சுற்றுச்சூழல் தூய்மை

-ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி

சுத்துப்புறம் காத்திடுவோம்
சொத்துசுகம் போல…
பெத்துப்போட்டபுள்ள குட்டி
சுத்தமாக வாழ…
ஒத்துமையா ஊருக்கூரு
ஒண்ணாக்கூடுவோங்க…
வெத்துக்குப்பை கூளங்களை
விரட்டிடுவோம் வாங்க…!

ஆத்துமேடு குளத்து மேடு
அசிங்கமாச்சுனா
பாய்ஞ்சுவரும் நல்லதண்ணி
பாய்சனாச்சுனா
உடம்புக்குள்ளே நோவு நொடி
தேடி வருமுங்க!
நாடி நரம்பு கெட்டுப்போயி
பலமிழக்குமுங்க!

பிளாஸ்டிக்கால பையெடுத்து
பார்சல் வாங்குறோம்
பண்டமெல்லாம் விசமாகிப்
பாழடிக்கிறோம்
துணியால பையெடுத்தா
துயரமில்லீங்க!
நச்சுதரும் பிளாஸ்டிக்கினி
நமக்கு எதுக்குங்க??

ஓசோனில் ஓட்டை வந்தா
உலகந்தாங்குமா?
காசு பணம் மட்டுமிங்கே
சுகத்தக் கொடுக்குமா?
ஒருநிமிசம் யோசிச்சா
பலவிசயம் புரியுமுங்க!
ஒவ்வொருத்தர் மனசு வச்சா
பசுமை வந்து சேருமுங்க!

திட்டம் போடும் அரசாங்கம்
மட்டுமிதுக்குக் காரணமா?
சட்டுபுட்டுனு சர்க்கார
திட்டீட்டாத் தீந்திடுமா?
ஒட்டுமொத்தமா எல்லோருக்கும்
பங்கு இருக்குதுங்க!
பட்டுத்தொலையும் முன்னால
பொங்கி எழுவமுங்க!!
 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *