இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (192)
— சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். புத்தம் புதிதாய் ஒரு புதுவருடம் சித்திரை பெண்ணவள் மடிமேல் பிறந்து தவழ்ந்திடும் வேளையில் உங்கள் முன்னே அடுத்த மடலுடன். தமிழர் திருநாள் பொதுவாய் எதைக் கொண்டு வரும் என ஆவலுடன் காத்திருப்போர் முன்னே தவழ்ந்திடும் இப்புதுவருடம் புலர்ந்திடப் போகும் புது நிகழ்வுகள் தான் என்ன ?
இன்றைய உலகின் வாழ்க்கைமுறை ஒரு கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு சிரமமான செயலாகும். பேராசை, அதிகாரம், ஆணவம் என்பது அரசாங்கங்கள் முதல் அடிமட்ட மனிதர் வரை ஊடுருவி விட்ட ஒரு காலமாக இருக்கிறது. மனிதநேயம், மனிதாபிமானம் என்பவனற்றின் பெறுமதி இன்றைய வாழ்வில் மிகவும் எடை குறைந்ததாகவே காணப்படுகிறது.
இத்தகைய வாழ்க்கைமுறை மாறி மனிதர்கள் அன்பு, கருணை, சமாதானம், அமைதி என்பனவற்றை முக்கியமான நோக்கங்களாகக் கொண்டு வாழ தமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது இன்றைய உலகத்தில் அத்தியாவசியமாகிறது.
இன்றைய இந்தப் புதுவருடத்தின் வரவு அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவரையும் நோய் நொடியுமில்லாமல், அமைதியாக, திருப்திகரமான வாழ்விற்குத் தேவையான செல்வமும் பெற்று வாழ்ந்திட அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை எனும் சக்தியை வேண்டுவோமாக.
நித்தம் நடந்திடும் நிகழ்வுகள்
நெஞ்சில் நிறைந்திடும் சுவடுகள்
புத்தம் புதிதாய் மலர்ந்திடும்
புத்தாண்டு புலருகிறது ஆனந்தமாய்
கடந்தது எல்லாம் கடந்ததுவே
நடந்தது எல்லாம் கழிந்ததுவே
விரைந்திடும் காலச் சக்கரத்தில்
வியந்திடும் வாழ்வுச் சாத்திரங்கள்
சித்திரைப்பாவை மெல்லென
நித்திரை மீண்டிங்கு தனது
முத்திரை பதித்திட புதிதாய்
இத்தரை மீது மலர்ந்திட்டாள்
கனவுகள் எல்லாம் மெய்ப்படவே
நினைவுகள் தன்னை வழிப்படுத்தி
முனைவுகள் அனைத்தும் செயலாக்கி
முடிவுகள் தன்னில் ஜெயித்திடவே
இல்லை என்பவர் இல்லாத நிலையை
இருப்பவர் நினைத்தால் மாற்றிடலாம்
இதயத்தில் கொஞ்சம் ஈரத்தை ஏற்றி
இரக்கத்தில் கசியும் ஈகையை எண்ணி
பிறந்திடும் இத்துர்முகி வருடத்தில்
பறக்கட்டும் துயரங்கள் அனைவருக்கும்
சிறக்கட்டும் வாழ்க்கை இனிவரும்
கனிந்திடும் காலத்தின் மடிதனிலே
கரைந்திடும் கருமேகங்களைப் போல்
களைந்திடும் துன்பங்கள் வாழ்வினிலே
நிறைந்திடும் இன்பத்தின் நினைவுகளை
சுமந்திடும் இதயங்கள் மகிழ்வுடனே
நாளைய உலகம் அமைதியில் திளைத்திட
நானிலம் எங்கும் சகோதரம் பொங்கிடப்
பிறந்திடும் இந்தப் புதுவருடம் சுரந்திட
நிறைந்திடும் இதயத்தின் வாழ்த்துக்கள்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan