Category: தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும்

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 5

    முன்னுரை

    உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியரே இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டனுக்கும் உரைகண்ட சான்றோர். பரிமேலழகரின் திருக்குறள் இலக்கிய உரையை அறிஞருலகம் இலக்கண உரை என்றே பெருமைப்படுத்தும். அச்சிறப்பு நச்சினார்க்கினியருக்கும் பொருந்தக்கூடும். இவருடைய இலக்கண உரைகளில் இலக்கிய மணம் வீசும். இலக்கிய உரைகளில் இலக்கணத் தெளிவு மேலோங்கி நிற்கும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி முதலிய நூலுரைகளைக் கற்பார் இதனை அறியலாம். ஆழ்ந்த தமிழ்ப்புலமை, பல்லாயிரம் வரிகளை மனத்துக்குள் இருத்திக்கொள்ளும் பேராற்றல், ஆராய்ச்சி அறிவு, பல்துறை அறிமுகம், மக்களின் நடப்பியல் வாழ்வியல் நெறிகள் பற்றிய நோக்கு, வடமொழிப் புலமை என்னும் இவற்றின் பரிமாணமாக விளங்கும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைப்பகுதிகளில் காணப்படும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    இலக்கியத்துள் காணும் இலக்கண நுட்பம்  

    நச்சினார்க்கினியர் உரைக்கருத்துக்களில் மட்டும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடுபவரல்லர். அவருடைய பரந்துபட்ட இலக்கியப் புலமை இலக்கண உரைக்குப் பயன்படுவதைப் போலவே ஆழமான இலக்கணப் புலமை  இலக்கிய உரைகளுக்குப் பயன்படுகிறது. எனவே இருவகை உரைகளிலும் அவ்விருவகை உரையாசிரியர்களிடமிருந்து நோக்கு, உத்தி முதலிய எல்லாவற்றிலும் மாறுபடுகிறார். இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விளக்கம் தரும் நச்சினார்க்கினியர்  இலக்கிய வரிகளையே உவமமாக்கி விளக்கம் தருவதும் உண்டு. ஏனைய உரையாசிரியர்களும் இவ்வாறு உரைவிளக்கம் செய்தாலும் இவருடைய இலக்கியப் புலமை தனித்தன்மை மிக்கதாய் விளங்குகிறது.

    விளியேற்பதில் உயிரீறும் மெய்யீறும்

    பெயர்ச்சொற்கள் இயல்பாக நின்றும் விளியாகும். சில மாற்றங்களைக் கொண்டும் விளியாகும். அத்தகைய மாற்றங்களுள் அஃறிணைப் பெயர்களும் அடங்கும். அவ்வஃறிணைப் பெயர்கள் விளியேற்குங்கால் இறுதி பற்றி மாறுபடும்.  புள்ளியீற்று அஃறிணைப் பெயர்களும் உயிரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்குங்கால் ஏகாரம் பெறும் என்பது விதி.

    புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
    அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
    விளிநிலை பெறூஉம் காலந்தோன்றின்
    தெளிநிலை உடைய ஏகாரம் வரலே”151

    என்னும் நூற்பாவில் இந்தக் கருத்து பெறப்படுகிறது. மரம், ‘மரமே!’ என்றும் அணில் ‘அணிலே!’ என்றும் நாய் ‘நாயே!’ என்றும் புலி ‘புலியே!’ என்றும் விளிக்கப்படும்.   இவ்வாறின்றி ஏகாரம் பெறாமலும் விளியேற்கும் நிகழ்வுகளை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. அஃறிணை நோக்கிப் புலம்பும் தலைமக்கள் கூற்று அவ்வாறு அமைந்திருக்கின்றன. அத்தகைய பயன்பாடு முழுவதையும் தொகுத்துத் தர எண்ணும் நச்சினார்க்கினியர் சிலவற்றை மட்டும் உவமமாகக் காட்டி விளக்குவதைக் காணமுடிகிறது.

    “வருந்தினை வாழி என் நெஞ்சம்!’ (அகம் -19:2)

     ‘கருங்கால் வெண்குருகு! ஒன்று கேண்மதி.’ (நற். 54)

    என்றாற் போலப் “பிறவாற்றான் விளி ஏற்பனவும் கொள்க”. மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘நெஞ்சம்’ என்னும் மகர ஈறு ‘நெஞ்சம்’ என்றும், குருகு என்னும் உகர ஈறு ‘குருகு’ என்றும் விளிகொள்வதைக் காணலாம். சேனாவரையர் இத்தகைய எடுத்துக்காட்டுக்களைத் தந்து ‘தொடக்கத்தன’ என அமைதி கொள்கிறார். நச்சினார்க்கினியர் இவற்றை உவமமாக்கி, இவைபோல விதிக்கு வேறுபட்டும் வேறு சில நெறிகளிலும் விளியேற்பன உளவென விளக்குவதைக் காணலாம். அஃறிணைப் பெயர்களில் மகர ஈறும் உயிரீறும் வேறுவகையாக விளிகொள்ளும் பாங்கு இலக்கியங்களில் செறிந்து கிடக்கும் அளவையும் நுட்பத்தையும் நோக்கி அவற்றுள் சிலவற்றை உவமமாக்கிக் கூறும் நச்சினார்க்கினியரின் உவமத்திறன் போற்றத்தக்கதாய் உள்ளது.

    எழுத்தும் இறைவனும்

    அகர முதல் னகர இறுவாய் முப்பது எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் எனத் தொகுத்துச் சொன்ன தொல்காப்பியம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதைப்பின்னாலே விவரிக்கிறது.  அவற்றுள் உயிரெழுத்துக்களைக் கூறும் நூற்பா,

    ஔகார இறுவாய்ப்
    பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப” 8

    என்றவாறு அமைகிறது. இந்த நூற்பாவின் விளக்கத்தில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் உவமத்தின் கொடுமுடியையும் அவருடைய ஆழமான பக்தியையும் சித்தாந்தப் பார்வையையும் ஒருங்கே காட்டுகிறது எனலாம். உயிரெழுத்துக்கள் மெய்களை இயக்குவதால் தனியாக அவை உயிரெனப்படுமா என்னும் ஐய வினாவை அவராகவே எழுப்பிக் கொண்டு அதற்கான விளக்கத்தையும் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

    மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், “மெய்யில் நிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென்க.! என்னை? ‘அகர முதல’ (குறள் – 1) என்றுழி அகரம் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொரு தன்மையையுடைத்தென்பது கோடும்,. “இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல

    உவமத்தை உவமத்திற்காகவே சொல்லுவது வேறு. இலக்கியத்தின் பயன்நோக்கிக் கையாள்வது என்பது வேறு. ‘அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன்’ என்னும் தமிழிலக்கியப் பயன் கோட்பாடு காணப்படுவது இலக்கணத்திலேயே என்பதை நன்குணர்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண விளக்கத்திற்காகக் கையாளப்படும் உவமமும் கற்பாருக்கு நாற்பொருளையும் பயத்தல் வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உவமம் கூறுவதைக் காணமுடிகிறது. முதற் குறட்பாவில் கடவுளின் உண்மையை, அதாவது கடவுள் இருக்கிறார் என்னும் அவரது இருப்பைக் கூறிய திருவள்ளுவரை நினைவுபடுத்தி மொழியிலக்கணம் கற்கின்ற மாணவருக்கும் அவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்னும் கடமை உணர்வோடு சிந்திக்கத்தக்கதோர் உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம். அதாவது உயிரின்றேல் மெய்யின் இயக்கம் இல்லை. இறைவன் இன்றேல் உலக இயக்கம் இல்லை என்பதாம்.

    உயிருக்குள் அகரமுண்டா?

    மெய்கள் இயங்குதற்கு அகர உயிர் காரணமென்பதைத் தொல்காப்பியம்,

    ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ 46

    என்னும் நூற்பாவில் விளக்குகிறது. தனிமெய்களினது நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்பது இதன் பொருள். நடப்பு என்பது ஒலிவடிவையும் வரிவடிவையும் குறிக்கும் அகரம் தவிர்த்த ஏனைய உயிர்கள் இயங்குவதற்கு அகரம் காரணமாவது யாங்ஙனம்? இதுபற்றித் தொல்காப்பியம் கூறியிருக்கிறதா என்னும் வினாவை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தாமே எழுப்பிக் கொண்டு அதற்கான விடைகாண முயல்கிறார். சென்ற பத்தியில் விளக்கிய அவ்வுவமத்தின் பேராற்றலை முற்றும் உணர்ந்தவராய் எழுதுகிறார்.

    இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற்போல பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க

    இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும்  பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது’.

    அகரமுதலஎன்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றாலும், கண்ணன்எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேஎனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். உயிர் மற்றும் மெய் ஆகியவற்றின் இயக்கத்திற்கு அகரமே காரணமாகி நிற்கும் நுண்ணியத்தை   இறைத்தன்மையை  உவமமாக்கி விளக்கும் நச்சினார்க்கினியர், வள்ளுவர் கூறிய உவமத்தையும் வழிமொழிவதைக் காணமுடிகிறது.

    நிலத்தது அகலம் போல

    குற்றியலுரகத்தை நெடில், உயிர், வன்மை, மென்மை, இடைமை, ஆய்தம் என்னும் ஆறுவகையாகப் பாகுபடுத்தினர் இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியம் இதனை,

    நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
    குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” 36

    என்னும் நூற்பாவில் சிந்திக்கிறது. “வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து நெட்டெழுத்தின்பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியிலும் நிற்றல் வேண்டும்” என இதற்கு நச்சினார்க்கினியர் பதசாரம் தருகிறார். குற்றியலுகரத்தின் முன்னெழுத்து கொண்டு பெயர் பெறுவது ஆறுவகைக்கும் பொதுவாக இருந்தாலும் தொல்காப்பியம் நெடில் தொடரைத் தனித்து ‘நெட்டெழுத்து இம்பரும்’ எனப் பிரித்தாளுகிறது. இது பற்றிச் சிந்திக்கும் நச்சினார்க்கினியர், உண்மையில் இது பிரிப்பன்று. ஈரெழுத்தில் அமையும் நெடில் தொடரும் தொடர் மொழியில் அமையும் ஏனைய ஐவகைக் குற்றியலுகரமும் ஈறுபற்றியதே. எனவே இதனைத் தனியாகக் கருதுதல் வேண்டாம்.

    நெட்டெழுத்தினது பின், தொடர்மொழி ஈறு என்பன நிலத்தது   
    அகலம் போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன.”

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். இந்த விளக்கத்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் தனியாகாது, ஏனைய ஐந்துடன் ஒன்றி, ஆறே என்பதைப் பெறவைக்கிறார். வைத்து, தமது அளப்பரிய நினைவாற்றலுடன் “தொடர் மொழியீற்று” (36) வருமென்று ஆண்டுக் கூறியதனை ஐந்து வகைப்படுத்தி, அதனோடு நெட்டெழுத்து இம்பரும் என்றது ஒன்றேயாதலின் அதனையும் கூட்டி அறுவகைத்தென்றார்” (406) என்று நினைவூட்டுகிறார். நிலத்தது அகலம் என்னும் உவமம் குற்றியலுகரம் ஆறே என்பதை உறுதி செய்கிறது எனலாம்.

    நிறைவுரை

    இலக்கியத்திற்கு உரை எழுதுங்கால் இலக்கணத்தை மறக்காமலும் இலக்கணத்திற்கு உரைகாணுங்கால் இலக்கிய உணர்வோடும் எழுதுவது நச்சினார்க்கினியருக்கே உரிய சிறப்பு. இலக்கியப் பகுதிகளையே இலக்கண விளக்கத்திற்கு உவமமாக்கும் அவர், தமிழ்மொழியின் ஏனைய எழுத்துக்களில் அகரத்தின் ஆதிக்கத்தை இறைவனோடு பொருத்தி நோக்கிப் பொருத்தம் காட்டுகிறார். திருக்குறளின் உவமக் கோட்பாட்டில் ஈடுபாடு காட்டுகிறார். தலையின்றிக் கூந்தல் இல்லையாதல்போல நெடில்தொடர் இன்றிக் குற்றியலுகரம் நிறைவு பெறாது என்பதை ‘நிலத்தது அகலம்’ என்னும் உவமம் கொண்டு விளக்குகிறார். பானைச் சோற்றுக்குப் பதசோறாக அமைந்த இந்தக் கட்டுரை நச்சினார்க்கினியரின் ஏனைய இலக்கண, இலக்கிய உவமங்களைக் கண்டறிந்து துய்ப்பதற்கு ஏதுவாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 4

    முன்னுரை

    ஒரு நூல் எழுதி உலகப்புகழ் பெறுவது தமிழ்ப்புலவர் பெருமக்களுக்கு வெகு இயல்பு. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய படைப்பிலக்கியங்களைப் போலவே உரையிலக்கியத்திலும்; இந்தப் போக்கு காணப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு மட்டும் உரையெழுதிப் பெருமையுற்றவர் இளம்பூரணர் என்றால் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதித் தனது பெயரை நிலைநிறுத்தியவர் சேனாவரையர். மக்கள் சமுதாயமே மொழியியலின் தாயகம் என்பதை உணர்ந்த தொல்காப்பிய நெறியில் தோய்ந்த அன்னார் தமது உரைகளில் வழக்குப் பற்றிய பலவற்றை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். உலக வழக்கில் உள்ளனவற்றை உவமமாக்குதல், ஓர் உவமைக்குப் பல விளக்கங்கள் தருதல், ஓர் இலக்கண விளக்கத்திற்குப் பல இலக்கியங்களிலிருந்து உவமம் காட்டுதல், இலக்கணத்திற்கு மற்றொரு இலக்கணத்தையே உவமமாகக் கொள்ளுதல், பிறதுறை பயிற்சியினால் உவமங்களைக் கையாளுதல் எனப் பன்முகமாக அமைந்த சேனாவரையர் சொல்லதிகார உரையில் காணப்படும் உவமங்கள் சிலவற்றின் சிறப்பினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    சொற்களை அமைத்தலா? ஆக்குதலா?

    ‘கிளவியாக்கம்’ என்னும் தலைப்பில் அமைந்த சொல்லதிகாரத்தின் முதலியல் தமிழின் சொல்வழக்கில் உள்ள வழுக்களைச் சுட்டுதல், வழுவகற்றி அவற்றை வழங்க வேண்டுதல், சில காரணம் பற்றி அவ்வழுக்களை அமைத்துக் கொள்ளுதல் என்னும் முப்பெரும் கூறுகளை ஆராய்வதாக அமைந்திருக்கிறது. இம்மூன்று கூறுகளும் மொழிக்கட்டமைப்பைக் காக்கும் தலையாய நோக்கத்துடன் பெரிதும் தொடர்புடையன. சேனாவரையர் இவ்வதிகார நூற்பாக்களைப் பன்முறை நோக்கி, அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ‘கிளவியாக்கம்’ என்னும் இயல் தலைப்பின் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். வழு சுட்டுதல், வழுவற்க எனல், வழுவமைத்துக் கொள்ளுதல் என்னும் மூன்றும் சொற்களை ஆக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே எனக் கருதுகிறார். எனவே ‘சொற்களை ஆக்கிக் கொள்ளுதல்’ அதாவது ‘கிளவிகளை ஆக்கிக் கொள்ளுதல்’ என்பதை உணர்த்தும் பகுதிக்குக் ‘கிளவியாக்கம்’ என்னும் பெயர் பொருத்தமே என்னும் முடிவுக்கு வருகிறார்.

    “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கமாயிற்று எனினும் அமையும்”

    மேற்கண்ட பகுதியிலிருந்து ‘மொழிசார்ந்த இலக்கணமேயானாலும் அவர் மக்கள் சமுதாயத்திலிருந்தே அவ்விலக்கணத்தை நோக்கியிருக்கிறார் என்பது புலனாகும். ‘அமைத்ததை’ ‘ஆக்கியது’ எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதற்குத் தொல்காப்பியர் கால வழக்கே காரணம் என்பது சேனாவரையர் உள்ளக்கிடக்கை. ‘கிளவியாக்கம்’ என்னும் தொடருக்குப் பொருள்கொள்வதில் தெய்வச்சிலையாரைத் தவிர ஏனைய உரையாசிரியர்கள் பெரும்பாலும் ஒத்த கருத்தினை உடையவர்கள் என்பதை அவரவர் உரைகளால் அறிய முடிகிறது. இருப்பினும் ஏற்ற சொற்களை அமைத்துக் கொள்ளுதலுக்குச் சேனாவரையர் கூறிய உவமத்தின் பொருள்புலப்பாட்டுத்திறன், ‘கிளவியாக்கம்’ என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பிறர் சொன்ன கருத்துக்களை நோக்கினால் நன்கு புலப்படும். ‘நொய்யும் நுறுங்கும்’ என்பது வழுக்களைக் குறித்தன. அவை களையப்பட்ட அரிசி உணவுக்காவது போல வழுக்களைந்த சொற்களே மொழிக்கு ஆக்கமாகும் என்பது உவமத்தாற் பெறப்படும் கருத்தாகும். உரையாசிரியர்களில் சேனாவரையர் மட்டுமே இந்த உவமத்தைக் கையாண்டு பொருள் விளக்கம் தந்திருக்கிறார். அவ்வுவமையால் கிளவியாக்கம் என்னும் முதல் இயலின் உள்ளடக்கம் முழுமையும் தெளிவாகி விடுவதைக்  காணலாம்.

    இரட்டைக் கிளவி ஒரு சொல்லா? பல சொற்களா?

    தமிழில் ஓர் எழுத்து தனித்து நின்று பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாக நின்றும் பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து நின்று தொடராகப் பொருளுணர்த்தும். இவற்றோடு ஒரே சொல் இரட்டித்து நின்றும் பொருளுணர்த்தும். அவ்வாறு அது பொருளுணர்த்துங்கால் குறிப்புப் பொருளாகவே வெளிப்படும். சான்றாக ஒருவன் பற்களைக் கடித்துத் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கில் மக்கள் ‘அவன் பற்களை நறநறவென்று கடித்தான்’ என வழங்குவர். ‘நறவு’ என்னும் தமிழ்ச்சொல்லுக்குத் ‘தேன்’ என்று பொருள். இங்கே தேனுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. ‘நற’ என்னும் சொல் இரண்டுமுறை அடுக்கிவந்து பற்களைக் கடித்தவன் பாங்கினைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு ஒரே சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருளைச் சுட்டுவதை ‘இரட்டைக் கிளவி’ என்பது தமிழிலக்கண வழக்கு. இந்தக் குறிப்புப் பொருள் இசை, பண்பு, வினை என்னும் மூன்றினையும் சார்ந்து வரும். இவ்வாறு அமையும் இரட்டைக் கிளவிக்குள் இரண்டு சொற்கள் இருந்தாலும் அது ஒருசொல்லாகவே கருதப்படும் என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்து. ‘ஒரு சொல்லாய் நின்று அப்பொருள் உணர்த்திற்று’ என்பது சேனாவரையர் உரைப்பகுதி. இரண்டு சொற்களை ஒரே சொல்லாகக் கருதமுடியுமா என்பதற்கான விடையை விளக்குவதற்காகச் சேனாவரையர் காட்டுகிற உவமம் மக்கள் வழக்குச் சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

    “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கிரட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”

    என்பது இரட்டைக்கிளவியின் அமைப்பை விளக்குதற்குச் சேனாவரையர் காட்டும் உவமம்.  மக்களிலோ விலங்குகளிலோ இரட்டை என்றால் அவை ஒரே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவை தனித்தனியானவை. இரட்டைக்கிளவி அவை போன்றதன்று. இலைகளிலோ பூக்களிலோ இரட்டை என்றால் ஒன்றாகவும் இருக்கும் இரண்டாகவும் அமையும். ‘இரட்டைக்கிளவி’ என்பதும் இது போன்றதுதான் என்பதே சேனாவரையர் விளக்கம். இரட்டைக்கிளவியில் அமைந்திருக்கும் இரு சொற்களில் முன்னது குறைசொல்லாகவும் பின்னது முழுச்சொல்லாகவும் (குறுகுறுத்தான், கடுகடுத்தான், விறுவிறுப்பு — இவற்றுள் முன்னவை குறைசொல்லாகவும் பின்னவை முழுச்சொல்லாகவும் இருப்பதை நோக்கினால் சேனாவரையர் காட்டும் உவமம், இலக்கணப் பொருள் புலப்பாட்டுக்குச் செய்யும் பேருதவியைப் புரிந்து கொள்ள முடியும். ‘வில்வமரத்து இலைகள் புறத்தோற்றத்தில் மூன்றாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஓரிலையே’ என்பதாக விளக்கும் அறிஞர் சுந்தரமூர்த்தியின் கருத்து விளக்கமும் இங்கே சுட்டத்தகுந்ததாம். ‘இரட்டை’ என்னும் பன்மையும் ‘கிளவி’ என்னும் ஒருமையும் இணைந்தமைந்த ஒரு சொல்லாட்சியின் அடிப்படையை விளக்கப் பழந்தமிழ் உரையாசியர்கள் தொடங்கித் தற்கால இலக்கண அறிஞர்கள் முடியச் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.

    ஆ தீண்டு குற்றியும் அந்தநாள் வழக்கும்

    சொல்லளவில் ஒன்றாக இருப்பது பொருள்நிலையில் மாறுபடும். இதற்குப் பலபொருள் ஒரு சொல் என்று பெயர். இது  பலபொருளைக் குறிப்பது வினை, இனம், சார்பு என்னும் முத்திறத்தால் அமையும். இம்முத்திறத்தாலும் அமையும் அல்லது பொருளுணர்த்தும் பலபொருள் ஒருசொல்லை வினையால் மட்டுமே வேறுபடும் எனத் தொல்காப்பியம் கூறியிருப்பதற்குச் சேனாவரையர் வழக்குச் சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளிக்கிறார். பழங்காலத்தில் பசுக்கள் உடல் தினவு எடுத்தால் உராய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே மரக்கட்டைகளை நட்டிருப்பர். பசுக்களேயன்றி ஏனைய விலங்குகளும் தங்கள் உடல் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் கட்டையை மக்கள் வழக்கில் ‘ஆ தீண்டு குற்றி’ என்றே வழங்குவர். தினவு தீர்த்துக்கொள்ளும் விலங்குகளில் பசுக்கள் சிறப்புடைமையின் அதனை முன்னிறுத்தி ‘ஆ தீண்டு குற்றி’ என்றேயழைத்தனர். அந்த வழக்கியல் நிகழ்வை உவமமாக்கிக் கொள்கிறார் சேனாவரையர். ‘பல விலங்குகளும் பயன்படுத்திக் கொள்ளும் குற்றியை ‘ஆ தீண்டு குற்றி’ எனப் பசுவை மட்டும் விதந்து கூறுவதுபோலப், பலபொருள் ஒருசொல்லைப் பொருள் வேறுபடுத்தும் கூறுகள் இனம், சார்பென இருப்பினும் வினையின் சிறப்பு நோக்கி ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்’ என்றார் என விளக்கமளிக்கிறார்.

    மா பூத்தது என்பது ஒரு தொடர். மாவும் மருதும் வளர்ந்தன என்பது ஒரு தொடர். கவசம் பூட்டிய வீரன் மாவைக் கொணர்க என்பது ஒரு தொடர். இம்மூன்று தொடர்களிலும் மா என்னும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது. முதல் தொடரில் ‘பூத்தது’ என்ற வினையால் அது ‘மரம்’ என்பது பெறப்படும். இரண்டாவது தொடரில் ‘மருது’ என்னும் இனத்தால் ‘மா’ என்பது மரம் என்பது பெறப்படும். மூன்றாவது தொடரில் மருதமாகிய சார்புநிலையால் ‘மா’ என்பது குதிரை என்பது பெறப்படும். இம்மூன்றனுள்ளும் வினையால் வேறுபடுவதே பெரும்பான்மை என்பது அறிக.

    “இனமும் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி என்பதுபோல”

    என்பது சேனாவரையர் தரும் உவம விளக்கம். பலபொருள் ஒருசொல்லின் பொருள் வேறுபாடு ‘வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும்’ எனப் பின்னால் தொல்காப்பியம் கூறியிருந்தாலும், அது பற்றிய அறிமுக நூற்பாவில் இரண்டினை ஒழித்து, வினையை மட்டும் முன்னிறுத்தியமைக்கான காரணம் சேனாவரையரின் இந்த உவம விளக்கத்தால் அறியப்படுவதோடு, பழங்காலச் சமுதாய வழக்கங்களில் ஒன்றினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    நிலவு கருப்பென்பாரும் உளர்

    பால் வெண்மை என்பதே சரி. பால் வெண்மையானது என்பது தவறு. காரணம் பாலுக்கு வெண்மை இயல்பு. இயல்பான நிறத்தை அப்படியே சொல்லவேண்டுமேயன்றி ஆனது என ஆக்கம் வரவழைத்தல் கூடாது. ‘தனது இயல்பில் திரியாது நின்ற பொருளை அதனது இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இத்தன்மைத்து’ எனச் சுட்ட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அதாவது நீருக்குக் குளிர்ச்சியும் நெருப்புக்கு வெம்மையும் காற்றுக்குத் திரிதலும் நிலத்துக்கு உறுதியும் இயல்பானது. தண்ணீர் குளிர்ச்சி ஆனது என்பது பிழை வழக்கு. அந்தந்தப் பொருளுக்கான மேற்கண்ட தன்மையைக் குறிக்குமிடத்து நீர் தண்ணிது, தீ வெய்யது, காற்று உளரும், நிலம் வலிது எனக் கூறல் வேண்டுமேயன்றி நீர் தண்ணிது ஆயிற்று, தீ வெம்மை ஆயிற்று, காற்று உளர்தல் ஆயிற்று, நிலம் வலிதாயிற்று என ஆக்கச்சொல் வருவித்து உரைத்தல் மரபு வழுவாகும். இம்மரபினை,

    “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”

    என்னும் நூற்பாவில் தொல்காப்பியம் சுட்டுகிறது. சிலர் ‘நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவது பற்றிச் சேனாவரையர் சிந்தித்து எழுதுகிறார்.

    முதற்கண் எந்தெந்த இடத்தில் இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவதை அமைத்துக் கொள்ளலாம் என்பதனை விளக்கிக் காட்டுகிறார். இயற்கையான நிலத்தில் கருங்கல், செங்கல் ஆகியவற்றையெல்லாம் இட்டு வன்னிலமாக மாற்றியதொன்றை நிலம் வலிதாயிற்று என்றால் சொல்பவன் நிற்கும் இடம் இயற்கை நிலமன்று. ஆதலின் அது பிழையன்று.

    சேற்று நிலத்தில் நின்ற ஒருவன் பின் இயற்கையான நிலத்தில் நிற்பானாயின் பின்னது முன்னதின் வலிமையுடைத்து என்பதனால் அதுவும் பிழையன்று.

    மேற்கண்ட இரண்டு இடங்களிலும் ‘நிலம் வலிதாயிற்று’ என்பது ஒப்பீட்டுத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய சூழல்கள் ஏதுமின்றி ‘இயற்கை நிலத்தில் நின்று கொண்டே ‘நிலம் வலிதாயிற்று’ என ஒருவன் கூறினால் அது மரபுவழுவாம். இவ்வாறு ஒருவன் கூறுவது ‘நிலவு கரிய நிறம் உடையது’ என்று கூறுவதுபோல் என விளக்கமளிக்கிறார்  சேனாவரையர்.

    “நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்…. கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்றெனின் அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான் ‘நிலம் வலிதாயிற்று’ என்றவழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் ‘வேறுபாடு’ குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது ‘நிலத்திற்கு வன்மை விகாரமென்று’ ஓர்ந்து ‘நிலம் வலிதாயிற்று’ என்னுமாயின் ‘திங்கள் கரிது’ என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படாதென்க”

    திங்கள் வெண்மை என்பது உண்மை. வெண்மையைக் கருப்பென்று வழங்குவது  அஞ்ஞானம். மெய்ஞ்ஞானிக்கு விளக்கம் தேவையில்லை. ஞான சூன்யங்களுக்குச் சொன்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால் அஞ்ஞானிக்கு அவன் சொல்வதே வேதம். கடுமையான அணுகுமுறையைப் பெரும்பாலும் கைக்கொள்ளாத சேனாவரையர் உலக வழக்குச் சார்ந்த  கடுமையான வெளிப்பாடொன்றை  உவமமாகக் கூறியதன் மூலம் மரபு காப்பதில் தனக்குள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம்.

    நிறைவுரை

    ‘ஆற்றூர் சேனாவரையர்’ என வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் சேனாவரையர் நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணிக்கு அருகில் உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர். படைத்தலைவர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இவரது உரையின் பன்முகச் சிறப்புக்களில் மக்கள் வழக்குகளை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாக்கியனவே பெருமை எனக் கருதப்படுகிறது. சமுதாய வாழ்வியல் நெறிகளையும் நிகழ்வுகளையும் இலக்கண விளக்கத்தில் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரியபுராணச் சேக்கிழாரை இவரோடு ஒப்பிட இயலும். எதனையும் பரபரக்காது வரவரக் கண்டாய்வதே அறிவுடைமையாம் என்னும் கொள்கையுடையவர் சேனாவரையர். சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரையைக் கல்லாதவருக்குப் புலவர் உலகம் ஏற்பளிப்பதில்லை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 3

    முன்னுரை

    கவிச்சக்கரவர்த்திகள் என்னும் பெருமைக்குரியவர் மூவராயினும் கம்பனைத் தனித்துச் சுட்டுவது போலப், ‘பாரதி’ என்பார் பலராயினும் சுப்பிரமணியபாரதியையே சுட்டுமாறு போல இலக்கண இலக்கிய உரையாசிரியர் பலராயினும் அச்சொல் ஒருவரையே சுட்டுமாறு அமைந்திருக்கிறது. அந்தச் சிறப்பினைப் பெற்றவர் ஆசிரியர் இளம்பூரணர். தொல்காப்பிய அடவிக்குள் செல்லத் தடம் காட்டிய தண்டமிழ்ச் சான்றோர். கரையில்லாத் தமது தமிழ்ப்புலமையைக் கறையில்லா உரைசெய்து காலத்தால் அழிக்க முடியாத பெரும்புகழ் கொண்டவர். சேனாவரையம், நச்சினார்க்கினியம் மற்றும் பேராசிரியம் ஆகியவை தனித்தன்மை மிக்க உரைகளாகக் கருதப்படினும் அவற்றின் தனித்தன்மைக்கு மூலமாக இருந்தது இளம்பூரணரின் உரையே என்பதைக் கற்றார் அறிவர். ‘இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லாரால் போற்றப்படும் அன்னார் எழுதிய தொல்காப்பியம் முழுமைக்குமான உரையில் ஆங்காங்கே இலக்கண விளக்கத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    குலமகளும் கோபுரமும்

    அனைத்துவகைச் சிறப்புக்களை உடையதாயிருப்பினும் ஒரு நூலுக்குப் பாயிரம் என்பது இன்றியமையா ஒன்று. அது அறிமுகம். தோரணவாயில். முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்றெல்லாம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு அது அமையும். பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப் பாயிரம் எனவும் அது பகுக்கப்படுவதும் உண்டு. தொல்காப்பியத்திற்கும் அந்தப் பாயிரம் உண்டு. அதனை எழுதியவர் பனம்பாரனார் என்னும் சான்றோர். அந்தப் பாயிரம் தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ள பாங்கினை இளம்பூரணர் உவமம் கூறி விளக்குகிறார். ‘புகழ் புரிந்த இல் இல்லோரக்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்னும் குறட்பாவால் ‘கணவனுக்கு மனைவியே அணிந்துரை’ என்பதைக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைமகள் கண்ணகியைக் கோவலனினும் முற்படுத்தி அறிமுகம் செய்ததும் இது பற்றி என்க. இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது மனத்தில் எண்ணிய இளம்பூரணர்,

    “பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல  இன்றியமையாச் சிறப்பிற்று”

    என்று எழுதுகிறார். எண்ணிப்பார்க்க இயலாத உவமங்களைக் கவிதைகளில் பிணைத்துக் காட்டியவர் சுரதா. அவருக்கு இளம்பூரணர் வழிகாட்டியாக இருக்கலாம். பாயிரத்தை நோக்கினால் நூலின் தகுதி தெரிந்துவிடும். மனைவியின் பெருமை நோக்கினால் கணவனின் பெருமை புலப்பட்டுவிடும் என்பது கருத்து. இங்கே ஒரு நுட்பத்தை இளம்பூரணர் பதிவு செய்கிறார்.  மனைவியில்லையேல் கணவன் இல்லையென்பதை ‘இன்றியமையாச் சிறப்பிற்று’ என்னும் தொடரால் புலப்படுத்துகிறார்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    அக்காலத்தில் நகரங்கள் ஆலயங்களுக்குள் வடிவமைக்கப்பட்டன. மதுரை, திருவானைக்காவல், திருவரங்கம் முதலிய நகரங்கள் ஆலயத்திற்குள் அடக்கம். விமானம் என்பது கருவறைக்கு மேல் நிற்பது. கோபுரம் என்பது கோயிலுக்கு நுழைவாயிலாக அமைவது. நகரம் கோயிலுக்குள் அமைந்ததால் கோயிலுக்குக் கோபுரம் என்பதும் நகரத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. இதனைச் சிந்திக்கும் இளம்பூரணர், ஒரு நூலுக்கும் அதன் பாயிரத்திற்குமான தொடர்பைத்,

    “திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலான்”

    என்று எழுதுகிறார். மனைவி இன்றிக் கணவன் அமையமாட்டான் என்பதை முன்னுவமத்தால் பெறவைத்த இளம்பூரணர், இந்த உவமத்தால் அத்தகைய அறிவுடைய மனைவி அழகுபொலி நங்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை ‘அலங்காரமாதற் சிறப்பு’ என்னும் தொடரால் பெறவைக்கிறார்.

    இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன்

    ‘பார்த்து நடந்தால் பாதை தெரியும்’ என்பார் கண்ணதாசன். பார்த்து நடப்பதற்குக் கைகாட்டி இன்றியமையாதது. அந்த கைகாட்டித்தான் பாயிரம். இப்பாயிரம் அமையாத அல்லது படிக்காத நிலையில் நேரடியாக நூலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? என்பது பற்றி அடிகள் சிந்திக்கிறார். அதற்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    “பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும்”

    என்று எழுதுகிறார். உள்ளடக்கத்தின் அறிமுகம் பாயிரம். தடங்காட்டி  வழிநடத்தும் பொறுப்பு அதற்குண்டு. அப்பாயிரம் இன்றேல் உள்ளடக்கத்தை அறியா மாணவன் தடமறியாக் காட்டுக்குள் சென்ற மானாக இடர்ப்படுவான் என்னும் உவமத்தை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார்.

    நாலுழக்கு கொண்டதே நாழி

    ‘நாழி’ என்றால் ‘படி’ என்பது பலருக்கும் தெரியும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது சங்க இலக்கியம். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்பது மூதுரை. ஆனால் ‘நாழி’ என்னும் அளவு எப்படி வந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நுட்பமான இந்த அளவைக்கு மூலம் கிடையாது என்பதுதான் கருத்து. இதனை இளம்பூரணர் தக்க இடத்தில் உவமமாக்குகிறார். எழுத்துக்களை உச்சரிப்பதற்குரிய கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். அம்மாத்திரை அளவை எப்படி நிர்ணயிப்பது என்று,

    “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”

    என்ற நூற்பாவில் தொல்காப்பியம் சிந்தித்திருக்கிறது. இந்த நூற்பாவில் கண்ணிமையின் அசைவும், கைந்நொடியின் ஒலியளவும் ஒரு மாத்திரைக்கான கால அளவு என்பதை உணர்த்தியிருக்கிறார். இளம்பூரணருக்கு என்ன ஐயம் வந்தது? இதனை ஒரு மாத்திரை என்று கொள்வது எப்படி? என்பதுதான். அதற்கு அவர் எழுதுகிறார்,

    “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு என்றதனான், நாலுழக்கு கொண்டது நாழி என்றாற்போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக”

    அடிகள் உவமத்தால், நாழி என்பது எல்லாருக்கும் தெரியும். அது நாலுழக்கு கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. நுண்ணறிவு கொண்டார்க்கே அது புலனாம். அதுபோலக் கண்ணிமையும் நொடியும் மாத்திரை என்பது நுண்ணுணர்வுடையோர்க்கே புலனாம் என்று உவமம் கொண்டு விளக்குகிறார்.

    சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது

    முதலெழுத்து, சார்பெழுத்து என்னும் பகுப்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் இடம்பெறுவது தொல்காப்பிய வழக்கு.

    “குற்றியலிகரம் குற்றியலுகரம்
    ஆய்தம் என்ற
    முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன”

    என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களை முன்னர்ச் சுட்டி சார்பெழுத்துக்களை இந்த நூற்பாவில் சுட்டுகிறார் தொல்காப்பியர். முதலெழுத்தும் சார்பெழுத்தும் தனித்தனியாக விதந்தோதப்படுதலின் பின்னவை எழுத்தாகுமோ என்னும் ஐயத்தைக் களைய வேண்டிய கடப்பாடு உரையாசிரியருக்கு வருகிறது. இளம்பூரணர் இந்த ஐயத்தை ஓர் உவமத்தால் களைகிறார்.

    “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதிக் காட்டுகிறார். காட்டி, சார்ந்துவரல் மரபின் மூன்றெழுத்துக்களைத் தனியாக ஓதியது என்னையோவெனின் அவை பொருள் வேற்றுமையும் புணர்ச்சி வேற்றுமையும் கருதி வேறொரு தனியெழுத்தாகக் கூறினார் என்றும் காரணம் கூறுகிறார்.

    உயிர்மெய்யில் முன்னிற்பது எது? உயிரா? மெய்யா?

    அங்காந்த வாயினின்றும் வரும் ஆதியொலி அகரமெனின், உயிர்மெய்யை உச்சரிப்பது எவ்வாறு? அவ்வாறு உச்சரிக்குங்கால் முதலில் வருவது உயிரா மெய்யா? என்னும் அறிவுப்பூர்வமான ஐயம் வருவது இயல்பே. எழுத்துக்களின் தோற்றங்களை நிரலாகக் கூறிவரும் தொல்காப்பியம்,

    “மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

    என்னும் நூற்பாவில் உயிர்மெய்யின் தோற்றத்தைப் பற்றி ஆராய்கிறது. முன்னர்க் கூறியவண்ணம் உயிர்மெய்யில் முதலில் தோன்றும் ஒலி உயிரா மெய்யா என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் இந்த நூற்பாவால் களைகிறது. ‘உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று எனப் பதசாரம் எழுதிய இளம்பூரணர்,

    “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையான் அக்கூட்டம் பாலும் நீரும் போல  உடன்கலந்ததன்றி விரல் நுனிகள்  தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”

    என்னும் இரண்டு உவமங்களால் விளக்குகிறார். இப்படி இருக்கிறது என்பதற்கோர் உவமமும் இவ்வாறு நிற்பதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்கு மற்றொரு உவமத்தையும் பதிவு செய்து உயிர்மெய்யுள் எது முன்னது என்று தெரியாத வண்ணம் ஒலி வெளிப்படும் என்னும் நுட்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கலத்தலும் மயங்குதலும்

    ‘மயக்கமா? கலக்கமா?’ எனத் தொடங்கும் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல் பெருவழக்கு. ‘கலங்கி நிற்றல்’ என்பது வேறு. ‘கலந்து நிற்றல்’ என்பது வேறு. கண்ணதாசன் இப்படி எழுதுவதற்கு முன்னால் தொல்காப்பியர் கலத்தலா? மயங்குதலா? என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். தமிழில் சில சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் அவற்றிடையே நுட்பமான வேற்றுமை நிலவுவதை உரையாசியர்களின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாகக் கலத்தல், மயங்குதல் என்பன ஒரே பொருள்  தருவது போலத் தோன்றும் இரு சொற்கள். இவ்விரண்டு சொற்களையும் பிணைத்து,

    “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

    என்பது தொல்காப்பிய மரபியலில் காணப்படும் நூற்பா பகுதியாகும். ‘கலந்த மயக்கம்’ என்னும் தொடரில் ஒரே பொருளைத் தரும் இரண்டு சொற்களை  நோக்கிய இளம்பூரணர் அவற்றுக்கிடையே நிலவும் பொருள் வேறுபாட்டை நேரடியாக விளக்குவதைவிட உவமையால் விளக்குவதே ஏற்றது எனக் கருதியவராய்க்,

    “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல். ‘உலகம்’ என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். ‘உலகம்’ என்றது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். ‘உலகினுட் பொருள்’ பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டையும் உலகம் உடைத்தாதலின் ‘கலந்த மயக்கம்’ என்றார்”

    என விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வுவமைகளால் தன்னிலை மாறாமல் இணைவது ‘கலத்தல்’ எனவும், தன்னிலை இழந்து இணைவது ‘மயங்குதல்’ எனவும் அவற்றின் பொருள் விளக்கமாவதைத் தெளியலாம்.

    நிறைவுரை

    ‘இலக்கண விளக்கத்திற்கும் உவமப்பயன்பாடு ஏற்றதே’ என்னும் கொள்கையில் உறுதியாயிருக்கும் இளம்பூரணர் உரையில், பாலும் நீரும் என்னும் உலகியல், ‘எல்லா விரலும் ஒன்றல்ல’ என்னும் வழக்கியல், தோற்றம் இயல்பைக் குறைக்காது என்பது பட நின்ற ‘சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது’ என்னும் தத்துவம் முதலியன உவமங்களாக வந்துள்ளன. கோபுரமும் குறிச்சியும் உவமமாக வந்துள்ளன. ‘கலத்தல், மயங்குதல்’ என்னும் சொற்பொருள் விளக்கத்திற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப்படும் இவை மட்டுமே இளம்பூரணரின் உவமங்கள் அல்ல இன்னும் இருக்கின்றன என ஆற்றுப்படுத்துகிறது இக்கட்டுரை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 2

    முன்னுரை

    இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் பொருள் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் உவமம், பல நேர்வுகளில் இலக்கண விளக்கத்திற்கும் பயன்பட்டுள்ளது. இலக்கியத்தின் அழகியல் கூறாக விளங்கும் உவமம், இலக்கணத்துள்ளும் இலக்கண உரைகளுக்குள்ளும் இலக்கணத் தெளிவுக்கான கருவியாக அமைந்திருக்கிறது. உவமத்தின் தலையாய பணி, பொருள் புலப்பாடே. அப்புலப்பாட்டுப்பணி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முறையே அழகியல் உணர்வு, அறிவுத் தெளிவு என்னும் இருவேறு நோக்கங்களை நிறைவு செய்வதாக அமைந்திருக்கிறது. படைப்பின் பெருமையை அளந்துப் புலப்படுத்தும் கருவி உவமமே. இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமம் மேற்கூறிய வண்ணம் இலக்கியத்தின் அழகியல் பகுதியை நிறைவு செய்வதோடு அதன் நிலைப்பேற்றுக்கும் பெருங்காரணமாக அமைகிறது. ஆனால் இலக்கணத்துள் அதன் பணி வேறாக அமைகிறது. இலக்கண நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கும் அளவையியல் அடிப்படையில் இலக்கண உரை அமைவதற்கும் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயரின் உவமங்கள் இலக்கண விளக்கத்தின் மேல் செலுத்தும் ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    உறவுகளும் உவமமாகலாம்.

    நூலின் வகைகளைக் கூறவந்த பவணந்தியார் ‘மும்மையின் ஒன்றாய்’ என அடையாளப்படுத்துகிறார். முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்பன நூலின் மூன்று வகையாகும். அவற்றுள் ஒன்றின் திறன் மற்றொன்றில் காண்பது அரிது. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கி முதனூலாகவும் முதனூலை நோக்க வழி நூலாகவும் அயல்நூலை நோக்க சார்பு நூலாகவும் அமையும். தொல்காப்பியத்திற்கு நன்னூல் வழிநூல். தொல்காப்பியத்திற்கு வழிநூலான நன்னூல் அகத்தியத்தை நோக்கச் சார்புநூலாம் என்க. எனவே இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை என்பது பெறப்படும். “முதல் நூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்களுக்கும் பொருள்முடிபு ஒருபுடைத்து ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாகும்” என்னும் சங்கர நமச்சிவாயரின் விளக்கம் இதனை உறுதி செய்யும். சார்பு நூல் என்பது தொல்காப்பியக் கொள்கைக்கு மாறுபட்டதாயினும் நன்னூலார் காட்டும் உவமத்திற்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    “முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.”

    என்று எழுதுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் தந்தைக்கும் மருமகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. இருப்பினும் அவனும் ஓர் உறவே. இலக்கண நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது உவமத்தைக் கையாண்டு விளக்கம் கூறுவதும் அவ்வுவமங்களும் மானுட உறவுகளைப் பெருமைப்படுத்துவதுபோல் அமைந்திருப்பதும் தமிழியலின் உவமக்கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம். ‘தந்தையை நோக்க மகன்’ என்னும் உவமத்தால் முதுனூலின் சாரம் வழிநூலில் அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது என்பது பெறப்படும்.

    சிந்தை கவரும் ‘சினை உவமங்கள்’

    வழிநூலின் வகைகளைக் கூறும் நன்னூலார் ‘தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டென்ப” (51) என்னும் நு{ற்பாவில் நான்காகப் பகுத்துரைக்கின்றார். ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழியெர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே’ என்று தொல்காப்பியம் கூறும். நன்னூல் சிறப்புப்பாயிரத்துள் இது பற்றி ஆராயும் சங்கர நமச்சிவாயர், ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்றிருக்க, தொகை, வகை, விரி எனப் பிரித்தோதுவது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண்கிறார்.

    “வழியின் வகையாகிய யாப்பினுள் ‘தொகைவிரி’ என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய ஒன்றோடொன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க” (சிறப்புப்பாயிரம்)

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மரத்தின் பராரை முதலிய பகுதிகள் உவமமாக்கப்பட்டுப் பொருள் புலப்பாட்டுக்கு உதவுவதைக் காணலாம்.

    வினைச்சொல்லில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களும் அடங்கும். எனினும் பகுதி, விகுதி என்பவையே கண்ணுக்குப் புலப்படுமாறு அமையும். ஏனைய நுண்ணிய பார்வைக்கும் புலமைக்கும் உரியவை.  பவணந்தியார் இந்தப் பார்வையை,

    “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
    பகுதி விகுதி பகுத்திடை நின்றதை”

    எனக் கூறுவதன் மூலம் அவ்விரண்டையுமே விதந்தோதுகிறார். தொடர்ந்து இடைநிலையைக் கூறும் அவர் ஏனைய உறுப்புக்களைக் கூறாது விடுகிறார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த சங்கர நமச்சிவாயர், இன்றியமையாதவற்றை முதலில் கூறி மற்றவற்றைப் பின்னர் கூறுவதாகத் தாம் எண்ணியதை ஓர் உவமத்தின் வழி விளக்குகிறார்.

    “மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன எனக் கண்டது கூறுவார் போல”ப்  (146)  பகுபதம் பகுதி முதலிய உறுப்போடு நின்றது எனக் கண்டது கூறி, அப்பதம் தந்த தோலா நாவின் மேலோர் ஆணையின் நிற்றலின் ‘கண்டதற்கு’ என்றும் கூறினார்”

    என உவம விளக்கம் தருவதைக் காண முடிகிறது. கண்ணில் படுவதை முன்னர்க்கூறிப் பிறவற்றைப் பின்னர்க் கூறுவதற்கு உரையாசிரியர் மரங்களையும் அவற்றின் சினைப்பகுதியையும் உவமமாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    கமுகந்தோட்டம் என்றாற்போல

    நன்னூலில் மூன்றாவது இயலாக அமைந்திருப்பது உயிரீற்றுப் புணரியல். பல்வகைப் புணர்ச்சிகளும் இவ்வியலுள் ஆராயப்பட்டுள்ளன. பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்பட்டிருக்கும் ஓர் இயலுக்குக் குறிப்பிட்டதோர் புணர்ச்சியை மட்டும் பெயராக்கியதற்கு ஓர் உவமம் கூறி விளக்குகிறார் சங்கர நமச்சிவாயர். கமுகு என்றால் பாக்கு. கமுகந்தோட்டம் என்றால் பாக்குத் தோப்பு என்பதாகும். அதனுள் தென்னை, பலா, தேக்கு, மா எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து நிற்கும். எனினும் பெரும்பான்மை பற்றி அதற்குக் ‘கமுகந்தோட்டம்’ என்பது வழக்கு. அதுபோலப் பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்படினும் பெரும்பான்மை உயிரீறு பற்றிய புணர்ச்சியே ஆதலின் இவ்வியலுக்கு இப்பெயர் அமைந்ததாக உவம விளக்கம் செய்கிறார் உரையாசிரியர்.

    முடவன் கோலூன்றி வந்தாற்போல

    ஙகர மெய் (ங்) அகர உயிர் ஒன்றுடன் கூடியே சொல்லுக்கு முதலில் வரும் அவ்வாறு சொல்லுக்கு முதலாகும் போதும், அ, இ, உ என்னும் சுட்டுக்களையும், எ, யா என்னும் வினாக்களையும் முதலாகக் கொண்டு வரும். தனித்து வராது. இதனைச்,

    “சுட்டு யா எகர வினாவழி அவ்வை
    ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே” (106)

    என்னும் நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். இதற்கு உரைவிளக்கம் கண்ட சங்கர நமச்சிவாயர்,

    “ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு, வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான்”

    என்றெழுதுகிறார். இலக்கணத்திற்கு உரையெழுதும் உரையாசிரியர் பார்வையில் சுட்டும் வினாவும் முடவனாகிய ஙகரத்திற்கு உதவும் கோலாகத் தோன்றியிருக்கின்றன என்பதே இவ்வுவமப்பார்வையின் சிறப்பாகலாம்.

    நச்சினார்க்கினியரை வழிமொழியும் நமச்சிவாயர்

    உயிரும் மெய்யும் கலந்து வரும் எழுத்து உயிர்மெய் எழுத்து. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பதால் மெய்க்கும் மூலம் அகரம் என்பது பெறப்படும். அதாவது மெய்களின் இயக்கமும் அகரமின்றி அமையாது. இறைவன் எல்லா உயிர்களோடும் கலந்து நிற்பதை உவமமாக்கி நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் (தொல். மொழிமரபு. 46) உரைவிளக்க உச்சம். எனினும் ‘உயிர்மெய்’ என்றவிடத்து முதலில் பிறக்கும் ஒலி மெய்யா உயிரா என்பது பற்றி ஆழமான சிந்தனை உரையாசியர்களிடம் இருந்து வந்திருக்கிறது. ‘நெடுநல்வாடை’ இலக்கியத் தலைப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய பேரார்வம் ‘உயிர்மெய்’ என்னும் சொல்லாட்சி பற்றிய ஆய்விலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை,

    “மெய் முன்னர் நிற்ப உயிர் பின்வந்து ஏறுமென்றார். அம்முறையே  ஓசையும் பிறக்கும் என்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல்’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே ஆயவாறுபோல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க” (தொல். நூ.ம.18 உரை)

    என்னும் அவருடைய விளக்கத்தால் அறிய முடியும். இந்தக் கருத்தினை உள்வாங்கிய நமச்சிவாயர் ‘நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே’ (நன்.109) என்னும் நூற்பாவின் விளக்கத்தில்,

    “எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓர் எழுத்தாக (நன்.60)  எண்ணினார் ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணம் கூறுவது என்னை எனின் “அப்பொடு பெய்த உப்பே போல’ உயிரொடு புணர்த்திய மெய் தன் அளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின் என்று உணர்க’

    என்று எழுதுகிறார். இதனால் இலக்கணக் கருத்துக்களை வழிமொழியும் வழி நூலில் அந்நூலின் உரையாசிரியர் முதனூலின் உரைப்பகுதியையும் வழிமொழிவதை அறிய முடிகிறது.

    நிறைவுரை

    ஒரு நூலுக்குப் பலர் உரைகாணும் உரை மரபு தமிழுக்குப் புதியதன்று, முதனூல் நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக வழிநூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது போலவே முதனூல் உரையாசிரியர்களின் உவமங்களையும் வழிநூல் உரையாசிரியர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் அல்லது மறுத்திருக்கிறார்கள். மானுட உறவுகளும், மாற்றுத் திறனாளிகளும் இடம்பெறும் இந்த உரைகளில் இயற்கையைப் பற்றிய விரிந்த பார்வையும் அறிவும் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. சமுதாய விஞ்ஞானிகளாகவும் இயற்கையின் ரசிகர்களாகவும் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

    முன்னுரை

    ‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

    பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

    இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

    ‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

    பொற்கொல்லரும் பொடியும்

    ‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

    நேரிசை வெண்பா உருவான கதை 

    யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்”

    என்பது ஒரு குறள் வெண்பா.

    “தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
    தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    செய்திருக்கும் மாற்றங்கள்:

    1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
    2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

    இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

    “‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

    குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

    1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
    2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
    3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
    4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

    நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

    ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 3

    முன்னுரை

    நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் பணியின் அருமையை உணர்ந்து கல்வியை உள்வாங்கிச் செரிக்கும் அளவில் மாணவர்களின் இயல்பு நிலை வரையறுக்கப்படுகிறது. இயல்பால் மாணாக்கர் முதல், இடை, கடை என மூவகைப்படுவர். பொதுவாக மாணவர்தம் சிறப்பியல்புகளைத் தொகுத்துக் கூறி முதல், இடை, கடை மாணாக்கார்தம் இயல்புகளை உவம அளவையால் எடுத்துரைக்கிறார்.

    கற்பித்தலும் கற்றலும்

    ‘கற்பித்தல்’ ஈதல் என்றால் ‘கற்றல்’ ‘கொள்வது’ அல்லவா? எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதனை,

    “ஈதல் இயல்பே இயம்பும் காலை
    காலமும் இடனும் வாலிதின் நோக்கி
    சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
    உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
    வரையான், வெகுளான், விரும்பி, முகமலர்ந்து
    கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
    கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப”

    என்னும் நூற்பாவில் நிரல்படுத்தியிருக்கிறார். இந்த நிரலில் ‘நோக்கி, வாழ்த்தி, அமைத்து, மலர்ந்து, அறிந்து’ என்னும் வினையெச்சங்கள் எச்சங்களாக நில்லாமல் ஆசிரியரின் பண்புகளாக விளங்குகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இனி, எப்படிக் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் நன்னூல் தெளிவாக கூறுகிறது. ஆசிரியன் இருப்பிடம் தேடிக் காலத்தோடு செல்லவேண்டும். அவரை வழிபடலில் தயக்கம் கூடாது. (‘பிற்றைநிலை முனியாது’ என்றதும் அது.) சினங்கொள்ளுதல் கூடாது. ஆசிரியரது பண்போடு உறவாடுதல் வேண்டும். அன்னாருடைய குறிப்பறிதல் வேண்டும். ‘இரு’ என்றால் இருக்கவும் ‘சொல்’ என்றால் சொல்லவுமான ஆணைக்குக் கட்டுப்படும் அடக்கம் இருத்தல் வேண்டும். ‘கோடையில் நீர் தேடும் தாகமுற்றவனின் மனநிலையைப் பெறுதல் வேண்டும். செவி வாயாக வேண்டும். அக்கேள்விச் செல்வத்தைக் கொள்ளும் இடமாக மனமும் இருத்தல் வேண்டும்.  ‘மனநிறைவாகக் கொடுத்திருக்கிறோம்’ என நிறைவடைந்த ஆசிரியன் அனுமதித்த பிறகே இல்லம் திரும்புதல் வேண்டும். இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் பவணந்தியார் பாடம் கேட்கும் புறச்சூழலில் மாணவனின் நிலையைச்,

    “சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி”

    என்னும் உவமத்தால் விளக்குகிறார் பவணந்தியார். சித்திரம் போல் இருத்தல் வேண்டும் என்னும் சிந்தனை அகநானூற்றில் வரும் சித்திரத்தலைவியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. தலைவன் பிரிவால் தான் பட இருக்கும் துன்பத்தைக் கருதாது, தலைவன் செல்லும் வழியருமை எண்ணி மருகும் தலைவி சித்திரம் போல் நின்றாள் என்பதை,

    “முன்னம் காட்டி, முகத்தில் உரையா
    ஓவச்செய்தியின் ஒன்று நினைத்து ஒற்றி”

    என்னும் வரிகள் உணர்த்தும். பாடம் கேட்கும் மாணவர்கள் சித்திரத்தைப் போல அமைதிகாக்க வேண்டும் என்பது கருத்து. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத் தன்மைக்குச் சித்திரநிலை உவமமாவது தமிழ் மரபு. ‘மெய்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திரு துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் வண்ணனை செய்வார். இந்த உவமத்திலிருந்து பாடம் கேட்கும் நிலையில் மாணவனுக்கு இருக்க வேண்டிய ஒரே பண்பு அமைதி என்பது பெறப்படும்.

    அன்னப் பறவையும் அசைபோடும் பசுவும்

    தலை, இடை, கடை என மாணாக்கர்களைப் பிரித்த பவணந்தியார் தலை மாணாக்கருக்கு அன்னப்பறவையையும் பசுவையும் உவமமாக்கியிருக்கிறார். மானுடத்தின் வாழ்நாள் மிகக்குறைவானதாகையால் அக்குறிப்பிட்ட காலத்திற்குள் கற்க வேண்டியனவற்றையே கற்றல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாலடியார்,

    “கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து”

    என உவமத்தால் விளக்கும். கருத்தளவிலும் மாணவர் இயல்பாகவும் பவணந்தியார் இதனை வலியுறுத்துகிறார். அடுத்து சூழ்நிலைக்கேற்ப இரையெடுக்கும் பசு, பிறகு அமைதியாகப் படுத்து உண்டவற்றை மீண்டும் வாய்க்குக் கொணர்ந்து அசைபோடும். பயனுள்ளவற்றைப் பிரித்துக் கற்கும்  மாணவன் அவற்றின் முழுப்பயன் அடைய மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சிந்திக்க வேண்டும். தற்காலத்திலும் பயனுள்ளவற்றைக் கற்கவேண்டும் என்பதும் கற்றவற்றைப் பற்றிய சிந்தனை தொடர வேண்டும் என்பதும் ஒரு கல்விக் கொள்கையாக இருந்துவருகிறது என்பதை அறிதல் வேண்டும். பயனுள்ளவற்றைப் பகுத்தறியும் அன்னத்தையும் உண்ட இரையை நன்கு செரித்துக் கொள்வதற்காக அசைபோடும் ஆவையும் தலைமாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    நிலமும் கிளியும்

    ‘நிலத்திற்குரிமையாளன் நாளும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று அதனை நலம் விசாரிக்காவிடின், அந்நிலம் இல்லாளைப்போல ஊடிவிடும்” என்பது திருக்குறள் கருத்து. ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாம ஏர்நடத்தி, கம்மா கரைய ஒசத்திக்கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி, சம்பாப் பயிரைப் பறிச்சி நட்டு, தகுந்த முறையில் தண்ணீர் விட்டு”  வளர்த்தால்தான் நிலம் பயன் தரும் என்பதை விளக்கிக் காட்டுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்விரு கருத்துக்களால் நிலத்தைப் பாதுகாத்து முறைப்படிப் பயிர் செய்துவரும் உழவனுக்கே அதன் பலன் கிட்டும் என்பது பெறப்படும். ஆசிரியனையும் அவனுடைய காரியமாகிய நூலையும் நாளும் ஓதி ஓதி சிந்தித்து உழைத்து மெய்ப்பொருள் காணும் இயல்புடைய மாணவனுக்கே கற்றலின் பயன் முழுமையாகக் கிட்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பர். கிளிக்குத் தானாகப் பேச வராது. ஆசிரியன் செய்கின்ற முயற்சியின் அடிப்படையில் தன்னறிவைப் பெருக்காது அவர் சொல்வதை மட்டுமே உள்வாங்கிக் கொள்பவன் கிளியையொப்பான். இவ்வாறு உழைத்தாலன்றிப் பயன்பெற இயலாத நிலத்தையும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையையும்  இடை மாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    கடைமாணாக்கரும் நான்கு உவமங்களும்

    தலைமாணாக்கர்க்கும் இடைமாணாக்கர்க்கும் இரண்டிரண்டு உவமங்களைக் காட்டிய பவணந்தியார் கடை மாணாக்கார்க்கு நான்கு உவமப்பண்புகளை ஏற்றியுரைக்கிறார். ‘இல்லிக்குடம்’ என்பதற்குப் பலரும் ‘ஓட்டைக்குடம்’ என்று பொருள் சொல்வர். ‘ஒழுகும் விரைவு’ கருத்தானால் அவ்வுரை நேரியதே. ‘பசுமட்கலம்’ என்றும் கருதமுடியும். அது தன்னுள் வாங்குகிற நீரை வைத்துக் கொள்ள இயலாது புறத்தே கசியவிடும்.  மாணாக்கருள் சிலர் ஆசிரியர் கூறும் கருத்துக்களை உள்வாங்கிப் பொதிந்து வைக்க இயலாமல் புறத்தே விட்டுவிடுவர். தொடர்ந்து, மேய்கின்ற ஆட்டினை உவமமாக்குகிறார். ஆடு தன் வயிறு நிரம்பும் அளவிற்கு மேயாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயுமேயன்றி எதனையும் உருப்படியாக மேய்ந்து பசியாற்றிக் கொள்ளத் தெரியாது. மேலெழுந்தவாரியாகக் சிலவற்றைக் கற்கும் இடை மாணாக்கர் இத்தகையவர். கல்வி குழப்பத்திலிருந்து தெளிவு நோக்கியது. தெளிவிலிருந்து குழப்பத்தை நோக்கியது அன்று, எருமை தெளிவான நீரைக் கலங்கலாக்கும். மாணவர்களிலும் சிலர் அவ்வாறு இருப்பர். இறுதியாக மெய்ப்பொருள் கொண்டு பொய்ப்பொருள் தள்ளிவிடுவதே அறிவின் நோக்கம். மாறாக அல்லனவற்றைக் கொண்டு நல்லனவற்றைத் தள்ளிவிடும் மாணாக்கரும் உளர். அவர்க்கு உவமமாகச் சொல்லப்பட்டதுதான் நெய்யரி (பன்னாடை போன்றது).

    “அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
    இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
    அன்னர் தலையிடைகடை மாணாக்கர்”

    என்னும் நூற்பாவில் தலை, இடை, கடை மாணாக்கர்க்கான பண்புகளை உவமங்கள் வாயிலாகவும் விளக்கிக் காட்டியிருக்கிறார் பவணந்தியடிகள்.

    நிறைவுரை

    நல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதல் பண்புகள் உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. அல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதலாக உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அவ்வாறு பாகுபடுத்தாத பவணந்தியார் அவர்களின் தரத்தை மட்டுமே வேறுபடுத்திக் காட்டுகிறார். தற்காலத்தில் மதிப்பெண்களால் அல்லது குறியீடுகளால் வரையறுக்கப்படும் நிலைக்கு இது ஒப்பாகலாம். சுருக்கமாகச்  சொன்னால் கற்பிக்கின்றவருக்குத் தகுதி நிர்ணயம் செய்வதற்கும் கற்பாருக்குத் தர நிர்ணயம் செய்வதற்கும் பவணந்தியாருக்கு உவமங்கள் கைகொடுத்திருக்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 2

    முன்னுரை

    உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்பதற்குக் ‘காஞ்சிரங்காய் எட்டிக்காய்’ என்றும் பரிமேலழகர் எழுதிய முரணுரையைப் போன்றது இது. கற்பித்தல் பணி என்பது கருத்துக்களின் நிரலான வெளிப்பாடு. குழப்பத்தினின்றும் நீங்கித் தெளிவை நோக்கி நகர்வது. கற்றல் என்பது எளிதில் பெறக்கூடியது. ஏக்கத்துடன் கூடிய முயற்சியின் பயன். இந்தப் பண்புகள் இல்லாதவர்களையே பவணந்தியார் ஆசிரியர் அல்லாதவர் என்கிறார். அத்தகையோரை அடையாளப்படுத்தும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    கருத்துக்களின் வெளிப்பாடும் கழற்சிக்காய் குடமும்

    கழற்சிக்காய் என்பது ‘கழிச்சிக்கொட்டை’ என்றும் ‘கழிச்சிக்காய்’ என்றும்  பொதுவாக வழங்கப்படுவது. அது அக்காலப் பெண்களின் விளையாட்டுக் கருவி. பல்லாங்குழியில் புளியங்கொட்டை, சோழியைப் போல.

    “கைபுனை குறுந்தொடி தந்தப் பைப்பய
    முத்த வார்மணல் கொற்கழங்கு ஆடும்”

    என்பது பெரும்பாணாற்றுப்படை. விளையாட்டுக் காய்களை விளையாட்டு முடிந்ததும் ஒரு சிறிய கூடை அல்லது குடத்தில் இட்டு நிரப்பி வைத்துப், பிறகு தேவைப்படுகிறபோது கொட்டிப் பயன்படுத்திக் கொள்வது நடப்பியல். இந்த நிகழ்ச்சியைப் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார்.

    “பெய்த முறை அன்றிப் பிறழ்வுடன்தரும்
    செய்தி, கழற்பெய் குடத்தின் சீரே!”

    இந்த நூற்பாவில் கழற்பெய் குடம் என்பது பற்றி மேலே கண்டோம். ‘செய்தி’ என்றால் செயல். ‘ஒருவன் செய்தி கொன்றோர்க்கு’ என்றவிடத்துச் செய்தி என்பது ‘செயல்’ என்னும் பொருள்படுவது காண்க. விளையாட்டு முடிந்து குடத்துக்குள் நிரைக்கும்முறை வேறு அதனை அடுத்த விளையாட்டிற்காகக் கொட்டும்போது நிகழும் முறை வேறு. நிரப்புகிற நிரலில் கொட்டுகிற நிரல் அமையாது. முரணாகும். குழப்பமாகும். எது முன்பின் என்பது தெரியாது. இந்தக் குழப்பநிலையைத்தான் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார். கழல் என்பது அக்காலத்தில் பெரும்புழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால் அது நிறைந்த குடத்தை உவமமாக்கியிருக்கிறார். கழல் உவமமாகாது. கழலால் நிரப்பப்பட்ட ஆசிரியரே உவமமாவார். கற்பிக்கப்படும் பாடங்கள் பல்வகையாக உள்ளத்துக்குள் இருந்தாலும் அவற்றை நிரலாக ஒவ்வொன்றாக விளங்கும்படிச் சொல்லுவதே கற்பித்தல் பணி. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாகப், பின்னும் முன்னுமாகக் கற்பிப்பது மாணவனுக்குப் பயன் தராது. அத்தகைய கற்பித்தல் முறையைக் கொண்டவன் எந்நாளும் ஆசிரியர் என்னும் தகுதிக்கு உரியவன் ஆகமாட்டான் என்பது கருத்து. இங்கே கழற்சிக்காய் உவமமன்று. அது பெய்யப்பட்டிருந்த குடமும் அதன் தலைகீழ்வினையுமே உவமம் என்பது அறிக.

    மடற்பனையும் ஆசிரியரும்

    ‘தாழையெல்லாம் மடற்கத்திச் சுழற்றவைத்து’ என்பார் பாவேந்தர். மடலை உடைய இரண்டு தாவரங்களுள் ஒன்று பனை. மற்றொன்று நெய்தல்நிலத் தாவரமான தாழம்பூ. தாழம்பூ மடலின் இருபுறமும் கூரான முட்கள் கத்திபோலக் காணப்படும். மடற்பனையின் புறத்தில் அதன் மட்டையெல்லாம் கத்திபோலக் காணப்படும். அவற்றை ஒதுக்கி மேலே ஏறிப் பழத்தைப் பறிக்க இயலாது. கடினம். பனம்பழம் சுவையானது ஆயினும் பெறவியலாத நிலையில் அது எப்போது விழுகிறதோ அப்போது காத்திருந்து பெற்றுச் சுவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    “தானே தரக்கொளின் அல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை”

    என்னும் நூற்பாவில் மடற்பனையின் இயல்பை விளக்கிக் காட்டுகிறார் பவணந்தியார். ‘எளிவந்த பிரான்’ என்பது இறைவனுக்கான புகழ்நாமங்களில் ஒன்று. ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பது திருவாசகம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் அடியவனைத் தேடி இறைவன் அருள்பாலிப்பதைப் போல் மாணவனுக்கு ஓடிவந்து அருள் பாலிப்பதே நல்லறம். மாறாக தன்னை அண்ட முடியாத இடத்தில் வைத்துக் கொண்டு தான் எப்போது கொடுக்க இயலுமோ அப்போதுதான் மாணவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனநிலை ஆசிரியன் தகுதிக்கு முரணானது.

    பருத்திக் குடுக்கையும் ஆசிரியரும்

    கல்வி கரையில என்றதால் அது கடல் என்பது பெறப்படும். யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைப்பதுபோல அளவற்ற கல்விச் செல்வத்தை ஆசிரியர் ஒருவர் தன்னுள் பொதிந்து வைக்கிறார். பொதிந்து வைக்கப்பட்ட அச்செல்வம் அவருக்கானது அன்று. பிறருக்கானது. அதனால்தான் கற்பித்தலை ‘ஈதல்’ என்றார் பவணந்தியார். அவரிடம் கற்பதை ‘உடையார் முன் இல்லார் இரப்பதுபோல் கற்க வேண்டும்’ என்றார் திருவள்ளுவர். இருப்பதைக் கொடுக்கின்ற இந்த நிகழ்வு தடையின்றி நிகழவேண்டுமாயின் உள்ளேயிருப்பதும் ஊறுவதும் தடையின்றி வெளிவரவேண்டும். ‘குடுக்கை’ என்றாலும் ‘குண்டிகை’ என்றாலும் ஒன்று. பருத்தியைக் குடுக்கையுள் வைத்துத் திணிப்பது ஒரு செயல். திணித்ததை வெளியில் எடுத்துத் தர எண்ணுகிறபோது ஒட்டுமொத்தமாகவோ சரளமாகவோ வெளியே வராது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத்தான் தரவேண்டி வரும்.

    “அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு
    எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை”

    என்னும் நூற்பாவில் உள்ளே அரிதாகப் பெய்யப்படுகிறபொருளை எளிதாகத் தர இயலாத குண்டிகை விளக்கப்படுகிறது. இந்தக் குண்டிகையன்ன ஆசிரியர் தான் கற்ற பொருளைத் தன்னிடம் இரந்த மாணவனுக்கு எளிதில் தர இயலாதாம்.  கொடுப்பதற்கென்றே சேர்த்த கல்வியை வைத்துப் பூட்டிக் கொள்கிற அல்லாசிரியர் இயல்புக்குப் பருத்திக் குணடிகையை உவமமாகச் சொன்னது பொருத்தமானதுதானே!

    தென்னையுள்ளமும் ஆசிரியரும்

    ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பது தமிழகத்துப் பழமொழி. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்க வேண்டும்’ என்னும் முரணும் தமிழ் நெறியே. ‘உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்பது மற்றொரு வரைவிலக்கணம். இவற்றையெல்லாம் தொகுத்துச் சிந்தித்தால் ‘கற்றல்’ என்பது பணிவின் வெளிப்பாடு என்பதும் இரத்தலுக்கு இணையானது என்பதும் ‘கற்பித்தல்’ ‘அறச்செயல்’ என்பதும் கல்வி ஒரு செல்வம் என்பதும்  பெறப்படும். ஆசிரியர் இருக்கும் இடந்தேடி மாணவர் சென்று கற்ற காலம் ஒன்று. மாணவர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு ஆசிரியர் வந்திருந்து கற்பித்துவிட்டுச் செல்லும் காலம் ஒன்று. எந்தக் காலமாயினும் கற்றல் என்பது  தொழுது பெறுவதே. ‘தொழுபவர்க்கே கல்வி’ என்றும் கருதமுடியும். ஆனால் தொழுபவனை விட்டுத் தொழாதவனுக்குக் கல்வி கொடுப்பதும் நிகழ்கிறது. இத்தகைய இயல்புடைய ஆசிரியருக்குச் சொல்லப்பட்டிருக்கும் உவமமே ‘முடத்தெங்கு’ என்பதாகும். பெரும்பாலும் தென்னைக்கும் பனைக்கும் உள்ள அடிப்படை நிற்கின்ற பாகையில்தான அமையும். பனை நேராக நிற்கும். தென்னை நேராக நிற்காது. இந்த வளைவு தான் வேர்பிடித்திருக்கும் இடத்தை மறந்து அடுத்தவர் இடத்தில் தேங்காய்களைப் போடும் அளவிற்கு இருக்கும். வளைந்த இந்தத் தென்னைக்குத்தான் முடத்தெங்கு என்று பெயர்.

    “பல்வகை உதவி வழிபடு பண்பின்
    அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே”

    பாவேந்தர் பாரதிதாசன் ‘தென்னையுள்ளம்’ என்று இதனை அழைப்பார். அவர் வேறொரு சிந்தனைக்கு அதனை உவமமாக்குவார். தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்களுக்கு அந்த உவமத்தை அவர் சொல்வார். எனவே முடத்தெங்கினைப் போலப் பணிந்து, உதவியவனுக்குப் பலனளிக்காது,  அப்பண்புகள் அறவே அற்ற சற்றும் தொடர்பற்ற ஒருவனுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியன் ‘முடத்தெங்கு’க்கு ஒப்பாவான் என்பது கருத்து.

    நிறைவுரை

    நல்லாசிரியருடைய பண்புகளைப் பற்றிக் கூறும்போது பண்புகளை முதலில் கூறி, உவமங்களைப் பின்னர் தொகுத்துக் கூறியது போலவே,

    “மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
    அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
    கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை
    முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
    உடையோர் இலர் ஆசிரியரா குதலே!”

    என்ற நூற்பாவிலும் அல்லாசிரியர் பண்புகளை முன்னர்க்கூறி, உவமங்களால் ஏனைய பண்புகளையும் உடன் கூறியிருக்கிறார். உவமங்கள் நான்கும் இயல்பாக அமையக் கூடாதவை என்பதை உணரமுடியும். “மொழிகுணம் இன்மையும்  இழிகுண இயல்பும் “அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்” என்னும் இயல்புகள் ஆசிரியர் பணிக்கு நுழைவுத் தேர்வு எழுதவே தகுதியற்றவை. நான்கு உவமங்களையும் கற்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இருக்கக் கூடாத முரண்களுக்காக்கியிருக்கிறார் பவணந்தியார். இதனை ‘முரண் கொள் சிந்தை’ என்னும் தொடர் உணர்த்தக் கூடும். நல்லாசிரியர், அல்லாசிரியர் போலவே நன்மாணாக்கர், அல்மாணாக்கர் பற்றிய உவமங்கள் தொடர்ந்து ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் –  613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளும் நன்னூலும்

    முன்னுரை

    ‘இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர இலக்கணத்திற்காக இலக்கியமன்று’ என்பது மரபு. இலக்கியம் என்பது ஈண்டு வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கியதே. அதனால்தான் இலக்கண விதிகளுக்கு மாறுபட்டு மக்கள் வழக்கு அமைகிறபோது இலக்கண ஆசிரியர்கள் அவற்றுக்குப் புறனடை கண்டு அமைத்துத் தழுவிக்கொண்டனர். இந்தக் கட்டுரை ‘இலக்கியத்திற்கு இலக்கணம்’ என்பதை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள உவமங்கள் இலக்கணத்துள்ளும் பயின்று வரும் பாங்கினை ஆராய்வதாக அமைகிறது. தனித்தமிழ் மறை திருக்குறள். தொல்காப்பியத்தின் வழிநூல் நன்னூல். திருக்குறளில் பல்வேறு நேர்வுகளில் பல்வேறு அதிகாரங்களில் கையாளப்படும் உவமங்களை அவற்றின் பொருண்மை விளக்கப் பொருத்தம் கருதிப் பவணந்தியார் அவற்றை அப்படியே தமது நூலில் தொகுத்துரைப்பதை அறிய முடிகிறது. முந்தைய இலக்கியத்திலிருந்து பிந்தைய இலக்கணம் உரிமையோடு எடுத்துக் கையாண்ட சில உவமங்களின் சிறப்புக்களை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    நல்லாசிரியருக்கான அளவுகோல்

    தற்காலத்தில் குறிப்பிட்ட பட்டமும் அதற்கான ஆசிரியர் பயிற்சிக்கான பட்டமுமே ஆசிரியர்க்கான தகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பழந்தமிழ்க் கல்விக் கோட்பாட்டில் பண்புகளே ஆசிரியர்களை நிர்ணயம் செய்தன. மாணவர்க்கும் அவை வலியுறுத்தப்பட்டன. ‘உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்கள்’. கற்பித்தலைத் தற்காலத்தைப் போல் வணிமயமாக்காமல் ‘ஈதல் இயல்பு’ என்றார்கள். கல்வி செல்வமானதால் கற்பித்தல் ஈதலாயிற்று. செல்வம் இரத்தற்குரியதாதலின் கற்றல் ‘கோடல்’ மரபாயிற்று. கல்விச் செல்வத்தைத் தகுதியுடையார்க்கு வழங்கும் ஆசிரியரின் பண்புநலன்களைப் பொருளாகவும் உவமத்தோடு பொருத்தியும் கூறும் நன்னூல் நிலம், மலை, மலர், துலாக்கோல் என்னும் பொருள்களை ஆசிரியர்க்கு உவமமாக்கியிருக்கிறது. இந்த நான்கையும் திருவள்ளுவர் பல்வகை நேர்வுகளில் தமது குறட்பாவில் பயன்படுத்தியுள்ளார். நீதி இலக்கியமொன்றில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இலக்கண நூலொன்றில் பயன்பட்டிருக்கும் பாங்கு இனி ஆராயப்படும்.

    நிலமும் ஆசிரியரும்

    பொறையுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என ‘இகழ்ச்சியைப் பொறுக்கும் தன்மைக்கு’ நிலத்தை உவமமாக்குவார் திருவள்ளுவர். நிலத்தின் மேன்மையும் திண்மையும் பொறுமையும் அளவிட முடியாதது. நிலத்தைப் பயன்படுத்திக் கொள்கிற அளவிற்குத்தான் அதனால் பெறும் பயனும் இருக்கும். இந்தப் பண்புகளை ஆசிரியர்க்குப் பொருத்தினால்  வகுத்தறியப்பட இயலாத கல்வியின் பெருமை வாதப் பிரதிவாதங்களால் கலங்காத திண்மையும் இகழ்ச்சி கண்டு கலங்காத பொறுமையும் கற்பவனின் உழைப்புக்கேற்ற பயன் தரும் தன்மையுமாகிய சிறப்புக்கள் புலப்படும்.

    “தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
    பருவ முயற்சி அளவில் பயத்தலும்
    மருவிய நன்னில மாண்பா கும்மே!”

    என்னும் நூற்பாவால் நிலத்தின் தன்மையை விளக்கிக் காட்டும் நன்னூல், நல்லாசிரியர் ஒருவர்க்கே இது பொருந்தும் என்பதை நன்னிலம் என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காணலாம்.

    மலையும் ஆசிரியரும்

    மலையுச்சியை ஐம்புலன் அடக்கியார் உயர்ச்சியோடு ஒப்பிடுவார் திருவள்ளுவர். ‘அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது’ என்பது குறட்பா. இந்த மலையென்னும் பொருண்மையின் சிறப்பை,

    “அளக்க லாகா அளவும் பொருளும்
    துலக்க லாகா நிலையும் தோற்றமும்
    வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே”

    என விளக்கியுரைப்பார். மலை பற்றிய பவணந்தியாரின் இந்த விளக்கத்தால் அளக்கவும் காணவும் இயலாத கல்வியின் அளவும் புலமையுடையோராலும் அசைக்கமுடியாத அதன் நிலையும் தொலைவிலுள்ளார் பார்வையிலும் படும் உயர்ச்சியும் பொருள் வரும்வழிக் குறுகினாலும் குறையாத கல்விச் செல்வத்தைக் கொடுக்கும் தன்மையும் ஆசிரியர் தம் பண்புகளாகக் கொள்ள முடிகிறது.

    மலரும் ஆசிரியரும்

    மலர் மென்மைக்கும் மலர்ச்சிக்குமானது. ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ ‘அனிச்சப்பூ கால்களையாள்’, ‘மலரினும் மெல்லிது காமம், என்றெல்லாம் திருக்குறள் பேசும். ஏனைய பணிகளினின்றும் முற்றிலும் வேறுபட்டது கற்பித்தல் பணி. மற்ற பணிகளில் செய்பவனுக்குத்தான் உயிர் இருக்கும். ஆனால் கற்பித்தல் பணி உயிரும் உள்ளமும் உள்ளவரைச் சார்ந்தவருக்கே அமையும். எனவே ஆசிரியரின் பணிக்கு அறிவைவிட மனநிலையே இன்றியமையாதது. அந்த மனம் மென்மையாக இருத்தல் வேண்டும். அந்த மென்மையை முகம் புலப்படுத்தல் வேண்டும். பூவை வெறுப்பார் பூவுலகில் யாருமிலர். மங்கலப் பொருட்களுள் தலையாயது. மங்கல நிகழ்வுகள் பூவின்றி அமையாது. ஆசிரியரின் உள்ளத்தின் மென்மைக்கும் புன்னகை பூத்த முகத்திற்கும் மலரை உவமமாகச் சொல்லியிருக்கிறார் பவணந்தியார்.

    “மங்கலமாகி இன்றி யமையாது
    யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
    பொழுதின் முகமலர் வுடையது பூவே”

    என்பது நன்னூல். இதனுள் மங்கல நிகழ்வுகளில் இடம்பெறுவதோடு அதன் இன்றியமையாமையையும் புலப்படுத்தியதன் மூலம் கற்றல் பணி ஆசிரியர்க்கு இன்றி அமையாது என்னும் நுட்பம் உணர்த்தியது காண்க.

    துலாக்கோலான ஆசிரியர்

    பகை, நொதுமல், நட்பு என்னும் முத்திறத்தார் மாட்டும் ஒப்ப நிற்கும்  நடுவுநிலைமை என்னும் பண்பு சான்றோர்க்கு அணியாகக் கருதப்படும். ‘உள்ளத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி’ என்பார் திருவள்ளுவர். அதற்கு உவமமாகக் காட்டப்படும் பொருள் துலாக்கோல் ஆகும். நீதிமன்றங்களில் அறமகள் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுக் கையில் துலாக்கோல் பிடித்திருப்பதன் நோக்கம் யாவரும் அறிந்ததே. பொருளின் எடையைச் சரியாகக் காட்ட வேண்டுமானால் துலாக்கோல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளல் வேண்டும். திருவள்ளுவர் இதனைச் ‘சமன் செய்து’ என்னும் வினையால் குறிப்பார். ‘முன்னே தான் சமமாக நின்று பின்னே தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் கோல்’ என்று விளக்கமளிப்பார் பரிமேலழகர். கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலைமையோடு தன் பணியைச் செய்ய வேண்டும். துலாக்கோல் மாறாது. எடைக்கற்கள் மாறாது. ஆனால் பொருள்கள் மாறும். சிறப்பான பொருள்களும் சிறப்பற்ற பொருள்களும் மதிப்பிடப்படலாம். பொருளின் சிறப்புக் கருதி எடையை மாற்றிக் காட்டுதல் துலாக்கோலின் பெருமைக்கு ஏலாது.

    “ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
    மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே”

    என்னும் உவம விளக்கத்தால் கற்பித்தற்பொருளை ஐயத்திற்கிடமின்றிக் கற்பித்தலும் விருப்பு வெறுப்பின்றிக் கற்பித்தலுமாகிய பண்புகள் ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.

    நிறைவுரை

    ஊழ் ஆகூழ், போகூழ் என இருவகைத்தாதலின் அறிவும் இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இருவகைப்படும். முன்னது ‘உண்மையறிவு’ என்றும் பின்னது ‘நூலறிவு’ என்றும் திருக்குறள் குறிக்கும். குறிக்கவே ஆற்றலும் இயற்கையாற்றல் எனவும் செயற்கையாற்றல் என இருவகைத்து என்பதும் பெறப்படும். ஆசிரியருக்கு வரைவிலக்கணம் சொல்லவந்த பவணந்தியார் நற்குடிப் பிறப்பு, அருளுடைமை, தெய்வ நம்பிக்கை, உண்மையறிவு, சொல்லாற்றல் முதலிய இயற்கையமைதிகளைத் தொகுத்துச் சொல்லுகிறார். கற்பித்தல் பணிக்குத் தன்னை வடிவமைத்துக் கொள்ளும் ஆசிரியரின் இயல்புகளைச் சுட்டுகிறபோது நேரடியாக இன்னின்ன பண்புகள் எனச் சுட்டாது,  நிலமாகவும், மலையாகவும், மலராகவும், நிறைகோலாகவும் இருத்தல் வேண்டும் என உவமவழியாக அறிவுறுத்தியிருப்பதை அறியலாம். கற்பித்தல் பணி உள்ளம் சார்ந்த பணியாதலின் உள்ளத்தின் மென்மையை முன்னெடுப்பதே பவணந்தியாரின் கற்பித்தல் கொள்கை என்பதையும் அறியலாம். இனி இதற்கு முரணாக அமைந்த ஆசிரியர்களுக்கான உவமங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

    (தொடரும்…)   

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 1

    முன்னுரை

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பயின்று வரும் உவமங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சிறப்பை அறிந்த நிலையில் அதன் வழிநூலான நன்னூலில் பயின்று வரும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. எழுத்து, சொல் என்னும் இரு கூறுகளை மட்டுமே ஆராய்ந்திருக்கும் இந்த நூலிலும் இலக்கணக் கருத்துக்களை விளக்குதற்கு அவ்வளவாக உவமங்கள் பயன்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுப்பாயிரத்துள் நூலின் தன்மை, நல்லாசிரியர், அல்லாசிரியர், நன்மாணாக்கன், அல்மாணக்கான் என்னும் சிலரது சிறப்பையும் இயல்பையும் உவமம் கூறி விளக்கிச் செல்லுகிறார் பவணந்தி. ஒருசில பொருளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களை அவர் கூறிச்செல்வதையும் காண முடிகிறது. அவைபற்றிய ஒரு சுருக்கமான ஆய்வை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    கோட்டம் நீக்குவது நூல்

    கவிதையைச் சொற்களின் ‘குவியலாக்கி’ உள்ளத்தின் கொதிநிலையை அதிகப்படுத்துகிறவர் நிரம்பிய உலகம் இது. இந்த உலகில் கணிதம் போன்ற இலக்கணத்தைக் கவிதைப்பதத்தோடு அதாவது உவமச் செழிப்போடு பரிமாறுகின்ற வல்லாளர்களில் பவணந்தியும் ஒருவர் என்பதை அவருடைய நூலால் அறிய முடிகிறது

    “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
    செஞ்சொல் புலவரின் சேயிழையா – எஞ்சாத
    கையே வாயாக கதிரே மதியாக
    மையிலா நூல்முடியும் ஆறு”

    தன்சொற்களே பஞ்சாகவும் செய்யுளே இழையாகவும் நூற்கின்ற புலவனே பெண்ணாகவும் குறையில்லா வாயே கையாகவும் அறிவே நூற்கும் கதிராகவும்  முடிவதே குற்றமில்லாத நூலாகும் என்னும் பொருளமையப் பாடியிருக்கும் மேற்கண்ட நூற்பாவில் அடுக்கிவரும் உவமங்களைக் காணலாம். பஞ்சு நூற்று ஆடை நெய்வது பெண்களுக்கான தொழில் என்னும் வரலாற்றுக் குறிப்பையும் பவணந்தி தருகிறார். தொடர்ந்து இத்தகைய சிறப்புடைய நூலுக்கு நு{ல் என்று பெயர்வந்த காரணத்தை ஆராய்கிறார்.

    “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டம் தீரக்குநூல் அஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

    என்னும் நூற்பாவில் அதனை உவமத்தால் விளக்குகிறார். மரம் முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்யும் நூல்போல் மனக்கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்வது நூலாம் என விளக்குகிறார். இந்த இரண்டு நூற்பாக்களிலும் அவர் காட்டியுள்ள உவமங்கள் நெசவு மற்றும் தச்சுத் தொழிலைச் சார்ந்திருப்பதை அறியலாம்.

    அதிகாரம் – இயல் – சூத்திரம்

    தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்பன அதிகாரப் பெயர்கள். எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, தொகைமரபு முதலியன இயல் தலைப்புக்கள். அவற்றுள் இருக்கின்ற நூற்பாக்கள் சூத்திரங்கள். அதிகாரத்தைப் படலமென்றும் இயலை ஓத்து என்றும் சூத்திரத்தை நூற்பா என்றும் அழைப்பதும் உண்டு. இந்த அமைப்பு பெரும்பாலும் எல்லா இலக்கண நூல்களுக்கும் பொருந்தும். சில இலக்கிய நூல்களும் இவற்றைப் பெறுவதுண்டு. இவற்றுள் இயலாகிய ஓத்து என்பதற்கும், நூற்பாவாகிய சூத்திரம் என்பதற்கும் நன்னூலாசிரியர் உவமங்களைக் கொண்டு விளக்கமளிப்பதைக் காணமுடிகிறது. இயல் என்பதற்கு,

    “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
    ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
    ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்!”

    என்னும் தொல்காப்பிய நூற்பாவை ஆசிரிய வசனமாக எடுத்தாளுகிறாரர் பவணந்தியார். இந்த நூற்பாவில் மணி என்பது பெயர்ச்சொல். அதற்கு அடையாக வந்திருப்பவை ‘நேர்’ ‘இனம்’ என்னும் இரண்டு சொற்கள். இது உவமத்தின் சிறப்பு. அதாவது ஒரே இனமாயுள்ள இரத்தினங்களை நிரல்பட வைப்பதுபோல என்பது உவமம். ‘ஒரே தன்மையான பொருள்களை நிரல்பட வைப்பது இயல்’ என்பது பொருள். ஒரே இனமாயினும் ஒத்த மணிகள் என்பது போல ஒரே தன்மையாக இருப்பினும் ஒத்த பொருள்களை நிரல்பட வைப்பதுதான் இயல் என்பது நோக்குதற்குரியது. இனிச் சூத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிய உவமத்தால் விளக்கிக் காட்டுகிறார். அளவில் சிறிய ஆடி அளவில் பெரிய உருவத்தைத் தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல் சில எழுத்துக்களால் ஆன நூற்பாவாகிய சூத்திரம் பல இலக்கண உண்மைகளை அல்லது விதிகளை அடக்கியதாக அமைதல் வேண்டும் எனப் பொருள் விளக்கம் செய்கிறார். உவமமாகிய ஆடிக்கு அடைபுணர்க்காத பவணந்தியார், பொருளாகிய சூத்திரத்திற்குச் செம்மை, செறிவு, இனிமை, திட்பம், நுட்பம், சிறப்பு எனப் பல அடைச்சொற்களைப் புணர்த்தியிருக்கிறார்.

    “சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியில் செறித்தினிது விளக்கித்
    திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

    உவமப் பயன்பாட்டில் இது ஒரு கோட்பாடு. ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ எனப் பொருளுக்கு அடைகூறிக் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என உவமத்திற்கு அடைபுணர்க்காது, பொருளுக்கு மட்டும் அடைபுணர்த்திருப்பது காண்க. இந்த நூற்பாவில் சூத்திரமாகிய பொருளின் இந்தப் பண்புகளையெல்லாம் மணியாகிய இரத்தினத்திற்குப் பொருத்திப் பொருள் காண்பது கற்பார் கடன்.

    இலக்கணத்திற்கு உவமங்களான இயற்கை

    மக்களாட்சி காலத்தில் வாழ்ந்தாலும் நம்மவர் பலர் பட்டங்கள் மற்றும் விருதுகளை மன்னராட்சிக் காலத்திலிருந்தே இறக்குமதி செய்து கொள்வார்கள். கவிக்கோ, கவிப்பேரரசு, கவிமுரசு, அரிமாப் பாவலர், இயக்குநர் சிகரம், மெல்லிசை மன்னர் என்னும் வழக்கை நோக்குக. இதுபோலவே இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படும் உவமங்கள் இயற்கை தழுவியனவாகவே அமைந்திருப்பது சிந்தனைக்குரியது.

    “ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
    பாய்த்து பருந்தின் வீழ்வன்ன சூத்திர நிலையே!”

    என்னும் நூற்பா, இயலுள் அமைந்துள்ள சூத்திரம் எவ்வாறு அமையலாம் என்பதை விளக்குவதாக உள்ளது. ஆற்றுநீர் போலச் சீராக அமையலாம்.  சிங்கத்தின் பார்வை போல இடவலமாக, முன் பின்னாக நோக்கி அமையலாம். அடுத்ததை நோக்கிப், பின்னுள்ள ஒன்றினை நோக்கி அமையலாம். இயல்பான கண்களுக்குத் தெரியாமல் நுண்ணோக்கு உடையார்க்கே இலக்கண உண்மை புலப்படுமாறு அமையலாம். இந்த நான்கு வகையினை வரையறுக்கும் நன்னூலார் அவற்றுக்கு ஆறு, சிங்கம், தவளை, பருந்து என இயற்கைப் பொருள்களையே உவவமாக்குவதை அறியலாம்.

    நால்வகைச் சூத்திர நிலைகள்

    ‘உயிரும் உடம்புமாம் முப்பது முதலே’ என முதலெழுத்தை முன்னெடுத்த ஆசிரியர் நிரலாக (ஆற்றொழுக்காக) ‘உயிர் மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இஉஐஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்’ எனச் சார்பெழுத்துக்களைத் தொடர்ந்து ஓதியது ஆற்றொழுக்கு என்னும் சூத்திர நிலையின்பாற்பட்டதாகும். ‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ என்னும் நூற்பாவிற்கு உரையெழுதிய சங்கர நமசிவாயர், “மொழிக்கு முதலும் ஈறும் கூறுதலன்றி எழுத்திற்கு முதலும் ஈறும் கூறினார் என்று உணர்க. இச்சூத்திரம் சிங்க நோக்கம்” என்ற விளக்கம் காண்க. ‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ என்னும் மகரக் குறுக்கம் பற்றிய விளக்கத்தைச் செய்யும் என எச்சத்து’ எனத் தொடங்கும் நூற்பாவோடும், பல்லோர் படர்க்கை எனத் தொடங்கும் நூற்பாவோடும் நோக்கியன்றிப் புரிந்து கொள்ள இயலாது என்பதால்  அதனைப் பருந்துப் பார்வையாக்கி அமைத்துக் கொள்வதாகச் சங்கர நமசிவாயர் கூறுகிறார்.

    உவமத்தால் வெளிப்படும் உள்ளடக்கச் சுருக்கம்

    இலக்கியத்தின் அழகியல் கூறான உவமத்தை இலக்கண விளக்கங்களுக்குப் பயன்படுத்துகிறபோது பொருளின் அதாவது உவமேயமாகிய  உள்ளடக்கத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வெளிக்கொணரும் கருவியாக அது பயன்படுகிறது என்பதை அறியலாம்.

    “மேற்கிளந் தெடுத்த யாப்பினுள், பொருளொடு
    சில்வகை எழுத்தின் செய்யுளுக் காகிச்
    சொல்லும் காலை உரையகத் தடக்கி
    நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகித்
    துளக்க லாகாத் துணைமையெய்தி
    அளக்க லாகா அரும்பொருட் டாகிப்
    பல்வகை யானும் பயன்தெரி புடையது
    சூத்திரம்’

    என்னும் பொருளின் அனைத்துப் பரிமாணங்களையும் (சூத்திரப் பண்புகள் அத்தனையையும்) ‘ஆடி நிழலின் அறியத்தோன்றி’ என்னும் இரு சொற்களால் அடக்கியது காண்க. ‘கார்கூந்தல்’ என்றவழிக் ‘கார்’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் ‘ஆடிநிழலின் அறியத் தோன்றி’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் வேறு வேறானது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    இலக்கியத்தின் அழகியல் கூறான உவமம் இலக்கண நூல்களுள் செய்திருக்கும் பணி வியப்புக்குரியது. ‘இப்படியெல்லாம் இருந்தால் அது சூத்திரம்’ என்பதை விட ‘அது இதுபோல் இருக்க வேண்டும்’ என்னும் உவமச் சுருக்கம்  பெரிதும் ஆழமானது. இலக்கியப் பயன்பாடு போலல்லாது இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பட்டுக் கத்தரித்தாற்போலத் தனது பணியைச் செய்திருக்கிறது. விரிவான சிந்தனைக்கும் ரசிப்புக்கும் இட்டுச் செல்ல வேண்டிய உவமத்தைப் பொருள் வரையறைக்குப் பயன்படுத்தியிருக்கும் இலக்கண ஆசிரியர்களின் சதுரப்பாடு தொடர்ந்துவரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 3

    (வெட்டுண்ட அட்டையும் வீரனின் கவந்தமும்)

    முன்னுரை

    காஞ்சி, பாடாண் முதலிய வாழ்வியல் திணைகள் பெருமை சேர்த்தாலும் வெட்சி முதலியனவே புறத்திணைகளின் சாரமாகும். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அகத்திணைக் களங்களெனின் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவே புறத்திணைக் களங்களாகும். அவற்றுள் தும்பை சூடி நேருக்கு நேர் பகையெதிர்தல் தும்பைத்திணையாகும். தும்பைத் திணையின் போர்ச்சிறப்பினைக் காட்சிப்படுத்தும் தொல்காப்பியர் அட்டையை உவமமாக்குவதை அறியமுடிகிறது. ‘அட்டை போல ஆடுதல்’ என்னும் உவமத்தால் விளக்கப்படும் பொருள் இலக்கியக் காட்சியாயினும் வீரம் செறிந்த தமிழ்மரபின் நடப்பியல் உண்மை என்பதையும் அறியமுடிகிறது. உவம விளக்கத்தில் இது பற்றிய சில கருத்துக்களையும் இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    கொற்றவை வழிபாட்டில் ‘நவகண்டம், அரிகண்டம்?

    ‘அட்டையாடுதல்’ என்னும் உவமம் கற்பனைப் பொருளை விளக்குதற்கானது அன்று. தமிழனுடைய அரசியல் வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த நடைமுறை வழக்கத்தில் காணப்பட்ட ஒரு நிகழ்வைச் சித்திரிப்பதற்குரியதாகும்.  ‘நவகண்டம்’, ‘அரிகண்டம்’ என்னும் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய வீர மரபாகும். ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். ‘நவகண்டம்’  என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ ‘கொற்றவை’ எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வது.  ‘அரிகண்டம்’ என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்துத் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்வது.

    1. மானுட ஆற்றல் பயனற்றுப்போய்விடுமோ என்னும் ஐயவுணர்வு தலையெடுங்குங்கால் ஒரு வேண்டுதலை நிறைவேற்றவோ மாண்புடன் இறக்கவோ இந்தப் பலிக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்வர்.
    2. வலிமிகுந்த மாற்றரசருடன் நிகழும் போர்க்காலங்களில் வெல்வதற்கு வாய்ப்பு அரிதான ‌ தருணங்களிலும்,
    3. தேற்ற இயலாத உடல்நிலையால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் குணமடைய வேண்டுகின்ற பொழுதிலும்
    4. நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரோ மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியோ மிகுந்த அவமானத்தினால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவரோ, அவ்வாறு சாகாமல் வீர சொர்க்கம் அடைய விரும்புகிற பொழுதிலும்

    எனப் பல காரணங்களுக்காக ‘நவகண்டம்’ செய்து கொள்வர். இவ்வாறு தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்பவர் அக்காலத்தில் வீரர்களாகப் போற்றப்பட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினர் அவர்கள் உருவங்களை “வீரர் கல்லு” எனப்படும் சிலைகளாக வடித்துத் தொழுது வந்ததும் வழக்கமாக இருந்துள்ளது. நமக்கு இதுவரை கிடைத்த மிகப் பழமையான ‘வீரர் கல்லு’ கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய கற்கள் விரவிக் காணப்படுகின்றன.

    இலக்கியங்களில் கவந்தம்

    வேண்டுதலுக்காகவோ களத்திலோ தானாகவோ எதிரணி வீரர்களாலோ  தலை துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் துடிக்க துடிக்க ஆடுவதற்குப் பெயர்தான் கவந்தம் என்பது. இதனைத்தான் ‘அரிகண்டம்’ என்ற சொல் குறிக்கிறது. இது பற்றிய குறிப்புக்கள் இலக்கியப் பதிவாகவும் வரலாற்றுப் பதிவாகவும் காணக்கிடைக்கின்றன.

    “அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ?
    அரிந்த சிரம் அணங்கின்கை கொடுப்பராலோ?
    கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ?
    குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ?”

    என்னும் கலிங்கத்துப்பரணி கவந்த நிகழ்ச்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது.

    “வெந்திறல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென்
    பலிக்கொடைப் புரிதோர்”

    என்னும் (இந்திரவிழவூர் எடுத்த காதை) வரிகள் மன்னர்க்கு நேர்ந்த துன்பம் தொலைவதற்காக அரிகண்டம் செய்தாரைக் குறிக்கிறது.

    “தோளும் தலையும் துணிந்து வேறாகிய
    சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து
    எறிபிணம் இடறிய குறையுடல் கவந்தம்
    பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட” (கால்கோட்காதை)

    என்னும் வரிகள் கவந்தம் என்ற சொல்லை நேரடியாகவே பதிவு செய்து பேய்க்களக்காட்சியைச் சித்திரித்துள்ளது. இத்தகைய பதிவுகளிலிருந்து கவந்தம் ஆடுதல் அல்லது அரிகண்டம் ஆடுதல் என்னும் வினைகள் உணர்ச்சி காரணமாக அமைந்த தற்காலிகச் செயல்கள் அல்ல என்பதும் அலகு குத்துதல் போலத் திட்டமிட்ட செயலே என்பதும் கருதுதற்கு ஏதுவாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

    தொல்காப்பியத்தில் கவந்தம்

    போர்க்களத்தில் மாற்றாரின் கணையும் வேலும் மெய்யெல்லாம் மொய்த்திருக்குங்கால், உயிர் போய்விடுமாயின் யாக்கை மட்டுமே நிற்கும். நின்ற அந்த யாக்கை வீரம் பொங்கக் குதித்து நிற்கும் நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம்  புறத்திணைத் துறைகளுள் ஒன்றாகச் (தும்பை) சுட்டுகிறது.

    “கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
    சென்ற  உயிரின் நின்ற யாக்கை
    இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு
    இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே”

    என்னும் நூற்பாவில் மேற்சுட்டிய நிலை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நூற்பாவிற்கு உரையெழுதிய இளம்பூரணர்,

    “கணையும் வேலும் படைத்துணையாகக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, ‘நீருள் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினையுடையது. (இருநிலம் தீண்டா அரு – நீருட் கிடக்கும் அட்டை)”

    என விளக்கிக் காட்டுவார். இந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் பலரும் தத்தம் கருத்துக்களுக்கேற்பப் பொருளுரையும் விளக்கவுரையும் எழுதிக்காட்டினும் உடம்பாடும் நிலைக்கு அட்டையாடுதல் உவமமாக்கப்பட்டுள்ளது என்னும் தொல்காப்பிய உண்மை உளங்கொளற்குரியதாம். ஊர்ந்து வரும் அட்டை இரு கூறான பின்பும் இரண்டும் தனித்து இயங்குதல் என்பது கருத்து. இருவேறு துண்டங்கள் என்பதையே கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

    வெண்பாமாலையில் வெருவரு நிலை

    தொல்காப்பியத் தும்பைத்திணைப் பொருள் வரையறையில் மனம் பறிகொடுத்த ஐயனாரிதனார்,

    “விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப
    நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று”

    எனத் தும்பைத்திணை – வெருவரு நிலைத் துறைக்கான கொளுவை அமைத்திருக்கிறார். ‘நிலந்தீண்டா நெடுந்தகை நிலை’ எனக் கூட்டி நோக்கினால் அவருடைய தொல்காப்பியக் காதல் புரியக்கூடும்.

    “வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
    எங்கும் மருமத்து இடைகுளிப்பச் செங்கண்
    புல்வாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்
    கலவாமற் காத்த கணை”

    ‘வெட்டுண்ட யாக்கை இருநிலம் தீண்டாது’ என்ற தொல்காப்பியத்திற்கு  வெண்பாமாலை தலைவி ‘தன் ஆகம் தீண்டிய அவனாகத்தை மண்மகள் புல்லாமல், அவன் மார்பில் தைத்த அம்புகள் காத்தனவாகக் கற்பிக்கிறார். கட்டுரையின் முற்பகுதியில் கூறியவண்ணம் சில குறிப்பிட்ட நேர்வுகளில் தங்களையே பலியிட்டுக் கொள்ளும் வீர மரபு தமிழ் மரபு என்பதை விளங்கிக்கொள்ள ‘அட்டையாடுதலை’ உவமமாக்கித் தொல்காப்பியம் விளக்கப், பின்வந்தோர் அதனை வழிமொழிந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

    நிறைவுரை

    திருவள்ளுவர் ‘ஒப்புரவு’ என்னும் அதிகாரத்தில் ‘விற்றுக்கோள் தக்கது’ எனவும் ‘கயமை’‘ என்னும் அதிகாரத்தில் ‘விற்றற்குரியர் விரைந்து’ எனவும் குறிப்பிடுவார். இக்குறிப்புக்களால் மனிதர்கள் தங்களையே விற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்குமோ என்னும் ஐயம் அடிமைகளின் வரலாற்றை நோக்குவார்க்கு வருவது இயல்பே. அதுபோலக் கவந்தம் ஆடுதல் என்பது களக்காட்சியாயினும் அது வாழ்வியல் பதிவோ என்னும் ஐயம் வருவது இயல்பு. நிகழ்வுகள் மட்டுமன்று உவமங்களால் விளக்கப்படும் பொருள்களும் வரலாற்றுப் பதிவுகளாகலாம் என்பதற்கு நவகண்டம், அரிகண்டம், கவந்தம் – அட்டையாடுதல் என்னும் சொற்கள் சிந்தனைக் காரணிகளாக நிற்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 2

    முன்னுரை

    தொல்காப்பியம் பொருட்பகுதியின் பொருள் புலப்பாட்டுக்காகப் பொருத்தமான உவமங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கினை ஆராயும் முந்தைய கட்டுரைப் பொருளுடன் இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்து வரும் கட்டுரையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. இலக்கண ஆசிரியன் ஒருவனுடைய இலக்கிய உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும் இவை பயன்படக்கூடும். மேலும் இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியர் காலத்திலேயே காழ்கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். கணிதம் போலச் சொற்களைக் கோத்து அதனைக் ‘கவிதை’ என்று நம்ப வைக்க முயலும் தற்காலப் படைப்பாளர்கள் இதனைச் சிந்திப்பது பயன்தரலாம். ‘தொல்காப்பியம் ஒரு காடன்று அது ஒரு பூங்கா’ எனப் பின்னுள்ள கலைஞர்கள் அதனை அழைப்பதற்கான காரணங்கள் அந்த நூலிலேயே இருந்திருக்கின்றன. அகப்பொருள் இலக்கியத்திற்கு இலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர் அகத்திணை மணம் குறையாமலும் அறச்சிந்தனை மேலோங்கும் வகையிலும் உவமங்களைப் பயன்படுத்தியுள்ளார். இது பற்றிய ஆய்வினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    வெள்ளத்தைத் தடுத்த மலை

    வெள்ளம் வருமுன் அணையிடுதல் என்பது ஒரு சொலவடை. மண்ணாசை காரணமாகத் தொடுக்கின்ற போருக்கு வஞ்சித்திணை என்று பெயர். பதின்மூன்று துறைகளை உள்ளடக்கிய அத்திணையுள்,

    “வருவிசைப் புனலைக் கற்சிறை போல
    ஒருவன் தாங்கிய பெருமை யானும்” 91

    என்பதாகிய துறையும் ஒன்று. விசையொடு பெருகிவரும் கடும்புனலைக் கல்லாகிய அணை தடுத்து நிறுத்துமாறு போலத் தன்மேல் கடுகித் தொகையாக வரும் பகை மறவரைத் தான் ஒருவனே தடுத்து நிறுத்தும் பெருமிதமும் வஞ்சித்திணையாகும் என்பது கருத்து. பகைவர்களை வெள்ளமாகவும் தடுக்கின்ற வீரனைக் கல்லணையாகவும் உவமித்தது ஓர் இலக்கியப் புலவன் என்றால் இந்த ஆய்வுக்கு இங்குத் தேவையிருந்திருக்காது. தொல்காப்பியத்தின் இந்த உவமம் பின்னால் வந்த ஐயனாரிதனாரையும் கவர்ந்திருக்கிறது. அதனை அவர் சற்றொப்ப ஆசிரிய வசனமாகவே வழிமொழிந்திருக்கிறார். ஓர் இலக்கணத்தில் இடம்பெற்றதால் தனிக்கவனத்திற்கு ஆளாகிறது.

    “பொருபடையுட் கற்சிறைபோன்று
    ஒருவன் தாங்கிய நிலையுரைத்தன்று”

    என்பது வெண்பாமாலையின் தனிநிலை பற்றிய கொளுவாகும். இதற்கு இலக்கண விளக்கம் தந்திருக்கும் ஐயனாரிதனார் வினையின் நீங்கிய விளங்கிய அறிவும் எதனையும் வியந்து நோக்காத பக்குவமும் உடைய சான்றேர்களும் அத்தகைய வீரத்தையுடைய மறவனைப் பெற்ற முதியவளின் வயிற்றை வியப்புடன் நோக்குவதாக,

    “வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாம்!(ஆல்) இந்நின்ற
    வாடல் முதியாள் வயிற்றிடம் – கூடார்
    பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
    இரும்புலி சேர்ந்த இடம்!”

    என்னும் துறைவிளக்கப் பாடலில் குறிப்பிடுகிறார். காப்பியரும் ஐயனாரிதனாரும் பயன்படுத்திய அந்த உவமத்தை,

    “வேந்துடைத் தானே முனைகெட நெறிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவனாகி
    தன்னிறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
    ஆழியனையான் மாதோ என்றும்
    பாடிச்சொன்றோர்க்கன்றியும்  வாரிப்
    புரவிக் காற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே!” புறம் 330

    என்னும் புறநானூற்றுப் பாடலிலும் காணமுடிகிறது. ‘நெரிதர’, ‘ஒருவனாகி,’ ‘பெருங்கடற்கு ஆழியான்’ என்னும் சொற்களை அப்படியே புறநானூற்று ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நோக்கத் தகுந்தது.

    உவமங்களான உணர்வுகள்

    பருப்பொருளை உவமமாக்குவது ஒன்று, நுண்பொருளை உவமமாக்குவது ஒன்று, காட்டலாகாப் பொருட்களெல்லாம் நுண்பொருள்களே. நுண்மையை உணரலாமேயன்றி ஐம்பொறிகளால் நுகர்தல் இயலாது. தொல்காப்பியம் இதனை ‘நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள்’ என்று கூறும்.

    “ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
    கற்பும் ஏரும் எழிலும் என்றா
    சாயலும் நாணும் மடனும் என்றா
    நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
    ஆவயின் வரும் கிளவியெல்லாம்
    காட்டலாகாப் பொருள என்ப”

    என்பது நூற்பா. இந்நூற்பாவில் பயின்றுவரும்‘ ஆவயின் வரூஉம் கிளவியெல்லாம்’ என்பதனால் தாய்மை அன்பை அடக்கிக் கொள்ள இயலும். தாய் போன்றாள் என்றால் அது உருவத்திற்கான உவமமாகாது பண்பிற்கான உவமமாகும். பண்பு காட்டலாகாப் பொருள். தாய்போல் பேசி என்றால் தாய் தன் சொற்களில் காட்டும் பரிவைக் கலந்து பேசி என்பதே பொருளாகும். பெண்மையின் உச்சம் தாய்மை. பெண்மை சிறப்படைவது தாய்மையால். தாய்மையன்றிப் பெண்மையில்லை. தாய்மையடையாத பெண்மை பெருமைக்குரியதாகாது. தாய்மை பரநலத்தின் அடையாளம். இந்தப் பண்பைப் புதிய வரவான மனைவியிடத்தும் ஒருவன் எதிர்பார்க்கிறான். தலைவன் எதிர்பார்க்கும் இந்த உணர்வை நன்கு புரிந்து கொண்ட காமக்கிழத்தி என்னும் உறவுடையாள் ஊடல் காரணமாகப் புலந்து நிற்கும் தலைவியைத் தலைவனோடு சேர்த்து வைக்கும்  கடமையைச் செய்கிறாள்.

    “காதற்சோர்வில் கடப்பாட்டு ஆண்மையின்
    தாய்போல் கழறித் தழீஇய மனைவியைக்
    காய்வின்று அவன் வயின் பொருத்தற்கண்ணும்”

    என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். காமக்கிழத்தியின் கூற்றுச் சூழலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாயன்பு பற்றிய இந்த உவமத்தைத்,

    “தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
    ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப”

    என்னும் நூற்பாவிலும் உவமமாக்கியிருக்கிறார் தொல்காப்பியர்.  உரையாசிரியப் பெருமக்கள் இந்த இரண்டு நூற்பாக்களையும் மாட்டேற்றாகக் கொள்வர். இதனால் காமக்கிழத்தியாயினும் மனைவியேயாயினும் எல்லா நேரங்களிலும் காமக்குறிப்பே வெளிப்பட நிற்பர் என்னும் கற்பனை பொய்த்தும் அவ்விருவரும் அன்பில் தலைமகனுடைய தாயன்பை வெளிப்படுத்தியே நிற்பர் என்பதும் பெறப்படும். படவே தாயன்பு உறவுநிலை மாறியும் நிற்கும் என்பதும் தலைவனுக்கும் காமக்கிழத்தி, மனைவி என்னும் உறவுகளுக்கும் இடையில் நிலவும் அன்பு தாயன்பின் கலப்பே என்பதும் அனுமானிக்கப்படும்.

    உண்மையான நட்பு உள்ளமே

    உலகியல் சார்ந்த உதவிகளை ‘ஒப்புரவறிதல்’ என்றும் அறப்பயன் நோக்கிய உதவிகளை ‘ஈகை’ என்றும் திருவள்ளுவர் ஆராய்வார். ‘பொருளெல்லாம் வேளாண்மை செய்தற்பொருட்டு’ என்பதனாலும் ‘ஒன்று ஈவதே ஈகை’ என்பதனாலும் அவ்விரண்டு அறங்களும் பொருளைக் கருவியாக உடையவை என்பது  பெறப்படும். அருவப் பொருளால் அவ்வறங்களைச் செய்ய இயலாது. தொல்காப்பியம் அருவப் பொருளால் உதவி செய்யலாம் என்று தெளிவாக்குகிறது. உதவும் இந்த அருவப்பொருளை அவர் ‘உள்ளம்’ என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்று செல்வமாக்குகிறார். ‘உதவி எதுபோல அல்லது ‘யார் செய்வது போல’ என்றால் பொதுவாகப் பாரியைத்தான் சொல்வார்கள். தொல்காப்பியமோ ‘உள்ளம் போல’ உதவ வேண்டும் என்று கூறுகிறது.

    “உள்ளம் போல உற்றுழி உதவும்
    புள்ளியல் கலிமா உண்மை யான”

    என்னும் நூற்பா பொருள்வயிற் பிரிந்த தலைமகன் மீண்டுவரும் சூழலை விவரிக்கிறது. தலைவியைப் பிரிந்த தலைவன் மீள்வது நெடிய சுரமாயினும் தலைவியை வழிநடைச் சோர்வு ஆங்காங்கே தங்கி மீளுமாறு புலனெறிவழக்கம் செய்யும் வழக்கம் தமிழில் இல்லை. ஆதலின் தலைவியைக் காணச்செல்லும் அவன் உள்ளத்தின் வேகம் போலத் தாவிச்செல்லும் (பறந்து செல்லும்) பறவையை ஒத்த குதிரை இருப்பதால் அவன் எவ்விடத்தும் தங்காமல் தலைவியை வந்தடைவான் என்பது கருத்து. இந்த உவமத்தால் தலைவியை உடனே காண வேண்டுமென்றால் மனக்கண்ணில கொண்டு காணுதற்கு உதவும் உள்ளத்தைப்போலத் தலைவன் சென்று மீளும் குதிரை விரைவினையுடையது என்பது விளக்கப்பட்டது. உள்ளம் என்னும் அருவப் பொருளும் உதவும் என்பது தொல்காப்பியப் புதுமை.

    நிறைவுரை

    மேற்கூறிய சில கருத்துக்களால் பொருண்மையை விளக்குதற்கு அகத்திணை, புறத்திணை மற்றும் பொருளியல் ஆகியனவற்றில் உவமங்கள் பன்படுத்தப்பட்டுள்ள பாங்கு ஓரளவு புலனாகலாம். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கனுக்கும் பருப்பொருள் மட்டுமேயன்றி நுண்பொருளும் உவமமாக்கப்படலாம் என்னும் கருத்தும் பெறப்படும். இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது என்பதை இதனால் உணரமுடியும். தொல்காப்பிய உவமத்துள் பேராண்மை சார்ந்ததொரு உவமம் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் (1)

    முன்னுரை

    தொல்காப்பியத்தில் உவமம், சங்க இலக்கியங்களில் உவமம், பிற்கால இலக்கியங்களில் உவமம் என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்பட்ட பொருண்மை என்பது இக்கட்டுரையாளர் கருத்து. ‘கவிதையில் உவமம்’ என்பது செய்யுளியலில் குறிப்பிடப்படாத காரணத்தால் தொல்காப்பிய உவமவியலின் உள்ளடக்கம் சாதாரண உவம ஆய்வினின்றும் வேறுபடுகிறது. தலைமக்களின் கூற்றுப் பகுதியாக இருந்த உவமக் கோட்பாடு கவிதையில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அவ்விரண்டு காலக்கட்டத்திற்குப் பிறகுதான் ‘உவமம்’ என்பது கவிதையின் அழகுக் கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படத் தொடங்கியிருக்கிறது. காட்சிகளையும் பொருட்களையும் உவமத்தின் வாயிலாகச் சித்திரிக்கும் போக்கு பல்கிப் பெருகியதும் இக்காலத்தில்தான் எனக் கருதலாம். இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் தலைமக்களின் கூற்றுப் பகுதிகளில் இடம்பெறும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வு இக்கட்டுரையில் முன்னெடுக்கப்படுகிறது.

    பச்சைப் பானையில் கசிந்த காதல்

    அகப்பொருள் இலக்கணத்தில் தலைவன் தான் கொண்டுள்ள அன்பைத் தலைவியினிடத்து ஆண்மை தோன்ற வெளிப்படுத்துவான்.  தலைமகள் அவ்வாறு பெண்மை தோன்ற வெளிப்படுத்துவது மரபன்று. அதாவது ஆண்மை முற்றும் வெளிப்பட்டும் பெண்மை குறிப்பாக வெளிப்பட்டும் நிற்பதுமே தமிழ் மரபு. அவ்வாறாயின் தலைமகள் தலைவன் மீது தான்கொண்ட உள்ளத்துக் காதலை வெளிப்படுத்தும் பாங்கு எத்தகையது என்னும் ஐயத்திற்குத் தொல்காப்பியம் ஓர் உவமத்தால் விளக்கம் தருகிறது.

    “தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
    எண்ணுங் காலை கிழத்திக் கில்லைப்
    பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப”

    மேற்கண்ட நூற்பாவில் ‘தலைவன் அறிந்து கொள்ளுமாறு புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்தே பொசிந்து காட்டுதல் போலப் புலப்படும்’ என உவமையால் புலப்படுத்துவதைக் காணலாம். ‘பிறநீர்  மாக்கள்’ என்பது கைக்கிளை, பெருந்திணை மாந்தர்களை அவர்கள்  அகத்திணைத் தலைமை மாந்தர்களைப் போலன்றித் தம் உள்ளத்துக் காதலை ஒருவர் அறிய மற்றொருவர் வெளிப்படக் கூறிக்கொள்வர் என்பதனால் ‘பிற நீர் மாக்கள்’ எனக் குறிக்கப்பட்டனர்.

    ‘பெய்ந்நீர் போலும்’ என்றே உவமம் பயின்றிருக்க உரையாசிரியர் பலரும் உவமப்பகுதியின் பொருளுணர்ந்து ‘புதுக்கலம்’ என உவமத்தின் உண்மை கண்டு அடைபுணர்த்து உரைத்திருப்பதும், இந்தப் புதுக்கலத்து உண்மையைத் திருவள்ளுவர் ‘பசுமட்கலத்துள் நீர் பெய்திரீஇயற்று’ எனப் பொருள் தழுவி வழிமொழிந்திருப்பதும் அறிந்து சுவைத்தற்குரியன.

    நீரில் எழுதிய எழுத்தா? அந்தரத்தில் எழுதிய எழுத்தா?

    ‘செய்கின்ற நன்மையைப் பண்பறிந்து ஆற்றாதபோது அந்நன்றாற்றலுள்ளும் தவறு ஏற்பட வாய்ப்புண்டு’ என்பது வள்ளுவம். இந்த வள்ளுவம் ஔவை எழுதிய மூதுரையில்,

    “நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப் போல் காணுமே அல்லாத
    ஈரமிலா நெஞ்சினார்க்கு ஈந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர்”

    என்றவாறு வெளிப்படுகிறது. இந்தப்பாட்டில் யாருக்கு உதவ வேண்டும் என்பதும் யாருக்கு உதவக்கூடாது என்பதோடு அவற்றின் பின்விளைவுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்ததாதலின் நல்லார்க்குச் செய்த உதவி காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்பதும் சால்பாகிய இரக்கமிலா அரக்கர்களுக்குச் செய்த உதவி நீரில் எழுதிய எழுத்தாக எழுதுங்காலே மறைந்துவரும் என்பதும் ஔவயார் வாக்கு. நிலையாமைக்கு ஔவை கூறிய இந்த உவமத்தின் மூலம் தொல்காப்பியத்தில் இருப்பதை அறிய முடிகிறது. ஔவை எழுதுவதற்கு நீரைத் தளமாக்குகிறார். தொல்காப்பியரோ அந்தரத்தைத் தளமாக்கி ‘அந்தரத்தில் எழுதிய எழுத்து’ என்கிறார்.

    பெற்றோரைவிட்டும் சுற்றத்தைவிட்டும் தலைவன் மனை அடைந்த தலைவி, பழக்கம் காரணமாகச் சில நேர்வுகளில் பிழைசெய்தல் கூடும். தன்னுடைய பெற்றோரிடத்தும் தன்னிடத்தும் தலைவி ஒழுகும் முறையில் காணும் பிழைகள் தலைவனுடைய கருத்தில் வைக்கத்தக்கன அல்ல., அவை உடன் மறக்கத்தக்கன என அறிவுறுத்தும் நிலையில் தலைவனின் கூற்றுப் பகுதியை விளக்க வரும் தொல்காப்பியம், தலைவி செய்த தவறுகளைத் தலைவன் மறக்க வேண்டிய பாங்கினை ஓர் உவமத்தின் வழி உணர்த்துவதைக் காணமுடிகிறது.

    “அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
    வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்”

    ‘களவுக்காலத்து ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டால் நிகழ்ந்த குற்றம் ஆகாயத்தில் எழுதிய எழுத்துப்போல் மறைந்து போகும்’ என்பது மேற்கண்ட தொல்காப்பியத்தில் கண்ட உவமத்திற்கான பொருளாம். உலக வழக்கில் ஒரு சொலவடை உண்டு. அரிசி களைகிறபோது உண்டாகின்ற சினம் சோறு கொதிக்கிற போது மாறிவிடும்’ என்பார்கள். இல்லறம் என்பது மாறிபுக்க இதயங்களின் ஒன்றிணைந்த வினையாதலின் செய்கின்ற தவறுகள் மனத்துட் பதியவே கூடாது என்பது தொல்காப்பியம். ஒருவர் செய்த தவறினை மற்றொருவர் தன் உள்ளத்து  வைத்திருந்து மறப்பதற்கும் உள்ளத்துட் புகாமல் விடுவதற்குமான இடைவெளியே இல்லறத்தின் வெற்றிக்களமாகும். இந்த நுட்பம் அறிந்தே தொல்காப்பியர் ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ என்கிறார்.

    கஞ்சி அமுதமான கதை

    ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது தெரிந்த வழக்கு.  உண்டியால் புரக்கப்பட்ட உயிர் இறவாது நிற்பதற்குக் காரணம் அது அமிழ்தாவதே. ‘அமிழ்து’ என்பது சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. ‘உறுதொறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ என்பது வள்ளுவம். அமிழ்தைக் கருவியாக்கிய அது, மழலை அளாவிய கூழை அமிழ்தினும் உயர்த்திச் சொல்கிறது. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்பது திருவள்ளுவரின் ஒப்பீட்டுப் பார்வை. இதனையொத்த அமிழ்து பற்றிய கருத்துக்கள் ஆயிரம். விரித்துரைக்க இயலாது. இந்த அமிழ்தத்தைத் தன் மனைவி கையால் சமைத்த உணவோடு ஒப்பிடுகிறான் தொல்காப்பியத் தலைவன்.

    “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
    வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
    அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்”’

    என்பது அவன் கூற்று. சுவைக்க ஒன்னாதவற்றைச் சுவைக்கச் செய்தது அவள் கையறி மடமையாதலின் அவள் கைபட்டதால் அமிழ்தமானது என்பது கருத்து. இது காதல் உணர்வின் வெளிப்பாடே என்பது,

    “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
    தேம்பூங்கட்டி என்றனிர்’

    என்னும் குறுந்தொகை தோழி கூற்றானும் அறிந்து கொள்ளலாம். வேம்பு இனிப்பதற்கும் கூழ் அமிழ்தாவதற்கும் தலைவிமேல் தலைவன் வைத்த மாறா அன்பும் தீராக் காதலுமே காரணம். உணவுக்கு அமிழ்தத்தை உவமமாக்குவது என்பது தமிழின் மரபியல் சார்ந்த உவமக் கோட்பாடு என்பது தெளிவாகலாம்.

    நிறைவுரை

    அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் இடம்பெற்ற உவமம் முதலியன கவிதைக்கு அணியாக வளர்நிலை பெற்றது ஒரு மொழியில்  படைப்பிலக்கிய வரலாற்றில் பரிணாம வளர்ச்சியாகவே கருதப்படலாம். அகத்திணை மாந்தர்களும் அவ்வுவமத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தொல்காப்பியம் பல வரையறைகளை வகுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் தலைமகன் கூற்றுப்பகுதியில் தலைமகளின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் இல்லற மாண்புகளைப் பாராட்டுகிற சூழலில் பயன்படுத்திய சில உவமங்களை இக்கட்டுரை விளக்கியிருக்கிறது.  பொருளதிகாரத்தில் காணப்படும் வேறு சில உவமங்களைத் தொடர்ந்து காணலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண விளக்கமும் உவமமும்

    முன்னுரை

    பொதுவாக ‘உவமம்’ என்பது இலக்கியம் சார்ந்தது. அதற்கேயுரியது. வண்ணனைச் செய்யப்படும் பொருளை அல்லது விளக்கப்படும் கருத்துகளைக் கூடுதல் கவர்ச்சியோடும் தெளிவோடும் அழகோடும் புரிந்துகொள்வதற்காகப் படைப்பாளனால் ஒப்புமை செய்து காட்டப்படுவதே உவமம். ஆனால் தமிழியல் வரலாற்றில் முற்றிலும் மாறான நிலையில் இந்த உவமத்தைப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. இலக்கண நுட்பங்களைக் கற்பித்தலுக்கான கருவிகளில் ஒன்றாக இந்த உவமமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருவகையில் பொருள் விளக்கம் எனக் கருதப்படலாம். ஆனால் பொருள் விளக்கம் என்பது ‘அகர முதல எழுத்தெல்லாம்’, ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்பன போல அமையும். இலக்கண விளக்கத்திற்காக உவமத்தைப் பயன்படுத்துவது நுண்ணியது. அரியது. உலகத்தின் வேறு எந்த மொழிகளிலாவது இவ்வாறு அமைந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. இந்தப் பின்புலத்தில் இலக்கண விளக்கத்தில் உவமத்தின் பங்களிப்பை இந்தப் பகுதி சுருக்கமாக ஆராய்கிறது.

    இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு

    இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு இருவகையில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது.

    1. தொடர்புடைய இலக்கண நூலிலேயே நூற்பாவின் கருத்தை விளக்குதற்கு நூலாசிரியரே உவமையைப் பயன்படுத்துதல்.
    1. நூற்பாவின் கருத்தை விளக்க உரையாசிரியர்கள் உவமையைப் பயன்படுத்துதல்.

    தெளிவுக்குத் தொல்காப்பியம் காட்டும் உவமம்

    மகாகவி பாரதி அறிவைச் சுட்டுகிற பொழுதெல்லாம் தெளிவை முன்னிறுத்துவது இயல்பு. ‘பாரதி கவிதைகள்’பெற்ற வெற்றிக்கு இந்தத் தெளிவின் பங்கு ‘செம்பாகம் அன்று., பெரிது. பாரதியின் பெயரை முன்னிறுத்திக் கொள்ளும் கவிஞர் பலரால் எழுதப்படும் கவிதைகள் புரியாத மொழியில் அமைந்திருக்கின்றன என்பது தனி ஆய்வுக்குரியது.“தெளிவு பெற்ற மதியினாய்”  “தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே”, “தெளிவுறு அறிவினை”, “சிந்தை தெளிவாக்கு”, “தெளிந்த நல் அறிவு வேண்டும்”, “மூடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்”, “சிந்தனை தெளிந்தோம்”, “நல்ல தெள்ளறிவு”, “சித்தத் தெளிவெனும் தீயின் முன்”, “சித்தந் தெளியும்”, “அறிவு தெளிந்திடும்”, “அறிவிலே தெளிவு”  என்றெல்லாம் தெளிவை முன்னிறுத்தும் பாரதியின் இலக்கியப் போக்கு, தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது. இந்தத் தெளிவுக்குத் தொல்காப்பியம் ஆடியை உவமமாக்கியிருப்பதை அறியமுடிகிறது.

    “அவற்றுள்
    ஆடி நிழலின் அறியத் தோன்றி
    நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
    யாப்பினுட் தோன்ற யாத்தமைப் பதுவே”

    என்னும் நூற்பாவில் தெளிவுக்கு ஆடியை உவமிக்கும் தொல்காப்பியம், ஆடியின் பண்புகளாக,

    1. நாடுதல் இன்மை
    2. பொருள் நனி விளங்குதல்

    என்னும் இரண்டினைச் சுட்டி அவ்விரு பண்புகளும் சூத்திரங்களில் அமைதல் வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகிறது. ஆடியின் தெளிவைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவர்  ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல்’என முகத்திற்கு உவமமாக்குவது ஈண்டு ஒப்பிடத்தகுந்தது.

    இனமான மணிகள் இணைந்து நிற்கும் ஓத்து

    சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் எனத் தொல்காப்பியர் நூல்வகைகளை நான்காகப் பகுப்பர். அவற்றுள் ஓத்தின் இயல்பு கூற வந்தவர்,

    “நேரின  மணியை நிரல்பட வைத்தாங்கு
    ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
    ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

    என்னும் நூற்பாவில் உவமத்தால் விளக்கிக் காட்டுவதை அறியமுடிகிறது. இந்நூற்பாவில் ‘நேர், ‘இனம்’ஆகிய இரு சொற்களும் உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனுக்குப் பேருதவி செய்வனவாம். அளவாலும் தரத்தாலும் ஒத்திருக்கும் மணிகளைக் கோத்து ஆரம் அமைப்பதுபோல, ஒன்றற்கொன்று இயைபுடைய பொருள்களை நிரல்படக் கோத்தமைப்பதே ‘ஓத்து’என்பது இந்நூற்பாவின் உள்ளடக்கமாகும்.

    மேலெழுந்தவாரியாக நோக்குவார்க்குச் சூத்திரமும் ஓத்தும் ஒன்று போலத் தோன்றிடினும், முன்னதற்குத் தெளிவையும், பின்னதற்கு அளவு, தன்மை ஆகியவற்றையும் இயல்புகளாக்கித் தொல்காப்பியம் அவற்றிடையே அமைந்த வேறுபாடு காட்டுவது உணரத்தக்கது. தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு வழிநூல் செய்த பவணந்தியார் இந்நூற்பாவில் (நன்னூல் 16) எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் கையாளுவதற்கு மேற்கண்ட உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனே காரணமாக இருத்தல் கூடும். நூன்மரபும் மொழிமரபும் எழுத்திலக்கணமேயானாலும், எழுத்தின் தனிப்பண்புகளை ஆராயும் நூன்மரபை ஒரு தொகுப்பாகவும், மொழியிடை நிற்கும் அதன் மற்றொரு இயல்பை ஆராயும் மொழிமரபை மற்றொரு தொகுப்பாகவும்; தனித்தனி ஓத்துக்களாகப் பிரித்தமைத்திருப்பது ‘ஓத்து’என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகலாம்.

    நன்னூலுள் உவமங்கள்

    ‘நூல்’என்பதற்குப் பயனடிப்படையில் தாம் தரும் பொருள் வரையறையைத் தொழில் சார்ந்ததோர் உவமத்தின் துணையால் நன்னூலாசிரியர் பவணந்தியார் அளித்திருப்பதை அறியமுடிகிறது.

    “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமை
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

    மரத்தின் கோணல்களை நூல் தீர்ப்பதுபோல் மனத்தின் கோணல்களை நூல் தீர்க்க வேண்டும்’என்பது மேற்கண்ட நேரிசை வெண்பாவின் கருத்து. ‘மனக்கோட்டம் தீர்ப்பதே நூல்’என்பது பொருள் வரையறை. இலக்கண நூலாசிரியர் ஒருவர் தச்சுத் தொழில் தொடர்பானதோர் உவமத்தைத் தம் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சிந்தனைக்குரியது. இதனைப் போலவே, சூத்திரத்தின் இயல்புக்கு வரையறை கூறும் நன்னூல்,

    “சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
    திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

    எனத் தொல்காப்பியத்தைப் போலவே ஆடியைத் துணைக்கழைத்திருப்பதைக் காணமுடிகிறது. தொல்காப்பியம் தெளிவுக்கு ஆடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, நன்னூல் அதனோடு திட்பத்திற்கும் நுட்பத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே ‘ஆடி’என்னும் உவமம், தெளிவு, செறிவு, இனிமை, நுட்பம் முதலிய  பல்வகைப் பண்புகளுக்கும் களனாகிறது எனலாம்.

    அமிதசாகரரும் அம்போதரங்க உறுப்பும்.

    தொல்காப்பியமும் நன்னூலும் தாம் கூறவந்த கருத்துக்களை விளக்குதற்கு  நூற்பாக்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே யாப்பருங்கலக்காரிகையுள்ளும் யாப்பு பற்றிய கருத்துக்களைத் தெளிவுறுத்த உவமத்தைப் பயன்படுத்தியுள்ளமை அறியமுடிகிறது. முன்னவற்றில் ஆங்காங்கே உவமை பயன்பட்டிருப்பதைப் போலல்லாது, காரிகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இலக்கண விளக்கத்திற்கு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. நால்வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பா, ஒத்தாழிசைக்கலிப்பா, வெண்கலிப்பா, கொச்சகக்கலிப்பா என மூன்று பிரிவாகும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூன்று தன்மையனவாக அமைகின்றன. இவற்றுள் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவைப் பற்றி இலக்கணம் கூறவந்த காரிகையாசிரியர் அதில் அமைந்துள்ள அம்போதரங்க உறுப்பை விளக்க எண்ணுகிறார். தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்கள் நிரல்பட அமையும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினின்று ‘அம்போதரங்கம்’ என்னும் ஓருறுப்பால் வேறுபடுவதே அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.  தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே அம்போதரங்க உறுப்பு வந்து, ‘தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம்’என்னுமாறு ஐந்து உறுப்புக்களால் அமைந்தால் அது ’அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா’எனப் பெயர் பெறும். இவ்வம்போதரங்க உறுப்பு எவ்வாறு அமையும் என்பதைக் கூற வந்த காரிகை,

    “நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி, முச்சீர் குறள் நடுவே மடுப்பின்
    …………………………………………..அம்போதரங்க ஒத்தாழிசையே”

    ‘அம்போதரங்க’ உறுப்பு என்பது இருசீர் அடிகளாலும், முச்சீர் அடிகளாலும், நாற்சீர் அடிகளாலும் அமையப்பெறும். இரண்டு, மூன்று, நான்கு என்னும் சீர்வரிசைகளில் அமையும் அவற்றை நோக்க, நீர்நிலையில் கல்லெறிந்தால் எழும் நீரலை, கல் விழுந்த ஒரு குறிப்பிட்ட மையப் புள்ளியிலிருந்து சிறிது சிறிதாக விரிந்து சென்று கரைந்துவிடுவதைப் போல இருப்பதாகக் காரிகை ஆசிரியர் உவமம் கூறுகிறார். இவ்வடிகளுக்குக்,

    “கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற்
    சுருங்கி வருகின்ற நீர்த்தரங்கம்போல”

    என உரையாசிரியர் குணசாகரர் எழுதிக்காட்டும் உரையும் ஈண்டுச் சுட்டற்பாலது.

    நிறைவுரை

    இதுகாறும் கூறியவாற்றால் உவமம் இலக்கியத்துள் அழகியல் உணர்வை மிகுவிக்கும் பகுதி என்பதும் கருத்து விளக்கத்தில் அதன் பங்களிப்பு இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டினுள்ளும் விரவியிருக்கிறது என்பதும் அதுவும் நூலாசிரியர் உரையாசிரியர் என்னும் இருவர் திறத்தன என்பதும் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களுள் தொடர்புடைய இலக்கண விளக்கத்திற்காக எளிய அழகிய உவமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியலாகும். தொல்காப்பிய இலக்கணத்துள் எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்களில் இலக்கண விளக்கத்திற்காக உவமப் பயன்பாடு இல்லாத நிலையில் பொருளதிகாரத்தில் அதன் பங்களிப்பு அடுத்த தலைப்பில் ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

    முன்னுரை

    ஒரு கவிதையை உணர்ச்சி வழிச் சுவைக்கலாம். கருத்து வழி உணரலாம். வடிவத்தின்வழி மனத்திருத்தலாம். கற்பனை வழி இரசிக்கலாம். இவை  அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் உத்திதான் ஒரு கவிதையை வெற்றிபெறச் செய்கிறது. அதாவது கற்பார் மனத்து நிலைத்து நிற்கக் காரணமாகிறது. உவமம் பொருள்விளக்கப் பகுதியாக இருந்தாலும் கவிதையின் அழகுக் கூறாக இருந்தாலும் அதன்வழி ஒரு கவிதை சுவைக்கப்படுவதையே இக்கட்டுரைகள் முன்னெடுகின்றன. கவிதைச் சுவை என்பது அலங்காரச் சொற்கள் அல்ல. முரண்பட்ட ஒலிகள் அல்ல. புரிந்து கொளள்ள முடியாத கருத்துக்கள் அல்ல. பொருந்தாத வடிவம் அல்ல. உவமத்தின் வழியும் ஒரு கவிதை சுவைக்கப்பட வேண்டும். இதுதான் தமிழ்க்கவிதைகளின் உவமப் பயன்பாட்டின் தலையாய குறிக்கோள் ஆகும். எனவே அது பற்றிய அறிஞர்களின் கருத்துக்களை இந்தப்பகுதி முன்னெடுப்பதாக அமைகிறது.

    அணியிலக்கணத்தினால் அடைந்த பயன்

    அணிகள் செய்யுளில் அமையும் கற்பனைகளின் பல்வேறு அழகுகளாகும். அந்த அழகுகளைப் பொதுவாகப் பாகுபாடு செய்தால் போதும். தொல்காப்பியர் அந்த அளவிற்குத்தான் விளக்கம் தந்தார். உவமை, உள்ளுறை உவமை, இறைச்சி என்பவற்றை அவர் விளக்கியிருத்தல் பயனுள்ளதாகும். ஆனால் பிற்கால அணியிலக்கண ஆசிரியர்கள் அணிகளை முப்பத்தைந்தாகவும் அறுபதாகவும் நூறாகவும் அவற்றின் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பகுத்துப் பெருக்கியுள்ளனர். தண்டியலங்கார ஆசிரியர் முப்பத்தைந்து அணிகளைக் கூறியுள்ளார். இந்த முப்பத்தைந்துள் ஒன்றான உவமையணியை நாற்பதாக்கிக் காட்டியுள்ளார். உவமத்தின் செறிவாகிய உருவகத்தை இருபத்தொன்றாக வகுத்துள்ளார். ஓர்  அணி மற்றோர் அணியுடன் கலந்து வரும் கலப்பு வகைகளை விரிவாகக் கூறியுள்ளார். முன்னவிலக்கணி பதினேழு வகை, வேற்றுப்பொருள் வைப்பணி எட்டு வகை, வேற்றுமையணி பத்துவகை என இவ்வாறே பல அணிகளின் உட்பிரிவுகளையெல்லாம் ஓதியுள்ளார். இவ்வாறு ஓதப்பட்ட முப்பத்தைந்து அணிகள் அல்லாமல் மடக்கு என்னும் சொல்லலங்கார வகைகளையும் பல்வகைச் சித்திரக் கவிகளையும் விளக்கிக் காட்டியுள்ளார். இவ்வாறே மற்ற அணியிலக்கண ஆசிரியரும் விரித்துரைத்துள்ளனர். இவ்வளவு விரிவாக இவர்கள் ஓதியுள்ள அணியிலக்கணத்தைக் கற்பதால் பெறும் பயனோ மிகச் சிறிதாக உள்ளது.

    வடமொழியில் அமைந்த அலங்கார நூல்களைக் கண்மூடி மொழிபெயர்த்துப் போற்ற தொடங்கியதன் விளைவு இது. வடமொழி கற்ற இடைக்காலப் புலவர் சிலர் தமிழ் இலக்கிய மரபை மறந்தும் தொல்காப்பியர் தம் பண்பட்ட நெறியைப் புறக்கணித்தும் வடமொழி நூல்களை ஆய்ந்துணராமல் அப்படியே தமிழில் தர முயன்றனர். அம்முயற்சி வேகத்தால் எழுந்த அணியிலக்கண நூல்களால் பெரும்பயன் விளையவில்லை.”

    என்னும் பாலசுந்தரனார் கருத்து மிகச்சிறந்த ஆய்வுண்மையை உரைப்பதாக அமையும் பாங்கு உணரத்தக்கது.

    வேண்டாத அணிநூலர் காட்டிய விரும்பாத பாதை

    தொல்காப்பிய ‘இறைச்சி’ என்பது வடமொழியில் ‘தொனி’ என்பதனோடு ஓரளவு ஒத்துப் போகும் இயல்புடையது. வடமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்திய புலவர்கள் இத்தொனியை இறைச்சியோடு ஒப்பிட்டுச் சிந்தித்து எழுதியிருப்பின் கொஞ்சம் பயன் விளைந்திருக்கும். மேலும் வடமொழியில் ‘ரசம்’ என்பதும் தொல்காப்பியர் சுட்டும் மெய்ப்பாடுகளும் ஓரளவு ஒப்புமை உடையன. தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் பல்வகைகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இடைக்காலத்தில் தமிழில் அணியிலக்கணம் செய்த புலவர் பெருமக்கள் மேலே சுட்டியவைகளையெல்லாம் விளக்கிக் காட்ட முயலாமல், அவற்றையெல்லாம் ‘சுவையணி’ எனப் புதிதாக ஓரணியை அமைத்து அவற்றை அதற்குள் அடைத்துக் காட்ட எத்தனித்தனர். இதனால் வடமொழியில் ‘ரசமும் தொனியும்’ அறிந்து மகிழ்வதைப் போலத் தமிழில் ‘மெய்ப்பாடும் இறைச்சியும்’ அறிந்து மகிழ்வதற்குரிய வாய்ப்பில்லாமல் போயிற்று.

    இன்று தமிழிலுள்ள அணிகளாலும் அணிபற்றிக் கூறும் பகுதிகளாலும் கருதிய பயன் விளையவில்லை எனலாம். தமிழில் அணியியல் சிறப்புற வளராமை மட்டுமன்றி வேண்டாத வகையில் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதன்று”.

    என்னும் அறிஞர் ஜெயராமனின் கருத்து வலுவான ஒன்றாகவே தெரிகிறது.

    உவமம் பற்றிய  டாக்டர் மு.வ. அவர்களின் கருத்து

    தனித்தன்மை மிக்க தமிழியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற மூதறிஞர் மு.வ. அவர்கள் பிற்கால அணியிலக்கணம் பற்றிய தமக்கே உரிய அடக்கத்துடனும் ஆனால் தெளிவு, உறுதி ஆகியவற்றுடன் கலந்து உரைக்கும் கீழ்க்கண்ட நடுநிலையான கருத்தைப் புறந்தள்ளுதல்  ஒல்லாது.

    தண்டியலங்காரம் முப்பத்தாறு அணிகளைக் கூறுகிறது. மாறனலங்காரம் அறுபத்து நான்கு அணிகளை எடுத்துரைக்கின்றது. குவலயாநந்தம் என்ற நூல் நூறு அணிகளைக் கூறுகிறது. ஆயினும் அவற்றுட் பல வேண்டாத விரிவுகளாக உள்ளன”.

    சங்க இலக்கியத்திலிருந்து தமிழின் மறுமலர்ச்சிக்கால இலக்கியம்வரைத் தடம் பதித்துச் சென்றவர் மூதறிஞர் மு.வ. ‘வேண்டாத விரிவுகள்’ என அணியிலக்கணத்தை அவர் சுட்டுவது பிற்கால அணிகளால் தமிழ்க்கவிதைகளின் அழகு பெரிதும் சீர்குலைவிற்கு ஆளாகியிருப்பதைக் குறிப்பாகச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

    கலைஞரும் உவமமும்

    உவமத்தைப் பற்றிய இதுகாறும் ஆராயப்பட்ட மரபுசார்ந்த அறிஞர்களின் கருத்துக்களோடு இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியப் படைப்புலகத்தின் பரிமாணத்தைத் தமது எழுதுகோலால் பெருக்கிக் காட்டியவரும், தமிழறிந்தவரையெல்லாம் தமக்கு எல்லையாக்கித், தமிழிலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் தமது ஆளுகைக்குள் உட்படுத்தியவருமான கலைஞர் அவர்களின் கருத்தையும் ஈண்டுச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகலாம். கலைஞர் தாம் எழுதிய ‘தொல்காப்பியப் பூங்கா’ என்னும் வரையறைக்குட்பட்ட இலக்கண உரைநூலுள் உவமத்தைப் பற்றிய தமது கருத்தைத் தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

    “வினை பயன் மெய் உரு என்ற நான்கே
    வகைபெற வந்த உவமத் தோற்றம்”

    என்னும் நூற்பாவிற்கு விளக்கவுரை தரும் கலைஞர்,

    “நூற்பாவில் ‘வகைபெற வந்த உவமத் தோற்றம்’ என்பதற்குப் பாகுபட வந்த உவமைக்கண்’ என்று பொருள். இவற்றில் பார்வைக்குப் புலனாகும் பொருள்களும் என்று ஒரு வகையும், அவ்வாறு அல்லாமல் அந்த உவமைகள் செவியினாலும் நாவினாலும் மூக்கினாலும் மெய்யினாலும் மனத்தினாலும் அறியக் கூடியவை என்று ஒரு வகையும் உண்டு.  மொத்தத்தில் பாகுபட வருதல் என்பதாவது ‘கண் முதலிய பொறிகளுக்குப் புலப்படுபவையும்’ ‘பொறிகளுக்குப் புலனாகாது ‘மனத்திற்குப் புலனாவனவும்’ என இருவகையாகும்.”

    எனக் குறிப்பிடுகிறார். ‘உவமம் உருவத்தாலும் அமையலாம்., உணரத்தக்கதாகவும் அமையலாம்’ என்பது மேற்படி நூற்பாவிற்குக் கலைஞர் தரும் விளக்கமாகும்.  இலக்கியப் படைப்பாளர் என்ற வகையில் மட்டுமல்லாமல் ஏறத்தாழ எழுபது ஆண்டுக் காலமாக அரசியலையே தமது தலைப்பணியாகக் கொண்டியங்கும் ஒருவர் சிந்தனையில் கூட, உவமம் பெற்றிருக்கும் உயர்ந்த இடத்தைச் சுட்டிக் காட்டுதற்காகவே இங்கே அவர்தம் கருத்து சுட்டப்பட்டது. இலக்கியத்தின் வடிவங்கள் எத்தகைய மாறுபாட்டுடன் அமைந்தாலும் ‘உவமம்’ எங்கும் எதிலும் தன் முத்திரையைப் பதித்துக் காட்டும் வல்லமையுடையது என்பதும் இதனால் புலனாகும் உண்மையாகும்.

    நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தரும் அரிய விளக்கம்

    இவ்வாறு உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் பல்வேறாக அமைந்திருக்கும் நிலையில் முதுபெரும் தமிழ்ச்சான்றோரும் பெரும்புலவருமான நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் தந்திருக்கும் விளக்கம் ஈண்டுச் சுட்டத்தகுந்தது. பிறருடைய கருத்துக்களெல்லாம் உவமத்தைப் பொருட்பகுதி, அணிப்பகுதி என்ற இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க, நாட்டார் அவர்கள் அவற்றுடன் அளவையியலையும் (LOGIC) இணைத்துக் கொண்டு தந்திருக்கும் அரியதொரு விளக்கம் இவ்வாறு அமைகிறது.

    “உவமம்’ என்பது ஒன்று. அது பொருளிலக்கணத்தில் நிலைபெறும் இடமும் அணியிலக்கணத்துள் பெறுகிற இடமும் அளவை நூல்களில் பெறுமிடமும் வெவ்வேறானவை.’ இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒருபகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம அணியென்று கொண்டாங்கு, அளவைநூலார் உவம அளவை என்று கொண்டனர் என அறிக.”

    நாட்டார் அவர்களின் கருத்தடிப்படையில் பொருளிலக்கணம், அணியிலக்கணம், அளவைநூல் என முப்பெரும் களங்களில் உவமம் தனித்தனி இயல்பு கொண்டு செயல்படுவதாகக் கொள்ளலாம். இதனால் தொல்காப்பியத்தின் உவமவியலுக்கும் பிற்கால அணியிலக்கணத்தார் கூறும் உவமையணிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதும், தொல்காப்பியம் பொருட்பகுதியாகவே உவமத்தைக் கருதியது என்பதும், அணியிலக்கணம் கண்டார் உவமையைச் செய்யுளுக்கு அணியாகக் கொண்டார் என்பதும் இவையிரண்டினின்றும் முற்றிலும் மாறுபட்டு அளவையியலில் அதன் பங்களிப்பு “காட்சி, அனுமானம், ஆகமம், உவமை, அருத்தாபத்தி, இன்மை”  என்னும் ஆறனுள் ஒன்றாகும் என்பதும் தெளிவாகலாம்.

    நிறைவுரை

    சென்ற சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையிலும் சான்றோர்  கருத்துக்களின் அடிப்படையிலும் உவமம் என்பது தனித்தமிழ் நெறி என்பதும் அதன் உள்ளீடுகளான ‘இறைச்சி உள்ளுறை’ முதலியன போதிய கவனம் பெறாது போனது என்பதும் விளக்கப்பட்டன. பொருட்பகுதி, செய்யுளணி, அளவை என்னும் முப்பரிமாணங்கள் உவமத்தின் இயங்குதளங்களாகச் செயல்பட்டிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டது. கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்வதிலும் அதன் நிலைப்பேற்றிலும் உவமத்தின் பங்களிப்பைப் பற்றிய சிந்தனைகள் தொடரும்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்

    முன்னுரை

    ‘உவமம்’ என்பது தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபுப்படி அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் பயன்படுவது. அது தற்காலத்தைப் போலச் செய்யுளுக்கு அல்லது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்பது வடமொழி மரபு. இதற்கான சான்றுகள் முந்தைய கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் ‘அணி’ என்னும் சொல், ‘செய்யுளணி’ என்னும் பொருளில் அந்நூலின் எந்தவிடத்தும் ஆளப்படவில்லை. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு ஏதும் காணப்படவில்லை. செய்யுளுறுப்புக்களில் ஒன்றாகவும் அது கூறப்படவில்லை. இந்த மூன்று கருத்துக்களும் தொல்காப்பியத்தை உற்று நோக்கிய அளவில் காணப்படும் வெகு இயல்பான உண்மைகள். இருந்தும் தொல்காப்பியம் அணியிலக்கணச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற நூலெனவும் தொல்காப்பியருக்கு அணியிலக்கணச் சிந்தனை இருந்திருக்கிறது எனவும் கருதுகிற போக்கு, தமிழியல் ஆய்வுலகில் நிலவுகிறது.  இதுபற்றிய அறிஞர் சிலருடைய கருத்துக்களின் வன்மை மென்மைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியத்துக்கு அணியிலக்கணம் உடன்பாடா?

    தொல்காப்பியம் ‘உவமவியல்’ என்னுந் தலைப்பில் அமைந்த இயலில் செய்யுளில் அமையும் அணி பற்றியே ஆராய்ந்திருக்கிறது. அவ்வியல் பல்வேறு வகையில் இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமைகளின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. உவமத்தைத் தவிர மற்ற அணிகள் ஏதும் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. அதற்குக் காரணம், ஏனைய அணிகளின் அடிப்படைக் கூறுகள் எல்லாம் உவமையில் நிலவியதால் அவையெல்லாம் உவமத்தின் சிதறல்களாகவே கருதப்பட்டிருக்கலாம் அல்லது உவமையணி மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் பயன்பாட்டில் இருந்து, மற்ற அணிகள் வளர்ச்சிடையாமல் இருந்திருக்கலாம்.” என்னும் ஊகத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும் இத்தகைய கருத்துக்கள் பல்வேறு ஐயங்களை எழுப்ப வல்லனவாக அமைந்திருக்கின்றன. ஆதலால் பின்வரும் விளக்கம் பதிவு செய்யப்படுகிறது.

    1. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு எந்த நூற்பாவில் அமைந்திருக்கிறது என மேற்சுட்டிய ஆய்வாளர் சுட்டவில்லை.
    2. உவமவியல் அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியில் வினை, பயன், மெய், உரு என உவமம் தோன்றும் முறையும், சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடும் பொருள் என அதன் நிலைக்களன்கள் பற்றி ஆராய்கிறதே அல்லாமல் தண்டியலங்காரத்தைப் போலப் பல்வகை உவமைகளைப் பற்றி ஆராயவே இல்லை என உறுதியாகக் கூற முடியும்.
    3. ‘உவமைகளின் வகை’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது என்றால், அவ்வகைகள் எவை என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
    4. ஏனைய அணிகளின் கூறுகள் எல்லாம் உவமத்துள் அடங்கியதாகக் கருதப்பட்டதே உவமம் மட்டும் கூறப்பட்டதற்கான காரணம் என்றால், அக்காரணம் தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
    5. மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதும் (other kinds of figures of speech had not been developed then) உவமையின் தனித்த பயன்பாட்டுக்குக் காரணமாயின் மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பதை மேற்கண்ட பகுதியால் அறிந்து கொள்ளவியலவில்லை.
    6. உவமத்தைச் செய்யுளணியாகவும் உவமவியலை அணியிலக்கணம் கூறும் பகுதியாகவும் முன்னரே கருதி முடிவெடுத்துக் கொண்டு அவற்றையெல்லாம் உவமவியலில் தேடியும் காணவியலவில்லை என்பதெல்லாம் ஆய்வு நெறிக்கு ஏற்றதாகுமா என்பது சிந்தனைக்குரியது.

    தொல்காப்பிய உவமம் பற்றிய பாவாணர்தம் விளக்கம்

    “தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக்கண  முறையில் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம், ஏனை யுவமம் என்னும் இருவகை உவமங்களையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமவியல். பிற்காலத்தில் வடநூலார் அணியிலக்கணம் வகுத்தபோது தமிழிலக்கண உவமவியலைப் பயன்படுத்திக் கொண்டதுடன் ‘உவமை’ என்னும் பெயரையும் ‘உபமா’ எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப்பியம் கடைக்கழகக் தொடக்கத்தெழுந்த வழிநூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்களுக்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ‘ஐந்திரம்’, ‘பாணினீயம்’ முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும், தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் கூறும் பிண்டங்கள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். வடமொழியில் யாப்பிலக்கணம் ‘சந்தன’ அல்லது ‘சந்தோபிசிதி’ என்னும் நூல்களிலும் அணியிலக்கணம் ‘அலங்காரம்’ என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள்” என்னும் பாவாணர் அவர்களின் விளக்கம் உவமம் பற்றிய அனைத்துவகை ஐயங்களையும் களைவதாக அமைந்துள்ளது.

    நிலைக்களன் ஒன்று சிந்தனை இரண்டு

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படும் உவமவியல் இருவேறு வகையான சிந்தனைகளுக்குக் களமாயிருக்கிறது. ‘உவமவியல் அடிப்படையிலேயே பிற்கால அணியிலக்கணங்கள் வளர்ந்தன என்றுரைக்கும் ஆய்வறிஞர்களும், ‘உவமவியலை அடிப்படையாக வைத்துத் தமிழின் தனித்தன்மை மிக்க துறையாக அணியிலக்கணம் வளர்ச்சி பெறவில்லை’ என்னும் ஆய்வறிஞர்களும் தமிழாய்வு உலகத்தில் உள்ளனர் என்பது ஈண்டு இன்றியாமையாக் கருத்தாகச் சுட்டப்படுகிறது.

    “அகத்திணையியல் அகப்பொருளாகவும், புறத்திணையியல் புறப்பொருளாகவும், களவியல் இறையனார் களவியலாகவும், செய்யுளியல் யாப்பருங்கலம் – காரிகை, பாட்டியல் – பிரபந்தவியல் எனப் பல்வகையாகவும் விரிந்து வளர்ந்தமை போன்று ‘உவமை’ என்ற ஒன்றே பின்பு அணிக்கும் அலங்காரத்திற்கும் இடமளித்துத் தன்னை அடியாகக் கொண்டு வளர்ந்த பல்வேறு அணிகளையும் இணைத்துக் கொண்டு தனி அணி இலக்கணமாக வளர்ந்து வந்துள்ளது என்று கருத இடமளிக்கிறது”

    எனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆய்வுலகில்,

    “தொல்காப்பியத்தோடு ஒட்டிய தமிழ் மரபோடு பொருந்திய
    உவம  வளர்ச்சி பற்றிய நூலொன்றும் தோன்றவில்லை”

    என்னும் சிந்தனையும் போதிய கவனத்திற்கு ஆளாகியுள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

    “தொல்காப்பியர் தம் நூலை எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பகுதி உடையதாக யாத்துள்ளார். தமக்கு முன்னிருந்த பகுப்புமுறை உண்மை கொண்டே அவர் இப்பகுப்பு முறையை ஏற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எழுத்திலக்கணம் அடிப்படையாகவும், சொல்லிலக்கணம் அதன் வளர்ச்சியாகவும், சொல்லுணர்த்தும் பொருள் பற்றிய இலக்கிய இலக்கணம் முடிந்த பயனாகவும் கொள்ளப் பெற்றன. எழுத்தும் சொல்லும் கற்பது பொருள் பற்றிய இலக்கியக் கொள்கைகள் அனைத்தையும் உணர்ந்து இலக்கியங்களை விளக்கமுறக் கற்று இன்பம் நுகர்வதற்கே என்று எண்ணினர். தமிழ்ப்புலவர், பிற்கால இலக்கண ஆசிரியர் சிலர் எழுத்து, சொல்லோடு நின்று விட்டனர். பொருளைப் பற்றி எழுதியவர்கள்கூடத் தொல்காப்பியக் கருத்துக்களையே திரும்பவும் சுருங்கக் கூற முயன்றனரேயன்றிப் புதுமை படைக்கவோ முன்னதை மேலும் விளக்கவோ முயலவில்லை எனலாம். சிலர் பொருளிலக்கணத்திலிருந்து யாப்பைப் பிரித்துத் தனி இலக்கண நூல் எழுதினர். சிலர் அகம் புறம் பற்றித் தனி இலக்கண நூல்களை யாத்தனர். வேறு சிலர் பாட்டியல் நூல் என்னும் ஒரு பிரிவைக் கலப்படமாக ஆக்கினர். ஆனால் உவமவியலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அணியியல் ஒன்றும் தோன்றவில்லை.”

    தொல்காப்பிய நிலைக்களத்தில் இவ்வாறு இருவேறு சிந்தனைகள் கிளைத்துள்ளன. எனினும்,

    1. தண்டியலங்காரம் என்னும் வடமொழித் தழுவல் நூலில் குறிக்கப்பட்டுள்ள உவமைகளின் பெயர்கள் ஒன்றுகூடத் தமிழில் இல்லையாதலாலும்,
    2. தனக்குப் பின்னால் செய்யுளணி பற்றிய நூல் தோன்றும் எனக்கருதி முன்கூட்டியே தொல்காப்பியர் உவமவியலைப் படைத்தார் என்பது அளவையியலுக்குப் (LOGIC) பொருந்தாமையானும்
    3. தண்டியலங்காரத்துக்கு முன்னர் எழுந்த தமிழ்க்கவிதைகளில் அணி விகற்பங்களைப் பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததாலும்

    அணியிலக்கணச் சிந்தனை தொல்காப்பியருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

    உவம நெறி பற்றிய பாவலர் பாலசுந்தரனார் கருத்து

    ‘உவமம்’ எனத் தொல்காப்பியர் பயன்படுத்தியதற்கும், ‘உவமையணி’ எனப் பிற்காலத்தார்  உருவாக்கிக் கொண்டதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வறிஞர் ச.பாலசுந்தரனார்  பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    “உவமமானது செய்யுளொடு ஒருங்கிணைந்து, சிறப்பு நலன் முதலாகியவையேயன்றி மெய்ப்பாடுகளையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுதலான் உவமவியலை, மெய்ப்பாட்டியலின் பின்னும் செய்யுளியலின் முன்னுமாக அமைத்துக் கூறினார் ஆசிரியர்.

    “இடைக்காலத்தே இலக்கண நூல் செய்த ஆசிரியன்மார் மெய்ப்பாடுகளையும் ஆகுபெயர் முதலாய குறிப்பு மொழிகளையும் பொருள்கோளையும் முரண்தொடை முதலியவற்றையும் நோக்கு முதலாய செய்யுளுறுப்புக்களையும் வேறுபட வந்த உவமத் தோற்றங்களையும் உள்ளுறை உவமத்தினையும் செய்யுட்கு அணி செய்வனவாகக் கொண்டு வடமொழி அலங்கார நூல்களைப் பின்பற்றி அணிநூல் செய்து போந்தனர்”.

    “தொல்காப்பியத்துள் கூறப்படும் உள்ளுறை உவமம் ஏனையுவமம் என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணம் கூறுவதாகக் கருதி உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின் அவற்றையெல்லாம் அடக்கி இவ்வாசிரியர் உவமவியல் கூறுவதாக மயங்குவர் பலர்.”

    “தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை எனக் கருதுவார்க்கும் அதற்கேற்ப ஆய்வுரைகளைக் கூறுவார்க்கும் தமிழிலக்கணத்தின் தொன்மையினையும் தொல்காப்பியத்தின் நுண்மையினையும் எடுத்துக் கூறித் தமிழின் தனித்தன்மையை ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு நீர் பாய்ச்சுதலை ஒக்கும் என்க”

    ஆய்வு என்னும் பெயரால் தமிழ் மரபைப் பிறழ உணர்ந்தார்க்கும்  உணர்ந்த  பின்பும் மரபழிக்க முயல்வாருக்கும் பாவலரின் இவ்வரிய விளக்கம் பயன்படுதல் வேண்டும்.

    நிறைவுரை

    இதுகாறும் வலிமை வாய்ந்த தரவுகள் பலகொண்டு காட்டப்பெற்ற விளக்கங்களால் உவமம் என்பது தமிழ் மரபென்றும் அது அகப்பொருளில் தலைமக்களுக்கானது என்றும், பின்னாலே வடமொழி மரபு தழுவி எழுதப்பெற்ற தண்டியலங்காரம் என்னும் நூலில் காணப்பெறும் உவமம் பற்றிய கருத்துக்களும் விளக்கங்களும் செய்யுளுக்கு அணியானவை என்றும் புரிந்து கொள்ளலாம். கலாச்சாரக் கலப்புக்கள் இலக்கிய இலக்கணங்களில் எதிரொலிக்கவும் செய்யும் என்பதற்கு இது சான்றாகலாம். தற்காலத்தில் உவமம் பற்றிய தொல்காப்பிய மரபு முற்றிலும் கைவிடப்பட்டு அது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்ற அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பொருள் புலப்பாட்டுக் கருவியாகவும் செய்யுளுக்கு அணியாகவும் அமைந்திருக்கும் இவ்வுவமங்கள் கவிதைகளின் பெருமைக்கு எவ்வாறு துணைசெய்கின்றன என்பதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளால் விளங்கிக் கொள்ளலாம்.

    (தொடரும்…)

    Share