Author: சக்தி சக்திதாசன்

  • புத்தாண்டு வாழ்த்துக்கள்!

     

     

    காலமெனும் தேரேறி வருடமொன்று
    காற்றோடின்று பறந்ததுவே
    கண்டது நாம் பல நன்மை தீமையே
    கரையட்டும் துன்பங்கள் அதனுடனே
    தடைகளைத் தாண்டி நாமும்
    விடைகளைத் தேடி ஓடினோம்
    முடைகளை விலக்கியே ஆண்டின்
    முடிவினில் மிதக்கிறோம்
    இரண்டாயிரத்து பன்னிரண்டு
    இயம்பிய உண்மைகள் பலவுண்டு
    இதயத்தில் அவற்றை நிறுத்தியே
    இரண்டாயிரத்து பதின்மூன்றேகுவோம்
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    பதித்திடும் படிப்பினை பகிர்ந்திடும்
    பளிச்சிடும் உண்மைகள் விழித்திடும்
    பனித்திடும் விழிகளை நிறைத்திடும்
    சுவைத்திடும் காலங்கள் கொண்டது
    சுவைதரும் நிகழ்வுகள் கொண்டது
    சுகந்தரும் நினைவுகள் தந்திடும்
    சுந்தரமான புது வருடம்
    அனைத்து அன்பு உள்ளங்கள்
    அனைத்துக்கும் அன்புநிறை
    ஆயிரம் புதுவருட வாழ்த்துக்கள்
    வாழிய ! வாழிய ! நிறைவுறவே !
    அன்புடன்
    சக்தி சக்திதாசன் குடும்பம்
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் .. (38)

     சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    2012ம் ஆண்டு தனது முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளியிலே ஒரு பரபரப்பு , பலரது புருவங்களை உலகளாவிய ரீதியில் சுருங்க வைக்கும் வகையில் பரப்பப்பட்ட ஒரு செய்தி ஏன் வதந்தி என்று கூடச் சொல்லலாம்.

    என்ன அது ?

    2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் அழிந்து விடப்போகிறதாம் ! கொஞ்சக் காலமாகவே ஒருவகையான மன்க்கிலேசம் உள்ளவர்களின் மத்தியிலும் இணையத்தளங்களிலும், இணையசமூகத் தளங்களிலும் பரபரப்பாக பரவி வந்த ஒருவகை பீதியுடனான ஒரு செய்தி.

    ஓ ! இன்று என்ன தேதி ! டி சம்பர் 24 அல்லவா ? அப்படியானால் உலகம் அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டது போலும் …. சரி இதெல்லாம் என்ன ஒரே பிதற்றல் போல இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்து என்ன பயன் ? உங்கள் அலுப்புடனான ஆதங்கத்தை உணர்கிறேன்.

    தென் அமெரிக்க பகுதியில் வாழும் ஆதி மக்களாகிய “மாயன்” இனத்தவரின் புராதான நாட்காட்டியின் கணிப்புகளின் படி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியுடன் உலகம் அழிந்து போயிருக்க வேண்டும் என்பது ஒருவகை அபிப்பிராயம்.

    ஆனால் தொலைபேசியில் அதே “மாயன்” வம்சத்தைச் சேர்ந்த ஒருவரின் கூற்றுப்படி அந்நாட்காட்டியின் படி ஒருபோதுமே உலகம் முற்றாக அழிந்து போய்விடும் என்று கூறப்படவில்லையா. 34000 வருடங்களுக்கு ஓடிய ஒரு காலச்சக்கரம் முடிவுக்கு வந்து இப்போ ஒரு புது காலச்சக்கரம் உருளத்தொடங்கியுள்ளதாம்.

    ஆத்திகவாதியாகட்டும், நாத்திகவாதியாகட்டும் உலகத்தின் அழிவிலிருந்து அப்பபடிப்பட்ட ஒரு அழிவு ஏற்படுமாயின் தப்பித்துக் கொள்ள முடியாது.

    சரியோ, தவறோ ……. உணமையோ, பொய்யோ எது எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஒன்று மட்டும் கண்ணுக்கு முன்னே தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. அது என்ன என்கிறீர்களா?

    உலகத்தின் மாற்ற‌த்தையே குறிப்பிடுகிறேன்.

    ஆதிகால மனிதன் வெறும் இலைகளையே ஆடையாகக் கட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்று இலட்சக்கணக்கில் செலவழித்து உடையணியும் காலம்( அது கூட அரைகுறையாகத் தான் இருக்கிறது என்கிறீர்களோ ! உஷ் …. நமக்கெதுக்கடா வம்பு ) வரை மனிதனுடைய ஆசைகளும், அந்த ஆசைவழி எழுந்த தேடல்களும் அந்தத் தேடல்களின் வழி வந்த கண்டுபிடிப்புகளும் மனிதனின் வாழ்க்கைமுறையையும் அவன் வாழும் சூழலையும் மாற்றித்தான் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையே .

    தனது கட்டுப்பாட்டுக்கு மீறிய, தனது ஆஅசை எனும் பெயரில் வளரும் பேராசைகளைக்கூட நியாயப்படுத்திக் கொண்டு வாழும் ஒரு காலகட்டத்திலே நாம் இருக்கிறோம்.

    எமது தேவைகளுக்காக நாம் வாழும் இயர்கையைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அந்த இயற்கையின் பொறுமையின் எல்லைகளை சோதித்த வண்ணமே இருக்கிறோம்.

    இப்படியான ஒரு கட்டத்திலே இதோ அடுத்தவாரம் நான் வாழும் இந்தப்புலம்பெயர் நாட்டின் மிக முக்கியமான கொண்டாட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன ?

    அன்பையும், அருளையும் மனிதனுக்குப் போதித்து, தன்னைப் போல பிறரையும் நேசி எனும் தத்துவத்தைத் தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்து காட்டிய தேவகுமாரன் இயேசுநாதரின் பிறந்தநாளை, கிறிஸ்துவ மக்களின் வாழ்வில் ஒரு உன்னதமான நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் நாம் வாழும் இச்சமூகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    வேலையற்றோர் பட்டியல் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது, நாட்டின் பொருளாதாரம் பள்ளத்தாக்கில் விழுந்து அங்கிருந்து எழுவதற்கு ஒரு அடி முன்னாலும் இரு அடி பின்னாலுமாக சறுக்கி, சறுக்கி ஏறிக் கொண்டிருக்கிறது.வங்கிகளில் கடன்வாங்கி தாம் வாழும் இல்லங்களை வாங்கியபலர் அக்கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் திண்டாடி தமது இல்லங்களைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ………………..

    இன்று எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் அங்காடிக்கு (Super Market) சென்றிருந்தேன். அப்பப்பா !

    கூட்டமென்றால் அப்படிப்பட்ட கூட்டம். காரை பார்க் செய்வதற்கு விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வானில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆகாயவிமானத்தைப் போல ஒரு இரண்டு தடவைகள் ரவுண்டு அடித்த பின்னால்தான் பார்க் செய்யவே இடம் கிடைத்தது.

    அப்படி எதைத்தான் வாங்க வந்திருக்கிறார்கள் ?

    “பொருளாதாரச் சிக்கலில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்” இங்கிலாந்து ஊடகங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்தனோடு சம்மந்தப்பட்ட செய்திகள் தான்.

    ஆனால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பொருட்களை அள்ளிக் கொண்டு வெளியே வரும் மக்களைப் பார்த்தால் அல்லல் படுபவர்களைப் போலத்தெரியவில்லையே !

    சரி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விருந்துபசாரங்களுக்கான அவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள் என்று பார்த்தால் , 50″ திரையுடைய தொலைக்காட்சி தொடக்கம், நவீன வகையிலான கணினிகள் என அவர்கள் கஷ்டப்பட்டுத் தூக்கிச் செல்லும் பொருட்களைக் காணும் போது பொருளாதாரச் சிக்கல் போலத் தெரியவில்லையே !

    சரி அதை விடுவோம் ………

    கிறிஸ்துவ‌ பண்டிகை அதற்கான விடுமுறை நாட்கள் இதனை எமது இந்து நண்பர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் ?

    புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அந்நாட்டுக் கலாச்சாரங்களோடு ஒத்துப் போனால்தான் இனிவரும் காலங்களில் அவர்கள் நிம்மதியாக வாழலாம் என்று பல புத்திஜீவிகள் கொடுத்த அறிவுரைகளை இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தான் எமது மக்கள் அழகாகக் கடைபிடிக்கிறார்கள் போலும் !

    மாறி,மாறி கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு பகுதியாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எம்மவர் மத்தியில் ஏராளம்.

    அது மட்டுமா? ஒருவருக்கொருவர் கொடுக்கும் பரிசுப்பொருட்களில் கிறிஸ்துவ நண்பர்களை மிஞ்சி விட்டார்கள் போங்கள் ……….

    அன்பு, அருள் இவைகளின் ஆழத்தை அமைதியாகப் புகட்டியவர் இயேசுநாதர் இன்று நாமோ அடுதவரின் வாழ்வின் இன்னல்களை எள்ளளவும் எண்ணாமல் இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ ?

    கவிஞர் வாலியின் அற்புதமான பாடலின் வரிகள் ஒன்று நினைவிற்கு வருகிறது.

    “எதையும் வாங்கிட மனிதன் வந்தான்
    விலை என்னவென்றாலும் அவன் தந்தான்
    இதயம் என்பதை விலையாய்க் கொடுத்து
    அன்பை வாங்கிட எவருமில்லை “

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (37)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஒரு குழந்தையின் மீது பெற்றோர்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு இணையாக எதையுமே காட்டிவிட முடியாது. ஒரு தந்தையாகட்டும் அன்றித் தாயாகட்டும் குழந்தையின் நலனே அவர்களின் மனதில் மேலோங்கி நிற்கும் என்பதே பெரும்பான்மையாக நாம் காணக்கூடியதாக இருக்கும் உண்மையாகும்.

    பத்துமாதம் தன் வயிற்றிலே சுமந்து பிரசவ வேதனையை இன்பவலியாய்த் தாங்கி ஈன்றெடுத்த தன் இனிய மகவை கண்ணின் மணியாய்க் காத்து வளர்ப்பதே ஒரு தாயின் முக்கிய கடமையாக இருக்கும். அது போல மனையாளின் கருவிலே உருவாகும் குழந்தைக்கு உயிர்கொடுத்த நாள் முதல் அக்குழந்தையை இப்பூமித்தாயின் மடியிலே தவழவிடும் நாள்வரை காத்திருந்து அக்குழந்தையின் நல்வளர்ப்பு ஒன்றே தனது முன்னைய கடமையாகக் கொள்வதே தந்தையின் பண்பாகும்.

    இத்தகைய ஒரு சூழலிலே !

    அக்குழந்தையின் நலத்திற்கு தந்தையின் அதிகாரமா? அன்றித் தாயாரின் அதிகாரமா துணை போகப் போகிறது எனும் ஒரு கேள்வி எழுந்து தாயும், தந்தையும் சட்டத்தின் முன்னால் மோத வேண்டிய ஒரு நிலை ஏற்படுவது உலகத்தில் யாருக்குமே வரக்கூடாத ஒன்று என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதற்கு இடமில்லை.

    ஒரு ஆடவனுக்கு மனைவியையோ அன்றி ஒரு மங்கைக்கு மணாளனையோக் கொடுப்பதில் காலத்திற்கு பங்கு இருப்பினும் அதில் சம்பந்தப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏதாவது ஒரு வித பங்கு இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எப்படிப்பட்ட ஒரு குழந்தை எவருக்குப் பிள்ளையாகப் பிறக்கப் போகிறது என்பதிலோ அன்றி அக்குழந்தை எத்தகைய நலம் வாய்ந்ததாக இருக்கப் போகிறதோ என்பதை நிச்சயிப்பதில் பெற்றவரின் பங்கோ அன்றி அக்குழந்தையின் பங்கோ பூஜ்ஜியம் தான்.

    அப்படி இவ்வார மடலிலே சக்தி என்னதான் கூறப்போகிறான் ? என்று எண்ணத் தலைப்பட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. இதோ விடயத்திற்கு வருகிறேன்.

    7 வயதே நிறைந்த ஒரு சிறுவனை கடத்திச் சென்று மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட தாயும் அந்தச் சிறுவனும் பற்றிய ஒரு மனதைத் தொடும் குறிப்பே இம்மடலாகும்.

    எதற்காக ஒரு தாய் தனது மகனைக் கடத்தி மறைத்து வைக்க வேண்டும் ? கேள்வி எழுவது சகஜமே !

    “சலி(Sally)” எனும் நியூசிலாந்து நாட்டிலே பிறந்த பெண் 1999ம் ஆண்டு  “ஒலிப் பொறியியல் (Sound Engineering)” கற்பதற்காக இங்கிலாந்து வந்தார். அவரின் இங்கிலாந்து வாழ்க்கையில் அடுத்த வருடமே “பென் ரொபேட்ஸ்(Ben Roberts)” என்பவரிடம் மனதைப் பறிகொடுத்தார்.

    மேற்கத்திய வாழ்வில் சகஜமாக நடக்கும் நிகழ்வாக காதலர்கள் ஒன்றாக வாழும் முறைக்கேற்ப ஒன்றாக வாழ்க்கை நடத்திய இவர்களுக்கு ” நியொன்(Neon) ” எனும் ஆண்குழந்தையும் “எலக்ட்ரா (Elektra)” எனும் பெண் குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள் 2005ம் ஆண்டு பிறந்தன.

    அதைத்தொடர்ந்து இவர்கள் 2009ம் ஆண்டு மணமுடித்தவர்கள் அதே மேற்கத்திய வாழ்வின் சகஜ நிகழ்வான மண்முறிவுக்கு 2011ம் ஆண்டு உட்பட்டார்கள்.

    அவர்களின் ஆண் குழந்தையான நியோன் இவ்வருட சமகாலப் பகுதியில் தொடர் தலையிடிக்குள்ளாகியதாலும், கழுத்துப் பகுதி வீங்கியதாலும் பல பரிசோதனைகளுக்குள்ளாக்கப்பட்டு க்ழுத்துப் பகுதியில் ஒரு புற்று நோய்க்கட்டி இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அதை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சைக்குளாக்கப்பட்டு அக்கட்டி முற்றாக அகற்றப்பட்டது.

    ஆனால் அதன் பின்புதான் பிரச்சனையே ஆரம்பமானது.

    அச்சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து மேலும் அப்புற்று நோய் திரும்பாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக “ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை ( Raditherapy)” எனும் சிகிச்சைமுறைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று புற்று நோயில் முன்னனி வகிக்கும் வைத்தியத்துறை டாக்டர்களினால் தீர்மானிக்கப்பட்டது.

    சட்டரீதியான காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத டாக்டர் ஒருவர் இச்சிகிச்சையைப் பற்றி இத்தாய்க்குப் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது “உனது மகனின் மூளை இக்கதிர்வீச்சினால் எரிக்கப்படப் போகிறது (Your son`s brain is going to be fried)  என்று கூறியதைச் செவிமடுத்த அத்தாய் தன் மகனை இத்தகைய ஒரு சிகிச்சைக்குள்ளாக்க முடியாத மனோநிலைக்குத் தள்ளப்பட்டார்.

    பிரிந்துவாழும் கணவனோ வைத்தியர்களின் ஆலோசனைக்குட்பட்டு தன் மகனின் நல்வாழ்க்கைக்கு இச்சிகிச்சை அவசியமானது என்பதை ஏற்றுக் கொண்டு அவர் இச்சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டார்.

    டாக்டர்களின் கருத்துப்படி இச்சிறுவனின் உயிருக்கு 80 வீதமான உத்தரவாதத்தை இந்தச் சிகிச்சையே அளிக்கும் என்று கூறப்படுகிறது.

    தன் மகனை இந்த அதீத சிகிச்சையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரை அழைத்துக் கொண்டு தலைமறைவான இடத்திற்குச் சென்று விட்டார் அந்தத்தாய்.

    சரி இச்சிறுவனுக்கு இச்சிகிச்சையை அளிக்காவிட்டால் அவரின் உயிருக்கு உத்தர்வாதம் இல்லை என்று கூறப்படுகிறதே அதை எப்படி அந்தத்தாய் ஏற்றுக் கொண்டாள் எனும் கேள்வி உங்களுக்கு எழுவது சகஜமே

    தன்னுடைய மகனின் புற்றுநோய்க் கட்டிதான் அகற்றப்பட்டு விட்டதே “கதிர்வீச்சு” சிகிச்சையைத் தவிர்ந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலம் மகனின் உயிரைப் பாதுகாக்கலாம் என்று வேறு சில டாக்டர்கள் தனக்குக் கொடுத்த ஆலோசனையின் படி தான் நடந்து தனது மகனின் உயிரைக் காத்துக் கொள்வேன் என்பதுவே அந்தத்தாயின் வாதமாக இருந்தது.

    ஆனால் தந்தையின் சம்மதத்தோடு இச்சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை அத்தியவசியமானது என்பதன் அடிப்படையில் கோர்ட்டு மூலமாக உத்தரவு வாங்கிக் கொண்டு அந்தச் சிறுவனையும் தாயையும் கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்கும் படி சம்பந்தப்பட்ட வைத்தியசாலை போலிஸின் உதவியை நாடியது.

    விளைவு !

    “ஈஸ்ட் கிறீன்ஸ்டட்” எனும் இடத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்த அந்தத் தாயும் , மகனும் போலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்கள்.

    நீதிமன்றத்தில் அந்தத்தாய் ஆஜாராகும் போது தந்தையுடன் ஹாஸ்பிட்டலில் அந்தச் சிறுவன் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டான். தந்தையிடம் இருந்து அனுப்பப்பட்ட குறுஞ் செய்தி நீதிமன்றத்தில் படிக்கப்பட்டது.

    “எனது மனைவியைப் போல எனக்கும் எனது மகனுக்கு அளிக்கப்படவிருக்கும் கதிர்வீச்சைப் பற்றிய ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய சிகிச்சை இல்லாமலே எனது மகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சான்றுகளை எனது மனையாய் எனக்கு காட்டி நிரூபிக்க முடியுமானால் நான் அவளது வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். இல்லையானல் வைத்தியர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழி இல்லை ” என்பதுவே அது.

    இவ்வழக்கை இருவாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதி தனது உரையில்,

    “எந்தப் பெற்றோராலும் எண்ணிப்பார்க்க குடியாத, எந்தப் பெற்றோரும் எதிர்கொள்ளக்கூடாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதை நானறிவேன் . இந்தத் தாயோ அன்றித் தந்தையோ தமது மகனின் வாழ்வை முன்னிருத்தியே தமது தீர்மாங்களை எடுத்திருக்கிறார்கள் என்பதில் எதுவித ஜயமுமில்லை. தாய்க்கும், தந்தைக்கும் குறிப்பாக இருவருக்கும் இடையில் தத்தளிக்கும் அந்த 7 வயதுச் சிறுவனுக்கும் மனதில் எழும் உணர்வலைகளை எப்படி விபரிப்பது என்றே தெரியவில்லை. இந்த்க் குடும்பத்தின் மீது திணிக்கப்பட்ட இக்கட்டாய அழுத்தத்தை நன்கு உணர்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

    தந்தை, தாய், மகன் இந்த உறவில் அல்லாடும் உள்ளங்களில் அலையாடும் கருத்துக்களில் பாகுபாடு இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பிலும், அக்கறையிலும் பாகுபாடு இருக்க முடியுமா?

    அச்சிறுவனின் நல்வாழ்வை மனதில் கொண்டு தம் எண்ணங்களில் தாம் கொண்டுள்ள நம்பிக்கையை இறுகப் பற்றியிருக்கும் இந்தப் பெற்றோர்கள் இருவரில் யாரையாவது குற்றம் கூறிவிட முடியுமா?

    பாசத்தின் வலுவைச் சட்டத்தினால் நிர்ணயித்து விட முடியுமா?

    சிலவேளைகள் , சில நேரங்கள் தோள்களின் சுமையை விட உள்ளத்தின் சுமைகள் கனக்கும் என்பதன் அர்த்தம் கொஞ்சம் புரியத்தான் செய்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (படம் – நன்றி “டெய்லி டெலிகிராப்”)

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (36)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    மீண்டுமொருமுறை ஊடகத்துறையின் நடவடிக்கை இங்கிலாந்தில் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. எது மக்களுக்கு தேவையான செய்தி, எது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான விடயங்கள் என்பன இப்போது பலவிதமான சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

    கடந்தவாரம்  லார்ட் லெவிசன் (Lord Leveson) என்பவரால் பிரித்தானிய பிரதம மந்திரி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்துறை மீதான விசாரணைக் கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இவ்வறிக்கையில் ஊடகத்துறை குறிப்பாக பத்திரிக்கைத்துறை எழுத்து, கருத்துச் சுதந்திரங்களின் பெயரால் அவர்களது தார்மீகக் கடமைகளின் எல்லையைக் கடந்து விட்டது எனவும், பத்திரிக்கைத் துறையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பத்திரிக்கைத் துறையையோ அன்றி அரசியலையோ சாராத சுதந்திரமான நபர்களைக் கொண்ட  பத்திரிக்கைக் கட்டுப்பாட்டுக்குழு ஒன்றை பத்திரிகையாளர்களே நியமித்து அவர்களது பத்திரிக்கை தர்மத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், அக்குழுவின் நியமனத்தை அரசியல் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இப்பரிந்துரையை எதுவித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க் கட்ச்சியான லேபர் கட்சியும், கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விபரல் டெமகிரட்ஸ் கட்சியும், அதே கூட்டரசாங்கத்தின் பெரும்பான்மையான கன்சர்வேடிவ் கட்சியில் பல முன்னனி உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இங்கிலாந்தின் பத்திரிக்கைத் துறையினரோ இப்பரிந்துரையின்படி ஒரு தனியான கட்டுப்பாட்டுக் குழுவினரை நியமித்து அதை நடைமுறைப்படுத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபணையும் இல்லை ஆனால் அதற்காக எதுவித அரசியல் சட்டங்களும் இயற்றப்படுவதை தமது சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகத் தாம் கருதுவதாகக் கூறி எதிர்க்கிறார்கள்.

    இவ்வறிக்கைக்கு ஆணையிட்ட இங்கிலாந்துப் பிரதமரோ இருதலைக் கொள்ளிபோல அல்லாடுகிறார். ஒருபுறம் பத்திரிக்கைத் துறையினரின் அத்து மீறிய நடவடிக்கைக்களினால் பாதிக்கப்பட்ட மக்களும் பெரும்பான்மையான பொது அபிப்பிராயமும் இவ்வறிக்கையின் முழு பிரயோகத்திற்கு சார்பானதாக இருந்தாலும், பத்திரிக்கையினரின் கோபத்திற்கு தானும் தனது கட்சியும் ஆளாகிவிடக்கூடாது என்பதாலோ என்னவோ பத்திரிக்கைத் துறையினரின் சார்பாக கூறப்படும் வாதத்தையே ஆதரிப்பது  போலத்தென்படுகிறது.

    இது இவ்வாறிருக்க சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு நிகழ்வின் தாக்கம் ஊடகத்துறையின் மீது மேலும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.

    அது என்ன அப்படிப்பட்ட நிகழ்வு என்பதுதானே உங்கள் கேள்வி ?

    சென்றவாரம், ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதீத நிலையான “தொடர் வாந்தி”யினால் பாதிக்கப்பட்ட இபங்கிலாந்து இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட்டி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

    அவுஸ்திரேலிய வானொலியைச் சேர்ந்த இருவர் இளவரசி தங்கியிருந்த வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு தாம் இங்கிலாந்து மகாராணியரும், இளவர்சர் சார்லஸ் போலும் பேசி இளவரசி கேட்டின் அப்போதைய நிலையைப் பற்றி அறிந்து அதை அவுஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பிவிட்டார்கள்.

    வந்ததுடா பிரச்சனை !

    அந்தத் தொலைபேசி அழைப்பை ஏற்று அதைக் குறிப்பிட்ட இளவரசி தங்கியிருந்த  தாதியிடம் இணைப்பு கொடுத்த தாதிக்கு நேர்ந்த பரிதாபத்தையே குறிப்பிடுகிறேன்.

    ஜசிந்த சல்டான்ஹா என்பவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தவர் கணவருடன் மஸ்கட்டில் மருத்துவத் தாதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர் குடும்பத்துடன் 9 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்தார்.

    இவருக்கு இப்போது பதின்ம வயதுகளில் இரண்டு புத்திரர்கள் உண்டு. கணவர் இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.

    இங்கிலாந்தில் பிரிஸ்டல் எனும் நகரில் வசிக்கிறார்கள். ஜசிந்தா லண்டனில் “கிங் 7வது எட்வார்டு” வைத்தியசாலையில் மருத்துவ தாதியாகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார்.

    அப்போதுதான் அவரது உயிர்போகும் சம்பவம் நடந்தது. ஆமாம் நான் ஏற்கனவே மேலே குறிப்பிடிருந்தது போல இளவரசி கேட்டி அவர்கள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவுஸ்திரேலிய வானொலிகளில் ஒன்றான “2 டேஎப்.எம்” எனும் வானொலியின் அறிவிப்பாளர்களான “மைக்கல் கிறிஸ்டியன்” எனும் ஆண் அறிவிப்பாளரும், “மெல் கிரெக்” எனும் பெண் அறிவிப்பாளரும் இணைந்து தம்மை இங்கிலாந்து மகாராணியார் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் பாவனை பண்ணி தொலைபேசி மூலம் இளவரசி கேட்டின் அப்போதைய உடல்நிலை  குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக அவ்வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி அழைப்பை ஏற்றவர் இந்த ஜசிந்தா எனும் மருத்துவ தாதி.

    இவ்வறிவிப்பாளர்களின் ஏமாற்றத்தை உண்மையென நம்பி அவர் இந்த இணைப்பை இளவரசி தங்கியிருந்த அறையில் இருக்கும் தாதிக்கு மாற்றியிருக்கிறார் இதை அப்படியே அவுஸ்திரேலிய வானொலியில் மறு ஒலிபரப்புச் செய்திருக்கிறார்கள்.

    விளைவு ……..

    தனது பணியை உயிரினும் மேலாக மதிக்கும் அந்த உன்னத மருத்துவதாதி தான் இங்கிலாந்து அரசகுடும்பத்தின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவித்து விட்டதாக வருந்தி தனது உயிரைப் பறித்துக் கொள்ளும் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அவரது கணவரும் , குழந்தைகளும் அதிர்ச்சியால் நிலைகுலைந்துள்ளார்கள். அவரது நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அந்த வைத்தியசாலை நிர்வாகிகள் இவரைப் போல ஒரு உன்னதமான தாதி தமக்கு இனி கிடைப்பார்களா என்று கவலைப்படுகிறார்கள். இவர் வழிபடும் தேவாலய மதகுருவோ அதீத தெய்வநம்பிக்கை கொண்டவரான இக்கத்தோலிக்கப் பெண்மணியின் துர்பாக்கிய மரண சமபவத்தை எண்ணி கலங்கியுள்ளார்.

    இந்நிகழ்விற்குக் காரணமான இரண்டு அறிவிப்பாளர்களும் கண்ணீருடன் தொலைக்காட்சியில் இப்படியான ஒரு முடிவிற்குத் தாம் காரணமாக அமைந்து விட்டோம் என்பதைத் தம்மால் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

    இவ்வானொலி நிலையத்தின் உரிமையாளர்கள் தம்முடைய நடவடிக்கையின் பிரதிபலனாக உயிரிழந்த இப்பெண்ணின் நினைவாஞ்சலியாக சுமார் $500000 அவுஸ்திரேலிய டாலர்களை இக்குடும்பத்தினரின் நல்வாழ்விற்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள்.

    சமூகவலைத்தளங்களில் இவ்வானொலி நிலையத்தினர் மீதும் அவறிவிப்பாளர்கள் மீதும் பலவிதமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் மிகப்பெரிய முக்கியமான ஒரு கேள்விக்கு விடைகாண வேண்டிய நிலைக்கு உலகளாவிய ரீதியில் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    எதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தமது நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்கள் புகுத்துகிறார்கள் ? அதை எவ்வாறு அவ்வானொலி நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள் ?

    பொதுவாக கண்முன்னே தெரியும் விடை தமது வானொலியைப் பிரபல்ய வானொலி ஆக்குவதன் மூலமே அவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களைக் கூட்டி அதிக பொருளீட்டலாம். பிரபல்யமாவதற்காக தமது நிகழ்வுகளைச் செவிமடுக்கும் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இத்தகைய நிகழ்ச்சி நடவடிக்கைகளை ஆதரித்து முடுக்கி விடுகிறார்கள் .

    கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்துப் பார்த்தால் இவையனைத்தும் நேயர்களாகிய எம்மிடையே தமது வானொலியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைதானே !

    அப்படியானல் எமது ரசனை ஏன் இத்தகைய நிகழ்வுகளை நோக்கி ஓடிப்போகிறது ?

    இன்றைய வானொலி ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும், பத்திரிக்கைச் செய்திகளாகட்டும் அனைத்தும் investigative journalism அதாவது துப்பறியும் நிருபர்களால் வெளிப்படுத்தப்படும் வாழ்க்கை ரகசியங்கள் என்னும் கணிப்பிலேயே தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.

    இதற்குக் காரணம் என்ன ? காலமாற்றமா? மாரும் காலத்தின் கோலத்தினால் சமுதாய அங்கத்தினர்களாகிய எமது ரசிப்புத் தன்மையில் விழுந்த கீறல்களா?

    இன்றைய சமுதாயத்தில் 24 மணிநேர ஊடகத்தன்மை இரண்டற‌க் கலந்து விட்டது. ஒரு தொலைக்காட்சி சானலையோ அன்றி ஒரு வானொலி அலைவரிசையையோ 24 மணிநேரம் நடத்துவற்கு அவர்களுக்கு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன அதைத் தொடராக வழங்குவதற்கு அவர்கள் தம்மைப் புதுவிதமான நடவடிக்கைகளுக்குள் புகுத்தி விடுகிறார்கள்.

    ஒரு சமூகத்தை நல்லவழியில் மாற்றியமைப்பதற்கு, ஊழல்கள் களையப்பட்டு நேர்மையான வழியிலான அரசியல், சமூகக் கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதற்கு இத்தகைய ஆராய்ச்சி ஊடகச் செய்திகள் அவசியமென்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக உண்மையான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டிய சுதந்திரத்தை உடையதாக அமைய வேண்டும் என்பதும் உண்மையே.

    ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே ! அந்த எல்லை என்ன என்பதை யார் தீர்மானிப்பது ?

    ஊடகங்களின் சுதந்திரம் எனும் போர்வையில் தனிமனிதர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிக்கை ஊடகங்கள் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

    பத்திரிக்கையின் எழுத்துக் கருத்துச் சுதந்திரங்களுக்கும், தனிமனிதர்களின் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாடே அவற்றிற்கிடையிலான மோதலுக்குக் காரணமாகின்றதா?

    ஆழமான கேள்விகள் . ஆனால் இவையொன்றும் மறைந்த ஜசிந்தாவை எமக்கு மீட்டுத்தரப் போவதில்லை

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • திருமண வாழ்த்து!

     

    சக்தி சக்திதாசன்

     

     

    அன்புடைத் தம்பி

    அண்ணாகண்ணன்

    அழகுத் திருமகள்

    அன்பு ஹேமமாலினி

     

    இதயங்கள் தனை

    இணைத்தின்று நீவீர்

    இணைந்தீர் அழகாய்

    இல்லற வாழ்வினில்

     

    அன்பும் பண்பும் செல்வமும்

    அடைந்தே வாழ்வில்

    ஆனந்தம் கண்டிட்டு

    அடையட்டும் பெருவாழ்வே

     

    சிறந்த தம்பதியர் வாழ்வில்

    பெறுவது புரிந்துணர்வு ஒன்றே

    இருப்பதைப் பகிர்ந்து இதயத்தில்

    இனிமையைப் புகுத்திடுவீர்

     

    நேற்று வாழ்வின் அனுபவங்கள்

    இன்று வாழ்க்கையின் பொக்கிஷங்கள்

    நாளையை உங்கள் வசமாக்கிடும்

    நம்பிக்கை கொண்டே நடந்திடுவீர்

     

    செந்தமிழ்த் தேன் போல் சுவையும்

    சிந்திடும் மலர்களின் சுகந்தம் போல்

    செழித்திடும் வாழையின் சந்ததிபோல்

    சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்திடுவோம்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (35)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    கலாச்சாரமும், மதமும் எவ்வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது? ஒரு ஆழமான கேள்வி மனதில் எழுகிறது.

    குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரம் மிகவும் வலுவானது.

    என்னடா இவன் ?

    நாகரீகத்தின் உச்சியில் ஓடிக்கொண்டிருக்கின்ற இங்கிலாந்து தேசம் கலாச்சாரத்தில் வலுவானது என்கிறானே ! சக்தி லூசுப் பயல் போல பேசுகிறானே ! என்று எண்ணுகிறீர்களா?

    உண்மைதான் நாகரீகம் எனும் பெயரில் கலாச்சார மாற்றங்களுக்கு முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் தான் கலாச்சார வலிமையும் இருக்கிறதென்பது எனது அபிப்பிராயம்.

    குறிப்பாக அவர்கள் தங்கள் நாட்டு அரச பரம்பரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் பண்பு, பழைய ஏடுகள். கவிஞர்களைப் போற்றும் வகை என்பன இந்நாட்டின் அப்பண்புக்கு உகந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

    இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் இன்று தனது இலையுதிர்கால பட்ஜெட் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அவரது முந்தைய கணிப்புகளின் படி இங்கிலாந்து நிதி நிலைமைகள் 2015ம் ஆண்டுக்குள் சரிசெய்யப்படுவது முடியாத காரியம் என்பது போன்ற சமிக்ஞைகள் தென்படுகின்றன.

    சே ! மீண்டும் ஒரே இடர் மிகுந்த செய்திகளா என்று மக்கள் அங்கலாய்க்கும் வேளையிலே எங்கிருந்தோ அவர்கள் காதில் ஒரு நற்செய்தி விழுகிறது.

    அடேங்கப்பா ! அது என்ன அப்படிப்பட்ட நற்செய்தி ? உங்கள் ஆர்வம் புரிகிறது.

    இங்கிலாந்தின் இளவரசர் “பிரின்ஸ் சார்ல்ஸ் “

    என்னடா இவன் 60பதுகளில் அல்லாடுபவரை இளவரசர் என்கிறானே என்று கோபப்படாதீர்கள்.. . . . என்ன செய்வது அதுதான் அவரது அந்தஸ்து அழைத்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது !

    அவர் மன்னர் ஆவாரோ? மாட்டாரோ ? ஆண்டவனுக்குத்தான் . . . . இல்லையில்லை மகாராணியாருக்குத்துத்தான் வெளிச்சம் !

    ஆமாம் இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மூத்த மைந்தன் இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது மனைவி கேட்டி அவர்களுக்கும் ஒரு வாரிசு வரப்போகிறது எனும் மகிழ்வான செய்திதான் அது.

    மோசமான பொருளாதாரச் சுழலுக்குள் சிக்கி அழுந்திக்கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் “ஒலிம்பிக்” எனும் கட்டையைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் கழுத்தளவு தண்ணீரில் தததளித்துக் கொண்டிருந்தார்கள்.

    அவ்வொலிம்பிக் கட்டையும் காலவெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதும் மீண்டும் மூழ்கத் தொடங்கும்போது இதோ அவர்களை நோக்கி மற்றுமொரு கட்டை வீசப்பட்டிருக்கிறது இனி ஒரு வருடம் அக்கட்டையைப் பிடித்துக் கொண்டு தத்தளிக்க வேண்டியதுதான்.

    இரண்டே இரண்டு மாதக் கர்ப்பிணியான இளவரசி கேட்டி அவர்கள் கருவுற்ற செய்தியை இவ்வளவு சீக்கிரம் வெளியிட்ட காரணம் யாது என்று பார்க்கையில் கர்ப்பம் அடைந்த பெண்கள் மிகவும் அரிதாக அல்லலுறும் “தொடர் வாந்தி” நிலையினால் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்தச் செய்தியை அவசரமாக ஊடகங்களுக்கு அறிக்கை வடிவில் வெளியிட வேண்டி நேர்ந்தது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள் (யார் அவர்கள் ? அயல் வீட்டுக்காரரோ ! )

    இளவரசியாரின் இக்கர்ப்பந்தரிப்புச் செய்தியறிந்தவுடன் உலக ஊடகங்களின் இந்தியப் பிரதிநிதிகள் தமது உபகரணங்கள் சகிதம் இவ்வைத்திய்ச்சாலையின் முன்னால் படையெடுத்து விட்டார்கள் போங்கள் . . .

    என்ன ஒரு சாதாரண கர்ப்பந்தரிப்புச் செய்திக்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம் ? புரிகிறது உங்கள் யதார்த்தமான கேள்வி . . .

    கர்ப்பந்தரித்தவர் என்ன சாதாரணமானவரா ? அன்றிப் பிறக்கப் போகும் குழந்தைதான் சாதாரணமான குழந்தையா?

    கர்ப்பந்தரித்தவர் இங்கிலாந்தின் முடுசூட்டும் வரிசையில் இரண்டாவது தகமையுள்ள இளவரசரின் மனைவி, பிறக்கப் போகும் குழந்தையோ அதே வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெறப் போகிறது .

    அதுவுமின்றி பொதுநல்வாய நாடுகளின் தலைமைத்துவ நாடான இங்கிலாந்து தேசத்தின் எதிர்கால ராஜ சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு நிகழ்வல்லவா? இது.

    சரி இங்கிலாந்து அரசியல் சட்டத்தின் படி ஒரு ராஜாவுக்கோ ராணிக்கோ பிறக்கும் வாரிசுகளில் மூத்த ஆண் வாரிசுக்கே முடிசூட்டும் அந்தஸ்தும் தகமையும் கிடைப்பது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    அதுசரி அப்படியாயின் பிரின்ஸ் வில்லியம் அவர்களின் வாரிசு பெண்குழந்தையாக இருந்து விட்டால் . . . . ஓ அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா ?

    அங்கேதான் இங்கிலாந்து நாட்டின் ஆண்,பெண் சம உரிமைக் கொள்கை ஓங்காரமிடுகிறது. அது என்ன அப்படிப்பட்ட ஓங்காரம் . . . எங்களுக்குக் கேட்கவில்லையே ! அவசரப்படாதீர்கள் அன்பு உள்ளங்களே !

    அவசரம், அவசரமாக இங்கிலாந்து நாட்டின் அரசியல் சட்டத்தில் உள்ள இச்சமத்துவமற்ற சட்டம் மாற்றியமைக்கப்படவிருக்கிறது.

    ஆமாம் இதற்கான அதிகாரத்தினை இங்கிலாந்து மகாராணியர் தலைவியாக இருக்கும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 16 நாடுகளின் தலைவர்களும் ஏகமனதாக அளித்து விட்டார்கள்.

    மேலும் ஒரு சிறிய கருத்துப் பரிமாறலின் பின்னால் இதற்கான முழு அதிகாரமும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அளிக்கப்படும்

    இம்மாற்றம் ஏறத்தாழ 300 ஆண்டுகளின் முன்னால் அமைக்கப்பட்ட இங்கிலாந்து சட்டத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கு அளிக்கிறது. இம்மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக 1689ம் ஆண்டு நிறுவப்பட்ட “உரிமைகளுக்கான சட்டம்”, 1701ம் ஆண்டு நிறுவப்பட்ட வதிவுரிமைச் சட்டம், 1772ம் ஆண்டு நிறுவப்பட்ட அரச குடும்பத் திருமணச் சட்டம் என்பனவற்றிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன.

    எமது நாட்டின் பிரதமரின் கூற்றுப்படி இளவரசர் வில்லியத்திற்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையானால் எதிர்காலத்தில் எமது நாட்டின் ராணியாக ஆகும் உரிமை அவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படுகிறது.

    அதுசரி என்ன பிதற்றுகிறாய் ? இங்கிலாந்து நாட்டிற்கு ராணியாக இருப்பது இப்போதும் பெண்தானே ? உங்கள் கேள்வி புரிகிறது.

    இப்போதய ராணியாரின் தந்தை கிங் ஜந்தாவது ஜார்ஜ் அவர்களின் குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள் ஆனதினால் தான் அவர்களுள் மூத்தவரான எலிசபெத் அவர்கள் ராணியாகும் தகுதி பெற்றார்.

    அது என்ன ஆண்குழந்தைதான் நாட்டிற்கு ராஜாவாக முடியுமா? ராணியான விக்டோரியா மகாராணி, தற்போதைய எலிசபெத் மகாராணி அவர்கள் இருவரும் சிறந்த வகையில் தமது பதவியை நிர்வகிக்கவில்லையா?

    ஏன் இந்த வேறுபாடு ?

    நியாயமான கேள்விதான் இவ்வேறுபாட்டின் நியாயமற்ற தன்மையை மனதில் கொண்டுதான் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இப்போது மாற்றியமைக்கப்படுகிறது.

    ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்னும் உண்மையை பல முன்னேற்றமான மாற்றங்களை உள்வாங்கிச் செயல்படுத்திவரும் இங்கிலாந்து சட்டமூலம் அங்கீகரிக்கிறது எனும் செய்தி மனதுக்கு இதமாக இருக்கிறது.

    தமக்குப் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உலகில் பல சமுதாயங்களின் மத்தியில் நிலவி வருகிறது. இக்காரணத்தினாலேயே பிறக்கும் பெண்குழந்தைகளை வெறுக்கும் நிலை கூட சிலசமயங்களில் நிகழ்கிறது.

    இப்படிப்பட்ட அர்த்தமற்ற அநாகரீக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனது பல முன்னேற்றமான முயற்சிகளுக்கு இத்தகைய முன்னோடிகளான நிகழ்வுகள் உந்து சக்தியாக விளங்கும் என்பதில் எதுவித ஜயமுமில்லை.

    உங்களை நோக்கி நான் இம்மடலின் ஆரம்பத்திலே ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருந்தேன். அதாவது மதத்திற்கும், கலாச்சாரத்திற்கும் உள்ள பிணைப்பு என்ன? என்ப்துவே அது.

    அந்தக்கேள்வியின் காரணத்தை இப்போது விளக்குகிறேன். நான் போனவாரம் எழுதிய மடலில் இங்கிலாந்து நாட்டினில் பெண்களை “பிஷப்” பதவிக்கு நியமிப்பதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதியிருந்தேன்.

    ஆனால் அதே சமுதாயம் இன்று முடிசூட்டிக் கொள்ளும் தகமைக்கு பெண்களும் சம உரிமை பெறவேண்டும் என்பதை சட்டமூலமாக்க முயல்கிறது என்று வரைந்திருக்கிறேன்.

    மதம் ஒரு மனிதனுக்கு அணிகலனே அன்றி ஆடையல்ல அது அணியப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதேசமயம் சட்டமூலம் இயற்றப்பட்ட கலாச்சாரச் சம்பிரதாயம் ஆணுக்குப் பெண் சமமற்ற தன்மையைக் கொண்டிருக்குமானால் அதை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது அனைத்து மக்களாலும் பின்பற்றப்படும் காரணத்தினால் .

    மனதைப் பண்படுத்திக் கொள்ள மதத்தைப் புரிந்து கொள்வோம் . . . எமது அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள கலாச்சாரத்தை வலுப்படுத்திக் கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஆணும், பெண்ணும் உலகில் சமநிலை கொண்டவர்கள் எனும் கருத்தை நிலைநாட்டுவதற்காக சிவன் அர்த்தநாரீசுவரராக தன்னைக் காட்டியதாகப் புராணங்களில் அறிகிறோம்.

    வாழ்வும் சமயமும் பிணைந்து இருப்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதா? இல்லையா என்னும் விவாதம் பல்வேறு நாட்டவர்களிடமும், பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதே சமயம் விடை தெரியா வினாக்கள் , விளக்கமில்லா நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

    உள்ளத்தூய்மை, உள்ள ஒழுக்கம் என்பனவற்றின் முக்கியம் உலக சமுதாயத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதது என்பது பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நாகரீக வளர்ச்சி எனும் பெயரால் கலாச்சார விழுமியங்கள் தமது இருப்பினை இழந்து கொண்டிருக்கின்றன.

    கலாச்சார பாரம்பரியம், சமுதாயக் கோட்பாட்டினைக் கட்டிக் காக்கும் வரம்பு என்பனவற்றின் எல்லை என்ன என்று நிர்ணயிக்க முடியாமல் நவீன கால மாற்றங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

    மதங்களைத் ஸ்தாபித்தவர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களால் மதம் போதிக்கப்படும் போது அங்கே மதங்களின் பெயரால் அநியாயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுக்கின்றன.

    மதத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள் சமுதாயத்தில் முன்னணி நிலைகளை எடுப்பதைக் காட்டிலும் மதங்களைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கொண்டவர்கள் சமுதாயத்தின் முன்னோடிகளாக இளைய சமுதாயத்தை வழி நடத்துவது ஒன்றே இன்றைய அவசர உலகில் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதுவே யதார்த்தமாகும்.

    என்ன இது ?  எதற்காக இந்த தத்துவ விளக்கம் இப்போது எனும் கேள்வி உங்கள் மனங்களிலே விளைவது தவிர்க்க முடியாதது.

    சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்திலே “சர்ச் ஆப் இங்கிலாந்து ( Church of England) எனும் அமைப்பிலே எழுந்த சர்ச்சைகளும், விவாதங்களும் அதைத் தொடர்ந்த வாக்கெடுப்பின் முடிவுகள் கொடுத்த சமுதாய அதிர்வுகளைப் பற்றிய அலசலுக்காகவே மேற்கூறிய கருத்துக்கள்.

    கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து சர்ச்க்குள் நடந்த விவாதங்களும் அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகளும் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலைக்குத் தள்ள‌ப்பட்டு விட்டது.

    என்ன விஷயம் இது ? என்று அங்கலாய்ப்பது போலத் தெரிகிறது.

    ஆண்டவனின் தேவாலயத்தில் ஆணும் பெண்ணும் சமனாகக் கருதப்படுகிறார்களா ? என்று தேவாலய நிர்வாகத்தினரின் முன்னால் வைக்கப்பட்ட கேள்வியின் மீதான விவாதங்களே அவை.

    சாதாரண் மதகுரு எனும் ஸ்தானத்திற்கு பெண்களும் வரலாம் எனும் நிலையிலிருந்து பெண் “பிஷப்(Bishop)”  எனும் பதவிக்கு பெண்கள் தகுதியானவர்களா ? அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? எனும் விவாதம் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

    அவ்விவாதங்கள் முதிர்வடைந்த நிலையிலும், பெண்கள் பிஷப்பாக வரவேண்டும் அதுவே சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையுடன் கணிக்கப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் செயல் எனும் அரசியல்வாதிகளும், பெண்ணுரிமையை முன்னெடுப்பவர்களும் ஆதரித்துக் கோஷமெழுப்பியதாலும் தேவாலய திருச்சபையின் நிர்வாகக் குழுக்களின் முன்னால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆறு வாக்குகளினால் இப்பேரரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து பல அரசியல், சமூக விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

    சரி இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போமா?

    இந்த சர்ச் ஆப் இங்கிலாந்து எனும் இங்கிலாந்து மக்களுக்கான தனியான தேவாலய மத அமைப்பு இங்கிலாந்தின் மன்னனான  8வது ஹென்றி என்பவரால் 1534ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தனக்கு ஆண் வாரிசைக் கொடுக்காத காரணத்தால் தனது மனைவியான “கத்தரின் ஆப் அராகன் (Catherine of Aragon)” அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு தனது காதலியான “ஆன் பேலின்(Anne Boleyn.) என்பவரை மணமுடிக்க எண்ணியபோது அதற்கு அப்போதைய கத்தோலிக்கப் பெரியவரான போப் அனுமதி கொடுக்காத காரணத்தினால் இங்கிலாந்து நாட்டிற்கான தனியான தேவாலய அமைப்பை இம்மன்னன் உருவாக்கினார்.

    இத்தகைய பின்னணியைக் கொண்ட இவ்வமைப்பு தேவாலயத்தில் பெண்கள் கர்த்தரை நோக்கிய வழிபாட்டில் ஒரு பகுதியை வாசிக்கும் தகுதியை 1861ம் ஆண்டு பெற்றார்கள். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது சில பெண்கள் “பிஷப்பின் தூதர்களாக”  நியமிக்கப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து பெண்களுக்கான நியமனம் எதுவும் 1969ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. பெண்கள் சமய சம்பந்தமான சேவைகளுக்காக தெரிவு செய்யப்படலாம் எனும் சட்டம் 1986ல் இயற்ற‌ப்பட்டது. இதன் பிரகாரம் முதன் முறையாக 1987ம் ஆண்டு பெண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

    இங்கிலாந்தின் சர்ச் அமைப்பை நிர்வகிக்கும் சர்ச் அசெம்பிளி எனும்  1850களில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பை “ஜெனரல் சினோட்(General Synod) எனும் அமைப்பு 1970ம் ஆண்டு இடம் பெயர்த்தது. இவ்வமைப்பு பெண்கள் தேவாலய நிர்வாகங்களிலும் மற்றைய மதகுருமாருக்கு உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்குமான அதிகாரத்தை 1994ம் ஆண்டே வழங்கியது.

    2005ம் ஆண்டு யூலை மாதம் சர்ச் ஆப் இங்கிலாந்து பெண்கள் “பிஷப்” எனும் பதவியை வகிப்பதற்கான அதிகாரத்தை வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது. 2006ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் அதே அமைப்பு பெண் பிஷப் கீழ் வழிபட விரும்பாத பக்தர்களுக்காக மாறுபட்ட வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

    2008ம் ஆண்டு யூலை மாதம் 8ம் திகதி அதே அமைப்பு பெண்களை “பிஷப்” பதவிக்கு அமர்த்தலாம் என்றும், அதை விரும்பாதவர்களுக்கு மாறுபட்ட வழிகளைக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் பெரும்பான்மையாக வாக்களித்தது.

    ஆனால் அதைத் தொடர்ந்து பல இழுபறிகள் இது சம்பந்தமான அதிகார நிறைவேற்றலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாழ 6 வாக்குகளினால் பெண்களுக்கு “பிஷப்” அதிகாரம் வழங்கும் பிரேரணை தோல்வியுற்றது.

    இது பல முன்ன்ணி அமைப்புகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது எனும் நிலை இருக்கையில் எப்படி கிறீஸ்தவ தேவாலயம் இங்கிலாந்து நாட்டில் இத்தகைய வேறுபடுத்தலைக் கடைப்பிடிக்கலாம் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து எழுந்துள்ளது.

    அனைத்து மக்களும் வேறுபாடின்றி நடத்தப்ப்பட வேண்டும் எனும் நிலையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய நாட்டில் இத்தகைய ஒரு நிலை இருப்பது உலக அரங்கில் எமது நாட்டைப் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்து விடாதா என அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி விமர்சிக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் இங்கிலாந்து கிறீஸ்துவ அங்கத்துவம் பேணப்படும் நிலையில் ஏன் அரசாங்கம் கிறீஸ்தவ நிர்வாகத்தினரிடம் இவ்வேற்றுமை களையப்படக்கூடாது எனும் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாது எனும் கோஷமும் எழுந்துள்ளது.

    அதே சமயம் மத சம்பந்தமான விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது, தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இங்கிலாந்து நாட்டில் பெண் “பிஷப்” ஜ ஏற்றுக் கொள்ளாத கருத்து கொண்டவர்களின் உரிமையை எபவ்வாறு உதாசீனம் செய்யலாம் என்று மற்றொரு பக்கத்தில் வாதம் எழுகிறது.

    இறைவனின் கண்களில் ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். தேவாலயத்தில் இறை சம்பந்தமான வகையில் சேவைபுரிய விரும்பும் பெண்களைத் தடை செய்வது என்பது நியாயமற்ற செய்கையாகவே தெரிகிறது.

    அதே சமயம் கால மாற்ற‌த்துக்கு உட்படுத்தப்படமுடியாத பல நடைமுறைகள் மத சம்பந்தமான விடயங்களில் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது.

    இவ்விரண்டையும் அனுசரித்துக் கொண்டு போகக்கூடிய ஒரு சமநிலையான வழிமுறையை ஏற்படுத்த மதத் தலைவர்கள் முனைவதற்கு அரசியல் தலைவர்களின் அழுத்தம் தேவைப்படுகிறது போலவே தெரிகிறது.

    இந்த விடயத்தில் 2013 கொண்டு வரப்போகும் மாற்றத்தை இங்கிலாந்து முழுவதும் மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    விடை காலத்தின் கையில்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     
     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (33)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    காலவேகத்தின் பரிணாம மாற்றம் நாகரீகம் எனும் போர்வையில் உச்சத்தை எட்டிப்பிடிக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தத்தை ஒவ்வொரு சமுதாயமும் தனக்குப் பிடித்த  வகையில் மாற்றியமைத்து தமது கண்மூடித்தனமான நடத்தைகளை நாகரீக வளர்ச்சி என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலம் இது.

    ஒரு காலத்தின் நடைமுறை மற்றொரு காலத்திற்கு ஒவ்வாத நிலமை ஏற்படுவது சகஜம். காலத்திற்கேற்ப சில சில விடயங்களில் மனிதர்கள் தமது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொள்ள‌ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை.

    ஆனால் கால மாற்றத்தினால் மாற்ற‌ப்படமுடியாத, மாற்ற‌ப்படக் கூடாத விடயங்கள் பலவுண்டு. குடும்ப உறவுமுறைகள், கலாச்சார விழுமியத்தின் அடையாளங்கள், திருமணம் போன்ற பந்தங்களின் முக்கியத்துவம், குடும்ப அமைப்புமுறை என்பன இவற்றுள் அடங்குவது யதார்த்தமானது.

    ஆனால் இந்த நூற்றாண்டிலே தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல மனித வாழ்வின் அடிப்படைக் கலாச்சாரங்கள் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. குறிப்பாக திருமண வாழ்வின் முறிவுகள் மிகவும் சகஜமாகிப் போய்விட்டனவோ என்றொரு ஆதங்கம் மனதில் எழாமல் இல்லை.

    திருமணம் எனும் பந்தத்தில் புகுந்து விட்டோம் எனும் காரணத்தினால் தம்மீது கண்மூடித்தனமாக இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு தவறானதே. இப்பந்தத்தை முறிப்பது சுலபமல்ல எனும் காரணத்தினால் தமது உறவு கொடுக்கும் அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொடுமைகள் புரியும் ஆணிடமிருந்தோ அன்றிப் பெண்ணிடமிருந்தோ பிரிந்து செல்வதைத் தவறென்று வாதிடுவது என் நோக்கமல்ல.

    ஆனால் தனிமனித சுதந்திரத்தின் அர்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையை அறவே மறந்து சட்டத்தின் துணை கொண்டு மணவாழ்வை அவசரமாக முறித்துக் கொள்ளும் பலரை அனுபவரீதியாகப் பார்த்துள்ளேன்.

    என்ன எங்கே செல்கிறது இந்த கருத்தாடல் ? என்று எண்ணுகிறீர்களா?

    இந்த வாரம் இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபேத் அவர்கள் தமது 65வது திருமணநாளை மிகவும் அமைதியாகக் கொண்டாடியுள்ளதை நினைத்துப் பார்க்கையில் அவரது அந்த வாழ்க்கையின் வெற்றி மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேலே அலசியவை.

    திருமண வாழ்வு என்பது ஒரு ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையில் நிகழும் ஒரு ஆயிரங்காலத்து பந்தம் என்பதே எமது ஆன்றோர்கள் எமக்கு போதித்த அனுபவக் கல்வி ( ஓ இப்போது ஆணுக்கும், ஆணுக்கும் அன்றி பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையில் கூட இப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறதே ! ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ ?)

    இம்மணவாழ்க்கை வெற்றியடையவதற்கு பல காரண்ங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் அவற்றில் முக்கியமானது  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையேயாகும்.

    இந்த 65 வருட கால மண்வாழ்க்கையில் எலிசபேத் மகாராணியாரும் அவரது கணவரான பிரின்ஸ் பிலிப் அவர்களும் ஒருவருக்கொருவர் எத்தகைய விட்டுக் கொடுப்புகளை செய்திருப்பார்கள் என்று எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது.

    எனது தந்தை இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்த போது எனது பெற்றோர் மண்வாழ்க்கையில் 54 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தார்கள். தந்தை மறைந்து சரியாக ஆறு வாரங்களில் எனது அன்னையும் அவருடன் இணைந்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்வின் 54 வருடங்களும் அமைதியாக நடந்தது என்று சொன்னால் அது உண்மையாகாது. அவர்களுடைய மண்வாழ்வினிலே பல சமயங்களில் புயல் வீசத்தான் செய்தது ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையும், திருமண்ம் எனும் பந்தத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே அவர்களுக்கு கைகொடுத்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    எனது பெற்றோர்கள் சாதாரணமானவர்களே ! அவர்கள் மீது சமூகம் கொடுத்த எதிர்பார்ப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் என்று பெரிய அள்வில் எதுவும் இருக்கவில்லை.

    ஆனால் இங்கிலாந்து மகாராணியாரும், அவரது கணவரும் ஒரு நாட்டின் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய கெள்ரவ பிரஜைகள் ஆவார்கள். அவர்களது நாட்டு மக்களின் பார்வையில்  உதாரணப் புருஷர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்ட்ட ஒரு நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

    அவர்களது அந்த வாழ்க்கையில் அவர்கள் 65 வருட காலம் மணவாழ்வில் நிலைத்திருப்பது என்பது ஒரு சாதனையான விடயம் என்றே சொல்ல வேண்டும்.

    இங்கிலாந்து மகாராணியார் இளவரசியாக இருந்த போது தனது கணவர் பிலிப் அவர்களை முதன் முதலில் 1934ம் ஆண்டும் பின்னர் 1937ம் ஆண்டும் சந்தித்தார். தனக்கு 13 வயதாக இருக்கும் போதே பிலிப் மீது தனக்குக் காதல் ஏற்பட்டதெனச் சொல்கிறார்.

    அபோதைய இங்கிலாந்து மன்னரான ஜார்ஜ் அவர்களுக்கு பிலிப் தனது மருமகனாக வருவதில் மகிழ்ச்சி இல்லாதிருந்ததாம். காரணம் அவர் பெயரளவில் இளவச‌ராக இருந்து அவருக்கென ஒரு அரசோ அன்றி நாட்டின் தலைமைப்பதவியோ கிடையாது என்பதுவேயாகுமாம்.

    பிபில் அவர்களின் தந்தை கிரேக்க நாட்டு இளவரசர்களில் ஒருவரான அன்ட்ரூவிற்கும், விக்டோரியா  மகாராணியாரின் மகள் வழி வந்த பேரப்பிள்ளையான இளவரசி லூயி அவர்களுக்கும் பிறந்த மகனாவார்.

    இளவயதினிலே பாரிசில் கல்வி பயின்ற பிலிப் அவர்கள் மிகவும் திறமையாக பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிக்ளைப் பேசும் திறமை பெற்றவராவார்.

    இங்கிலாந்து பட்டத்து இளவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்கள் பிரின்ஸ் பிலிப் அவர்களை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி லண்ட்னில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மணமுடித்தார்,. திருமணத்திற்கு முன்னதாக பிலிப் அவர்கள் தனது கிரேக்க மதத் தழுவலை நிராகரித்து ஆங்கில கிறித்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார். இவருக்கு இங்கிலாந்தின் இளவரசர் எனும் பட்டத்தையும், டியூக் ஆப் எடின்பரோ எனும் பட்டத்தையும் அப்போதைய இங்கிலாந்து மன்னரான 5ம் ஜார்ஜ் மன்னர் அளித்துக் கெளரவித்தார்.

    நோயினால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரணமடைய இங்கிலாந்தின் இரண்டாவது எல்சபேத் மகாராணியாராக இங்கிலாந்தின் இளவரசி முடிசூடினார்.

    தனது பட்டத்து அரசியான வாழ்விலே பல மாற்றங்களைச் சந்தித்தும் அவையனைத்தும் தனது மண்வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படாத வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

    அவருக்குத் துணையாகத் தானும் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் பிரின்ஸ் பிலிப் அவர்களும் மகாராணியாருக்கு ஏற்ற கணவராக தனது வாழ்வை மேற்கொண்டார்.

    இவர்களின் மூத்த மக்னான இளவரசர் சார்லசின் மணவாழ்க்கை முறிவடைந்து அவர் இளவரசி டயானவை விவாகரத்துச் செய்தார், இரண்டாவது மக்னான இளவரசர் அன்ட்ரூ தனது மனைவியை விவாகரத்துச் செய்தார்.

    இளவரசி டயானா மரணமானார். இளவரசர் சார்ல்ஸ் அவர்கள் தனது பதின்ம வயதுக் காதலியை மறுமணம் செய்தார்.

    இப்படியான பல பாதிக்கக்கூடிய விடயங்கள் அனைத்துக்கும் முகம் கொடுத்து இங்கிலாந்து ராணி எனும் தனது பதவிக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத வகையில் தனது பிரத்தியேக வாழ்க்கையை செப்பனிட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தம்பதியரின் மணவாழ்க்கை நிச்சயமாக ஒரு சாதனையே.

    ஒரு வியாபாரம் செழிக்க வேண்டுமானால் அவ்வியாபாரத்தின் விஸ்தரிப்புக்காக எமது உழைப்பை அர்ப்பணிப்பதைப் போல திருமண வாழ்க்கையின் வெற்றிக்காக எமது பண்புகளை மேம்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    “ஒரு மனிதன் விழாமலே வாழ்வது பெருமையல்ல‌
      ஒவ்வொருமுறை விழுந்த போதும் எழுந்தான் என்பதுவே பெருமை “

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
     
    ஒரு நாட்டின் ஊடகம் என்பது அந்நாட்டின் முதுகெலும்பைப் போன்றது. ஊடகங்கள் சர்வாதிகார அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் அந்நாட்டுப் பிரஜைகளின் குரல்வளை நெரிக்கப்படுவது போன்ற ஒரு நிலையே தோன்றுகிறது.
     
    ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஊடகங்களின் சுதந்திரத்திலேயே நாடுகளின் சுபீட்சமும், தன்மானமும் காக்கப்படுகிறது.
     
    ஊடகங்களுக்கே பதவியிலிருப்போர் அப்பதவியின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகிக்கும்போது அதைத் தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. நாட்டின் முன்னனிப் பிரஜைகள் தவறான பாதையில் போகும் போது அதைச் சுட்டிக் காக்கும் கடமை சுதந்திரமான ஊடகங்களின் கைகளில் தங்கியுள்ளது.
     
    ஆனால் அச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களுக்கு அவ்வூடகங்கள் தரும் செய்திகளில் உள்ள உண்மையின் மீது நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் அதைப் பாதுகாக்கும் கடமை கூட அவ்வூடகங்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. சுதந்திரத்திர்கும், தாந்தோன்றித்தனத்திற்கும் இருக்கும் எல்லையைக் கடந்து விடாமல் இருக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகிறது.
     
    என்ன சக்தியின் இம்மடலின் பீடிகை நீண்டு கொண்டே போகிறது ? என்ன விடயமாக இருக்கும் என்னும் ஆவல் உங்களுக்கு ஏற்படுவது எனக்குப் புரிகிறது.
     
    பி.பி.ஸி உலக ஊடகத்துறையினருக்கே ஒரு முன்னுதாரணமாக, பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பிரித்தானிய நாட்டின் தேசிய ஊடகத்தின் மீது படிந்த கறைகளைப் பற்றிய ஒரு அலசலுக்கான பீடிகையே நீங்கள் மேலே கண்டது.

    பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பெனி (British Broadcasting Company) 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி ஆறு பிரத்தியேக கம்பெனிகளினால் பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இதன் முதலாவது ஒலிபரப்பு 2LO எனும் ஸ்டேசனுக்காக லண்டனில் உள்ள மார்க்கோனி ஹவுஸ் எனும் இடத்தில் இடம்பெற்றது.

    இதனுடைய விரிவாக்கம் தம்முடைய பத்திரிக்கைகளின் விற்பனையைத் தாக்கிவிடும் எனும் பீதியால் பிரித்தானிய பத்திரிக்கைத்துறையினர் அன்றைய அரசாங்கத்தினூடாக இவ்வானொலிச் சேவைச் செய்திகளை மாலை 7 மணிக்குப் பின்னரே ஒலிபரப்பலாம் எனும் நிபந்தனையைக் கொண்டுவந்தார்கள்.
     
    இப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌ இவ்வூட‌க‌த்தின் முக்கிய‌ ஸ்தாப‌ன‌ங்க‌ளில் ஒன்று பிரித்தானிய‌ தேசிய‌ தாபாற் சேவை இலாகாவாகும். தேசிய‌ச் சேவையான‌ தாபாற்சேவை இலாகா ஒரு த‌னியாருட‌ன் இணைந்த‌ கூட்டுத்தாப‌ன‌த்திற்காக‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து வ‌ரி வ‌சூலிக்கத் த‌ய‌ங்கிய‌தால் இக்கூட்டுத்தாப‌ன‌த்தில் அங்க‌ம் வ‌கித்த‌ த‌னியார் நிறுவ‌னங்க‌ள் வில‌கின‌. 1926ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ பிரித்தானிய‌ பொது வேலை நிறுத்த‌ம் ப‌த்திரிக்கைக‌ளின் வெளியீட்டில் இடையூறு ஏற்ப‌டுத்த‌ இக்கூட்டுத்தாப‌ன‌த்தின் மீது விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ நேர‌த்த‌டை அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து. இப்பொது வேலை நிறுத்த‌த்தின் போது இவ்வொலிப‌ர‌ப்பு ஊட‌க‌ம் எடுத்த‌ ந‌டுநிலையான‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இக்கூட்டுத்தாப‌ன‌த்திற்கு ஒரு உய‌ரிய‌ இட‌த்தை அளித்த‌து.
     
    விளைவாக பிரித்தானிய அரச முத்திரையுடன் 1926ம் ஆண்டு இன்றைய பி.பிஸியின் அமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டு நிறுவனராக சார் ஜான் ரீத் நியமிக்கப்பட்டார்.
     
    இத்தகைய ஒரு சூழலில் ஆரம்பிக்கப்பட்ட பி.பி.ஸியே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் முத‌லாவதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஊடக சேவையாகும்.
     
    இதன் முதலாவது தொலைக்காட்சிச் சேவை 1936ம் ஆண்டு லண்டனில் அலெக்ஸாண்ரா மாளிகையில் இருந்து ஒலிபரப்பப்பட்டது.
     
    இச்சேவையில் நடுநிலைமையான ஊடகச் சேவையின் மதிப்பு பலநாடுகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக தற்போது உலகெங்கும் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி உலக தொலைக்காட்சி, வானொலி சேவை உலகநாடுகளின் பல செய்திகளை உடனுக்குடன் எம்மை வந்தடையச் செய்கிறது.
     
    இத்தகைய ஒரு முன்னணி ஊடகத்துறை இன்று ஒரு அவதூறுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு தத்தளிக்கிறது. இதுவரை இதன் தலைவரான ஜார்ஜ் என்ட்விசில் (George Entwistle ) அவர்களது பதவியைக் களைந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இன்னும் பல முக்கிய பதவியிலிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

    இந்நிலை தோன்றக் காரணமென்ன ?
     
    நான் ஒருவாரங்களுக்கு முன்னால் தீட்டியிருந்த மடலில் குறிப்பிட்டிருந்த ஜிம்மி சவைல் (Jimmy Saville) அவர்களின் மீதான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியதோர் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம் தடை செய்தமை தொடர்பாக மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு பி.பி.ஸி உள்ளாகியிருந்தது.
     
    அதனால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தீவிரமாக விசாரிக்காமல் தம்மீது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னனனி அரசியல்வாதி பலவருடங்களுக்கு முன்னால் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டிய ஒருவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தமது நியூஸ் நைட் (News night) என்னும் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பான செய்தியை ஒலிபரப்பிவிட்டார்கள்.
     
    விளைவு ஒரு முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதியான லார்ட் மக் அல்ப்பைன் (Lord McAlpine) என்பவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.
     
    பி.பி.சி நிகழ்ச்சியில் அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்மீது தேவையற்ற அவதூரு சுமத்தப்படுவதற்கு தீர ஆராயப்படாமல் ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியே காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட்டது. பி.பி.சியின் நடுநிலைமையான ஊடகத்தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்பதே பெரும்பான்மையோரின் ஏகோபித்த அபிப்பிராயம்.
     
    பிரித்தானிய பத்திரிக்கை ஊடகத்துறையினர் கையாண்ட சில கபடத்தனமாகச் செய்தி சேகரிக்கும் முறையினால் பத்திரிக்கைகளின் மீது தணிக்கை அவசியமா என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அதன் முடிவுகள் வெளியாகப்போகும் தருணத்தில் தம்மீது விழப்போகும் பழியைத் திசைதிருப்ப, பத்திரிக்கைத் துறையினருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலான சந்தர்ப்பம் ஆகி விட்டது எனச் சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
     
    அது மட்டுமின்றி இத்தகைய ஒரு அனர்த்தத்தினால் முன்னணி நிறுவனமான பி.பி.சி உட்ப்பட ஊடகத்துறையினரின் சுதந்திரத்திர்கு வேட்டு விழுந்து விடுமோ என்றும் பழுத்த‌ அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.
     
    தொடர்ந்து எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகள் தான் பிரித்தானிய ஊடகத்துறையினரை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கப் போகிறது என்று உணர்த்தப் போகிறது.
     
    ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானல் அது அந்நாட்டின் ஊடகத்துறையினருக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. ஆனால் அதைப்பாதுகாக்கும் கடமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது அவ்வூடகத் துறையையும் அதை சார்ந்தவர்களையுமே சேர்ந்துள்ளது.
     
    இதை உணர்ந்துதான் எமது தமிழ்ப்பாட்டன் பாரதி ” தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது ” என்றானோ ?
     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (31)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    2012 தனது முடிவை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ நிகழ்வுகளைத் தனக்குள்ளே தாங்கியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றிலே சில மகிழ்ச்சியானவை சில துன்பகரமானவை ஆனால் அனைத்துமே நடந்த நிகழ்வுகளின் நிழல்களாகத்தான் மக்களின் மனங்களிலே பதிந்து போய் இருக்கின்றன.

    எமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் எம்மை அடக்கி ஆள்பவர்களால் எமக்கு நடத்தப்படும் நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. இவைகளில் சில எம் வாழ்க்கைகளை முன்னேற்றுகிறது வேரு சிலவோ எமது வாழ்க்கையில் பல இன்னவொன்னா தொல்லைகளைத் தந்து அனுபவம் எனும் அத்தியாயத்தோடு இதயத்தை உறைய வைத்து விடுகிறது.

    என்னடா இது ஏதோ ஒரு பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுவது போலத் தெரிகிறது ! பயப்படாதீர்கள் என்னுடைய ஆரம்பத்திற்கு ஒரு காரணம் உண்டு.

    2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் வாழும் பல வம்சாவழி இந்தியர்களின் மனதினிலே நீங்காத வடுவைத் தாங்கி நிற்கிறது. ஆமாம் உகாண்டா நாட்டின் அதிபதியால் அந்நாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட 40 ஆண்டு நிறைவேயாகும்.

    உலகத்தில் எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் மிக அதிக அளவில் மக்கள் நாடு கடத்தப்பட்டமை சமீப காலத்து உலக வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

    எப்படி இந்த இந்தியர்கள் உகாண்டா நாட்டிற்கு இடம், பெயர்ந்தார்கள்.

    1882ம் ஆண்டு வாணிபம் செய்வதற்கு உள்ளே நுழைந்து நாட்டின் அதிகாரத்தையே வாணிபமாக மாற்றிய இங்கிலாந்து அரசியல் வியாபாரிகளே இதற்கு மூல காரணம்.

    உலகின் பல நாடுகளையும் தமது Gun Boat Diplomacy எனும் கட்ற்படை ஆக்கிரமிப்பால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய ராஜ்ஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று பறை தட்டிய இங்கிலாந்து அரசாங்கத்தினால் புலம் பெயரப் பண்ணப்பட்டவர்களே இவ்விந்தியர்களின் மூதாதையர்கள் எனலாம்.

    1890களில் உகாண்டா நாட்டில் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்த சுமார் 32000 இந்தியர்கள் பிரித்தானிய அரசினால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

    இப்புகையிரதப் பாதை அமைப்பு முடிவுற்றதும் உயிருடன் எஞ்சிய பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினர் ஆனால் 6724 பேர் உகாண்டாவைத் தமது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.

    இந்தியர்கள் தையல் தொழிலும், வங்கித் தொழிலும் செய்து மேன்மையடைந்தார்கள். இயற்கையாகவே கடும் உழைப்பளிகளான என் தாயக மக்கள் தமது கடும் உழைப்பினால் உகாண்டா நாட்டின் பொருளாதாரத்தில் அதி முக்கிய நிலை வகித்தார்கள்.

    எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மையான உகாண்டா நாட்டு கறுப்பின மக்களை விட அதியுயர்ந்த நிலையில் இருப்பதா என வெகுண்டெழுந்த சில துவேஷ அரசியல்வாதிகளால் உகாண்டா நாட்டு மக்களுக்கு இந்தியர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.

    1968 ம் ஆண்டே அந்நாளில் உகாண்டா நாட்டு அதிபராக இருந்த மில்டன் ஓபட்டோ என்பவர் உகாண்டா நாட்டின் வணிகத்துறையையும், தொழிற்துறையையும் ஆப்பிரிக்க மக்கள் வசப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்குவதாகக் கூறி இந்தியர்களின் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் விதிமுறைகளை இயற்றினார்.

    இந்தியர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு பல வேலை அனுமதிப் பத்திர முறையும், வியாபார அனுமதிப் பத்திர முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    மில்டன் ஓபட்டோ , இடி அமீன் எனும் இராணுவ அதிகாரியால் தூக்கியெறியப்பட்டு இடி அமீன் உகாண்டா நாட்டின் அதிபராக பதவி ஏற்றதும் இந்தியர்கள் மீதான துவேஷத்தின் அடிப்படையில் தமது பதியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேலும் முடுக்கி விட்டார்.

    விளைவு !

    1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி உகாண்டா நாட்டு இந்தியர்கள் உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு இடி அமீன் 90 நாட்கள் கெடு விதித்தார்.

    கடுமையான உழைப்பை மூலதனமாகப் போட்டு தமது வியாபாரங்களைக் கட்டி எழுப்பி தமது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக புலம்பெயர்க்கப்பட்டும் மன உறுதியை இழந்து விடாமல் தமக்கென ஒரு ஸ்திரமான வாழ்வை ஏற்படுத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கண்ணீருடன் தமது வியாபாரங்களையும், தாம் கடினமாக உழைத்துச் சேமித்த தமது உடமைகளையும் கைவிட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து உகாண்டா நாட்டின் மனிதாபிமானமும் வெளியேறியது.

    இங்கிலாந்து நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களில் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர விரும்பியவர்கள் சுமார் 30000 பேருக்கு இங்கிலாந்தில் அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

    இவர்களில் பலர் 0 எனும் எண்ணிலிருந்து ஆரம்பித்து இன்று இங்கிலாந்து நாட்டின் கோடிஸ்வரர்களில் இருவர்களாகத் திகழ்ந்து எமது இந்திய நாட்டு மக்களின் உழைப்பின் மகிமைக்கு கிடைத்த வெற்றி என்று இங்கிலாந்து நாட்டின் பழுத்த அரசியல்வாதிகள் பலர் போற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    இவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக மிக் ஜட்டெனியா (Mike Jatania) உம் அவரது மூன்று சகோதரர்களும் திகழ்கிறார்கள். உகாண்டா நாட்டிலிருந்து அகதியாக இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படும் போது நிராதரவாக வந்த இவர்கள் இன்று 850 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளது ஒன்றே இம்மனிதர்களின் கடுமையான உழைப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

    தமது தாய்நாட்டிலிருந்து அதனுடன் எந்த சம்பந்தமுமேயில்லாத ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தினால் நாடு கடத்தப்பட்டு தாம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட நாட்டில் தமக்கென ஒரு வாழ்வைத் தமது கடுமையான உழைப்பினால் எற்படுத்திக் கொண்ட பின்னால் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து மூன்றாம் நாட்டிற்கு அகதியாக இடம் பெயர்ந்து இன்று அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்களென்றால் அவர்களின் மனத்திடத்தையும், நம்பிக்கையையும் எதற்கு ஒப்பிட முடியும்.

    இத்தகைய வாழ்க்கைகளை அலசுவதன் மூலம் இளய தலைமுறையின் நம்பிக்கை மேலும் வலுவடையும் என்பது எனது நம்பிக்கை.

    இதற்காகத்தான் கவியரசர்,

    வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
    மனிதனாக வேண்டும்
    வாசல் தேடி உலகம் உன்னை
    வாழ்த்திப் பாட வேண்டும்!     என்று எழுதி வைத்தாரோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (30)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    வாரங்கள் ஓடுகின்றன. வரம்பில்லா நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன. ஒரு மனிதன் மறைந்ததும் அவன் தன் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆற்றிய செயல்களிலே தான் அவனது புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கின்றது.

    நாம் வாழும் மட்டும் வேஷம் போட்டு வாழ்ந்து ஊரையும், உலகத்தையும் ஏமாற்றி வாழ்ந்து விட்டு மறைந்ததும் எமது ஈனச்செயல்கள் அப்படியே எம்முடன் சேர்ந்து புதைக்கப்பட்டு விடுகிறதோ அன்றி எரிக்கப்பட்டு விடுகிறதோ எனும் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பின் அது எத்தகைய மாயையான நினைப்பு என்பது இன்றைய நடைமுறைகளின் படி நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    மனிதர் இரட்டை வேடம் போட்டு வாழ்வதை சினிமாக்களில் பார்க்கிறோம். பார்த்து விட்டு சிலசமயங்களில் என்ன இது மிகைப்படுத்தப்பட்டு விட்டதோ என்று கூட எண்ணுகிறோம். ஆனால் இப்போ எமது கண்முன்னால் இங்கிலாந்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இத்தகைய இரட்டை வேட மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் இருப்பது யதார்த்தமே என்று எமக்கு புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    எதற்காக இத்தனை ஆலாபனை என்று எண்ணுகிறீர்களா ?

    ஜிம்மி சவைல் (Jimmy Saville) பிரித்தானிய ஊடகங்களில் கடந்த பத்து நாட்களாக வறுத்தெடுக்கப்படும் ஒரு பெயர். 

    அது சரி யார் இந்த ஜிம்மி சவைல் ?

    1926ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் திகதி இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் (Leeds) எனும் நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் 7 பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்தார்.

    இளவயது முதலே இசையில் நாட்டம் கொண்டு வளர்ந்த இவர் தானே இங்கிலாந்தில் வந்த டிஸ்க் ஜொக்கி (Disc Jokki or DJ) எனப்படும் வகையிலான இசைநிகழ்ச்சி தொகுப்பாளர்களில் முதன் முதலாக வந்தவர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்று கூறிக் கொள்கிறார்.

    இரண்டாவது உலக  மகாயுத்தத்தின் போது நிலக்கரிச் சுரங்க வேலைக்காக கட்டாயப் பணியின் பேரில் சேர்க்கப்பட்டவரார். நாட்டிய ஹால்களிலும், பார்களிலும் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் DJ ஆக பணிபுரியத் தொடங்கிய இவரின் முதலாவது வானொலிப் பிரவேசம் 1958ம் ஆண்டு ரேடியோ லக்ஸம்பேர்க் (Radio Luxemburg) இலும் முதலாவது தொலைக்காட்சிப் பிரவேசம் டைன் டீஸ் தொலைக்காட்சி ( Tyne Tees Television) யில் 1960 இலும் நிகழ்ந்தது.

    நகைச்சுவைப் பாணியிலும், மிகவும் விசித்திரமான வகையிலும் தனது நிகழ்ச்சித் தொகுப்புகளையும் வழங்கிய இவர் இங்கிலாந்து மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற காரணமாகவிருந்தது இவரது சமூக சேவையும், இவர் பலரது தீராக் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் தொலைக்காட்சி நிகழ்வான ஜிம் வில் ப்க்ஸ் இட் (Jim`ll Fix It) எனும் பி.பி.ஸி தொலைக்காட்சியில் வந்த நீண்ட தொடராலாகும்.

    தொடர்ந்து பி.பி.ஸி நிறுவனத்தில் பல வருடங்கள் அவரது மறைவு வரைக்கும் பலவித நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்தார்.

    இவரது சமூக சேவைக்காகவும், மக்களிடையே இவருக்கிருந்த செல்வாக்குக் காரணமாகவும் இவருக்கு இங்கிலாந்து மகாராணியால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகள் முக்கியமாக “ஸ்டோக் மண்டர்வைல் (Stoke Mandervile) ஹாஸ்பிட்டல், “லீட்ஸ் ஜெனரல் இன்வேர்மரி (Leeds General Infermory)” ஹாஸ்பிட்டல், “பிராட்மோர் (Broadmoor) ஹாஸ்பிட்டல் போன்றவற்றில் பிரபலப்பட்டிருந்தன.

    இத்தகைய ஹாஸ்பிட்டல்களில் மனநலம் குன்றிய குழந்தைகள் அதிகமாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி மனநலம் குன்றிய இளம் யுவதிகள், இளைஞர்களும் இவற்றில் அடங்குவர்.

    சரி , எதற்காக இந்த ஜிம்மி சவைல் என்பவரைப் பற்றிய இவ்வளவு முன்னோட்டம் எனும் கேள்வி எழுந்திருக்குமே !

    இங்கேதான் இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சமுதாயப் பெரிய மனிதன், மகாராணியாரின் அதியுயர் விருதைப் பெற்றவர், சமுதாயத்தினால் முன்னோடியாகக் கருதப்பட்டவர் இரட்டை வாழ்வு வாழ்ந்திருக்கும் அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

    அப்படி என்னதான் செய்து விட்டார் என்கிறீர்களா?

    யாராலும் எண்ணிப்பார்க்கவே கூசும் வகையில் சிறுவர், சிறிமிகளை இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பது அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.

    இவரது ” Jimm`ll Fix It” எனும் நிகழ்ச்சி பொதுவாக சிறுவர் சிறுமியரின் மனதில் இருக்கும் கனவுகளை தொலைக்காட்சியில் நிறைவேற்றி வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதிலே சம்பந்தப்பட்டிருந்த பல சிறுமியரின் கனவுகளை நிறவேற்றுவதற்குக் கூலியாக அவர்கள் மீது தனது பாலியியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது வெளிவந்துள்ளது.

    இவரால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்  சிறுமியர் தற்போது வயது முதிர்ந்தவர்கள். பகிரங்கமாக இவர் தம்மீது நிகழ்த்திய பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றித் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் குறிப்பிட்டதன் பின்னாலேயே பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இவர் உயிரோடு இருந்த காலங்களிலேயே இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்து, சில போலிஸ் பிரிவுகள் அவற்றை விசாரிக்க முற்பட்டு பின் அவ்விசாரணைகள் முடங்கிப் போய்விட்டன.

    இவர் சமுதாயத்தில் வகித்த முன்னணி அந்தஸ்தும், பல சமூக நிறுவனக்களின் நிதிச் சேகரிப்பில் இவர் ஈடுபட்டு அவற்றிற்கு நிதி ஈட்டிக் கொடுக்கும் வல்லமை இவரிடம் இருந்ததுமே இவர் மீதான விசாரணைகள் முடங்கிப் போனதிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

    இவரது இந்த செய்கைகளினால் பாதிக்கப்பட்டது உலகப்பிரசித்தி பெற்ற பீ.பீ.சீ நிறுவனத்தின் நற்பெயருமேயாகும்.

    ஏன் பீ.பீ.ஸி க்கு மட்டும் அதிகமான அவப்பெயர் என்கிறீர்களா?

    1) பி.பி.ஸி யிலேயே இவர் அதிக காலம் பணியாற்றி வந்துள்ளார். இவரது பாலியல் துஷ்பிரயோகங்களில் பெரும்பாலானவை நிகழ்ந்தது பி.பி.ஸி ஸ்டூடியோவிலேயே.

    2) இவர் மீது சந்தேகங்கள் பல காலகட்டங்களில் துளிர்த்து எழுந்தும் அதனை மேற்கொண்டு விசாரிக்கத் தவறியமை.

    3) 2011ம் ஆண்டு பி.பி.ஸி யின் நியூஸ் நைட் எனும் நிகழ்வு இவரின் மீது இவரது நடத்தையின் மீதான சந்தேகங்களின் அடிப்படையில் ஆக்கிய ஒரு நிகழ்ச்சி பி.பி.ஸி மேலதிகாரிகளால் நிறுத்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து 2011 கிறீஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் இவருக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை பி.பி.ஸி நடத்தியமை.

    இவைகளினால் பி.பி.ஸி மீது மக்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மை தோன்றியுள்ளதோ எனும் ஜயம் எழுந்துள்ளது.

    சென்ற திங்கட்கிழமை பி.பி.ஸி தனது பனோரமா எனும் நிகழ்ச்சியில் இந்நபரின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமல் போனதிற்கும், 2011ம் ஆண்டு நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதுக்குமான காரணங்களை ஆராய்ந்து தம்மைத் தாமே கடுமையான கண்ணோட்டத்துடன் விசாரித்துக் கொண்டது.

    இவர் மீது கடந்த காலங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளை ஏன் அரசாங்க குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்கத் தவறியது என்பதை அரசாங்கக் குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

    பி.பி.ஸி தமது நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு இரண்டு விசாரணைக் கமிஷன்களை நியமித்துள்ளது.

    இதைத்தவிர பொலீசாரும்  தமது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இன்றைய கால்கட்டத்தில் குடும்பங்களின் பிரிவு என்பது சமுதாயத்தில் சாதாரண் நிகழ்வாகி விட்டது. இக்குடும்பங்களின் பிரிவாலும், திருமணமாகாமலே குழந்தைகளை பெற்றெடுக்கும் கலாச்சாரத்தினாலும் இங்கிலாந்து சமுதாயத்தில் மனநலம் குன்றிய பல சிறுவர், சிறுமியர் உருவாக்கப்படுகின்றனர். இவர்களைப் பாதுகாக்கப்படும் மையங்களில் இவர்களை இத்தகைய கொடுமையான மனிதர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய சமூகத்தின் முக்கிய கடமையாகிறது. 

    தம்க்கெதிராக நடக்கும் கொடுமைகளை, அக்கொடுமைகளைப் புரிபவரின் சமுதாய அந்தஸ்தின் காரணத்தினால் வெளிப்படுத்த முடியாத நிலை அன்றைய காலகட்டங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இத்தகைய கொடுமைகளை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்க‍ள் அனைவருக்கும் கிடைக்கின்றன. தம்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை மற்றையோருக்கும் நடக்கக்கூடாது என்னும் மனப்பான்மையை முன்வைத்து ஏதாவது ஒரு வகையில் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுப்பது அனைத்து மக்களின் கடமையாகிறது.

    அனைத்து மக்களும் ஒன்றிணைவதே சமுதாயம். இவ்வமைப்பில் நம் அனைவரும் எமக்குரிய பங்கை உளசுத்தியுடன் ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

    இவரது வாழ்க்கையும் அதன் பின்னால் இவருக்கு நடந்த நிகழ்வும் எமக்கு ஒரு விடயத்தை ஜயமின்றித் தெளிவு படுத்துகிறது. நாம் வாழும் வரைக்கும் தவறான வாழ்க்கைமுறையைத் திரைக்குப் பின்னால் வாழ்ந்துவிட்டு நாம் மறைந்ததும் அது எம்மோடு மறைந்து விடும் என்று எண்ணுவதோ அன்றி வெளிவந்தால் நமக்கென்ன என்று எண்ணுவதோ தவறானது. உண்மைகள் என்று மே அழிந்து விடாது. அவை நிச்சயம் வெளிவரத்தான் போகிறது. வாழும் வரைக்கும் மனசாட்சிக்கு விரோதமின்றி வாழ்வதுவே முறையான வாழ்வாகும்.

    இதற்காகத்தான் கவிஞன்,

     “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்றானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படங்களுக்கு நன்றி ( விக்கி பீடியா இணையத்தளம் , பி.பி.ஸி இணையத்தளம்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………….. (29)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    வணக்கங்களுடன் மனதின் மற்றொரு பக்கம் திறக்கிறது. மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது முதுமை. ஏழை, பணக்காரன், ஜாதி,மதம் என வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் அணுகுவது முதுமை.

    இந்த முதுமையை நாம் எவ்வாறு அணுகுகிறோம்?

    பத்துகளின் முடிவில் இங்கிலாந்து நாட்டினுள் கால்வைத்த நான் இன்று ஐம்பதுகளின் நடுவில் அலசிக் கொண்டிருக்கிறேன்.

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லக்கூடிய வகையில் நான் ஒரு அறிஞனோ அன்றி ஒரு தத்துவஞானியோ அல்ல. வாழ்க்கையின் சகல திக்குகளுக்குள்ளும் நுழைந்து படக்கூடாத அடியெல்லாம் பட்டு தவற விடக்கூடாத சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டு பட்டுத் தெளிந்த சாதாரண அனுபவவாதியாகவே இருக்கிறேன்.

    நான் ஒரு வாலிபனாக உடலில் இளரத்தம் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த போது வாழ்வில் அனுபவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கிய எனது பார்வை எப்படியிருந்தது எனும் அடிப்படையில் வாழ்வின் முதுமையை நோக்குகிறேன்.

    வயதில் மூத்த பலர் எனது தந்தை உள்ளடங்க அன்றைய காலகட்டத்தில் எனக்கு அறிவுரை என்று வழங்கிய அனுபவ மொழிகளை அதற்குரிய கெளரவத்தோடு ஏற்றுக் கொண்டேனா? எனும் கேள்விக்கு இல்லை என்பதுவே எனது உள்ளத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலாகும்.

    கண்மூடித்தனமாக அவசரத்தில் எடுக்கும் முடிவுகளின் பலாபலன்களை அனுபவரீதியாக அவர்கள் விளக்க முற்பட்டபோது அதை அவர்கள் எனது முன்னேற்றப்பாதையில் போடும் தடைக்கற்களாகக் கருதிய காலங்களும் உண்டு 

    கவியரசர் கண்ணதாசன் ஓரிடத்தில்,

    “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    அவரது அந்த வரிகளில் புதைந்திருக்கும் உண்மை, அனுபவத்தின் அனுகூலத்தை, அனுபவத்தின் அதிசயத்தை ஆழப் பறைசாற்றி நிற்கிறது.

    ஆனால் நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலோ அன்றி நாம் தளிர்த்த பின்புல நாடுகளிலோ முதுமையின் மொழிகளுக்கு சரியான கெளரவம் அளிக்கப்படுகிறதா ? மிகவும் ஆழமாக இளையதலைமுறையினரால் தீர்க்கமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

    உடலில் வலுவிருக்கும் காலமெல்லாம் உழைத்து விட்டு, தமது அந்திமக் காலத்தில் ஓய்வூதியத்தை எதிர்பார்த்து ஓய்வு வாழ்க்கையை ஒருவர் தேர்ந்தெடுத்து விட்டால் அவரது உபயோகம் முடிந்து விட்டதா? சமுதாயத்தின் ஓரத்தில் மெளன‌மாக உட்கார்த்தி வைக்கப்பட வேண்டியவராகிறாரா ?

    இதுவே இன்றைய சமூகத்தின் முன்னால் நிற்கும் பூதாகரமான கேள்வி.

    அவசரமாக உருளும் இந்த உலகில் காலமாற்றம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்று. காலத்தின் முன்னேற்றமும் அக்காலமாற்றத்தின் விளைவுகளால் ஏற்படும் சமுதாயத் தேவைகளின் மாற்றமும் பலபுதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாகின்றன.

    இவ்விஞ்ஞான முன்னேற்றத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள், இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று வயதில் முதிர்ந்தவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    சுமார் 13 வருடங்களின் முன்னால் காலமான என் தந்தையின் மனதில் அனைத்தையும் பற்றி ஓரளவு அறிந்து வைத்த தனக்கு கணினியைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எழுந்துள்ளது என்று என்னிடம் கூறியபோது நான் அதை எத்தனை முக்கியமாக எடுத்தேன் என்பது எனக்கு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    எனது தந்தை வாழந்த வாழ்க்கைமுறைகளை, அதற்காக அவர் கடைப்பிடித்த நெறிமுறைகள், அவர் வாழ்க்கையில் நடந்த எளிமையான பாதை, எதிர்கொண்ட தடங்களை எதுவித வலியுமின்றி அவர் கையாண்ட முறைகள் இவையனைத்தும் அவரின் மறைவுக்குப் பின்னால் எனக்கு ஆழ்ந்த அதிசயமாகப் படுகின்றது.

