Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    1970ல் வெளிவந்த நவக்கிரகம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்! வி.குமார் இசையில் சிவக்குமார் லட்சுமி திரையில் தோன்றும் பாடல்!

    கவிஞர் வாலியின் கற்பனையில் இசையின் இணை பக்க பலமாய் அமைந்திட பருவகாலக் காற்றுபோல இந்தப் பாடல் நம் மனதில் இடம் பிடித்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    பாடலின் பல்லவியில் உள்ள கவித்துவம் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. காதலின்துடிப்பை ஒவ்வொரு வரியும் சொல்லிமகிழ..

    பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடிபோல் துளிர்விட்டு.. கிளைவிட்டு.. மலர்விட்டு வளரும் காதலின் சுகங்கள் கோடியன்றோ?

    இயற்கையாய் நடக்கும் மழைத்துளி

    .. சாரல்.. இவற்றையெல்லாம் தனக்கேற்றவாறு கவிஞர் பாடலுக்குள் பிடித்துவர.. அலைகள்கூட இவர்களை இணைக்கப் பாலமிட்ட கதையையும் சொல்கிறார் பாருங்கள்!

    அலைமோதும் எண்ணங்களில் இளங்கிளிகள் பருவப் பாடத்தை பயின்றுகொண்டிருக்க.. பெண்ணுக்கே பெருமை சேர்க்கும் நாணம் இங்கே என்ன செய்கிறது பாருங்கள்..

    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது

    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

    இந்த கற்பனை வளம் மிக்க கவிஞர்களுக்கே கைவரும்! கவிஞர் வாலியின்கைவண்ணம் அக்கற்பனையை கொடிகட்டிப்பறக்கவிடுகிறது இங்கேதான்!

    உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

     

    உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

    அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டதோ

    வரலாம்.. தொடலாம் மணநாள் வரும்போது

    தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது..

     

    உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது

    நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது

    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது

    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

     

    மழைத்தூரல்போட்டு சாரல்வந்து உன்னை நனைத்தது – அது

    உன்னை நனைத்து தெறித்தபோது என்னை நனைத்தது

    அது துளித்துளியாய் எனது தோளில் இடம்பிடித்தது

    இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்க்குது!
    http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds
    http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds

    உன்னை தொட்ட காற்று – Unnai thotta kaatru vanthu
    Share
  • இளமை கொலுவிருக்கும் – கவிஞர் கண்ணதாசன்

    இளமை கொலுவிருக்கும்..

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    அந்தக் காலத்தில் இந்தப் பாடல் பெற்ற வரவேற்பு அமோகம்!  ஆம் மோகம் குடியிருக்கும் வரிகள்!  அதற்கேற்ற காட்சியமைப்பு!! இந்தப் பாடல் இரண்டு முறை படத்தில் வரும்! கதாநாயகி பாடுவதாகவும்.. மற்றுமொரு முறை கதாநாயகன் பாடுவதாக!

    மொத்தத்தில் இப்பாடல் வரிகள் பெண்மையைப் போற்றுகின்றன. பெண் இல்லையென்றால் இவ்வுலகில் என்ன இருக்கிறது என்கிற கேள்வியை நம் முன் வைக்கிறது!  கவிஞரின் இதயத்திலிருந்து ஆழமான அழுத்தமான வரிகள் விழுந்திருக்கின்றன!

    அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?

    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?

    Statement of facts.. வார்த்தைகளில் சொல்லிவைத்தால் அது வரியாக இருக்கும்!  வளமையாக கவிதையில் சொல்லி வைத்தால் அது பாடலாகும்! இரண்டு வரிகள்தான்!  எத்தனைப் பொருள்!!

    கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
    இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

     

    பெண்ணைப் பாடாத கவிஞன் எங்கே?  இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ..  அவள் இயற்கை தந்திருக்கும் சீதனப் பரிசல்லவோ?

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
    செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

     

    பழைய பாடல்தான்!  மனதில் பதியும் பாடல்!  இளமையை ஏற்றிவைத்து பெண்மையைப் போற்றிவைக்கும் பாடல்!

     

    பாடல்: இளமை கொலுவிருக்கும்  

    திரைப்படம்: ஹ்லோ மிஸ்டர் ஜமீன்தார்
    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
    இயற்றியவர்:  கவிஞர் கண்ணதாசன்

    இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி
    ஆண்டு: 1962

    ஒஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
    அஹா அஹா ஹ ஹா ஹா ஹா ஒஹோ ஒஹோ ஒஹோஹோ

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

    அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
    அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
    கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
    இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
    செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

     

    http://www.youtube.com/watch?v=MGUAdeSS0xA

     

    http://www.youtube.com/watch?v=K1eC8lxqusk

    இளமை கொலுவிருக்கும் (ஆண்) – Ilamai koluvirukkum (male)
    இளமை கொலுவிருக்கும் (பெண்)-Ilamai Koluvirukkum (Susila)
    Share
  • கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா – கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    கவிஞர் காவிரி மைந்தன்

    கலைகள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது சிலைகள்! சிலைகள் என்றதும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவ ராஜ்ஜியமம் நெஞ்சில் நிழலாடுகிறது! காஞ்சியைத் தலைநகரமாய்க் கொண்ட பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் மகன் நரசிம்மராஜ பல்லவன் சிற்பக்கலை ஆர்வத்திற்கு தக்கதொரு எடுத்துக்காட்டு! மாமல்லன் என்னும் அவன் நினைவால் உருவான மாமல்லபுரம்!

    காலவெள்ளத்தால் சிதைந்துவந்த சிற்பங்களை மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்டெடுத்து காத்து வருதல் பழமையைப் போற்றிப்பாதுகாத்திடவும், வருகின்ற தலைமுறையினர் நம் முன்னோர் பற்றி அறிந்திடவும் கலை, பண்பாடு இவற்றில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கினர் என்பதற்கு சரித்திர சான்றுகாட்ட ஏதுவாக இருக்கும்!

    பள்ளிகளில் நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கு புரியும்வகையில், மிக மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்காகவே பாடல்கள் இயற்றித் தருவதில் பெயர்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் வா ராஜா வா திரைப்படத்திற்காக வடித்துத் தந்த பாடல்!

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக்

    கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா..

    ஒட்டுக்கல்லை சேர்க்காம..

    ஒரே கல்லை குடைஞ்செடுத்து

    கட்டி வச்சா மண்டபத்தை பல்லவராஜா

    அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    சொல்லு ராஜா சொல்லு..

    பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மகாபலிபுரத்தின் சிறப்புகளை எவரும் உணரும் வண்ணம் பட்டியலிடுகிறது இப்பாடல்!

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

    எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா..

    அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    ஆமா ராஜா ஆமா…

    சிற்பியரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி

    கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா

    அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    வா.ராஜா வா..

    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தை அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய இப்பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருக்கிறார் பிள்ளைத்தமிழாய்!

    ஒரு வரலாற்றைக்கூட நான்கே சரணங்களில் வார்த்தளித்துக் கொடுத்திட இயலும் என்று எடுத்துக்காட்டும் வல்லுனராய் கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

    கவிஞர் காவிரி மைந்தன்

    MGR ... MGR ....

    மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

    அன்றலர்ந்த தாமரைபோல் அழகியநல்முகம்! செக்கர்வானம் தந்துவைத்த பொன்னிறம்! கொடுத்துச்சிவந்த கரங்களால் அவரும் பாரி! பறங்கிமலை அருகினில் தோட்டம்! தோட்டம்! ராமனின் கால்பட்டதால் அகலிகை பெற்ற விமோசனம்போல் எங்கள் ராமச்சந்திரன் வாழ்ந்த காரணத்தால் அது ராமாவரமாய் ஆனதோ? திரையில் தோன்றிய நாயகன் மக்கள் மனதில் வாழ்கிற காவியம்! இதற்கு முன்னோ இதற்குப் பின்னோ இப்படி ஒருவரில்லை! ஈடில்லை. உவமையில்லை!

    கும்பகோணத்தில் தன் தாய் ஒரு கவளம் சோறுதர முடியாமல் தவித்த தவிப்பை தன் மனதில் பதி்த்து தமிழகத்தில் எந்த தாய்க்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ஆர்ப்பரித்து சத்துணவுத் திட்டம் விரிவாக்கிய தலைமகன்! வாழ்ந்த நாளெல்லாம் மக்கள்..மக்கள் என்று மக்களை எண்ணியே தான் வாழ்ந்த ஓர் மகன்! அவனுக்குப் பிள்ளையில்லை என்று சொல்வார்கள். அட. அவனே பிள்ளைதானே தமிழருக்கெல்லாம்! எங்கவீட்டுப் பி்ள்ளை என்பது யாரை இங்கே? தமிழுக்குத் தலைவணங்கி தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் இட்டமகன்! தமிழ்க்கவிஞர்களை எல்லாம் கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து பாராட்டி பரிசளித்து அவர்கள் இதயங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்தமகன்! சமுதாயம், நாடு, மொழி, இனம் என்பதற்கு என்றைக்கும் முன்னிலைதந்து முழுமூச்சாய் உழைத்தவன்! ஏழைகள்மீது பரிவுகாட்டுதல், சாதிப்பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தை விரும்பியவன்!

    ஆதியிலே பெரியாரும். அடுத்துவந்த அண்ணாவும் திராவிட உணர்வூட்டித்தந்ததனால் தன்னுழைப்பை தவறாமல் தந்தானே! அண்ணாவின் பெயர்தாங்கி கழகம் கண்டு தேர்தல்களம் கண்ட நாள் முதலாய் வெற்றியையே அறிந்தானே! முதல் அமைச்சர் என ஆன 1977முதல் அவன் வாழ்ந்த நாள்வரைக்கும் அவனே ராஜா! வாய்பேச முடியாமல் போனபோதும். மக்கள் வாக்குகளோ அவனைத்தான் சேரும்! சேரும்!! அன்றொரு நாள் அவனுக்கு உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை. ஜப்பான் நிபுணர் முதல் உலக மருத்துவர்கள் கவனம்குறையாமல் காத்திருந்த எங்கள் ரோஜா! வாடிநிற்கும் காட்சி்யைத்தான் ஏடுதனில் பார்த்தோம். ஐயகோ. எங்கள் தங்கத்திற்கா இப்படி ஒரு நிலை? அழகுக்கு இலக்கணம் வகுத்துவைத்த அன்புத்தலைவனுக்கு வரலாமோ என்றெல்லாம் மனமுருக பிரார்த்தனைகள் உலகமெங்கும்!

    தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் . சிறுசிறு கோயில்முதல் அறுபடைவீடுவரை. எங்குபார்த்தாலும் மதங்களைக் கடந்து மக்களின் பிரார்த்தனை. அனலில்விழுந்து துடித்தனர் ஏழையரெல்லாம்! என்னுயிரை எடுத்துக்கொள். மன்னன் உயிர் காத்திடு என்று ஆயிரமாயிரம் உள்ளங்கள் தொழுதன! அழுதன! ஆண்டவன் காலடியில் விழுந்தன! தமிழகத்தின் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும் அதற்கு முன் இரண்டு பாடல்கள் காட்டப்படுவது எழுதப்படாத விதியானது! நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களது பாடலும் இறைவா உன் மாளி்கையில் எத்தனையோ மணிவிளக்கு . தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு என்கிற கவிஞர் வாலியின் பாடலும். (இரண்டுமே மெல்லிசை மன்னரின் இசை) ஒளிபரப்பானது. இந்தச் சரித்திரத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?

    அப்படி ஒரு அதிகாலை அமெரிக்காவிலிருந்து உடல்நலத்தோடு மக்கள்திலகம் வந்து நம் மண்ணில் இறங்குகிறார். என்கிற செய்தி. ஒருசில நாட்களுக்கு முன்னர் எட்ட அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வின் சார்பிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்றத்தினர் சார்பிலும் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் தலைநகரில் அலைமோதியது! அன்று பறங்கிமலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்.

    இரவென்றும் பாராமல். பனியென்றும் பாராமல். மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில் திரண்டது ஓரிடத்தில்! எம்.ஜி.ஆர் வருகிறார். எங்கள் தலைவர் வருகிறார். இன்னல்நீங்கி புதுப்பொலிவுடன் தமிழகத்தை ஆள. எங்கள் ராஜா வருகிறார். என்று உணர்வால். உள்ளத்துடிப்பால். கூடிநின்ற கூட்டமது! இரவெல்லாம் மக்களுக்காக மக்கள் திலகம் நடித்த ஐந்து திரைப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன! பொழுது மெல்ல விடிந்தது! பார்வைபடும் இடங்களெல்லாம் மக்கள் தலைகள்! அழகாக அமைக்கப்பட்ட மேடை. அதிலே எளிதாக எம்.ஜி.ஆர் கார் ஏறுவதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள். காத்திருந்த மக்கள் எல்லோர் மனதிலும் வேறெந்த நினைவுகளும் இல்லை. இல்லை! காலை மணி 6.50க்கு சென்னை வானொலியில் செய்திகள். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே தமிழகத்தின் முதல் அமைச்சராய் மூன்றாம் முறை வெற்றிபெற்ற சத்தியத்தாயின் தவப்புதல்வன்! தாயைத் தெய்வமாகப் போற்றியவன்! தமிழகத்தை உயிராக நேசித்தவன்!

    அவன் வந்த வானூர்தி தரையிறங்கிவிட்டது. பனிமூட்டம் இருப்பதனால் முதல் அமைச்சர் வருகையிலே தாமதம் என்று செய்திகள் ஒருபக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க. மக்களின் உற்சாகக் கரகோஷம் விண்ணைப்பிளக்க. உயிரையே பெற்றதுபோல் மக்கள் மகிழ. உலக வரலாற்றில் இப்படி ஒரு காட்சி நடந்ததுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! புராணப் புருஷர்களைப் பற்றி கதைகள் புனையப்பட்டு கேள்வியுற்றிருக்கிறோம். அன்று கண்முன்னே கண்ட காட்சி. புரட்சித்தலைவர் என்னும் சாதனைச் சரித்திரத்திற்கு மட்டுமான பிரத்யேக காலப்பதிவு!! இத்தனை உயிரோட்டத்தை நேரிலே கண்டு தரிசித்து திரும்பியது என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    எம்.ஜி.ஆரின் ரசிகன் என்கிற தகுதியோடு. அன்றைக்கு முதல் நாள் அவருக்காக எழுதிய கவிதையொன்று இதயக்கனியே வருக. வருக வென்று! அதனையும் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு வார்த்தை மாற்றாமல் தலைப்பை மட்டும் தர்மங்கள் வென்றது தலைப்பிட்டு வெளியிட்டார்! நான் விவரம்அறிந்த நாள் முதலாகப் பார்த்த பெரும் தண்ணீர் பிரதேசம் காவிரி! கொள்ளிடம்! திருச்சிக்கருகே உள்ள எங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் போதெல்லாம் என் கண்ணில் பட்ட காவிரி நினைவுக்கு வந்தது! மண்ணின் மைந்தன் என்பது போல் நதியின் மைந்தன் ஆனேன். காடு விரி்ந்ததனால் உருவான நதி காவிரி என்று கம்பன் சொல்லுவான். காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயர் புரட்சித்தலைவருக்காக புனைந்த கவிதைக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற இரண்டு வரிகள் என்னால் மறக்க முடியாதவை.

    புவியில் கவிதை புறப்பட்டுவிட்டது. உன்
    புன்னகை ஒன்றே வெற்றியைத் தொட்டது!

    Share
  • தங்கத்தில் முகமெடுத்து.. – கவிஞர் முத்துலிங்கம

    கவிஞர் முத்துலிங்கம்

     

    தங்கத்தில் முகமெடுத்து..

     

    ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் மீனவ நண்பன். படம் முழுவதும் எடுக்கப்பட்டு முடிந்த நிலையில் ஒரு நாள் காலை ராமாவரம் தோட்டத்தில் புரட்சித்தலைவரை சந்திக்க கவிஞர் முத்துலிங்கம் செல்கிறார். கவிஞரைக் கண்டதும் அகமகிழ வரவேற்று.. என்ன கவிஞரே.. இப்போது நான் நடித்து முடித்துள்ள மீனவ நண்பன் திரைப்படத்தில் நீங்கள் பாடல் எழுதவில்லையே.. இருக்கட்டும் இயக்குனரிடம் கேட்டு ஒரு கனவுப் பாடலையாவது நீங்கள் எழுத வைக்கிறேன் என்று சொல்லி இயக்குனரைத் தொடர்பு கொண்டார்.

    மறுக்க முடியாமல்.. இயக்குனரும், ஒரு கனவுக்காட்சியை இடம்பெறச் செய்தார்.

    திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன என்றாலும் – கவிஞர் முத்துலிங்கம் எழுதி.. அமோக வெற்றி பெற்ற இந்தப்பாடல்.. இதோ..

    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    மங்கைஎன்றுவந்திருக்கும்மலரோ
    நீ… மாலைநேரபொன்மஞ்சள்நிலவோ
    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    காமன்போலவந்திருக்கும்வடிவோ..
    அந்ததேவலோகமன்னவனும்நீயோ…

    வண்ணரதம்போலவேதென்றல்நடைகாட்டவா
    புள்ளிமான்போலவேதுள்ளிநான்ஓடவா
    வண்ணரதமாகினால்அதில்சிலைநானன்றோ
    புள்ளிமான்தேடும்கலைமானும்நானல்லவோ
    அசைந்து.. தவிழ்ந்து …அருகில்நெருங்குஅமுதாகவேஓஓஒ
    (தங்கத்தில்…)

    முல்லைமலர்செண்டுகள்கொண்டுகொடிஆடுது
    தென்றல்சதிராடினால்அந்தஇடைதாங்குமா?
    இந்தஇடைதாங்கவேகைகள்இருக்கின்றது
    கொஞ்சிஉறவாடமலர்மஞ்சம்அழைக்கின்றது
    மலர்ந்து.. கனிந்து.. சிரித்துகுலுங்கும்கனியாகவோ..

    எந்தன்மணக்கோயிலில்தெய்வம்உன்னைகாணுகிறேன்
    உந்தன்நிழல்போலவேவரும்வரம்கேட்கிறேன்
    இந்தமனராஜ்ஜியம்என்றும்உனக்காகவே.
    சொந்தமகராணிநீஎன்றுநான்சொல்லுவேன்
    நினைக்க.. இனிக்க.. கொடுத்துமகிழ்ந்தமுத்தாரமே…
    (தங்கத்தில்….)

    படம்: மீனவநண்பன்
    பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்வரிகள்: முத்துலிங்கம்

    ஒரு கவிஞனின் உள்ளம் என்ன? எதிர்பார்ப்பு என்ன என்பதை துல்லியமாய் கணக்கிட்டு வைத்த ஒரு கதாநாயகன் உண்டென்று சொன்னால், அது எம்.ஜி.ஆர் மட்டுமே!!
    அவன் வாழ்க்கை முழுவதும் தமிழைக் காதலித்த காரணத்தால், புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவன் மனதில் சிம்மாசனம் காத்திருந்தது!

    எந்த ஒரு திரைப்பாடலாசிரியனும் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் எழுதிய பின் புகழின் உச்சிக்கு செல்லாமல் இல்லை.

    கவியரசு கண்ணதாசனை அரசு கவியாக்கி அழகு பார்த்த பொன்மனச்செம்மல்.. அவ்வரிசையில் புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கம் அவர்களையும் அமரவைத்த வரலாறு தமிழுக்குக் கிடைத்த பேறுதானே?

    http://www.youtube.com/watch?v=LUF4NzXhMbk

    Share
  • சிரித்தாலும் கண்ணீர் வரும்.. அழுதாலும் கண்ணீர் வரும்..- கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..

    அழுதாலும் கண்ணீர் வரும்..

     

    மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?

    பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!

    ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!

    குழந்தை உள்ளம்..
    கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி
    கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம்
    காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..

    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..

    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    (ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) …

    தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!

    திரைப்படம் – பெண் என்றால் பெண்
    பாடல் – கவிஞர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    குரல்கள் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..
    அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும்
    பிரிவினிலே அழுகை வரும்
    அழுதாலும் சிரித்தாலும்
    சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
    குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..
    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)

    கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!

    Share
  • நான் கடவுளைக் கண்டேன்..

    கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

    உனக்கொரு தாய்போல்

    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

    பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

    தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

    நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

    நான் கடவுளைக் கண்டேன் என்
    குழந்தை வடிவிலே..
    அவன் கருணையைக் கண்டேன்
    கொஞ்சும் மழலை மொழியிலே..
    பால்வடியும் உன் முகத்தில்
    ஆயிரம் கனவு கண்டேன்
    நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
    அந்த நினைவில் வாழ்கின்றேன்
    உனக்கொரு தாய்போல்
    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
    ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
    கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
    நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
    கடல்போல் பெருகாதோ
    பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

    மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
    ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

    http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

    கவிஞர் வாலி……..!

    கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

    பெறுகை
    காவியக் கவிஞர் வாலி
    சென்னை

    கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
    வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
    கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

    கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
    நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
    தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
    தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

    காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
    முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
    காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
    நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

    ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
    அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
    ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
    ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

    எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
    ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
    பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

    ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
    ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
    அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
    அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

    தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

    யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

    கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

    கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

    எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
    என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
    என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
    காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

    தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
    மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
    எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
    இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

    மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
    பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
    தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
    பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
    நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
    உரிமை பெற்ற உள்ளங்கள் ..
    யாரென இன்னுமா தெரியவில்லை?
    கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
    கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

    Share
  • கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி

    கவிஞர் மருதகாசி

     

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..

    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடலாசிரியர் – மருதகாசி

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
    கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
    போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்..

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
    மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
    என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
    எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்

    http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE

     

    NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA

    Share
  • பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் – கே.வி. மஹாதேவன்

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன்

    வீர அபிமன்யூ திரைப்பாடல். திரையிசைத் திலகத்தின் தேனான இசை.. கண்ணதாசன் தேன் என்கிற வார்த்தையைத் தேன் சொட்டச் சொட்ட வடித்தெழுதிய பாட்டு! விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு! தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு! அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களம் என்ன களம்.. காதல் களம்.. காட்சி என்ன காட்சி.. கணவன்.. மனைவி.. இன்னும் என்ன.. கவிஞர் கேட்க.. மற்றுமொரு ரகசியமும் பாடலில் இடம் பெற வேண்டும் என்கிறார் இயக்குனர். அதனை கவிஞரின் காதில் கூறினார். வார்த்தைகளில் சிந்திய தேன் அத்தனையும் எழில்சிந்த, அழகிய பொருள் சிந்த, பாடலை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ரசித்திருக்கிறோம்..

    காதல் பாடலிது.. கதாநாயகன் அபிமன்யூ.. தன் மனைவியோடு கழிக்கும் கடைசி இரவு! பாடல் பிறக்கிறது! இயக்குனர் ரகசியமாய் கேட்டது என்ன தெரியுமா? அபிமன்யூ அடுத்த நாள் களத்தில் மரணத்தைத் தழுவுகிறான். அவன் வகுத்த வியூகத்தில் வெளிவர மறந்துவிடுவதால் களத்தில் மாண்டு போகிறான். அவன் கதை முடியப்போகிறது என்பதையும் சூசகமாய் சொல்லிவிட வேண்டும் பாடலில் என்பதை கண்ணதாசன் உள்வாங்கி.. கவிதையில் சரியான விதம் சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி இறக்குமதி செய்துள்ளார்..

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
    அணைத்தேன் அழகினை ரசித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
    இல்லாதபடி கதை முடித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
    உலகத்தை நான் இன்று மறந்தேன்
    உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
    உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    இப்போது கவனியுங்கள்.. இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.. என்கிற சிலேடையை லாவகமாக கையாண்டு கதையையும் சொல்லிவிட்டார்.. கவிதையையும் இனிதே முடித்திருக்கிறார் என்பது புதிய செய்திதானே!

    திரைப் படம்: வீர அபிமன்யு
    பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை: கே.வி. மஹாதேவன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    ஆண்டு: 1965

    http://www.youtube.com/watch?v=qtnPiMd6-7Q

     

    Share
  • கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி

    கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி -இசைஞானி இளையராஜா-கே. ஜே.யேசுதாசுடன்.. பி. சுசீலா

    கண்ணன்  ஒரு  கைக்குழந்தை..

    ராணி சந்திரா என்னும் கதாநாயகியுடன் மார்கண்டேயர் சிவகுமார் கதாநாயகனாக தோன்றி  நடித்த படம் பத்ரகாளி. இப்படம் வெளியாகும் முன்னதாக இக்கதாநாயகி அகால மரணமடைந்தார் என்பது மக்கிளிடம் ஒரு இரக்கத்தைத் தோற்றுவித்ததுடன் படத்தின் வெற்றிக்கும் வழி வகுத்தது.

     

    கண்ணன் என்கிற பெயர்ச் சொல்லை..  கடவுளின் திருப்பெயரை பல்லவியில் வைத்து உருவாக்கியிருக்கும் பெரும்பாலான  திரைப்பாடல்கள் அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  இதோ..  ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ ..

    இசைஞானி இளையராஜா இன்னிசையில் விளைந்த அருமையான கீதம்.. காவியக் கவிஞர் வாலியின் கை வண்ணம்..

    கே. ஜே. யேசுதாசுடன்.. பி. சுசீலா இணைந்து பாடிய பாடல். கணவன் – மனைவி உறவிற்கும் தாம்பதியத்திற்கும் சாமரம் வீசும் வரிகள்!!

    இசைஞானி இளையராஜா தன்  திரையுலகப் பிரவேசத்திற்கு முன்னதாக நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது அமைக்கப்பட்ட வர்ணமெட்டினை இப்படத்தில் பயன்படுத்த அதற்கேற்ற  வரிகளை திரைக்காக கவிஞர் வாலி அவர்கள் வரைந்துதர .. இனிய வடிவில் உருவான இதமான பாடல்! ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில்.

    நீங்காத கீதமாய் காதில் விழுந்து நெஞ்சில் நிறையும் மெலோடியஸ் பாடல் வரிசையில் ..  தோ..  ‘கண்ணன் ஒருகைக் குழந்தை’ ..

     

    காலத்தை வென்று இன்றும் கேட்கப்படுகிறது அதே ஜீவனுடன்!!

    கண்ணன் ஒரு கைக்குழந்தை

    கண்கள்சொல்லும் பூங்கவிதை

    கன்னம்சிந்தும் தேனமுதை
    கொண்டுசெல்லும் என்மனதை

    கையிரண்டில் நானெடுத்துப்

    பாடுகின்றேன் ஆராரோ
    மைவிழியே தாலேலோ
    மாதவனே தாலேலோ

    உன்மடியில் நானுறங்க
    கண்ணிமைகள் தான்மயங்க
    என்னதவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ

    ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
    சொந்தமிந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
    தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

    அன்னமிடும் கைகளிலே
    ஆடிவரும் பிள்ளையிது
    உன்னருகில் நானிருந்தால்
    ஆனந்தத்தில் எல்லையது

    காயத்ரி மந்திரத்தை
    உச்சரிக்கும் பக்தனம்மா
    கேட்கும்வரம் கிடைக்கும்வரை
    கண்ணுறக்கம் மறந்ததம்மா

    மஞ்சள்கொண்டு நீராடி
    மைக்குழலில் பூச்சூடி
    வஞ்சிமகள் வரும்போது
    ஆசைவரும் ஒருகோடி

    கட்டழகன் கண்களுக்கு
    மையெடுத்து எழுதட்டுமா
    கண்கள்படக் கூடும்என்று
    பொட்டுஒன்று வைக்கட்டுமா  (கண்ணன் ஒரு)

    ஆராரிரோ ஆராரிரோ

    ஆராரிரோ ஆராரிரோ 

     

    http://www.youtube.com/watch?v=IRMy50RggbY

    Share
  • திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்

    கவிஞர் பூவை செங்குட்டுவன்

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..

