சாலையின் விதி!
-ஆ.செந்தில் குமார்
செலவுகள் பல கோடி
செய்து நாட்டில் இட்ட
குலவும் சாலைகள் யாவும்
குடிமக்கள் மனம் மகிழ்ந்து
உலவித் திரியும் முன்னே
உளுத்துக் கொட்டின கற்களாய்!
பாடு படுத்தியது சாலையைப்
பாதாளச் சாக்கடைத் திட்டம்!
ஓடும் மழைநீர் அரிப்பு
ஓடாய்த் தேய்த்தது சாலையை!
வீடுகளனைத்தும் எறியும் குப்பை
காடாய் ஆக்கிரமித்தது சாலையை!
தரைவழித் தொலைபேசி இணைப்பு
துண்டு துண்டாக்கியது சாலையை!
நிறைவான மின் இணைப்பு
நிலை மாற்றியது சாலையை!
குறைவான குடிநீர் வழங்கும்
குழாய்கள் குதறின சாலையை!
குறைந்த தரங்கொண்ட பொருட்கள்
குலைத்துப் போட்டது சாலையை!
நிறைந்த வண்டிகளின் நெரிசல்
நிதமும் திணறடித்தது சாலையை!
மறைந்தன சாலை நடைமேடைகள்
நிறுவிய நடைபாதைக் கடைகளாலே!
புலம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
புரையோடிய ஊழலை எண்ணி!
குழம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
குறைகளை நிதமும் எண்ணி!
விளம்பி உறுதி ஏற்போம்
விரைவான மாற்றம் எண்ணி!