, 102, completes degree denied her by Nazis 77 years ago
    http://www.smh.com.au/world/ingeborg-syllmrapoport-102-completes-degree-denied-her-by-nazis-77-years-ago-20150610-ghke0k.html

     

    Share