பாப்பா நீ படி.. படி.. படி..!
– ஆ. செந்தில் குமார்
பாப்பா நீ படி.. படி.. படி..! அதுதான்
வாழ்கைக்கு ஏணிப்படி!
வெற்றிப்படியை எட்டும்படி
படிப்படியாய் நீ படி!
அன்னை சொல்லும்படி
தந்தை நினைக்கும்படி
ஆசிரியர் மெச்சும்படி
படிப்படியாய் நீ படி! (பாப்பா…)
ஒழுக்கத்தில் சிறக்கும்படி
இழுக்கென்பது இல்லாதபடி
எழுச்சியாய் இருக்கும்படி
படிப்படியாய் நீ படி! (பாப்பா…)
நல்லோரின் எண்ணப்படி
எல்லோரும் போற்றும்படி
இல்லாமை நீங்கும்படி
படிப்படியாய் நீ படி! (பாப்பா…)
தன் காலால் நிற்கும்படி
தக்கோன் என விளங்கும்படி
தரணிக்கு உதவும்படி
படிப்படியாய் நீ படி! (பாப்பா…)
சான்றோனாய் மாறும்படி
சாகாமல் பெயர் நிலைக்கும்படி
சிறிதும் சலிக்காதபடி
படிப்படியாய் நீ படி! (பாப்பா…)
நாள்தோறும் நல்லபடி
நல்லது மனதில் பதியும்படி
நாடு மேலும் உயரும்படி
படிப்படியாய் நீ படி! (பாப்பா…)