    திரையுலகம் எத்தனையோ கவிஞர்களைக் கண்டிருக்கிறது. கண்டுகொண்டிருக்கிறது.  காணப்போகிறது.  இந்த வரிசையில் நாத்திகக் கருத்துக்களில் நாட்டமும் அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களில் ஈடுபாடும் கொண்ட ஒரு கவிஞர் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றதெல்லாம் பக்திப் பாடல்களில்தான் என்கிற செய்தி புருவங்களை விரியவைக்கும்!

    வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் –

    வேல் போல் இருக்குதடி என்கிற சிந்தனையைப் பதித்தவர்!

    பக்தியில் உருகிநிற்கும் உள்ளத்திலும்கூட தோன்றாத சிந்தனைகள் இவர் உள்ளத்தில் உற்பத்தியானதை என்னவென்று சொல்வது?

    காலத்தின் கருணை என்று சொல்வதா?  கந்தனின் கருணை என்று சொல்வதா?

    ஆம்!  கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலும் அதன் பின்னணியும் இவரை முன்னுக்கு கொண்டுவந்தன என்றே சொல்லலாம்!

    கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் கந்தன் கருணை திரைப்பாடல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது..குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக் காட்சிக்கு கவிஞர் பாடல் எழுத முற்பட்டபோது,  பக்திப் பாடல்கள் வரிசையில் வெளியாகியிருந்த ஒலிநாடாவில் தான் கேட்ட ஒரு பாடல் இந்தக் காட்சிக்கு முற்றிலும் பொருத்தமாய் இருக்கும் என்று கண்ணதாசன் எண்ணம் கொள்ள, அதை இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல.. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் உருவாகியிருந்த அப்பாடலை.. எழுதிய இளைஞர் பூவை செங்குட்டுவன் என்றறிந்து அவருக்கு வாகனம் அனுப்பி வரவழைக்க.. அவரின் பாடலை இப்படத்தில் இடம்பெறச் செய்தார் கண்ணதாசன்!

    திருப்பரங்குன்றத்தில்நீசிரித்தால்முருகா

    திருத்தணிமலைமீதுஎதிரொலிக்கும்
    திருச்செந்தூரிலேவேலாடும்
    திருப்புகழ்பாடியேகடலாடும்

    (திருப்பரங்குன்றத்தில்)

    பழநியிலேஇருக்கும்கந்தப்பழம் – நீ
    பார்வையிலேகொடுக்கும்அன்புப்பழம்
    பழமுதிர்ச்சோலையில்முதிர்ந்தபழம் –
    பக்திப்பசியோடுவருவோர்க்குஞானப்பழம்

    (திருப்பரங்குன்றத்தில்)

    சென்னையிலும்கந்தகோட்டம்உண்டு – உன்
    சிங்காரமயிலாடத்தோட்டம்உண்டு
    உனக்கானமனக்கோயில்கொஞ்சமில்லை – அங்கு
    உருவாகும்அன்புக்கோர்பஞ்சமில்லை!

    (திருப்பரங்குன்றத்தில்)

    இளம்கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியூட்டிய இந்நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமானது.  மேலும் பாடலில் ஒரே ஒரு வார்த்தையை கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொள்ளலாமா என்று பூவை செங்குட்டுவனிடம் அனுமதி கேட்டார்.  என்ன தெரியுமா? சென்னையிலே கந்த கோட்டமுண்டு .. என்கிற வரியை சிறப்புடனே கந்த கோட்டமுண்டு என்று மாற்றியமைத்தார்.  கவிஞர் பூவை செங்குட்டுவன் இதுபற்றி நினைவுகூரும்போதெல்லாம் கவியரசர் தனது பாடலுக்கு சிறப்பு சேர்த்தார் என்பார்.

    சிறப்புடனேகந்தகோட்டம்உண்டு – உன்

    சிங்காரமயிலாடத்தோட்டம் உண்டு

    ஒரு கவிஞர் தான் எழுதவேண்டிய பாடலை மற்றொரு கவிஞருக்கு தந்திட எத்தகைய பெருந்தன்மை வேண்டும்?  அதனால் தான்

    இன்றைய கவிஞர்களுக்கெல்லாம் அரசராக – கவியரசாக.. இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
    http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

    http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

    Thiruparamkundrathil Nee Sirithal – Kandhan Karunai – Jayalalitha & K.R. Vijaya
    Share
  • நான் மலரோடு தனியாக

    காதல் கீதங்களின் உச்சத்தை எட்டிப்பார்க்க எண்ணுபவர்கள் கண்ணதாசன் பாடல்களை நுகரலாம். இலக்கிய ரசனையைத் திரைப்பாடல்கள் வாயிலாகவும் தரமுடியும் என்று நிருபித்தவர் கவிஞராவார். 1998ல் துபாயில் முதன் முறையாக அயலகப் பணி மேற்கொண்டிருந்தபோது காலையும் மாலையும் வாகனப் பயணங்களின்போது தமிழ்த்திரையிசைப் பாடல்களோடு சங்கமித்து சென்ற நாட்கள் வசந்தகாலங்கள் என்பது மிகையில்லை.. அப்படியொரு நாள் மலையாள மொழிபேசும் ஒரு அதிகாரி என்னிடம் விவாதித்த பாடலிது. அவர் தமிழ் மொழியை முழுமையாக அறிந்தவரில்லை.. எனினும் இந்தப் பாடலின் வரிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்தவை என்றார்.

    என் கருங்கூந்தல் மேகங்கள் கலைந்தோடியாட..

    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..

    அடடா.. பாடல் வரிகளில் உள்ள சுகம்.. இசை நயம்.. குரல் வளம் என்று பாராட்டி மகிழ்ந்தார்.. திரு.ஜார்ஜ் என்னும் அந்த இனிய நண்பர்.

    பிறகு இலக்கிய வட்டத்தில் எனது தோழர்களோடு இதைப்பற்றிக் கூறியபோது.. இன்னும் சில செய்திகள் இப்பாடல் பற்றி கிடைத்தன. அதையும் கேளுங்களேன்..

    பொதுவாக.. இந்திப் படங்களில் வெற்றி பெறும் பாடல் மெட்டுக்களைத் தமிழில் அப்படியே தன் பாணியில் தருவதில் வல்லவர் இசையமைப்பாளர் திரு.வேதா அவர்கள்.. அப்படியொரு பாடல் பிறந்த விதம் பாருங்கள்.. இசையின் வடிவம் இந்திப்பாடலில்.. கேட்டுக் கொண்டார் கண்ணதாசன்!

    பொதுவாக திருமணமானபின்னரே.. கணவன் மனைவியிடம் உரிமையோடு அங்கே பார்க்காதே.. அங்கே செல்லாதே.. என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால்.. இப்பாடலில்.. காதலி.. காலம் கடந்து வந்தமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தானே கேட்கும் காதலனுக்கு காதலி தருகின்ற பதில் என்கிற வகையில் பாடல் பிறக்கிறது.. நிறைகிறது..

    நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    பெண் தரும் பதிலில்..

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

    எத்தனை நயங்கள்? எத்தனை இலக்கிய அழகு? எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத காதல் பாடல் அல்லவா? இசையின் கோர்வையும் கவிதையோடு கைகோர்த்தல்லவா பவனி வருகிறது? இரவின் மடியில் இளமை மழையில் நனைகின்ற போதெல்லாம்.. இதமான தென்றலாய்.. இப்பாடல் ஒலிக்கட்டுமே! கவியரசரின் கற்பனைத் திறனை, இலக்கிய நயத்தை எண்ணியெண்ணி என்றென்றும் மகிழலாமே!!

    பாடல்: நான் மலரோடு தனியாக
    திரைப்படம்: இரு வல்லவர்கள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: வேதா ஆண்டு: 1966
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

    http://www.youtube.com/watch?v=Jd2y-eHo7B8

    http://www.youtube.com/watch?v=Jd2y-eHo7B8

    Share
  • ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    சினிமாப் பாடல்களில் என்ன இருக்கு? அதற்கெதற்கு இத்தனை முக்கியத்துவம்? சினிமாங்கிறதே வெறும் பொழுது போக்கிற்காகத்தான்! அதைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிற முணுமுணுப்புகள் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும்! ஆனா.. நடைமுறையில் சினிமாவும் சரி.. சினிமாப்பாடல்களும் சரி.. மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.. அதுவும் நாம் சுட்டிக்காட்டும் பொற்காலப் பாடல்களில் இடம்பெற்ற பல்வேறு பாடல்கள்.. பகுத்தறிவை ஊட்டுவனவாக, தன்னம்பிக்கை தருவதாக, ஆறுதலை அளிப்பதாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! மேலும் அவை வெறும் பாடல்வரிகளாக மட்டும் பவனிவராமல் இசையோடு இணைந்து வருகின்றபோது பாடல்கள் பதியாத இதயங்கள் ஏது? இதோ ஒரு எடுத்துக்காட்டு!

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

    வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

    கோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

    இப்ப சொல்லுங்க.. திரைப்படப் பாடல்கள்தானேன்னு விட்டுவிட முடியுமா? நல்லது எங்கே இருந்தாலும் அது நமக்குத்தானே!!

    திரைப்படம்: அன்புக் கரங்கள்

    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: ஆர். சுதர்சனம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1965

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக் கூட்டத்தப் பாருங்க
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
    வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
    உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
    உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை – இதைப்
    புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
    கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
    கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
    கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
    நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
    நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் – நாம்
    நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    1965ல் வெளிவந்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றி ஆர். சுதர்சனம் இசையமைத்து டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல். எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டு.. பிறகு சிவாஜிக்கு பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள் போல் தோன்றுகிற பாடல். மனதை தொடுகிற வரி..

    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
    ஒரு பெரிய தத்துவத்தை இதைவிட எளிமையாய் எப்படி சொல்ல முடியும்?

    சில சமயங்களில் வாலி .. கண்ணதாசனைவிட எதார்த்தமாக தெரிகிறார் என்கிறார் திரைப்பாடல் ஆர்வலர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள்.

    வாலி அவர்கள் மறைந்தபோது .. தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை..

    “எனக்கு வசதியான குடும்பம் இருந்தும் சினிமாவிலே ஜெயிக்கணும்னு ‘இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்’ ‘வெய்யில்லே சுத்தினா தலை வலி வரும்.. மழயிலே நனைஞ்சா ஜலதோஷம் வரும்.. இதுதான் கர்மா.. ” – வாலி ..

    “கர்மா என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லமுடியாது தி ஹிந்து நாளிதழில் மாலதி ரெங்கராஜன் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
    http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

    http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

    Share
  • பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

     

     சின்னப் பயலே.. சின்னப் பயலே.. சேதி கேளடா..

    · (பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!)

    aaaதமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு பாட்டாளியின் குரல் – ஒடுக்கப்பட்டவர்களின் ஓசை – உழைப்பவர்களின் வியர்வை – நெசவாளர்களின் குமுறல் – சாலைவண்டி இழுப்பவர்களின் சுமை – சாமான்ய மக்களின் பிரதிநிதித்துவம் – சமத்துவ சமுதாயப் பார்வை – அவலங்களைத் தட்டிக்கேட்கும் உறுதி – மானிட குணங்களின் கசடுகளை களையத் துடிக்கும் கூர்மை! பாமரர்களும் புரிந்துகொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை – ஆயிரமாயிரம் கவிஞர் பெருமக்கள் வந்து எழுதி வைக்க வேண்டியவற்றை தன் 29 வயதில் மரணத்தைத் தொட்ட மக்கள் கவிஞன் ஒட்டுமொத்தமாய் ஓங்கி ஒலித்தான் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையே குறிக்கும்!

