இசைக்கவி ரமணன்

friendship_poster_by_dineshgreddy-d46z73p

வாழ்க்கை என்பது உறவுகளின் கூடாரம். பெரும்பாலும் உறவுகளை நாம் அமைப்பதில்லை. உதாரணமாக,

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை,
என் பிள்ளை எனைக்கேட்டுப் பிறந்தானா?

என்று கண்ணதாசன் பாடுவதுபோல், பெற்றோர்களை நாம் நிச்சயிக்கிறோமா? பிள்ளைகள் என்னும் உறவை நாம் ஏற்பாடு செய்கிறோமா? நாம் பிறக்கும்போதே ஒரு பெரிய குடும்பத்தின் பலவிதமான உறவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

சரி, திருமணம்? காதல் திருமணம் என்றாலும், பெற்றோர்கள் நிச்சயித்தாலும் கணவன் அல்லது மனைவி என்னும் உறவு ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், பெற்றோர்களோ, பிள்ளைகளோ, கணவனோ, மனைவியோ அமையவேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். ஏனென்றால், பெரும்பாலும் அந்த உறவுகள் நம் கையில் இல்லை. அவை நம்முடைய சாய்ஸ் இல்லை. எனவே, அவற்றை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.

ஆனால், நண்பர்கள் என்னும் உறவு அப்படிப்பட்டதல்ல. அது நாம், கவனமாக இருந்து அமைத்துக்கொள்ள வேண்டிய உறவாகும். எனவேதான், திருவள்ளுவர்,

நாடாது நட்டலிற் கேடில்லை, நட்டபின்
வீடில்லை நட்பாள்பவர்க்கு

என்றார். ஆராயாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் தீங்கானது ஒன்றுமில்லை. ஏனென்றால், நட்பு என்பது ஏற்பட்டபின், அதிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார்.

மற்ற உறவுகளுக்கும் நட்பு என்னும் உறவுக்கும் உள்ள வேறுபாடு, அதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதே.

ஒற்றுமை என்ன? மற்ற உறவுகளைப் போலவே — அதாவது, பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி – போலவே, நட்பு என்னும் உறவிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார் வள்ளுவர். உறவுக்கு அவர் வழங்கும் மதிப்பு இதிலிருந்து புரிகிறது.

திருமணம் என்னும் நிகழ்வு அந்நாளில் கைத்தலம் பற்றி அக்கினியை வலம்வருவதோடு முடிந்தது. அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கை தொடங்குகின்றது.

நட்பும் அப்படித்தான். ராமனும், சுக்ரீவனும் நண்பர்களாகும்போது, அக்கினியை வலம் வந்தார்களாம்! இனி, நமது இன்பதுன்பங்கள் சமமானவை, நாம் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்னும் உறுதியை இருவரும் ஒருமித்து எடுத்துக்கொள்வது, திருமணத்திலும், நட்பிலும் அன்று இருந்தது என்ற சேதி நமக்கு முக்கியமானது.

சரி, ஒரு நண்பன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், எப்படிப்படவனாகத் தன் நண்பன் இருக்கிறான் என்பதையும் “கண்ணன் என் தோழன்” என்னும் பாட்டில் பாரதியார் நமக்கு நயம்பட விளக்குகிறார். நட்பு என்றால் என்னவென்பதைத் திருவள்ளுவரை விடவும் யாரும் திறம்படச் சொன்னதில்லை. இரண்டையும் சேர்த்துப் பார்ப்போம்:

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்tr3045_hand_of_friendship_poster
ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான்;

நண்பன் என்பவன் நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவன் அல்ல. நமக்கு எப்போதும் இதமான வார்த்தைகளையே சொல்லி நம்மை ஆதரிப்பவன் அல்ல. நாம் நம்முடைய மனிதனென்னும் நிலையிலிருந்து தவறிவிடாமலும், நாம் நம் மனித நிலையை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவுபவனே நண்பன்.

நம்மில் பொய்யை அனுமதிக்காதவன்தான் நம் நண்பன். ஒரு பணக்கார வீட்டு இளைஞனைச் சுற்றி நின்று ஜால்ரா அடிப்பவர்கள் நண்பர்களே அல்ல. இதைத்தான் திருவள்ளுவர்,

நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு

என்றார். சும்மா சிரித்துவிட்டுப் போவதல்ல நட்பு. இதை வள்ளுவரும் பாரதியும் எவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள்!

விசாரணையின்றியே உடனே உதவ வருபவன் நண்பன். ஒரு துன்பம், ஆபத்து என்றால் அடுத்த கணமே ஓடிவந்து அங்கு நிற்பான் நண்பன்.

ramஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

இதைவிடச் சிறந்த உவமையைச் சொல்ல முடியுமா? கட்டிய துணி அவிழ்ந்தால், அடுத்த கணமே நமது கை அதைச் சரிசெய்வது போல, நம்முடைய துன்பங்களை நீக்குபவன் நண்பன். அதற்குப் பெயர்தான் நட்பு.

இதையே பாரதியார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடுவான்; – எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடு வான்; – என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான்;

”நான் சொல்லும் முன்னுணர்வான்” என்னும் வரியில் அடங்கியுள்ள ஆழத்தைக் கவனியுங்கள். ஒரு நல்ல நண்பனுக்கு விளக்கங்கள் தேவைப்படுவதில்லை. ஒருவன் நல்ல நண்பனாக இல்லாதபோது, எந்த விளக்கத்தாலும் பயனில்லை. இதுதான் நட்பின் அடையாளம். இதுதான் உறவின் நாகரிகம்.

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

A friend is one who is available for you the moment you need him! எவ்வளவு அழகு! நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்திற்கோ, திருமணத்திற்கோ, அல்லது வேலைக்குச் சேர்வதற்கோ சிறப்பான உடையணிந்து செல்கிறீர்கள். அப்போது, தெருவில் நடந்து செல்லும்போது மழை பொழிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கணத்தில், உங்கள் வாழ்க்கையிலேயே உங்களுக்கு மிகமிகத் தேவையானதாக நீங்கள் கருதக் கூடிய ஒரே பொருள் குடைதான் அல்லவா!! அது போலத்தான் பசி நேரத்து உணவு. அதுதான் நட்பு. அதைத் தருபவனே நண்பன்.

சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இரண்டே கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.
ஒன்று, நண்பர்களாவதற்கு ஒரே மாதிரியான ரசனைகள் தேவையில்லை; ஒரேவிதமான உணர்ச்சிகளே நல்ல நட்புக்கான வாய்ப்பை அமைக்கும் என்கிறார் திருவள்ளுவர்:

புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

இது மிகவும் ஆழமானதும் நுட்பமானதும் கூட. எனக்கும் உங்களுக்கும் இந்த உணவு பிடிக்கும், அந்த நடிகரைப் பிடிக்கும் என்பது நம்மிடையே நட்பு வளர்வதற்குக் காரணமாகாது. ஆனால், எனக்கும் உங்களுக்கும் இந்த தேசம் பிடிக்கும், மனிதர்களைப் பிடிக்கும், அவர்கள் நல்வாழ்வு பெறுவது பிடிக்கும் என்பன போன்ற உணர்ச்சிகள் நம்மிடையே நல்ல நட்பு அமைவதற்குக் காரணங்களாக அமையும்.

ஆழமான நட்புக்கு ஆழமான உணர்ச்சிகளே காரணங்களாகின்றன.

இரண்டாவது. கடவுளை வழிபட ஒன்பது விதமான பக்தியைக் குறிப்பிடுகிறார்கள். அதில் நட்பு மூலம் இறைவனை அடைவதை ஒரு பாதையாகவே வகுத்திருக்கிறார்கள். இந்த நட்புதான் இறைக்காதல், அதாவது, Divine Love, என்னும் தளத்திற்கு உயர்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த நிலையை எய்தியவர்களே. அவர்களுள்ளும் சுந்தரரும், திருமங்கையாழ்வாரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆண்டாளும் மீராவும், இறைவன் மீது கொண்ட நட்பைக் காதலாக்கி, ஒரு புதிய வழியையே படைத்தார்கள்.

ஏன், இறைவனை நண்பனாகக் கருதுகிறோம் தெரியுமா? நண்பன் என்பவன் நமது மனசாட்சியின் வடிவம்! ஆம், நம்முடைய மனசாட்சிதான் வேட்டியோ, புடவையோ, ஜீன்சோ, லுங்கியோ அணிந்துகொண்டு நம் நண்பனாக எதிரே நிற்கிறது!

யார், இறைவனுக்குத் தனது மனசாட்சியை ஆசனமாக அமைக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள். அவர்களே அவனை அடைகிறார்கள்.

எனவேதான், இறைவனிடம் நட்புக்கொள்வது என்னும் ஏற்பாடு அமைந்தது.

நண்பர்களே! நட்பு என்பது வானம் போல. அது வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை. நட்பு வாழ்க!

நலமே விளைக நமக்கு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.