Tag: நிர்மலா ராகவன்

  • சக்குவின் சின்னிக்குட்டி

    சக்குவின் சின்னிக்குட்டி

    நிர்மலா ராகவன்

    “உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா!”

    மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே `பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தவன் ஆயிற்றே!

    காரணமின்றி அழுதவள். எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பவள். அவளுடைய மனக்குறை என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.

    திருமணமாகிய முதல் மூன்று வருடங்களில் சாதாரணமாகத்தானே இருந்தாள்? இப்போது, இரண்டு வருடங்களாக ஏன் இப்படி?

    தான் அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாடு போவதால், தனிமை அவளை வாட்டுகிறதோ? பெரிய உத்தியோகம் என்றால், பொறுப்புகளும் அதிகமாகத்தானே இருக்கும்! இதுகூடவா புரியவில்லை அவளுக்கு?

    கேட்டும் பார்த்துவிட்டான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏதாவது கேட்டால், ஒரே அழுகை.

    கடைசி முயற்சியாக, வைத்தியம்.

    “இன்னும் பிள்ளை பிறக்கலியேன்னு அவங்களுக்கு ரொம்ப ஏக்கம். நம்ப சமூகத்தைப்பத்தி ஒங்களுக்குத் தெரியாதா! யார் வீட்டு விசேஷத்துக்காவது போனா, அக்கறையா, துக்கம் விசாரிப்பாங்க. சின்னக் குழந்தைங்களைத் தூக்க விடமாட்டாங்க!”

    தன்னிடம் மனைவி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கோபமும், உடனே பச்சாதாபமும் ஏற்பட்டன.

    சகுந்தலாவிடம் நைச்சியமாகப் பேச்சுக்கொடுத்தான். ‘சில பேருக்கு, கல்யாணமாகி, பத்துப் பதினஞ்சு வருஷம் கழிச்சுக்கூட குழந்தை பிறந்திருக்கு. ஒனக்கு அவ்வளவு ஆசையா இருந்தா..,” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் குறுக்கிட்டாள்: “தத்து எடுக்கிற சமாசாரமே வேண்டாம்”.

    அதன் காரணத்தைக் கேட்கவெல்லாம் அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை.

    ‘எப்படியோ போ!’ என்று மனத்துக்குள் திட்டத்தான் அவனால் முடிந்தது.

    நல்லவேளை, அனுதினமும் இவளுடைய அழுமூஞ்சித்தனத்தைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்ற ஆறுதல் எழுந்தது.

    அயல் நாட்டில் இரு வாரங்களைக் கழித்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    சிரித்த முகத்துடன் சகுந்தலா!

    “இங்க வாங்களேன்,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் காட்டிய இடத்தில் ஒரு பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. சொகுசாக, மெத்து மெத்தென்று மடிக்கப்பட்டிருந்த ஒரு ஜமக்காளத்தின்மேல்.

    “இது எங்கேயிருந்து வந்தது?” சற்று எரிச்சலுடன் பிறந்தது கேள்வி.

    “தானே வருமா? நான்தான் நேத்து கொண்டுவந்தேன், என் ஃப்ரெண்ட் கோகிலா இல்லே, அவ வீட்டிலேருந்து!” பெருமையாகச் சொன்னாள்.

    சிறு வயதில், ‘பூனைகிட்ட போகாதே, பிறாண்டும். தொட்டா, அலர்ஜி வந்து, அரிக்கும்,’ என்று பலவாறாக எச்சரிக்கை விடுத்திருந்தாள் அவன் தாய். இப்போது, அந்த அறிவுரை ஞாபகத்தில் எழ, “வீட்டுக்குள்ளே விடாதே. அசுத்தம் பண்ணிடும்,” என்றபடி, அப்பால் நகர்ந்தான்.

    ஏதோ நினைத்துக்கொண்டவனாய், “இந்தக் குட்டி ரொம்ப சோனியா இருக்கே! ரோமமும் இல்லே. ஏன் சக்கு? ஒனக்கு ஆசையா இருந்தா, கடைக்குப் போய், அழகான, புசுபுசுன்னு இருக்கிற நாயோ, பூனையோ வாங்கிக்கிறது!”

    அவளுடைய ஆத்திரம் அவன் எதிர்பாராதது. “ஒங்களுக்கு சோனியா, அழகில்லாம ஒரு குழந்தை பிறந்தா அதைத் தூக்கிப் போட்டுடுவீங்களா?”

    எழுந்த வேகத்திலேயே அவள் ஆத்திரம் அடங்கியது. “இதுக்கு பேர் என்ன தெரியுமா? சின்னி! நல்லா இருக்கில்ல?”

    இவள் என்ன, வளர்ந்த குழந்தையா? ஆயாசம்தான் எழுந்தது கருணாகரனுக்கு.

    தாய்ப்பால் மறக்காத குட்டிக்கு அவள் தன் விரலைப் பாலில் நனைத்து, அதன் வாயில் வைத்தாள். அதுவும் தாயின் மடிக்காம்பு என்று நினைத்து சப்பியது.

    ஆறுமாதங்கள் கழிந்தன. சின்னியின் உடலில் பருவ மெருகு ஏறியிருந்தது தெருவில் போகிற ஆண்பூனை ஒன்றின் கண்களுக்குத் தப்பவில்லை. அது உரிமையுடன், வீட்டுக் காம்பவுண்டில் நுழைந்து, சின்னியைத் துரத்தியதைக் கண்டு கருணாகரனுக்குப் பயம் ஏற்பட்டது.

    போனால் போகிறதென்று மனைவிக்குத் துணையாய் ஒரு பூனைக்குட்டியைச் சகித்துக்கொண்டாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று அல்லது ஐந்து குட்டிகளைப் பிரசவித்தால் என்ன செய்வது! இது என்ன வீடா, அல்லது மிருகக்காட்சிசாலையா?

    ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு ஆண் பூனையைத் துரத்தினான்.

    “என்ன செய்றீங்க?” அதட்டலாக வந்தது சகுந்தலாவின் குரல்.

    “ஒன்னோட பூனையை டாக்டர்கிட்ட கூட்டிப் போகணும்,” என்று முணுமுணுத்தான்.

    “எதுக்கு?” என்றாள், புரியாது.

    அவன் விளக்கியதும், “எந்த ஜன்மத்திலே செஞ்ச பாவமோ, என் வயிறு திறக்கலே. அறுவைச்சிகிச்சை செஞ்சாவது சின்னியையும் மலடியா ஆக்கணுமா? பிள்ளை பெத்து, பால் குடுக்கிற இயற்கையான சந்தோஷத்தை அதுக்குக் கிடைக்காம பண்ணினா, அது பெரிய பாவங்க!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் சகுந்தலா.

    அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. சின்னி வந்த நாளிலிருந்தே அவளது அழுகை குறைந்து, உற்சாகமாக இருந்தாளே! இப்போது மீண்டும் தொடர் அழுகையா!

    “நீயும் ஒன் பூனையும் எப்படியோ தொலைங்க”. மனம் வெறுத்துப் பேசினான்.

    “அப்பா கிடக்கார்! நீ வாடி சின்னிக்குட்டி,” என்று அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சியபோது, அவனுக்குள் பொறாமை கிளர்ந்தது அவனுக்கே அவமானமாக இருந்தது. ஒரு பூனைக்குட்டியுடன் போட்டியா?

    தன்னை அப்பா என்கிறாளே! அப்போது, அவள் அம்மாவா?

    சில மாதங்களில் அதுவே உண்மை என்று தெரியவந்தது.

    “சின்னியை மிருக வைத்தியரிடம் கூட்டிப்போகணும்”.

    அவள் கூறியது புரியவே சில வினாடிகள் பிடித்தன. “எதுக்கு சக்கு? நீதானே வேண்டாம்னு சொன்னே?”

    “அது அப்போ. நம்ப பிள்ளை பிறந்துட்டா, பூனைக்குட்டிங்களை யாரால பாத்துக்க முடியும்?” அலட்சியமாக வந்தது அவள் குரல்.

    உணவும் சுத்தமான குடிநீரும் கொடுத்து, அதற்கு ஈடாக தன் அடிப்படை உரிமையைப் பறித்துக்கொள்ளும் மனிதர்களின் குணம் புரியாது, சகுந்தலாவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து, தன் உடலை நக்கி சுத்தப்படுத்திகொண்டிருந்த அந்த பூனைக்குட்டியைக் கண்டு கருணாகரனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    தனக்கு மட்டும் ஏன் குட்டிகள் இல்லை என்று என்றாவது அதற்கும் அழத்தோன்றுமோ?

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

    நிர்மலா ராகவன்

    குமரேசா

    ஒவ்வொரு பாட்டை எழுதி முடித்தபின்னரும், கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்று `அரங்கேற்றம்’ செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

    ஒரு முறை, `எல்லார்மேலேயும் எழுதறியே! என்மேலே ஒரு பாட்டு எழுதக்கூடாதா?’ என்று முருகன் கேட்பதுபோல் இருந்தது. பயந்துவிட்டேன். பாட்டு தானாகவேதான் எழவேண்டும். இல்லாவிட்டால் நன்றாக இருப்பதில்லை.

    அதற்கடுத்த வாரம் பினாங்கு தண்ணீர்மலையிலுள்ள முருகன் கோயிலுக்குப் போனபோது, `ஒனக்குப் பாட்டு வேணும்னா, நீயே சொல்லிக்கொடு!’ என்று பாரத்தை அவன் தலையிலேயே போட்டேன்.

    சரியாக ஒரு வாரம் கழித்து, `குமரேசா’ என்ற பாடலின் முதல் பாகம் (பல்லவி) நள்ளிரவு தூக்கத்தில் என் காதில் ஒலித்தது, கோலாலம்பூரில். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறைகளுக்குப்பின் விழிப்பு கொடுத்தது. தயாராக வைத்திருந்த நோட்டில் ஸ்வரப்படுத்தி எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். காலையில்தான் ஆபோகி ராகம் என்றே புரிந்தது!

    பத்துமலை உச்சியில் பலமுறை இப்பாடலைப் பாடியிருக்கிறேன்.

    அகன்ற குகை. அங்கு பாடுகையில், கூடவே வீணையோ, புல்லாங்குழலோ ஒலிப்பது கேட்கும். ஒரு வெள்ளைக்காரர் என் வாய்க்குள் புகாதகுறையாகத் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது வேடிக்கையான அனுபவம்.

    பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் இப்பாட்டிற்கு அபிநயம் பிடிக்கையில் சகோதரனுடன் சண்டைபிடித்தல், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வது எல்லாம் அவர்கள் வாழ்வில் நடந்ததாகவே இருக்க. பார்ப்பவர்கள், `ஆகா! என்ன பாவம்!’ என்று பாராட்டுவார்கள்!

    பி.கு: `கு’ என்றால் அறியாமை. நம் அறியாமையை மாற்றுபவன் குமாறன். அது மருவி, குமாரன் ஆகிவிட்டதாம்.

    இப்பாடலைக் கேட்க:

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3

    நிர்மலா ராகவன்

    சடை விரிந்ததேன்                  

    கோயம்புத்துரில் ஒரு சிற்றுண்டிசாலைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கியபோது, “அம்மா! சிவன் மேலே `ஏன், ஏன்’னு கேக்கறமாதிரி ஒரு பாட்டு எழுதேன். பேகட ராகத்திலே இருக்கணும்,” என்று ஷீலா ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.

    உடனே, `சடை விரிந்ததேன் சிவனே?’ என்று பாடிக்காட்டினேன்.

    “இதேதான்!” என்று ஆர்ப்பரித்தாள்.

    எங்களிருவரையும் வீட்டுக்கு அழைத்துப்போக வந்த என் இளைய சகோதரியிடம், “எனக்கு ஒரு பாட்டு வந்தது,” என்று உற்சாகமாக அந்த ஒரு வரியைப் பாடிக்காட்டினேன்.

    நான் எதற்கு அடிபோடுகிறேன் என்று அவளுக்குத் தெரியாதா! “எனக்குப் பாட்டெல்லாம் எழுதப் பிடிக்காது,” என்றபடி, விறைப்பாக காரை ஓட்டிப்போனாள்.

    “உன்னை யார் எழுதச் சொன்னது?” என்ற நான் அந்த ஒற்றை வரியை விடாது பாடியபடி இருந்தேன்.

    சில நிமிடங்களுக்குள், தன்னையுமறியாது, அடுத்த வரியைப் பாடினாள், சங்கீத வித்வான் டாக்டர் ஹேமலதா நடேசன் (1960-களில், அடையார் இசைக்கல்லூரியில் முசிறி, Dr.எஸ்.ராமநாதன், K.V. நாராயணஸ்வாமி, T.N. கிருஷ்ணன் போன்ற பல வித்வான்களிடம் பயின்றவள்).

    அவள் பாடப் பாட, நான் ஸ்வரப்படுத்தினேன். நாங்களிருவரும் மாறி மாறிப் பாட, நான்கு ராகங்களில், இரண்டிரண்டு வரிகள்கொண்ட பாடல் முழுமை பெற்றது.

    இப்பாடலைக் கேட்க:

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

    நிர்மலா ராகவன்

    பாறைமேல்

    சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்று உணர்ந்த புருஷாமிருகத்தின் கதை.

    இக்கதையைப் படித்துவிட்டு, நான் என் பேரனுக்குச் சொன்னேன், வழக்கம்போல் பீமனும் அக்காட்டு மிருகமும் ஒருவரோடொருவர் சண்டை போடுவதை நடித்துக்காட்டி.

    “இதைப் பாட்டாக எழுது. மிக நன்றாக இருக்கும்,” என்று மகள் ஷீலா கூறிப்போனாள்.

    ஒவ்வொரு காட்சியையும், நாட்டிய – நாடகபாணிக்கு ஏற்ப எப்படி அமைப்பது என்று நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.

    அது மட்டுமா? நான் எடுத்துக்கொண்ட ராகம் தானாக மாறி, பிருந்தாவன சாரங்காவாக ஆகியது. கிருஷ்ணருக்கு உகந்த இடம் பிருந்தாவனம், அல்லவா? இது புரியாது, அதை மாற்றியமைக்க மூன்று நாட்கள் முட்டிக்கொண்டேன்.

    `சிவாயநம ஓம்’ என்ற வார்த்தைகள் தோடி, ஷண்முகப்ரியா, கமாஸ் ஆகிய மூன்று ராகங்களிலும் அமைந்திருப்பது தற்செயல்.

    தன் பலத்தில் கர்வம் கொண்டிருந்த பீமனை காட்டு விலங்கான புருஷாமிருகம் துரத்த, அவன் பயந்தோடுவதை மேடையில் பார்க்கும்போது சிறுவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.

    பின்குறிப்பு:18 ஆண்டுகளாக, வசதியற்ற குடும்பத்திலிருந்து வரும் பெண்களுக்கும், சில தாய்மார்களுக்கும் கோலாலம்பூர் பங்க்சார் (Bangsar) ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இலவச பரதநாட்டிய வகுப்பு நடத்துகிறாள் என் மகள் ஷீலா. மலேசியாவுடன், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் மாணவிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் படைத்திருக்கிறாள்.

    மேல் விவரங்களை அறிய — Face book: Mahavidya Dance Theatre

    இப்பாடலைக் கேட்க: https://youtu.be/A6a2lyz6gPQ

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    நிர்மலா ராகவன்

    முன்னுரை

    “நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்!’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்தாள்.

    விடாமல், மறுபடியும் கேட்டபோது, “பாட்டா!’’ என்று முதலில் அயர்ந்தேன். “எனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியாது. ஏதோ, கதை, கட்டுரை. நாடகம், நாட்டிய விமரிசனம் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரையாவது கேட்டுப்பார்!”

    “அம்மாவே மறுத்தால், நான் யாரைக் கேட்பது?” என்றாள், பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு.

    அதில் பொதிந்திருந்த லாஜிக் என்னைச் சம்மதிக்கவைத்தது.

    முதல் பாடல் எழுத ஆரம்பிக்கும்போது அச்சமும் கூடவே எழுந்தது. விக்னமில்லாமல் என் முயற்சியில் வெற்றிபெற பிள்ளையாரை மனத்துள் துதித்தேன். அடுத்து, `நீயே வந்து எழுதிக்கொடு,’ என்று கலைக்கடவுளான ஸரஸ்வதியை வேண்டினேன். பின்பு, என் இசைக் குரு பத்மஸ்ரீ T.S.கல்யாணராமன். (`எப்படி எழுதறது, ஸார்?’) பின்னர், பல பாடல்களில் இவரது பரிந்துரைகள் உண்டு. (நான் பாட்டெழுத ஆரம்பிக்குமுன்னரே அவர் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

    இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றி, அவற்றில் சிலவற்றை வாத்தியங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். இவை பெரும்பாலும் பரதநாட்டியத்திற்கான பாடல்களாகும்.

    ஒவ்வொரு பாடலும் இயற்கையுடன் நான் ஒன்றியிருந்த சமயம் தானாக அமைந்தவை.  ஓர் இந்துக் கடவுளின்மேல், அவரை ஒட்டிய கதை ஒன்றுடன் இருக்கும். (இப்படியாக அடிக்கடி என் “மேதாவித்தனத்தைக்” காட்டிக்கொள்வேன். எல்லாம் தலபுராணங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்களின் உபயம் என்று யாருக்குத் தெரியப்போகிறது!).

    பாடல்கள் எங்கே, எப்படிப் பிறந்தன என்ற சிறு குறிப்பை இத்தொடரில் எழுத உத்தேசித்திருக்கிறேன். பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போமா? (நான் எழுதிய முதல் பாடல் இதுவல்ல. அந்தக் கதை பிறகு).

    விக்ன விநாயகனே

    கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில், 280 கிலோமீட்டர் தூரத்தில் செராடிங் (CHERATING) என்ற இடம் இருக்கிறது, கடலோரத்தில். நீர்நிலைகளைக் காணும்போது என் மனம் உற்சாகம் அடையும். கடலைப் பார்த்தபடி, அலையோசையை ரசித்தபடி பாடிக்கொண்டிருப்பேன்.

    ஒரு முறை, செராடிங்கில் சில தினங்களைக் கழித்துவிட்டு, நானும் என் இளைய மகள் சித்ராவும் வாடகைக் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பிறந்த பாடல் இது.

    காரின் ஜன்னலை சரியாக மூட இயலாத நிலையில், போக்குவரத்து சப்தம் காதைத் துளைத்தது. நிம்மதியாக பாடலைப் புனைய ஒரு வழி கிடைத்தது: ஒரு தினசரியை என் உடல் முழுவதிலும் கூடாரம்போல் கவிழ்த்துக்கொண்டு, எழுத ஆரம்பித்தேன். அனுபல்லவியில், சிவனார் பிள்ளையாரை துதிப்பதாக வருகிறது. முப்புரங்களை எரிக்க சிவன் புறப்பட்டபோது, கணபதியை வணங்காததால் தேரின் அச்சு உடைந்ததாக அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். பிள்ளையாரை வணங்கியதும் தடை நீங்கியது.

    சரணம்: பாற்கடலைக் கடையுமுன், தேவர்களும் அசுரர்களும் விநாயகரை வணங்காததால், மத்தாக இருந்த மேருமலை சாய்ந்துவிட்டது. தம் தவற்றை உணர்ந்து, கிளிஞ்சல்களுடன் கடல் நுரையைச் சேர்த்து கணபதியாக்கி வணங்கினர். விக்னமும் விலகியது.

    (திருவலஞ்சுழியில் வெள்ளை வெளேரென்று இருக்கிறது ஸ்வேத விநாயகர் விக்கிரகம். ஸ்வேதா என்றால் வெள்ளை).

    ஒரு நிகழ்ச்சியின் முதல் அங்கமாகப் பலர் இணைந்து, நாட்டிய நாடகமாக ஆட ஏற்ற பாடல். இப்பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=bfv-BuDciVM

    Youtube: Mahavidya Dance Theatre

    Share
  • அறிவும் புத்தியும்

    அறிவும் புத்தியும்

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல்… (170) 

    அக்குழந்தைக்கு அன்று ஆண்டுநிறைவு.

    “குழந்தை புத்திசாலியா?” தன் முதல் குழந்தை நல்லவிதமாக வளரவேண்டுமே என்ற ஆதங்கத்துடன் ஓர் இளம் தாய் என்னைக் கேட்டாள்.

    அதன் கண்களைப் பார்த்தபோது, களங்கமற்ற குணம் மட்டும்தான் தெரிந்தது.

    “நாம் பேசப் பேசத்தான் குழந்தைகளின் அறிவு வளரும்,” என்று என் அனுபவத்தில் அறிந்ததைக் கூறினேன்.

    பொது இடங்களில், குழந்தையிடம் பேசுவதே வீண் என்பதுபோல் நடக்கிறார்கள் பல தாய்மார்கள். அப்படியே கைத்தொலைபேசியிலிருந்து மிகுந்த சிரமத்துடன் கண்களை அகற்றிப் பேசினாலும், எதைப் பற்றிப் பேசலாம் என்ற கேள்வி எழுகிறது.

    சில பெரியவர்கள், ‘வேடிக்கை’ என்று நினைத்து, கெட்ட வார்த்தைகளும், பழிப்புச் சொற்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அர்த்தம் புரியாது, குழந்தைகள் அதையெல்லாம் திரும்பச் சொல்லும்போது, மூத்தவர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். ஆனால், வளர்ந்தபின் அப்படிப் பேசினால், யாரும் அப்படி வளர்க்கப்பட்ட ஒருவனை மதிக்கமாட்டார்கள்.

    கல்வி ஒருவனை அறிவாளி ஆக்குகிறதா என்பதும் யோசிக்க வேண்டிய சமாசாரம்தான்.

    பள்ளிக்கூடத்தில், “உன் மூளையை உபயோகப்படுத்து!” என்று படித்துப் படித்துச் சொல்வார்கள். தற்காலத்தில், பிறர் தமது மூளையை உபயோகித்து அறிந்தவற்றை நமதாக்கிக்கொள்ள விஞ்ஞானம் வழிவகுக்கிறது.

    நிறைய விஷயங்களைத் தெரிந்துவைத்து, ஒருவன் தான் புத்திசாலி என்று பெருமிதம் கொண்டிருக்கலாம். ஆனால், வெறும் ஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்! நற்குணமும், ஆழமாகச் சிந்திப்பதன் பயனாக உலகைப் புரிந்துகொள்ளும் அறிவும் வேண்டாமா?

    கதை

    பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த சரவணனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால், புத்தக அறிவைத் தவிர வேறு எதுவும் இல்லாதவனுக்குப் பயம் ஏற்பட்டது, புதிய இடத்தில் தான் எப்படி பிழைக்கப் போகிறோமோ என்று.

    மாற்றங்களை எதிர்கொள்ளும் துணிவு புத்தகப் பாடங்களைப் படித்துப் பெற்ற புத்தியால் கிடைப்பதல்ல.

    தன் நண்பர்கள் யாருக்காவது அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தான் சரவணன். அவர்களுடன் தொடர்புகொண்டு, “என்னை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று கெஞ்சினான். ஆதாயம் எதிர்பார்த்து வலுவில் நட்பை ஏற்படுத்திக்கொண்ட போதும், பிறருடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அன்றாடம் வானொலியில் கேட்ட செய்திகளை மட்டும் திரும்பக் கூறுவான்.

    `இவன் கல்லூரியில் என்னதான் கற்றான்?’ என்ற கேலிக்கு ஆளானான்.

    `தெரிந்தவரை போதும்,’ என்ற மனப்பான்மை இருந்தால் அறிவு எப்படி வளரும்?

    `நான் புத்திசாலி!’ என்று படிப்பையும் உத்தியோகத்தையும் வைத்து இவன் பெருமை கொள்ளலாம். கைநிறையப் பணமும் கிடைக்கலாம். ஆனால், பிறருடன் பழகத் தெரியாவிட்டால், கல்வியால் என்ன பயன்?

    செய்தித்தாள் மட்டுமின்றி, நிறைய புத்தகங்களையும் படித்து, தான் அறிந்ததை சமயம் கிடைத்தபோதெல்லாம் வெளிக்காட்டிக்கொள்பவன் தன்னைப் புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்வது உள்ளாடைகளைப் பெருமையுடன் வெளியில் காட்டிக்கொள்வதுபோல்தான் என்கிறார் திரு.அனுபவசாலி. உள்ளாடை, புத்தி இரண்டும் ஒருவருக்கு அவசியம் தேவை.  ஆனால், பிறர் மெச்சுவதற்காக அல்ல.

    கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களைச் சொல்பவனும் புத்திசாலி என்பதல்ல. படித்ததை எவ்வாறு தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்று புரிந்து, அதை உபயோகிக்காவிட்டால், படித்து என்ன பயன்?

    புதிய விஷயங்களைக் கற்று, புத்திக்கூர்மையை அதிகரிக்க சரியான கேள்விகளைக் கேட்கவேண்டும். நிறையக் கேள்வி கேட்பவர்களை பலரும் விரும்புவதில்லை. சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

    ஆனால், அறிவை நாடுகிறவர்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு விடைகாணும்வரை முயற்சியைக் கைவிடமாட்டார்கள். இவர்களால் வித்தியாசமான பிறரைப் புரிந்து ஏற்க முடிகிறது. தம் சொந்த வளர்ச்சிக்காக பிறரை நோகடிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ மாட்டார்கள். ஏனெனில் இவர்களது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

    அறிவை எப்படித்தான் வளர்ப்பது?

    கல்வி மட்டுமின்றி, கலை, ஆரோக்கியமான, கவனம் செலுத்தவைக்கும் விளையாட்டுகள், தியானம் போன்றவற்றால் அறிவு வளரும். அதைக் குறித்து கர்வம் எழாதபோது, தன்னம்பிக்கையும் மிகும்.

    தன்னம்பிக்கையுடைய எழுத்தாளர், சைத்திரிகர், நடிகர் போன்றோர் தனிமையை விரும்புகிறார்கள். கற்பனையில் பல பாத்திரங்களுடன் ஒன்றிணைந்து, அவர்களாகவே மாற வேறு வழியில்லை.

    இவர்களிடமும் பிறர் குற்றம் கண்டுபிடிப்பார்கள் -– பழகத் தெரியவில்லை என்று. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். ஏனெனில், தகுதியானவர்களை மட்டுமே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். பிறர் சொல்லாததையும் புரிந்துகொள்ளும் திறமை இருப்பதால் `ஆமாம் சாமி’ போட இவர்கள் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம்.

    விஞ்ஞான வளர்ச்சியால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை கணக்கில் அடங்காமல் போய்விட்டன. எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், நாம் முட்டாள்கள் என்றாகாது.

    கணினி, கைத்தொலைபேசி என்று பல்வித சாதனங்களையும் ஓயாது உபயோகிக்கும் திறன் மட்டும் இருந்தால் போதுமா?

    பழகத் தெரிய வேண்டும்

    ஒரு பேரங்காடியில் பார்த்தேன். நாற்பது வயதுக்குட்பட்ட ஆறுபேர் ஒரு நீண்ட இருக்கையில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு தொலைபேசி. பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து யாரும் புன்முறுவல் செய்யவோ, உரையாடவோ முயலவில்லை. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கையிலும் Ipad! அவர்களும் தம் உலகில் மூழ்கி இருந்தார்கள்.

    மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பிறருடன் பழகத் தெரிந்திருக்க வேண்டாமா? கணவன் எப்போதும் கணினியின்முன், மனைவி கைத்தொலைபேசி அல்லது தொலைக்காட்சி என்றிருந்தால், சிறுபிராயத்தில் ஒரு குழந்தைக்கு எதையோ இழந்துவிட்டது போன்ற ஏமாற்றம் எழும். சமாதானம் செய்யும் வகையிலோ, அல்லது `அன்பு’ என்ற பெயரிலோ, ஏதாவதொரு சாதனத்தை வாங்கிக் கொடுக்கத்தான் பொற்றோர்களால் இயலும்.

    இப்படிப்பட்ட குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் தீவுகள்போல் தனித்து இயங்குவார்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் சுயநலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து நடக்க முற்படுவது இதனால்தான்.

    கதை

    ஒருமுறை என் சக ஆசிரியை, “ஆண்கள் வளர்ந்துவிட்ட குழந்தைகள். என் கணவர் குழந்தைகளிடம் பேசியதே கிடையாது. நண்பர்களுடனேயே தன் நேரத்தைக் கழிப்பார். ஒரு விடுமுறை நாள், வீட்டில் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய ஆத்திரம் பெருக்கெடுத்தது. `யாருமே என்னை மதித்து, ஒரு வார்த்தைகூடப் பேச வரவில்லை!’ என்று கத்தினார்!’ என்று சிரித்தாள்.

    இருபது வயதுக்கு மேற்பட்டிருந்தாலும், அவளுடைய குழந்தைகள் தம் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் தன்னுடன் ஏன் பகிரவேண்டும் என்ற என்னிடம் ஆச்சரியப்பட்டாள்.

    “உன் குழந்தைகள் ஏதோ, கடவுளைக் கண்டதுபோல் பரவசத்துடன் உன்னைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். அது உனக்குத் தெரியுமா?” என்று நான் கேட்டபோது, அவள் விழித்தாள்.

    எதையும் எதிர்பாராது, அவள் தன் நேரத்தை, உழைப்பை, தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்த கசப்பான, அல்லது இனிமையான, பொழுதுகளை சிறுவயது முதல் அவர்களிடம் சொல்லியிருக்கிறாள். (தமிழ் தெரியாத, அல்லது நெருக்கமாக இல்லாத அக்கம்பக்கத்தினர் இருந்தால், நாம் பெற்ற குழந்தைகளே உற்ற நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்).

    இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் தாயுடன் நெருக்கமாக இருப்பதில் என்ன அதிசயம்?

    புத்தி மட்டும் போதுமா?

    என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், பெரிய உத்தியோகம் வகித்து, கைநிறைய சம்பாதித்தாலும், சக மாந்தருடன் சுமுகமாகப் பழகுவது, அவர்களைப் புரிந்து நடப்பது போன்ற தன்மைகள் குறைந்துவிட்டால் அறிவு மங்கிவிடும்.

    வெளிநாட்டில் வேலை பார்த்த சரவணன் கூறினான், “என் இரு குழந்தைகளுக்கும் இப்போதுதான் இரண்டு வயது, ஒரு வயதாகிறது. இந்த வயதில் அவர்களுக்கு நான் தேவைப்படமாட்டேன்!”

    நினைவுதெரிந்த நாளாக, தாய்தந்தையரின் அன்பு கிடைக்கப்பெற்று, அதன்மூலம் வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் வளர்ந்திருக்கும் எத்தனைபேர் இதை ஒப்புக்கொள்வார்கள்?

    முற்றும்

    Share
  • மகிழ்ச்சியைத் தேடலாமே!

    மகிழ்ச்சியைத் தேடலாமே!

    நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 169)

    நமக்கு யாரைப் பிடித்துப் போகிறது?

    நமக்குள் இருக்கும் நற்குணங்களை, திறமைகளை வெளிக்கொணர்பவர்களை.

    இது புரியாது, சிலர் தம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களிடமே தம் `பராக்கிரமத்தைக்’ காட்டுவார்கள்.

    குடும்பத்தினரிடம் தம் அதிகாரத்தை (வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ) நிலைநாட்ட முயல்பவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள்?

    எனது இக்கேள்விக்கு விரிவாக விளக்கமளித்த உளவியல் நிபுணர், “இவர்கள் எப்போதும் போர்க்களத்திலேயே இயங்குபவர்கள்!” என்றார்.

    இவர்களுடைய போராட்டம் தமக்குள்ளேயேதான். ஏதோ ஒருவித பாதுகாப்பின்மையால் உசுப்பப்படுகிறார்கள். இவர்களுக்குச் செல்வம், புகழ், பதவி எல்லாம் இருக்கக்கூடும். ஆனாலும், அவை போதாமல் போய்விடுகின்றன.

    போரில் ஈடுபடுகிறவர்கள் தம்மைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள், இல்லையா? எப்படித் தாக்கினால் எதிராளி தன் வசமாவான் என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள். அப்போது அவர்களுடைய மனம், கண் இரண்டிலும் விழிப்புணர்வு கூர்மையாக ஆகிவிடும். பலசாலியாக உணர்வார்கள். அவர்களுக்கு உவகை அளிக்கும் நிலை இது.

    ஆனால், எத்தனை நேரம்தான் இந்த நிலையிலேயே இருக்க இயலும்! விரைவிலேயே உடல் களைத்துவிடும். உடனே மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். இதுவும் ஒருவித போதைதான்.

    இவர்கள் தாமே தம் குறையைப் புரிந்துகொண்டு, திருத்திக்கொள்ள முயன்றால் மாறலாம். ஆனால், தம்மிடம் குறை இருக்கிறதென்று எத்தனைப் பேர் ஒப்புக்கொள்வார்கள்?

    ஒருவரை அவருடைய குறைகளுடன் அப்படியே ஏற்கும் தன்மை இருந்தால்தான் இத்தகையவர்களுடன் சேர்ந்து வாழ முடியும். இதுதான் உண்மையான காதல், இதனால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறார்கள்.

    கதை

    Legally blind என்ற அடையாளத்துடன் கண்பார்வை மிகக் குறைந்த நிலையில் இருந்த பெண்ணைக் காதலித்து மணந்தான் தர்மராஜ்.

    `இப்படிக்கூட மணப்பார்களா!’ என்று பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள்.

    அப்பெண் திறமைசாலி, எதையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் அவளுக்கு இருந்தது என்பதைச் சில நிமிடங்களில் அவளுடன் பழகியதுமே எனக்குப் புரிந்தது.

    தன் தாயைப் போன்று அன்பைப் பொழிபவள் என்ற உறுதியுடன் தர்மராஜ் அவளைத் தேர்ந்தெடுத்திருந்ததில் வியப்பில்லை. பயந்த சுபாவம் கொண்ட அவனுக்கும் அவள் உறுதுணையாக இருப்பாள்.

    `தன்னைப் பிறர் கேலி செய்வார்களோ? பிறர்முன் மனைவியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள முடியாதே!’ என்றெல்லாம் தர்மராஜ் குழம்பவில்லை. தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்தான். அதனால் நிறைவு அடைந்தான்.

    மனைவியின் குறையால் அவள் என்றும் தன்னைச் சார்ந்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருவருமே தனித்து இயங்கினார்கள். இணைந்தும் செயல்பட்டார்கள். அக்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது.

    தற்காலத்தில் மனிதன் மகிழ்ச்சியை இழந்துவிட்டு, எங்கெங்கோ அதைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

    இன்றைய உலகம் தொழில் துறையைச் சார்ந்ததாக ஆகிவிட்ட நிலையில், எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிடுகிற நிலை வந்துவிட்டது. பலரும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.

    பெற்றோரைவிட அதிகமாகச் சாதித்துக் காட்டவேண்டும் என்று சிலர் தமக்குத் தாமே விதித்துக்கொள்கிறார்கள். குடும்பம், குழந்தைகளின் கல்வி, அதிலும், எந்த விதமான கல்வி, என்று எதிர்காலத்தைப் பற்றிப் பற்பல யோசனைகள் எல்லா நேரமும். இதனால், எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது.

    விடுமுறைக்காக ஓரிடத்திற்குச் செல்லுமுன்கூட, ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லாவற்றையும் திட்டமிட, புதிதாக எதையும் கற்கும் திறனும் ஆர்வமும் மறைந்துவிடுகிறது.

    கதை

    `நீ தைரியசாலி. புத்திசாலி. எல்லாவற்றிலும் முதலாவதாக விளங்கவேண்டும்,’ என்று பலவாறாக உற்சாகமூட்டப்பட்டு வளர்ந்த பாஸ்கர், நிறைய சாதித்தான். ஆனால், அவனுக்கென்னவோ மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தன் வளர்ச்சியால் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருகிறோம் என்ற உணர்வுதான் இருந்தது.

    `ஏன் எனக்கு எதிலுமே நிறைவில்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.

    எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மை வெறியாகவே மாறிவிட்டதை உணர முடிந்தது.

    வாழ்க்கை நிரந்தரமில்லை. அதை நம் செய்கையால் கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம்; எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே காலத்தைச் செலவழிப்பதைவிட நிகழ்காலத்தில், தன்னைச் சுற்றி நடப்பதில் கவனம் செலுத்தினால்தான் நிறைவு ஏற்படும் என்ற ஞானம் பிறந்தது.

    `இதனால் எனக்கு என்ன ஆதாயம்?’ என்று கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகிறார்கள் பலரும். `

    இது என்ன வாழ்க்கை!’ என்று சலித்துக்கொள்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்தால் புத்துணர்வு பிறக்கும்.

    தான தர்மம் செய்பவர்கள் அனைவரும் புகழை எதிர்பார்த்துச் செய்வதில்லை. தம் ஆத்ம திருப்திக்காக நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மனநிறைவு அடைவதே வெற்றிக்கான அறிகுறி.

    பாஸ்கரும் இனி போட்டிகளில் கலந்துகொண்டு, பிறரை வீழ்த்தி, அதனால் தான் மகிழக் கூடாது என்று முடிவெடுத்தான். பிறருக்கு உதவுவது போன்ற சிறு விஷயங்களால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    சில வயதானவர்களைப் பாருங்கள். பேரங்காடி, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு வருவார்கள். அதிகமாக நடக்கக்கூட முடியாத நிலையில். அங்குப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது வேறு யோசனைக்கு இடமில்லை.

    இவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு, `இப்படிச் செய்திருக்கலாமோ?’ என்று மாற்ற முடியாததைப் பற்றிய வீண் யோசனைகள் செய்யவில்லை. அமைதியை அடைவது எப்படி என்று புரிந்தவர்கள்.

    பலருக்கு இது புரிவதில்லை. ஓயாது புலம்பி, தம்மைச் சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் குலைக்கிறார்கள்.

    உதாரணமாக, திருமணமாகிச் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பின் ஏதோ காரணத்தால் மனத்தளவில் பிரிகிறவர்கள், வருத்தத்திலேயே ஏன் உழலவேண்டும்? இன்பமாக கழித்த நாட்களையும் அவ்வப்போது நினைக்கலாமே!

    கதை

    அழகிற்காக பைரவியை மணந்தான் செல்வந்தனான ஜெயன்.

    பத்து வருடங்கள் எந்தத் தொல்லையும் இருக்கவில்லை. அதன்பின், அந்த வாழ்க்கை அலுப்புத் தட்ட, சூதாட்டத்தில் இறங்கினான் ஜெயன். சர்வகாலமும் அந்த நினைவிலேயே மனம் சுழல, மனைவியுடன் இருந்த நெருக்கம் குறைந்தது. பணமும் கரைந்தது.

    ஆரம்பத்தில் கணவனிடம் பணிவும் மரியாதையுமாக இருந்த பைரவி மாறினாள். சீறினாள். அவளுடைய வாய்வீச்சைத் தாங்க முடியாது, ஜெயன் இன்னும் விலகிப் போனான்.

    `எல்லாக் கல்யாணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை!’ என்று கூற ஆரம்பித்தாள் பைரவி. அவளுடைய மனநிலை கெட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் குறை காணத் தோன்றியது.

    தான் செய்தது தவறுதான் என்று ஜெயன் ஒப்புக்கொண்டாலும், அப்பழக்கத்தை விடமுடியவில்லை.

    ஒரு பதின்ம வயதுப்பெண் பேரங்காடிகளில் நடந்த பல போட்டிகளில் வெற்றிபெற்று, நிறைய சாமான்களை பரிசாகப் பெற்றாள். பல முறை.

    அப்படி ஒரு போட்டியில் நானும் வெற்றி பெற்றபோது, அவளுடைய தந்தை என்னிடம் கூறினார், “நாங்கள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. அப்படியே அனாதை இல்லங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்!”

    அவர்கள் அப்படியொன்றும் செல்வந்தர்களில்லை.

    அவர் கூற்றை ஆதரிக்கிறார் ஒரு சமூக சேவகி. “கிடைப்பதைப் பகிர்ந்துகொண்டால்தான் மகிழ்ச்சி நிலைக்கும்.   இறைக்கிற கிணறு சுரப்பது இல்லையா? அதுபோல்தான் நாம் கொடுப்பதும் விரைவிலேயே வேறு விதத்தில் கிடைத்துவிடுகிறது”.

    இந்த உண்மை புரியாதவர்களே மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share
  • சரியா? தப்பா?

    சரியா? தப்பா?

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் (168)

    `முன்பெல்லாம் நாடு இவ்வளவு மோசமாகவா இருந்தது!’ என்று பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் இன்று.

    ஆனால், இவர்களில் யாரும் அதை எப்படித் தடுப்பது என்று யோசிப்பதில்லை. முட்டாள்தனத்தாலும், பேராசையாலும் சிலர் நடப்பதால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று புரிந்தாலும், அதை எப்படி நம்மால் தடுப்பது என்ற பயம்!

    தீங்கு இழைக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்கள் பலத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யாது இருப்பவர்களே நிறைந்த உலகில் தீமை தழைப்பதில் என்ன அதிசயம்?

    தவறு செய்யலாம், ஆனால் அதைப் பிறர் அறியாவண்ணம் செய்தால் தவறில்லை என்பதுபோல் நடக்கும் சிலரைப் பின்தொடர்கிறார்கள் தன்னலம் மட்டுமே கருதுபவர்கள்.

    `நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் மட்டும் தெய்வப்பிறவிகளா, என்ன! இப்படிப்பட்டவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சல் கிடையாது. அதனால்தான் தம்மைப்போல் இல்லாதவர்களை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.

    இது புரிந்தால், இவர்கள் சொல்வதையும் செய்வதையும் அலட்சியம் செய்யலாம்.

    கதை

    நான் பட்டப்படிப்பு படிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும், என் உறவினர்களில் மூவர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    “எப்படியும், கல்யாணமாகிப் போகப்போகிறவள்! எதுக்கு இன்னும் படிப்பு?” என்று என் தாய்க்குத் தூபம் போட்டார் ஒருவர்.

    “அதிகமாகப் படித்துவிட்டால், மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்,” என்று, கூடுதலான வரதட்சணை கொடுக்க வேண்டிவரும் சிரமத்தை இன்னொருவர் உணர்த்தினார்.

    `பெண்களை அதிகம் படிக்கவைத்தால், பிறரை மதிக்கமாட்டார்கள். கட்டுப்படுத்துவது கஷ்டம்,’ என்று ஏதேதோ சொன்னார்கள்.

    எனக்கென்னவோ, என் நலனைக் கருதிதான் அந்த ஆண்கள் அப்படிச் சொன்னார்கள் என்று நம்ப முடியவில்லை.

    பதின்மூன்று வயதில் வகுப்பில் முதலாவதாக வந்ததற்காக, அதற்கடுத்த வருடம் மைசூர் மகாராஜாவின் கையால் பரிசு பெற்றிருந்தேன். பள்ளி இறுதி ஆண்டில் மாநிலத்தில் குறிப்பிட்ட இடம் பெற்றதற்காக என் பெயரும், பள்ளியின் பெயரும் தினசரிகளில் வந்தன. பேச்சுப்போட்டிகளில் பள்ளியைப் பிரதிநிதித்திருந்தேன். (பிறகு, கல்லூரியிலும்).

    “நான் நன்னாப் படிக்கிறேனேம்மா! மேலே படிக்கத்தான் போறேன்!” என்றேன் உறுதியாக.

    அம்மாவின் விருப்பமும் அதுதான். “இவள் ஒரு முடிவு எடுத்தால், அப்புறம் யார் எது சொன்னாலும் கேட்க மாட்டாள்!” என்று அந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டினாள்.

    அடுத்து வந்த ஆண்டுகளில், நான் படிக்கக்கூடாது என்று நாங்கள் கேளாமலேயே `அறிவுரை’ கூறியவர்கள் தம் பெண்களைக் கல்லூரியில் சேர்த்தார்கள்!

    இப்படி — தெரிந்தே பிறரைக் கவிழ்க்க நினைப்பவர்களை — தருணம் வாய்க்கும்போது பழி தீர்த்துக்கொள்ள எண்ணினால் நாமும் அவர்களைப்போல் பலகீனமாக ஆகிவிடுகிறோம். `போகிறார்கள்! அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுவிட வேண்டியதுதான்.

    பெண்கள் அதிகம் படித்துவிட்டால் அச்சமோ பொறாமையோ கொள்ளும் உலகம் கல்வியில் நாட்டமில்லாது இருப்பவரை `முட்டாள்’ என்று பழிக்கிறது.

    படிப்பில்லாவிட்டால் என்ன? ஒருவருக்கு வேறு திறமை இருக்கலாமே!

    கதை

    கீர்த்தி தன் பதின்ம வயதில் காரோட்டக் கற்றாள். உரிமம் கிடைத்தும், தனியாக காரோட்ட துணிச்சல் இல்லை.

    “அண்ணா எவ்வளவு நன்றாக ஓட்டுகிறான், பார்!” என்று யாரோ அவள் மதிப்பைக் குறைத்து ஒப்பிட, நொந்துபோனாள்.

    அப்பெண் தற்காப்பு கலையில் தேசிய ரீதியில் பரிசுகள் பெற்றவள். பாட்டு, நடனம், சித்திரம் வரைதல், தானே புதிய சமையல்வகைகளைக் கண்டுபிடித்துச் செய்வது என்று அவளுக்கு இருந்த வேறு பல திறமைகளை நினைவுறுத்தியபின் அவள் தெளிந்தாள்.

    பெண்களுக்குப் பேச்சுத்திறமை அளித்த ஆண்டவன், இயந்திரத்திறன்களை ஆண்களுக்குக் கொடுத்துவிட்டார். ஒன்றரை வயதிலேயே பெண் குழந்தைகள் கதை சொல்லும். ஆண் பிள்ளை சிறு காரை வைத்துக்கொண்டு விளையாட, பெண் குழந்தை தனக்கென வாங்கிக் கொடுத்த பொம்மையை மார்புடன் அணைத்துப் பால் கொடுக்கும்.

    சமுதாயக் கோட்பாடு பெண்கள் மென்மையானவர்களாக இருப்பது அவசியம் என்று இப்படிப் பழக்கிவிட்டது. இது புரிந்தால், பெண்கள் தம்மால் இயலாதவற்றுக்காக கவலைப்படத் தேவையில்லை.

    பிற மனிதர்களோ, சம்பவங்களோ நம் சுயமதிப்பைக் குறைக்கவிடக் கூடாது.

    முடியாத ஒன்றை நினைத்து கவலைப்படுவானேன்! `இப்படி ஆகிவிட்டதே!’ என்று நொந்து, அதைப்பற்றியே பேசினால் என்ன ஆகிவிடப்போகிறது!

    பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அவசியமான குணமில்லை. அவ்வப்போது, `ஏன் இப்படி?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

    கதை

    வந்தனாவின் தாய்மொழி தமிழ் அல்ல. தமிழில் பேச மட்டும் கற்றிருந்தாள். அவள் மணந்தவனது குடும்பமோ தமிழிசை, நாடகத்துறையில் சிறந்து விளங்கியது.

    ஒரு பொது நிகழ்ச்சியில் அவள் உரையாற்ற வேண்டியிருந்தது. என்னைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டாள்.

    “அந்தமாதிரி குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டுட்டு, தமிழிலே எழுதப் படிக்கத் தெரியாதா? சும்மா சொல்றா!” என்றார் ஒருவர், ஏளனமாக.

    தனக்குத் தெரியாததைப்பற்றி, சம்பந்தமே இல்லாததைப்பற்றி, கேலியாகப் பேசுபவன் அறிவிலி என்று அலட்சியப்படுத்துவோமே!

    ஒரு துணுக்கு (எந்தக் காலத்திலோ படித்தது)

    வயது முதிர்ந்த தாயிடம் மகள் கேட்கிறாள்: நீ ஏன் உன் வயதுக்கேற்றபடி நடக்காமல், இப்படி குழந்தைபோல் நடக்கிறாய்?

    தாய்: எல்லாரும், `நமக்கு வயதாகிவிட்டதே, இப்படித்தான் இருக்கணும்!’ என்று நடப்பதால்தான் உலகம் இந்த லட்சணமாக இருக்கிறது!

    அவள் கூறாமல் விட்டது: குழந்தைத்தனமான ஆர்வம் பிறவியிலேயே நம்முள் இருக்கும். இது மறையாது பாதுகாத்துக்கொள்ள இயற்கையை ரசிக்கத் தெரிந்தால் போதும்.

    `யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சி, அந்த ஆர்வத்தை அடக்கிவிடுகிறோம். வயதுக்குரிய வியாதிகளும் வருகின்றன.

    குதூகலமும் விளையாட்டுப்புத்தியும் மாறாமல் இருப்பவர்களைக் கண்டால் அவர்களுடைய கலகலப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளாதா!

    மாறாக, `வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என அலுப்பால் நம்மையே நாசம் செய்துகொள்ள முயற்சிக்கிறோம்.

    தனக்கே குழி பறிப்பவர்கள்

    ஒரு சிறிய அமைப்பின் தலைவரை அப்பதவி அளித்த அதிகாரபோதை ஆட்டுவித்தது. தனக்குக் கீழே இருப்பவர்களை மரியாதையின்றி நடத்தினார்.

    சீக்கிரமே பலரும் அவரைவிட்டு விலக, குழப்பம் ஏற்பட்டது. தான் எங்கே தவறிழைத்தோம் என்று அவருக்குப் புரியவில்லை.

    பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களைக் கேவலமாக நடத்துவார்கள், ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் மரியாதைக்குறைவாக நடத்துவார்.

    எங்கள் தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அடிமைகள்போல் நடத்தினார். பொறுக்கமுடியாது போக, எல்லாருமாகச் சேர்ந்து அவருக்கு எதிராகப் புகார்க்கடிதம் ஒன்றை எழுதி, மேலிடத்திற்கு அனுப்ப, அவர் தொலைந்தார்.

    தலைவர் ஒருவர் தன் கீழ் இருப்பவர்கள் எல்லாரும் அடிமைகள் என்றெண்ணி நடக்கலாம். ஆனால், எல்லோரும், எப்போதும், முட்டாள்களாக இருப்பதில்லை.

    பதவி இருக்கும்வரைதான் தன் அதிகாரம் செல்லும் என்று புரியாதவர்தான் முட்டாள்.

    Share
  • உங்கள் சுய அடையாளத்தை இழக்க வேண்டாம்!

    உங்கள் சுய அடையாளத்தை இழக்க வேண்டாம்!

    நிர்மலா ராகவன் 

    நலம்… நலமறிய ஆவல்… 167

    `நீங்கள் அப்படியே இருக்கிறீர்களே!’ பல வருடங்களுக்குப்பின் ஒருவரைப் பார்க்கும்போது புகழ்ச்சியாகக் கூறுகிறோம்.

    அதனால், `நாங்கள் மாறவே மாட்டோம்!’ `எப்படி மாறவேண்டும் என்கிறீர்கள்?’ என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது.

    மாற்றமில்லாத வாழ்க்கையால் நாம் பாதுகாப்பாக உணரலாம். நாளடைவில், அது சலிப்பைத்தான் உண்டுபண்ணுகிறது. புதிய அனுபவங்கள் சிந்தனையை வளர்த்து, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    அதனால்தான் விடுமுறைக்காக எங்காவது போய்விட்டு வந்தால், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், அப்போது எத்தனையோ  கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனம் என்னவோ உற்சாகமாக ஆகிவிடுகிறது.

    `மாற்றம்’ என்றால் அஞ்சத் தேவையில்லை. சரியான வழியில் முன்னேறுவது ஆக்ககரமான மாற்றம்.

    அந்தப் புதிய பாதை சில சமயம் சறுக்கலாம். எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய்ந்தால், அடுத்தமுறை அதைத் தவிர்க்கலாம். செய்த தவற்றிலிருந்து கற்பவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

    `ஒவ்வொரு முறை விழுந்து எழும்போதும், முன்பு இருந்ததைவிட அதிக உயரத்தை எட்ட முடிகிறது!’ என்று வெற்றியாளர்கள் வியந்து கூறுகிறார்கள்.

    செய்வதற்குமுன் எந்தக் காரியமுமே கடினமாகத்தான் தோன்றும். அதைச் செவ்வனே முடித்துவிட்டால் கிடைக்கும் திருப்திக்கு ஈடே இல்லை.

    கீழே விழுந்திருந்தபோது நம்மைக் கேலி செய்தவர்கள் முயற்சி செய்யவே அஞ்சுகிறவர்கள். இது புரிந்தால், அவர்கள் நம்மைப் பந்தாட விடமாட்டோம்.

    `நானாவது முயன்றேன். உனக்கு அதைச் செய்யக்கூட தைரியம் இல்லையே!’

    இப்படி உரக்கச் சொன்னால், சண்டை வரும். மனத்துக்குள் திட்டலாம்.

    மகிழ்ச்சியாக இருக்க அவசியமானது இலக்கு.

    சக மனிதர்களாலோ, பொருட்களாலோ பெறும் நிறைவு எத்தனைக் காலம் நீடிக்கும்?

    வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி, நேராக அமைந்துவிட்டால் நிம்மதி கிடைக்கலாம். ஆனால், சுவை இருக்காது.

    கதை

    என் சக ஆசிரியை பார்பரா (Barbara), அரசாங்கம் அளித்த உபகாரச் சம்பளத்தில் உயர்கல்வி பயின்றாள். தான் ஆசிரியையாக வேலை பார்க்கப் போகிறோம் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது. அவளுடைய அண்ணன்மார்களின் நண்பனான விக்டர்தான் அவளுடைய கணவன் என்று இரு குடும்பத்தினரும் அவளுடைய சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டனர்.

    ஆக, பார்பராவுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நடப்பதே பெரும் சுமை என்பதுபோல் நடப்பாள். `நான் ஒரு பயந்தாங்கொள்ளி!’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்வாள்.

    உத்தியோகமும், கணவனும் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க இயலாவிட்டால் என்ன? வேறு திறமைகள் இருக்காதா! அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கலாமே!

    பார்பரா படித்தவள். உத்தியோகமும் இருந்தது. ஆனால், துணிச்சல் இருக்கவில்லை. அதையே தன் குறையென்று எண்ணியதால், தைரியமாகச் செயல்படுகிறவர்களின்மேல் அவளுக்கு ஆத்திரமும் பொறாமையும் எழுந்தன.

    தன்னைப்போல் இல்லாத பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டால், திருப்தி எழுந்துவிடுமா!

    நம்மைப் பார்த்துப் ஒருவர் பொறாமைப்பட்டால் முதலில் வருத்தப்படுகிறோம். எரிச்சலும் எழுகிறது.

    மாறாக, பெருமைப்பட வேண்டிய சமாசாரம் இது. நாம் அவரைவிடச் சிறந்தவர் என்று கருதுவதால்தானே அந்த உணர்ச்சிக்கு ஆளாகிறார்! இயற்கையிலேயே எழும் இந்த உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, அதனால் ஆட்டுவிக்கப்படுவது ஒருவரைக் கீழேதான் இழுக்கும். தம் பொறாமைக்கு இலக்கானவர்கள்போல் தம்மையும் மாற்றிக்கொள்ளலாமே!

    என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசை எவருக்கும் இருக்கும். ஆனால், `நம்மால் முடியுமோ, என்னவோ!’ என்ற தயக்கம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கவே தடங்கலாகிவிடுகிறது. பயத்தை வெற்றிகண்டால் சாதிக்கலாம்.

    நாம் பிறரைவிட எல்லாவற்றிலும் சிறந்தோங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நடக்காத காரியம். அப்போது எழும் பொறாமையைத் தவிர்க்க இயலாது. நம்மால் இயன்றவரை முயல்கிறோம் என்ற திருப்தி போதுமே!

    பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்று பழிப்பது இதுபோல்தான். `ஏதோ, இந்தவரை எழுதுகிறானே!’ என்று மகிழ்ந்து பாராட்டுவது நன்மை தரும்.

    அவன் அப்படியேவா இருக்கப் போகிறான்? வயது கூடினால், மாறமாட்டானா?

    கையெழுத்து மோசமாக இருந்தால்தான் என்ன? இப்போதுதான் கணினி வந்துவிட்டதே!

    கல்வி வேறு, வாழ்க்கை வேறு.

    “பள்ளியில் படிக்கும்போது நான் மிகச் சிறந்த மதிப்பெண்கள் வாங்கினேன். ஏனோ வாழ்க்கையில் பிரகாசிக்க முடியவில்லை!” என்று புலம்புகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    கதை

    படிப்பிலும், பேச்சுப் போட்டிகளிலும் பரிசு பெற்றதில் ஆசிரியர்களுக்குச் செல்லப்பிள்ளை ஆனவன் குமார்.

    `பள்ளிக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தருகிறான்!’ என்று அந்த வயதில் எல்லாருமே கொண்டாடினார்கள்.

    தனக்கு நிகர் யாருமில்லை என்ற மதர்ப்புடன் வளர்ந்தான் குமார். வெளியுலகத்திலும் எல்லாரும் அப்படியே தன்னை ஓர் அபூர்வப் பிறவியாகக் கருதமாட்டார்கள் என்று அந்த வயதில் புரியவில்லை. உண்மை புலப்பட்டபோது அச்சம்தான் விளைந்தது. `யாருக்குமே தான் ஒரு பொருட்டாக இல்லையே!’ என்ற ஏக்கம் பிறந்தது.

    தம் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாது, தகுதியில்லாத பிறருக்காக அதைச் செலவிடுவதில் திருப்தி காண முயன்றான்.

    நண்பர்களின் குடும்பத்திற்காகத் தம் நேரத்தைச் செலவிட்டுவிட்டு, `வெளியில் எனக்கு எவ்வளவு நல்ல பெயர் தெரியுமா? வீட்டில்தான் என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை!’ என்று குறைப்படும் ரகம், இம்மாதிரியானவர்கள்.

    இவர்களது உபயோகம் குறைந்ததும், அந்த நண்பர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சொந்தக் குடும்பம் இவர்களைக் கைவிடாது. அப்போது, `உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று முதலிலேயே புரிந்துகொள்ளாது போனேனே!’ என்று மனம் நோகும்.

    எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. தொலைந்தபின்தான் புரிகிறது — நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல்.

    பிறர் பாராட்டவேண்டும்

    சிலர் வெகு பிரயாசைப்பட்டு, எல்லாருக்கும் நல்லவராக நடிப்பார்கள். அப்போது கிடைக்கும் புகழ்ச்சி இவர்களுக்கு வேண்டியிருக்கிறது. அதற்காக அதிக சக்தியை விரயம் செய்ய வேண்டிவரலாம். சந்திக்கும் எல்லாருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும் என்று நடப்பது (நடிப்பது?) கடினம்.

    இப்படி நடித்துக்கொண்டே இருந்தால், தனக்கான அடையாளமே புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே!

    நடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு, இன்னும் திண்டாட்டம்தான்.

    கதை

    Manmarziyaan என்ற இந்திப் படத்தில் எதற்கும் அடங்காத முரட்டுப் பெண்ணாக வருகிறார் கதாநாயகி டாப்ஸி பன்னு (Taapsee Pannu).

    படம் முடிந்த பிறகும் அதன் பாதிப்பு விலகவில்லையாம். அவரைக் கேட்காது ஒருவர் படம் பிடித்தபோது, கடுமையாக நடந்துகொண்டதாகத் தகவல்.

    `நான் சாதாரணமாக அப்படி நடந்துகொள்ள மாட்டேன். அந்தப் பாத்திரத்தை என் மனத்திலிருந்து அடியோடு அகற்ற இன்னும் முடியவில்லை,’ என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

    வேறு ஒரு நடிகர் தம் பாத்திரத்திற்கான குணாதிசயத்தை உள்வாங்கிக்கொள்ள முயன்றார். எப்படி தெரியுமா? ஒரு மாதம் தனியாக ஓர் அறையில் தங்கியிருந்தார், எவருடைய தொடர்புமின்றி!

    படம் முடிந்தது. ஆனால், இவரோ அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார். தன் பழைய நிலைக்கு மீண்டுவர, உளவியல் சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்தது. (தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது).

    `ரொம்ப முக்கியம்!’ என்று முகத்தைச் சுளிக்காதீர்கள். வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கிறது. புரிந்துகொள்ள முயல்வோமே!

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3

    -நிர்மலா ராகவன் 

    UBUD

    பாலியில் UBUD என்று ஒரு மலைப்பாங்கான இடம். கலைகளுக்கும், சத்துடன் சுவையும் நிறைந்த உணவு வகைகளுக்கும் பெயர்போனது. குறுகிய தெருக்களின் இருபுறமும் அடர்ந்த மரங்கள். வளைந்து செல்லும் மலைப்பாதைக்கு மேல் தனித்த குடில்கள். அமைதியை நாடுபவர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்த தங்குகிறார்கள். ஓர் இரவு தங்க சுமார் 2,000 ரூபாய்.

    ஒவ்வொரு சிறு வீட்டைச் சுற்றிலும் அடர்ந்த செடிகொடிகள். ஒரு பக்கத்தில் குளம் வேறு! ஆனால், நிறைய கொசுக்கள் கிடையாது –பூச்சிகளை விரட்டியடிக்கும் மரங்கள் இருப்பதால்.

    பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் மிகக் குறைந்த ஆடையணிந்து, அதனருகே போடப்பட்டிருந்த நீண்ட நாற்காலியில் மடித்த காலைப் பரத்திப் படுத்தபடி புத்தகம் படிக்கிறார்கள்.

    நாம் fair and lovely-யை நாட, அவர்கள் நமது பழுப்பு நிறத்தை அடைய படாதபாடு படுகிறார்கள்! நம் தன்னம்பிக்கை வளர இவர்களைப் பார்த்தால் போதும். 

    நிசப்தமான, குறுகலான தெருக்கள்

    உள்நாட்டவர்களின் ஸ்கூட்டர் மற்றும் வாடகைக்கார்கள் விரையும் குறுகிய தெருக்களில் ஒருவர்கூட ஹார்னை ஒலித்து அமைதியைக் கெடுப்பதில்லை என்பது என்னை மிக ஆச்சரியப்படுத்திய சமாசாரம்.

    எந்த நிலையிலும், பொறுமையைக் கைவிடாது நடந்துகொள்ள இவர்களால் எப்படி முடிகிறது?

    “எல்லாரும் இவ்வளவு சாத்வீகமாக இருக்கிறீர்களே! கணவன் மனைவிக்குள் சண்டையே வராதா?” என்று தேவாவைக் கேட்டேவிட்டேன்.

    அவர் சிரித்தார். “வராமல் என்ன!”

    “விவாகரத்து வரை போகுமா?”

    “அவ்வளவாகக் கிடையாது! அப்படிச் செய்தால், அவர்களுடைய இரு குடும்பத்தினருக்கும் தீராத அவமானம்”.

    விவாகரத்து செய்துகொண்டால், குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்பதும் காரணமாக இருக்கலாம்.

     

    வியாபார நோக்கு கிடையாது

    UBUD-இல் பெரிய கட்டடங்கள் கட்ட அனுமதி கிடையாது. அது கிராமம் அல்ல. இயற்கை எழிலுக்கும் கலை, கலாசாரத்திற்கும் பெயர்போனது. அதைப்போய் நாகரீகமாக மாற்றிக் கெடுப்பானேன்!

    பயணிகளின் வருகை அதிகமாகிவிட்டபோதும், அங்கு வாழ்பவர்கள் போலி மரியாதை காட்டாது, பண்புடன் நடந்துகொள்கிறார்கள்.

    முதல்நாள், செங்குத்தான படிகளில் ஏற முடியாது நான் திணற, என் கையைப் பிடித்து மேலே அழைத்துப் போனாள் ஒரு பெண். அதன்பின், என்னால் குனிய முடியுமோ, முடியாதோ என்று `செருப்பைக் கழற்றுகிறேன்,’ என்று குனிய, `வேண்டாம், வேண்டாம்!’ என்று பதறிப் போனேன்.

    பாலிவாழ் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு கிடையாது. மேலும், எல்லா வேலைகளும் கௌரவமானவையே என்று எண்ணி நடப்பதால், புன்சிரிப்புடன் நம்மை நடத்துகிறார்கள். அவர்களது சிரிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

    `மனிதன்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

    “சொர்க்கம்” என்று பாலியைக் குறிப்பிடுவது சரிதான்.

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 2

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 2

    நிர்மலா ராகவன்

    (முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் – https://www.vallamai.com/?p=93221)

    நாட்டியமும் தியானமும்

    பாலியில் பிரசித்தமானது Barong நாட்டியம். நிகழ்ச்சிக்குமுன் பல மணி நேரம் தியானம் செய்து Trance என்னும் மோன நிலை அடைவதால், எந்தப் பாத்திரமானாலும் தத்ரூபமாக அமைந்துவிடுகிறது.

    இருபது வருடங்களுக்குமுன், அனுமான் வேடம் தரித்த ஒருவர் குரங்காகவே மாறியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். போரில் `இறந்த’ பலர் இருபது நிமிடங்கள் அசையாது, மூச்சுகூட விடாது இருந்ததைப் பார்த்துப் பார்வையாளர்கள் பதறிப் போனோம். KECAK நடனத்தில், குதிரையாக ஆடியவர்கள் வெறுங்காலாலேயே கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தார்கள்!

    இப்போதோ, வெளிநாட்டுப் பயணிகளுக்காக வியாபார நோக்குடன் தினந்தோறும் ஆட நேர்வதால், அவ்வாறு தம்மையே மறக்கும் நிலைக்குப் போவது கிடையாது. கோயில்களில் மட்டுமே பிரமிப்பு ஊட்டும் அவ்வகை நாட்டியத்தைக் காண முடியும்.

    `புரா’ என்னும் கோயிலுக்குள் நுழையுமுன், ஆண், பெண் இருபாலரும் ஸாரோங் அணிந்து, இடுப்பை இறுக்கிச் சுற்றி மூன்று அங்குல அகலமுள்ள ஒரு பட்டியைக் கட்டிக்கொள்ள வேண்டும். பெண்களின் மேல்சட்டை `லேஸ்’ போன்ற மெல்லிய துணியால் ஆனது. மார்க்கச்சு போன்ற, தோள் தெரியும் உள்ளாடை. (முன்பொரு முறை, நான் புடவை அணிந்து கோயிலுக்குப் போனபோது, `ஸாரோங் இண்டியா!’ என்று ஒரு பெண் கூவ, பலர் ஓடி வந்து என்னை வேடிக்கை பார்த்தார்கள்!)

    கோயிலில் விக்கிரகம் கிடையாது. கதவு போல் இருக்கும் இடத்தின்முன் தரையில் அமர்ந்து, ஊதுபத்தியை ஏற்றி, தொன்னையிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்துத் தரையில் போட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள்.

    பூஜை முடிந்ததும், ஈரமான அரிசியை நெற்றியில் பதித்துக்கொள்கிறார்கள். நாட்டியம் ஆடுபவர்களில் பெண்களுடன் ஆண்களும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டிருப்பது போன்று படங்களில் தோன்றுவது இதனால்தான்.

    நாட்டிய நாடகத்தின்போது, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களின் காதிலும் frangipani என்ற பூ. வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட மரங்களை எங்கும் காணலாம். இனிய சுகந்தத்தால், இந்த மலர் சோப்பு, முகத்திற்குப் பூசும் க்ரீம் என்று பல்வித வாசனைத் திரவியங்களுக்குப் பயன்படுகிறது.

    இயற்கையே கடவுள்

    மனிதன், தாவர வகைகள், விலங்குகள் ஆகிய எல்லா உயிர்களிலும் ஆத்மா இருக்கிறது; அதனால் நாம் அனைவரும் தொடர்பு உடையவர்கள் என்ற நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தீவினர்.

    கடவுள் இயற்கையைப் படைக்கவில்லை, ஏனெனில், இயற்கைதான் கடவுள் என்று நம்புகிறார்கள். அதனால், தாவரங்கள் செழித்து வளர்வதை எங்கும் காணலாம். அவற்றை அழித்தால், ஒரு விதத்தில் நம்மையே அழித்துக்கொள்வது போல்தானே!

    குழந்தைகள் நம்மைப் பார்த்துத் தோழமையுடன் சிரிக்கிறார்கள். தெருவில் உலவும் நாய்கள் கொழுகொழுவென்று இருக்கின்றன. குரைக்காமல், நட்புடன் நம்மை நெருங்குகின்றன.

    “உனக்கு என்னைத் தெரியுமா?” என்று நான் கொஞ்சலாகக் கேட்க, என் அருகில் வந்து படுத்துக்கொண்டது ஒரு குண்டு நாய்.

    நெல் வயல்களில் வாத்துகளைக் காணலாம்.  அவை புழுக்களைக் கொத்தித் தின்கின்றன. அதற்காக வாத்துகளின் சொந்தக்காரர் காசு கொடுக்கிறார். மண்ணைப் புரட்டிப் போட்ட மாதிரியும் ஆயிற்று. வயல் சொந்தக்காரருக்கு இரட்டிப்பு லாபம்!

    மொழிகள்

    பள்ளிக்கூடங்களில், இந்தோனீசிய மொழியுடன், பாலியும் ஆங்கிலமும் போதிக்கப்படுகின்றன. சுற்றுலா சம்பந்தமான தொழில்களைத் தேர்ந்தெடுப்போர் மாண்டரின், ரஷ்ய மொழி, ஜெர்மன் என்று பலவற்றைக் கற்க வேண்டும்.

    எல்லாரும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். மலாய் மொழி இன்னும் எளிதாகப் புரிகிறது. நாம் மலாயில் பேசினால் மகிழ்ந்துவிடுகிறார்கள். மரியாதையாக, “beesa” என்றுதான் ஒவ்வொரு கோரிக்கையையும் முன்வைக்க வேண்டும்.

    அதாவது, வாடகைக்காரில் ஏறுமுன், `உங்களால் முடிந்தால்,’ என்ற பொருள்பட அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். சாப்பாட்டுக் கடைகளில் நமக்குத் தேவையானதைப் பட்டியல் போடுமுன், “beesa” என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமாம்.

    நான் பேசியது கடுமையாக இருந்திருக்கும்.

    “உங்களை டீச்சர் என்று அழைக்கலாமா? என்ன உத்தியோகம் பார்த்தீர்கள்?” என்று கேட்டுவிட்டு, “அதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே! டீச்சர்தான்!” என்றதும், “நினைத்தேன்!” என்றார்கள்!

    எரிமலை

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொங்கி எழுந்த எரிமலைக் குழம்பு, பாலி முழுவதும் இறுகிக் கிடக்கின்றது. (இப்போதும் ஆகோங் (Agung) என்னும் எரிமலை உண்டு).

    எரிமலைக் குழம்பு, வழவழப்பான கற்களாக ஆகிவிட்டது – ஆறுகளின் உபயத்தால். தோட்டத்தில் மட்டுமின்றி, நடைபாதையில், கழிப்பறைக்குள் என்று எல்லா இடங்களிலும் குண்டு கத்தரிக்காய் அளவில் இந்தக் கற்களைக் காணலாம். (இவற்றின்மேல் நடந்தால், காலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும்).

    எரிமலைக் குழம்பே எல்லாத் தரையிலும் படிந்து இருப்பதால், கருப்பு அரிசி என்று ஒரு வகை இங்கே கிடைக்கிறது. நல்ல ருசி. ஆனால், பழங்களில் இனிப்பு கிடையாது.

    கடல் நீலமல்ல

    பாலியின் வடக்கே கடல் நீர், அதை ஒட்டிய மணல் எல்லாமே கருப்பு. அதிகாலையில் படகில் பாதிக் கடல் போனால், டால்ஃபின்கள் நீரிலிருந்து மேலே குதித்து, சுழன்று விளையாடுவதைக் கண்குளிரப் பார்க்கலாம்.

    உணவு

    இருபது ஆண்டுகளுக்குமுன், ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் சிறிய நிலப்பரப்பில் அரிசி பயிரிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டும். வீட்டிலேயே இருக்கும் பெண்களும் முதியவர்களும் அந்த நெல்வயலைப் பராமரிப்பார்கள். விளைச்சல் போதாது, ராத்திரி ஒரு வேளை மட்டும்தான் அரிசி உணவு என்ற நிலை. இவர்கள் மாட்டிறைச்சி உண்பதால், பால் குடிக்கும் வழக்கம் கிடையாது. காலையில், பாலோ, சர்க்கரையோ சேர்க்காத காப்பி.

    பாலியில் இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, மனம் புழுங்கும் குணமும் இவர்களுக்குக் கிடையாது. கடமைதான் இவர்களுக்கு முக்கியம். “குடும்பத்திற்கு, ஒரே தெருவில் குடியிருப்பவர்களுக்கு, சொந்த ஊருக்கு, நாட்டுக்கு,” என்று அடுக்கினார் ஒருவர். அவர்கள் வெறும் பேச்சுடன் நிறுத்திக்கொள்வதில்லை.

    முட்டை, வெங்காயம், பூண்டு இவையெல்லாம் சேர்க்காத உணவு வகைகளை மட்டுமே விற்கும் vegan சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன.

    பஞ்சாபி கடைகளில் சப்பாத்தி, `நான்’ போன்றவை கிடைக்கின்றன. ஒரு கடை வாசலில் அவற்றைத் தயாரிக்கும் இளைஞரின் புகைப்படத்தைப் பெருமையுடன் வெளியிட்டிருக்கிறார்கள்!

    அழகுக்கு அழகு செய்ய

    வலியே தெரியாது செய்யப்படும் பாலி மஸாஜ் பிரசித்தமானது. ஊர் சுற்றிய களைப்பு நீங்க, பார்க்கும் இடமெல்லாம் உடம்புப்பிடி நிலையங்கள். கை, கால், உடல், முகம் என்று விதவிதமான மஸாஜ். (விமான தளத்தில் எல்லாப் பெண்களின் நகங்களும், புருவங்களும் மிக அழகாக இருப்பதை ரசித்துப் பார்த்தேன்).

    (தொடரும்…..

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

    -நிர்மலா ராகவன் 

    “நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போயிருப்பீர்கள்!” அமெரிக்காவில் பலரும் என்னை இதையே கேள்வியாகக் கேட்டார்கள்.

    `என்னைப் பார்த்தால் செத்துப் பிழைத்தவள் மாதிரியா இருக்கிறது!’ என்று விழித்துப் போனேன்.

    தென்கிழக்காசிய நாடாகிய மலேசியாவிலிருந்து வந்தவள் என்பதால்தான் அக்கேள்வி பிறந்தது என்று பின்புதான் புரிந்தது. இரு நாடுகளுக்குமிடையே விமானப் பயணம் மூன்று மணிக்கும் குறைவுதான்.

    அவர்களைப் பொறுத்தவரை, இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவுதான் சொர்க்கம்.

    “பாலியில் அப்படி என்ன இருக்கிறது?” என்று அவநம்பிக்கையுடன் என்னைக் கேட்டார் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவர்.

    இயற்கை எழிலும், கலை நயமும் ஒருபுறமிருக்க, வேறு ஏதோ யுகத்திலிருந்து வந்தவர்கள் போன்று, நம்பவே முடியாத அளவுக்கு மனிதாபிமானம் நிறைந்த மனிதர்கள்தாம் இதற்குக் காரணம் என்று ஓரிரு நாட்களிலேயே தோன்றிப் போகிறது.

    மலேசியாவில் பணிபுரியும் இந்தோனீசியர்களிடம், `நான் இந்தோனீசியா போயிருக்கிறேன்’, என்றால் ஜாவா அல்லது சுமத்ராவைத்தான் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், இந்த இரண்டு தீவுகளிலும் இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாலியின் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் மட்டும் சிறுபான்மை முஸ்லிம்கள்.

    “நாங்கள் இந்துக்கள். ஆனால், எங்கள் இந்து மதம் வித்தியாசமானது!” என்கிறார் வழிகாட்டி தேவா.

    130 X 90 கிலோமீட்டர் பரப்புகொண்ட சிறிய தீவு பாலி. அதனுள் 300 கிராமங்கள்.

    ஒரு கிராமத்திலுள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்கிறார்கள். தச்சு வேலை, சித்திரம் வரைவது, சிமெண்டுப் பலகைகளில் பூ வேலைப்பாடு (சுவரிலோ, தரையிலோ பதிப்பது), பெரிய காத்தாடிகள் செய்வது, வெள்ளி நகைகள் செய்வது என்று பல. கைத்திறன் கொண்டு செய்வது.

    மரத்தாலான சிலைகள் செய்யுமிடத்திற்குப் போனேன். `இச்சிலைகளுக்குப் பயன்படுவது இந்தச் செம்பருத்தி மரம்’ என்று அங்கே இருந்த ஒன்றைக் காட்டினார்கள். மரத்தின் இலை மெல்லியதாக, கிட்டத்தட்ட செம்பருத்தி போல்தான் இருந்தது.

    மிக அழகான வேலைப்பாட்டுடன், ஒன்றரையடி உயரமுள்ள சரஸ்வதி சிலை ஒன்றை ஆசையுடன் கையில் எடுத்தேன். அதன் விலையைக் கேட்டதும் மூச்சு நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. 3,000 அமெரிக்க டாலர்கள்!

    மன்னிப்பு கேட்கும் தோரணையில், அசடு வழியச் சிரித்தேன். பலரும் அப்படித்தான் செய்திருப்பார்கள் போலும்! கடை விற்பனையாளரான பெண் என் சங்கடம் புரிந்து, தலையாட்டினாள்.

    இப்படிப்பட்ட ஒன்றைப் படைக்க, அனுபவமும் தேர்ச்சியும் மிக்க ஸ்தபதி ஒருவர் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாத காலம் தியானம் செய்வாராம். அப்போது, `இந்த மரத்தால் எந்த கடவுளின் உருவை நான் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுக்கொள்வார். இடைவெளி விட்டு விட்டு இப்படி ஒரு சிலையைச் செய்ய மூன்று மாத காலம் ஆகிறதாம்.

    மரத்தின்மேல் அனுமானமாக சித்திரம் வரைந்து கொள்வதெல்லாம் கிடையாது. ஒருவித மோன நிலையில் கை தன்பாட்டில் வேலை செய்யும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தால்கூட அதற்குப்பின் மரம் பிரயோசனப்படாது.

    எங்கும் தெய்வீக மணம்

    எல்லா முச்சந்திகளிலும் இருபதடி உயரச் சிலைகள். சரஸ்வதி, ராமர், அவர் எதிரே அனுமன் — இப்படி. பணக்கார வீடுகளின் வெளிச்சுவர் பண்டைக் கால அரண்மனையில் இருப்பதுபோல் கலைநயத்துடன் மிளிர்கின்றன.

    “ஒவ்வொறு கிராமத்திலும் ஒரு `சிறிய’ கோயில் இருக்கிறது,” என்று தேவா தெரிவிக்க, `இதையா சிறியது என்கிறார்!’ என்று எனக்கு ஆச்சரியம் எழும் வகையில் அமைந்திருந்தன அவை.

    பனை ஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் பற்பல வண்ணங்களைக் கொண்ட மலர்கள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை எங்கும் காணலாம். பேரங்காடி கல்லாவின்மேல், ஹோட்டலில் வழி நெடுக, மற்றும் தரையில், ஒவ்வோர் அறைக்கும் முன்னால் என்று காணும் இடமெல்லாம் பூக்கள் இறைந்து கிடக்கின்றன. பெரும்பாலும், காசித்தும்பை பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் காலையில் செய்யும் பூஜைக்கெனவே பெரிய நிலப்பரப்புகளில் இதனைப் பயிரிடுகிறார்கள்.

    பிரம்மாவிற்குச் சிவப்பு வண்ண மலர்கள், சிவனுக்கு மஞ்சள் அல்லது வெள்ளை, விஷ்ணுவிற்கு நீலம் என்ற முறை இருக்கிறது. அவற்றைக் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டுமாம்.

    கலைகளில் மிகுந்த ஈடுபாடு இருப்பதால் சரஸ்வதியைக் கொண்டாடுகிறார்கள். அண்மையில்தான் `கணேஷா’ என்று பிள்ளையார் சிலைகளைச் செய்கிறார்களாம். (அங்கேயே வசிக்கும் வேற்று நாட்டுக்காரரின் கணிப்பு).

    `இந்தியாவில் பிரம்மாவுக்கு நிறைய கோயில்கள் கிடையாதாமே! ஏன்?’ என்று அதிசயப்பட்டார் தேவா.

    -தொடரும். 

    Share
  • ஈகோவும் அகங்காரமும்

    ஈகோவும் அகங்காரமும்

    -நிர்மலா ராகவன் 

    நலம்… நலமறிய ஆவல் (165) 

    “எனக்கு ஈகோ (ego) இருக்கு!” பெண்பார்க்க வந்தவரிடம் நடிகை ரேவதி கூறியது – அவர் தன்னை மறுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில். மௌன ராகம் படத்தில். ஆனால், அது தகாத குணமல்ல.

    பசியோ, தூக்கமோ, ஈரமோ, தனக்குத் தேவையானது கிடைக்கும்வரை குழந்தை ஓயாமல் அழுவது ஈகோவால்தான். பிறந்தவுடனேயே இயற்கையாக அமைந்திருக்கும் தன்மை இது.

    (அழுகைதான் குழந்தையின் மொழி. கவனித்துக் கேட்டால், ஒவ்வொரு தேவைக்கும் வித்தியாசமான அழுகை ஒலிப்பது புரியும்).

    சற்றே வளர்ந்தபின், பிறருடன் எப்படிப் பேசிப் பழக வேண்டும் என்று தீர்மானிக்கிறது ஈகோ. வெளியுலகத்தின் தொடர்பை மனத்தில் கொண்டு, தகுந்த முடிவுகள் எடுக்க வழிசெய்ய இன்றியமையாத குணம் இது.

    இப்போதெல்லாம் இதை ஏன் தகாத குணம் என்று பழிக்கிறோம்?

    முறைப்படி நடந்து, தனக்கு வேண்டியது கிட்டாவிட்டால், `பிறரது உணர்ச்சிகளுக்கு எதற்காக மதிப்புக் கொடுப்பது?’ என்று தோன்றிப் போக, எப்படியாவது நினைத்ததை அடைய முனையும்போது ஈகோ பிரச்னைக்கு உரியதாக ஆகிவிடுகிறது. அந்த நிலையில் அறிவு மங்கிவிடுகிறது.

    “அறிவுக்கு நேர் எதிரான விகிதாசாரம் (inversely proportional) கொண்டது ஈகோ!” (ஐன்ஸ்டீன்)

    இதனால்தான் பிறர் செய்வது பொறுக்காவிட்டால், அது தவறாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிப் போக, தண்டனை கொடுக்கிறோம்.

    கதை

    ஸலீனா எங்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களின் பொதுவறையில் உட்கார்ந்திருந்தாள். அவளருகே கட்டொழுங்கு ஆசிரியையான இஸ்னாயானி நின்றிருந்தாள்.

    ஸலீனாவின் குற்றம்: காதில் இரு துளைகள்!

    “நம் மதம் இதை அனுமதிப்பதில்லை!” என்று இஸ்னாயானி கண்டிப்புடன் கூறியது எல்லாருக்கும் கேட்டது.

    `ஏதோ சுவாரசியமான விஷயமாக இருக்கும் போலிருக்கிறதே!’ என்று பலரும் தத்தம் வேலையை விட்டுவிட்டு, அந்த இருவரையும் சூழ்ந்துகொண்டார்கள்.

    பதிலுக்கு, “அம்மா ஒன்றும் தடை சொல்லவில்லையே!” என்று துடுக்காகக் கேட்டாள் அப்பெண்.

    அவ்வளவுதான்! மற்றவர்களும் வாய்க்கு வந்ததைக் கூறி, ஸலீனா செய்தது எவ்வளவு பெரிய பாவ காரியம் என்பதுபோல் பேச, அதற்கு மேலும் பொறுக்க முடியாத அப்பெண் கதறி அழ ஆரம்பித்தாள்.

    “ஐயோ பாவம்!” என்றது ஒரு குரல்!

    தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அப்பெண் நடந்திருக்கிறாள். பதின்ம வயதில், எல்லாப் பெண்களுமே தம் தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

    அதை மறந்து, `இவள் நம் பேச்சை மீறுவதா!’ என்று சம்பந்தமே இல்லாத மற்ற ஆசிரியைகளின் ஈகோ தூண்டிவிட, அவளை அழவிட்டார்கள்.

    இந்த ஈகோதான் `நான்’ என்ற அகங்காரம். அது பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை.

    “செய்வது தவறு என்று தெரிந்தும், அது சரிதான் என்று சாதிக்கிறார்களே, சில ஆசிரியைகள்! ஏன் அப்படி?” பிறிதொரு சந்தர்ப்பத்தில் கைரி என்ற மாணவன் என் மேசையருகே வந்து கேட்டான். (என் வகுப்பில்தான் எது வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் இருந்ததே!)

    “இவர்களை power crazy என்போம்,” என்றேன், ஒரு சிறு சிரிப்புடன்.

    புரிந்ததுபோல், கைரி தலையாட்டினான். “இந்தப் பள்ளியில் நிறைய power crazy இருக்கிறார்கள்!”

    என் சிரிப்பு விரிந்தது.

    அப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் பிறர் தம்மைக் குறை கூறிவிடக்கூடாது என்ற பதைப்பு எழும். அதனால் தாம் முந்திக்கொள்கிறார்கள்.

    நாம் சொல்வதையோ, செய்யும் காரியத்தையோ பிறர் `தவறு’ என்று பழித்தால், அதிலுள்ள உண்மையை ஆராய்வது அறிவுடைமை. `இன்னும் சிறக்க வேண்டும்,’ என்ற எண்ணம் இல்லாது ஆத்திரம் அடைந்தால், பிரச்னை நம்மிடம்தான்.

    சிலர் ஏன் எப்போதும் நம் குறையையே பெரிதுபடுத்தி, நாம் கேளாமலேயே அறிவுரை கூறுகிறார்கள் என்று அமைதியாக யோசித்தால், அநேகமாக, அது பொறாமையின் விளைவாகத்தான் இருக்கும் என்பது புலனாகும்.

    இவர்கள் பேச்சை அலட்சியம் செய்தால் பிழைக்கலாம். இல்லையேல், நம் நிம்மதிதான் கெடும்.

    இவர்களுக்கு நம் நலன் முக்கியமல்ல. நாம் எதிலும் அவர்களை மிஞ்சிவிடக்  கூடாது என்பதில்தான் குறி.

    ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம் ஆட்டங்காண, பிறர் ஏதாவது செய்தாலோ, சொன்னாலோ, ஈகோ தலைதூக்குகிறது. விளைவு: கோபம், வாக்குவாதம், அல்லது பாராமுகம்.

    கதை 1

    “எனக்கு எவ்வளவு காதலிகள் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று மணமான ஒருவன் பெருமை பேசுவான், தான் கவர விரும்பும் பெண்களிடம்.

    பணத்தைக் கொடுத்தாவது பெண்களை நாடியவனுக்கு தன்னிடம் உள்ள ஏதோ ஒன்றைப் பார்த்துத்தான் எல்லாப் பெண்களும் மயங்குகிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எழுந்தது.

    அதனால், அவனை ஒரு பெண் நிராகரித்தபோது, அடக்கமுடியாத ஆத்திரம் எழுந்தது. அவளுக்கு நிறைய தொல்லை கொடுத்தான்.

    அவனுக்குச் சரி, தவறு எல்லாம் ஒரு பொருட்டல்ல. தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற உந்துதலே அவனை ஆட்டிவைத்தது.

    இவனைப் போன்றவர்கள் ஏன் திருமணம் செய்துகொண்டு, அந்த அபாக்கியவதியான மனைவியையும் படுத்த வேண்டும்? ஈகோ அவனுடைய வியாதி. ஆனால், பாதிக்கப்பட்டவள் அவன் மனைவி.

    கதை 2

    புதிய தம்பதிகள் அவர்கள். எல்லாருக்கும் நடப்பதுபோல், அவர்களுக்கு இடையேயும் பூசல் வந்தது.

    அவள் குறை கூற, அவன் கத்த, நிலைமை மோசமாகியது. ஒரு வாரம் இருவருக்கும் மௌன விரதம்!

    அடுத்த முறை, அவனிடம் ஏதோ குறை கண்டு, அவள் வேறொரு சண்டையை ஆரம்பிக்க, அவன் யோசிக்க ஆரம்பித்தான். இனிமையாகக் கழியவேண்டிய பொழுதுகளை இறுக்கமான மௌனத்தில் வீணாக்க வேண்டுமா?

    தான் தவறு செய்யவில்லை, தவறு அவளுடையதுதான் என்று மீண்டும் ஆரம்பித்தால், அது தன்னையே உயர்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடாதா! தான் உயர்வு என்று எதற்காகக் காட்டிக்கொள்வது!

    “ஸாரி,” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தான்.

    இவன் தோற்கவில்லை. ஈகோவிற்கு அதிக மதிப்பு கொடுத்து நடந்தால் பிறர் நம்மிடமிருந்து விலகுவர் என்று புரிந்த அறிவாளி. இவனைப் போன்றவர்களுக்கு உறவுகள் முக்கியம். ஈகோ பெரிதில்லை.

    புகழை எதிர்பார்ப்பதும் ஈகோவால்தான்.

    “நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்! உனக்கு நன்றியே இல்லை!” என்று தன் கணவர் பழித்ததாக ஒரு மாது என்னிடம் வருத்தமாகக் கூறினாள். அவளுக்கு அறுபது வயது.

    அவள் கடமையை அவள் சரிவரச் செய்துகொண்டிருந்தாள்.

    அவரை எதிர்த்து வாயாடவில்லை. மிகவும் அடங்கிப் போனாள், `மரியாதை’ என்று.

    `நன்றி’ என்றால், அவர் என்ன எதிர்பார்த்தார்?

    `உங்களைப்போல் உண்டா!’ என்ற புகழ்ச்சியை எதிர்பார்த்துச் செய்தால் இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி கிட்டாது.

    குழுவில் ஈகோ

    ஒரு குழுவில் இணைந்து செயல்படுகையில், யாராவது ஒருவரின் ஈகோ தலைதூக்கினாலும், எடுத்த காரியம் வெற்றி அடையாது.

    தன்னையொத்த பிறரிடம், `இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று ஓயாமல் விரட்டினால், பாதிக்கப்பட்டவர்கள் மனம் தளர்ந்துவிடுவார்கள். அடுத்த முறை, அவருடன் சேரவே அச்சம் பிறந்துவிடும்.

    ஈகோவால் வருத்தம்

    காதலர்களோ, தம்பதிகளோ பிரிவது இந்த ஈகோ தொல்லையால்தான். `நான் செய்வதுதான் சரி. நீதான் விட்டுக் கொடேன்!’ என்பதுபோல் இருவரும் நடந்தால், எந்த பிரச்னைக்கும் முடிவே கிடையாது.

    பிரிந்த பின்னர் பலரும் துயரத்திலிருந்து மீள முடியாது, அதிலேயே நீண்ட காலம் ஆழ்ந்து கிடக்கிறார்களே, ஏன்?

    மனத்துக்குப் பிடித்தவரைப் பிரிந்துவிட்டோமே என்பதாலா?

    அல்லது, ஈகோ தோல்வியுற்றதாலா?

    Share
  • குடும்பம் ஒரு தாம்புக் கயிறு

    குடும்பம் ஒரு தாம்புக் கயிறு

    -நிர்மலா ராகவன், மலேசியா

    நலம்… நலமறிய ஆவல் (164)

    “இன்னுமா இந்தியாவுக்குப் போறீங்க? நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க!” மருத்துவ மனையிலிருந்த அந்த தாதி நான் ஏதோ பெரிய குற்றம் புரிந்துவிட்டதைப் போல் பேசினாள்.

    `பிறந்தகம், புக்ககம் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடு!’ என்றால் எப்படி? கல்யாணமானதும், பெற்றோருடன் மற்ற உறவினர்களையும் ஒதுக்கிவிட வேண்டுமா?

    அப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்!

    கதை

    பணக்காரக் குடும்பத்தின் ஒரே பெண் மாலினி. திருமணத்தின்போதே நிறைய நகை போட்டிருந்தார்கள். தந்தை இறந்ததும், தாய் வீட்டுக்கு வந்து, இருக்கிற மிச்சத்தையும் சுருட்டிப் போனாள்.

    தாயிடமிருந்து சுரண்ட இனி ஒன்றுமில்லை என்று புரிந்ததும், அங்குப் போவதை நிறுத்திவிட்டாள் மாலினி.

    இத்தனைக்கும், சென்னையில் அவர்கள் இருவரின் வீடுகளுக்கும் இடைய இருந்த தொலைவு ஐந்தே கிலோமீட்டர்கள்தாம்!

    யாரால் நன்மை கிட்டுகிறதோ, அவர்களிடம் மட்டும் விசுவாசம் காட்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவள் அவள்.

    சற்றே உயர்ந்த நிலையில் இருக்கும் சிலருக்கு இப்படிப்பட்டவர்களின் மனப்பான்மை புரிவதேயில்லை. தம்மைப் பற்றி மிக உயர்வாக எண்ணி, பிறகு ஏமாற்றம் அடைகிறார்கள்.

    கதை

    அரசியல்வாதி ஒருவர் நடத்திய பத்திரிகையின் ஆசிரியரான சாரங்கன், எங்கே சென்றாலும், அவருடைய நட்பை விரும்புவது போல் பலரும் நடந்துகொண்டனர். அவருக்குத் தன் மகிமையில் பெருமை ஏற்பட்டது.

    `இவரைப் பிடித்தால், பத்திரிகையில் நம் படைப்புகளும் வருமே!’ என்று இரு பெண்மணிகள் அவர் வீட்டுக்கே சென்று கூடை கூடையாகப் பழங்கள் கொண்டு கொடுத்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டு, “ரொம்ப நல்லவங்க!” என்று சிலாகித்தார்.

    அவர்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. விரைவிலேயே, அவர்களின் படைப்புகள் அப்பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தன.

    ஏதோ காரணத்தால் சாரங்கனுக்கு வேலை போயிற்று. ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் வழக்கம்போல் யாருமே சாரங்கனைக் கண்டுகொள்ளவில்லை.  தாமே வலிய, “ஹலோ, ஹலோ!” என்றபடி அவர் அங்குமிங்கும் நடக்க, `கூடை கூடையாக’ப் பழங்கள் கொடுத்தவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

    `இனி இவரால் என்ன உபயோகம்!’ என்ற நினைப்பு எழ, அலட்சியப்படுத்தியிருப்பாள். பிழைக்கத் தெரிந்தவள்!

    பள்ளிக்கூடங்களில் விசுவாசம்

    மாணவர்கள் பிரச்சினைக்கு உரியவர்களாக இருந்தால், ஆசிரியர்கள் இணைவார்கள் என்பது நியதி. ஆசிரியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலோ, தலைமை ஆசிரியர் அவர்களைப் பாடு படுத்துவது எளிது.

    வெகு சில பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களும் ஒழுங்காக, அதிக பிரச்சினைகள் கொடுக்காது இருப்பார்கள், ஆசிரியர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்நிலை ஏற்பட, நல்ல தலைமைத்துவம் அமைய வேண்டும்.

    பள்ளியோ, குடும்பமோ, நாடோ எதுவாகிலும், அது சிறக்க ஒரு தலைவரானவர் தன்னைச் சார்ந்தவர்களைப் பாரபட்சமின்றி நடத்துபவராக இருக்க வேண்டும். இத்தகையவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தன்னைச் சார்ந்தவர்களின் நலனையே பெரிதாகக் கருதிச் செயல்படுவார்.

    ஒன்றாக இணைய வேண்டியவர்கள், தமக்குத் தோன்றியதைச் செய்துகொண்டிருந்தால், ஒற்றுமையோ, நன்மையோ எப்படிக் கிடைக்கும்?

    தேவையானபோது, தனித்து இயங்குவதற்கான துணிச்சலும் அவர்களுக்கு அவசியமாகிறது.

    ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

    என்னிடம் படிக்க வந்தார்கள் பதின்ம வயதுப் பையன் ஒருவனும், அவனுடைய தங்கையும். பையன் பரம சாது. மரியாதையாக நடப்பான். தங்கை சோபனாவோ நேர் எதிரிடை.

    ஒரு முறை, பாடத்தில் நான் ஏதோ கேள்வி கேட்க, சற்றும் யோசியாது, ஒரு பதிலை அளித்தாள் சோபனா.

    “தவறு. நன்றாக யோசித்துச் சொல்,” என்றேன், நல்ல விதமாக.

    அவளிடமிருந்து பதிலே இல்லை. விறைப்பாக உட்கார்ந்திருந்தாள்.

    பல நிமிடங்கள் பொறுத்துவிட்டு, “நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே உன் பதில்?” என, “I gave you an answer!” என்று கத்தினாளே பார்க்க வேண்டும்!

    `மூத்தவர்களிடம் மரியாதையாக இருக்க வேண்டும்!’ என்று போதிக்கும் எனக்குப் பெரும் அதிர்ச்சி.

    வீட்டுக்குப் போய், ஓர் அறையை உள்ளே தாளிட்டுக்கொண்ட சோபனா, `அவள் என்னைக் கண்டபடி திட்டுகிறாள். இனி நான் அங்கு போகமாட்டேன். நீங்கள் சரியென்று சொல்கிறவரை வெளியே வரமாட்டேன்,” என்றாளாம்.

    அவளுடைய தந்தை என்னிடம் வந்து, “நீங்கள் அவளை pig-headed என்று திட்டியது ரொம்ப சரி,” என்றார்.

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றுகூட அப்போது எனக்குத் தெரியாது. தானே அளந்திருக்கிறாள். எப்படியோ, `பிடிவாதம்’ என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் என்று அறிந்தேன்!

    என்னிடம் வருவதற்குமுன் ஒரு பாடத்தில்கூட தேர்ச்சி பெற்றிருக்காத பையன் நான் போதித்த கணக்கு, விஞ்ஞானம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றான். ஆயினும், அவன் `மிக மிக’ச் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கவில்லையே என்று தந்தைக்குக் குறை.

    பெற்றோர் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது, ஓயாது விவாதித்துக்கொண்டே இருந்தால், யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது அவர்கள் வளர்ச்சியைப் பாதித்து, எடுத்த காரியத்திலெல்லாம் பிடிப்பே இல்லாது செய்துவிடும். மகன் பிரகாசிக்காதது ஏனென்று அவருக்குப் புரியவில்லை.

    (நிம்மதியே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்த அந்த இரு குழந்தைகளின் விவாகங்களும் சொற்ப காலத்திலேயே முறிந்து போயிற்று).

    பாரபட்சமான குடும்பம்

    ஒரு குடும்பத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். மற்றவரது கண்ணோட்டத்தைப் புரிந்து, அதைப் பிறருக்கும் விளக்குவது குடும்பத் தலைவியின் பொறுப்பு. அப்போதுதான் பரஸ்பர மரியாதை உண்டாகும்.

    ஒரு மகனை மிக அருமையாக நடத்தி, இன்னொருவனைக் காரணமின்றி தண்டிப்பதையும் காண்கிறோம். சகோதரர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்? வளர்ந்தபின், இருவருமே பெற்றோரிடம்தான் குறை காண்பார்கள்.

    செல்ல மகனாக வளர்ந்தவன் உலகில் எல்லாருமே தன்னைக் கொண்டாடுவார்கள் என்றெண்ணி ஏமாறுகிறான். உலகின் போக்கு புரியாத விதமாகத் தன்னை வளர்த்தவர்களின் மீது வெறுப்புகூட வரும்.

    மற்றவன் பயந்தவனாக வளரலாம். இல்லையேல், அடக்கி வைத்திருந்த திறமையையும் ஆத்திரத்தையும் படிப்பிலும் உத்தியோகத்திலும் காட்டி உயரக்கூடும்.

    இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர் பெற்றோர்தாம். எங்கே தவறிழைத்தோம் என்று புரியாது குழம்புவர்.

    குடும்பம் ஒரு தாம்புக் கயிற்றுக்கு ஒப்பானது. பலகீனமான ஒருவரை (அவருடைய சொந்த நலனைக் காரணம் காட்டி) குடும்பத்தினரிடமிருந்து பிரிப்பது தாம்புக் கயிற்றின் பிரிகளைச் சிறிது சிறிதாகப் பிரித்து, அதை அறுக்க முயல்வதுபோல்தான். வெற்றி கிட்டும்.

    ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்தால் குடும்பத்திலுள்ள எல்லாருமே பலமாக உணர்வார்கள். அவர்களை எளிதில் பிரிப்பது இயலாத காரியம். அதனால், அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவருமே தம் திறமைகளை முழுமையாக வெளிக்காட்டவும் முடியும்.

    Share
  • கலிகாலத்தில் நல்லவர்கள்!

    கலிகாலத்தில் நல்லவர்கள்!

    நிர்மலா ராகவன், மலேசியா

    நலம்…நலமறிய ஆவல் – 163

    மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூறுவது: `இந்தக் கலிகாலத்தில் நல்லவர்கள்தாம் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’

    `இன்னா செய்தார்க்கும்..’ என்று திருவள்ளுவர் எக்காலத்திலோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், இன்று நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்தால், நாம் ஏமாளி என்று நினைத்து இன்னும் எல்லை மீறுகிறார்கள். தேவையற்ற துன்பங்களை அனுபவிப்பதற்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன் என்ற விரக்தி ஏற்பட்டுவிடுகிறது.

    எதிர்ப்பா, மௌனமா?

    `நல்லவனாக இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் அது எப்படி முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு:

    பிறர் நமக்குத் தீமை இழைத்தால் அதை பொறுத்துப்போவானேன்! அப்படிப்பட்டவர்களுக்குப் பயந்து நடந்தால், நமது சக்தி அவர்களுக்குப் போய்விடுகிறது. நாம் எதிர்த்தால் அவர்கள்தாம் சக்தியை இழந்துவிடுகிறார்கள்.

    கோபத்தை மௌனத்தால் வெல்லலாம் என்கிறார்கள். சில சமயங்களில் இம்முறை பலனளிக்கலாம். ஆனால், அவசியம் என்னும்போது கோபத்தை வெளிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

    அளவுக்கு அதிகமாக பொறுமைகாப்போர் நாளடைவில் பலகீனம் அடைந்துவிடுவதுண்டு. இவர்களில் சிலருக்கு எதிலும் பிடிப்பற்றுப் போய்விடக்கூடும்.

    பிறரோ, எதிர்த்துச் சண்டைபோடத் தைரியம் இல்லாது, பின்புறம் போய் முதுகில் குத்தும் முறையைக் கையாள ஆரம்பிக்கிறார்கள்.

    கதை

    புதிய மணப்பெண்ணான பாலம்மா கிராமப்புறத்திலிருந்து வந்தவள். புக்ககத்தினரோ நாகரீகமான நகரைச் சேர்ந்தவர்கள். அவளுக்கு அவர்கள் வாழ்க்கைமுறை புரியவில்லை.

    எனினும், `பெரியவர்கள் சொல்வதையெல்லாம் சற்றும் யோசியாது, அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற முறையில் வளர்க்கப்பட்டிருந்ததால், எல்லாரையும் அனுசரித்துப்போனாள்.

    திருமணமாகிப்போன அவளுடைய நாத்தனார்கள் பிறந்தகத்திற்கு வந்தபோதெல்லாம் பெற்றோரிடம் துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து, தான் எதையோ இழந்துவிட்டதைப்போல ஒரு வெறுமை உண்டாயிற்று.

    பாலம்மாவுக்கும் சிறிது தைரியம் வந்தது. ஆனாலும், `மூத்தவர்களை எதிர்ப்பதா!’ என்று தோன்றிப்போக, அவர்களுக்குப் பின்னால் அவதூறாகப் பேச ஆரம்பித்தாள்.

    குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தது நற்குணமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காது, `அசடு’ என்று அவர்கள் ஓயாது பழித்தபின்னரும் பொறுத்துப்போனது பாலம்மாவின் தவறு.

    தன்னை மாற்றிக்கொள்ள முடியாது, `என் வாழ்க்கையை இப்படியே, பிறர் சொல்வதைக் கேட்டே, கழித்துவிடுகிறேன்!’ என்று கண்டவரிடமெல்லாம் சொல்லிப்பார்த்தாள். அதில் நிறைவில்லை.

    தன்னைப்போல் இல்லாத, பிற கலாசாரங்களிலிருந்து வந்தவர்களுடன் பாலம்மா தன் அவலத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தால், ஒருக்கால் தீர்வு கிடைத்திருக்கும்.

    நல்லவனாக நடி

    `என்னை நல்லவர், திறமைசாலி என்று பிறர் பாராட்ட வேண்டும்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டவர்போல் நடப்பது போலித்தனம். குறுகிய காலத்தில் பதவியும், அத்துடன் பெரும்பொருளையும் அடைய முனைகிறவர்கள் செய்யும் உத்தி இது. நினைத்ததை அடைந்தவுடன் நல்ல குணமும், முன்பு காட்டிய சுறுசுறுப்பும் எங்கோ காணாமல் போய்விடும்!

    பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி நடப்பவர்கள் பெரும்புகழை வாங்கலாம். ஆனால், மனோதிடமோ, நற்பண்போ இல்லாவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் இடர்களைக் கடக்க இயலுமா?

    பிறர் படும் துயர்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் தம்மைப்பற்றி சற்று மறக்கலாம். `எனக்குப் பிறரது நலனில் மிகுந்த அக்கறை!’ என்று காட்டிக்கொள்ளும் முயற்சி இது.

    நாம் பேசுவதால் மட்டும் பிறரது கஷ்டங்கள் குறைந்துவிடுமா? அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசித்து, காரியத்தில் இறங்கினாலாவது பயனுண்டு.

    எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கப்போவதில்லை. நம்மைப் புரிந்துகொள்ளவும் முடியாது. (நமக்கே நம்மைப் புரிகிறதா என்பது வேறு விஷயம்).

    பார்ப்பவர்கள் அனைவரையும் கவரவேண்டும்; குறைந்த பட்சம் அவர்களது ஆமோதிப்பையாவது பெறவேண்டும் என்றெண்ணியே நடந்தால், சக்தி விரயமாக, சலிப்புதான் மிஞ்சும். நம் எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை பிறருக்கு எதற்காக வழங்கவேண்டும்?

    சில சமயம், குடும்பத்தினரே, `இவன் வித்தியாசமாக இருக்கிறானே, கஷ்டப்படப்போகிறானே! என்ற கரிசனத்துடன், ஒருவர் தேர்ந்தெடுத்த பாதையைக் குறைகூறினாலும், `நான் செல்வது நல்வழியில்தான்!’ என்று உறுதியுடன் நடந்தால், அவரையொத்த பிறரது நட்பு கிடைக்கும். அவர்கள் பக்கபலமாக அமைவார்கள்.  

    யார் நல்லவர்கள்?

    பிறரது துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோல் உணர்ந்து, அதைக் குறைக்கத் தம்மால் இயன்றதைச் செய்பவர்கள்.

    நம்மை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால், ஏமாற்றாமல் அதைச் செய்பவர்கள். இத்தகையவர்களுக்குப் பிறரது கண்காணிப்பு அவசியமில்லை.

    கதை

    ஈவலின், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்தவள். கணவரைவிட்டு, பிழைப்பைத் தேடி மலேசியா வந்திருந்தாள். (ஆங்கிலம் தெரிந்திருப்பதால், அந்நாட்டு பணிப்பெண்களுக்குக் கூடுதலான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது).

    கணவன், மனைவி, இரண்டு வயதுக் குழந்தை ஆகியோர் மட்டும் கொண்ட சிறிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்தது. வீட்டு வேலையைச் சுத்தமாகச் செய்ததால், கவலையின்றி, எல்லா பொறுப்புகளையும் அவளிடமே விட்டது குழந்தை ஏமியின் (Aemi) தாய் செய்த தவறு. `என் குழந்தைக்கு என்னைத் தெரியாது! எல்லாவற்றையும் என் `மெய்ட்’ பார்த்துக்கொள்கிறாள். நான் தனியாக வெளிநாட்டுப் பயணம் செய்யச் சௌகரியமாக இருக்கிறது!’ என்று பெருமை பேசும் ரகம் அவள்.

    மூன்று வயதான ஏமி நோஞ்சானாக இருந்தாள். அதிகமாகப் பேசவில்லை. எதிரிலேயே இருந்த விளையாட்டு மைதானத்தில் தினமுமே அவள் சோர்ந்திருப்பதைப் பார்த்த நான், “ஏமி என்ன சாப்பிட்டாள்?” என்று ஒருநாள் விசாரித்தேன்.

    “ஜூஸ்!”

    “எப்போது?” என்று துருவினேன்.

    “அவள் தூங்குவதற்குமுன்”.

    “எப்போது தூங்கினாள்?” என்று கேட்க, ஐந்துமணி நேரத்திற்குமுன் என்று தெரிந்தது.

    சிறு வயதிலிருந்து என்னைத் தினமும் பார்த்திருந்தும், பதினைந்து வயது ஏமி, “யார் இது?” என்று என்னைக் காட்டி என் பேத்தியிடம் விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

    நான்கு வயதுக்குள் மனித மூளையில் 80% வளர்ந்துவிடுகிறது. அது நல்லபடியாக வளர சத்தான ஆகாரமும், தகுந்த ஓய்வும் வேண்டாமா?

    ஏமி ஐந்து மணிநேரம் தூங்கினாள் என்றால், அது களைப்பால். `பசிக்கிறது’ என்று சொல்லி அழக்கூடத் தெரியாது இருந்ததால், ஈவலின் அடித்து, மிரட்டி இருப்பாள் என்று தோன்றியது.

    இந்த இரண்டு பெண்களில் யாரை நோவது?

    யார் நல்லவள், யார் கெட்டவள்?

    தன் கடமையில் சற்றும் பொறுப்பின்றி, `விடுமுறைக்கு என் கணவரைப்போய் பார்த்துவிட்டு வந்தேன். பாஸ் (Boss) எனக்காக விமான டிக்கெட் வாங்கினார்!’ என்று பெருமை பேசிய ஈவலினா, அல்லது குழந்தை எப்படியோ வளர்ந்தால் சரி என்று விட்டேற்றியாக இருந்த அந்தத் தாயா?

    Pic courtesy: https://www.maxpixel.net/Model-Beautiful-Woman-People-Portrait-Fashion-2303383

    Share