இசைக்கவி ரமணன்

புகைப்படம் : ரமணன்
புகைப்படம் : ரமணன்

isai2

அந்த மூதாட்டியின் பெயர் எனக்குத் தெரியாது. அது யாருக்கும் அவசியம் இல்லை, அவள் உட்பட! எல்லோருக்கும் இட்டிலிக் கிழவி என்றல் தெரியும். ஒவ்வொர் இரவும் 10.30 மணிக்கு மேல், அழகர் கோவிலை நோக்கிச் செல்லும் அந்தச் சாலையில் சந்தடி அடங்கிய பிறகு, சந்தடியே இல்லாமல் தனது கடையை விரிப்பாள் பாட்டி. கடை என்றால் என்ன? அடுப்பு, இட்டிலிக் கொப்பரை, சட்டினிப் பாத்திரங்கள், ஒரு பெஞ்சு, உட்கார ஒரு ஸ்டூல். காசுபோட ஒரு மிட்டாய் டப்பா. முதலிலிருந்தே உடைந்தே இருக்கும் வாளியில் தண்ணீர். அவ்வளவுதான். ஒரு 11.30 மணிக்கு மேல்தான் களைகட்டும்.

நான்தான் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் குடியிருந்தேனா? பத்திரிகையைக் கட்டிப் போடும் பயல்கள் சொல்லாமல் லீவு போட்டுவிட்டால், என்னை உரிமையோடு வந்து கூப்பிடுவார்கள். ‘இன்னக்கி ஆள்செட்டுக் கொஞ்சம் கொறவா இருக்கு; ஒருக்கா வந்தீகன்னா…’ என்று இழுப்பார் கோமதி நாயகம். உடனே, பேண்டை மாட்டிக் கொண்டு உற்சாகமாகப் போய்விடுவேன். எந்தக் கூட்டத்திலும் எளிதாய்க் கலந்துவிடுவது என்க்கு இயல்புதான் என்றாலும், கட்டைச் சம்பளத்திற்கு இரவும் பகலும் போராடும் இந்த உழைப்பாளிகள் கூட்டத்தில் எப்போதும் ஒருவனாகவே இருந்தேன் நான். பார்சல் கட்டுவது, பெரும்பாலோர் நினைக்கிற மாதிரிச் சுலபமான வேலை இல்லை. அதற்குப் படிப்பு வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு அறிவும், திறமையும் வேண்டும், அதைப் படிப்பு கொடுக்காது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்! அதேபோல் வெவ்வேறு திசையில் புறப்படத் தயாராயிருக்கும் மூன்று வண்டிகளுக்கு உரிய கட்டுக்களைத் தயார் செய்ய, கடிகாரத்தில் கண்வைத்த படியே, உள் பார்சல், கடிதங்கள், உதிரி இணைப்புகள் இவை தவறாமல், ‘லேபிள்’ விடும் திறமை எந்த முதுகலைப் பட்டதாரியாலும் செய்யவே முடியாத ஒரு வேலை. அதற்கு அபூர்வத் திறமை வேண்டும். இதை, அந்தக் கல்லூரிக்குப் போகாத, பள்ளிப் படிப்பை முடிக்காத, தன்மானம் மிக்க, எப்போதும் சிரிக்கத் தெரிந்த உழைப்பாளிகளிடம்தான் கற்றுக் கொண்டேன். என் வியர்வைப் பெருக்கைப் பார்த்துவிட்டு, ‘ஒண்ணும் பதறாதீங்க’ என்று சிரித்தபடி உற்சாகம் ஊட்டுவார்கள். கன்வேயரில் இருந்து ‘அருப்பு’ எடுக்கும் பையனும், விறுவிறுவென்று வெற்றிலைக் கவுளி மாதிரி அதை எண்ணியெண்ணிப் போடும் பயல்களும், என் மீது கண்வைத்தபடியே தங்கள் காரியத்தைச் செய்வார்கள், புன்னகை மாறாமல். கற்றுக் குட்டிக்கு டால்ஃபின்கள் நீச்சல் கற்றுத் தருவதைப் போலிருக்கும். இந்த வேலையை நாம் செய்தால் தாமதமும், குழப்பமும்தான் மிஞ்சும் என்று சீக்கிரமே தெரிந்து கொண்டேன். ‘வாங்க, கட்டுவோம்,’ என்று கிண்டலில்லாமல் அழைப்பார்கள். கிழியாமல் ‘க்ராஃப்ட்’ பேப்பரை ஓங்கி அறையும் வித்தையையும், பிளேடு இல்லாமலேயே சணலை அறுக்கும் உத்தியையும் அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். ஆனால், பரபரவென்று பார்சலைக் கட்டுவதில் காலும், முதுகும் சோர்ந்து விடும். எனவே, நான் ‘லோடரா’னேன். எனக்கு எந்த ஊருக்கு, எந்த வண்டியில், என்னென்ன பார்சல்கள் போகின்றன என்பது அத்துப்படி. எனவே, இரண்டு கைகளிலும், இரண்டிரண்டு கட்டுக்களைத் தூக்கிச் சரியான வண்டியில் ஏற்றுவது எனக்குப் பிடித்திருந்தது. பயல்களுக்கும், எனக்கும் இதில் சுவாரசியமான போட்டி உண்டு! அவர்களிடத்தில் கட்டு மிஞ்சினால் நான் தோற்றேன். கட்டுக்காக நான் காத்திருந்தால் அவர்கள் தோற்றார்கள்! ஜெயிப்பது கணக்கில்லை, தோல்விதான் கணக்கு! அவர்களோடு சேர்ந்து உழைத்த ஒரே காரணத்தால் என் மீது அவர்களுக்கு அன்பு உண்டு. அன்பையும், மதிப்பையும் அவர்களால் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அதைத் தடாலடியாக வெளிப்படுத்தவும் தெரியாது. எல்லாம் புன்னகையும், ஒன்றிரண்டு வார்த்தைகளும்தான்! எனவே, எப்போதும் நாங்கள் இருவருமே வென்றோம்!

நள்ளிரவு தாண்டி வெளியூர் பதிப்பு முடிந்து, மதுரைப் பதிப்பை அடிப்பதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் கிடைக்கும். பயல்கள் அப்போது ஓய்வெடுத்துக் கொள்வார்கள். பகலிலும் ஏதாவது வேலை செய்து வயிற்றைக் கழுவ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. இதில், சிலர் கல்வி கற்பார்கள்; தங்கைக்குத் திருமணத்திற்காகக் குருவி போலச் சேகரிப்பார்கள். மிகவும் சிரமமான வாழ்க்கை. ஆனால், மான உணர்ச்சி மிக்கவர்கள். அவர்களது கண்ணியம் இன்றும் என்னைச் சுடும்.

ஏதோ யோசனையாக நின்றவனை, ‘வாய்யா போலாம்,’ என்று அழைப்பார் நந்தகுமார். அவர்தான் அச்சகத்தின் தலைவர். அவரது அம்பாசிடர் வண்டியில் ஒரு லாரியளவு ஆட்களை ஏற்றிக் கொண்டு நேரே கோரிப்பாளையம் இட்டிலிக் கிழவியிடம் விரைவார். பாட்டி, பதறாமல், அலுமினியத் தட்டில் இலைத் துண்டைப் பரப்பி ஒரு காரச் சட்டினி, ஒரு தேங்காய்ச் சட்டினியை ஊற்றுவாள். பிறகு, இட்டிலிக் கொப்பரையைத் திறப்பாள். ஆஹா! மோட்ச சாம்ராஜ்ஜியத்தின் மூடி திறந்தது போல், ஆவி, பலவித நளின உருவங்களாக வந்து நம்மை நெருடும்! கொப்பரையின் உள்ளே இட்டிலித் தட்டில், துணி மீது உருவாகி வெளிவரும் அந்த வெள்ளைத் தேவதைக்கு, என் போன்ற ஊர் சுற்றிகளின் ஒரே நம்பகமான துணைக்கு இணையாக ஒன்று இந்திர லோகத்திலும் கிடையாது!

‘பாட்டி! மிளகாய்ப் பொடி எங்க?’paniyaram-1

“வக்கிறோமில்ல.” என்று சற்றே சினத்துடன் சொல்லித் திரும்பி, அப்போதுதான் என்னைப் பார்த்து, சற்றே சிரித்து, ‘வாங்கப்பு!’ என்பாள். கூடவே, பழைய ‘இஞ்செக்ஷன்’ பாட்டிலில் நல்லெண்ணெய்.

‘நல்ல எண்ணதானா பாட்டி?’

“இந்தா! செக்கில ஆட்டுனதத்தேன் எடுத்துட்டு வர்றோமின்னு தெரியுமில்ல?”

‘சரி, இன்னும் கொஞ்சம் எடுத்துக்கவா?’ என்றபடியே இன்னொரு இஞ்செக்ஷன் பாட்டிலை எடுக்கப் போனால், ‘அடி ஆத்தி! இது என்ன?’ என்று இழுத்தாள் பாட்டி. ‘அட எக்ஸ்ட்ராவா காசு கொடுத்துர்றேன் பாட்டி!’ என்றேன். அதற்குப் பாட்டி,

“ஒன் துட்டக் கொண்டுபோயி கம்மாயில போடு! ஆரு கேட்டா? மொறையில்லாம எண்ணயக் கவுத்துகிட்டா அப்புறம் சீக்குத்தான். எதிலியும் ஒரு அளவு இருக்கணும். அதுக்குச் சொன்னேன்.”

என்ன அக்கறை? இங்கே, பண்பாட்டுக்கு, வியாபாரம் நிமித்தம்! தலையைச் சாய்த்துப் பாட்டியைப் பார்த்தேன். அவள் என் பார்வையைத் தவிர்த்தபடி, இன்னும் இரண்டு இட்டிலியைத் தட்டில் வைத்துவிட்டுத் தலைப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். நந்தகுமார் சாப்பிடும் ஒன்றரை இட்டிலிக்கு அவருக்குச் சுற்றிலும் பத்துப்பேராவது இருக்க வேண்டும்! ஓரிருவர், பிளாட்பாரத்தில் சாப்பிடுவதாவது என்று சங்கடமாக ஒதுங்கி நிற்பார்கள். நாங்கள் கேலி பேசிக்கொண்டே வெளுத்துக் கட்டுவோம்! கச்சேரி, நல்ல பக்க வாத்தியத்தால்தான் களைகட்டும். அதுபோலத்தான் இந்த மல்லிகைப்பூ இட்டிலியும், சட்டினிகளும், பொடியும், எண்ணெய்யும். அகாலத்தில் கடுமையாக உழைத்த பிறகு வரும் பசிக்கும், இந்தப் பாட்டிக்கடை இட்டிலியின் ருசிக்கும் நிகரே கிடையாது.

கச்சேரிக்கு முத்தாய்ப்பாய்ப் பக்கத்துக் கடை ‘விசாலம் காப்பி.’ மதுரையில், மீனாட்சிக்கு அடுத்தபடி அதுதான் எனக்குத் திருத்தலம்! மிகப் பெரிதாய்ப் பளபளவென்று தேய்த்து வைத்திருக்கும் ஃபில்டருக்கு, விபூதி, குங்குமம் வைத்திருப்பார்கள். நான் முதலில் சிவலிங்கம்தானோ என்று எண்ணிக் கன்னத்தில் போட்டுக்கொண்டதுண்டு!

அற்புதமான காப்பி! வெளிநாடுகளில் ஊர் சுற்றும்போதெல்லாம் நான் மதுரையைக் கோபமாகத்தான் நினைவுகூர்வேன். அங்கெல்லாம் காப்பி, வாயில் வைக்க வழங்காது. ஏகப்பட்ட காப்பியை, வாயகன்ற காகிதக்குடுவையில் பற்றிக்கொண்டு, மணிக்கணக்காய்க் குடிப்பார்கள். அட, நம்மூரிலேயே ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சென்று காப்பி குடியுங்கள். கழுநீரே தேவலாம் என்றிருக்கும்! விசாலம் காப்பி, நாள்முழுதும் ஒரே ருசியாகவே இருக்கும். விளிம்பில் நுரைக்குமிழ்கள் கண்சிமிட்ட, ஆவி நாசியில் நுழைந்து மனதை மயக்க, சற்றே ஓசையுடன் உறிஞ்சினால் நெஞ்செல்லாம் இளஞ்சூடு பரவி, ருசியும், இதமும் சேர்ந்து நம்மை அப்படியே நிற்கவைத்து வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்ல, கடைசி வாயை அருந்தும்போது கொஞ்சம் துக்கமாகத்தான் இருக்கும்.

‘என்ன? சரியா சாப்டீரா? இல்ல வழக்கம் போல கத பண்ணீரா?’ என்பார் நந்து. ‘சார்! நல்லா வயிறுமுட்டத் தின்னேன் சார்,’ என்றால், ‘கிழிச்சீர்,’ என்றபடிக் காருக்குப் போவார். நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர் திருப்தி அடைவதில்லை!

வரும்போது வந்து அதே ஆட்கள்தான், இப்போது காருக்குள் ஏறும்போது திணறுகிறது. எல்லாம், பாட்டியின் இட்டிலி மகிமை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *