அழகு…!
– ஆ. செந்தில் குமார்
இளைஞர்க்கு அழகு போராடும் துணிவு!
கலைஞர்க்கு அழகு இயம்பும் அறிவு!
அறிஞர்க்கு அழகு அறிவின் திணிவு!
கவிஞர்க்கு அழகு கருத்தின் செறிவு!
செல்வர்க்கு அழகு எளிமையாய் இருத்தல்!
சிறுவர்க்கு அழகு பணிவாய் இருத்தல்!
தமிழுக்கு அழகு தொன்மையில் இளமை!
தமிழர்க்கு அழகு விருந்தோம்பல் இனிமை!
கதிருக்கு அழகு தலை குனிவு! – நெற்
குதிருக்கு அழகு முழு நிறைவு!
நிலவிற்கு அழகு களங்கமாய் இருத்தல்!
உலகிற்கு அழகு பொறுமையாய் இருத்தல்!
அழகு என்பது அகத்தைப் பொறுத்தது!
இனிமையாய் இருப்பதே அனைத்திலும் சிறந்தது!