எங்கள் நீலகிரி
தடதடத்த சாலைகள்
லொலொடத்த வண்டிகள்
பதைபதைக்கும் நெஞ்சம்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
சோசோவென பெய்யும் மழை
படபடவென இடிக்கும் பேரிடிகள்
பளிச்பளிச்சென வெட்டும் மின்னல்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
மளமளவென வளர்ந்த காடு
சுளீர்சுளீரென வீசும் காற்று
சடசடவென முறியும் கிளைகள்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
சரசரவென தாவும் மான்கள்
துருதுருவென இருக்கும் குரங்கு
நறநறவென குதறும் ஓநாய்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
வதவதவென்ற காட்டுப் பன்றி
கரகரவென கத்தும் வரையாடு
ஊஊவென ஊளைடும் நரிகள்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
மதமதவென பருத்த பெரும் யானை
கொழுகொழுத்த வன்புலிகள்
முசுமுசுவென முடி கொண்ட கரடி
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
திடுதிடுவென வந்தழிக்கும் சிறுத்தை
கருகருத்த முரட்டு காட்டெருமை
சிலிர்சிலிர்த்து நிற்கின்ற முள்ளம் பன்றி
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
தைதையென ஆடும் மயில்கள்
திருதிருவென விழிக்கும் ஆந்தை
கீச்கீச்செனெ கத்தும் குருவி
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
மினுக்மினுக்கென்ற மின்மினி
வீச்வீச்சென கத்தும் பூச்சிகள்
கொர்கொர்ரென கத்தும் தவளைகள்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
கிடுகிடுக்கும் பெரும் பள்ளம்
வழுவழுக்கும் மலைச்சரிவு
கொழகொழக்கும் சேறு
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
தழதழவென்ற பசும் தேயிலை
கமகமக்கும் வாசனை பொருட்கள்
சொரசொரத்த பட்டையுள உயர் மரங்கள்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
குளுகுளுவென்றிருக்கும் உதகை
சிலுசிலுவென தழுவும் தென்றல்
சுடசுடவே கிடைக்கும் நெய்வர்க்கி
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
சலசலவென ஓடும் நீரோடை
குபுகுபுவென வெள்ளம் பாயும் நதிகள்
ஓஓவென இரையும் பேரருவிகள்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!
நடுநடுங்கும் குளிர்
தகிதகிக்கும் உள்ளம்
கிறுகிறுக்கும் எதிர்காலம்
இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!!
– ஆ.செந்தில் குமார்.
நன்றி : கூகிள் இமேஜ்