உலக வாழ்க்கை ஒரு சக்கரம்
– ஆ.செந்தில் குமார்
விலங்கோடு விலங்காக
வேட்டையாடி வாழ்ந்து வந்தான்!
குகையே இவன் குடியிருப்பு!
கூரிய கல்லே ஆயுதம்!
விலங்கு மனிதனை
விளங்க வைத்தது வேளாண்மை!
நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு
நாகரிக வாழ்க்கையில் நிலைத்தான்!
நதிக்கரைகள்தான்
நாகரிகத்தின் தொட்டில்கள்!
உழவனே அந்த நாகரிகத்தின்
உயர் வளர்ச்சிக்கு உதவியவன்!
நிலத்தைப் பண்படுத்தினான்
வேளாண்மை வளர்ந்தது!
மனத்தைப் பண்படுத்தினான்
பண்பாடு செழித்தது!
கால்நடைகளைப் பழக்கினான்
உழைப்பின் சுமை குறைந்தது!
கற்பனையை உயர்த்தினான்
வாழ்வின் இனிமை உயர்ந்தது!
இக்கால மனிதன் இயற்கையைச் சிதைத்து
இன்பம் காண்கிறான்!
அறிவியலின் துணைகொண்டு
அகிலத்தை ஆள்கிறான்!
கற்கால மனிதன் காட்டில்
அரைநிர்வாணமாய் இருந்தான்!
இக்கால மனிதன் அதையே
நாகரிகம் என்கிறான்!
கற்கால மனிதனிடம்
பண்பாடு இருக்கவில்லை!
இக்கால மனிதனிடமும்
அது இருப்பதில்லை!
கற்கால மனிதன்
அறிவில் வளர்ந்தான்…
நாகரிகம் பிறந்தது!
பண்பாடு பிறந்தது!
இடைக்கால மனிதன்
அறிவில் வளர்ந்தான்…
நாகரிகம் வளர்ந்தது!
பண்பாடு வளர்ந்தது!
இக்கால மனிதன் அறிவில்
வளர்ந்துகொண்டேயிருக்கிறான்…
நாகரிகம் தேய்கிறது!
பண்பாடு தேய்கிறது!
வருங்கால மனிதன் அறிவின்
உச்சத்தில் இருப்பான்…
நாகரிகம் மறையும்!
பண்பாடு மறையும்!
அவனும் மறைவான்!
உலகமே அழிந்து மறையும்!