பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: நாவல்கீழ்ப் பெற்ற கனி

 

கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை – எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவற்கீழ்ப் பெற்ற கனி.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை; எற்றேல்,
அறிவு இலார் மெய்த் தலைப்பாடு பிறிது இல்லை;
நாவல் கீழ்ப் பெற்ற கனி.

பொருள் விளக்கம்:
(அறிவுபெறும் பொருட்டு தாமே முயன்று) கற்றோ அல்லது கற்றறிந்தவர் சொல்லித்தருவதைக் கேட்கவோ வாய்ப்பு இல்லாதவர், தெளிவாகப் பொருளுணர்ந்து புரிந்து கொண்டிருக்க மாட்டார். நிலை இவ்வாறிருக்க, கல்வி கேள்வி அறிவு இல்லாதவர் ஒருகால் மெய்ப்பொருள் அறிந்து கொண்டார் என்றால் அதை அவரது திறமை என்று கருத வழியில்லை. (தன்முயற்சி சிறிதும் இன்றி) நாவல் மரத்தின் கீழ் விழுந்திருக்கும் பழத்தை எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு ஒப்பானதாகும் அச்செயல்.

பழமொழி சொல்லும் பாடம்: முறையாகப் பெறப்படாத, தகுந்த அடிப்படையற்ற அறிவாற்றலை உலகத்தார் மதிப்பதில்லை. கல்வி, கேள்வி இன்றியே ஒருவர் கற்றறிந்தார் மட்டுமே அறிந்த பொருளை கூறுவாராகில் அது தனது முயற்சி இன்றி மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை பெற்றதைப் போன்றது. அத்தகைய செயல் அவரது திறமையை உணர்த்தும் செயலாகாது. இதனை வள்ளுவரும்,

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். (குறள்: 404)

கல்லாதவருடைய அறிவொளி சிறந்ததாக இருந்தாலும், கல்வியறிவு பெற்றவர் அவரை அறிவாளி என்று ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறுகிறார். மேலும்,

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (குறள்: 249)

அறிந்து தெளியாதவர் உண்மைப்பொருளைக் கண்டறிந்து கூறுவது போன்ற செயலை போன்றதாகவே அருள் இல்லாதவர் செய்யும் அறச்செயலும் இருக்கும் அருளின்றி செய்யும் அறச்செயலுடன் பிறிதொரு குறளில் அத்தகைய அறிவை ஒப்பிட்டும் கூறுகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *