Tag: இசைக்கவி ரமணன்

  • ஆச்சரிய மாயை அவள்

     

    இசைக்கவி ரமணன்

    நடமாடும் கவிதையாக – என்னை n31
    நவகாளி மாற்றிவிட்டாள்!
    திடமான சிந்தைதந்தாள் – மனத்
    தீமையைத் திகிரியாய்ச் சுழலவைத்தாள்
    விடமுண்ட சிவனின்பாதி – எங்கள்
    வீரத்தி லேயொளிரும் விரிவான சோதி!
    வடமின்றித் தேரிழுத்தாள் – சுழலும்
    வாஞ்சை வஞ்சமென்னும் கண்களைக் கொண்டாள்!

    சுகமான ராகமுண்டு – சில
    சுமைதீர்ந்து போய்த்தொலைய சொல்மீண்டும் பூத்தசைய!
    அகவானில் மேகமுண்டு – நெஞ்சம்
    அழுவதே தொழிலாக அர்ச்சிப்ப துண்டு
    இகமான பரமுண்டுதான்! – இதில்
    இதமான மரணங்கள் இயல்பான நியாயம்தான்!
    நகுமாறு கண்பனிக்கும்! இஃது
    நாடகம் அல்லவே நவகாளி யம்மே!?

    உடலெங்கும் உயிரானது! இங்கு
    ஒருகோடி வீணைக்கும் உற்ற வழியானது download
    கடலிங்கு கலமானது! அட
    காலம்வெளி என்கின்ற கட்டுக் கழன்றது!
    மடமையச் சம்கலியெலாம் – வெறும்
    மண்மேடு போலச் சரிந்தேகலாச்சு
    தொடவேங்கும் வானமெல்லாம்! அவள்
    தோற்றமே பாடுமென் கானமெல்லாம்!

    புகவிடேன் புன்மைகளை! நான்
    பூசிக்கும் மன்றிலே புல்லரைக் கள்ளரை
    நகவிடேன் பேய்மனத்தை – சற்றும்
    நகரவும் விடேனிந்த நாதவொளி நடனத்தை
    சுகம்கெடேன் சுருதி மாறேன்! – துளி
    சோர்வுறேன் மூர்க்கம் கொள்ளேன்
    அகம்விடா தன்னைநின்றாள்! அவள்
    அனலான பாதங்கள் புனலாய் நடிக்குமே!

    மூச்செலாம் அவள்நாமமே! விழிகள்
    முன்விண்டு பார்ப்பதும் அவள்தோற்றமே!
    பேச்செலாம் அவள்கருணையே! என்
    பிடரிவரை பதறுமவள் பெரும்வெம்மையே!
    காற்சிலம் பெதிரொலிக்கும்! ரத்தக்
    களரியில் மலராகக் கவிதைக ளசையும்!
    ஆச்சரிய மாயை அன்னாய்! வந்து
    அருள்செய்வ தன்றிவே றறியாத பிள்ளாய்!

     

    படத்திற்கு நன்றி:

    http://navarathrii.blogspot.in/

    Share
  • உனக்கே உனக்காக – 3 : திருவரங்கம்

    இசைக்கவி ரமணன்

    காதல் தலைநகரம்

     
    திருவரங்கம்
    பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்
    காதல் தலைநகரம்

    உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள
    தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்
    சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்
    அது
    அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்
    பதறி ஏறினர் முதிய தம்பதியர்

    மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு
    மகாராணியின் பல்லக்கைப்போல

    நடைமேடையெங்கும்
    கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்
    அவர்கள் கைகளில்
    நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்
    நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்
    மல்லிகைச் சரங்களாய்….

    Share
  • வள்ளுவருக்கு வணக்கம்

    இசைக்கவி ரமணன் thiruvalluvar

    கவலைக் கடலைக் கடியும் கனலாய்க்
    கவிதை சொன்னவன் பாரதி
    காதும் காதும் வைத்தாற் போலக்
    காவியம் செய்தவன் கம்பன்
    திவலைக் குள்ளே கடலைக் காட்டிய
    தெய்வப் புலவர் வள்ளுவர்
    திரிகோணத்தின் நடுமுற்றத்தே
    தேனகலாய்த் தமிழ் வளரும்!

    ஒருவா னத்திற் கொருகதிர் போதும்Kanyakumari
    உலகில் உயிர்கள் வாழும்
    ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்
    உயிரே ஒளிமய மாகும்
    திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்
    திசையை விழியறியாது
    வருவதை சென்றதை வந்ததை அவர்போல்
    வகுத்தவரே கிடையாது!

    அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்
    அவர்கரம் பற்றி நடப்போம்
    அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய
    ஒளியில் அனைத்தும் கடப்போம்
    இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச
    இங்கொரு முடிவைப் படைப்போம்
    இன்பம் துன்பம் என்று மயக்கும்
    இடர்களைத் தெருவில் உடைப்போம்!

     

     

     

    Share
  • உனக்கே உனக்காக – 2

    இசைக்கவி ரமணன்

    04_air

    எப்படி?

    எப்படி வந்தாய் உள்ளே?
    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க
    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க
    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி
    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

    எப்படி வந்தாய் உள்ளே?
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே
    போதுமென்று புன்னகைக்கிறாயா?
    கன்னம் மேவும் மின்னலினாலே
    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

    எப்படி? ம்…எப்படி?
    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்
    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு
    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க
    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

    எப்படி? வேறெப்படி? ம்..?
    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்
    காலைப் பிடித்து சாதித்தாயா?
    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?
    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?
    ஊஹூம்…
    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?
    சாவகாசமாக அமர்ந்து
    சாகடித்த கதைகளை வரிவரியாய்
    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?
    ஓ!
    முற்றும் என்னை முடித்துவிட்டு
    முகத்தில் அதென்ன கோணல்?
    ஆ!
    வந்திருக்கிறார்களாம்!
    வரவேற்கவில்லையாமாம்!!

    அழைத்தோ அழைக்காமலோ
    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்
    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்
    அத்துமீறி வந்தவர்களுக்கு
    ஆரத்தி கேட்கிறதா?
    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு
    திவ்யப் பிரபந்தமா?!

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்
    நெஞ்சைப் பிசைகிறது…

    சரி சரி
    அந்த அறையில்
    மேசையில் இருக்கும் என்
    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

    Share
  • வாழ்வாங்கு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    images (3)

    அன்புக் குழந்தைகளே!

    வணக்கம்!

    நன்றியுள்ள தந்தை வணங்குவதும் நன்றுதான்! ram1
    நல்லன்பில் வாழ்த்துவதும் வணங்குவதும் ஒன்றுதான்!
    என்வாழ்வில் பூரணத்தை எய்தியநாள் இன்றுதான்!
    எல்லோர்க்கும் என்போலே பிள்ளைவாய்த்தால் நன்றுதான்!

    ஏழைவீட்டுக் கூரையிலே சுரைக்கொடிதான் அலங்காரம்
    என்றிருந்த நாட்களிலே வந்து பிறந்தீர்! என்னை
    வாழவைக்கும் வளமாக வாசலிலே வரமாக
    வகைவகையாய்க் கண்முன்னே வளர்ந்து சிறந்தீர்!
    மோழையிலே மெளனத்தே மூச்சடக்கும் யோகியினை
    மூட்டைகொஞ்சம் தூக்கவைத்து முன்பு நடந்தீர்! உங்கள்
    வாழ்வையுங்கள் வழியில்சென்று வாழ்ந்துகாட்டுகின்ற போது
    வலியெல்லாம் சர்க்கரையாய் இனிக்க வைக்கிறீர்!

    நமதுகுணம் பிள்ளைகளின் சுமையாகும் என்னும்வார்த்தை
    நல்லவேளை பொய்க்கவைத்தீர் நன்றி நன்றி!!
    உமதுகுணம் மலரின்மணம் ஊறிவரும் நிலவின்நிறம்
    உம்மைப்பார்த்து வியக்கின்றேன் இன்றும் இன்றும்!!

    என்மகவாய் எப்படித்தான் வந்து பிறந்தீர்!ram2
    எந்தக்கடன் தீர்ப்பதற்காய் என்னை அடைந்தீர்!
    பொன்னிலவு பழங்குடிசை விரிசலின் வழியே
    புன்னகைத்தல் போலாநீர் என்னிடம் வந்தீர்?

    உம்மைவாழ்த்தும் முன்பு இந்த உலகை வாழ்த்துவேன்
    உள்ளத்தின் அடியிலிருந் தொன்று சொல்லுவேன்
    எம்மைப்போலப் பிள்ளைச்செல்வம் எவர்க்கும் வாய்க்கவே!
    எங்களைப்போல் எல்லோரும் இனிது வாழ்கவே!

    கண்முன்னே கதிரவனாய் நீங்கள் விரிக
    கமலம்போல் கண்டுகண்டு நாங்கள் மலர்க
    பண்ணிசைந்த கவிதைபோல் மனைவி மக்களும்
    பக்கத்தே அன்புசெய்யப் பரந்து வாழுக!

    ஆயிரமாய்ப் பிறைகளுடன் நூறு வசந்தம்
    ஆரோக்யம் ஆன்மபலம் ஆன்ற சாதனை
    தாயினும்சி றந்ததேசம் வாழ உழைத்து
    தந்தையோரம் கண்பனிக்கத் தழைத்து வாழ்கவே!

    ரமணன்

     

    Share
  • இங்கே எப்படி நீ?

     

    உனக்கே உனக்காக – 1

    tumblr_static_catch-a-dream-spirit-alchemy

    இடிந்து கிடக்கிறது கோயில்
    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே
    காரை பெயர்ந்து, ஒரு
    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்
    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து
    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி
    பொருத்தமற்ற இடத்தில்
    பூவும் அருவருப்பு

    இது மெளனமல்ல
    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்
    வாழ்வில்லாத நிசப்தம்

    அது சந்நிதியல்ல
    அது கடவுள் காலி செய்துவிட்ட,
    ஒரு
    மாறுதலையாவது தரும்
    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்
    ஆம்
    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்
    சித்திரிக்கப்படுகின்றன..

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்
    வெளவால்களின்
    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன
    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.
    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்
    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

    இங்கே..இங்கே!!
    எப்படி நீ? எதற்கு?
    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்
    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்
    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்
    எழுந்தருளியிருக்கிறாய்?.

    சொச்சமாய் இன்னும்
    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்
    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்
    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்
    ஒற்றைத் துளியின் உணர்வு
    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்
    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக
    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!
    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

    இல்லை, ஒருவேளை
    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்
    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்
    காதல் என்னும் பேதைமையைப்
    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?
    யாருக்கு?!

    முடிவில்லாத ஒரு முறிவு
    முயற்சியின்றிக் கிடக்கிறது
    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது
    எதையோ தூண்டுவதற்கு
    முதலொன்று வந்து
    முன்னே நிற்கிறது

    வெற்றிகாண முடியாத வெறுமையும்
    தோல்வியறியாத முழுமையும்
    எதிரெதிரே நிற்கின்றன
    என்ன நடக்கும் என்பது
    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்
    ஏறிவந்தாலாவது தெரியுமா?

     

    Share
  • நானும் நீயும்

    இசைக்கவி ரமணன்

    1303925-bigthumbnail
    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

     

    Share
  • நட்பு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    friendship_poster_by_dineshgreddy-d46z73p

    வாழ்க்கை என்பது உறவுகளின் கூடாரம். பெரும்பாலும் உறவுகளை நாம் அமைப்பதில்லை. உதாரணமாக,

    நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை,
    என் பிள்ளை எனைக்கேட்டுப் பிறந்தானா?

    என்று கண்ணதாசன் பாடுவதுபோல், பெற்றோர்களை நாம் நிச்சயிக்கிறோமா? பிள்ளைகள் என்னும் உறவை நாம் ஏற்பாடு செய்கிறோமா? நாம் பிறக்கும்போதே ஒரு பெரிய குடும்பத்தின் பலவிதமான உறவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

    சரி, திருமணம்? காதல் திருமணம் என்றாலும், பெற்றோர்கள் நிச்சயித்தாலும் கணவன் அல்லது மனைவி என்னும் உறவு ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால், பெற்றோர்களோ, பிள்ளைகளோ, கணவனோ, மனைவியோ அமையவேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். ஏனென்றால், பெரும்பாலும் அந்த உறவுகள் நம் கையில் இல்லை. அவை நம்முடைய சாய்ஸ் இல்லை. எனவே, அவற்றை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.

    ஆனால், நண்பர்கள் என்னும் உறவு அப்படிப்பட்டதல்ல. அது நாம், கவனமாக இருந்து அமைத்துக்கொள்ள வேண்டிய உறவாகும். எனவேதான், திருவள்ளுவர்,

    நாடாது நட்டலிற் கேடில்லை, நட்டபின்
    வீடில்லை நட்பாள்பவர்க்கு

    என்றார். ஆராயாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் தீங்கானது ஒன்றுமில்லை. ஏனென்றால், நட்பு என்பது ஏற்பட்டபின், அதிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார்.

    மற்ற உறவுகளுக்கும் நட்பு என்னும் உறவுக்கும் உள்ள வேறுபாடு, அதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதே.

    ஒற்றுமை என்ன? மற்ற உறவுகளைப் போலவே — அதாவது, பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி – போலவே, நட்பு என்னும் உறவிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார் வள்ளுவர். உறவுக்கு அவர் வழங்கும் மதிப்பு இதிலிருந்து புரிகிறது.

    திருமணம் என்னும் நிகழ்வு அந்நாளில் கைத்தலம் பற்றி அக்கினியை வலம்வருவதோடு முடிந்தது. அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கை தொடங்குகின்றது.

    நட்பும் அப்படித்தான். ராமனும், சுக்ரீவனும் நண்பர்களாகும்போது, அக்கினியை வலம் வந்தார்களாம்! இனி, நமது இன்பதுன்பங்கள் சமமானவை, நாம் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்னும் உறுதியை இருவரும் ஒருமித்து எடுத்துக்கொள்வது, திருமணத்திலும், நட்பிலும் அன்று இருந்தது என்ற சேதி நமக்கு முக்கியமானது.

    சரி, ஒரு நண்பன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், எப்படிப்படவனாகத் தன் நண்பன் இருக்கிறான் என்பதையும் “கண்ணன் என் தோழன்” என்னும் பாட்டில் பாரதியார் நமக்கு நயம்பட விளக்குகிறார். நட்பு என்றால் என்னவென்பதைத் திருவள்ளுவரை விடவும் யாரும் திறம்படச் சொன்னதில்லை. இரண்டையும் சேர்த்துப் பார்ப்போம்:

    உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்tr3045_hand_of_friendship_poster
    ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்
    கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு
    காறி யுமிழ்ந்திடு வான்;

    நண்பன் என்பவன் நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவன் அல்ல. நமக்கு எப்போதும் இதமான வார்த்தைகளையே சொல்லி நம்மை ஆதரிப்பவன் அல்ல. நாம் நம்முடைய மனிதனென்னும் நிலையிலிருந்து தவறிவிடாமலும், நாம் நம் மனித நிலையை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவுபவனே நண்பன்.

    நம்மில் பொய்யை அனுமதிக்காதவன்தான் நம் நண்பன். ஒரு பணக்கார வீட்டு இளைஞனைச் சுற்றி நின்று ஜால்ரா அடிப்பவர்கள் நண்பர்களே அல்ல. இதைத்தான் திருவள்ளுவர்,

    நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தற் பொருட்டு

    என்றார். சும்மா சிரித்துவிட்டுப் போவதல்ல நட்பு. இதை வள்ளுவரும் பாரதியும் எவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள்!

    விசாரணையின்றியே உடனே உதவ வருபவன் நண்பன். ஒரு துன்பம், ஆபத்து என்றால் அடுத்த கணமே ஓடிவந்து அங்கு நிற்பான் நண்பன்.

    ramஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

    இதைவிடச் சிறந்த உவமையைச் சொல்ல முடியுமா? கட்டிய துணி அவிழ்ந்தால், அடுத்த கணமே நமது கை அதைச் சரிசெய்வது போல, நம்முடைய துன்பங்களை நீக்குபவன் நண்பன். அதற்குப் பெயர்தான் நட்பு.

    இதையே பாரதியார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:

    கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
    கேலி பொறுத்திடுவான்; – எனை
    ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
    ஆறுதல் செய்திடு வான்; – என்றன்
    நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
    நான்சொல்லும் முன்னுணர் வான்;

    ”நான் சொல்லும் முன்னுணர்வான்” என்னும் வரியில் அடங்கியுள்ள ஆழத்தைக் கவனியுங்கள். ஒரு நல்ல நண்பனுக்கு விளக்கங்கள் தேவைப்படுவதில்லை. ஒருவன் நல்ல நண்பனாக இல்லாதபோது, எந்த விளக்கத்தாலும் பயனில்லை. இதுதான் நட்பின் அடையாளம். இதுதான் உறவின் நாகரிகம்.

    அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
    அரைநொடிக் குள்வரு வான்;
    மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
    வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

    A friend is one who is available for you the moment you need him! எவ்வளவு அழகு! நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்திற்கோ, திருமணத்திற்கோ, அல்லது வேலைக்குச் சேர்வதற்கோ சிறப்பான உடையணிந்து செல்கிறீர்கள். அப்போது, தெருவில் நடந்து செல்லும்போது மழை பொழிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கணத்தில், உங்கள் வாழ்க்கையிலேயே உங்களுக்கு மிகமிகத் தேவையானதாக நீங்கள் கருதக் கூடிய ஒரே பொருள் குடைதான் அல்லவா!! அது போலத்தான் பசி நேரத்து உணவு. அதுதான் நட்பு. அதைத் தருபவனே நண்பன்.

    சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இரண்டே கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.
    ஒன்று, நண்பர்களாவதற்கு ஒரே மாதிரியான ரசனைகள் தேவையில்லை; ஒரேவிதமான உணர்ச்சிகளே நல்ல நட்புக்கான வாய்ப்பை அமைக்கும் என்கிறார் திருவள்ளுவர்:

    புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்.

    இது மிகவும் ஆழமானதும் நுட்பமானதும் கூட. எனக்கும் உங்களுக்கும் இந்த உணவு பிடிக்கும், அந்த நடிகரைப் பிடிக்கும் என்பது நம்மிடையே நட்பு வளர்வதற்குக் காரணமாகாது. ஆனால், எனக்கும் உங்களுக்கும் இந்த தேசம் பிடிக்கும், மனிதர்களைப் பிடிக்கும், அவர்கள் நல்வாழ்வு பெறுவது பிடிக்கும் என்பன போன்ற உணர்ச்சிகள் நம்மிடையே நல்ல நட்பு அமைவதற்குக் காரணங்களாக அமையும்.

    ஆழமான நட்புக்கு ஆழமான உணர்ச்சிகளே காரணங்களாகின்றன.

    இரண்டாவது. கடவுளை வழிபட ஒன்பது விதமான பக்தியைக் குறிப்பிடுகிறார்கள். அதில் நட்பு மூலம் இறைவனை அடைவதை ஒரு பாதையாகவே வகுத்திருக்கிறார்கள். இந்த நட்புதான் இறைக்காதல், அதாவது, Divine Love, என்னும் தளத்திற்கு உயர்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த நிலையை எய்தியவர்களே. அவர்களுள்ளும் சுந்தரரும், திருமங்கையாழ்வாரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆண்டாளும் மீராவும், இறைவன் மீது கொண்ட நட்பைக் காதலாக்கி, ஒரு புதிய வழியையே படைத்தார்கள்.

    ஏன், இறைவனை நண்பனாகக் கருதுகிறோம் தெரியுமா? நண்பன் என்பவன் நமது மனசாட்சியின் வடிவம்! ஆம், நம்முடைய மனசாட்சிதான் வேட்டியோ, புடவையோ, ஜீன்சோ, லுங்கியோ அணிந்துகொண்டு நம் நண்பனாக எதிரே நிற்கிறது!

    யார், இறைவனுக்குத் தனது மனசாட்சியை ஆசனமாக அமைக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள். அவர்களே அவனை அடைகிறார்கள்.

    எனவேதான், இறைவனிடம் நட்புக்கொள்வது என்னும் ஏற்பாடு அமைந்தது.

    நண்பர்களே! நட்பு என்பது வானம் போல. அது வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை. நட்பு வாழ்க!

    நலமே விளைக நமக்கு!

    Share
  • மறக்க முடியாத மதுரை – 5

    இசைக்கவி ரமணன்

    rama
    மதுரை டவுன் ஹால் ரோட்டைப் பார்க்காதவர்களுக்கு மனித வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ரயில்வே நிலையம் இருக்கும் சாலையில் உள்ள டவுன்ஹால் என்ற அரங்கில் துவங்கி, மீனாட்சி கோவிலின் மேலக்கோபுர வாசல் வரை செல்லும் இந்தச் சந்தை, சாலை என்பது ஆனாலும் ரொம்பத்தான் மிகை என்கிறவர்களுக்குச் சொல்லுவேன். சென்னையில் ‘பிராட்வே’ பார்த்திருக்கிறீர்களா? அறவே குறுகலான சந்துக்கு ஆங்கிலேயன் பெயர் வைத்தான் என்பதால் சரியாகி விடுமா?

    ra

    நான்மாடக் கூடலான மதுரையை மேலிருந்து பார்த்தால் அழகான சதுரம் புலப்படும். மீனாட்சி திருக்கோவில் மையம். உள்ளேயே ஆடிவீதி; பிறகு சித்திரை, மாசி, ஆவணி வீதிகள்; முடிவாய் வெளி வீதி. இவ்வளவுதான் அன்றைய மதுரை. அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்பக் கச்சிதமாக அமைக்கப்பட்ட அழகிய, சிறிய நகரம் மதுரை. ஆடி வீதியிலிருந்து வெளி வீதி வரை உள்ள அமைப்பில், பலப்பல சிறு வீதிகள் சிற்றோடைகளாய் நெளிந்து, திருக்கோவிலையே வந்தடையும். அமைக்கப்பட்ட இந்தப் பகுதியை விரிவுபடுத்த முடியாது. மேலும் நெருக்கலாம். இந்த நெருக்கலின் நிதர்சனமே டவுன் ஹால் ரோடு!

    ra1

    இரண்டு எட்டு எடுத்துவைத்தால் எதிர்ப்புறம் சென்று விடலாம். வைத்துத்தான் பாருங்களேன்! ஓரெட்டு வைக்கும் முன்னேயே, ஓரெட்டுப் பின்னுக்குத் தள்ளும் முரட்டுப் போக்குவரத்து! டவுன் ஹாலிலிருந்து மேலக்கோபுர வாசலை வந்தடையச் சில நிமிடங்களே போதும்! நடந்து பாருங்களேன்! அங்கங்கே அசைய முடியாதபடி நிற்கவைத்துவிடும் கூட்டம். அடிக்கடி, பச்சைக்குதிரை தாண்டுவோமா என்று தோன்றும் நெருக்கடி. அல்வாக் கடை, நேர்த்திக்கடன் ஊர்வலம், ‘வக்கப் பிரி’ சூதாட்டம், திரு சொக்கலிங்கத்தின் ‘விஜயா பதிப்பகம்’, ‘இஞ்சி’ என்ற சரக்கைச் சரளமாக விற்கும் வெற்றிலை பாக்குக் கடைகள், இந்து பத்திரிகையின் ஏஜெண்டான திரு ஜகன்னாதன் அவர்களின் அலுவலகம், அங்கே பலவிதமான சரித்திரத் தகவல்களைத் தேதிவாரியாகச் சொல்லும் சுந்தரராஜன், பழங்களைத் துவம்சம் செய்து கண்ணாடி டம்ளரில் வண்ணமயமாக விற்கப்படும் ‘மிக்சர்,’ விரட்டிக் கொண்டே இருக்கும் போக்குவரத்துக் காவல்துறை, அதற்கு மிரளாமல் விடாப்பிடியாய்க் குறுக்கே வண்டிகளை நிறுத்தும் முரட்டுக் குணம், ஊர்மீது கவிழ்ந்துகொண்டு உறுத்தித் துரத்தும் மதுரையின் பிரத்யேகமான வெய்யில், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புதுச்சேலை, பட்டுவேட்டிச் சட்டை, கனத்த பாவாடை என்று நந்தவனத்து நிலவொளியில் பவனி வருவதுபோல வளைய வரும் மருதைக்காரர்கள், வண்டிவண்டியாய் வந்திறங்கும் வெளியூர்ப் பயணிகள், அவர்களை வாரி விழுங்கக் காத்திருக்கும் ‘கயிடு’கள், அவர்கள் பேசும் மதுரை இந்தி, மதுரை பெங்காலி, மதுரைத் தெலுங்கு, எல்லாவற்றையும் அசையாமல் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் காலத்தின் கோலமான மேலைக் கோபுரம், இதுதான் டவுன்ஹால் ரோடின் சுருக்கம்.

    சொட்டுத் தண்ணீர்கூடக் கலக்காமல், ஆரஞ்சுகளை அப்படியே ‘மிஷினி’ல் பிழிந்து கொடுப்பார் மாணிக்கம். சாட்டையின் கடைசித் துண்டை மீசையாக்கி வைத்திருப்பார்! அந்த மீசையின் துல்லியமான முனைகளுக்குப் பூர்த்தி தரும்படிக் குங்குமப் பொட்டு. அரைக்கைச் சட்டைதான். பாட்டுப் பாடுவதில் உற்சாகம். அவரது பாட்டும், பிழிதலும் பொருத்தமாகவே இருக்கும். எனக்குக் காமாலை கண்டபோது ஒவ்வொரு நாளும் அவரது கடையில்தான் ஆரஞ்சு ரசம் அருந்துவேன். ‘ச்சீனி வேண்டாம், குளுகோசு ச்சேத்துக்குவோம்,’ என்று எனக்காகப் பிறையில் தனியே வைத்திருப்பார். இயல்பாகவே இனிக்கும் பழரசத்தில், க்ளுகோஸ் சேர்த்தே கொடுப்பார். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. காமாலையை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாணிக்கம்தான் எனக்குக் கனிவாகவும், கண்டிப்பாகவும் சொன்னார்: ‘தம்பி! கண்ணுல மஞ்சக் கட்டிருச்சி; வியாதியோடு வீம்பு பிடிக்கிறது வீரமாயிறாது; நமக்கு ஒண்ணுன்னா அது நமக்கு மட்டும் இல்ல தம்பி. நம்மச் சாந்தவங்களுக்குந்தேன்; நீங்க வயித்தியரப் பாக்காம சூஸைக் குடிச்சிட்டுத் திரியறதப் பாத்தாய்ங்கன்னா என்னபாடு படுவாய்ங்களோ! செவத்த வச்சித்தேன் சித்திரம்பாய்ங்க பெரியவய்ங்க. நீங்க மொத ஊரப்பாத்துப் போய்ச்சேருங்க. இனிமே சூஸு கொடுக்கமாட்டேன்; சொல்லிபுட்டேன்,” என்று க்ளுகோஸ் பாக்கெட்டைத் திருப்பித் தந்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

    உடனே புறப்பட்டு ஊருக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டேன். உடம்பு சரியாக ஒன்றரை மாதங்கள் பிடித்தன. இன்று நான் உயிரோடு இருப்பதற்கு, எந்த விதமான உறவுமில்லாமல், மாணிக்கம் சொன்ன அறிவுரையும் ஒரு காரணம் என்பதை, இந்த முறையும் நான் டவுன் ஹால் ரோட்டில் திரியும்போதும் நன்றியோடு நினைத்தேன்.

    மாணிக்கத்தைக் காணவில்லை. அவர், எங்கிருந்தாலும், யாருக்காவது, வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாய் ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டுதான் இருப்பார், பாடிக் கொண்டே, மீசையைப் பெருமையுடன், தடவாமல் பார்த்துக்கொண்டே!

    புகைப்படங்கள் : ரமணன்

    Share
  • மன்னி வீடுபோய்ச் சேர்ந்தாள்….

    இசைக்கவி ரமணன்

    து அதிகாலை நேரம். ஒரு மூன்றரை மணி இருக்கும். நான் வாசல் அறையில், ஒரு சோபாவில் படுத்திருக்கிறேன். இயற்கை உபாதை. எழுந்து, பின்கட்டுக்குச் செல்லவேண்டும். செல்லும்போது, ஏதோ என்னை ஈர்த்ததாக உணர்ந்தேன். வலதுபக்கம் திரும்பினால், மீனாட்சி அம்மன் படம். ஒற்றைச் சுடர் குத்துவிளக்கு. அதன் எதிரே, ஒரு மனையில், ஊசிபோல், நேர்மையாளனின் நெஞ்சுபோல், சற்றும் வளையாமல் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கிறது. மூடிய விழிகள். இடதுபுறத் தோளில் புரளத் துடிக்கும் ஈரக் கூந்தல். பொடிசாய் ஒரு மூக்குத்தி, சுடர்போல் அல்லாமல் அடக்கமாக மின்னுகிறது. பண்டைக் காலத்துத் தவமுனியின் மனைவிபோல், தவம் செய்வோர்க்கு வரம் அருளும் அம்பிகை போல், உடலைச் சுற்றி ஒரு மென்மையான ரோஜா நிறம் கலந்த வெண்மை ஒளியோடு உட்கார்ந்திருக்கிறாள் மன்னி.

    துரையில் நான் தனியே இருந்தபோதும், எனக்குத் திருமணம் ஆன பிறகும், மன்னியின் தல்லா குள வீட்டிலும், பிறகு “க்ருபா சித்தம்” என்னும் விஸ்வனாதபுரத்துச் சொந்த வீட்டிலும் நான் கழித்த பொழுதுகள் பொன்னானவை.

    aசுப்புலஷ்மி என்ற பெயர் எனக்குப் பிடிபடவே இல்லை. அவள், மன்னி. அப்படி அவளை அழைப்பதுதான் அழகு, முறை. கொடுமைக்கார சாவித்ரி அத்தையின் மூத்த மருமகள். கணவர் திரு. கிருஷ்ணமூர்த்தி. அவரை ஜகல் அத்தான் என்றால்தான் எங்களுக்குப் புரியும். அவரும் என் அப்பாவும் அந்தரங்க சிநேகிதர்கள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாந்தி, லலிதா, சுந்தர்.

    ன்னிக்கு, எவர் மூலமாகவும், எதன் மூலமாகவும் இறைவனைப் பற்றிச் சிந்திப்பதிலும், பேசுவதிலும், கேட்பதிலும்தான் வாழ்க்கையின் தலையாய ருசியாக இருந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ரசனைகள் உண்டு. மன்னிக்கு ஒரேயொரு ரசனைதான். இறைவன்! இந்த தெய்வ ரஸம் அவளுடைய ஊனினை உருக்கி உள்ளொளியைப் பெருக்கி இருந்தது. அவளைப் பார்த்தால், இவள் சாப்பிடுவாளா என்பதே சந்தேகமாக இருந்தது. சுவாசத்தைத் தவிர அந்த தெய்வக் கூட்டில் வேறெதும் இல்லை என்றே தோன்றியது. கொஞ்சூண்டு சாப்பிடுவாள்; ஆனால், அதை ரசித்து ரசித்து, அதை வழங்கிய கடவுளை நன்றியோடு நினைந்து நெகிழ்ந்து, போதுமென்று நிறுத்தித் தண்ணீர் குடித்துவிடுவாள்.

    அவள் என்ன செய்தாலும், அது தெய்வமே செய்தது போல அவ்வளவு நேர்த்தியாகவும், தூய்மையாகவும், உயர்ந்த ரசனை மிக்கதாகவும் இருக்கும். மாவடு போடுவாள். ரெண்டு வருஷத்துப் பழைய வடுவும் கடுக்கென்று இருக்கும். அல்வா கிண்டுவாள். அமிழ்தக் கோப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அமரர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வருவார்கள். இதைவிட இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும்படிச் செய்வதுதான் அவள் இயல்பு. ‘செய்கையில் நேர்த்தியே யோகம்.’ ‘செய்வன திருந்தச் செய்.’ இந்த வாக்கியங்களுக்கு முழு உதாரணம் மன்னி.

    ந்த ரசனையின் சாரம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும் இயல்பாக இறங்கி இருந்ததை நான் அனுபவித்திருக்கிறேன். சாந்தியின் நாட்டியம். ஆட மாட்டாள், அபிநயிப்பாள். மிதப்பாள். நகர்வாள். ஒரு மாலை நேரத்து மரத்தடியில், அவள் “கிருஷ்ணா நீ பேகனே பாரோ!” என்னும் பாடலுக்கு அபிநயம் செய்ததை என் அக்காக்களோடு சேர்ந்து நான் வியந்து பார்த்தேன். கோலக் குழலுடன் நீல நிறத்துக் கண்ணன் அவளை அன்புடன், கொஞ்சம் பனித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை, அப்போது நான் குழந்தையாகவே இருந்ததால் என்னால் உணர முடிந்தது. ஒரு பிறந்த நாள் வாழ்த்தென்றால், பட்டுத் துணியில், அழகான கையெழுத்தில், ஆத்மார்த்தமான கவிதை வரிகளை எழுதி, அதைச் சன்னமான குரலில் வாசித்து, மகிழ்ந்து பரிசளிப்பாள்.

    அவளுடைய தங்கை துர்கா என்னும் லலிதாவின் படிப்புக்கு அளவே கிடையாது. மதுரை டாக்டர் எஸ். ராமகிருஷ்ணனின் செல்ல மாணவி.

    சுந்தர் பெருங்குரலோன். கடும் உழைப்பாளி. தேசியம், மார்க்சியம், பெளதிகம் எல்லாம் அத்துப்படி. மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவன். பெங்களூர் டாடா இன்ஸ்டிட்யூடில் சூப்பர் கண்டக்டிவிடிக்காக பி.ஹெச்.டி. எடுக்க முயன்று, பிறகு அதைக் கைவிட்டு, அமெரிக்காவில் குழந்தைகள் கொண்டாடும் ஆசிரியனாக விளங்குகிறான். அவன், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்துக்கொண்டிருந்தபோது, வெள்ளம் வந்தது. படகில் போய்ப் பலரையும் மீட்டிருக்கிறான். அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என்று, பெங்களூரிலிருந்து சைக்கிளில் மதுரைக்கு வந்தவன் அவன்!

    ன்னிக்கு எல்லாவற்றுக்கும் எப்போதும் நேரம் இருந்தது. தண்ணீர் பிடிப்பது, சமையல் செய்வது, ஊறுகாய் போடுவது, தியானம் செய்வது, படிப்பது, கேட்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, கோயிலுக்குத் தவறாமல் செல்வது, விரும்பி விரும்பி விருந்தினர்களை உபசரிப்பது, இன்னும் எத்தனை எத்தனையோ பணிகள். அவற்றைச் சுமையாகக் கருதாமல், சுவைத்துச் சுவைத்தே செய்தாள்.

    வள், துன்பத்தை எப்படி எதிர்கொள்கிறாள் என்று சோதித்துப் பார்க்கத்தானோ என்னவோ, ஆண்டவன் அவளைப் பலவித சோதனைகளால் தாக்கினான். வங்கியில் நல்ல பதவியில் இருந்த கணவர், ஒரு வழக்கில் சிக்கி நிலையை இழந்தார்; அது பரவாயில்லை; கண் பார்வையை இழந்தார். சாந்தி, இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, கணவனால் கைவிடப்பட்டாள்; அவளும் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்தாள்; இறுதியில் புற்று நோய்க்கு சமீபத்தில்தான் பலியானாள்; லலிதாவின் படிப்புக்கும் அழகுக்கும் வேலையும் கிடைக்காமல் விவாகமும் நடக்காமல் ஆண்டுகள் சென்றன. இவை போதாதென்று, மாமியாரான சாவித்ரி அத்தையின் கடும் வசவுகள்.

    ”மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி” என்று பாரதி சொன்னது போல, அத்தனை துன்பங்களுக்கும் மத்தியில், இனிமை குன்றாமல் இருந்தாள்; இறைவனை நாடிக்கொண்டே இருந்தாள்; இன்முகத்துடன், வருவோர்க்கெல்லாம் அமுதனைய உணவிட்டு மகிழ்ந்தாள். சுந்தரத்தின் மிருதங்க வாத்தியார், வகுப்பு முடிந்தவுடனேயே, “இன்னிக்குப் பக்க வாத்தியம் என்ன?” என்று விசாரிப்பார். சாதாரண இட்டிலியை, ஒரு மகாராணியாக உயர்த்திவிடும் மன்னியின் வியஞ்சனத் தோழிக் கூட்டம்! இன்று புகழ்பெற்று விளங்கும் திரு பிரணதார்த்திஹரன், மன்னி வீட்டில் அடிக்கடி ஆஜர்! எல்லாம் மன்னியின் கைவண்ணம்தான்!

    வெளியூரில் இருக்கும் சுந்தரத்திற்காக, மாதாமாதம் அவனுடைய நட்சத்திர நாளன்று, மீனாட்சி கோயிலுக்கு நடந்தே போய் அர்ச்சனை செய்வாள். அவன் நினைப்பு மேலிடும்போது, அவனுக்குப் பிடித்த இனிப்பு வகையைச் செய்வாள், நான் அன்றைக்கென்று பார்த்து அவள் வீட்டுக்குச் சென்று நிற்பேன். “எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?” என்று கிண்டல் செய்தபடி, நம்மைக் குளிப்பாட்டித் தூய்மை செய்யும் அன்புடன் அதை அள்ளி இடுவாள்.

    சுந்தரம் தோசை தின்ன உட்கார்ந்தால், ரெண்டடுப்பு; ரெட்டைக் கல். சத்தமே இல்லாத ஒரு பரபரப்பு அந்தச் சமையலறையில் நிலவும். ஒரு கட்டத்தில், மன்னி, “சுந்தரா! பாதி மாவு ஆயிடுத்துடா…” என்பாள் மெதுவாக. சுந்தரம் மிகவும் ஒத்தாசையாக, “கடைசி ஏழும்மா” என்பான். அப்படி ஒரு பதிலை நான் எங்கும் கேட்டதில்லை. அவன் சொன்னது சரிதான் என்று மகிழ்ந்த அப்படி ஒரு தாயையும் நான் எங்கும் கண்டதில்லை!

    என் மனைவியின் சீமந்த வளைகாப்பை அவள்தான் தன் வீட்டில் நடத்தினாள்.

    வள் குறைப்பட்டுக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால், துன்பங்களைப் பரிசாகப் பணிவோடு ஏற்றுக்கொண்டு, ஆண்டவனை வெட்கப்படச் செய்தாள். என்னை ஒரு சகாவாகவே நடத்தி வளர்த்தாள். ஆம், நான் அவளால் வளர்க்கப்பட்டேன் என்பது மிகையல்ல. நான் அவளோடு கழித்த நேரம் கொஞ்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அதன் தரம், அதனால் என் மீது படிந்த தெய்வீகம் இதை நான் எப்போழுதும் நன்றியுடன் நினைப்பேன் மன்னி! இறுதிவரை, அவள் இறையனுபவத்தையே நாடி வாழ்ந்தாள்.

    என்னிடம் கடைசியாகப் பேசும்போதும், அவள் இதைத்தான் தெரிவித்தாள். “மன்னி! நீ பழுத்த பழம். அது உனக்குத் தெரியவில்லை. நீ சாகமாட்டாய் மன்னி! இறைவன் உன்னை மரியாதையோடு உனக்கு நோகாமல் இந்த உடம்பிலிருந்து உன்னை அழைத்துச் செல்வான். அதை நீ உணர்வாய்,” என்று நெஞ்சாரச் சொன்னேன். அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, கண்மல்க, “ரமணா!” என்று தொண்டை அடைக்க, என் கைகளில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். என்னால் தாங்க முடியவில்லை…

    துன்பத்தை ஒரு குறையாகக் கருதாத, சோதனைகளை ஒரு பொருட்டாக மதிக்காத, எத்தனை இடர்கள் வந்தாலும் இறைவனை இடைவிடாமல் நன்றியோடு நினைத்துக்கொண்டே இருந்த, உடல், உயிர். மனம் ஒருசேரக் கலந்து தினந்தினம் விருந்தினரை உபசரித்த, அதிர்ந்து ஒருவார்த்தை பேசாத, காதே கேளாத போதும், இலக்கியம், இறைவன் என்று நல்ல வார்த்தைகளைக் கேட்பதிலேயே ஆர்வம் கொண்ட, அன்பன்றி வேறேதும் அறியாத, உத்தமிகள் எத்தனை பேரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

    அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒருத்தியின் முழு அன்புக்குப் பாத்திரமானவன் நான்! மன்னியை யாரோடும் ஒப்பிட முடியாது. தன்னுடைய அறிவை அப்படியே புறந்தள்ளி முந்திவந்த அவளுடைய பணிவு, கடவுளைப் பதற வைத்திருக்கும்.

    வள் விரும்பியபடியேதான் அவள் விடைபெற்றுச் சென்றுவிட்டாள். பீஷ்மரைப் போல, ரதசப்தமி நாளுக்காகக் காத்திருந்து, அன்பான மகனின் அருகாமையில், வலியின்றி வான்கலந்தாள். தேவர்கள் கண்ணீர் சிந்தினர். தெய்வம் சற்றே குற்ற உணர்வில் குமைந்தது. குடும்பத்திலிருந்து, கண்ணியத்தின் உருவாரமொன்று நீங்கிவிட்டது.

    வையம் ஒரு வரத்தை இழந்தது.

    சுந்தரா! அம்மா போய்ட்டாடா…

    நன்றி : அமுத சுரபி

    Share
  • நிற்கிறேனா? நடக்கிறேனா?

    இசைக்கவி ரமணன்

    Man-treadmill_cmyk_flat2-1024x682

     

    நின்ற இடத்தில்தான் நிற்கின்றேன்
    நில்லா தெங்கோ நடக்கின்றேன்
    என்றிக் கூத்து முடிந்திடுமோ?
    எப்படித் தானிது விடிந்திடுமோ?

    நெற்றியில் வியர்வை உயிர்க்கிறது
    நிலத்தை நனைக்கத் துடிக்கிறது
    வற்றிக் கிடந்த நெஞ்சத்தில்
    வயிரக் கனலொன் றெழுகிறது

    ஒரே இடத்தில் நின்றபடி
    ஓயா தெப்படி நடக்கின்றேன்?
    ஒரே இடத்தில் நடந்தபடி
    தொலைவை எவ்விதம் கடக்கின்றேன்?

    பாதம் விரைந்த காரணத்தால்
    பாதை விளைந்த நாள்போக
    பாதை கீழே விரைகிறது
    பாதம் அதனால் அசைகிறது

    பாதை நிற்கப் போகிறதா?
    பாதம் நிற்கப் போகிறதா?
    ஏதும் முடிவொன் றிதற்குண்டா?
    இதனைத் தான் தவம் என்கிறதா??!!

    31.05.2014 / சனிக்கிழமை / 09.55

    Share
  • மந்த்ராலயம்

    கே.ரவி

    1980-களில் இசைக்கவி ரமணன் எழுதிப் பாடி எங்கள் குழுவில் மிகப் பிரபலமான பாடல். பல்லவியில் ஹூங்காரமாக ஒரு ஹம்மிங்! அதற்கே வசப்பட்டு ஒரு போதையில் நாங்கள் எல்லாரும் அதையே ஹம் செய்து கொண்டிருப்போம். இந்தப் பாட்டும் என் இசையமைப்பில் (மெட்டு அப்படியே ரமணன் போட்டது. பின்னணி இசை மட்டும் எனது) அமரத்வனி இசைப்பேழையில் ராஜுவின் குரலில் பதிவானது. (அமரத்வனி பேழை 1987 ஆகஸ்ட் மாதம் ம்யூஸிக் அகடமியில் திருமதி ஹேமமாலினி முன்னிலையில் திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.)

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய பாடலை, கே.ரவியின் பின்னணி இசையில், ராஜகோபால் குரலில் இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam_new3.mp3

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய இதே பாடலை அவர் மகன் ஆனந்த் பாடுகிறார். அதனை இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam-Ananda.mp3

    ======================================

    என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம் – ம்ம்ம்ம்
    என்நேரமும் உன்நாமமே சங்கீர்த்தனம்images
    அந்தநாள் பாலைவனம் – உன்
    அன்பிலே ப்ருந்தாவனம் – என்
    அன்னை உன்னில் கனவும் நினைவும் துயிலும்
    (என்மனம்)
    பனித்த கண்கள் குவிந்த கைகள்
    பாதிக் கண்கள் திறந்த பண்கள்
    தனித்த வனத்தில் தாயைத் தேடும்
    மானைப் போல மருளும் நெஞ்சம்
    இனியும் பாதை தேடுவேனோ
    இமையை மறந்தும் மூடுவேனோ
    மலரைத் தேடிப் புலர்ந்த வானம்
    சரணம் சரணம் ராகவேந்த்ரம்

    நினைத்ததில்லை நெகிழ்ந்ததில்லை
    நீண்ட பாதை நடந்ததில்லை
    கனத்த நெஞ்சம் உனது பாதம்
    கனவில் கூடத் தொழுததில்லை
    கங்கையோடு பொங்கும் போது
    கண்கள் அழுத சுவடும் ஏது
    நான்விழுந்த கரையின் ஓரம்
    நாணலாகும் ராகவேந்த்ரம்
    (என்மனம்)

    (ரமணன்)

     

    கே.ரவி

    Share
  • மறக்க முடியாத மதுரை – 4

    இசைக்கவி ரமணன்

    புகைப்படம் : ரமணன்
    புகைப்படம் : ரமணன்

    isai2

    அந்த மூதாட்டியின் பெயர் எனக்குத் தெரியாது. அது யாருக்கும் அவசியம் இல்லை, அவள் உட்பட! எல்லோருக்கும் இட்டிலிக் கிழவி என்றல் தெரியும். ஒவ்வொர் இரவும் 10.30 மணிக்கு மேல், அழகர் கோவிலை நோக்கிச் செல்லும் அந்தச் சாலையில் சந்தடி அடங்கிய பிறகு, சந்தடியே இல்லாமல் தனது கடையை விரிப்பாள் பாட்டி. கடை என்றால் என்ன? அடுப்பு, இட்டிலிக் கொப்பரை, சட்டினிப் பாத்திரங்கள், ஒரு பெஞ்சு, உட்கார ஒரு ஸ்டூல். காசுபோட ஒரு மிட்டாய் டப்பா. முதலிலிருந்தே உடைந்தே இருக்கும் வாளியில் தண்ணீர். அவ்வளவுதான். ஒரு 11.30 மணிக்கு மேல்தான் களைகட்டும்.

    நான்தான் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் குடியிருந்தேனா? பத்திரிகையைக் கட்டிப் போடும் பயல்கள் சொல்லாமல் லீவு போட்டுவிட்டால், என்னை உரிமையோடு வந்து கூப்பிடுவார்கள். ‘இன்னக்கி ஆள்செட்டுக் கொஞ்சம் கொறவா இருக்கு; ஒருக்கா வந்தீகன்னா…’ என்று இழுப்பார் கோமதி நாயகம். உடனே, பேண்டை மாட்டிக் கொண்டு உற்சாகமாகப் போய்விடுவேன். எந்தக் கூட்டத்திலும் எளிதாய்க் கலந்துவிடுவது என்க்கு இயல்புதான் என்றாலும், கட்டைச் சம்பளத்திற்கு இரவும் பகலும் போராடும் இந்த உழைப்பாளிகள் கூட்டத்தில் எப்போதும் ஒருவனாகவே இருந்தேன் நான். பார்சல் கட்டுவது, பெரும்பாலோர் நினைக்கிற மாதிரிச் சுலபமான வேலை இல்லை. அதற்குப் படிப்பு வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு அறிவும், திறமையும் வேண்டும், அதைப் படிப்பு கொடுக்காது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்! அதேபோல் வெவ்வேறு திசையில் புறப்படத் தயாராயிருக்கும் மூன்று வண்டிகளுக்கு உரிய கட்டுக்களைத் தயார் செய்ய, கடிகாரத்தில் கண்வைத்த படியே, உள் பார்சல், கடிதங்கள், உதிரி இணைப்புகள் இவை தவறாமல், ‘லேபிள்’ விடும் திறமை எந்த முதுகலைப் பட்டதாரியாலும் செய்யவே முடியாத ஒரு வேலை. அதற்கு அபூர்வத் திறமை வேண்டும். இதை, அந்தக் கல்லூரிக்குப் போகாத, பள்ளிப் படிப்பை முடிக்காத, தன்மானம் மிக்க, எப்போதும் சிரிக்கத் தெரிந்த உழைப்பாளிகளிடம்தான் கற்றுக் கொண்டேன். என் வியர்வைப் பெருக்கைப் பார்த்துவிட்டு, ‘ஒண்ணும் பதறாதீங்க’ என்று சிரித்தபடி உற்சாகம் ஊட்டுவார்கள். கன்வேயரில் இருந்து ‘அருப்பு’ எடுக்கும் பையனும், விறுவிறுவென்று வெற்றிலைக் கவுளி மாதிரி அதை எண்ணியெண்ணிப் போடும் பயல்களும், என் மீது கண்வைத்தபடியே தங்கள் காரியத்தைச் செய்வார்கள், புன்னகை மாறாமல். கற்றுக் குட்டிக்கு டால்ஃபின்கள் நீச்சல் கற்றுத் தருவதைப் போலிருக்கும். இந்த வேலையை நாம் செய்தால் தாமதமும், குழப்பமும்தான் மிஞ்சும் என்று சீக்கிரமே தெரிந்து கொண்டேன். ‘வாங்க, கட்டுவோம்,’ என்று கிண்டலில்லாமல் அழைப்பார்கள். கிழியாமல் ‘க்ராஃப்ட்’ பேப்பரை ஓங்கி அறையும் வித்தையையும், பிளேடு இல்லாமலேயே சணலை அறுக்கும் உத்தியையும் அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். ஆனால், பரபரவென்று பார்சலைக் கட்டுவதில் காலும், முதுகும் சோர்ந்து விடும். எனவே, நான் ‘லோடரா’னேன். எனக்கு எந்த ஊருக்கு, எந்த வண்டியில், என்னென்ன பார்சல்கள் போகின்றன என்பது அத்துப்படி. எனவே, இரண்டு கைகளிலும், இரண்டிரண்டு கட்டுக்களைத் தூக்கிச் சரியான வண்டியில் ஏற்றுவது எனக்குப் பிடித்திருந்தது. பயல்களுக்கும், எனக்கும் இதில் சுவாரசியமான போட்டி உண்டு! அவர்களிடத்தில் கட்டு மிஞ்சினால் நான் தோற்றேன். கட்டுக்காக நான் காத்திருந்தால் அவர்கள் தோற்றார்கள்! ஜெயிப்பது கணக்கில்லை, தோல்விதான் கணக்கு! அவர்களோடு சேர்ந்து உழைத்த ஒரே காரணத்தால் என் மீது அவர்களுக்கு அன்பு உண்டு. அன்பையும், மதிப்பையும் அவர்களால் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அதைத் தடாலடியாக வெளிப்படுத்தவும் தெரியாது. எல்லாம் புன்னகையும், ஒன்றிரண்டு வார்த்தைகளும்தான்! எனவே, எப்போதும் நாங்கள் இருவருமே வென்றோம்!

    நள்ளிரவு தாண்டி வெளியூர் பதிப்பு முடிந்து, மதுரைப் பதிப்பை அடிப்பதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் கிடைக்கும். பயல்கள் அப்போது ஓய்வெடுத்துக் கொள்வார்கள். பகலிலும் ஏதாவது வேலை செய்து வயிற்றைக் கழுவ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. இதில், சிலர் கல்வி கற்பார்கள்; தங்கைக்குத் திருமணத்திற்காகக் குருவி போலச் சேகரிப்பார்கள். மிகவும் சிரமமான வாழ்க்கை. ஆனால், மான உணர்ச்சி மிக்கவர்கள். அவர்களது கண்ணியம் இன்றும் என்னைச் சுடும்.

    ஏதோ யோசனையாக நின்றவனை, ‘வாய்யா போலாம்,’ என்று அழைப்பார் நந்தகுமார். அவர்தான் அச்சகத்தின் தலைவர். அவரது அம்பாசிடர் வண்டியில் ஒரு லாரியளவு ஆட்களை ஏற்றிக் கொண்டு நேரே கோரிப்பாளையம் இட்டிலிக் கிழவியிடம் விரைவார். பாட்டி, பதறாமல், அலுமினியத் தட்டில் இலைத் துண்டைப் பரப்பி ஒரு காரச் சட்டினி, ஒரு தேங்காய்ச் சட்டினியை ஊற்றுவாள். பிறகு, இட்டிலிக் கொப்பரையைத் திறப்பாள். ஆஹா! மோட்ச சாம்ராஜ்ஜியத்தின் மூடி திறந்தது போல், ஆவி, பலவித நளின உருவங்களாக வந்து நம்மை நெருடும்! கொப்பரையின் உள்ளே இட்டிலித் தட்டில், துணி மீது உருவாகி வெளிவரும் அந்த வெள்ளைத் தேவதைக்கு, என் போன்ற ஊர் சுற்றிகளின் ஒரே நம்பகமான துணைக்கு இணையாக ஒன்று இந்திர லோகத்திலும் கிடையாது!

    ‘பாட்டி! மிளகாய்ப் பொடி எங்க?’paniyaram-1

    “வக்கிறோமில்ல.” என்று சற்றே சினத்துடன் சொல்லித் திரும்பி, அப்போதுதான் என்னைப் பார்த்து, சற்றே சிரித்து, ‘வாங்கப்பு!’ என்பாள். கூடவே, பழைய ‘இஞ்செக்ஷன்’ பாட்டிலில் நல்லெண்ணெய்.

    ‘நல்ல எண்ணதானா பாட்டி?’

    “இந்தா! செக்கில ஆட்டுனதத்தேன் எடுத்துட்டு வர்றோமின்னு தெரியுமில்ல?”

    ‘சரி, இன்னும் கொஞ்சம் எடுத்துக்கவா?’ என்றபடியே இன்னொரு இஞ்செக்ஷன் பாட்டிலை எடுக்கப் போனால், ‘அடி ஆத்தி! இது என்ன?’ என்று இழுத்தாள் பாட்டி. ‘அட எக்ஸ்ட்ராவா காசு கொடுத்துர்றேன் பாட்டி!’ என்றேன். அதற்குப் பாட்டி,

    “ஒன் துட்டக் கொண்டுபோயி கம்மாயில போடு! ஆரு கேட்டா? மொறையில்லாம எண்ணயக் கவுத்துகிட்டா அப்புறம் சீக்குத்தான். எதிலியும் ஒரு அளவு இருக்கணும். அதுக்குச் சொன்னேன்.”

    என்ன அக்கறை? இங்கே, பண்பாட்டுக்கு, வியாபாரம் நிமித்தம்! தலையைச் சாய்த்துப் பாட்டியைப் பார்த்தேன். அவள் என் பார்வையைத் தவிர்த்தபடி, இன்னும் இரண்டு இட்டிலியைத் தட்டில் வைத்துவிட்டுத் தலைப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். நந்தகுமார் சாப்பிடும் ஒன்றரை இட்டிலிக்கு அவருக்குச் சுற்றிலும் பத்துப்பேராவது இருக்க வேண்டும்! ஓரிருவர், பிளாட்பாரத்தில் சாப்பிடுவதாவது என்று சங்கடமாக ஒதுங்கி நிற்பார்கள். நாங்கள் கேலி பேசிக்கொண்டே வெளுத்துக் கட்டுவோம்! கச்சேரி, நல்ல பக்க வாத்தியத்தால்தான் களைகட்டும். அதுபோலத்தான் இந்த மல்லிகைப்பூ இட்டிலியும், சட்டினிகளும், பொடியும், எண்ணெய்யும். அகாலத்தில் கடுமையாக உழைத்த பிறகு வரும் பசிக்கும், இந்தப் பாட்டிக்கடை இட்டிலியின் ருசிக்கும் நிகரே கிடையாது.

    கச்சேரிக்கு முத்தாய்ப்பாய்ப் பக்கத்துக் கடை ‘விசாலம் காப்பி.’ மதுரையில், மீனாட்சிக்கு அடுத்தபடி அதுதான் எனக்குத் திருத்தலம்! மிகப் பெரிதாய்ப் பளபளவென்று தேய்த்து வைத்திருக்கும் ஃபில்டருக்கு, விபூதி, குங்குமம் வைத்திருப்பார்கள். நான் முதலில் சிவலிங்கம்தானோ என்று எண்ணிக் கன்னத்தில் போட்டுக்கொண்டதுண்டு!

    அற்புதமான காப்பி! வெளிநாடுகளில் ஊர் சுற்றும்போதெல்லாம் நான் மதுரையைக் கோபமாகத்தான் நினைவுகூர்வேன். அங்கெல்லாம் காப்பி, வாயில் வைக்க வழங்காது. ஏகப்பட்ட காப்பியை, வாயகன்ற காகிதக்குடுவையில் பற்றிக்கொண்டு, மணிக்கணக்காய்க் குடிப்பார்கள். அட, நம்மூரிலேயே ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சென்று காப்பி குடியுங்கள். கழுநீரே தேவலாம் என்றிருக்கும்! விசாலம் காப்பி, நாள்முழுதும் ஒரே ருசியாகவே இருக்கும். விளிம்பில் நுரைக்குமிழ்கள் கண்சிமிட்ட, ஆவி நாசியில் நுழைந்து மனதை மயக்க, சற்றே ஓசையுடன் உறிஞ்சினால் நெஞ்செல்லாம் இளஞ்சூடு பரவி, ருசியும், இதமும் சேர்ந்து நம்மை அப்படியே நிற்கவைத்து வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்ல, கடைசி வாயை அருந்தும்போது கொஞ்சம் துக்கமாகத்தான் இருக்கும்.

    ‘என்ன? சரியா சாப்டீரா? இல்ல வழக்கம் போல கத பண்ணீரா?’ என்பார் நந்து. ‘சார்! நல்லா வயிறுமுட்டத் தின்னேன் சார்,’ என்றால், ‘கிழிச்சீர்,’ என்றபடிக் காருக்குப் போவார். நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர் திருப்தி அடைவதில்லை!

    வரும்போது வந்து அதே ஆட்கள்தான், இப்போது காருக்குள் ஏறும்போது திணறுகிறது. எல்லாம், பாட்டியின் இட்டிலி மகிமை!

    Share
  • மறக்க முடியாத மதுரை – 3

    இசைக்கவி ரமணன்

    மதுரையில் கோரிபாளையம் மிகவும் சுவாரசியமான இடம். கே.கே. நகரிலிருந்து சைக்கிளில், சினிப்ரியா தியேட்டரைத் தாண்டி, வலதுபுறம் திரும்பி, வாய்க்கால் வழியாக அமைதியும், மரங்களும் கப்பிக் கிடக்கும் காந்தி நினைவாலயத்தைத் தாண்டி, வலது பக்கம், சந்தடியும், புழுதியும் மிகுந்த தமுக்கம் மைதானம் பக்கம் செல்லாமல், இடதுபுறம் திரும்பினால் கோரிபாளையம்தான். வைகை ஆற்றுக்கு அந்தப் புறம் இருப்பதால், இதை வடகரை என்றும் சொல்வார்கள்.

    நாம் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்கிறோம். இரவு 12 மணிக்குமேல் இருக்கும். மதுரையில் நள்ளிரவு, நடுப்பகல் இவற்றுக்கு அதிகம் வேறுபாடு கிடையாது! பகலில் கொளுத்தும்; இரவில் பிழியப் பிழியப் புழுங்கும், அவ்வளவுதான்! ராஜ மாதங்கி அரசோச்சும் மதுரை ஒருபோதும் தூங்காது. ராத்திரியின் வசியப் போர்வையில் கட்டிடங்களும் களைத்திருக்கும் காட்சியை நான் உலகெங்கும் கண்டிருக்கிறேன், மதுரையைத் தவிர! மாடுகள் வாலசைத்தபடி, அசைபோட்டபடிப் படுத்திருக்கும். கண்கள், சாலை மற்றும் வாகன விளக்கொளியில், நெருப்புக் கங்குகள் போல் ஜொலிக்கும். கட்டை வண்டியில், ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அசந்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அசதியிலும் ஒரு கூச்சம் இழையோடுகிறது! மதுரை, மறவரின் வீரமண். இன்றைக்கும், கால்வைத்தாலே ஜிவ்வென்று ஏறுகிறது எனக்கு.

    நடு ராத்திரியில், கோரிப்பாளையத்தில் எனக்கென்ன வேலை? வேலைக்கு நடுவே ஓர் இடைவேளை! ஆம், அப்போது இந்து பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு மிகவருகே வீடு. வெற்றிலை துப்ப (புகையிலை என்று படிக்கவும்!) வெளியே வந்தால் வீட்டுக்காரி பார்த்து விடுவாள்! இன்றும் உற்ற நண்பர்களாகத் தொடரும் சக ஊழியர்கள், ஜன்னல் வழியே சைகையிலேயே சமையல் என்ன என்பதைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அலுவலகத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள்! அருகாமை, அணுக்கம் இரண்டும் சேர்ந்தே இருந்தன எங்கள் மதுரை வாழ்க்கையில்.

    எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு, படு சுறுசுறுப்பாய் இயங்குவதே பத்திரிகை அலுவலகம். இரவில்தான் அச்சுவேலை. இயந்திரம், மளமளவென்று அச்சிட, அந்தக் காதுபிளக்கும் ஓசைக்கு நடுவே ஊழியர்கள், பரபரப்பாகவும், உற்சாகமாகவும் வேலை செய்வதைப் பார்க்கும்போதே நமக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். ஆறு பிரிவுகளாக இருக்கும் இயந்திரம்; அடிக்கடி மாநில சுயாட்சி கேட்டு முரண்டு பிடிக்கும்; அதைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் உடனே சரிசெய்ய வேண்டும். பேச முடியாது. சீழ்க்கைதான் அச்சாலய மொழி. மைதோய்ந்த விரலை வாயில் வைத்துச் சீட்டியடித்தால் மறுநாள் தர்மாஸ்பத்திரிதான்! நாலு பேர் அடிக்கக் கூடிய சீழ்க்கையை ஒருவரே விரல்போடாமல் அடிப்பதைப் பத்திரிகை அச்சிடும் இடத்தில்தான் பார்க்கலாம். இந்தச் சைகைகளால்தான் தவறுகளை உடனே சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், பல நூறு பிரதிகள் வீணாகிவிடும். மறுநாள் தலைமை அலுவலகத்து சோடாபுட்டிக் கண்ணாடிக் கணக்கர்களுக்குப் பதில் சொல்வதற்குள் உயிரே போய்விடும். பழுதுபட்ட பிரதி ஏதேனும் வெளியே போய்விட்டால் இன்னோர் ஆபத்து; எங்கோ சத்திரப்பட்டி கிராமத்திலிருந்து எப்போதோ ஓய்வுபெற்ற ஒருவர் ஒரு தபால் கார்டில், ‘இதுதானா இந்து?’ என்ற தலைப்பில் சிற்றெறும்புக் கையெழுத்தில் கம்பராமாயணத்தை எழுதி அனுப்பிவிடுவார். பலமைல் தூரம் சைக்கிள் மிதித்து, வயக்காட்டில் அதைத்தள்ளிக் கொண்டுபோய் அவரது என்றைக்கும் கட்டி முடியாத வீட்டுக்குச் சென்று அவர் காலில் விழவேண்டும். இந்த மரியாதையை மிகவும் ரசித்த பிறகே அவர், ‘அடடா! நான் ஒண்ணுமே பெரிசா எழுதலீங்களே! இதுக்குப் போயா இத்தன தொலவு வருவீங்க?’ என்பார் அப்பாவிபோல! ‘இது எங்க கடமை’ என்று நாங்களும் சிவாஜி மாதிரிக் கனிவாகச் சொல்வோம். கூடவந்த ஏஜெண்டோ எரிச்சலோடு, ‘சார், இவுரு மூணு மாசமா சந்தாவே கொடுக்காம..பேச்சப் பாரு..’ என்று சில ‘பிரத்யேக’ அடைமொழிகளை முணுமுணுத்துவிட்டு நான் பக்கத்தில் இருப்பதைத் திடீரென்று உணர்ந்து வெட்கப்பட்டுத் தலையைச் சொறிந்து கொள்வார்! உள்ளே எங்களுக்குக் காப்பி கொடுக்க முடியுமா என்று பார்க்கப் போன வாசகர், தன் முயற்சியில் (நல்ல காலமாய்த்) தோற்றுத் திரும்புவார். அதை மறைத்துக் கொள்ள ஓர் ஏவு கணையை நம் மீது வீசுவார். ‘இன்டுல வரவர நீசஸ் (நியூஸ் என்பதற்கு இவரே பன்மை பாவித்து அதை நியூஸஸ் ஆக்கி அதை வக்கணையாக நீசஸ் என்கிறார்!) எல்லாம் ஒண்ணும் சரியா இல்ல. கொஞ்சம் பாத்துக்கிடணும்.’ அவர் எழுதிய அந்தக் கார்டோடு அவரையும் அப்படியே கிழித்துப் போடலாம் போலத் தோன்றும். ‘ஆகட்டுங்க, அவசியம்,’ என்று சொல்லி விட்டு வருவோம். ‘ஒங்களுக்கும் வேல இல்ல ஒங்க ஆபீசுக்கும் வேற வேல இல்ல,’ என்று சலித்துக் கொண்டே வருவார் சத்திரப்பட்டி சண்முகவேல்.

     ram1

    குடிசைகளால் நெருக்கப்பட்ட ஒரு சந்தில் சைக்கிளை ஒருமாதிரியாகத் தள்ளிக் கொண்டு வரும்போது, எதிரே கருப்பு மின்னலாய், அப்போதுதான் பிறந்திருந்த பன்றிக் குட்டி ஒன்றை நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டு துள்ளி வந்தாள் ஒருத்தி! அதுபோல் அழகான இளம்பெண்ணை இதுவரை நான் காணவில்லை! எனக்கென்னமோ பராசக்திதான் அந்தச் சேரிப்பெண்ணாக வந்து என் சித்தத்தை நிரந்தரமாகச் சீண்டிவிட்டுப் போனதாகவே தோன்றுகிறது. நிக்கல் போன்ற ஓர் உலோகத்தில் அவள் மூக்குப்பொட்டு அணிந்திருந்தாள். அது, மொத்தக் கருப்பையும் தூக்கலாய்க் காட்டியது. அந்தக் கருமையின் பளபளப்பும், மின்னற் பற்களும், சோழி குலுங்கும் சிரிப்பும், பேரழகின் ராஜாங்கத்திலிருந்து நான் பேதைபோல் அவளுக்குத் தென்பட்டதும் என்னால் என்றும் மறக்க முடியாது. தரிசனம் என்பது எங்கோ தியானத்திலோ, மலையுச்சிக் கோவிலிலோதான் நேரவேண்டியது என்பதில்லை. நெருக்கடியான சந்தில், நேருக்கு நேர் நேர்வதே தரிசனம்! நமது நிலையை மாற்றுவதில்லை தரிசனத்தின் நோக்கம். என்றும் மறக்க முடியாதபடி, நம் நிலையை நமக்குச் சொல்லிவிடுவதுதான் தரிசனத்தின் குசும்பு!

     unnamed

    அவள் கையில்பட்டு நெஞ்சில் குலவியதாலோ என்னமோ, பன்றிக் குட்டியைப் போல் அழகான ஜீவன் வேறெதுவுமே இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு. இதை என்னோடு வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். கனமுடையாய் என் தந்தையாரிடம் இதைப்போய்ச் சொன்னேன். அவர், ‘ஆமாண்டா, குட்டியில எல்லாம் அழகாத்தான் இருக்கும். அட நீ கூடத்தான் கொழந்தயா இருக்கும்போது கொஞ்சம் பாக்கும்படியா இருந்தே!’ என்றாரே பார்க்கலாம்!

    அட, உங்களைக் கோரிப்பாளையத்தில் நிற்கவைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சத்திரப்பட்டிக்குப் போய்விட்டேனா? இதோ, ஒரே நிமிடம், வந்து விட்டேன்!

    புகைப்படங்கள் : ரமணன்

    Share
  • நிறைவே சாதனை

    இசைக்கவி ரமணன்

    டிசம்பர் 31. பொதுவாகவே குளுகுளுவென்றிருக்கும் கோவை, மார்கழி நள்ளிரவென்றால் எப்படி இருக்கும்? நடைபாதையில், தாயின் கர்ப்பத்தில் இருந்ததுபோல் உடம்பு ஒடுங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பிச்சைக்காரர். திடீரென்று ஒரு கதகதப்பை உணருகின்றார். குளிரில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், யாரோ அவர்மீது கம்பளியைப் போர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்! முகம் தெரியாத அன்பு மனத்திற்குத் தன் தளர்ந்த கரங்களைக் கூப்பியபடி நன்றிசொல்லி நெகிழ்கிறார் நடைபாதைவாசி.

    அமாவாசை. அந்தப் பெரிய வீட்டின் பரந்த வாசற்பகுதி முழுவதும் ஏறாத்தாழ நூறு அந்தணர்கள், பெரும்பாலும் ஏழைகள், கூடியிருக்கிறார்கள். எங்கும், ஒரு தர்ப்பணம் செய்வதற்கு நூறுபேர் வருவதில்லை. பின்பு எதற்கு இத்தனை கூட்டம்? ஒரு கணவனும் மனைவியும் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வாரிவாரி அரிசி, வாழைக்காய், பணம் எல்லாம் அன்போடு வழங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பாலூற்றிய கஞ்சி, புழுக்கிய நேந்திரம்பழம் கொடுக்கிறார்கள். வயிறும் மனதும் நிறைந்து வீடு திரும்புகிறார்கள் அந்த ஏழைகள்.

    எல்லோரும் தாய்தந்தையர்க்குத்தான் பிறக்கிறோம். சிலர், இருப்பது தெரியாமல் இருந்து இறந்து சுமையாகிவிடுகிறார்கள். எங்கே எரிப்பது? எப்படிச் சடங்குகள் செய்வது? பணத்துக்கு எங்கே போவது? யாரோ ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கிறார்கள். மணி அடிக்கிறது. முக்கியமான அலுவலில் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கிறார் அழைக்கப்பட்டவர். மிகவும் சுகாதாரமான முறையில் தகனம் நடக்கிறது. முதல்நாள் சடங்குகள் வசதியாகச் செய்யப்படுகின்றன. ஒரு காசும் செலவில்லாமல்!

    krishnaநாம் இதுவரை பார்த்தது கங்கையிலிருந்து ஒரு கையளவுதான். இதுபோன்ற பற்பல புண்ணிய நிகழ்வுகளின் நாயகன்தான் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபரான டாக்டர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள். நினைத்தாலே நாவூறி நெஞ்சினிக்கும் ‘மைசூர்பா’ என்னும் மோகினியை உருவாக்கியவர்! ஊரெங்கும் கிளைகள். ஒவ்வொன்றிலும் கணக்கிலடங்காக் கூட்டம். அதுவும் அவரது தந்தையாரின் நினைவுநாளான நிறுவனர் தினத்தன்று, எந்தவிதமான அறிவிப்புமின்றிக் கடைகளின் வாசலில் நூற்றுக் கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்பது, ஓர் இனிப்புக்கடை என்பதைத் தாண்டி, பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இன்றியமையாத உறுப்பினர் என்றால் அது மிகையில்லை.

    ஒரு நண்பர் கேட்டார். ‘இவர்கள் எப்படி வியாபாரம் நடத்துகிறார்கள்?’ என்று. ஏனென்றால், இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஏறத்தாழ ஒவ்வொரு நாளுமே ஏதாவதொரு நல்ல நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது. கலை, இலக்கியம், சமயம், ஆன்மிகம், பயிலரங்கம், நூல் வெளியீடு என்று வகைவகையான நிகழ்ச்சிகள். ’ஞாயிறு தோறும் சந்திப்போம், நல்லதையே சிந்திப்போம்,’ ‘குறையொன்றுமில்லை’ ‘எப்போ வருவாரோ?’ ‘வண்ணத்தமிழ்’ போன்று பலப்பல நிகழ்வுகள். பெரும்பெரும் பேச்சாளர்கள், கவிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பெரிய அரங்கம். அரங்கம் நிறையக் கூட்டம். கீழே, படிக்கட்டில், ஏன், மேடைவரை கூட மக்கள் உட்கார்ந்து ரசிக்கிறார்கள்! பல நேரங்களில், அரங்கைத் தாண்டி அருகிருக்கும் பகுதிகளிலும் நாற்காலிகள் போடப்பட்டு, பெரிய திரையும் வைக்கப்படுகிறது.

    இதே கலைஞர்கள், பேச்சாளர்களுக்கு வேறு இடங்களில் இத்தனை கூட்டம் வருவதில்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சி என்றால் என்ன தனித்துவம்? இதெல்லாம் எப்படித் துவங்கியது? எதற்கு? கிருஷ்ணனிடமே கேட்போமே!

    ”நாம் எல்லோரும் குடும்பத்தில்தான் பிறக்கிறோம், வளர்கிறோம். விவரம் தெரிந்து வளரும்போது, அந்தக் குடும்பத்தில் நிலவுகின்ற சூழ்நிலைகள்தான் நம்மை வளர்க்கின்றன. அவற்றின் பாதிப்புதான் நாம்! அவற்றின் தாக்கம்தான் நமது குணசித்திரத்தை நிர்ணயிக்கிறது.”

    அப்படி உங்களை பாதித்தது எது? உருவாக்கியது எது?

    ”ஒருபக்கம் அப்பாவின் நேர்மை, கட்டுப்பாடு. இன்னொரு பக்க, கூட இருந்தவர்களின் தீய எண்ணங்கள். ஆம், நெருங்கியிருந்த சிலரின் தீய எண்ணங்கள் அந்த இளம்வயதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அப்பாவின் உறுதி, நான் நிலைகுலையாமல் இருக்க உதவியது. அப்பாவின் ஓய்வுக்குப் பிறகு, இந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதே சவாலாக இருந்தது.”

    என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

    ”நடவடிக்கையா? நடத்தைதான் நடவடிக்கை! நான் சிந்தித்தேன்; மனிதர்களில் சிலர் நல்ல எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். சிலர் தீய எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; அவர்கள், அதை வளர்க்கிறார்கள்; மற்றவர்களிடமும் பரப்புகிறார்கள். இடையில் இன்னும் சிலர், நல்ல எண்ணங்களைப் பேணவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வலுவில்லாமல் குழம்புகிறார்கள்.”

    “தீய எண்ணங்கள் உடையவர்களை எதிர்ப்பதால் பயனில்லை, அது சரியான உத்தியுமில்லை. நல்ல எண்ணங்களை நாமும் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் விதமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”

    ஆனால், இன்றைய உலகில், தீய எண்ணங்கள் உடைவர்களின் கைதான் ஓங்கியிருப்பதுபோல் தோன்றுகிறதல்லவா?
    ”இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல் தீய எண்ணங்களுக்கும் ஒரு வலிமை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். நான் கேட்கிறேன், தீய எண்ணங்களுக்கே வலிமை இருக்கிறதென்றால், நல்ல எண்ணங்களுக்கு? அவை இன்னும் வலிமையானதல்லவா? சத்தியமே வெல்லும், அறம்தான் வாழவைக்கும் என்பது நம் சான்றோர்களின் சாசனமல்லவா? எந்த நல்ல உத்தேசத்திற்கும் ஒரு பிரத்யேகமான சக்தி உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் அனுபவத்திலும் கண்டு வருகிறேன். எனவே, தர்ம சிந்தனையை மக்கள் மத்தியில் வளர்க்கும்படியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானித்தேன்.”

    இருந்தாலும், இந்த முயற்சிகள், இரைச்சல் நடுவே சங்கீதம்போல், விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடக்கூடுமல்லவா? அது உங்களைச் சோர்வடைய வைக்காதா?

    ”என்னுடைய நோக்கமே உடன்பாட்டுச் சிந்தனையை (Positive Attitude) வளர்க்கவேண்டும் என்பதே! அப்புறம் நான் எப்படிச் சோர்வடைவேன்?! ஏதோ நாம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியினால் மக்கள் மனத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனில்லை நான். வாழ்க்கைச் சூழல்களால் அலைக்கழிக்கப்பட்டு, பலவித மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ள நம் மக்களுக்கு ஓர் உபசாந்தி, ஒரு சிறிய நிவாரணம் ஏற்படுத்த முயற்சிப்போமே, அவர்கள் சிந்திக்கும் போக்கில் கொஞ்சம் தெளிவு ஏற்படுவதற்கு உதவுவோமே, என்றுதான் நினைத்தேன், நினைக்கிறேன். நம் பணி என்பது, ஒரு விதையை ஒழுங்காய் நடுவதோடு ஆரம்பித்து, அத்தோடே முடிந்தும் விடுகிறது! விளைவுகளை நிர்ணயிப்பது இறைவன்தான். இதில் நான் உறுதியாய் இருப்பதால் எனக்கு எந்தவிதமான மனச்சோர்வும் இல்லை.”

    இதை உங்கள் சமூகக் கடமையாகக் கருதுகிறீர்களா?

    ”அப்படியெல்லாம் இல்லை. இயல்பாகவே எனக்கு இதில் ருசி இருக்கிறது. இந்தப் பணிகளைச் செய்வதில் எனக்கு ஆனந்தம் இருக்கிறது. சமூகப் பொறுப்பும் உண்டு என்று சொல்லலாம். பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமி அவர்கள் சொல்வார்கள், ‘இந்த வாழ்க்கையில் நாம் கொடுப்பதைக் காட்டிலும் எடுப்பதே அதிகம்,’ என்று. (We consume much more than we contribute) அவருடைய இந்த வாசகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நாம் எல்லோருமே இந்த சமுதாயத்திற்குக் கடன்பட்டிருக்கிறோம். ஸ்வாமிஜியின் வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்தால், இந்தக் கடனை அடைப்பது சாத்தியமே இல்லை என்றே தோன்றும். ஏனெனில், நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், நாம் கடன்பட்டிருக்கிறோம் என்ற நினைப்பு நமக்குப் பணிவைத்தரும். நல்ல பார்வையைத் தரும். நம்மால் இயன்ற எல்லா வழிகளிலும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட வைக்கும்.”

    ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய வழி இதுதான். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால், இதில் சமூகப் பொறுப்புக்கும் மேலே ஏதோ ஒன்று தொனிக்கிறதே!

    ”அது சரிதான். எடுத்துக்கொண்டே இருப்பதால் கடன்பட்டுள்ளோம். இயன்ற விதங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கப் பழகவேண்டும். நம்முடைய ஆன்மிக விடுதலைக்கான சாவியும் இதுதான். கடனை அடைக்காமல் கடவுளைக் காண முடியாது!”

    சரியாகச் சொன்னீர்கள்! ’ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்,’ என்கிறார் வள்ளுவர்….
    ”எனக்கு அதெல்லாம் தெரியாது. யாராயிருந்தாலும் நல்லதைச் சிந்திக்கலாமே! அதற்குப் பணம் வேண்டாமே! எவராயிருந்தாலும், இயன்ற அளவு உடம்பால் உழைக்கலாமே! சாப்பிடுகிற வரை உழைக்கத்தானே வேண்டும்? கொடுக்காமல் விடுதலை இல்லை. இது இறைவனின் நீதி. இயற்கையின் நியதி. யோகிகள் கூட இதை உணர்ந்து இதற்கேற்பத்தான் வாழ்ந்தார்கள். ஊரில் வாழ்ந்தால் உழைத்தே ஆகவேண்டும்! ஊர் நன்மைக்காகக் கொடுத்தே ஆகவேண்டும்!”

    அது சரி, இது வியாபார உலகம். நீங்களும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தர்மம் – வியாபாரம், இவற்றை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

    ”இதோ பாருங்கள், கொடுப்பதில் கொடுப்பவனும் பயனடைகிறான். புண்ணியம், நல்வாழ்த்துக்கள் என்று. ஏன், விரும்பாவிட்டாலும், நம்முடைய எண்ணம் அதுவல்ல என்றாலும், இது தொழிலுக்கும் விளம்பரமாகி விடுகிறது. கொடுக்கக் கொடுக்கப் பிரகாசிக்கிறார்கள்!”

    “இன்னொன்று. நான் கொடுப்பதாக நினைக்கவில்லை. பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான். என்னுள் ஒரு நன்மை நுழையுமானால், அது என் மூலம் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை புத்தியைச் சரியான விதத்தில் உபயோகித்து முடிவு செய்கிறேன். மக்களுடைய நல்லாசிகளைப் பெறுகிறேன். நீரிலிருக்கும் மீன் அழுக்கைத் தின்கிறது. மீனுக்கும் வாழ்வு; தண்ணீருக்கும் நன்மை. சரிதானே?”

    இது ஒரு வியாபாரியின் பேச்சாகத் தெரியவில்லை. வள்ளுவரின் பேரறிவாளன் பேசுவதுபோல்தான் இருக்கிறது. கற்பகம் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதும், மலேசியாவில் இவருக்கு ‘சடையப்ப வள்ளல்’ விருது வழங்கப்பட்டதும் ஆச்சரியமாகவே இல்லை. தரமுள்ளவனே தரத்தை மதிக்கிறான். தர்மசிந்தனை உள்ளவனையே தாரணி கொண்டாடுகிறது.

    ஒரு மனிதன், நேர்மையாக இருந்து, தொழிலிலும் வெற்றி பெறமுடியும் என்பதை, கொடுப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை, கொடுப்பதன் மூலமே நாம் பொருளையும், புகழையும், அருளையும் பெறமுடியும் என்பதை, அறம் செய்வதே ஆன்மிக விடுதலைக்கு வழிகோலும் என்பதை இந்த அவசர உலகத்தின் இன்றைய தலைமுறையினர் எளிதில் நம்புவதில்லை. ஆனால், கிருஷ்ணனைப் போன்றவர்களின் வாழ்க்கை, இந்தப் பாரம்பரியமான பண்பாட்டு வாழ்க்கை நெறிக்கு நிமிர்ந்த சான்றாக விளங்குகின்றது.

    ஆளை விழுங்கும் அதிரடி நகைச்சுவைக்குப் பெயர்போனவர், சிவனைப் போன்ற சீற்றமும் கொள்ளக்கூடிய கிருஷ்ணன், மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர் என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ பேருக்கு நாள்தோறும் மேடை அமைத்துக் கொடுக்கும் இவருக்கு மேடை என்றாலே அலர்ஜி. டிது மேடைக்கூச்சம் அல்ல! அடையாளம் காணப்படாமல் அறம்செய்யவேண்டும் என்பதே இவர் அவா. இது எல்லோராலும் இயலும் என்று அடித்துச் சொல்கிறார்:

    ”நாம் ஒவ்வொருவரும் புறக்கணிக்கக் கூடாத, முக்கியமான விஷயங்கள் மூன்று: காலம், சக்தி, காசு! ஒன்றிருந்து ஒன்றில்லை என்றாலும், ஒன்றைக் கவனித்து இன்னொன்றை நிர்வகிக்கவில்லை என்றாலும் பயனில்லை. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப் புரிந்துகொண்டால் நாம் முழுநிறைவை அடையலாம். வாழ்வில், நிறைவைவிடப் பெரிய சாதனை ஏதுமில்லை.”

    நிறைவான மனிதரின் நிறைவான வாக்கியம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் மக்கள் இனிப்பு வாங்குவதற்காக நிற்கவில்லை, தரத்தைப் பெற்றுக்கொண்டு செல்லவே காத்திருக்கிறார்கள். கிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு, பொழுதுபோக்குவதற்காக மக்கள் வரவில்லை; தங்கள் சிந்தனையை மெருகேற்றிக்கொள்ளவே வருகிறார்கள்.
    ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவோடு திரும்புகிறோம்!

    நன்றி : அமுத சுரபி

    Share