தேயிலைத் தோட்டத்தைத் தேடி…..

 

புல்லின் மீது பனித்துளி தூங்க
புள்ளினம் எல்லாம் கீதம் இசைக்க
கல்மலை யிடையே கதிரவன் உதிக்க
துள்ளித் திரிய மந்திகள் விரைந்தன!

தோட்டத் தொழிலுக்கு செல்வோர் எல்லாம்
வீட்டில் பொழுது புலருமுன் எழுந்து
தாட்டைக் கட்டி ஆயத்தம் ஆகி
ஓட்டமும் நடையாய்ப் பணியிடம் சேர்ந்தனர்!

ஓங்கி யுயர்ந்த மலையிடை எல்லாம்
எங்கும் நிறைந்த தேயிலைத் தோட்டம்!
தங்கிய பனித்துளி இலைகளை நனைக்க
சங்கு ஒலித்தது பணிகளைத் துவங்க!

கிளைகள் படர்ந்து வளர்ந்த செடியில்
வளைக்கரம் கொண்ட மகளிர் எல்லாம்
இலைகளைப் பறித்து தாட்டில் நிறைக்க
சிலைபோல் நின்று துரையும் பார்ப்பான்!

செடியில் பறித்த கொழுந்து எல்லாம்
மடியில் கட்டிய தாட்டில் நிறைய
நெடிய சாலுக்கிடையே சுமந்துச் சென்று
எடையைப் பார்க்க சாக்கில் தினிப்பர்!

சாக்கில் நிறைத்த கொழுந்தை எல்லாம்
சரியாக நிறுத்தி எடையைப் பார்த்து
சாலையில் நிற்கும் வண்டியில் ஏற்றி
ஆலைக் கனுப்பி பக்குவம் செய்வர்!!!
-ஆ. செந்தில் குமார்

குறிப்பு :-

தாட்டு – பறித்த தேயிலைக் கொழுந்தை நிரப்புவதற்காக அணிந்து கொள்ளும் சாக்கினால் தைக்கப்பட்ட உடை

சாக்கு – கோணிப்பை

துரை – மேளாளர், ஆங்கிலேயர் காலத்தில் துரை , ஐயா என்று சொல்லப்பட்ட பழக்கம் இன்றும் சில இடங்களில் தொடரப்படுகிறது.

சங்கு – இராட்டையில் ( தேயிலை ஆலை ) நேரத்திற்கு ஒலிக்கப்படும் Hooter சப்தம்.

சால் – தேயிலைச் செடி வரிசையாக நடப்பட்ட ஒழுங்குமுறை.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *