பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

 

பழமொழி: வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர்

பழமொழி: தோற்பனகொண்டு புகாஅர் அவை

 

கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் – வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅ ரவை.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார் வித்தகர்;-வேட்கையால்
வண்டு வழி படரும் வாள் கண்ணாய்!-தோற்பன
கொண்டு புகாஅர், அவை.

பொருள் விளக்கம்:
சொல்வதைக் கவனமுடன் கேட்கக் கூடியவரிடம் சென்று, தான் சொல்வதைக் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் இருக்குமா எனத் தெரிந்து கொண்டு சொல்பவரே அறிவாளி. விருப்பத்துடன் வண்டு (மலரென நினைத்து) மொய்க்க வரும் ஒளிபொருந்திய மலர்களை ஒத்த கண்களைக் கொண்ட பெண்ணே! சபை ஏறாது தனது கருத்து என்று தெரியுமாயின் அவையினரிடம் கொண்டு செல்லத் தேவையில்லை.

பழமொழி சொல்லும் பாடம்:
அறிவாளிகள் விரும்பிக் கேட்கக் கூடியவர்களிடம் மட்டுமே சென்று தனது கருத்தைக் கூறுவார், சபை ஏற்காது புறக்கணிக்கும் என்று தெரியுமாயின் கருத்துகளைச் சொல்ல முற்படார். இக்கருத்தைக் கூறும் வள்ளுவரின் வாக்கு,

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (குறள்: 711)

சொற்களின் திறன் அறிந்த அறிஞர்கள், அவற்றை அவையினரின் தரமறிந்து, சபையின் தன்மைக்கு ஏற்ப சொல்லுவர் என்று குறிப்பிடுகிறது.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *