Tag: ஆ. செந்தில் குமார்

  • உலக வாழ்க்கை ஒரு சக்கரம்

     – ஆ.செந்தில் குமார்

    விலங்கோடு விலங்காக
    வேட்டையாடி வாழ்ந்து வந்தான்!
    குகையே இவன் குடியிருப்பு!
    கூரிய கல்லே ஆயுதம்!

    விலங்கு மனிதனை
    விளங்க வைத்தது வேளாண்மை!
    நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு
    நாகரிக வாழ்க்கையில் நிலைத்தான்!

    நதிக்கரைகள்தான்
    நாகரிகத்தின் தொட்டில்கள்!
    உழவனே அந்த நாகரிகத்தின்
    உயர் வளர்ச்சிக்கு உதவியவன்!

    நிலத்தைப் பண்படுத்தினான்
    வேளாண்மை வளர்ந்தது!
    மனத்தைப் பண்படுத்தினான்
    பண்பாடு செழித்தது!

    கால்நடைகளைப் பழக்கினான்
    உழைப்பின் சுமை குறைந்தது!
    கற்பனையை உயர்த்தினான்
    வாழ்வின் இனிமை உயர்ந்தது!

    இக்கால மனிதன் இயற்கையைச் சிதைத்து
    இன்பம் காண்கிறான்!
    அறிவியலின் துணைகொண்டு
    அகிலத்தை ஆள்கிறான்!

    கற்கால மனிதன் காட்டில்
    அரைநிர்வாணமாய் இருந்தான்!
    இக்கால மனிதன் அதையே
    நாகரிகம் என்கிறான்!

    கற்கால மனிதனிடம்
    பண்பாடு இருக்கவில்லை!
    இக்கால மனிதனிடமும்
    அது இருப்பதில்லை!

    கற்கால மனிதன்
    அறிவில் வளர்ந்தான்…
    நாகரிகம் பிறந்தது!
    பண்பாடு பிறந்தது!

    இடைக்கால மனிதன்
    அறிவில் வளர்ந்தான்…
    நாகரிகம் வளர்ந்தது!
    பண்பாடு வளர்ந்தது!

    இக்கால மனிதன் அறிவில்
    வளர்ந்துகொண்டேயிருக்கிறான்…
    நாகரிகம் தேய்கிறது!
    பண்பாடு தேய்கிறது!

    வருங்கால மனிதன் அறிவின்
    உச்சத்தில் இருப்பான்…
    நாகரிகம் மறையும்!
    பண்பாடு மறையும்!

    அவனும் மறைவான்!
    உலகமே அழிந்து மறையும்!

     

     

     

    Share
  • பூம்புகாரின் வசந்த விழா

    – ஆ.செந்தில்  குமார்

    வாரிதியில் செங்கதிரோன் ஒளி வீசிப்பரப்பிட
    வாழை மஞ்சள் கமுகும் கட்டிட
    வீதிகள் தோறும் தோரணம் தொங்கிட
    வருடந்தோறும் மாமழை பொழிந்திட்ட
    வானத்துறையும் இந்திரன்  தனக்கு
    வாழை இலைகளில் பெரும் படையலிட்டு
    வாழ்த்தும் நன்றியும் சொல்லும் விழா!

    பறையொலி முழங்க ஒருவன் கட்டியங்கூறிட
    பார்ப்பவர் எல்லாம் வாழ்த்தொலி முழங்கிட
    பணிப்பெண் இருவர் சாமரம் வீசிட
    பட்டொளி வீசிப் புலிக்கொடி பறந்திட
    பட்டத்தரசி பக்கத்தில் இருந்திட
    பட்டத்தானை மீதில் அமர்ந்து
    பட்டத்தரசனின் வீதி உலா!

    சிற்றோடை ஒன்றில் அன்றில் நீந்திட
    சித்திரை முழுநிலா தண்ணொளி வீசிட
    சித்திரைப் பூக்கள் பூத்துக் குலுங்கிட
    சிறுமியர் எல்லாம் சிற்றில் செய்திட – அதைச்
    சிறுவர் கூடிச் சிதைத்து மகிழ்ந்திட
    சிறுவர் சிறுமியர் ஒன்றிணைந்து
    சிறுசோறாக்கிக் களித்து மகிழ்ந்தார்!

    கண்கவர் அழகில் மங்கையர் திகழ்ந்திட – அவர்தம்
    கருத்தை ஈர்க்க விடலையர் முயன்றிட
    காதலர் தனியே கொஞ்சி மகிழ்ந்திட
    காளையர் மற்போர் செய்து பழகிட
    கன்னியர் எல்லாம் அதைக் கண்டுமகிழ்ந்திட
    கொல்லர் உலைக்களம் செம்பொறி பறந்திட
    கொடிய பல்லாயுதங்கள் குவிந்து கிடந்தன!

    பெரு மாளிகையெல்லாம் விளக்கொளி மின்னிட
    பெரும்பெரும் பாண்டத்தில் சோறு வெந்திட
    பல்வகை இறைச்சிகள் மானும் மீனும்
    பக்குவத்துடனே நெய்யில் வதங்கிட
    பனங்கள் மதுவகை ஆறாய் ஓடிட
    பெருந்திரள் மக்கள் ஒன்று சேர்ந்து
    பெருவிருந்தாக்கி உண்டு மகிழ்ந்தனர்!

     

    Share
  • அழகு…!

    – ஆ. செந்தில் குமார்

    இளைஞர்க்கு அழகு போராடும் துணிவு!
    கலைஞர்க்கு அழகு இயம்பும் அறிவு!

    அறிஞர்க்கு அழகு அறிவின் திணிவு!
    கவிஞர்க்கு அழகு கருத்தின் செறிவு!

    செல்வர்க்கு அழகு எளிமையாய் இருத்தல்!
    சிறுவர்க்கு அழகு பணிவாய் இருத்தல்!

    தமிழுக்கு அழகு தொன்மையில் இளமை!
    தமிழர்க்கு அழகு விருந்தோம்பல் இனிமை!

    கதிருக்கு அழகு தலை குனிவு! – நெற்
    குதிருக்கு அழகு முழு நிறைவு!

    நிலவிற்கு அழகு களங்கமாய் இருத்தல்!
    உலகிற்கு அழகு பொறுமையாய் இருத்தல்!

    அழகு என்பது அகத்தைப் பொறுத்தது!
    இனிமையாய் இருப்பதே அனைத்திலும் சிறந்தது!

     

     

    Share
  • பாப்பா நீ படி.. படி.. படி..!

    – ஆ. செந்தில் குமார்

    பாப்பா நீ படி.. படி.. படி..!  அதுதான்
    வாழ்கைக்கு ஏணிப்படி!
    வெற்றிப்படியை எட்டும்படி
    படிப்படியாய் நீ படி!

    அன்னை சொல்லும்படி                         babies
    தந்தை நினைக்கும்படி 
    ஆசிரியர் மெச்சும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    ஒழுக்கத்தில் சிறக்கும்படி
    இழுக்கென்பது இல்லாதபடி
    எழுச்சியாய் இருக்கும்படி
    படிப்படியாய் நீ படி!   (பாப்பா…)

    நல்லோரின் எண்ணப்படி
    எல்லோரும் போற்றும்படி 
    இல்லாமை நீங்கும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    தன் காலால் நிற்கும்படி
    தக்கோன் என விளங்கும்படி
    தரணிக்கு உதவும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    சான்றோனாய் மாறும்படி
    சாகாமல் பெயர் நிலைக்கும்படி
    சிறிதும் சலிக்காதபடி
    படிப்படியாய் நீ படி!   (பாப்பா…)

    நாள்தோறும் நல்லபடி
    நல்லது மனதில் பதியும்படி
    நாடு மேலும் உயரும்படி
    படிப்படியாய் நீ படி!      (பாப்பா…)

     

     

    Share
  • மயங்கொலிச் சொற்கள்

    ஆ. செந்தில் குமார்.

    அனையின் அணைப்பு பிள்ளைக்கு இனிமை!
    கனலின் அண்மை பஞ்சிற்கு அன்மை!

    ஊன் கலந்த ஊண் தவிர்த்தல் நலம்!
    கனி உணவே அதனினும் நலமென கணிப்பாய்!

    தண்மதி தண்னென தன்னொளி பாய்ச்சினாலும்
    கனல் கணை தைத்தால் கனைக்கும் பரி!

    காணத்திற்காக கானம் அழித்தால்
    கானலை நாம் காணலாம் என உணர்வாய்!

    சேணையும் சேனையும் கொண்டு வென்றாலும்
    கோன் இல்லா அரசு கோண் ஆகிப்போகும்!

    பொருள் :-
    அனை – அன்னை
    அணை – தழுவுதல்
    கனல் – நெருப்பு
    அண்மை – அருகில்
    அன்மை – தீமை
    ஊன் – மாமிசம்
    ஊண் – உணவு
    கனி – பழம்
    கணி – கணிப்பு
    தண் – குளிர்ந்த
    தன் – தன்னுடைய
    கணை – அம்பு
    கனை – கனைத்தல்
    பரி – குதிரை.
    காணம் – பொன்
    கானம் – காடு
    கானல் – பாலை நிலம்
    காணல் – பார்த்தல்
    சேணை – அறிவு
    சேனை – படை
    கோன் – அரசன்
    கோண் – கோணல்

    குறிப்பு :-
    °°°°°°°°°°

    மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில்கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

    நன்றி : விக்கிபீடியா.

    Share
  • வாய்ப்பு

    -ஆ. செந்தில் குமார்

    இது
    திறமைகள் பளிச்சிட
    உதவிடும் திறவுகோல்!
    இது
    அவசரத்திற்கும்  தாமதத்திற்கும்  இடையில் இருக்கும் மணித்துளி!
    இது
    நோக்கமற்றோர்க்கு என்றுமே எட்டாக்கனி!
    நோக்கமுள்ளோர்க்கு உதவிடும் காரணி!
    இது
    ஆண்டியைக்கூட அரசனாக
    மாற்றிடும் வல்லமையுள்ளது!
    இதை
    துணிந்தவன் உருவாக்குவான்!
    இதற்காக
    அஞ்சுபவன் காத்திருப்பான்!
    இதை
    உணர்த்திடும்
    உறுதி கொண்ட எண்ணமும்!
    உற்று நோக்கும் திண்ணமும்!
    இதைப்
    பற்றிக் கொண்டவன்
    வெற்றி கொண்டவனாவான்!
    இதைப்
    பறிகொடுத்தவன் நூலறுந்து
    சுற்றும் காற்றாடியாவான்!

     

     

     

    Share
  • மயங்கொலிச் சொற்கள்

    -ஆ. செந்தில் குமார்

    அனையின் அணைப்பு பிள்ளைக்கு இனிமை!
    கனலின் அண்மை பஞ்சிற்கு அன்மை!

    ஊன் கலந்த ஊண் தவிர்த்தல் நலம்!
    கனி உணவே அதனினும் நலமென கணிப்பாய்!

    தண்மதி தண்னென தன்னொளி பாய்ச்சினாலும்
    கனல் கணை தைத்தால் கனைக்கும் பரி!

    காணத்திற்காக கானம் அழித்தால்
    கானலை நாம் காணலாம் என உணர்வாய்!

    சேணையும் சேனையும் கொண்டு வென்றாலும்
    கோன் இல்லா அரசு கோண் ஆகிப்போகும்!

    பொருள் :-
    அனை – அன்னை
    அணை – தழுவுதல்
    கனல் – நெருப்பு
    அண்மை – அருகில்
    அன்மை – தீமை
    ஊன் – மாமிசம்
    ஊண் – உணவு
    கனி – பழம்
    கணி – கணிப்பு
    தண் – குளிர்ந்த
    தன் – தன்னுடைய
    கணை – அம்பு
    கனை – கனைத்தல்
    பரி – குதிரை.
    காணம் – பொன்
    கானம் – காடு
    கானல் – பாலை நிலம்
    காணல் – பார்த்தல்
    சேணை – அறிவு
    சேனை – படை
    கோன் – அரசன்
    கோண் – கோணல்

    குறிப்பு :-
    °°°°°°°°°°

    மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில்கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

    நன்றி : விக்கிபீடியா.

    Share
  • எங்கள் நீலகிரி

     

    images

    தடதடத்த சாலைகள்
    லொலொடத்த வண்டிகள்
    பதைபதைக்கும் நெஞ்சம்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சோசோவென பெய்யும் மழை
    படபடவென இடிக்கும் பேரிடிகள்
    பளிச்பளிச்சென வெட்டும் மின்னல்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மளமளவென வளர்ந்த காடு
    சுளீர்சுளீரென வீசும் காற்று
    சடசடவென முறியும் கிளைகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சரசரவென தாவும் மான்கள்
    துருதுருவென இருக்கும் குரங்கு
    நறநறவென குதறும் ஓநாய்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    வதவதவென்ற காட்டுப் பன்றி
    கரகரவென கத்தும் வரையாடு
    ஊஊவென ஊளைடும் நரிகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மதமதவென பருத்த பெரும் யானை
    கொழுகொழுத்த வன்புலிகள்
    முசுமுசுவென முடி கொண்ட கரடி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    திடுதிடுவென வந்தழிக்கும் சிறுத்தை
    கருகருத்த முரட்டு காட்டெருமை
    சிலிர்சிலிர்த்து நிற்கின்ற முள்ளம் பன்றி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    தைதையென ஆடும் மயில்கள்
    திருதிருவென விழிக்கும் ஆந்தை
    கீச்கீச்செனெ கத்தும் குருவி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மினுக்மினுக்கென்ற மின்மினி
    வீச்வீச்சென கத்தும் பூச்சிகள்
    கொர்கொர்ரென கத்தும் தவளைகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    கிடுகிடுக்கும் பெரும் பள்ளம்
    வழுவழுக்கும் மலைச்சரிவு
    கொழகொழக்கும் சேறு
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    தழதழவென்ற பசும் தேயிலை
    கமகமக்கும் வாசனை பொருட்கள்
    சொரசொரத்த பட்டையுள உயர் மரங்கள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    குளுகுளுவென்றிருக்கும் உதகை
    சிலுசிலுவென தழுவும் தென்றல்
    சுடசுடவே கிடைக்கும் நெய்வர்க்கி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சலசலவென ஓடும் நீரோடை
    குபுகுபுவென வெள்ளம் பாயும் நதிகள்
    ஓஓவென இரையும் பேரருவிகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    நடுநடுங்கும் குளிர்
    தகிதகிக்கும் உள்ளம்
    கிறுகிறுக்கும் எதிர்காலம்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!!

    – ஆ.செந்தில் குமார்.

    நன்றி : கூகிள் இமேஜ்

    Share
  • சாலையின் விதி!

    -ஆ.செந்தில் குமார்

    செலவுகள் பல கோடி
    செய்து நாட்டில் இட்ட
    குலவும் சாலைகள் யாவும்
    குடிமக்கள் மனம் மகிழ்ந்து
    உலவித் திரியும் முன்னே
    உளுத்துக் கொட்டின கற்களாய்!

    பாடு படுத்தியது சாலையைப்
    பாதாளச் சாக்கடைத் திட்டம்!
    ஓடும் மழைநீர் அரிப்பு
    ஓடாய்த் தேய்த்தது சாலையை!
    வீடுகளனைத்தும் எறியும் குப்பை
    காடாய் ஆக்கிரமித்தது சாலையை!

    தரைவழித் தொலைபேசி இணைப்பு
    துண்டு துண்டாக்கியது சாலையை!
    நிறைவான மின் இணைப்பு
    நிலை மாற்றியது சாலையை!
    குறைவான குடிநீர் வழங்கும்
    குழாய்கள் குதறின சாலையை!

    குறைந்த தரங்கொண்ட பொருட்கள்
    குலைத்துப் போட்டது சாலையை!
    நிறைந்த வண்டிகளின் நெரிசல்
    நிதமும் திணறடித்தது சாலையை!
    மறைந்தன சாலை நடைமேடைகள்
    நிறுவிய நடைபாதைக் கடைகளாலே!

    புலம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
    புரையோடிய ஊழலை எண்ணி!
    குழம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
    குறைகளை நிதமும் எண்ணி!
    விளம்பி உறுதி ஏற்போம்
    விரைவான மாற்றம் எண்ணி!

     

     

    Share
  • ஓரெழுத்து ஒரு மொழி

     

    14088488_1123402657748221_4120214870862385499_n

     

    காவில் மேயும் ஆவின் பாலருந்தி
    ஊ வளர்த்தால் சா வா என்றால் வருமா?
    பர்கரும் பீட்சாவும் உண்டு வளரும்
    பாலகர்க்கு நோ போ என்றால் போகுமா?

    மையிருள் குயிலின் மெல்லிறகைக் கொய்தபின்
    கூ என்று பணித்தல் தகுமோ?
    அகரம் கற்கும் கள்ளமில்லா குழந்தையிடம் நீ
    காம்போதியில் பாடென்பது தகுமோ?

    மென்மலரின் மெல்லிதழை மெல்ல மெல்ல கொய்தபின்
    பூ என்று சொல்லுதல் முறையா?
    அகவைக்குரிய அளவினதாக கற்கும் கல்வி இல்லாமல்
    அளவுக்கதிக சுமையை திணித்தல் முறையா?

    ஏ எய்த அறியான் கையில் கோ
    சோவை கா என்பது நலமா?
    தக்கோன் அல்லாதான் தான் கொண்ட பள்ளியில்
    தளிர் குழந்தையை சேர்ப்பது என்பது நலமா?

    மையழகு தையலை நீ சாவென தீ நாவில் சுட்டு பின்
    அன்பை தா என்றால் தருவாளா?
    பெற்ற கல்வியின் நோக்கத்தை உணர்த்த மறந்து பின்
    பெற்ற பிள்ளை பேணவில்லை என்பது சரியா?

    -ஆ. செந்தில் குமார்

    பொருள் :-
    கா – கானகம், காத்தல்
    நோ – நோய்
    ஆ – பசு
    ஊ – ஊன், தசை
    சா – இறப்பு , இறந்து போ
    கூ – கூவு என பணித்தல்
    பூ – மலரவும் என பணித்தல்
    ஏ – அம்பு
    கோ – அரசன்
    சோ – அரண்
    மை – கண் மை
    தையல் – பெண்
    நா – நாக்கு
    நன்றி : கூகிள் இமேஜ்

    Share
  • தேயிலைத் தோட்டத்தைத் தேடி…..

     

    புல்லின் மீது பனித்துளி தூங்க
    புள்ளினம் எல்லாம் கீதம் இசைக்க
    கல்மலை யிடையே கதிரவன் உதிக்க
    துள்ளித் திரிய மந்திகள் விரைந்தன!

    தோட்டத் தொழிலுக்கு செல்வோர் எல்லாம்
    வீட்டில் பொழுது புலருமுன் எழுந்து
    தாட்டைக் கட்டி ஆயத்தம் ஆகி
    ஓட்டமும் நடையாய்ப் பணியிடம் சேர்ந்தனர்!

    ஓங்கி யுயர்ந்த மலையிடை எல்லாம்
    எங்கும் நிறைந்த தேயிலைத் தோட்டம்!
    தங்கிய பனித்துளி இலைகளை நனைக்க
    சங்கு ஒலித்தது பணிகளைத் துவங்க!

    கிளைகள் படர்ந்து வளர்ந்த செடியில்
    வளைக்கரம் கொண்ட மகளிர் எல்லாம்
    இலைகளைப் பறித்து தாட்டில் நிறைக்க
    சிலைபோல் நின்று துரையும் பார்ப்பான்!

    செடியில் பறித்த கொழுந்து எல்லாம்
    மடியில் கட்டிய தாட்டில் நிறைய
    நெடிய சாலுக்கிடையே சுமந்துச் சென்று
    எடையைப் பார்க்க சாக்கில் தினிப்பர்!

    சாக்கில் நிறைத்த கொழுந்தை எல்லாம்
    சரியாக நிறுத்தி எடையைப் பார்த்து
    சாலையில் நிற்கும் வண்டியில் ஏற்றி
    ஆலைக் கனுப்பி பக்குவம் செய்வர்!!!
    -ஆ. செந்தில் குமார்

    குறிப்பு :-

    தாட்டு – பறித்த தேயிலைக் கொழுந்தை நிரப்புவதற்காக அணிந்து கொள்ளும் சாக்கினால் தைக்கப்பட்ட உடை

    சாக்கு – கோணிப்பை

    துரை – மேளாளர், ஆங்கிலேயர் காலத்தில் துரை , ஐயா என்று சொல்லப்பட்ட பழக்கம் இன்றும் சில இடங்களில் தொடரப்படுகிறது.

    சங்கு – இராட்டையில் ( தேயிலை ஆலை ) நேரத்திற்கு ஒலிக்கப்படும் Hooter சப்தம்.

    சால் – தேயிலைச் செடி வரிசையாக நடப்பட்ட ஒழுங்குமுறை.

    Share
  • மீட்பர் இயேசு

     

    images (2)
    °°°°°°°°°°°°°°°°°°

    காட்சிக் கினிய கண்கவர் அழகொடு
    மாட்சி பொருந்திய வல்லமை யுடைய
    தாட்சி யோடு வானோர் பணிய
    மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்!

    ஞானம் கொண்ட மரியாள் மைந்தன்
    வானத் தளவு கருணை கொண்டு
    தேனினை யொத்தநல் கருத்து களோடு
    போதனை செய்து காலம் கழித்தார்!

    பன்னிரு சீடர் பக்கத்தில் இருக்க
    பரிவுள்ளம் கொண்டு மானிட குலத்தின்
    பாவச் செயல்களைப் போக்கி மீட்டு
    பரிசுத்தம் அடைய வழிவகை செய்தார்!

    போதனை விரும்பா உரோம அரசு
    யூத மதத் தலைவரொடு சேர்ந்து
    யூதாசையணுகி முப்பது வெள்ளி கொடுத்து
    ஏசுவைக் கொல்லத் திட்டம் தீட்டினர்!

    காசுக் காசைப் பட்டு யூதாசு – ஏசுவைக்
    காட்டிக் கொடுத்து பாவம் செய்தான்!
    குற்ற மில்லா இறைவனின் தூதனை
    கொடிய சிலுவையிலறைந்து கொன்றனர் பாவிகள்!

    சிலுவையில் மரித்துப் பின்மூன்றாம் நாளில் – தன்
    சீடர்கள் முன்பு உயிர்த்து எழுந்து
    காட்சி தந்து பின்னர் மறைந்தார்! – பல
    கோடி மக்களின் உள்ளத் துறைந்தார்!!

    – ஆ. செந்தில் குமார்.

    Share
  • காவியத் தலைவன் கர்ணன்

     

    karna (2)
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    Senthil

    ஈகரையும் காணாத கங்கையில்
    ஈன்றவள் புறக்கணித்து – நெஞ்சில்
    ஈரமின்றி மிதக்கவிட!
    ஈனவர் கௌரவர்
    ஈர்த்தனர் கர்ணனையே!
    ஈர்த்தவர் என்றாலும்
    ஈரப்பற்று மிகுதியால்
    ஈன்றவராய் கொண்டானே!
    ஈகையும் வீரமும்
    ஈர் கண்னெனக் காத்தானே!

    ஈவோன் துரோணரும்
    ஈடன் கர்ணனை
    ஈடறவு எனப் புறக்கணித்தார் – எனினும்
    ஈடிலான் ஆதவனை
    ஈவோனாய்க் கொண்டானே!
    ஈவோன் பரசுராமர்
    ஈகையாளன் மடிதுயில
    ஈயின வண்டொன்று
    ஈட்டியெனத் துளைத்தபோதும்
    ஈட்டி மரமென் றசையாதிருந்தானே!

    ஈடர் பாண்டவர் அணிசேர
    ஈன்றவள் வந்தழைத்த போதும்
    ஈறிய நெஞ்சம் கொண்டான்
    ஈர்தாரை விலகேன் என்றான்!
    ஈயாடவில்லை குந்தி முகத்தில்!
    ஈடினையில்லா குருசேத்திரத்தில்
    ஈண்டெனப் போர் மூண்டது!
    ஈசுவை கொண்ட கௌரவர்க்கும் 

    ஈகையாளர் பாண்டவர்க்கும்!
    ஈடற்ற வெற்றி பாண்டவர்க்கு!

    ஈ என இரந்தோர்க்கு
    ஈயேன் எனச் சொன்னதில்லை!
    ஈடிகை மார்பில் தைத்த
    ஈரம் கூடக் காயவில்லை!
    ஈகையின் துணைக்கொண்டு
    ஈத்தக் கொடையனைத்தும் 
    ஈ என கண்ணன் கேட்டபோதும் 
    ஈண்டெனக் குருதி கொடுத்தானே!
    ஈடில்லா இறைவனின்
    ஈரடி நிழல் சேர்ந்தானே!

      – ஆ. செந்தில் குமார்.

     

    பொருள் :-
    ஈகரை – இரண்டு கரைகள்
    ஈன்றவள் – தாய்
    ஈரம் – இரக்கம்
    ஈனவர் – இழிந்தோர்
    ஈர்த்தல் – சேர்த்துக்கொள்ளுதல்
    ஈரப்பற்று – அன்பு
    ஈன்றவர் – பெற்றோர்
    ஈகை – கொடை
    ஈர் – இரண்டு
    ஈவோன் – ஆசிரியர், குரு
    ஈடன் – ஆற்றலுடையவன்
    ஈடறவு – பெருமைக் கேடு
    ஈடிலான் – இறைவன்
    ஈரிய நெஞ்சம் – அன்பு நெஞ்சம்
    ஈசுவை – பொறாமை
    ஈடிகை – அம்பு
    ஈ – கொடு
    ஈத்த – கொடுத்த
    ஈரடி – இரண்டு திருப்பாதங்கள்
    ஈண்டென – விரைவாக

    Share
  • தமிழா! தமிழா!!

     
    °°°°°°°°°°°°°°°°°°°°

    தமிழா! தமிழா!! நீ இதுவரை
    அடிமைப்பட்டது போதும்! நீ
    அவதிப்பட்டது போதும்! போதும்!!
    அச்சப்பட்டது போதும்! நீ
    அறியாமைப்பட்டது போதும்! போதும்!!

    உன்னுள் ஓடும் குருதியனைத்தும்
    உறிஞ்சப்பட்டது போதும்! வலிகள் உன்னால்
    உணரப்பட்டது போதும்! போதும்!! நீ என்றுமே
    நசுக்கப்பட்டது போதும்!
    நலிவுபட்டது போதும்! போதும்!!

    சாதிமதச் சாக்கடையால் கண்கள்
    கட்டப்பட்டது போதும்! தலைகள்
    வெட்டப்பட்டது போதும்!போதும்!! கரங்களிரண்டும்
    கறைப்பட்டது போதும்! கீழோனென்று உன்னால்
    வெறுக்கப்பட்டது போதும்! போதும்!!

    மீனவச்சொந்தம் மாற்றானால்
    கொல்லப்பட்டது போதும்!
    கொடுமைப்பட்டது போதும்! போதும்!!
    விரட்டப்பட்டது போதும்!
    வஞ்சிக்கப்பட்டது போதும்! போதும்!!

    சொந்த மண்ணில் நீ
    சுட்டு வீழ்த்தப்பட்டது போதும்!
    சுரண்டப்பட்டது போதும்! போதும்!!
    சிதைக்கப்பட்டது போதும்! நாடின்றி
    சிதறப்பட்டது போதும்! போதும்!!

    இதுவரையும் தமிழா நீ
    ஒடுக்கப்பட்டத் தளையறுக்க
    விடுக்கப்பட்ட கோரிக்கைகட்கு செவி
    மடுக்கப்படாத நிலையெண்ணி
    வருத்தப்பட்டது போதும்! போதும்!!

    இனியேனும்
    தமிழன் என்ற உணர்வு கொண்டு
    தரணியெங்கும் தலை நிமிர்ந்து
    ஒன்றுபடுவாய் தமிழா! தமிழா!!
    துன்பப்பட்டது போதும் தமிழா! எதையும்
    வென்றெடுப்பாய் தமிழா! தமிழா!!

    – ஆ.செந்தில் குமார்.

    Share
  • பெண் குழந்தையைப் பேணுவோம்

     
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    சின்னஞ் சிறிய செல்லக் கிளியே
    உணர்ந்து கொள்ளம்மா – உலகை
    உணர்ந்து கொள்ளம்மா!

    அன்னை தந்தை வாரி அணைத்தால்
    அமைதி அடையுமே – உள்ளம்
    அமைதி அடையுமே! – ஓர் அன்னியன் அப்படிச் செய்தல் தவறென
    உணர்வு சொல்லுமே – உன்
    உணர்வு சொல்லுமே!

    கொடிய நோக்கம் கொண்டோன் என்றால்
    சொல்லி விடம்மா – தாயிடம்
    சொல்லி விடம்மா! – உடனே
    அவனை விட்டு தூர விலகி
    ஓடி விடம்மா – நீ
    ஓடி விடம்மா!

    உரிய பருவம் அடையும் போது
    மாற்றம் நிகழுமே – உடலில்
    மாற்றம் நிகழுமே! – இது
    இயற்கை அளிக்கும் இனிய பரிசு
    அஞ்சி விடாதே – நீயும்
    அஞ்சி விடாதே!

    உன்னத உடலை மறைத்துக் கொள்ளவே
    ஆடை அணிகலன் – உனக்கு
    ஆடை அணிகலன்! – அதை
    உணர மறந்து கவர்ச்சிப் பொருளாய்
    ஆகி விடாதே – நீ
    ஆகி விடாதே!

    கொடிய உலகின் தன்மையைப் புரிந்து
    நடந்து கொள்ளம்மா – நீயும்
    நடந்து கொள்ளம்மா!
    கடிய பாதை அனைத்தையும் கடந்து
    வெற்றி கொள்ளம்மா – உலகை
    வெற்றி கொள்ளம்மா!

    – ஆ. செந்தில் குமார்.

    Share