Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (241)

    சக்தி சக்திதாசன்

    அன்பானவர்களே !

    அன்புடன் கூடிய வணக்கங்கள். ஜூன் மாதத்தின் இறுதியில் நின்று கொண்டிருக்கிறோம். காலம் எவருக்கும் காத்து நிற்பதில்லை. அது காற்றைப் போல கனவேகத்தில் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நாம் எமது கடமைகளைச் சரிவரச் செய்கிறோமோ இல்லையோ அது தன் கடமையில் தவறாமல் இருக்கிறது. காலத்தின் மாற்றம் எதைச் சாதித்திருக்கிறதோ இல்லையோ உலக மக்களின் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதே உண்மை. இம்மாற்றங்களில் சில வாழ்வின் வசதிகளைக் கூட்டி வாழ்க்கை முறைகளை இலகுவாக்கியிருக்கிறது. மற்றும் சில மக்களிடையே இருந்த பிரிவுகளை அகற்றி மக்களின் ஒன்றுபடலுக்குத் துணை நின்றிருக்கின்றன. பலமாற்றங்களை நேர்மறையான உணர்வுடன் உள்வாங்கிக் கொண்ட மக்கள் வேறு சிலவற்றை எதிர்மறையான நோக்கத்தோடு எதிர்ப்பு மனப்பான்மையோடு அணுகுவதும் உண்டு. சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும் மாற்றங்கள் வேறு சிலருக்கோ முற்றிலும் ஏற்புடையதாக இருக்காது.

    கலாச்சாரத்தின் பெயரால், தாம் சார்ந்திருக்கும் மதத்தின் கோட்பாடுகளின் காரணமாக பல மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதில் தயக்கம் காட்டுவோர் பலருண்டு. இன்றைய வைத்தியத்துறையின் முன்னேற்றங்களும் அதனால் மனிதகுலம் அடைந்திருக்கும் மேம்பாட்டையும் அனைவரும் அறிவோம். நவீனகால வைத்தியவசதிகளின் பால் எமக்கேற்படும் நோய்களுக்கான சிகிச்சைகளும் நவீனமயப்படுத்தப்பட்டு அதனால் நாமடையும் அனுகூலங்களை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதே பெரும்பான்மையாக நிகழ்கிறது. ஆனால் அதேசமயம் ஒரு உதாரணத்தை எடுத்தோமானால் பல நோய்களுக்கு சிகிச்சை முறையாக இரத்த பரிமாற்றம் அன்றி இரத்த ஏற்றம் நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் விபத்தின் மூலம் அதிக இரத்தம் இழக்கப்பட்ட ஒருவரின் உயிர் இரத்த வங்கியிலிருக்கும் இரத்தத்தைச் செலுத்துவதின் மூலமே காப்பாற்றப்படுகிறது. “ஜொகோவாஸ் விட்னஸ் ( Johova`s witness ) “ எனும் ஒருவகை கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்களின் மதக்கோட்பாடுகளின் நிமித்தம் அடுத்தவர்களுடைய இரத்தம் உடலில் ஏற்படுவது பரவலாக மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வைத்தியர்கள் நீதிமன்றத்தின் மூலம் அத்தகைய தீர்வுகளைப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

    இது மிகவும் சிக்கலான விடயமாகிறது, அதாவது கலாச்சாரத்தின் பெயரால். மதக் கோட்பாடுகளின் பெயரால் காப்பாற்றப்படக்கூடிய ஒரு உயிர் பறிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இது நியாயமானதா ? இத்தகைய கலாச்சாரப் பின்னணிகள் அல்லது மதக் கோட்பாடுகள் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் நிலை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா எனும் விவாதங்கள் பல இடங்களில் பலரிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது. கலாச்சாரம் அல்லது மதம், இனம், நிறம் எனும் மக்களைப் பிரிக்கும் காரணிகளின் ஆதிக்கத்தை, அதன் நியாயத்தன்மையை சற்று ஆழமாக ஆராயவே சில உதாரணங்களை எடுத்துப்பார்க்க விழைந்தேன். இதற்கு ஓர் காரணம் உண்டு. இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஊடகங்களில் பரவலான விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

    அது என்ன ?

    unnamed (5)

    இங்கிலாந்திலுள்ள ” பார்க்‌ஷையர் (Berkshire)” எனும் இடத்தில் சந்தீப் மன்டீர், ரீனா மன்டீர் எனும் ஆசிய தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்கள் சீக்கிய கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்கள். பத்து வருடங்களாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்கு இருக்கும் ஒரே குறை குழந்தைகள் இல்லை என்பதுவே. மிகவும் வசதியாக ஒரு பெரிய வீட்டில் வசித்து வரும் இவர்கள் குழந்தைக்காக ஏராளனமான பணச்செலவில் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவில்லை. அடுத்த முயற்சியாக அவர்கள் குழந்தையைத் தத்து எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதற்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கான முன்பதிவு பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு தமது பகுதியிலுள்ளஅரசாங்க தத்து எடுக்கும் பிரிவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த பதில் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

    அப்படி என்ன அதிர்ச்சி ?

    அவர்களது கலாச்சாரப் பின்னணி இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் இருப்பதினால் அவர்களது விண்ணப்பத்தை மேலே எடுத்துச்செல்ல முடியாது. இதற்குக் காரணம் தற்போது அப்பகுதியில் தத்து எடுக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் குழந்தைகள் “வெள்ளை” இனத்தவர்கள் என்பதே. இனம், மதம், நிறம் எனும் வேறுபாடுகள் சட்டமூலமாக ஒழிக்கப்பட்ட ஒரு நாட்டிலே , இனங்களுக்கிடையில் கலப்புத் திருமணம் அதிகளவில் இடம்பெற்று வரும் ஒரு நாட்டிலே, பல்லினக் கலாச்சாரக் கொள்கையை ஊக்குவிக்கும் ஒரு நாட்டிலே அரசாங்கத் தரப்பினால் நடத்தப்படும் ஒரு அரச இலாகாவின் பதில் இனத்துவேஷத்தை முன்னிறுத்துவதாகவே இத்தம்பதியருக்குப்பட்டது. இப்பதிலினால் மிகவும் கொதிப்படைந்த அவர்கள் தொலைபேசி மூலம் அதற்கான இலாகாவைத் தொடர்பு கொண்டு மேலும் விளக்கம் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு கூறப்பட்ட விளக்கம் ஒரு குழந்தையைத் தத்து கொடுக்கும் போது அக்குழந்தையின் கலாச்சாரப் பின்னணியைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இத்தகைய குழந்தையைத் தத்துக் கொடுக்கும் அரசாங்கத் தரப்பிலான நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது அல்ல ஏனெனில் அதற்கான விதிவிலக்குகள் சட்டத்தில் உள்ளன என்பதுவே.

    “நாங்கள் மிகவும் வசதியான வாழ்க்கை உள்ளவர்கள், எமது இல்லம் 5 அறைகளைக் கொண்டது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மிக பாதுகாப்பாகவும், அன்பாகவும் செய்வோம் ” என்று அவர்கள் கூறியதும். சகோதரர்களாகிய இரு குழந்தைகளை எடுக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கிறோம் என்று கூறி ஒரு உத்தியோகத்தரை அவர்களது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்களாம். அவர்களது இல்லத்தை நன்கு பார்வையிட்டு அதன் செளகரியத்தை உள்வாங்கிக் கொண்டு, அவர்களுடன் ஓர் நேர் உரையாடலை நடத்திய பின்னர். இத்தகைய வசதி படைத்த உங்களுக்கு உங்களது கலாச்சாரப் பின்னணி இந்தியர் என்பதால் வெள்ளை இனக்குழந்தையைத் தத்து கொடுக்க முடியாததிற்கு வருந்துகிறேன் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இதனால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்கள். இந்த விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டு போக முடிவு செய்துள்ளார்கள். இங்கிலாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து ஒரு வெள்ளை இனக்குழந்தையைப் போலவே வளர்ந்து பெரியவர்களாகிய தம்மை தமது நிறத்தின் காரணமாகவே தவிர்ப்பது மனதை மிகவும் வருத்துகிறது என்கிறார்கள். ஒரு குழந்தையைத் தத்து கொடுப்பதன் முன்னால் அதன் கலாச்சாரப் பின்னணி ஒத்துப்போகிறதா என்பதை ஒரு தகுதியாகப் பார்க்கலாமே தவிர மற்ற அனைத்துத் தகுதிகளும் சரியாக இருக்கும்பட்சத்தில் இது ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு தம்மைத் தவிர்த்திருப்பதே குற்றம் என்கிறார்கள்.

    இவர்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் பிரதமர் சாட்சாத் தெரேசா மே அவர்களே தான் ! இப்பிரச்சனை அவருக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர் இத்தம்பதியரின் விண்ணப்பத்தை ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தப் பிரச்சனையை இரு பக்கமும் இருந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது, தனது எதிர்காலத்தைத் தானே நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தையை முற்றிலும் மாறான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த வெற்றின, வேறு நிறத்துப் பெற்றோருக்குத் தத்துக் கொடுப்பது நீதியாகுமா ? பின்னால் வளர்ந்ததும் அக்குழந்தையின் மனதை இது எவ்வகையில் பாதிக்கும்? இவையெல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா என்பது ஒருபக்க வாதம். மதம், நிறம், இனம் என்பது குழந்தைகளுக்குத் தெரியுமா? பெற்றோர்களை இழந்து அரசாங்க அனாதை இல்லத்தில் வாழும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கப்போகும் அன்பைத் தமது அதிகாரத்தைக் கொண்டு தடுப்பது எப்படி நீதியாகும் ? அன்பே இங்கு முக்கியத்துவம் பெறப்பட வேண்டும். எந்த நிறத்தவராயினும் ஒரு குழந்தையைத் தமது குழந்தையாக அவர்களுக்கு ஒரு குடும்பச் சூழலைக் கொடுத்து வளர்ப்பதுதானே முக்கியமானது என்பது மறுபக்க வாதமாகிறது.

    சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது ஒரு கறுப்பினக் குழந்தையை வெள்ளை இனப் பெற்றோர் தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். அக்குழந்தை தனது முகத்துக்கு அதிக அளவு சோப் இட்டுக் கழுவ முயற்சித்ததாம். அதற்குக் காரணம் தானும் தனது பெற்றோரின் நிறத்தைப் பெறவேண்டும் என்று கூறியதாம். இதைச் சுட்டிக்காட்டும் சிலர் இத்தகைய வித்தியாசமான கலாச்சாரப் பின்னைக் கலப்புகள் குழந்தைகளின் மனதில் மனநலக்குறைவையே உண்டாக்கிவிடக் கூடும் என்று கூறுகிறார்கள். அதேபோல மற்றொரு உதாரணம் கலப்புமணத் தம்பதியருக்குப் பிறந்த குழந்தை பள்ளிக்குப் போகும் பருவம். பள்ளியில் இருந்து அவர்களது தாத்தா, பாட்டி அழைத்துச் செல்வார்கள். இக்குழந்தையின் ஆசிய தாத்தா, பாட்டி வந்து தன்னை அழைத்துச் செல்வதை அந்தக்குழந்தை விரும்பவில்லையாம். ஏனெனில் அவர்கள் மற்றைய வெள்ளை இனக்குழந்தைகளின் தாத்தா, பாட்டி போலில்லை எனும் காரணத்தினால்.

    அதேசமயம் பெற்றோரின் அரவணைப்பின்றி, பெற்றோரின் நல்வழிப்படுத்தலின்றி அனாதை இல்லங்களில் வாழும் பல சிறுவர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இனம் எதுவாக இருந்தாலும் அவர்களும் ஒரு பெற்றோரின் அன்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்தால் நன்றாகப் படித்து ஒரு நல்ல நாட்டுப்பிரஜையாக வாழும் சந்தர்ப்பத்தைப் பெறுகிறார்கள். ஆகவே வேறுபாடுகளின்றி வசதியாகப் பராமரிக்கக் கூடியவர்களுக்கு இனப்பாகுபாடின்றி குழந்தைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு அறிவார்ந்த செயல் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே !

    இந்தத் தம்பதியரைப் பொறுத்த அளவில் அவர்கள் இப்போது அமெரிக்காவில் இருந்து தத்தெடுக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இங்கிலாந்தில் தமக்குத் தத்துக் கொடுப்பதற்கு மறுத்ததை நீதிமன்றத்தில் வாதாடப் போவதாகக் கூறியுள்ளார்கள். இது தமக்காக மட்டுமல்ல தம்மைப் போன்ற மற்றைய பெற்றோர்களுக்காகவும், அனாதைக் குழந்தைகளுக்காகவும் என்று கூறுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக முன்பொரு வழக்கில் இவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு மற்றொரு வழக்கில் வழங்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கின் முடிவை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அனாதை இல்லங்களில் வாடும் குழந்தைகளும் உட்பட.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 239 )

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் உறவாடுவதில் மகிழ்கிறேன். காலச்சக்கரம் கனவேகத்தில் சுழல்கின்றது. நேற்றிருந்தோர் இன்றில்லை. இன்றிருந்தோர் நாளயில்லை இதுதான் வாழ்வின் யதார்த்தம். மனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்ந்திருந்த காலம் முதல் இன்று நாட்டினில் நாகரீகமாக் சகல வசதிகளுடன் வாழும் இக்காலம் வரை மனிதவாழ்க்கையின் மாற்றங்கள் எண்ணிக்கையற்றவை. மாற்றங்களில் பல காலக்கட்டாயத்தின் அடிப்படையில் நிகழ்கின்றன. வேறுசில மனித பேராசையினால் மனிதர் மீது திணிக்கப்படுகின்றன. அது எவ்வகை மாற்றங்களாயிருப்பினும் அவற்றை ஏற்றுக் கொண்டு அதற்கமைய நாம் வாழப்பழகிக் கொண்டால்தான் வாழ்க்கை இலகுவாகிறது. வாழ்க்கை என்றுமே இலகுவாவதில்லை. அவ்வாழ்க்கையை கையாளும் முறையில் நாம் திறமைசாலிகளாக ஆகுவதன் மூலம் வாழ்க்கை இலகுவாவது போல எமக்குத் தோற்றமளிக்கிறது…

    english elections 2
    “ நடக்கும் என்பார் நடக்காது , நடக்காது என்பார் நடந்து விடும் ” என்பது கவியரசரின் பாடல் ஒன்றின் வரிகள். எதற்காக இந்தத் திடீர் வரிகள் எனும் எண்ணம் எழுகிறதா ? கடந்த மடல்களில் இங்கிலாந்துப் பிரதமரால் சுமார் இரு மாதங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட திடீர் பொதுத்தேர்தலைப் பற்றி தெரிவித்திருந்தேன். கடந்த வாரம் 8ம் திகதி இப்பொதுத்தேர்தல் நடைபெற்றது.. ஒன்பதாம் திகதி காலை பொதுத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இம்முடிவு ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட முடிவாக இருந்தாலும் , பல கோணங்களில் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒரு முடிவு என்றே கூறவேண்டியிருக்கிறது. ஏனென்கிறீர்களா ?

    இப்பொதுத்தேர்தலுக்கான அவசியம் ஒன்றும் இருக்கவேயில்லை. முன்னால் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்த பின்னால் பிரதமராகிய தெரேசா மே அவர்களுக்கு பாராளுமன்றத்தில் கணிசமான அளவு பெரும்பான்மை இருந்தது. பலமுறை ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் திரும்பத் திரும்ப இப்போது பொதுத் தேர்தலுக்கு அவசியமேயில்லை என்று அடித்துக் கூறிவந்தார் பிரதமர். அப்படிக் கூறி வந்தவர் ஒரு அரசியல் கணக்குப் போட்டார்.

    எதற்காக ?

    பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சிக்குள் பலமான உட்பூசல்கள்
    அதன் தலைவரான ஜெர்மி கோர்பன் மீதான அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையில்லாத் தன்மை ஜெர்மி கோர்பன் அவர்களின் தீவிர இடதுசார சோசலிஸக் கொள்கைகளுக்கெதிரான இங்கிலாந்துப் பெரும்பான்மையான வலதுசார ஊடகங்களின் தொடர் தாக்குதல்கள்

    என்பன பொதுக் கருத்துக் கணிப்பில் தொடர்ந்து அரசிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை விட 20 புள்ளிகள் பின் தள்ளி கணிப்புகளைக் கொடுத்தது.. பிரதமருக்கு ஒரு இலட்ச்சிய வேட்கை அதாவது ஜெர்மி கோர்பன் என்பவர் இங்கிலாந்தின் பிரதமராவது என்பதை எப்போதும் இங்கிலாந்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தனது கட்சியோ கருத்துக் கணிப்பில் 20 புள்ளிகள் முன் நிற்கின்றது. இந்நிலையில் தான் பொதுத்தேர்ர்தலை நடத்தினால் லேபர் கட்சி படு தோல்வியையே அடையும். தானும் தனக்கு மக்கள் தான் நினைத்தபடி இந்த “ப்ரெக்ஸிட்” எனப்படும் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிகழ்வை நடத்துவதற்கான அதிகாரத்தை தந்து விட்டார்கள் என்று அறைகூவல் விடுக்க முடியும். அத்தோடு பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தைக் கூட்டி விடலாம். எனும் அரசியல் கணிப்பை முடிவெடுத்தார்.

    இங்கேதான் நான் மேற்குறிப்பிட கவியரசரின் வரிகள் உயிர் பெறுகின்றன.. எவைகள் நடக்காது என்று பொதுவான கருத்துக்களாக இருந்தனவோ அவைகள் நடந்து விட்டன. அனைத்து எதிர்பார்ப்புகளையும் தகர்த்து படு தோல்வியடையும் என்று எதிர்பார்த்திருந்த லேபர் கட்ச்சி தனது பாராளுமன்றப்பலத்தை 30 ஆசனங்களினால் கூட்டிவிட்டது. எவரினால் தமது கட்ச்சி அழியப்போகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கூப்பாடு போட்டார்களோ அவர் லேபர் கட்ச்சியை என்றுமில்லாதவாறு 40 சதவீத வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி விட்டார், அதே சமயம் அமோக வெற்றியீட்டும் என்ரு கருதப்பட்ட பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சியோ எண்ணிக்கையில் அதிக அளவு ஆசனங்களைக் கைப்பற்ரி இருந்தாலும் தனது பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. தனியாக அரசமைக்க தேவையான குரைந்த பட்ச எண்ணிக்கையான 326 ஆசனங்களைக் கைப்பற்றாது கூடரசாங்கம் அன்ரி மைனாரிட்டி எனப்படும் சிறுபான்மை அரசை அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது..

    இந்த முடிவு பிரதமருக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது. இந்நாடு என்னாலா அன்ரி தீவிர சோசலிஸவாதியான ஜெர்மி கோர்பனினாலா நிர்வகிக்கப்பட வேண்டும்? எனக்கு அதிகாரம் தாருங்கள் நானே ஒரு சிறந்த தலைமையை இந்நாட்டிற்குத் தர்க்கூடியவள் என மேடைதோறும் தன்னம்பிக்கையுடன் முழங்கிய பிரதமரின் கோரிக்கை மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது. தன்னுடைய நேர்மையயும், உண்மைத்தன்மையௌயுமே ஆயுதங்களாகக் கொண்டு மக்கள் முன்றலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜ்ர்மி கோர்பனின் கட்சியான லேபர் கட்சி எண்ணிக்கையில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருக்காவிட்டாலும் ஜெர்மி கோர்பன் வெற்றி பெற்றதாகவே அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது..

    சரி இவ்வளவு நடந்திருக்கிறதே இங்கிலாந்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுதான் என்ன ? வச யர்லாந்து ஜக்கிய இங்கிலாந்தின் ஒரு அங்கம். அங்கு பொதுத் தேர்தலில் இரண்டு கட்சிகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன. வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்திலிருந்து விலகி அயர்லாந்து நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் “சின் வெயின்” எனும் கட்சி 8 பாராளுமன்ற ஆசனங்களையும், வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று போராடி வரும் ” ஜனநாயக ஜக்கிய (டியூபி) ” கட்சி பத்து பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. “சின் வெயின்” ஜக்கிய இராச்சியத்தின் இறைமையை ஏற்றுக் கொள்ளாததினால் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் தமது இருக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. மற்றக் கட்சியான டியூபி , கன்சர்வேடிவ் கட்சியுடன் நெருக்கமான் உறவுகளைக் கொண்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியும், டியூபி கட்சியும் கன்சர்சேடிவ் கட்ச்சியின் அரசுக்கு ஸ்திரமான் பெரும்பான்மைக்கான ஆத்ரவை நல்கும் பேச்சுவார்த்தையில்; ஈடுபட்டிருக்கின்றன. கொள்கையளவில் இங்கிலாந்து அரசைத் தாம் ஆதரிப்பதாகக் கூறியுள்ள போதும் தமது ஆதரவுக்கான சலூகைகளுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன.

    கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முடிவு தொங்கு பாராளுமன்றமே எனும் கருத்துக்கணிப்புகளினால் தமது ஆதரவை அப்போது கன்சர்வேடிவ் கட்ச்சி தேடும் எனும் நம்பிக்கையில் அதற்கான முனைப்புகளில் அப்போதைய டியூபி தலைவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் கன்சர்வேடிவ் கட்ச்சிக்கு பெரும்பான்மையை நல்கியதனால் அவர்களது அந்த எதிர்பார்ப்பு சிதைந்து போனது. ஆனால் இம்முறை கன்சர்ட்வேடிவ் கட்சி அமோக வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி இருந்த டியூபி இப்போது எதிர்பாராத வகையில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது.

    அதேபோல இத்தேர்தலுடன் காணமல் போய்விடுவார் எனும் எதிர்பார்ப்பை முறியடித்து முன்னைவிட அதிகபலத்துடன் லேபர் கட்சியின் தலைமைப்பீடத்தை அலங்கரிக்கிறார் ஜெர்மி கோர்பன். இத்தேர்தலில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள் இரண்டு ,
    அனைவரின் எதிர்பார்ப்பையும் உடைத்து அற்புத்ஜமான் பிரச்சார வெற்றியை அடைந்துள்ளார்

    உடைந்து சின்னாபின்னமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட லேபர் கட்சிக்குள் அவருக்கெதிராக இருந்த பெரும்பான்மையான பாராளுமன்ற லேபர் கட்சி அங்கத்தினர்களின் ஆத்ரவைப் பெற்று கட்சியைக் காப்பாற்றி விட்டார்
    சரி எப்படி ஜெர்மி கோர்பன் இப்படி ஒரு சாதகமான சூழலை உருவாக்கினார் ?

    மக்களின் ஆதரவு தனக்கே எனும் தவறான கணிப்பினால் அதீத போக்குக் கொண்டு தன்னிச்சைப்படி மிகவும் எதிர்மறையான ஒரு தேர்தல் அரசியல் பிரகடனத்தை பிரதமர் தேரேசா மே வெளியிட்டது.

    மிகவும் வெளிப்படையாக முற்றிலும் மாறுபட்ட ஒரு தீவிர சோசலிஸ அடிப்படையிலான தேர்தல் அரசியல் பிரகடனத்துக்கு மக்கள் வழங்கிய ஆதரவு
    மிகவும் எளிமையான், நேர்மையான், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து ஜெர்மி கோர்பன் அவர்கள் மேற்கொண்ட பிரச்சார முறை அரசியல் தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதத்தில் தெரேசா மே பங்கேற்க மறுத்தமை
    இதுவரை தேர்தலில் இல்லாதவாறு இளையோர்கள் இத்தேர்தலில் பங்கெடுக்க வைத்து அவர்களின் ஆத்ரவை தமது கட்சிக்குத் திருபுவதில் ஜெர்மி கோர்பன் அடைந்த வெற்றி

    இவைகளே இத்தேர்தலின் அதிரடி முடிவுக்கான முக்கிய காரணிகள் எனலாம். தெரேசா மே அவர்கள் தலைமையில் வட அயர்லாந்துக் கட்சியான டியூபி ஆதரவுடன் கன்சர்வேடிவ் கட்ச்சி அரசமைப்பது உறுதியாகி விட்டது. ஆனால் நானே எமது கட்ச்சி இத்தேர்தலில் அடைந்த பின்னடைவுக்குக் காரணம் இதிலிருந்து இக்கட்சியை மீட்பது என் கடமை என்று சூளுரைக்கும் பிரதமர் எத்தனை காலம் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பது கேள்விக்குறியே என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

    கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்ச்சி இவையிரண்டுமே ஜரோப்பிய ஒன்ரியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த ஆண்டு மக்கள் எடுத்த முடிவை நிறைவேற்றுவதே தமது கடமை என்கிறார்கள். ஆனால் எத்தகைய ஒரு உடன்படிக்கையில் விலகுவது, இவ்விலகல் பேச்சுக்களை எவ்வகையில் அணுகுவது எனப்தில் இருவருக்கும் வேறுபாடு உண்டு. இவ்விரு கட்சிகளுக்கும் விழுந்த வாக்குகள் 80 சத்விகிதத்துக்கும் அதிகம். இதிலிருந்து நாட்டின் பெரும்பான்மையினர் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் “ப்ரெக்ஸிட்” ஜ ஆதரிக்கிறாரெகள் என்பதுவே வாதம். ஆனால் வன்மையான் ப்ரெக்ஸிட்டா அன்றி மென்மையான ப்ரெக்ஸிட்டா என்பதிலேயே தர்க்கம் நிகழ்கிறது. பல முன்னாள் பிரதமர்களும், அரசியல் அவதானிகளும் ப்ரெக்ஸிட் அணுகல் முறையை அனைத்துக் கட்ச்சிகளும் இணைந்த ஒரு குழுவின் மூலம் தீர்மானிப்பதே சாலச் சிறந்தது என்கிறார்கள்,

    ஸ்கொட்லாந்து இம்முறை 13 கன்சர்வேடிவ் கட்ச்சி உறுப்பினர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. ஸ்கொட்லாந்தின் ஆதரவு இருந்திருக்காவிட்டால் பிரதமர் அரசமைக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டிருப்பார். இவ்வெற்றிக்குக் காரணம் ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்ச்சியின் தலைவர் ருத் டேவிட்சன் என்ரே கூறுகிறார்கள். இவர் திருமணம் செய்யவிருப்பது இன்னொரு பெண்ணை. இத்தகைய ஓரினத் திருமணங்களை முற்றாக எதிர்க்கும் கட்சி டியூபி. அவர்களுடன் உடன் படிக்கை செய்வதா ? எனக் கொதித்துப் போயிருக்கிறார் ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்ச்சித் தலைவர். அவரையும் அனுசரித்து நடக்க வேண்டிஒய சிக்கலான் சூழலில் தத்தளிக்கிறார் பிரதமர். அனைத்துக்கும் முடிவு டியூபியுடனான பேச்சுக்களில் எத்தகைய முடிவுகளை எட்டுகிறார்கள் என்பதிலேயே இரெஉக்கிறது. அதுமட்டுமன்றி வடாயர்லாந்தின் சட்டசபையில் அதிகாரம் “சின்வெயின்” மற்ரும் “டியூபி” ஆகியவைகளின் கூடமைப்பிலேயே நடந்தது. அதிலே ஏற்பட்ட ஒரு சிக்கலினால் சட்டசபை கலைக்கப்பட்டது. மீண்டும் அங்கு கூட்டாட்சி கொண்டு வருவதற்கான பேச்சுக்கள் ப்ருபுறம் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு நடுநிலைமையான் மத்தியஸ்தம் இங்கிலாந்து அரசினால் வழங்கப்படுகிறது. தமது ஆட்சியின் உத்தரவாதத்திற்குத் தாம் தங்கியிருக்கும் ஒரு கட்சி ஈடுபட்டிருக்கும் ஒரு பேச்சுவார்த்தையில் இவர்கள் எப்படி நடுநிலைமை வகிக்க முடியும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. இவர்களின் உறவு வடாயர்லாந்தில் மீண்டும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ எனும் அச்சம் தோன்ரியுள்ளதுஇ. இச்சிக்கலையும் சமாளித்தாக வேண்டிய சூழல் பிரதமருக்கு உண்டு

    “நடக்காது என்பார் நடந்துவிடும்” எனும் உண்மையை உள்வாங்கிக் கொண்ட அரசியல்வாதிகள் மக்களின் முடிவை எவ்வகையில் நோக்கப் போகிறார்கள், எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும். எது எப்படி இருப்பினும் ஜக்கிய இராச்சியம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான் சந்தியில் நிற்கிறது என்பதுவே உண்மை..

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 238 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். இங்கிலாந்து வாழ் மக்கள் மனங்களில் மீண்டும் ஒரு பேரிடி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் துயரத்துடன் வரைந்த மடலின் துயர் ஆறுமுன்னே மீண்டும் ஒரு துயர் மடலை வரைவேன் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

    சிறிய காயம் பெரிய துன்பம் !
    ஆறுமுன்னே அடுத்த காயம்
    உடலில் என்றால் மருந்து போதும்
    உள்ளம் பாவம் என்ன செய்யும் !

    எனும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் இன்றைய இங்கிலாந்து பெரும்பான்மை மக்களின் (நானும் உட்பட) நிலையை அழகாக எடுத்தியம்புகிறது. இங்கிலாந்தின் சமர் எனப்படும் வசந்தகாலம் பகல் மிக நீண்டதாக இருக்கும். விண்டர் எனப்படும் குளிர்கால அசெளகரியங்களைத் தாக்குப்பிடித்து சமர் எனப்படும் வசந்த காலத்தை நோக்கி ஆவலுடன் காத்திருப்பார்கள். அத்தகையதோர் அழகிய மாலைப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழித்து கொண்டிருந்த ஒரு சனிக்கிழமை முன்னிரவு வேளை. இங்கிலாந்தைப் பார்த்து மகிழ வேண்டும் என்று வந்திருந்த பல சுற்றுலாப் பயணிகள் பலரும் களிப்புடன் வலம் வரும் வேளை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றான லண்டன் மாநகரம் ஜே ஜே என்று குதூகலித்துக் கொண்டிருந்த வேளை. சுமார் 10 மணியளவில் ஒரு வெண்ணிற வான் லண்டன் பிரிட்ஜ் எனும் உலகப் பிரசித்தி பெற்ற லண்டன் மேம்பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மிலேச்சத்தனமாக நடைபாதையில் ஏறித் தாக்கியது. ஆம் இனவெறி, ,மதவெறி கொண்ட மூளையற்ற மூன்று பயங்கரவாதிகளின் செயல் லண்டன் நகரையே பதை பதைக்க வைத்துள்ளது. அது மட்டுமா ! அந்த வெண்ணிற வானை பாலத்தோடு மோத விட்டு விட்டு குதித்து ஓடிய அந்த மூன்று மனித மிருகங்களும் அருகிலுள்ள பரோ ஹை ஸ்ட்ரீட் எனும் பெருவீதியினுள் நுழைந்து அங்கே முன்னிரவு வேளையை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்களின் மீது சாராமாரியாக வேறுபாடு இல்லாமல் கத்திக்குத்து நடத்தியுள்ளன.

    காவற்துறையினருக்கு செய்தி கிடைத்து சரியாக எட்டு நிமிடத்துக்குள் இங்கிலாந்து காவற்துறையினரால் அம்மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவு ! சுமார் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்கள். உயிரிழந்தவர்கள் இங்கிலாந்து தேசத்தவர்கள் மட்டுமல்ல பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் இதிலடங்குவர். காதலனின் கண்முன்னே ஒரு இளம்பெண் பத்துத் தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து போக்குவரத்துப் போலிஸ் உத்தியோகத்தவர் ஓய்விலிருந்தவேளையில் உதவிக்கு ஓடியபோது கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

    ஏன் இந்த மிலேச்சத்தனம், ? இது யார் பெயரால் நடத்தப்படுகிறது ? இதனால் இவர்கள் காணப்போகும் விளைவுதான் என்ன ? எனும் பல கேள்விகள் இங்கிலாந்து மக்களின் மனங்களில் பெரும் அலைகளாக அடித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே வேற்றினத்து மக்கள் , வேற்றுக் கலாச்சாரப் பின்னனி கொண்டவர்கள் இங்கிலாந்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத இனத்துவேஷம், இனவாதம் முதலியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டவர்களின் கரங்களை வலுப்படுத்தும் செயல்களாகவே இவை அமைகின்றன. பல்லினக் கலாச்சாரம் எனும் வாழ்க்கை முறைக்கு இங்கிலாந்து ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று பெரும்பான்மை இங்கிலாந்து மக்கள் மகிழ்வதுவே இந்ந்நாட்டின் நடைமுறை. ஆனால் அதே சமயம் தேசியவாதிகள் எனத் தம்மைக் காட்டிக் கொள்வோர் சிலர் இப்பல்லினக் கலாச்சாரம் இங்கிலாந்தின் வாழ்க்கை முறைக்கு ஒரு சவாலாகவே அமையும் என்று கூப்பாடு போட்டார்கள். அவர்கள் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை தமது வாதத்துக்குச் சார்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.

    இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் சமாதன மனமுடையவர்கள் . இந்நாட்டைத் தமது நாடாக எண்ணி வாழ்கிறார்கள். இத்தகைய தாக்குதல்கள் , மற்றும் தீவிரவாதக் கருத்துக்களை முற்றாக எதிர்ப்பவர்கள். ஆனால் இத்தகைய மூடர்களின் செயல்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து இஸ்லாமிய சமூகத்தின் மீதும் சேற்றை வாரி இறைக்கும் செயலாகவே இருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து வேற்றுநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் மீதும், அவர்களின் சந்ததியின் மீதும் இங்கிலாந்து மக்களுக்கு ஒருவிதமான பயத்தையும், சந்தேகத்தையுமே தோற்றுவிக்கும். அதுவும் குறிப்பாக ஆசிய இனத்தவர் மீது ,. இது எதிர்பார்க்கப் படவேண்டிய ஒன்றே !

    தத்தம்நாடுகளின் சர்வாதிகாரப் போக்குக்கு முகம் கொடுக்க முடியாமல் தனிமனித சுதந்திரத்தை இழந்து இங்லிலாந்துக்கு தஞ்சம் கேட்டு வருபவர்கள், உண்ணக் கொடுக்கும் கைகளையே கடிப்பது போல தமக்கு வாழ்வளித்த நாட்டையே சீரழிக்கும் செயலில் இறங்குவது மனதை மிகவும் வேதனைப் படுத்துகிறது.

    என்னை எடுத்துக்கொள்ளுங்கள் சுமார் 42 வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்துக்குள் மாணவனாக நுழைந்தேன். நான் பிறந்த நாட்டில் பதினெட்டே ஆண்டுகள் தான் வாழ்ந்துள்ளேன். நான் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தததுக்கு எவ்விதமான அரசியல் காரணகளும் இல்லை. வெறும் உயர்கல்விக்காகவும் என் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்காகவுமே நான் புலம் பெயர்ந்தேன். எனக்கு உயர் கல்வியளித்து,, பட்டமளித்து, எனக்கு இங்கே நிரந்தர வசிப்பிடம் கொடுத்து, என்னத் தனது நாட்டின் பிரஜையாக்கி, பணிபுரியும் வாய்ப்பளித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து வாழவைத்தது இங்கிலாந்து என்றால் மிகையாகாது. எனது இந்த 42 வருட காலத்தில் நான் வேறுநாட்டிலிருந்து இங்கு வந்தவன் எனும் உணர்வைக் கல்வியிலோ, அன்று உத்தியோக வாய்ப்புக்களிலோ என்றுமே உணரப்பண்ணியதில்லை. இத்தகைய ஒரு சகிப்புத் தன்மை கொண்ட சமூகத்தை கண்பதென்பது அரிய பாக்கியமே !

    ஆனால் இன்றோ சிலர் தமக்கு அரசியல் தஞ்சமளித்த அன்றி வாறுமையிலிருந்து பாதுகாப்பளித்த இந்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்க எண்ணுவது, இந்நாட்டின் ஏதுமறியா மக்களின் உயிரைப் பறிக்கும் பாதகச் செயல்களைப் புரிவதை அவர்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தி விட முடியாது. உலகின் எந்த ஒரு மதமும் அன்பையன்றி, அழிவை விதைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதில்லை. ஆனால் அம்மதத்தின் பெயரால் தமது வெறியைத் தணித்துக் கொள்வதினால் பல்லின மக்களும் இணைந்து வாழும் இம்மேற்கத்திஒய நாடுகளில் இனங்களிடையே கலாச்சாரப் பிரிவுகளைப் பெரிதாக்குவதையும், பிரிவினையைத் தோற்றுவிப்பதையும் தான் அவர்கள் சாதிக்கிறார்கள். அப்படி ஒரு சூழலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகத் தென்படுகிறது. தமது பின்புல நாடுகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனிதச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை இழந்தவர்கள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ்வோரின் அத்தகைய உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதற்காலவே இப்பயங்கரவாதச் செயல்களைப் புரிவது போலவே தென்படுகிறது .

    இங்கிலாந்தின் பொதுத்தேர்தல் நடைபெறும் காலத்தில் அடுத்தடுத்து இரண்டு வார இடைவெளிகளில் இத்தகைய நிகழ்வுகளை நடத்தியது இங்கிலாந்தின் ஜனநாயகத் தேர்தலுக்கு இடையூறு விளைப்பதற்காகத்தான் இருக்கும் என்பது பலரது அபிப்பிராயம். ஆனால் இங்கிலாந்தின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடந்தே தீரும் நாமனைவரும் ஒன்று பட்டு எவ்வித சமூகப் பிரிவுகளிக்கும் உட்படாது இப்பயங்கரவாதிகளின் நோக்கத்தைத் தோற்கடிப்போம் என்று சங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். ஆனால் இச்ச்செயல்கள் தேர்தல் பிரச்சார இறுதிக் கட்டத்தில் பிரச்சாரத்தின் போக்கை தேசியப் பாதுகாப்பென்னும் கொள்கையை நோக்கி அதிதீவிரமாக திசை திருப்பி விட்டிருக்கிறது.

    இக்கட்டுரை வெளியிடப்படும் யூன் 9ம் திகதி இங்கிலாந்தின் புதிய அரசை யார் அமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து இம்மூர்க்கத்தனமான பயங்கரவாதச் செயல்களின் விளைவாக இங்கிலாந்தின் சட்டங்களில் எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படப் போகிறது என்பது தெரிந்துவிடும். அதைப் பற்றி அடுத்தடுத்த மடல்களில் கலந்துரையாடுவோம்.

    அன்பும், சமாதனமும், மத, மொழியிணக்கமும், எதுவிதமான பேதங்களுமற்ற சகோதரத்துவமுமே உலகின் அமைதிக்கு வழிகோலும். நாமனைவரும் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதித்து, எமக்கு வாழ்வளித்த நாட்டுக்கு உண்மையான பிரஜைகளாக வாழ்வதே நாம் பிறந்த எமது தாய்மண்ணுக்கு பெருமையளிக்கும் என்பதுவே உண்மையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . . . (237)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களுடன் கருத்தாடும் சந்தர்ப்பம் கிட்டியமைக்காக எனது அன்பு நன்றிகள். நேற்றுபோல இன்று இல்லை எனும் வரிகள் கவியரசரின் பாடல் ஒன்றில் ஒலிப்பதுண்டு. அது அரசியல் உலகிற்கு மிகவும் பொருந்தும். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னால் திடீர் தேர்தல் ஒன்றிற்கு வாய்ப்புண்டா என்று இங்கிலாந்துப் பிரதமர் திரேசா மே அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு “நிச்சயமாகக் கிடையாது. ப்ரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்ற வேண்டும் எனும் ஐக்கிய இராச்சியப் பெரும்பான்மை மக்களின் ஆணைப்படி அதனை நடைமுறைப் படுத்துவது ஒன்றே எனது முன்னால் இப்போது இருக்கும் கடமை” என அறுத்து, உறுத்து அடித்துச் சொன்னார் பிரதமர். அதே பிரதமர் சுமார் எட்டு வாரங்களுக்கு முன்னால் ஜூன் மாதம் எட்டாம் திகதி திடீர்ப் பொதுத்தேர்தல் என்று அறிவித்து விட்டார்.

    eng1என்ன இந்த மாற்றம்? நேற்று இல்லாத மாற்றம்? எனும் கேள்வி அனைவர் நெஞ்சங்களிலும் அலைமோதியது. பல ஊகங்கள், பல விளக்கங்கள். அரசியலைக் கலக்கிக் குடித்தவர்கள் என்று கருதப்படும் ஊடகவியலாளர்களுக்கோ மீண்டும் ஒரு தீபாவளி எனும் வகையில் ஒரே குஷி. விளக்கு, விளக்கு என்று அனைத்து வகைகளிலும் விளக்கித் தள்ளி விட்டார்கள் போங்கள். பிரதமரின் திடீர் மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்! அது என்ன? அதற்குப் பின்வரும் சில காரணங்களாக இருக்கலாம்.

    அரசப் பெரும்பான்மை பலம்:
    2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரசாங்கம் வெறும் 13 பெரும்பான்மை மட்டுமே கொண்டிருந்தது. அதிலே ஒரு பாரளுமன்ற உறுப்பினர் விலகிக்கொள்ள அது வெறுன் 12 ஆகக் குறைந்து விட்டது. பன்னிரண்டு பெரும்பான்மை உள்ளதுதானே பின் எதற்கு இந்த அவசரம் என்று எண்ணலாம். இந்த ப்ரெக்ஸிட் எனும் பூதம் இருக்கிறதே அது ஒரு பதட்டமான சூழலைக் கொடுத்துள்ளது. அப்படி என்ன பதட்டமான சூழல்? அது வெறும் அரச, எதிர்க்கட்சிகளுக்கிடையிலான போராட்டம் அல்ல, கட்சி பேதங்களைக் கடந்து இந்த ப்ரெக்ஸிட்டுக்கான ஆதரவும் எதிர்ப்பும் அனைத்துக் கட்சிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணத்திற்கு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கச் சார்பானவர்களிலும் இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான அடிப்படை ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு வருகிறது என்று வையுங்கள் அதற்கு எதிராக வாக்களிக்கும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து வெறும் 13 அரசப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.பிரதமர் அம்போதான்!

    பிரதமரின் அதிகாரம்:
    அது என்ன பிரதமரின் அதிகாரம்? 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர் டேவிட் கமரன் ஆவார். அவர் அளித்த தேர்தல் அரசியல் விஞ்ஞாபனத்தை ஆதரித்து அவருக்கு பிரதமராகும் அதிகாரத்தை மக்கள் வழங்கினார்கள். தானளித்த வாக்கின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரும் அங்கத்துவத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் அன்றைய பிரதமர் டேவிட் கமரன். ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைத் திட்டங்களில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து அங்கம் வகிப்பதே எமது நாட்டு நலனுக்கு உகந்தது எனும் கருத்தை முன்வைத்தார் டேவிட் கமரன். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக அவரது கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே மக்கள் எடுத்தார்கள். விளைவு ப்ரெக்ஸிட் எனும் முள்மரம். தான் எடுத்த நிலைப்பாட்டுக்கெதிரான நிலைப்பாட்டை மக்கள் விரும்புவதால் அதனை நிறைவேற்றும் தகுதி தனக்கில்லை என்று ஜனநாயகக் கோட்பாடுகளுக்கே ஒரு எடுத்துக்காட்டாகத் தனது பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரன். ஓட்டுநர் இல்லாமல் வாகனம் இடைத்தெருவில் நிறுத்தப்படும்போது மற்றொரு ஓட்டுநர் அதனை அதன் இறுதித் தரிப்பிடம் வரை கொண்டு செல்ல வருவது போல பிரதமர் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார் அம்மையார் தெரேசா மே. மக்களின் ஆணையின்றிப் பின் கதவால் வந்து அமர்ந்த இந்தப்பிரதமருக்கு மக்களின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் எப்படி இருக்கும் என்று ஆங்காங்கே சில குரல்கள் வலுவாக ஒலித்துக் கொண்டிருந்தன. தனக்கென ஒரு மக்கள் ஆணையைப் பெறுவது ஒன்றே தனக்குச் சரியான அதிகாரத்தை வழங்கும் என்று தெரிந்து கொண்டார்.

    கருத்துக்கணிப்பு முடிவுகள்:
    அந்த நேரத்தில்தான் கருத்துக்கணிப்புகள் பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சியை விட 27 வீதப் புள்ளிகள் முன்னணியில் நிற்கின்றது எனத் தொடர்ந்து சில வாரங்கள் அறிவித்தன. லேபர் கட்சிக்கு ஜெர்மி கோர்பன் தலைவராக வந்த நாள்முதல் அக்கட்சிக்குள் அவருக்கெதிரான உட்பூசல்கள் ஓய்ந்தபாடில்லை. இத்தகைய சூழலில் லேபர் கட்சி வெற்றி பெற்று அரசமைப்பது என்பது நடைபெற முடியாத விடயம் எனப் பல அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தார்கள். பிரதமர் தெரேசா மே அவர்கள் ஒரு கணிக்கப்பட்ட சிக்கலான முடிவொன்றை (calculated risk) எடுத்தார். தனது பாராளுமன்றப் பெரும்பான்மை பலத்தைக் கூட்டுவதற்காகவும், தன்னையே மக்கள் ப்ரெக்ஸிட் விடயத்தில் நம்பியிருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் தனது வெற்றி உறுதியானது எனும் துணிச்சலில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜூன் 8ஆம் திகதி திடீர்த் தேர்தல் ஒன்றை அறிவித்து விட்டார்.

    மேற்கூறிய மூன்று முக்கிய காரணிகளுமே பிரதமரின் இந்த மனமாற்றத்துக்குக் காரணம் என்பது பல அரசியல் அவதானிகளின் அனுமானம். சரி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரசார ஆரம்பத்தில் அனைத்து அரசியல் விமர்சகர்களின் கருத்தும் ஒருமித்த வகையில் திரு ஜெர்மி கோர்பன் தலைமையிலான லேபர் கட்சி படுபயங்கரமான தோல்வியைத் தழுவப் போகின்றது என்றே ஒலித்தது. ஜெர்மி கோர்பன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு எதிரானவர்கள் கூட அவரின் நேர்மையையும்,கொள்கையிலிருந்து வழுவாத தன்மையையும் பாரட்டினார்கள் என்பது உண்மை. ஆனால் அதேசமயம் அத்தகைய நேர்மை இன்றைய அரசியல் சூழலில் மக்களிடையே எடுபடாது ஆகையால் அவரும், அவரால் வழிநடத்தப்படும் லேபர் கட்சியும் வெற்றியடைவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது.

    • NHSஎனும் அனைவராலும் போற்றப்படும் இங்கிலாந்து தேசிய சுகாதாரசேவை உடையுமளவுக்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலை,
    • அரச சமூகசேவை சேவையில் அடிமட்டம் வரை சென்று விட்ட நிலை,
    • மக்களின் வாழ்க்கைத்தரம் குன்றிய ஒரு நிலை,
    • அரச ஊழியர்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்படாத ஒரு நிலை

     என்று பல காரணிகள் அரசுக்கு எதிராக இருக்கும் ஒரு நிலையில் சாதாரணமாக இத்தேர்தலில் எதிர்க்கட்சி கொடிகட்டிப் பறக்க வேண்டும் ஆனால் ஜெர்மி கோர்பன் எனும் காரணி லேபர் கட்சியை கீழ்நோக்கி இழுக்கிறது என்பதாகவே பொதுக்கருத்து இருந்தது.

    ஏன் ஜெர்மி கோர்பன் மீது இத்தனை காட்டம்?

    • தனது முப்பது வருடகால அரசியலில் திரு.ஜெர்மி கோர்பன் அவர்கள் எப்போதும் தனது கட்சியில் ஒரு தனி மனிதராகவே அடையாளம் காணப்பட்டார்.
    • மிகவும் தீவிரவாத சோசலிசக் கோட்பாடுகளைத் தனது கொள்கைகளாகக் கொண்டிருந்தார்,
    • அவரது கட்சியான லேபர் கட்சி டோனி பிளேயரின் தலைமையின்கீழ் அரசாட்சி செய்தபோது இறங்கிய ஈராக், லிபியா யுத்தம் அனைத்துக்கும் எதிராக வாக்களித்த ஒரு மனிதர்.
    • அணுவாயுதங்கள் அனைத்தையும் இங்கிலாந்து சுயாதீனமாகக் கைவிடவேண்டும் என்பதைத் தனது தீவிரக் கொள்கையாகக் கொண்டிருந்தவர்.
    • அதைத்தவிர அயர்லாந்து தீவிரவாத அமைப்பான ஜ.ஆர்.ஏ எனும் அமைப்பு இங்கிலாந்தில் பல குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் அவ்வமைப்பின் அரசியல் அங்கமான சின் வெயின் எனும் கட்சியின் தலைவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
    • மேற்கத்தியநாடுகளினால் பயங்கரவாத அமைப்பென்று அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை இங்கிலாந்து பாரளுமன்றத்துக்கு தன்னிடைய அதிதிகளாக அழைத்திருந்தார்.

    இது போன்ற காரணங்களினால் ஜெர்மி கோர்பன் அவர்கள் தேசப்பற்று அற்றவர் எனும் கருத்து பெரும்பான்மையான இங்கிலாந்து மக்களிடையே நிலவி வந்தது. ஆனால் இன்றோ லேபர் கட்சியின் தலைவராகிவிட்ட நிலையில் அணுவாயுதங்கள் தொடர்பான தனது கொள்கையைச் சற்று மற்றியுள்ளார்.

    அதைத் தவிர பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுக்கு “நான் எப்போதுமே அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் எதிரானவன், அச்செயல்களில் ஈடுபட்டோருடன் தான் தொடர்பு கொள்ளவில்லை. அச்செயல் புரிவோரைக் கட்டுபடுத்தக்கூடிய அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அச்செயல்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்த முயன்றேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

    இன்றைய அரசியல் களத்தின் நிலை: 
    பிரதமர் திரேஸா மே அவர்களையே அச்சம் கொள்ளும் அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறது. எப்படி என்கிறீர்களா? 22வீதம் முன்னணியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் eng2ஆதரவு 3 வீதமளவுக்கு குறைந்து விட்டிருக்கிறது. காரணம் என்ன? ஜெர்மி கோர்பன் அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை ஏனெனில் அவர் பிரதமராவது நடைபெறாத விடயம் என்று பெரும்பான்மை முடிவாக இருந்தது. ஆனால் மக்களிடையே புகுந்து அவர் மக்களது அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் வகையில் தமது கொள்கைப்பிரகடனங்களை அழுத்தமாகக் கூறிவருவது அவரின் மீது மக்களுக்கிருந்த கருத்தை அவருக்குச் சாதகமாக திருப்பிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் தொடர்ச்சியான ஜெர்மி கோர்பன் மீதான தாக்குதல்கள் அவர் மீது ஓர் அனுதாப அலையைக் கிளப்பி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். நேற்று அதாவது 31.05.2017 அன்று இங்கிலாந்து தொலைக்காட்ச்சி பீ.பீ.சி நடாத்திய தேர்தல் விவாதத்தில் அனைத்துத் தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும் பிரதமர் தனக்குப் பதிலாக தனது உள்துறை அமைச்சரை அனுப்பியது பிரதமர் ஜெர்மி கோர்பனுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு அச்சப்படுவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி படுத்த படுக்கையில் விழும் வயதானவர்களுக்கு அரச உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கான செலவை அவர்களின் மரணத்தின் பின்னர் அவர்களைது உடமைகளை விற்பதன் மூலம் அரசு எடுத்துக் கொள்ளும் எனும் கொள்கையிலிருந்த விரிசல்களை ஜெர்மி கோர்பன் சுட்டிக்காட்ட அதன் விளைவுகள் கொடுத்த தாக்கத்தைச் சமாளிக்க பிரதமர் தனது கொள்கையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டி வந்தது ஜெர்மி கோர்பனுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறார்கள்.

    வெல்லவே முடியாத நிலையிலிருந்த ஜெர்மி கோர்பனின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சி செயல்படும் அளவுக்கு ஜெர்மி கோர்பன் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளார். இது அவரது கொள்கையின்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? இல்லையானல் பிரதமர் மீதும் அவர் கட்சியின் மீதும் கொண்ட சந்தேகத்தினால் ஜெர்மி கோர்பனுக்கு ஏற்பட்ட அனுகூலமா? எனும் விவாதம் பல வட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரேயொரு வாரமே உள்ள நிலையில் தமது கட்சிக்கான பிரசார நடவடிக்கைகளைத் தனக்கு நம்பிக்கை உள்ள ஒருவரிடம் முழுதாகப் பிரதமர் ஒப்படைத்துள்ளார்.

    ஜெர்மி கோர்பன் வெற்றி பெற்று அரசமைப்பது என்பது சந்தேகமே! இருப்பினும் தெரேஸா மே அவர்கள் எதிர்பார்த்த அளவில் அவரின் கட்சி அமோக வெற்றியடையுமா? என்பதும் சந்தேகமே. ப்ரெக்ஸிட் பற்றிய சர்வஜன வாக்கெடுப்பின் முடிவும், டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் வெற்றியும் அனைவருக்கும் கொடுத்த அனுபவம் எதனையுமே தீர்க்கமான முடிவாகக் கூறிவிட முடியாது என்பதுவே.

    எப்படிப் பார்த்தாலும் இந்தத்தேர்தல் வித்தியாசமானதே! எனது அடுத்தடுத்த மடல்கள் வரை பொறுத்திருப்போமே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . . .(236)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.  ஒரு சில வார இடைவெளிக்குப்பின் இம்மடல் உங்களை நாடி வருகிறது. நான் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்த ஒரு செயல் முடிவடைந்து விட்டது எனும் மகிழ்வில் ஆர்ப்பரிப்பதற்காகக் காத்திருந்த நான் காலத்தின் கோலத்தினாலும் சில மனிதாபிமானமற்ற வெறியர்களின் செயலாலும் கனத்த இதயத்தோடு இம்மடலை வரைகின்றேன்.உள்ளத்தில் ஓர் பதைபதைப்பு, உணர்வில் ஓர் துடிதுடிப்பு. கடந்த திங்கட்கிழமை எனது பேத்தியை மகனின் இல்லத்தில் சென்று பார்த்து விட்டு இரவு நேரம் கடந்து வந்ததினால் நேராக படுக்கைக்குச் சென்று விட்டோம் நானும் எனது மனைவியும்.அடுத்தநாள் காலை முதல்நாள் எனது பேத்தி சிறிது உடல்நலம் குன்றியிருந்ததினால் அவள் எப்படியிருக்கிறாள் என்று கேட்பதற்காக எனது மகனுக்கு போன் செய்தேன். காரில் வேலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த என் மகன் பேத்தி இப்போது நலமாக உள்ளாள் என்று கூறினான்.

    அடுத்து “பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் பாரதூரமானது அல்லவா?” என்றதும் “எங்கே? எப்போது?” எனும் கேள்விகள் என்னிடமிருந்து “மான்செஸ்டரில், நேற்று இரவு 10.45மணியளவில், நியூஸ் பார்க்கவில்லையா?” என்றான் மகன், உடனடியாக அவனது சம்பாஷணையைத் துண்டித்து விட்டு அவசரமாக தொலைக்காட்சிப் பெட்டியைத் திருகினேன். அப்போதுதான் திங்கட்கிழமை இரவு மான்சேஸ்டர் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பயங்கரம் புரிந்தது. 22 வயதே நிரம்பிய இளைஞன் பதின்ம வயது நிரம்பிய பாலகர்கள் பலர் தமது அபிமானத்துக்குரிய அமெரிக்கப் பொப்பிசைப் பாடகியான அரியானாவின் இசைநிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தோரைப் பழிவாங்கும் படலமாகத் தன்னை ஒரு தற்கொலைக் குண்டுதாரியாகப் பயன்படுத்தி நிகழ்த்திய பயங்கரவாதச் செயல்.

    ஐக்கிய இராச்சியம் முழுவதுமே அதிர்ந்து போயிருந்தது. 22 பேர் உயிரிழந்து சுமார் 60 பேர்வரை காயமடைந்து மூர்க்கத்தனமான எதுவிதமான காரணங்களுமின்றி நடத்தப்பட்ட இப்பாதகச் செயலால் பாதிக்கப்பட்டார்கள்… குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த பாலகர்கள் என இழப்புகளின் மத்தியில் தவித்துக் கொண்டிருந்தது மான்செஸ்டர் எனும் மாபெரும் நகரம். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒருவகை மனோவியாதிக்குட்பட்ட இத்தகைய எண்ணம் கொண்டோர் அடுத்தவர் உயிரை அதுவும் பதின்ம வயதுப் பாலகர்களைப் பழிவாங்குவது உள்ளத்தின் அனைத்துப் பகுதிகளையும் வலிக்கப் பண்ணுகிறது .

    மதம் என்பது உருவாக்கப்பட்டதே மனித சமுதாயத்தை மனிதாபிமானம் எனும் ஒரு கோட்பாட்டுக்குள் வைப்பதற்காகவே !  எந்தவொரு மதமும் எப்போதும் கொலை,களவு, சூது, பெண்ணடிமை என்பனவற்றை நியாயப்படுத்தியது கிடையாது. இம்மதத்தினை மக்களுக்கு போதிக்கிறோம் என்று கூறி இம்மதங்களின் காவலர்கள் என்று கூறிகொள்வோரில் சிலர் தம் மனம் போன போக்கிற்கு இம்மதங்களை விளக்குவதனால் மக்களிடையே உருவாக்கும் பேதங்களே பல குற்றங்களுக்கு அடிகோலுகின்றன.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு” என்றான் ஒருவரி தந்து பலபொருள் சொன்ன வள்ளுவப் பெருந்தகை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய அவ்விளைஞனின் பின்னணியை எடுத்துப் பார்த்தால் புரியும்.

    லிபிய நாட்டில் கேர்னல் கடாபி சார்வாதிகாரம் புரிந்து வந்த வேளை அந்நாட்டின் சர்வாதிகாரக் கொடுமைகளில் இருந்து தப்பி இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியவரே இவ்விளைஞனின் பெற்றோர். இங்கிலாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இங்கிலாந்துப் பல்கழகத்தில் நுழைந்த இவ்விளைஞன் தமது குடும்பத்தின் உயிரைக் காப்பதற்குத் தஞ்சமளித்த நாட்டின் சில இளந்தளிர்களின் உயிரைப் பறித்ததுதான் இந்நாட்டிற்கு அவனளித்த நன்றியறிதலாகும்.

    சரி இனி இத்தகைய தக்குதல்களினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பார்ப்போம். கடந்தவருடம் நடைபெற்ற பிரெக்ஸிட் எனப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்தில் மக்களிடையே ஒருவிதமான பிரிவு தோன்றியிருந்தது. வெளிநாட்டில் இருந்து ஐக்கியைராச்சியத்துக்கு வந்து குடியேறியவர்கள் இங்கிலாந்து தேசமக்கள் தம்மை அந்நியதேசத்து மக்களெனும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் எனும் வகையில் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். இப்பிரிவுக்கு இங்கிலாந்தின் இனத்துவேஷ கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூபமிட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தகைய தாக்குதல்கள் அத்தகைய தீவிரவாத சக்திகளின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பவையாக அமைகின்றன.

    அடுத்து ஐக்கிய இராச்சியம் இன்னும் மூன்று வாரங்களில் பொதுத்தேர்தலைச் சந்திக்கிறது, தேர்தல் பிரச்சாரம் சூடாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தான் இத்தகைய தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. தேர்தலில் கட்சிகளின் உண்மையான் அரசியல் நிலைப்பாடுகளைக் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சியின் மீது பொதுமக்களுக்கு ஒருவிதமான சாயத்தைப் பூசுவது போன்றே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலின் விளைவு என்றே கருத வேண்டியதாகவுள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் தேர்தல் வெற்றியானது ஒருவகையான இனத்துவேஷத்தைக் கிளறிவிட்டிருந்தது என்றே கூறவேண்டும். அவர் இப்போது தனது நிலைப்பாட்டை சிறிது தீவிரமற்ற ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தாலும் அவரது வெற்றியின் பின்னணியில் ஒருவகையான வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான குரல் இருந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இஸ்லாம் எனும் மதத்தினருக்கு எதிராகச் செய்யப்படும் பிரசாரங்கள் வெறும் பிரசாரங்களாகவே இருந்தாலும் இத்தகைய தாக்குதல்கள் அப்புனித மதத்தின் மீது அவதூற்றைப் பரப்பும் ஒரு செய்கையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரானவர்களாகவும், அனைத்து மதத்தினரோடும், தாம் வாழும் ஐக்கிய இராச்சியத்தின் உண்மையான விசுவாசிகளாக இருப்பினும் ஒருவகை அச்சத்திலேயே வாழ்கிறார்கள். அந்நிலையை மேலும் நிரூபிக்கவே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உதவும்.

    இத்தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்தது ஒரு தனிநபரல்ல; அவரின் பின்னணியில் ஒரு நாசகாரக் கும்பல் இயங்கியுள்ளது என்பது இங்கிலாந்து பாதுகாப்புக் குழுவினரின் கணிப்பாகிறது. இத்தாக்குதலின் நோக்கம் எதுவென்று எண்ணிச் செய்யப்பட்டதோ அதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. ஆம், இத்தாக்குதல் மக்களுக்கிடையே பேதங்களை உருவாக்குவதற்குப் பதிலாக அனைவரையும் இணைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இத்தாக்குதலை அடுத்து மனிதர்களுக்கிடையே கட்டப்பட்ட மனிதாபிமானம் அனைவரையும் உணர்ச்சிக்களிப்பில் மூழ்கவைத்துள்ளது. மன்செஸ்டர் நகரில் இயங்கும் பல டாக்ஸி வண்டிகள் இலவசமாக இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர்கள் வேண்டும் இடத்துக்கு கொண்டு சென்று விட்டமை, எந்தவித வேற்றுமையும் காட்டாது பொதுமக்கள் தாக்குதலில் அகப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட வசதிகள் என அனைத்துத் தேவைகளுக்கும் முன்நின்று உதவியமை,வைத்தியாசலைகள், மற்றும் அம்பியூலன்ஸ் சேவையினருக்கு உணவு, குடிபானம் என்பன வழங்கி உதவியமை எனப்பல்வேறு வகைகளில் மனிதாபிமானம் மேலோங்கி நின்றதையிட்டு பிரதமர் முதல் அனைவரும் பெருமையுடன் மெச்சுகிறார்கள். அது மட்டுமன்றி ஓய்வில் இருந்த வைத்தியர்கள், தாதிமார், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தாமாகவே முன்வந்து சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது..

    மிகவும் குறிப்பிடக்கூடிய விடயம் எது தெரியுமா? இஸ்லாம் எனும் மதத்தின் பெயரால் பல உயிர்களைக் கொலைசெய்த அந்த இஸ்லாமிய இளைஞனா? அன்றி தாக்குதலகப்பட்ட அனைவருக்கும் தம்மாலான அனைத்து உதவிகளையும் புரிய முன்வந்த மான்செஸ்டர் நகர் வாழும் பல இஸ்லாமிய மக்களா? யார் உண்மையான இஸ்லாமியர்?

    ஒன்று மட்டும் உண்மை. மனிதாபிமானத்துக்கு மதம் கிடையாது. கடைசியில் ஜெயிப்பது மனிதம் மட்டுமே ! பயங்கரவாதம் அல்ல!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 235 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பு நிறைந்த வணக்கங்கள். இனியதொரு வாரத்திலே இன்புறு வாசக நெஞ்சங்களோடு சங்கமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகத்தின் இயக்கம் நுட்பமானது, நுணுக்கமானது. தானும் சுற்றிக் கொண்டு ஆதவனையும் சுற்றி வருகிறது இப்பூமி. சுழலும் இந்த பூமியின் இயக்கத்தின் நுட்பத்தை உணர்ந்து கொள்ளாமல் இப்பூமியின் மீது ஏதோ சில ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து மடியும் நாம் எமது மனங்களுக்குள் எத்தனையோ ஆழமான ஆசைகளைத் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்கிறோம். எல்லாம் என் செயல் எனும் ஆணவமிக்க மனிதர்களுக்கும்,எல்லாம் அவன் செயல் எனும் ஆதாரமற்ற மனிதர்களுக்கும் மத்தியில் ஏதோ ஒரு தளத்தில் பல்லாயிரக்கணக்கான நாம் எமது வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம்..

    இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்த ஒரு பரிசு அதை மனமகிழ்வோடு வாழ்ந்து முடிப்பதுதான் எமது தார்மீகக் கடமை எனும் அடிப்படை உண்மையை பல சமயங்களில் மறந்து வாழத் தலைப்படுகிறோம். எம் ஒவ்வொருவர் மீதும் வாழ்க்கை தூக்கிப் போடும் சவால்கள் வித்தியாசமானவை, வினோதமானவை. அவை இனம்,மதம், ஜாதி, நிறம் என எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆனால் அதை எதிர்கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் நாம் மட்டும் எமக்குள் இருக்கும் பேதங்களை பூதாகரமாக்கி அவற்றின் பேதமைகளை அடிப்படையாகக் கொண்டு வாழத் தலைப்படுகிறோம். அதற்கு ஏதுவாக நாம் சார்ந்துள்ள எமது மதங்களிலுள்ள விளங்கிக் கொள்ள முடியாத வியாக்கியானங்களுக்கு எமது பாணியில் விளக்கம் கொடுத்து எமது செயல்களை நியாயப்படுத்திக் கொள்கிறோம்அதற்கு கலாச்சாரம் என்று பெயரிட்டு எமது அடுத்த தலைமுறைகளின் கால்களில் விலங்குகளை மாட்டி விடுகிறோம்.

    மனிதாபிமானத்துக்கு மதம் இல்லை, இனம் இல்லை, நிறம் இல்லை. அடுத்தவரை எம்மைப் போல மதித்து , அவர்களுக்குரித்தான கெளரவத்தைக் கொடுத்து வாழவேண்டும் எனும் உண்மை பலசமயங்களில் எமக்குப் புலப்படுவதில்லை. . எமது வாழ்வு இப்புவியினிலே எத்தனை காலம் நிலைக்கப் போகிறது என்பதை அறிந்தவர் எவருமிலர். குணப்படுத்தப்பட முடியாத நோய்கள் பல பலரைக் காவு கொள்கிறதுஓரிடத்தில் கொடுக்கும் இயற்கை ஓரிடத்தில் பறித்துக் கொள்கிறது. அதுதான் இயற்கையின் சமநிலைத் தத்துவமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியான ஒரு சூழலில் தான் இங்கிலாந்தில் நடைபெற்ற இரு விசித்திரமான வழக்குகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதுஸ்ரூஸ்பரி எனும் இடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 67 வயதான விரிவுரையாளர் நோயல் கான்வே என்பவர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவர் குணமாக்கப்பட முடியாத மோட்டர் நியூரோன்எனும் வியாதியைக் கொண்டிருக்கிறார் என்று கண்டுபிடித்தார்கள். இந்நோயின் குணாம்சம் சிறிது சிறிதாக உடம்பின் தசைகளின் இயக்கத்தை குறைத்துக் கொண்டு இறுதியில் மரணத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று விடுவதேயாகும்வைத்தியர்களின் கணிப்பின் படி இவர் அநேகமாக இன்னும் ஒரு 19 மாதங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார்.

    தனது முடிவின் காலம் நியமிக்கப்பட்டு விட்ட இந்த மனிதர் தான் இறக்கப் போகும் நேரத்தைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதன் பிரகாரம் தனது உயிரை முடித்துக் கொள்ளும் நேரத்தை தாம் எடுக்க வேண்டியதற்கான ஆயத்தங்களைச் செய்தார். ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லைஇங்கிலாந்துச் சட்டத்தின்படி தீரா வியாதி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நோயாளி தனது உயிரை முடித்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கை தற்கொலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய ஒருவரது முடிவுக்குத் துணை போவோர்களும் தற்கொலைக்கு உதவியவர்கள் எனும் குற்றத்தின் பெயரில் சட்டமூலம் தண்டிக்கப்படுவார்கள். தனது முடிவைத் தானே எடுக்க வேண்டும் எனும் இவரது கோரிக்கையை இங்கிலாந்து வழக்குமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் இவரோ இன்னும் தளரவில்லை தான் தனது நோயினால் மிகவும் அவஸ்தைப் படுவதாகவும் ,தனது உடலின் அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நின்று கொண்டு போகிறது. இதனால் தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள உறவினர்கள் தனது அவஸ்தையைப் பார்த்துத் தவிப்பதைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறி வழக்கு மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்வதற்காக தனது வழக்கீல்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது ஒரு புறமிருக்க.

    சார்ளி காட் எனும் ஏழுமாதக் குழந்தையொன்று தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அக்குழந்தையைப் பீடித்திருக்கும் நோய்கூட குணப்படுத்தக்கூடிய தொன்றல்ல என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள். தானே சுவாசிக்க முடியாத அக்குழந்தை செயற்கைக் கருவிகளின் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இக்குழந்தையைத் தொடர்ந்தும் இக்கருவிகளின் மூலம் வைத்திருப்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது என்று தெரிவிக்கும் டாக்டர்கள் இக்கருவிகளை நிறுத்தி குழந்தைக்கு இயற்கையான முடிவைக் கொடுக்க முயற்சித்தார்கள். அமெரிக்காவில் உள்ள டாக்டர்கள் ப்ருபுதுவிதமான் சிகிச்சை மூலம் இக்குழந்ந்தையை குணப்படுத்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தமையால் தமது குழந்தையை இறக்க விடக்கூடாது தாம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்று வழக்குமன்றத்தை நாடினார்கள் பெற்றோர்கள்.

    வழக்கை விசாரித்த நீதிபதி இதுவரை தான் சந்தித்த வழக்குகளில் மிகவும் துன்பகரமான வழக்கு இதுவென்றும் அக்குழந்தையை மேலும் அவஸ்தைக்கு உள்ளாக்கக்க கூடாது என்றும் தான் டாக்டர்கள் எடுத்த முடிவை ஆதரித்து தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மனமுடைந்து போன  பெற்றோர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்துள்ளார்கள்.

    என்னே விந்தை 67 வயதான சாகத் துடிக்கும் ஒரு மனிதனை சாகக் கூடாது என்றும்,ஏழே மாதமான குழந்தையைச் சாக வேண்டும் எனும் சட்டம் அறிஞர் அண்ணா கூறியது போல ஒரு இருட்டறைதானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (234)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    போனவாரம் மடல் வரையும்போது இவ்வார மடலின் கருப்பொருள் இதுவாக இருக்கும் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை . இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான மறைந்த ஹெரால்ட் வில்சன் அவர்கள் ஒருமுறை பேசும்போது “அரசியலில் ஒருவாரக் காலம் என்பது மிக நீண்ட காலமாகும் ” என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இவ்வாரத்துக்கும், போன வாரத்துக்குமான இடைவெளி இங்கிலாந்தின் அரசியல் உலகில் ஏற்படுத்திய மாற்றம் அது ஒரு மிகநீண்ட காலம் என்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. மிகச் சிறந்த அரசியல்வாதியான ஹெரால்ட் வில்சன் எதற்காக அப்படிக் குறிப்பிட்டார் என்பதன் அர்த்தமும் தெளிவாகப் புரிகிறது.

    அது என்ன அப்படியான மாற்றம்? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கையே ! ஆனால் அதற்கான விடையையும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் புதியதோர் தேர்தலுக்கான திகதியை அறிவித்ததுதான் அம்மாற்றம் எனலாம். 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டரசாங்கத்தில் இனி ஒரு கட்சி அர்சாளும் பெரும்பான்மை பெற்று அரசமைத்தால், அவ்வரசு தனது முழுப்பதவிக்காலமான ஜந்து வருடங்கள் முடிவதற்கு முன்னால் நம்பிக்கையிலாத் தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மை பலத்தை இழந்தாலொழிய அரசைக் கலைக்க முடியாது எனும் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம் அடுத்த தேர்தல் சரியாக ஜந்து வருடத்தின் பின்னால் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அச்சட்டத்தின் பிரகாரம் அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டே நடத்தப் பட வேண்டும்.

    சரி, அப்படியானால் எப்படி இந்தத் திடீர் தேர்தல் அறிவிப்பு எப்படிச் சாத்தியமாயிற்று?

    அரசைக் கலைத்து தேர்தலை யூன் மாதம் 8ஆம் திகதி நடத்த விரும்புவதாக அறிவித்த பிரதமர், நான் மேற்குறிப்பிட்ட சட்டத்தை இம்முறை தளர்த்தி வைப்பதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் அதற்கு மறுநாள் கோரப்போவதாகவும் அது ஆதரிக்கப்பட்டால் தேர்தல் யூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன் பிரகாரம் அதற்கு மறுநாளான கடந்த புதன்கிழமை அதற்கான கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க 509 அதிகப்படியான வாக்குகளினால் பிரதமரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து யூன் மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் மே மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆகா வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா என்று வடிவேலு பாணியில் ஒரு சாரார் அலுத்துக் கொள்ள தேர்தல் பிரசாரத்துக்கான பூஜை போடப்பட்டு பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சரி இன்னும் மூன்று வருட காலம் அரசுக்கு பதவிக்காலம் இருக்கிறதே பின் எதற்காக இந்தத் திடீர் தேர்தலுக்கான அறிவித்தல்? பிரதமருக்கு என்ன பைத்தியமா?எனும் எண்ணம் தோன்றுகிறது. இங்கேதான் நாம் சில முக்கிய அம்சங்களை நோக்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் யூன் மாதம் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஆரம்ப நடவடிக்கைகளை இங்கிலாந்து முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது மக்களின் வாக்குகளைப் பெறாமல் டேவிட் கமரன் பதவி விலக பின் கதவால் நுழைந்த இப்பிரதமருக்கு இந்த “ப்ரெக்ஸிட்” எனும் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிகழ்வைத் தலைமை தாங்கும் தகுதி இல்லை எனும் குற்றச்சாட்டு ஒரு சாராரினால் முன் வைக்கப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை வெறும் 12 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் அரசின் அமைச்சர்களினுள்ளேயே சில வேறுபாடுகள் உண்டு. அது மட்டுமல்ல லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி என்பன ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளுக்கு தம்மாலான இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.வலுவான பெரும்பான்மை இல்லாததினால் தீர்க்கமான ஒரு நிலையான தலைத்துவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வெளியேற்றம் குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடியாமல் தடுமாறுகிறார் பிரதமர்.

    இப்போதிருக்கும் நிலைமையில் அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டே நடைபெறும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறும் ஆண்டு 2019 ஆகும். ஒரு சமயம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் நிகழ்வினால் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து. நாடு சிக்கலுக்குள்ளானால் அப்போது சந்திக்கும் தேர்தலில் பிரதமர் தோல்வியடைய நேரிடலாம். இப்போது ஒரு தேர்தலை நடத்துவதின் மூலம் அவர் தனக்கான அவகாசத்தை 2022 வரை நீடித்துக் கொள்ளலாம். அப்படியே ஏதாவது பொருளாதார வீழ்ச்சி வந்தால் கூட சுதாகரித்துக் கொள்வதற்கு நேரம் இருக்கிறது.

    இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் தற்போதைய எதிர்க்கட்சியான லேபர் கட்சி சின்னாபின்னமான நிலையிலிருக்கிறது . அதன் தலைவரான ஜெர்மி கோர்பன் பிரதமராக வருவார் என்பதை எண்ணிப்பார்க்க அஞ்சுவோர்களே நாட்டில் பெரும்பான்ம்மையாக இருக்கிறார்கள். பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சியை விட 21% அதிகப்படியாக முன்னிலை வகிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அதிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவிக்கு வருவதற்கு பிரதமருக்கு இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்காது.

    இவையனைத்துமே அரசியல் கணிப்புகள் தாம். பிரதமர் சரியாகக் கணிப்பிட்டுள்ளாரா என்பது ஜூன் 9ஆம் திகதி தெரிந்து விடாதா என்ன?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (233 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்!

     

    சித்திரை2017

    இதோ அடுத்தொரு சித்திரைத் திங்கள் வாசலில் நான் வரையுமிந்த மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்க விழைகிறேன். இது தமிழர்களின் வருடப்பிறப்பா? இல்லையா ?எனும் விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இவ்விழாவினில் எமை ஆழ்த்தி அதன்மூலம் கிடைக்கும் ஒரு சிறிய மகிழ்வினை அனுபவிக்கத் துடிக்கும் மக்கள் ஒருபுறமென இச்சித்திரைத் திங்களின் வரவு பல முனைகளில் நிகழ்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த ஒரு கலாசார நிகழ்வாக இதனைக் கருதுவது சரியேயாகும். எனது தந்தை வழிப் பாட்டியிடம் இருந்து கைவிசேடம் பெறும் ஒரு நிகழ்வே இச்சித்திரைத் திங்களின் பிறப்பின் நினைவுகளை என் நெஞ்சில் தாலாட்டுகிறது.

    உலகம் ஒரு புதுத் திசையில், புது வேகத்துடன், புது முனைப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக நாம் காத்து வந்த பல கலாசார மகிமைகள் காலத்தோடு கரைந்து போகும் ஒரு நிலையைக் கண்டு உள்ளம் கொஞ்சம் வாடத்தான் செய்கிறது. காலத்தோடு மனிதன் மாற வேண்டிய தேவை மானிட குலத்தின் காலக்கட்டாயம் எனும் வாதத்தை மறுப்பதற்கு இல்லை. ஆனால் எந்தெந்தவைகளின் மாற்றத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எவைகளை மாற்றம் எனும் பெயரில் நாம் பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் நாம் மனத்தெளிவு கொண்டிருப்பது அவசியமாகிறது.

    இன்றைய உலகத்தின் முக்கிய தேவை என்ன ? இன்றைய உலகத்தின் போக்கு என்ன? என்பனவற்றை நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது. எமது வாழ்க்கையின் போக்குகளை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கு எத்தகைய நிலையில் உள்ளது? அவர்களால் உருவாக்கப்படும் சமுதாயம் அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகரப் போகிறது? இவையெல்லாம் மனதில் யதார்த்தமாக எழவேண்டிய கேள்விகள். நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டின் போக்கிலும் எமக்குள்ள பங்கு எத்தகையது? எமக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை என்று நாமாக ஒதுங்கி இருந்து விட்டு நாட்டின் போக்கினைப் பற்றி ஆங்காங்கே முனகுவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியுமா?

    இன்று இங்கிலாந்தில் நான் காணும் போக்கு மனதில் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. சில வருடங்களின் முன்னால் எது பொதுவாக மக்கள் முன்னால் கிளறிவிடப்படக்கூடாத கருத்துக்கள் என்று கருதப்பட்டனவோ அவை இன்று உண்மையைப் பேசுகிறோம், நேர்மையான அரசியல் நடத்துகிறோம் வழமையான அரசியல்வாதிகளுக்கு முரணாக மக்களின் அங்கலாய்ப்புக்களை வெளிக்கொணருகிறோம் எனும் போர்வையில் சாவகாசமாக ஊடகங்களில் முன் வைக்கப்படுக்கின்றன. இத்தகைய கருத்துக்கள் மக்களிடையே இலைமறைகாயாக இருக்கும் பிரிவினைகளை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் தற்கால அரசியல் எனும் பெயரில் சகஜமாகப் பேசப்பட்டு வருகிறது. என் இனிய அன்பு வாசக நெஞ்சங்களே! மக்களின் மனதில் அங்கலாய்ப்புகளாக, மக்களின் உள்ளங்களில் தாம் காணும் குறைகளாக இருப்பவை சிறுபான்மை மக்களின் மனதினைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக விவாதிக்கப்படக்கூடாது என்பதல்ல எனது கருத்து. நான் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக மதிப்பவன். மக்களுக்காகவே அரசியல் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டவனல்லன். ஆனால் விவாதிக்கப்படும் விடயங்கள் ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கப்பட்டாலொழிய அது மக்களுக்குத் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.

    இத்தகைய ஒரு சூழலில், இத்தகைய பின்னணியில் நாம் சாதாரண மனிதர்களாக எதைச் சாதித்து விடப் போகிறோம்? நான் இங்கிலாந்துக்கு வந்து 42 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த 42 வருடங்களில் மாணவனாக சில வருடங்களும் பின்னர் பிரிட்டிஷ் டெலிகொம் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளராக ஏறத்தாழ 30 வருடங்கள் பணியாற்றியது தான் என் வாழ்வில் சாதனையா? பல பரிசில்கள் பெற்று, பலரின் பாராட்டைப் பெற்று முன்னிலை வகிக்கும் ஒரு எழுத்தாளனல்லன் நான். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களையும், உணர்வின் தாக்கங்களையும் எளிமையான தமிழில் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், கதைகளாகவும் எழுதத்துடிக்கும் ஒரு பாமரனே நான். தமிழின்பால் நான் கொண்ட நேசம் இன்று நான் படைக்கும் என் வரிகளையிட்டு என்னைப் பெருமை கொள்ளச் செய்கிறது. இந்த உணர்வே என்னுள்ளத்தின் வெற்றியென்பேன். எனது காலத்தின் பின்னர் எத்தனையோ வருடங்களின் பின்னால் உலகின் ஒரு மூலையில் யாரோ ஒருவர் 2017ஆம் ஆண்டில் சக்தி சக்திதாசன் எனும் சாதாரண எழுத்தாளன் இப்படிப் பதிவு செய்துள்ளார் என்று எண்ணினால் அதுவே என் சாதனை என்று எண்ணுகிறேன்.

    இவ்வகையில் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சாதனையாளர்களே! அவர்களின் சாதனைகள் அவர்களின் மனத்தராசில் அவரவர் நிலைகளுக்கேற்ப அவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்வில் அன்றாடம் பசியைப் போக்குவதற்கு அல்லாடும் ஒருவன் ஒருநாள் தன் தேவைகளை நிறைவேற்றும் போது அதுவே அவனுக்கு சாதனையாகிறது.இத்தகைய ஒரு உலகத்திலே இன்று அரசியல் எனும் மேடையில் பலரும் தாம் பல சாதனைகளைப் புரிந்து விட்டதாக புகழ்பாடும் ஒரு நிலையும் இருக்கிறது. ஆனால் அரசியல் எனும் மேடையில் ஏறும் நாடகங்களின் தயாரிப்பாளர்கள் அன்றாடம் வாழ்வில் அல்லாடும் சாதாரண மக்கள்தான் எனும் உண்மையை அவர்கள் மறந்து போய்விட்டது போல் தெரிகிறது. மக்களின் மனநிலைக்கேற்ப அவர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்கிறதோ அதைப்பேசி தாம் பதவிக்கு வருவதையே குறிக்கோளாகக் கொண்டியங்கும் பல அரசியல் தலைவர்களே இன்று முன்னணியில் இருப்பது போல் தெரிகிறது. இறக்கும்போது தனது பையில் 72 ரூபாயே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் ஆதவன் மறைந்திடும்போது மறைந்திடும் நிழல் போல மறைந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அவரைப் போன்ற தலைவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள் “என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவே இன்றைய உலகின் நிலை என்று எண்ணும்போது எதிர்காலத்தைப் பற்றி ஓரளவு அச்சம் எழத்தான் செய்கிறது.

    இது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு நிலையே. எதற்காக இப்போது சக்திக்கு இத்தகைய ஒரு மனத்திறப்பு என்று எண்ணலாம். நாளை அதாவது ஏப்பிரல் 14 2017 , சித்திரைப் புதுவருடப் பிறப்பு. இத்தினத்தோடு அமைந்த இம்மடலில் இன்றைய உலக ஸ்திரமற்ற நிலையை சிறிது அலச முற்பட்டேன். உலகம் நாடுகளால் ஆனது, நாடுகள் நகரங்களினால் ஆனது , நகரங்கள் சமூகங்களினால் ஆனது, சமூகம் சாதரண மனிதர்களினால் ஆனது. அத்தகைய வகையில் சமூகத்தில் ஒருவனான என்னையும் சிறிது அலச முற்பட்டேன்.

    மக்களின் உணர்வுகள் தெளிவடைந்து, உண்மையான, யதார்த்தமான தேவைகளின் நியாயங்கள் விழிப்படைந்தால் தான் அம்மனிதர்களிடை இருந்து மகோத்தமமான தலைவர்கள் உருவாக முடியும். பணத்தினால் தலைவர்கள் உருவாகும் நிலைமாறி மனத்திடத்தினால் உருவாகும் தலைவர்கள் மக்களின் உண்மைநலனை முன்வைத்துச் சேவையாற்ற முன்வருவார்கள் எனும் நம்பிக்கையோடு இச்சித்திரைப் புத்தாண்டினுள் நுழைவோம் வாருங்கள்.

    அன்பு வாசக உள்ளங்கள் மற்றும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் எனது அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ***

    பங்குனித் தாயின் வயிற்றில்
    பக்குவமாய் உதிக்கும் எம்
    சித்திரைத் திங்கள் மகளே
    சீரடி எடுத்து வாராய்!

    இத்தரை மீதினில் மக்கள்
    இடர் பல கண்டும் தளரா
    மனமது கொண்டு வாழ்வோடு
    போராடி வாழ்கின்றார் பாராய்!

    சிறக்கின்ற பல செயல்கள்
    சிறப்புற ஆற்றிட்ட போதிலும்
    சிந்தனையற்றோர் செயலால்
    சிதைகின்ற சமுதாயம் காணாய்!

    எதைக் கொண்டு வந்தோம் உலகில்
    எதைக் கொண்டு செல்வோம்?
    விதைக்கின்ற செயல்கள் தானே
    வினையாய் முளைக்கின்ற விந்தை

    காலங்கள் மாறுது காண்பீர் இங்கே
    காட்சிகள் கலையுது கண்முன்னே
    மாற்றத்தை ஏற்றிடும் துணிச்சல்
    மனதினில் கொண்டு வாழ்ந்திட

    திடமான ஒரு இளஞ்சமுதாயம்
    தீர்க்கமாய் உருவாக வேண்டும்
    பிறந்திடும் சித்திரைப் புத்தாண்டு
    பரவட்டும் நல் மன உணர்வுகளை

    உலகெங்கும் சூழ்ந்திடும் மேகங்கள்
    உருவாக்கிடும் போர்க்காலச் சாரல்கள்
    நிலையாக மானிடம் வாழ்ந்திட
    நிலையான மனிதாபிமானம் தேவையே

    கலந்திட்டே வாழ்ந்திடும் மக்களிடையே
    கலக்கின்றார் பிரிவினை உணர்வினை
    கண்டிடுவீர் அறிவுடை மாந்தரே
    கலைத்திடுவீர் புல்லர்களை வெளியே

    உள்ளத்தில் தெளிவோடு உண்மை
    உணர்வினில் கருணை கொண்டு
    நாளை நீர் படைத்திடும் உலகம்
    யாவர்க்கும் பொதுவாய்த் திகழட்டும்

    நம்பிக்கை என்னெஞ்சில் உண்டு
    நல்லபல இளையோர் மீதினில்
    உதிர்க்கின்றேன் உமக்கெந்தன்
    உள்ளத்தில் பூத்திடும் வாழ்த்துக்கள்!

    சித்திரைப் பெண்ணவள் மெதுவாய்ச்
    சிங்காரம் தாங்கி நுழைகின்றாள்
    உலகெங்கும் அமைதியை அளித்து
    உயிர்களைக் காத்திட வந்திடம்மா!

    உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகள்
    உகுத்திடும் வாழ்த்துப் பூமழை
    படிக்கின்ற அனைவர்க்கும் எனது
    பணிவான சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 232 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மார்ச் மாதம் கடைசி வாரமாகிய இவ்வாரத்தில் இம்மடல் மூலம் நான் எடுத்து வரப் போகும் விடயம் என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். கடந்த ஞாயிறு அதிகாலை அதாவது 26ஆம் திகதி அதிகாலை ஒரு மணி முன்னோக்கி நகர்த்தப்பட்டு இரண்டு மணியாக்கப்பட்டது.

    சிலர் என்ன இது என்று புருவத்தை உயர்த்தலாம் .

    வேறு ஒன்றுமில்லை! வருடாந்தரம் நடைபெறும் ஜரோப்பிய கோடைகால நேரமாற்றம் தான் அது. அட… இதைப் போய் பெரிய விஷயமாகச் சொல்ல வந்திட்டாரா சக்தி? எனத் தொடரப் போகும் உங்கள் வினா எனக்குப் புரிகிறது. சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நிகழ்ந்திருப்பதைப் போட்டு உடைக்கும் முன்னால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தலாமே என்றுதான்.. .

    ஆமாம் ஏறத்தாழ 42 வருடங்களாகப் பங்கு வகித்து வந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறப் போகிறோம் என்பதை உத்தியோகபூர்வமாக எமது பிரதமர் தெரேசா மே அவர்கள் கடந்த 29ஆம் திகதி அதாவது புதன்கிழமை 12 மணிக்கு இங்கிலாந்துக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி மூலம் ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவரிடம் கடிதம் மூலம் அறிவித்த நிகழ்வே நான் மேற்குறிப்பிட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த அறிவித்தலைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு அளித்த அறிக்கையில் ” ஐக்கிய இராச்சியமானது திரும்ப முடியாத ஒரு திருப்பத்தினுள் நுழைந்து விட்டது. இத்திருப்பத்தினுள் எதை எதிர்கொள்ளப் போகிறோம் எனும் ஆதங்கம் இருந்தாலும் அனைத்தும் எமக்கு அனுகூலமாக அமைவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே எம் முன்னால் இப்போது இருக்கும் பாரிய பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார்.

    இங்கிலாந்தின் சரித்திரத்தில் இது ஒரு மைல் கல்லே! இம்மாற்றத்தினால் இங்கிலாந்து சுபீட்சமடையப் போகிறதா? இல்லை… பாரியப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறதா? என்பது அனைவருக்கும் இப்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால் முடிவு எதுவாக இருப்பினும் அம்முடிவினை உத்தியோகபூர்வமாக முடுக்கிவிட்ட பொறுப்பைத் தற்போதைய பிரதமராகிய தெரேசா மே அவர்களே ஏற்க வேண்டும் என்பது சரித்திரத்தில் இடம்பெறப் போகும் உண்மையாகும்.

    சரி இனி நடக்கப் போவது என்ன ?

    உத்தியோக பூர்வ அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு இரண்டு வருட காலக்கெடு விதிக்கப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதியிலிருந்து இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான உறவு நிரந்தரமாக முறிக்கப்படுக்கிறது. அதன் பின்னால் இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வகையிலான உறவினைப் பேணப்போகிறது என்பது இந்த இரண்டு வருட இடைவெளியின்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படும் இணக்கங்களையும், ஒப்பந்தங்களையும் பொறுத்தே அமையப் போகிறது. இந்தத் திருப்பம் இங்கிலாந்தில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? என்பதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இப்போது இங்கிலாந்து எடுத்திருக்கும் இம்முடிவானது இனிவரும் பல தலைமுறைகளின் வாழ்வாதரத்தைப் பாதிக்கப் போகிறது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பது அனைத்துத் தர அரசியல் அவதானிகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாதிப்பு அனுகூலமானதா ? அன்றிப் பிரதிகூலமானதா? என்பதே இவர்களுக்கிடையில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படை.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்களின் முடிவு என்பதே யதார்த்தம். ஆனால் பெரும்பான்மை என்பதன் பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு யதார்த்தம் புதைந்து போன ஒரு உண்மை . இந்தச் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பகுதியின் வாக்கு வீதம் 52 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று வாக்களித்தோர் வீதம் 48 ஆகும். வெறும் 4 வீதத்தினால் மட்டுமே இன்று இங்கிலாந்து இந்தப் பாரிய திருப்பத்துக்குள் தன்னை நுழைத்திருக்கிறது. எவர் எதைச் சொன்னாலும் 48 வீதமான மக்களின் அபிலாஷைகளைப் பிரதமர் எந்த வகையில் அனுசரித்து போகப்போகிறார் என்பது பலரது பார்வையில் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகிறது.

    இந்த மடல் வரிசையில் இன்னும் பல மடல்களில் இதைப்பற்றிய விரிவான அலசல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு ஆரம்பமே! விளையாட்டை பிரித்தானியப் பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்திருக்கிறார். இவ்விளையாட்டில் மற்றும் 27 விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய பகடைகளை உருட்டப் போகிறார்கள் என்பது போகப் போக வெளிச்சமாகும்.

    இன்றைய நிலையில் இங்கிலாந்தில் இத்தகைய ஒரு முக்கியமான திருப்பம் ஏற்[பட்டதை வருங்காலச் சரித்திரத்தில் படிக்கும்போது நாம் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருந்தோம் எனும் கேள்வி எழும்போது சக்தி இங்கிலாந்தில் இதைப்பற்றிய மடலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தான் என்பதுவே விடையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (231)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடனும் துயரம் மிகுந்த நெஞ்சத்துடனும் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் நான். இவ்வாரம் வரும் ஞாயிறு அதாவது 26ஆம் திகதி இங்கிலாந்தில் “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்னையின் தினத்தின் அருமைகளைப் பற்றியும் எனது அன்னையின் நினைவுகளைப் பற்ரியும் மடல் மூலம் உங்களுடன் உறவாட எண்ணியிருந்த எனக்கு இம்முறை அன்னையர் தினத்தின் போது மூடத்தனமான பயங்கரவாதச் செயலுக்கு தமது உயிரை இழந்து விட்ட துயர எண்ணங்களுடன் மடலை வரைய வேண்டிய நிர்ப்பந்தத்தைக் காலம் என்மீது திணித்து விட்டது.

    eng1ஆம், நேற்று அதாவது 22ஆம் திகதி இங்கிலாந்து நேரப்படி மதியம் சுமார் 2.40 மணியளவில் இங்கிலாந்தின் தலைநகரமான இலண்டனின் இதயமாகக் கருதப்படும் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டதை ஊடகங்களின் மூலம் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

    என்ன உலகில் பல நாடுகளில் அன்றாடம் போர்களின் மூலம் உயிரிழந்துகொண்டிருப்போர் எத்தனையோ பேர் இல்லையா? பின் இதென்ன பெரிய விடயம்? எனும் கேள்வி எழுவது நியாயமே! போர் எனும் நிகழ்வின்போது உயிர்கள் இழப்பது துயரம் மிகுந்த சம்பவமாக இருந்தாலும் அது ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வே! ஆனால் எதுவிதமான தடயங்களும் இல்லாமல் தமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் உள்ளத்தில் ஒருவித மனக்கிலேசத்தை, அச்சத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததே!

    பிரான்சு, ஜேர்மனி என்று ஐரோப்பிய முக்கிய நாடுகளில்eng2 சமீபகாலங்களில் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட செய்தியின் போது உள்ளம் பதைத்தது.ஆனால் இங்கிலாந்தில் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளத்தைப் பதைக்க வைக்கும் நிகழ்வாக நேற்றைய நிகழ்வே அமைந்துள்ளது. வறட்சியால் ஏற்படும் பட்டினி, போரால் ஏற்படும் பட்டினி, பயங்கரத் தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், இயற்கை அனர்த்தங்களினால் ஏர்படும் உயிரிழப்புகள் என உலகில் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகள் எத்தனையோ! இவைகளின் மத்தியில் மதத்தின் பெயரால், தாம் தம்முடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் எனும் முனைப்பால் மிலேச்சத்தனமாக மற்ற மனித உயிர்களை, அதுவும் அப்பாவிகளான மனித உயிர்களைக் காவு கொள்ளும் மிருகத்தனமான செயல்களின் நிகழ்வுகள் உள்ளத்தில் ஆறாத துயரத்தை ஏற்படுத்துகிறது.

    Paramedics treat an inured person after an incident on Westminster Bridge in London, March 22, 2017. REUTERS/Toby Melville

    மதம் என்பது இறைவன் எனும் ஓர் ஆன்மீக ஒளியை நோக்கிய பயணத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பாதை. அவ்வான்மீக ஒளியின் உண்மை வடிவம் அன்பேயாகும். உலகில் உள்ள மதங்கள் குறிப்பிடும் இறை வடிவங்கள் அனைத்தும் அன்பின் அடையாளங்களே! இவ்வன்பும், மனிதத் தன்மையும் அறிமுகமில்லாத மனிதர்களாகவிருப்பினும் அவர்கள் மீது கருணை கலந்த மனிதாபிமானத்தைக் காட்டுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இறை மார்க்கத்தை அடையும் இப்பாதையின் மீது கொள்ளும் வெறியால் மற்றொரு மனித உயிரைப் பறித்துக் கொள்வது எவ்வகையில் அவ்விறைக்கு நாம் செலுத்தும் காணிக்கையாக முடியும்?

    18 வயதில் இந்நாட்டிற்கு வந்த எதுவித அறிமுகமற்ற எனக்கு ஆதரவளித்து கல்வியூட்டி தம்முடைய சமுதாயத்திலே ஓர் அங்கமாக இணைத்து எனக்கு இந்நாட்டிலேயே வசதிமிக்க வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இங்கிலாந்து. என்னுடைய இந்த 42 வருட கால இங்கிலாந்து வாழ்வின் அனுபவத்தில் என்னை நோக்கி வீசிய வெறுப்புக் கணைகள் மிகவும் சொற்பமே! இனத்துவேஷம், நிறவேற்றுமை என்பன சிலரது மனங்களில் இருந்தாலும் பெரும்பான்மையாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குக் கைகொடுத்து உயர்த்தி விட்டவர்கள் அநேகம் பேர்.

    அதேபோல நான் பிறந்த எனது தாய்நாட்டில் எனது சகோதர சகோதரிகள் அல்லலுற்று அகதிகளாக இங்கு தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு வாழும் வகையை ஏற்படுத்திக் கொடுத்தது இங்கிலாந்து. நான் பிறந்து எனக்குத் தமிழ் கொடுத்த என் தாய் மண்ணிற்கு அடுத்து, தமிழ் தோன்றி வளர்ந்த பாரத தேசத்திற்கு பின்னால் என்னெஞ்சில் அதிமுக்கிய இடத்தை வகிப்பது இங்கிலாந்து. இவ்வினிய நாட்டில் நேற்று வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடைபாதையோரத்தில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீதும், இவ்வழகிய லண்டன் நகரின் அழகினை, தேம்ஸ் நதியின் அழகினை அப்பாலத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்த அப்பாவி உல்லாசப் பிரயாணிகள் மீதும் சிற்றூர்தியை மோதவிட்டு மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளான் ஒரு வெறியன். அது மட்டுமன்றி இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தினுள் கத்தியோடு ஓடி தடுப்பதற்கு முனைந்த காவற்துறை அதிகாரியின் மீது கத்தியைப் பாய்ச்சி உயிரைப் பறித்திருக்கிறான்.

    உலக ஜனநாயக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக முன்மாதிரியாக இயங்கிக் கொண்டிருப்பது உலகின் அதி பழமையான இங்கிலாந்துப் பாராளுமன்றம் என்றால் மிகையாது. இத்தகைய ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற அமைப்பின் மீது, அங்கே ஜனநாயகத்தின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய அசம்பாவிதத்தை இத்தகைய மூடக்கும்பல் ஏற்படுத்தியது உலக ஜனநாயகத்திற்கே விடும் சவாலாகத்தான் தெரிகிறது.இக்கண்மூடித்தனமான தாக்குதலில் நால்வர் உயிரிழந்திருக்கிறார்கள். வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் சிற்றூர்தியால் மோதுண்டு 48 வயதுப் பெண்மணியும், 50 வயது ஆணும் உயிரிழந்திருக்கின்றனர். காரைப் பாலத்தில் மோதவிட்டுவிட்டுக் கத்தியோடு பாராளுமன்றத்துக்குள் இப்பயங்கரவாதி நுழைய முற்பட்டபோது அதைத் தடுக்க முனைந்த காவற்துறை அதிகாரி இப்பயங்கரவாதியின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இப்பயங்கரவாதியை காவற்துறையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர். துப்பாக்கிக் காயங்களினால் இப்பயங்கரவாதியும் உயிரிழந்துள்ளான். அதைத்தவிர சுமார் 40 பேர்வரை அப்பாலத்தின் மீது நடந்த விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

    இத்தகைய மூடர்களின் செய்கைக்கு அவர்கள் சார்ந்துள்ள மதம் எவ்வகையிலும் பொறுப்பாகாது. ஆனால் இதன் தீமையான விளைவு என்னவென்றால் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இத்தாக்குதல்களுக்கு மதத்தின் பெயரை இவர்கள் உபயோகிப்பதால் பொதுவாகவே மக்களுக்கு இம்மதத்தைச் சார்ந்தவர்களின் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்காகவேதான் சில கடுமையான சட்டங்களை இயற்றுகிறேன் எனக் கொக்கரிக்கும் டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் கை வலுவடைய இடமளிக்கிறது. வெளிநாட்டுக்காரரின் தொடர் வருகை இந்நாட்டின் இறைமைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என வாதிடும் இனத்துவேஷிகளின் வாதத்தை இவ்வகையான கோழைத்தனமான, மிலேச்சத்தனமான எதுவித நியாயங்களுமற்ற தாக்குதல்கள் நியாயப்படுத்துகின்றன.

    ஆகமொத்தம் தனது மதத்தின் பெயரால் அன்னையர் தினத்துக்கு முன்பாக சில குழந்தைகளின் அன்னையரையும், சில அன்னைகளின் குழந்தைகளையும் மோசமான விளைவுகளுக்குளாக்கியிருப்பதைத் தவிர இப்பயங்கரவாதி வேறொன்றையும் சாதிக்கவில்லை. பயங்கரவாதத்தினால் ஜனநாயகத்தை சீர்குலைக்க முடியாது என்று இன்று வழமை போல் இங்கிலாந்துப் பாராளுமன்றம் தமது அன்றாட நிகழ்வுகளை நடத்துகிறது.

    தவறு செய்பவன் மனிதன்; தண்டனை இறைவனுக்கும், மதத்துக்குமா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 230 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இதோ அடுத்தொரு வராம், அடுத்தொரு மடல். ஒரு மாதகாலம் இங்கிலாந்திலிருந்து வெளியே இருந்து விட்டுத் திரும்பி வந்ததும் முதல் காதில் விழும் சொல் “ப்ரெக்ஸிட்” என்பதுவே! கடந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்களின் பெரும்பான்மை வாக்களிப்பின் பிரகாரம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது முடிவாகியது அனைவரும் அறிந்ததே!

    அவ்வெளியேற்றத்தைச் சுற்றிய சர்ச்சைகள் நாளுக்குநாள் வித்தியாசமான வடிவங்கள் எடுத்து வருகிறது என்பது உண்மையே!

    அனைத்துக் கட்சிகளும் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கின்றன. அதாவது கொள்கையளவில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாதது என்பதுவே அது! ஆனால் அவ்வெளியேற்றத்தின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்பதில் தான் கட்சிகளுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதனால் எவ்வகையான பிரதிகூலங்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை வெளியேற வேண்டும் என்று தீவிரமான கருத்துடையவர்கள் நிர்ப்பந்திக்கின்றார்கள். வெளியேறத்தான் வேண்டும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் பொருளாதார நடைமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம் என்று மிதவாதிகள் விவாதிக்கிறார்கள்.

    பிரித்தானிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின் எடுக்கும் முடிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சில அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். அது தவிர இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறப் போகிறோம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலைப் பாராளுமன்ற அங்கீகாரத்தின் மூலம் சட்டமாக்க வேண்டும் என்று கோரினார்கள். அரசு இதற்கு சம்மதிக்கவில்லை. ஜீனா மில்லர் எனும் வழக்கறிஞராகிய பெண்மணி ஒருவர் அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது. அதைத்தொடர்ந்து அது சட்டமூலமாக்கப்படும் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் அதில் சில திருத்தங்கள் அதாவது தற்போது இங்கிலாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் இங்கிலாந்தில் தொடர்ந்து இருக்கலாம் எனும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரபுக்கள் சபை அதை நிராகரித்தது.இங்கிலாந்தில் வாழும் ஜரோப்பிய ஒன்றிய பிரஜைகள் இங்கு வாழலாம் ஆனால் அதற்கான உத்தரவாதத்தை மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு அவர்கள் அளிக்கும் போதே நாமும் அளிப்போம் என்றார் பிரதமர். பிரபுக்கள் சபை கொடுத்த திருத்தங்களை நாடாளுமன்றம் நிராகரித்ததினால் அது கடந்து திங்கட்கிழமை சட்டமூலமாகியது. இந்தச் சட்டத்தின் மூலம் பிரதம மந்திரி எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவித்தலை கொடுக்கும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனுக்கு கொடுக்கப்ப்படும் என்பதுவே அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

    இது இவ்வாறிருக்க, இந்தப் பிரச்சனைக்குள் இன்னொரு பிரச்சனையை நுழைத்திருக்கிறார் ஸ்கொட்லாந்து முதலமைச்சர். கடந்த யூன் மாதம் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையாக வாக்களித்திருந்தார்கள். தனது நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக எப்படி எம்மை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கலாம்? இது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயலென்றும் இத்தகைய சூழலில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்தினராக இருக்க முடியாது என்றும், ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து போவதற்கான இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை ஒரு வருடத்தில் நடத்த வேண்டும் என்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய பின்னரே அத்தகைய வாக்கெடுப்பு நடத்தப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். இப்போது இப்பிரச்சனை பலவிதமான கோணத்தில் விரிந்துள்ளது. இதன் முடிவுகள் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எத்தகைய முடிவுகளை நல்கப் போகிறது என்பது பலரது மனதிலும் ஒரு பெரிய பரபரப்பான வினாவாகவே இருக்கின்றது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (229)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். ஏறத்தாழ ஒரு மாத இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஒரு மூன்று அல்லது நான்கு வார கால விடுமுறையில் நான் சென்னை வருவதுண்டு. அவ்வரிசையில் இவ்வருடம் ஜனவரி மாத இறுதியில் நான் மேற்கொண்ட சென்னைப் பயணத்தினாலேயே இவ்விடைவெளி ஏற்பட்டது.

    இன்று நான் இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் நாள் ஒரு சிறப்பான நாள். ஆம், மார்ச் 8ஆம் திகதி சர்வதேசப் பெண்கள் தினத்தை தன்னுள் அடக்கிக் கொண்ட பெருமையை இவ்வாரம் பெறுகிறது. பெண்களுக்கென ஒரு தினம் அவசியமா? அவசரமா? எனும் வகையில் சிலரும், பெண்களுக்கென ஒரு தினத்தை கொண்டாடுவது அவர்களைச் சிறுமைப்படுத்துவது போலாகாதா எனும் வகையில் வேறுசிலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை முன்வைத்து வாதிடுவதைக் கண்ணுற்றேன்.

    சற்றுச் சிந்தித்தேன். . .

    “அம்மா” எனும் புனிதமான உறவோடு ஆரம்பிக்கிறது அனைவரது பெண்களுடனான உறவு. அந்தத் தாய் எமக்களிக்கும் அன்பிலும் வளர்ப்பிலுமே நாம் பணிவு, அன்பு, அடக்கம் என்பதனைக் கற்றுக்கொள்கிறோம். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு பெண் தன் வகையில் செய்யும் தியாகங்கள் அளப்பரியன. அதற்காக ஒரு குழந்தை வளர்ப்பில் தந்தையர்க்கு இருக்கும் பங்களைப்பை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக்கூடாது.

    இந்தச் சமுதாயம் பல காலங்களாக பெண்கள் மீது விதித்திருந்த கலாசாரக் கட்டுப்பாடுகள் கணக்கற்றவை. உதாரணத்துக்கு இதிகாசங்களையே எடுத்துக் கொள்வோமே ! சீதை தன்னை உத்தமி என்று நிரூபிப்பதற்காக மேற்கொண்ட சோதனைகள், மற்றும் துரியோதனனுடைய சபையிலே துகிலுரியப்பட்ட திரோபதை அந்நிலைக்க்குக் காரணமாக அவள் சூதாட்டத்தில் ஒரு படுபொருளாக பணயம் வைக்கப்பட்டமை. இவைகள் கட்டுக்கதைகள் தானே என்று வாதிடலாம். ஆனால் அக்கதைகளை புனைவோரின் மனதில் பெண்கள் குறித்து நிலவிய கண்ணோட்டம் எவ்வகையானது என்று எண்ணத் தலைப்பட வேண்டியுள்ளது.

    மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மா ஊருக்குப் போய்விடுகிறார். நண்பன் குவளைக்கண்ணனுடன் இருந்த மகாகவி காலையில் பாலைக்காய்ச்ச முயற்சித்துச் சலிப்படைகிறார். அக்கணத்திலே அவர் மனத்தில் தான் ஒருநாள் செய்ய முடியாது சலிப்படையும் காரியத்தைத் தன் மனைவி தனக்காகக் காலமெல்லாம் செய்கிறாளே எனும் எண்ணம் துளிர்க்கிறது. இது தன் மனைவிக்கு மட்டுமல்ல அனைத்துப் பெண்களுக்குமே பொருந்தும் எனும் உண்மை அவருக்குத் துல்லியமாகப் படுகிறது. பிறக்கிறது “பெண் விடுதலைக்கான”கவிதைப் பொறிகள்.

    இவைகளை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால் இத்தகைய ஒரு கால கட்டத்தினூடாகத்தான் பெண்களின் வாழ்வு பயணித்தது. மேலை நாட்டை எடுத்துக் கொண்டால் கூட இங்கிலாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை போராடித்தான் பெறப்பட்டது. உலகெங்கும் பெண்கள் அன்றைய காலகட்டத்தில் ஒருபடி குறைவாகவே மதிக்கப்பட்டார்கள்.

    காலம்பல மாற்றங்களுக்குள்ளாகியது. இன்று பெண்களின் நிலை முற்றிலும் மாறுபட்ட நிலையிலுள்ளது. ஆண்கள் செய்யும் அனைத்துப் பணிகளும் பெண்களாலும் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் கட்டிக்காக்கும் திறமை கொண்டவர்கள் என்பது அத்தாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அனைத்து உள்ளங்களும் சரியான வகையில் இக்காலமாற்றத்தை உள்வாங்கியிருக்கிறதா? என்பது இன்னமும் கேள்விக்குறியே! சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலே அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளாராக ஹிலரி கிளிண்டன் அவர்கள் போட்டியிட்டார். அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்று சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் என்று பேசப்பட்டது. அதேநேரம் அவருக்கு எதிரான அணியில் ’பெண்’ எனும் அந்தஸ்தைக்காட்டித் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது பெண்கள் எதிர் நோக்கும் ’கண்ணாடிக்கூரை (Glass ceiling)’ இன்னும் தகர்ப்படவில்லையோ எனும் ஜயத்தைத் தோற்றுவிக்கிறது.

    அதேநேரம் தற்போதய அமெரிக்க ஜனாதிபதியும் அப்போதைய அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான ’டொனால்ட் ட்ரம்ப்’ பெண்களைப் பற்றி கொண்டிருந்த அபிப்பிராயம் மிகவும் கீழத்தரமானது என்று ஊடகங்களின் செய்திகளில் வெளிவந்தபோதும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றது அமெரிக்க மக்களின் மனதிலுள்ள ஆணாதிக்கத் தன்மை இன்னும் மழுங்கவில்லையோ எனும் ஜயப்பாட்டைத் தோற்றுவிக்கிறது..

    இங்கிலாந்தில் இன்றும் ஒரேபணியில் இருக்கும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் இடையில் ஊதியத்தில் வேறுபாடு இருப்பது மறுக்க முடியாத உண்மை.

    இப்படியான பல நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில் இன்னும் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் பெண்களுக்கான சமஉரிமைக்கான கோஷத்தின் தேவை இன்னமும் இருக்கிறது என்றே கொள்ளவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் இப்பெண்கள் தினம் கொண்டாடப்படுவதும் காலத்தின் கட்டாயமாகிறது என்பதே என் கருத்தாகிறது.

    அனைத்துச் சகோதரிகளுக்கும், அன்புத்தோழிகளுக்கும் எனது அன்பு கலந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ***

    அம்மா
    எனும் முன்றெழுத்தோடு
    ஆரம்பம்
    எமது வாழ்க்கை
    சும்மா
    அல்ல குழந்தை வளர்ப்பு
    சுகமான சுமையென்பர் அவரே
    ஊறிப்போன
    கலாசாரக் கட்டுப்பாட்டால்
    உயர முடியாது வாடினர் பலரே
    பாரதி
    எனும் முத்தமிழ்க் கவிஞன்
    பாவிலே வைத்தான்
    புதுமைப் பெண்களை
    சாரதி
    பெண்ணே குடும்பத்தேருக்கு
    சார்ந்தே நாமெல்லாம் அவர்பால்
    அறிவால்
    குறைந்திடவில்லை என்றே இன்று
    அவனியில் பெண்கள் சாதிக்கின்றார்
    பெண்கள்
    என்றால் அடுப்படி வாசம் என்றே
    எண்ணிய மடமைச் சமுதாயம்
    கண்கள்
    அவர்கள் புவியின் முன்னேற்றத்துக்கு
    ஆற்றுகின்றார்கள் அரிய பல பணிகள்
    வீட்டினை
    மட்டுமல்ல தம்மால் தாம் வாழும்
    நாட்டினையும் ஆள முடியும் எனக்காட்டினர்
    போற்றிட
    வேண்டும் பெண்களை மானிடா!
    தோற்றிட வேண்டாம் வாழ்வில் என்றால்
    பூட்டிய
    சமுதாய விலங்குகளை உடைத்துக்
    காட்டிட வேண்டும் ஆதரவு தன்னை
    சர்வதேச
    பெண்கள் தினத்தில் அனைவரும்
    சங்கற்பம் இன்றே பூண்டிட வேண்டும்
    வீட்டில்
    அன்பால் சாதிக்கும் பெண்கள் இன்று
    நாட்டில் அறிவால் சாதிக்கும் நிலை காண்பாய்
    கண்ணாடிக்
    கூரையை உடைத்து முன்னேற
    பெண்கள் போடும் ஈடில்லா யுத்தம்
    நாளைய
    சமுதாயத்தில் ஆண்கள், பெண்கள்
    நாமெல்லாம் சமமே என்றே கூறி
    வாழிய 
    பெண்கள் என்றே வாழ்த்துவோம்
    பெண்கள் தினத்தில் வாருங்கள் தோழர்காள்!

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (228)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மனம் மகிழ்கிறேன். ஒரு நாட்டின் சுபீட்சம், நாட்டின் ஜனநாயகப் படிமுறைகள் என்பன சரியான பாதையில் எதிர்பார்ப்புகளுக்கமைய நடைபெற வேண்டுமானால் அந்நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்திலிருப்போரின் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு எழும் கேள்விகள் அவர்களை நோக்கித் திருப்பப்பட வேண்டும். நியாயமான வகையில் இக்கேள்விகள் அமைவது அவசியம். அவ்வகையினில் அமையுமானால் அதற்கான சரியான பதிலை அதிகாரத்திலிருப்போர் வழங்கும் பட்சத்தில்தான் ஜனநாயக வழிமுறையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வலுப்பெறும்.

    இத்தகைய ஜனநாயக முன்னெடுப்புக்கான நடவடிக்கைகளில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசாங்கத்தை, பிரதமரை, ஜனாதிபதியை, அமைச்சர்களை சரியான வழியில் நடக்கப் பண்ணுவதில் ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இவ்வூடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு நாட்டின் சராசரிக் குடிமகனிடம் உண்மைச் செய்திகளை அவ்வுண்மை நிலைக்குச் சிறிதும் பங்கம் நேராத வகையில் எடுத்துச் செல்வது இப்பத்திரிகையாளர்களின் கடமையாகிறது. அதேசமயம் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ஒவ்வொரு செய்தியின் மீதும் தமது சொந்தக் கருத்துக்கள் இருக்கும். அச்செய்தியை வடிவமைக்கும் போது ஆங்காங்கே அவர்களின் கருத்துக்களின் சாரம் அச்செய்தியில் பதிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

    இந்தக் கருத்துப் பரிமாற்றம், செய்திப்பரிவர்த்தனை சரியாக நடைபெற வேண்டுமானால் பத்திரிகை நிருபர்களுக்கும்,தொலைக்காட்சிச் செய்தியாளர்களுக்கும் அச்செய்தியில் சம்பந்தப்பட்டிருக்கும் நபருக்கும் (அரசியல்வாதியோ அன்றி ஒரு பிரபலமிக்க நபரோ ) இடையிலான உறவு ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையின் அடிப்படையில் அமைந்திருப்பது அவசியமாகிறது. மகாகவி பாரதியின் கூற்று ” தம்பி உன்னுள்ளத்தில் உண்மை இருந்தால் பேனாவை எடு , எழுது”என்பதன் உள்ளார்த்தம் புரிகிறது. இதுதான் பத்திரிகைத்தர்மம் என்பதன் அடித்தளமாகிறது. பத்திரிகையாளர்களுக்கும்,அப்பத்திரிகை நிருபர்களுக்கும் அளிக்கப்படும் கெளரவம் போன்றே அச்செய்தியில் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அச்செய்தியின் சாரத்திற்கும், உண்மைக்கும் கௌரவமளிக்கப்படவேண்டியது அவசியமாகிறது. ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தரத்தைப் பாதுகாக்கும் முக்கியப்பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மக்களை நல்வழிப்படுத்தும், அதேசமயம் அவர்களுக்கு உண்மைகளை அவர்களின் நன்மை கருதி எடுத்துச் செல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. நாம் ஓர் அரசியல் கட்சியையோ அன்றி ஓர் அரசியல்வாதியையோ ஆதரிக்கிறோம் எனும் காரணத்திற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளின் மூலம் அவர்களுக்கு ஆதரவு தேடுவது பத்திரிகாதர்மத்துக்குப் புறம்பானது. அதேநேரம் நாம் ஒருவரின் அரசியல் கொள்கைக்கோ அன்றி அவரது கருத்துக்கோ எதிரான கருத்துக் கொண்டவர்கள் என்பதனால் செய்திகளைத் திரித்துக்கூறுவதும் ஊடகத் தர்மத்திற்கு ஊறு விளைவிப்பதாகவே அமைகிறது.

    கடந்தவாரம் வெள்ளிக்கிழமை உலகத்திலேயே சக்தி வாய்ந்த வல்லரசாகக் கருதப்படும் அமேரிக்க நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றுக் கொள்ளும் வைபவம் நிகழ்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் பல முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து அமெரிக்க மக்களிடையே பேதங்களை உருவாக்கிய ஒரு சர்ச்சைக்குரியவரான டொனால்ட் ட்ரம்ப் இந்த வைபவத்தில் பதவியை ஏற்று நிகழ்த்தும் உரையில் அமெரிக்க மக்களிடையே கிளர்ந்துள்ள இப்பேதத்தைக் களைந்து நாட்டினை ஒன்றுபடுத்தும் வகையிலான ஓர் உரையை டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் நிகழ்த்துவார்கள் என்று கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை தரைமட்டமாக்கும் வகையில் அமெரிக்க மக்களிடையே உள்ள பேதங்களை மேலும் கூர்மைப்படுத்தும் வகையிலான உரையாகவே அவரது உரை அமைந்தது என்பது அரசியல் அவதானிகள் பலரது ஒருமுகப்படுத்தப்பட்ட கருத்து. அமெரிக்க ஊடகங்களுடன் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஒரு போருக்கான அறைகூவல் விடுத்துள்ளார் என்றே கூறவேண்டும். தான் தன்னுடைய கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்குத் தன் பக்கம் ஈர்க்க வேண்டிய ஊடகங்களை முற்றுமுழுதாகப் புறந்தள்ளி அவர்களை மிகவும் அவமரியாதை செய்துள்ளார் என்பதுவே பொதுப்படையான கருத்து. வழமையான ஜனநாயக மரபுகளை விடுத்து சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாகத் தனது கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் தன்னிச்சையாகத் தனது கருத்துக்களை வெளியிடுவது மட்டுமின்றி அவரின் செயல்களுக்கான விளக்கத்தை அறியும் வகையில் ஊடகங்கள் அவரைக் கேள்வி கேட்க முடியாத வகையில் அவரது செயற்பாடுகள் அமைகின்றன.

    அவரது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகை முன்னாள் ஜனாதிபதி ஓபாமா அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட மக்க்கள் தொகையை விடக் கணிசமான அளவு குறைந்தே காணப்பட்டது எனும் உண்மையை ஆதரங்களுடன் வெளியிட்ட ஊடகங்களின் அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை என்றும் தமது கணக்கீட்டின்படி தனது பதவியேற்று வைபத்தில் பங்குபெற்றவர்களின் தொகையே அதிகமானது என்றும் வாதிட்டு அனைவருக்கும் கறுப்பு என்று தெரியும் ஒன்றை வெள்ளையென வாதிட்டிருக்கிறார் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் ஜனாதிபதி. இது மிகவும் விசனத்துக்குரியதாகும். இத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபடும் இவரின் தரப்பிலிருந்து இன்னும் எவ்வகையான தரவுகள் வெளிப்படப் போகின்றன என்பதே பலரது மனக்கிலேசத்துக்குக் காரணமாகவிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஊடகங்களின் நிலை என்ன? உண்மையான செய்திகள் மக்களை எவ்வகையில் சென்றடையப் போகிறது? இப்படிப் பல கேள்விகள் உலகெங்குமுள்ள ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் அவதானிகளால் எழுப்பப்படுகின்றன.

    இத்தகைய ஒருவர் வல்லரசான அமெரிக்காவின் தலைவராக எடுக்கும் முடிவுகளின் தாக்கங்கள் அமெரிக்காவோடு மட்டும் முடிந்து போவதில்லை. இவற்றின் விளைவுகள் உலகநாடுகள் அனைத்திலும் ஏதோ ஒரு தாக்கத்தை கொண்டு செல்லப்போகின்றன. அவைகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 227 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இவ்வுலகமெனும் நாடகமேடையில் ஒருவார காலம் என்பது நிச்சயமாக வரலாறு எனும் நாடகத்தின் காட்சிகளை மிகவும் அதீத வகையினில் மாற்றி வைத்து விடக்கூடிய வல்லமை படைத்தது. ஜனநாயகம் என்பது மிகவும் வியக்க வைக்கத் தக்கது. உலகம் மாபெரும் மனிதக் கொடூரத்தை நிகழ்த்திய ஹிட்லரை முன்னணிக்குக் கொண்டு வந்தது ஜனநாயகம் எனும் காட்சியின் அடிப்படையில் என்பது சரித்திர உண்மை. மக்களின் அடிப்படை மன உணர்வின் ஓட்டத்தை நடுநிலைமை வகிக்கக்கூடிய அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளத் தவறும் வேளையில், அவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பை உள்வாங்கிக் கொள்ளத்தவறும் வேளையில் மக்களின் அடிப்படை உரிமையான ஜனநாயகம் எனும் அரசியல் கொள்கையின் நடைமுறை முடிவுகள் உலக வழக்கங்களை முறியடிக்கும் வகையில் அமைவதைத் தடுக்க முடியாது. உலகின் பொருளாதார முன்னேற்றமாக உலகமயமாக்கல் அல்லது Globalization எனும் பொறிமுறையைப் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகள் கடைப்பிடிக்கத் தொடங்கியதன் காரணம் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையை வலுவாக்குதல் என்ற போதிலும் அதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகள் முன்னேறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது எனும் காரணமே முதன்மைப்படுத்தப்பட்டது.

    மூன்றாவது உலக நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்கிறோம் எனும் போர்வையில் பொருளாதாரத்தில் முன்னணி நாடுகளான அமேரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளின் பெரிய கம்பெனிகள் தமது செலவுகளைக் குறைத்து இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகப் பிற்தள நிர்வாக வேலைகளை அந்நாடுகளிலிருந்து வளர்ச்சியடையும் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு அப்புறப்படுத்தின. அது மட்டுமன்றி வெளிநாட்டுக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவும் அந்தந்த நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கள் குன்றியதோடு அடிப்படை வாழ்க்கைத்தரம் குன்றியது. இவைகளோடு சேர்ந்து 2008ஆம் ஆண்டு உலக வங்கிகளில் ஏற்பட்ட சரிவினால் அகில உலகமே ஒரு பொருளாதார அதிர்வுக்குள்ளாகியது. விளைவு மக்களின் வாழ்வாதாரங்கள் மேலும் பாதிக்கப்பட்டது. இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல பாரிய கம்பெனிகளின் தலைமைத்துவத்திலிருப்பவர்களின் ஊதியம் 200, 300% என அதிகரித்தது. இவையெல்லாம் வாழ்க்கையின் மத்தியதர வர்க்கத்தினர் என வருணிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மிகவும் பாதித்தது. சந்தர்ப்பவசமாக இந்த மத்தியதர உழைக்கும் வகுப்பினைச் சேர்ந்த மக்கள் அந்தந்த நாடுகளின் இனத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்ததன் காரணமாக ஒருவிதமான இனவாதக் கருத்துக்களும் இவர்களின் மனங்களில் மேலோங்கத் தலைப்பட்டது.

    விளைவு!

    இந்தவாரம் உலக வரலாறு எனும் புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அன்றி ஒரு புதிய திருப்பத்தைத் தோற்றுவிக்கப் போகிறது. ஆமாம் இந்தக் கட்டுரை பிரசுரமாகும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக நாடுகளில் அதி முக்கியம் பெற்ற ஒரு நாட்டுத் தலைவர் பதவியைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறார் ஒரு மனிதர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய திரு. டொனால்ட் ட்ரம்ப், கடைசிவரை வெற்றிபெற முடியாதவர் என பல முன்னணிச் செய்தி ஊடகங்களினாலும், பல முன்னணி அரசியல் விமர்சகர்களினாலும் வருணிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜானாதிபதியாக முடிசூட்டிக் கொள்ளப்போகிறார் எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அடக்கிக் கொண்டுள்ள பெருமையை இவ்வாரம் பெற்றுக்கொள்கிறது. அது அமெரிக்க நாட்டின் சாபம் என்று ஒரு சாராரும், இல்லை இது உலகில் பல நன்மைகளை விளைவிக்கப் போகிறது என்று ஒரு சாராரும் இடைவிடாது தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் திரு.டொனால்ட் ட்ரம்ப் உலகில் அதிக செல்வாக்குள்ள நாட்டின் அதிபராகப் போகிறார் என்பதே மறுக்கப்பட முடியாத உண்மை.

    இதுவரைத் தனது வாழ்வில் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காத ஒருவர், மாறி, மாறி வித்தியாசமான அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளித்ததைத் தவிர வேறு எந்தவிதமான அரசியல் பின்னணியையோ அன்றி அரசியல் அறிவையோ கொண்டிருக்காதவர் என்பது போன்ற தகைமைகளுக்குப் பெயர் போனவர் டொனால்ட் ட்ரம்ப். இன்றைய சூழலில் அவரின் நடவடிக்கைகளை அவதானித்து, அவரின் செயற்பாடுகள் அமேரிக்காவின் 45ஆவது அதிபரை எப்படிப்பட்டவராக சரித்திரப் புத்தகத்தில் எழுதப்போகிறது என்பதைப் புரிந்து கொள்வதே எம்முன்னால், எம்மால் ஆற்றக்கூடிய ஒரேயொரு செயல்.அமெரிக்க நாட்டின் உயர்வும், தாழ்வும் அமெரிக்க நாட்டை மட்டுமே பாதிக்கப் போகிறது நமக்கென்ன எனும் கொண்டிருப்போரை எண்ணிப் பரிதாபப்படவே முடிகிறது. விரும்பியோ, விரும்பாமலோ அமெரிக்க நாட்டின் பொருளாதார நிலையின் அடிப்படையிலே உலகநாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. உலகத்தின் சமாதனம், அமைதி என்பனவற்றின் உறுதி அமெரிக்க நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் தங்கியுள்ளது என்பது உண்மை.

    உலகம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனை ஒரு புதுவிதமான திசையை நோக்கிப் பயணிக்கிறது. உலகமயமாக்குதல் எனும் கொள்கை தமது நலன்களுக்கு எதிராகச் செல்கிறது என்று எண்ணம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகள் தமது எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளத் தலைப்படுகின்றன. அதே போலக் கிழக்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் திளைத்திருக்கும் நாடுகளின் மனோநிலைகள் வித்தியாசமான ஒரு எண்ணத்தில் திளைத்திருக்கின்றன. இவை இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை வைத்துத்தான் பலநாடுகளின் அரசியல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. மேலைநாடுகளோ தமது பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியை விளக்குவதற்கு வெளிநாட்டவரின் குடியேற்றம் அதாவது Immigration என்பதை முக்கியக் காரணியாகக் காட்டி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து தம் நாட்டில் குடியேறியவர்கள் தமது கலாசாரத்தினுள் தம்மை மூழ்கடித்துத் தமது சொந்த நாட்டிலேயே தமது அடையாளத்தை தொலைக்கப் பண்ணி விடப்போகிறார்கள் எனும் பீதியில் இத்தகைய வாதங்களுக்கு அந்தந்த நாட்டு மக்கள் விலை போகிறார்கள். இதற்கான முற்று முழுதாக அவர்களைக் குறைகூறி விட முடியாது. வெளிநாட்டிலிருந்து புகலிடம் தேடி இந்நாடுகளில் எமது வாழ்வினை அமைத்துக் கொண்டவர்கள் முழுமனதுடன் இந்நாட்டினை எமது நாடாக கருதும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோமா என்றால் “இல்லை” என்பதுவே உண்மையான, நேர்மையான விடையாகும்.

    இதற்கு என்ன காரணம்? அடுத்தவரின் அறிவை, அவர்களின் தெளிந்த உணர்வை எமது அறிவையும், தெளிந்த உணர்வையும் விட குறைத்து மதிப்பிடுவதே காரணமாகும். அடுத்தவரைவிட நாம் அனைத்திலும் மேலோங்கியவர்கள் எனும் காரணத்தினால் அவர்களை விட அனைத்திலும் நாம் மேலோங்கி வாழ்ந்து விடலாம் எனும் ஒரு குறுகிய மனப்பான்மையே இதற்குக் காரணமாகும். இந்த உலகம் அனைவர்க்கும் பொதுவானது. நாம் அடுத்தவர்களின் உணர்வை மதித்து வாழ வேண்டும் எனும் வாதங்களின் உண்மையான தாத்பரியத்தை உணராமல் எம்மைப் பற்றி நாமே நியாயமற்ற வகையில் பெருமை கொள்வதே அடிப்படைக் காரணமாகிறது. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து வாழ வழி தேடி வந்திருக்கும் எங்களுக்கு வாழ வழி சமைத்துக் கொடுத்த இந்நாடுகளின் சொந்தக் கலாசாரத்திற்கு மதிப்பளித்து வாழவேண்டும் என்பதை மறந்து போய்விடுகிறோம். நாம் பிறந்த எமது தாய்நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அந்நாடுகளில் போராடினால் உயிரையே இழந்து விடக்கூடிய நிலையில் எமக்கு அடைக்கலம் தந்த நாடுகளில் அவர்கள் அளிக்கும் சுதந்திரத்தை அவற்றின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடுவதில் நாம் வல்லவர்களாயிருக்கிறோம். அதற்காக நாம் எமது மொழியையும், கலாசாரத்தையும் இழந்து அடையாளமின்றிப் போக வேண்டும் என்பதல்ல எனது வாதம். எமக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை எமது எல்லைகளுக்குள் அடுத்தவர் மீது திணிக்காத வகையில் வாழ்வதே சரியான வழியாகும் என்பது எனது கருத்து.

    அன்பினியவர்களே இதையெல்லாம் இம்மடலின் மூலம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஏதோ, எதையோ சாதித்து விடப் போகிறோம் என்பதனால் அல்ல. இன்றைய உலகின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. உலக அரசியல் நிகழ்வுகள் ஒரு எதிர்மறையான தாக்கத்தை அளிக்கின்றன. இத்தகைய நிலையைத் தோற்றுவிப்பதற்கு எது காரணம் அன்றி நாம் எந்த வகையில் காரணமாக இருந்திருக்கிறோம் எனும் கேள்விக்கு இந்தச் சாமான்ய மனுஷனின் ஒரு அலசலே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (226)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். தைத்திருநாளை தன்னுள் அடக்கிக் கொண்ட இவ்வாரத்தில் உங்களோடு மடல் மூலம் உரையாடுவதில் மகிழ்கிறேன். உழவர் தம் திருநாளில், உழைப்பை நல்கி ஊரை உய்விக்கும் உன்னதத் தோழர்கள் உழைப்பின் பரிசினை உவந்து கொண்டாடும் தைத்திருநாளாம், தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் பொலிவுடன் பூத்திடும் வாரமிது. கடந்த பல வருடங்களாகத் தைப்பொங்கல் பண்டிகையைச் சென்னையில் கழிப்பது எம் வழக்கமாயிருந்தது. தைப்பொங்கல் காலத்தோடு இயைந்து வரும் சென்னைப் புத்தகத் திருவிழாவையும் கன்டு களிப்பதை வழமையாகக் கொண்டிருந்த எமது பிரயாண ஏற்பாடுகள் இவ்வருடம் சிறிது தாமதமாகையால் இம்முறை தைப்பொங்கல் திருநாளை லண்டனில் கழிக்க வேண்டியதொரு சூழல்.

    இன்று அதவாது 12ஆம் திகதி மாலை 5 மணியளவில் பெய்ய ஆரம்பித்த பனிமழை எமது இல்லத்தின் தோட்டத்துப் பச்சையையும் வீட்டின் முற்றத்தையும் வெள்ளைக் கம்பளம் கொண்டு போர்த்தி விட்டது. இலைகளை இழந்து நிர்வாணமாய் நிற்கும் பனிக்கால மரங்களை இயற்கையன்னை பனிமழை எனும் வெள்ளையாடை கொண்டு மூடிவிட்ட அழகிய காட்சி காணுமிடமெங்கும் நிறைந்திருக்கிறது. தமிழர் தாயகமாம் தமிழகத்தில் ஆதவன் தன் கதிர்களால் அனைவரையும் தகித்துக் கொண்டிருக்க லண்டனில் பனிமழையால் மக்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது இயற்கை.

    ஐக்கிய இராச்சியத்தின் முக்கியப் பிரதானமான ஒரு பேசப்படும் பொருளாக அனைவருக்கும் பிரமிப்பூட்டும் சாதனையாக இருந்துவருவது இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவையே! வாழ்வில் எத்தகைய நிலையிலிருப்போராகிலும் அவர்கள் பிரித்தானியப் பிரஜைகளாக இருப்பின் அவர்களுக்கு அளிக்கப்படும் வைத்தியம் இலவசமானதாகவே இருக்கும் என்பதுவே தேசியச் சுகாதரச் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மைய நோக்கமாகுமானால் இன்றோ அச்சுகாதார சேவை தனது அச்சாணியாகத் திகழும் அவ்விலவசமான வைத்தியத்தை அளிக்கும் முயற்சியில் மிகவும் தள்ளாட்டத்துக்கு உள்ளாகியே இருக்கிறது. இங்கிலாந்து அரசின் பொருளாதாரக் கொள்கை இறுக்கப்பட்டிருப்பதன் காரணமாகப் பொதுச் சேவைகளுக்கு அளிக்கப்படும் நிதித்தொகையின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

    அதன் காரணமாகவும், ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையின் அளவின் அதிகரிப்பாலும், வைத்திய முன்னேற்றங்களின் காரணமாக மக்களின் வாழ்வுக் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாலும் இன்றைய இங்கிலாந்துத் தேசிய சுகாதாரச் சேவை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களின் முன்னால் ரெட் குரஸ் என்றழைக்கப்படும் சர்வதேசத் தொண்டு நிறுவனம் தேசிய சுகாதார சேவையின் பாதிப்பு வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் அடிப்படி மனித உரிமைகள் கூட நிறைவேற்றப்படமுடியாத ஒரு சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    அதேபோல டாக்டர்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்பும், இங்கிலாந்தின் பல பகுதிகளின் தேசிய சுகாதாரச் சேவைகளின் நிர்வாகங்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்பும் இதுவரைத் தாம் கண்டிராத அளவுக்குத் தேசியச் சுகாதார சேவை தனது சேவைகளை நோயாளிகளுக்கு அளிக்கும் முயற்சியில் பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்று கூறியுள்ளார்கள். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் இங்கிலாந்து பிரதமர், மற்றும் தேசியச் சுகாதார சேவையை நிர்வகிக்கும் அமைச்சர் ஆகியோரின் வாசல் கதவுகளைத் தட்டுகின்றன. தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் “தேசியச் சுகாதார சேவைக்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட நிதித்தொகை அவர்கள் கேட்ட தொகையிலும் பார்க்க அதிகமானது என்றும் ஒரு சில தேசிய சுகாதார அமைப்புகளின் கீழ் வரும் வைத்தியசாலைகளே சிக்கலைச் சந்தித்து வருகின்றன என்றும் அது அவர்களின் நிர்வகாம் சரிவர நிர்வகிக்கப்படாத காரணமே என்றும் கூறியுள்ளார். பிரதமர் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களின் மனக்கிலேசத்தை கணக்கிலெடுக்காமல் மேலோட்டமாக நடக்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    நாட்டின் ஜனத்தொகை அதிகரிப்பு, அளவுக்கதிகமான வெளிநாட்டவரின் குடியேற்றம், இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சராசரி வாழ்வின் காலம் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ளது எனும் காரணங்களினால் நிச்சயம் தேசிய சுகாதாரச் சேவையின் தரத்தில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே! ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மக்களின் அடிப்படைத் தேவைகள் எத்தகைய வகையில் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அவ்வகையில் இங்கிலாந்தின் முன்னேற்றத்தின் மீதான அபிப்பிராயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு அந்நாட்டின் அரசுக்கும், அவ்வரசின் தலைவருக்குமே முக்கியமான பொறுப்பாகும் என்பது நிதர்சனமான உண்மை.

    என் அன்பு வாசக உள்ளங்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    அல்லும் பகலும் உழைத்திடும்
    அன்புத்தோழர் விவசாயிகள்
    கனவுகளைத் தேக்கி வாழ்வில்
    காலமெல்லாம் வாழ்ந்திடுகிறார்

    நாளை தமக்கு நலமாய் விடியும் எனும்
    நம்பிக்கை நெஞ்சில் கொண்டு அவர்கள்
    நாட்டின் உணவு வளம் செழித்திட
    நலிவுற்றே உழைத்து தேய்ந்திட்டார்

    மேடைகள் தோறும் முழங்கிடும் நல்ல
    தலைவர்கள் உண்மையை உணர்ந்திட்டு
    தரமான வாழ்வு விவசாயிகள் பெற்றிட
    தந்திடுவாரோ நலமுள்ள திட்டங்கள்?

    தைமகள் பிறந்திட்ட பொன்னாளில்
    தைத்திருநாளாம் தமிழர் தம் திருநாளில்
    பொங்கிடும் எம் தோழர் வீட்டுப் பானைகள்
    பொழியட்டும் மகிழ்வதனை அவர்தம் வாழ்வினில்

    உழைத்து வாழ்ந்திடும் தோழர்கள்
    உன்னதமாய்ப் பெற்றிடட்டும் வெற்றிகள்
    தைத்திருநாளில் என் அன்பு வாழ்த்துக்கள்
    பொழிகின்றேன் அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு!

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share