    ஏனென்கிறீர்களா?

    இன்று நானும் ஒரு தந்தையாக வாழ்வின் பல நெளிவு சுளிவுகளை அறிந்தவனாக பல அனுபவ அடிகளைப் பெற்றுக் கொண்ட ஒரு முதுமை வாசலுக்குள் காலடி வைத்த காரணமே !

    நான் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம், காலம் எத்தனையோ மாற்ற‌ங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் எமக்கு ஒரு புதிய தாய், தந்தையைரை உருவாக்கித் தந்து விட முடியுமா?

    முதுமை அளிக்கும் ஞானத்தை விஞ்ஞானம் ஆக்கிக் கொடுத்து விட முடியுமா? இந்த உண்மையை இன்றைய இளைய சமுதாயம் எத்தகைய அளவில் உள்வாங்கியிருக்கிறது என்பது கேள்விக்குறியே !

    பெரும்பான்மையாக பின்புலத்தில் வாழும் பெற்றோர்கள் தமது இளைப்பாறும் காலத்திற்காக என்று எதையும் சேர்த்து வைக்காமல் தமது எதிர்காலத்தை தமது குழந்தைகளின் முன்னேற்றத்தில் அடகு வைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் இந்தத் தியாகத் தன்மையை, அவர்களது  குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாதும் சரியான வகையில் புரிந்து கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியே !

    எங்கே?, எப்போது?, எப்படி? எனும் கேள்விகள் மனதில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

    மிகவேகமாக எமது பின்புலங்களில் வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள் உணர்த்துவது என்ன?

    எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடமிருந்து அவர்களின் ஓய்வுக்காலங்களில் நாம் எதிர்பார்ப்பது மிகையானவையே !

    பல சந்தர்ப்பங்களில் கூட்டுக் குடித்தனம் நடத்தும் இடங்களில் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புக்களையும், சமையல் பொறுப்புகளையும் தம்முடன் வசிக்கும் ஓவ்வு பெற்ற பெற்றோர் வசம் ஒப்படைக்கும் நிலையைக் காண்கிறோம்.

    அப்படி ஒத்துழைப்புக் கிடைக்காத இடத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

    வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பங்களில் முதியவர்களின் அறிவுரைகள் பல இடர்களைத் தவிர்க்கக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது. தமது உடலில் வலுவுள்ளவரை உழைத்து களைத்துப் போனவர்கள் வாழ்க்கையின் வளமான பாகத்தைச் சுவைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது இளைய சமுதாயத்தின் கடமையாகிறது.

    எனது இன்றைய அனுபவத்தில் புலம்பெயர்ந்த எமது சமுதாயங்களில் கூட பெற்றோரைத் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இளம் தலைமுறையினர் கருதுவது போலத் தோன்றுகிறது.

    அதேசமயம் தமது பேரக்குழந்தைகளைப் பராமரிப்பதையும், தமது பிள்ளைகளின் குடும்பத்தில் அவர்களுக்குத் துணையாக ஒத்தாசைகளைப் புரிவதையும் மிகவும் விரும்பித் தாமாகவே ஏற்றுக் கொண்டு வாழும் முதியோர்கள் பலருண்டு.

    அதேபோல தமது பெற்றோர் தமது ஓய்வுக் காலங்களில் எவ்வித சுமைகளுமின்றி வாழ்வைச் சுவைக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் பிள்ளைகள் இல்லாமலில்லை.

    அது மட்டுமல்ல !

    பல சந்தர்ப்பங்களில் தாம் முதுமையெய்தி விட்டோம் இனி தம்மால் இச்சமுதாயத்திற்கு எதையும் கொடுக்க முடியாது தாமாகவே ஒதுங்கிக் கொள்ளும் முதியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    முதுமை என்பது நோயல்ல அது இயற்கையின் நிகழ்வு அதை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.

    கவியரசரின் வரிகள்

    “கடந்தகாலமோ திரும்புவதில்லை
    நிகழ்காலமோ விரும்புவதில்லை
    எதிர்காலமோ அரும்புவதில்லை
    இதுதானே அறுபதின் நிலை “

    என்பவை இத்தகைய சூழலைப் புரிந்து கொள்ளத்தான் வரையப்பட்டதோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………… (28)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே,

    இனிய வணக்கங்களுடன், ஈரமான இங்கிலாந்திலிருந்து உங்கள் முன்னே இம்மடல் விழுகிறது. என்ன ஈரமான இங்கிலாந்து என்கிறானே ! என்ன விடயம் என்று சிந்திக்கிறீர்களா ? 

    வேறு ஒன்றுமில்லை, காலநிலையின் கோலத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இலையுதிர் காலம் எமைத்தேடி படுவேகத்தில் வந்து விட்டது. இருநாட்களுக்கு ஒருமுறை வருணபகவான் தனது அதீத கருணையை அள்ளி வீசுகிறார். இங்கிலாந்து மண்ணின் மீது தோய்ந்த ஈரம் இன்னும் காயவில்லை.

    மண்ணின் மீதுள்ள ஈரம்தான் காயவில்லை,ஆனால் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளின் மனதில் ஈரம் காய்ந்து விட்டது போலுள்ளது.

    என்ன புதிருக்கு மேல் புதிரை அடுக்கிக் கொண்டு போகிறானே ஒழிய அவிழ்க்கிற மாதிரித் தோன்றவில்லை என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. மனதில் எழும் கேள்விகளுக்கு விடைகாணா வகையில் விசித்திரமான எண்ணங்கள் உள்ளத்தில் சதிராடுகின்றன.

    ஆமாம் ……..

    எங்கே போகிறோம் ? என்ன ஆகிக் கொண்டிருக்கிறோம் ?

    மனிதன் தனியாகத் தோன்றிச் சமுதாயமாக மாறினான் என்கிறது மனித சரித்திரம். ஆனால் இன்று 21ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டங்களிலே அச்சமுதாயக் கட்டமைப்பு உடைந்து மனிதன் மீண்டும் தனியாகப் போய்க்கொண்டிருக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    என்ன ? எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு இந்தப் பீடிகை என்று கேட்காதீர்கள். கண்முன்னே நடப்பவை, காதால் கேட்பவை என்பன என்னை இத்தகைய எண்ணங்களால் அமைக்கப்பட்ட சாலைக்குள் இழுத்துச் செல்கின்றன.

    பொதுவாக நாம் வாழும் சமூகத்தை எடுத்துக் கொண்டால், அன்றாட வாழ்க்கையின் வேகம் அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரம் இல்லாமல் படு கனகதியில் சென்று கொண்டிருக்கிறது. காண்பவை எல்லாமே எமக்குத் தேவை என எண்ணும் எண்ணம் கொண்ட ஒரு இளஞ்சமூகம் முளைப்பது போல் தோன்றுகிறது.

    அத்தியாவசியத் தேவைகளுக்கும், ஆடம்பரங்களுக்கும் வித்தியாசம் தெரியாத சமுதாயங்கள் பரவலாக உலகெங்கும் உருவாகிக் கொண்டு வருகிறது.

    இத்தகைய உருமாற்றத்திற்கு உலகப் பொருளாதாரம் “உலக மயமாக்கப்படுவது (Globalisation)” உதவுகிறது. உலகின் நீளம் மிகவும் குறைந்து கொண்டு வருவது மனிதர்களுக்கிடையில் பரஸ்பரம் நட்பினையும், மனிதாபிமான உள்வாங்கலையும் துரிதப்படுத்தும் எனும் நம்பிக்கை, நடக்கும் நிகழ்வுகளினால் குறைந்து கொண்டே போவது போலத் தெரிகிறது.

    எளிமை, பொறுமை, மனிதாபிமானம் எனும் மூன்று அத்தியாவசியமான பண்புகள் மனித மனங்களில் உறைய மறுக்கின்ற காலம் போலத் தெரிகிறது.

    கல்வி புகட்டும் ஆசிரியர்கள், கண்ணாக வளர்க்கும் பெற்றோர்கள், நல் அறிவைப் பெருக்கிடும் சான்றோரின் கூட்டு என்பன மீதான இளநெஞ்சங்களின் பார்வையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

    வரவுக்குள் செலவு எனும் கொள்கை அறவே அற்றுப் போய்விட்டதோ எனும் அச்சம் மனதைக் கவ்விக் கொள்கிறது. 

    இத்தகைய ஒரு சமுதாயத்தின் அடிப்படையில், இவ்வார்ப்புகளினால் வடிவமைக்கப்படுவதே அர்சியல் கட்சிகளின் கொள்கைகளும் அதன் முன்னணித் தலைவர்களும்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் கட்சிகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்கள், இத்தகைய ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறார்கள். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னணி அமைச்சர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக, செல்வமிக்க குடும்பத்தின் வாரிசுகளாக, பிரத்தியேக கெளரவமிக்க கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பதனால் அன்றாட வாழ்க்கையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள், தாம் அவர்களிலிருந்து அந்நியப்பட்டவர்களாக இருப்பது போலத் தெரிவது சகஜமே.

    அதேசமயம் இங்கிலாந்து நாட்டின் முத்திரை பதிக்கும் சமூக நலத் திட்டங்களினால் பயன் பெறும் பலர் தாம் தம்மை வேலையில்லாதவர் எனும் பட்டியலில் இருந்து வெளிக்கொணர்வதற்கான முழுமுயற்சியை எடுக்கிறார்களா? எனும் சந்தேகம் ஒரு வலுவான அடிப்படையைக் கொண்டது என்பது ஏற்றுக் கொள்ள‌ப்பட வேண்டியதொன்றே.

    இந்தப் பின்னணியில் தான் இவ்வாரம் நடந்த அரசாங்கத்தின் முக்கிய கூட்டணிக் கட்சியாகிய “பழமை பேணும் (கன்சர்வேடிவ்) ” கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர் “ஜார்ஜ் ஒஸ்போன் (George Osborne). 2015 இல் நடக்கும் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் கொண்டிருக்கப் போகும் ஒரு முக்கிய கொள்கைப் பிரகடனத்தைச் சொல்லியதும், அப்பிரகடனம் பலரது மனங்களில் அதிர்வலையைக் கிளப்பியது.

    “கம்பெனி ஊழியர்களிடமிருந்து அவர்களது பணிகளைக் காக்கும் உரிமைகளை அக்கம்பெனியின் பங்குகளை அளிப்பதன் மூலம் அக்கம்பெனி உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் ” என்பதே அப்பிரகடனம்.

    படிக்கும் போது சாதாரணமாகத் தெரியும் இப்பிரகடனத்தின் உள் பதிந்திருக்கும் ஆபத்து அதி பயங்கரமானது. தொழிலாளர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தமக்கான நியாயமான உரிமைகளைச் சட்டமூலத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடத்திய போராட்டங்களும், அவற்றை முன்னெடுத்து அதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த தொழிலாளர் தலைவர்களும் ஏராளம்.

    இப்படியாக பெற்றுக் கொண்ட உரிமைகளை வெறும் கம்பெனி பங்குகளுக்காக கம்பெனிக்கு விற்று விடுவது என்பது ஒரு சாதாரண விடயமா? அது தவிர பங்குகளின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் யார்? பங்குகளின் விலை எப்போதுமே உயர்ந்து கொண்டு செல்லாது. பங்குகளின் விலை பயங்கரமாக வீழ்ச்சியடையும் தன்மை கொண்டது. அப்படியான நிலையில்லா வெகுமதிக்காக தமது பணியைக் காத்துக் கொள்லும் உரிமையை இழக்கச் செய்யும் வகையில் தமது கட்சியின் கொள்கையை வகுப்பது கன்சர்வேடிவ் கட்சியின் மாறாத முதலாளித்துவ கொள்கைப் போக்கையே காட்டுகிறது என்கிறார்கள் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

    இந்த இடத்தில் தான் நான், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் எனும் கேள்வியை மீண்டும் கேட்டுக் கொள்ள விழைகிறேன். மனிதர்களைத் தொழிலாளிகள், முதலாளிகள் எனும் பாகுபாட்டைக் கடந்து மனிதர்கள் என்று பார்க்கும் தன்மையை இழந்து கொண்டு போகிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.

    அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் எனும் ஆசை எமது மனதில் ஓடிக் கொண்டிருந்த சமுதாய உணர்வை மழுங்கடிக்கச் செய்கிறதோ ?

    இங்கேதான் எமது இளைய சமுதாயம் விழிப்படைந்து கொள்ள வேண்டும். உழைப்பது அனைவரினதும் கடமை எனும் அதேநேரம் அந்த உழைப்பைத் தக்க வைத்துக் கொள்லும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதும் எமது கடமை என்று உணர்ந்து கொள்ள‌ வேண்டும். தொழிலாளர்கள் இல்லையானால் முதலாளிகள் இல்லை.

    அதற்காக மூடத்தனமாக, காலமாற்றத்தின் கட்டாயத்தினால் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள  வேண்டியவைகளை, நாம் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனும் வாதத்தினால் மூடத்தனமாக எதிர்ப்பது அறியாமை.

    ஆற்றிலே வெள்ளம் ஏற்பட்டால் அவ்வெள்ளத்தை எதிர்த்துக் கரையேறுவது முடியாத காரியம். அவ்வெள்ளத்தின் போக்கில் இழுபடுவது போல இழுபட்டு கரையேறுவதே புத்திசாலித்தனம். நாம் கரைசேறும் இடம் போக எண்ணிய இடத்தை விட சிறிது அப்பாலாய் இருந்தாலும் ஆற்றொடு அடிபட்டுச் செல்லாமல் கரைசேர்ந்து விடுவோம்.

    மனிதாபிமானம் எனும் அடிப்படைக் குணாம்சத்தைக் கைவிடக்கூடிய எத்தகைய மாற்றத்திற்கும் சவால் விடக்கூடிய மனதைரியம் கொண்ட இளம் சமுதாயம் உருவாக வேண்டும். நாமும் வாழ்ந்து, மற்றவரும் வாழவேண்டும் எனும் எண்ணம் ஏற்படும் மனப்பக்குவத்தைச் சமுதாயம் இளந்தலைமுறைக்கு தரக்கூடிய வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று அஞ்சுவதை விடுத்து, எவ்வழி போயினும் எமது இலட்சியத்தின் குறிக்கோள் எனும் ஊரை அடைந்து விடும் முயற்சியைக் கைபிடிப்பதே சாலச்சிறந்ததாகும்.

    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி 
    அவனுக்கு நானொரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி”

    எனும் கவிஞரின் வரிகளின் வழி எப்பணி செய்யினும் அப்பணி தெய்வத்தின் பணியே என்பதே விதியாகும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன். 

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(27)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    இதோ உங்கள் முன்னே மீண்டும் அடுத்தொரு மடலுடன்.

    “அரசியல்”இந்தச் சொல் அரங்கத்தில் இல்லாத நாடுகளிலே இவ்வகிலத்தில் இல்லை என்றே சொல்லலாம். அரசியல் திருவிழாக் காலம் இங்கிலாந்திலே வந்து விட்டது.

    அது என்ன”அரசியல் திருவிழாக்காலம்”என்கிறாயே என்கிறீர்களா?

    வருடா வருடம் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் மகாநாடு நடப்பதுண்டு. இம்மகாநாட்டிலே அரசாட்சி அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் கட்சி தாம் இதுவரை எடுத்த கொள்கைகளின் வெற்றியைப் பற்றிய ஆலாபனையும், தாம் இனி எடுக்கப்போகும் திட்டங்களையும் அவை மக்களுக்கு பயக்கப் போகும் நன்மைகளைப் பற்றிய விளக்கங்களையும், எதிர்க்கட்சிகளின் இயலாமையை எள்ளி நகையாடுவதையும் இம்மேடையில்தான் அரங்கேற்றுவார்கள்.

