Tag: சச்சிதானந்தம்

  • குறவன் பாட்டு-23

    குறத்தி விற்பனைக்காக நகரம் செல்லுதல்

     

    நாற்பது வயது நந்தவ னம்போல்,

    தோற்றத்தில் இருபது வயதுப் பெண்போல்,

    பாற்கடல் கொண்ட தெள்ளமு தம்போல்,

    பற்பல பொருட்களைச் சுமந்து நடந்தாள்!                                                                                             188

     

    இரவைப் பகலாக்கும் ஒளிமிகு விழிகளும்,

    பகலை இரவாக்கும் இருள்மிகு கூந்தலும்,

    இரண்டும் சந்திக்கும் மாலைப் பொழுதென,

    நுதலில் பொன்வண்ணம் பொங்க நடந்தாள்!                                                                                         189

     

    சிறுகச் சிறுகச் சேகரம் செய்த,

    சிவந்த கனிகள் சிறுபெருங் காய்கள்,

    நறுமணம் வீசும் பலநிற மலர்கள்,

    இன்னும் பலபொருள் சுமந்து வந்தாள்!                                                                                                    190

     

    தலைமேல் கைகூப்பி ஈசனைத் தொழுவதுபோல்,

    தன்னிரு கைதூக்கித் தலைமேல் கூடையினை,

    திடமாய்ப் பிடித்தபடி குறத்தியும் நடப்பது ஏன்?

    செய்யும் தொழில்தெய்வம் என்பத னாலோ!                                                                                        191

     

    வாரம் கடந்து வருடம் கடந்து,

    தொடர்ந்து வருகை புரியும் குறத்தியை,

    மலர்ந்த முகத்துடன் பெண்கள் பலரும்

    விரும்பி அழைத்துப் பொருட்களை வாங்கினர்!                                                                 192

     

    வியாபாரத் தந்திரம் எதுவும் செய்யாமல்,

    வார்த்தைகள் கொண்டு மாயம் செய்யாமல்,

    விரும்பிய பொருட்களை விரும்பிய வருக்கு,

    விலையைக் குறைத்து விற்பனை செய்தாள்!                                                                                     193

     

    சுமந்த பொருட்களின் பெயரைச் சொல்லி,

    குரலில் ஏற்ற, இறக்கம் காட்டி,

    கேட்பவர் கவனம் ஆர்வம் கூட்டி,

    வேடிக்கையாக விற்பனை செய்தாள்!                                                                                                         194

     

    கீரைக் கட்டுடன் வெட்டிய கரும்பைச்,

    சிறு கட்டுகளாகக் கட்டி முடித்து,

    நீரைத் தெளித்து கீரையின் ஈரம்,

    காயாமல் அதைக் காத்து நடந்தாள்!                                                                                                            195

     

    ஊருக் குள்ளே நுழையும் போது,

    பாரம் நிறைந்த கூடை சுமந்து,

    தேவைக் கதிகமாய் உணவை உண்ட,

    பாம்பைப் போல ஊர்ந்து வந்தாள்!                                                                                                               196

     

    கலப்பட மற்றுக் கானகம் ஈந்த,

    பலப்பல பொருட்களைக் குறத்தியும் ஏந்தி,

    கலகல வென்று சிரிப்பைச் சிந்தி,

    மளமள வென்று விற்பனை செய்தாள்!                                                                                                    197

     

    தெருவில் கூடை சுமந்து நடக்கையில்,

    இருளை மனதில் சுமந்த ஆண்களின்,

    கருணை வறண்ட காமப் பார்வைகள்,

    குறத்தியின் உடலைத் துளைப்பது கொடுமை!                                                                                    198

    Share
  • குறவன் பாட்டு-21

    ஆலமரமும் வண்ணத்துப் பூச்சிகளும்

     

    பனைமரம் போலப் பருத்துத் திரண்ட,

    பற்பல நூறு விழுதுகள் மண்ணில்,

    பலநூ றாண்டுக ளாகத் தொடர்ந்து,

    பதியம் ஆகிச் செழித்த ஆலம்!                                                                                                                    170

     

    ஆயிரம் கால் மண்டபம் போல்,

    அகன்று நின்ற ஆலமரம், தொழும்

    ஆலயத்தின் கோபுரம் போல் உயர்ந்து,

    அரியவகைப் பறவைகளின் சரணாலயம் ஆகும்!                                                                             171

     

    தூண் போன்ற விழுதுகள் இடையே,

    தூரிகை போன்ற மெல்லிய விழுதுகள்,

    துதிக்கை மண்தொட நடக்கும் பிடியாய்,

    தரையைத் தொட்டும் தொடாமல் நின்றன!                                                                                            172

     

    மேனிலைக் கிளைகளில் அமர்ந்த மந்திகள்,

    தேயிலை பறிக்கும் பெண்கள் போல,

    ஈரிலைக் கொத்தாய்ப் பறித்துப் பறித்து,

    ஆலிலைக் கொத்தைக் கீழே அனுப்பின!                                                                                 173

     

    பச்சைச் சிறகை விரித்துச் சுற்றும்,

    பட்டாம் பூச்சிகள் போலக் காற்றில்,

    படபட வென்று பறந்த இலைகள்,

    பூக்களைப் போல மண்ணில் விழுந்தன!                                                                                                  174

     

    உச்சிக் கிளைகளில் கூடுகள் அமைத்தால்,

    உக்கிரக் கதிரவன் சுடுவா னென்று,

    அடிமரக் கிளைகளில் கூடுகள் கட்டி,

    குளுகுளு வென்று பறவைகள் வாழ்ந்தன!                                                                                             175

     

    தனிமரம் ஒன்று தோப்பென் றாகி,

    பலகரம் ஊன்றி மண்ணில் நின்று,

    அடிமரம் உயிரைத் துறந்த பின்னும்,

    புதுமரம் போலப் பசுமை பேணும்!                                                                                                               176

     

    கரியமில வாயுவைக் களிப்புடன் ஏற்று,

    உயிரமுத வாயுவை உலகுக்கு ஈந்து,

    கருணையுடன் வாழும் கானகம் கொண்ட,

    தருக்களின் தலைவன் ஆலமரம் ஆகும்!                                                                                                177

    Share
  • குறவன் பாட்டு – 20

    களிறுகள் பலாக்கனி உண்ணுதல்

     

    தாமரை இலையின் வடிவம் கொண்டு,

    சாமரம் வீசும் செவிமடல் இரண்டும்,

    வாரணத் தலைவனின் வெம்மை நீக்க,

    சேவகம் செய்யும் பணிப்பெண் டீரோ!                                                                                                      161

     

    நீண்டிருக்கும் கவைக் கோலால், தரையில்

    நின்றுகொண்டே கனிபறிக்கும் மனிதன் போல,

    நீண்ட குழல் கரம் நீட்டி,

    நறுமணப் பலாவைக் களிறுகள் பறிக்கும்!                                                                                              162

     

    துணி துவைக்கும் பெண்கள் போல,

    தனிக் கரத்தில் காம்பைப் பற்றி,

    கனி துவைத்துச் சுளை பிரித்து,

    இனி துண்டு களிறுகள் களிக்கும்!                                                                                                 163

     

    குயில்களின் கயமை

     

    செங்குண்டு மணிபோலக் கண்கொண்டு, தீக்

    கங்குண்டு வெந்தது போல் உடல்கொண்டு,

    பொங்கிடும் இன்னிசைக் குரல் கொண்ட,

    சங்கீதக் குயிலின் சிறுமதியை அவளறிவாள்!                                                                                     164

     

    காக்கைக் கூட்டில் கயமையாய், அடை

    காக்கும் தாய்மை மனமின்றி முட்டையை,

    மாற்றாந் தாயிடம் விட்டுப் பறந்தது,

    தாலாட்டுப் பாடாத இன்னிசைக் குயில்!                                                                                                   165

     

    முட்டையி லிருந்து முதலில் வெளிப்பட்ட,

    செங்கண் குஞ்சு பின்னங் கால்களால்,

    கொட்டையை உந்தித் தள்ளும் வண்டெனப்பிற,

    முட்டையைக் கீழே தள்ளி யது!                                                                                                                    166

     

    கூட்டில் இருந்து விழுந்த முட்டையை,

    மண்ணில் விழும்முன் குறத்தி பிடித்தாள்!

    உச்சியிலி ருக்கும் கூட்டில் இருந்து,

    முட்டையை எடுக்கும் சூட்சமம் அறிந்தாள்!                                                                                         167

     

     
     
    பறவைகள் அம்பாகப் பாய்தல்
     
    வானம் என்னும் வில்லில் இருந்து,

    சீறிப் பாயும் அம்பைப் போல,

    சிறகை மடித்துப் பறவைகள் கூட்டம்,

    நீரில் பாய்ந்து மீன்களைப் பிடித்தன!                                                                                                   168

     

    தலைமேலாய் உடல்திருப்பி மலம் கழிக்கும்,

    மலைக்குகை வெளவால்போல், உடல்திருப்பி மீனோடு,

    தலைநிமிர்த்தி மேல்நோக்கி பறவைகள் பாய்ந்தேறி

    அலையில்லா ஏரிவிட்டு அகன்றவானை அடைந்தன!                                                                  169

    Share
  • குறவன் பாட்டு – 19

    குறத்தி கானகத்தில் கண்டுகளித்த காட்சிகள்

     

    நாரைகளும் வண்டுகளும் பலாக்கனிக்குக் கண்கள் வழங்குதல்

     

    மாலை வானில் நாரைக் கூட்டம்,

    மேலும் கீழும் சிறகை அசைத்து,

    மேவிப் பரந்த கடலின் கரையில்,

    மெல்லப் புரளும் அலைபோல் பறந்தன!                                                                    150

     

    அலைபோல் பறந்த நாரைக் கூட்டம்,

    ஆயிரக் கணக்கில் பலா மரத்தில்,

    அழகுத் தோரணம் போல அமர்ந்து,

    அசைத்துக் குலுக்கின உச்சிக் கிளைகளை!                                                                     151

     

    கிளையில் அமர்ந்து தூளிகள் ஆடிக்,

    காற்றில் சிறகினை நாரைகள் அடிக்க,

    கணத்த கனிகளைச் சுமந்த மரமே,

    குதித்துப் பறக்க முயல்வதாய்த் தெரியும்!                                                                      152

     

    வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை

    பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,

    பனைங் கிழங்காய் நாரை தன்,

    பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்!                                                                               153

     

    நீரில் மீன்களைப் பிடிக்கும் விசையுடன்,

    நீண்ட அலகினை நொடியினில் செலுத்தி,

    நறுமணக் கனிகளைக் குத்திக் குத்தி,

    நாரைகள் நீண்ட துளைகள் இட்டன!                                                                                154

     

    யானைத் தந்த நுனிநுழை விட்டத்,

    துளையைச் செய்து அலகைச் செலுத்தி,

    சுளையைக் கவ்வி வெளியே எடுத்து,

    மீனை விழுங்கும் நினைவில் விழுங்கின!                                                                      155

     

    கொக்குகள் இட்ட மஞ்சள் துளையில்,

    கருவண்டுகள் அமர்ந்து கனியை உண்ண,

    மஞ்சள்விழிப் படலத்தின் மீது உருண்ட,

    கருவிழிப் படலம் உள்ளதாய்த் தோன்றும்!                                                                     156

     

    துளைகளின் வழியே சென்றிட அஞ்சித்,

    தயங்கித் தயங்கி வண்டுகள் நகர,

    தேன்சிந்தும் கண்களை மெதுவாய் உருட்டி,

    தீஞ்சுவைக் கணிகான் காண்பதாய்த் தோன்றும்!                                                            157

     

    மூட்டை போன்ற பசும்பலா, மேனியின்

    ஓட்டை மஞ்சள் வண்டுக் கண்களால்,

    காட்டைக் கண்டு கவினில் இலயித்து,

    வாட்டம் கொடுக்கும் வலியை மறந்தது!                                                                 158

     

    வேடன் விரித்த வலையில் சிக்கி,

    வாடும் பறவைகள் கூட்டம் போல,

    வெளிறிய மஞ்சள் சடையின் பிடியில்,

    வண்டுகள் நுண்கால் சிக்கித் தவித்தன!                                                                           159

     

    சிக்கித் தவித்த வண்டுகள் சிறகை,

    அச்சத்தோடு படபடத் தடிக்க, அவ்வொலிகேட்ட

    மந்திகள் வந்து, மானுடன் போலச்

    சிந்தனைகொணடு, வண்டுகளை விடுவித் தனவே!                                                       160

    Share
  • குறவன் பாட்டு – 18

    கரும்பு ஒடித்தல்

     

    மலையில் புதராய் வளர்ந்த கரும்பினில்,

    கணுக்கள் தொலைவினில் அமைந்த கரும்பினை,

    வேருடன் பிடுங்கித் தோகையை ஒடித்து,

    மன்மதக் கரும்பைத் தன்வசம் கொண்டாள்!                                 140

     

    பலாச்சுளை சேகரித்தல்

     

    தொடர்ந்து நடந்த குறத்தியின் நாசியை,

    திரண்டு கனிந்த பலாவின் வாசம்,

    திகட்டத் திகட்டத் தாக்கியதாலே தன்னைமறந்து,

    வாசம் வீசிய திசையை நோக்கி நடந்தாளே!                                                                                       141

     

    முள்ளாய் இருந்த மேல்தோல் தேய்ந்து,

    மெலிந்து கனிந்து வெடித்த நிலையிலும்,

    தாயைப் பிரிய மனமற்ற சேய்போல்,

    சுளைகள் சடையில் ஒட்டிக் கொண்டன!                                                                                 142

     

    குறமகள் கரும்பின் அடிக்குப் பணிந்து,

    கனியது கிளையில் தங்கிக் கொள்ள,

    அருவியில் குதிக்கும் சிறுவர்கள் போல,

    வரிசையில் சுளைகள் தரையில் குதித்தன!                                                                                          143

     

    தரையில் விழுந்த சுளைகளை எடுத்து,

    ஒட்டிய மண்ணை ஒருமுறை துடைத்து,

    தலையில் சுமந்த கூடையில் வைத்து,

    தன்வழிப் பயணத்தைத் தொடர்ந்தாள் குறத்தி!                                                                                   144

     

    இஞ்சி தின்ற குரங்கு

     

    மஞ்சளொடு இஞ்சியும் வளர்ந்திருந்த புதரில்,

    மந்தி ஒன்று வாசம் கண்டு,

    மஞ்சள் என்று எண்ணிக் கொஞ்சம்,

    ஆசையோடு “இஞ்சி தின்ற குரங்கு”                                         145

     

    இஞ்சி தின்ற மந்தி, கோபம்

    கொண்டு, புயலடித்த வயலைப் போல்

    புதர் பறித்துப் பிய்த்தெறிய, எளிமையாக

    மஞ்சளொடு இஞ்சி கொண்டாள் குறத்தி!                                                                  146

     

    பப்பாளி மற்றும் சுண்டைக்காய் சேகரித்தல்

     

    அடி பெருத்து நுனி சிறுத்த,

    அழகான பப்பாளி மரம் கொண்ட,

    பழுக்காமல் திரண்டு நிற்கும் காய்களை

    அலுங்காமல் அடிஎற்றிப் பறித்து நின்றாள்!                                                                                            147

     

    மரம் போலப் பெரிதாய் வளர்ந்து,

    பெரும் புதராகப் பரவி விரிந்து,

    பருந்தின் நகம் போல முட்கள் கொண்ட,

    சுண்டைச்செடி உலுக்கிக் காய் கொண்டாள்!                                                                                          148

     

    ஊனுண்ண மறந்த குறத்தி

     

    தேனுண்டு, உயர் தினையுண்டு, அடர்

    பாலுண்டு, மலர் பலவுண்டு, இன்னும்

    காயுண்டு, கனியுண்டு சுவைத்துக் களித்து

    ஊனுண்ணும், மீனுன்னும் ஆசைதுறந்த குறத்தி!                                                                            149

    Share
  • குறவன் பாட்டு – 17

    சச்சிதானந்தம்

    குறவனும் குறத்தியும் தத்தம் பயணத்தைத் தொடர்தல்

     

    பசியும் தாகமும் தணிய, நடு

    நிசிபோல் கண்கள் சுழன்று இழுக்க,

    அசையும் தருக்கள் தென்றல் வீச,

    அசைவின்றித் துயின்றனர் குறவனும், குறத்தியும்!                           131

     

    இடியெனப் பிளிறிய பிடியின் ஒலியால்,

    திடுக்கிட்டுக் குறத்தியின் தூக்கம் கலைய,

    அடிமனம் அடைந்த படபடப் பாலே,

    நொடியினில் குறவனின் தூக்கம் கலைத்தாள்!                                                                                    132

     

    குறவன் எழுந்து குறத்தியை இழுத்து,

    சேயை அணைக்கும் தாயைப் போல,

    மார்பில் அணைத்து அச்சம் நீக்க,

    அச்சம் நீங்கி, நாணம் கொண்டாள்!                                                                                                              133

     

    நாணம் நீங்காக் குறத்தி மீண்டும்,

    குறவனை நீங்கிக் கானகம் சென்றாள்,

    குறவனும், குறத்தியின் அச்சம் எண்ணிக்,

    கலங்கிய மனதுடன் மறுதிசை சென்றான்!                                                                                             134

     

     

     

    பிற்பகல் உறக்கம்

     

    குறவனும் குறத்தியும் துயின்றதைப் போல,

    குரங்குகள் இரண்டு மரத்தின் மேலே,

    இயற்கை அரங்கின் எழிலில் மயங்கி

    உறங்கும் அழகைக் குறத்தியும் கண்டாள்!                                                                                             135

     

    மனிதர்கள் மந்திகள் மட்டும் அல்ல,

    பறவைகள் விலங்குகள் தருக்களின் உடனே,

    ஆறுகள், ஏரிகள், மீன்களும் கூட,

    பிற்பகல் உறக்கம் கொள்வது இயற்கை!                                                                                                  136

     

    இமையற்ற மீன்களும் நீருக் குள்ளே,

    அமைவுற்ற பாறையின் பிளவுக் குள்ளே,

    தமையுற்று உறங்கும் கண்ணுக் குள்ளே,

    இணையற்ற பிற்பகல் நற்பொழு தினிலே!                                                                                             137

     

    முதலை போலத் தோலைக் கொண்ட,

    தவளை ஓன்று முயலைப் போல,

    தாவிக் குதித்துத் தாமரை மீது,

    ஏறிப் படுத்துத் தூங்கிடும் பிற்பகல்!                                                                                                             138

     

    மேற்திசைக் கதிரவன் மேகத்திற்குள் மறைந்ததுபோலக்,

    கதிர்களின் வீச்சில் வெம்மை குறைந்து,

    மென்மை வளர, விலங்குகள் பறவைகள்,

    மீண்டும் வெளிவரக் கானகவாழ்க்கை தொடர்கிறதே!                                                                    139

     

    Share
  • குறவன் பாட்டு – 16

                                   சச்சிதானந்தம்

    பிற்பகல் உணவு உண்ணுதல்

     சேகரம் செய்த பழங்களில் சிறிய,

    பகுதியைப் பிரித்துக் குறத்தியும் கொடுக்க,

    தான் கொண்டுவந்த தேனள்ளிக் குறவனும்,

    பழங்களில் குழைத்து அமுதம் செய்தான்!                                                                       126

     

    வான்கொண்ட தேவரும் காணா அமுதினை,

    கோன்கொண்ட மாளிகைக் கொள்ளாக் குளுமையை,

    கான்கொண்ட குறவனும் கவின்மிகு குறத்தியும்,

    தேன்கொண்ட உணவுண்டு எளிதினை அடைந்தனர்!                                                  127

     

    வயிறாரக் கனி யுண்டு, சுடும்

    வெயிலாற நிழல் கண்டு, பேசி

    மனதார மையல் கொண்டு, வாழும்

    இதுதானே வாழ் வென்று வாழ்ந்தனர்!                                                                                 128

     

    பருந்தின் சிறகைக் குறத்திக்குப் பரிசளித்தல்

    எச்சம் கீழே வீழா உயரத்தில்

    உச்சிப் பாறையில் வாழும் பருந்தின்,

    ஒச்சச் சிறகைச் சிரமம் இன்றி

    மேலே ஏறி எடுத்து வந்தான்!                                                                                                     129

     

    எடுத்து வந்த சிறகைத் தந்து

    மிடுக்கினோடு குறத்தியைக் கண்டு, பாறை

    இடுக்கிலேறிப் பருந்தை மீறிச் சிறகைக்

    கடத்தி வந்த கதையைச் சொன்னான்!                                                                                  130

    Share
  • குறவன் பாட்டு – 15

    சச்சிதானந்தம்

    குறத்தி புலிக் குட்டிகளைக் கொஞ்சுதல்

     

    தாய்ப்புலி யொன்று குட்டிகள் தன்னை,

    யாரும் காணாப் புதரில் விட்டு,

    தாய் நாட்டைப் பிரியும் தமிழன்போல,

    மனமின்றி இரைகொள்ளச் சென்றது ஒவ்வொருநாளும்!                                             118

     

    அவ்வொருநாளில் அவ்வழிவந்த அழகிய குறத்தி,

    புதரை விட்டு வெளியேவந்த குட்டிகள் கண்டு,

    பாசத்தோடு தாயைப்போல அள்ளிக் கொஞ்சிப்,

    புதரில் விட்டுத் தன்வழி சென்றாள்!                                                                                           119

     

    குறவன் குறத்தி சந்திப்பு

     

    கச்சை குறைவாய்க் கட்டியதாலே, கூடையிலிட்ட,

    கனிகளை மலர்களை சுமந்திட மலர்களை,

    சுருட்டிப் பந்தாய் உருட்டித் தலையில்,

    சும்மாடாக்கிக் கூடை சுமந்தாள் குறத்தி!                                                                 120

     

    கிளிகளும் குறத்தியும்

     

    கூடை சுமந்து நடந்த குறத்தியை

    கிளிகள் மேலே சுற்றிப் பறந்தன,

    குறத்தியின் அழகோ! கனிகளின் மனமோ!

    கிளிகளை ஈர்த்தது இரண்டினில் எதுவோ!                                                                              121

     

    சீருடை அணிந்த மழலைகள் போலே,

    பசுமையில் செம்மை வார்த்த கிளிகள்,

    கூடை என்னும் கிரீடம் சுமந்த,

    குறத்தியின் முடியில் மரகதம் ஆயின!                                                                                    122

     

    சிறகை விரித்துக் கிளிகள் அடிக்க,

    கூடையி லிருந்த மலர்கள் தெறிக்க,

    நடந்திடும் குறத்தியின் அடியினை நிறைத்து,

    வழியெங்கும் மலர்கள் பூசனை செய்தன!                                                                              123

     

    குறத்தி இருக்குமிடம் அறிதல்

     

    மலர்கள் சிந்திய தடத்தினைக் கொண்டு,

    குறத்தி நடந்த வழியினைக் கண்டு

    குறவனும் தொடர்ந்து மலர்மேல் நடந்து,

    ஒருவரை ஒருவர் சோலையில் கண்டனர்!                                                                            124

     

    பாதம் போல வாயும் சிவந்து,

    கனிகள், மலர்கள் மட்டும் இன்றிக்,

    கிளிகளும் சுமந்த குறத்தியைக் கண்டு,

    குறவன் சிரித்தான் கடகட வென்று!                                                                                              125

    Share
  • குறவன் பாட்டு – 14

    சச்சிதானந்தம்

    ஆலமரமும் அழகுக் குறத்தியும்

     

    சிறுகுறும் பறவைகள் சிலநூறு வாழ்ந்திடும்,

    சிற்றிலை ஆல்பெற்ற விழுதினைப் பற்றியே,

    நற்குணக் குறத்தியும் உடலெற்றி ஆடிடும்,

    அற்புதக் காட்சியைப் பறவைகள் கண்டன!                             106

     

    பறவைகளின் தவம்  

     

    பல்வகைப் பறவைகள் காற்றினில் பண்பாடும்,

    நன்மலர்ச் சோலையில் குறத்தியைக் கண்டதும்,

    இன்குரல் பறவைகள் தம்குரல் மறந்ததால்,

    கண்ணிமைப் பொழுதிற்கு மௌனமாய் நின்றன!                       107

     

    புள்ளினங்களும் புள்ளி மானினங்களும் நூறுவகைப்

    பூவினங்களும் பூவில் தேனெடுக்கும் பொன்

    வண்டினங்களும் குறத்தியைக் கண்டினங் கண்டு

    தம்மினம் சேரத் தவம்செய் தனவே!                                                     108

     

    அணில்களும் அன்புக் குறத்தியும்

     

    சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,

    இருகை எடுத்து இடையில் பதித்து,

    வருகை புரியும் குறத்தியை அறிந்து,

    சிறுகை குவித்து அணில்கள் ஆடும்!                                                                                          109

     

    அணில்களுக் கெல்லாம் அன்னை போலக்,

    கனிகள் கொட்டைகள் உண்ணக் கொடுத்து,

    மடியில் வைத்து தடவிக் கொடுத்து,

    விடியல் போல வண்ணம் கொண்டாள்!                                                                                   110

     

    களிறுகளும் மாஞ்சோலையும்

     

    மாவின் அடிமரத்தை உரித்துத் தின்று

    மேலே உயர்ந்திருக்கும் கிளைகள் உலுக்க,

    துதிக்கை தனை உயர்த்தி யானை இழுக்க,

    கனிகளும் உதிர்ந்தன, கிளைகளும் முறிந்தன!                          111

     

    கிளையைச் சுற்றிய துதிக்கை கண்டு

    கருநாகம் என்று எண்ணிப் பதறி

    மரத்தில் வாழும் குயில்கள் இரண்டு

    வானில் உயரக் கூவிப் பறந்தன !                                                                                                112

     

    யானை சென்ற பின்னர் அந்த

    சோலைப் பக்கம் வந்தாள் குறத்தி

    தன்மனக் குறிப்பை உணர்ந்து  மரங்கள்,

    கனிகள் உதிர்த்தன என்றே நினைத்தாள்!                                                                 113

     

    மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,

    மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி,

    சோலை மஞ்சள் மாங்கனி கடித்து,

    செம்மஞ்சள் வானம்போல இதழ்கள் கொண்டாள்!                                                           114

     

    பூங்குரல் குறத்தி மாங்கனி எடுத்துத்

    தின்றது போக மீதிப் பழங்களைத்

    தன்னுடன் எடுத்துச் சென்றாள் கூடையில், முன்பே

    எடுத்த கனிகளினோடும் மலர்களி னோடும்!                                                                         115

     

    நெல்லிக்கனி சேகரித்தல்

     

    செல்லும் வழியில் நெல்லிக்கனிமரம், கண்டே

    உள்ளம் துள்ளிக் குதித்து, மாங்கனி எடுத்து

    கல்லெனத் தொடுத்து நெல்லியை அடித்து,

    சிதறிய கனிகளை எடுத்துக் கடித்தாள்!                                                                                      116

     

    செவ்விதழும் சிற்றிடையும் கொண்டிருக்கும் குறத்தி,

    அவ்விதழால் பற்றியொரு நெல்லிக்கனி கடிக்கும்,

    நவ்வியத்தைக் காண்பதற்குக் காத்திருக்கும் குயில்கள்,

    பவ்வியமாய் அவளருகில் வந்தமர்ந்து கூவும்!                                                                 117

    Share
  • குறவன் பாட்டு – 13

    குறத்தியின் பயணம்

     

    வானுயர்ந்த மலை முகட்டில், கொண்ட

    குணமுயர்ந்த கலைக் குறத்தி, வீசும்

    மணமுயர்ந்த மலர் சேர்க்க, கனிந்த

    மனமுவந்து முகிலிடையே நடந்து சென்றாள்!                         98         

     

    முகில் கடந்து நடந்த தினால்,

    முகத்தில் நீர் மலர்ந்து நிற்கிறதே,

    “நீரு பூத்த” மலர் முகத்தாள், தேனின்

    சாறு பூத்த மலரெடுக்கக் காடுதோறும் அலைந்தனளே!                                                99

     

     

    குறத்தி மாதுளங்கனி சேகரித்தல்

     

    தாமரை மலர்ந்தது போல், வெடித்த

    மாதுளை பிளந்திருக்க, சிதறிதய முத்துக்கள்

    ஆங்காங்கே தெறித்து, நீர்க் குமிழிக்குள்

    பவளம்போல் நிலமெங்கும் நிறைந்தி ருக்கும்!                                                                   100

     

    சிதறிய முத்துக்கள் பவளம்போல் படர்ந்திருக்க,

    முத்துச் சரத்தில் தோய்ந்து நடந்து,

    இரத்தச் சிவப்பில் காலடி கொண்டு,

    எஞ்சிய முத்துக்களை கனியொடு பறித்தாள்!                                                                        101

     

    பறித்த கனியின் முத்தைக் குறத்தி

    பற்களினிடையே கொறித்துக் கடிக்க,

    பாதம் போல வாயும் சிவந்து

    பேரெழில் பூத்துச் செம்மை கொண்டாள்!                                                                                102

     

    குறத்தி நாவல் பழம் சேகரித்தல்

     

    மரம் விட்டு மரம் தாவும்,

    பறக்கும் பல்லி போல் தமது,

    கரங்களை விரித்துக் குரங்குகள் நாவல்

    மரத்தின் உச்சிக் கிளைகளில் தாவின!                                                                                      103

     

    மந்தியின் பாரத்தால் மெல்லிய கிளைகள்,

    முதிராத மூங்கிலாய் வளைந்து நிமிர,

    முதிர்ந்த கனிகளோ குலுங்கிக் குதித்து,

    மண்ணில் விழுந்து காத்துக் கிடந்தன!                                                                                      104

     

    நாவல் பழங்கண்ட குறத்தியின் மனதுக்குள்,

    ஆவல் அளபெடுத்து ஆஅவல் ஆஅகிவிட,

    ஏவல் செய்பவர்க்குச் சேவகம் செய்பவள்போல்,

    பணிந்து குனிந்து பழங்களை எடுத்தாள்!                                                                 105

    Share
  • குறவன் பாட்டு – 12

    
    சச்சிதானந்தம்
    
    
    குறத்தியின் எழில் 

     

    கம்பன் செய்த சீதையின் அழகும்,

    பிரம்மன் செய்யும் புதுப்புது அழகும்,

    கண்கள் குளிர்ந்த வள்ளியின் வழிவரு,

    குன்றக் குறத்தி எழில்முன் சிறிதே!                                                                                      90

     

    இளந்தோள் இரண்டும் பொன்வடம்போல் இருக்க,

    இதழ்கள் இரண்டும் செந்தடம்போல் நிலைக்க,

    இளமை ததும்பி சந்தனம்போல் மணக்க,

    இதயம் நிறைந்த அன்புடையோள் குறத்தி!                                                                          91

     

    
    
    
    
    முகத்தின் வனப்பு 

     

    வெண்மணியின் சுட்டி இட்ட நெற்றியில்,

    வெள்ளரியின் விதை வடிவப் பொட்டிட்டு,

    வெந்தயத்தின் அளவில், புருவத்தைச் சுற்றி,

    வெவ்வேறு வண்ணப் புள்ளிகளால் பொட்டிட்டாள்!                                                  92

     

    இமைகளின் புதிய வண்ணம் 

     

    மூடிய விழிகளின் மேற்புறத்தில் அழகாக,

    மூவண்ணங் குழைத்து மெதுவாகத் தீட்டி

    கூடிய இமைகளில் இருவண்ணங் குழைத்துப்

    பீலியின் தோகையில் தொய்த்தெடுத்து இட்டாள்!                                                             93

     

    மூடிய விழிகளோ சோளியின் வடிவெடுக்க,

    கூடிய இமைகளோ பின்புறப் பிளவெடுக்க,

    ஏடெனப் புரட்டி விழிகளை அவள் திறந்தால்,

    காடுகள் கொண்ட கவினையும் விஞ்சிடுமே!                                                                        94

     

    இதழ்களின் வண்ணம்

     

    பாலைவனப் பூக்களைப் போலப் பாவையவள்,

    பலநூறு வண்ணம் கொண்டாள், மலர்

    வாழை  மடல் வண்ணம் போல,

    அதரத்தில் அடர் நிறம் கொண்டாள்!                                                                                           95

     

    நகங்களின் வண்ணம் 

     

    நீலவண்ணம் பூசிய நகங் கொண்டு,

    நெற்றி குவிந்திருக்கும் கேசமுங் கொண்டு,

    நித்தம் கலையாமல் நிலைத் திருக்கும்

    புன்னகையில் இதழ் கொண்டாள் பேரழகி!                                                                             96

     

    உடையும் வளை கரமும் 

     

    நீண்டிருக்கும் கரம் கொண்டு, அதில்

    நிறைந்திருக்கும் வளை கொண்டு ஒருபுறம்,

    நளினமாய்ச் சரிந்திருக்கும் செவ்வாடை கொண்டு,

    நடந்து வந்தாள் நவ்வியக் குறத்தி!                                                                                             97

    Share
  • குறவன் பாட்டு – 11

    
    சச்சிதானந்தம்
    
    குறத்தியின் பயணம் 
                              
                              அறிமுகம் 
    
    

    கண்ணகிக்குக் கற்கோயில் எடுக்கவைத்த குலத்தில்,

    தென்னகத்துக் கொற்றவையை வணங்கும் இனத்தில்,

    புன்னகையும் நற்குணமும் கொண்ட குறத்தி,

    தன்னலமே அற்றளாய்த் தோன்றி னாளே!                                                                              84

     

     

                   குறத்தியின் வருகை 
    
    

    அந்தி வானச் சிவப்புடன், ஒளி

    மஞ்சள் கலந்த நிறத்துடன், எழில்

    அங்கம் கொண்டு சிறப்புடன், குற

    மங்கை மலர்ந்த முகத்துடன் வருகிறாள்!                                                                               85

     

    நாவல் பழமெடுத்து மண்ணூதித் தின்றுவிட்டு,

    சேவல் சிறகெடுத்து காதின் மெழுகெடுத்து,

    பூவின் தேனெடுத்து இதழிரண்டில் இளித்துவிட்டு,

    இனிக்கும் சாயமிட்டு, இடையாட்டிக் குறத்தி வந்தாள்!                                                 86

     

    கழுத்தில் கண்கவரும் வண்ணவண்ண மாலையிட்டு,

    வழுக்கும் தோளிரண்டை வாடாமல் மூடிவைத்து,

    இழுக்கும் கண்ணிரண்டை இங்குமங்கும் அலையவிட்டு,

    செழிக்கும் கானகத்தைச் சீராகச் சுற்றி வந்தாள்!                                                               87

     

    தேன் நிறத்தில் தேகங்கொண்டு, நீல

    வான் நிறத்தில் விழிகள் கொண்டு, நீண்ட

    கான் கொடுத்த கவினைக் கொண்டு, நல்ல

    மேன்மக்கள் குணங்கொண்டு குறத்தி வந்தாள்!                                                                       88

     

    பச்சைக் காய்கனிகள் தினமும் உண்டு,

    இச்சை என்பதை அளவாகக் கொண்டு,

    கச்சையில் பற்பல வண்ணங் கொண்டு,

    உச்ச அழகுடன் குறத்தி நடந்தாள்!                                                                                              89

    Share
  • குறவன் பாட்டு – 10

    
    சச்சிதானந்தம்
    
    
    களிறுகளும் குறவனும் 

     

    அருவியில் நீர்பருக வருகின்ற யானைகள்,

    அருகிலே செல்லாமல் கவனித்து நின்றான்,

    தொலைவிலே தெரிகின்ற யானைகள் கூட்டம்,

    கலைந்திடும் மெதுவாகப், பிளிறிடும் பெரிதாக!                                                                                  77

     

    யானையின் பிளிறலால் அருவியும் படபடக்கும்,

    ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் நடைநடக்கும்,

    களிறுகள் கடந்தபின்னர் அருவிமீண்டும் சலசலக்கும்,

    வெளிரிடும் நதியில் கலந்து கதிரதன் ஒளிதெறிக்கும்!                                                  78

     

    யானை மயிர் சேகரித்தல்

     

    களிறுதிர்த்த மயிரெடுத்து அருவிநீரில் நனைத்தெடுத்து,

    கயிறுபோலத் திரித்தெடுத்துச் சுற்றி வைத்தான்,

    வெதுவெதுப்புக் குறைந்திடாத சாணம் அள்ளிக்,

    கொண்டுவந்த பையில் வைத்தான் குறவன்!                                                                                       79

     

    யானை நகம் சேகரித்தல்

     

    கன்றாயிருந்த களிறு ஓடோடிருந்த ஆமை உதைத்துக்,

    குதித்துக்குதித்து ஆடிய நினைவில், பின்நா ளொருசிறு

    குன்றாயிருந்த பாறைகண்டு, ஆமையெனவே காலாலுதைக்க,

    முன்னாலிருந்த நகங்கள்விண்டு சிப்பியைப் போலச் சிதறினவே!                              80

     

    சிப்பியைப் போலச் சிதறிய நகங்களை,

    முத்தென மதித்துச் சேகரம் செய்து,

    பத்திரப் படுத்திப் பையினில் வைத்து,

    சத்தியக் குறத்திக்குக் கொடுக்க நினைத்தான்!                               81
    
    
    யானைக் கன்றுக்கு உதவுதல்

     

    யானைக் கன்றொன்றைத் தனியே கண்டான்,

    தாயைப் பிரிந்ததுயர் கண்ணில் கண்டான்,

    உணவுண்ணத் தெரியாத கன்றுக்குத் தேனள்ளித்,

    தனதன்புப் பிள்ளைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தான்!                                                            82

     

    தாயோடு சேய்சேர வழியொன்று கண்டான்,

    களிறைப்போல் பிளிறிக் கணநொடியில் மறைந்தான்,

    பிளிறல் ஒலிகேட்ட பிடியின் கூட்டம்,

    எளிதில் சேய்கண்டு ஒன்றாகச் சேரும்!                                                                                                    83

     

    Share
  • குறவன் பாட்டு – 9

    
    சச்சிதானந்தம்
    
    
    கரடியின் தாண்டவம் 
    
    
    
    

    குட்டிக ளிரண்டைக் கூட்டிக் கொண்டு,

    வெட்டிரும் பொத்த முகத்தைக் கொண்டு,

    முட்டிக் கரையான் புற்றைச் சாய்த்தது,

    கட்டுறுதிக் குணக் கரடி யொன்று!                                                                                              68

     

    குரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்

    குதித்துத் தாவித் தாயின் முதுகில்,

    களிறின் மீதமர் கோவைப் போல,

    கம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே!                                                                                        69

     

    உலர்ந்தசெம் புற்றைத் தாக்கிக் குலைத்து,

    வலம்வரும் கரடியைக் கண்டது கொண்ட,

    பலமும் குணமும் அறிந்து குறவன்,

    புலனைந் தொடுக்கிப் பதுங்கி மறைந்தான்!                                                                           70

     

    நூறடி தூரத்தில் புலியொன் றுறுமி,

    நாலடி உயர மானைத் துரத்த – அம்மானோ

    ஓரடிப் பாய்ச்சலில் எட்டடி தாண்டி

    மூவிரு நொடிகளில் கரடியைக் கடந்தது!                                                                                 71

     

    நடப்பது இதுவென் றறியும் முன்னே,

    நெருங்கிய புலிகண்டு நடுங்கிய குட்டிகள்,

    நழுவித் தாயின் முதுகில் இருந்து,

    நிலத்தில் சரிந்து நெஞ்சம் பதறின!                                                                                                 72

     

    வேகம் எடுத்த புலிதன் னருகே,

    தேகம் கறுத்த கரடியைக் கண்டு,

    நாகம் போலுடல் சீறி எழுந்திட,

    சாகுங் கலைமான் செத்துப் பிழைத்தது!                                                                                    73

     

    தூணைப் பிளந்த சிம்மம் போல,

    முன்னங் கால்களை மேலே தூக்கி,

    தோள்கள் விரித்து அசுரத் தாண்டவம்,

    ஆத்திரம் பொங்க ஆடிடும் கரடி!                                                                                                       74

     

    புஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,

    நிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,

    கஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,

    ஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன!                                                                      75

     

    அஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,

    ஆரண் யத்தின் பாரம் பரியம்,

    அறிந்த குறவன் அமைதியைக் காத்து,

    ஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்!                                                                                 76

    Share
  • குறவன் பாட்டு – 8

    சச்சிதானந்தம்
    
    முயலுக்கு இரங்குதல்

     

    விரிந்தும் விரியாத கல்வாழை மலர்போன்ற,

    சுருண்டும் சுருளாத செவிமடலைச் சுழற்றி,

    உருகும் பனிபோல உடல்கொண்ட வெண்முயல்,

    மருளும் செவ்விழியால் இவ்வுலகைக் காணும்!                                                                               60

     

    முயலைக் கண்டு முயலைப் போலத்,

    துள்ளிக் குதித்து ஓடிச் சென்று,

    கயலைக் கண்ட கரடியைப் போலக்,

    கையால் அடித்து முயலைப் பிடித்தான்!                                                                                  61

     

    கண்கள் சிவந்த முயலைக் கண்டு,

    கனிந்து நின்றது குறவன் நெஞ்சம்,

    கொல்லத் துணிந்து பிடித்த முயலை,

    உள்ளம் இரங்கி அனுப்பி வைத்தான்.                                                                                                       62

     

    தேன் சேகரித்தல் 

     

    வானுயர்ந்த தருவின் மீது தேனுயர்ந்த கூடிருக்க,

    கறும்பாறை என்றதன்மேல் கருடனொன்று கால்பதிக்க,

    கோவம்கொண்ட குளவிகள் கருடன்மீது படையெடுக்க,

    பாறைதுரத்து தென்றெண்ணிப் பருந்துபயந்து பறந்தது!                                                               63

     

    சிதைந்து நின்ற தேன்கூட்டில், ஆழப்

    புதைந்திருந்த தேனெல்லாம், கிளையில் வடிந்து,

    அடிமரத்தில் பொன்னிறத்தில் ஒளிர, அதைப்

    பிசினென்றெடுத்துத் தேனென்றுணர்ந்து குறவன் சேகரித்தான்!                                              64

     

    பருந்தின் பயமும் பாசமும்

     

    பாறைதுரத்து தென்றெண்ணிப் பறந்துவந்த பருந்துதன்,

    கூடிருக்கும் பாறைமீதும் அமரபயந்து நின்றது!

    குஞ்சிருக்கும் கூடிருக்கும் பாறைதன்னைச் சுற்றியே,

    வட்டமிட்டு வட்டமிட்டு வானிலுயரப் பறந்தது!                                                                  65

     

    பாசமிக்க பருந்துதன் பயம் தெளிந்து நின்றது,

    குஞ்சினருகில் குதித்துக்குதித்து வந்தமர்ந்து கொண்டது!

    கண்திறக்காக் குஞ்சுகள் தாயின்வரவை உணர்ந்து,

    தேன்நிறைந்த தாயின்காலைக் கொத்திக்கொத்திச் சுவைத்தன!                                              66

     

    ஊனெடுத்துக் குஞ்சுக்கு ஊட்டுகின்ற பருந்துக்கு,

    தேனெடுத்துத் தெரியாமல் ஊட்டுகின்ற விருந்துக்கு,

    கானெடுத்த கவினெல்லாம் கண்டுகண்டு களிப்புற்று,

    தானெடுத்த பிறவிப்பயன் அடைந்திடுமே குறவனுயிர்!                                                               67

    Share