Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 196 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் மீண்டும் அடுத்தொரு மடலில் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலத்தின் சுழற்சி கனவேகத்தில் நிகழ்கிறது. காலமாற்றத்தின் நிகழ்வோடு சார்ந்து நிகழும் பலமாற்றங்களில் அரசியல் மாற்றம் என்பது மிக முக்கிய நிகழ்வாகிறது.

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அரசியல்களம் இப்போது மிகுந்த வித்தியாசமான ஒரு கோலத்தை எடுத்துள்ளது. அன்றாடம் ஊடகங்களில் உலவிடும் பல செய்திகளில் சில உள்ளத்தைச் சிலிர்ப்படையச் செய்ய வல்லவை. அடுத்தமாதம் 23ஆம் திகதி நடைபெறவிருக்கும் “ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதா? விலகுவதா? எனும் பொதுஜன வாக்கெடுப்பு இப்போது ஊடகங்களை முழுவதுமாகப் பாதித்திருக்கிறது.

    நிலைத்திருக்க வேண்டும் எனும் அணிக்கு தலைமைத்துவத்தை எமது பிரதமர் கமரன் எடுத்திருப்பதைப் போலத் தென்படுகிறது. அதேநேரம் விலகுவது எனும் அணியைப் பிரதமரின் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கடந்தவாரம் வரை லண்டன் நகரபிதா (மேயர்) வாகப் பதவி வகித்த பொரிஸ் ஜான்சன் அவர்களும் எடுத்திருக்கிறார்.

    இவ்விரு அணிகளுக்கிடையில் ஏற்படும் விவாதங்களினால் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நிரந்தரமான மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்த ஒரு நிலையில்தான் கடந்தவாரம் லண்டன் நகரபிதாவுக்கான (மேயருக்கான) தேர்தல் இடம்பெற்றது. பல கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் அந்தத் தேர்தலில் நின்றிருந்தாலும் அனைத்துப்பேரின் கவனமும் இருவரின் மீதே இருந்தன.

    அவர்களில் ஒருவர் கன்சர்வேடிவ் வேட்பாளர் சாக் கோல்ட்சிமித் (Zac Goldsmith), மற்றவர் லேபர் கட்சி வேட்பாளர் சாடிக் கான் ( Sadiq Khan ). இங்கே முக்கியமான விடயம் என்னவெனில் சாடிக் கான், ஒரு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பிரித்தானிய ஆசியப் பிரஜை ஆவார்.

    யார் இந்த சாடிக் கான்?

    Sadiq_Khanபாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தின் எட்டுக் குழந்தைகளில் ஜந்தாவது குழந்தை சாதிக் கான். இவரது தந்தை ஒரு சாதாரண பஸ் சாரதி. நகரசபை மூலம் வசதி குறைந்தவர்களுக்காகக் குறைந்த வாடகையில் கொடுக்கப்படும் இல்லத்தில் வாழந்தவர் இவர்.

    இங்கிலாந்தின் வடலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர் மத உரிமைச் சட்டப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். லேபர் கட்சியில் இணைந்து அரசியலில் குதிக்கும் வரை மனித உரிமை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு லேபர் கட்சியில் இணைந்து தான் வாழ்ந்த பகுதியான டூட்டிங் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களின் அமைச்சரவையில் சமூகப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் லேபர் கட்சி எதிர்க்கட்சியானதும் எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் அவர்களின் நிழல் அமைச்சரவையில் நிழல் சட்ட அமைச்சராகப் பணிபுரிந்தார்.

    இன்று மேற்குலக நாடுகளின் தலைநகரங்கள் ஒன்றில் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய இஸ்லாமியர் எனும் பெருமை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை நடந்த மேயர் தேர்தல்களில் என்றுமில்லாத அளவில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று லன்டன் நகரின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வை மாசுபடுத்துவது என்ன? இந்தத் தேர்தலின் முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் அரசியல் நாகரிகச் சீரழிவே! ஆமாம் சாடிக் கான் அவர்களின் வெற்றி நிச்சயம் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய வேளையில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த சக் கோல்ட்சிமித் அவர்களின் சார்பாக நடைபெற்ற பிரசார வழிமுறைகள் பலரின் வெறுப்புக்கு அவரை ஆளாக்கி விட்டது.

    ஆமாம்! சாதிக் கான் இஸ்லாமியர் எனும் காரணத்தால் சமீபத்திய மேற்குலக பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ஒருவிதமான பீதியுடன் அவரைச் சம்பந்தப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இப்பிரசார யுக்திகளை கேள்விக்குறியாக்கியது.

    பலமுனைகளில் இருந்து கன்சர்வேடிவ் கட்சியின் மீதும், அதன் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் மீதும் காரசாரமான விமர்சனங்கள் விழுந்தன. கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்தவர்களே இத்தகைய பிரசாரங்கள் அரசியல் நாகரிகத்திற்கு முரணானது என்று விமர்சித்தார்கள்.

    சாக் கோல்ட்சிமித் அவர்களின் சகோதரி இத்தகைய பிரசார யுக்தியைத் தனது சகோதரரா கையாளுகிறார் என்று பகிரங்கமாகவே ஆச்சரியப்பட்டார்.  என்னுடைய சகோதரர் இத்தகைய வழிகளைக் கையாளும் சுபாவம் படைத்தவரல்ல என்று விசனப்பட்டார்.

    அதுதவிர சாதிக் கானுடன் ஒன்றாக மேடையில் தோன்றிய ஒரு இஸ்லாமிய மதகுரு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் உடன் தொடர்புடையவர் என்று பிரதமர்  கமரன் அவர்களே பாராளுமன்றத்தில் கூறியது மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவர்கள் குறிப்பிட்ட அம்மதகுருவுடன் கன்சர்வேடிவ் கட்சிக்குத் தொடர்பிருக்கிறது என்பதோடு அவர் எந்த வகையிலும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் என்பதும் நிரூபணமாகியது.

    இப்போது அம்மதகுரு பிரதமரிடமிருந்தும், பாதுகாப்பு அமைச்சரிடமிருந்தும் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார். சாதிக் கான் வெளியிட்ட கொள்கைப் பிரகடனங்களுக்காகவும், அவரது திறமையான தேர்தல் பிரசாரத்தினாலுமே அவர் வெற்றியீட்டினார்; அதற்குரிய கெளரவத்தை அளிக்காமல் அவரின் மதத்தைத் சுட்டிக்காட்டிச் சிறுமைப்படுத்த விளைவது எவ்வகையில் நியாயமாகும் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து கிளம்புகிறது.

    எதுவித ஆதாரமுமில்லாமல் அவர் இஸ்லாமியர் எனும் ஒரே காரணத்திற்காக அவரின் மீதான விமர்சனங்களை முன்வைப்பது என்பது நிறத்தூவேஷத்தின் அடிப்படையில் எழுந்ததா? எனும் கேள்விகூட நியாயமானதே!

    லண்டன் ஒரு பல்லினக்கலாசார தலைநகரம். இங்கு பல்லின மக்கள், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இத்தகைய ஒரு நகரின் மேயராக ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் தெரிவு செய்யப்படுவது இந்நகரின் அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இந்நாட்டு மக்களுக்கும், எனக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தை அளித்த மக்களுக்கும் உண்மையுள்ளவனாகச் சேவையாற்றுவேன் என்று சூளுரைக்கிறார் சாதிக் கான்.

    மதத்தின் அடிப்படையில் ஒருவரின் திறமையை மதிப்பிடுவது என்றுமே அறத்துடனான அரசியலுக்கு வழிவகுக்காது. புலம்பெயர்ந்து இந்நாட்டில் வாழும் எம் அனைவருக்கும் இவரது வெற்றி ஒரு மனத்துணிவையளிக்கிறது. அதேபோல் அவரும் மிகவும் திறமையாக மக்களுக்குச் சேவையாற்றி எம் அனைவருக்கும் அவர் மேலுள்ள அபிப்பிராயங்களையும் உயர்த்தி வைப்பார் எனும் நம்பிக்கையோடு அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 195 )

    அன்பினியவர்களே,

    இனிய வணக்கங்கள். இந்தவார மடலில் என் இதயம் தொடும் இனிய உணர்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவாவுடன் உங்களை அண்மிக்கிறேன்.

    யார் நான் இவ்வுலகில் ஓர் உயிராக அவதரிக்க மூலகாரணமாக இருந்தவரோ, யார் என்னைக் கருவாக்கிய கர்த்தாவோ அவர், அதாவது என் தந்தை, அமரர் சக்திவேல் அவர்கள் இவ்வுலகில் அவதரித்தது நேற்று; அதாவது மே மாதம் 4-ஆம் திகதி.

    வருடங்கள் நூறாகிறது. ஆம், எனது தந்தையின் நூறாவது பிறந்தநாள்.

    பிறந்தது முதல் மறைந்தது வரை என் தந்தை சந்தித்த நிகழ்வுகள் பல. அவையனைத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட ஓர் உன்னத இதயத்தின் சொந்தக்காரர் என் தந்தை. என் எழுத்துக்களின் ஆரம்பம் எங்கே என்பதைத் தேடிச் செல்லும்போது அதன் ஆரம்பத்தளிர்கள் என் தந்தை எனும் தோட்டத்தில் துளிர்த்திருப்பதே உண்மையாகும்.

    பிறந்தது முதல் மறைந்தது வரை அசைவமே உட்கொள்ளாத என் தந்தையின் குடும்பத்தில் அவரைத்தவிர அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அசைவ உணவுக்காரர்களாகவே இருந்தோம். ஆனால் உணவு, உடை, கல்வி, வாழ்க்கைத்துணைத் தெரிவு எனும் அனைத்திலும் எமக்குப் பரிபூரண சுதந்திரம் அளித்தவர் எனது தந்தை.

    யாழ்நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் மூத்தவர் குழந்தைப் பிராயத்திலே தவறிப்போக, தலைப்பிள்ளையானார் என் தந்தை சக்திவேல். இரண்டு சகோதரிகளுக்கு மூத்தவரான இவர் என்ன பெரிய தலைவரா? சுதந்திரப் போராட்ட வீரரா? எழுத்தாளரா?கவிஞரா? இல்லை பெரிய அறிவாளியா?

    இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்திலே உதவித் தொழில்நுட்பவியலாளராக தனது சேவையைத் தொடங்கித் தனது கடின உழைப்பினால் நிறைவேற்றுப் பொறியிலளாராக கடமையாற்றி ஓய்வுபெற்ற அவர் எனது தந்தை எனும் தகுதியைத் தவிர வேறு எதையும் பெரிதாகச் சாதித்தவரல்ல.

    தந்தை எனும் பதத்தின் வரைவிலக்கணத்தை எனக்குப் போதித்தவர். தந்தை எனும் ஸ்தானத்தின் தாத்பரியத்தை உணர்த்தியவர். பொறுமைக்கோர் உதாரணமாகக் கண்முன்னே காணும் உதாரணமாகத் திகழ்ந்தவர் என் தந்தை.

    நான் பிறந்தது முதல் அவர் மறையும் வரை விளையாட்டாகக் கூட அவர் கைகள் என்னை தண்டித்ததேயில்லை. அவர் என்னை நோக்கிக் கடுமையான சொற்களை வீசிய கணங்களை ஒற்றைக் கையில் எண்ணி விடலாம். என்ன விதமான தவறிழைத்தாலும் அதனைத் திருத்தும் விதம் பொறுமையாக அறிவுரை கூறிவதில் அவருக்கு நிகர் அவரேதான்.

    என்றுமே எதையும் எவரிடமும் பெரிதாக எதிர்பார்த்தவரில்லை என் தந்தை. அவர் இதயத்தில் தன் வாரிசுகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன கனவு கண்டிருந்தாலும் நாம் தேடிக் கொண்ட, எமக்குக் கிடைத்த வாழ்வினை மிகவும் மகிழ்வாக ஏற்றுக் கொண்டவர் என் தந்தை.

    அவர் வாயிலிருந்து எத்தனையோ பொன்மொழிகள் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் அதை அப்போது புரிந்து கொள்ளமுடியாதவகை என் நெஞ்சினை வாலிபம் எனும் முறுக்கு மாயத்திரை கொண்டு மறைத்திருந்தது.

    இன்று என் எழுத்தில் தொனிக்கும் எத்தனையோ எழுத்துத்துளிகளைப் பொழியும் மேகத்தின் சொந்தக்காரர் என் தந்தை என்றால் அது மிகையாகாது. அவரது பணிவான சுபாவத்தை அவரது ஏமாளித்தனமாக எண்ணிக்கொண்டோர் பலருண்டு. ஆனால் அதை எப்போதும் பொருட்படுத்தியதில்லை. எதற்குமே ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்து விடுவார்.

    தான் எடுத்துக் கொண்ட பணியில் நேர்மையைக் கடைப்பிடிப்பார். செல்லும் பாதையில் அடுத்தவர் மனம் நோகக்கூடாது என்பதில் மிகுந்த கவனமெடுப்பார். தன் குடும்பம், தனது குழந்தைகள், மனைவி அனைவரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதில் சிரத்தை எடுப்பார்.

    இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கும் நினைவொன்று… எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். ஒரு சைக்கிள் விபத்தில் என் காலில் காயம் ஏற்பட, என்னைத்தூக்கிக் கொண்டு வீடு கொண்டு சென்றார்கள். ஓடோடி வந்த என் தந்தை என்னைத் தனது கைகளில் தாங்கிக் கொண்டார், அவரின் கண்களில் தெரிந்த கலக்கம் என்னை வாட்டியது.

    அக்காயம் ஆறுவதற்காக தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மாதம் எனக்கு பென்சுலின் ஊசி ஏற்றினார்கள். கதிரையில் என்னை உட்கார்த்தி, அக்கதிரையைத் தூக்கி காரில் வைத்து வைத்தியர் வீட்டில் தூக்கிக் கொண்டு செல்வார் என் தந்தை.

    பின்பு நான் ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பும், லண்டனில் எம்மோடு வசிக்கும்போது எப்போதாவது என் முகம் வாடியிருந்தால், ” என்ன ராசா, உடம்புக்கு என்ன செய்கிறது?”என்பார் என் தந்தை.

    என்னைப் பொறுத்தவரை என் தந்தை சக்திவேல் ஒரு சகாப்தம். அவர் எனக்கு வாழ்வு மட்டும் தரவில்லை இன்று நான் யாராக இருக்கிறேன் என்பதற்கு அத்திவாரமாக இருந்தவர்.

    என் தந்தையின் நூற்றாண்டு வேண்டுகோளாக இந்தச் சகோதரன் உங்களிடம் வேண்டுவதெல்லாம் உங்கள் பெற்றோர் உயிரோடு இருப்பார்களானால் அவர்களின் பெருமையை, அவர்கள் உங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் சேவைகளை அவர்கள் வாழும்போதே போற்றி அவர்களுடன் மகிழுங்கள்.

    என் தந்தை குற்றமேதுமற்றவர் என்பதல்ல என கருத்து. அவரும் சாதாரண மனிதனே… எனது கண்களுக்குக் குறையாகத் தென்படாதது எல்லாம் நிறைவானது என்று வாதிடும் முட்டாளல்ல நான். ஆனால் அவர் என் தந்தை என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது பெயரில் உள்ள “சக்தி”சக்திதாசனில், சக்தியாகத் திகழ்வது அவரே!

    என் தந்தை மறைந்து இவ்வருடத்தோடு பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எத்தனை, எத்தனை பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் அவரின் நினைவுகள் என் இதயத்தில் இனிய ராகங்களை இசைத்த வணமே இருக்கும்.

    அப்பா எனும் ஒரு சொல்லில்
    இத்தனை அர்த்தங்களா?
    இத்தனையையும் அம்மூன்றெழுத்துக்களில்
    அடக்கியதால் தான் நீங்கள்
    சக்திவேல் ஆகினோர்களோ?
    நீங்கள் காட்டிய பொறுமை
    உங்களுக்கேயுரித்தான விவேகம் அப்பா!
    இவற்றில் ஓரிரு வீதமாவது
    என்னோடு இயைந்திட அருளுங்கள்!
    என் கைவிரலில் வலுவிருக்கும் நாள்வரைச்
    “சக்தி” எனும் உங்கள் ஆயுதம் எனக்கு
    ஓயாது எழுதும் சக்தியைக் கொடுக்கட்டும்!
    புவியில் நீங்கள் பிறந்து ஒருநூறு வருடங்கள்
    பறந்தே போயின அப்பா!
    நீங்கள் மறைந்து கூட பத்தோடு ஓரெட்டு அகவைகள் கடந்து போயின…
    உங்கள் நினைவுகளோடு பாதங்களைப் பணிந்து
    ஆசி வேண்டுகிறேன் அன்புத் தந்தையே!

    எனது அன்பு உறவுகளே ! எனது மனதில் நிழலாடிய இனிமையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிற அருமையான சந்தர்ப்பத்தையளித்த ’வல்லமை’ குழுவினரையும், எழுத்து எனும் பெயரில் நான் கிறுக்கும் அனைத்தையும் படிக்கும் அன்பு உள்ளங்களையும் எனக்கு அளித்தது இறைபதம் அடைந்தஎன் பெற்றோரின் ஆசிகளே என்பது உண்மையாலும், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 194 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    மற்றொரு வாரம் மலர்ந்தது. மற்றொரு மடல் பிறந்தது. மடலின் மூலமாக மனம் திறக்கும் சந்தர்ப்பம் மனதின் உணர்வுகளின் வடிகாலாகிறது.

    காலங்கள் மாறும்போது மனிதர்களின் கலாச்சாரமும் மாறுகிறது என்பது யதார்த்தம் ஆனால் அந்தக் கலாச்சார மாற்றத்தின் எல்லை எது என்பதே கேள்வியாகிறது. 1920ஆம், ஆண்டு உடுத்தப்பட்ட உடையின் கலாச்சாரம் 2016ஆம் ஆண்டு மாறிவிட்டது, ஆனால் மனிதர்களுடைய உறவுமுறை, மனிதர்களுடைய அடிப்படை கலாச்சாரம் மாறிவிட்டது என்று கூறிவிட முடியுமா ?

    காலத்தோடு மாற்றம் அடையக்கூடியவை சில மட்டுமே ! அனைத்தும் மாறி விட்டால் அதன்பின்பு மானிடம் என்பதன் அர்த்தமே மாறிவிடும்.

    மாற்றங்களை ஏற்று அனுசரித்து நடப்பதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது என்பது ஒரு பொதுப்படையான கருத்து. அதற்காக மாற்றங்கள் அனைத்தும் சரியானவை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா ?

    அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம்.. அம்மாற்றங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அமைந்திருப்பது அவசியம். அரசியல்வாதிகள் தமது நோக்கத்தை நிறைவேற்றி மக்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டுமானால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டும்.

    அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக அவர்கள் எவ்வழியையும் கையாளலாம் என்பது நீதியாகுமா ? அடுத்தவர்களின் மீது ஏறி தாம் தமது இலட்சிய இலக்கை அடைந்து கொள்வது அரசியல் நாகரீகம் ஆகுமா ?

    இங்கேதான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது. “அரசியல் நாகரீகம்” என்பது என்ன ? இவ்வரசியல் நாகரீகம் காலத்தின் மாற்றத்தினால் மாறுபடுவதை ஜனநாயக நீரோட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜீரணித்துக் கொள்ள முடியுமா ? காலமாற்றம் என்பது எவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு வரையறை வேண்டும்.

    உலகெங்கும் இன்றைய அரசியல் அரங்கின் நடப்பு ஓரளவு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் நாகரீகம் என்பது இன்று தனது உண்மையான் அர்த்தத்தை இழந்து பதவி மோகம் கொண்டவர்களின் கைகளிலும், மொழிவெறி, இனவெறி, மதவெறி கொண்டவர்களின் கைகளிலும் பந்து போல உருட்டி விளையடப்படுவது போலத் தெரிகிறது.

    எப்படியாவது, எந்தவகையிலாவது பதவியைக் கைப்பற்றிக்கொண்டால் போதும் எனும் மனப்பான்மையில் இன்றைய முக்கிய ரசியல் பிரமுகர்கள் குறிப்பாக இம்மேலைத்தேச அரசியல் அரங்கிலே நடந்து கொள்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    சமீபகாலங்களாக நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளும், அவ்வரசியல் அரங்கிலே மாற்றம் எனும் பெயரில் ஏற்படுத்தப்படும் நடவடிக்கைள் மனக்கிலேசத்தைத் தூண்டுபவையாகவே இருக்கிறது.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் எனும் கூக்குரல் வலுவடைந்து அது சர்வசனக் கருத்துக் கணிப்புக்கு விடுமளவிற்கு கூர்மையடைந்திருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா இல்லையா என்பதை அதுன் அனுகூலம், பிரதிகூலத்தின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுப்பது இங்கிலாந்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் வெளியேற வேண்டும் எனும் அணியில் வாதிடுவோரின் உட்கருத்து சிறிதளவு இனவெற்றியின் அடிப்படியில் அமைந்துள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு குடியரசுக் கட்சியின் சார்பில் வெகுவேகமாக, வெகு அமோகமாக முன்னேறிவரும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் கொள்கைப்பிரகடனங்கள் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவை அந்நியப்படுத்துபவையாக இருந்தும் அவருக்கு அவரது கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு அச்சத்துடன் கூடிய ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

    இங்கிலாந்திலே அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் லண்டன் மாநகர மேயருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் தமது வெற்றிக்காக எதிர்வேட்பாளர் மீது அரசியல் நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற ஒரு நிலமை தென்படுகிறது.

    லண்டன் மேயர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான லேபர் கட்சியின் சார்பில் போட்டியிடும் “சாடிக் கான்” எனும் பிரித்தானிய பிரஜையான இஸ்லாமியருக்கு வெற்றியீட்டக்கூடிய நிலமை தென்படுகிறது. அவரது செல்வாக்கைச் சரிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ” சாக் கோல்ட்சிமித்” என்பவரின் பிரச்சாரக்குழு “சாடிக் கான்” சில தீவிரவஅட்த இஸ்லாமியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் எனும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

    “சாடிக் கான்” அவர்களது ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் லண்டன் மேயரான லேபர் கட்சியைச் சார்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்கள் யூத மக்களுக்கெதிரான சில வாதங்களை வானொலிப் பேட்டியில் கூறியிருந்தார் என்பதற்காக அவரை லேபர் கட்சி தற்காலிகமாக தமது உறுப்பினர் எனும் அந்தஸ்த;இருந்து நீக்கியுள்ளார்கள்.

    இன்று அதுபற்றி வானொலிக்குப் பேட்டியளித்த தற்போதைய லண்டன் மேயர் “பொரிஸ் ஜான்சன்” நீக்கப்பட்ட உறுப்பினர் “சாடிக் கான்” அவர்களின் ஆதரவாளர் என்று கூறி , “சாடிக் கான்ன்” அவர்களையும் இச்சர்ச்சைக்குள் சம்மந்தப்படுத்த முயன்றிருக்கிறார்.

    “அரசியல் நாகரீகம்” என்பது தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து மக்க்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை முன்வைக்கும் கொௐகைகளின் அடிப்படையில் விவாதங்களை நடத்துவதே !

    ஆனால் இன்று நடப்பதோ மனதின் வினாக்களுக்கு விடையளிக்காமல் மேலும் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்கிறது.

    காலம் மாறட்டும், மனிதர்களும் மாறட்டும், மனிதாபிமானம் மாற முடியுமா ? அப்படி மாறினால் நாம் இன்னமும் எமக்கு மானிடர் எனும் முத்திரை குத்திக் கொண்டிருப்பது தகுமா ?

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (193)

    —  சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் பிறந்த அனைவரது வாழ்விலும் எது நிச்சயமோ இல்லையோ அனைவரும் ஒருநாள் இவ்வுலகை விட்டுப் பிரிவது நிச்சயமே ! ஆனால் அம்முடிவு ஒவ்வொருவருக்கும் எப்போது வரும் என்பதுதான் வாழ்வின் சூட்சுமமே ! இதையே அழகாய் கவியரசர் கண்ணதாசன் ” கருவாகிப் பத்துமாதங்களில் பிறக்கும் என ஒரு குழந்தைக்கு விதிக்கப்பட்ட விதி, அது எப்பொழுது மறையும் என்பதை மட்டும் ரகசியமாக வைத்த இறைவன் தன்னையும் அங்கே மறைத்து வைத்தான்” என்று குறிப்பிடுவார்.

    எதற்காக திடீரென இவ்வாரம் இந்த வாழ்வின் யதார்த்தம் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது அவசரப்படாதீர்கள் அவசியம் அறிவீர்கள்.

    ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கலாச்சாரப் பின்னணி இருக்கிறது. அவை எந்த அளவிற்கு இந்தக் காலகட்டத்தில் பின்பற்றப்படுகிறது என்பதுவே கேள்விக்குரிய விடயம். பண்டைய காலங்களில் ஒவ்வொரு சமூகமும் தமக்கென ஒரு இராஜ்ஜியத்தையும், அந்நாட்டையும், மக்களையும் உள்ளடக்கிய இராஜிய பரிபாலனத்திற்கு ஒரு அரசனையும் கொண்டிருந்தது வரலாறு. இவ்வரசர்கள் பரம்பரை வழி வந்தவர்களாக இருந்ததுவே பொதுவாகக் காணப்பட்ட தன்மை எனலாம்.

    இன்றைய காலகட்டத்தில் உலகிலுள்ள பலநாடுகளில் இந்த இராஜ கலாச்சார முறை மாறிவிட்டது. முடியாட்சி, மன்னர் ஆட்சிமுறை மாறி மக்களாட்சி மலர்ந்துள்ள ஒரு நிலையே பெரும்பான்மையான நாடுகளில் காணப்படுகிறது. ஆனால் இன்னும் சில நாடுகளில் இக்கலாச்சார முறை பின்பற்றப்பட்டே வருகிறது எனலாம்.

    இம்முறை இரண்டு வகைகளில் நடைபெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில மேலைநாடுகளில் மக்களாட்சி நடைபெற்ற போதும் இராஜ கலாச்சாரத்தைப் பேணும் வகையில் அந்நாட்டின் தலைவர்களாக பெயரளவில் பேணப்பட்டு வருகிறார்கள். மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் இராஜபரம்பரையே தற்பொழுதும் அந்நாட்டில் முழு அதிகாரத்திலிருந்து வருகிறது.

    அவ்வகையில் நான் வாழும் இங்கிலாந்து தனது கலாச்சாரத்தைப் பேணுவதில் முன்னிற்கிறது. தமது சரித்திரத்தை வருடங்களைக் கொண்டு கணக்கிடாமல் தமது நாட்டை ஆண்ட மன்னர்களின் மதிப்பீட்டைக் கொண்டு அளவிடுவதையே தமது வழமையாகக் கொண்டுள்ளார்கள். இங்கேதான் நான் மேலே குறிப்பிட்ட அந்த வாழ்வின் யதார்த்தத்தின் காரணத்தை விளக்க முற்படுகிறேன். இன்று, அதாவது 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இங்கிலாந்தின் மகாராணி இரண்டாவது எலிசபெத் மகாராணியார் தமது 90வது பிறந்தநாளை அதிகாரப் பூர்வமாக இன்று கொண்டாடுகிறார்.

    90th birthday

    நாடு முழுவதும் ஒரே உற்சாகமாக , மகிழ்ச்சி பூத்த தினமாக மக்கள் ஒரு ஆனந்த நிலையிலிருக்கிறார்கள். இங்கிலாந்து மகாராணியாரின் வாழ்வின் நீளம் இறைவனின் வனப்புமிகு மர்மங்களில் ஒன்று என்பதைக் குறிப்பிடவே வாழ்வின் யதார்த்த நிலைகளை நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

    இங்கிலாந்தின் மகாராணியாவேன் என்று பிறந்ததிலிருந்து 10 வயது வரும்வரை எண்ணியிராத எமது எலிசபெத் மகாராணியார் இங்கிலாந்தின் முடிசூடிய வரலாறு விசித்திரமானதே !

    விக்டோரியா மகாராணியாரின் மகன் 7வது எட்வர்ட் மன்னாராகி ஆண்ட பின்னர், அவரது மகன் 5வது ஜார்ஜ் மன்னர் அரசாண்டார். அவரது மூத்த புதல்வர் 8வது எட்வர்ட் மன்னராக இருந்தபோது அவருக்கும் ஒரு அரசபரம்பரையில் மணமுடிக்கத் தகுதியில்லாத பெண்ணுக்கும் மூண்ட காதலினால் பதவியிலிருந்த காதலை விட தன் காதலியின் மேலிருந்த காதல் மிகுந்திருந்ததால் தனது அரசபதவியை உதறித் தள்ளிவிட்டு காதலியைக் கரம்பிடித்தார் அவர்.

    அவ்விடைவெளியை நிரப்ப அவரது தம்பியாகிய 6வது ஜார்ஜ் மன்னராக முடிசூட்டப்பட்டார். 6வது ஜார்ஜ் அவர்களின் மூத்த புதல்வியே தற்போதைய இங்கிலாந்து மகாராணி இரண்டாவது எலிசபெத் ஆவார். அவர் மணமுடித்து, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டுக்குக் கணவருடன் அரச விஜயமாகச் சென்றிருந்த சமயம் அவரது தந்தையான 6வது ஜார்ஜ் மன்னர் காலமானார்.

    90th birthday 2

    கணவருடன் சுற்றுப்பயணத்திலிருந்த இளவரசி எலிசபெத் அவர்களுக்குத் தந்தை இறந்த துயரச் சம்பவம் தெரிவிக்கப்பட்டதோடு அவர் இங்கிலாந்து மகாராணியாக முடிசூட்டப்படப் போகிறார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. அது நடந்தபோது அவருக்கு வயது இருபத்தி இரண்டேதான்.

    கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக ஆண்டு கொண்டிருக்கும் இப்பெண் கடந்து வந்த காலங்களில் கண்ட அனுபவங்கள் எத்தனையோ. மகளின் மணமுறிவு, மகனின் மணமுறிவு, மருமகளின் மரணம் என அவர் கடந்து வந்த பாதையில் கண்டவை பலவே ! நான் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தையும் மிகவும் அமைதியான முறையில் உள்வாங்கிக் கொண்டு தனது கடமைகளில் எதையும் தவற விடாமல் மேற்கொண்ட மகாராணியாருக்கு இங்கிலாந்து மக்களிடையே அமோக மதிப்பு இருக்கிறது.

    90th birthday 1

    தமது இராஜவம்சத்து கலாச்சாரத்தை மிகவும் பெருமையுடன் பேணிக்காத்து வரும் இங்கிலாந்து மக்களுக்குத் தான் மிகவும் விசுவாசமுடைய மகாராணியாராக இருப்பதைத் தனது முக்கியமான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மகாராணியாரின் 90வது பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடும் இங்கிலாந்து மக்கள் அதன் நிமித்தம் பல விழாக்களை நடத்தி வருகிறார்கள்.

    தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் இதனை முன்னிறுத்தி நடத்தப்படுகின்றன. இன்று அதாவது 21ம் திகதி , 21 பீரங்கிக் குண்டுகளை வெடித்து இராணுவ மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாட்டின் பலபாகங்களிலும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு இத்தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இளவரசர் சார்லஸ், அவரது மைந்தர்கள் இளவரசர்கள் வில்லியம், இளவரசர் ஹாரி, மற்றும் இளவரசர் வில்லியத்தின் மைந்தன் குழந்தை இளவரசர் ஜார்ஜ் ஆகியோருடன் மகாராணியார் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றன.

    ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் இந்நிகழ்வுகள், இங்கிலாந்தின் இராஜவம்சக் கலாச்சாரம் என் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று எண்ணிப்பார்க்கிறேன். இங்கிலாந்துப் பிரஜாவுரிமை பெற்றுள்ள நான், எனது பிரஜாவுரிமையை ஏற்றுக்கொண்டபோது வழக்கறிஞர் முன்னிலையில் இங்கிலாந்து மகாராணியாருக்கு விசுவாசம் உள்ளவனாக நடப்பேன் எனும் சத்தியப்பிரமாணம் எடுத்தது என் நினைவிலிருக்கிறது.

    இலங்கை எனும் சிறிய தீவை விட்டு இங்கிலாந்து எனும் பெரிய தீவினுக்குள் நுழைந்தது உடலளவில் இடமாற்றம் அன்றி உலகளவில் வாழ்வை நோக்கிய ஒரு பரந்த பார்வையை நல்கியதே உண்மை. மக்களாட்சியின் அனுகூலம், நாகரீகமான அரசியலின் அனுபவம், சகிப்புத்தன்மை என்பனவற்றை நேரடியாக அனுபவித்த அனுகூலம் என்பனவே எனக்கு இவ்வாழ்க்கை தந்தவையாகும்.

    இங்கிலாந்து மகாராணியாரின் வாழ்க்கையும், அவர் தனது மக்களை நோக்கிக் கொண்ட பார்வையும் என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவ அனுகூலம் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படம் உதவி: http://www.itv.com/news/central/2016-04-21/how-the-midlands-is-celebrating-the-queens-90th-birthday/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (192)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்கள். புத்தம் புதிதாய் ஒரு புதுவருடம் சித்திரை பெண்ணவள் மடிமேல் பிறந்து தவழ்ந்திடும் வேளையில் உங்கள் முன்னே அடுத்த மடலுடன். தமிழர் திருநாள் பொதுவாய் எதைக் கொண்டு வரும் என ஆவலுடன் காத்திருப்போர் முன்னே தவழ்ந்திடும் இப்புதுவருடம் புலர்ந்திடப் போகும் புது நிகழ்வுகள் தான் என்ன ?

    இன்றைய உலகின் வாழ்க்கைமுறை ஒரு கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு சிரமமான செயலாகும். பேராசை, அதிகாரம், ஆணவம் என்பது அரசாங்கங்கள் முதல் அடிமட்ட மனிதர் வரை ஊடுருவி விட்ட ஒரு காலமாக இருக்கிறது. மனிதநேயம், மனிதாபிமானம் என்பவனற்றின் பெறுமதி இன்றைய வாழ்வில் மிகவும் எடை குறைந்ததாகவே காணப்படுகிறது.

    இத்தகைய வாழ்க்கைமுறை மாறி மனிதர்கள் அன்பு, கருணை, சமாதானம், அமைதி என்பனவற்றை முக்கியமான நோக்கங்களாகக் கொண்டு வாழ தமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது இன்றைய உலகத்தில் அத்தியாவசியமாகிறது.

    இன்றைய இந்தப் புதுவருடத்தின் வரவு அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவரையும் நோய் நொடியுமில்லாமல், அமைதியாக, திருப்திகரமான வாழ்விற்குத் தேவையான செல்வமும் பெற்று வாழ்ந்திட அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை எனும் சக்தியை வேண்டுவோமாக.

    தாமரைநித்தம் நடந்திடும் நிகழ்வுகள்
    நெஞ்சில் நிறைந்திடும் சுவடுகள்
    புத்தம் புதிதாய் மலர்ந்திடும்
    புத்தாண்டு புலருகிறது ஆனந்தமாய்

    கடந்தது எல்லாம் கடந்ததுவே
    நடந்தது எல்லாம் கழிந்ததுவே
    விரைந்திடும் காலச் சக்கரத்தில்
    வியந்திடும் வாழ்வுச் சாத்திரங்கள்

    சித்திரைப்பாவை மெல்லென
    நித்திரை மீண்டிங்கு தனது
    முத்திரை பதித்திட புதிதாய்
    இத்தரை மீது மலர்ந்திட்டாள்

    கனவுகள் எல்லாம் மெய்ப்படவே
    நினைவுகள் தன்னை வழிப்படுத்தி
    முனைவுகள் அனைத்தும் செயலாக்கி
    முடிவுகள் தன்னில் ஜெயித்திடவே

    இல்லை என்பவர் இல்லாத நிலையை
    இருப்பவர் நினைத்தால் மாற்றிடலாம்
    இதயத்தில் கொஞ்சம் ஈரத்தை ஏற்றி
    இரக்கத்தில் கசியும் ஈகையை எண்ணி

    பிறந்திடும் இத்துர்முகி வருடத்தில்
    பறக்கட்டும் துயரங்கள் அனைவருக்கும்
    சிறக்கட்டும் வாழ்க்கை இனிவரும்
    கனிந்திடும் காலத்தின் மடிதனிலே

    கரைந்திடும் கருமேகங்களைப் போல்
    களைந்திடும் துன்பங்கள் வாழ்வினிலே
    நிறைந்திடும் இன்பத்தின் நினைவுகளை
    சுமந்திடும் இதயங்கள் மகிழ்வுடனே

    நாளைய உலகம் அமைதியில் திளைத்திட
    நானிலம் எங்கும் சகோதரம் பொங்கிடப்
    பிறந்திடும் இந்தப் புதுவருடம் சுரந்திட
    நிறைந்திடும் இதயத்தின் வாழ்த்துக்கள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (191)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினிய நெஞ்சங்களே!

    அன்பான வணக்கங்களுடன் உங்களை இம்மடல் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஏப்பிரல் மாதத்தின் முதல்பகுதியில் வசந்தத்தின் முன்னே வரும் ‘ஸ்பிரிங்'(Spring) எனும் காலப்பகுதியில் நடைபயின்று கொண்டிருக்கிறோம்.

    சமுதாயம் என்பது பலவிதமான பண்புகளையும், நடைமுறை வழக்கங்களையும் உள்ளடக்கிய மனிதர்களின் கூட்டுச்சேர்க்கையாகும். ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அந்நாட்டின் சமுதாயங்களின் முன்னேற்றத்தில் தான் தங்கியுள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்கு அச்சமுதாயத்தின் அங்கங்களாகிய மக்களின் முன்னேற்றமே அடிப்படைக் காரணியாகிறது. சமுதாயத்தின் முக்கிய தூண்களாக அவற்றைத் தாங்கிப் பிடித்திருக்கும் முதுகெலும்பாக இளையதலைமுறையினரே அமைகின்றனர். அச்சமுதாயத்தினை தகுந்த முறையில் முன்னேற்ற வேண்டுமானால் இளைய தலைமுறையினர் தகுந்தமுறையில் செதுக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்க்கைப் பண்புகளும் சரியான முறையில் பயிற்றப்பட வேண்டும்.

    அவ்விளைய தலைமுறையினரைச் செதுக்கும் பணியில் முக்கிய பங்காற்றுவோர் யார் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இன்றைய அவசர சமூகத்திலே வசதிகளின் தேடல்களை மனதில் வகுத்துக் கொண்டு வாழ்க்கையை இயந்திர கதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகச் சூழலில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம். இதிலே எமது அடுத்த தலைமுறையின் செழிப்பான வாழ்விற்கான செதுக்கல்களை மேற்கொள்வதற்கான ஆக்கமும் ஊக்கமும் எமக்கு உள்ளதா? என்பதே கேள்வியாகிறது. பெற்றோராக எமது கடமையை, சமுதாயக் காவலர்களாக எமது கடமையை, பொறுப்புள்ள அயலவர்களாக எமது கடமைகளை எத்தனைபேர் சமுதாய நோக்கோடு முன்னெடுக்கிறோம் என்பது கேள்விக்குரியதே ! பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது தலையாய கடமையாக தாம் கற்பிக்கும் பாடத்தை மட்டுமே கொள்கிறார்களா ? இல்லை தாம் போதிக்கும் பாடங்களோடு சமூகத்தின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் பண்புகளையும் போதிக்கிறார்களா? என்பதே முக்கியமாகிறது.

    judgementஇன்று இங்கிலாந்தில் ஒரு நீதிபதி இரண்டு இளம் பெண்களுக்கு விதித்த தண்டனையே எனது இந்த மடல் மூலம் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.

    ‘அஞ்சலா ரைட்சன்'(Angela Wrightson) எனும் 39 வயதான பெண்மணி கோரமாகக் கொலை செய்யப்பட்டார். இவர் குடிபோதைக்கு அடிமையான ஒருவராவார். ஒருநாளைக்கு சுமார் 8 லிட்டர் ‘சைடர்’ (Cider) என்றழைக்கப்படும் மதுவை உட்கொள்வார் என்று கூறப்படுகிறது. எட்டு சகோதரர்களுடன் பிறந்த இவர் மிகவும் கடுமையான வாழ்வுக்குள்ளாக்கப்பட்டார். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டதால் இங்கிலாந்து அரசினால் சமூக நல்வாழ்வுப் பிரிவினால் பராமரிக்கப்படும் ‘பெற்றவர்களால் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் நலவிடுதி’யிலே தனது இளம்பிராயத்தைக் கழித்தார்.

    வளர்ந்து குடிபோதைக்கு அடிமைப்பட்ட இவர் பலமுறை சட்டத்தினால் தண்டிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. போதையினால் புரியும் பல குற்றச்செயல்களினால் 47 தடவைகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவரது வீட்டில் எப்போதும் ஒரு போதைக்கும்பல் கூடியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களினால் இங்கிலாந்தில் மது உட்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. ஆகையால் இவர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவரது வீட்டில் கூடி இவரது உதவியுடன் மதுவைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

    அப்படியாக இவருடன் இணைந்த 13, 14 வயதுச் சிறுமிகள் இருவர் இவரது உயிருக்கு எமனாக வந்ததுவே இன்றைய வழக்குமன்றத் தீர்ப்புக்குக் காரணம். தமது அந்தச் சிறுபிராயத்திலே மிகவும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டவர்களே இந்தச் சிறுவர்களாவார்கள். இவர்களும் சமுதாய முன்றிலிலே வழிநடத்த வேண்டிய பெற்றோர்களினால் கைவிடப்பட்டவர்களாவார்கள். ஒரு குழந்தையின் இளமைக்கல்வி சிலையில் எழுத்து என்பார்கள் முன்னோர்கள். அதாவது அந்த வயதில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பண்புகளே வாழ்வு முழுவதும் அவர்களுடன் கூடவரும் என்பதுவே அதன் விளக்கமாகும். ஆனால், அந்தப் பருவத்தில் திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட சிறகுகளற்ற பறவைகளைப் போன்றே இச்சிறுமிகள் கைவிடப்பட்டார்கள்.

    சட்டத்தின் மதிப்பை உணரத் தவறிய இவர்கள் அதே சட்டத்திற்குப் புறம்பான செயல்களைப் புரியும் அந்த 39 வயதான அஞ்சலா ரட்சன் என்பவருடன் கூட்டிணைந்தது ஆச்சரியமில்லாத ஒன்றேயாகும். 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி தனது வீட்டில் வாடகைக்குக் குடியமர்ந்திருக்கும் அஞ்சலா ரைட்சன் இல்லத்திற்கு, அதற்கு முதல்நாள் அவர் தன்னை நோக்கிக் குடிபோதையில் தூக்கி எறிந்த வீட்டுச்சாவியைத் திரும்பக் கொடுக்க வந்த அவ்வீட்டின் சொந்தக்காரர் கண்ட காட்சி அவரைத் தூக்கி வாரிப்போட்டது.

    அரைகுறை நிர்வாண கோலத்தில், படு கோரமாகத் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார் அஞ்சலா ரைட்சன். அதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட போலிசார் இக்கொலையை அவ்விரண்டு சிறுமிகளுமே நடத்தியதாகக் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களின் வயது வெறும் 13, 14 மட்டுமே. ஆடைகளை மினுக்கும் இயந்திரம், டி.வி, மற்றும் கதிரை என்பவற்றால் அந்தப் பெண்மணி முகம் மற்றும் பல பாகங்களிலும் கோரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரது உடம்பில் 100 காயங்களுக்கும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது.

    இன்று 15 வயது நிரம்பிய அச்சிறுமிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, குறைந்தது அவர்கள் தலா 15 வருடங்களாவது சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். குடிபோதைக்கு அடிமையாகிய 39 வயதுப் பெண்ணொருவர், குடிபோதைக்கு அடிமையாகிய வெறும் 14 வயதே நிரம்பிய சிறுமிகளால் கொலைசெய்யப்பட்டிருப்பது செய்தி என்று பார்க்கையில் ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால், நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில் வயது எனும் ஏணியின் நடுவிலும், அடியிலும் இருக்கும் இரு பகுதியினரும் இத்தகைய வகையில் கொடுமையான குடிபோதைக்கு அடிமையாகியதில் சமுதாயத்தின் பங்கு எத்தகையது என்பது நியாயமான கேள்வியே !

    நாளைய உலகம் அமைதியையும், சமாதானத்தையும் நோக்கி நடக்க வேண்டுமெனில் இன்றைய உலகத்தின் பல்வேறு சமூகங்களில் வாழும் மக்களும் தமது அவசர வாழ்க்கையைக் கொஞ்சம் நிறுத்தி தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியது அவசரமாகிறது. வாழ்க்கை எனும் தராசின் ஒரு தட்டில் தேவைகளையும் அதன் மறுதட்டில் வசதிகளையும் போட்டு நிறுக்கத் தலைப்படும்வரை வாழ்வின் அர்த்தங்களும் திசைமாறிப்போவது தவிர்க்க முடியாததே.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    (நன்றி- பி.பி.ஸி இணையதளம்- தகவல்களுக்காக)

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (190)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    அடுத்தொரு வாரம் ஓடி விட்டது. காலம் எனும் பறவை தனது சிறகுகளுக்குள் பல நிகழ்வுகளை தங்கிக் கொண்டு வேகமாகப் பறக்கிறது. அதன் இலக்கு எதுவென்று எமக்குத் தெரியாது ஆனால் அதன் சிறகுகளுக்குள் சிக்குண்டு அதனோடு பறக்கும் நாம் மட்டும் எத்தனையோ இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு பறக்கின்றோம்.

    சட்டம், ஒழுங்கு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகிறது. இவை சீர்குலைந்து விட்டால் நாட்டின் கலாச்சார சீரழிவைத் தடுப்பதென்பது முடியாத செயலாகிவிடும். இச்சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே நாட்டின் பாதுகாவலர்களான போலிஸ் படையினரின் முக்கிய பணியாகிறது.

    சட்டத்தின் முன்னே குற்றமென கருதப்படும் விடயங்கள் இவர்களிடம் முறையிடப்படுமானால் அதைத் தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பது இவர்களின் முக்கிய கடமையாகிறது. ஆனால் இவர்களின் முன்னால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் தராதரம் அவை எவரால் வைக்கப்படுகிறது, அதனுள் வேறு ஏதாவது உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றனவா? எனும் வினாக்களுக்குத் திருப்தியான விடை கிடைத்தால் மட்டுமே இவர்களது விசாரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    இங்கிலாந்தின் காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் குழு இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களது நடவடிக்கையில் ஏதாவது ஒன்று முறையற்றது என்று காணும் பட்சத்தில் இக்கண்காணிப்புக்குழு காவல்துறையினர் மீதான தனது விசாரணைகளை முடுக்கி விடுகின்றது.

    இப்படியான பல நிகழ்வுகள் நடந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக ஆயுததாரியான ஒரு சந்தேகநபர் மீது காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக இக்கண்காணிப்புக் குழுவின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுவிடுகிறது. இதைப் பல சமீபத்திய நிகழ்வுகளில் நாம் பார்த்திருக்கிறோம்.

    Paedophile Information Exchangeஅதுமட்டுமின்றி காலத்துக்குக் காலம் இங்கிலாந்துக் காவல்துறையின் பொறுப்பதிகாரி பாராளுமன்றத்தில் காவல்துறைக்குப் பொறுப்பான தேர்வுக்குழுவின் முன்னால் ஆஜர் படுத்தப்பட்டு அவரின் நடவடிக்கைகளை அன்றிக் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கோரப்படுவது வழமை.

    இது காவல்துறையினர் மீதும், அவர்களது நடவடிக்கைகளின் மீதும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படியான சூழலில் தான் இப்போது ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது. இதைக் கிளப்பியுள்ளவர் இப்போது ஆட்சியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவர்.

    இவரின் பிரச்சனை என்ன ? இதன் பின்னணி என்ன ? எனும் கேள்விகள் எழுவது சகஜமே ! இங்கிலாந்தின் பிரபல முன்னணிப் பிரமுகர்களில் ஒருவர் மறைந்த திரு ஜிம்மி சவில் ( Jimmy Savile ). இவர் திருமணமாகாத பிரம்மச்சாரி ஆவார். இவர் மறைந்து சில வருடங்களாகின்றன. இவர் தொலைக்காட்சியிலும், மற்றும் ஊடகங்களிலும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். குறிப்பாகப் பல இளம் சிறார்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர்.

    பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல நிவாரணப் பணிகளுக்கான நிதிகளைச் சேர்க்கும் நிகழ்வுகளை நடத்தியவர். இவருக்கு இங்கிலாந்து மகாராணியாரினால் அளிக்கப்படும் அதியுயர் கெளரவமான “சர்” பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இவர் உயிரோடு இருக்கும் போதே இவரைப் பற்றி கசமுசவென்று ஆங்காங்கே வதந்திகள் கிளம்பின. ஆனால் சமுதாயத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினால் அவையனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அப்போதைய காவல்துறையும் இவர் மீது எவ்விதமான சேற்றையும் வாரியிறைக்கத் தயாராகவில்லை.

    இவர் மறைந்து சில வருடங்களின் பின்னால் இவரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகிய பல பெண்கள் முன் வந்து முறையீடு செய்தார்கள். ஊடகங்களில் தனக்கிருந்த செல்வாக்கின் அடிப்படையில் அப்போது சிறுவர்களாகவும், சிறுமியராகவும் இருந்த பலரை இவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டது அம்பலத்திற்கு வந்தது.

    இவர் இறந்தது போயிருந்ததினால் இவர்மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியவில்லை. ஆனால், மாகாரணியாரினால் இவருக்கு அளிக்கப்பட்ட கெளரவ பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இவரது இந்தப் பிரச்சனையில் அன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் முன்னணியிலிருந்த மற்றும் பலரின் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. காவல்துறையினரின் அன்றைய கையாலாகாதப் போக்கும் பலரால் கண்டிக்கப்பட்டது.

    பலவருடங்களின் முன்னால் நிகழ்ந்த இத்தகைய பாலியல் குற்றங்களை ஆராய்வதற்கென புதிதாகக் காவல்துறையினரால் ஒரு பிரிவே ஆரம்பிக்கப்பட்டது. அப்போதுதான் “நிக்” என்று மட்டுமே அறியப்பட்ட ஒரு மனிதர் போலிசாருக்கு அன்றைய பல முன்னணி அரசியல் தலைவர்கள் பலர் தம்மீதும் வேறுபலரின் மீதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

    அவரின் குற்றச்சாட்டுகளின் படி முன்னால் உள்துறை அமைச்சர் லியோன் பிரிட்டன், இராணுவ ஜெனரல் லார்ட் பிரமோல், முன்னால் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் ஹார்வி பிராக்டர் மற்றும் முன்னால் பிரதமர் எட்வர்டு ஹீத் ஆகியோர் இத்தகைய துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டோரில் சிலர் எனக்க குறிப்பிடப்பட்டது.

    ஜிம்மி சவைல் அவர்களின் மேலெழுந்த குற்றச்சாட்டுகளை தகுந்த முறையில் விசாரிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினர். அதனால்தானோ என்னவோ இதனை மிகவும் முக்கியமாக எடுத்து மேற்குறிப்பிட்டவர்களில் உயிரோடிருந்த மூவரை விசாரணைக்குட்படுத்தினார்கள். ஆனால், விசாரணை முடிவடைதற்குள்ளாகவே திரு லியோன் பிரிட்டன் அவர்கள் இறந்து விட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளினால் மற்ற இருவரினதும் மீதான அவதூறுகள் அவர்களைப் பெரிதும் பாதித்தன.

    இதிலே காவல்துறையினரின் மிகப்பாரதூரமான செயல் என்னவெனில் “நிக்” எனும் நபரின் வாக்குமூலம் நம்பப்படக்கூடியது எனும் கருத்துடன் கூடிய அறிக்கையை வெளிவிட்டதுவே. பல மாதங்கள் விசாரித்ததின் பின்னால் தற்போது இத்தகைய குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இவ்விசாரணைகள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள்.

    ஆனால், இவற்றால் பாதிக்கப்பட்வர்களில் ஒருவரான திரு ஹார்வி பிராக்டர் எனும் 69 வயதான முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் இதனால் தனது வாழ்க்கையே சீரழிந்து போயுள்ளதாகப் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிக்கை விட்டுள்ளார். தன்னுடைய கெளரவமும், அதனால் தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அவமானத்துடன் கூடிய அசௌகரியங்களும் ஈடு செய்யப்படமுடியாதவை என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். சுயநலத்துடன் கூடிய பொய்வாக்குமூலம் அளித்த ஒரு பொய்யனின் வாக்குமூலத்தை நம்பக்கூடியது என்று கூறிய காவல்துறையினர் மீது மிகவும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

    தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்காகக் காவல்துறையின் பொறுப்பதிகாரியும், அதற்குப் பொறுப்பாகவுள்ள உள்துறை அமைச்சரும் இராஜினாமா செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். அதற்கான பதில்கள் அவர்களிடமிருந்து இதுவரை வெளிவரவில்லை.

    இதில் இரண்டு விதமான கேள்விகள் எம்முள் பிறக்கின்றன

    சமுதாயத்தில் எத்தனைப் பெரிய அந்தஸ்து வகித்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தக் காவல்துறை தயங்காதா ? என்பது ஒன்று.

    தம்மீது குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக வலுவில்லாத வாக்குமூலத்தைக் கொண்டு கெளரவமான பிரஜை ஒருவரின் வாழ்வைச் சிதைப்பதற்கும் தயங்கமாட்டார்களோ ? எனும் ஆதங்கம் மற்றொன்று.

    சட்டமும், ஒழுங்கும் ஒரு நாட்டிற்கு எத்தனை முக்கியமோ அதனை நிலைநாட்டும் முறையும் முக்கியம். இரண்டிற்குமிடையிலான சமநிலை பேணப்படுவது அவசியம். தவறான நடவடிக்கைகளினால் ஒரு நிரபராதியின் வாழ்க்கை சீர்குலைக்கப்படுமானால் அதுவும் சட்டமும், ஒழுங்கும் திசைமாறிப்போவதன் அடையாளமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படம் உதவி: http://tapnewswire.com/2015/08/spies-lords-predators-murders-by-westminster-paedophile-ring/

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (189)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பினிய வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் உங்களைச் சந்திக்கிறேன். இன்று உலகத்திலே நாமனைவரும் ஒரு இக்கட்டான சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகம் தனது கால மாற்றங்களில் ஒரு முக்கியமான திருப்பத்தினுள் சென்று கொண்டிருப்பது போன்று ஒரு பிரமை.

    எங்கே போகிறோம், நாம் போகும் திசை நாம் பயணிக்க விரும்பிய திசைதானா? என்பது தெரியாமலே ஆற்று வெள்ளத்திலோ, இல்லை பெருங்காற்றினாலோ அடித்துச் செல்லப்படும் ஒரு சருகினைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது எமது வாழ்க்கை.

    இனம், மதம், மொழி எனும் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம் எனும் வெறியில் மனிதனை மனிதன் காவு கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாமோ கலாச்சாரச் செறிவு கொண்டவர்கள், நாகரீகமடைந்தவர்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

    தனிமனிதர்களைக் குடும்பமாக்கி, குடும்பங்களைச் சமுதாயமாக்கி, சமுதாயங்களை நகரமாக்கி, நகரங்களையெல்லாம் சேர்த்து நாடுகளாக்கி, நாடுகள் ஒன்றுகூடிய ஒரு ஒப்பில்லாத உலக சமுதாயமாக ஏதோ புதியதோர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஆதிமனிதன் வெட்கித் தலைகுனியக்கூடிய வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

    ஆமாம்! மக்களுக்காக அரசியல் என்று ஆரம்பித்து இன்று அரசியலுக்காக மக்கள் எனும் நிலைக்கு எம்மை நாமே மாற்றிக் கொண்டு விட்டோம். அரசியல்வாதிகளைக் குறை கூறும் நாம் இவ்வரசியல்வாதிகளை உருவாக்க யார் காரணம் என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் supply and demand என்பார்கள். அதாவது தேவைகளும் அத்தேவைகளுக்கான பூர்த்திகளும் என்பதே அது.

    எமக்குத் தேவைகள் இருப்பதால் அத்தேவைகளை நிறைவேற்றும் பணியைத்தான் அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அத்தேவைகளை எவ்வழியிலும் பெற்றுக் கொள்ளலாம் எனும் மனோபாவத்திற்கு மனிதன் வந்துவிட்டால் அதைப்பூர்த்தி செய்வதற்கு எவ்வழியையும் கையாளலாம் எனும் மனோநிலைக்கு அதைப்பூர்த்தி செய்பவர்கள் ஏன் வரமாட்டார்கள்?

    இன்று எமது பின்புல நாடுகள் மட்டுமல்ல மனித நாகரீகத்திற்கு நாம்தான் எடுத்துக்காட்டு என்று மார்தட்டிக் கொள்ளும் மேலைநாடுகளிலும் கூட மக்கள்-அரசியல்-மக்கள் எனும் இந்த வலயம் தொடர்ந்து ராட்டினம் போலச் சுழலுவதால் இன்றைய காலகட்டம் ஒரு அபாயகரமான சூழலை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது எனலாம்.

    செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் நாட்டில் நடந்த நிகழ்வினை எடுத்துக் கொள்ளுங்கள். பயங்கரவாதமா ? தீவிரவாதமா ? அல்லது நியாயமான போராட்டமா? என்று பலர் விவாதிக்கும் அதேசமயம், இத்தகைய ஒரு நிகழ்விற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது என்ன ? மனிதஉயிர்கள் மட்டுமே என்று சிலர் கூறக்கூடும்.

    இல்லை, மனிதநேயத்திற்கே விடப்பட்ட ஒரு சவாலாகவே இதைக் கருத வேண்டும். நிறவேற்றுமையின் அடிப்படையில் மேலைநாடுகளில் வாழும் மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இத்தகைய நிகழ்வுகள் வகிக்கும் முக்கியத்துவத்தை ஒருவரும் மறந்து விடக்கூடாது.

    பல்லினக் கலாச்சாரம் மிகுந்த அமெரிக்க நாட்டிலே இன்று டொனால்ட் ட்ரம்ப் போன்றதொரு தீவிர வலதுசாரிக் கொள்கையும், இனவேற்றுமையைக் கக்கும் கொள்கைகள் கொண்ட ஒருவர் முக்கிய கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதியாக வேகமாக முன்னேறிச் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு ?

    சகிப்புத்தன்மைக்கு முதலிடம் கொடுத்து வந்த, பல்லினக் கலாச்சாரத்திற்கு தம்மை உதாரணமாகக் காட்டும் ஒரு நாடாக விளங்கும் இங்கிலாந்தில் வேற்றின மக்களின் வருகைக்கு எதிர்ப்பும், வேற்றின மக்களின் மீதான காழ்ப்புணர்ச்சியும் அதிகரிப்பதற்கும் யார் பொறுப்பு ?

    விசித்திரமான இந்த உலகத்திலே விந்தை மிகுந்த மனிதர் நாம் எம்மை விட விஞ்சியவர்கள் இல்லை எனும் ஓர் நினைப்போடு வாழ்கின்றோமா ? தன்னம்பிக்கை என்பது மனிதனின் மனதில் ஆழமாக வேரூன்றவில்லையானால் அவனால் வாழ்வில் உயர்வடைய முடியாது என்பது யதார்த்தம் எனும் அதேவேளை, அத்தன்னம்பிக்கை எப்போது ஆணவமாக மாறுகிறதோ அப்போது அது அவனின் சரிவிற்கும் வித்திடுகிறது இதுவும் யதார்த்தமே !

    இது இன்று நேற்றல்ல அன்றைய மகா அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து நேற்றைய கேர்னல் கடாபி வரை உண்மையென நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நாம் பழம்பெருமை பேசிப்பேசி இன்றைய உலகில் வாழ்வது கடினம். அன்றைய பெருமைகளுக்கு காரணமாக இருந்த அதியுயர்ப் பண்புகளை வாழ்வின் வசதிகளுக்காக விற்று விட்டு அன்றைய பெருமைகளை மட்டும் கட்டிக் காத்துக் கொள்வதை எவ்வகையில் யதார்த்தமெனக் கொள்வது ?

    trumpஇவ்வகிலத்திலே பல்வேறு மொழிகளையும், பல்வேறு மதங்களையும் பின்பற்றுவது மட்டுமல்ல பல்வேறு நிறங்களிலும் நாம் வலம் வருகிறோம். இத்தகையதோர் உலகிலே அமைதியையும், சமாதானத்தையும் பாதுகாத்து எமது சந்ததி நிம்மதியாக வாழவேண்டுமானால் நாமனைவரும் எமது மதங்களுக்கும், மொழிக்கும் முன்னால் மனிதாபிமானத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும். அது ஒன்றே மனிதனை மனிதனுடன் வேற்றுமையின்றி இணைக்க உதவும் பொதுமொழியாகும்.

    இன்று நாம் சர்வதேசரீதியில் எமது கலாச்சாரத்தைக் காப்பது எனும் பெயரில் உயிர்களைக் காவும் கொள்ளும் நிகழ்வானது புலம்பெயர் நாடுகளில் ஓரளவிலாவது தமது கலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் எமது சகோதர, சகோதரிகளைத்தான் பாதிக்கப் போகிறது என்பதை மறந்தே இத்தகைய பயங்கரமான நிகழ்வுகளை நடத்துகிறது சில கும்பல்கள்.

    எந்த ஒரு மதமோ அன்றி அம்மதத்தின் சின்னங்களாக வழிபடும் ஆதிமூலங்களோ நல்லிணக்கத்தைத் தவிர வேறு எதனையும் வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்துவதாக மதங்களின் சார்பாக யாராவது போதிப்பார்களேயானால் அவர்கள் அதைத் தமது சுயலாபத்திற்காகவே செய்கிறார்கள்.

    இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நியாயமான, நிம்மதியான வாழ்வை நடத்தும் உரிமை உண்டு. அதை மதங்களின் பெயராலோ, அன்றி மொழிகளின் பெயராலோ அன்றிச் சாதியின் பெயராலோ பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

    அன்பின் பாதையில், அறத்தின் துணையோடு அடுத்தவரை எம்மைப் போல் எண்ணும் மனிதாபிமான அடிப்படையில் வாழ்வது ஒன்றே இவ்வுலக தர்மமாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படம் உதவி:
    http://www.keepcalm-o-matic.co.uk/p/keep-calm-and-share-unity-in-diversity/

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (188)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    அடுத்தொரு வாரத்திலே உங்களுடன் மடல் வாயிலாக எனது மனதைத் திறப்பதினால் மகிழ்வடைகிறேன்.

    எமது வாழ்க்கை ஒரு புதிரானது, புரிய முடியாதது. வரவை அறிந்த எமக்குச் செல்லும் இடமோ அன்றி எப்போது செல்லப்போகிறோம் என்பதுவோ விடை காண முடியாத வினாவாக, அறியாத கருப்பொருளாகவே எப்போதும் இருக்கிறது.அதனால்தானோ என்னவோ எமது வாழ்வும் மிகவும் சுவையாக இருக்கிறது. ஆரம்பமும் தெரிந்து முடிவும் தெரிந்துவிட்டால் பின்பு அதிலே என்ன ஆர்வம் இருக்கப் போகிறது ?

    அன்னை, தந்தை என்னும் இருவரின் அன்பான பாதுகாப்புச் சிறையை விட்டு சிறகு விரித்தப் பறவை கூட்டை விட்டுப்பறப்பது போலப் புலம் பெயர்ந்தவன் நான். அந்நியதேசத்து மண்ணில் கால்பதிக்கும் போது என் தாய்மண்ணில்என்னைப் பெற்றவர்கள் உண்டு எனும் ஒரு செல்வத் திளைப்பு மனதில் இருந்தது.

    இன்று நாற்பத்தியொரு வருடங்கள் உருண்டு விட்ட நிலையிலே என் தாயும், தந்தையும் இந்த அகிலத்தை விட்டு அகன்றபின்பு நானும் தந்தை எனும் நிலையில் வாழ்வின் பரிமாணங்களை எண்ணிப்பார்க்கிறேன். வாழ்க்கை பல்வேறுபடிமானங்களில் எனக்குக் கொடுத்த பல்வேறு வேடங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

    அவையனைத்தும் அத்தருணங்களில் வேடங்களாக, எண்ணிப் பார்க்க முடியாத யதார்த்தங்களாக இருந்தன. ஆனால்காலம் கடந்த பின்பு அச்சமயத்திலிருந்து என்னை விலக்கி வைத்து அத்தருணங்களை மீண்டும் அலசும் போது அவைவேடங்களாகத்தான் தென்படுகின்றன.

    மனச்சுத்தம் இல்லாதாரோடு மனச்சுத்தம் கொண்டு பழகும்போது, ஏனோ மனச்சுத்தம் கொண்டவர்களேஏமாளிகளாக்கப் படுவதே வழக்கமாகிறது. ஆனால் அது யாருடைய தோல்வி என்பது என்பதும் சர்ச்சைக்குரியதே.

    வாழ்வில் கடந்து வந்த நிலைகளில், கடந்து வந்த பாதைகளில் என்றும் மாறாது நிலைத்திருப்பது என்னவென்றுஎண்ணிப்பார்க்கிறேன். “உண்மை அன்பு”. ஆமாம் … அது ஒன்றுதான் என்றும் மாறாமல் எம்முடன் கூட வருவது.அவ்வுண்மை அன்பைத் தருபவர் உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை யாராகவும் கூட இருக்கலாம்.அவ்வன்பு கடைசிவரை எம்முடன் கூடவரும் என்பதுவே உண்மை.

    நான் ஓரிடத்தில் படித்த கதையொன்று என் நினைவுக்கு வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல்தோன்றுகிறது…

    holding his handதன் தந்தையைத் தேடி வந்த ஒரு தளர்ந்து போன இராணுவவீரனை வயதான மனிதரிடம் அழைத்துச் சென்றாள் ஒருநர்ஸ். “இதோ உங்கள் மகன் வந்திருக்கிறான்” என்றபடியே அவன் கைகளைப் பிடித்து அந்த வயதானவரின் கைகளில்வைக்கிறாள். சரியாக எதையும் பார்க்க முடியாத அந்தப் பெரியவர் அவனைப் பார்க்க முயன்று பார்க்க முடியாமல்அவன் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார். பாசத்தோடு பற்றிக் கொண்ட கைகளை இறுகப்பிடித்துத் தந்தை மீதிருந்தபாசத்தைக் காட்டுகிறது அவ்விளைஞனின் விரல்கள்.

    மறுபடி நர்ஸ் வரும்போது அவரின் கைகளைப் பற்றியபடி அருகிலிருந்த கதிரையில் அமர்ந்திருந்த அவ்விளைஞன்அவருக்குக் கனிவான ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தான். மீண்டும் ஒருமணிநேரம் கழித்து வந்த நர்ஸ்அவ்விளைஞன் தூங்காமல் அவருக்கு அருகிருந்தபடியே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு, “சிறிதுநேரம்ஓய்வெடுத்து விட்டு வரக்கூடாதா ? “ என்றாள். அவ்விளைஞனோ அவளைச் சட்டை செய்யாது தொடர்ந்துஅவ்வயதானவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். காலைநேரம் வந்தது அவ்விளைஞனின் கைகளைப்பற்றியபடியே அவ்வயதானவரின் உயிர் பிரிந்தது.

    அங்கு வந்த நர்ஸ் , “கவலைப்படாதே கடைசிநேரத்தில் நீ உன் தந்தையுடன் இத்தனை நேரம் செலவு செய்தது உன்பாக்கியமே” என்று ஆறுதல் கூறினாள். அதற்கு அவ்விளைஞன், “யார் அந்த மனிதர் ? “ என்று கேட்டான். திகைத்துவிட்டாள் நர்ஸ். “அவர் உன் தந்தை இல்லையா?“ என்று கேட்டாள். “இல்லையே” என்று பதிலளித்தான் அவ்விளைஞன். “உன்தந்தையில்லாவிட்டால் நான் உன் தந்தை என்று அவரிடம் அழைத்துச் சென்றபோதே என்னிடம் சொல்லியிருக்கலாமே ! “என்றாள். அதற்கு அவன், “அவர் என் தந்தையில்லை. ஆனால் அவர் தனது மகனை எதிர்பார்த்திருந்தார். அவருக்கு அவர்மகனைக்கூட அடையாளம் காண முடியவில்லை, அந்நிலையில் அவரது கடைசி நேரத்தில் அவர் நம்பிக்கையைச்சிதைக்க நான் விரும்பவில்லை ” என்றான். அந்த நர்ஸ் தனது செவிகளையே நம்ப முடியாமல் அவனை ஒருவித புதுக்கனிவுடன் பார்த்தாள்.

    இது ஒரு வெறும் கதையே ! ஆனால் அன்பு குடிகொண்டவர் நெஞ்சில் அதன் தாக்கம் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.அவ்வன்பினை அவர்களது பலவீனமாகக் கருதி பலர் அவர்களைத் தாம் ஏமாற்றியதாக எண்ணலாம். ஆனால்உண்மையில் ஏமாற்றப்படுவது அவர்களே.

    எனது இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் நான் உண்மை அன்பினை எதிர் கொண்டது சிற்சில பொழுதுகளே ! ஆனால்அவை வாழ்வில் எனக்குப் புகட்டிய அனுபவப் பாடங்களோ ஆயிரமாயிரம்.

    அன்பு ஒன்றே இறுதிவரை எம்முடன் கூடவரும் செல்வம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (187)

    — சக்தி சக்திதாசன்.

    Princess Sophia Duleep Singh
    அன்பினியவர்களே !

    அன்பினிய வணக்கங்கள்.

    8ம் திகதி மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வாரத்திலே உங்கள் முன்னால் என் மடல் வந்து விழுகிறது. பெண்களுக்கென ஓர் தினம் அவசியமா ? எனும் கேள்விகள் சில திக்குகளில் இருந்து கிளம்பியதை என்னால் அவதானிக்க முடிந்தது. மேற்கத்திய உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து திகழ்கிறது. இங்கே பெண்கள் சுயாதீனமாக, தமது கால்களில் தாங்கள் தங்கி வாழக்கூடிய சூழல் பல பத்து வருடங்களுக்கு முன்னாலேயே உருவாகி விட்டது.

    அதாவது எமது பின்புல நாடுகளில் பெண்களின் மகத்துவத்தின் பெருமை உணரப்படுவதற்கு முன்னாலேயே இங்குப் பெண்களுக்கான உரிமைகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. அப்படியிருந்தும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் இச்சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதீதமானதாகவே காணப்படுகிறது. இதுவே சர்வதேச மகளிர் தினம் அவசியமா எனும் வினாவை எழுப்புவோருக்குத் தக்க விடையாகக் கூட அமைந்து விடுகிறது. இங்கிலாந்தில் உலக மகாயுத்தத்திற்கு முன்னிருந்த பெண்களின் நிலையும் இரண்டாம் உலகமகாயுத்தத்திற்குப் பின்னால் இருந்த பெண்களின் நிலையும் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

    1800 களின் இறுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் பிரித்தானியாவில் பெண்களின் விடுதலைக்கான போராட்டம் முனைப்படைந்திருந்தது. பெண்கள் தமது வாக்குரிமைக்காகப் பல போராட்டங்களை நடத்தினார்கள். இப்போராட்டங்களின் போது பல வீராங்கனைகள் தமது உயிரைப் பணயமாகக் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. இப்போராட்டங்களில் ஈடுபட்ட வீராங்கனைகளில் ஒருவர் “சோபிஃயா டியூலிப் சிங்” ( Sophia Duleep singh ) ஆவார். இவரின் தந்தை மகாராஜா டியூலிப் சிங் , சீக்கிய இராச்சியத்தின் மகாராஜா ஆவார். இவரின் தாயார் ஒரு ஜெர்மானிய வியாபாரியின் மகளாவார். மகாராஜா டியூலிப் சிங் தனது 11வது வயதில் தனது இராஜ்ஜியத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திடம் கையளித்தார் என்பதும், இவரே “கோஹினூர் வைரத்தை” அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்புச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

    இவரின் குடும்பம் பிரித்தானியாவுக்கு, பிரிட்டிஷ் நிர்வாகத்தினரால் நாடு கடத்தப்பட்டது என்பதுவும் இவரை இங்கிலாந்தில் பிரித்தானிய மகாராணி விக்டோரியா பராமரித்தார் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய ஒரு சூழலில் தான் ஃசோபியா டியூலிப் சிங் இங்கிலாந்தில் பெண்ணுரிமைக்கான போராட்டத்தில் இணைந்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. பல பெண்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் உலக மகாயுத்தத்தின் போது செஞ்சிலுவைச் சங்கத்தின் சீருடையில் நர்ஸாகப் பணியாற்றியுள்ளார் என்பதும், இந்திய இராணுவ வீரர்களுக்கான பல ஆதரவுப் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. 1048ம் ஆண்டு இவர் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

    நான் சுருக்கமாக இந்திய வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு பெண்ணின் பெண்ணியப் போராட்டத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்ட காரணம் இங்கிலாந்தில் இத்தினத்திற்கான மகிமையின் பின்னணியைச் சிறிது விளக்குவதற்காகவே! அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சம உரிமை அடைந்து விட்டார்களே இன்னும் என்ன பிரச்சனை என்கிறீர்களா?

    அதாவது 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஊதிய வேறுபாடு நிலவும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரே தரமான பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஆணின் ஊதியத்திற்கும், பெண்ணின் ஊதியத்திற்கும் வேறுபாடு காணப்படுகிறது. இவ்வேறுபாட்டின் அடிப்படையை அறிந்து ஆவன செய்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் அதற்கான குழுவை அமைத்துச் செயற்படுகிறது. பெண்களின் கல்வித்தகமைகள் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் ஏறமுடியாதவாறு தடைக்கற்கள் காணப்படுகின்றன எனும் வாதம் வலுவடைந்திருக்கிறது.

    உச்சியைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது ஆனால் அதை நோக்கி முன்னேறும் போது கண்ணாடிக் கதவுகள் தடைசெய்கின்றன. இதை ஆங்கிலத்தில் “Glass Ceiling” என்பார்கள். பெண்கள் தான் வீட்டைப் பராமரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இன்னும் நவீனமயமான ஆண்களிடம் நிலவுவதை நாம் பல இடங்களில் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. “இல்லத்தரசி” எனும் பதவி ஒரு பெண்ணுக்குக் கெளரவமானதே ! ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக முழுநேரப் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டு முழுநேர இல்லத்தரசியாகவும் இருக்க வேண்டும் எதிர்பார்ப்பு நியாயமானதா ?

    ஒரு பெண்ணை நோக்கிய சமுதாய எதிர்பார்ப்புகள் பல பெண்களை மனோநிலை பாதிக்கப்படும் அளவிற்குக் கொண்டு செல்லுகின்ற நிலை இன்றைய காலகட்டத்தில் நிகழ்வது பரிதாபத்திற்குரியதே! ஒரு பெண்ணால் நிறுவனத்தை நிர்வகிப்பது மட்டுமல்ல ஒரு நாட்டையே ஆளமுடியும் என்பதைச் சான்றுடன் நிரூபித்த பெண்களைக் கண்ட நாம், அன்றைய நிலைப்பாடுகளில் எம் வாழ்க்கையில் காணும் பெண்களை எடைபோட முனைவது எவ்வகையில் நியாயமாகும் ?

    அதற்காக எல்லா ஆண்களுமே அப்படிப்பட்ட மனோபவத்தில் தான் இருக்கிறார்கள் என்பதல்ல எனது வாதம். தன் மனைவியின் பெருமை உணர்ந்து அதற்கான மதிப்பைக் கொடுத்துக் கௌரவிக்கும் பல விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் காணப்படத்தான் செய்கின்றன. தன் மனைவி தன்னோடு இல்லாத நேரத்தில் தானருந்துவதற்கான பாலைக் காய்ச்ச முனைந்த போதுதான் மகாகவியின் மனதில் பெண்ணுரிமையின் முக்கியத்துவம் உதித்தது. அவரிடம் நிவேதிதா அம்மையார் “இந்நாட்டில் எப்போது பெண்களுக்கு விடுதலை வருகிறதோ அப்போதுதான் இந்நாடு விடுதலையடையும்” என்று கூறியது அவரது தீர்க்கமான பெண்விடுதலைக் கருத்தை வலியுறுத்தியது.

    எம் வாழ்வில் பெண்களின் வெவ்வேறு வடிவங்களை நாம் வெவ்வேறு நிலைகளில் பார்க்கிறோம் என்பதுவே உண்மை. எமது அன்னைக்கும், சகோதரியருக்கும் கொடுக்கும் இடத்தை எமது மனைவிக்குக் கொடுக்கிறோமா? என்பது ஒரு நியாயமான கேள்வியே. பெண்ணுரிமை என்பது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால்தான் அதன் உண்மையான தாத்பரியம் புரியும். சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எம் ஒவ்வொருவர் மனங்களிலும் கேள்வியை எழுப்புவதே !

    “எம்மைச் சுற்றியுள்ள, எம் வாழ்வில் இணைந்துள்ள பெண்களுக்கு அவர்களுக்கு உரியக் கெளரவத்தை மனிதாபிமானத்தின் அடிப்படியில் வழங்குகிறோமா ?“ என்பதுவே.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (186)

    – சக்தி சக்திதாசன்.

     

    donald-trump

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே நான். இன்றைய அவசர உலகில் நாடுகளின் அரசியல் நடப்புகள் எந்நெஞ்சில் ஓரளவு சிந்தனையைத் தூண்டியுள்ளன. குறிப்பாக, சகிப்புத்தன்மைக்குப் பேர் போன இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அரசியல் அதிர்வுகள் சிந்திக்க வைக்கின்றன.

    புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் நாம் எமது சீரான அமைதியான வாழ்வுக்கு நாம் வாழும் நாடுகளின் மக்களின் சகிப்புத்தன்மையும் எம்மை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமுமே துணை வருகின்றன. ஆனால் சமீபத்திய அரசியல் அரங்கில் நிகழும் நிகழ்வுகள் மனதில் ஒருவித பீதியோடு கூடிய மனக்கிலேசத்தை ஏற்படுத்துவது போலத் தென்படுகிறது.

    அமெரிக்கா சுமார் எட்டு வருடங்களின் முன்னால் ஒரு கறுப்பரைத் தனது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது உலகெங்கும் ஒரு புதுவிதப் புத்துணர்ச்சியுடன் கூடிய உற்சாகத்தை அளித்தது. அமெரிக்க ஜனநாயகம் பற்றி மிகவும் புகழ்ச்சியான வகையில் பலவிடங்களிலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்போது எட்டு வருடங்களுக்குப் பின்னால், அதே அமெரிக்கா, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் புத்துணர்ச்சியை அளிப்பதற்குப் பதிலாக புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலும், சுதந்திர மனப்பான்மையுடைய ஏனைய அமெரிக்கர்கள், உலக மக்கள் மத்தியிலும் ஒருவித சஞ்சலமிக்க சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறது.

    ஆமாம் டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump ) என்பவரின் அதிரடியான அரசியல் பிரவேசமும் அவருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்பார்த்திராத ஆதரவுமே இத்தகைய ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. அமெரிக்க தேர்தல் விதிகளின்படி ஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சி சார்பாக போட்டியிடப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் யாரெனத் தீர்மானிப்பது ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையிலேயே யார் அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது என்பதை அக்கட்சி உறுதி செய்யும்.

    அவ்வகையில், இம்முறை நான் மேற்குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப் என்பவரே இதுவரை நடந்த தேர்தல்களில் அமெரிக்க நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் சார்பில் அதிக விருப்புள்ளவராகத் தென்படுகிறார்.

    யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் ?

    1946ம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்த டொனால்ட் ட்ரம்ப் ஒரு பொருளாதாரப் பட்டதாரியாவார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கான தேர்தலில் குதித்த இவருக்கு ஆதரவு கிட்டாத காரணத்தினால் விலகிக் கொண்டார். அமெரிக்க நாட்டின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான இவர் பிரபலமான தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளருமாவார். இவர் கடந்த காலங்களில், அமெரிக்க நாட்டின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி (Democratic Party) , குடியரசுக் கட்சி (Republican Party) இரண்டுக்குமே பெருமளவில் நிதியுதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவது ஏன் புலம்பெயர் சமூகத்திற்குச் சஞ்சலமளிக்கிறது எனும் கேள்வி எழலாம். காரணம் இவரது சமீபத்திய கொள்கைப் பிரகடனங்களே ! சமீபத்தில் இவர் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரேவழி பயங்கரவாதத்திற்குரிய சரியான காரணத்தை அறியும்வரை அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என்றார். மற்றொரு சமயம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தோர்கள் பெண்களைப் பலாத்காரம் செய்வோர் என்றார். அது மட்டுமல்ல மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்வதற்காக மெக்சிகோ அரசாங்கத்தின் செலவில் எல்லையில் மதில் கட்டி இருநாடுகளுக்குமிடையில் நிரந்தர எல்லையைப் பேணுவேன் என்றார்.

    அதுமட்டுமல்ல, அமெரிக்காவிற்குள் இருக்கும் சட்டவிரோத வெளிநாட்டிலிருந்து புகுந்தோர் அனைவரையும் உடனடியாக நாடு கடத்துவேன் என்று வேறு கூறியிருக்கிறார். அமெரிக்காவை மீண்டும் பெரிய ஏகாதிபத்திய நாடாக்குவேன் என்று சூளுரைத்துள்ளார். இத்தகைய வாதங்கள் புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஒரு சில சஞ்சலங்களைத் தோற்றுவிப்பது ஆச்சரியமில்லையே ! இப்படியான கொள்கையைப் பேசும் ஒருவரை வீணே பிதற்றுகிறார் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், அவருடைய இத்தகைய பேச்சுகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவே இந்த அச்சத்திற்குக் காரணம் என்றால் மிகையாகாது.

    இதேபோல இப்போது இங்கிலாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா? இல்லையா ? எனும் அனைத்துமக்கள் வாக்கெடுப்பு நடத்தும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் வெளிநாட்டுக்காரர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைப் பற்றியே நிகழ்கின்றன.

    இவை நேரடியாக அந்தந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களின் மீதான அந்நாட்டு மக்களின் பார்வையின் கோணத்தை வித்தியாசப்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் இத்தகைய கருத்துக்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளமை புலப்படுகிறது. இந்த மாற்றம் இந்தக் காலகட்டத்தில் ஏன் ஏற்படுகிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்குப் புலம்பெயர் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றதா எனும் கேள்வி நிச்சயமாகக் கேட்கப்பட வேண்டும்.

    எம்மை வாழவைக்கும் இந்த நாடுகளின் அனுகூலங்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு எமக்கும் இந்த நாட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனும் போக்கில் பல புலம்பெயர் மக்களின் சமூகம் வாழத்தலைப்படுகிறதோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. இந்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்நாட்டையே தமது எதிரி நாடாகப் பார்த்து இம்மக்களைப் பாதிக்கும் பயங்கரவாதம் முதலான செயல்களில் ஈடுபடுவது இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

    அது மட்டுமல்ல நாம் எமது கலாச்சாரங்களைப் பாதுகாக்கிறோம் எனும் நோக்கில் எமது கலாச்சாரங்களை இந்நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறோமா ? என்பது கூட ஒரு நியாயமான சந்தேகமே ! எமது மொழி, எமது கலாச்சாரம் என்பது நிச்சயமாக எமது அடையாளங்களே. அதை நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அங்குத் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பது ஒரு உத்தமமான செயலே ! ஆனால், அதற்காக நாம் ஒரு சராசரி எல்லைக் கோட்டைத் தாண்டி விடுகிறோமா? எம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி. எமது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நாம் எமக்குள் பேணிக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, நாம் வாழும் நாட்டில் எம்மை மிகவும் மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழ இடம் தந்த சகிப்புத்தன்மை மிக்க மக்களிடம் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?

    இவர்களது சகிப்புத்தன்மையின் எல்லைவரை தள்ளிச்சென்று நாம் இவர்களது பொறுமையைச் சோதிக்கிறோமா ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரே நாட்டிற்குள், ஒரே நிறத்தையும், ஒரே கலாச்சாரப் பின்னணியையும் கொண்ட சமூகங்களுக்கிடையே பலவித பிரிவினைகளைப் பெரிதுபடுத்தப்படும். பின்புலநாடுகளில் இருந்து மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எம்மை எந்தவித நிறவேற்றுமை, மதவேற்றுமை , கலாச்சார வேற்றுமை பாராது இடம் தந்து வாழ்வு தந்த நாடுகளின் பிரஜைகளாக மாறிய பலர் இன்னும் மனதளவில் இந்நாட்டை ஒரு வாடகை வீடாகப் பார்ப்பதே இத்தகைய மனப்பான்மைக்குக் காரணம்.

    எனது இந்தக் கருத்துக்கள் நான் எனது தாய்மண்ணின் மீதோ அன்றி நான் எனது மொழியின் மீதோ கொண்ட பக்தியையும் காதலையும் எவ்விதத்திலும் குறைவாக மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. புலம்பெயர்ந்தோராகிய எமது அடுத்த சந்ததியும், இனிவரும் சந்ததிகளும் இந்நாடுகளில் ஒரு நிம்மதியான, நிலையான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனும் ஒரு ஆதங்கமே எனது இம்மடலின் மையக்கருத்துக்குக் காரணம்.

    “தம்பி உன்நெஞ்சில் உண்மை இருந்தால் பேனாவை எடு எழுது ” என்றான் முத்தமிழ்ப் பாவலன் மகாகவி பாரதி.

    நாம் வாழும் நாடுகளுக்கு உண்மையுள்ளவர்களாக, நன்றியுள்ளவர்களாக வாழ்வது ஒன்றே எமது எதிர்காலச் சந்ததியின் நல்வாழ்விற்கு வழிவகுக்கும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (185)

    – சக்தி சக்திதாசன்.

     

     

    daily-mail-graph

     

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    சென்றவாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு சிக்கலின் ஆரம்பத்திற்கான வாரம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். நான் மடலை வரைந்த அந்நாளே இங்கிலாந்துப் பிரதமர் திரு.டேவிட் கமரன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அங்கத்துவத்தை பிரித்தானிய அரசு நீடிப்பதற்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைக் கோரி அதற்கான உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏனைய ஐரோப்பியத் தலைவர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

    அவரது கோரிக்கைகளுக்கு ஏனைய 27 ஐரோப்பிய தலைவர்களும் உடன்படுவார்களா? இல்லையா? என்பதுவே கேள்விக்குறியாகவிருந்தது. இவ்வுடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வது பிரதமர் டேவிட் கமரனுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகவிருந்தது. அவரது கோரிக்கைகளை ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான ஆதரவைப் பிரதமர் நல்க முடியும் என்பதுதான் அவருக்கு முன்னாலிருந்த யதார்த்த நிலை.

    டேவிட் கமரன் எதிர்பார்த்தபடி போனவாரம் வியாழக்கிழமை அவரின் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் அவருக்கேற்றபடி அமையவில்லை. இரவோடிரவாக தொடர்ந்த பேச்சுவார்த்தை காலை 4.30 வரை நீடித்தும் அனைவரிடமும் இணக்கம் காணப்படவில்லை. ஆயினும் முடிவு டேவிட் கமரனுக்குச் சாதகமாக அமையும் எனும் ஓர் பொதுக்கருத்து நிலவியது. அதற்கான காரணம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் விரும்பவில்லை என்பதுவே.

    பேச்சுக்கள் மீண்டும் காலை 10 மணியளவில் தொடங்கி மாலைவரை நீடித்தது. வெள்ளிக்கிழமை மாலை டேவிட் கமரனது கோரிக்கைகள் ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளினதும் தலைவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது எனும் அறிவித்தல் கிடைத்தது. நடைமுறைக்கு மாறாக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டு இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டன என்பதை அறிவித்தார்.

    அதனை அடுத்து பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிருபர்களைச் சந்தித்த பிரதமர் தனது கோரிக்கைகளை பிரித்தானிய ஒன்றியத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் தனது அமைச்சரவை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என்று சிபாரிசு செய்வதாகவும், விலகுவதா, இல்லையா? என்பதற்கான மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு வருகிற ஜூன் மாதம் 23ம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

    அதேநேரம் தனது அரசாங்கம், தனது கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தினர்கள் தமது கொள்கையான ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பது என்பதைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தப் போவதில்லை என்றும் ஒவ்வொருவருக்கும் தாம் என்ன எண்ணுகிறார்களோ அதன் பிரகாரம் வாக்களிக்கும் சுதந்திரம் நல்குகிறோம் என்றும் அறிவித்தார். அரசாங்கத்தின் 29 அமைச்சர்களில் 6 பேர் பிரதமரின் கருத்துக்கு எதிரான கருத்துக்கு அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் எனும் கோரிக்கைக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

    மதின்மேற்பூனை போல இருந்த லண்டன் மேயர் திரு பொரிஸ் ஜான்சன் (கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்) எந்தப் பக்கம் பாயப் போகிறார் என்பதுவே அனைத்து ஊடகவியாளார்களுக்கும் கேள்விக்குறியாக இருந்தது. அவரை நோக்கி வீசப்பட்ட வினாக்களிலிருந்து அதுவரை சாதுரியமாகத் தப்பி வந்த அவர் தானும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்று வாதிடும் சாரருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து விட்டார்.

    இவரது இந்த முடிவு தனது சொந்த நலனை முன்வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்தப் பாராளுமன்றத்தின் முடிவோடு தானும் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக டேவிட் கமரன் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் கட்சித் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலேயே பொரிஸ் ஜான்சன் இயங்குகிறார் என்பது அவர்களின் கருத்து. இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

    அரசியல் அரங்கமே வரும் நான்கு மாதங்களும் ஒரு இடியப்பச் சிக்கல் போலத் தென்படுகிறது. ஏன் என்கிறீர்களா ? அரசாங்கத்துக்குள் இந்த ஐரோப்பிய அங்கத்துவத்தினால் பாரிய பிளவு, அதே சமயம் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் பிரதமரோடு இணைந்து பிரசாரம் செய்யும் ஒரு நிலை. இத்தகைய ஒரு சூழலில் பிரதமருக்கு சாதாரண நாளுக்கு நாள் நடைபெறும் அரசாங்க விடயங்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ கொள்கையில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் தன்னுடைய அமைச்சர்களுடன் சேர்ந்து இயக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை.

    எத்தகைய வடிவிலான பிரச்சாரமாக இருந்தாலும் அது நாகரீகமாக, கெளரவமாகத் தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அரசாங்கச் சார்பில் கருதப்படுகிறது. வெறும் வாயையே மெல்லுவதில் வல்லுநர்களான ஊடகவியலாளர்கள் அவல் கிடைத்தால் சும்மா விட்டு விடுவார்களா என்ன ?

    ஆரம்பிச்சுட்டாங்கய்யா ! பிரதமரின் கருத்துக்களைக் கேட்டு விட்டு, அவரை ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் அமைச்சர்களிடம் “என்ன பிரதமர் அப்படிச் சொல்லுகிறார் ? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள். அப்படியானால் பிரதமர் எம்மை ஏமாற்றுகிறாரா என்ன ” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு குளத்தினுள் கல்லை விட்டெறிந்து வலயங்களைத் தோற்றுவித்து அதில் மீன்பிடிக்க எண்ணுகிறார்கள்.

    அடிப்படைக் கொள்கைகளில் முற்றிலும் நேர்மாறான கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் இந்த ஒரு அம்சத்தில் மட்டும் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் வினோதங்கள் நிகழ்கின்றன. மற்றுமொரு சிக்கலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. நடந்து முடிந்த ஸ்காட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பலர் அறிந்திருக்கக்கூடும். ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் குறைந்த வித்தியாசத்தினால் ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தது.

    வரப்போகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் விலக வேண்டுமெனத் தீர்மானிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதேநேரம் இதற்காக ஸ்காட்லாந்து நாட்டில் விழுந்த வாக்குகள் பெரும்பான்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று விழுந்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஸ்காட்லாந்தின் மாநில அரசாங்கம் விட்டு விடுமா என்ன? நமது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்புகிறார்கள் ஆனால் முழுவதுமான ஐக்கிய இராச்சிய வாக்கெடுப்பு வெளியேறத் தீர்மானித்தால் எப்படி அது ஜனநாயகமாகும் ? இதனால் ஸ்காட்லாந்து தனித்து போவதுதான் முறை என்று மற்றொரு தமது தனிநாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவார்கள் அதில் அவர்கள் வெல்வதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.

    அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன ? என்பதனையும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல இத்தகைய ஒரு அதிமுக்கிய தீர்மானத்தை ஜனநாயக அடிப்படையில் மக்களின் கையில் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்காமல் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகிறது.

    பொறுப்பான செயற்பாடுதான் ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை.

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)

    — சக்தி சக்திதாசன்

    daily mail graph.

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்கள்.
    இங்கிலாந்து அரசியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு வாரம் இந்தவாரம். இதோ உங்கள் முன்னால் மற்றொரு மடலுடன் நான்.

    1957ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தின் ஆறுநாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்தது. அந்நாடுகள் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பேர்க், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவாகும்.

    அந்நாளில் இக்கூட்டு முன்னணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானதொரு பொது வியாபாரக் கூட்டுறவை ஏற்படுத்துவதாகும்

    1973ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் கன்சர்வேடிவ் கட்சியின் கையிலிருந்தது. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் மறைந்த திரு எட்வேர்ட் ஹீத் (Edward Heath) பதவி வகித்தார்.

    இவரது தலைமையின் கீழிருந்த இங்கிலாந்தும் இந்த ஐரோப்பிய பொருளாதார வியாபாரக் கூட்டுறவில் இணைந்து கொண்டது.

    அது “ஐரோப்பிய பொருளாதாரக் கழகம் ” (Europeon Economic Council ) எனும் பெயருடன் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய பன்னிரண்டு நாடுகளாக விரிவு அடைந்தன.

    அதைத் தொடர்ந்து வந்த 1974ம் ஆண்டு தேர்தலில் பிரதானக் கட்சிகள் இரண்டும் தேர்தல் விஞ்ஞாபனமாக இக்கூட்டுறவில் தொடர்ந்து இருப்பதா இல்லையா எனும் தீர்மானத்திற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்தது.

    தேர்தலில் ஹரால்ட் வில்சன் ( Harold Wilson ) தலைமையிலான லேபர் கட்சி சிறுபான்மை பலத்துடனான அரசமைத்தது. அவ்வரசின் பலவீனத்தின் பொருட்டு அடுத்த வருடமே அரசு கலைக்கப்பட்டு அடுத்தொரு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதே லேபர் கட்சி அதே பிரதமருடன் பெரும்பான்மை பலத்துடன் அரசமைத்தது.

    அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே லேபர் கட்சி கலந்து கொண்டது, இருப்பினும் பிரதமர் ஹெரால்ட் வில்சன் ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டுறவுடன் நடத்திய பேச்சுக்களின் பலனாக லேபர் கட்சியும் இக்கூட்டுறவில் தொடர்ந்து நீடிப்பதை ஆதரித்தது. விளைவு இவ்ஐரோப்பிய கூட்டுறவில் இங்கிலாந்தும் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 17,378,581 வாக்குகளும் எதிராக 8,470,073 வாக்குகளும் விழுந்தன.

    விளைவு இங்கிலாந்து அக்கூட்டுறவில் தொடர்ந்து இணைந்திருந்தது. வெறும் பொது வியாபாரநோக்கில் இணைக்கப்பட்டது என்று கூறப்பட்ட இக்கூட்டுறவின் கொள்கை விரிவானது. வியாபாரம் மட்டுமல்லாது நிதி, அரசியல் போன்ற இணைவுகளும் இதன் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவ்வரசியல் விரிவாக்கத்தின் பின்னணியாக 1992ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள மாஸ்ட்ரிக் ( Maastricht ) எனும் இடத்தில்; 1958ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஐரோப்பிய கூட்டுறவு ஒப்பந்தம் மீளப் பரிசீலிக்கப்பட்டு பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு “மாஸ்ட்ரிக் ஒப்பந்தம்” எனக் கைச்சாத்திடப்பட்டது.

    இதன்போது இங்கிலாந்தின் பிரதமராக ஜான் மேஜர்(John Major) பதவி வகித்தார். இவ்வொப்பந்தத்தின் பிரகாரமே ஐரோப்பிய ஒன்றியம் ( Europeon Union) எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொது நாணயமாக “யூரோ” வைக் ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையில் பொருட்கள், மனிதர்கள் ஆகியோர் தடையின்றி இடம் பெயரலாம் என்பதுவும் விதியாக அமைக்கப்பட்டது. இவ்விதிக்கு அப்போதே இங்கிலாந்தும் வேறு சில நாடுகளும் தமது ஆட்சேபத்தைத் தெரிவித்திருந்தன.

    இதன்போது இவ்வொன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஜி.டி.பி அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களும், அந்நாட்டின் சர்விஸ் நிறுவனங்களினால் ஈட்டப்படும் வருவாயும் ஒன்று சேர்ந்த கூட்டுப் பொருளாதார அளவின் 60% வீதமே கடனாக வைத்திருக்கலாம் என்பதுவும் இந்த ஜி.டி.பியின் 3% லுமே வருடாந்த நிதிநிலையில் துண்டு விழலாம் என்றும் விதி வகுத்துக் கொண்டன. இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்” எனும் ஒரு நிதிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து வருவது என்று முடிவெடுக்கப்பட்டது. இப்பொறிமுறையைக் கடைப்பிடிக்கும் அந்தந்த நாடுகள் தமது நாணயங்களைப் பாவிப்பில் வைத்திருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் மார்கிரெட் தாட்ச்சர் ( Margret Thatcher) அவர்களின் தலையில் இருந்த கன்சர்வேடிவ் அரசு நிதியமைச்சராக இருந்த ஜான் மேஜரினால் “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்”(இ.ஆர்.எம்) என்றழைக்கப்படும் பொறிமுறையினுள் நுழைந்தது.

    வந்ததே பாருங்கள் பொருளாதார சுனாமி !

    இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக அதிகரித்து அரசாங்க வட்டி வீதம் 15% ஆக உயர்ந்தது. அதிகபட்ச நடவடிக்கையாக இங்கிலாந்து 1992ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி தன்னை “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்”(இ.ஆர்.எம்) என்றழைக்கப்படும் பொறிமுறையினுள் இருந்து விடுவித்துக் கொண்டது. இது நடந்த புதன்கிழமை இன்றும் இங்கிலாந்து அரசியல் உலகில் “கருப்புப் புதன்கிழமை” ( Black Wednesday) என்றழைக்கப்படுகிறது. இங்குக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இந்த இ.ஆர்.எம் எனும் பொறிமுறைக்குள் செல்லக்கூடாது எனும் காரணத்தினால் எழுந்த சர்ச்சையினால் அதற்கு ஆதரவளித்த முந்தைய நிதியமைச்சர் நைஜல் லோசன் (Nigel Lawson) பதவியை இராஜினாமா செய்தார் என்பதுவே.

    இந்தப்பின்னணியில் உருவான ஐரோப்பிய ஒன்றியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது அரசியல் அபிலாஷைகளை அதிகரித்துக் கொண்டது. இவ்வரசியல் அபிலாஷையின் அதிகரிப்பை இங்கிலாந்து மக்கள் விரும்பவில்லை. “யூரோ” நாணயம் 1999ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி சர்வதேச நாணய அரங்கில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து இந்த நாணயத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமது பொருளாதார நிலையில் ஜந்து இலக்குகளை நிர்ணயித்து அவ்ஐந்து இலக்குகளையும் அடைந்தால் மட்டுமே தாம் யூரோ நாணயத்திற்கு மாறுவோம் எனும் நிபந்தனையை விதித்தது.

    தமது நாட்டின் இறையாண்மை சூறையாடப்படுகிறது என்பது இவர்களினது அபிப்பிராயம். தமது நாட்டின் சட்ட திட்டங்களை வகுக்கும் உரிமை தமக்கே இருக்க வேண்டுமே அன்றி எங்கோ இயங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பட்டால் தமது தனித்துவத்தை இழப்பதைப் பலர் விரும்பவில்லை. இந்நிலையில் சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னால் தன்னாட்சி அமைத்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவ்ஐரோப்பிய ஒன்றியத்தில் தம்மை இணைத்துக் கொண்டன.

    இங்கே ஐரோப்பிய ஒன்றியத்தின் சுயபாதுகாப்பு நோக்கம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. முந்தைய சோவியத் யூனியனின் பாகங்களாக இருந்த இக்கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தம்முடன் இணைப்பது தமக்கு பாதுகாப்பானது எனும் காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல முக்கிய நாடுகளின் எண்ணம். ஆனால் இணைந்து கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை விடப் பின் தங்கிய நிலையிலே உள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்துவார்கள் எனும் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பல கிழக்கு ஐரோப்பிய மக்கள் இலகுவாக மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கும் வசதியைப் பயன்படுத்தி மற்றைய நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளார்கள்.

    இதன் விளைவே இன்றைய இங்கிலாந்து அரசின் அரசியல் நெருக்கடி.

    இங்கிலாந்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் அடிப்படை வசதிகள் அதாவது வேலையற்றோருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிகளைப் பெறுவது மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட இலகுவானது என்பதால் இங்கிலாந்துக்குப் படையெடுக்கும் இக்கிழக்கு ஐரோப்பிய மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேநேரம் இங்கிலாந்தில் பல பொதுப்பணித்துறை திட்டங்கள் பொருளாதார நெருக்கடியால் கைவிடப்பட்டுள்ளது. மக்களின் உதவிப்பணத்தின் அளவுகள் பலருக்கு மட்டுப்படுத்தப்படுகின்றன. எமது நாட்டில் எமது வாழ்வாதாரத்தில் பல பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் இந்நிலையில் எப்படி இத்தனை ஐரோப்பியர்கள் தம்நாட்டில் இருந்து இங்கு இடம்பெயர முடியும்? இதற்கொரு முடிவில்லையா ? என்பதே மக்களின் பொது ஆதங்கம்.

    இங்கிலாந்து ஒரு சிறிய தீவு பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருந்தாலும் மக்களின் தொகை அதிகரிப்பினால் கல்வி, தேசிய சுகாதார சேவை, வேலை வாய்ப்பு என்பன மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ, சரியாகவோ, தவறாகவோ இதற்கெல்லாம் காரணமாக இவ்ஐரோப்பியர்களின் வரவு பூதாகரமாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சில பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்போர் எனக் கருதப்படும் சிலரை அவர்களது சொந்தநாடுகளுக்கு நாடு கடத்தும்படி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டினால் அவர்களை நாடுகடத்த முடியாத நிலைக்கு இங்கிலாந்து அரசாங்கம் தள்ளப்பட்டது.

    மேலும் இவ்ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் இங்கிலாந்துக்குள் வரும் வெளிநாட்டவரின் வருகையை அவதானிக்க முடியாது அல்லாடும் ஒருநிலையும் காணப்படுகிறது. இவை அனைத்தின் விளைவாகவும் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் வலுத்தும், இதனை முன்னிலைப் படுத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு வலுத்தும் வருகிறது. அதுமட்டுமின்றி இவ்ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் வகித்தல் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் பலவருடங்களாகத் தலையிடியாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது.

    இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2017ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நிலைத்திருப்பதா ? இல்லையா ? எனும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவேன் என்று உறுதியளித்தார். அவர் 2017ம் ஆண்டு வரை காலக்கெடு விதித்த காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இங்கிலாந்து தான் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமானால் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளைத் தான் முன்னெடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையைக் காக்க முயற்சிப்பதற்காகவே .

    சளைக்கவில்லை பிரதமர் தான் வேண்டும் மாற்றங்களை வகைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து தமது கோரிக்கைகளின் நியாயத்தைச் சுட்டிக் காட்டினார். புயல் வேகத்தில் சுழன்றடித்து பல சந்திப்புகளைச் சந்தித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அமைச்சரவைக்குள் இருக்கும் அமைச்சர்கள் பலரை தனது பக்க நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை வேறு ! இன்று அதாவது 18ம் திகதி ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றுகூடி இங்கிலாந்துப் பிரதமரின் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்கிறார்கள்.

    இம்முடிவு பிரதமருக்குச் சாதகமாக அமைந்தால் அவர் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருக்க வேண்டும் என்று வாதிட்டு இச்சர்வ ஜனவாக்கெடுப்பை வருகிற ஜூன் மாதம் 24ம் திகதி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முடிவு அவருக்கு எதிராக அமைந்தால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்து இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகள் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அரசியல் அவதானிகளின் கணிப்பின்படி இம்முடிவு இங்கிலாந்து பிரதமருக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

    சர்வஜன வாக்கெடுப்புக்குச் சார்பான, எதிரான வாதங்கள் சுறுசுறுப்பாக முன்வைக்கப்படுகின்றன.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அமைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கானகத்தின் நடுவே விடப்பட்ட ஒரு குழந்தையின் நிலை போலத்தான் இருக்கும். ஏனெனில் இதற்கு முன்னால் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்ததே இல்லை. பல பங்குச் சந்தைகளின் பொருளாதார ஏற்ற, இறக்கங்கள் இன்றைய ஐரோப்பிய தலைவர்களின் முடிவிலேயே தங்கியுள்ளது.

    இதுவே பிரதமராக டேவிட் காமரன் பதவி வகிக்கும் கடைசி முறை. அவரின் சாதனை இங்கிலாந்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவது என்பதை அவர் விரும்புவாரா என்ன ?

    நாளை விடை பகரும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (183)

    – சக்தி சக்திதாசன்.

    docs

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.

    கடந்த ஆண்டு அதாவது 2015 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக் காலநிலை மிகவும் மாறுபட்டு 5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய நேரத்தில் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எங்கே விட்டுப் போன குளிரைத் தப்ப விட்டு விடுவோமோ எனும் ஏக்கத்தில் காலதேவதை இந்த வாரம் கொஞ்சம் தன் குளிரின் கடுமையைக் காட்டத் தொடங்கி விட்டாள்.

    கணினியின் முன்னால் இருந்து கொண்டு பனிபடர்ந்த சாரளத்தினூடாகக் கலங்கலாகத் தெரியும் வெளியுலகை நோட்டம் விட்டவாறு உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் சுகாதாரச் சேவையாகும். அச்சுகாதாரச் சேவையின் அஸ்திவாரமே அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகிய முன்னிலை சேவையாளர்களே ! இங்கிலாந்தைப் போன்ற வளர்ச்சியடைந்த நாட்டிலே மக்களின் வாழ்க்கைக் காலம் நீண்டு கொண்டு செல்கிறது. இது இங்கிலாந்துக்கு மட்டுமல்ல முழு உலகிற்கும் பொருந்தும்.

    1900ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஒரு சராசரி ஆணின் வாழ்வின் காலம் 47 வருடங்கள் எனவும் சராசரி பெண்ணின் வாழ்வின் காலம் 50 எனவும் அந்நாள் அளவாகக் கணிக்கப் பட்டிருந்தது. அதுவே இன்றைய காலகட்டத்தில் ஒரு சராசரி ஆணின் வாழ்வுக் காலம் 79 வயது எனவும், பெண்ணின் வாழ்வுக் காலம் 83 வயது எனவும் கூறப்படுகிறது. இவ்வாழ்க்கைக் கால நீட்சியின் காரணங்கள் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், சுகாதாரச் திணைக்களத்தின் அதீத முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு என்பதே பொதுக் கருத்தாக உள்ளது.

    இது சாதாரண மனிதருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயமே. ஆனாலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகிறது. ஒவ்வொரு மனிதரும் வாழும் காலம் நீடிக்க, நீடிக்க அம்மனிதரின் இவ்வுலக வாழ்விற்கான செலவினங்கள் அரசாங்கத்தின் தலையில் அல்லவா விழுகிறது ! அதுவும் இங்கிலாந்தைப் போன்று தேசிய சுகாதார சேவையில் அனைத்து வைத்தியமும் சகலருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி இலவசமாக வழங்கப்படுவதினால் அதற்குரிய நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது.

    அதனால் தற்போதைய கன்சர்வேடிவ் கட்சி அரசு தேசிய சுகாதாரச் சேவையில் எந்த அளவிற்கு தமது செலவுகளைக் கட்டுப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முனைகிறார்கள். அந்நடவடிக்கையின் போது இதுவரை தாம் கைவைக்கத் தயங்கிய டாக்டர்கள் மீது கை வைத்து விட்டார்கள் போங்கள் . . .

    அதி முக்கிய சேவைகளான போலீஸ், இராணுவம் ஆகியவை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நாட்டின் வைத்தியர்களும் முக்கியமானவர்களே ! ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. போலீஸ், இராணுவம் ஆகியோர் வேலைநிறுத்தம் செய்ய முடியாது எனும் சட்டம் நடைமுறையிலிருப்பது போல் வைத்தியர்களுக்கு ஓர் சட்டம் இல்லை. ஆனாலும் எழுதாச் சட்டம் போல வைத்தியர்கள் வேலைநிறுத்தம் செய்வது என்பது இதுவரை அதாவது 2015 வரைக்கு முன்னால் ஒரேயொரு தடவை தான் நடந்ததாக நினைவு.

    டாக்டர்களின் அடிப்படை வேலை ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து அவர்களது ஊதியத்தில் சில மாற்றங்களைச் செய்ய சுகாதார அமைச்சர் முடிவு செய்ததன் பிரகாரம் ஆரம்பித்தது சிக்கல். டாக்டர்களுக்கான யூனியன் இவ்வொப்பந்த மாற்றத்தை முற்றாக எதிர்த்தது, தம்முடன் எவ்விதமான கலந்தாலோசனையும் இன்று தன்னிச்சையாக அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது எனவும், இது தமது ஆரம்பக்கால டாக்டர்களின் ஊதியத்தில் பாரிய மாற்றங்களைச் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நேரத்திலும் பாதகமான முறையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்றும் அவர்கள் கோஷமெழுப்பினார்கள்.

    அரசாங்கமோ பணிவதாக இல்லை. விட்டார்களா டாக்டர்கள் ? இல்லையே பொறுத்தது போதும், பொங்கியெழுவோம் வாருங்கள் என்று யூனியன் வாக்கெடுப்புக்கு விட்டபோது, இவ்வொப்பந்த மாற்றத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வதற்கு ஆதரவாக 90 விழுக்காடுகளுக்கும் அதிகமான அளவில் டாக்டர்கள் வாக்களித்தார்கள். முடிவாகக் கடந்த வருட இறுதிகளில் ஆரம்பித்து நேற்று மூன்றாவது தடவையாக டாக்டர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். இவ்வேலைநிறுத்தம் அவசர சிகிச்சையைப் பாதிக்காத வகையில் தாம் இதை ஒழுங்கு செய்துள்ளதாகவும், தமது காரணங்களை விளக்கி மக்களிடம் ஆதரவு கோரினார்கள் டாக்டர்கள்.

    இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடியத் தன்னிச்சையாக இவ்வொப்பந்த மாற்றத்தை அரசாங்கம் அமல்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்பது போலத் தென்படுகிறது. இம்முடிவை அரசு இன்றோ அல்லது நாளையோ எடுக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. அரசு தரப்பிலிருந்து அவர்களது அடுத்த நடவடிக்கை பற்றிய எந்த விதமான தகவல்களும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. கருத்துகளின்படி தன்னிச்சையாக ஒப்பந்த மாற்றம் அமுல் படுத்தப்படுமானால் தமது வேலைநிறுத்தங்களும் தொடரும் என டாக்டர்களுக்கான யூனியன் எச்சரித்துள்ளது.

    தற்போது இரு தரப்பினர்களுக்கு இடையிலுமான முறுகல் நிலவரம் இதுதான், சனிக்கிழமை சாதாரண பணிநாளாக்கப் படவேண்டும் என்பது அரசாங்கத்தரப்பிலான வாதம். ஆனால், டாக்டர்களுக்கான யூனியனோ சனிக்கிழமை பணிபுரிந்தால் அதற்காக மேலதிகமான ஊதியம் வழங்கப்படும் தற்போதைய முறை மாற்றப்படக்கூடாது என்கிறது. இம்மாற்றத்திற்கு ஈடாக டாக்டர்களுக்கு 11% ஊதிய உயர்வு வழங்குவோம் என்று அரசாங்கமும், எமக்கு 5% ஊதிய உயர்வு போதும் ஆனால் சனிக்கிழமை பணியில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் யூனியனும் தமது எல்லைக்கோடுகளை வகுத்துக் கொண்டு அதைவிட்டு வெளிவரமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.

    இருவரையும் எல்லைக்கோட்டினைக் கடந்து ஒரு இடைவழியில் சந்திக்க வைக்க முயற்சி எடுக்கும் அமைப்பு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையில் அகப்பட்டு தமது நேற்றுத் திட்டமிடப்பட்ட ஆபரேஷன் ரத்து செய்யப்பட்ட சுமார் 3000 பேஷண்டுகள் மற்றொரு திகதியை எதிர்நோக்கிக் கொண்டு எங்கே தமக்குத்தரப்படும் அடுத்த தேதியில் மற்றொரு வேலைநிறுத்தம் வந்து விடுமோ என்றஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். வேலைநிறுத்தம் வெற்றியீட்டுவது என்றால் அதற்குப் பொதுமக்கள் ஆதரவு தேவை. இப்போது பொதுமக்கள் ஆதரவு டாக்டர்கள் பக்கம் இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

    டாக்டர்கள் மனித உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள். சுமார் ஆறுவருட காலம் பல்கலைக்கழகத்தில் பயின்று அதன் பின்னால் தொடர்ந்து பல பயிற்சிகளில் தம்மை ஈடுபடுத்தி தாம் பெற்ற அறிவு அனைத்தையும் கொண்டு தம்மை நாடிவரும் மக்களின் பிணியைத் தீர்க்கும் அரும்பணி ஆற்றுவோர்கள் டாக்டர்கள். அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை வழங்க அரசு முன்வருமா ? அதைவிட்டு தன்னிச்சையாக ஒப்பந்த மாற்றத்தை டாக்டர்கள் மீது திணித்து விரக்தியில் இந்நாட்டு டாக்டர்கள் வேறுநாடுகளைத் தஞ்சம் அடைந்து விடுவார்களா? எனும் கேள்வி பல விற்பன்னர்கள் மத்தியில் ஊசலாடிக் கொண்டுள்ளது.

    காலத்தின் பதிலுக்காய் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி:

    http://static.standard.co.uk/s3fs-public/styles/story_large/public/thumbnails/image/2015/12/01/07/docs.jpg

    www.standard.co.uk

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (182)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.
    வருடம் பிறந்து மாதம் ஒன்றும் ஓடி மறைந்து விட்டது. ஒவ்வொரு வருட ஆரம்பத்தையும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளோடு ஆரம்பிப்பதுதான் மனித வாழ்வின் யதார்த்தமாகிறது.

    லண்டன் மாநகரம், ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களில் மிகவும் பிரசித்தி வாய்ந்த மாநகரமாகும், பல நிறுவனங்களின் தலைமை அலுவலகம் லண்டனில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

    இந்த லண்டன் மாநகரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாபெரும் பணி இம்மாநகர மேயரைச் சார்ந்ததாகும். தற்போது லண்டன் மாநகர மேயராக இருப்பவர் கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஆவார். இவர் கடந்த இரண்டுமுறை லண்டன் மாநகர வாக்காளர்களினால் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    லண்டன் மாநகரத் தேர்தல் விதிகளுக்கமைய இருமுறைக்கு மேல் ஒருவர் மேயராகப் பதவி வகிக்க முடியாத காரணத்தினால் வருகின்ற மேமாதம் நடைபெற உள்ள தேர்தலில் தற்போதைய மேயர் போட்டியிட மாட்டார். லண்டன் மாநகரம் இங்கிலாந்து எனும் ஆங்கில நாட்டின் தலைநகரமாகும். ஆனால் மிகவும் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் இங்கிலாந்தின் தலைநகரில் இங்கிலாந்து நாட்டின் தொன்மைக் குடிமக்களான ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினராக இருப்பதுவே !

    ஆமாம் லண்டன் மாநகரில் உள்ள ஜனத்தொகையில் ஆங்கிலேயரை விட வந்தேறிய குடிகளான பிறநாடுகளின் வம்சாவழியினரே அதிக அளவில் இருக்கின்றார்கள். இந்த ஜனத்தொகை வேறுபாட்டின் தாக்கம் லண்டன் மாநகர மேயர் தேர்தலில் எதிரொலிப்பது தவிர்க்க முடியாத ஒன்றெனலாம்.

    பொதுக் கருத்துக் கணிப்புகளின் படி இம்மாநகர மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அல்லது எதிர்க்கட்சியான லேபர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரே மேயராகத் தெரிவு செய்யப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    mayorகன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக கிங்ஸ்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஸாக் கோல்ட்ஸ்மித் (Zac Goldsmith) என்பவரும் , லேபர் கட்சியின் சார்பாக சாடிக் கான் (Sadiq Khan) என்பவரும் போட்டியிடுகிறார்கள். இவர்களைத் தவிர மற்றும் பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ள போதிலும் இவர்கள் இருவரில் ஒருவரே மேயராவது சாத்தியம் எனக் கருதப்படுகிறது.

    இதிலொரு விசித்திரமான விடயத்தைக் குறிப்பிடுவதற்காகவே நான் குறிப்பாக இம்மடலை வரைகிறேன். நான் சமீபத்தில் இந்தியா சென்று வந்தது பற்றிக் கடந்த மடலில் குறிப்பிட்டிருந்தேன்.
    டிசம்பர் மாதம் 26ம் திகதி சென்னை சென்ற நான் ஜனவரி 17ம் திகதி லண்டன் திரும்பினேன். இதிலே ஆச்சரியம் என்னவென்றால் நான் செல்லும்போது கண்ட இங்கிலாந்து பிரதமருக்கும் திரும்பி வந்த பின்பு காணும் இங்கிலாந்துப் பிரதமருக்கும் ஒரு பாரிய வித்தியாசமிருப்பது போல எனக்குத் தென்படுவதே !

    அது என்ன என்கிறீர்களா ?

    இமிக்ரெண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய இவரது கண்ணோட்டமே ! இரண்டு நாட்களின் முன்னால் பிரதமர் ஒரு பாரிய பிரகடனம் செய்திருந்தார். அவரின் கூற்றுப்படி இங்கிலாந்து அரசாங்கமும் மக்களும் சிறுபான்மை மக்களைப் பாரிய அளவில் கைவிட்டு விட்டோம் என்பதுவே அவரது பேச்சின் சாரம்.

    அதாவது கறுப்பு, ஆசிய, வேற்றின மக்கள் தாங்கள் இந்நாட்டில் வாழும் விகிதாசாரத்தின்படி அரச பதவிகளிலோ அல்லது தனியார் கூட்டுஸ்தாபனங்களின் தலைமைப் பதவிகளிலோ காணப்படவில்லை. இது இங்கிலாந்து நாட்டு அரசினதும், மக்களினதும் தவறான கொள்கை நடைமுறைத்தப்படுத்தலினால் நிகழ்ந்துள்ளது என்பதையே அவர் குறிப்பிட்டார்,

    ஒரு மாதத்திற்கு முன்னால் பிரதமர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருப்பார் என்று நான் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டேன். அப்படியாயின் ஏன் பிரதமரின் போக்கில் இந்தத் திடீர் மாற்றம் ? இங்கேதான் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நான் ஏற்படுத்தும் தொடர்பு. லண்டன் மேயர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சியின் வேட்பாளராகிய சாடிக் கான் எனும் இஸ்லாமியருக்கு உள்ளது எனும் கருத்து நிலவுகிறது. இந்த வெற்றி வாய்ப்பை நல்கப் போகிறவர்கள் யார் ?

    லண்டன் மாநகரில் பெரும்பான்மையாக வாழும் வேற்றினத்தவர்கள் அல்லவா ? அப்படியாயின் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்தும் மேயர் பதவியைத் தம்முடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவ்வெற்றின் வாக்காளர்களின் ஆதரவைப் பெற வேண்டியது அவசியமல்லவா ?

    இங்கேதான் பிறக்கிறது பிரதமரின் புதுக் கொள்கைத் திருப்பம். ஆமாம் வேற்றினத்தவர் என்று கருதப்படும் பெரும்பான்மை வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தால்தான் தம்முடைய சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறும் சந்தர்ப்பம் பெருகும் எனும் காரணமே பிரதமரின் இத்தகைய திடீர் கருத்துப்பதிவுக்கு வழி சமைத்ததோ எனும் எண்ணம் எழுவது இயற்கைதானே !

    அடுத்தொரு மிகப்பாரிய பிரச்சனையைப் பிரதமர் எதிர்கொள்ள வேண்டிய சூழல், அது என்ன அப்படியான சூழல் ? என்றுதானே கேட்கிறீர்கள்.

    அதுதான் மிகப்பூதாகரமான ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதா? இல்லையா? என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு. பிரதமரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தான் பிரதமராகும் பட்சத்தில் இத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பை 2017ம் ஆண்டு நிறைவடைவதற்கு நடத்துவது எனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய காலக்கெடு நெருங்கியவண்ணம் இருக்கிறது.

    பிரதமரின் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினுள்ளேயே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனும் பிரதமரின் வாதத்திற்கு ஆதரவாக கன்சர்வேடிவ் கட்சியைத் தவிர்ந்தோர்களிடமும் ஆதரவைக் கோர வேண்டிய காலக்கட்டாயம்.

    தனக்கு ஆதரவாக இங்கிலாந்தின் சிறுபான்மைச் சமூகத்தினரது வாக்கினை பெற்றுக் கொள்வதற்கான ஒரு புத்திசாதுர்யமிக்க கொள்கை மாற்றமே பிரதமரின் சமீபத்திய நடவடிக்கை என்று கூட எண்ணத் தோன்றுகிறது. மனதின் மற்றொரு பக்கத்தில் 2020இல் நடக்கும் தேர்தலில் தான் பிரதமராக வேண்டி நிற்க மாட்டேன் என்று பிரகடனம் செய்த நிலையில் ஒருவேளை தன்னுடைய ஆட்சிக்காலத்தை நினைவுகூரும் வகையில் தான் ஏதாவது ஒரு அதிரடி அரசியல் செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் தார்மீகமாக அத்தகைய ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கலாம் என்று எண்ணத் தலைப்படுகிறது.

    எதி எப்படி இருப்பினும் பிரதமரின் இடத்துக்கு வர முயற்சிக்கும் ஏனைய கன்சர்வேடிவ் கட்சி முன்னணி அரசியல்வாதிகள் பிரதமர் அவர்கள் முன்னால் தூக்கிப் போட்ட சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share