    அப்படியானால் அரசு முன்னெடுத்த கொள்கைகளில் ஏதாவது தோல்வியைத் தழுவியதைப் பற்றி விவரிப்பதில்லையா? என்ற கேள்வி புரிகிறது.

    தோல்வியா? உஷ்.. மூச்சு..

    எதிர்க்கட்சிகளோ அரசாங்கம் போகும் பாதையின் வழுக்கல்களை வகையாக விமர்சிப்பார்கள். தாம் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தால் நாடு எத்தகைய செழிப்படைந்திருக்கும் எனும் அழகான கதையளப்பார்கள்.

    அரசு எடுத்த கொள்கைகளில் ஏதாவது மக்களுக்கு நன்மை பயந்திருக்காதா அதைப்பற்றி எதிர்க்கட்சிகள் பேசுவது இல்லையா?

    நியாயமான கேள்விதான்! அரசியலில் நியாயம் எங்கே இருக்கிறது?

    ஆனால் இம்முறை இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமைந்திருப்பது ஒரு கட்சியல்ல. அரசியலில் கொள்கையளவில் இருவேறு துருவங்களாக இருந்த”பழமை பேணும் (Conservative)”கட்சியும்”சுதந்திர ஜனநாயகக் (Liberal Democrats)”கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டாட்சியே.

    இத்தகைய ஒரு கூட்டணியில் இணைந்திருக்கும் இக்கட்சிகளின் விழா மேடை கொஞ்சம் சிக்கலானதாகவே அமையும்.

    ஏன் என்கிறீர்களா?

    கூட்டணி அரசாங்கத்தில் அவர்கள் எடுக்கும் கொள்கைகளுக்கும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களுக்கும் அவை இரண்டுமே சேர்ந்து பொறுப்பெடுக்க வேண்டியது அவர்களது காலக்கட்டாயம்.

    அதே சமயம் தமது கட்சிகளின் தனித்துவத்தைப் பேணுவதற்காக தாம் மற்றைய கட்சிகளில் இருந்து எவ்வகையில் வேறுபட்டிருக்கிறோம் என்று தெளிவு படுத்த வேண்டிய இக்கட்டு வேறு.

    இதனிடையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எனும் சுழலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள்.

    இது இன்றைய இங்கிலாந்தின் அரசியல் திருவிழாவின் ஒரு அங்கம்.

    சரி இங்குதான் இப்படி என்றால், அமெரிக்காவின் நிலை என்ன? அநேக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகச் சரித்திரப் புத்தகத்தில் அமெரிக்காவின் முதலாவது கறுப்பு ஜனாதிபதி என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பராக் ஒபாமா முதன்முறையாக தான் ஜனாதிபதியானபின் வரும் தேர்தலைச் சந்திக்கிறார்.

    இத்தேர்தல் அவரின் மீது அமெரிக்க மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளுக்கும் அவற்றை எந்த அளவிற்கு அவர் பூர்த்தி செய்துள்ளார் என்று மக்கள் கணித்துள்ளார்கள் என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியத் தேர்தல் ஆகிறது.

    இன்றைய அமெரிக்க நாட்டுப் பிரச்சனைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சி என்றாலும் தமது நாடு அப்பிரச்சனைகளை எவ்வகையில் எதிர்கொண்டால் மக்களின் வாழ்க்கையிலுண்டாகும் பாதிப்புக்களைக் குறைக்கலாம் என்பதற்குரிய கொள்கைகளை வகுப்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்ற வகையில் இதன் பொறுப்பை ஒபாமா அவர்கள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்.

    அமெரிக்கத் தேர்தல் கூட ஒரு அரசியல் திருவிழாவே! ஆம் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக தொலைக்காட்சிகளில் திரையிடும் விளம்பரங்களும் அதற்கான விளம்பரங்களும்.. அப்பப்பா!

    அதைத்தவிர ஜனாதிபதியும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரும் மூன்று சுற்று நேரடித் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது அமெரிக்காவில் ஒரு சடங்கு போன்றே நடைபெறும்.

    இங்கேதான் என் மனதில் ஒரு பெரும் கேள்வியின் தாக்கம் சதிராடியது. நேற்று மாலை பணிமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது காரில் உள்ள வானொலியில் ஒரு கருத்தாடலைச் செவிமடுத்துக் கொண்டே வந்தேன்.

    அக்கருத்தாடலை நடத்திய வானொலி அறிவிப்பாளர்”ஜேம்ஸ் வேல் (James Whale)”என்ற ஒரு பண்பட்ட வானொலி அறிவிப்பாளர். அவர் ஒரு கருத்தாடலைத் தூக்கிப் போட்டார்.

    அதாவது ஒரு நாட்டில் அந்நாட்டின் மக்களின் வாழ்வைப் பாதிப்பது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கொள்கை வழி நடத்தலேயாகும். மக்கள் அரசாங்கத்திற்கு வரிப்பணத்தைச் செலுத்துகிறார்கள். அவ்வரிப்பணத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் அரசாங்கங்கள் அம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செலவிடுகிறார்கள்.

    அரசாங்கம் அமைக்கும் கட்சி தமது கட்சி எம்பிமார்களிள் தகுதிக்கேற்ப ஒவ்வொரு திணைக்களங்களிற்கும் பொறுப்பாக நியமிக்கிறார்கள். அப்பொறுப்பைக் கையாளும் அரசியல்வாதிகளே மக்களது வரிப்பணத்தைச் செலவு செய்கிறார்கள்.

    அத்தகைய முக்கியப் பொறுப்பை வகிக்கும் அரசியல்வாதிகள் அப்பொறுப்பை வகிப்பதற்குத் தகுதியானவர்கள்தானா? என்பதுவே அவர் கேள்வி.

    சுருக்கமாகப் பார்த்தால் அரசியல் வாழ்வில் ஈடுபடுவற்குரிய தகுதியை அவ்வாழ்வைத் தேர்ந்தெடுப்பவர்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு அமைப்பு வேண்டாமா? என்பதுவே அவர் கேள்வி.

    இது மிகவும் சிந்திக்க வேண்டிய கேள்வி. மிகவும் ஆழமான கருத்தைத் தனக்குள்ளே தாங்கி நிற்கும் ஒரு கேள்வி.

    தகுதி படைத்தவர் தான் மக்கள் பணியில் (அரசியல் = மக்கள் பணி) ஈடுபட முடியுமென்றால் அத்தகைய தகுதிதான் என்ன? வெறும் பட்டப்படிப்போ அன்றி கல்வித் தகமைகளோ மட்டும் தான் இதற்குத் தேவையா?

    பட்டம் பெறாமலே பெரும் பேர் பெற்ற அரசியல்வாதிகள் அரசியல்வானிலே மிளிரவில்லையா?

    காமராஜர்?.. புரட்சித் தலைவர்?..

    இது ஒரு புறவாதமாக அமையும்.

    மறுபுரத்திலே நாம் அரசியலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி விளாசித்தள்ளுகிறோம். லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பலரைக் காண்கிறோம்.

    மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்வோர், மக்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிப்போர் அப்பணியைச் செவ்வனே, மனத்தூய்மையுடன், வரவு, செலவு திட்டத்தைப் பற்றிய அறிவு கொண்டவர்களாக அமைந்திருப்பது அவசியமில்லையா? அத்தகைய ஒரு தகுதியை நிர்ணயிக்க மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஒன்று அவசியமில்லையா என்கிறார்கள் மறுபுறத்தினர்.

    ஆக மொத்தம் இது மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம். வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம்தான் எதிர்கால சுபிட்சம் அடங்கியுள்ளது. இளைய தலைமுறையினரின் அரசியல் தொலைநோக்குக் கொண்டதாகவும், தூயசிந்தை மனப்பான்மை கொண்டதாகவும், அனவரையும் அணைத்துச் செல்லக்கூடிய பரந்த சிந்தையுடயதாகவும் அமைவது அவசியம்.

    எதிர்க்கட்சி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது எனும் கடிவாளப் பார்வை உடையதாக இல்லாததாகவும், அரசு தான் எடுக்கும் முடிவுகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கும் அரசியல் பண்பை உட்கொண்டதாகவும் அமையும் வகை அரசியல் முன்னெடுக்கப்படுமாயின் அரசியலில் ஈடுபடுவோர் அனைவரும் மக்களின் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள் என்பது நிதர்சனம்.

    தெருத் தெருவாய்க் கூட்டுவது
    பொதுநலத் தொண்டு – ஊரார்
    தெரிந்து கொள்ள படம் பிடித்தால்
    சுயநலமுண்டு .

    என்ற கவிஞனின் வரிகள் இதை எண்ணித்தானோ!

    மீண்டும் அடுத்த மடலில்..

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    சிலநேரங்களில், சில பொழுதுகளில் ஏதோ உணர்வுகள் மனதினில் ஊசலாடும். கண்முன்னே, ஊடகங்களில் என்று பலவழிகளில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட நிகழ்வுகள் மனதை ஏதோ செய்யும். அப்படியான ஒரு பொழுதை, அந்தப் பொழுதினில் எனது மனதில் பதிந்த கருத்துக்களை உங்களுடன் இம்மடலில் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆசையின் விளைவே இது.

    ஒரு ஐந்து வயதுச் சிறுமி ஈழத்தின் அவலத்திலிருந்து தப்பி தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து இனியாவது வாழ்வில் அமைதி கிட்டும் எனும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு ஈழத்து இளம் சிறுமி. தனக்கேயுரிய குழந்தைகளுக்கான விளையாட்டாகத் தனது மாமனின் கடைதனில் ஆடி மகிழ்ந்திருந்த வேளை அச்சிறுமியின் வாழ்வையே திசை திருப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

    என்ன ஒரேயடியாகக் கதையளக்கிறானே என எண்ணுகிறீர்களா? இல்லை உண்மையாகவே சுமார் ஒன்றரை வருடங்களின் முன் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடுகிறேன்.

    துஷா கமலேச்வரன் எனும் ஈழத்தின் குழந்தைகளில் ஒன்று. ஐந்தே ஐந்து வயதாக இருக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னால் லண்டனில் உள்ள “ஸ்டாக்வெல் (Stockwell) எனும் இடத்தில் உள்ள தனது மாமனின் கடையில் ஆடி மகிழ்ந்திருந்தது.

    அப்போதுதான் லண்டனின் பெயரையே மாசுபடுத்தும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடும் குழுக்களைச் சேர்ந்த மூவர் அக்கடையினில் நுழைகிறார்கள் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களில் அக்காடையர்களால் விடுக்கப்பட்ட அகோரத் துப்பாக்கி வேட்டு ஒன்று வழி தவறி இந்தச் சிறுமியைத் தாக்கி விடுகிறது..

    பலத்த காயத்துடன் விழுந்த சிறுமி அவசரச் சத்திர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு இருமுறை துடிப்பிழந்த அந்தச் சிறு இதயத்தை அரும்பாடுபட்டு இயங்க வைத்தார்கள் அற்புத வைத்திய நிபுணர்கள்.

    இன்று ஒன்றரை வருடங்களின் பின்னால் சக்கர நாற்காலியின் உதவியுடன் புன்னகை பூத்த வதனத்துடன் வலம் வரும் அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளிவிட்ட நம்பிக்கையை பி.பி.ஸி இணையத்தளத்தில் பார்த்த போது உள்ளம் நெகிழ்ந்தது.

    பள்ளிக்கூடம் போகப் பிடிக்குமா? எனக்கேட்ட நிருபருக்கு புன்னகையுடன் ஆமாம் என்று பதிலளித்த சிறுமி தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுவே தனது கனவு என்று கூறியது.

    இனி இக்குழந்தை தன் வாழ்நாளில் நடப்பது சந்தேகமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

    இக்குழந்தையின் எதிர்காலப் பராமரிப்புக்கு ஏற்படப்போகும் செலவினை எண்ணும் போது நெஞ்சமே பதைக்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் வாழும் இந்த நாட்டில் வாழும் மனிதாபிமானத்தின் ஆழம் புரிகிற செயலொன்று கடந்த சில நாட்களின் முன்னால் நடைபெற்றது.

    அது என்ன என்கிறீர்களா?

    ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் போலீஸாரைப் பற்றிய அபிப்பிராயம் சிறிது எதிர்மறையாகவே இருக்கும் ஆனால் இல்லை நாமும் மனிதர்தாம் எமக்கும் உணர்வுகள் உண்டு சில போலீசார் விடும் தவறுகளுக்கு நாமனைவரும் பொறுப்பல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்தச் சிறுமியின் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த துப்பறியும் பிரிவைச் சேர்ந்த இலண்டன் போலீஸார்.

    பொதுவாக ஒரு வாகன விபத்தில் ஒரு சிறுமி அகப்பட்டு அவரது இயக்கத்தை இழந்து விட்டால் காப்புறுதியின் மூலம் அக்குழந்தையின் வாழ்நாள் பராமரிப்புக்கு ஏற்ற நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்கும் ஆனால் இத்தகைய ஒரு காயரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்கும் நஷ்ட ஈடோ மிகவும் சொற்பமானது.

    அதை உணர்ந்த இந்த வழக்கிலீடுபட்ட போலீஸார் இங்கிலாந்தின் அதி உயரமான மூன்று மலைகளில் ஏறுவதன் மூலம் இக்குழந்தைக்காக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டு ஏறக்குறைய £180,000 பவுண்ட்ஸ் வரையில் சேகரித்துள்ளார்கள். இது இக்குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

    இந்த மலையேறும் கருணைப் பயணத்தில் ஈடுபட்ட ஒரு போலீஸ் ஆபிசர் கூறும்போது “இப்பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் குழந்தைகள் உண்டு, இந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமை எங்கள் மனதை மிகவும் பாதித்தது. இக்குழந்தையின் ஊனத்தின் காரணமான காடையரைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வகையிலும், இக்குழந்தைக்கும் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் அனுசரணை அளிப்பதிலும் நாம் இக்குழந்தையுடன் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகப் பழகி வந்துள்ளோம். எமக்கு இது அவர் மீது பாசத்தை ஏற்படுத்தியது ” என்றார்.

    பறிபோய்விட்ட அந்த இனிய சிறுமியின் சுதந்திரத்தை எத்தனை கோடிப் பணமும் பெற்றுத் தந்து விடாது ஆனால் மிகவும் சிக்கலாக அமையப் போகும் அவரது எதிர்கால வாழ்க்கையின் சிரமத்தை ஓரளவு குறைக்க உதவும்.

    மனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நிறம் எனும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்பது. மனிதம் ஒன்றே உலகின் மகத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த போலீசாரின் கருணை உணர்த்தி நிற்கிறது.

    அது மட்டுமின்றி போலீஸாரும் மனிதரே அவர்களின் நெஞ்சிலும் ஈரம் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    நம்பிக்கையின் சிகரத்தையே இச்சிறுமி தொட்டுக்காட்டி எம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். அவரது விருப்பப்படியே அவர் ஒரு டாக்டராகி சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி தமிழன்னையைத் தலைநிமிரச் செய்வார் என்பது எனது திடமான நம்பிக்கை.

    இதற்காகத்தான் ஒரு கவிஞர்

    எங்கே போய்விடும் காலம் அது
    என்னையும் வாழவைக்கும் – உன்
    இதயத்தைத் திறந்து வைத்தால் அது
    உன்னையும் வாழ வைக்கும் ” என்றாரோ

    நன்றி — படங்களுக்காக (பல இணையத்தளங்கள்)

    Share