    ஏழைகளின் தோழனாய்.. பாட்டாளிகளின் கூட்டாளியாய்.. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாய்.. முத்து முத்தாய் இவன் எழுதி வைத்தப் பாட்டு! தஞ்சை மண்ணிலிருந்து தவழ்ந்து வந்த தமிழ்!! அர்த்தபுஷ்டிகளோடு இவன் படைத்த வரிகள் சமுதாய அவலங்களின்மீது எப்போதும் விழுகின்ற சவுக்கடிகள்!!

    சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளில் வலியோர் கை ஓங்கி நிற்பதும் மெலியோர் கை தாழ்ந்திருப்பதும் இல்லான் எனும் நிலை மாற்றிடவும் மக்கள் புரட்சியால் கைகூடும் என்கிற திடநம்பிக்கையோடு சத்திய வரிகளைத் தந்தவன் இவன் என்பது மறக்க முடியாதது.

    பொற்காலப் பாடல்கள் இவைதான் என்று வருங்காலச் சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் அங்கே நிச்சயமாய் பரிணமிக்கும்! ஏட்டிலே இவன் பாடல்கள் பதிந்திருப்பதைக் காட்டிலும் மக்கள் இதயங்களில் பதிந்திருப்பதே அதிகம்!! நூற்றுக்கணக்கில் விளைந்த இவர்தம் முத்துக்குவியலில் நான் முதல் முத்தாகக் கருதும் பாடலிது.

    அரசிளங்குமரி என்னும் திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில்.. மக்கள் திலகம் பாடுவதாய் அமைந்த பாட்டு! எளிய வரிகள் இனிய இசை இவைகளின் கலவைதான் என்பதுடன் தன் இனிய குரலால் வருடங்களைத் தாண்டி வாழுகின்ற பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் டி.எம்.செளந்திரராஜன்.

    சின்னப்பயலேசின்னப்பயலே சேதி கேளடா நான்
    சொல்லப்போற வார்த்தையை நன்றாய் எண்ணிப்பாரடா – நீ எண்ணிப்பாரடா
    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

    ஆளும்வளரணும் அறிவும்வளரணும் அதுதாண்டாவளர்ச்சி – உன்னை
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்காலம் தரும்பயிற்சி – உன்
    நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மான உணர்ச்சி (சின்னப்பயலே)

    மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா
    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா
    தனியுடைமைக் கொடுமைகள்தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம்பழைய பொய்யடா (சின்னப்பயலே)

    வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
    விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க – உன்தன்
    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே – நீ
    வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே (சின்னப்பயலே)

    இது எழுதிவைத்த பாடல் மட்டுமல்ல! வளரும் மழலைக்கு சொல்லப்படும் கருத்துக்களாய்

    நிறைந்திருந்தாலும் வளர்ந்தவர்களுக்கும் தேவைப்படும் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது.

    பட்டுக்கோட்டையார் பாடல் என்றால் அதில் பட்டுத்தெறிக்கும் முத்துக்கள் கொட்டிக்கிடக்குமோ? என்றைக்கும் மனதை விட்டு அகலாத ஒரு திரைப்பாடலாய் இப்பாடல் உலா வருவதை எவர் இங்கே மறுக்க முடியும்?

    வீரம், விவேகம், தன்மானம், பகுத்தறிவு என்றெல்லாம் மனித உணர்வுகளை மீட்டியெடுக்கும் உன்னதமான பாடல் உண்டென்றால் அது இப்பாடல் அன்றி வேறு எது??

    சுருக்கமாய் சொல்ல விழைகிறேன்.. இது தன்மானமுள்ள தலைமுறைகளுக்காக அன்றைக்கே பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!

    http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

    http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

    Share
  • முத்தான கவிஞர் நா முத்துகுமார்! பத்தாண்டுகளாய் முதலிடம்!!

     

    வற்றாத கவியுள்ளம் வைத்திருக்கும் முத்து இவர்…

    வழிந்தோடும் நேசத்தால் மனம் கவரும் முத்துக்குமார்!!

    பத்தாண்டு காலங்கள் முதலிடத்தில் இருப்பதெல்லாம் 

    முத்தான கவிஞர் இவர் என்பதையே காட்டுகிறது!!

     

    பரபரப்பு துடிதுடிப்பு இவைகளுக்கு மத்தியில் 

    உயிர்த் துடிப்பாய் பாடல் வர என்ன செய்வார்?

    இசைக் குறிப்பு எனும் வரிக்குள் வார்த்தைச்சிலைகளை 

    அசைய வைத்துக் காட்டுகின்ற கவிஞர் இவரன்றோ?

     

    வெற்றிக் கொடிகட்டி புகழைத் தொட்டாலும் 

    சற்றும் மமதையின்றி தன் பணியைத் தொடர்கின்றார் 

    கற்றும் கவித் துறையில் கால்பதித்த   காஞ்சி மைந்தன் 

    எட்டும் புகழ் அனைத்தும் தமிழ்த்தாய்க்கே என்கின்றார்!!

     

     

    ……..

     

    வாழ்க.. இவ்வையகம் உள்ளமட்டும்

    தங்கத் தமிழ்போல் 

     

    என வாழ்த்தும்..

    காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல், சென்னை 600 075

    தற்போது – துபாய்.
    00971 50 2519693
    kaviri2012@gmail.com

    Share